அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தூர்வா கணபதி விரதம்

தூர்வம் என்றால் அருகம்புல் என்று பெயர், அருகம்புல்லையே கொண்டு ஜீவித்து அளப்பரிய பலன்களைத் தரவல்லவரே ஸ்ரீ துர்வாச மகரிஷியாவார். சினத்தில் சிவக்கும் சிவமாமுனி என்றாலும், இவருடைய சினத்தால் பூலோகத்திற்கு நல்ல வரங்களே கிட்டின. இவர் பெற்ற சாபம் என்னவெனில் இவர் சினம் பெருகப் பெருக, இவருடைய தபோ பலன்களும் விருத்தியடையும், ஆசியும் பெருகும். எனவே ஸ்ரீ துர்வாசர் கோபம் கொண்டார் என்றால் அஞ்சுதல் வேண்டாம். அனைத்தும் பூமிக்கு நல்லதாகவே முடியும். எனவே துர்வாசரின் கோபம் என்றாலே பூமாதேவி மகிழ்ந்திடுவாளாம். ஏனெனில் பூமியில் நல்லது நடக்குமே!

“ஸ்ரீ துர்வாச மகரிஷியானவர் ஸ்ரீ கணபதிக்குரிய பல விசேஷமான பூஜை முறைகளை நமக்குத் தந்தருளியுள்ளார். சோடச கணபதி வழிபாடும் இவரால் விருத்தி செய்யப்பட்டதாகும், அலுவலகங்களிலும், குடும்பங்களிலும், பகைவர்கள், தகாத நண்பர்கள், பொறாமை கொண்டுள்ள உறவினர்களின் எண்ணங்களாலும் பொறாமையாலும், துரோகத்தினாலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குடும்ப விருத்தியும் வியாபார விருத்தியும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய தோஷங்களிலிருந்தும், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி போன்றவைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்காகவே இன்று அருகம்புல் தீர்த்தத்தை மட்டும் உண்டு விரதம் இருப்பது மிகவும் சிறப்புடையதாகும்.

இரட்டை கணபதி வழிபாடு

ஸ்ரீஇரட்டை கணபதி மூர்த்திகள்
பூவாளூர்

விநாயகருக்கு குறிப்பாக தாமே அருகம்புல்லைப் பறித்து, மாலை கட்டி ஸ்ரீஇரட்டைப் பிள்ளையாருக்கு இன்று சார்த்துதல் விசேஷமானதாகும்.

இரண்டு கணபதி உருவங்கள் சேர்ந்திருப்பதே இரட்டை கணபதி தரிசனமாகும். இது குறித்த சில தலங்களிலேயே காணப்படுகின்றது. திருச்சி லால்குடி அருகே பூவாளூரிலுள்ள இரட்டைக் கணபதி மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்திகள். ஆனால் இதனைப் பற்றி இன்றும் பலரும் அறியாது இருக்கின்றார்கள். வெள்ளை நிறத்திலும் சாதாரண முறையிலும் இரண்டு கணபதி உருவங்கள் இரட்டைக் கணபதிகளாக நமக்கு அருள் பாலிக்கின்றார்கள்.

பூவாளூர் பல்குனி நதி தீர சிவத்தலமாதலின் பல அரிய பலன்களையும் பெற்று தருகின்றது ஏனென்றால் இவ்விடத்தில் தான் கயா தீர்த்தமாக, கயா தீர்த்தத்தின் பலன்களை தரவல்ல புனிதமான நதியாக பல்குனி நதி ஓடுகின்றது. பலரும் அறியாத அற்புதமான திருத்தலமிது!

ஸ்ரீ துர்வாச முனிவர் தவமிருந்து, தூர்வா கணபதி விரதமிருந்து ஜீவன்களுக்கு பல நல்வரன்களைப் பெற்று தந்த அதியற்புதமான சிவத்தலமாகும்.

எத்தனையோ குடும்பங்களில் முறையான திவசங்களையும், சிராத்தங்களையும் அமாவாசைத் தர்ப்பணங்களையும் சரியாகச் செய்யாமல் சந்ததிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முடம் ஆதல் (Spastic Children), மனவளர்ச்சி குன்றியிருத்தல் என்றவகையில் பல குடும்பங்களும் அவதிப்படுவது பிதுர் தோஷங்களினால்தான். இவற்றிற்கு நிச்சயமாகப் பரிகார முறைகள் உண்டு.

தூர்வா கணபதி விரதம் ஏற்று பூவாளூர் ஆலயத்திலுள்ள ஸ்ரீ ஸ்வேத ஸ்ரீ ஸ்தம்ப இரட்டைக் கணபதி மூர்த்திகளைத் தரிசித்து, அருகம் புல் சாற்றி, மோதகம் படைத்து ஏழைகளுக்கு மோதகத்தை தானமாகளித்து வந்தால் பிதுர் தோஷ நிவர்த்திக்கு ஸ்ரீ இரட்டைக் கணபதி அருள்பாலிக்கின்றார். இப்பல்குனி நதி வட இந்தியாவில் உள்ள கயாவின் பல்குனி நதியின் பிதுர்சக்திகளை தரவல்ல அற்புதமான நதி இது. இன்று பிள்ளையார்க்குரிய மாத சதுர்த்தியும், நாக சதுர்த்தியும் தூர்வா கணபதி விரதமும் ஒன்று சேர்வது இந்நாளின் மகத்துவத்தைப் பிரகாசமடையச் செய்கின்றது. மிகவும் அற்புதமான நாள், மேன்மை தரும். விரதங்களில் தூர்வா கணபதி விரதமும் ஒன்றாகும்.

தூர்வா கணபதி விரதம் அன்று தூர்வாஸுக்தம் என்ற மிக மிக எளிமையான வேத மந்திரங்களை ஜெபித்தல் சிறப்புடையதாகும். “வாயில் நுழையவில்லையே, படிக்க முடியவில்லையே” - என்று ஏங்காதீர்கள். பக்தி சிரத்தையுடன் உங்கள் தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்றபடி நன்றாக உரத்துச் சொல்லுங்கள். இதனையே வேத ஒலியாகக் கேட்டு ஆண்டவன் உங்களுக்குக் கருணை புரிவான்!

அபூர்வமான தூர்வா ஸுக்தம் என்ற மந்திரத்தை நன்கு உச்சரிக்க வேண்டிய முறைகளை பெரியோர்களிடம் கேட்டுத் துதித்தல் மேலும் சிறப்புடையதே! தூர்வா ஸுக்தத்தின் எளிமையான பொருள் என்னவென்றால ்“ஆயிரக் கணக்கான இறைப் படைப்புகளில் சிறப்பான ஒன்றாக விளங்குவதும் நூற்றுக் கணக்கான, வேர்களையும் இலைகளையும், காம்புகளையும் உடையதுமான அருகம்புல்லில் உறைகின்ற ஸ்ரீ தூர்வாதேவியே! நான் உன்னை வணங்குகின்ற பாக்யத்தைப் பெற்று ஆனந்தமடைகின்றேன். பிள்ளையாருக்கு மிகவும் ப்ரீதியான ஸ்ரீ தூர்வா தேவியே! எங்களைக் காப்பாற்றுவாயாக! எங்களுடைய தீய கனவுகளை நாசம் செய்து எங்களுடைய பாவங்களையும் போக்கி அருள்வாயாக! எவ்வாறு கணுக் கணுவாக, கிளை கிளையாக, அருகம்புல்லானது வளர்ச்சி பெறுகின்றதோ அதேபோன்று நாங்களும் நல்ல எண்ணங்களுடன், நல்ல வரங்களுடன் நல்வாழ்க்கையும் பெற்று எங்களுடைய ஆயிரக் கணக்கான சந்ததிகளை நன்முறையில் தழைக்கச் செய்வாயாக.”

வேதம் படிக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் இந்த தூர்வா ஸுக்தத்தை நன்கு படித்து தினமும் பிள்ளையாரைத் துதி செய்து வந்தால் வாக் சித்தி பெற்று உங்களுடைய சந்ததியினர் நன்முறையில் விருத்தியாவதற்கு ஸ்ரீ தூர்வா தேவி, விநாயகப் பெருமானின் திருவருளால் அருள் புரிகின்றாள். எனவே தூர்வா கணபதி விரத நாளை விட்டுவிடாது பூவாளூரிலுள்ள பல்குனி நதியில் நீராடி இரட்டைக் கணபதி மூர்த்திகளை இந்த தூர்வா ஸுக்தத்தை ஓதித் துதித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகம் படைத்து, ஏழைகளுக்கு மோதக தானம் செய்து, சிறிது நேரம் தியானம் செய்து அழகிய இத்திருத்தலத்தின் மகிமையை உணர்ந்து யாவர்க்கும் உணர்வித்து பலரையும் இதனை தரிசிக்கச் செய்து, அரிய இறைப்பணியைச் செய்வீர்களாக!

கேதார கௌரி விரதம் (20.10.1998)

கேதார கௌரி விரதமானது பல அரிய விளக்கங்களைத் தன்னுள் கொண்டு இல்லற பெண்களுக்கு அற்புதமான பலன்களைத் தர வல்லதாகும். கேதார்நாத்தில் பூமியின் அடியில் மறைந்த சிவ பெருமானின் தரிசனத்தை மீண்டும் பெறும் பொருட்டு அம்பிகையானவள் பல வகையான தவங்களை மேற்கொண்டும் ஸ்ரீ கேதார் நாதரின் தரிசனத்தைப் பெற முடியாது. திகைத்த பொழுது, பூலோகத்தில், தான தர்மங்களைச் செய்திடில்தான் தவம் பூர்த்தியாகி சிவ தரிசனம் கிட்டும் என்ற மகரிஷிகளின் வாக்கினால், பூலோகத்திற்கு வந்த கெளரி, 21 நாட்கள் தவமிருந்து, 21 விதமான தீபம், விளக்குகள், 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 பழங்கள், 21 மஞ்சள் கிழங்குகளை வைத்து பூஜை செய்து இறைவனை வணங்கி ஸ்ரீ கேதார் ஈஸ்வரனின் தரிசனத்தைப் பெற்றாள். கேதார விரத மஹிமைகளுள் இதுவும் ஒன்றாகும், யுகந்தோறும் இதன் மகாத்மியங்கள் பலவித இறை லீலைகளாக விரிகின்றன.

இவ்வாறு அம்பிகையே சர்வேஸ்வரனை வழிபடுகின்ற நாளாக ஸ்ரீ கேதார கௌரி விரதம் அமைவதால் இன்று அனைத்து பூஜைப் பொருட்களையும் 21 என்ற எண்ணிக்கையில் வைத்து ஸ்ரீ வரலட்சுமி விரதம் போல ஸ்ரீ கேதார கெளரிக்குத் திருமுகம் வரைந்தோ, திருமுகம் வைத்தோ வழிபாட்டிடலாம்.பொதுவாக கணவன் சீர் திருந்தவும், கணவனுடைய துர்குணங்கள் தீரவும் நல்ல தாம்பத்ய ஒற்றுமை விளங்கவும், சுமங்கலித்வம் கிட்டவும் அருள்வரம் தருகின்ற பூஜை இது!

கேதார் நாத்தில் உள்ள மந்தாகினி கங்கை நீர் கொண்டு வழிபடுதல் பலன்களை மேம்படுத்தும்.

தூர்வா ஸுக்தம்

ஸஹஸ்ர பரமா தேவீ சதமூலா சதாங்குரா  |
ஸர்வ(கு)ம் ஹரது மே பாபம் சர்வ துஸ்ஸ்ஸவப்ன நாசினீ  |
காண்டாத் காண்டாத் ப்ரரோஹந்தீ பருஷ: பருஷ: பரி |
ஏவா நோ தூர்வே ப்ரதனு ஸஹஸ்ரேண சதேன் ச |
யா சதேன ப்ரதனோஷி ஸஹஸ்ரேண விரோஹஸி |
தஸ்யாஸ்தே தேவீஷ்டகே விதேம ஹவிஷா வயம் |

ரசமணி மஹிமை/சித்தி

ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தால் புத்தி மழுங்கி விடும் என்பார்கள் பெரியோர்கள்! ஆனால் வள்ளலார் அருளியது போல் மனமடங்கி (மனம் அலை பாயாது) சும்மா இருப்பதே (பரமானந்த) சுகமாகும். உடலால் எக்காரியங்களைச் செய்தாலும் மனம் “சும்மா இருத்தலெனில்” வேறு எண்ணங்களில் “மனம் உழலாதிருத்தல்” என்று பொருளாம்.

கலியுக மனிதனும் ஏதேனும் நற்காரியத்தை எண்ணிக் கொண்டும், செய்து கொண்டும் இருந்தால் தான் அவன் புத்தி சுத்தமாய் இருப்பதோடு பல சித்திகளையும் பெற்றிடலாம். அருட்பெரும் சித்திகளால்தான் சிவத்தையும் காண முடியும். சித்திகள் என்றால் அற்புதம் (Miracles) செய்வது மட்டும் என்பது பொருள் அல்ல. சித்திகளிலும் லெளகீக சித்தி, ஆனந்த சித்தி, பரமானந்த சித்தி என்று விதவிதமான சித்திகள் உண்டு. இவற்றைப் பெறுவதற்கும் பலவிதமான வழிகளை சித்புருஷர்கள் அருளியுள்ளார்கள்.

உழைப்பால் உயர்ந்து சித்தி பெற்றவர்கள் உயர்ந்த பதவியைப் பெறுகின்றார்கள். விடாமுயற்சியால் மேல் ஓங்கி சித்தியடைந்தவர்கள் சிறந்த வாழ்வைப் பெறுகின்றார்கள். பெரும் முயற்சியால் நல்ல பிரயத்தனம் செய்து சித்தி அடைந்தவர்கள் சிந்தனை தெளிந்து சீர்மிகு நற்கதி தரும் குருவைப் பெறுகின்றார்கள். இத்தகைய உத்தம குருவைப் பெற்றவர்களோ “மக்கள் சேவையையே மகேசன் சேவையாகக்” கருதி தன் வாழ் நாளையே பிறர் நலனுக்காகச் செலவிடுகின்றனர். இதுவே மகரிஷிகளின், யோகிகளின் உத்தம நிலையாகும். இவ்வாறாக பல அருட்பெரும் சித்திகளின் நிறைவாய்த்தான் ஒரு ரிஷியின் நிலை கிட்டுகிறது,

எந்த ஒரு சாதாரண மனிதனும் இத்தகைய இறைப் பணிகளைப் புரிந்து மகரிஷிகளுக்குரிய தெய்வீகப் பெருநிலையை அடைந்திடலாம், சற்குருவின் கருணை கூடிடில்! இத்தகையோரே, என்றும் நிரந்தரமான பரம்பொருளாம் ஆதி சிவனின் பாதார விந்தத்தில் பற்று கொண்டு பரமனின் பெருமையை அகிலமெல்லாம் பரப்பி, எக்காலத்திலும் நிரந்தரமாய் இறைத் தூதராய் உலாவுகின்றனர்.

ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி

ஸ்ரீமார்கண்டேய மகரிஷியைப் பற்றி நாம் நன்கு அறிவோம். இள வயதிலேயே எம் பகவானை நேருக்கு நேர் தரிசிக்கும் பரமானந்தத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானின் திருக்கரங்களால் ஆயுள் விருத்தியைப் பெறுகின்ற அரும் பெரும் சச்சிதானந்தத்தையும் அனுபவித்தவர். ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி பெரும் தவம் பூண்டு, பல அரிய சித்திகளைப் பெற்று, மாமுனியாகப் பெரு வாழ்வு அடைய மூல காரணமே அவருடைய வைராக்கிய சித்தியேயாகும். இதனை அடைவதெனில் கோடானு கோடி யுகங்கள் தவம் பூண வேண்டும். இதனை இவர் எவ்வாறு பெற்றார்?

சித்தர்களுடைய கிரந்தங்களில் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியைப் பற்றி நாம் இதுவரையில் அறியாத பல விளக்கங்கள் காணப்படுகின்றன,

“உலகம் விசித்திரம் அதில் வாழ்க்கை , ரசமணி வித்தையே”, இதுவே ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி பெற்ற உபதேசம்.

ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியோ இதைப் பற்றி மேலும் அறிய விழைகின்றார்! இதற்கான தக்க விளக்கத்தை அறிய அவர் ஸ்ரீ அகஸ்திய மாமுனிவரை நாடிட அவரும் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷிக்கு 108 லிங்க வைராக்கிய சித்த லிங்க பூஜை முறைகளை அருள்கின்றார். இவ்வாறாக, ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி 108 இடங்களில் லிங்க பூஜைகளைச் சிறப்புடன் நிறைவேற்றி பெறற்கரிய இறை தரிசனங்களைப் பெற்றார். சிவபெருமானுடைய 64 மூர்த்தங்களையும் கண்ணாரக் கண்டு ஆனந்திக்கும் திருவருளைப் பெற்ற மஹரிஷிகளுள் ஸ்ரீ மார்க்கண்டேய மஹரிஷியும் ஒருவராம்.

ஸ்ரீ அகஸ்திய மாமுனிவரின் திருவாக்கின்படி ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி 108 லிங்க பூஜைகளில் அக்னி பூத மஹாலிங்கமான திருஅண்ணாமலை சுயம்பு மூர்த்தியைத் தரிசிப்பதற்காக அருணாசல க்ஷேத்திரத்தை அடைந்து தெய்வத் திருமலையை முறையாக கிரிவலம் வந்தார்!

சாதாரணமான மனிதன் முதல் எறும்பு, புழு போன்ற உயிரினங்கள் மட்டுமல்லாது அனைத்துத் தாவரங்களும் தேவாதி தேவர்களும், மகரிஷிகளும், யோகியர்களும், எவராயினும் சரி, ஸ்ரீஅருணாசலேஸ்வரரை தரிசிப்பதற்கு முன்னர் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்துதான் செல்வர். அருணாசல புராணம் இதைப்பற்றி மகத்தான விளக்கங்களைத் தருகின்றது. சித்தர்களின் கிரந்தங்களிலும் திருஅண்ணாமலையைப் பற்றி விசேஷமான விளக்கங்களில்லாத அத்யாயமே இல்லை எனலாம்.

ஏனென்றால் பிரபஞ்சத்தின் Spiritual Head Office திருஅண்ணாமலைதானே. இன்றைக்கும் திருஅண்ணாமலையின் திருமேனியிலுள்ள ஒவ்வொரு சிறு மண் துவாரத்தின் உள்ளே கோடானு கோடி லோகங்கள் காணக் கிடைக்கின்றன.

பலகோடி யுகங்களாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தார் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி. தற்போது சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம் காணப்படுகின்ற இடத்தில், அபய மண்டபம் அருகே பர்ணசாலை அமைத்துத் தவம் பூண்டு அவர் ஜோதி தரிசனம் பெறுகையில் தான் “ரசமணி மூலிகையின் வைராக்ய சித்தி”  அவருக்கு உபதேசமாகக் கிட்டுகின்றது. ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி தவமிருந்த இரண்டு மண்டலங்கள் தான் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகும்.

ஸ்ரீமார்கண்டேய மகரிஷி, ஸ்ரீ அகஸ்திய மாமுனிவரின் அருள் உரையின்படி தட்சிணாயனத்தில் பகுதான்ய வருஷத்தில் புரட்டாசி மாதத்தில் வர்ஷ ருதுக் காலத்தில் அதுவும் ஷடசீதி புண்ய காலத்தில் இந்த தவத்தைத் தொடர்ந்து இரண்டு மண்டலங்கள் கடைபிடித்து சரத்ருது காலத்தில் தனுர் மாத பூஜைக்கு முன்னர் நன்முறையில் இறையருளால் அதனைப் பரிபூர்ணமடையச் செய்தார். இதன் பலனாக அவருக்கு கிட்டியதே “ரசமணி வைராக்ய சித்தியாகும்”.

ரசமணியின் மகாத்மியம்

ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி போன்றவர்கள் ரசமணி வித்தையை அறியத்தான் வேண்டுமா ? கலியுகத்தில் ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் ரசமணி வித்தையை அறிந்து அதனால் கிட்டும் சித்திகளினால் தன்னுடைய வாழ்க்கை வசதிகளையும், இகபர சுகங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் அவனுக்கு ஏற்படும். ஆனால் மகரிஷிகள் அப்படி அல்லவே!

இன்றைக்கும் சித்புருஷர்களும், மகரிஷிகளும் ஆங்காங்கே பூமியின் கீழ் பூஜை செய்து பிரதிஷ்டை வைத்துள்ள ரசமணிக் கோளங்களின் தெய்வீக சக்தியினால்தான் கலியுகத்தில் தர்ம தேவதை ஒரு காலில் நின்றாலும் நாம் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஸ்ரீமார்க்கண்டேயர் பதித்துள்ள 64 ரசமணிக் கோளங்கள் இன்றளவும் என்றுமே எக்காலத்துமே ஜீவன்களுக்குப் பயன்படுகின்றனவே! ஆனால் இதனை உணராது பூமாதேவிக்கு நாம் இழைக்கும் கொடுமைகள் எத்தனை எத்தனை? நவீன விஞ்ஞானமயம் என்ற பெயரில் எங்கும் நாற்றம் அடிக்கின்ற சாக்கடைகள், ஆங்காங்கே பள்ளங்களைத் தோண்டிக் கொண்டு, மரங்களை வீழ்த்தி, பூமாதேவிக்குக் கஷ்டங்களைத் தானே உருவாக்குகின்றோம், பொறுமையின் சிகரமாக விளங்குகின்ற பூமாதேவியின் பொறுமைக்கு பிரபஞ்சத்தில் ஈடு, இணை எதுவுமே கிடையாது. மனிதர்கள் இழைக்கின்ற அத்தனை அநீதிகளையும், கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு மிகவும் பொறுமைசாலியாக விளங்குகின்றாள் பூமாதேவி.

ஆக்கப் பூர்வமாக வாழ்வதற்காகவும் நம்முடைய கர்ம வினைகளைக் கழித்து, மானிடப் பிறவிகளையே அறுத்து தெய்வத்தை அடைவதற்காகவும் எடுத்த இந்த மானிடப் பிறவியில் விஞ்ஞானத்தின் பெயரால் ஏவுகணைகள், வெடி மருந்துகள், அணுகுண்டுகள், கன்னி வெடிகள், ராணுவ ஆயுதங்கள் என இவற்றைப் பயன்படுத்தி பூமாதேவிக்கு நாம் இழைக்கின்ற கொடுமைகள் எத்தனை ! எத்தனை!

பல கோடி வருடங்களாகத் தவமிருந்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ள மா, பலா, அரசு, ஆல், வேம்பு போன்ற எத்தனையோ லட்சம் மரங்களை வீழ்த்தி அங்கு ஆழமாகக் குழிகளைத் தோண்டி தேவையற்ற இரசாயனத் தொழிற் சாலைகளையும், அடுக்கு மாடிக் கட்டிடங்களையும், பங்களாக்களையும், போதைமருந்து, மதுவகைகளுக்கான உல்லாச ஹோட்டல்களையும் உண்டாக்கி பூமியின் இயற்கை வளத்திற்கு எத்தகைய கேடுகளைப் புரிந்து கொண்டிருக்கிறது இந்த மனித சமுதாயம், அதுவும் விஞ்ஞான மயமாக்குதல் என்ற பெயரில்!

பாரத நாடுதான் உலகிற்கே பரிகாரந் தரும் நாடு! உண்மையே! ஆனால் இங்கும் அதர்மச் செயல்கள்தாம் பெருகுகின்றனவே! காரணமென்ன? பூஜைகள், தானம், தவம், யோகம் குறைந்து வருவதால்தான்!

விஞ்ஞானம் என்பது இறைவனால் படைக்கப் பெற்ற ஒன்றே. அதனை மனித வாழ்விற்கு ஏற்ற வகையில் இயற்கை வளங்களை பாதிக்காது இயற்கை நியதிகளுக்குப் புறம்பாகச் செல்லாமல் அதனை உயிரினங்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது. எனவேதான் இத்தகைய விஞ்ஞான சேதங்களுக்குப் பரிகாரமாக ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷியானவர் ரசமணி வித்தைகளை அறிந்து தாம் யோக சக்தியால் விளைவித்த ரசமணிக் கோளங்களை ஆங்காங்கே பூலோகத்தில் பல பகுதிகளிலும் பூமியின் ஆழ்பகுதியில் பிரதிஷ்டை செய்திருக்கின்றார். இதனால் தான் எரிமலை, அணுகுண்டு வெடிப்பு, ஆழ்கடல் சோதனை, வெடி குண்டுகள் சோதனை என்று பலவிதமான விஞ்ஞான சேதாரங்களை விளைவித்து கொண்டிருந்தாலும் பூலோக மக்கள் ஓரளவிற்கேனும் பூமாதேவியின் அருளால், பொறுமையால் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டின் தற்காப்பிற்காகப் பலவிதமான விஞ்ஞானமயமான ராணுவ சோதனைகளை நடத்திடினும் அதற்குரிய தெய்வீகப் பரிகாரங்களையும் செய்தால்தான் நாடு ஆன்மீக வளத்துடன் விளங்கும். பூலோகத்திற்கே தெய்வீகத்தில் வழிகாட்டியாக விளங்குகின்ற Spirtual treasure of the universe என்று சொல்லக் கூடிய அளவில் பரிமளிக்கின்ற நம் பாரத நாட்டில் தான் அனைத்து நாடுகளுடைய விஞ்ஞானமய ராணுவ சோதனைகளால் பூமாதேவிக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்குப் பரிகாரங்களும், பிராயசித்தங்களும் நிறைந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவபுரம் இத்தகைய திருத்தலங்களுள் ஒன்றாகும்.

தஞ்சை சிவபுரம் திருத்தலம்

அக்காலத்தில் நாட்டின் தற்காப்பிற்காக அரசர்கள் பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், போர் முடிந்தவுடன் பிராயச்சித்தமாக, ஆலயங்களைக் கட்டிப் பூஜைகள், தான தர்மங்கள் பலவற்றைச் செய்து அதற்குரிய பரிகாரங்களைத் தேடினார்கள். இன்னொரு நாட்டை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் படையெடுப்பை நடத்தியிருந்தால் அதற்குரிய தெய்வீகப் பரிகாரங்கள் பலன் அளிப்பதில்லை, ஆனால் கொடூரமான அரசர்கள் ஆள்கின்ற நாட்டை மக்களின் நன்மைக்காக அந்த கொடூரத்தை விரட்டுவதற்காக இன்னோர் நாட்டைக் கைப்பற்றும் பொழுது அது ஒரு நல்ல செயலாக மாறி அந்த போர் முறைகளில் ஏற்படுகின்ற சேதங்களுக்குப் பொறுப்பாக அரசர்களே பலவித தான தர்மங்கள், ஹோம வழிபாடுகளைச் செய்தும் பிராயச்சித்தம் தேடினார்கள். இதை உரைத்திட பக்திமிகு ராஜ குருவும் இருந்தார்.

புரட்டாசி மாத திருஅண்ணாமலை கிரிவலம்

பகுதான்ய வருடத்தில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இரண்டு மண்டலங்களில் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி தவம் புரிந்த காலம் ஆதலின் இம் மூன்று மாதங்களிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தால் பலவிதமான ரசமணி மூலிகைகளின் அபூர்வமான சக்தியைப் பெற்றிடலாம்.

ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி திருஅண்ணாமலையில் புரிந்த தவமானது வேறு தலங்களில் தாம் கடைபிடித்த தபோ முறைகளை விட மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. ஏனெனில் எத்தனையோ தலங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து பல கோடி ஆண்டுகளாக இருந்த இடத்தை விட்டு அசையாது, நிர்சலன யோகம் பூண்டு பாம்புப் புற்றுகள் தோன்றி உருவத்தை மறைக்கும் அளவிற்கு அதனை உணரா வண் ணம் சரீரத்தை மறந்த யோகத்தைப் பூண்டவர், திரு அண்ணாமலையிலோ எப்போதும் கிரிவலம் புரிகின்ற அருந்தவத்தை பெருந் தபஸாக மேற்கொண்டார். இதுவே திரு அண்ணாமலை திருத்தலத்தின் விசேஷ மகிமைகளில் ஒன்றாகும். இங்கு கிரிவலம் வருவது மிகச் சிறந்த யோகமாகும், எப்போதும் கிரிவலப் பாதையில் நடந்து கொண்டு இருப்பது ஓர் அற்புதமான தியான முறை, திருஅண்ணாமலையாரை தரிசித்துக் கொண்டு மலையை நோக்கியவாறு நடந்து வருகின்ற ஒவ்வொரு அடியும் ஞான யோகமாகும். எனவே திருஅண்ணாமலை கிரிவலம் தியான, யோக, ஞானமார்க பலன்களைத் தருகின்றது.

ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி தம்முடைய கிரிவல யோகத்தில் குறித்த சில இடங்களில் ருத்ர ஊற்றுகளை யோக முறைப்படி திறந்து வைத்தார், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றி ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்களும், ஊற்றுகளும் இருந்தன. இவை இன்றும் மறைபொருளாக விளங்குகின்றன. வருடத்தின் சில நாட்களில் குறிப்பாக பெளர்ணமி தினங்களில் குறித்த யோக, நட்சத்திரத்தில் பெரும்பாலான தீர்த்தங்களும் ஊற்றுகளும் இன்றும் தோன்றி நமக்கு அருள் பாலிக்கின்றன. பக்தி பூர்வமாக குருவருளுடன் கிரிவலம் வருபவர்களுக்கு இவை கண்களுக்குத் தென்படத்தான் செய்கின்றன.

ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி ஏற்படுத்திய ருத்ர ஊற்றுகளின் தெய்வீக நீரோட்டமானது பகுதான்ய வருடம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பௌர்ணமி நிலா ஒளியில் வளர்பிறையில் ஆக்கம் பெருகின்றன. அதாவது பெளர்ணமி திதியில் இந்த ஊற்றுகளில் நீர்ப்பெருக்கு தோன்றி பெளர்ணமி முதல் அமாவாசை வரை தினந்தோறும் நீரோட்டம் பெருகிக் கொண்டே வரும். பிறகு அமாவாசையில் இந்த தெய்வீக ஊற்றுகள் மறைந்துவிடும்.

ரசமணியைக் கட்டுவதற்குப் பலவிதமான மூலிகைகள் தேவைப்படுகின்றன, இவைகளுக்குப் பொதுவாக ரசமணி மூலிகைகள் என்று பெயர். இவை தாமாக விளைபவை! எவராலும் உருவாக்கப் படவில்லை . மேலும் இது அனைத்து இடங்களிலும் எப்போதும் காணப்படுவதில்லை. திருஅண்ணாமலை, சதுரகிரி மலை, கொல்லிமலை, பர்வதமலை போன்ற இடங்களில் பெளர்ணமி தினங்களில் குறித்த யோகங்களில் மட்டுமே இவை கண்களுக்குத் தென்படும். இத்தகைய ரசமணி மூலிகைகளின் சில முக்கியமானவை மட்டும் பகுதான்ய வருட புரட்டாசி மாதத்தில் ருத்ர ஊற்றுக்களின் அருகே தோன்றுகின்றன. இவை ருத்ர ஊற்றின் நீரோட்டத்தின் மகிமையால் 15 தினங்களுக்கு வளர்ந்து கொண்டே வரும். அன்று இதனைக் கண்டு வழிபடுவோரும் உண்டு. ஆனால் இதற்கு தரிசன சக்தியே மிகுந்திருப்பதால் இந்த மூலிகைகளை மஹரிஷிகள் கூட காரண காரியமின்றித் தொடுவதில்லை! தேவாதி தேவர்களாக இருந்தால் கூட இந்த மூலிகைகளை தரிசனம் செய்து விட்டுச் சென்று விடுவார்களே தவிர இறை ஆணையின்றி அதனைப் பறிக்க முற்பட மாட்டார்கள்.

சந்திரகலை (இடகலை) எனப்படும் இடது சுவாசத்தில் வாசியை ஓட்டி மத்திம அக்னி பூதத்தில் சுவாச பந்தனத்தைக் கூடு கட்டிக் குறித்த ஹோரையில் ருத்ர சமாதி கொண்டு இம்மணிக்குக் காப்பு கட்டுவார்கள். இவையெல்லாம் சித்தர்களின் பரிபாஷைகள்! நாடி கிரந்தங்களில் காணப்படுபவை. காப்பு கட்டிய பின் சுரைக் குழாய்களில்தான் இத்தகைய மூலிகைகளை எடுத்து முறையாக ரசம் கட்ட வேண்டும். இதுவே சித்புருஷர்கள் அருளியுள்ள முறையில் ரசமணி கட்டும் பாங்காகும், இதனைக் கட்டுக் கோப்பான நியதிகளுடன் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி கடைபிடித்து அரும்பெரும் ரசமணிகளை உருவாக்கினர்.

அதாவது முதல் மாதத்தில் (புரட்டாசி) ரசமணி மூலிகைகளின் தரிசனம், இரண்டாவது மாதத்தில் (ஐப்பசி) ரசமணி கட்டத் தொடங்குதல், மூன்றாவது மாதத்தில் (கார்த்திகை) ரசமணிகளைப் பூர்த்தி செய்தல். இவையே இரண்டு மண்டல பூஜையாக புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நிகழ்கின்றன, இதனை இன்றும் கடைபிடிக்கின்ற யோகியர்களும், மகரிஷிகளும் உண்டு.

ஏனைய ரசமணிகளையெல்லாம் துருத்தியை ஊதிக் கட்டுவார்கள், ஆனால் காலப்போக்கில் இவை நிறம் மாறி பொடிப் பொடியாக உதிர்ந்துவிடும். திருஅண்ணாமலையில் கட்டப்படுகின்ற உத்தம ரசமணிகள் யுக யுகமாக, கோடானு கோடி வருடங்களுக்கு நிலைத்து நிற்கும். இவ்வாறு திருஅண்ணாமலையில் 64 வகையான ரசமணிகளைக் கட்டியவரே ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி ஆவார், இவை உத்தம சித்திகளையும், ஆன்மீக வல்லமைகளையும் தர வல்லதாகும். ஆனால் கலியுகத்தில் பாக்யம் உள்ளோருக்கே, ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை கொண்டோருக்கே இந்த ரசமணிகளின் தரிசனமோ அல்லது ருத்ர ஊற்று தரிசனமோ கிட்டும்.
தெய்வீக நியதியாக புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செய்யப்படுகின்ற அருணாசல பெளர்ணமி கிரிவலத்தின் மகிமையால் கிரிவல அடியார்கள் இத்தகைய ரசமணி மூலிகைகளின் ருத்ர ரசமணி சக்தியைப்  பெறுகின்றார்கள். திருஅண்ணாமலையில் இறைப் பெருங் கருணையால் கட்டப்படுகின்ற ரசமணிகள் யாவும் கட்டுக் குலையாத ருத்ர பூர்வமான ரசமணிகளைச் சார்ந்தவைகள் ஆதலாலும், மேலும் ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி போன்ற மகரிஷிகளின், யோகியர்களின் தெய்வீகத் திருக்கரங்கள் பட்டமையாலும் இவற்றின் தெய்வீகத் தன்மை பல்கிப் பெருகின்றன.

64 ரசமணிகள் செய்து முடித்தவுடன் ஸ்ரீ அண்ணாமலையாரே தரிசனம் தந்து ஸ்ரீ மார்கண்டேயருக்கு அருளுபதேசத் தந்தார், “மார்கண்டேயா! எவரும் பெறுதற்கரிய ருத்ரபாவ ரசமணி வைராக்ய சித்தியைப் பெற்று இருக்கின்றாய், இது மட்டுமல்லாது இரண்டு மண்டலங்களிலேயே பிரபஞ்சத்திலேயே எவருக்கும் கிட்டாத 64 விதமான ரசமணிகளைக் கட்டித் தந்துள்ளாய். எதற்காக? பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக! இவை எம்முடைய 64 விதமான நடனக் கோல ரகசியங்களையும் 64 மூர்த்தங்களின் தெய்வாவதார சக்தியம்சங்களையும் கொண்டதாக இருக்கும். இவற்றை இப்பிரபஞ்சத்தின் பல இடங்களிலும், பூமியின் அடியில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக!”

ருத்ர ஊற்றுகளின் தலைமைப் பீடமாக விளங்குகின்ற இத்திருஅண்ணாமலை க்ஷேத்திரத்தில் ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி அஷ்ட திக்கு பகுதிகளிலும் ரசமணி கோளங்களின் தெய்வீக சக்தியை பதித்துள்ளார். இம்மூன்று மாதங்களில் பகுதான்ய ஆண்டில் தொடர்ந்து கிரிவலம் வருகின்ற அடியார்களுக்கு “வாயு பந்தன முறையால்” ரசமணிகளின் சக்திகளை நிலாக் கதிர்களின் மூலமாகப் பெற்றுத் தருபவரே ஸ்ரீ மார்கண்டேய மஹரிஷி ! ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ரசமணி ரகசியங்களை அளித்தவரும் கூட!

எம தர்ப்பணம்

எமதர்ப்பணம் என்றால் எமனுக்குரிய தர்ப்பண பூஜையைச் செய்தல் என்று பொருள். எம் பகவானுக்கும் தர்ப்பணமுண்டா? வருடத்திற்கு ஒருமுறை வருகின்ற எம் தர்ப்பண தினத்தில் எளிமையான பூஜைகளைச் செய்யத் தவறாதீர்கள். எமதர்ப்பணம் என்பது ஜாதி, இன, குல பேதமின்றி யாவரும் செய்ய வேண்டிய மிகவும் சுலபமான வழிபாடு ஆகும். மரண பயத்தை வென்றால் தான், நாம் ஆனந்தமயமான வாழ்வை மட்டுமல்லாது உத்தம தெய்வீக நிலையையும் பெற முடியும்.

எம தர்ப்பணம் என்றால் எமனுக்குரிய தர்ப்பணம்தானே! தர்ப்பணம் என்றால் இறந்தவர்களுக்குச் செய்வதுதானே, எமனுக்கு இறப்பு ஏது?

தர்ப்பணம் என்றால் இறந்தவர்கட்கு மட்டும் செய்யப்படுகின்ற வழிபாடு மட்டுமல்ல. தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வித்தல் என்று பொருள், இறப்பிற்குப் பின் அமைவது பித்ருக்கள் நிலை, ஆனால் பித்ருக்களின் நிலையே மிகவும் உயர்ந்த தெய்வீக நிலை அல்லவா? அந்த நிலையில் பசி, பிணி, உறக்கம், நோய் நொடிகள் எதுவும் கிடையாது. உத்தம இறை நிலையில் வாழுகின்ற பித்ருக்கள் இறைவனிடம் நேரிடையாக ஐக்யம் அடைந்திடலாம் அல்லவா ? பிறகு ஏன் அவர்கள் “பித்ருக்கள்” என்கிற இறைப் பெருநிலை ஜீவன்களாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?

இதைப்பற்றிய விளக்கங்களை அறிய வேண்டுமானால், இறைவனிடம் ஐக்கியமாதல், முக்திபெறுதல், மோட்சம் அடைதல் போன்றவற்றை எல்லாம் நாம் மீண்டும் விளக்க வேண்டியிருக்கும், இறைவனுடன் ஐக்கியமாதல், பரம்பொருளின் ஜோதியோடு ஜோதியாகக் கலப்பது என்ற பொருளாக இருந்தாலும் கூட, தாம் ஜோதியாய் மாறுகின்ற நிலையைப் பலவிதமான இறைப் பணிகளின் மூலமாகத்தான் பெற முடியும் அல்லவா? எனவே, தாம் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கும் அளிப்பதற்காக அத்தகைய உத்தம இறைச்செல்வர்கள் இறைவனுடைய அருளாணையாக, பூமியில் மீண்டும் பிறப்பெடுத்து மகான்களாகவும் யோகிகளாகவும் நம்மிடையே அவதரிக்கின்றார்கள்.

இதுவே சற்குருமார்களின், மஹான்களின், யோகியரின் பிறப்பு ரகசியம். எனவே, இறைவனுடன் ஐக்கியமாதல் என்றால், இறைவனுடைய விருப்பப்படியெல்லாம் பிறப்புகள் எடுத்துப் பிறரும் அத்தகைய உயர்நிலையை அடையும்படி, முக்தியை அடையும்படி, மோட்சத்தை அடையும்படி நல்வழி காட்ட வேண்டும். இதுவே சற்குருமார்களின் “தோற்ற வரலாறு” ஆகும்.

இவ்வாறு பித்ருக்கள் தம்முடைய பித்ருதேவ வாழ்க்கை நிலையில் இருக்கும் போது, அவர்கள் தமக்குரிய பூலோக தெய்வீக சக்தியை புண்ய அர்க்ய நீர் மூலமாகத்தான் பெறுகின்றார்கள். எனவேதான் நீர்த் தாரையாகத் தர்ப்பணம் உண்மையில் அவர்கட்கு அத்தகைய தெய்வீக சக்தியைப் பெற்றாக வேண்டும் என்றில்லாவிடினும் தம்முடைய கோடானு கோடி சந்ததியினரை நல்வழியில் ஊக்குவிக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு நிறைய தபோ பலன்கள் தேவைப்படுகின்றன அல்லவா? அவர்கள் எப்போதும், 24 மணி நேரமும் தம்முடைய தேவ நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் பல வகையான பூஜைகளையும் மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் பூலோகத்தில் கிட்டுகின்ற தெய்வீக சக்திக்கு மிகுந்த மகத்துவம் உண்டு. அதனால்தான் இங்குள்ள ஆலயங்களிலும் தீர்த்தங்களிலும் புகலிடம் தேடி கோடானு கோடி பித்ருக்களும் தேவர்களும் ஓடோடி வருகின்றார்கள்.

இவ்வகையில் தர்ப்பண பூஜை மூலம் நம்முடைய பித்ருக்களை நினைவு கூர்வது மட்டுமல்லாமல், அவர்களுடைய பித்ரு சக்தியை நாம் பெறுவதற்குத் தர்ப்பண பூஜை ஒரு மூல கருவியாகவும் அமைகின்றது. நீர்த் தாரை (தர்ப்பணம்) அளிப்பது மூலம் நம்முடைய பிரார்த்தனைகள் அவர்களை அடைகின்றன. அந்த நீர்த்தாரையைப் பெற்றுக் கொண்டு அதற்குரிய பலாபலன்களையும் அவர்கள் நமக்கு அளிக்கின்றார்கள், எனவே, பித்ருக்களுக்கும், ஜீவன்களுக்கும் இடையே உள்ள ஜீவ பக்தி நேயமே தர்ப்பணம் என்பதாகும். இது நம்மையும் அறியாமல் தூக்கத்தில் நாம் ஆஸ்டரல் பயணம் செய்வதைப் போல் நம்முடைய சூட்சும சரீரத்தில் நடைபெறுகின்ற ஒரு திருவிளையாடலே! எப்போது தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு, தர்ப்பணத்தை அளிப்பதற்கு நாம் அமர்கின்றோமே, அதுவே நிச்சயமாகப் பித்ருக்களின் இறைப்பெருங் கருணையால்தான்!

நவகிரஹாதித் தர்ப்பண பூஜை

காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேலைகளிலும் செய்யப்படுகின்ற சந்தியா வந்தன பூஜைகளில் நவக்ரஹத் தர்ப்பணம் என்ற எளிய மந்திரங்கள் உண்டு. ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிருஹஸ்பதிம் தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனிச்சரம் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி, கிருஷ்ணம் தர்ப்பயாமி, எமம் தர்ப்பயாமி என்று நவக்ரஹ மூர்த்திகளுக்கு மட்டுமல்லாது கிருஷ்ண பகவானுக்கும் எமதேவர்க்கும், தேவ மூர்த்திகளுக்கும் கூடத் தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.

தம்முடைய நித்திய வழிபாடுகளில் தினந்தோறும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு. ஆனால் இது நாளடைவில் தேய்ந்து போய் மாதாமாதம் அமாவாசை தோறும் அளிக்கும் தர்ப்பண பூஜையாக மாறிவிட்டது. சந்தியா வந்தனத்தில் உள்ளத் தர்ப்பண பூஜைக்கும், அமாவாசைத் தர்ப்பண பூஜைக்கும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் உண்டு. பலன்களும் மாறுபடுகின்றன.

சந்தியாவந்தன மந்திரங்கள் பூணூலை அணிந்துகொண்ட அனைவருக்குமே உரித்தானவை. இதில் எவ்வித வேறுபாடும் கிடையாது. பூணூலை அணிந்து கொண்டால் தான் இந்த நித்திய சந்திய வந்தனக் கர்மத்தைச் செய்தல் வேண்டும். யாவரும் பூணூலை அணியலாம். பொதுவாக, ஒருமுறை பூணூலை அணிந்து கொண்டீர்களேயானால் வாழ்நாள் முழுதும் அதை அணிவதுதான் சிறப்புடையது என்பதை நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். பூணூல் அணிவதும், உங்களுடைய பூஜையின் பலாபலன்களை அதிகரிக்கச் செய்கின்றன. தேவைப்படும்போது மாட்டிக் கொள்ளுதல், கழற்றி வைப்பது என்பதெல்லாம் ஏற்கக் கூடியது அல்ல. எப்போது ஒரு இறைவழிபாட்டை மேற்கொள்கின்றோமோ அதற்குரிய நியதிகளை முழுமையாகக் கடைபிடித்தால் தான் அதனுடைய பரிபூரணமான பலன்களைப் பெறமுடியும்.

ஆலயத்துக்கு நீராடிச் செல்ல வேண்டும், நெற்றிக்குத் திருமண், விபூதி இட்டுச் செல்ல வேண்டும், கைகளை வீசிச் செல்லக் கூடாது போன்ற பல நியதிகளைக் கடைபிடித்தால்தான் ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாகப் பெறமுடியும்.

சந்தியா வந்தன வழிபாட்டு முறைகளுக்குரித்தான பூணூல் அணிதல், மரப்பலகையில் அமர்தல், நெற்றிக்குத் திருமண், விபூதி, சந்தனம், குங்குமம் என அவரவர் குடும்ப தர்மத்திற்கு ஏற்ப இடுதல் போன்ற நியதிகளைக் கடைப்பிடித்தால்தான் மனம் ஒருமைப்படும். உங்களில் எவரேனும் இந்த நித்தியத் தர்ப்பண மந்திரங்களைச் சொல்ல விரும்பினால் நிச்சயமாக இதனைச் செய்திடலாம். இதில் எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

எமத் தர்ப்பணத்திற்கான விளக்கத்தில் தொடங்கினோமல்லவா?

திருப்பைஞ்ஞீலி திருச்சி

நம்முடைய புராணங்களைப் படித்துப் பார்த்தோமேயானால் பல இடங்களில் எமதேவருடைய தவறுகளுக்காக அவர் பலவிதமான பிராயச்சித்தங்களைப் பெற்றார் என்று நாம் அறிகின்றோம். மார்க்கண்டேய படலத்தில், இறைவனே முன்வந்து மார்க்கண்டேயனை மிருத்யு தோஷத்தில் இருந்து காப்பாற்றினார் அன்றோ! சிவபெருமானிடம் தம் தண்டத்தை இழந்து வீழ்ச்சியுற்று அப்போது எமதேவருக்கு வாயுபந்தனம் ஏற்பட்டு மூர்ச்சையானார். ஒரு வினாடி நேரங்கூட எமதேவர் தம் இறைப்பணியை விட்டு விட்டால் பிரபஞ்சமே ஸ்தம்பித்து விடுமே.

யமதர்மதேவர் வீழ்ந்து செயலிழந்து விட்டார் என்றதுமே ராட்சசர்களும், கொடியவர்களும் அசுரர்களும் தலை தூக்கலாயினர். பிறப்பு, மரணவிகிதம் ஒவ்வொரு நொடியும் சீராக இருந்தால்தானே பிரபஞ்ச ஜீவன்களின் வாழ்வானது பூமிக்குப் பெரும் பாரமின்றி நடைபெறும்,

எம தர்ப்பண முறை : மேற்கண்டது போல ஸ்ரீ கிருஷ்ணன், விஷ்ணுவிற்கு தேவ தர்ப்பண பூஜைகள் செய்வோர் உண்டல்லவா ? தேவாதி தேவர்களும் எம்பகவான் மீண்டு வரும் பொருட்டு, எம தர்ப்பணம், தேவ தர்ப்பணம், தர்மராஜ தர்ப்பணம், அந்தக பூஜை, தத்ன தர்ப்பணம், தத்ன ஹோமம் போன்ற அரிய பூஜைகளைச் செய்து சர்வேஸ்வரனிடம் எம் பகவானை மீட்டருள வேண்டினர்.

இதன் பிறகுதான் ஸ்ரீ எம தர்மராஜ பகவான் திருக்கடவூர், ஸ்ரீவாஞ்சியம், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயம், திருச்சி திருப்பைஞ்ஞிலி போன்ற இடங்களில் பூஜித்துத் தாம் இழந்த ஆயுள், தெய்வ சக்தி, பதவி, தண்டம், பாசக் கயிறு போன்றவற்றைப் பெற்றார்.

எனவே தேவாதி தேவ மூர்த்திகள் எம தர்ப்பணம் நிகழ்த்திய நாளில் மேற்கண்ட தலங்களில் நாமும் எமதர்ப்பண பூஜையை, தர்ப்பணத்தைச் செய்து, மிருத்யு தோஷங்கள், மரண பயம், கடுமையான பிணி தோஷங்களை நீங்(க்)கும் “ஔதும்பர” சக்தியைப் பெறுவோமாக. ஓம் யமம் தர்ப்பயாமி, ஓம் தர்மராஜம் தர்ப்பயாமி, ஓம் தத்னம் தர்ப்பயாமி, ஓம் பரமேஷ்டினம் தர்ப்பயாமி, ஒம் வைவஸ்வதம் தர்ப்பயாமி என்ற மந்திரங்களை, தனித் தனியே ஓதி இன்று கங்கை/காவேரி போன்ற புண்ய தீர்த்தத்தால் இரு கை விரல்களின் வழியே நீரை விட்டுத் தர்ப்பணம் செய்யவேண்டும்,

திருச்சி அருகே திருப்பைஞ்ஞலியில் ஸ்ரீ எம பகவான் தம் குடும்ப பரிவார சகிதம் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றார். இங்கு அனைத்து நாட்களிலும் குறிப்பாக எம தர்ப்பண நாளில் சந்தியா வந்தன தேவதர்ப்பண மந்திரங்களைப் போல, எமதர்ப்பணம் அளித்துத் துதித்து தர்ப்பண பூஜை செய்திட கடுமையான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். எள் சாத அன்னதானம் சிறப்பானது.

பண்டிகைகளின் மகாத்மியம்

உங்கள் நெஞ்சைத் தொட்டு உங்களுடைய பாவ, புண்ணியங்களை ஆத்ம விசாரஞ் செய்திடுக! நீங்கள் செய்த நல்ல, தீயனவற்றை நீங்களே நன்கு உணர்ந்தால்தான் தியானம் கை கூடும். பண்டிகைகளே ஆத்ம விசாரத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. நம்முடைய பண்டிகைகள் அனைத்துமே நமக்குப் பலவிதமான நல்ல வரங்களையும், அனுகிரஹங்களையும் பெற்றுத் தந்து நம்முடைய இல்லற வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பங்களைக் களைவதுடன் அவ்வப்போது நமக்குத் தெய்வீகத்தில் ஒரு புத்துணர்ச்சியைத் தருவதற்காகவே அமைந்திருக்கின்றன. பிறக்கின்ற பொழுது நூற்றுக்கு நூறு சதவிகிதத்துடனான தெய்வீகத் தன்மையுடன் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள், வளர்ப்பு முறைகள், கல்வி காரணமாகவும் தன்னுடைய தெய்வீகத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்து தன்னுடைய வாழ்வின் இறுதியில்தான் மீண்டும் அத்தகைய தெய்வீகத் தன்மையைப் பெறுவதற்காகப் பெரும் முயற்சியைச் செய்கின்றான்!

ஆனால் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையைப் பார்க்கின்ற பொழுது, இளம் பிராயத்திலிருந்தே தெய்வீகத் தன்மையை ஊட்டி வளர்க்கும்படியான கல்வி அமைப்புகளும், வாழ்க்கை முறைகளும், தினசரி அனுஷ்டானங்களும், திருமணம், சீமந்தம், பூப்பு நீராட்டு போன்ற நல்லொழுக்க வரந்தரும் வைபவங்களும் அமைந்திருக்கின்றன என்பது நன்கு புலனாகும். எனவே நம் பண்பாட்டில் கல்வி, இல்லற வாழ்க்கை, அலுவலகப் பணி, இவற்றிற்கு இடையே தெய்வ பக்தியை நிலை நிறுத்துவதற்கான நித்ய வழிபாடுகளும், வாராந்திர, மாத, வருட பூஜைகளும் நிறைய இடம் பெற்று வந்துள்ளன. தற்போதைய நவீன, கலியுக வாழ்க்கை முறைகளின் நிர்ப்பந்தத்தினால் இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம். இவற்றை முறையாகக் கடைபிடித்து நல்வாழ்க்கையை மட்டும் அன்றி மிகச் சிறந்த தெய்வீக அனுபவங்களையும் பெற்று வருவோர் இன்றும் பலர் உண்டு. இதற்காகத் தான் வாழ்க்கையில் நாம் ஒரு சற்குருவைப் பெறுவோமேயானால் அவருடைய தெய்வத் திருவாக்கினால் இத்தகைய அற்புதமான வழிபாடுகளையும் மீண்டும் பிறழாது நம்முடைய வாழ்க்கையில் கடைபிடித்து பெறற்கரிய தெய்வீக வாழ்க்கையை நாம் பெறலாம் அல்லவா!

ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் திருஅண்ணாமலை கிரிவல மகிமையைப் பற்றி சித்புருஷர்களின் அரிய விளக்கங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன அல்லவா! அருணாசல மஹிமையைப் பற்றித் திறம்படக் கூறக் காரணம் என்னவெனில், நாம் இழந்துவிட்ட பல தெய்வீக சக்திகளை மீண்டும் நமக்குப் பெற்றுத் தந்து, தீர்க்க முடிவைத் தருவதாகவும், வாழ்க்கையில் எத்தனையோ வருடங்களாக நாடி, ஏங்கித் தவிக்கின்ற நல்வரங்களைப் பெற்றுத் தருவதற்கும் மொத்தத்தில் ஒரு மிகச் சிறந்த, பரிபூர்ணமான பல தெய்வ வழிபாடாகவே திருஅண்ணாமலை கிரிவலம் அன்றும் இன்றும் என்றும் விளங்குகின்றது. இதனால் தான் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு பெளர்ணமியை ஒரு பண்டிகையாகவே அருணாசலத்தில் கொண்டாடுகின்ற கலியுக அதிசயத்தை, அற்புதத்தை மாதந் தோறும் காண்கின்றோம். அருணாசல கிரிவலத்திற்கு ஈடான கலியுகப் பண்டிகை ஏதுமுண்டோ ?

மார்கழி பூஜை, நாக வழிபாடு என எத்தனையோ பூஜைகளை விட்டுவிட்டோம், மாத வருடாந்திரத் தர்ப்பண முறைகளையும் ஒழுங்காகச் செய்வதும் கிடையாது. ஆனால் முறையான சந்ததி பூஜைகளையும் விட்டு விட்டு “எங்கே நம் குழந்தைகள், தீய பழக்கத்திற்கு ஆட்பட்டு கெட்டுப் போய் விடுவார்களோ”, என்ற அச்சத்தில் தானே நாம் தினம்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் பெண் பிள்ளைகளைப் பெற்றோருடைய மனக் கலக்கத்தைப் பற்றி நாம் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இக்கலியுகத்தில் அந்த அளவிற்குத் தீயொழுக்கமும், வன்முறைகளும் நிரவியுள்ளன. ஆனால் மனதைத் தளர விடாதீர்கள். Positive Soulsதான் இறுதியில் வெற்றி பெறும். ஏனெனில் உத்தமர்கள் பலர் இன்றும் இருக்கின்றபடியால் தான் ஓரளவிற்கு நல்ல குணங்களையும் நல்லவிதமான வாழ்க்கையையும் நாம் பெற்றுள்ளோம் என்பதை உணர்க!

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நிலவி வந்த சமுதாய நல்ஒழுக்கமானது தற்போது எந்த அளவிற்குச் சீரழிந்து உள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா! பூஜைகளும் வழிபாடுகளும் மறைந்து நற்சக்தி மறைகையில் தீய சக்திகள் தானே ஆக்கிரமிக்கும். இதற்கு நாம்தானே மூலகாரணம்! ஏன் பூஜைகளை மறந்தோம்?

ஒருவன் தன் அளவிற்கும் தன் குடும்பத்தைப் பொறுத்த மட்டிலும் நன்றாக வாழ்வதனால் எவ்விதப் பிறவிப் பயனும் கிடையாது. சமுதாயச் சூழ்நிலையே ஒட்டு மொத்தமாக அமைதியுடையதாய் விளங்கினால்தானே அனைவரும் நன்றாக வாழ முடியும். நன்றாக வாழ்தல் என்றால், நம்மளவில் மட்டும் அல்ல, அடுத்த வீட்டுக்காரர், பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருக்காரர், அடுத்த நகரத்தார்கள், அடுத்த நாட்டவர்கள் என நம்முடைய மனம் சுயநலத்தை விட்டு விரிவடைந்து அனைத்து உயிரினங்களும், அனைத்து மக்களும் நல்லபடியாக வாழ வேண்டும், அப்பொழுதுதான் சமுதாயம் அமைதியாக, சிறப்புடன் பிரகாசமாக விளங்கும் என்ற நல்ல எண்ணம் உருவானால் தான் சுயநலத் தன்மை ஒழிந்து நம்மால் வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற ஒரு வைராக்கியமும் ஏற்படும். இதற்கு உதவி புரிபவைதான் தெய்வீக வழிபாடுகளும் பூஜைகளும் ஆகும், எனவே நம்மை முழுமையான, பயனுள்ள மனிதனாக ஆக்கிடவே அனைத்து இறைத் தொழுகை முறைகளும்!

பிரச்னைகளுக்கு இடையே உழன்று Frustration ஆகிய வாழ்க்கையில் ஒரு வெறுப்புத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதினால் என்ன பலன் ? பொறாமை, பேராசை, குரோதம், விரோதம், பகைமை, அசத்தியம் போன்ற இவற்றிற்கு இடையேதானே நம்முடைய வாழ்க்கைப் பிரச்னைகள் உதிக்கின்றன. வறுமையோ, பணக் கஷ்டமோ என்பது பிறர் தர வருவதா? இல்லையே! அது நம்முடைய பூர்வ ஜென்ம பாவ, புண்ணியத்தின் ஒட்டு மொத்த விளைவுதானே, நம்முடைய இன்றையைப் பற்றாக் குறைகளும், இன்பமும், துன்பமும்!

கலியுகத்தில் பெருகி வருகின்ற துன்பங்களுக்கு இடையே நாம் நல்ல விதமான தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்ற உறுதியான மனப்பான்மையைப் பெற வேண்டும் என்றால் அதற்குரிய சில தெய்வீக இரகசியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிந்து கடைபிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும். இதற்காகத்தான் இன்றைக்கும் ஆண்டவனே பல சற்குருமார்களையும், யோகியர்களையும், மகரிஷிகளையும், சாதாரண மனிதர்களின் உருவத்தில் நம்மை வழிகாட்டுவதற்காக அனுப்பியுள்ளான்.

ஆனால் ஒரு சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையை வைத்து, அதில் சற்றும் பிறழாமல் அவர் தம் அருள்வழிமுறைகளைக் கடைபிடித்து வந்தால் தானே எந்தவொரு தெய்வீகச் செல்வத்தையும் பெற முடியும். அரைகுறை நம்பிக்கையுடனோ, நாம் விரும்பிய இதனை, இவர் இதைச் செய்து ஆசி தர வேண்டும் என்ற சுய எண்ணத்துடனோ செயல்பட்டோமேயானால் ஆழ்ந்த நம்பிக்கை நிச்சயமாகத் தோன்றாது. செயலின் விளைவுகளைப் பொறுத்து அந்த நம்பிக்கை அரை குறையாகவே முடிந்து போய்விடும். வாழ்க்கையும் அப்படியே அரைகுறையானதாக அமைந்து விடும்.

சரி, போனது போகட்டும், Don't harp on the past! இனிமேலாவது, இந்த வினாடியிலிருந்தாவது பழையனவற்றை மறந்து, சுயநலமற்ற தெய்வீக வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் ஒரு நல்ல வைராக்கிய உறுதிப்பாட்டை எடுத்துக் கொள்வோமாக!

அறிந்தோ, அறியாமலோ, வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளைச் செய்து விட்டோம், ஆனால் அவற்றிற்கான விளைவுகளை ஏற்பதுதானே நியாயமானது. அவைதானே நமக்கு இன்ப, துன்பங்களாக அமைகின்றன. இத்தகைய அபூர்வமான பெறுதற்கரிய புத்துணர்ச்சித் தருவதாக அமைவதே விஜய தசமி எனப்படும் நவராத்திரியின் நிறைவான பத்தாம் நாள் பூஜையாகும். நவராத்திரி என்பது ஒன்பது தின வழிபாடுகளைக் குறித்தாலும் நவராத்திரியின் பூர்வாங்க பூஜையாக அமைவதே விஜயதசமி ஆகும்.

எத்தனையோ நற்காரியங்களைத் தொடங்கி, பலவிதமான தடங்கல்களினால் அவை நிறைவேறாமல் நின்று, நமக்குத் தினந்தோறும் மன வருத்தத்தைத் தருவனவாக அமைந்து விடுகின்றன அல்லவா! உதாரணமாக, ஒரு வீட்டைக் கட்டுவோம் என்று தொடங்கி, பணப் பிரச்னை, இடத்தில் உள்ள வில்லங்கம், கோர்ட் வழக்குகள், கட்டுமான வேலைகளில் பலவிதமான தடங்கல்கள் - இவ்வாறு எடுத்த காரியம் நன்கு நிறைவேறாது பல வருடங்களாக அப்படியே தடைப்படுவதும்உண்டு.

இல்லத்தில் நன்கு நடைபெற வேண்டிய திருமணம் கூட, பலவிதமான இன்னல்களினால் தள்ளிச் செல்வதும் உண்டு அல்லவா? கையில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? எத்தகைய தொழிலைத் தொடங்குவது ? எதில் முதலீடு செய்வது என்று புரியாமல் திகைப்போரும் உண்டே! புதிதாகத் தொடங்கிய தொழிலில் முன்னும் செல்ல முடியாது, பின் வாங்கவும் முடியாது அப்படியே திகைத்து நிற்கின்ற சூழ்நிலைகளும் உண்டு. இத்தகைய நற்காரியங்கள் நன்முறையில் நடைபெறுவதற்காக அமைந்திருப்பதே விஜயதசமி ஆகும். காரியத் தடங்கல்கள் தானே மனித வாழ்வைச் சீர்குலையச் செய்கின்றன!

பிரபஞ்சத்தின் நல்வாழ்க்கையை எதிர்த்து நிற்கின்ற அனைத்து அசுர சக்திகளையும் அம்பிகையே வென்று, பிரபஞ்ச வாழ்க்கைக்கு வெற்றியைத் தேடித் தந்த விசேஷ தினமான விஜய தசமியானது எந்தக் கிழமையில், யோகத்தில் அமைந்தாலும் அது மஹா விசேஷமானதாகவே விளங்குகின்றது. அன்றைக்கு முழு நேரமும் மரண யோகம் இருந்தாலும் கூட அந்த தினத்திற்கு உரிய குறித்த சில பூஜைகளினால், அதனை வெற்றியைத் தரக்கூடிய தினமாக நிச்சயமாக அமைந்திட முடியும். இதற்கு விஜய தசமிக்கு உரித்தான எளிமையான பூஜை முறைகளைக் கடைபிடித்திட வேண்டும். அப்போதுதான், காரியத் தடங்கல்களை நீக்கும் விஜயதசமி தரும் நல்வர சக்தியை நாம் பெற முடியும்.

கேதார்நாத்தில் குடி கொண்டிருக்கக் கூடிய ஸ்ரீ கேதாரீஸ்வரர் எத்தனை அற்புதமான வரங்களைத் தர வல்லவர். ஆனால் எத்தனையோ காடு, மலைகளைத் தாண்டி, கடும் பனி, குளிரையும் தாங்கிச் சென்றால் தானே ஸ்ரீ கேதாரீஸ்வரர் தரிசனத்தைப் பெற முடியும். நினைத்த இடத்திலேயே கேதாரீஸ்வரர் அருள்புரிய மாட்டாரா?

நிச்சயமாக அருள் புரிவார்! ஆனால் அந்த அருட் சக்தியைக் கொண்டு நீ எத்தகைய காரியங்களைச் செய்யப் போகின்றாய் என்பதைப் பொறுத்துத்தான் கேதாரீஸ்வரர் நினைத்த இடத்திலேயே அருள் புரிகின்றார். வேலை வாய்ப்பு, பிரமோஷன் கிட்டுவதற்கும், வீடு கட்டுவதற்கும் Reward/Award பரிசு வாங்குவதற்கும், தொழிலில் முன்னேறுவதற்குமான சுயநலப் பிரார்த்தனைகளுடன் தேடினால் உட்கார்ந்த இடத்திலேயே கேதாரீஸ்வரர் தரிசனத்தையும், அனுக்கிரஹத்தையும் பெற முடியுமா? இவ்வாறு பெறுவதும் நியாயமாகுமா? இகபர சுகங்களை அடைய காடு, மலைகளைத் தாண்டினால் தான் கேதார தரிசனம் கிட்டும்!

இதே போன்று தான் விஜயதசமி தினத்திற்கு உரித்தான விசேஷமான தெய்வீக அனுக்ரஹங்களைப் பெற வேண்டுமானால் குறிப்பிட்ட தலங்களில் சித்புருஷர்கள் அருள்கின்ற சில விசேஷமான பூஜை முறைகளைக் கட்டாயமாகக் கடைபிடித்திட வேண்டும்.

சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு அருகே மாடம்பாக்கத்தில் பசுவின் கொம்பு வடிவில் அற்புதமான லிங்கம் அமைந்துள்ளது. கல்லால் அமைந்தது அன்று, மற்ற இடங்களில் காணப்படுவது போல் ! நாம் எங்கும் தரிசிக்கும் லிங்க அமைப்பிலும் இது அமைந்திடவில்லை! மிகவும் அதிசயமாக, கொம்பு வடிவில் அமைந்துள்ளது. மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரருடைய அனுக்கிரஹத்தைப் பெற வேண்டுமானால், ஸ்ரீ கேதார தரிசனம் போல வாழ்க்கையில் ஒரு முறையேனும் நேரில் சென்று இவ்வற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தித்திட வேண்டும் அல்லவா! ஏனென்றால் நம்முடைய மனித சரீரமானது சிறு வயது முதலே பல வருடங்களாக எதையுமே கண்ணால் கண்டால் தான் நம்பி வாழ்கின்ற கட்டாய நிலைக்கு ஆளாகி விட்டது! சற்குரு ஒன்றைச் சொன்னால், அதனைக் கண்டாலும், காணாவிட்டாலும் அதனையே நம்பித் தெய்வீக ஆனந்தத்தில் திளைக்கின்ற பக்குவத்தை என்று பெறுவது ?

தெய்வீகப்பண்பாடு மறைந்து வருகின்றதே! என் செய்வது ? மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரருக்கு அஷ்டபந்தனத்திற்கு பதிலாகத் தேன்மெழுகுதான் சார்த்தப்படுவதுதான் விசேஷமானதாகும். தசமி திதியிலும் ரோஹிணி நட்சத்திரத்திலும் இம்மூர்த்திக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து வந்தால் காரியத் தடங்கல்கள் தீரும்.

மனித சரீரத்தில் கண்ணால் காண்பதே மெய் என்ற உணர்வு நம்முள் ஊறி விட்டதால்தானே மாடம்பாக்கத்திற்கு நேரில் சென்று ஸ்ரீ தேனுபுரீஸரைத் தரிசித்தால்தான் அது பரிபூரணம் அடைகின்றது. இவ்வாறாக விஜயதசமி அன்று நமக்கு வெற்றியைத் தருவதற்கான சில நல்வரங்களைத் தருகின்றத் தெய்வ மூர்த்திகளும், வழிபாடுகளும் உண்டு,

சர்வேஸ்வரியான அம்பிகையே பிரபஞ்சத்திற்கு அனைத்தையும் தரக்கூடிய சர்வேஸ்வர சக்தியைப் பெற்றவள். ஆனால் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியே விஜய தசமி அன்று, சில விசேஷமான பூஜைகளைச் செய்து ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகத் தெய்வீக சக்திகளை ஈஸ்வரனிடமிருந்து பெற்றாள் எனில் விஜயதசமியின் மகத்துவத்தை எப்படித் தான் விளக்க முடியும்! வருடத்திற்கு ஒரு முறையே வருகின்ற விஜயதசமி அன்று நாம் சில விசேஷ பூஜைகளை மட்டும் செய்வதோடு மட்டும் அல்லாமல் சில வைராக்கிய மனக்கோட்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வோமேயானால் அவை நிச்சயமாக நம் வாழ்நாள் முழுதும் நம்மோடு என்றும் எப்போதும் ஒட்டியிருந்து நம்முடைய தெய்வீக வாழ்க்கைக்கு பெரிதும் துணை புரியும்.
பெறற்கரிய திருநாளிது! தெய்வீகப் புத்துணர்ச்சி ஊட்டும் திருநாள்!

விஜயதசமி இத்தகைய வெற்றி தரும் விஜயநாளாக விளங்குவதற்குக் காரணம் என்ன ?

நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் அம்பிகையானவள் சர்வேஸ்வரனுக்கான இரவு நேரப் பூஜையை மேற்கொள்கின்றாள் அல்லவா! அம்பிகையின் ஒன்பது தினப் பூஜைகளின் சக்திகளும் ஒன்றாகப் பரிணமித்துப் பூரணமடைகின்ற தினமே விஜயதசமி ஆகும்.

பாணமெய்தும் பாஹேஸ்வரி! இன்றைக்கும் பல ஆலயங்களில் விஜயதசமி அன்று அம்பிகையோ, ஈஸ்வரனோ தசமூலபாணம் எய்கின்ற திருவிழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாட்டுக்கோட்டைப் பகுதியில் அம்பிகை பாணம் எய்கின்ற விஜயதசமி அன்று “அம்பு ஆடும்” திருவிழாவாக மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. உற்சவ மூர்த்தியாய் நகரமெங்கும், கிராமம் எங்கும் பவனிவருகின்ற அம்பிகை பத்து விதமான அம்புகளை வானத்தில் செலுத்திட அவை பூமியில் விழும்போது தெய்வப் பிரசாதமாக அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டிலே பல சந்ததிகளாக/ஆண்டுகளாக வைத்துப் பூஜிக்கின்ற பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிட்டுகின்றது. விஜயதசமியன்று இந்த பாணத்தை எடுப்பற்காகப் போட்டியிட்டுக் கொண்டு பக்தர்கள் முன் வருவார்கள்.

இதனுடைய உட்பொருள் என்னவெனில் நவராத்திரியின் ஒன்பது இரவுகளிலும் இறைவனைப் பூஜித்த அம்பிகையானவள் தான் பெற்ற சக்தியை பரஞ்ஜோதியின் அணுத்துகள்களாகச் செலுத்தி விண்வெளி எங்குமே தம்முடைய தபோ பலமும், தெய்வ சக்தியும் நிரவுவதற்காக பாணமெனப் பொழியும் திருவிழா அமைந்திருக்கின்றது.

ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டினை வெடிப்பதனால் என்ன பலன் ஏற்படுகின்றது? அழிவுதானே! ஆனால் தெய்வ சக்தியாகச் செலுத்தப்படுகின்ற பாணத்தின் மூலம் விரவுகின்ற தெய்வீக அணுத்துகள் சக்தியினால் தீய சக்திகள் அழிக்கப்பட்டுப் பரவெளி எங்கும் இறை அணுத்துகள் நிரவுகின்றது. நம்முடைய சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ- ல - ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் தம்முடைய குருவாய் மொழியாக அடிக்கடி ஒன்றைக் கூறுவார். “அணு குண்டு போட்டால் 1000 நெல் மூட்டை விளையணும்! இல்லையெனில் 1000 கிலோ கத்திரிக்காய் விளையணும். அதுதானப்பா உண்மையான விஞ்ஞான மெய்ஞ்ஞானம்! அணுகுண்டை வெடிச்சு இலட்சம் பேரை அழிக்கறது, பூமில குழி தோண்ட்றது, இது போல அழிவு வேலை இருந்தா அது பூமாதேவிக்கு நாம் செய்கின்ற அபச்சாரம் ஆகும், இதனால் பூமாதேவிக்கு மன வருத்தமும், வேதனையும் தான் உண்டாகும் ஆக்க பூர்வத்திற்காக மனிதப் பிறவி எடுத்து பூமாதேவியின் வேதனைக்கு நாம் காரணமாக இருக்கலாமா?” - என்று நாற்பது, ஐம்பது. ஆண்டுகளுக்கு முன்னரேயே பிரபஞ்சத்தின் நல் வாழ்விற்கான நாம் ஏற்க வேண்டிய நல்லுரைகளை அருளிச் சென்றுள்ளார்,

நல்லெண்ணத்தை விட நற்காரியமே மேல்! எனவே நம்முடைய எந்தச் சொல்லும், செயலும் காரியமுமே அழிவிற்காக இருக்கக் கூடாது. நல்ஆக்கத்திற்காகத் தான் அவை இருக்க வேண்டுமே தவிர தீய எண்ணமோ, செயலோ கூடாது! நல்லதாக எதைச் செய்ய முடியும் என்பதே உயர்ந்த குறிக்கோளாய் இருக்கவேண்டும். மேலும் வெறும் உயர்ந்த குறிக்கோள் மட்டும் இருப்பதால் ஒரு பயனும் கிடையாது. இதனையும் நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ - ல – ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் பல உதாரணங்களுடன் தந்துள்ளார். வெறும் குறிக்கோளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

“ஒரு பசுவிற்கு நாலு வாழைப் பழம் கொடுக்கணும்னு தோணினா, உடனே செஞ்சிடு! இல்லே ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போய் செஞ்சுக்கலாம்னு நினைச்சேன்னு வைச்சுக்கோ, ஆபீஸை விட்டுக் கிளம்பும் போது உனக்கு அது மறந்து போயிடும். இல்லாட்டி பையிலே சில்லறை இருக்காது, பஸ் லேட்டாகி வந்ததுன்னா அதையும் மறந்திடுவே! அதனால் உயர்ந்த குறிக்கோள், வெறும் குறிக்கோளாக இருந்தா மட்டும் ஒரு பயனும் கிடையாது. செயலா மாறினாத்தான் உயர்ந்த குறிக்கோள் உயிர் பெறுகின்றது! எனவே, நான் நல்லதே நினைச்சுகிட்டு இருக்கேன், என்று சொல்வதால் மட்டும் பயன் கிடையாது. நல்ல எண்ணம், நல்ல செயலாக மாற வேண்டும், எப்படி ஒரு வாழைப் பழம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் சோம்பேறித்தனத்தினாலும் பிற காரண, காரியங்களினாலும் நிறைவேற முடியாமல் போகின்றதோ அப்பொழுது பசுவிற்கு/ஏழைக்கு வாழைப் பழம் கொடுக்க வேண்டிய எண்ணம் வெறும் எண்ணமாக இருக்கின்றதே தவிர அது நற்காரியமாக மலரவில்லையே!”

விஜய தசமி அன்று அம்பிகை/சுவாமி பாணம் எய்கின்ற தெய்வத் திருப்படலத்தில் ஒரு வாழை மரத்தை நட்டு வைத்து அதனைப் பலரும் சரங்களினால் குத்தி நாறினை எடுத்துப் பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். இதனுடைய உட்பொருள் என்ன?

குடவாசல் திருத்தலம்

வாழை மரம் என்பது சந்ததி சந்ததியாகத் தழைக்கின்ற நல்ல தன்மையைக் குறிக்கின்றது. வாழை மரத்தை நட்டு வைத்து அதனைச் சரங்களினால் குத்துவது என்று பொருள் கொள்வதை விட எவ்வாறு பூவைத் தொடுப்பதற்கு பட்டையிலிருந்து வாழை நாரைப் பிரிக்கின்றோமோ அதைப் போன்று தன்னுடைய உடல், பொருள், அங்கம், ஆவி அனைத்தையும் மக்களுக்குப் பயன்படுகின்ற வகையிலே தன்னையே அர்ப்பணித்துக் கொள்கின்ற வாழை மரத்தின் தியாக மனப்பான்மையை நாமும் பெறுகின்ற வகையில் அதனுடைய நாரை நாம் வீட்டிற்கு நாம் எடுத்துச் செல்கின்றோம்.

அதாவது அம்பிகையானவள், எந்த ஒரு பொருளானது பிரபஞ்சத்தில் தன்னைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்றதோ அதன் மேல் தன்னுடைய ஆசியாகிய பேரன்பைச் செலுத்துகிறாள். அத்தகைய திவ்யமான வஸ்துக்களில் ஒன்றாக விளங்குவதே வாழை மரம் ஆகும். வாழை மரம் மட்டுமின்றி மஞ்சள், எலுமிச்சைக் கனி, சந்தனம், நெருப்பு போன்ற பொருட்கள் அனைத்துமே ... பிறருக்குத் தியாகம் நிறைந்த வகையிலே இறைப்பணிகளைப் புரிந்து பிரம்மானந்தம் கொள்கின்றன.
ஆனால் மனிதன்.....?

மனித குலம் இத்தகைய ஜீவன்களிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். எனவேதான் விஜயதசமி அன்று ஈஸ்வரியானவள் தம் பூஜா பலன்கள் அனைத்தையும் ஜீவன்களின் மேன்மைக்காக, அர்ப்பணிக்க வேண்டி அதற்கென வாழை மரத்தினைத் தேர்ந்தெடுக்கின்றாள். அந்த வாழை மரத்திலே தம்முடைய தபோ பலன்களின் அம்சங்களைப் பதிக்கின்றாள். அன்று அந்த வாழை மரத்தைத் தரிசிப்பவர்களுக்கும், அதிலிருந்து வாழை நாரைப் பெற்று இல்லத்தில் வைத்துப் பூஜிப்பவர்களுக்கோ,அல்லது பயன்படுத்துபவர்களுக்கோ அம்பிகையின் தெய்வீகக் கடாட்சம் நிறைந்து விளங்குகின்றது.
மேலும் விஜய தசமி அன்று அந்த வாழை மரத்தண்டில் நாரெடுக்கப் பயன்படுத்துகின்ற சரமானது பல குடும்பங்களிலும் ஆண்டாண்டு காலமாக பூஜையில் வைத்து வணங்கப்படுவது ஆகும். எனவே அந்தச் சரமானது, அழிக்கின்ற அல்லது வதைக்கின்ற ஆயுதமாக இல்லாது, எவ்வாறு பல யுத்தங்களைக் கண்ட அர்ச்சுனனுடைய அம்புகள் சாத்வீக குணங்களைத் தழுவி, பீஷ்மருக்கு கங்கை நீரையும், பூமாலைகளையும், எத்தனையோ திவ்யமான பொருட்களையும் பெற்றுத் தந்ததோ அதே போல விஜயதசமி அன்று வாழைமரத்தில் செருகுவதற்காகப் பயன்படுத்துகின்ற சரமானது தெய்வீகச் சாரமாக, பல நல் வரங்களையும்,குடும்பத்திற்கான வளங்களையும் பெற்றுத் தருவதாக அமைந்திருக்கின்றது.

எனவே முடிந்த வரையில் விஜயதசமி அன்று அம்பிகையும், ஆண்டவனும் தசமூல பாணம் எய்கின்ற திருவிழாவைக் கண்டு களிக்கின்ற தெய்வத் திருவாய்ப்பினைப் பெற்றிடுங்கள். இன்று அம்பிகையின் திருக்கரங்களிருந்து எய்கின்ற பத்து பாணங்களுமே அனைவருக்கும் கிட்டும் என்று சொல்ல முடியாது. பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளவர்கள் எத்தனையோ ஆண்டுகளாக அவற்றை வீட்டில் வைத்து பராமரித்துப் பூஜித்து வருவார்கள். அவற்றைத் தரிசிக்கின்ற தெய்வீக வாய்ப்பையாவது இன்று பெற்றிடுங்கள். தமிழகமெங்கும் ஆங்காங்கே இன்றும் சில இடங்களில் குறிப்பாக, காரைக்குடிப் பகுதியில் இத்தகைய தெய்வத் திருநிகழ்ச்சி இன்றும் நடைபெற்று வருகின்றது.

திருவாரூர் திருத்தலம்

மேலும் விஜயதசமி அன்று குறைந்தது 10 தீர்த்தங்களுக்கு மேல் உள்ள ஆலயங்களில் நீராடி அம்பிகைக்கு மஞ்சள் காப்பிடுவதனால் பல ஆண்டுகளாகத் தடைபட்டு வருகின்ற நற்காரியங்கள் நன்கு நிறைவேறும். இராமேஸ்வரம், திருவிடைமருதூர், காஞ்சீபுரம் போன்ற இடங்களில் 16 தீர்த்தங்களுக்கு மேல் உள்ள திருக்கோவில்கள் உள்ளன. ஒரே ஆலயத்தில் 10 தீர்த்தங்கள் இல்லாவிடினும் ஒரே கிராமத்திலோ அல்லது நகரத்திலோ பல கோயில் தீர்த்தங்கள் பல இருப்பினும் சிறப்புடையதே! தசமி திதிக்குரிய தேவதைகள் வழிபட்ட திருத்தலங்களில் திருவாரூரும், காஞ்சிபுரமும் முக்கியமானவையாம். வாழை ஸ்தல விருட்சமான தலங்களும் (திருக்கழுக்குன்றம்) தசமி பூஜைக்கு ஏற்றதே!

108 கோயில்களுக்கு மேல் உள்ள காஞ்சீபுரம் விஜயதசமி தரிசனத்திற்கு மிகவும் சிறப்புடைய இடமாகும். இன்னல்களைத் தகர்த்துத் துன்பங்களைத் துடைத்து நெடுங்காலமாக நிறைவேறாமல் இருக்கின்ற நற்காரியங்கள் நன்கு நடைபெறுவதற்கான அமைந்துள்ள விஜயதசமித் திருவிழாவினை மேற்கண்ட சிறப்பம்சங்களை உடைய தெய்வீகத் திருத்தலங்களில் கொண்டாடுவது மிகவும் மகத்வம் வாய்ந்ததுதானே!

அண்ணாமலையின் அற்புதமான தசமுக தரிசனம்

திருஅண்ணாமலையிலேயே தசமுக தரிசனம் என்ற மிகவும் சிறப்பான தரிசனம் என்ற மிகவும் சிறப்பான தரிசனம் ஒன்று உண்டு. நம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே அபய மண்டபத்திலிருந்து, கிரிவலப் பாதையானது திருஅண்ணாமலை காஞ்சி சாலையுடன் இணைகின்ற இடத்திலிருந்து, திருஅண்ணாமலையை நோக்கினால் இத்தெய்வத் திருமலையின் பத்து முகடுகள் ஒரே இடத்திலிருந்து தென்படுகின்ற அதிஅற்புதமான காட்சியைக் கண்டிடலாம். இவ்விடத்திலிருந்து மலையின் பத்து முகங்களையும் ஒரே இடத்தில் தரிசிப்பதே தசமுக தரிசனம் ஆகும். அக்காலத்தில் விஜயதசமி அன்று அம்பிகையின் தெய்வத் திருவிழா இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. தசமுக தரிசனம் கண்டு பத்து விதமான தான தர்மங்களைச் செய்தல் சிறப்புடையது ஆகும்.

அன்னதானம், ஆடைதானம், பொன் தானம் என தங்களால் இயன்ற அளவில் பழ தானம், அகல் விளக்கு தானம், எண்ணெய் தானம் என அவரவர் வசதிக்கு ஏற்ப, பத்து வகையான தானங்களை விஜய தசமி அன்று இங்கு செய்திடில் தடைபட்ட நில விவகாரங்கள் தீர்வு பெறும். இவ்விடத்தில் பத்து விதமான தானங்களைப் பெறுவோர் ஆட்கள் கிடைப்பார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா! எதற்கும் பொறுமையும், அடக்கமும், பணிவும் தேவை, நம்மைச் சோதனை செய்யும் பொருட்டுக் கலியுகத்தில் தானத்தைச் செய்வதற்குக் கூட சிலவிதமான சோதனைகள் ஏற்படும். தானம் பெற எவரும் வரவில்லையே என்று எண்ணாதீர்கள். எந்தப் பொருள் எவர் கையில் போய்ச் சேர வேண்டுமோ அதற்குரிய மனிதர் அவ்விடத்திற்கு வரும் வரை நீங்கள் பொறுமையுடன் இருந்துதான் ஆகவேண்டும். இவ்வகையில் இரவு இரண்டு மணிக்குக் கூட தான தர்மங்களை தசமுக தரிசனத்தில் சிறப்போடு செய்தவர்கள் இன்றும் பலர் உண்டு. நாய்களுக்கு பொறை பிஸ்கட் அளிப்பது கூட ஒரு சிறந்த அன்னதானமாகத் தான் அமைகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தசாவதார தரிசனமும் தசமியிலே! நாய் வழிபட்டு முக்தியடைந்த தலமே திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறை ! நாய்க்கு உணவிட்டதால் பலரும் முக்தியடைந்த தலம் அண்ணாமலை! விஜயதசமி அன்று தசாவதார மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஸ்தலங்களில் தாயாருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபடுவதும் மிகவும் சிறப்பான வழிபாடு ஆகும். பெருமாள் ஆலயங்களில் தசாவதார மூர்த்திகள் விக்ரஹங்களாக எழுந்தருளியிருப்பது மிகவும் அரியதொன்றாகும். பெரும்பாலும் ஆலய விமானப் பகுதிகளிலோ சுதை ரூபங்களில் தான் தசாவதார மூர்த்திகளைக் காண இயலும். (சென்னை திருநின்றவூர், கும்பகோணம் நாச்சியார்கோவில்)

கும்பகோணம் நாச்சியார்கோவில்

இது மட்டும் அல்லாது பத்துக்கும் மேற்பட்ட கோபுரக் கலசங்கள் அமைந்துள்ள கோபுர தரிசனத்தை விஜயதசமி அன்று விடியற்காலையில் பெறுவது மிகவும் பெறற்கரிய பாக்ய தரிசனமாகும். இன்று காலையில் எழுந்தவுடன் நீராடி உடனடியாக 10 கலசங்களுக்கு மேலே உள்ள கோபுரத் தரிசனத்தைப் பெறுவோமேயானால் இதனால் மனதிற்கு சாந்தமும் புது வைராக்கிய மனப்பான்மையும் கிடைக்கின்றது. தசாம்ய கலச தரினம் என்ற ஒரே கோபுரத்தில் 10 கலசங்கள் இருப்பதான தரிசனம் சிறப்புடையது ஆகும். “கோபுர தரிசனம் கோடி பாப நாசனம்” என்ற ஒரு தெய்வீக வாக்கும் கூட உண்டல்லவா!

ஆலய வழிபாடு என்பது நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தில் மனிதர்களுக்காக மட்டும் தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். கோடானுகோடி மகரிஷிகளும், யோகியர்களும் தேவர்களும் கூடத் தெய்வ வழிபாட்டிற்காகப் பூலோகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு இன்றும் வந்து செல்கின்றனர். இது நிதர்சனமான உண்மையாகும். ஆனால் நம்முடைய பூஜைகளைப் போல லெளகீகமான பிரார்த்தனையுடன், மிக மிக சுயநலமான பிரார்த்தனைகளுக்காக அவர்கள் பூலோகத்திற்கு வருவது இல்லை என்பதை உணர்ந்து தெளிந்திடுக! தங்களுடைய தபோபலன்களை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டு அத்தலத்திற்கு உரிய தெய்வீக சக்திகளைத் தம் தவ சக்தியால் பெற்று அவர்கள் அவற்றைப் பிரபஞ்சத்தின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்துச் செல்கின்றனர். நாமோ பிரசாதத் தேங்காய் மூடியைக் கூட விடாமல் சட்னிக்காக வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றோம்! எனவே தேவாதி தேவர்களும், மகரிஷிகளும் தங்களுடைய ஒளிமயமான தேக உடலைக் கோபுரக் கலசங்களில் உறைய வைத்து மானுட அல்லது வேறு உருவங் கொண்டு கோபுரங்களின் வழியாக உட்சென்று, நடை சாற்றுகின்ற நேரத்தில் தங்களுடைய பூஜைகளை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். மிகவும் ஒளிப் பிரகாசம் உடைய அவர்களுடைய ஒளித் திருமேனிகளைத் தாங்குகின்ற சக்தி கோபுர கலசங்களுக்கே உண்டு! அதாவது கோவிலில் நடை சார்த்துகின்ற நேரமே தேவ பூஜையின் நேரமாகும்.

இன்றைக்கும் போளூர் அருகே அமைந்துள்ள பர்வத மலையில் இரவு நேரத்தில் தேவர்கள் பூஜித்துச் செல்வதற்கானப் பல நிரூபணங்கள் காணக் கிடைக்கின்றன. எனவே தரிசனம் கிட்டவில்லையே என்ற மன வருத்தம் அடையாது தேவர்கள் பூஜிக்கின்ற நேரத்தில் நாம் ஆலயத்திற்கு வந்திருக்கின்றோமே என்று சந்தோஷப்பட்டுச் செல்லுங்கள்.

“பல கோவில்களுக்கும் செல்லும் பொழுது அங்கு கோவில் நடைசார்த்தி விடுகின்றார்கள், அசகுனமா இது? இதனை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்”, என்ற வகையிலே விளக்கங்கள் கேட்டுக் கடிதங்கள் நமக்கு வந்துள்ளமையால் இதைப் பற்றி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அளித்துள்ள மேலும் பல விளக்கங்களை மற்றொரு பகுதியில் அளித்துள்ளோம்.

வினாயகர் சதுர்த்தி அன்று குறைந்தது 108 வினாயகத் திருமேனிகளைத் தரிசிக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டு மிகச் சிறப்பாக வினாயக தரிசனப் பூஜையைச் செய்வோர் இன்றும் பலர் உண்டு. இதேபோல் விஜயதசமி அன்று, குறைந்தது 10 அம்பிகைகளின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்ற ஒரு வைராக்கிய சித்தத்தை மேற்கொண்டு வழிபடுவீர்களேயானால் இதுவும் மிகச் சிறந்த விஜயதசமி வழிபாடுகளில் ஒன்றாக அமைகின்றது. நின்ற, அமர்ந்த, பத்மாசன, முன்கால் மாறி நின்ற, நடன கோல என பத்து வகையான அம்பிகையர் தரிசனமானது பெறுதற்கரிய மன அமைதியைப் பெற்றுத் தரும். குறிப்பாக குடும்பச் சண்டைகள் தீரும். மேலும் நாம் ஏற்கனவே பல இதழ்களில் எடுத்துரைத்து உள்ளது போல தன்னையே தியாகமாக அர்ப்பணித்து உலகத்தார்க்குப் பயன்படும் வகையில் வாழ்வனவற்றில் பட்டுப் புழுக்களும் ஒன்றாகும். பட்டு உடைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று நாம் பன்முறை வலியுறுத்தி வந்துள்ளோம்.

காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் போன்ற மகான்கள் எடுத்துரைத்தும் கூட இன்றும் திருமணங்களில் பட்டுப் புடவைதான் சலசலக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். பட்டுப் புழுக்களை வென்னீரில் வேக வைத்து அதன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற பட்டுப் புடவையில் பட்டுப் புழுக்களின் வேதனைகள்தானே நெய்யப்பட்டிருக்கும்! வேதனைகளால் பின்னப்பட்ட ஒரு பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டால் எந்த விதமான எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படும், சற்றே யோசித்துப் பாருங்கள்! இதனால் சோகமய சூழ்நிலைகள் தானே உங்களது வாழ்வில் வந்து சேரும் .எதைக் கொண்டு ஆக்கப்பட்டதை அணிகின்றீர்களோ அதைத்தானே நீங்கள் பெறுவீர்கள்!

எனவே பட்டுப் புடவையை அணிகின்ற தவறான காரியத்திற்கு இன்றேனும் முற்றுப் புள்ளி வைத்திடுக! வேண்டுமானால் நார்ப்பட்டு என்று சொல்லப்படுகின்ற உயிர் வதை இல்லாத முறையில் தயாரிக்கப் படுகின்ற சாதாரண நார்ப்பட்டுப் புடவையை அணிந்திடுக!

ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ, உறவினர்கள் முன்னிலையில் நாம் தாழ்ந்து போகக் கூடாது என்ற எண்ணத்துடனோ, தன்னுடைய செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம் காரணமாகவோ பட்டுப் புடவையை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். இதற்கு என்றேனும் பிராயச்சித்தம் பெற்றுத்தானே ஆகவேண்டும். இதற்குப் பரிகாரமாக, அதுவும் வாழ்க்கையில் பெறும் ஒரே ஒரு முறைப் பரிகாரமாக நீங்கள் வைத்திருக்கின்ற பட்டு ஆடைகளை விஜய தசமி அன்று தானமாக அளித்திடுங்கள். தம்மை அழித்துக் கொண்டுப் பிறருக்கு ஆனந்தம் அளிக்கின்ற வகையிலே வாழும் பட்டுப் புழுக்களுக்கு இதனால் மோட்சம் கிட்டும்.

அது எப்படி, நாம் அணிந்தால் பாவம், பட்டு ஆடைகளைப் பிறருக்கு தானமாக அளித்து அதனை அவர்கள் அணிவது என்றால் அவர்களுக்கும் அப்பாவம் போய்ச் சேராதா? நல்ல கேள்விதான்! ஆனால் பன்முறை ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் விளக்கப்பட்டதும் கூடத்தான்!

சாதாரண பருத்தி உடைகளைக் கூட வாங்க இயலாத அளவிற்கு ஏழ்மை நிலையில் வாழ்கின்ற வறியோர்க்கு வாழ்க்கையில் ஒரேயொரு முறையேனும் பட்டு ஆடையை உடுத்திட வேண்டும் என்ற அவா பெருகுகின்றது. பொருளாதார ரீதியாக அவர்களுடைய ஆசை நிராசை ஆனது என்றாலும் பட்டுப் புடவை எவரும் அணியலாகாது என்ற நியதி அவர்களுக்கும் உரித்தானது என்றாலும் நீங்கள் பட்டுப் புடவையைத் தானமாக அளிக்கின்ற பொழுது அதற்குரிய தான, தர்ம தேவதைகள் அப்பட்டுப் புடவையில் உள்ள பாவ எண்ணங்களைத் தங்கள் உடலில் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இதற்குக் காரணம் என்ன? பிறருக்கு தானமாக அளித்திட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்திற்குப் பரிசாக,தான, தர்ம தேவதைகள் பட்டு ஆடைகளில் உள்ள பாவக் கரைகளை, தான, தர்ம தேவதைகளே தாங்களே ஏற்றுவிடுவதால் அதனைப் பிறர் அணியும் பொழுது பரிசுத்தமாக ஆகிவிடுகின்றது. இதற்காகப் பாவங்களைத் தானமாக அளிக்கின்றோம் என்று எண்ணக் கூடாது. அன்றாட ஒரு வேளை உணவிற்கே கஷ்டப் படுகின்ற ஒரு ஏழைக்கு இப்பட்டுப் புடவையை, அளிக்கும் பொழுதுதான் இத்தகைய தெய்வீகப் பரிமாற்றம் ஏற்படுகின்றதே தவிர பட்டுப் புடவையை அனைவருக்கும் தானம் அளிப்பதால் பரிகார முறைகள் அமைவது கிடையாது! வறுமை காரணமாக மிகவும் கிழிந்த ஆடைகளையே அணிந்து வந்துள்ள ஏழைகளுக்கு, தாம் பயன்படுத்தி வந்த பட்டு ஆடைகளை அளித்திட, அவற்றை அந்த ஏழைகள் அணிவதன் மூலம் ஏற்படுகின்ற விவரிக்க இயலா ஆனந்தமே உங்களுக்குப் பிராயச் சித்தத்தைப் பெற்றுத் தரும். ஆனால் இதுவரையில் நீங்கள் பயன்படுத்தி வந்த பட்டு ஆடைகளுக்கு உரித்தான பிராயச்சித்தமே தவிர இனிமேல் பட்டுப் புடவை வாங்குவீர்களேயானால் அதற்கு எவ்விதப் பரிகாரமும் கிடையாது. பரிகாரம் என்பது வாழ்வில் ஒரு முறையேதான்!

இனி வாழ்வில் பட்டுப் புடவையை வாங்கி அணிதல் கூடாது என்ற வைராக்கியச் சித்தத்துடன் தான் மேற்கண்ட பரிகார முறையைச் செய்ய வேண்டும். ஏற்கனவே வைத்திருக்கின்றப் பட்டு ஆடைகளுக்கு உரித்தான பரிகார முறைதானிது! ஒரு சாதாரணத் துண்டு கூட வாங்க இயலாது கிழிந்த ஆடைகளுடன் வாழுகின்ற ஒரு ஏழை தனக்கு அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் போனாலும் நன்கு வயிறாரச் சாப்பிடுவதை விட, தான் மிகவும் ஏங்கிய பட்டுப் புடவையை அணிவதன் மூலம் அற்புதமான பரமானந்தத்தை அடைகின்றபொழுது எந்தப் பட்டுப் புழுக்கள் தம்மை அழித்துக் கொண்டு அந்தப் பட்டு ஆடையை உருவாக்கினவோ அவை மிகவும் மகிழ்ந்து அந்த ஏழையின் ஆனந்தத்திற்குத் தாமும் ஒரு காரணமாக, கருவியாக இருக்கின்றோமே, “ஆஹா பிறர் ஆனந்தத்திற்குத் தம் உடல் நன்முறையில் பயன்பட்டதே”, என்று எண்ணுகையில்தான் அந்தப் பரிகாரம் பூரணம் அடைகின்றது.

பட்டுப் புழு ஜென்மம் கூடப் பூர்வ ஜென்ம விளைவுகளினால் ஏற்படுவதுதானே! எனவே பட்டுப் புழு ஜென்மம் எடுத்ததற்குப் பிராயச்சித்தமாக அவற்றிற்கும் ஆன்மீக உயர் நிலையை அளிப்பதாக மேற்கண்ட பட்டாடை ஆடைதானம் அமைகின்றது. அதுவும் விஜய தசமி அன்று இத்தகைய பட்டுப் புடவை ஆடைதானம் மிகவும் சிறப்புடையது ஆகும், ஏனெனில் பத்து என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. பத்து என்றால் தீட்டு, எச்சில் தோஷம் (பத்து பாத்திர), மரணத் தீட்டின் பத்தாம் நாள் காரியங்கள் என பத்தின் பதம் எத்தனையோ! தசமியன்று தான் எத்தகைய தோஷங்களுக்கும் தீட்டுகளுக்கும் விமோசனம் கிட்டுகின்றது. எனவேதான் ஜாதக மற்றும் நாடி ரூபப் பரிகாரங்கள் தசமியில் தான் பெரும் பலன்களை அளிக்கின்றன.

ஆனால் பழைய பட்டு ஆடைகளை மட்டும் தான் தானம் செய்ய வேண்டுமா? இவ்வாறு பட்டு ஆடைகளை அணிவதை அனைவரும் நிறுத்தி விட்டால் பட்டுத் தொழிலே நசித்து விடும் அல்லவா? பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலையின்றிப் போய் விடுமே என்றெல்லாம் எண்ணுவீர்கள். ஆனால் இது கலியுகம்தானே! பட்டு மோகம் அவ்வளவு எளிதில் போய் விடாது. மேலும் அனைவருக்கும் ஆண்டவனே படியளக்கின்றான் அல்லவா!

நீங்கள் வாங்க இருக்கின்ற புதுப் பட்டுப் புடவைகளை இறைவனுக்குச் சார்த்துங்கள். இதனால் பட்டுப் புழுக்களுக்கு உடனடியாக மோட்சம் கிட்டும். புதுப்பட்டு ஆடைகளை இறைத் திருமேனிகளுக்குச் சார்த்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது. எதையும் தாங்குபவனே இறைவன்!“பட்டுப் புடவை அணியக் கூடாது என்று சொல்கின்றீர்கள். ஆனால் பட்டுப் புடவை வாங்கி இறைவனுக்குச் சார்த்துவது என்று சொல்கின்றீர்களே இது முரண்பாடாக இல்லையா?”

எங்களுக்கு வந்த கடிதங்களில் ஒரு இல்லறப் பெண்மணி எழுதியுள்ளதாவது,

“என்னுடைய உறவினர்களுடைய நிர்ப்பந்தங்களினாலும், திருமணச் சடங்குகளின் கட்டாயத்தாலும் நான் பல புதுப் பட்டு ஆடைகளை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் நீங்கள் ஸ்ரீ அகஸ்தியர் விஜயத்தில் எழுதியுள்ளது போல எனக்குப் பட்டுப் புடவை அணிவதில் பாவஞ் சேரும் என்பதால் இதில் எவ்வித விருப்பமும் கிடையாது. ஆனால் உறவினர்களின் அன்பளிப்பாகவும், என்னுடைய குடும்ப முறை அமைப்புக் கட்டாயத்தினாலும் என்னிடம் பல புதுப்பட்டு ஆடைகள் வந்து சேர்ந்து விட்டன. இவற்றை என்ன செய்வது?” என்று கேட்டு எழுதியிருக்கின்றார்! புதுப் பட்டுப் புடவை இருக்குமாயின் அவற்றை இறைத் திருமேனிகளுக்குச் சார்த்தி ஏழைகளுக்குத் தானமாக அளித்து விடலாம்,

புதுப்பட்டு வஸ்திரங்களை ஹோம அக்னியில் ஆஹுதியாக இட்டால் தவறான தீயொழுக்கங்களுக்குப் பிராயச் சித்தம் கிட்டும். இதற்குரிய விசேஷமான ஹோமங்கள் உண்டு. கடுமையான காமக் குற்றங்களில் ஈடுபட்டோரும் தீயொழுக்கங்களினால் கொடிய பால் வினை நோய்களைக் கொண்டோரும் மனம் திருந்தி வாழ பட்டாடைகளை ஆஹுதியாக அளிக்கின்ற தேக சாந்தி ஹோமத்தை முறையாகச் செய்திட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நூதன வஸ்திரபுரியில் (நல்லாடையூர்) அருள்பாலிக்கும் சிவமூர்த்திக்குத் தசமி திதியில் தக்க பட்டாடை ஆஹுதி கூடிய ஹோம பூஜைகளைச் செய்வது சிறப்புடையது.

விஜயதசமியின் விளக்கம் எவ்வகையில் ஆரம்பித்து எத்தகைய அற்புதமான விளக்கங்களைத் தருகின்றது என்று பார்த்தீர்களா! இவ்வாறாகத் தான் நம்முடைய ஒவ்வொரு பண்டிகையும் பல விசேஷமான தன்மைகளைத் தன்னுள் கொண்டு நம்முடைய வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக விளங்குகின்றன. எனவேதான் இப்பண்டிகைகளை அக்காலத்தில் கோயில்களிலேயே கொண்டாடி இப்பலன்கள் யாவும் அனைத்து மக்களுக்கும் செல்ல வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருந்தன.

“பஞ்சாங்கத்தில் தினந்தோறும் இவ்வளவு விசேஷ தினங்களைப் போடுகின்றார்களே, யார் இதனைக் கொண்டாடுகின்றார்கள்?” என்ற எண்ணம் தோன்றும், அனைத்து ஆலயங்களிலும் இவை கொண்டாடப்பட்டால் தான் இதனுடைய பலன்கள் ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும் சென்றடையும். வசதியுள்ளோரும், பிறருடைய நல்வாழ்விற்காகப் பலரையும் ஒன்று கூட்டி சத்சங்கமாகக் கூட்டு வழிபாடாக ஆலயங்களில் அனைத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிட வேண்டும்.

கரிநாள், தனியனாள், அதிதி, சூன்ய திதி நாட்களுக்குரிய கோயில், இல்ல பூஜைகள் கூட உண்டு. இவற்றை முறையாகக் கொண்டாடினால் இந்நாட்களில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தவிர்த்திடலாம்.

விஜய தசமி அன்று இல்லத்தில் செய்ய வேண்டிய மிக எளிய பூஜையும் ஒன்று உண்டு. வீட்டில் தினந்தோறும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலாவது சாம்பிராணித் தூபம் இட்டு வர வேண்டும் அல்லவா! அப்பொழுதுதான் இல்லத்தினுள் நிறைந்துள்ள, சுற்றுப்புறத்திலிருந்து வரும் பில்லி தோஷ, திருஷ்டி போன்ற சூன்யங்கள் நம்மை அண்டாது விலகும். எத்தனையோ உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யார் யாரோ வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். அனைவருமே நல்ல எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு நல்ல மனிதன் கூட “இவர்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்கின்றதே, TV இருக்கின்றதே, குழந்தைகள் இருக்கின்றார்களே, வீடு நன்றாக இருக்கின்றதே, பெரிதாக இருக்கின்றதே, அழகாக இருக்கின்றதே”, என்று எண்ணுவார்களேயானால் இத்தகைய எண்ணக் கதிர்கள் கூடத் தோஷக் கதிர்களாக மாறி உங்களைப் பலவிதங்களில் படாத பாடு படுத்தும்.

குழந்தைகளுக்கு நோய் ஏற்படுதல், வீட்டில் பொருட்கள் உடைதல், காரண காரியங்கள் ஒன்றுமில்லாது சிறு விஷயத்திற்குக் கூட கணவன், மனைவியரிடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்படுதல், சண்டைகள் ஏற்படுதல் - இவ்வாறாக இத்தகைய தீய எண்ணக் கதிர்கள்தான் உங்களுடைய இல்லத்தில் சூழ்ந்து உங்களை பாதிக்கின்றன. இவற்றைக் களைவதற்கான ஒரே எளிய வழி சாம்பிராணித் தூபம் இடுதல் ஆகும். சித்தயோக நேரத்தில் தூபமிடுவது சிறப்புடையது. ஏனைய விளக்கங்களுக்கு சாம்பிராணி தூப மஹிமை என்ற எங்கள் ஆஸ்ரம வெளியீடைக் காண்க!

தசாங்கம் என்றால் 10 விதமான இயற்கை மூலிகைப் பொருட்கள் சேர்ந்த தூபப் பொருளாகும். இதனை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் குறிப்பாக சித்தயோக நேரத்தில் இல்லத்தில் சாம்பிராணி தூபமாகக் கண்டிப்பாக இட்டு வருதல் வேண்டும். ஏனென்றால், மூலிகைகள் தாம் கலியுகத்தில் எந்த விதமான தோஷங்களையும் எளிதில் நீக்கக் கூடிய தெய்வீக சக்தியை அபரிமிதமாகப் பெற்றிருக்கின்றன. சிறு வலி என்றாலே, ரசாயனங்கள் நிறைந்த ஆங்கில மருத்துவத்தைத் (Allopathy) தானே நாடுகின்றோம். உணவில் மூலிகைகளைச் சேர்ப்பதே கிடையாது. ஷாம்பூ, கிரீம் என்று ரசாயனப் பூச்சுகளைத் தடவி மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை அறவே விட்டு விட்டோம். சாலையில் Pollution ஆகிவிட்டதால் மூலிகைக் காற்றும் கிடையாது. பின் எப்படித்தான் மூலிகை சக்தி உடலில் சேரும்?

மூலிகையானது மிகவும் தியாக உணர்வுகள் நிறைந்த தெய்வீக பக்தி நிறைந்த தேக, மனோ சக்தியைத் தரவல்லது! நல்ல, பக்திபூர்வமான தியாக உணர்வுகள் நிறைந்த வைத்தியர்கள் மிகவும் அருகி வருவதால் அவரவர் இல்லத்திலேயே இத்தகைய எளிய மூலிகை சக்திகள் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தி வழிபாடுகளை மேற்கொள்தலே நல்ல வழிமுறையாகும். தினந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து நல்ல ஊதுபத்திகளாவது சாம்பிராணி/ தசாங்கமாவது ஏற்றப்பட்டால்தான் வீட்டில் சேர்கின்ற தோஷ சக்திகளை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும்.

மேலும் நல்லெண்ணெய் தீபம் போன்று ஒவ்வொரு தீபமும் குறைந்தது இரண்டு திரி முகங்களுடன் குறைந்தது 3 மணி நேரமாவது வீட்டில் ஏற்றப்பட்டால்தான் இத்தீபசக்தியால் மேலும் பலவிதமான தோஷங்கள் விலகுகின்றன. பூஜை மணி சப்தமும் ஒலிக்க வேண்டும். தசாங்க சாம்பிராணி தூப பூஜையைப் போல “தச அங்க பூஜை” ஒன்றும் விஜயதசமி அன்று அனைவரும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தச அங்கம் என்றால் நம்முடைய உடலில் உள்ள முக்கியமான பத்து விதமான அங்கங்களுக்குத் தாமே பூஜை செய்து கொள்தலாகும். இது அங்க சுத்தியாக மலர்ந்து ஆத்ம பூஜையின் ஓர் அங்கமாகின்றது.

நட்சத்திர லிங்கங்கள்
திருவிடைமருதூர்

கண், வாய், கை, கால் என முக்யமான பத்து அங்கங்களில் தானே தகாதன செய்து, பேசி, பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றோம்! அந்தந்த அவயத்தை சுத்தி செய்தால்தானே மீண்டும் அதர்மமான, முறையற்ற எண்ணங்கள், செய்கைகள் தொடரா! தினசரி சந்தியா வந்தனப் பூஜையில் அங்கந்யாசம், கரந்யாசம் என்று இதனைக் குறிப்பிடுகின்றார்கள். அனைவருக்கும் அங்க பூஜையின் விளக்கம் தெரிய வேண்டும் என்பதற்காக விஜயதசமிக்கு உரித்தான பத்து விதமான அங்கங்களுக்கு உரிய அங்கந்யாசம், கரந்யாசம் பூஜா விளக்கங்களைத் தருகின்றோம். இதனை யாவரும் விஜயதசமி அன்று மட்டுமல்லாது தினந்தோறும் அல்லது தசமியிலாவது கடைபிடித்து உங்களுடைய அங்கங்களைச் சுத்தி செய்து கொண்டு புனிதமான தேகத்துடனும், கசடற்ற பவித்ரமான மனதுடனும் வாழ்வதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளுங்கள்!

தொட்டால் (ஆசி) கொட்டும்!

அங்கந்யாசம், கரந்யாசம் என்றால் உடல் உறுப்புகளை, உங்களுடைய புனிதப்படுத்தப்பட்ட பத்து விரல்களால் தொட்டு பூஜிப்பதாகும். தசமி தினத்திற்கு உரிய பூஜைகளில் இந்த பத்து விதமான கரந்யாசம் விதிக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் இன்றைய இந்தக் கரந்யாசப் பூஜைகளினால்தான் நீங்கள் நற்காரிய சித்தியைப் பெற முடியும். பெரியவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது “நீங்கள் இதைத் தொட்டுத் தந்தால் இது மிகவும் விசேஷம்”, என்று சொல்கின்றோமன்றோ ! அதாவது புனிதமான தேகத்தை உடையவர்கள் எதனையும் தொடுவார்களேயானால் அவர்களுடைய புனிதமயமான பத்து விரல்களால் அதனைத் தொடுவதன் மூலம் அந்த தெய்வீகச் சக்தி ஆசிர்வாதமாக நமக்கு வந்து சேருகின்றது. எனவேதான் தசமி திதி அன்று பெரியோர்களிடமே எதனையும் தொட்டு ஆசீர்வாதமாகப் பெறுவது மிகவும் சிறப்புடையது ஆகும்.

தசமியன்று மஹான்களின் தரிசனம், ஜீவ சமாதி தரிசனம் அபரிமிதமான பலன்களைத் தரும். ஸ்பரிச தீட்சை அளிக்கின்ற பெரியோர்கள் கூடத் தசமி திதியைத்தான் தேர்ந்தெடுத்து ஸ்பரிச தீட்சை அளிப்பார்கள். ஸ்பரிச தீட்சை என்றால் தங்களுடைய தெய்வீக சக்தி நிறைந்த விரல்களால் பிறரைத் தொடுவதன் மூலம் ஸ்பரிசித்து அருளாசியை வழங்குவதாகும்,

பல மூர்த்திகளின் ஏக தரிசனம் ஒவ்வொரு தசமியிலும் குறிப்பாக விஜய தசமி அன்று 10 லிங்கங்களுக்கு மேல் உள்ள ஏக சிருஷ்டி லிங்க தரிசனத்தைப் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும். அதாவது ஒரே இடத்தில் இருந்து வணங்கிடில் அங்கு பத்து லிங்கங்களுக்கு மேலான தரிசனம் கிட்டுவதே இது!

108 சிவலிங்கங்கள் பாபநாசம்

இன்றைக்கும் பல ஆலயங்களில் சர்வ லிங்க தரிசனம் கிடைக்கத்தான் செய்கின்றது. நாம் இதைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளவில்லை, அவ்வளவே! நம்முடைய ஒவ்வொரு கோயிலும் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்களைக் கொண்டுள்ளன! கும்பகோணம் அருகே பாபநாசத்தில் 108 லிங்கங்களை ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கலாம். ஸ்ரீராமர் பூஜித்த அற்புதமான லிங்கங்கள் இவை. இது விஜயதசமி தரிசனத்திற்கு ஏற்ற லிங்க தரிசன பூஜையாகும். ஒரே பார்வையில் சர்வ மூர்த்தி தரிசனம் பெறுகின்ற வகையில் நூற்றெட்டு லிங்கங்கள் அமைந்திருப்பதால் லிங்கங்களுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, சந்தனம் அரைத்து இடுதல் மிகவும் சிறப்பான வழிபாடாகும்.

இதனால் மனைவியை தாயை/ தந்தையை இழந்து வாடுவோர்க்கு சாந்தமும் நல்வழியும் கிட்டும். குறிப்பாக பெற்றோர்கள் இன்மையால், தக்க பெரியோர்கள் இல்லாமையால் திருமணம், கல்வி, வேலை வாய்ப்பு இல்லாது வாடுவோர்க்கு விஜயதசமியன்று நூற்றெட்டு லிங்க வழிபாடு தக்க நல்வழியைத் தரும்.
இவ்வகையில் வாடுகின்ற பிறருக்காகவும் நீங்கள் இவ்வழிபாட்டை மேற்கொள்ளலாமே!

இத்தகைய ஏக சிருஷ்டி லிங்க தரிசன பூஜையை, பலாபலன்களை நன்கு அறிந்தோர் பலர் உண்டு. விபீஷணன்,பரசுராமர், ஆஞ்சநேயர் போன்றோர் இவ்வழிபாட்டு மஹிமைதனை நமக்குப் பறைசாற்றுகின்றனர்.

சென்னை, திருவொற்றியூர் கோயிலில் உள்ள 27 நட்சத்திர லிங்கங்கள், திருவிடைமருதூரில் உள்ள 27 நட்சத்திர லிங்கங்கள், காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கணக்கான லிங்கங்கள், இராமேஸ்வரத்தில் உள்ள பதினோரு ஏகாதச ருத்ர மூர்த்தி லிங்கங்கள், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள லிங்கங்களும் விஜயதசமி அன்று தரிசிப்பதற்கு சிறந்தவையாகும். ஒரே இடத்திலிருந்து பல லிங்க மூர்த்திகளை தரிசிக்கக் கூடிய தெய்வீக வாய்ப்பைத் தரும் அதியற்புத தரிசனங்கள் இவை!

நடை சார்த்துதல்

ஆலய நடை சார்த்துதலின் ஆன்மீக ரகசியங்கள்
ஆலயங்களுக்குத் தரிசனத்திற்காகச் செல்கையில் நடை சாற்றியிருந்தால் என்ன செய்வது? கோயில் கதவு சாற்றியிருப்பது அபசகுனம் அல்ல ! அனைத்தும் இறைவன் செயலே! தரிசனம் தருவதும் அவன் முடிவே! ஒவ்வொரு ஆலயத்திலும் தரிசனம், ஆலய பூஜை, நைவேத்தியம் ஆகியவற்றுக்கு நேரத்தை ஒதுக்கிப் பெரும்பாலும் உச்சி பூஜைக்குப் பின்னர் காலை 12 மணி முதல் சாயரட்சை பூஜை ஆரம்பிக்கும் வரை (மாலை 4 மணி) ஆலய நடை சாத்தியிருக்கும் அல்லவா! இதற்குக் காரணம் ஓய்வு என்பது அல்ல. ஏனென்றால் முற்காலத்தில் 24 மணி நேரமும் ஆலயம் திறந்திருக்கும். அவ்வப்போது சில அரிய தெய்வ பூஜைகளுக்காக மூலஸ்தானம் சாத்தியிருக்குமே தவிர, எப்போதும் கோயில் திறந்திருந்த காலமும் உண்டு. மக்கள் தங்கிடவே மகாமண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டன. காலப் போக்கில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைசெயல் முறைகளுக்காக தற்காலத்தில் ஆலயம் சார்த்துகின்ற பழக்கம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

மனிதனுடைய குணாதிசயம் என்னவெனில் திடீரென்று ஏதோ எண்ணம் தோன்றி உடனே புறப்பட்டுப் பல ஆலயங்களுக்கும் தரிசனம் செல்லத் தொடங்கி விடுவான். உண்மையில், கொந்தளிப்புகளில் மனம் ஆட்படும் போதெல்லாம் ஆலய தரிசனம் என்பது மனதிற்கு நிறைவையும் சாந்தத்தையும் அளிக்கின்றது என்பது சத்தியமான வாக்கே! ஆலயத்தில் உள்ள மகா மண்டபங்களிலும் தீர்த்தக் கரையிலும் எத்தனையோ மகான்களும், சித்புருஷர்களும், அமர்ந்து உலாவி, தம்முடைய தபோசக்தியை இ(எ)ன்றைக்கும் நிரவிச் செல்கின்றனர், எனவேதான் ஆலயதரிசனம் என்பது ஆனந்தத்தை அளிப்பது மட்டுமல்லாமல் மனதிற்கு நிரந்தரமான சாந்த சக்தியையும் பெற்றுத் தருகின்றது.

கோயில்களுக்குச் செல்கையில், கோயில் நடைசாற்றியிருந்தால், அன்று எடுத்த காரியத்திற்கு ஓர் அபசகுனமாக ஆகிவிடுமா?

ஆலயத்தில் நடைசார்த்தல் என்ற ப(வ)ழக்கமானது தேவபூஜையின் பால் ஏற்பட்டதாகும். பூலோக ஆலயங்கள் மனித வழிபாட்டுக்கு மட்டுமல்லாது சிலந்தி, பசு, வண்டு போன்ற பல உயிரினங்களின் வழிபாட்டிற்காகவும், கோடானுகோடி தேவர்கள், மஹரிஷிகள், யோகியர்கள், சித்தர்கள் வழிபாட்டிற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே கோயில் நடை சார்த்தப்படும்போது தேவர்களும் மற்ற மஹரிஷிகளும் தேவ பூஜைகளை மேற்கொள்கின்றனர். நாம் செல்கின்ற நேரத்தில் கோயில் நடை சார்த்தியிருக்குமேயானால் ஏதோ கோயில் அதிகாரிகளும் குருக்களும் கதவை சார்த்தி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள் என்று தான் மேலெழுந்தவாரியாகத் தோன்றும். ஏனெனில் உண்மையில், கோயிலின் உள்ளே பரிபூரணமான தேவபூஜை நடைபெறுகின்றது. இதுவும் தெய்வத் திருவிளையாடலே.

நம்முடைய பூஜை முறைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் தேவர்களுடைய வழிபாட்டு முறைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தேவபூஜைகள் அனைத்துமே உலக வாழ்க்கையின், உலக ஜீவன்களின் மேன்மைக்காகத் தேவாதி தேவர்களால் கொண்டாடப்படுபவையாகும். ஆனால் தேவாதி தேவர்கள் கூட பல சமயங்களில், தண்டனைக்கு ப்ராயச்சித்தமாக, பூலோக ஆலயங்களுக்கு வந்து தம்முடைய குறைகளைப் போக்கிச் செல்வதுண்டு. நம்முடைய புராணக் கதைகளில் இந்திரன், சந்திரன், சூரியன் போன்ற மூர்த்திகளெல்லாம் தமக்கு ப்ராயச்சித்தமாகப் பல ஆலயங்களில் வழிபட்டுச் சென்ற அற்புதமான வைபவங்களைக் காண்கின்றோம்.

எனவே, நாம் ஆலயத்துக்குச் செல்லும் போது கோயில் நடைசார்த்தியிருந்தால் அதனை அபசகுனமாக எண்ணாது தேவபூஜையின் போது நாம் வந்திருக்கின்றோம், இது பெறற்கரிய பெரிய பாக்கியமென்று உணர்ந்திட வேண்டும். மேலும் பிரார்த்தனைக் குறைகள் இருந்தாலும் இத்தகைய நடைசார்த்தும் வகை மூலம் உங்களுக்குரிய நேர்த்திகள், பிரார்த்தனைகளின் அம்சங்கள், இயற்கையாகவே, தெய்வீக ரீதியாக உணர்த்தப்படுகின்றன, அதாவது இதன் உள்ளர்த்தம் என்னவெனில் எங்கெல்லாம் கோயில் நடைசார்த்தியிருப்பதால், தரிசனத்தைப் பெற முடியாமற் போகின்றதோ, அங்கு “தீர்த்தப் ப்ராயச்சித்தம்” குறிப்பிட்ட நபருக்கு அமைந்துள்ளது என்று அறிந்திட வேண்டும். எனவே, உடனடியாக, அங்குள்ள குளத்திலோ, தீர்த்தத்திலோ, புனிதமான ஆற்றங்கரையிலோ நீராடி, அந்த தீர்த்த நேர்த்திக் கடனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

நாம் அறிந்தவரையில் நமக்கு அத்தகைய தீர்த்த நீராடல் பாக்கி ஒன்றும் இல்லையே என்று எண்ணாதீர்கள்! கோயில் நடைசார்த்தியிருந்தாலும், தேவபூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, மூலஸ்தான இறைப் பரம்பொருளின் சக்தியானது நடைசார்த்தும் போது ஆலயத்தின் ஸ்தல விருட்சத்திலும், தீர்த்தங்களிலும், பரிபூரணமாக நிரவியிருக்கிறது. எனவே, மூலவரைப் பார்க்க முடியவில்லையே என்று எண்ணிடாது, தீர்த்தமிருப்பின் தீர்த்தத்தில் நீராடி, ஸ்தல விருட்சத்தை வலம் வந்து வணங்கி, கோபுர தரிசனத்தைப் பெற்றால், இது தெய்வ தரிசனப் பலன்களைப் பெற்றுத்தரும்.

மேலும் இன்னும் 5-10 நிமிடங்கள் தானே இருக்கிறதே. உடனே ரயிலையோ, பஸ்ஸையோ பிடித்துச் செல்ல வேண்டுமென்று, அதிவிரைவுப் பயணத்தில் ஆலய தரிசனத்தை மேற்கொள்ளாதீர்கள். டீவியிலும், தியேட்டரிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலும், ஹோட்டலிலும், பஸ்ஸுக்காகக் காத்திருப்பதிலும், டிக்கட் ரிசர்வ் செய்யும் போதும், ரேஷன் கடையிலும், மளிகைக் கடையிலும், இவ்வாறு எத்தனையோ இடங்களில், ஆயிரக்கணக்கான மணி நேரங்களை வீணடிக்கின்ற மனிதன், கோயிலுக்கு என்றால் அவதி அவதியாகச் சென்று 5 நிமிடத்தில் திரும்பி வந்து வருகின்றான். எந்த இறைப் பரம்பொருளின் கருணையால் ஒவ்வொரு விநாடியும் வாழ்கின்றானோ அந்த இறைவனையே மறந்து, அந்த இறைவனுக்காக, தன்னுடைய தினசரி வாழ்க்கையில் ஒரு பத்து நிமிடங்கள் கூட ஒதுக்குவது கிடையாது, இறைவழிபாடு இரண்டாம் பட்சமா?

காலையில் Walking என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டு பார்க்கிலும் சாலையிலும் வலம் வருகின்ற மனிதனுக்கு ஒரு 10 நிமிடம் கோயிலுக்குச் செல்வது என்றால் உடல் ஒத்துக்கொள்வதில்லை!

வேறு எதுவும் வேண்டாம், விடியற் காலையில் கோயிலை 108 அடிப் பிரதட்சிணம் செய்தால், அதைவிட ஒரு பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும்? வீட்டிற்கு அருகிலேயே கோயிலை வைத்துக்கொண்டு Walking என்ற பெயரில், ஒரு மைலுக்கு அப்பால் உள்ள பார்க்கிற்கும், பீச்சிற்கும் செல்கின்ற மனிதன், என்றைக்குத்தான் தினசரி வழிபாட்டில் ஆலய தரிசனத்தையும் மேற் கொள்ளப் போகிறானோ தெரியவில்லையே! 24 மணி நேரத்தில், இப்படியாக நாயைப் பிடித்துக் கொண்டும், குதிரை ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டும் வகைவகையான உருப்படியில்லாத வழிமுறைகளில் நேரத்தைச் செலவழிக்கின்ற மனிதன், ஒரு கால் மணி நேரம் காத்து இருந்து கோயில் கதவைத் திறந்தவுடன் சென்று மூலவரை வழிபடுவதற்கான பொறுமையைப் பெறவில்லையே!

“நான் அங்கே போகும்போது ரொம்ப Late ஆகிவிட்டது, கோயில் கதவைச் சார்த்திவிட்டார்கள்”, என்று புலம்புகின்ற மனிதன், அலுவலகம் என்றால் எவ்வளவு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றான்? இவ்வாறாக இறைவனுடைய ஆலயம், இறை தரிசனம், பிரார்த்தனை வழிபாடு என்றாலே இரண்டாம் பட்சமாக ஏன் மூன்றாம் பட்சமாகவே தள்ளப்பட்டுவிட்டது. பின், எவ்வாறு கலியுக மனிதன் தெய்வீகத்தில் முன்னேற முடியும்? பூஜைக்கு நேரமில்லை - என்னே பெரும் பொய்!

ஹோட்டலிலும், Partyகளிலுமாக ஏகப்பட்ட பணத்தை விரயம் செய்து எக்கச்சக்கமான உணவினைத் தட்டில் மீதம் வைத்துவிட்டுச் செல்கின்ற மனிதனுக்கு, ஓரிரண்டு வாழைப் பழங்களைப் பசுவிற்குக் கொடு என்றால் முகத்தைச் சுளித்துக் கொள்கின்றான். அதில் நம்பிக்கையும் ஏற்படுவது கிடையாது. கோடானுகோடி தேவர்கள் உறைகின்ற பசுவினுடைய புனிதமான தேகத்தைக் கண்டாலே ஆலய தரிசனத்தைப் பெற்றது போல் ஆகின்றதே. அதை அவன் எப்பொழுது உணரப் போகின்றான்? ஒன்றும் வேண்டாம், வழிச் செல்கையில் எதிரில் பசு ஒன்று வருமானால் அதைத் தொட்டு வணங்குகின்ற நல்ல பழக்கத்தை மனிதன் விட்டு விட்டானே!

வீட்டிற்கு வீடு பசுமாடு இருந்த காலம் போய், ஆங்காங்கு எங்கோ பசுமாடு கண்களுக்குத் தெரிகின்ற காட்சிதான் கலியுகத்தில் இப்பொழுது இருந்து வருகின்றது. இன்னும் ஆண்டுகள் கழியுமேயானால் வருடத்திற்கு 4-5 பசுக்கள் தான் கண்களில் தென்படுகின்ற அளவிற்குச் சென்றுவிட்டால், அப்போதுதான் மனிதனுக்குப் பசுவின் தெய்வீகத் தன்மை புரியப்போகிறது. ஆனால் அந்த சமயத்திலோ , It will be too late to realise anything! கண் கெட்ட பின் சூரிய வழிபாடு!

திருமருகல்

கோயில் நடை சார்த்தியிருக்குமானால் ஸ்தல விருட்சத்தை நிச்சயமாக தரிசனம் செய்து வர வேண்டும். கோயிலின் சர்வ சக்தியும் குடிகொண்டிருக்கும் மூலஸ்தானமே ஸ்தல விருட்சமாகும். கோடானு கோடி ஆண்டுகள் அவ்விடத்தில் இருந்து இறைவனை வழிபட்ட உத்தம் மகரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் தான் ஸ்தல விருட்சமாக மாறுகின்றனர், ஒரு வில்வமரமோ, மாமரமோ, வேம்பு மரமோ ஸ்தல விருட்சமாக இருக்கிறது என்றால் அது சாதாரணமானதல்ல. ஸ்தல விருட்ச வழிபாடுகள் என்ற விசேஷமான வழிபாட்டு முறைகள் உண்டு. இவ்வாறு யுகயுகமாக சந்ததி சந்ததியாக அந்த ஸ்தல விருட்சமானது அனைவருக்கும் அருள்பாலித்து வருகின்றது. அந்த ஸ்தல விருட்சத்தைப் பூஜை செய்வோமேயானால் அதனால் கிட்டுகின்ற மூலிகா சக்தியால் சந்தான பாக்கிய சக்திகள் அபரிதமாகும்.

பலரும் தங்களுடைய பிள்ளைகள் தீய ஒழுக்கத்தில் மிதந்து கிடக்கின்றனர் என்று வருத்தப்படுகின்றனர். குடி, கொள்ளை, சூதாட்டம், மது, புகை பிடித்தல் என் எத்தனையோ தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டு முறையற்ற காமத்தில், தன்னுடைய நன்னடத்தைகளை இழந்து பரிதவிக்கின்ற பிள்ளைகளுக்கு நற்கதி கிட்ட வேண்டுமென்றால், ஸ்தல விருட்ச பூஜை ஒன்றுதான் அதற்காகத் தக்க பிராயச்சித்தம் பெற்றுத் தரும். தினந்தோறும் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, நல்ல குளத்திலோ, கிணற்றிலோ உள்ள நீரை எடுத்து ஸ்தல விருட்சத்திற்கு ஊற்றி வருவார்களேயானால் அவர்களுடைய பிள்ளைகள் நன்முறையில் ஒழுக்கமான வாழ்க்கையைப் பெறுவர்.

இந்த பவித்திரமான ஸ்தல விருட்சத்தை தினந்தோறும் மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டு வந்தால் நாடி நரம்புகள் சீர்பெற்று நல்ல ஒழுக்கம் ஏற்படும். வாழை மரத்தை ஸ்தல விருட்சமாகப் பெற்றுள்ள கோயில்களில் (திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, திருமருகல்) முறையான ஸ்தல விருட்ச பூஜைகளை மேற்கொண்டு வந்தால் சந்தான பாக்கியம் கிட்டும்.

கோயில்களுக்குச் செல்பவர்கள் எங்கே தீர்த்தத்தில் நீராடினால், ஆடைகள் நனைந்து விடுமே, மாற்றாடை எடுத்து வரவில்லையே என்ற ரீதியில் தான் நேரே கோயிலுக்குச் சென்று வணங்கி, திரும்பி வந்து விடுகின்றார்கள். தீர்த்தத்தில் சிறிது தலையில் தெளித்துக் கொண்டால் மட்டும் போதுமானதாகுமா? சூரியன், சந்திரன், நவக்ரஹாதி மூர்த்திகளும், எமன், இந்திரன் போன்ற தேவாதி தேவர்களும் தேடிக் கண்டுபிடித்து ஓடோடி வந்து நீராடிய தீர்த்தத்தில், நீங்களும் சற்றே மூழ்கினால் உங்கள் பாவங்களெல்லாம் கரைந்து விடுமே! தீர்த்தமாடுதல், அதாவது கோயில் திருக்குளத்தில் நீராடுதல் என்பதை எவருமே முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. கோயிலுக்குச் செல்வது என்றாலே, மாற்றாடை எடுத்துச் சென்று, நன்றாக நீராடி, இறைவனை வணங்குதல் வேண்டும். கோயில் குளமென்றால் உள்ளூர் மக்கள் மட்டும் நீராடுவது என்ற எண்ணத்தை மறந்து விடுங்கள். இனியேனும் தீர்த்தமாடுதலுக்கான முக்கியத்துவத்தை அளித்து, அதன் பரிபூரண பலனைப் பெற்றிடுங்கள்.

உதாரணமாக, இன்றைக்குத் திருப்பதிக்குச் செல்பவர்கள், நேரே பாலாஜி பெருமாளைத் தரிசித்து வந்து விடுகின்றார்கள். அந்த வராக தீர்த்தத்தில் சற்றே நீராடி வந்தால்தான் என்ன? தரிசன பலன்கள் வேறு, தீர்த்தமாடுதலின் பலன்கள் வேறு. ஸ்தல விருட்ச பூஜைகளின் பலன்கள் வேறு. ப்ரஹார பிரதட்சிண பலன்கள் வேறு. அங்கப் பிரதிட்சண பலன்கள் வேறு. ஏன் இவ்வாறு பலன்கள் மாறுபடுகின்றன என்றால், மனிதன் எத்தனை விதமான முறைகளில் எந்த விதமான கர்மவினைகளையும் பாவங்களையும் தீவினைகளையும் சேர்த்துக் கொள்கின்றான். அவற்றிற்கான பிராயச்சித்தங்களை பல்வேறுவிதமான பூஜைமுறைகளின் மூலமே தீர்க்க முடியும். எல்லா பாவங்களையும் தீர்க்கக் கூடிய சக்தி தீர்த்தத்திற்கோ, ஆலய தரிசனத்துக்கோ உண்டு என்றாலும் கூட, மனிதனுக்கு அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே, என் செய்வது?

சர்வ நிவாரணி திருநாவுக்கரசராகிய அப்பர் ஸ்வாமிகள், தன்னுடைய தள்ளாத வயதிலும் கூட உழவாரத் திருப்பணி என்று உத்தமமான வழிபாட்டு முறையை உலகுக்கு எடுத்துக் காட்டினார். 80 வயதில் உழவாரக் கருவியைத் தூக்கிக் கொண்டு, ஆயிரக் கணக்கான கிராமங்களில் நடையாய் நடந்து கோயில்களைச் சுத்தம் செய்கின்ற அற்புதமான திருப்பணியை மேற்கொண்டு, உத்தம் தெய்வீக நிலையை அடைந்தார், அப்பர் ஸ்வாமிகள் வருகின்றார் என்றாலே ஊர் மக்கள் திரண்டு அவரை வரவேற்கின்ற அளவிற்கு அவருடைய தெய்வீக சக்தி ஓங்கி இருந்தது. தற்போது கலியுகத்தில் உழவாரத் தெய்வீகத் திருப்பணி என்ற இறைப்பணித் தத்துவத்தைப் பலரும் அறியாதவர்களாக இருக்கின்றார், பல அபூர்வமான தெய்வீக ரகசியங்கள் நிறைந்த உழவாரத் திருப்பணியானது கலியுகத்தின் மிகச் சிறந்த பூஜையென சித்புருஷர்கள் உணர்த்துகின்றார்கள்,

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளுடன் கடந்த பல வருடங்களாக, நூற்றுக்கணக்கான கோயில்களில் உழவாரத் திருப்பணி புரிகின்ற தெய்வீக வாய்ப்பு நம் ஆஸ்ரம அடியார்கட்குக் கிட்டியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம், திருஆனைக்கா ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள், தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர், திருவையாறு ஸ்ரீஐயாறுஅப்பன் எனத் தமிழகத்தில் பல முக்கியமான ஆலயங்களில் உழவாரத் திருப்பணி செய்கின்ற வாய்ப்பு பலருக்கும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் அருட்கருணையால் கிட்டியதென்றால் இத்தகைய பேறு இனி எந்த ஜென்மத்தில் கிடைக்கும்?

கோடானு கோடி ஜென்மங்களில் செய்த வல்வினைகளையெல்லாம் தீர்க்கின்ற இறை சக்தியை உழவாரத் திருப்பணி கொண்டுள்ளது. எத்தகைய அற்புதமானத் திருப்பணி அது! உழவாரத் திருப்பணி என்றால் பலரும் சேர்ந்து செய்வதுதானே, அது நம்மால் இயலாததாயிற்றே என்று எண்ணாதீர்கள். ஆலய தரிசனத்திற்குச் செல்லும்போதெல்லாம் தீக்குச்சிகளும், கற்பூர Plastic பேப்பர்களும், தேங்காய் மட்டைகளும், வாழை இலைகளுமாகவே சிதறிக் கிடப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இவற்றையெல்லாம் யாரோ சுத்தப்படுத்துவார்கள் என்று எண்ணி, வெறுமனே சுற்றி வருவதால் என்னே பிரயோசனம்?

இது நம்முடைய கோயில், நம் இறைவன்; நாம் தான் பவித்ரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உன்னத உணர்வுடன் அவற்றெயெல்லாம் பொறுக்கி எடுத்து, இவ்வாறு சிறிய அளவில் உங்களுடைய உழவாரத் திருப்பணியைத் தொடங்குங்கள், இதுதான் ஆலய தரிசனத்தின் பரிபூரண பலன்களைப் பெற்றுத் தரும். ஏதோ போனோம், நின்றோம், கற்பூர ஆரத்தியைத் தொட்டு வணங்கினோம், அர்ச்சனை செய்தோம், திரும்பி வந்தோம். இது மட்டும் போதுமா? உங்கள் உடம்பை வளைத்து, இறைவனுக்கு என்ன சேவை செய்தீர்கள் ? போட்டுக் கொண்ட Pantம் வேட்டியும் சற்றும் அழுக்கடையாது. பையிலிருந்து காசும் பேனாவும் கீழே விழாது, நின்ற நிலையிலேயே இறைவனைத் தரிசித்து விட்டு வந்தால் என்ன பிரயோசனம்?

அக்காலத்தில் பெண்கள் குனிந்து, வளைந்து, நிமிர்ந்து நின்று ஆலய முழுதும் கோலமிட்டு ஆலயத்தை மேன்மைப் படுத்தினர். இன்றைக்கும் இவற்றைத் தொடரலாமே! இது இயலாத காரியம் இல்லையே! செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பல பெண்களும் ஒன்று சேர்ந்து, ஆலயங்களுக்குச் சென்று பச்சரிசி மாவினால் ஆங்காங்கே நீர்க் கோலமிட்டும், பெரும் பலன்களை அடையலாமே! தயவுசெய்து பெயிண்டால் கோலம் போடாதீர்கள்,

பெயிண்ட் கோலமானது ஆலய விதி முறைகளுக்குப் புறம்பானது மட்டுமல்லாமல், சாபத்தைத் தான் பெற்றுத் தரும். இன்றைக்குப் பல தெய்வீக இயக்கங்கள் கூட ஆலயத்தில் பெயிண்டால் கோலம் போட்டு வருகின்ற அறியாமையைக் காண்கின்றோம். தயவு செய்து உடனடியாக இத்தவறான பழக்கத்தை நிறுத்திடுங்கள்! ஆலயத்தின் நடைசார்த்தியிருக்குமேயானால், நீங்கள் கையிலே அரிசிமாவு எடுத்துச் சென்றால், ஆலய நடைதிறக்கும் வரை பிரகாரங்களிலும் மண்டபங்களிலும் கோலங்களை இடலாமல்லவா? இதற்காகத் தான் உங்களுக்கென ஆண்டவன் சிறிது நேரத்தை ஒதுக்கித் தந்திருக்கின்றான். .

எனவே அடுத்தமுறை நீங்கள் ஆலயங்களுக்குச் செல்லும்போது கோயில் நடைசார்த்தப் பட்டிருக்குமேயானால் ஆலயத்தைக் கூட்டித் துப்புரவு செய்து, குப்பை கூளங்களைப் பொறுக்குதல், மீன்களுக்குப் பொரியிடுதல், நீர்க்கோலமிடுதல், ஒட்டடை அடித்தல் போன்ற நற்காரியங்களைச் செய்து வாருங்கள். இதன் பிறகு நீங்கள் ஆலயத்தில் நடை திறக்கும்போது மூலவரைச் சேவித்தீர்களேயானால் உங்களுடைய ஆனந்தம் பன்மடங்காகப் பெருகும். பிரார்த்தனைகளும் துரிதமாக நிறைவேறும், இறைவனுக்காக உடலை வளைத்துச் சேவை செய்வீர்களேயானால், இறைவனே உங்களுக்காக வளைந்து தீவினைகளைக் களைந்து நல்வரங்களைத் தருகின்றான்.

மனோவழிப் பயணங்கள்

மனோவழிப் பயணங்கள் பற்றிய சில குறிப்புகளை, சென்ற மாத அகஸ்திய விஜயம் “அடிமை கண்ட ஆனந்தம்” தொடரில் தந்திருந்தோம். இக்காலத்தில் பலவிதமான தியானமுறைகளில், Astral பயண நெறிகள் தத்துவ ரீதியாக விளக்கப்படுகின்றன. சில தியான முறைகளால், அடியார்கள் தாமாகவே ஆரம்ப முறை Astral பயணத்தில் செல்வோரும் உண்டு. ஆனால், Astral பயணம் மூலம் தெய்வத்தை நன்கு உணர வேண்டுமெனில் தக்க வழிகாட்டி மூலமாகவே அது அமைய முடியும். இல்லாவிட்டால், தவறான முறையில் செய்யப்படும் Astral பயணத்தால் பல கடுமையான பிணிகள், குறிப்பாக முதுகுத் தண்டு நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன. மனநிலைக் கோளாறுகளுடன் முதுகு வடம் முறிவதுமுண்டு! எனவே, அடியார்கள் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் நலம்.

Astral பயணம் என்று ஒன்று தேவை தானா? இது சித்திகளில் ஒன்றாக அமையுமா? இதனால் எத்தகைய பலாபலன்களைப் பெற முடியும், இது தெய்வீகத்திற்கு எவ்விதத்தில் உதவியாக இருக்கும். Astral பயணத்தால் லௌகீகமான பலன்கள் ஏதேனும் உண்டா? Astral பயணம் என்பது இறைநிலைகளில் உன்னதத்தைப் பெற்றுத் தரக்கூடிய வழிமுறைகளில் ஒன்று தான் என்பதில் ஐயமில்லை ! தீர்க்க தரிசனம் பெறுவதற்கு Astral பயணம் நிச்சயமாக உதவுகின்றது. இப்பயிற்சியில் முதலில் சில சித்திகள் ஏற்படக் கூடும். சில எதிர்கால நிகழ்ச்சிகளையும் அறிந்திடலாம். அந்த சித்திகளிலேயே மனம் லயிக்குமானால் Astral பயணத்தின் முழுப் ப(ல)யனையும் பெற முடியாது. ஏனெனில் மனித மனமானது சித்திகளைப் பெற்றவுடன், அதனை வாழ்க்கைக்கு எவ்விதத்தில் பயன்படுத்த முடியும், பேரும், புகழும்,பணமும் சம்பாதிக்க முடியும் என்ற குறுகிய எண்ணத்துடன் செயல்படத் துவங்குகின்றது. Astral பயணம் எத்தகைய சித்திகளைத் தந்தாலும் அதனையும் கடந்து செல்கின்ற உத்தம இறை நிலையைப் பெறுவதற்கு சற்குருவின் அனுகிரகம்தான் உதவி செய்ய முடியும்.

ஆஸ்ட்ரல் பயணத்திற்குத் தெளிவான மனோநிலை, உறுதியான வைராக்ய மனோ பாவம் வேண்டும். காமம், சித்தி, வரங்களில் லயித்திடாத வைராக்ய மனமே Astral பயணத்திற்கு மிகவும் தேவையானதாகும். மூலிகைகளை அடிக்கடி உண்டு வந்தால்தான் Astral பயணத்திற்கான மனத் தெளிவு கிட்டும், தலைவலி என்றாலே ரசாயனம் நிறைந்த அலோபதி மருந்துகளை விழுங்கிக் கொண்டு செயல்படுகின்ற மனிதனுக்கு, Astral பயணம் நிச்சயமாகக் கை கூடாது. தலைவலியோ, உடல் வலியோ, வயிற்று வலியோ, அனைத்தையும் தாங்கி நின்று, “இந்த வலி நம்மை என்னதான் செய்யப் போகிறது, பார்த்து விடுவோமே”, என்று பொறுமையுடன் காத்திருந்து, அதற்குரித்தான இயற்கை மருந்து வகைகளை ஏற்று வருவோர்க்குத்தான், மூலிகை சக்தி சிறிது சிறிதாக உடலில் சேரும். எனவே ஏதேனும் சிறிய நோய் வருமேயானால் இயன்ற அளவு மூலிகை வைத்தியத்தை மேற் கொள்வீர்களேயானால் இந்தச் சாக்கிலாவது உடலில் சிறிதேனும் மூலிகை சக்தி சேரலாமன்றோ! நோய் வந்தால்தான் மூலிகை சக்தி உடலில் சேரும் போலிருக்கிறது!

மூலிகை சக்தியானது நம் உடலில் 72000 நாடி, நரம்புகளிலும் ஆங்காங்கே உறைந்து, நமக்குப் பலவிதமான தெய்வீக சக்திகளைப் பெற்றுத் தருகிறது. Astral பயணம் நாடி நரம்புகளைப் பற்றி யோக வழிப் பயணமாதலின் மூலிகை சக்தி ஒன்றுதான் Astral பயணத்திற்கு கலியுகத்தில் மிகவும் உதவி புரிவதாகும். ஏனைய யோக, தியான முறைகள் மிகவும் கடினமானவை!

Brain Conscious நிலையில் அதாவது “ஜாக்ரத்” எனப்படும் விழிப்பு நிலையில் Astral பயணம் மேற்கொள்தலே உத்தமம். நாம் வாழ்கின்ற இந்த பூலோகம் தவிர எத்தனையோ பூலோகங்கள், மற்றும் கோடானுகோடி அண்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிவு பூர்வமாக உணர்ந்து கொண்டால் தான் தெய்வீகத்தில் நாம் முன்னேற முடியும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோல இந்த உலகத்தைப் பற்றிய நினைவிலேயே, வாழ்க்கையை எண்ணியே நாம் உழன்று கொண்டிருந்தால் நம்மால் தெய்வீகத்தில் முன்னேற முடியாது.

இந்த பூலோகத்தில் மட்டுமல்லாது, அனைத்து நவக்ரஹ மண்டலங்களிலும் கோடானு கோடி நட்சத்திர மண்டலங்களிலும், நிச்சயமாக வெவ்வேறு விதமான ஜீவ வாழ்க்கை நிலைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அங்கும் உயிர் வாழ்க்கையுண்டு. நம்முடைய பூர்வ ஜென்மப் பிறப்புகளில் எத்தனையோ லோகங்களில் இருந்து வாழ்ந்து இன்றைக்கு இந்த பூலோகத்திற்கு வந்திருக்கின்றோம்! நாம் வாழ்ந்த அத்தகைய லோகங்களுக்கும் மீண்டும் செல்வதும் Astral பயணத்தின் கூறு ஆதலின் இதையெல்லாம் தெய்வீகப் பகுத்தறிவுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை Astral பயணம் சென்று நாம் பெறுகின்ற அனுபவமானது எத்தனையோ ஆண்டுகளின் பூலோக வாழ்க்கையில் நாம் பெறுகின்ற பாடங்களுக்கு ஈடானதாக அமைந்திருப்பதால்தான், Astral பயணமானது உத்தம தெய்வீக நிலைக்கு முன்னோடியாக மிகச் சிறந்த யோக வழிமுறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பது Astral பயண விளைவுகளுள் ஒன்று. ஆனால் சரீர மாற்று வித்தைகளை அறிந்தால்தான் இது இயலும். நாம் விட்டுச் செல்கின்ற தேகக் கூட்டிற்குப் பாதுகாப்பாக முறையான மந்திரக் கட்டுகளை, தேவதா பிரசன்ன வித்தைகளை அமுல் படுத்திச் செல்லாவிடில், “சரீரக் கூடானது” ஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் சரிதத்தில் வருவது போல தந்திர சூட்சுமங்களால் மறைந்து அல்லது மறைக்கப்பட்டு விடும்! உடலின்றி நாம் ஆவியாக அலைய வேண்டியதுதான்!

ஒவ்வொரு முறை Astral பயணம் செல்லும் போதும் விழிப்புணர்வுடன் சென்றால்தான் பலவிதமான அனுபவங்களை நாம் பெற முடியும். பூலோகத்தில் நம்மால் காண இயலாத தாவர இனங்கள், உயிரினங்கள், நீரினங்கள், தட்ப வெட்ப நிலைகள், விதவிதமான மனித உருவங்கள், தேவலோக மனிதர்கள், தேவ ஒளி ரூபங்கள் போன்று பலவிதமான தெய்வீகப் படைப்புகளை நாம் காண்கின்ற போதுதான், “ஓஹோ இவ்வாறு இருக்கின்றதா, இப்படியெல்லாம் உண்டா” - என்று மனம் விரிந்து இறைவனின் சிருஷ்டியைக் கண்டு அதிசயித்திடுவோம். சிருஷ்டி தத்துவத்தை உணர வைப்பதும் ஆஸ்ட்ரல் பயணமே! இதுவே, இறைவனுடைய படைப்பானது மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாகும் என்ற பாடத்தை நமக்கு உணர்த்துகிறது. இதற்காகத் தான் Astral பயணம் மேற்கொள்ள வேண்டுமே தவிர, எத்தகைய சித்திகளைப் பெறவும் இதனைச் செய்தல் கூடாது.

Astral பயணம் எனப்படுவது நம்முடைய நாபியிலிருந்து தொடங்குகின்ற Silver Cord எனப்படும் நுண்ணிய உயிரிழையின் மூலமாக நம் Soul செல்கின்ற பயணமாகும். இதனைப் பற்றியவாறே நம்முடைய soul, ஆஸ்ட்ரல் பயணத்தை மேற்கொள்கின்றது. முதன் முதலாக astral பயணம் மேற்கொள்பவர்கள் பொதுவாக இந்த Silver Cord மூலம் குறித்த தூரம் வரைதான் செல்ல முடியும். இங்கிருந்து சந்திர மண்டலம் வரையுள்ள தூரத்தைப் போன்று இரண்டரை மடங்கு தூரத்தில் செல்லும் வண்ணம் ஒவ்வொருவருடைய Silver Cordன் தன்மையும் அமைந்திருக்கும். இந்த தூரத்திற்குட்பட்ட எல்லை வரைதான் முதலில் செல்ல முடியும்.

ஆனால் விண்ணுலகப் பயணமென்றால், எட்டுத் திக்குகளில் எந்த திசைக்கு எங்கு, செல்வது, ஏன் செல்வது என்று எத்தனையோ குழப்பங்கள் ஏற்படுமல்லவா? ஏதோ கடிவாளமில்லாத குதிரையை அவிழ்த்து விட்டால் அது எங்கு செல்வது என்று தெரியாது, தறி கெட்டு ஓடுவது போன்று விண்ணுலகப் பயணத்தில் நீங்கள் சென்றால் அதில் என்ன பிரயோசனம்? அதற்காகத்தான் தக்க குரு மூலமாக Astral பயணத்தை மேற்கொள்ள வேண்டும். Internet Surfing போல முதலில் யோக வழிப் பயண முறைகளை நன்கு அறிய வேண்டுமே!

எத்தகைய அனுபவமுமின்றி நாமே செய்து கொள்ளலாமே என்று Astral பயணம் தொடங்குவீர்களேயானால் தேவையில்லாத, பிசாசு, ஆவிகளுடன் குறுக்கிடும்படி உங்கள் பயணம் அமைந்துவிட்டால், உங்களால் திரும்பி வரவும் முடியாது. தீவினை சக்திகளிடம் மாட்டிக் கொண்டால், பைத்தியம் பிடிக்கின்ற அளவுக்கு மன நிலையும் மாறி விடும். உதாரணமாக, சந்திரலோகப் பகுதிக்கு Astral பயணம் செல்ல வேண்டுமென்றால் அது எந்தத் திசையில் அமைந்துள்ளது, சந்திர கிரஹ சலனங்களுக்கு ஏற்ப எந்தக் கோணத்தில் செல்லவேண்டும் என்றும் எதன் வழியாகச் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். Surfing the divine path to various logas is not that easy என்பதைப் புரிந்து கொள்க!

விண்வெளி என்பது கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாது மிகவும் பரந்தது அல்லவா! கோடானு கோடி நட்சத்திர மண்டலங்களைக் கொண்டு எத்தனையோ கோடி அண்டங்களையும் கொண்டதாக அது விளங்குவதால், astral பயணத்தை வெறும் சித்திகளுக்காக வீணடிக்காது நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2 மணி, 3 மணி நேரத்தில் நீங்கள் astral பயணத்தை முடித்துக் கொண்டு உங்கள் உடலுக்குத் திரும்பி வரவேண்டுமென்றால் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டால் தானே நீங்கள் திரும்பி வரமுடியும். ஒன்றுமே தெரியாமல் எப்படிப் புறப்பட்டுச் செல்வது?

அப்படியானால், யாருமே ஆஸ்ட்ரல் பயணம் செல்ல முடியாதே! அதற்குரித்தான குரு இருந்தால் தானே நாம் தெரிந்து கொள்ளலாமே என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? உண்மையே! சத்குருமார்கள் அனைவருமே astral பயணத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தான்! ஆனால், உங்களுக்குரிய சத்குருவை நாம் சுட்டிக் காட்டுவோமேயானால், உங்கள் எண்ணம் எல்லாம் எப்போதும் அவருடன் astral பயணம் செல்வதில்தான் இருக்குமே தவிர, இதைப் பற்றியே கேட்டு அவரைத் துன்புறுத்துவீர்கள்! உங்களுக்குரிய பக்குவம் வரும்வரை, அவர் அந்த astral பயணம் பற்றிப் பேசவே மாட்டார், அதுவரையில் அதைப் பற்றித் தெரிந்தவராகவும் காட்டிக் கொள்ள மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போது பார்த்தாலும் astral பயணம், astral பயணம் என்று அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களுடைய நம்பிக்கையும் போய் விடும். தக்க சமயத்தில் எந்த சத்குருவும் தனக்குரியதைத் தருவார் என்ற எண்ணமிருந்தால்தான், நீங்கள் astral பயணத்தில் வெற்றி கொள்ள முடியும்.

நீங்கள் செல்லாத astral பயணமா என்ன? இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். மனிதர்களாகிய நாம் தினந்தோறும் உறங்குவதை “Auto run” பெற்ற Soul Search என்றுதான் சொல்லவேண்டும். இது Default ஆக ஒவ்வொரு மனிதனின் உடலில் அமைந்திருக்கின்றது! அதாவது இதுவே உறக்க நிலை ஆஸ்ட்ரல் பயணம் 1 கனவுகளும், நம் Soulக்குப் பல லோகங்களில் ஏற்படுகின்ற அனுபவங்களே!

எந்த ஒரு மனிதனுமே பிறந்த நாள் முதல் தன்னையுமறியாது தெய்வீகத்தை நோக்கித் தான் பயணத்தை மேற்கொள்கின்றான். அப்பயண வழிகள் முறையாக இருந்தால், குறித்த சில பிறவிகளிலேயே அவன் தெய்வீகத்தின் முதல் எல்லைக் கோட்டை அடைந்து விட முடியும்! ஆனால் வழி தவறிச் செல்வானேயானால், அவனுக்குப் பல கோடிப் பிறவிகள் தேவைப்படும். இத்தகைய instinct to live என்ற ஒரு தன்மை ஒவ்வொரு உயிரினத்திலும் விரவி இருப்பதால் தான் அதனுடைய வாழ்க்கை நடைபெற்று வருகின்றது.

எவ்வாறு நாமெல்லாம் இறைவனால் படைக்கப்பட்டு விட்டோமோ, ஈ, எறும்பு, புழு, பூச்சி முதல் மனிதன், விலங்கு, தேவர் வரை என்ற வகையில் இறைவனால் உருவாக்கப்பட்டு விட்டோமோ, ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இறைவனுடைய கருணை உண்டு. அதனால்தான் புழுவோ, பூச்சியோ, மனிதனோ எந்தப் பிறவியும் இறைவனுடைய அருட் கருணையால் கிடைத்ததேயாகும். இந்த அருட்பெருங்கனி வளத்தை மூலாதாரமாக வைத்துக் கொண்டு, உத்தம் தெய்வீக நிலையை அடைவதற்குப் பாடுபடவேண்டும். அதுதான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் குறிக்கோள் தான் அறிந்தோ அறியாமலோ இதனை அவன் செய்து கொண்டுதான் இருக்கின்றான், ஆனால் நாம் அதனை உணர்வதில்லை.

Astral பயணத்தைப்பற்றி இன்னும் விளக்குவோமேயானால், இதனுடைய ரகசியங்கள் மனிதர்களுக்குப் புலப்படாமல் போகக் கூடும் அல்லது குழப்பங்களும் ஏற்படும். புரிந்ததுபோல் இருக்கிறது, ஆனால் புரியவில்லையே என்றுதான் சொல்லத் தோன்றும். ஏனென்றால் astral பயணம் என்பது அத்தகைய மகத்தான, நம்ப முடியாத, ஆனால் அதி அற்புதமான தெய்வீகத் தன்மைகளை உடையது. ஆறு அறிவுக்கு அப்பாற்பட்டு, ஏழாவது அறிவின் முதிர்ச்சியில்தான் இதனுடைய விளக்கங்களை ஓரளவு பெற முடியும். எவ்வாறு ஒரு LKG,  UKG குழந்தைக்கு DNA, Nuclear Fission/Fusion, trigonometry பற்றிச் சொன்னால் புரியாதோ, அதே போன்று சாதாரண மனிதனுக்கு astral பயணம் பற்றி எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாது.

ஆஸ்டரல் பயணத்திற்கான மனோ சக்திகளைத் தரவல்ல கோயில்களும் உண்டு!

அடிமை கண்ட ஆனந்தம்

அந்த காய்ந்த சுக்கா ரொட்டிகளைத் தின்பதில் சிறுவன் பெருந் தயக்கம் காட்டிடவே, பெரியவரே அனைத்து ரொட்டிகளையுந் தின்று தீர்த்து விட்டார்!

பெரியவர் ஏதோ முணுமுணுப்பது போல் தோன்றிடவே, சிறுவன் அருகில் சென்று சற்றே செவி மடுத்திட,“சொன்னா புரிஞ்சுக்கணும் இல்லாட்டி தானா தெரிஞ்சுக்கணும். என்னடா இது, இந்தப் பாலைவன ஏரியால வீடு, வாசலே தெரியலையே, எப்படிடா இவ்வளவு ரொட்டி வந்துச்சுன்னு கொஞ்சம் யோசிச்சாப் போதுமே, இந்த சுக்கா ரொட்டி பூலோக Product இல்ல, தேவலோகத்து சரக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனா விதி நல்லா வெளயாடிச்சுன்னா கெடைக்க வேண்டிய பிரசாதங் கூடக் கெடைக்காமப் போயிடும்! காஞ்சதோ, கருகியதோ தெய்வப் பிரசாதம்னா, பிரசாதம்தாண்டா!”

“எப்பவும் குரு பக்கத்துல இருந்தாக்க அவரோட மஹிமை புரியாதுடா! ராயபுரத்துல பாரு அந்தப் பெரியவரு எங்கே, எப்ப வருவாருன்னு கேட்டு ஜனங்க துடிக்கறாங்க! அப்படி உன்னை வச்சாத்தான் மஹானுங்களோட அருமை தெரிய வரும் என்ன பண்றது, ஆயிரமாயிரம் மைல் தாண்டி வந்து இந்த பிரசாதங் கெடச்சாக் கூட உனக்குக் கொடுப்பினை இல்லையே, என்ன செய்யறது?”

பெரியவரின் அருளுரைத் தூறல் சற்று ஓய்ந்தது, இல்லையில்லை, நின்று நிதானித்துப் பெரு மழையானதே,
பெரியவர் சற்றே குரலை உயர்த்தினார்! “கலியுகத்துல் மஹானுங்க, யோகிங்க அங்கங்க காட்டுல, மலைல, பாலைவனத்தில் குகைங்கள்ள போய் உக்காந்துக்கறாங்க! ஏன்னா அவங்களோட அருமை கலியுக மனுஷனுக்குத் தெரியலை! சித்தி பண்ணுவியா, அதைச் செய்வியா, இதைக் காட்டுவியான்னு ஏதேதோ விஞ்ஞானத்தை வெச்சுகிட்டு மஹானுங்ககிட்டயே விளையாடறாங்க!”

“கடவுள் படைச்சதுதானே அந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும்! மனுஷனோட வாழ்க்கைக்கு விஞ்ஞானத்தை நல்லபடியா பயன்படுத்திக்கணும். விஞ்ஞானத்துக்கு ஏத்த மாதிரி கடவுளைக் காட்டறதோ, அற்புதங்கள் செய்யறதோ எங்களுக்குத் தேவையில்லாதது. அதுக்கு அவசியமும் கிடையாது!”

“நம்பினா நம்பு, கடைசி வரை நம்பு, கரையேத்தறோம்! நம்பாட்டி, கோடி கோடியா மனுஷனா, பிசாசா, குதிரையா, கழுதையா பிறப்பெடுத்து இதே LKG, UKG தான். இதே Life Cycle தான்!”.

“என் பக்கத்துல இருந்துகிட்டே இங்க ரொட்டி வந்ததே, உனக்குக் கடவுள் காட்டிய கருணைன்னு புரியலைன்னா மத்தவங்களை எப்படிடா நான் குறை சொல்ல முடியும்! இவ்வளவு தூரம் உன்னை எதுக்குக் கூட்டியாந்தேன்! ஆஸ்ட்ரல் பயணம்னா என்ன? தியானத்துல எப்படி ஆஸ்ட்ரல்ல போறது, தூக்கத்துல எப்படி ஆஸ்ட்ரல் பயணம் இருக்கும், இப்ப நம்ப வந்தோமே அந்த மாதிரி ஜாக்ரத் நிலைல அது எப்படியிருக்கும்னு புரிஞ்சுக்கணும்டா!”

“இந்தக் கிழவன், காரண காரியம் இல்லாம எதையுமே செய்ய மாட்டான்னு தெரிஞ்சுக்கோ! மஹாசாயாவுக்குக் (ஹிமாலயப் பெரும் யோகி) கெடச்ச மாதிரி உட்கார்ந்த இடத்துலேயே கோடி கோடியா கர்மங்களை பஸ்மம் பண்ணி அண்ட சராசரத்துல எங்க வேணுமானாலும் ஆஸ்ட்ரல்ல போயிட்டு வரலாம், ஆனால் எல்லாருக்கும் அந்தப் பக்குவம் இருக்காதே! அப்படிப் போய் நாம் என்ன சாதிக்கப் போறோம் ?அதுதான் ரொம்ப முக்கியம்! ஏன்னா ஆஸ்ட்ரல் ரகசியங்கள் எல்லாத்தையும் அவ்வளவு சீக்கிரமா நாங்க சொல்லித் தர்றது கெடையாது! ஆனா மாயை எப்படி வேண்டுமானாலும் விளையாடிக் கவுத்துடும். நல்ல வைராக்ய சித்தி இருந்தாத்தான் மாயைலேந்து தப்பிச்சுக்கலாம்.”

சில மாதங்களுக்கு முன்....... எங்கோ சென்று கொண்டிருக்கையில் சிறுவனுக்குப் பெரியவர் காட்டிய காட்சி ஒன்று கண்களுக்குள் ஓடியது. சிறுவன் தன்னை மறந்தான்! தெருவில் கோலிக ்குண்டு விளையாடிய ஒரு சிறுவனின் தலைமேல் ஒரு பெரு ஒளி வட்டம் (Aura!) மிளிர்வதைக் கண்டு சிறுவன் திகைத்து நின்றுவிட்டான்.

“இது எப்படி வந்தது?”

“ஆமாண்டா! இவரு பெரிய துறவியா இருந்தாரு, நல்ல தெய்வீக நிலைகள் கெடைச்சது! கொஞ்சம் கர்வம் இவருக்கு வந்தது... “குருவை விட நெறயக் கத்துகிட்டோமோன்னு,” அவ்வளவுதான் குரு மேலேயே சந்தேகம் வந்துடிச்சு! இது போதாதா, மேல முனிவர்கள் லோகத்துக்குப் போறதுக்குள்ளேயே “ரிவிட்! (Revert or revet!)”அடிச்சுட்டாங்க! பெரிய துறவிக்கே பொத்துனு கீழே விழுந்து மனுஷப் பிறவி! Seventh planeகாரங்களுக்கே இப்படி மாயை விளையாடுதுன்னா நம்பள்ளாம் எந்த மூலைக்கு! அதுக்குத்தாண்டா ஆண்டவனோட அடிமையா எப்பவுமே இருந்துட்டா எந்தத் தொந்தரவும் வராது!”

சிறுவன் ஏதோ cross-thoughtல் லயித்து மீண்டும் நடப்பு நிலைக்கு வருவதற்குள் பாலைவனத்தில் பெரியவரின் அருள் மொழிகள் எங்கெங்கோ தாண்டிச் சென்று விட்டன!

...இந்த மாதிரி மூணாவது பிருதிவி பூதத்துல, இடகலைல மூச்சை நிறுத்தி, வாசி கலையை மாத்தி... பெரியவர் ஸீரியஸாக எதையோ நாட்டிய, பாவனா முத்திரைகளுடன் விளக்கிக் கொண்டிருக்க....

கடினமான calculus கணித வகுப்பிற்கு லேட்டாக வந்தமையால் பாடங்களை விட்ட மாணவன் போல், பெரியவர் எதைப் பற்றிச் சொல்கின்றார் என்று தெரியாது, புரியாது திருதிருவென்று விழித்தான் சிறுவன்!

பெரியவர் நிறுத்தி விட்டார். அவர் கண்கள் நன்கு சிவந்திருந்தன. பல நிமிடங்களாக மூச்சை நிறுத்தி சுவாச பந்தன யோகத்தில் திளைத்தமையால் கண்கள் கோவைப் பழமாய்ச் சிவப்பு நிறத்தில் பொங்கி ஜ்வலித்தன!

“அட்டா வாத்யார் யோகப் பயிற்சி செய்யும் போது கவனிக்காம விட்டுட்டோமே. ஏதோ நெனப்புல இருந்துட்டோமே!”

“என்னடா ஏதேதோ நெனைச்சுக்கிட்டே ரொம்ப முக்கியமான ஸப்ஜக்டையே கோட்டை விட்டுட்டியே! ஆஸ்ட்ரல்ல போறதுக்குன்னு ரொம்ப முக்யமான பஞ்சபூத சுவாச நாடி தத்துவமாச்சே இது! அதுல வேற, நீ கவனிக்கறயாக்குமன்னு நெனச்சுக்கிட்டு அபிநயமெல்லாம் புடிச்சு ரொம்பக் கஷ்டப்பட்டு மூச்சைக் கட்டி சொல்லிக்கொடுத்தேனேடா! அதுக்குள்ளாற அப்படி என்னடா அதிசய யோசனை! இதெல்லாம் பதஞ்சலியோட யோக சூத்திரத்துல வர்றயோக அப்யாசங்கள் அத்தனையுமே!”

“இப்ப அந்த சூத்ரங்களைச் சொல்லித் தர்றவங்க, ரொம்பக் கொறஞ்சு போய்ட்டாங்க நாம இங்க வந்துருக்கமே இது ஓஸோன் (Ozone) நெறஞ்சுருக்கற ஏரியா! இங்க ஒரு முறை சுவாச பந்தனம் கட்டி பிருத்வி பூத நாசி/வாசி பாஞ்சுச்சுன்னா போதும் நம்ப ஊர்ல ஆயிரம் வாட்டி மூச்சைக் கட்டற மாதிரி!”

“நாங்க ஒரு தடவை சொன்னா அதைத் திருப்பிச் சொல்ல மாட்டோம்னு உனக்கு நல்லாத் தெரியுமில்ல, அப்படி என்ன வெளி நெனப்பு வேண்டிக் கெடக்கு! ஸெவன்த் பிளேன்ல (Seventh Plane) இருக்க வேண்டியவங்க கூட மாயைல மாட்டிகிட்டு கோலி ஆடறாங்கன்னு நேர்லேயே காமிச்சு அதிலேந்து என்ன பாடம் கத்துக்கிட்ட நீயும் அந்த மாயைல சிக்கிக்கிட்டு நான் சொன்ன. சுவாச யோக வழியை விட்டுட்டியே!”

சிறுவன் கண்களில் நீர்த் திவலைகள் பனித்தன!

“இது மட்டும் ஏரி கட்டின மாதிரி பொசுக்குனு வந்துடும்டா! அழுது என்ன பிரயோசனம்! பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நான் சொன்ன பாடம் போனது போனதுதான் உன் தலைல அத எழுதல போல இருக்கு, இப்படித்தாண்டா பக்கத்துல் இருந்து கிட்டே குரு சொல்றதை விட்டுட்டா, உனக்கே இந்த அருமை புரியலைன்னா கலியுகத்துல வேற யாரடா குறை சொல்ல முடியும், சுக்கா ரொட்டி மாதிரி மாயமா வந்த தேவலோக பிரசாதத்தையும் மாயைல விட்டுட்ட...”

பெரியவர் எதையோ எங்கேயோ பார்த்தவாறு சற்று நிறுத்தினார்.

சிறுவனும், எதையோ பறிகொடுத்தவனாய், எதையோ என்ன, வைரமான பொக்கிஷத்தையே இழந்து விட்டவனாய், கனத்த எண்ணங்களுடன் பெரியவரைப் பார்த்தான்.

குற்ற உணர்வினால், அவருடைய தீர்கமான கண் ஒளியைத் தாங்க இயலாத வனாய் மீண்டும் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போல எங்கோ தம் கண்களை அலை மோதிக் கொண்டிருந்த பெரியவர் தன் பார்வையைச் சட்டென்று சிறுவன் மேல் செலுத்தி “பிரசாதமும் போச்சு...”இப்ப நான் சொன்ன, செஞ்சு காட்டின முக்யமான பிருதி பூத சுவாச, வாசி ரகசியங்களும் காத்தோட போயிடுச்சு... பசி மயக்கத்துல விட்டுட்டியா என்ன? சரி... சரி... என்ன பண்றது, அதோ தூரத்துல ஒத்தர் வராரு பாரு, அவர் கிட்டயாச்சும் உனக்குப் பசி அடங்கற மாதிரி ஏதாச்சும் இருக்கான்னு பாக்கலாம்”

...சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்!

வறண்ட பாலைவனம் போலிருந்த அப்பகுதியில் எட்டுத் திக்குகளிலும் வீடோ, வாசலோ எதுவும் தென்படவில்லை! ஆனால் அந்த மனிதர் எப்படி திடீரென்று வந்தார்! சிறுவன் உஷாரானான் !

“இதில் ஏதோ திருவிளையாடல் இருக்கிறது!”

வந்தவரிடம் ஏதோ இனம் புரியாத பாஷையில் பேசிக் கொண்டே பெரியவர் முன்னே விரைந்திட சிறுவன் பின்னால் ..... almost ஓட வேண்டியதாயிற்று!

“இந்த வாட்டி ரொம்ப உஷாரா இருக்கணும்! இந்த பாலைவன ஆளு சாதாரண ஆசாமி இல்ல, ஏதோ விஷயமிருக்கு!”

சிறுவன் தன்னை “உஷாராக்கிக்” கொண்டான், எதிரே ஒரே ஒரு சிறு வீடு ... இல்லையில்லை. ஒரு பழைய, பெரிய குடிசை போல்...

“இவரோட உள்ள போயி, ஏதாச்சும் கெடைக்குதா பாரு. நான் கொஞ்சம் வெளில உலாத்திட்டு வர்றேன். பாஷை தெரியாட்டி என்ன, திங்கறதுக்கு எதுக்குடா பாஷை...!”

ஒன்றும் புரிபடாதவனாய் அந்த புது மனிதருடன் அச்சிறு வீட்டினுள் நுழைந்தான். சிறுவன், உள்ளே சாம்பார் மணம் கமகமவென்று வந்திட... சிறுவன் திகைத்தான், அவனுக்கென்று விசேஷமாகத் தமிழ் நாட்டுச் சமையல் தயாராகிக் கொண்டிருந்தது பாலைவனத்தில்!

தெய்வீகமாக வாழ்வது எப்படி ?

எத்தகைய சாதாரண நிலையில் இருந்தாலும் கூட தெய்வீகமாக வாழ்வது என்பது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால் இதற்காக உங்களுடைய தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், சில தெய்வீக அம்சங்களை நிரவுவதற்காகப் பழகி வர வேண்டும்.

“நமக்கெல்லாம் அவ்வளவாக பக்தி கிடையாதப்பா, ஏதோ நெற்றிக்கு விபூதியோ, குங்குமமோ இட்டுக் கொள்வோம், கோவிலுக்குப் போவோம், வருவோம்”, என்று பலரும் ஏனோ தானோ என்று பதில் சொல்வதை, என்ணுவதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம் தெய்வீகம் என்றாலே மிகவும் பக்தி சிரத்தையுடன், புனிதத்துவம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று அஞ்சுவதால்தான்!

“நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலே தெய்வீகத் தன்மைக்கு உரித்தான அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும், நியதிகளையும், விதிமுறைகளையும் நம்மால் கடைபிடிக்க முடியாது. எனவே ஏதோ ஓரளவு, பூஜை, கோவில் குளம் தெய்வ தரிசனம், தீர்த்த நீராடல்”– இவற்றோடுநமக்குரியதான வாழ்க்கைப்பகுதியை முடித்துக் கொள்ளலாம் என்றுதானே பலரும் நினைக்கின்றனர். இத்தகைய மிக மிக லகுவான எண்ணங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்காக நாம் பிறப்பெடுத்தோம்? பிறவிகளையே அறுக்க வல்ல பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவி மீண்டும் கிடைக்குமா?

சித்தர்களுடைய இறைவழி முறைகள் மட்டும் தான் கலியுகத்திற்கு மட்டுமல்லாமல் எந்த யுகத்திலுமே அனைத்துத் தரப்புகளை சார்ந்த ஜீவன்களுக்கும் உரித்தான ஆன்மீக வழியை மிகமிக எளிமையான தெய்வீக வழிபாட்டு முறைகளாக அருள்கின்றன. இதை அறிவதற்காக ஒரு குருவை நாம் பெற்றாக வேண்டும். குரு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள், நீங்கள் தக்க சற்குருவைப் பெறும்வரையில் உங்களுக்கு உரித்தான தெய்வீக வழிமுறைகளை எந்த விதத்திலாவது நீங்கள் பெற்றுக் கொண்டுதான் இருப்பீர்கள் ! அவற்றையேனும் முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்து வாருங்கள். சற்குரு தானாகவே உங்களை ஆட்கொள்வார்.

காலையில் உறங்கி எழுவது முதல் காலைக் கடன்களை முடித்து, நீராடி, இறைவனை வணங்கி, அலுவலகத்திற்குச் சென்று, மாலையில் மீண்டும் ஓய்வெடுத்து, T.V.யைப் பார்த்து, உண்டு, உறங்கி இவ்வாறாக உங்களுடைய தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நிச்சயமாகத் தெய்வீகத்தைக் கொண்டு வர முடியும். இது கடினமான செயலும் அல்ல, சில குறிப்பிட்ட நியதிகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தால்!

சித்தர்களுடைய அருள் வழி முறைகளிலே எந்த விதமான நிலையில் உறங்க வேண்டும்? எத்தகைய உடைகளை உடுக்க வேண்டும்? எவ்வாறு மூச்சு விட வேண்டும்? ஸ்கூட்டரிலோ அல்லது வாகனத்திலோ செல்லும் பொழுது எந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்? நீராடும் பொழுது சொல்ல வேண்டிய எளிய மந்திரங்கள், உறங்குவதற்கு முன்னும், பின்னும் கடைபிடிக்க வேண்டிய மிக எளிய தரிசன முறைகள்  இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களிலும் மிகமிக எளிமையான முறையில் தெய்வீகத் தன்மைகளைப் புகுத்தி வருவோமேயானால் நாளடைவில் நம்முடைய தினசரி வாழ்க்கையின் 24 மணி நேரத்திலும் நம்முடைய காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதோடு தெய்வீகச் சிந்தனைகளையும் வலுப்படுத்தி வருகின்ற ஓர் அற்புதமான உங்களுடைய ஆத்ம வாழ்வினைப் பெற்றிடலாம்.

இதுவரையிலான உங்களுடைய மிகச் சாதாரணமான வாழ்வை இனியேனும் ஆத்ம வாழ்வாக மாற்றுங்கள் இல்லறத்தினூடே! ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனைவருக்கும் உரித்தான, சித்புருஷர்கள் அருள்கின்ற தெய்வீக அருள் வழி முறைகளை இத்தொடரில் அளிக்கின்றோம்,

காலைப் பொழுதின் அரிய தரிசனம்!

காலையில் எழுந்தவுடன் உங்களுடைய இரு உள்ளங்கைகளையும் விரித்து “துவாதச தரிசனம்” எனப்படும் உள்ளங்கை தரிசனத்தை முதலில் பெற்றிடுங்கள். இதன் பிறகு தெய்வப் படங்கள், தீப ஜோதி, மனைவி, பெற்றோர்கள், கண்ணாடி, மஞ்சள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை விருட்சங்கள், நாகலிங்க மரம், மல்லிகை, பவள மல்லிச் செடி போன்ற நல்ல தரிசனங்களைக் கண்டிடுக. இவற்றைப் பார்க்கும் பொழுதெல்லாம் “ஓம் பாஸ்கராய நம:, ஓம் சூரிய தேவா போற்றி என்று துதித்து வாருங்கள், ஏனென்றால் உங்களுக்குக் கண்ணொளி தருகின்ற சூரிய பகவானுடைய அருட் கடாட்சத்தின் மூலமாகத்தான் நீங்கள் காலையில் இத்தகைய சுப தரிசனங்களைப் பெற முடிகிறது என்பதை மறந்து விடாதீர்கள். ஸ்ரீ சூரிய நாராயண சுவாமியின் இறைப் பெருங்கருணை கிட்டாவிடில் நமக்குத் தெளிந்த பார்வை நிச்சயமாகக் கிட்டாது.

வயதானவர்களாயினும், கண்ணாடி அணிந்திருப்பினும் மேற்கண்ட நல்ல தரிசனங்களைக் கண்ணுக்குள் நிலை நிறுத்திட முயல வேண்டும் அல்லது காலையில் தீபஜோதியின் தரிசனத்தையாவது பெற வேண்டும். இதற்காகத்தான் அக்காலத்தில் பின் தூங்கி முன் எழுகின்ற பேதையராக விளங்குகின்ற மனைவிமார்கள் விடியற் காலையிலே எழுந்து, நீராடி, கோலமிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வைப்பார்கள். பின் எழுகின்ற கணவன் இந்த ஜோதி தரிசனத்தைப் பெற்று “நல்ல நாளாக அமைய வேண்டுமே, இறைவா!” என்று வேண்டித் தொடங்குவான்.

கோபுர தரிசனம் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். உங்கள் வாயிலில் அல்லது ஜன்னல் மூலமாகக் கோபுர தரிசனம் கிட்டுமேயானால் அது மிகவும் பெறுதற்கரிய பாக்கியமாகும். குறிப்பாக 7, 9, 13 கலசங்களை உடைய கோபுர தரிசனம் பெறுதற்கரிய பாக்கியமாகும். இதற்காகவே கோபுர தரிசனங்களை உடைய படங்களையும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். காலை தரிசனத்திற்கு இவை மிகவும் ஏற்றவையாகும். இவற்றைக் கடைபிடித்திட மூன்று நிமிடங்கள் கூட ஆகாது!

விழிப்பு நிலை பற்றி ஓர் ஆத்ம விசாரம் செய்து பார்த்தீர்களேயானால் எந்த எண்ணத்துடன், எந்த ஜெப நிலையில், தியானத்துடன் நீங்கள் உறங்கச் செல்கின்றீர்களோ, அதே நிலையில் நீங்கள் விழித்தெழுவீர்கள்! இதனை சோதனைச் செய்து பார்க்க வேண்டுமேயானால் உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம், சிவபுராணம் அல்லது மிகவும் பழக்கமான ஒரு இறைத் துதியை ஒதிக் கொண்டு நீங்கள் உறங்கப் பழகுவீர்களானால் மறுநாள் காலையில் அத்துதிகளின் அதே உரைகளுடன், வாக்கியங்களுடன் உங்களுடைய விழிப்பு நிலை துவங்குவதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

உதாரணமாக நீங்கள் தினந்தோறும் திருஅண்ணாமலையை இரவில் மானசீகமாக கிரிவலம் வருவதாக எண்ணி இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள். இது மிகச் சிறந்த இரவு நேர தியானமாகும். ஆனால் இத்தகைய மானசீக திருஅண்ணாமலை கிரிவல யாத்திரையை மிகவும் பக்தி பூர்வமாகச் செய்திட வேண்டும். ஒரு மனிதன் பிரயத்னப்பட்டு, கஷ்டப்பட்டு, எவ்வாறு முட்டி வலியுடன் கிரிவலம் வருகின்றானோ அதே விதமான உணர்வுடன் நீங்கள் செய்து கொள்தல் வேண்டும். மானசீக கிரிவலம் தானே என்பதற்காக ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆரம்பித்து உடனே ஸ்ரீரமண ஆஸ்ரமப் பகுதிக்கு வந்து அங்கிருந்து செங்கம் சாலைக்கு வருவதாக வேகவேகமாக மனவோட்டத்தைச் செய்தல் கூடாது. பிரம்ம லிங்கத்தில் ஆரம்பித்து அங்கிருந்து தெற்கு கோபுரம் நோக்கி வந்து கோபுரப் பகுதியில் உள்ள சிறிய மேட்டைக் கூடக் கஷ்டப்பட்டு ஏறுவதைப் போல உணர்ந்து, எண்ணி, இந்த அளவிற்கு மிகவும் தத்ரூபமாக கிரிவலத்தைத் துவங்க வேண்டும்.

ஏன் இதனை வலியுறுத்துகின்றோம் என்றால் ஒரே இரவிற்குள் உறக்கம் வருமுன் நீங்கள் கிரிவலத்தை முடித்தாக வேண்டும் என்ற நியதி கிடையாது. கிரிவலம் முடிந்தால் தான் உறக்கம் என்பதும் சிறந்த வைராக்யமே! நீங்கள் உண்மையிலேயே தத்ரூபமாக இந்தக் கிரிவலத்தைச் செய்து வருவீர்களேயானால் உறக்கம் வருவதற்கு முன் நீங்கள் கிரிவலத்தில் ஒரு சிறு பகுதியைத் தான் முடித்திருப்பீர்கள். ஆனால் விழித்தெழும்போது எங்கு உங்களுடைய கிரிவலம் முடிந்ததோ அதே இடத்தில் உங்கள் விழிப்பு நிலை தொடங்கி அந்த எண்ணம் நிச்சயமாக உங்கள் மனதில் நிறைந்திருக்கும், இந்த நிலையை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்தால்தான் இதனால் கிட்டும் பரமானந்தத்தைப் பெற முடியும்.

இத்தகைய மானசீக முறையிலான அருணாசல கிரிவலத்தை நீங்கள் தொடர்ந்து இரவு நேரத் தியானமாகப் பயிற்சி வந்தீர்களேயானால் உங்களுடைய பலவிதமான வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தூக்க நிலையிலேயே, கனவு நிலையிலேயே பலவிதமான தெய்வீக விடைகள் காத்திருக்கும். ஆனால் இவற்றைத் தக்க சற்குருவிடம் தெரிவித்து அவற்றின் பயன்களை நன்கு உணர்ந்து செயல்படுதலே சிறப்புடையது ஆகும்.

நீங்கள் மட்டும் அல்லாது உங்கள் குழந்தைகளையும் இதே முறையில் பழக்கி வாருங்கள். ஒருவேளை திருஅண்ணாமலைப் பகுதி உங்களுக்குப் பரிச்சயம் ஆகாவிடில் உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள, அல்லது உங்களுக்குத் தெரிந்த கோயில்களின் பிரகாரத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா! அந்தக் கோயிலைச் சுற்றி அடிப்பிரதட்சணம் செய்து வருவதாக முதலில் தொடங்குங்கள். இதுவே உங்களுக்குரிய எளிய இரவு நேர தியானப் பயிற்சியாகும்.

பட்டீஸ்வரம்

காலையில் பல் துலக்கும் பொழுது பற்களுக்குரித்தான “தந்த தேவதைகளைப்” பிரார்த்தனை செய்க! தந்த தேவதைகள் தாம் உங்கள் பற்களில் உறைந்து உங்களுக்கு அருள்பாலிக்கின்றன. வயிறு என்பது ஹோம குண்டமாகவும், அதில் எழுகின்ற பசியே ஹோம அக்னியாகவும், நீங்கள் உண்ணுகின்ற உணவே ஆத்மாவிற்கு ஆஹுதியாகவும் எண்ணி ஒரு புராணத் தத்துவம் உண்டு. இவ்வகையில் உங்களுடைய உணவாகிய ஆஹுதியை “தந்த தேவதைகள்” தாம் ஏற்று அவற்றை வயிறாகிய அக்னியில் சேர்க்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நம் முன்னோர்கள் 80 வயது நிறைந்த சதாபிஷேகத்தைக் கொண்டாடிய, 32 பற்களையும் தம்முடைய வாயில் கெட்டியாகக் கொண்டுள்ள பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காகவே ஓடோடிச் செல்வார்கள்! இவர்கட்குத ்“தந்த தேவதைகளின்” பரிபூர்ண ஆசியுண்டு! ஏனென்றால் 32 பற்களுமே 32 விதமான தர்மங்களின், தர்ம தேவதைகளின் துணை தேவதைகளாக அருள்பாலிக்கின்றனர். இந்த 32 விதமான தந்த தேவதைகளும் அருள்பாலிக்கின்ற சில தெய்வீகத் தலங்கள் உண்டு. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை, சென்னை அருகே உள்ள ஞாயிறு சிவாலயமும், பட்டீஸ்வரம் சிவாலயமும் ஆகும். தந்ததேவதைகளே முத்து தேவதைகளாம்!

கடினமான சந்தங்களையுடைய, நெருடுகின்ற வார்த்தைகளுடன் கூடிய பல அபூர்வமான தமிழ்ப் பாடல்களும், வேத மந்திரங்களும் உண்டு. பல் துலக்கியவுடன் இவற்றைத் துதிப்பது தந்த தேவதைகளுக்குப் ப்ரீதியைத் தருவது ஆகும். உதாரணமாக, திருப்புகழில் உள்ள சில சந்தப் பாடல்களும் சமகம், சூரிய நமஸ்காரம் போன்ற வேத மந்திரங்களும் இவ்வகைச் சார்ந்தவையாகும். பல் துலக்குகையில் இத்தகைய சிந்தனைகளுடன் அல்லது நீங்கள் படித்துள்ள இந்த விளக்கங்களை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வருதல் கூட மிகச் சிறந்த வழிபாடாகவும் ஆகின்றது. மொத்தத்தில் பல் துலக்கும் போது ஏதேதோ நினைவுடன் அதனைச் செய்திடாது இதிலும் சில இறைச் சிந்தனைகளைக் கூட்டுவது சிறப்புடையதாகும்.

இயன்ற வரையில், உங்களுடைய காலை நேரத்தை, ஹோம அக்னிக்கு ஆஹுதி செல்லும் வழியாக அமைகின்ற உங்களுடைய திருவாயினில் காலைப் பொழுதில் முதன் முதலாகப் பேஸ்ட் போன்ற இரசாயனப் பொருட்களைச் சேர்த்து அதனுடையப் புனிதத் தன்மையை மாசு படுத்தாதீர்கள். குறைந்த பட்சம் ஆல், வேல் மற்றும் பல மூலிகைப் பொருட்கள் கலந்த பல் பொடி வைத்து இரண்டு, மூன்று முறையாவது நன்றாக தேய்த்து விட்டுப் பிறகு பிரஷிற்குச் செல்லுங்கள். இயன்ற வரையில் மூலிகைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குவது நல்லது. நவீன வழக்கில் விளங்குவதைப் போல Don't Commence the day with a mouthful of chemicals! உங்கள் காலைப் பொழுதை வாய் நிறைய ரசாயனத்துடன் தொடங்காதீர்கள்.

மூலிகைப் பல் பொடியைப் பயன்படுத்தும் பொழுது அம்மூலிகைத் தேவதைகளின் ஆசி உங்களுக்குக் கிட்டுகின்றது. நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் மூலிகைகளைக் கிட்டத்தட்ட ஒதுக்கி விட்டோம், எல்லாவற்றிலுமே இரசாயனங்கள் நிறைந்த செயற்கைப் பொருட்களே பயன்படுத்தப்படுவதால் ஒரு சிறு மூலிகையேனும் தினமும் உடலினுள் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகின்றது.

லலாடங்க கஷாயம் என்ற ஓர் அற்புதமான சித்த வைத்தியக் கஷாயத்தைப் பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் பல இதழ்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தோம். லலாடங்க கஷாயம் என்பது ஆலமர வேர்ப்பட்டையை நீரில் ஊற வைத்துக் கஷாயமாக ஆக்கி வைத்துக் கொள்தல் ஆகும். இந்த லலாடாங்க கஷாயத்தையே உண்டு, ஜீவித்து, அரும்பெரும் தவத்தைப் புரிந்து எத்தனையோ கோடி ஜீவன்களுக்கு நல்வாழ்வு தந்தவரே சுதபுத மஹரிஷி என்பவர் ஆவார். சுதபுத மஹரிஷியின் திருஉருவம் இன்றும் பல திருக்கோவில்களில் காணப்படுகின்றது. சென்னை தக்கோலம் அருகே மப்பேடு என்னும் ஊரில் ஓர் அற்புதமான சிவாலயத்தில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் என்னும் அபூர்வமான நாமத்தைத் தாங்கி சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். 

இங்கு விளங்குகின்ற நவவியாகரண பலிபீடத்தைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் முன்புற, கீழ்ப்புற கல் வெட்டுப் பகுதியில் உள்ள சுதபுத மஹரிஷியின் அபூர்வமான சிலாரூபம் காணக் கிடைக்காதது ஆகும். இதனைப் பற்றி அறிந்தோர் ஒரு சிலரே! சுதபுத மஹரிஷி இத்திருத்தலத்தில் பல யுகங்கள் இறைத் தொண்டு புரிந்து ஜீவன்களுக்கு நல்வழி காட்டி வந்து வாழ்ந்த திருத்தலம் என்பதாலோ என்னவோ, இப்பகுதிக்கு செல்லும் வழி எங்கும் ஆலமரம் நிறைந்திருப்பதைக் கண்டு களித்திடலாம்.

நம்முடைய வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பொய்கைகளைப் பேசி நம்முடைய திருவாயை அசிங்கப்படுத்திக் கொள்வது மட்டும் அல்லாமல் தேகத்தையே அவமானம் செய்கின்றோம் அல்லவா! இவ்வாறு பொய் பேச வேண்டிய நிர்ப்பந்தம் கலியுகத்தில் பெருகி வருகின்ற நிலையில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சொல்கின்ற பொய்களுக்கு எல்லாம் எங்கு போய் பிராயச்சித்தம் தேடுவது? இதற்கெல்லாம் பிராயசித்தமாக அருள் வழி காட்டுபவரே சுதபுத மஹரிஷி ஆவார். லலாடங்க கஷாயம் எனப்படும் ஆலம்பட்டைக் கஷாயத்தைத் தினமும் பல் துவக்கிய பின் சிறிது அருந்தி வந்தால் வாய் சுத்தி ஏற்படுவதோடு நாம் பேசிய பொய்களுக்கும் பிராயச்சித்தம் கிட்டுகின்றது. இது மட்டுமா, வாக்கு சுத்தி எனப்படும் நம்முடைய ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு தெய்வீக மகத்துவம் விளங்குவதற்கு இது வழிவகை செய்கின்றது.

குறிப்பாக ஜோதிடர்கள், நாடி ஜோதிடக்காரர்கள் மற்றும் அருள்வாக்குக் கூறுவோர்கள் லலாடங்க கஷாயத்தைத் தினந்தோறும் சிறிது அருந்தி வந்தால் அவர்களது வாக் சுத்தி பெருகும். இத்தகையோருக்கு மிகச் சிறந்தத் திருத்தலமே மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் ஆலயம் ஆகும். பார்த்தீர்களா! காலையில் எழுந்து கர தரிசனம் பெற்று பல் துலக்குவதற்குள் எத்தகைய ஆன்மீக இரகசியங்களைத் தெரிந்துக் கொண்டு விட்டோம். இவ்வாறு நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அறிந்து, துய்த்து, ஆனந்திக்க வேண்டிய எத்தனையோ தெய்வீக விஷயங்கள் உண்டு. எளிமையான முறைகள்தாமே!

விசேஷ தினங்கள் - அக்டோபர் –1998
1.10.1998 விஜய தசமி
5.10.1998 பெளர்ணமி - இன்று விடியற்காலை 5.19முதல் இரவு 01.42 வரை பௌர்ணமி திதி (திருக்கணித முறைப்படி)
5.10.1998 இரவு பெளர்ணமி கிரிவலம்
19.10.1998 தீபாவளி, எம தர்ப்பணம்
20.10.1998 கேதார விரதம்
24.10.1998 தூர்வா கணபதி விரதம்

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருஅண்ணாமலை

23.08.08 - திருச்சி – திருவளர்சோலை கிராமத்தில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
30.08.1998 - சென்னை - கோவிலடி கிராமத்தில் வறியோர்க்கான இலவலச மருத்துவ முகாம்
9.08.1998 - வாணியம்பாடியில் விஷ்ணுபதி, புண்ய கால பூஜை, ஹோமம், அன்னதானம், நாம சங்கீர்த்தனம்
5.09.1998 - திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அன்னதானம், ஆவணியும் அவிட்டமும்சேர்ந்த ஆவணி அவிட்ட பூணூல் அணியும் நாள்.

அமிர்த தாரை

நகை வியாபாரிகளுக்கு...

தங்கம், வெள்ளி மற்ற உலோக வியாபாரிகள் பகுதான்ய தட்சிணாயனத்தில் வெள்ளிக் கிழமைகளில் வரும் ரோகிணி, பூசம், விசாகம், அவிட்டம், அஸ்தம், மிருகசீரிஷம் போன்ற நட்சத்திரங்களில் மிகவும் கவனமாய் வியாபாரம் செய்தல் வேண்டும். கவனக் குறைவால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. யோசித்துச் செயல்படுதல் நலம்.

வக்கீல்கள், நீதிபதிகளுக்குரிய கவனமிகுநாட்கள்

நீதித் துறையில் இருக்கின்றவர்கள் பகுதான்ய வருட தட்சிணாயனத்தில் கவனமாய் இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் : திங்கட்கிழமையில் வரும் மகம், விசாகம், பூராடம், பூரட்டாதி, கிருத்திகை, அனுஷம். இந்நாட்களில் எந்தத் தீர்ப்பையோ, புது அப்பீல்களோ, தொழில் புது விண்ணப்பங்களைச் செய்திடாமல் இருத்தல் நலம்.

மருத்துவர்களுக்கு.....

மருத்துவத்துறையில் இருக்கின்றவர்கள் பகுதான்ய வருட தட்சிணாயணத்தில் கவனமாய் இருக்கவேண்டிய நட்சத்திரங்கள்: செவ்வாய்க் கிழமைகளில் வரும் திருவாதிரை, திருஓணம், அவிட்டம், கேட்டை, சதயம் போன்ற நட்சத்திரங்களில் ஆபரேஷன், மேல்படிப்பு, உத்தியோக உயர்வு, புது மருத்துவமனை, புதுக்கருவிகள், விண்ணப்பங்கள், புது முயற்சிகள் செய்திடாமல் இருத்தல் நலம். நிறைய பொறுமை தேவை

கல்வித் துறையினருக்கு..

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வித் துறைச் செயலாளர்கள், இயக்குநர்கள் போன்று கல்வித் துறையில் இருக்கின்றவர்கள் பகுதான்ய வருட தட்சிணாயனத்தில் கவனமாய் இருக்க வேண்டிய நாட்கள் புதன்கிழமைகளில் வரும் நட்சத்திரங்களான, அவிட்டம், கிருத்திகை, அஸ்வினி, மூலம், பரணி, திருஓணம்,ஆகிய நட்சத்திரங்களில் எந்த புது முயற்சியையோ எடுக்க வேண்டாம். ஆசிரிய மாணவ கலகங்கள், வீண் பழிக்கு ஆளாக சந்தர்ப்பங்கள் இருப்பதால் நிதானத்துடன் செயல் படுதல் வேண்டும்.

வியாபாரிகளுக்கு...

பொதுவாக அனைத்து வியாபாரிகளும், தொழிலதிபர்களும் வீடு வாகன, இரும்பு, மளிகை, கொடுத்தல்,  வாங்கல், பண சம்பந்தமான பேங்க் தொழிலில் உள்ளோர்க்கு பகுதான்ய வருட தட்சிணாயனத்தில் சனிக் கிழமைகளில் வரும் ரேவதி, உத்திராடம், அஸ்தம், புனர்பூசம், பூசம் போன்ற நட்சத்திரங்களில் மிகுந்த கவனம் தேவை. ஏமாற்றம் அடைய வழியுண்டு. மறதிகளால் நஷ்டம் வரும்.

கோயில் பூஜை செய்வோர்க்கு...

கோயில் குருக்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், சாஸ்திரிகள், பூசாரிகள், வேதியர்கள் – பகுதான்ய வருடத்தில் வரும் தட்சிணாயனத்தில் வியாழக் கிழமைகளில் வரும் ரேவதி, பூசம், பூராடம், புனர்பூசம், மிருகசீரிஷம் போன்ற நட்சத்திரங்களில் புது முயற்சியில் ஈடுபடாது இருந்தால் நலம். தன்னோடு நன்றாக பழகியவர்களே உங்களை சந்தேகமாய்ப் பார்த்து கிட்ட இருந்தே குழி தோண்டி விடுவார்கள், கவனம் தேவை.

பெண்களுக்கு.....

பெண்கள் மிக கவனமாய் இருக்க வேண்டிய நாட்கள். பகுதான்ய வருட தட்சிணாயனத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் மிருகசீரிஷம், விசாகம், மகம், கேட்டை, பரணி, அனுஷம்  இந்த நட்சத்திரங்களில் வீட்டில் கணவனோடு வீண் வாதம், சந்தேகம் சண்டைகள், உறவினர் கலகம் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை.

தசமி ஜோதி தரிசனம்

கேதார்நாத்தில் மாலையில், மலைச் சிகரங்களிடையே சபரிமலை மகர ஜோதி போல ஜோதி தரிசனம் கிட்டும். சில நிமிடங்களுக்கு இது நிரவி நின்று அருட் ஜோதியாய்ப் பரிணமிக்கும். சிவபெருமானுடைய சத்யோ ஜாதம், வாமதேவம், தத் புருஷம், அகோரம் - ஆகிய ஐந்து திருமுகங்களின் பத்து நேத்திரங்களிலிருந்து பெருகிய ஜோதியே அம்பிகையின் நவராத்திரி பூஜைகளின் பலனாக தசாங்குல நேத்ர ஜோதியாகக் காட்சி அளிக்கிறது. தசமித் திதியில் குறிப்பாக விஜய தசமியன்று இந்த “ஆதிமூல கேதார தரிசனம்” பெற்றால் வாழ்க்கையில் தெய்வீக வைராக்கிய நிலை கிட்டும். குருவருள் கூடிடில் முறையற்ற, தீயொழுக்கங்களுக்கும் பிராயச்சித்தம் தரும் தரிசனமிது!

பரணி நட்சத்திரமுடைய பெண்களுக்கு....

பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கேட்டை, பூசம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை மணத்தல் சரியாகாது. அவ்வாறு திருமணம் செய்து விட்டால் தேவையில்லாத பிரச்னைகள், குறைபாடுகள் குடும்பத்தில் ஏற்படும். பிரச்னைகள் பெரிதாகாமல் ஓரளவு மன ஒற்றுமை பெற, தம்பதிகள் சனிப் பிரதோஷத்தன்று திருவொற்றியூர்,  வடக்கு மாட வீதியில் நந்திக்கென்றே உள்ள ஒரு தனிக்கோயிலில் அபிஷேக ஆராதனைகள், தான, தர்மங்கள் தொடர்ந்து செய்து வந்திடில் மனம் அமைதி பெறும். ஏழைகட்கு அகல் விளக்கு, எண்ணெய் அளித்து அவர்களை தீபமேற்றச் செய்யவும்.

நகமும், முடியும் நீள் முடி மண்டையும்..!

சிறு விஷயங்களில் கவனம் தேவை. கொஞ்சம் கூடப் பொறுப்பின்றி வெட்டிய நகங்களையும், கொட்டிய தலைமுடிகளையும் அசிரத்தையாக கீழே போட்டு விடாதீர்கள். ஏனென்றால் இவை பறந்து சென்று பிறர் கையில் அகப்படுமானால் சூன்ய மந்திரங்களுக்கு ஆளாகிச் சம்பந்தப் பட்டவரைத் துன்பப்படுத்தும். மேலும் முடிகளும், நகங்களும் நகர்ந்து, பறந்து சென்று தோஷ நிவர்த்திக்காக தெருவில் வைக்கப்படுகின்ற திருஷ்டிகழித்த நெருப்பில் அல்லது அவற்றின் சாம்பலில் படுமானால் இதனாலும் சம்பந்தப்பட்டவரின் உடல் நிலை பாதிக்கப்படும். எனவே கொட்டிய முடியை சுருட்டி, பூமியில் புதைத்தோ, அல்லது கழிவு வாய்க்காலிலோ போட்டு விடுங்கள், அக்காலத்தில் நம் பெரியோர்கள் விரல்களில் மூடியைச் சுருட்டிப் பத்திரமாக ஒரு பெட்டியில் பாதுகாத்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் பின்னால் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் உண்டு.

எல்லா இல்லங்களிலும் தீபம் ஒளிர்வதே தீபாவளி!

எங்கள் ஆஸ்ரமத்தின் சார்பில் வருடந்தோறும் தீபாவளியன்று எண்ணெய், புனிதமான கங்கை நீர், சீயக்காய், இனிப்புகள், ஆடைகளை விசேஷ தீபாவளி பாக்கெட்டாக வைத்து இயன்ற அளவில் கடவுள் கருணையால் பல ஏழைக் குடும்பங்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக அளித்து வருகின்றோம். உங்களுடைய பகுதியில் பலரும் ஒன்றாக, சத்சங்கமாகச் சேர்ந்து பல ஏழைக் குடும்பங்களுக்கும் தீபாவளியன்று தீப ஒளி பொங்குவதற்கான தெய்வீக வாய்ப்பினை அளித்திட வேண்டுகின்றோம். காஞ்சீபுரம் ஸ்ரீ தீபப் பிரகாசர் கோயில், கஞ்சனூர் ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர் ஆலயம், திருஅண்ணாமலை அக்னிலிங்கம் போன்ற தலங்களில் இன்று 108 தீபங்களாவது (அகல் விளக்குகள்) ஏற்றிட யமவாதை எனப்படும் அடிக்கடி நோய் வாய்ப்படும் பிணி தோஷம் நீங்கும்.

அஸ்வினி நட்சத்திர மகளிர்க்கு

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சித்திரை, மூலம், புனர்பூசம், பூரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கவும். அவ்வாறு மணந்தால் ஏதாவது குறைபாடுகள் வீட்டில் ஏற்படும். இதனை அறியாமல் திருமணம் செய்து விட்டால், கணவனும் மனைவியும் வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தன்று கும்பகோணம் அருகே திருமணஞ்சேரியில் இருக்கும் சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து வேண்டிடில் குடும்ப ஒற்றுமை பெருகும்.

புனித நீர் தானம்!

அவ்வப்பொழுது நீங்கள் கோயில்களுக்குச் செல்லும் பொழுதெல்லாம் கங்கை, காவிரி, தாமிரபரணி,கோதாவரி, கிருஷ்ணா போன்ற புனிதத் தீர்த்தங்களைக் கொண்டு வாருங்கள். செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் குறைந்தது 10 உணவுப் பொட்டலங்களையேனும் தயாரித்து அவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுங்கள். உங்களுக்கு இயன்ற அளவில் ஒரு பொட்டலமாக இருந்தாலும் அது மிகச் சிறந்த அன்னதானமே. அவ்வாறு உணவைச் சமைக்கும் பொழுது கோவில் தீர்த்தங்களின், புண்ணிய நதிகளின் நீரை உணவில் சேர்த்துச் சமைப்பீர்களேயானால் இதனைப் பெறுகின்ற ஏழைகளுக்கும் புண்ய நதி தீர்த்தப் பலன்களைத் தானமாக அளிக்கின்ற புண்ணிய சக்தியை நீங்கள் பெறலாம் அல்லவா! மேலும் நீங்கள் கோயில்களில் பிரசாதமாகப் பெற்ற வில்வம், துளசி போன்றவற்றையும் உணவில் சேர்த்துத் தானமாக அளித்தால் அதற்குரிய பலன்களும் விசேஷமாக அமையும் அன்றோ ! உதாரணமாக கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள தீர்த்தமும், (தற்போது நன்னிலையில் உள்ளதா என்று அறியவும்) வெள்ளெருக்கு இலையிலே பிரசாதமும் தொழுநோய் நிவாரணத்திற்கு உதவும். அனைத்துத் தொழுநோயாளிகளும் இக்கோவிலுக்குச் செல்கின்ற வசதியையோ அல்லது வாய்ப்பையோ பெறவில்லையாதலின் இக்கோவிலுக்கு இதற்காகவே சென்று இப்பிரசாதங்களைப் பெற்று இதனை உங்கள் அன்னதானத்துடன் அளிப்பீர்களேயானால் ஆடுதுறைக்குச் சென்று தரிசித்த பலனைத் தொழுநோயாளிகளும் பெற்று வாழ்வில் நற்கதியைப் பெறுவதற்கு நீங்கள் ஒரு சமுதாயத் தொண்டை ஆற்றிடலாம் அல்லவா! இவ்வாறாகவே உங்களுடைய ஒவ்வொரு தெய்வீகப் பணியும் சமுதாயப் பணியாக மாறினால் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தத்துவத்தை உணர் முடியும்? இதற்காகத் தானே நாம் மனிதப் பிறவிப் பெற்றிருக்கின்றோம். நாமே உண்டு, உறங்கி, வளர்வதற்காகவே நம் பிறவி இல்லையே! எவ்வகையில் சிறு அளவிலேனும் பிறருக்கு உதவ முடியும் என்ற சீரிய எண்ணத்துடன், தெய்வீகச் சிந்தனையுடன் வாழ முற்படுங்கள்.

டாக்டர்களுக்குரிய சிறப்பான வழிபாடு!

ஸ்ரீ அம்ருத மிருத்யுஞ்ஜய மூர்த்தி வழிபாட்டின் பலன்கள் : நோய் தீர்க்கும் இடங்களில் மருத்துவர்கள் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் படத்தை வைத்து தினந்தோறும் மூன்று வேளையும் வழிபாடு செய்து வந்தால் அற்புதமான தெய்வீக மருத்துவ குணங்களைப் பெற்றிடலாம். டாக்டர் லஷ்மண சுவாமி முதலியார், டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் ரெங்காச்சாரியார் போன்ற நமக்கு முந்தைய காலப் பிரபல டாக்டர்கள் அனைவரும் ஸ்ரீ கருட பஞ்சகம், ஸ்ரீ கருட துதிகளை ஓதி மற்றும் அரசு, வேம்பு மரங்களை அடிக்கடி அடிப் பிரதக்ஷிணம் செய்து தங்களுடைய தெய்வீக மருத்துவ குணங்களை விருத்தி செய்து கொண்டார்கள். இத்தகைய நல்ல பண்பாடு தற்போது மறைந்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். ஸ்ரீ கருட காயத்ரீ மந்திரத்தை எப்பொழுதும் ஓதி வந்தால் அற்புத மூலிகைகளின் சக்தியானது மருத்துவர்களுடைய தேகத்தில் குடிகொண்டு மிகச் சிறந்த நோய் தீர்க்கும் சக்தியாகி, மருத்துவர்களுக்கு தெய்வத் தன்மையைக் கூட்டுகின்றது!

நித்ய கர்ம நிவாரணம்

1.10.1998 – கழிவு நீர்த் துப்புரவுப் பணியாளர்களுக்குப் புதிய ஆடைகள் அளித்தல் – மனப் போராட்டங்கள் தணியும்.

2.10.1998 – கன்றோடு உள்ள பசுவிற்குப் பூஜை – கிட்டாத (நியாயமான) பொருளை எட்டிப் பிடிக்கலாம்.

3.10.1998 – கருவேலம் பிசின் எடுப்போர்க்கு மருதாணி மற்றும் அன்னம் அளித்தல் – தோல் நோய்கள் தீரும்.

4.10.1998 – முயல்களுக்குக் காரட் அளித்தல் – பேரன், பேத்திகள் கல்வியில் முன்னேறுவர்.

5.10.1998 – எண்பது வயது நிறைந்த ஏழை தம்பதியர்க்குப் பாத பூஜையும் உதவிகளும் – சந்ததிகள் நல்முன்னேற்றம் பெறுவர்.

6.10.1998 – காற்றடிக்கின்ற ஏழைப் பையன்களுக்கு டிராயர், சட்டை அளித்தல் – வாய்வு நோய் நிவாரணம்.

7.10.1998 – பாய் முடைவோர்க்கு மஞ்சள், கண்ணாடி, சீப்பு – மங்கலப் பொருட்கள் அளித்தல் – நற்செய்திகள் நாடி வரும்.

8.10.1998 – பொம்மை (plastic mould etc…) செய்வோர் குடும்பத்திற்குக் கல்விக்கான உதவி (புத்தகம் பேனா etc)

9.10.1998 – ஏழை சமையல்கார தம்பதிக்கு – சுமங்கலிப் பெண்மணிக்கு 9 கஜபுடவை தானம் – திருமணத் தடங்கல் நிவர்த்தி

10.10.1998 – காலணித் தொழிலாளர்கட்குப் பழங்கள் தானம் – உத்யோக உயர்வு.

11.10.1998 – குளிர்க் கருவி தொழிலாளர்கட்கு (A/C Mechanics  etc.) கீரை உணவு அன்னதானம் – சிறு பகைகள் தீரும்.

12.10.1998 – ஏழைப் பாட்டிகளுக்கு ஜீரணமாகும் வண்ணம் தக்க உணவளித்தல் – இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

13.10.1998 – ரப்பர் துறையில் பணிபுரியும் (Rubber Stamp etc..) ஏழைகளுக்கு மருத்துவ உதவி (Tonics etc.)  - தாம்பத்ய ஒற்றுமை வளரும்.

14.10.1998 – சுண்டல் விற்கின்ற ஏழைகளுக்கு உதவி – எதிர்பார்க்கின்ற நல்ல கடிதம் வரும்.

15.10.1998 – பசுக்களுக்குப் புல், கரும்பு அளித்தல்  நல்ல குழந்தை பிறப்புச் செய்தி.

16.10.1998 – எள் உருண்டை தானம் – கொடுத்த கடன் திரும்பி வரும்.

17.10.1998 – குப்பை கூளங்களில் வாழ்கின்ற பிச்சைகாரர்களுக்கு நல்ல உணவு அளித்தல் – குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தீரும்.

18.10.1998 – மாயூரம் காவேரி துலா நீராடல் – தீர்த்த கண்டி கலச பூஜை – மனக் கவலைகள் தீரும்.

19.10.1998 – உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப அத்தனை செட் ஆடைகள் தானம் – தர்ப்பணம் செய்யாத தோஷங்களுக்கு நிவர்த்தி. ஏழைக் குடும்பத்தில் தீபாவளியை நன்கு கொண்டாடிட தீபஒளி பொங்கிட உதவி செய்து இறைப்பணி ஆற்றுங்கள்.

20.10.1998 – கேதார கௌரி விரதநாள் – 21 பழங்களைப் பசுக்களுக்கு அளித்தல் – வாக்குக் குற்றங்கள் தீரும்.

21.10.1998 – பீங்கான் (Porcelain) தொழிலாளர்களுக்கு முந்திரி, திராட்சை அளித்தல் – கெட்ட கனவுகளின் தீயசக்தி அகலும்.

22.10.1998 – ஏழ்மை நிலையில் உள்ள இளஞ்ஜோதிடர்களுக்கு பூஜைப் பொருட்கள், ஏனைய உதவிகள் – பெண்களைத் திட்டிய பாவங்கள் தீரும்.

23.10.1998 – வேதம், தமிழ் மறைகள் ஓதும் ஏழைக் குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் அளித்தல் – தீராத வயிற்றுப் பிணி தீரும்.

24.10.1998 – சுண்ணாம்பு அடிப்பவர்களுக்கு ஆடைகள் தானம் – மன சஞ்சலங்கள் தீரும்.

25.10.1998 – அச்சகத்தில் உள்ள சிறுவர்களுக்கு கோதுமை அல்வா வழங்கிட வியாபாரத்தில் லாபம்.

26.10.1998 – அநாதைக் குழந்தைகளுக்கு அன்னதானம் / ஆடைதானம் – குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

27.10.1998 – கிழவர்களுக்கு தைத்தடி தானம் – மனத் தளர்ச்சிகள் நீங்கி வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும்.

28.10.1998 – போர்வை, விரிப்பு (carpets) நெய்வோர்க்குச் சர்க்கரைப் பொங்கல் அளித்திட – இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

29.10.1998 – தச்சர்களுக்குச் சத்தான உணவு அளித்திடுக – தீராத கடன் தீர வழி பிறக்கும்.

30.10.1998 – தையற்காரருக்கு வீட்டில் விருந்து தர, பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

31.10.1998 – ஏகாதசி  பெருமாள் ஆலயத்தில் அடிப்பிரதட்சிணம் – துளஸி சேர்த்து அன்னதானம் –மனக் குழப்பங்கள் தீரும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam