அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்..

“அச்சிறு மூலிகையின் சில துளிச்சாறு பசியை வென்று விடுமென்றால்... இந்த இதைப் பரப்பி உலகத்தில் பசிப்பிணியே இல்லாமல் செய்து விடலாமே!”
.... சிறுவன் உள்ளத்தில் இந்த புரட்சிகரமான எண்ணம் தோன்றியது என்னவோ உண்மைதான். நள்ளிரவில் எங்கெங்கோ சுற்றி, பசி கவ்விய வயிற்றுடன் பல இடங்களிலும், அலைந்து.. திருக்கச்சூரில் ஸ்ரீஅக்னிகச்ச சித்தரைத் தரிசித்து விட்டு... அதன் பிறகென்ன ... பிறகு நடந்ததைத் தான் நீங்கள் நன்கு அறீவீர்களே!...  மேற்கண்ட புரட்சிகரமான எண்ணம் சிறுவனுக்கு எங்கு, எப்படி, ஏன் தோன்றியது தெரியுமா?
திருக்கச்சூரிலிருந்து பெரியவருடன் சேர்ந்து விசுக் விசுக்கென்று நடந்த சிறுவன் காலை நேரத்தில் செங்கல்பட்டு சித்தி விநாயகர் ஆலயத்தை அடைந்து பெரியவர், “மனமுவந்து” அளித்த “ரெஸ்டில்”, பிள்ளையார் கோயிலருகே உள்ள அரசமர மேடையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த போதுதான் இந்த புரட்சிப் புனலாகிய எண்ணங்களில் மிதந்தான்!
“ஏண்டா பேசமாட்ட.., கொஞ்சம் நெனச்சுப் பாரு இந்த மூலிகை ரகசியம் மட்டும் வெளில வந்துச்சுன்னா அவனவன் இந்த மூலிகைய வித்து வித்தே கோடீஸ்வரன் ஆயிடுவாண்டா! பசியே எடுக்காத மூலிகை, பத்து இலை பத்தாயிரம் ரூபாய்னு போடுவான். பின்னாடி அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு எக்ஸ்போர்ட் பண்ணி கோடிக் கணக்கா சம்பாதிப்பான். அப்புறம் நம்ப நாட்டுல இந்த மூலிகைச் செடியே இல்லாம ராயல்டி வாங்கி மொட்ட அடிச்சுடுவாங்க! உண்மையச் சொல்லப் போன்னா சித்த வைத்யம் பார்க்கறதுக்கு ஒரு பைசா கூட வாங்கக் கூடாதுடா, அப்பத்தான் சித்த வைத்யம் பலிக்கும், கைராசி கூடும்! வேணும்னா மூலிகைய எடுக்கறதுக்கு எவ்வளவு செலவாச்சோ அதமட்டும் வாங்கிக்கலாம். சித்த வைத்யம்கறது மத்த வைத்யம் மாதிரி இல்லடா ராஜா! இதுல மக்கள் சேவைதான், இறைப் பணிங்கற எண்ணம் தான் மொதல்ல வந்தாகணும்!”
“எந்த மூலிகையும் டக்குனு பறிச்சுட்டா உடனே அது வேல செஞ்சுடாது! ஒவ்வொரு மூலிகைக்கும் கட்டு மந்திரம், விடுப்பு மந்திரம், பலிப்பு மந்திரம்னு நெறய வழிமுறை இருக்கு! எந்த தெசைல பறிக்கணும், எந்த திசை வேர் எடுக்கணும்னு முறையெல்லாம் இருக்கு! ஒவ்வொரு மந்திரத்துக்கும் ரிஷி, சந்தஸ் இருக்கற மாதிரி, ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு சித்தர் காப்பு மந்திரம் இருக்கு!....”
பெரியவர் சற்றே நிறுத்தினார்.. “இதெல்லாம் சரி.... பசியெடுக்காத மூலிகைன்னா. அதோட கட்டு மந்திரம், எந்தெந்த மந்திரமோ அதையெல்லாம் பிரின்ட் போட்டு எல்லாருக்கும் கொடுத்துட வேண்டியதுதானே! அதுதானே உண்மையான தெய்வீகத் திருப்பணி”, என்று சிறுவன் கேட்கத் துடித்தான்! நீங்களும் தானே!

ஸ்ரீகாயத்ரீ லிங்கம்
பவானி ஈரோடு

ஆனால் நேரடியாகக் கேட்டால் ஏதேனும் சொல்வாரோ என்ற சிறுவனின் பயமே, “யார் வேண்டுமானாலும் இந்த மூலிகையப் பறிக்கலாம்தானே வாத்யாரே!” என்ற கேள்வியாய் மாறியது! “நிச்சயமா, ஆனா ஒரு குருமூலம் அதப்பத்தி தெரிஞ்சுகிட்டு misuse பண்ணாம, நல்ல காரியத்துக்கு மட்டும் பயன்படுத்தினாத்தான் இது வேலை செய்யும்! நாலஞ்சு பேரா சேர்ந்து வித்து, பணம் பண்றதுக்கு, ஏமாத்தறக்கு, குறுக்கு வழில சம்பாதிக்கறதுக்கு, இதப் பயன்படுத்தினா, இந்த மூலிகை கொஞ்சங் கூட வேல செய்யாது! இந்த மூலிகைய வச்சுகிட்டு மாத்திரையா, பவுடரா, காப்ஸ்யூலா, தைலமா, டானிக்கா, லேகியமா செஞ்சு வித்து காசு, பணம் பண்ணலாம்னு புத்தி வந்துச்சுன்னா, மூலிகா சாபம் தான் வரும்., மூலிகா சாபம்னா அவ்வளவுதான் குடும்பமே நாசமாயிடுமே. இதுக்குத் தாண்டா எதையுமே குருமூலமா கத்துக்கிட்டா எந்த பிரச்னையும் வராது. எது எதுக்கு, எப்படிப் பயன்படுத்தணும்னு அப்பதானே தெரிய வரும்.”
“இந்த உலகத்துல எல்லோரும் எதுக்குடா உழைக்கறாங்க. நாயா அலஞ்சு பாடுபடறாங்க, மொதல்ல இந்த வயத்துப் பசிய தீக்கத் தானேடா! தீடீரென்று யாருக்குமே அந்த வயித்துப் பசியே இல்லேன்னு வச்சுக்கோ, உலக வாழ்க்கையே ஸ்தம்பிச்சுப் போயிடுமேடா! எது நடக்கும், என்ன நடக்கும்னு சொல்ல முடியாம ஒரே களேபரமா இல்ல ஆயிடும்! இந்தா பாரு, உனக்கு மட்டும் இந்த மூலிகை தரிசனம் உடனேயா கெடச்சுது! நீயும் எத்தனையோ வருஷம் என்ன சுத்தி, சுத்தி வர்றியே என்னிக்காச்சும் இதப் பத்திச் சொல்லியிருக்கேனா, ரெண்டு மூணு வாட்டி மாத்திரம் எதையுஞ் சொல்லாம உனக்கு இதக் கொடுத்திருக்கேன், ஏன்னா நேத்தி ராத்திரி நீ தரிசனம் பண்ணினியே அக்னி கச்ச சித்தரு, அவர்தான் இந்த மூலிகைக்கு அதிபதி, இந்த மாசம் குறிச்ச நட்சத்திரத்துல, குறிச்ச ஹோரைல, அவரை தரிசனம் பண்ணி, குரு தரிசனமும் கெடச்சா, தேய்பிறைச் சந்திர ஒளில இந்த மூலிகை கண்ணுக்குத் தெரியும்னு நியதி! இதயெல்லாம் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, நம்பினவனுக்குத்தான் நடராஜா! அதனாலத்தான் மூலிகை ரகசியங்களை எல்லாம் குருபாரம்பரியமாக தெரிஞ்சுக்கறது நல்லது!”
இந்த மாதிரியே சிறுவனுக்கு எத்தனையோ மூலிகா ரகசியங்களைப் புகட்டினார் பெரியவர்! ஆனால் எப்படி இவ்வளவு விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது ? இதுதான் சிறுவனின் தலையாய பிரச்னை!
“இதப்பாருடா! உன்னோட குருவி மூளைல இதெல்லாம் ஃபுல்லா ஏறாதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்! ஆனால் உனக்கு உன் குரு மேல முழுநம்பிக்கை இருந்துச்சுன்னா உனக்கு எப்பத் தேவையோ அப்ப உனக்குத் தானாலே எல்லாந் தெரிய வரும்!”
இதுதான் இன்றும் சற்குருவின் அருட்ஜோதி ரகசியப் பரவெளி பரிபாஷையாய் நடந்து கொண்டிருக்கிறது! பெரியவர் சிறுவனின் இடையே! அன்றும், இன்றும் என்றும்!
எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அதைப் பக்குவமாக, தெய்வீக ரகசியமாக இருந்தால் கூட பளிச்சென்று சாதுர்யமாக பெரியவர் எடுத்துரைப்பதைச் சிறுவன் கண்டிருக்கின்றான்! இப்படித்தான் ஒருமுறை ஒருவர் தன் உற்றம், சுற்றத்துடன் தன் மனைவியையும் அழைத்து வந்து அவளைப் பற்றி புகார் கூறிடவே, உடனே பெரியவர், “இதபாரு நயினா நீ பண்றதையெல்லாம் புட்டு புட்டு வச்சுடட்டா...!” என்று கூறி அவருடைய முறையற்ற செய்கைகளையெல்லாம் பட்டவர்தனமாக அனைவர் எதிரிலும் பகிரங்கமாக எடுத்துரைத்திடவே அவர் அரண்டு போய், பெரியவரின் முன்னிலையிலேயே தம் மனைவியுடன் பஞ்சாயத்துத் தீர்வு வைத்து சமரசம் செய்து கொண்டு உடனேயே கிளம்பி விட்டார்.
சிறுவன் சற்றே தைரியத்துடன், “ஏன் வாத்யாரே! நீதானே அடிக்கடி சொல்லுவ, ஒத்தர் சொல்றதை இன்னொருத்தர்கிட்ட சொல்லக் கூடாது. அதுவும் வாழ்க்கை ரகசியத்தை ஒருத்தர் நம்பகிட்ட சொன்னா நம்பதான் அத வச்சு காப்பாத்தி அவனைத் திருத்தணும்னு”, என்று கேட்டிட பெரியவர் சிரித்தார்..  “எத எத எப்பப்ப சொல்லணும்னு விதி இருக்கோ, அத அத அப்பப்ப சொல்றவன் தாண்டா சித்தன்! எக்ஸ்ட்ராவா ஒரு வார்த்தை எங்க வாயில வராது! சில சித்தருங்க ஏதோ அர்த்தமில்லா பேசறது போல வெளில தோணும், அவங்க வானத்துல வந்து போற கோடிக்கணக்கான தேவாதி தேவ தேவதைங்களோட எப்பவுமே தெய்வீக விஷயம் பேசிக்கிட்டே இருக்காங்கன்னு நெறய பேருக்குத் தெரியாது!”
சித்தர்களுக்கு எதுதான் தெரியாது? பிரபஞ்சமே அத்துப்படி அவர்களுக்கு! ஆனால் எதையும் வெளிக்காட்டாது, குப்பைச் சித்தர் போல குப்பை, கூளங்களிடையே உட்கார்ந்து கொண்டு பிரபஞ்சத்தையே ஆண்டு கொண்டிருப்பார்கள்! ஆண்டு கொள்ளும் ஆண்டி!

திருவிசயமங்கை

தென்காசி மகாத்மியத் தொடர் – 3 திருவிசயமங்கை
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!

இந்த அற்புதமான ஆன்மீகத் தொடரில், தென்காசி திருத்தல மகாத்மியத்தை சித்புருஷர்கள் அருளியவாறு வழங்குகின்ற வகையிலே, தென்காசி ஸ்ரீவிசுவநாதரை தரிசிக்கும் முன்னர் தரிசித்து வழிபட வேண்டிய முக்கியமான 12 திருத்தலங்களைப் பற்றி அளித்து வருகின்றோம் அல்லவா! இங்கே மூன்றாவதாக நாம் காண இருப்பது கும்பகோணம் பக்கத்தில் பாபநாசம் அருகாமையில் உள்ள திருவிசயமங்கை (விசயமங்கை) திருத்தலமாகும்.

ஸ்ரீமங்களநாயகி திருவிசயமங்கை

அவரவர் அந்தந்த ஊரில் உள்ள சுவாமியின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, தினசரி வழிபட்டு வந்தாலே போதும், அவருக்கு நிச்சயமாக முக்தியும், மோட்சமும் தானாகவே கூடிவரும். இவ்வகையில் திருவிசயமங்கையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீவிசயநாதேஸ்வரர் வெற்றிக்கு வடிவு ஊட்டுகின்ற சிவமூர்த்தியாய்ச் சிறந்து விளங்குகின்றார். இதற்குரித்தான வழிமுறைகளில் ஒன்றுதான் வருகின்ற சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வது ஆகும். ஆனால் நல்ல சந்தர்ப்பங்களே வராவிட்டால் என்ன செய்வது? நம்முடைய உழைப்பை நாம் எடுத்துள்ள நற்காரியத்தில் நன்முறையில் பெருக்கி வந்தால் தெய்வ அருளாகத் தானாகவே சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
“என்ன இது, ஏதேதோ முயற்சிகள் செய்து பார்த்தோமே எதுவுமே கை கூடவில்லையே”, என்று மனம் தளராதீர்கள். ஆழ்ந்த இறைநம்பிக்கை இருக்கும்பொழுது எதற்குத்தான் பஞ்சம் ஏற்படும்? நம்முடைய கர்மவினைகள் தான் நமக்கு தடைகளாக, இன்னல்களாக, இடர்களாக வந்து சேருகின்றன. எனவே மனம் தளராது உழைப்பை பெருக்குங்கள். எடுத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்து தளராத நல்முயற்சியோடு காரியத்தை நோக்கி நடை போடுங்கள். உழைப்பின் பலனைப் பற்றி முதலில் யோசிக்க வேண்டாம். நல்வழியில் காட்டப்படுகின்ற எந்த உழைப்பும் வீண் போகாது, ஏனென்றால், நற்காரியத்திலுள்ள பலவகையான சோதனைக் கட்டங்களை நாம் தாண்டியாக வேண்டும். முதல் கட்டத்திலேயே சோர்வு அடைந்து விட்டால் பிறகு என்ன செய்யமுடியும்? எனவே, உழைப்பில் சற்றும் அயராது ஒவ்வொரு கட்டத்திலும் உங்களது உழைப்பின் சக்தியும், தன்மையையும் உயர்த்திக் கொண்டே அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதற்கு அருள்பாலிப்பவர்தான் ஸ்ரீவிசயநாதேஸ்வரர் ஆவார்.
நம்முடைய முயற்சிகளிலே தடங்கல்கள் வருவதற்கு பலவிதமான கர்மவினைகள் காரணமாக இருந்தாலும் அவற்றிலே மிகவும் முக்கியமானவை “ஆங்காரதீன கர்மம்” என்ற கர்மங்களாகும், எந்த அளவிற்கு நாம் பிறருடைய முன்னேற்றத்தைத் தடுத்து, பொறாமை, குரோத குணங்களாக தீவினைகளைப் புரிந்தோமோ, அவைதாம் இப்பிறவியில் நமக்கு வந்து சேரும். இதனைக் களைவதற்கான அஸ்திரமாக விளங்குவது தான் “பாசுபத” அஸ்திரம். பாசுபத குணங்களைப் பெற்றால்தான் நம்முடைய நற்காரியங்களில் ஏற்படுகின்ற இடர்களைக் களைகின்ற மனசக்தியை நாம் பெற்றிட முடியும்.

திருவிசயநாதர் திருவிசயமங்கை

இத்தகைய சிறப்பான மன இயல்பினை இவ்விடத்தில் தான் அர்ச்சனைகள் சிவபெருமானிடமிருந்து பெற்றான். அர்ச்சுனனுடைய வில் அம்பால் பட்ட தழும்பு இன்றும் இச்சிவலிங்கத்தில் பரிணமிப்பதால், இதனை பாசுபத ரேகை அம்சங்கள் நிறைந்ததாக சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். எனவே இந்த பாசுபதக் கீற்று தரிசனமே உங்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்து நற்காரியத்தை நடத்தி தருவதற்கான அதிஅற்புத வைராக்ய மனசித்தத்தை தந்து அருள்கின்றது. இங்கு ஸ்ரீமங்களாம்பிகையாக ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். எங்கும் பொங்க வேண்டியது மங்களம் தானே, உழைப்போ, முயற்சியோ, பலன்களோ அனைத்திலும் மங்களம்தானே முக்கியமாக இருக்க வேண்டும்.

திருவிசயமங்கை

மங்களகரமான காரியம், மங்களகரமான வெற்றி என்றெல்லாம் சுபத்தைக் கூட்டித்தானே வெற்றியைச் சொல்லுகின்றோம். எனவே, சந்தர்ப்பங்கள் தானாகத் தேடிவராவிட்டாலும் உழைப்பைப் பெருக்குவதின் மூலம் தன்னுடைய உழைப்பின் ரீதியாக, தெய்வப் பரிசாக நல்லதொரு வாய்ப்பை, சந்தர்ப்பத்தை அடைவதற்கு ஸ்ரீவிசயநாதேஸ்வரர் பெரிதும் துணைபுரிகின்றார். இத்திருத்தலத்தில் எத்தனையோ மகரிஷிகள் தம்முடைய வேள்விகளுக்கும், வழிபாடுகளுக்கும் பலகோடி அசுரர்களால் எண்ணற்ற தடங்கல்கள் பன்முறை வந்தபோதும், இதனால் மனம் தளர்ச்சியுற்ற போதும் இங்கு வந்து ஸ்ரீவிசயநாதேஸ்வரரை வணங்கி தங்களுடைய உழைப்பின் சக்தியைப் பெருக்கிக் கொண்டதோடல்லாமல் நல்லதொரு தெய்வீக சந்தர்ப்பத்தையும், இறையருளால் வரமாக வரப்பெற்று தங்களுடைய நற்காரியங்களை நடத்தி, அரக்கர்களை வென்று தர்மத்தை நிலைநாட்டச் செய்தார்கள். எனவே, வெற்றிக்கு வடிவழகு ஊட்டுகின்ற தென்காசி நாதரை தரிசிக்கும் முன்னர் வணங்கி அருள்பெறவேண்டிய மூன்றாவது திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் அருகே சுந்தரப் பெருமாள் கோயிலிருந்து இரண்டு மைல் தொலைவில் விசயமங்கை ஊரில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீவிசயநாதேஸ்வரர் சிவத்தலம் ஆகும்.
இங்கு காணுதற்கரிய சதுரமான ஆவுடை! எப்போதுமே மனோ தைரியத்தையும் ஆக்கப்பூர்வமான வைராக்கியத் தன்மையையும், திடமான மனதையும், சற்றும் தளராத ஆழ்ந்த நம்பிக்கையையும், கூட்டித் தருவதே இச்சதுர ஆவுடையாரின் சக்தியாகும். இங்குள்ள பல மகரிஷிகள் தம் திருக்கரங்களாலேயே பூஜை செய்யப்பட்ட அதிஅற்புதமான சுயம்பு மூர்த்தி உங்களுடைய நற்காரியங்களிலே ஏதேனும் தடைகள் வந்து மீண்டும் தொடரமுடியாது தயங்கி நிற்பீர்களேயானால் ஸ்ரீவிசயநாதருக்கு நேர்த்தி வைத்து அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் உங்களுடைய உழைப்பின் சக்தியும் பெருகி தெய்வீக சந்தர்ப்பமும் தானாகவே அமைவதற்கு இச்சிவமூர்த்தி அருள்பாலிக்கின்றார்.
அறிந்து கொண்டு விட்டீர்கள்! இனி என்ன? அருள் தரிசனம் பெற வேண்டியது தானே! புறப்படுங்கள்! மூன்றாவதான இப்புனிதத் திருத்தலத்தை நோக்கி... நல்வழிக்கான தெய்வ சகாயத்தை தருகின்ற திருவிசயநாதரே போற்றி! போற்றி! போற்றி! தென்காசி சிவபெருமானை தரிசிக்கு முன்னர் இத்தொடரில் வரும் 12 திருத்தலங்களையும் இதே வரிசையில் வழிபடுவதே முக்கியமானதாகும்.

சந்திர சஷ்டி விரதம்

கடந்த ஆகஸ்ட் 1999 இதழில் சூர்ய சஷ்டி விரதத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். இப்போது வருவது சந்திர சஷ்டி விரதமாகும். விரதம் என்றாலே பட்டினி கிடப்பது, கிரிவலம் வருவது, அபிஷேக, ஆராதனைகள் செய்வது, வில்வம், துளசி தீர்த்தம் அருந்துவது இதுதானே என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விரதத்தின் பின்னணியிலும் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்கள் உள்ளன. காலையில் எழுந்தவுடன் இன்று என்ன நடக்கப் போகிறது என்பதை நம்மால் ஊகிக்க முடிகின்றதா? ஏதோ எழுந்தோம், சென்றோம், வந்தோம், படுத்தோம் என்று இயந்திர கதியில் நாம் வாழ்ந்தால் என்ன பயன்?
ஒரு நாளில் இல்லறத்திலும், அலுவலகத்திலும், வெளி வாழ்க்கையிலும், ஏற்படுகின்ற பிரச்னைகள் தாம் எத்தனை, எத்தனை! ஏதோ வாழ்க்கை ஓரளவு அமைதியாகப் போகின்றது, இதுவே போதும் என்று போலிச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள். எதற்காகப் பிறப்பெடுத்தோம்? எதற்காக, எப்படி, ஏன் வாழ்கின்றோம், எப்படி வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் நிச்சயம் சிந்தித்து தினமும் ஆத்மவிசாரம் செய்தாக வேண்டும். இதற்காகத்தான் பலவிதமான விரதங்களை, பண்டிகைகளை நம் மூதாதையர்கள் அளித்துள்ளனர். இவற்றுள் மிக முக்கியமாக விளங்குவது “சந்திர சஷ்டி“ விரதமாகும்.
ஸ்ரீசந்திர மூர்த்தியைப் பற்றி நாம் அறிவோம். நம்முடைய மனதிற்கு அதிபதி ஸ்ரீசந்திர பகவானாவார். மனசஞ்சலங்களைப் போக்குபவர், மன அமைதியைத் தருபவர், மனோதிடத்தையும் , மனோ வைராக்கியத்தையும், நல்ல சித்தாந்த மனப்பான்மையையும் தரவல்லவ! ஆனால் நாம் ஸ்ரீசந்திர பகவானை முறையாக வழிபடாவிடில் இவற்றையெல்லாம் எப்படிப் பெறமுடியும்? இறைவன் என்றால் தாமாகவே எல்லாவற்றையும் அளிப்பவன் தானே? ஏன் இவற்றையெல்லாம் கேட்டுப் பெறவேண்டும். இம்மாதிரியான வினாக்கள் எழுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஆனால் அதற்குரிய விடைகளை எவரேனும் வெளியிலிருந்து தருவார்களா என்று எண்ணாதீர்கள். உங்களையே நீங்கள் நன்கு ஆத்ம விசாரம் செய்து கொண்டு நல்ல விடையைப் பெற முயற்சி செய்யுங்கள். இதற்கும் உதவுபவர்தான் ஸ்ரீசந்திர பகவான் ஆவார்.
ஸ்ரீசந்திர பகவான் எவ்வாறு மூன்றாம் பிறைச் சந்திரனாக சிவபெருமானின் சிரசிலே அமர்கின்ற பாக்கியத்தைப் பெற்றார் என்பதற்கான புராண வைபவத்தை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இறைவனுடைய சிரசில் அமைகின்ற தெய்வமூர்த்தியாய் ஸ்ரீசந்திரபகவான் பரிணமிப்பதற்குக் காரணம் என்ன? இதுதான் அவர் கடைபிடித்த சஷ்டி விரத மகிமையாகும். விரத பலனும் ஆகும்.
சாதிக்க வைக்கும் சந்திர சஷ்டி
எந்த சஷ்டியானது ஸ்ரீசந்திர மூர்த்திக்கு இந்த அரிய பாக்கியத்தை, சிவபெருமானின் சிரசிலே உறைகின்ற பாக்கியத்தைப் பெற்றுத் தந்ததோ, அந்த சஷ்டிதான் சந்திர சஷ்டி விரதமாகும். அதாவது சாதிக்க முடியாத நற்காரியத்தை சாதிக்க இந்த சந்திர சஷ்டி விரதம் பெரிதும் துணை புரிகின்றது. பலகோடி யுகங்களுக்கு முன்னால் தினமும் முழுமையான பௌர்ணமிச் சந்திரனாகப் பிரகாசித்த ஸ்ரீசந்திரமூர்த்திக்கு இறை லீலைகளினால் ஏற்பட்ட பல புராண சம்பவங்களினால், தன்னுடைய கலைகளை இழந்து (ஒரு பட்சம்) அதாவது 15 தினங்கள் தேய்பிறையாகவும், மறுபட்சம் (15 தினங்கள்) வளர் பிறையாகவும் ஆகுமாறு ஒரு நிலையைப் பெற வேண்டியதாயிற்று.
இறைவன் தன்னுடைய அம்சங்களாகிய பல தெய்வமூர்த்திகளின் வடிவுகளையே பலவிதமான லீலைகளுக்குப் பயன்படுத்தி இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல பாடங்களை புகட்டுகின்றான். அதில் ஒன்றுதான் ஸ்ரீசந்திரமூர்த்தியின் கலைகள், தேய்ந்து, விரிந்து, தேய்ந்து, விருத்தி ஆகின்ற சந்திர மௌலீஸ்வர லீலையாகும். ஆனால் இந்த இறைலீலை அதாவது சந்திரனின் கலைகள் தேய்கின்ற சம்பவமானது நடக்காவிடில் அவரால் சிவமூர்த்தியின் சிரசில் உறையும் பாக்கியத்தைப் பெற்றிருக்க முடியுமா? இவ்வாறாக அமைவதைத்தான் அனைத்தும் இறைலீலையே என்று ரிஷிகள் வேதவாக்காய் உரைக்கின்றனர்.
எனவே ஒவ்வொரு காரியத்தின் பின்னணியிலும், ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் உண்டு என்று மீண்டுந் தெளிந்திடுக! ஸ்ரீசந்திர மூர்த்தி தான் தேயும் நிலை பெற்றதைப் பற்றிக் கவலையுறவில்லை. இதனைத் தனக்குரிய தண்டனையாக ஏற்றார். ஆனால், தம் தேய்ந்த நிலையுடன் இப்பிரபஞ்சத்திற்கு எவ்வித நிலையில் பயன்பட முடியும் என்பதை அறியும் முகமாகத்தான் ஸ்ரீசிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். எத்துணை ஆண்டுகள்? 24 தேவ ஆண்டுகளுக்கு மேல்! ஒரு தேவ ஆண்டு என்பது ஓராயிரம் கோடி ஆண்டுகள்!
தம்முடைய தேய்ந்த கலைகளுடன் பிரபஞ்சத்தை வலம் வந்து, எத்துணையோ புனித தீர்த்தங்களில் நீராடி, ஆலயங்களைத் தரிசித்து வந்த ஸ்ரீசந்திர பகவான், இறுதியில் ஸ்ரீஅருணாசலப் பெருமானைச் சரணடைந்தார். உலகுக்கே ஒளியையும், அக்னியையும், வெளிச்சத்தையும் ஊட்டுகின்ற உத்தம மூர்த்தியல்லவா! பஞ்சபூத அக்னி லிங்க அருணாசல மூர்த்தி! முதலிலேயே ஏன் சந்திர பகவான் திருஅண்ணாமலைக்கு வந்திருக்கக் கூடாது? நிச்சயமாக நல்ல கேள்விதான். ஆனால் எத்தனை தலங்களில் நீராட வேண்டும். எத்துணை தெய்வமூர்த்திகளை தரிசிக்க வேண்டும், எந்த அளவு தான, தருமங்களைச் செய்திட வேண்டும் என்ற நியதிகளை நிறைவேற்றினால் தானே அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற பாக்யம் நல்வரமாகக் கிட்டும்.
ஸ்ரீசந்திர பகவானுக்கே இந்நிலை என்றால், நாமோ நினைத்தால் பஸ் ஏறிச் சென்று திருஅண்ணாமலையை அடைகின்றோமென்றால், நமக்கு எத்தகைய எளிய முறையில் தெய்வீக பாக்கியத்தை கலியுகத்தில் இறைவன் அளித்துள்ளான் என்பதை நாம் பகுத்தறிவுடன் உணர வேண்டும். ஆனால் இவ்வாய்ப்பைப் நன்முறையில் நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பதை நீங்களே ஆத்மவிசாரம் செய்து கொள்ளுங்கள்! தன் தேய்ந்த கலைகளுடன் தான் எவ்வாறு பிரபஞ்சத்திற்கு உதவிட இயலும் என்று இறைவனை வேண்டிட சிவச்சந்திர யோகம் கொண்ட சந்திர மூர்த்திக்கு, ஆண்டவன் திருஅண்ணாமலையில் தரிசனம் கொடுத்து, “சந்திரா! நீ அமிர்தத்தைப் பருகித் திளைப்பவன், எனவே உனக்கு அமிர்த ஜோதி தரிசனமே உன் குறைகளுக்கு நிவர்த்தியாக அமையும். என்னுடைய தேக அமிர்தத்தை கிரஹித்து, நெற்றிச் சுடராய் விளங்குகின்றவனே, சிவபரஞ்ஜோதியினின்று உருவானவனே கார்த்திகேயப் பேரொளியான ஆறுமுகனே! எனவே, நீ முருகனை வேண்டி உன் தேய்ந்த கலைகட்கு நல்ல பிராயசித்தம் பெறுவாயாக!” என்று அருள்பாலித்தார்.
இவ்வாறு ஸ்ரீசந்திரபகவானே ஸ்ரீமுருகப் பெருமானை வேண்டித் தவமிருந்து விரும்பி தரிசித்த தலமே திருஅண்ணாமலையாகும். அதனால்தான் இன்றும் பௌர்ணமியின் போது அறிந்தோ, அறியாமலோ, பௌர்ணமிச் சந்திர சக்தி நிறைந்த இடமாக லட்சக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர். ஸ்ரீசந்திர மூர்த்தி எவ்வாறு சஷ்டி விரதம் அனுஷ்டித்தாரெனில், சாதாரண மனித வடிவில் தான் நிலையில் தான் இவ்விரதத்தை மேற்கொண்டார். ஏனென்றால் மனிதப் பிறவியில் செய்கின்ற பூஜைக்கு மகத்துவம் அதிகம். பிரதமை திதி முதல் சஷ்டி திதிவரை திருஅண்ணாமலையை தினமும் கிரிவலம் வந்து ஸ்ரீமுருகப் பெருமானின் தரிசனம் பெற்றார். இவ்வரிய ஆறுநாள் கிரிவலம் அவருக்கு முருகனின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது. ஆம்! ஒருமுறை கிரிவலம் வந்தாலே அனுக்கிரஹங்களை அள்ளித் தருபவராகத் தானே கலியுகத்தில் ஸ்ரீஅருணாசலப் பெருமான் விளங்குகிறார்.
ஒரு கையில் வில்வ தளங்கள், மறுகரத்தில் தாமரை மலர் தாங்கியும், கிரிவலம் வந்து சிவசக்தி ஐக்ய ஸ்வரூப சக்தி பெற்றார் ஸ்ரீசந்திர பகவான். அதனால்தான் மூன்றாம் பிறைச் சந்திரனின் ஒரு நுனி சிவசக்தியாயும், மறு நுனி சக்தி அம்சமாகவும் இன்றும் விளங்குகிறது. இப்பிறை நடுவில், ஸ்ரீமுருகன் தரிசனமும், ஸ்ரீசந்திர பகவானுக்குக் கிட்டியது. இவ்வாறு ஸ்ரீசந்திரமூர்த்திக்கு கிட்டிய அருணாசல தரிசனமே, சோமாஸ்கந்த தரிசனமாகும். இது தற்போது திருஅண்ணாமலையில் இந்திர தீர்த்தமுள்ள பகுதியில் எப்போதும் இன்றைக்கும் அனைவருக்கும் காணக் கிட்டும். ஒருபுறம் சிவன், மறுபுறம் ஸ்ரீஅம்பிகை வீற்றிருக்க, இடையில் ஒரு சிறு பள்ளத்தில் ஸ்ரீமுருகன் வீற்றிருப்பது போல் தோன்றும்.
இந்த சோமாஸ்கந்த தரிசனமானது ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமத்திற்கு முன் வருகின்ற இந்திர தீர்த்தப் பகுதியில், அதி அற்புத மலைதரிசனமாகக் கிட்டுகின்றது. எனவே, பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு தினங்களிலும் (25.09.1999 முதல் 30.09.1999) வலது கரத்தில் வில்வமும், இடது கரத்தில் தாமரை தாங்கி இவ்வாறாக சிவசக்தி அம்சங்களைத் தாங்கி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, கிரிவல முடிவில் ஆலயத்தில் கம்பத்து இளையனாருக்கு சந்திர சஷ்டி கிரிவலப் பலன்களை அர்ப்பணிக்க வேண்டும். இந்த சோமாஸ் கந்த தரிசனப் பகுதியில், சற்று அமர்ந்து, ஸ்ரீசந்திர பகவானை தியானித்து இயன்ற தான, தருமம் செய்வோர்க்கு, சந்திர சஷ்டி விரத பலன்களை பரிணமிக்கக் காத்துக் கிடக்கின்றன.
ஸ்ரீசந்திர பகவான் ஆறே ஆறு நாட்கள் வலம் வந்து இப்பலன் பெற்றார் என்பதை விட, அவர் 24 கோடி தேவ ஆண்டுகளாகப் பெற்ற அனைத்து, கோடி தரிசனங்களின் பலாபலன்களையும், இந்த ஆறுதின கிரிவலத்தினால் தான் முழுமையாக அனுபவிக்கப் பெற்ற திருத்தலமாகவே திருஅண்ணாமலை விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது, நீங்கள் இதுவரையில் வாழ்க்கையில் தரிசித்த அனைத்து ஆலயங்களின் தரிசனமும் நதி தீர்த்த நீராடல்களின் முழு பயன்களை நீங்களும் பெறவேண்டுமெனில், இதற்கு சந்திர சஷ்டி விரத திருஅண்ணாமலை கிரிவலம்தான் அருள்புரியும். அதுவும் பிரமாதி வருட சஷ்டி விரதத்திற்குத்தான் இந்த அதியற்புதப் பலன்கள் விசேஷமாக விதிக்கப்பட்டுள்ளன. பிரமாதி வருடம் உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை வரும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பொதுவாக இல்லத்திற்குரிய சந்திர, சஷ்டி விரத நியதிகள் கடுமையாக இருந்தாலும், மலையை கிரிவலம் வருதல் என்கின்ற போது, உடல், உழைப்பு அதில் முக்கியத்துவம் பெறுவதால், உண்ணாவிரத விதிகள் கிரிவலத்தில் சற்றே தளர்த்தப்படுகின்றன.
முழுமையான உண்ணாவிரதம் இருப்போர்க்கு, அதற்கு உரித்தான பலன்கள் கிட்டத்தான் செய்கின்றன என்பதும் உண்மையே! இன்று மலையை உடல் அசதியுடன் கிரிவலம் வரவேண்டி இருப்பதால், இயன்ற வரையில் நீர் மட்டும் அருந்தியோ அல்லது பழங்கள் மட்டும் உண்டோ குறைந்த அளவு உணவை ஏற்றோ கிரிவலம் வருவீர்களானால், உங்கள் உடலிலே சந்திர சஷ்டியின் போது, திருஅண்ணாமலையின் சிகரத்திலிருந்து வீசுகின்ற சோம பூஷண அமிர்த கதிர்கள், உங்கள் தேகத்தில் எளிதில் சேர்கின்றது.. ஓரளவேனும் வயிறு காலியாக இருக்கும் பட்சத்தில் சந்திர சஷ்டியில் கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.

ஸ்ரீகம்பத்து இளையனார் சன்னதி
திருஅண்ணாமலை

சந்திர சஷ்டி கிரிவல பலாபலன்கள்
இந்த ஆறு நாட்களிலும் திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாசல ஆலயத்தில் கம்பத்து இளையனார் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்து கிரிவலத்தை தொடங்கி, கிரிவலத்தை இதே இடத்தில் நிறைவுறச் செய்தல் வேண்டும். சாதிக்க முடியாத எந்த நற்காரியத்தையும் சாதிக்கவல்ல மனோதிடத்தையும், தெய்வ சக்தியையும் தரவல்லதே சந்திர சஷ்டி விரதம். சந்திர பகவான் மனதிற்கு உரித்தானவர் ஆதலால் வாக்கு சாதுர்யம், வாக்கு வன்மை, வாக்சக்தி என்பவை மிக முக்கியமானதாகும். நீதிபதிகள், மாஜிஸ்டிரேட்கள் தங்களுடைய வாக்கினால் தான் தங்கள் துறையில் பரிணமிக்க முடியும். வாய்ச் சொல்லில் ஒரு சிறு தவறு கூட அவருடைய வாழ்க்கையையே பாதித்து விடும். எனவே, அனைத்துத் துறையைச் சேர்ந்த நீதிபதிகள் இந்த சந்திர சஷ்டி விரதத்தை திருஅண்ணாமலையில் கடைபிடித்து கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும். மேலும், வக்கீல்களும், குறிப்பாக அதிக அளவில் வாக்கு சக்தியை வெளிப்படுத்த வேண்டிய வரித்துறை, குற்றத்துறை வக்கீல்களும் ஸ்ரீசந்திர சஷ்டி விரதத்தை கடைபிடித்தலால், அவர்தம் வாக்குவன்மை பெருகுவதோடு, தவறான சொற்களால் எவ்விதத் தீங்கும் ஏற்படாவண்ணம் தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம். மற்றும் விண்வெளித் துறையில், குறிப்பிட்ட பகுதி சந்திர பகவானுடைய ஆட்சியில் இருப்பதால், விண்வெளித்துறை, ராக்கெட், ஏவுகணைகள், சேட்டிலைட் துறையில் இருப்போரும், இந்த சந்திர சஷ்டி விரதத்தை கடைபிடித்தாக வேண்டும். வாக்கினால் தம் துறையில் நிலை பெற்றிருக்க வேண்டிய ஆசிரியர்கள், சந்திர சஷ்டி விரதத்தை கடைபிடித்தலால், வாக்குவன்மையும், மனநிம்மதியும் உண்டாவதோடு அவர்கள் நன்முறையில் பாடங்களை நடத்துவதனால், அதற்குத் தகுந்த வெற்றியும், தெய்வீக சக்தியாக வந்து அமைகின்றது. வெளிநாடுகளில் வாழ்கின்றோர் “என்றைக்கு நம்மைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ, இன்றோ, நாளையோ” – என்று மனோபீதியுடன் நாளை எண்ணிக் கடத்தாது, வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து நன்முறையில் திரும்புவதற்கு, சந்திர சஷ்டி விரதம் பெரிதும் உதவும்.
சந்திரனுடைய அமிர்த சக்திகளுக்கு அனைத்து லோக கோளப் பகுதிகளுக்கும் சென்றடைகின்ற அபரிமிதமான சக்தி உண்டு என்பது மட்டுமல்லாது, சந்திர கிரகத்தில் வாழ்கின்ற கோடானு கோடி தேவதா மூர்த்திகளின் அனுக்கிரகம் தான் அனைத்து நாடுகளுக்கும் பெரிதும் உதவுகின்றது. இது மட்டுமல்லாது, பல குடும்பங்களில் கணவன், மனைவியர்க்கு இடையே பலவிதமான குறைபாடுகள் (தகுதி, செல்வம், குடும்ப அந்தஸ்து, etc)  காரணமாக ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு இது ஒரு நல்ல தீர்வைத் தந்து, தம்பதியினர் நல்முறையிலே மன ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்த இந்த சந்திர சஷ்டி விரதம் பெரிதும் உதவுகின்றது.

மாளயபட்ச மகிமை

அமாவாசைத் திதிகளுள் மிகவும் சிறப்புடையது மாளய அமாவாசை! நம்முடைய உத்தம மூதாதையர்கள் உறைகின்ற புனிதமான பித்ரு லோகத்தின் பிரமோற்சவமே மாளய பட்ச பதினைந்து திதிகளுமாகும்.. மாளய பட்ச தினசரி தர்ப்பண பூஜைகள் பித்ருக்களின் ஆசிகளை அள்ளித் தருகின்றன.
பொதுவாக புரட்டாசி மாதத்திலும் நவராத்திரிக்கு முந்தையதாகவும் அமைகின்ற மாளயபட்ச அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சூரியனும், சந்திரனும் நேர்ப்பாதையில் பிணைந்து வருகின்ற நாளே அமாவாசை என்பது நாம் அறிந்ததே. இறைவனின் வலக்கண்ணாக சூரியனும், இடக் கண்ணாகச் சந்திரனும் அமைவதால் இவ்விரண்டு தேவசங்கம சக்திகள் இணைகின்ற காலமாக இறைவனின் புருவமத்தியில் அமாவாசை திதி பிறப்பதாக சித்புருஷர்கள் அமாவாசையை விளிக்கின்றனர்.
அதிலும் மாளயபட்சம் என்று சொல்லப்படுகின்ற 15 திதிகளுமே பித்ரு லோகத்திற்கு பிரமோற்சவ தினங்களாக விளங்குகின்றன. பித்ரு தேவ மூர்த்திகள் ஜாதி, இன, குலபேதமின்றி யாவருக்கும் உரித்தானவர்களே! ஒரு சிறு புல், பூண்டு முதல் மனிதர்கள், விலங்குகள் வரை யாருவக்குமே எவ்வித பேதமின்றி, அனைவருக்குமே பித்ரு மூர்த்திகளும், கோத்ராதிபதி ரிஷிகளும், பிரவர ரிஷிகளும் உண்டு. எனவே நாம் அனைவரும் ஒவ்வொரு மஹரிஷியின் வழிவந்தவர்களே! ஆனால், காலவர்த்தமான வேறுபாடுகளாலும், சமுதாய வாழ்க்கை மாறுபாடுகளாலும், இந்த மூலாதார உண்மையை, தெய்வப் பிறவி இரகசியத்தை, நாம் உய்த்துணராது இருந்து விட்டோம். இதனை உணரும் பொருட்டுத்தான் அதாவது இப்பூவுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், ஒரு மஹிரிஷியின் வழி வந்ததுதான் என்பதையும் ஞானவிசாரப் பலன்களுள் ஒன்றாக உணர்த்தும் முகமாகத்தான் மாளயபட்சத் திதித் தர்ப்பண வழிபாடுகள் அமைகின்றன. நாம் இன்று அனுபவிக்கின்ற வீடு, வாசல், நிலம், பதவி, செல்வம், புகழ், வீரம் அனைத்துமே நம் மூதாதையர்களுடைய ஆசியால்தான் என்பதை நாம் நன்கு தெளிவுடன் உணர்தல் வேண்டும்.
“கும்பகோணம் காளிமுத்தா, அவருடைய பாட்டனார் கோவிந்தன் எத்தனையோ கோயில்களுக்கு இறைப்பணிகளும், நிறைய தான, தர்மமும் செய்திருக்கிறாரே,” என்று இன்றும் செவிவழியாக வருகின்ற நல்வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமல்லவா? இதன் உட்பொருள் யாதெனில் இவ்வாறாக நம் மூதாதையர்கள் செய்த தான, தருமங்களின் நற்செயல்களின் புண்ணிய சக்தியைத் தான் நாம் இன்று, வீடு, வாசல், குழந்தை, வாகனம், செல்வமாக, வாழ்க்கை வசதிகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே! பாட்டனார் செய்தார், ஆனால் நாம் என்ன செய்தோம் என்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!
நம் மூதாதையர்கள் இத்தகைய பக்தி நிலையுடன் பித்ரு லோகத்தில் திகழ்கையில், அவர்களுக்குத் தர்ப்பண வழிபாடு ஏன் எனும் எண்ணம் எழுகிறதல்லவா? தர்ப்பண பூஜை என்பது நம்முடைய மூதாதையர்கட்கு உரித்தானது தான் என்றாலும், அதன் பெரும்பான்மையான பலாபலன்கள் நமக்குத்தான் பலவித வசதிகளாக, ஆசிகளாக வந்து சேர்கின்றன. மேலும், நம் மூதாதையர்கள் அனைவருமே உயர்ந்த பித்ரு நிலையை அடைந்ததாகக் கூற இயலாது. அவர்களும் பல பிறவி எடுத்து இன்று ஆங்காங்கே, எங்கெங்கோ, வாழ்ந்து கொண்டிருக்கலாமல்லவா? மேலும், பித்ருக்களின் நிலைக்கு அடுத்தபடியாக மேலும் பல உத்தம, தெய்வீக இறைநிலைகள் உண்டல்லவா! எனவே பித்ருக்களும் அந்தந்த உயர்ந்த உத்தம நிலையை எய்தினால் தான் தம் வம்சாவளியினருக்கு மேலும் பல ஆசிகளை, ஆன்ம சக்தியை அளிக்க இயலும்.
எனவே, அமாவாசை தர்ப்பண பூஜை என்பது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, அவர்கள் தம் வம்சாவளியினரான நமக்குமே பெரிதும் பயன் தருவதாய் உள்ளது என்பதையும் அறிய வேண்டும். இதனால்தான் மாளயபட்சத் திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாக விளங்குகின்றது. ஏனெனில் இந்த 15 நாட்களிலும் தான் சர்வகோடி லோகங்களிலுமுள்ள பித்ரு மூர்த்திகள், பூலோகத்திலுள்ள அனைத்துத் திருத்தலங்கட்கும் வந்து தம்முடைய வழிபாட்டையும், பூஜைகளையும் மேற்கொண்டு, மிகுந்த மகிழ்வுடன் தத்தம் லோகங்கட்குத் திரும்புகின்றனர். எனவே, இந்த மாளயபட்சத் திதியில் பிரதமை முதல் அமாவாசை முடிய நீங்கள் எந்தக் கோயிலுக்கும் சென்று அங்குள்ள தீர்த்தத்திலோ, ஆற்றிலோ, கோசாலையிலோ தர்ப்பணம் செய்தால், உங்களுடைய மூதாதையர்கள் மிகவும் ப்ரீதியுடன் அதனை நேரடியாகவோ ஏற்று நன்கு ஆசீர்வதிக்கின்றனர். ஏனென்றால் பித்ருமூர்த்திகள் எப்போதும் பூஜிக்கின்ற இடங்களாகத் திகழ்வது உத்தம கோயில் புனித தீர்த்தங்களேயாம்!

பித்ருமுக்தித் தீர்த்தம்
திருவிடைமருதூர்

ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் அமைகின்ற மாளயபட்சத் திதிக்கு உரித்தான பலாபலன்கள் விதவிதமானவை. ஒரு மனிதனாவன் தன் வாழ்நாளிலே, எத்துணையோ நல்ல கர்மங்களையும், தீய கர்மங்களையும் சேர்ந்தேதான் செய்து வருகின்றான். இறைவனோ அவனுடைய நற்கருமங்கட்கான புண்ய சக்தியையும், தீவினைகட்கான பாவ சக்திகயையும், சேர்த்துத் தான் அளித்து வருகிறான். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்கின்ற பாவ, புண்ணிய விளைவுகள் அனைத்துமே இதே பிறவியில் செயலாகி விடும் எனச் சொல்வதற்கில்லை. இதனால் தான் முந்தைய பிறவிகளின் வினைப்பயனாக தற்பொழுது நடக்கின்ற மனிதப் பிறவியின் காரண, காரிய நிகழ்ச்சிகள் அமைவதோடு மட்டுமின்றி நடப்பு வாழ்க்கையின் சில கர்மவிளைவுகளும் கூட இப்பிறவியிலேயே செயல்படுகின்றன.
இன்னமும் அமுங்கியிருக்கும் ஏனைய கர்மங்களின் விளைவுகளும், பலவித பரிகாரங்கள் மூலமாக அழிக்கப்படலாம், தணிக்கப்படலாம், மாற்றப்படலாம். எதிர் வரும் பிறவிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படலாம். ஆனால் பிறவி ரகசியங்கள் எல்லாம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை. இதை வாக்குவாதம் மூலமோ புத்தக அறிவின் மூலமோ பெற்றுத் தெளிவு பெறமுயன்றால் அது பயன் தராது. தக்க சற்குரு ஒருவர் அமைந்தால் தான் பிறவி ரகசியத்தை நன்கு உணரமுடியும். இல்லையேல், குழப்பமும், மன உளைச்சலுமே ஏற்படும். இதற்காகத்தான் நம்முடைய மூதாதையர்களின் அனுபவப் பாடங்களாக விளங்குகின்ற விரதங்களையும், பண்டிகைகளையும், வழிபாடுகளையும், பூஜைகளையும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்து வந்தாலே போதும், அதுவே, தாமே தெய்வீக ரீதியான பல பரிகாரங்களைத் தந்துவிடுகின்றன.
இதற்குத் தேவையானது ஆழ்ந்த நம்பிக்கையாகும். உதாரணமாக பல ஆலயங்களில் விதவிதமாக நமஸ்கார வழிபாட்டு முறைகள், (அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், எட்டுதிக்கு நமஸ்காரங்கள்) போன்றவை விதிக்கப்பட்டுள்ளன. “விழுந்து, விழுந்து நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்”, என்று கேட்பதைவிட  நம்முடைய மூதாதையர்களின் வழிவந்த இந்த நமஸ்காரங்களைச் செய்துதான் பாருங்களேன். அதன் பிறகுதானே நீங்கள் அதன் பயனை உணர முடியும்!
எதையும் ஏற்கும் தென்புலத்தார்!
இவ்விதழில் நடப்பு பிரமாதி வருடத்திற்குரிய மாளயபட்ச தர்ப்பண பூஜை முறைகளின் பலாபலன்களை சித்தர்களின் அருள்வழி முறைப்படி நாம் ஈண்டு தருகின்றோம். ஒவ்வொரு தினத்திற்குரிய தர்ப்பணத்தின் விசேஷப் பெயரும், பலாபலன்களும், தர்ப்பண முறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. தர்ப்பணம் என்றால் அவரவர் தாமே எளிதில் செய்யக் கூடிய, செலவே இல்லாத மிகச் சிறந்த எளிய வழிபாடாகும். தக்க பெரியோர்களின் துணை கிட்டுமாயின், அவருடைய வழிமுறைப்படி நன்முறையில் தர்ப்பணத்தை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில், எங்கள் ஆஸ்ரம வெளியீடான “எளிய தர்ப்பண முறை” என்ற நூலில் அளிக்கப்பட்டுள்ளவாறு, அவரவர் தம் இல்லத்திலோ, கோயில், குளத்திலோ, தீர்த்தத்திலோ, ஆற்றங்கரையிலோ, சுத்தமான நீர், எள், தர்ப்பையை வைத்துக் கொண்டு தாமே மிக எளிய முறையில் மந்திரங்களைச் சொல்லி, தர்ப்பணத்தை அளிக்கலாம்.
கல்வி அறிவே சிறிதும் இல்லாத பாமரர் கூட புனிதமான, கிணறு, ஆற்று நீரை உள்ளங்கையில் ஏந்தி, “எம்முடைய மூதாதைய பித்ரு தேவர்களே! எனக்குக் கல்வி அறிவு கிடையாது. எனினும், உங்களுக்கு மிகவும் சிறப்பான, உவப்பான இம்மாளய பட்சத் திதிகளில் உங்களை வழிபடுவதில் மிகவும் மகிழ்ச்சி உண்டாகிறது. இதனை அர்க்ய, தர்ப்பண வழிபாடாக ஏற்று அருள் புரிவீர்களாக!” என்று அவரவர் அறிந்த தமிழிலோ அன்றி கொச்சைத் தமிழில் கூடச் சொல்லி தர்ப்பை மூலமாக நீரை அர்க்யமாக தர்பையின் மேல் இட்டிடலாம். இதை விட மிகச் சிறந்த, பரிசுத்தமான மனதுடன் செய்யப்படக் கூடிய ஒரு தர்ப்பண பூஜை எதுவும் இராது! அந்த அளவிற்குப் பித்ரு தேவர்கள் நம் பரிசுத்த பக்தியை உணர்ந்தே செயல்படுகின்றனர். “மந்திரங்களைச் சரிவர ஓதவில்லையே, சடங்குகளை நாம் முறையாகக் கடைபிடிக்கின்றோமா?” என்று நினையாது உண்மையான எண்ணத்துடன், பரிசுத்தமான மனதுடன் அளிக்கின்ற தர்ப்பண வழிபாட்டையே பித்ருக்கள் மிகவும் ஆனந்தமுடன் ஏற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதற்காக மந்திரங்கள் தேவையல்ல என்பது பொருளல்ல! மந்திரங்களை அறிந்தோர் மந்திரத்துடன் தான் தர்ப்பண பூஜை செய்திட வேண்டும். அறியாதோர் எம் ஆஸ்ரம நூலில் கண்டுள்ளவாறு தேவமொழி மற்றும் தமிழிலுள்ள பித்ரு தர்ப்பண மந்திரங்களை ஓதிடுக!
பிரதமை திதி தர்ப்பணம் – மனோபீஷ்ட ஜன தர்ப்பணம்
பல குடும்பங்களிலும் நிச்சயதார்த்தம் வரை வந்து பேசப்பட்ட சம்பந்தங்கள் தடைபட்டு, வேறெங்கோ திருமண உறவுகள் நிச்சயமாகி அமைந்துவிடும். தாம் விரும்பியவரை மணக்க இயலாது, நிச்சயமானவரின் அண்ணனோ, அக்காவோ, தம்பியோ, தங்கையோ, கண்வன், மனைவியாக அமைவதுண்டு. இவ்வாறு நிச்சயித்தபடி பலவாறான திருமணங்கள் அமையாத போது, வேறு சம்பந்தங்களில் திருமணங்கள் நடந்த பின்னர் கூட மன ஏக்கங்களாக ஆங்காங்கே, ஆணுக்கும், பெண்ணுக்கும் பல எண்ணங்கள் தொக்கி நிற்கும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் அண்ணனை விரும்பி நிச்சயம் செய்து, அவர் இறந்திருந்தால், தம்பிக்கு அந்த சம்பந்தம் வாய்த்து விடும். இவ்வாறு விரும்பிய திருமண சம்பந்தம் கைகூடாது மாறி அமைந்து பலவித ஏக்கங்களுடன் பலரும் மரணம் அடைகின்றனர். இந்த ஏக்கங்கள் இவ்வாறு தொடரும் போது, அவர்கள் யாரை எண்ணி, இ(ற)ருந்தார்களோ அவர்களுடன் கூடிய வாழ்க்கைதான் எதிர்வருகின்ற பிறவிகளில் ஏற்படும், எனவே இத்தகைய ஏக்கங்களுடன் இறந்தோர்க்கு இன்றைய மாளயபட்ச பிரதமை திதியில் தர்ப்பணம் அளித்தலால், அவர்தம் ஏக்கங்கட்குப் பிராயச்சித்தம் கிட்டி, மனிதப் பிறவித் தளையானது, இந்த ஏக்கங்களால் மேலும் நீடிக்காது, நன்முறையில் தீர்வு பெறும்
பிறருக்கான தியாக மய தர்ப்பண பூஜை!  
“இத்தகைய ஏக்கங்கள் நிறைந்த ஒருவரையும் நாம் அறியவில்லையே, அப்படியானால், நாம் செய்கின்ற இந்த பிரதமை திதித் தர்ப்பணத்தின் பலன் யாருக்குப் போய்ச் சேரும்” என்னும் எண்ணம் ஏற்படுமல்லவா! இத்தகைய ஏக்கங்களுடன் பலர் நீங்கள் அறியாமலேயே இ(ரு)றந்திருந்தாலும் நீங்கள் அறியாமலேயே இதே ஏக்கங்களுடன் வாழ்வோர் இன்றைய உலகில் பலரும் உண்டல்லவா! பலரும் அறியாமலும், அறிந்தும் இந்த ஏக்கங்களுடன் வாழ்கின்றனரே! அவர்தம் ஏக்கங்கள், இறுதிவரை ஏக்கமாகவே இருந்து விடாமல், அவை தக்க பிராயச்சித்தத்துடன் மனத்தினின்று களையப்பட்டுத் தீர்வு பெறுவதற்காக நீங்கள் இந்த தர்ப்பணப் பூஜையைச் செய்யலாம் அல்லது நம் வாழ்நாளிலோ, சந்ததிகளிலோ இந்நிலை ஏற்படாதிருக்கவும் இந்த தர்ப்பண பூஜை உதவுகின்றது.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் செய்யும் இத்தர்ப்பண பூஜை நம் நல்வாழ்விற்காகத்தான் என்றாலும், போகப் போக நாம் பெறும் உத்தம இறைநிலைகளில் பிறருடைய நல்வாழ்விற்காகவும், தர்ப்பண பூஜை செய்ய வேண்டும் என்னும் உயர்ந்த தியாகமய மனப்பண்பை ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரதமை திதியில் நீங்கள் செய்கின்ற தர்ப்பண பூஜையானது, உங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இல்லாவிடினும், இத்தகைய சம்பவங்களுக்குத் தொடர்புடைய பலருக்கும் உங்கள் தர்ப்பணத்தின் பலன்கள் சென்றடையுமல்லவா? ஏன் உங்கள் சந்ததியிலும் இத்தகைய ஏக்கங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் அல்லவா? எனவே தான், அமாவாசை தர்ப்பண பூஜையும் மாளயபட்சத் திதியின் ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான தர்ப்பண வழிபாடும் மிகச் சிறந்த பூஜையாக அமைந்துள்ளது.
ஜாதி, மத, இன, குல பேதமில்லாத பலருடைய நல்வாழ்விற்கான பூஜையாக உலகெங்கும் விரவிக் கிடக்கின்ற, இத்தகைய ஏக்கங்களையுடையவர்களின் நன்மைக்காகவும் இது பயன்படுகிறது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தால்தான், இந்த தர்ப்பண பூஜையானது மிகச் சிறந்த சமுதாய பூஜையாக விளங்குகிறது என்பதை உணர்வீர்கள். மிகுந்த ஆனந்தத்துடன் இவற்றைக் கடைபிடிப்பீர்கள்! இன்று 12 புள்ளியிலான பச்சரிசி மாக்கோலமிட்டு தர்ப்பைச் சட்டம் அமைத்து, 12 துளசி இலைகளைப் பரப்பி, அதன்மேல் தேவமொழியிலோ, தமிழிலோ உள்ள தர்ப்பண மந்திரங்களை ஓதி தர்ப்பண நீர்த்தாரை அளித்து இன்றைய திதித் தர்ப்பணத்தைச் சிறப்பாக நிறைவேற்றுங்கள். மாளயபட்சப் பிரதமை தர்ப்பணத்திற்கான மிகச் சிறந்த தலமாக விளங்குவது பவானியில் உள்ள முக்கூடல் தீர்க்கமாக விளங்கும் மூன்று நதி சங்கம தீர்த்தப் படுகையாகும். மாதந்தோறும் அமாவாசையன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் கோடானு கோடி பித்ருக்கள் கூடுகின்ற முக்கூடல் தலமாகும்.
துவிதியை திதி பல சோபித் தர்ப்பணம்
பல குடும்பங்களில் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர், விதவைகளைத் திருமணம் செய்து கொண்டோர், பெற்றோர்களின் மன விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டோர், கலப்புத் திருமணவாசிகள்  இவ்வாறாகப் பலவித முறைகளில் திருமணம் செய்து பல துன்பங்களை, எதிர்ப்புகளை ஏற்று வாழ்ந்து இறந்தோர் பலருண்டு. இவர்கட்குத் தம் வாழ்வில் ஏற்பட்ட பகைமை, தடங்கல்கள், குறைகள் இறுதி வரையில் ஏக்கங்களாகவே இருந்து விடுகின்றன. உடல் ஊனமுடனும், பெற்றோர்கள், உறவினர்கள் பகைமையுடனும், மன வேறுபாட்டோடும் வாழ்ந்து இறந்தோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்தலால், அவர்களுடைய ஏக்கம் ஓரளவு தீர்வதோடு மட்டுமல்லாது அவர்களுடைய திருமண வாழ்வின்போது ஏற்பட்ட பகைமையின் விளைவுகள் அவர்களுடைய குடும்பத்தைத் தாக்காது நீங்கி, பலவிதப் பிராயச் சித்தங்களைத் தருவதற்கும் இந்த மாளயபட்ச துவிதியை திதித் தர்ப்பணம் உதவுகிறது.
இது மட்டுமின்றி, இத்தகைய வாழ்க்கை நிலைகள் இன்றும் பலருக்குத் தொடர்கின்றன. இவர்களுக்கும் உடல் ஊனம், உறவுத் தடைகள் போன்று எத்தகைய ஏக்கங்கள் இருந்தாலும் இம்மானுடப் பிறவிக்குள் அவை தீர்வு பெற வேண்டும். இதற்கும் இந்த துவிதியைத் திதி தர்ப்பண வழிபாடு பெரிதும் துணை புரியும். இன்று காசி தலத்திலிருந்து முறையான தட்சிணை, தான, தருமம் செய்து எடுத்து வரப் பெற்ற மண்ணைப் பரப்பி அதன் மேல் மல்லிகைப் பூக்களைப் பரப்பி, இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து எள்ளுடன் கூடிய நீர்த்தாரை தர்ப்பணம் செய்திட வேண்டும். காசித் திருத்தல மண் கிட்டாவிடில் என் செய்வது? கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதி தீரங்களிலிருந்து பெறப்பட்ட மண்ணில் கங்கை நீரை ஊற்றி அதன்மேல் மேற்கண்ட முறையில் தர்ப்பண வழிபாட்டைச் செய்திடுக! இன்றைய துவிதியை திதிக்குரித்தான மிகச் சிறப்பான தர்ப்பணத் தலமாக விளங்குவது திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கோயில்பத்து எனப்படும் திலதர்ப்பணபுரியிலுள்ள சிவ ஆலயத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளிப்பதாகும். ஸ்ரீராமர், லக்ஷ்மணர் தம் தந்தைக்குத் தர்ப்பண பூஜை செய்த அற்புதத் தலம்.
திரிதியை திதி
இந்தத் திதித் தர்ப்பணத்திற்கு பிருத்வி மாங்கல்ய சூத்ர தர்ப்பண பூஜை என்று பெயர், பல குடும்பங்களிலும், அண்ணனுக்கு நிச்சயமாகி அப்பெண்ணை தம்பி மணந்தும் அல்லது சகோதரிகளில் ஒருவருக்கு நிச்சயமாகி, வேறு ஒருவர் மணப்பதும் நிகழ்வதும் உண்டு. இவ்வாறு மாறுபட்ட நிச்சயதார்த்த முறைகளிலே திருமணம் பூண்டு இறந்தவர்கள் பலவித மனச்சுமைகளைத் தாங்கியவாறு இறந்திருப்பர். இம் மனச்சுமை மீண்டும் பல பிறவிகளில் தொடராது முடிவு பெற இத்திரிதியை தின பூஜை அமைகிறது. மேலும் இதே சூழ்நிலை இன்றும் பல குடும்பங்களில் நிகழ்வதுண்டு. அதாவது சகோதர, சகோதரிகளில் ஒருவருக்கென நிச்சயிக்கப்பட்டு மற்றவருக்குத் திருமணம் நிகழ்ந்து விடும்.
இது இயற்கைச் சூழ்நிலைகளாலோ, வாழ்க்கைக் கட்டாயங்களாலோ ஏற்படக் கூடும். இம்மாதிரியான ஏக்கங்களும், மனச் சுமைகளும், கர்மவினைகளாகத் தொடராவண்ணம் இருக்கவே இத்திரிதியை தர்ப்பண பூஜையாகும். இதற்கு முந்தைய (இரண்டாவதான) துவிதியை திதியில் விரும்பியவரை மணக்காது வேறு திருமண முடிவுகளால் ஏற்படும் ஏக்கங்களுக்கான பிராயசித்தங்களைக் கண்டோம் அல்லவா? இந்த (மூன்றாவது) திரிதியை திதியில் எவருக்கோ நிச்சயமாகி சூழ்நிலைகளால் அது தடைபட்டு வேறு எவருக்கோ திருமணம் முடிவதால் ஏற்படும் மன ஏக்கங்களுக்கான பிராயசித்தம் தருவதாகும். இன்று கோதுமை தானியங்களைப் பரப்பி, அதன் மேல் தர்ப்பைச் சட்டமிட்டு, அதன்மேல் சம்பங்கிப் பூக்களை பரப்பித் தர்ப்பணம் செய்திட வேண்டும்.
பழங்காலத்தில் மண் ஓட்டுத் தாலி என்னும் ஒருவித புனிதமான தாலி உண்டு. பொன்னால் ஆகிய மாங்கல்யம் வருவதற்கு முன் தற்காலத்தில் புனிதமான சுட்ட மண் ஓட்டினால் தாலி செய்து அதனை அணிந்து வந்தனர். சுட்ட மண்ணால் செய்யப்பட்ட ஓட்டுத் தாலிக்கு பொன் மாங்கல்யத்தை விட அபரிமிதமான சக்தி உண்டு. அதனால் தான் இன்றும் மண்ணால் ஆன அகல் விளக்குகள், உலோக குத்து விளக்கை விட தெய்வீக சக்தி வாய்ந்தவையாக விளங்குகின்றன. எனவே இன்று இந்த மண் ஓட்டுத் தாலியை சம்பங்கிப் பூக்களின் மேல் வைத்து, இதன் மேல் நீர்த் தாரை வார்த்தலால், மேற்கண்ட சம்பவங்கட்குத் தக்க தீர்வு ஏற்படும். இதனால், சகோதர, சகோதரிகளில் ஒருவருக்குத் திருமணமாகி, மற்றவருக்கு நின்று விடுதல் போன்று தடைபட்ட திருமணமும், விடுபட்ட சகோதர, சகோதரிகளின் திருமணமும் கைகூட இத்திரிதியை தின தர்ப்பணம் பெரிதும் உதவும்.
இன்றைய திரிதியை தின தர்ப்பண வழிபாட்டிற்கு உரிய தலமாக விளங்குவது கும்பகோணம் (காவிரி நதி) சக்கரப் படித்துறையாகும். எப்போதும் குறிப்பாக அமாவாசையன்று மஹரிஷிகள் விரும்பித் தர்ப்பண பூஜை அளிக்கின்ற தலமே புனிதமாஅ சக்கரப் படித்துறையாகும். தற்போது இது மிகவும் அசுத்தமாக இருப்பதால் பலரும் ஒன்று சேர்ந்து இதனைத் துப்புரவு செய்வதானது கோயில் திருப்பணிப் பலன்களை வாழ்க்கையில் அளிக்கும்! பெறுதற்கரிய அரிய திருப்பணி! பல மஹான்கள் அமர்ந்த படித்துறை தற்போது அவல நிலையில் உள்ளது. குறிப்பாக கும்பகோணவாசிகள் இதனைத் தூய்மைப்படுத்தும் அருட்பணியினைச் செய்யும் படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
சதுர்த்தி
சதுர்பூர்வ சாதுர்ய திதித் தர்ப்பணம்
நாய், பூனை, இறக்கை வெட்டாத பறவைகள் போன்ற வளர்ப்போர் / வைத்திருப்போர் உண்டு. இது மிகச் சிறந்த காருண்ய சேவையாகும். ஆனால் இவ்வாறு வளர்கின்ற விலங்குகள் அவரவருடைய பூர்வ ஜென்மங்களில் தொடர்பு கொண்டவை என்பதை உணர்தல் வேண்டும். தாமாகவோ, டிரைவர் மூலமாகவோ வாகனப் பயணம் செய்கையில் பலரும் தங்களுடைய வாகனங்களை விலங்குகளின் மேல் ஓட்டி அவற்றின் மரணத்திற்கு ஆளாகியிருக்கலாம். பலரும் அபிமான, புத்ர, புத்ரிகளாகப் பல குழந்தைகளை வளர்த்து தத்தாக எடுத்தும், வளர்த்து ஆளாக்கி, அவர்தம் நல்வாழ்விற்குக் காரணமாக இருந்து இறந்திருப்போரும் உண்டு. இவ்வாறு அபிமானத்துடன் தத்து எடுத்து வளர்த்த ஆணோ, பெண்ணோ, விலங்குகளோ இறந்திருந்தால், அவர்தம் நல்வாழ்விற்காகவும், வளர்க்கபட்ட மிருகங்கள், பிராணிகளின் நல்வாழ்விற்கும், இத்தர்ப்பணப் பூஜை உதவுகிறது. ஒரு பேருந்தில் நாம் பயணம் செய்யும், அப்பேருந்து, ஒரு பிராணியின் மேலோ, விலங்கு மீதோ, மோதினாலும் அது இறக்க நேரிட்டால் அதில் பயணம் செய்த அனைவருக்கும் அந்த இறந்த உயிருக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய மனிதாபிமான கடமை உண்டு. “நாம் உட்கார்ந்து தானே இருந்தோம், ஓட்டுனர் தான் இதற்குப் பொறுப்பு,” என எண்ணாதீர்கள். நீங்கள் நன் முறையில் இறைவழிபாட்டுடன் பிரயாணம் செய்திருந்தால் அவ்விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணிடுக! இதனால் தான் பிரயாணத்தின் போது தூங்குவதைத் தவிர்த்து எப்போதும் இறைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற இறை நியதியும் உண்டு.
இன்றைய சதுர்த்தி திதியில் சிவப்பு அரிசி பரப்பி (கார் அரிசி) தர்ப்பைச் சட்டம் அமைத்து அதன்மேல் செம்பருத்திப் பூக்களை பரப்பி எள் + நீர்த்தாரை அளித்திட வேண்டும். இன்றைய சதுர்த்தி திதிக்குரிய மாளய பட்ச தர்ப்பணத் திருவழிபாட்டுத் தலமாக விளங்குவது திருவிடைமருதூர் திருத்தலத்தின் பெருந்திருக்குளமாகும். காசியை விட வீசம் பங்கு பெரிதான தலமென இதன் சிறப்பினை விவரிப்பார்கள்! தாய்வழிப் பித்ரு மூர்த்திகள் எப்போதும் விரும்பி தரிசிக்கின்ற, நீராடுகின்ற முக்கியமான திருக்குளம். தம் தாய்க்குச் சேவை செய்யும் வாய்ப்பினை இழந்தோர் பிராயசித்தம் பெற நாட வேண்டிய தீர்த்தம்.
பஞ்சமி விருட்ச பரிபாலன தர்ப்பணம்
நம்முடைய மூதாதையர்களால் வளர்க்கப் பெற்ற எத்துணையோ விருட்சங்கள் உண்டு. அவற்றில் சில பட்டுப் போயும், துளிர்த்தும் இன்றும் இருக்கும். இன்றைக்கு நீங்கள் அறிந்தவரையில் உங்கள் மூதாதையர்கள் வளர்த்த மரங்களின் அடியிலோ, அவை பட்டுப் போய் விழுந்த இடங்களிலோ, இன்று தர்ப்பணத்தை அளித்தலால், எத்துணையோ ஆண்டுகள் வாழ்ந்த அம்மரங்களின் பரிபூர்வமான ஆசி உங்களுக்குக் கிட்டும். நம் வீட்டில் பல்லாண்டு வாழ்ந்த/வாழும் மரங்களும் நமக்கு உறவு முறையே! மேலும், தினந்தோறும் நாம் காய்கறிகளை உண்கிறோமல்லவா? தங்களுடைய தேகத்தைப் பிறருக்காகத் தியாகம் செய்வதால் தானே காய்கறிகளை நாம் உண்ண முடிகிறது. தாவர, காய்கறி இனங்களும், நம்மைப் போல ஆன்ம சக்தி கொண்டவையே! எனவே நாம் உண்டு களித்த தாவரங்களின் நல்வாழ்விற்காக இன்றைய பஞ்சமி திதி தர்ப்பண பூஜையாக மிகச் சிறந்து விளங்குகிறது. இன்று பலவிதமான காய்கறிகளைப் பரப்பி அவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து, எள், நீர்த்தாரையுடன் தர்ப்பணமிட்டு, பிறகு இக்காய்கறிகளைச் சமைத்து அன்னதானமாகப் பலருக்கும் அளித்திட வேண்டும். இன்றைய பஞ்சமி திதிக்குரிய தர்ப்பண இடத்திற்கு சிறந்த இறைத்தலம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரைத் திருத்தலம் (ஸ்ரீகுழல் அழகர்) ஆகும். ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் இன்றும் சூட்சுமமாகவோ, தூல வடிவிலோ வந்து தினமும் தர்ப்பண பூஜை செய்யும் அற்புதத் திருத்தலம். ஸ்ரீஅகஸ்தியருடன் தொடர்புடைய புனிதத் தலங்களுள் ஒன்று ஆகும். எவருக்கும் பயன்படும் வகையில் வாழாது பொதுவாக உறவினர்களுடன் ஒட்டுதல் இல்லாது தனித்தே சுயநலமாக வாழ்ந்து சொல்லொணாக் கர்மவினைகளைச் சேர்ப்போர் திருந்திட பிராயசித்தம் தரும் தர்ப்பணம்.
சஷ்டி திதி தர்ப்பணம்
ஆசிரியப் பணி மிகவும் புனிதமானது. எவ்வளவுதான் நன்முறையிலே மாணவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்தாலும் சில ஆசிரியர்கள் சற்றுக் கடுமையுடனும், கோபத்துடனும் நடந்து கொண்டு பல மாணவர்களுக்குத் துன்பங்கள் ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுகின்றன. இவ்வாறாக பல வருடங்களாகிய பணியில் தாம் அறிந்தோ, அறியாமலோ மாணவர்களுக்கு இழைத்த துன்பங்களுக்கான, மனத்தாங்கல்களுக்கான பரிகாரங்களைச் செய்யாமல் பலரும் இறந்து விடுவதும் உண்டு. இத்தகைய கர்மவினைகள் அவர்களைத் தாக்காது நன்முறையில் தீர்வு பெறுவதற்கு இன்றைய சஷ்டி திதிக்குரித்தான தர்ப்பண பூஜை பெரிதும் உதவுகின்றது. மேலும் தற்போது கல்வித் துறையில் பணிபுரிபவர்களும் தாம் அறிந்தோ, அறியாமலோ மாணவ சமுதாயத்திற்கு ஏற்படுத்துகின்ற சிறிய அளவு மனத்தாங்கல்களுக்கும், துன்பங்களுக்கும் கூட பிராயசித்தமாக இத்தர்ப்பண பூஜையின் பலாபலன்கள் பெரிதும் உதவுகின்றன.
மேலும் நமக்கு நன்முறையில் பாடம் கற்பித்துத் தாம் முன்னுக்கு வருவதற்குக் காரணமாக இருந்த பல உத்தம ஆசிரியர்களுக்கும் இந்த காருண்ய தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையதாகும். அவர்களுடைய மேலுலக நல்வாழ்விற்கு இது பெரிதும் உதவும். சம்பங்கி மலர்களைப் பரப்பி அதன்மேல் 6 வயதுக்குட்பட்ட (தெய்வீகம் நிரம்பிய) சிறுவருடைய கரங்களால் தர்ப்பைகளைப் பெற்று தர்ப்பைச் சட்டம் அமைத்து, தர்ப்பணம் அளித்தல் வேண்டும். சில சமயங்களில் ஆசிரியர் – மாணவர் உறவு முறையிலே இரு வழிகளிலுமே, பலவிதமான பகைமைகள் ஏற்படுவதுண்டு. மாணவர்களுக்குக் குறைவான மதிப்பெண் அளிப்பது, ஃபெயிலாக்குவது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மீது கங்கணம் வைத்துக் கொண்டு அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலே துடிக்கும் மாணவர்களும் உண்டு. இது மாணவப்பருத்தில் அறியாமையால் ஏற்படுகின்ற எண்ணங்களாக இருந்தாலும் கூட இதனால் விளைகின்ற சம்பவங்களால் பல தீய கர்ம வினைகள் ஏற்படுகின்றன என்பது உண்மையே.
இதனால் தான், அக்காலத்தில் சஷ்டி திதியில் தான் குருகுல வாசத்தில் சில முக்கியமான பாடங்களைக் கற்பிக்கத் தொடங்குவார்கள். இதனால் ஆசிரிய மாணவ பகைமை உணர்வுகள் என்றுமே தோன்றாது.. நன்முறையில் கல்விப் பணியாற்றி எவ்வித உதவிகளையும், வசதிகளையும் எதிர்பாராது எளியமுறையில் ஏழ்மையில் வாழ்ந்து உயிர் நீத்த ஆசியர்களுக்கு காருண்யத் தர்ப்பணத்தை இன்று அளிப்பதனால் அவர்கள் நன்னிலை பெறுவர் உத்தம லோகங்களில்! இன்றைய சஷ்டி திதிக்குரிய மாளயபட்சத் தர்ப்பணத்திற்குரிய திருத்தலமாக விளங்குவது மதுரை அருகே திருப்பூவணத்தில் உள்ள ஸ்ரீபத்ரிகா பரமேஸ்வர சுவாமி திருக்குளத் தீர்த்தங்களாகும். நிறைய தீர்த்தங்கள் நிறைந்துள்ள இத்திருத்தலத்தில் அனைத்துத் தீர்த்தங்களிலுமே நீர்த்தாரை நீர்க்கடனாக இன்று எள்ளுடன் அர்க்ய நீரைத் தர்ப்பணமாக அளிப்பது மிகவும் விசேஷமானதாகும். இன்றைக்குப் பல கோவில்களிலும், ஆற்றுநீர் வராமை மற்றும் கோடை வெப்பம் காரணமாகவும் தீர்த்தக் குளங்கள் நீரற்று வறண்டு இருப்பது போலத் தோன்றினாலும், சூட்சுமக் கண்களுக்குத்தான் வற்றாத அரும்பெரும் ஜீவப் பெரும் தீர்த்தமாக இவை விளங்குவது புலனாகும். மஹரிஷிகள் நீராடிய கோயில் தீர்த்தங்கள் என்றுமே வற்றுவதில்லை. நம் கண்களுக்குத்தான் அவ்வாறாக நீரற்றுத் தோன்றுகிறது. எனவே நீரில்லாவிடினும் கூட, கமண்டலத்திலோ அல்லது மர/செப்புப் பாத்திரத்திலோ, பஞ்ச பாத்திரத்திலோ நீரை எடுத்துச் சென்று தர்ப்பணம் அளித்தல் வேண்டும். காசிக்கு நிகரான தீர்த்தங்கள் உள்ள ஆலயம் இது!

சப்தமி தர்ப்பண பூஜை கூர்ம காஷ்ட தர்ப்பணம்
ஒரு மனித உடலுக்குள் எவ்வாறு ஆன்மா தெய்வீக சக்தியுடன் பொலிந்து கிடக்கின்றதோ அதேபோலத்தான் பூச்சிகளிலும், நிலம், நீர், ஆகாய வாழ் உயிரினங்களிலுமாக அனைத்து ஜீவன்களிலும் ஆன்ம சக்தி விரிந்து நிறைந்துள்ளது. மனிதனுடைய பலவிதமான பொறுப்பற்ற, அஜாக்கிரதையான வாழ்க்கைக் காரியங்களினாலும், இயந்திரப் பொறிகளினாலும் பலவிதமான பூச்சிகள் மாய்கின்றன. ஒரு ஆகாய  விமானம் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து செல்கையிலே காற்றில் வாழும் எத்தனையோ கோடிக் கணக்கான கண்ணுக்குத் தெரியாத பூச்சியினங்கள் அழிவுறுகின்றன. இதே போல கடலில் கப்பல் செல்லும் போது அதிலிருந்து ஏற்படுகின்ற விஷம் நிறைந்த புகையினால் பலவிதமான கடல்வாழ் உயிரினங்கள் கூட இறந்து விடுகின்றன.
மனித முயற்சியினால் விஞ்ஞானமய மாறுபாடுகளில் மாய்கின்ற பூச்சிகளுக்கும், ஜீவன்களுக்கும் தர்ப்பணம் அளிப்பது மனித குலத்தின் கடமையாகும். இன்று இத்தகைய ஜீவகாருண்ய தர்ப்பம் அளித்துவர மிகவும் விசேஷமானதாகும். ஆறறிவு படைத்தவனாக விளங்குகின்ற மனிதர்களாகிய நம்மைச் சார்ந்தும், சுற்றிலும் உள்ள அனைத்து வகையான உயிரினங்களுக்கும், தாவர இனம், விலங்கினம் என எவ்வித வேறுபாடும் பாராது தர்ப்பண அர்க்யம், நீர்த்தாரை அளிப்பதுதான் அரிய தியாக வாழ்விற்கு அடிகோலும், சாதி, மத, இன வேறுபாட்டிற்கு அடிமைப் பட்டுவிட்ட மனித குலத்திற்கு இந்த உத்தம நிலையை அடைவது சற்றுக் கடினமே! இன்று அனைத்து வகையான பூச்சியினங்களுக்கும், குறிப்பாக, தன் முதுகில் நட்சத்திரங்கள் போன்ற வடிவுகளைத் தாங்கியுள்ள நட்சத்திர ஆமைகள் (Star Tortoise)  என்கின்ற ஒருவகை விசேஷமான ஆமைக்கும் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். இன்று ஒரு ஆமை ஓட்டின் மேல் (சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை) தர்ப்பை சட்டம் அமைத்து நீர்த்தாரை தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். இதற்கு கூர்ம காஷ்ட தர்ப்பணம் என்று பெயர்.
ஆமை ஓடு என்றால் ஆமையைக் கொன்று ஜீவ ஹிம்சை செய்து பெறுவது அல்ல. இயற்கையாக இறந்த ஆமை ஓடுதான் மிகவும் தெய்வீக சக்தியை உடையதாகும். சித்த, ஆயுர்வேத மருந்து மூலிகை முறைகளில் ஆமை ஓட்டை நீரில் ஊற வைத்து, அரைத்து எழும் காவிப் பசையை நல்லதொரு மருந்தாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் பலரும் தன்னுடைய கர்வம், பதவி, அந்தஸ்து, செல்வம், அகங்காரம் காரணமாகப் பல குடும்பங்களைப் பிரித்துத் தேவையில்லாத கொடிய கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். இதற்குப் பரிகாரமாக அமைவது தான் இன்று செய்யக் கூடிய ஆமை ஓட்டுத் தர்ப்பணமாகும். இதனோடு தம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை இனிமேலாயினும் செய்திடுதல் வேண்டும். இன்று சப்தமிக்கான தர்ப்பணம் அளிப்பதற்கான மிகச் சிறந்த தலமாக விளங்குவது சென்னை அருகே உள்ள திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயிலின் திருக்குளமாகும்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

திருவள்ளூர் திருத்தலப் பித்ரு சாந்தி திருக்குளம் (ஹிருத்த பாப நாசினித் தீர்த்தம்)
சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருக்குளமே ஹிருத்த பாபநாசினித் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. சாலிஹோத்ர மஹரிஷி எனும் உத்தம மஹரிஷி பரம்பொருளாம் பெருமாளின் திருவருளைப் பெற்ற தலம். சந்ததி விருத்திக்கு அருள்பாலிக்கும் அற்புதத்தலம். பித்ருக்களுக்கும் முக்தி நிலையை அருளவல்ல மிக முக்கியமான பித்ரு முக்தித் தலம். பித்ரு சாபங்களையும், தோஷங்களையும் நிவர்த்தி செய்யவல்ல அதிஅற்புதத் தலம். நெல்லைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டமிட்டு, தர்ப்பணப் பூஜை செய்தல் இங்கு மிகவும் விசேஷமானதாகும். மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று இங்கு தர்ப்பண மிடுதலால், இதுவரையில் தர்ப்பணங்களைச் சரிவரச் செய்யாமைக்கான தோஷங்கட்கும் சாபங்கட்கும் நிவர்த்தி கிட்டுவதோடு, இனியேனும் தர்ப்பண பூஜைகளை வைராக்கியத்துடன், நன்முறையில் தொடர்ந்து செய்திட வேண்டும் எனும் உத்வேகத்தையும் தரக்கூடிய மிகவும் புனிதமான தலம்.
மாளயபட்ச அமாவாசையன்று ஆயிரக் கணக்கான பாமரர்களும், நடுத்தர மக்களும், அறிஞர்களும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும், ஜாதி, மத இன பேதமின்றி இங்கு கூடி தர்ப்பணப் பூஜை செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.. எனவே, எங்கெங்கோ, மூலை, முடுக்கினின்று வருகின்ற யாத்ரீகர்களுக்கு, உதவும் பொருட்டு மாளயபட்ச அமாவாசை அன்று அன்னதானம் செய்வது மிகவும் உன்னதமான பெறுதற்கரிய பாக்கியமாகும். பித்ருக்களே நேரில் வந்து தர்ப்பண நீரைப் பெறுகின்ற உத்தமமான தலம். உங்களுடைய பித்ரு தேவர்களே முன் வந்து வாழ்த்தி, செல்கின்ற இத்திருத்தலத்தில் உங்களால் இயன்ற வரை அன்னதானத்தைக் கடைபிடித்து பெறுதற்கரிய பித்ரு ஆசியைப் பெற்றிடுங்கள்.
நாகதோஷங்களுக்குத் தக்க நிவர்த்தியையும் கர்மவினைக் கழிப்பையும் பெற்றுத் தரும் தலம், நீத்தார்கள் நலன் பெறுவதற்கும் உதவும் தலம் இது. அஷ்ட பிரகரண தீர்த்தமென்றும், ஹிருத்தபாப நாசினி தீர்த்தம் என்றும், பித்ரு சாந்தி தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலமானது, சயனக் கோலப் பெருமாளுக்குரித்தான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ள மிகச் சிறப்பான திருக்குளம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. நம்பிக்கையுடனும், உண்மையான பக்தியுடன் இங்கு இத்தீர்த்தத்தில் தர்ப்பண  நீர்த்தாரை அளிப்போர்க்கு, பித்ருக்களின் பரிபூரண ஆசி கிட்டுகின்றன. எண்ணற்ற மஹான்கள் இன்றும் கூடி அருள்பாலிக்கும் உத்தமத்தலம், குறிப்பாக “தாம் அழகாக இல்லையே, தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே”, என்று ஏங்குவோர்க்கும், அங்கக் குறைபாடுகள் உடையோருக்கு ஏற்படுகின்ற ஏக்கங்களும், துன்பங்களுக்கும் தக்க நிவாரணம் தரும் திவ்யமான ஸ்ரீபெருமாள் தலம்!

நாய் வளர்ப்பு

நாய் வளர்ப்பு – பூர்வ ஜென்மத் தொடர்பு!
சில குடும்பங்களில், கணவனோ, மனைவியோ இல்லாதிருந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்தால் அல்லது குழந்தைகள் இல்லாவிடில், நாய், பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளை வளர்ப்பார்கள். செல்வச் செழிப்பில் இருப்பவர்களும், குழந்தைகள் நிறைய இருப்பவர்களும் மற்றும் சாதாரணமாகவும் கூட நாய், கிளி, பூனைகளை வளர்ப்பதுண்டு. இத்தகைய நாய்கள் மீது பெருத்த அன்பு, பாசம் கொண்டு ஒரே படுக்கையில் அவை வளர்ந்து இறந்து விடும் பொழுது பலரும் துக்கத்தால் வெள்ளமெனக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தான் அன்புடன் வளர்த்த நாயின் இழப்பைத் தாங்காமல் பல வருடங்களாக வேதனையில் வாடுவோரும் உண்டு. ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு நாயானது உங்களுடன் ஒட்டி, உராய்ந்து, படுக்கையில் படுத்து , அமர்ந்து உங்களுடைய ஏக்கங்களில், மகிழ்ச்சியூட்டும் தருணங்களில் எல்லாம் பங்கு கொள்கின்றதோ, அது வெறும் நாய் மட்டும் அல்ல, பூர்வ ஜென்ம உறவே!
உங்களை விட்டுப் பிரிந்து மேல் உலகம் சென்ற கணவராகவோ, மனைவியாகவோ, குழந்தையாகவோ, உறவினர்களாகவோ, நண்பராகவோ அது இருக்கக்கூடும். எனவே எந்தவிதமான பூர்வஜென்மத் தொடர்பு இன்றியும் உங்களுடன் எந்தப் பிராணியும் இருப்பதில்லை.  எத்தனையோ ஆயிரக்கணக்கான நாய்களும் தெருவில் திரிந்து கொண்டிருக்க ஏதோ சில நாய்கள் மட்டும் airconditition  வீட்டிலும், பஞ்சு மெத்தையிலும் படுத்துப் புரள்கின்றதென்றால் அது வெறும் நாய் அல்லவே. பூர்வஜென்மத் தொடர்புதானே.. எனவே இத்தகைய அன்பான விலங்குகள் இறக்கும் போது அதற்கு நிச்சயமாகத் தர்ப்பணம் செய்தாக வேண்டும். ஏனென்றால் இறந்து போன கணவனோ, மனைவியோ தன்னுடைய ஆத்ம சக்தியை அதனுள் செலுத்தி உங்களுடன் வாழ்ந்திருக்கக் கூடும். அதனால் தான் உங்களுக்கு அந்த நாயின் மீது அவ்வளவு பிரியம் ஏற்படுகிறது. எனவே நாயின் இறந்த திதியை நினைவில் வைத்துக் கொண்டு வருடந்தோறும் கூட அதற்கு தர்ப்பணம் செய்து விடலாம்...
“என்ன இது? இது அறிவுடன் கூடிய செயலா!” என்று கூடத் தோன்றும். ஆறறிவுடைய மனிதனுடைய தலையாய கடமைகளுள் ஒன்று என்னவென்றால் தன்னைச் சார்ந்துள்ள, சுற்றி உள்ள அனைத்து விதமான தாவர, விலங்கினங்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும் என்ற ஒரு தார்மீகக் கடமை மனித சமுதாயத்திற்கு உண்டு.. எனவே உங்களுடன் பழகிய நாய், கிளி, பூனை போன்றவற்றிற்குத் தர்ப்பணம் செய்கின்ற அற்புத நாளாக அமைவது இந்த விசேஷ தினமாகும். மேலுலகங்களில் ஜீவகாருண்ய தினமாக இது போற்றப்படுகிறது.. இவ்வாறு பிரிந்த விலங்கினங்களின் ஆவிகள், நல்லாவிகள் இன்று ஒன்று கூடி தங்களுடைய பரிணாம வளர்ச்சிக்காக பித்ரு முக்தித் தலங்களுக்கு விஜயம் செய்கின்ற திருநாளாகும். எனவே இந்த விசேஷமான தினத்தில் அனைத்து விதமான உயிரினங்களுக்கும் தர்ப்பணம் அளித்து ஜீவகாருண்ய சேவையைப் புரிவீர்களாக!
உங்கள் வயிற்றில் தான் எத்தனை கோழிகள், மீன்கள், நண்டுகள், மாடுகள், பறவைகள், இறைச்சியாகவும் மற்றும் தாவரங்களும் உட்சென்று ஜீரணமாகி உங்கள் உதிரத்திலும், எலும்பிலும், தசையிலும், ரோமத்திலும், பரிணமித்துக் கிடக்கின்றது. இப்பொழுது உங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள். பல ஜீவன்களின் Composite Structure   தானே நீங்கள்.. அப்படியானால் அனைத்து விதமான ஜீவன்களுக்கும் அதனுடைய ஆன்ம பூஜையாக தர்ப்பண பூஜையைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டுமல்லவா! உங்களை நீங்களே நன்றாக புரிந்து கொள்ள இந்த ஜீவகாருண்யத் தர்ப்பணம் பெரிதும் உதவுகின்றது.. இந்த நாளை விட்டு விடாதீர்கள்.. உங்கள் வீட்டில் எந்த விதமான நாயோ, பூனையோ, வளர்க்கப்படாவிட்டாலும் எத்தனையோ இல்லங்களில் வளர்ந்து, மடிந்த உயிரினங்கள் உண்டல்லவா! உங்களுக்கு பசும்பால், எருமைப் பால் எப்படி வருகிறது? அவற்றிற்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்வது உங்களுடைய தலையாய கடமைதானே! சுயநலத்தை விட்டு வெளிவாருங்கள், உன்னத சமுதாய பூஜையாக தர்ப்பண பூஜையாக செய்யுங்கள்...
மிகவும் புனிதமான எள்!
எங்கள் ஆஸ்ரம வெளியீடான “எளிய முறையில் தர்ப்பணம்” என்ற நூலில் பாமரர்களும் தர்ப்பணத்தைச் செய்யக் கூடிய அளவில் தர்ப்பண நியதிகளை மிகவும் எளிமைப்படுத்தித் தந்துள்ளோம். தர்பை என்னும் புல்லானது. அரிய தெய்வீக சக்திகளைத் தன்னுள் கொண்டுள்ளது. மிகப் பெரும் அளவில் மின்சக்தியைத் தன்னுள் தாங்கும் தன்மையையும் பெற்றதாக விளங்குகின்றது. கோடிக்கணக்கான அரிய மந்திரங்களையும் தன்னுள் கிரகித்திடும் சக்தியையும் தாங்கியுள்ளது.
வேத மகா வித்வான்களை விட அவர்களும் அறியாத பல அரிய மந்திர சக்திகளைத் தன்னுள் தேக்கி நிலைநிறுத்திகின்ற சக்தியை தெய்வ வரமாகப் பூண்டுள்ளதே தர்ப்பையாகும்.. இது மட்டும் அல்லாது பூலோகத்திலிருந்து எத்தனையோ லோகங்களுக்குத் தகவல்களை அனுப்புகின்ற Spiritual Satellite Communication Unit ஆகவும் விளங்குவது தர்பையாகும்... எள் என்பது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து பிறந்த புனிதமான தாவரமாகும்... Computer Chip போல ஒரு எள்ளின் உள் பதிந்து கிடக்கின்ற வேத சக்திகள் அதிகமோ அதிகம்.. நான்கு வேதங்களில் உள்ள ஜீவ தத்துவ சக்தி மந்திரங்களின் தொகுப்பாக விளங்குவது ஒரு சிறு எள் தானியமாகும். அப்படியானல் இதனுடைய சக்தியை எவ்வாறு விஞ்ஞானத்தால் பகுத்துக் கூறமுடியும்? எத்தனையோ கோடி பித்ரு லோகங்களில் உறையும் அனைத்து பித்ரு மூர்த்திகளுக்கும் அதிபதியாக இருப்பவர்தான் ஸ்ரீமகா விஷ்ணு ஆவார். பித்ருக்களின் தலைமை நாயகர்.. அவருடைய திருமேனியிலிருந்து எள்தாவரம் பிறந்ததென்றால் ஒரு சிறு எள்ளைத் தொடுவதற்குக் கூட நாம் என்னே பெறும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்?
புனிதமான நீரின் மகிமையை நீங்களே நன்கு அறிவீர்கள். நீரின்றி எந்த ஜீவ வாழ்க்கைதான் இருக்கின்றது சொல்லுங்கள் பார்க்கலாம்.. நம்முடைய மூதாதையர்களாகிய பித்ருக்கள் உறைகின்ற பித்ரு லோகங்களில் பெரும்பான்மையானவை நீரால் சூழப்பட்டவையாகவும் நீர்த் தன்மை நிறைந்ததாகவும் விளங்குகின்றன. எனவே தான் பித்ருக்கள் தீர்த்தங்களிலும், புனிதமான ஆறுகளிலும், கோயில் குளங்களிலும் தரிசித்து நீராடி அங்கே ஜபிப்பதையே தியானிப்பதையே, யோகம் புரிவதையே பெரிதும் விரும்புகின்றார்கள்.. மேலும் அவர்கள் ஊண் உறக்கமின்றி விளங்குகின்ற தெய்வீக சக்தியைப் பெற்றிருந்தாலும் அவர்கட்கு ஆத்ம சக்தியைத் தருவது நீர்தான். ஏனென்றால் நம்முடல் 70% நீரால் ஆனது என்று விஞ்ஞானத்தில் கூடச் சொல்லுகின்றார்கள் அல்லவா?
விஞ்ஞானமய கோசம் என்ற ஒரு பகுதி நம்மில் உண்டு. அதில்தான் பித்ருக்களுடைய தெய்வீக சக்தி கூடுகின்றது. நமக்குப் பலவிதமான வரங்களை, சந்ததி விருத்திக்கான குழந்தைகளாகவும், செல்வமாகவும், கல்வி அறிவாகவும், உடல் சக்தியாகவும், ஆரோக்கியமாகவும் தருவது பித்ருக்களின் ஆசியே! எனவே, பித்ரு தர்ப்பணத்தில் எள், நீர், தர்பை ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவை ஆகும். தர்ப்பணம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் கூட 12 தர்பைகளால் தர்ப்பைச் சட்டம் அமைத்து அவற்றின் ஒவ்வொரு நுனியிலும் நீத்தார் பெயரைச் சொல்லி தந்தை, தாய், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப்பாட்டனார் என தந்தை, தாய் வழியில் ஆறு, ஆறு பேருக்கும்.. “தாய் வழி மூதாதையர்களே! தந்தை வழி மூதாதையர்களே! உங்கள் சந்ததிகளாக விளங்குகின்ற நாங்கள் எங்களுடைய இறைப் பிரார்த்தனைகளை இந்த நீர்த்தாரை மூலமாக உங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.. எங்களுக்கு பூலோக வாழ்வு தந்த உங்களுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். நீங்கள் தந்த இந்த உடலை வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்து இறைவனடியை அடைந்திட தாங்கள் ஆசியளித்தல் வேண்டும்”, என்று தமிழிலே சாதாரணமாகச் சொல்லி உங்களுடைய கட்டைவிரல், ஆள் காட்டி விரலிடையே எள்ளுடன் நீரைச் சேர்த்து இந்த தர்பை சட்டத்தின் 12 முனைகளிலும் ஊற்றினால் போதும்.
இதுதான் உண்மையான ஆத்மார்த்தமான தர்ப்பண பூஜை... இவைதான் மந்திரங்களாகப் பகுத்துத் தரப்பட்டுள்ளன. மந்திரங்களுக்கும் ஆத்ம சக்தி உண்டு.. எனவே, பல சத்சங்கங்களை அமைத்து பாமரர்கள், ஏழைகள் முதல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய நீத்தார்களுக்கு வேண்டிய நீர்த்தாரை, தர்ப்பண பூஜை செய்யும் வண்ணம் நீங்கள் இறைப்பணி ஆற்றிட வேண்டும். பிறவியெடுத்ததின் அரும் பெரும் நோக்கங்களில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்திடுக!
மாளயபட்ச அமாவாசைத் தர்ப்பணம்
இந்த மாளய பட்ச சிறப்பு இதழ்களில் பிரதமை முதல் மாளயபட்ச அமாவாசை வரைக்கான 15 தேதிகளுக்குரிய விசேஷத் தர்ப்பண முறைக அளிக்கப்பட்டுள்ளன.. இதனை கடைபிடிக்க விரும்புவோர் முதலில் உங்களுடைய சாதாரண அமாவாசைத் தர்ப்பண நியதிகளை முடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு நாளுக்கும் சேர்த்து ஒன்றாகச் செய்வதிலும் தவறு கிடையாது.. ஒவ்வொரு திதி தர்ப்பணத்திற்குரித்தான பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. எந்ததெந்த கர்ம வினைகள் எவ்வகையில் தீரும்.. எந்தக் குறைகளை உடையவர்கள் எதைச் செய்தல் வேண்டும். எந்த தீவினைகளுக்காக இந்த தர்ப்பண பூஜையின் பலன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று இதில் பலவகையான விளக்கங்களைக் காண்கின்றீர்கள்.
இத்தகைய சூழ்நிலைகள் நம் வாழ்க்கையில் இல்லையே என்று எண்ணாதீர்கள். நாம் அறிந்த வரையில் இத்தகைய நிலைகளை உடைய எவரும் நம் இல்லத்தில் இறந்திருக்கவில்லையே அவருக்கு ஏன் இவ்வகையில் நாம் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டாம்! ஏனென்றால் உங்களுடைய இல்லங்களில் இத்தகைய பிரச்னைகள் உள்ளன அல்லவா! எனவே அமாவாசை தர்ப்பணம் மற்றும் மாளயபட்சத் தர்ப்பணங்கள் யாவும் நம்முடைய நலன்களுக்கு மட்டுமே என்று சுயநலமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களில் நிலவுகின்ற பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணுவதற்கான பல தெய்வீக சக்திகளை, தர்ப்பணப் பூஜைகள் தம்முள் கொண்டுள்ளமையால் மிகுந்த, பரந்த மனப்பான்மையுடன் , தியாக உணர்வுடன் உன்னத பக்தியுடன் மாளயபட்ச நித்ய தர்ப்பண முறைகளைக் கடைபிடிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.. இது மிகச் சிறந்த பூஜையாக, ஜாதி, மத, குல, இன வேறுபாடின்றி எத்தனையோ லட்சக்கணக்கான ஜீவன்களுக்கும் இதன் பலன்கள் சென்றடைவதாக அமைந்துள்ளதால் இந்த தர்ப்பணப் பூஜையில் மட்டும்தான் தாவரங்கள், விலங்கினங்கள், நிலம், நீர், ஆகாயவாழ் உயிரினங்கள் ஆண், பெண், என வித்தியாசமின்றி அனைத்து ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக, நற்பலன்களைத் தரக்கூடியதான மிகச்சிறந்த பூஜையாக இது விளங்குகின்றது..

பௌர்ணமி நேர வித்தியாசங்கள்
பஞ்சாங்கம், காலண்டர்களில் பௌர்ணமி நேரம் வித்யாசப்படுவதேன்? திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது ஆயிரக்கணக்கானோர் இது பற்றிய விளக்கங்களைக் கேட்பதால் இதனை மீண்டும் எடுத்துரைக்கின்றோம். பௌர்ணமி திதியன்று பௌர்ணமி விரதம், பௌர்ணமி பூஜை, பௌர்ணமி கிரிவலம் ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவை. நாம் ஏற்கனவே பன்முறை விளக்கியுள்ளது போல வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என சில வகைப் பஞ்சாங்க கணிதநேர முறைகள் உண்டு. நம் ஆஸ்ரமத்தில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படிதான் பௌர்ணமி கிரிவல நாள் கணித்து அளிக்கப்படுகின்றது. அதாவது பௌர்ணமிச் சந்திரன் பரிபூரணமாக , உச்சம் பெற்று 16 கலைகளுடன் பிரகாசிக்கின்ற இரவு தினத்தையே நாம் பௌர்ணமி கிரிவல நாளாகக் குறித்துத் தருகின்றோம்.
இதன் மூலம் திருஅண்ணாமலை, பர்வத மலை, அய்யர் மலை, கோவர்தன கிரி (மதுரா) போன்ற அற்புதமான தெய்வீக மலைகளின் மூலிகா ஔஷத சக்திகளும், ஆரோக்யம் தரும் அமுதக் கிரணங்களும், புத்தியைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்ரீகாயத்ரீ காரிய சித்தி ஒளிக் கதிர்களும் கிரிவலம் மூலமாக நம்மை அடையும்படியான பௌர்ணமி நேரம் கூடும் இரவு தினத்தையே நாம் கிரிவல நாளாக திருக்கணித பஞ்சாங்க நேர முறைப்படி யாவரும் அறியும் வண்ணம் நம் ஸ்ரீலஸ்ரீலோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரம வெளிச் சுவற்றில் பெரிதாக எழுதி வைத்துள்ளோம். அதை அனைவரும் படித்துத் தெளிவு பெற வேண்டுகிறோம்..
ஆனால் ஆலயங்களில் மாலை நேர பௌர்ணமி பூஜையே பிரதானமாக இருப்பதால் பெரும்பாலான கோயில்களில் மாலை வரையோ (அல்லது பகல் முழுதுமோ) உள்ள (திதியையே) தினத்தையே பௌர்ணமியாக எடுத்துக் கொள்கின்றார்கள். எனவேதான் சில சமயங்களில் நம் ஆஸ்ரமப் பௌர்ணமி கிரிவல தினத்திற்கும், கோயில்களின் பௌர்ணமி பூஜை தினத்திற்கும் ஒரு நாள் முன்னரோ, பின்னரோ வித்தியாசம் ஏற்படக் கூடும். கலியுகத்திற்குரிய, சற்குருவின் கர்ம பரிபாலன நியதிப்படி பௌர்ணமி கிரிவல பலாபலன்கள் மூலமாக கர்ம வினைகளைக் கழித்து, தெய்வீக சக்திகளை / அனுகிரஹ முறைகளை நாம் பெறுகின்ற வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில்தான் திருக்கணித நேர முறையில் சித்தர்களின் சாங்கியப்படி பௌர்ணமிக்கான கிரிவல தினத்தை நாம் அளித்து வருகின்றோம் என்பதை உணர்ந்திடுக!

பசுவிற்கான வழிபாடு

கோ பூஜை – பசுவிற்கான வழிபாடு
கோ பூஜை எனப்படும் பசுவிற்கான வழிபாட்டை நாம் தினந்தோறும் செய்தாக வேண்டும். ஆனால் நம் நடைமுறை வாழ்க்கையில் இது சாத்தியமாகுமா? அக்காலத்தில் வீட்டிற்கு வீடு பசுமாடு இருந்தமையாலும், ஒருவருடைய செல்வ நிலையானது அவர் வைத்திருக்கின்ற பசுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அளவிடப்பட்டதாலும், பசுவின் புனிதத்துவத்தை உணந்தமையாலும் அந்நாளில் அனைத்து இல்லங்களிலும் கோபூஜை நன்முறையில் நடைபெற்று வந்தது. இதனால் தான் நம் முன்னோர்கள் திருப்தியுடனும், செழிப்புடனும் நல்ல பத்தி மனப்பான்மையுடனும் வாழ்ந்தனர்.. வறுமையிலும் செம்மையுடன் திகழ்ந்தனர்.. எந்நிலையிலும் வாழ்வில் விரக்தி கொண்டாரில்லை! நம்மால்தான் தினந்தோறும் நகர வாழ்க்கையின் இயந்திர கதியின் ஊடே தினசரி கோ பூஜையை நடத்தத்தான் முடியவில்லை.. ஆனால், கோ பூஜை நடைபெறுகின்ற ஆலயங்களுக்காவது சென்று கோ பூஜையைக் கண்ணாரக் கண்டு தரிசனம் செய்து கொள்ளலாம் அல்லவா? அல்லது கோயில்களில் கோ பூஜை நடைபெற உதவலாம் அன்றோ!
தினசரி கோ பூஜையை கலியுகத்தில் அனைவராலும் கடைபிடிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் சித்புருஷர்களும், மஹரிஷிகளும் தீர்க்க தரிசனமாக, கலியுகத்திற்கென கோபூஜா பலன்களைப் பெறறுத் தரும் பலவிதமான எளிய நல்வழி முறைகளைக் கூறியுள்ளனர்.. கோபாலன், கோபால கிருஷ்ணன் போன்ற கிருஷ்ணனின் பெயரைக் கொண்டுள்ளோர் வாழ்க்கையில் கோ தானத்தை முக்கியமாகச் செய்தாக வேண்டும். பலரும் ஒன்று சேர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் நல்ல கறவையுள்ள ஒரு பசுமாட்டை ஏதேனும் ஆலயத்திற்கோ அல்லது ஏழைக்கோ தானமாக அளித்து வந்தால் கோ பூஜையின் சில விசேஷமான பலன்களைப் பெற்றிடலாம்.

பட்டீஸ்வரம்

கரூர் சிவாலயம்

சமீபத்தில் நம் ஆஸ்ரமத்தின் சார்பாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரெங்கநாதர் ஆலயத்திற்கு நல்ல கறவையுடன் கூடிய கன்றுள்ள பசுமாட்டினை தானமாக அளிக்கின்ற பெறுதற்கரிய திருவாய்ப்பைப் பல அடியார்களுக்கும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பெற்றுத் தந்தார்கள். தினசரி கோ பூஜையின் பலன்களைத் தரவல்லதாக பல திருத்தல இறைப்பணிகள் தேவரகசிமாக அளிக்கப்பட்டுள்ளன. பசுவுடன் சம்பந்தப்பட்ட பல ஆலயங்களும் உண்டு. காமதேனுவின் புத்திரியாகிய பட்டி வழிபட்டு முக்திப் பெருநிலை அடைந்த கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், கொம்பு வடிவில் அற்புதமான மூல லிங்கத்தைக் கொண்டுள்ள சென்னை மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம், கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் அருகே திருஆய்ப்பாடி (திருவாப்பாடி), கன்றாப்பூர், திருக்கோழம்பம் போன்ற திருத்தலங்கள் பசுவுடன் தொடர்புடையவை!
ஆதலின் இத்திருத்தலங்களில் கோதானமாக பசுவை தானமாக கோயிலுக்கோ, உண்மையான ஏழைக்கோ அளிப்பதுடன் இத்தலங்களில் பசுவிற்கு கோ பூஜை செய்வதும் மிகவும் விசேஷமானதாகும். கறந்த பாலை உடனேயே அதாவது கறந்த பாலின் இளஞ்சூடு ஆறும் முன்னரேயே இங்கு சுவாமிக்கு அபிஷேகிப்பதால் துரிதமான பலன்கள் உண்டாகின்றன. இதற்காகவே அக்காலத்தில் கோயிலின் எதிரிலேயே  பசுவைக் கொணர்ந்து பாலைக் கறந்து பாலின் இளஞ்சூட்டின் தன்மை ஆறும் முன்னரேயே அபிஷேகம் செய்து விடுவார்கள். பசு தானத்தில் பல கொடிய பாவங்களுக்குப் பிராயசித்தம் கிட்டுகிறது. குறிப்பாக பெரியோர்களை மதிக்காது வசைபாடி அடித்துத் துன்புறுத்தி அநாதையாக ஆக்கிய சொல்லணா பாவச் செயல்களுக்கு இது ஓரளவு பிராயசித்தத்தைத் தரும்.. இதனுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க பரிகாரமும் செய்திடல் வேண்டும். பலரைப் பற்றி அவதூறாகப் பேசி, மொட்டைக் கடுதாசி எழுதுதல், கோள் மூட்டுதல் போன்ற பெரும் பாவங்களுக்குப் பிராயசித்தம் பெற கோபூஜையும், பசு தானமும் உதவும். மேற்கண்ட ஆலயங்களிலும் பசு, கன்றுடன் சேர்ந்து ஆலயத்தை வலம் வருதல் மிகவும் சிறப்பான நேர்த்தியாகும். பசுவின் உடலில் கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைவதால், இம்முறையால் தேவாதி தேவர்களுடன் ஆலயத்தை வலம் வருகின்ற பாக்யத்தைப் பெறுகிறோம்..

ஆவணி மூல கிரிவலம்

ஆவணி மூலத்தன்று மலைக்கோட்டை கிரிவலம் 
ஆவணி மாதம் மூல நட்சத்திரம் சேர்கின்ற ஆவணி மூலம் என்பது திருச்சியில் உச்சிப்பிள்ளையார் வீற்றிருக்கும் மலைக்கோட்டையை கிரிவலம் வருவதற்கான, உத்தமமான நாளாகும்.. இந்த ஆவணி மூலத்தில் தான் எத்தனையோ கோடி தேவாதி தேவர்களும், தேவ மூர்த்திகளும், பித்ரு தேவர்களும், புனிதமான தெப்பக் குளத்தையும் சேர்த்து திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வந்து வழிபட்டுச் செல்கின்ற உத்தமத் தலமாக விளங்குகின்றது.

திருச்சி மலைக்கோட்டை

ஆவணி மூலத்தில் தான் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி பல அற்புதமான யோகசக்திகளைப் பெற்றார். இன்றைக்கும் சிலவிதமான யோக சக்திகள் கூடுகின்ற நாளாக விளங்குவது ஆவணி மூலம் தான். அக்காலத்தில் குருகுலத்திலும், தனுர்வேத அப்யாசங்களில், பல வகை யோகாசனங்களுக்கு ஆவணி மாதமும், மூலம் நட்சத்திரமும் சேருகின்ற நாளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எனவே ஆவணியும், மூல நட்சத்திரமும் சேருகின்ற நாள் மிகவும் அற்புதமான திருநாளாக விளங்கி மலைக்கோட்டையை கிரிவலம் வருவதற்கான முக்கியமான நாளாகவும் திகழ்கின்றது என்பது சித்தர்களின் அரும்பெரும் வாக்கும். பலரும் எத்தனையோ, புதுத் தொழில்களையும், வீடுகட்டுதலையும் தொடங்கி பணக்கஷ்டம், Plan Sanction வராமை இவ்வாறாக எத்தனையோ தடங்கல்களால் தொழிலும் முடங்கி, வீடும் முடிவு பெறாமல் தள்ளிக் கொண்டே செல்லும். இன்னும் எத்தனையோ பேருக்கு கோர்ட் விவகாரம் முடிவு பெறாமல் இருக்கும் இல்லங்கள் எத்தனை எத்தனையோ! இவர்கள் ஆவணி மூலத்தன்று ஸ்ரீசகாயேஸ்வரர் (திருநனிபள்ளி) ஈஸ்வர மூர்த்தியை தரிசித்து சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பிட்டு வழிபட்டு வந்தால் எத்தகைய கடினமான இன்னல்களுக்கும் தக்க தீர்வு ஏற்படும்.. இம்மூர்த்தியை சற்று தேடித்தான் கண்டுபிடியுங்களேன். முயற்சி செய்தால் தான் அதனுடைய அருமை தெரியும்... இன்றைக்கும் நம் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வ மூர்த்திகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நாம்தான் தேடிச் சென்று கண்டு அனுபவித்து அருள் பெற்று இதன் பலாபலன்களை பலருக்கும் எடுத்துரைக்க வேண்டும். இதுவும் மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கங்களில் ஒன்றாம்.

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

ஸ்ரீசரபேஸ்வரர் மஹிமை
கடந்த பல இதழ்களாக ஸ்ரீசரபேஸ்வர அவதார மஹிமை பற்றிய விளக்கங்களையும், ஸ்ரீசரபேஸ்வர பூஜையின் பலாபலன்களையும் நாம் அளித்து வருகின்றோம் அல்லவா? ஸ்ரீநரசிம்மாவதாரம், ஸ்ரீசரபேஸ்வர அவதாரம், ஸ்ரீகாளி அவதாரம் போன்ற உக்ர சக்தி நிறைந்த அவதாரங்களெல்லாம் கலியுகத்தில் சிறப்புறக் காரணம் என்னவெனில், பலவிதமான தீய எண்ணங்களோடு வாழ்கின்ற, அசுர குணங்கள் நிறைந்த மனிதர்களைத் திருத்த வேண்டும் என்பத்ற்காகத்தான். ஏதோ அசுரர்கள், அரக்கர்கள், இராட்சசர்கள் என்றால் முற்காலத்தில் இருந்து வந்தவர்கள், புராண வேடதாரிகள் என்று எண்ணாதீர்கள்.
உங்களுக்குள் நீங்களே சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் ஏதேனும் ஒரு அசுர குணமாவது உங்களிடம் நிச்சயமாகத் தென்படும். கோபம், குரோதம், வஞ்சம், பொய், முறையற்ற காம எண்ணம், லஞ்ச லாவண்ய காரியங்கள் போன்ற அனைத்துமே அசுர குணங்களே! எத்துணையோ தீச்செயல்கட்கு ஆட்பட்டு மனிதர்கள் வாழ்கின்றார்களே அவர்கள் அனைவருமே அசுரர்களாகவே ஒரு விதத்தில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர் என்பதே இதன் பொருளாம். எனவே கலியுகத்தில் கூட மனிதப் போர்வையில் நிறைய அசுரர்களும், அரக்கர்களும் நிச்சயமாக இருக்கின்றனர்.. இந்த அசுர குணங்களை, அரக்கத்தனமாக விளங்கும் தீயசக்திகளை அழித்து, மனம் திருந்தி நல்ல இறைநெறியுடன் வாழ்வதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வின் இலட்சியமாகும்.. இதற்கு சரபேஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகிறது.
ஏன் ஸ்ரீராமரைப் போல், ஸ்ரீமுருகனைப் போல் ஒரு சாதாரண மனித உருவை இறைவன் ஏற்றிடாது, ஸ்ரீசரபேஸ்வரர் என்ற அவதாரத்தில் புதுக்கோலம் பூண்டுள்ளார் எனக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? சிம்புள் பறவை, சரபம் என்றும் அழைக்கப்படுகின்ற சரபப் பறவையானது பல அரிய தெய்வீக சக்தியைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது.. டினாசரஸ் என்ற ஆதிமிருகமானது.. தற்போது விஞ்ஞானப் பூர்வமாக மறைந்து (extinct) விட்டதாகக் கருதப்படுகின்றது அல்லவா, ஆனால் சித்தர்களின் கிரந்தங்களின்படி இவ்விலங்கானது, இன்றும் பல அடர்த்தியான காடுகளில் இருந்து கொண்டு தான் (extant) வருகிறது. இதே போலத்தான் சரபப் பறவையாக உலகின் பல இடங்களிலும், குறிப்பாக பாரத நாட்டிலும், நிச்சயமாக உள்ளது. இதன் தரிசனம் குறித்த சிலருக்குக் குறித்த தினங்களில் இன்றும் கிட்டுகின்றது.. இதன் தரிசனமே சிவதரிசனத்தின் மகாபலன்களைத் தரவல்லதாம்..
கும்பகோணத்திற்கருகிலுள்ள திருபுவனம் திருத்தலத்திலும் சரப தெய்வீக சக்தி மிகுந்து காணப்படுகிறது. எனவே பலவிதமான தீய சக்திகளுக்கும், பாவச் செயல்கட்கும், கெட்ட பழக்கங்கட்கும் ஆட்பட்டோர் திருபுவனத்திலுள்ள ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு நேர்த்தி வைத்துக் கொண்டு அடிக்கடி இத்தலத்தில் அடிப்பிரதட்சிணம் செய்து வருவார்களாயின், இக்கோயிலில் உள்ள சரப சக்தியின் பலனால், இப்புனித பூமியின் பாதங்கள் தோயத் தோய உள்ளம், மனதிற்கு, புதுவித மனோசக்தி ஏற்பட்டு தீய பழக்கத்தினின்று விடுபட்டு நல்லொழுக்கத்தோடு நல்வழி பெறுவர்... விதிவசத்தால் பல குடும்பங்களில், கணவனோ, மனைவியோ பலவித தீய எண்ணத்திற்கும், செயல்கட்கும் ஆட்பட்டு விடுவர். மதுவிற்கு அடிமைப்பட்டவனாக, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகவோ வாழும் சற்றும் பொறுப்பற்றக் கணவன்மார்கள் பற்றி வேதனையுறுகின்ற இல்லறப் பெண்மணிகள் ஏராளம், இவர்கள் திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, திங்கள், வியாழன் நாட்களில் நித்ய பிரதோஷ நேரமான மாலை, 4-6 மணி வரையிலும், ஞாயிறு ராகுகால நேரத்திலும், ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டை முறையாகத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தங்களுடைய சொல்லொணாத் துயரங்களுக்குத் தக்க தீர்வு ஏற்பட்டு கணவரும் திருந்தி நல்வழியைப் பெறுவார். தளராத ஆழ்ந்த நம்பிக்கையே தக்க பலன்களைத் தரும்...
சரபப் பறவை மிகுந்த வேத சக்திகளை உடையதாகும்.. ஒரு முறை அது சிறகுகளை அசைத்தால் அக்காற்றசைவில் பரிணமித்து உலகின் பரவெளிக்கு பரவுகின்ற வேத சக்திகள், ஏராளம், ஏராளம், மேலும் சரபப் பறவையின் கால் நகங்கள் கூர்மையாக வெளித் தோற்றத்திற்குக் காணப்படினும் பலகோடி பிரம்ம அஸ்திரங்களின் சக்தியைத் தம்முள் கொண்டுள்ளனவாகும். எனவே, ஸ்ரீநரசிம்மர் ஹிரண்யனுடைய உதிரத்தைத் தம்முள் ஏற்று, அவனுடைய தோலை அணிந்து எலும்புகளை மாலையாக்கி அணிந்த போழ்து அதில் சிதைவுறா நின்ற பல அசுர சக்திகள் யாவும் சரப அக்னி சக்தியில் பஸ்மமாகி, உக்ரப் பெருநிலையில் நின்ற ஸ்ரீநரசிம்மரின் அக்னி ஆவேசத்தையும் தணித்தது! எனவே ஸ்ரீசரபேஸ்வர தரிசனமே பலவிதமான அசுர தீயசக்திகளை பஸ்மம் செய்துவிடும். ஆலயத் தூண்கள் தாம் ஆலயத்தையே தாங்கி நிற்பவை. இதைப் போன்று வாழ்வை நிலைகுலையச் செய்யும் அரக்கத்தனமான தீயொழுக்கங்களை விரட்டி நல்லொழுக்கத் தூண்களை நன்முறையில் நிலை நிறுத்தினால் தான் இறைவன் வாழ்கின்ற இந்த தூய உடலாலான ஆலயத்தைச் சீராக வைத்துக் கொள்ள முடியும்.. இதற்கு ஆலயக் கம்பத்தில் உறையும் ஸ்ரீசரபேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீஉய்யவந்த அம்பாள் மகிமை

ஸ்ரீஉய்ய வந்த அம்பாள் மஹிமை
“அம்மா” என்றழைத்தால் ஓடோடி வந்து அருள்பாலிக்கும் உத்தம அம்பிகை  .. கடந்த ஜுலை 1999 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிலிருந்து காரைக்குடி அருகே புதுவயல் சாக்கோட்டை கிராமத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஉய்ய வந்த அம்பாளின் மகிமையைப் பற்றி சித்தர்களுடைய அருள்மொழிகளாக வழங்கி வருகின்றோம் அல்லவா? மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்டு அரவணைத்து, அருள்பாலிக்கின்ற, அற்புதமான அம்மன்.. கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்திகளில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனைப் போல, ஸ்ரீகுருவாயூரப்பனைப் போல, ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்பிகையைப் போல பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து  அருள்பாலிக்கின்ற உத்தம அம்பிகை! அம்மா என்றழைத்தால் ஓடோடி அரவணைக்கின்ற அகிலாண்டேஸ்வரி! துன்பங்கள் கழுத்துவரை வந்து தலைக்கும் வந்து தலைக்கு மேலும் சென்று “இனி என் செய்வேன்“ என்று மனிதன் திக்கிமுக்கித் திணறுகின்ற போது “அம்மா, அம்மா, உய்ய வந்த அம்பிகையே! நான் படுகின்ற . கஷ்டங்களை நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாயே, என்னைக் கைதூக்கி விடம்மா, வாழ்நாளென்ன, வாழ்க்கை முழுதும் என்ன, ஜன்மந்தோறும் உன் நினைவிலேயே அடிபணிந்து கிடப்பேன்”, என்று உண்மையான பக்தி உள்ளத்துடன் கதறி வேண்டுவீர்களேயானால் உடனே வந்து அருள்பாலிக்கின்ற உத்தம தெய்வ மூர்த்தியாக ஸ்ரீஉய்யவந்த அம்பிகை அருட்சிகரமாய் விளங்குகின்றாள்.. 

ஸ்ரீஉய்யவந்த அம்மன்
சாக்கோட்டை காரைக்குடி

ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் :- ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர்தாம் ஸ்ரீஉய்யவந்த அம்பிகையின் உத்தமத் திருவடிகளில் அடிபணிந்து வீழ்ந்து அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீஉய்யவந்த அம்பாளின் பெருமையைப் பரப்புகின்ற அருட்பெரும் சித்தராவார்.. ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் என்ற ஆதிமூலப் பெயரை இத்திருத்தலத்தில் தாங்கி சுயம்பு மூர்த்தியாகத் தணித்து, ஸ்ரீஉய்யவந்த அம்பிகை இத்திருத்தலத்தில் விளங்கிய போதே வழிபட்டு, அம்பிகையின் அருட்சுடரைப் பரப்பியவர். இன்றைக்கும் சூட்சுமமாய், அம்பிகையை தினமும் வலம் வந்து வணங்குகின்ற உத்தம சித்புருஷர் யுகங்கள் தோறும் பல வடிவங்களில், பல நாமங்களில் இச்சித்புருஷர் நடமாடுகின்றார்... சித்புருஷர்களுடைய தலையாய பணி என்னவென்றால், அதுவும் கலியுகத்திற்கு உரித்தான கடவுள் திருப்பணியாக அவர்கள் மேற்கொள்கின்ற முக்கியமான இறைப்பணிகளில் ஒன்று என்னவென்றால் பொதியமலை, கொல்லி மலை, திருஅண்ணாமலை, சதுரகிரி மலை, பர்வத மலை, மேருமலை, இமயமலை, வெள்ளிமலை, பச்சைமலை போன்ற அற்புதமான மூலிகா சக்திகள் நிறைந்த மலைத்தலங்களிலிருந்து பல கொடிய நோய்களையும் கூட குணப்படுத்தக் கூடிய மூலிகையின் திரட்சியைக் குறிப்பிட்ட நாளில், குறித்த யோக நேரத்தில், அந்தந்த கோயில் திருக்குளங்களில் சேர்த்து, அதில் நீராடுவோர்க்கெல்லாம் அம்மூலிகைகளின் ஆரோக்ய சக்தியும், நோய்தீர்க்கும் சக்தியும் சேருமாறு இறைப் பணிபுரிந்திடுதல் ஆகும். அன்றும், இன்றும், என்றும் சித்புருஷர்களின் கைங்கர்யமாக நடந்து கொண்டிருக்கின்ற அற்புதமான இறைப்பணி இது. பல கோயில் தீர்த்தங்களிலும், இன்றும் கோடையில் அவை நீரற்று வறண்டு போயிருப்பதாகத் தோன்றினாலும் சூட்சுமமாக இத்திருக்குளங்களில் எப்போதும் நீர் நிறைந்து தான் காணப்படுகின்றன. பல புனிதமான நதிகளின் நீரை, சூட்சுமமாக இவ்வகைத் திருக்குளங்களில் சேர்ப்பவர்களும் சித்புருஷர்கள் தாம். கங்கை, காவிரி, கிருஷ்ணா போன்ற புனித நதி தேவதைகளே வந்து நீராடுகின்ற திருத்தலங்கள் என்றால் அவற்றில் நீர் வற்றுமா என்ன? நம் மனித கண்களுக்குத்தான் அவை வற்றிப் போனதாய்த் தோன்றுகிறதே தவிர, என்றும் கோயில் தீர்த்தங்கள் வற்றாத ஜீவ தீர்த்தங்களே! எனவே, இன்றைக்கும் ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்புருஷர் வந்து நீராடிச் செல்கின்ற அருட்பெரும் திருக்குளமாக விளங்குவதே ஸ்ரீஉய்ய வந்த அம்பிக்கைக் கோயில் தீர்த்தமாகும். புராணப்படி கூட, இத்திருக்குள நீரில் பல மன்னர்களுடைய, ரிஷிகளுடைய, உத்தம பக்தர்களுடைய பல கொடிய நோய்கள் காச நோய், குன்மம், புரை நோய் , புற்று நோய் போன்ற பலவும் தீர்ந்தவையாக நாம் காண்கின்றோம். இவையாவும் உண்மையே. வேத சக்தியவாக்கும் ஆகும் உத்தம ரிஷிகள் தம் அடியார்களுடைய கர்மவினைகளை ஏற்பதால் தான் அவர்களுக்கு நோய், நொடிகள் உண்டாகின்றன. எனவே, ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஸ்ரீஉய்யவந்த அம்பிகையை வேண்டி இத்திருக்குளத்தில் நீராடுவதாலும், திருக்குளத்தில் நீர் வற்றி இருந்தால், இத்திருக்குளக்கரையிலே அர்க்ய பூஜை செய்வதாலும் அம்பிகையின் கருணைக் கடாட்சத்தை எளிதில் பெற்றுவிடலாம்.. எந்நாளுமே ஸ்ரீஅம்பிகைக்கு உகந்த நாள்தான். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பிகையைச் சுற்றி அடிப்பிரதட்சிணம் செய்து “அம்மா, அம்மா, அம்மா” என்று குரல் கொடுத்து அழைப்பு விடுத்து அம்பிகையின் அருளாசிதனை உய்த்து மகிழுங்கள். ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் ஸ்ரீஉய்ய வந்த அம்பாளை வழிபட்ட முறையினைக் கடந்த இதழில் நாம் கண்டோம் அல்லவா? தம்முடைய ரத்னலிங்கத்தை வைத்து அதை லிங்கமாகப் பாவித்து அவர் செய்த பூஜைகள் தான் எத்தனை எத்தனை... அவர் வடித்த ரத்னலிங்கத்தைச் சுற்றி அடிப்பிரதட்சிணம் செய்து பயன்பெற்ற மக்களும்தான் எத்தனை எத்தனை...
கேளுங்கள் கொடுக்கப்படும்!
ஸ்ரீஉய்யவந்த அம்பிகை என்பதின் பொருள் என்ன என்றால், எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் சரி, கழுத்தை நெருக்கும் பணப் பிரச்னைகளோ, அலுவலகப் பிரச்னைகளோ, வியாபார பிரச்னைகளோ எதுவானாலும், கழுத்தை வந்து நெருக்கும் அளவிற்கு இருந்தால் கூட, “அம்மா” என்று அழைத்தால் எத்தனை இடர்களுக்கும் நடுவிலும், அவற்றை எதிர்த்து நின்று சமாளிப்பதற்கான துணிவைத் தந்து நம்மை வாழ்க்கையில் உய்ய வைக்கின்ற அம்பிகை! அதனால்தான் உய்யவந்த அம்பிகையாக, துணைபுரியும் அம்மனாக, வழிகாட்டும் அம்பாளாக, உலக அன்னையாக நமக்கு அருள்பாலிக்கக் காத்துக் கிடக்கின்றாள். ஸ்ரீஉய்ய வந்த அம்பாளின் அடிமையாக விளங்குபவரே ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் ஆவார். ரத்தினச் சுருக்கமாய் சித்புருஷர்கள் அருளியவாறு உய்யவந்த அம்பாளின் மகிமையை ஓரளவு எடுத்துத் தந்துள்ளோம்.

உமையம்மா, சுமை தீரம்மா!
ஸ்ரீஉய்ய வந்த அம்மனின் கோயிலின் அருகிலே அமைந்திருப்பதுதான் ஸ்ரீஉமையவள் கோயிலாகும். மிகப் பெரிய கோயில், பெருமதிப்பிற்குரிய, சிவபக்தர்களான நகரத்தார்களின் பேராதரவினால் பெரும் பொலிவுடன் திகழ்கின்ற கோயில் இங்கும் ஓர் அற்புதமான தீர்த்தக் குளம் உள்ளது. ஸ்ரீஉமையாம்பிகை சமேத ஸ்ரீவீரசேகர மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்! சுயம்பு மூர்த்தி! இராமாயணத்தில் ஸ்ரீராமர் சோகச் சிகரமாய் மலைத்து நின்ற போது வீரப்பொலிவைத் தந்து அருள்பாலித்த ஸ்ரீவீரசேகர மூர்த்தி! தம் பத்தினியாம் சீதாதேவியைக் காணாது சோகமயமாய் ஸ்ரீராம லக்ஷ்மண சகோதரர்கள் அலைந்த போது, அவர் திருப்புனவாயிலுக்குச் சென்று ஸ்ரீஅகஸ்தியரை தரிசிக்கும் முன்னர், ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு வழிகாட்டியவரே ஸ்ரீவீரசேகர மூர்த்தியாவார்.. ஸ்ரீராமனுக்கு, ஸ்ரீவீரராமனாக அருட்சக்தியை எடுத்துக் கொடுத்து அருள்பாலித்த சிவமூர்த்தி! ஸ்ரீஉய்யவந்த அம்பிகையின் தரிசன பலன்களைப் பரிபூர்ணமாகப் பெறவேண்டுமென்றல், ஸ்ரீஉமையவள் சமேத ஸ்ரீவீரசேகர மூர்த்தியையும் நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டும்.
ஏனென்றால் ஒன்றுக்கு ஒன்றாக இறைப்பிணைப்புடன் விளங்குகின்ற அற்புதத் தலம் இது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் இன்றைக்கும் உத்தம யோகியர்க்கும், பல அரிய தவயோக நிலைகளைத் தரக்கூடிய அற்புதமான பெருங்கோயில்! சாந்தமும், அமைதியும், காருண்யமும் ஓரிடத்தில் அபரிமிதமாக இருந்தால் அத்திருத்தலம் எப்படி, சாந்தப் பெருங்கடலாய்த் துலங்குமோ அதே போல காருண்ய சாந்நித்யம் மிகுந்த அற்புதமான சிவத்தலம். வாழ்க்கையில் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையேனும் தரிசித்து ஆனந்திக்க வேண்டிய அற்புதமான கோயில். உமையொருபாகனாக விளங்குவதற்கு, சிவனே வலிய வந்து அருட்சுரங்கச் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய திருத்தலம். சிவமேனியில் செம்மையுறுவதற்காக ஸ்ரீபார்வதி தேவியார் பெருந்தவம் பூண்டு ஆர்த்ரா யோகத்தைப் பயின்ற தலம்..
எனவே பலவிதமான பிணக்குகளுடன், மனவேறுபாடுகளுடன் வாழ்ந்து வருகின்ற தம்பதிகள் ஸ்ரீஉய்யவந்த அம்பிகையையும், ஸ்ரீஉமையவள் சமேத ஸ்ரீவீரசேகர மூர்த்தியையும் அடிக்கடி அடிப்பிரதட்சிணம் செய்து, தரிசித்து, முந்திரி பருப்பு, நிலக்கடலை, அவரை போன்ற இருமேனி உணவு பொருட்களைச் (இரண்டு பகுதிகளாக இருப்பவை) சமைத்து இறைவனுக்குப் படைத்து அன்னதானமாக அளித்து வந்தால் வாழ்க்கை சாந்தமயமானதாக, மன அமைதி நிறைந்ததாக விளங்கும். ஸ்ரீஉய்ய வந்த அம்பிகை, ஸ்ரீஉமையவள் இருவரையும் தரிசித்தால் தான் இரண்டு அம்பிகையினுடைய பரிபூர்ண அருட்சக்தியைப் பெற்றிடலாம். முதலில் தரிசிக்க வேண்டியது ஸ்ரீஉய்யவந்த அம்பிகையின் திருச்சன்னதியாகும்... “அம்மா, அம்மா”, என்று அழைத்தால் ஓடோடி வந்து அரவணைக்கின்ற அம்பிகையைப் பற்றி அறிந்து விட்டீர்கள் அல்லவா! இனி என்ன தயக்கம்! ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? துன்பங்களைக் களைகின்ற தூய ஒளிச்சுடராய் விளங்குகின்ற ஸ்ரீஉய்ய வந்த அம்பிகையை தரிசித்து ஸ்ரீஉமையவள் சமேத ஸ்ரீவீரசேகர மூர்த்தியின் தரிசனத்துடன் பரிபூர்ணம் செய்து வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளுக்கும் தக்க தீர்வைப் பெறுவீர்களாக!

ஐயப்ப விரத மகிமை

ஸ்ரீஐயப்ப விரத மகிமை
கடந்த பல மாதங்களாக ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஸ்ரீஐயப்ப விரதத்தின் நடப்பு விரத முறைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, சித்புருஷர்கள் அருளிய வண்ணம் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளையும், விரதத்தை மேம்படுத்தும் வழிவகைகளையும் நாம் அளித்து வருகின்றோமல்லவா? ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது அணிய வேண்டிய மாலைகளுக்குரித்தான சிறப்பான வழிபாட்டு முறைகள் உண்டு. நாம் ஏற்கனவே கூறி வந்துள்ளது போல ஸ்ரீஐயப்ப விரதத்திற்குரித்தான மணிமாலைகளையும் உடைகளையும் மிகவும் புனிதமான உத்தராயண புண்ய காலமான தை முதல் ஆனி மாதம் வரையான ஆறு மாத காலத்திற்குள்ளாகவே வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு முறையான பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து வருதல் வேண்டும். ஏனென்றால் விரதத்திற்குரித்தான ஓர் ஆடையைத் தேர்ந்து எடுக்கும் போது அது தோஷங்கள் இல்லாததாக இருக்க வேண்டும். நாம் உடலை எப்போதும் தீண்டுகின்ற பொருளாக ஆடை விளங்குவதால் நம் உடலோடு நெருங்கிய தொடர்பு உடையதாகவும் இருப்பதாலும், விரத ஆடையானது மாசு அற்றதாக, தோஷமற்றதாக, சாப விளைவுகள் இல்லாத தாக இருக்கவேண்டுமல்லவா?
இதற்காகத் தான் “கந்தையானாலும் கசிக்கிக் கட்டு” என்ற ஆன்றோர் மொழியும் ஏற்பட்டது. எவ்வாறு நாம் 24 மணி நேரமும் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோமோ அதே போல் 24 மணி நேரமும் நம்மோடு தொடர்பு கொண்டுள்ளதாக விளங்குவதே நம் ஆடையாகும்.. ஆடைகளை அணிகின்ற போதும் எந்த ஆடைகளை அணிகின்றோம் என்பதிலும் நாம் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளுக்கு உரித்தான ஆடையை அணிய வேண்டிய வண்ண நியதிகளும் உண்டு. இதுபற்றி ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நன்கு விளக்கி இருக்கின்றோம். அவரவர் மனதிற்கு தோன்றியபடி இஷ்டத்திற்குத் ஏதேதோ நிறத்தில் தினந்தோறும் ஆடைகளை அணிந்திடக் கூடாது. இதனால் காரியத் தடங்கல்கள் ஏற்படும். முறையான வண்ண ஆடைகளை அணிந்தால் தான் தேர்வுகளை நன்றாக எழுதிடலாம். நன்முறையில் வேலை கிடைக்கும்.

ஆரியங்காவு திருத்தலம்

நில ரிஜிஸ்ட்ரேஷன், இண்டர்வியூ மற்றும் பல தேர்வுகளுக்குச் செல்லும் போது குறித்த நிற ஆடைகளை அணிந்தால் அவைதாம் காரியசித்திக்கு நல்வழியைக் காட்டும் என்பதை அறிந்து கொண்டிடுக! ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது ஒவ்வொரு ஆண்டிலும் அணிய வேண்டிய மாலை வகைகள் உண்டு. ருத்ராட்சம், சந்தன மாலை, தாமரை மணி, ஸ்படிகம், துளசிமணி, பலவிதமான ரசமணிகள் இவ்வாறாக எத்தனையோ வகை மாலைகளில் ஒவ்வொருவருக்கும் உரித்தான மாலை வகைமுறைகள் உண்டு. தக்க சற்குருவை நாடினால் அவரவருடைய நட்சத்திரம், இஷ்ட தெய்வ மூர்த்தி, குல தெய்வ மூர்த்திகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ஆண்டிலும் அணிய வேண்டிய மாலைகளைப் பற்றிய அரிய விளக்கங்களைப் பெற்றிடலாம். எனினும், பொதுப்படையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐயப்ப விரத ஆண்டிலும் அணிய வேண்டிய மாலை வகைகளைப் பற்றி இங்கு நாம் சித்புருஷர்கள் அருளியபடி விளக்கியுள்ளோம்.
மாலைக்கும் பூஜை உண்டு!
விரதத்திற்காக அணியப்பட வேண்டிய மாலையானது உத்தராயண புண்யகாலத்திலேயே (தை முதல் ஆனி வரை) வாங்கப்பட்டு நன்முறையிலேயே குறைந்தது ஒரு மண்டலமேனும் (48 நாட்கள்) பூஜிக்கப்பட வேண்டும். புதிய மாலையை வாங்கிய நாளிலிருந்து விரத நாள் தொடங்கும் வரை தினந்தோறும் பூஜையில் வைத்து வழிபடுவது தான், மிகவும் சிறப்புடையதாகும்... முதலாம் ஆண்டு மூன்று தாமரை மணி மாலைகளை அணிதல் வேண்டும். அதாவது கன்னி ஐயப்பன்மார்கள் என்று சொல்லப்படுகின்ற முதன்முதலாக ஸ்ரீஐயப்ப விரதத்தைப் பூண்டு மலைக்குச் செல்பவர்கள் முதலில் மூன்று தாமரை மணி மாலைகளை அணிந்திடுதல் வேண்டும். இவை பிசிறுகள் இன்றி சுத்தமானதாகவும், புனிதமானதகவும், தூயதாகவும் இருத்தல் வேண்டும். அவரவர் குடும்பத்திலே பலரும் அணிந்த மாலைகளை சந்ததி, சந்ததியாக, வாழையடி வாழையாக அணிவதில் தவறு கிடையாது. ஆனால் தன் குடும்பத்தில் அல்லாது ஏனையோர் அணிந்த மாலையாக இருந்தால் அவை தோஷங்கள் இல்லாததாகவும் நற்சக்திகள் உடையதாகவும், தம்முடைய நட்சத்திரத்திற்கும் ஏற்றதாகவும் உள்ளனவா என்பதை நன்கு கவனித்தல் வேண்டும்.
ஏனென்றால் இன்றைக்கும் பல இடங்களிலும் இறந்து போன துறவிகளுடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட ருத்ராட்சங்கள் மாலையாக ஆக்கப்பட்டு விற்கப்படுவதாக நாம் அறிகின்றோம். இவ்வாறு இருப்பின் அவ்வித மாலையானது பலவிதமான பிரேத தோஷங்களைக் கொண்டதாக இருக்கும். எனவேதான் மாலை அணியும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.. மேலும் ஒருவர் அணிந்த மாலையுடனேயே இயற்கையாக இறந்திருப்பினும் அதிலும் பல தோஷங்கள் நிறைந்திருக்கும் அதையும் தெய்வீக முறையில் சுத்திகரிக்க வேண்டிய வழிகள் பல உண்டு. ஆனால் விபத்து போன்ற அசாதாரண மரணங்கள் ஏற்படுமாயின் அந்த மாலைகளை அணிதலைத் தவிர்த்தல் வேண்டும். எதற்காக இதனைக் குறிப்பிடுகின்றோம் என்றால் விரதத்திற்காகப் புதிய மாலைகளைத் தேர்ந்தெடுப்பதுதான் பலவிதமான பிரச்னைகளை ஓரளவு தவிர்த்து விடும். வாழையடி வாழையாக விரதங்களுக்காக அணிவிக்கப்பட்ட புனிதமான மாலை என்பது நன்றாகத் தெரிந்தால் தான் அதனை ஏற்க வேண்டும். ஏனென்றால் அத்தகைய மாலைகள் மிகவும் தெய்வீக சக்தி உடையதாக விளங்குகின்றன..
தாமரை மணி மாலை
முதலாம் ஆண்டு விரதத்தின் போது குறைந்தது மூன்று தாமரை மணிகளை அணிந்திடுதல் வேண்டுமல்லவா! ஏனெனில், மாலையில் பழுதோ, பங்கமோ ஏற்படுமாயின் / இருக்குமாயின் எப்போதும் விரதத்தின் போது உடலில் ஒரு மாலையாவது இருத்தல் வேண்டும் என்ற நியதிக்காவும் குறைந்தது மூன்று தாமரை மணி மாலைகள் என்ற நியதிகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தராயணப் புண்ய காலத்தில் நன்னாளில்/நல்ல நேரத்தில் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை மணி மாலைகளை வாங்கியவுடன் அதனை மூன்று தாமரை மலர்களின் மேல் வைத்து முதல் பூஜையைத் தொடங்குதல்  வேண்டும். விரதத்திற்காக அணியப்படுகின்ற மாலைக்கு தினந்தோறும் (தாமே அரைத்த) சந்தனம், மஞ்சள், குங்குமம்  இட்டு கற்பூர ஆரத்தியுடன் அன்னம்/பழம் நைவேத்யமும் செய்து தினந்தோறும் வழிபடுதல் வேண்டும். ஏனென்றால் ஹிருதயாகாசம் (ஆன்மபீடம்) சொல்லப்படுகின்ற ஆத்மா உறைகின்ற நெஞ்சை எப்போதும் தீண்டிக் கொண்டிருப்பதால் விரத மாலைகளுக்குத் தனிப்பட்ட தெய்வீக மகத்துவம் உண்டு. “கட்டை விரலே ஆத்மா அதன் சட்டைதானே மணிமாலை!” என்பது சித்தர்களுடைய பரிபாஷையாகும்.
மரப்பீடத்தில் மாமணி மாலை!
விரதத்திற்காக அணியப்படுகின்ற தாமரை மணிமாலைகளை பூஜை அறையிலேயே எப்போதும் வைத்திருந்து வழிபட வேண்டும். சந்தனப் பெட்டி, வெள்ளிப் பெட்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட மா, பலா, தேக்கு தெய்வீக மரப்பெட்டிகளில் வைத்தும் தான் பூஜிக்கப்பட வேண்டும். நீங்கள் பல திருத்தலங்களுக்கும் செல்கின்ற போது இந்த மாலைப் பெட்டியையும் எடுத்துச் சென்று ஆங்காங்கே உள்ள தெய்வ மூர்த்திகளின் திருவடிகளில் இதனைச் சமர்ப்பித்திடலாம். குறிப்பாக தாமரை மணிமாலையை ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவிக்குச் சாற்றி வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.. எத்தனைக்கெத்தனை தெய்வமூர்த்திகளின், சுயம்புமூர்த்திகளின் திருவடிகளிலோ, திருமேனிகளிலோ இந்த விரத மாலைகள் தவழ்கின்றனவோ, அணிந்து பிரசாதமாகப் பெறப்படுகின்றனவோ அந்த அளவிற்கு விரதத்தின் புனிதத்தன்மை பெருகுகின்றது என்பதை நினைவிற் கொள்க.
இதெல்லாம் விரதமாலையை அணியும் முன்னர் பூஜையில் வைக்கப்படும் மணிமாலைக்கு உரித்தான வழிபாட்டு முறைகளாம். விரத மாலையை அணிந்த பின்னர் அதைக் கழற்றி சுவாமிக்கு சார்த்தக் கூடாது.. காசியைப் போன்று வேதாரண்யம், மதுரை அருகே திருப்பூவணம் போன்ற திருத்தலங்களிலும் மணிகர்ணிகா தீர்த்தம் என்ற ஒரு அற்புத தீர்த்தம் உண்டு. மணிகர்ணிகை என்று சொல்லப்படும் இறைவனுடைய காதுத் தோடானது / குண்டலமானது விழுந்த இடம் என்பதால் இந்த மணிகர்ணிகா தீர்த்ததிற்கு தனித்த மகத்துவம் உண்டு. இறைவனுடைய இந்தக் காதுத் தோட்டை, மணிகர்ணிகைத் தீர்த்தத்தில் தேடுகின்ற போது அம்பிகையுடைய ஆபரணங்களின், தெய்வீக கிரணங்களும் இத் தீர்த்தத்தில் கலந்தமையால் அர்த்த நாரீஸ்வரத் தெய்வ சக்தியைக் கொண்டதாக இந்த ஆலயங்களில் உள்ள மணிகர்ணிகைத் தீர்த்தம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே ஆலயத்தில் சிறிது காணிக்கையை உண்டியலில் செலுத்தி விட்டு இந்த மணிகர்ணிகைத் திருக்குளத் தீர்த்தத்தை சிறிது பெற்று வாருங்கள். மணிமுத்தாறு தீர்த்தமும் இந்தப் புனித சக்தியைக் கொண்டதாகும். இந்தப் புனித நீரை, இல்லத்தில் வைத்துக் கொண்டு தினந்தோறும் இந்த நீரை மாலையின் மேல் ஸ்பரிசித்து பூஜை செய்து வருதல் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டிற்கும் உரித்தான ஸ்ரீஐயப்ப விரதத்தில் அணிய வேண்டிய மாலைக்குரித்தான விசேஷமான பூஜைகள் உண்டு. இவைகளையெல்லாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமா! எளிமையானது தானா என்ற எண்ணம் தோன்றும்! உண்மையிலேயே ஸ்ரீஐயப்ப மூர்த்தியின் பரிபூரண ஜோதி தரிசனத்தை, பரிபூரண கடாட்சத்தைப் பெற வேண்டுமென்றால் நம்முடைய கர்மவினைகள் நன்முறையில் கழிந்தால் தான் இது கைகூடும். இதற்குரிய புனித சக்தியைப் பெறுவதற்காகத்தான் நம்முடைய விரதநெறிகளில் பல தெய்வீக நியதிகளைக் கூட்டிக் கடைபிடிக்கின்றோம். அதனுள் ஒன்றாக விளங்குவதே, விரத மாமணி மாலை பூஜை ஆகும். விரதத்தின் போது மணிமாலை அதிஅற்புத ஆன்மீக ஆடையாக நமக்கு விளங்குகின்றது. மற்ற ஆடைகளெல்லாம் அவ்வப்போது மாற்றப்பட்டாலும் மணிமாலை மட்டும் விரத ஆடையாக எப்போதும் நம் ஆன்ம வதனத்தில் மிளிர்கின்றது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.,
துறவியர்க்கே காவியுடை! தூய உள்ளத்திற்கே காவியுடை!
காவி உடையில் கவனம் தேவை!
புனிதமான துறவிகள் மட்டும் காவி உடையை அணிய வேண்டும் என்ற தெய்வீக நியதியை நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். இதுதான் சித்தர்கள் அருள்கின்ற வேதக் கட்டளையுமாகும். விரதகாலங்களில் காவியை உடுத்தி விரதம் முடிந்தவுடன் சாதாரண உடையை அணிவது என்பது சரியல்ல. உள்ளத்திலும், மனதிலும், உண்மையான துறவு பூண்டவர்களுக்குத் தான் காவி உடை உரித்தானதாகும். இல்லறத்தில் உள்ளோர் எக்காரணம் கொண்டும் காவி உடையைத் தரித்தல் கூடாது. இல்லறத்தை துறந்தால் தான் இறைப் புனிதம் நிறைந்த காவி உடையை தரிக்கலாம் என்ற நியதியில் எந்த யுகத்திலும் விதிவிலக்கே கிடையாது.
தற்காலத்தில் ஸ்ரீஐயப்ப விரதம் மற்றும் பலவிதமான விரத காலங்களில் காவியை உடுத்திப் பிறகு களைந்து விடுகின்றார்கள். தயவு செய்து இந்தத் தவறை இனியேனும் செய்யாதீர்கள்.. இதனை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி உரைப்பதற்கு காரணம் இம்மாபெரும் தவறினால் உங்களுக்கு பெரும் சாபங்கள் சேரக் கூடாது என்பதால் தான், இல்லறத்தைத் துறந்தால் ஒரு முறைதான் துறவு. அவ்வப்போது மனதை மாற்றிக் கொள்ளுதல் என்பது துறவல்ல. பிறரையும், தன்னையும் தவறாக நடத்தும் தேவையற்ற வழிமுறையாக அதுமாறி விடும்.. மேலும் தற்காலத்தில் காவி உடை என்ற பெயரில் செயற்கை முறையிலான காவி வண்ணத்தைத் தீட்டி அதை காவியாக்கி பல துறவிகளும் கூட செயற்கையான இக்காவியை அணிவது மிகவும் வேதனைக்கு உரியதாகும்.
நம்முடைய மூதாதையர்கள் தந்துள்ள முறைப்படி காவியானது இயற்கையான முறையில் வஸ்திரத்திற்குச் சேர்க்கப்பட வேண்டுமே தவிர, செயற்கையான வண்ணப் பூச்சுகளால், ரசாயனக் கலவைகளால் அல்ல! கற்காவி, காவி மண், மூலிகைக் காவி, முத்து காவி போன்ற பலவகை இயற்கைப் பொருட்களில் தான் துணிகள் தோய்க்கப்பட்டு காவி உடையாகப் பெற வேண்டுமே தவிர, பச்சை, சிவப்பு, மஞ்சள் போல தற்காலத்தில் இரசாயனக் கலவையானால் கிடைக்கின்ற காவி வண்ணத்தினால் எவ்வித புனிதமும் ஏற்படாது என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள், இது காவியுமாகாது. எவ்வாறாக ஒரு துறவியின் காவி உடையானது தயாரிக்கப்பட வேண்டும் என்ற நியதிகளை / முறைகளை நம்முடைய சாஸ்திரங்களிலும், சித்தர்களுடைய அருள் வழிமுறைகளிலும், மிகவும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
இயற்கை சாயப் பூச்சு மட்டுமே காவி உடைக்கு ஏற்புடையது. எக்காலத்தும் இரசாயனக் காவி கலவையில் ஒரு பயனும் கிடையாது. இதில் எவ்வித தெய்வீக சக்தியும் ஏற்படாது. மேலும் காவி உடை அணிந்து பலரும் பிச்சை எடுக்கின்ற அவல நிலையையும் இன்று நாம் காண்கின்றோம். எந்தக் காவி உடை உடுத்தியவரை நாம் மதித்து, போற்றி, புனிதமான முறையில் வணங்கினோமோ, அந்த தெய்வ அம்சங்கள் மறைந்து போய் காவி அணிந்து, மன்னிக்கவும், காவி என்ற பெயரால் ஏதோ வண்ண உடைகளை அணிந்து, பிச்சை எடுக்கின்ற பெரும் பாவச் செயல் தற்போது பெருகியுள்ளது. ஏழைகளுக்குத் தான, தர்மம் செய்வது சிறப்புடையது தான். ஆனால் காவி உடை அணிந்து பிச்சை எடுப்பது பெருந்தவறே!
அன்னதானம், வஸ்திரதானம் போன்றவை வேதசக்திகளுக்கு ஈடான ஹோமம் மற்றும் பலவிதமான உத்தம வழிபாடுகளுக்கு நிகரான பலன்களைப் பெற்றுத் தரக்கூடியவைதாம். ஆனால் காவி உடை அணிந்து போலித் துறவியாக வேடம் பூண்டு பிச்சை எடுப்பவர்களுக்கு பிச்சை அளிப்பதும் தவறே! காவியின் பெயரால் எந்தவிதக் குற்றங்களுக்கும் நாம் இடம் அளிக்கக் கூடாது. நாமும் அதற்குப் பாத்திரமாகக் கூடாது. இன்றும் நம்முடைய மூதாதையர்கள் அளித்துள்ள உத்தமமான முறையில் காவி உடையைத் தயாரித்து அணிகின்ற புனிதமான துறவிகள் இக்காலத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகைய உத்தமர்களை நாடி காவியின் புனிதத் தன்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கள். புனிதமான துறவு பூண்டால் அன்றி எக்காலத்தும் இல்லறத்தார் காவி உடையை தரித்தல் கூடாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா!

ஸ்ரீஸ்கந்த சமஷ்டி தீப கண்டி

அங்காரக சக்தி, அக்னி சக்தியால் நில, புல, வீட்டு தோஷங்களை நீக்கும் ஸ்கந்த சமஷ்டி தீப கண்டி! கடந்த சில மாதங்களாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் ஸ்ரீஅட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி மகிமையைப் பற்றி எடுத்துரைத்து வருகிறோம் அல்லவா? என்ன இது பெயர் பெரிதாக இருக்கின்றதே என்று யோசிக்காதீர்கள். இதுதான் நம் சித்புருஷர்களும், மூதாதையர்களும் இந்த அரிய தீபத்திற்காக அளித்த நற்பெயராகும். திருஷ்டி தோஷ நிவாரண கண்டி என்றும் கண்டிகை என்றும் திருஷ்டி தோஷ நிவாரண தீபம் என்றும் பலவிதமான முறையில் இதனுடைய பெயரானது மாறி மாறி வழங்கி வருவதால் பக்தர்கள் அனைவரும் இதனுடைய ஆதிமூலப் பெயரையாவது அறிந்து கொள்ள உங்களுக்காக அளித்துள்ளோம். உங்களுடைய இறைப் பெயர்களைக் கூட மாலி, சந்துரு, ரவி என்றும் சுருக்காமல் அழகாக மகாலிங்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் என்று அழைத்திடுங்கள், கையெழுத்திடுங்கள்! இறைப் பணியைச் சுருக்குவது ஏனோ?
ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் என்பது மிகவும் முக்கியமானதாகும். எவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வ மூர்த்தியானவர் விசேஷமாக அருள்பாலிக்கின்றாரோ, இதே போன்று ஒவ்வொருவரும் தன்னுடைய மனோபாவங்களைக் கொண்டும் மனவிருப்பத்திற்கேற்பவும், குடும்ப பூஜை பாரம்பரியத்திற்கேற்பவும், ஸ்ரீராமரோ, ஸ்ரீகிருஷ்ணரோ, ஸ்ரீசிவமூர்த்தியோ, ஸ்ரீஅம்பிகையோ, ஸ்ரீபிள்ளையாரோ, ஸ்ரீமுருகப் பெருமானோ இவ்வாறாக ஏதேனும் ஒரு தெய்வ மூர்த்தியை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் பூஜித்தல் வேண்டும். இந்த இஷ்ட தெய்வ மூர்த்தி வழிபாடுதான் நம்முடைய விருப்பங்களையும், ஆசாபாசங்களையும், பேராசைகளையும், நிராசைகளையும் வகைப்படுத்திப் பிரித்து, ஒதுக்கி நியாயமான தார்மீகமான விருப்பங்களை மட்டும் நம்மிடம் நிலை நிறுத்தச் செய்து நம்முடைய வாழ்க்கையை நன்னெறிப் பாதையில் செம்மையாக்குகின்றது.

ஸ்ரீஅனுபமஸ்தனி திருமணக் கோலம்
திருநீலக்குடி

இஷ்ட தெய்வமூர்த்தி வழிபாடு இல்லையென்றால் வாழ்க்கை சற்றுத் தட்டுத் தடுமாறித் தான் அமைந்து விடும். எந்த சமயத்தில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்ற மனோதிடமும், வைராக்கிய சித்தியும் இல்லாமல் போய்விடும். எனவே, ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வ வழிபாடு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, இதுவரையில் இஷ்ட தெய்வ மூர்த்தியைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பினும் இனிமேலாவது நேரங் கடத்தாமல் உங்களுக்குரித்தான இஷ்ட தெய்வ மூர்த்தியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தினந்தோறும் முறையாக வழிபட்டு வாருங்கள். எப்போதும் ராமா, கிருஷ்ணா, முருகா என்று இஷ்ட மூர்த்தியின் பெயரை ஓதி வருகின்ற நற்பழக்கத்தை கடைபிடியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!
அக்னி சக்தி
இங்கு இப்போது நாம் குறிப்பிடுகின்ற புதிதாக வந்துள்ள ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீபமானது தன்னுள் அதிஅற்புதமான அங்காரக அக்னி சக்திகளைக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரஹத்திற்கு உரித்தான தேவதா மூர்த்தியாக ஸ்ரீசுப்ரமண்யர் விளங்குவதால் இது ஸ்கந்த சமஷ்டி தீபமாகப் பெயர் கொண்டு விளங்குகின்றது.. ஸ்கந்த சக்திகளை அக்னி சக்தியாக மாற்றி நம்முடைய வாழ்க்கையில் நமக்குப் பயன்படும் வகையிலான தேவசக்திகளாகப் பெற்றுத் தருவதே இந்த ஸ்கந்த சமஷ்டி தீபம் ஆகும்..பலவிதமான திருஷ்டி தோஷங்களை நீக்குவது மட்டும் அல்லாமல், பொன், நிலம், சொத்து, அக்னி, சிவப்பு நிற சம்பந்தமான காரண, காரியங்கள் போன்ற அம்சங்களுக்குரிய பலாபலன்களை நிர்ணயித்துத் தருவதே ஸ்ரீஸ்கந்த ஸ்மஷ்டி தீப வழிபாடு ஆகும்.. இது அனைவருக்கும் உரித்தானதே!

ஸ்ரீபக்தாபீஷ்டதாயினி தவக்கோலம்
திருநீலக்குடி

குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும் செவ்வாய் தசை மற்றும் செவ்வாய் புத்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்த ஸ்கந்த ஸமஷ்டி தீப வழிபாடானது தோஷ, சாப நிவர்த்தியுடன் நல்வழி காட்டும் அருட்பெருந் தீப வழிபாடாகும்.. சுப்ரமணியன், கார்த்திகேயன், முருகன் போன்ற கந்தனின் நாமம் உடையவர்களுக்கும், விசாகம், கிருத்திகை போன்ற முருகப் பெருமானின் நட்சத்திரங்களை உடையவர்களுக்கும், முருகப் பெருமானை இஷ்ட மூர்த்தியாக மற்றும் குல தெய்வமாகக் கொண்டிருப்பவர்களுக்கும், சந்ததி சந்ததியாக குன்றக்குடி, திருத்தணி, பழநி போன்ற இடங்களில் முடி இறக்குகின்ற அற்புதமான தெய்வ வழக்கத்தைக் கொண்டிருப்போருக்கும் வருடந்தோறும் பால்காவடி எடுத்து பழநி போன்ற முருகத் தலங்களுக்கு நடையாத்திரை செல்கின்றவர்களுக்கும் ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீப வழிபாடு பெரிதும் உதவுகின்றது. நல்ல தெய்வீக சித்திகளையும், காரிய சித்திகளையும் அள்ளித்தருவதாகும்.
பல வருடங்களாக பூமி, சொத்து சம்பந்தமான பிரிவினை மற்றும் கோர்ட் வழக்குகளால் எவ்வித முன்னேற்றமுமின்றி அவதியுறுவோர் ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீப வழிபாட்டை மேற்கொள்வார்களேயானால் அனைத்தும் தாரீக ரீதியாக, நியாயமான முறையில் தீர்வு பெறும். ஏனென்றால் அங்காரக அம்சங்கள் சற்றே விலகிச் செல்லும் போதுதான் இத்தகைய காரியத் தடங்கல்கள் ஆக்கம் பெற்றுப் பெரும் தடைகளாகின்றன. எனினும், இவை பூர்வ ஜென்ம கர்மவினைப் பலன்களாகவே ஏற்படுகின்றன.. ஸ்கந்த புருஷார்த்த அக்னித் தத்துவத்தைத் தன்னுள் கொண்டிருப்பதாலும், அங்காரக சக்திகளை அருளவல்ல பிராத அக்னி அம்சங்களை ஏற்றிருப்பதாலும், ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீபமானது நிலம், வீடு பற்றிய கோர்ட் பிரச்னைகளுக்கும் நல்ல நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதாகும்.
முருகப் பெருமான் ஸ்ரீமஹா புருஷ மூர்த்தியாகப் பெரிதும் போற்றப்படுகின்றார், காரணம் பெண் அம்சமின்றி சிவஜோதியில் பூரித்த ஸ்ரீகார்த்திகேய மூர்த்தியே ஸ்ரீமுருகப் பெருமான் ஆவார். எனவே தத்துவ புருஷ மூர்த்தியாகவும், சிவபெருமானுக்கே ஓம்காரப் பிரணவத்தை உபதேசித்தவராகவும் விளங்குகின்றார். விராட புருஷனாகவும் பிரபஞ்சத்திற்கே தலைவனாக விளங்குகின்ற ஸ்ரீமுருகப் பெருமானே ஸ்கந்த ஷடாக்னியில் உற்பவித்த தெய்வமூர்த்தி. ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீபத்தை தினந்தோறும் செவ்வாய் ஹோரை நேரத்திலும், செவ்வாய்க் கிழமையிலும் விசாகம், கிருத்திகை நட்சத்திர தினங்களிலும், ஷஷ்டி திதியிலும் வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீபமென்பது எத்தனையோ கோடி யுகங்களுக்கு முன்னால் முதன்மை பெற்று விளங்கிய தீபவழிபாடு ஆகும். ஸ்கந்தாக்னியின் ஓர் அம்சமாகத்தான் கார்த்திகை மாத கார்த்திகைத் தீபத் திருவிழாவன்று நாடெங்கும், பாரதமெங்கும் இல்லங்களில் மண்ணாலான அகல் விளக்குகளை வீடெங்கும் ஏற்றி ஸமஷ்டி ஜோதி வழிபாடாகக் கொண்டாடுகின்ற நல்லதோர் இறைவழிபாட்டை இன்றும் என்றும் நாம் காண்கிறோம். இவ்வாறாக ஸ்ரீஸ்கந்த ஸமஷ்டி தீபத்தின் மகாத்மியம் சொல்லிற்கும், பொருளிற்கும் அப்பாற்பட்ட ஜோதி தத்துவமாக விளங்குகின்றது. இந்த ஸ்கந்த ஸமஷ்டி தீபமானது தற்போதைக்கு நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் மட்டும் கிடைக்கும்..
ஸ்ரீஅட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி
திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற அற்புத பிருத்வி தீபம். அனைத்துவித கண் திருஷ்டிகட்கும் பரிகாரமாக அமைகின்ற ஜோதி வழிபாடு. திருஷ்டிகள் தாம் பலவிதமான தடங்கல்களைத் தோற்றுவிப்பதால் இவற்றை  நீக்கி, காரிய சித்திக்கு உதவும் திருவிளக்குப் பூஜை! சகலவித கண்திருஷ்டி தோஷங்களையும் நிவர்த்தி செய்கின்ற அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கிடைக்கும்.
நம்முடைய மூதாதையர்களால் நன்முறையில் கடைபிடிக்கப்பட்டுத் தற்பொழுது நடைமுறையிலிருந்து பெரும்பாலும் மறைந்துள்ள திருஷ்டி தோஷ நிவாரண தீப வழிபாட்டைப் பற்றிக் கடந்த சில மாதங்களாக, நாம் எடுத்துரைத்து வருகின்றோமல்லவா? தற்போது வழக்கில் மறைந்துள்ள, ஆனால் நம் மூதாதையரால் செம்மையுடன் கடைபிடிக்கப் பட்டு வந்த பல முக்கிய எளிய வழிபாட்டு முறைகளை தம்முடைய சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவாக்கியப்படி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஆன்மீகப் புத்துணர்ச்சியுடன் ஜாதி, இன, மத, பேதமின்றி யாவரும் பயனடையும்படி எடுத்துரைத்து வருகின்றார்கள். நாம் காண்கின்ற இக்கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் பெருகிக் கொண்டு தான் உள்ளன. இவற்றைச் சந்திப்பதற்கான மனோ தைரியத்தையும், நல்ல தெய்வ நம்பிக்கையையும் பெற்றால் தான் நாம் இவற்றைச் சமாளிக்க இயலும்.
வெறும் உடல் வலு, செல்வம், கௌரவம் அந்தஸ்தைக் கொண்டு பிரச்னைகளை முழுவதுமாக நீக்க முடியாது. சற்குருவின் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையுமே, இறை பக்தியும் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்த்துச் சமாளித்து அவற்றை வென்று நம்முடைய இறைப் பணிகளுக்கான வைராக்கியத்தையும், மனோதிடத்தையும் பெற்றுத் தரும். வெள்ளி, தாமிரம், பொன் போன்ற உலோகங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன், மிகவும் சக்தி வாய்ந்த பிருத்வி தத்துவமான மண் தீபங்களே தெய்வீக சக்தி நிறைந்தவைகளாய் விளங்கின. இன்றைக்கும் மண் அகல் விளக்கானது பொன், வெள்ளி போன்ற உலோக குத்து விளக்குகளை விட மிகச் சிறந்த தெய்வசக்தியை நமக்கு தந்தருள்கிறது என்பது நம் மூதாதையரின் அருள்வாக்காகும்... இதுவே சித்புருஷர்களின் வேதவாக்கும் கூட!
மண்ணின் அபரிமிதமான பிருத்வி தெய்வீக சக்தியால் தான் பொங்கலன்று மண்பானையில் பொங்கல் வைப்பது என்பது இறைவனுக்கு மிகவும் விருப்பமான படையலாக அமைகிறது என்பதை நாம் அறிவோம். இங்கு நாம் காண்கின்ற இந்த திருஷ்டி தோஷ நிவாரண தூப தீபகண்டிகையானது, பல கோடி சதுர்யுகங்கட்கு முன் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய முக்கியமான விளக்கு பூஜையாகும்.. பகைமை, குரோதம், விரோதம் போன்ற பலவித இன்னல்களுக்கிடையேதான் நாம் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. அதுவும் சாத்வீகத்திற்கும், பொறுமைக்கும் பெயர் போன பெண்களே வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களைத் தம் தோளிலும், தலையிலும் சுமந்து பணக் கஷ்டம், மன வேதனைகள், கணவனின் மூர்க்கத்தனம் போன்ற பல இன்னல்களுக்கு ஆட்பட்டு, தீய குணங்கள், தீயொழுக்கங்கள் அனைத்திலும் பொறுமைச் சுடராய் மீண்டு வெளிவந்து தம் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திக் கொண்டு வருகின்றனர். இறைவனுடைய மிகமிக அற்புதமான புனிதப் படைப்பே பெண்ணினம்! இதற்காகத்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் அன்னையை முன் வைத்தார்கள்.
மாத விலக்கு – தேக சுத்தி விமல பட்சம்
மாதவிலக்கு என்பது பெண்களுக்காக இறைவனால் தரப்பட்டுள்ள தேகசுத்தி அம்சமாகும். எப்போதும் உழைக்கின்ற பெண்களுக்கு ஓய்வு தருவதற்கு மட்டுமல்லாது, உடலில் சேரும் அசுத்தங்கள் கழிவதற்கும், பொறுப்புணர்வுடன் வாழ்க்கையை நட்த்தி தக்க தீர்வுகளைப் பெறுவதற்கும் இயற்கையால் அருளப் பெற்ற ‘அவயப் படுகை’ என சித்தபுருஷர்கள் மாதவிலக்கின் போது, பெண்கள் தனித்து ஒதுங்கி தங்களுக்கென பெரியோர்களால் அக்காலத்தில் விதிக்கப்பட்ட அச்சமயத்திற்குரிதாக அமைக்கப்பட்ட பல நல்வழிமுறைகளைக் கையாண்டனர். ஆனால், தற்காலத்தில் வீட்டு இட நெருக்கடிக் காரணமாக இந்நன்னெறிகளைக் கையாள இயலாமல் போய்விடுகிறது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்திடல் கூடாது என்பது உண்மையே! ஆனால், இயந்திர கதியாக அமைந்து விட்ட கலியுக வாழ்க்கையில் பல நியதிகளை நம்மால் கடைபிடிக்க இயலுமா என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இவ்வாறாக, அறிந்தோ, அறியாமலோ மாதவிலக்கு சமயங்களில் ஏற்படுகின்ற பல தவிர்க்க முடியாத தோஷங்களை நிவர்த்தி செய்ய இந்த அட்சர தோஷ திருஷ்டி கண்டி தீபவழிபாடு பெரிதும் உதவுகின்றது.

துளசி மாடம்
மருதூர் சமயபுரம்

மாதவிலக்கிலிருந்து விடுபட்டு நீராடலுக்குப் பின் ஐந்தாம் நாள் அன்று இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீபத்தை வைத்து வழிபடுதல் வேண்டும். நாள் முழுவதும் மௌன விரதம் இருத்தல் மிகவும் விசேஷமானதாகும்.. குறைந்தது ஆறுமணி நேரமேனும் மௌனவிரதமிருந்து, இதனை மேற்கொண்டாக வேண்டும். ஆனால் குழந்தை, பெரியோர்களுடன் பெரிய குடும்பத்தில் இருப்போர் தம் இல்லச் சூழ்நிலைக்கு ஏற்ப இதனைக் கடைபிடிக்க வேண்டும். இன்று நன்முறையில் நீராடி தேகசுத்தி செய்தபின், துளசிமாடம் அருகே இத் தீபகண்டியை வைத்து வணங்குதல் மிகவும் சிறப்பானதாகும். ஆனால் துளசி மாடமோ இன்று அனைத்து இல்லங்களிலும் இருப்பது அரிதாகி விட்டது. ஏதோ இங்குமங்குமாக சில இல்லங்களில் தான் உள்ளது. பலரும் நடுத்தரக் குடும்பத்தினராயும், ஏழ்மை நிலையிலும் இருப்பதால் துளசி பீடம் அமைத்து துளசியை புனிதமாகப் பராமரிக்கப் படுவதற்கான வசதிகளையும், வாய்ப்பையும் பெறவில்லை. இதற்காகத்தான் அக்காலத்தில் ஒவ்வொரு கோயிலிலும் துளசி மாடம் இருந்து வந்தது. இல்லத்தில் துளசி பூஜை செய்ய இயலாதோர் கோயிலுக்குச் சென்று துளசி பூஜையை நிறைவேற்றி வந்தார்கள்.
இரக்தூர விபூஷண பூஜை
மாதவிலக்கு தோஷங்களை நீக்குகின்ற இரக்தூர விபூஷண பூஜையாக விளங்குகின்ற இந்த திருஷ்டி தீபத்தை, இன்று இயன்றவரை துளசிமாடம் அருகில் வைத்து வழிபட்டிடுக. இதற்கு வசதி இல்லாதோர், ஒரு பெரிய வாழை இலையில், பச்சரிசியின் மேல் துளசி இலைகளை பரப்பி, அதற்குமேல் இத்தீபத்தை வைத்திட வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெயால், இத்தீப கண்டியின் உள்ளே ஒரு அகலில் இரு திரிகளில் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஒரே அகலில் இரண்டு திரி வைத்து, இரு ஜோதிகள் எழும்புதல் விசேஷமானதாகும். ஒரே ஒரு அகல் வைத்தால் மட்டும் இரண்டு திரி தீபம் போட வேண்டும். அனைத்து அகல் தீபங்களை ஏற்றினால் ஒவ்வொன்றிலும் ஒரு திரி போதுமானதாம். பொதுவாக வசதியுள்ளோர், நேரம் உள்ளோர் மேலும், கீழுமுள்ள அனைத்து தீபங்களையும் ஏற்றலாம். தர்ப்பைப் பாயிலோ அல்லது ஒரு மரப் பலகையிலோ கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, இந்த தீப ஜோதியை, கண்டிகையின் வெளிப்புறமுள்ள ஒன்பது துவாரங்கள் வழியே தரிசிக்க வேண்டும். இத்தகைய சாளர தீபதரிசனத்திற்கு உடலுக்குப் புனிதத்தைத் தருகின்ற தன்மை உண்டு. இன்று மௌன விரதத்துடன் குறைந்தது ஒன்பது மணி நேரமாவது இருந்து துளசி நீர் அருந்தி உண்ணாநோன்பு இருப்பது சிறப்பாகும். மாதவிலக்கிற்குப்பின் நன்கு சுத்தி அடைந்த உடல் மூலம் பலவிதமான தெய்வீக சக்திகளைப் பெறுவதற்கு இப்பூஜை பெரிதும் உதவுகிறது. எனவேதான், மாதவிலக்கின் போது உபயோகமில்லாத தேவையற்ற கதைகளையும், குறுநாவல்களையும், உணர்ச்சிவசப்படும் படியான மனக் கொந்தளிப்பைத் தரும் நாவல்களையும் படித்தல் கூடவே கூடாது..
தற்காலத்தில் மாதவிலக்கு எனும் பெயரில் பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பத்திரிக்கைகளைப் படிப்பதையே பலரும் விரும்புகின்றார்கள். இதனால் வாழ்க்கை வீணே கழிகின்றது. இறைவன் தருகின்ற ஒவ்வொரு பொன்னான மணித் துளியையும் நாம் நன்முறையில் செலவழிக்க வேண்டும். ஏனோ, தானோ என்று தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்கக் கூடாது. ஏனெனில் மாதவிலக்கின் போது, பலவித தோஷங்களும், அசுத்தங்களும் உங்கள் உடலைவிட்டு நீங்குகின்ற காலமாக அது அமைகின்றது. எனவே அசுத்தங்களை நீக்கக் கூடிய கால கட்டத்தில் தான், மேலும் பல மன அசுத்தங்களைக் கூட்டித் தரக்கூடிய புத்தகங்களாய்ப் படித்தா மனதை மாசுபடுத்திக் கொள்வது? இறைவழி நன்னெறிக் கதைகளையும், புராணங்களையும் படிப்பதில் தவறேதுமில்லை! நன்மையானதும் கூட!!
ஆவர்த்தன சக்தியைப் பெறுவீர்!
இந்த மாதவிலக்கு சமயத்தின் போது, வாயால் மந்திர உரைத்தலைத் தவிர்க்க வேண்டும் எனும் நியதியே முக்கியமானதாம். மானசீகமாக இக்காலங்களில் செய்யவேண்டிய பூஜைகள் நிறைய உண்டு. இதைப் பற்றிய விளக்கங்களை எங்கள் ஆஸ்ரம வெளியீடான “சித்தர்கள் அருளிய பெண்களுக்கான எளிய வழிபாட்டு முறைகள்” எனும் நூலில் விளக்கமாகக் காணலாம். எனவே, மாதவிலக்கின் ஐந்தாம் நாளன்று தேகசுத்தியுடன் செய்யப்படுகின்ற இந்த திருஷ்டி நிவாரண தீப வழிபாட்டில் இந்த ஜோதியை தரிசிக்கும் போது அஷ்ட விப்ர நரம்புகள் மூலமாக இந்த அரிய ஆவர்த்தன சக்தி பெண்களின் உடலில் சேர்ந்து, பல அபூர்வமான புனித சக்திகளைப் பெற்றுத் தருகின்றது. இதனால், ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும், சகிப்புத் தன்மையும், பொறுமையும், திடமான வைராக்கிய மனமும், நற்குணங்களாக வந்து சேர்கின்றன.
ஏனெனில் இத்தகைய நற்குணங்களைப் பெறுவதற்கு சாதாரணமான முறையில் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் எளிதில் இதனைப் பெற்றுத் தரவல்லதே குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் செய்யப்படுகின்ற இந்த தீப வழிபாடாகும். மாதவிலக்கினின்று மீண்ட ஐந்தாம் நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மாலையில் நன்முறையில் இப்பூஜையை மேற்கொள்தல் மிகவும் விசேஷமானதாகும். குறைந்தது ஆறு நிமிடங்களேனும் இந்த ஜோதியை உற்றுப் பார்த்து, பிறகு கண்களை மூடி கண்களினுள் இந்த ஜோதியை தரிசிக்க வேண்டும். அதாவது கண்களை மூடிய நிலையில் ஒன்பது துவாரங்கள் வழியே வெளிவருகின்ற ஜோதியை உங்கள் மனக் கண்களில் கொண்டுவர முயலவேண்டும். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும், அவ்வவ்போது கண்களைத் திறந்து, ஜோதியைத் தரிசித்துப் பழகி வருதல் வேண்டும்.. உடலை சுத்திகரிக்கும் சிறந்த பொருளாக சித்தவைத்திய மற்றும் இயற்கைப் பொருளாக விளங்குவதும், குறிப்பாக ரத்த சுத்திக்காக சிறப்புடன் திகழ்வதும் தேன் ஆகும்.
தீப வழிபாட்டின் நிறைவில் இன்று சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற இனிப்புப் பொருட்களைப் படைத்து அதில் தேன் கலந்து நைவேத்யம் செய்து தானம் செய்திடல் வேண்டும். தேன் தானத்தால் மாதவிலக்கில் ஏற்பட்ட பலவிதமான தோஷங்கள் நீங்குகின்றன. மாதவிலக்கின் போது இறைவழிபாடு செய்யலாமா? எவ்விதமான மந்திரங்களை ஓதலாம் என்று பலவித சந்தேகங்கள் எழும். இதற்கான தக்க விளக்கங்களை எம்முடைய ஆஸ்ரம வெளியீடான மேற்கண்டுள்ள புத்தகத்தில் காணலாம். குறிப்பு  இங்கு நாம் விளக்கியிருப்பது பெண்கள் தம்முடைய மாதவிலக்கிற்குப் பின் உடல் சுத்தியுடன் ஐந்தாம் நாளில் கடைபிடிக்க வேண்டிய புனிதமான அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப கண்டி பூஜை முறையாகும்..

ஸ்ரீசக்கரம்
திருவில்லிபுத்தூர் சிவாலயம்

ஸ்ரீ (வித்யா) சக்கரம்
பலரும் தங்களுடைய Letter Pad –களிலும், Notice – களிலும், விளம்பர Card –களிலும் ஸ்ரீவித்யா சக்கர / ஸ்ரீசக்கரப் படத்தைப் போட்டு விடுகின்றார்கள். ஸ்ரீசக்கரம் அல்லது ஸ்ரீவித்யா சக்கரம் என்பது இல்லத்தில் புனிதமான முறையில் வைத்து போற்றி வழிபட வேண்டிய சக்கரமாகும்.. இதிலுள்ள முக்கியமான 43 மற்றும் ஏனைய கோணங்கள் யாவுமே பலகோடி அற்புதமான பீக்ஷாட்சர சக்திகளைத் தன்னுள் கொண்டுள்ளவையாகும்.. எனவே, விளம்பரத்திற்காகவோ, தன்னுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், கீர்த்தி, கல்வி அறிவு, ஜோதிட அறிவு, போன்றவற்றை வெளிக்காட்டிக் கொள்வதற்காகவோ எக்காரணம் கொண்டும் ஸ்ரீவித்யா சக்கரத்தைத் தவறான முறைகளில் கையாளாதீர்கள்..
ஏனென்றால் ஒரு சக்கரம் என்று ஒன்று வரையப்பட்டால், அதற்குரிய வாமன, தாந்தீரீக, யோக, பூஜை முறைகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும். வெறும் சக்கரமாக வரைந்து விட்டால் மட்டும் போதாது. ஒரு யானையை வாங்கி வைத்துக் கொண்டால் அதற்குரிய தீனியைப் போட்டுத் தானே ஆகவேண்டும். இவ்வாறாகத் தான் ஸ்ரீசக்கரம் என்ற ஒன்று நம்மிடம் வந்திவிட்டால் அதற்குரிய பூஜை நியதிகளைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. இனியேனும் ஸ்ரீசக்கரம், வித்யா சக்கரம் போன்றவற்றைப் புனிதமாக வைத்திருப்பதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, அழகு, விளம்பரம், புகழ் போன்றவற்றிற்காக இதனைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள்.. இதனால் பலவிதமான சாபங்கள் சேருவதோடு, இந்த சாபங்களைக் களைவது மிக மிகக் கடினம் என்பதையும் அறிந்து கொள்க!

அன்னமாதன நாரிகேள லிங்கம்

இரு கண்களை உடைய தேங்காய் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். 5,000 முதல் 10,000 தேங்காய்களுக்கு ஒன்றாகத்தான் இரு கண் தேங்காய் அமைகின்றது.. 10,000 தேங்காய் முதல் 1,00,000 தேங்காய்களுக்குள் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு ஒரு கண் தேங்காய் ஒன்றே ஒன்று உண்டு.. பொதுவாக நாம் காண்பது மூன்று கண்களை உடைய தேங்காய்தான்.. ஆனால் ஒன்று அல்லது இரண்டு கண்களை உடைய அபூர்வமான தெய்வீக சக்தி நிறைந்த தேங்காய்களும் உண்டு. இவையெல்லாம் நன்முறையில் முறையாக வழிபடப்பட்டால் நல்வரங்களைத் தரவல்லவை!
ஒரு மனிதானவன் தன் இறைநெறிப் பாதையிலே எங்கெல்லாம், எதிலெல்லாம் தெய்வீக சக்திகள் நிறைந்துள்ளனவோ, அதனைத் தன் அறவழிகளுக்காக நன்முறையில் பயன்படுத்துகின்ற வழிமுறைகளாக அமைபவையே பண்டிகைகளும், விரதங்களும், மூர்த்தி, மனித குலத்திற்குப் பெறுதற்கரிய பலாபலன்களை, அருளாசிகளை அளிக்கின்றது. தக்க சற்குருவே இவ்வரிய தெய்வீக பூஜை முறைகளை அருளவல்லவர். சென்ற ஜுன் மாதப் பௌர்ணமியன்று நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலே, அன்னதானத்திற்காகத் தேங்காய்களை உடைக்கும் போது, ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் திருவருளால், இருகண்களை உடைய தேங்காய் ஒன்று அபூர்வமாக நமக்குக் கிட்டியது..

இருகண் தேங்காய் பூஜை
திருஅண்ணாமலை ஆஸ்ரமம்

இறையருளால் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இரு கண் தேங்காயாக இரு கண் ஓட்டு லிங்க வழிபாட்டின் மகிமையை, அடியார்களுக்கு உணர்த்தி, இதனால் அன்னமாதன நாரிகேள லிங்கத்தை வழிபடும் முறையையும் நடத்தித் தந்தார்கள்.. கடந்த பௌர்ணமியில் இந்த இருகண் தேங்காயை பூஜையில் வைத்து, அத்தேங்காயை பாணலிங்கமாகவும், நன்முறையில் சுத்திகரிக்கப்பட்டு வடிக்கப்பட்ட அன்னமே ஆவுடையாக்கப்பட்டு, இரு ஓட்டுத் தேங்காய் லிங்க பூஜையாக அமைந்தது கண்கொள்ளாக் காட்சியாகும். இதனுடைய திருஉரு திருப்படத்தைத்தான் இங்கு நீங்கள் கண்டு மகிழ்கின்றீர்கள்! ஒரு கண் சிவ அம்சமாகவும், மற்றொன்று சக்தி அம்சமாகவும், விளங்கி இந்த அன்னமாதன நாரிகேள லிங்கமானது, நம் ஆஸ்ரமத்தின் எதிரே அண்ணாமலையில் நாம் பெறக்கூடிய சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப மலைதரிசனத்தை நோக்குமாறு, அருணாசலப் பெருமானின் நேத்திர யோக மேற்பார்வையில் வைக்கப்பட்டு, சுமார் பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு மேலாக அபிஷேக ஆராதனைகளுடன் ஆராதிக்கப் பெற்றது.
பொதுவாக, இருகண் ஓட்டு லிங்கத் தேங்காய் நமக்குக் கிடைக்குமேயானால், அது சப்தரிஷிகளுடைய ஆசிர்வாதத்தினால்தான், ஏனென்றால், தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்குத் தென்னை மரத்தைக் கொணர்ந்தவர் ஸ்ரீபரசுராம மகரிஷி ஆவார். இவருடைய நாரிகேள தாந்த்ரீக பூஜை முறைகளின்படியே இன்று நாம் தேங்காயைக் கொண்டு இறைவழிபாடு செய்கின்றோம். இந்த இரு கண் ஓட்டு லிங்க வழிபாட்டில் ஏழு மகரிஷிகள் மற்றும் அவர்தம் பத்தினிகளின் திருநாமங்களைச் சொல்லி, ஆசிரிய வணக்கம் (குரு வணக்கம்) செலுத்தப் பெற்று இந்த அரிய அன்ன மாதன நாரி கேள லிங்கத்திற்கு ஒளி வழிபாடு மற்றும் கற்பூர ஆரத்தியுடன் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப நேத்ர தரிசனத்துடன் வழிபாடு நிறைவுற்றது. எனவே, இதன் பலாபலன்களை யாவரும் பெற்றுய்யும்படி, உங்கள் இல்லத்திலும், கடைகளிலும், இருகண் தேங்காயை / முக்கண் தேங்காயையும் வைத்து வழிபடுவதற்குரிய தெய்வீக ரகசியங்களை தக்க சத்குருவிடம் கேட்டுப் பெற்று உய்வடையுங்கள்!!.
பொதுவாக இருகண் அல்லது முக்கண் தேங்காய் கிட்டுமேயானால், அதன் குடுமிப் பகுதியைப் பிய்த்து விடாது, முழுமையான தேங்காயை வைத்தை பூஜிக்க வேண்டும். அதன் குடுமிப் பகுதியைப் பிய்த்து விட்டாலோ, அல்லது இந்தத் தேங்காயை உடைத்து விட்டாலோ, அதனை லிங்க பூஜைக்கு ஏற்க முடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்திடுக! எனவே தான் எந்தக் காரியத்தையும், பொறுமையாக அடக்கத்துடன் செய்தல் வேண்டும் என்று நம் மூதாதையர்கள் விதித்தார்கள்.  தேங்காய்களை உடைக்கும் போது சொல்லுகின்ற அரிய மந்திரங்கள் பல உண்டு.. எனவே இவ்வரிய மந்திரங்களைத் துதித்துப் பழகிக் கொண்டால் எந்த அபூர்வமான தேங்காயும், உங்கள் கண்களை விட்டுத் தப்பாது. அந்த அளவுக்கு நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.
இருகண் அல்லது முக்கண் தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமம் இட்டு இதனை பாண லிங்கமாகக் கருதிட வேண்டும். மௌன விரதம் இருந்து, சிறிது அன்னம் சமைத்து, அந்த அன்னத்தையே ஆவுடை ஆக்கி, இதன் மேல் இருகண்  முக்கண் தேங்காயை பாண லிங்கமாக வைத்து அன்ன மாதன நாரி கேள லிங்கமாக பாவித்து இதனை வழிபடுதல் வேண்டும். இதற்கு ஆராதனைகளும், கற்பூர ஆராத்தியும், நைவேதனமும் செய்து சிவலிங்க பூஜையை நிறைவேற்றுதல் வேண்டும். பூஜை முடிந்த மறுநாள், தேங்காயின் குடுமிப் பகுதியைத் தனித்துப் பிரித்து, தேங்காயின் கண் பகுதியை விட்டுவிட்டு, எதிர் முனையில் ஒரு நாணயம் அளவிற்கான வட்டமான சில்லை எடுத்து அதன் வழியாக உள்ளிருக்கும் தேங்காயை சுத்தமாக வழித்து எடுத்தல் வேண்டும். எவ்வாறு ஐயப்ப விரதத்தில் இருமுடித் தேங்காயில் உள்ளேயுள்ள தேங்காய்ப்பகுதி அகற்றப்பட்டு, அதனுள் பசுந்நெய்யை ஊற்றுகிறார்களோ, அதே போல இந்த அன்ன மாதன நாரிகேள லிங்கமாக விளங்கும் இரு கண்/ முக்கண் தேங்காயிலும், உள்ளேயுள்ள தேங்காய்ப் பகுதியை எடுத்திட்டு உணவுடன் சேர்த்து அன்னதானமாக அளித்திடுதல் வேண்டும்...
உள்ளேயிருக்கும் தேங்காயை எடுக்கும் போது மிகவும் கவனமுடன் செயல்படுதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் தேங்காயின் கண்பகுதி காயம் அடைதலோ, பழுதுபடுதலோ கூடாது. தேங்காயின் உட்புறம் கங்கை, காவிரி, போன்ற சுத்தமான நதிப் பகுதியிலிருந்து தக்க காணிக்கைச் செலுத்திப் பூஜித்துப் பெறப்பட்ட மணலை, எடுத்து நிரப்பி, அதே வட்டச் சில்லால் அதன் வாயை நன்கு மூடி சீல் இருப்பதை போல நன்றாக மூடிவிடுதல் வேண்டும். பிறகு இந்த தேங்காயை பூஜை அறையில் வைத்து எத்தனை ஆண்டுகளானாலும் வைத்து பூஜித்து வழிபடலாம்.. பொதுவாக பணக் கஷ்டத்தைப் போக்க வல்லது! கணவனுக்கு நோய் நொடியற்ற தீர்க்கமான ஆயுளையும், பெண்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவத்தையும் அருளவல்லது. வியாபாரத் தலங்களில் வைத்து பூஜித்திடில் தார்மீகமான முறையில் செல்வம் பெருகும்.

அமுத தாரைகள்

1. சகோதர நேயம் மிளிர :- பல குடும்பங்களிலும் அன்புடன், பாசத்துடன் வளர்ந்த சகோதர சகோதரிகளின் திருமண வாழ்விற்குப் பின் பலவிதமான மனவேறுபாடுகளால் சாதாரண முறையில் உரையாடக் கூட இயலாத அளவிற்கு சொத்து, நில, பாகப் பிரிவினை விஷயங்கள் தீராப் பகையாய் முன் நிற்கின்றன! இவர்கள் திருவாரூர் அருகே (திரு) நாட்டியத்தாங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீரத்னபுரீஸ்வரருக்கு செவ்வாய்க் கிழமையன்று செம்பவள நிறமான மாதுளைப் பழ முத்துக்களால் காப்பிட்டு ஏழைகளின் திருமணங்களில் ரத்தின மற்றும் பவள மோதிரம், பொன் மாங்கல்யம் போன்றவற்றைச் செய்து தரத் தேவையான உதவிகளை, கடன் உதவியேனும் செய்து வந்தால் “கரிதோஷங்கள்” நீங்கி பாகப்பிரிவினை சுமுகமாக அமைந்து மனசாந்தி கிட்டும். இரத்தின தானத்திற்கு உறவுப் பகைமை தோஷங்களை நீக்கும் அற்புத தெய்வ சக்தியும் உண்டு.

ஸ்ரீஅமர்ந்தகோல அபின்னாம்பிகை
பெருவேளூர் குடவாசல்

2. குடும்பத் தலைவிக்கு அருள் தரும் மூர்த்தி
கணவனுடைய குறைந்த வருமானம், தீய பழக்கவழக்கங்களால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. தனித்த ஒரு மனுஷியாய் ஓர் இல்லறப் பெண்மணி எத்தனையோ துன்பங்களைச் சுமந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு படிகிறது எனில் இது மிகவும் கடினமான பணிதானே! பூர்வஜென்ம விளைவுகளாகவே தனக்கு அமைந்துள்ள இத்தகைய குடும்ப வாழ்வை மனப்பூர்வமாக ஏற்று நன்முறையில் குடும்பத்தையும் நடத்தி கணவனையும் சீர்திருத்திட அமர்ந்த நிலையில் உள்ள குறிப்பாக வீராசனக் கோல நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்பிகைக்கு நேர்த்தி செய்து கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் இடைவிடாது தொடர்ந்து வழிபட்டு வருதல் வேண்டும். கும்பகோணம் அருகே பெருவேளூரில் (குடவாசல் – மணக்கால் அருகே) அருள்பாலிக்கும் ஸ்ரீஅபின்னாம்பிகைதான் துன்பச் சூழல்களில் துடித்து வாழ்கின்ற இல்லறப் பெண்மணிகளுக்கு நல்வழி காட்டும் அற்புத அம்பிகையாவாள்! ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிடுங்கள். அருள்புரியக் காத்திருக்கின்றாள்!
3. இழந்த பதவியைப் பெற :
தான் எத்தகைய தவறுகள் செய்யாதிருப்பினும் மேலதிகாரிகள், அதிகாரம், பிறர் கோள் மூட்டுதல், அஜாக்கிரதை காரணமாகப் பலரும் மெமோ, சஸ்பென்ஷன் எனப் பல தண்டனைகளைப் பெற்றுப் பதவியிழந்து அவதியுறுகின்றனர். சிறுதவறுக்குக் கூடப் பெரிய அளவு தண்டனை வந்து தாக்கி, தற்காலிகமாக பதவி இழப்போரும் உண்டு. அரைகுறைச் சம்பளத்தில் குடும்பமே ஸ்தம்பித்து விடும்.. இத்தகைய வேதனைகளால் அவதியுறுவோர் புதுக்கோட்டை ஆவுடையோர் கோயில் அருகே உள்ள திருப்புனவாசல் ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆகண்டல விநாயகருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், புதன் கிழமைகளிலும் 48 தேங்காய்களை உடைத்துப் படைத்து தேங்காய் சாத தானம் அளித்து வந்தால் தார்மீக ரீதியாக இழந்த பதவியைப் பெற நல்வழிகிட்டும். ஸ்ரீஇந்திர மூர்த்தி வழிபட்டு தன் தேவசபையை நிலைநிறுத்த அருள்பெற்ற திவ்யமான சிவத்தலம்.

ஸ்ரீஆகண்டல விநாயகர்
திருபுனவாசல்

4. சிலாக் கல் தரிசனங்கள்
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் கீர்த்தி பெற்ற தலங்கள் நிறைய இருப்பினும் இம்மூன்றின் பலன்களைத் தரவல்ல அற்புத சிலாக்கல் தெய்வ மூர்த்தி தரிசனங்களும் நிறைய உண்டு. தக்க சற்குருவை நாடினால்தான் இவற்றின் பலாபலன்களை உய்த்து உணர்ந்து அருள்பெற முடியும். கும்பகோணம் திருலோக்கி ஊரில் உள்ள ஸ்ரீசுந்தேரஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் சுவாமி – அம்பாள் சிலாக்கல் – ரிஷபாரூட தரிசனம் அதிஅற்புத பலன்களைத் தரவல்லது.. அதாவது சிலாக்கல்லில் வடிக்கப் பெற்ற நந்தியின் மேல் சிவன் அம்பாளும் அருள்பாலிக்கின்ற தரிசனம் காணக் கிடைக்காதது! தம்பதிகளுக்கு மனநிறைவையும், குடும்ப வாழ்வில் சாந்தத்தையும் பெற்றுத் தரவல்ல மிகவும் அற்புதமான சிலாக்கல் தரிசனம் இது! ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளால் புனருத்தாரணம் செய்யப் பெற்ற திருகோகர்ணேஸ்வரர் சிவத்தலத்திலும் இத்தகைய இறைமூர்த்திகளின் தரிசனம் அமைவது கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறே.

ரிஷபாரூட தரிசனம்
திருலோக்கி

5. ஆவணி அவிட்ட (பூணூல்) மஹிமை
பூணூல் அணிதல் யாவர்க்கும் உரித்தானதே. இறைநெறியில் திளைப்பதற்கும் பூணூல் அவசியமானதே. முற்காலத்தில் பீடி, சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், தீயொழுக்கச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவை கூடாது எனும் நியதி இருப்பதால்தான் பலரும் காலப்போக்கில் பூணூல் அணிவதையே விட்டுவிட்டனர். இன்றைக்கு புகைபிடிக்காத மனிதரே அரிது எனச் சொல்லும் அளவிற்கு இளைஞர்களும், ஏனையோரும் இத்தீய வழக்கங்கட்கு அடிமையாகி விட்டனர். என்னே கலியுகக் கோலமிது! தீயசக்திகளின்பால் வசப்படாது, நன்முறையில் உடல், மனம், உள்ளம் புனிதமாக விளங்க வேண்டுமெனில், பூணூலை அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை தினந்தோறும் தவறாமல் ஓதிட, ஜபித்திட வேண்டும். தினந்தோறும் ஸ்ரீகாயதரீ் மந்திர அர்க்யமும் வார்த்து வருதல் வரவேண்டும்..
பூணூலை அணிந்து கொண்டு எவ்விதத் தீய செயலையும் கூட செய்யக் கூடாது எனும் நியதிக்கு அஞ்சித் தான் தற்போது பூணூல் அணிகின்ற அம்சமே கிட்டத்தட்ட மறைந்து விட்டது, நன்னெறியில் வாழ்வது கடினமே என்று அஞ்சியே அனைவரும் பூணூல் அணியும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அருகி மறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைந்த தெய்வ சக்தியை பெற்றுத் தரவல்ல பூணூலை எவ்வித பேதமுமின்றி அனைவரும் அணிதல் தெய்வீகத்தில் மிகவும் இன்றியமையாததாகும். அப்போதுதான் நம் உடலும், உள்ளமும், மனமும் மேம்பட்டு நல்லொழுக்கத்தில் சிறந்து, இறைபக்தியில் திளைத்திடலாம். இதனால் எக்காலத்தும் மனமோ, உடலோ எந்தத் தீய செயலையும் நாடாது. இதற்காகத் தானே நாம் மனிதப் பிறவியைப் பெற்றுள்ளோம். எனவே விபூதி, குங்குமம், திருநாமம் இடுதல் போல பூணூல், கடுக்கன் அணிவதும் ஒரு தெய்வீகக் கவசமே, நம்மைக் காக்கும் ரட்சையே! வரும் ஆவணி அவிட்டம் முதலாவதாவது இந்த தேக ரட்சையைக் கைக் கொள்ளுங்கள்!

ஸ்ரீரிஷபாரூடர்
திருகோகர்ணம் புதுக்கோட்டை

6. முறையற்ற காம எண்ணங்கள் நீங்கிட :
காமம் என்றால் விருப்பம், ஆசை என்பதே பொதுப் பொருளாகும். ஸ்கூட்டர் வாங்குதல், நகை வாங்குதல் போன்றவை ஓரளவு நியாயமான, தகுதிக்கு மீறாத ஆசைகளாக இருப்பதில் தவறில்லை. ஆனால் வயதாக, வயதாக விருப்பங்கள் (Desires)  தாமாக இயலாமையால் விலகுவதை விட நாமே அவ்வப்போது பேராசைகளையும், சிறுசிறு ஆசைகளையும் விட்டு விடுவது சிறப்புடையதாகும். எந்த ஆசையாயிருப்பினும், முறையற்ற காம இச்சைகள் மட்டும் ஒருபோதும் வளரவிடக்கூடாது. இளவயதில் காம உணர்வுகள் ஏற்படுவது இயல்பே. நல்ஒழுக்கமே  மனிதனை உயர்ந்த இறைநிலைக்கு இட்டுச் செல்வதற்கான பக்தியின் முதல்படி ஆகும். சிவனின் ஆறு ஜோதிகளிலிருந்து தத்புருஷராய்த் தோன்றிய முருகப் பெருமானை மாயூரம் அருகே திருவிடைக்கழியில் அரிய தரிசனமாக, பின்புறம் சிவலிங்க தரிசனம் முன்புறம் முருக தரிசனமாக அடிக்கடி தரிசித்து வருவதாலும் இத்தலத்தில் மும்மலம் நீக்கும் மாமருந்தான அன்னதான சக்தியைப் பெற மாம்பழ இனிப்புக் (பாயசக்) கூட்டுடன் அன்னதானம் செய்து வருவதாலும் முறையற்ற காம உணர்வுகள் படிப்படியாகத் தணியும். தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டோர் திருந்திட உதவும் திருத்தலம்.
7. சற்குருவைப் பெற :
தக்க சற்குரு வேண்டுமானால் திருஅண்ணாமலையை 1000 முறை கிரிவலம் வருதல் வேண்டும். இது இயலுமா என்று மலைத்திடாதீர்கள்! எத்தனையோ மஹான்கள் நம்மிடையே வாழ்கின்ற போது எவரைத்தான் சற்குருவாக ஏற்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் குருபக்தியைப் பெருக்கினீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்! ஆனால் 1000 முறை கிரிவலம் வர நேர்த்தி செய்து ஓராண்டோ, மூன்றாண்டுகளோ, ஐந்தாண்டுகளோ, பத்தாண்டுகளோ, எத்தனை அண்டுகளானாலும் பரவாயில்லை! “சற்குருவைப் பெற்றே தீருவேன், அண்ணாமலையானே, அருள்புரிவாயாக” என்ற தீவிர வைராக்யத்துடன் திருஅருள்வழி காண நல்வாய்ப்புகள் கூடும்... “சதமுக சத கிரிவலம் சதுர்முக குரு தரிசனம்” என்பது சித்தர் வாக்கு!
8. சத்தியமான மரணம் பற்றி அறிய :
அமைதியான முறையில் மரணத்தை தழுவுவோர் ஒரு சிலரே. மூச்சுத் திணறலாலும், மார்பு வலியாலும் பலவித வேதனைகளுடன் உயிர் துறப்பதே கலியுகத்தில் அதிகமாயுள்ளது. சர்க்கரை வியாதி, விபத்து, கான்சர் போன்ற கடுமையான நோய்களால் அவதியுற்றவாறு இறப்போரும் உண்டு. உத்தமமான மரணம் என்பது என்ன? தனக்கு மரணம் ஏற்பட இருக்கிறது என்பதை உணர்ந்து அதனைப் புன்முறுவலுடன் எதிர்கொண்டு, மனசாந்தியுடன் இருப்பதாகும். ஒருவர் அமைதியான முறையில் தன் மரணத்தைத் தழுவினாரா என்பதை அறியவே சங்குப்பால் ஏந்தல் என்னும் சம்பிரதாயப்படி மறுநாள் காலையில் மயானச் சாம்பலை எடுக்கையில் அதில் எலும்பு எந்த அளவு பஸ்மம் அடைந்துள்ளது என்பதைக் கொண்டு அக்காலத்தில் அறிவர். இத்தகைய தகனக் கிரியை ரகசியங்களை முறையாக அறிந்தோர் ஒரு சிலரே. இதனைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கொண்டால் இறந்தவரின் மேலுலக நல்வாழ்விற்கான முக்கியச் சடங்குகளை நாம் எளிதில் முறையாகவும் செய்திடலாம். மக நட்சத்திரம் தோறும் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலியில் ஸ்ரீஎமபகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்துவர சாந்தமான இறுதி வாழ்க்கை அமையும்.
9. நன்முறையில் வருமானம் பெருகிட

இருஅம்பிகை மூர்த்திகள்
அருளும் திருப்பைஞ்ஞீலி

பல குடும்பங்களிலும், நிலையான வருமானம் இல்லாமையால், அல்லது குறைந்த வருமானத்தினாலும், மாதாமாதம் குடும்பத்தை ஓட்டுவது பெரிய போராட்டமாக அமைந்து விடுகின்றது. முதல் வாரம் சம்பளம் வந்தால் அடுத்த வாரம் தீர்ந்து போய், வெறும் சட்டை பையுடன் அலைய வேண்டிய சூழ்நிலை, குழந்தைகள் மிகச் சாதாரணமாகக் கேட்பதைக் கூட வாங்கித்தர முடியாத தரித்திரமான நிதி நிலைமை, ஏதாவது வருமானம் தரக்கூடிய இன்ஸ்யூரன்ஸ், அப்பளம், வற்றல் விற்றல் போன்ற சிறுதொழில்களை எடுத்து நடத்தலாம் என்றால், அதிலும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், எப்படியாவது வாழ்க்கையை நடத்தித்தானே ஆக வேண்டும். இவ்வாறு குறைந்த வருமானம் காரணமாக, மன நிம்மதி இல்லாது வாழ்கின்றோர், இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கின்ற திருத்தலங்களுக்கு தம்பதி சகிதமாகச் சென்று ஆலயம் முழுவதும் மாக்கோலம் இட்டு, செங்காவி இட்டு, கோயில் மதில்சுவர் ஓரங்களில் சர்க்கரை கலந்த ரவையை இட்டு வருவார்களேயானால் இறையருளால், அவர்களுக்கு நன்முறையிலே, தார்மீக ரீதியாக வருமானம் பெருகிட அருள்வழி கிட்டும். இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கின்ற தலங்கள் – திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, விருத்தாசலம், அவினாசி, பூவனூர், சீர்காழி அருகே ஆனந்த தாண்டவபுரம், திருநீலக்குடி, காசி, திருநாகேஸ்வரம் போன்றவையாம். குறைந்த வருமானத்தினால், இந்த திருத்தலங்களுக்குப் பல முறை செல்ல முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையேனும் சென்று வந்து ஏனைய நாட்களில் அவர்கள் ஊரில் உள்ள ஆலயங்களில் மாக்கோலம் இட்டு, தினந்தோறும் எறும்புக்குச் சர்க்கரை கலந்த ரவையைப் போட்டு வருதல் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைக் கடைபிடித்து வந்தால், நிச்சயம் நற்பலன் கிட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
10 . தானதர்ம சக்திகள் :- தான,தர்ம சக்திகளைக் குறைவாக எடை போடாதீர்கள்! வேள்விகளின் பலன்களையும், வேத சக்திகளையும் தம்முள் கொண்டவையாகத்தான் கலியுக தான, தர்மங்கள் விளங்குகின்றன. வேத ஒலி முழங்குதல் குறைந்து ஹோம வழிபாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலியுகத்தில் மங்கி விடும் என்பதை, தீர்க தரிசனமாக, உணர்ந்த மஹரிஷிகள் கலியுகத்தில், முக்திப் பெருவழியைக் காட்டுகின்ற, சற்குருவின் அருள்வழி முறைகளில் ஒன்றாகத்தான் தர்மசக்திகளைப் படைத்தார்கள். கோடானு கோடி யுகங்களுக்குப் முன்னர் நல்லொழுக்கம், பக்தி, மனஅடக்கம், மனதிருப்தி, நிறைந்திருந்தமையால் பொய், பித்தலாட்டம், திருட்டு  எதுவுமின்றி சமுதாயத்தில் இறைமை பூத்திருந்தது! ஆனால் கலியுகத்தில் வயிற்றுப் பசிக்குக் காரணமான வறுமையை, ஓரளவு சமுதாய இறைப்பணியாகத் தீர்க்கும் பொருட்டு இறைவனாலேயே தான, தர்ம சக்திகள் பன்மடங்காகப் பெருகும்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் கலியுகத்திற்கான தெய்வீக நெறியில் தான, தர்மங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருநாகேஸ்வரம் சிவத்தலம்

11. பௌர்ணமி திதி தேவதையே பூஜித்த தலம்! திருமணத் தடங்கல்கள் தீரும் சிவத்தலம்! ஒவ்வொரு திதிதேவதை போல பௌர்ணமி திதி தேவதையே வழிபட்ட திருத்தலம் ஒன்றுள்ளது! இதுதான் சிதம்பரம் அருகே உள்ள திருமகேந்திரப்பள்ளி திருத்தலம். சூரியனும், சந்திரனும் எதிரெதிரே இருப்பதுதானே பௌர்ணமி! இவ்வாறு இருமூர்த்திகளும் எதிரெதிரே நின்றிட, பௌர்ணமி திதி தேவதையே பூஜித்த லிங்கம் திருமகேந்திரப்பள்ளி சிவலிங்கம், பாடல் பெற்ற தலமாக இருப்பினும் பக்தர்களால் அவ்வளவாக நாடப்படாத தனித்த, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த தலம். பௌர்ணமி தினத்தில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து அன்னதானம் செய்துவர அழகின்மை, சாதாரண கல்வி, ஏழ்மை, வேலையின்மை, வரதட்சணை தர இயலாமை போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள திருமணத் தடங்கல்கள் தீர்வு பெறும் மிகவும் சக்திவாய்ந்த தலம்!
12. பூவாளூர் பல்குனி தீர்த்த மகிமை :-  தன் தாய், தந்தையரின் உயிர் பிரிகையில் அருகில் இருக்கு பாக்யத்தைப் பெறாதோரும், பெற்றோரின் ஈமக்கிரியையின் போது அருகில் இல்லாதோரும் இதற்குரிய பிராயசித்தமாக திருச்சி லால்குடி அருகேயுள்ள பூவாளூர் சிவாலயத்தின் நதி தீரமான பல்குனி ஆற்றில் அமாவாசை தோறும் தர்ப்பணமும், அன்னதானமும் செய்து வருதல் வேண்டும். கயா போன்று இங்கு கோடையில் ஆற்றில் நீரில்லாவிடினும் சூட்சுமமாக பல்குனி நீரோட்டம் எப்போதும் இங்கு விளங்குவதால் கயாவிற்குச் சமமான இப்புண்ணிய நதிக்கரையில் தர்ப்பணம் இடுதல் மிகவும் விசேஷமானதாகும். அன்னதானம் மிகமிக விசேஷமானது.

நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.9.1999 - தர்ப்பைப் பாய் தானம் – மனதில் தைரியம் பிறக்கும்.
2.9.1999 - பிள்ளையாருக்கு 11 அருகம்புல் மாலைகள் சாற்றுதல் – வேலையில் வரும் சங்கடங்கள் குறையும்.
3.9.1999 - அனுமாருக்கு வடைமாலை சாற்றி தர்மம் செய்வதால் – இடமாற்றம் நலமாய் முடியும்.
4.9.1999 – இரட்டைக் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் – இழந்த பொருள் மீள வழியுண்டு.
5.9.1999 – குறைந்தது ஏழு கோபுர கலசங்களை உடைய சிவன் கோயிலில் தன் கையாலேயே வில்வமாலை தொடுத்து சிவனுக்குச் சாற்றி அன்னதானம் செய்திடில் பலவிதமான மன சஞ்சலங்களால் அவதியுறும் பெண்கள் தவறு செய்யாமல் மீள்வர், துன்பங்களிலிருந்து காப்பாற்றப்படுவர்.
6.9.1999 – இன்றோடு முறையற்ற காமத் தொடர்புகளுக்கு இனியேனும் ஒரு முற்றுப்புள்ளி வைத்திடுக! இல்லையேல் பெருந்துன்பம் விளையும், வாழ்க்கையே பாழாகி விடும்.
7.9.1999 – கணவனை / மனைவியை இழந்தோர் மூலமாகத் துன்பங்கள், பிரச்னைகள் எழும் – இரு சாராருக்கும் கவனம் தேவை.
8.9.1999 – மாமியார், மாமனாருக்கு வஸ்திர தானம் – வீட்டில் அமைதி நிலவும்.

திரு தேனுறிஞ்சி பிள்ளையார்
திருபுறம்பியம்

9.9.1999 – மைத்துனர்கள் சொல்லைக் கேட்டு அண்ணிமார்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடிய நாள் – எல்லைக் காவல் தெய்வங்களுக்குப் பொங்கல் படைத்து தானம் செய்தல் நலம் தரும் ரட்சையாக அமையும்.
10.9.1999 – மனைவி, கணவனை கவனமாய் வாய்ச்சண்டை வராது கண்காணிக்க வேண்டிய நாளிது. பணியாளர் / பணிப் பெண் மூலமாக வாக்குவாதங்கள், பிரச்னைகள் ஏற்படக் கூடும். இரு சாராருக்கும் கவனம் தேவை.
11.9.1999 – உத்தியோகத்தில் உதவியாளர்களின் கவனக் குறைவான காரியங்களால் இல்லத்தில் மனஸ்தாபம் ஏற்படும் நாளிது – கவனம் தேவை.
12.9.1999 – இன்று புதிதாக எங்கும் பணம் டெபாசிட் எதுவும் செய்ய வேண்டாம். செய்திடில் சிக்கல்கள் வரும்.
13.9.1999 – நன்றாகப் பழகியர்வர்களிடத்திலேயே ஏமாறும் நாளிது – கவனம் தேவை.
14.9.1999 – மன சஞ்சலங்கள் நிறைந்த நாளிது, அதர்மமான முறையில் சகோதரிகள் மூலமாக பண விஷயத்தில் ஏமாற்றம் நேரிடலாம்.
15.9.1999 – கண் தெரியாதவர்கள் ஏமாறக் கூடிய நாளிது. கவனம் தேவை –ஸ்ரீகண்ணாயிர மூர்த்திக்குப் பிரார்த்தனை செய்து கொள்க!
16.9.1999 – ஊமைப் பெண்கள் பிறரிடம் ஏமாறக் கூடிய நாளிது. நன்கு இறைப் பிரார்த்தனை செய்து காத்துக் கொள்க!
17.9.1999 – குறி சொல்பவர்களுகுப் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். நிறைய பூஜைகள் செய்ய வேண்டும்.
18.9.1999 – ஜோதிடர்கள் இன்று பூராவும் கணபதி ஹோமம், கணபதி மந்திரங்களை ஜபிப்பதால் நல்ல வாக் சித்தியையும், நற்பலன்களையும் பெறுவர்.
19.9.1999 – இன்று தென்னை மரத்திற்கு மஞ்சள் குங்குமமிட்டு பூஜை செய்து இளநீர் தானம் செய்திடில் தென்னை மரத்திற்கு சிவப்பு சிலந்தி நோய் தாக்காமல் காக்கலாம். தென்னை மர வளர்ச்சிக்கும், கீற்று, தேங்காய் எண்ணெய் வியாபார விருத்திக்கும் பூஜை செய்யும் நாள்.
20.9.1999 – புளிய மரங்களுக்குச் சுற்றுக் காப்பு செய்து மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து புளியோதரை தானம் செய்திடில் புளி விளைச்சல் பெருகும். திண்டிவன சிவாலயத்தில் அபிஷேக ஆராதனைகள், தானங்கள் செய்தல் சிறப்புடையதாம். இந்த பூஜை புளி வியாபாரிகளுக்கும், மளிகை வியாபாரிகளுக்குச் சிறந்த பலன்களைத் தரும்.
21.9.1999 – இன்று துளசி வனத்திற்கு சென்று அரைத்த மஞ்சள், நீர், சந்தன நீரை துளிச் செடிகளுக்கு ஊற்றி, துளசிச் செடிகளுக்கு குங்குமமிட்டு, மாலையிட்டு உண்ணா நோன்பிருந்து துளசி பூஜை செய்திடில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் கணவருக்கு வரும் ஆபத்துக்கள் விலகும்.
22.9.1999 – பால் பண்ணையில் பால் கறப்பவர்களுக்கு வயிறார உணவிட்டு வஸ்திர தானம். இரத்த சேமிப்பு (Blood Bank) மருத்துவத் துறையில் வேலை செய்பவர்கள் செய்திட நலம் பெறுவர்.
23.9.1999 – அன்புடன் வளர்த்துப் பழகி இறந்த நாய்க்கு, பிற பிராணிகளுக்குத் தர்ப்பணம் செய்திடுக. இதனால் எஜமா(னர்)னியம்மாள் மனநிம்மதி அடையும் நாள்.
24.9.1999 – இன்று கோவில்களுக்கு யானைதானம். பெருந்தலைவர்களின் தலைக்கு வருகின்ற ஆபத்து தலைப்பாகையோடு போகும்.
25.9.1999 – நீண்ட நாளாகப் பூட்டியிருக்கும் வீட்டைத் திறந்து பெருக்கிக் கூட்டி வாசல்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு சாம்பிராணி தூபம் போட்டு மணியடித்து, ஆறுகால பூஜை செய்து தான, தர்மம் செய்திடில் வீடு பூட்டியிருப்பதால், வருகின்ற சம்புதீனம் என்ற இருட்டு தோஷம் தீரும்.
26.9.1999 – இன்று அம்மிக் கல்லும், குழவியும் தானம் செய்திடில் உழைத்தும் வராமல் இருந்த பணம் திரும்ப வரும்.
27.9.1999 – வாழைத் தோப்பு வைத்திருப்பவர்கள் 100 தார் வாழைப்பழங்களை பத்து கோயில் யானைகளுக்குத் தானமாய் அளித்திடில் “சுழற் காற்று வாழைச் சாய்வு தோஷம்” தீரும். வாழை விளைச்சலும், வியாபாரமும் விருத்தியாகும்.
28.9.1999 – கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் இன்று கோழி வியாபாரம் செய்யாமல் இருந்து எல்லை அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் நீரை கோழிகள் மீது தெளித்திடில் பல பிராயசித்தங்களைப் பெறலாம், ஏழைகளுக்கு வற்றல் / வடாத்துடன் புளியோதரை தானம் செய்திடுக.
29.9.1999 – மலைவாழ் தெய்வங்களுக்குப் பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் – மனையில் மங்களகரமான நற்காரியம் நடைபெறும்.
30.9.1999 – முருகன் கோயிலில் முடி இறக்கும் திருவிழா செய்கின்றவர்களுக்கு தலையில் பூச அரைத்த சந்தனம் தானமாய் அளித்திடில் – தண்ணீரால் வரும் ஆபத்து குறையும்.
விசேஷ தினங்கள் – செப்டம்பர் 1999
13.09.1999 – விநாயக சதுர்த்தி – திருச்சி மலைக்கோட்டை கிரிவலம் விசேஷமானது . கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் விநாயகருக்குத் தேனாபிஷேகம் கண் கொள்ளாக் காட்சியாகும்.
26.09.1999 முதல் மாளயபட்சம் – தினசரித் தர்ப்பண நாள் 9.10.1999 வரை
24.09.1999 – பௌர்ணமி கிரிவல நாள்
30.09.1999 – சந்திர சஷ்டி விரதம்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam