அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சிவனுக்கு உகந்த நாள்

ஆன்மீக வினா – விடை
வினா : சிவனுக்கு உகந்த விரதநாள், திதி என்ன ?
விடை : திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளன்றோ! மௌனவிரதம் இருப்பதற்கு மிகச் சிறந்த நாளான திங்கட்கிழமையாம் சோமவாரத்தில் விரதமிருப்பது அபரிமிதமான பலன்களைத் தரும். மனமடங்கும் வழியைக் காட்டும்.
பிரதோஷ பூஜையின் மஹிமை சொற்பொருள் கடந்ததல்லவா? அதுவும் பிரபஞ்சத்தின் முதல் பிரதோஷ பூஜை நடந்த சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் சிவாலயத்தில் ஒரு முறை பிரதோஷ பூஜை கொண்டாடிட ஆயிரம் தலங்களில் பிரதோஷ பூஜை கொண்டாடிய பலன் கிட்டும். மானுட சரீரத்தில் சிவபூஜை கொண்டாடுவது பெறற்கரிய பாக்யமல்லவா ? மாதந்தோறும் கிருஷ்ணபட்ச , சுக்ல பட்ச திரயோதசி திதி பிரதோஷ பூஜை அனைத்தையும் தரவல்ல பூஜையன்றோ!
கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வரும் மாத சிவராத்திரி விரதம்தனில் இரவு கண் விழித்துப் பூஜை செய்தல் சிவனுக்கு ஆனந்தத்தைத் தரும் அற்புத பூஜையல்லவா! வியாழக்கிழமை அன்று விரதம் பூண்டு மஞ்சள் நிற உணவு, ஆடையினை தானமிட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை 108 முறை வலம் வருவது அறிய ஞானத்தைத் தரும் எளிய பூஜையல்லவா?
தினமும் மாலை 4½ - 6½ மணிவரையுள்ள காலத்திற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். இந்நேரத்தில் சிவகவசம், சிவசகஸ்ரநாமம் பாராயணம் செய்தல் மிகவும் சிறப்பானதாம். தினமும் குருஹோரை நேரத்திலும் குறிப்பாக வியாழ்க்கிழமையில் குருஹோரையில் (காலை 6-7 பகல் 1-2 இரவு 8-9 விடியற்காலை 3-4) “ஸ்ரீதட்சிணா மூர்த்தியே போற்றி” என்று குருபகவானைத் துதுத்திட தட்சிணாமூர்த்தியம்ச ஈஸ்வரனின் அருட்கடாட்சத்தைப் பெறலாமே!

காக சதுர்த்தி

ஒரு முறை சனீஸ்வரர், விநாயகப் பெருமானைப் “பி(பீ)டிக்க“ வேண்டி அவருடைய அனுமதியைப் பெற விழைந்திட, விநாயகரோ, “சனீஸ்வரா! எம் பாதத்திலிருந்து உன் கிரஹ வீச்சினை மேற்கொள்வாயாக!” என்றார். தெய்வ மூர்த்திகளுக்கு “சனியின் பார்வை” உண்டா? நவகிரஹ மூர்த்திகளின் மேன்மையை, குறிப்பாக கலியுக ஜீவன்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவன், பார்வதி, விநாயகர், ஆஞ்சநேயர், ராமர் போன்ற தெய்வ மூர்த்திகளும் தங்கள் அவதார வைபவங்களை நவகிரஹசஞ்சாரங்களின் பலாபலன்களுக்கேற்ப ஆட்படுத்திக் கொள்கின்றனர். அப்படியானால் கலியுகத்தில் நவகிரஹ வழிபாட்டினைச் சிரத்தையுடன் செய்வது மனிதகுலத்தின் முக்கியமான தினசரிக் கடமையல்லவா!

சகல கோடி அண்டங்களும் விநாயகரின் பாதங்களுக்குள் அடக்கமல்லவா! ஓங்கார ஸ்வரூபரான அவர்தம் பாதங்களில் சஞ்சாரம் செய்யும் கோள்களையும் அண்டங்களையும் கடப்பதற்கே மிகவும் பிரயத்னப்பட வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட சனீஸ்வரர் (அப்போது சனீஸ்வரருக்கு வாகனம் கிடையாது) எப்போது பாதங்களைக் கடந்து விநாயகரை முழுதுமாக எங்ஙனம் “பிடிப்பது”!
அதைவிடப் பெரும் பிரச்னை என்ன வென்றால்... விநாயகரின் திருப்பாதக் கமலங்களில் சரணடைந்திருந்த கோடிக்கணக்கான ஜீவன்களில் தம் கோசாரப் பீடிகை இல்லாதவர்களை விட்டு விட்டு அடுத்த பகுதிக்கு நகர்வதே சனீஸ்வரருக்குப் பெரும் பணியாகி விட அவர், தம் சக்திகளை இழந்தவராய் மெலிந்து தளர்ந்தார். கோசார பீடிகை இல்லாதோரைப் பிடித்தால் அது பெரும் தெய்வக் குற்றமாயிற்றே!  விநாயகரின் பாதத்தில் அணுவிற்கணுவான பகுதியைக் கடப்பதற்குள்ளாகவே அவர்தம் விநாயகருக்குரிய கோசார பீடிகைக் காலம் நிறைவடைய சனீஸ்வரர் வெளிவந்து விட்டார்.

சனீஸ்வரர் பெற்ற திருவரம் :- இப்போது சனீஸ்வரருக்கே சந்தேகம் வந்துவிட்டது. ”ஆமாம், நான் என்னுடைய பணியை ஒழுங்காகச் செய்தேனா? விநாயகரை முழுமையாக அல்லவா பிடித்திருக்க வேண்டும்? என்னால் ஏன் அவ்வாறு செய்ய முடியவில்லை? நான் கடமையிலிருந்து தவறி விட்டேனோ?“ சனீஸ்வரர் ஆழ்ந்த வருத்தத்துடன் விநாயகரைச் சரணடைந்து தனக்குத் தெளிவு தரும்படிப் பிரார்த்தித்தார். 
விநாயகரும், “சனீஸ்வரா! இது எம்பெருமானின் திருவிளையாடலேயன்றி உன் பிழை எதுவுமில்லை ! உனக்கென எதுவும் வேண்டாது, மனிதர்கள், தேவர்கள், தெய்வமூர்த்திகள் என்ற பாகுபாடின்றி உன் கடமையைச் செவ்வனே செய்து வருவதால் யாம் இன்று முதல் உனக்கு ஒரு வாகனத்தை அளிக்கின்றோம்!“ என்று சனீஸ்வரருக்குரிய வாகனமொன்றையளித்தார்.
அதுவே வெண்காகம்!
கேட்காமலேயே பெற்ற திருவரமாதலின் அவ்வெண்காக்கை பல அற்புத சக்திகளைப் பெற்றிருந்தது! சனீஸ்வரர் வாகனம் பெற்ற திருநாளே காகசதுர்த்தி! வெண்காகம் பூலோகம், புவர்லோகம் என ஈரேழு லோகங்களுக்கும் செல்லும் சக்தியுடையது!.
ஒருமுறை பித்ருலோகத்தில் உறையும் பித்ருக்கள் ஒன்று சேர்ந்து சனீஸ்வரரை பித்ருக்கள் நோக்கிக் கடுங்தவம் பூண்டனர். என்ன வரம் வேண்டினர் தெரியுமா?
“பலலோகங்களுக்கும் செல்லும் சக்தி வாய்ந்த தங்களுடைய வெண்காக்கையைப் போல் எங்களுக்கும் (பித்ருக்கள்) எங்கள் சந்ததியினரைச் சென்று காண காக்கையைப் போன்று ஒரு வாகனம் வேண்டும்.” சனீஸ்வரரும் அவர்களுடைய தவத்தை ஏற்று அருள்புரிய விழைந்தார். விநாயகர், அகஸ்தியருடைய கமண்டலத்தைக் காக்கை ரூபத்தில் உருட்டி காவேரிப் பிரவாகத்தை உருவாக்கினார் அல்லவா! அந்தக் காட்சியை தரிசித்த சனீஸ்வரர் விநாயகருடைய அந்தக் கரிய காக்கை உருவத்தையும் பித்ருக்களுக்கென்று வாகனமாக வேண்டிப் பெற்றார். அதன் பயனாய் பித்ருக்களுக்கென்று கரிய நிற காக்கைகளையும் அளித்தார்.  அதுமட்டுமின்றி இன்றும் சனீஸ்வரர் பூலோகம் வருகையில் மட்டும் விநாயகரளித்த கரியநிறக் காக்கையில் தான் வலம் வருகிறார். எனவே தான் தினமும் காக்கைக்கு அன்னமிடுவது சனி ப்ரீதியாகவும், பித்ரு ப்ரீதியாகவும் அமைந்து நல்லருள் புரிகின்றது. எனவே காக சதுர்த்தி என்றும் பெயர்பெற்ற காகசதுர்த்தி நாளில்
1. நதிக்கரை (குறிப்பாக காவிரி) கடற்கரை கோயில்களில் உள்ள காக்கைக்கு உணவிடுதல்.
2. சனீஸ்வரர் மூலவராய்/தனித்துச் சந்நதி கொண்டுள்ள கோயில்களில் பூஜையுடன் கருமை நிற/கரு நீல உணவு, பழங்கள், ஆடைகளை தானமாக வழங்குதல்
3. கருமை நிற ஆடை அணிந்துள்ள ஏழைகளுக்கு உதவியளித்தல், நவக்ரகங்களைச் சுற்றி வருவோர்க்குக் கறுப்பு திராட்சை போன்ற கறுப்பு நிற உணவு, நல்லெண்ணெய், உளுந்தால் ஆன தின்பண்டங்கள் அளித்தல் ஆகியவற்றால் பித்ரு சாபநிவர்த்தியுடன் வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்களின் பரிபூரண ஆசியையும் பெறலாம்.
4. கூட்டமாக வரும் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் சனீஸ்வர பார்வையின் விளைவுகளைத் தணிக்கலாம்.
5. மாரக தசை உள்ளவர்கள் இந்த காகசதுர்த்தி தான தர்மங்களை மேற்கொண்டால் மாரகதசை சாந்தமாக முடியும்.
6. சனி தசை/சனி புத்தி நடப்பவர்களுக்கு காகசதுர்த்தி பூஜை, தானதர்மங்கள், சனியின் கொடூரப் பார்வை, வக்ரப்பார்வை, விளைவுகளைத் தணிக்கும். மிகவும் எளிய ஆனால் சக்திவாய்ந்த பூஜை!

துலா ஸ்நானம்

துலா ராசி சுக்ர பகவானின் ஆட்சி வீடு.
1. சுக்ர தசையின் முழு பலன்களை, பிற கிரஹ சஞ்சாரங்களினால் பெற இயலாதோர்
2.தவிர்க்கப்பட வேண்டிய சுக்ர மூடத்தில் அலுவலகத்தில் சேர்தல், திருமணம் ,சீமந்தம் போன்றவற்றை நிகழ்த்தித் துன்பங்களுக்கு ஆளானோர்.
3.சுக்ரமூடத்தில் அறியாமை காரணமாக பயணம், கிரஹப் பிரவேசம், அலுவலகப் பயணம் போன்றவற்றை மேற்கொண்டு அல்லல்படுபவர்கள்.
4.சுக்ர வக்ரத்தில் பெண் பார்த்தல், திருமணம், பும்ஸ்வனம் போன்றவற்றை நடத்தி தோஷங்களுக்கு ஆளானோர்.
                    - இவர்கள் சுக்ரப்ரீதியாக காவிரி, கங்கை, தாமிரவருணி, கிருஷ்ணா போன்ற புண்யநதிகளில் நீராடி வாழைப்பழம், தேங்காய், இளநீர் ஆகிய மூன்றில் இயன்றதை தன் எடைக்கு எடை தானம் செய்திடில் மேற்கண்ட துன்பங்கள் தீரும். துலாமாதமாகிய ஐப்பசி மாதம் முழுதும் துலா (நதி) ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். யுவ வருட சுக்ரமூட தோஷங்களுக்கு துலா ஸ்நானமும் தான தர்மமும் சிறந்த பரிஹாரங்களாகும்.

யம தீப தானம்

1 எந்த நட்சத்திரத்தில் இறந்தால், எவ்வளவு நாட்கள், வீட்டினை மூட வேண்டும் என்ற நியதி உண்டு. இதனை “இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திரங்கள்” என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவர். இது அனைவரும் கடை பிடிக்க வேண்டியதொன்று!
  ஆனால் தற்காலத்திற்கு இது ஏற்கக் கூடியதா?
2. எவரும் இறந்தவுடன் அவ்விடத்தில் குறைந்தது பத்து நாட்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். தற்காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு/மின் விளக்கு ஏற்றுகிறார்கள் .இது சாபத்தைத் தேடித் தரும்.
3. இறந்தவருக்காக வீட்டில், ஆற்றில், கடற்கரையில் பச்சை மரம்/கல் ஊன்றி வாழைபந்தல் தென்னை/பனை கீற்றுப் பந்தல் இட்டி தினமும் தீபம் குறைந்தது பத்து நாட்களுக்கு ஏற்ற வேண்டும்.
4. இறந்தவரின் மறு உலகவாழ்விற்காக/ஆவி பரிசுத்தமடைய செய்ய வேண்டிய சடங்குகள், தான, தர்ம நியதிகள் உண்டு.

மேற்கண்ட நியதிகளை முறையாகக் கடைபிடிக்காவிடில் பித்ரு சாபங்களுக்கு உள்ளாகி கருக்கலைதல், சிசு நழுவுதல், குழந்தைகள் காரண, காரியமின்றி அடிக்கடி நோய்வாய்ப்படுதல், திடீர் பண இழப்பு, சிறுவிபத்துக்கள்  போன்றவை ஏற்பட்ட வாறிருக்கும். இவற்றிற்குப் பிராயச் சித்தமாக “யம தீப தான” விசேஷ தினத்தன்று ஆற்றங்கரையில்  வாழை/தாமரை இலையில் பசுநெய்/நல்லெண்ணெய் (அகல்) தீபமேற்றி எள்சாதம், வாழைக்காய் கலந்த உணவு, பிரண்டைத் துவையல், அதிரசம், எள் உருண்டை போன்றவற்றை ஸ்ரீஎமதர்மராஜாவிற்குப் படைத்து, வாழை/தாமரை இலையில் உள்ள தீபங்களை  இலையோடு ஆற்றில் விட்டுவிட வேண்டும். நைவேத்ய பொருட்களை அன்னதானமாக வழங்கிட வேண்டும்.
ஆறுவசதியில்லாவிடில் கிண்ற்று நீரில் செய்யலாம். ஸ்ரீஎமதர்ம ராஜா தம் குடும்ப சகிதம் எழுந்தருளியிருக்கும் திருச்சி திருப்பைஞ்ஞீலி சிவாலயம், மார்கண்டேய புராணத்தில் இழந்த அற(தண்டம்)க் கோலை ஸ்ரீஎமதர்மராஜா மீண்டும் பெற்ற இடமான சென்னை-வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் சிவாலயம், திருக்கடவூர் சிவன் கோயில் போன்ற (எமதர்மராஜாவிற்குரிய) திருத்தலங்களிலும் எம தீபதானத்தைச் சிறப்புற நடத்தலாம். இத்தலங்களில் ஆலயம் முழுதும் (நல்லெண்ணெய்/பசுநெய்) தீபத்தை ஏற்றித்தானத் தர்மங்களையும் நிறைவேற்ற வேண்டும்.
அடியார் : குருதேவா! எம தீபதானம் என்பது எவ்வகை தானமாகிறது?
சற்குரு : தனிமனிதனாக இத்தகைய தீபங்களை ஏற்றுவதை விட அன்று நிறைய அகல்விளக்குகள், பசுநெய்/நல்லெண்ணெய், தாமரைத்தண்டுத் திரி வாங்கிச் சென்று பல ஏழை மக்களையும் இத்தகைய தீபங்களை ஏற்றச் செய்து அவர்களுக்கும் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தர வேண்டும். இது மிகச் சிறந்த தீபதானமல்லவா!
யம தர்ப்பணம் :- தீபாவளி தினத்தன்று வருவது யம தர்ப்பணம். தன் தாயினால் தான் மரணம் என்ற வரத்தைப் பெற்று நரகசதுர்த்தியன்று மரணமடைந்த நரகாசுரன் தன் தவறுகளுக்காக மனம் வருந்தி தன்னைப் போல் அதர்மங்களைப் புரிந்து மனதார வருத்தமுற்றுத் தன் அதர்மகாரியங்களுக்காகத் தண்டனைகளை ஏற்றுப் பிராயச் சித்தம் செய்ய (உளமாற) விழைபவர்களுக்காகவும் சில வரங்களைப் பெற்றான். அவற்றுள் ஒன்றே யம தர்ப்பணம். நரகாசுரனின் தாயான பூமாதேவி ஸ்ரீஎமதர்ம ராஜாவையும் ஸ்ரீகிருஷ்ணனையும் வேண்டி, தம்முடைய அநீதிகளுக்காகத் தண்டனைகளை ஏற்றுப் பரிஹாரம் செய்யத் துடிக்கும் நரகாசுரனின் நற்கதிக்காகப் பிரார்த்தனை செய்தனள். ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனுக்காக “காருண்ய தர்ப்பணம்” அளித்திட, அதனை ஸ்ரீஎமதர்மரே ஏற்றுத் தக்க ஆசிகளையும் நற்கதியையும் அளித்தருளினார்.
இன்றைய (தீபாவளி) எம தர்ப்பணத்தில் .
1. மது, மங்கை, புலால், சூது, வாது இவற்றால் முறை தவறி வாழ்ந்து பலரையும் இன்னல்களுக்கு ஆட்படுத்தியோர்
2. காமம், முரட்டுத் தனம், வன்முறை, அதிகாரம் ஆகியவற்றால் பலருடைய வாழ்க்கையைக் கெடுத்தவர்கள்
3. பெற்றோர்களின் குறிப்பாகத் தாயின் மனம் நோகும்படி அவலமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்
4. மனம்போன போக்குப்படி தறுதலையாக வாழ்ந்து பலருக்கும் உடல், மனவேதனைகளைத் தந்தவர்கள். இத்தகைய அதர்மமான முறையில் வாழ்ந்து மாண்டவர்களுக்கு இந்நாளில் தர்ப்பணம் அளித்தால் அது அவர்களுடைய நற்கதிக்கு வழிவகுக்கும். இந்த யமதர்ப்பணத்துடன் எருமை மாடுகளுக்கு அகத்திக்கீரை அளித்தல், வறிய முதியோர்க்கு படுக்கை, கைத்தடி, கண்ணாடி, ஆடைகள் போன்றவற்றையளித்து எமதர்ப்பணப் பூஜையை பரிபூர்ணமடையச் செய்ய வேண்டும்.
- இத்தகைய வாழ்க்கையில் உழன்று மனம் திருந்தத் துடிப்பவர்கள் எமதர்ப்பணத்தன்று மேற்கண்ட யமதீப தானத்துடன் (மேற்)குறித்த கோயில்களில் தக்க தான, தர்மங்களுடன் எம தர்ப்பண பூஜைகளையும் நிறைவேற்றிட வாழ்க்கை சீர் பெறும். அநீதிகளால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமளித்து “இனி அத்தகைய தீய செயல்களில் ஈடுபடேன்” என்ற வைராக்கியத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
அலோசன கௌரீ விரதம்
“அ” என்று துவங்கும் பெயருடைய (அம்பிகா, அகிலா, அன்னபூரணி, அம்புஜம் etc) 60 வயதிற்கு மேற்பட்ட சுமங்கலிக்கு, கணவனுடன் சேர்ந்து பாதபூஜை செய்து, இயன்ற தானங்களை அளித்து அவர்களுடைய ஆசீர்வாதம் பெற்ற தாலிச் சரடை, அம்பிகையின் சஹஸ்ரநாமத் துதிகளால் குங்குமம் கொண்டு அர்ச்சித்துப் புதுமாங்கல்யமாக நல்ல சுப ஹோரை நேரத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.
இதனால் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் உணவுக்கான பஞ்சம் ஏற்படாது. அத்ரி மஹரிஷியின் பத்னியான அனுசூயா தேவி இந்த அலோசன கௌரீ தேவி பூஜையின் மஹிமையை ஸ்ரீபார்வதி தேவிக்கு எடுத்துக் கூறிட, உமையவளும் இதனை முறையாக அனுஷ்டித்துக் காசியில் ஸ்ரீஅன்னபூரணி தேவியாக எழுந்தருளும் ஈஸ்வர கடாட்சத்தைப் பெற்றாள்.

ஞான பஞ்சமி

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர ஸ்வரூபத்தில் சிவ, பார்வதி அம்சங்களை ஒன்றாக பஹிர் (வெளி) முகமாய்க் காணலாம். ஆனால் சிவசக்தி அம்சங்களை அந்தர்முகமாய்க் காண்பதெப்படி? இதற்கு அருள்புரிவதே ஞானபஞ்சமி விசேஷ தின தாத்பர்யமாகும்.
தட்சன், சிவனை அழையாது நிகத்திய யாகத்தில் பங்குபெற சிவனின் ஆணையை மீறி தாட்சாயணியாய்ச் சென்ற உமையவள் தன் தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்டவுடன் தன்னுடைய தாட்சாயணிக்கோல ரூபத்தை அக்னிக்கு இரையாக்கி சக்திஸ்வரூப ஜோதியாய் உலவிடத் திருவுளங்கொண்டாள்! இதுவும் இறைவனின் திருவிளையாடல் தானே! ஹோமாக்னியில் வீழ்ந்த தாட்சாயணியின் சக்தியை அக்னி பகவானால் கூடத் தாங்க இயலவில்லை. அத்திருவுடலை சிவபெருமானே தாங்கி பிரபஞ்சத்தில் பவனிவர அத்தெய்வத் திருவவதார உடலம்சங்கள்  பூலோகத்தின் பல இடங்களில் விழுந்து அவையே சக்தி பீடங்களாயின.
அந்த பீடங்களிலிருந்து “ஸ்ரீவித்யா ஜோதியாய்” வெளிவந்தாள் ஆதிபராசக்தி .“எம்மை ஏற்று அருள்புரிவீர்களாக, ஈஸ்வரப் பிரபோ!” “ஈஸ்வரி, நீ தாட்சாயணியாக வந்திருப்பின், சிவனாக யாம் அதையேற்றிருப்போம். நீயோ உன் தாட்சாயணி ரூபத்தை அக்னியில் களைந்து தற்போது “சாக்த ஜோதியாய்” பிரகாசிக்கின்றாய். இதனை யாம் அந்தர்முக ஜோதியாய்த்தான ஏற்க  இயலும். அதற்காக ஒவ்வொரு பஞ்சமியன்றும் நோன்பிருந்து வருவாயாக! மயிலாடுதுறை, ஆலங்குடி, அகரம், கோவிந்தவாடி, சுருட்டப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் ஐந்துபஞ்சமியில் மௌனமிருந்து நோன்பை மேற்கொள்வாயாக! நோன்பின் முடிவில் யாம் மற்றோர் அவதாரங்கொண்டு அந்தர்முக ஜோதியாய் ஐந்துமுகத்துடன் உன்னை ஏற்போம்”
அவ்வாறு அம்பிகை மௌனம் பூண்ட ஐந்து பஞ்சமி நோன்பின் சக்தியால் அந்தர்முக ஞானம் பெற்றாள். இறைவனும் அந்தர்முகத்தில் சக்தி ரூபத்தை ஏற்றான். எவ்வாறு? அதுவே “தட்சிணாமூர்த்தி” அவதாரம். ஈஸ்வரியின் ஒவ்வொரு பஞ்சமி விரதத்திற்கும் ஒவ்வொரு சிரசாக ஐந்து முகத்துடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி தோன்றி அம்பிகைக்குப் பூரணத்வம் தந்து தன்னுள் ஏற்றார். எனவே தட்சிணாமூர்த்தியான சிவஸ்வரூபத்தில் அந்தர்ஜோதியாய் அம்பிகை பிரவேசம் செய்த திருநாளே “ஞானபஞ்சமி” ! பெறற்கரிய திருநாள்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

ஞானபஞ்சமியன்று ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து குருகிரஹத்திற்குரிய மஞ்சள்நிற ஆடைகளையும் நிலக்கடலை கல்ந்த மஞ்சள் நிற (எலுமிச்சை போன்ற) உணவினையும் தானம் செய்வது சிறப்பானதாகும்.
1. இதுவரை தியானத்தையே கடைப்பிடிக்காதவர்கள் அல்லது அரைகுறையாக தியானம் செய்பவர்கள் இந்த ஞானபஞ்சமியன்று மஞ்சள் நிற ஆடைதரித்து அவரவர்க்கு வசதியான குறித்த நேரத்தில் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். தியான முடிவில் அந்த மஞ்சள் ஆடையை தானம் செய்துவிட வேண்டும். தினமும் அதே இடத்தில் அதே நேரத்தில் தியானத்தில் ஈடுபட வேண்டும். இதுவே தியான நிலையை மேம்படுத்தும்.
எளிமையான தியான பயிற்சிக்காக தன்னுடைய பெயரையோ அல்லது ஏதேனும் ஓர் இறை நாமத்தையோ அக்குறித்த நேரத்தில் மனதினுள் சொல்லிப் பழக வேண்டும். இவ்வாறாக தியானத்தைத் தொடங்குவதற்குச் சிறந்த நாள் ஞானபஞ்சமி!
2. தியானத்தை பலவருடங்களாக மேற்கொண்டு வருபவர்கள் தியானத்தில் பரிபூரணமடைய வேண்டுமாயின் ஞான பஞ்சமியன்று மேற்கூறிய ஐந்து தலங்களில் ஏதேனும் ஒன்றிலேனு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அபிஷேக,ஆராதனைகள், தானதர்மங்களுடன் வழிபட வேண்டும்.
3. தன் மனைவி, பெற்றோர்கள், உறவினர்கள் தன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக எண்ணுபவர்கள்  ஞானபஞ்சமியன்று ஊத்துக்கோட்டை – திருப்பதி சாலையிலுள்ள “சுருட்டப்பள்ளி” கிராமத்தின் சிவாலயத்தில் “தம்பதி சமேதராக” அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைச் சேவிக்க  வேண்டும் .ஸ்ரீரங்கநாதர் போல் சிவபெருமான் சயனக் கோலம்  பூண்டிருக்கும் அபூர்வமான சிவத்தலம். இங்கு சுதை ரூபத்தில் சிவபெருமான் பள்ளி கொண்டு தரிசனம் தருகின்றார்.
பீஷ்ம பஞ்சகம்
பீஷ்மாச்சாரியார் ஒரு தீர்கமான பிரம்மச்சாரி! நைஷ்டிக பிரம்மச்சர்யத்தில் உத்தம நிலைகளை அடைந்தவர். இத்தகைய தெய்வீக பிரம்மச்சாரிகளுக்கு விந்தானது தேஜோமயமாய்ப் பிரகாசித்து மூலாதாரம் வழியே மேற்சென்று சஹஸ்ராரத்தில் ஜோதிப் பிழம்பாய் உள்ஜோதியை, ஆத்ம ஜோதியாய்க் காட்டும்.
பீஷ்மர் தன்னுடைய பிரம்மாச்ர்ய விதி, நியதிகள் சற்றேனும் வழுவாதிருப்பதற்காக, பஞ்சகம் அனுஷ்டானங்கள், தர்ப்பணங்கள், பூஜைகள் போன்ற பல நியதிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றே (பீஷ்ம) பஞ்சகமெனும் ஐந்து தின பூஜைகள், மிகவும் எளிமையான பூஜா நியதிகள்.
1. சிறுவர்கள், பிரம்மசாரிகள் இவற்றைக் கடைபிடித்தால் அலைபாயும் மனமடங்கி நல் ஒழுக்கம், சாந்தம், அபரிமித மனோசக்தி கிட்டும்.
2. திருமணமானவர்கள் இவற்றை நிறைவேற்றிட முறையற்ற காம எண்ணங்கள் மறைந்து முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கையைப் பெறலாம்.
3. ஆண்களின் விந்து முறையாக சோனிதமாம் (பத்னியின்) யோனியில் மட்டுமே செலுத்தப் பட வேண்டும். விந்தை வெளிச் சிந்துதல் பாபகரமானதாகும். கோடிக்கணக்கான ஜீவ அணுக்களை வீணாக்குகின்ற பாவம் சாதாரணமானதல்லவே! இத்தகைய விந்துக் குற்றங்களுக்கும், பிறன்மனைபுகும் பஞ்சமா பாதகத்திற்கும் ஓரளவு பிராயச்சித்தமாக எளிமையான பீஷ்ம பஞ்சக நியதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றையேனும் ஒழுங்காகக் கடைபிடித்தால் தான் முறையற்ற காம உணர்வுகள், செயல்களுக்குப் பரிஹாரம் காண முடியும். இல்லையேல் தெருநாய்களாகப் பிறந்து கண்ட இடங்களில் காமம் கூடும் பரிதாபப் பிறவி நிலைகளே கிட்டும்.
ஐந்து நாள் எளிய பூஜை
பீஷ்ம பஞ்சகம் ஐந்து நாட்களுக்குரிய எளிய பூஜையாகும்..
1. அனைவரும் குறிப்பாக வைணவர்கள், தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
2. 70 வயதிற்கு மேற்பட்டிறந்த உற்றம், சுற்றம், அயலார் அனைவருக்கும் கண்டிப்பாக தர்ப்பணமும் அல்லது “காருண்யமுறைத்” தர்ப்பணம் செய்தல் வேண்டும்..
3. முதல் நாள் கழுத்தளவு/முழங்காலளவு நீரில் அமர்ந்து குறைந்தது இரண்டுமணி நேரமேனும் “துவாதச நாமாவளியை” ஜபிக்க வேண்டும். வீட்டிலிருப்பின் ஒரு செம்பு ஜலத்தில் தர்ப்பையை வைத்து அதைத் தாங்கியவாறே ஜபிக்க வேண்டும். பின் அந்த தர்ப்பையைக் கிணற்றில்/ஆற்றில்/சமுத்திரத்தில்/அரசு, ஆல், வேம்பு, புரசு போன்ற சமித்து மரங்களின் கீழ் சேர்த்து விட வேண்டும்.
4. இரண்டாம் நாள் ஆற்றங்கரையில் /சமுத்திரக்கரையில் /கோயிலில்/ வீட்டில் அக்னி மூலையில்  (தென் கிழக்கில் ) தர்ப்பைப் பாயில் அமர்ந்து “துவாதச நாமாவளியை” குறைந்தது இரண்டு மணி நேரம் ஜபிக்க வேண்டும்,
5. மூன்றாம் நாள் பெற்றோர்களை/தாய்/தந்தை/பெரியோர்களை வலம் வந்து துவாதச நாமாவளியை எட்டுமுறை ஜபித்து அவற்றின் பயன்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்து எட்டு முறை நமஸ்கரிக்க வேண்டும்.
6. நான்காம் நாள், மூத்த சகோதரிகளை வலம் வந்து எட்டுமுறை துவாதச நாமாவளி ஜபித்து எண்முறை நமஸ்கரிக்க வேண்டும்.
7. ஐந்தாம் நாள் மூத்த சகோதரர்களை வலம் வந்து எட்டுமுறை துவாதச நாமாவளி ஓதி எண் முறை நமஸ்கரிக்க வேண்டும்.
8. நைவேத்யமும் தானமும் :
முதல் நாள் : வெண்பொங்கல்
2ஆம் நாள் : தோசை
3ஆம் நாள் : மிளகு வடை
4ஆம் நாள் : சர்க்கரைப் பொங்கல்
5ஆம் நாள் :  பால் பேணி
9. ஐந்தாம் நாள் பீஷ்மருக்கு அர்க்யம் அளிப்பதுடன் பீஷ்ம பஞ்சக பூஜை நிறைவு பெறுகிறது.
துவாதச நாமாவளி’ : ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்திற்குரிய பலனைத் தரவல்ல இந்த துவாதச நாமாவளியை தினமும் குறைந்தது பன்னிரு முறையேனும் ஓத வேண்டும். சிறந்த எளிமையான தினசரி பூஜை!

ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரர்
ஆலங்குடி

1. ஓம் ஸ்ரீஹரயே நம :                                    
2. ஓம் ஸ்ரீகேசவாய நம :                                             
3. ஓம் ஸ்ரீபத்மநாபாய நம :                            
4. ஓம் ஸ்ரீவாமனாய நம :                               
5. ஓம் ஸ்ரீவேதகர்பாய நம:                            
6. ஓம் ஸ்ரீமதுசூதனாய நம
7. ஓம் ஸ்ரீவாஸுதேவாய ந்ம :
8. ஓம் ஸ்ரீவராஹாய நம :
9. ஓம் ஸ்ரீபுண்டரீகாக்ஷாய நம :
10. ஓம் ஸ்ரீஜனார்தனாய நம :
11 ஓம் ஸ்ரீகிருஷ்ணாய நம :
12. ஓம் ஸ்ரீஸ்ரீதராய நம

துளசி விவாகம்

ஸ்ரீமன் நாராயணமூர்த்தி தம் தெய்வத் திருஅவதாரமொன்றில் ஸ்ரீதுளஸீதேவியை மணம் புரிந்த திருநாள்.
1. இந்நாளில் துளஸிச் செடிக்கு மஞ்சள், குங்குமமிட்டு ஆபரணம் அணிவித்துப் பூஜிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு செம்பை அலங்கரித்து அதில் கங்கை, காவிரி போன்ற புண்ய நதிகளின் நீரை ஊற்றி, பச்சைக் கற்பூரம்,  ஜாதிக்காய், ஏலக்காய், வெட்டிவேர் சேர்த்து தேங்காய், மாவிலை கொண்டு மூடி தாம் அறிந்த நாராயண மந்திரங்களை ஜபித்துப் பூஜித்துச் செம்பு நீரை துளஸிச் செடிக்கு வார்க்க வேண்டும்.
2. திருமணமான பெண்கள் இதை நிறைவேற்றிடில் தீர்கமான சுமங்கலித்வத்தையும் கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத் தரும் திருவருளை அடைவர்.
3. கன்னிப் பெண்கள் இந்த துளஸீ பூஜையை முறையாக மேற்கொண்டால் திருமணப்ராப்தி கைகூடும். இன்று சுமார் பத்து வயதுள்ள கன்யா குழந்தைகளுக்கு (சிறுமியர்) பாவாடை, சட்டை, வளையல்கள் அளிப்பது விசேஷமானது.

நம் சற்குருவே உபதேசமாக
அருளும் துவாதச நாமாவளி !

தீபாவளி
1 தீபாவளியன்று குறைந்தது மூன்று பேருக்கேனும் புது ஆடைகளைத் தந்திடுக!
2. ஜவருக்கேனும் உணவிடுக!
3. தீபாவளிக்கு முன்னரே ஒவ்வொருவரும் குறைந்தது பன்னிரெண்டு பேருக்கேனும் நீராட எண்ணெய், சீயக்காய் அளித்து இனிப்பு/பட்சணங்களையும் தானமாக அளித்திடுக!
4. இல்லத்தில் குறைந்தது ஐந்து பசுநெய்/ தீபங்களும் கோயிலில் 21 பசுநெய்/நல்லெண்ணெய் தீபங்களும் ஏற்றப்பட வேண்டும்.
5. தீபாவளிக்கு முன்னரேயே புது ஆடைகளைப் பூஜையில் வைத்து ஒரு நீண்ட தர்ப்பையின் ஒரு முனையை ஆடைகளின் மேலும் மறுமுனையை கங்கை, காவிரி போன்ற புண்ய நதிநீர் நிரம்பிய செம்பில் வைத்து, செம்பை இருகைகளால் மூடி தர்ப்பையைப் பிடித்தவாறே குறைந்தது 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
இதனால் அந்த ஆடைகள் சிறப்பான ஆன்மீக சக்தியைப் பெறுகின்றன. இத்தகைய ஆடைகள் வெளிப்புற துர்சக்திகள் உடலில் சேராவண்ணம் இரட்சைபோல் அமைந்து காக்கின்றன. மேலும் பருத்தி/இழைகளில் உள்ள  தோஷங்கள், பருத்தி விளைந்த நிலத்தில் உள்ள தோஷங்கள், நிலச் சொந்தக்காரரின் தீவினை எண்ண(துர்) சக்திகள், இடைத்தரகர்கள்/வியாபாரத் தல, தையலகத் தோஷங்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன.
காயத்ரீ மந்திரபூஜை முடிந்ததும் இந்த நீர்ச் செம்பிற்கு பழங்களின் மூலம் தாமே ஏற்று அந்த ஆடைகளை அணிவோர்க்கு அருள்பாலிக்கின்றன.

அசோக திரிராத்ரி விரதம்

6.10.1995 தொடங்கி தொடர்ந்து மூன்று இரவுகளிலும் பலர் ஒன்றாக அமர்ந்து 36 முறை ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரம் அல்லது பாம்பன் சுவாமிகளின் “பகை கடிதல்” பாடல்களை ஓதி, அவர்களுக்கு அறிமுகமான, போர்களத்தில் இருக்கும் இராணுவ வீரர் சிறப்பாகச் செயல்படவும் அவர்கள் தீர்க ஆயுளுடன் வாழ்ந்திடவும் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லது இராணுவ வீரரின் குடும்பத்தின் க்ஷேமத்திற்காக மேற்கண்ட மந்திரங்களை ஓதி அக்குடும்பங்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். உலகின் பல பகுதிகளிலும் இனச்சண்டைகள், உள்நாட்டுக் கலவரங்கள், வன்முறைகள் காரணமாகப் பல்லாயிரம் குடும்பங்கள் நிராதரவாகி, வீடு, சொத்துக்களை இழந்து வறுமையில் தவிக்கின்றன. பல்லாயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி வாடுகின்றன. பெற்றோர்களை இழந்த சின்னஞ்சிறார்கள் ஆயிரமாயிரம்!

அசோக சக்கரம்

ஆனால் உலகெங்கும் நிகழ்கின்ற இத்தகைய வன்முறைகளைத் தடுக்கின்ற அளவிற்கு பூஜாசக்தி, ஆன்மீக சக்தி, தெய்வீக சக்தியை மனிதர்கள் பெறவில்லை! மேலும் அவரவருக்காக, அவரவர் குடும்பத்திற்காகவே இன்னும் இறைவனை வழிபடுகின்ற குறுகிய மனப்பான்மை கூடிய மனோநிலையிலேயே பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்கின்றனர். எனவே  மனிதனுடைய புண்யசக்தி அவனுடைய நித்ய வாழ்வுத் தேவைகளுக்கே போதாமலிருக்க,
“நான் உலக மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்“ என்று பேசுவது உதட்டளவில் தான்! ஒரு ஐந்து பைசாவை வைத்துக் கொண்டு ஒராயிரம் பேருக்கு அன்னதானம் செய்யமுடியுமா? இது போலத்தான் பூஜாபலன் இல்லாமலேயே, தகுந்த புண்ய சக்தி பெறாமலேயே
“நான் மற்றவர்களுடைய நோய் தீரப் பிரார்த்திக்கிறேன்”
“அவர்களுடைய துன்பங்கள் தீரப் பிரார்த்திக்கின்றேன்”
“ உலக சமாதானத்திற்காகப் பிரார்த்திக்கின்றேன்“
என்று பயனற்று வெறுமனே உட்கார்ந்து ஒரு நல்ல காரியமும் செய்யாமலேயே உதட்டளவில் பேசி நிற்பது! வெறும் நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது! வயிற்றுப் பசியைக் கற்பனையால் தீர்க்க முடியுமா?  ஆனால் பலர் ஒன்று கூடும் கூட்டுப் பிரார்த்தனையால் பலவற்றைச் சாதிக்கலாம். இது மட்டும் எப்படி சாத்யமாகும் ?
கூட்டுப் பிரார்த்தனை
தனிக் குச்சி ஒடிந்து விடும், பல குச்சிகளை ஒன்றாகக் கட்டினால்... அது மிகவும் உறுதியானதல்லவா? பலகோடி மண்துகள் சேர்ந்த செங்கற்கள் கொண்டு எவ்வளவு பிரம்மாண்டமான கட்டிடம் எழும்புகிறது?
ஒவ்வொரு மனிதனுக்கும் பூதவுடல், மனோதேகம் என்ற இரண்டு உண்டு. உடல் சக்தியைவிட மனோசக்தி பலகோடி மடங்கு சக்தி வாய்ந்தது. ஆனால் மனோசக்தியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு பூஜா பலன் தேவை. ஆனால் மனோசக்தியைத் திரட்டுவது எளிது! இது சத்சங்கத்தில், கூட்டுப் பிரார்த்தனையில் நிகழும் சாதானை!
பலர் ஒன்று கூடிப்பிரார்த்திக்கும் போது அங்கு மனோசக்தி திரள்கிறது. இத்தகைய நற்காரியம் எங்கு நடைபெறுகிறது என்று காத்துக் கிடக்கும் நல்தேவதைகளும் மஹான்களும் அங்கு பிரசன்னமாகி தங்கள் தபோபலனையும் சேர்த்து அந்த கூட்டுப் பிராத்தனைக்குப் பின் நாம் செய்கின்ற அன்னதானப் பொருட்களில் தம் சக்தியை அருள்கின்றனர்.
பலர் ஒன்று கூடிப் பிறருக்காகச் சேவை செய்யத் தயாராகின்ற போது அது சுயநலமற்ற தியாகச் செயலல்லவா? இத்தகைய தியாகம் நிறைந்த காரியம் எங்கு நடக்கின்றது என்று தேடி வானத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளும், இதற்காகவே பூலோகத்தில் அலைந்து திரியும் மஹான்களும் சத்சங்கக் கூட்டுப் பிரார்த்தனை என்றால் ஓடோடி வந்து அங்கு திரளும் மனோசக்தியை தானதருமங்களின் மூலம் மிகவும் ஆற்றல் மிகுந்த புண்ய சக்தியாக மாற்றி அதன் பலனைக் கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவர்க்கும் அருளிச் செல்கின்றனர்.
எனவேதான் தனித்துச் செய்வதைவிடக் கூட்டாகச் செய்யும் பிரார்த்தனை, ஹோமம், வேள்வி, யாகம், பூஜை, விளக்கு பூஜை, கிரிவலம், அன்னதானம், அர்ச்சனை, ஆராதனைகள் போன்றவற்றிற்குப் பலாபலன்கள் அதிகம். கோயிலின் தத்துவமே இதுதானே!
உலகெங்கும் நிகழ்கின்ற அதர்மமான போர் முறையில் இலட்சக்கணக்கான குடும்பங்கள் சிதைந்து, அழிவுற்று, நலித்து நிராதரவாகி வாடுகின்றன. இதற்குக் கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் செய்யும் தானதருமங்களினால் ஓரளவு பரிஹாரம் காணலாம். இதற்காகவே “அசோக த்ரிராத்ரி” விரதம் விசேஷமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அசோகச் சக்கர மஹிமை
ஓர் இராணுவப் போரில் அழியும் உயிர்களைக் கண்டு மனம் மாறிய மாமன்னன் அசோகர் சமாதானம், சாந்தம் பொங்கும் அசோக சக்கரத்தை நிர்மாணித்து அதற்கு ஹோம, வேள்வி, யாகங்களால் ஆன்ம சக்தியளித்துச் சாந்த நிலையை, அமைதிக் கதிர்களைப் பரப்பினான்.  அசோக சக்கரத்தில் பல ஆன்மீக இரகசியங்கள் உண்டு. ஒரு குடும்பத்தின் தலைமுறையனைத்தையும் அதில் பதித்துவிடலாம். பித்ரு பூஜா விதியில் அசோக சக்கரமும் ஒன்றாகும். பித்ரு ஹோமத்தில் மணலில் இச்சக்கரத்தையே வரைந்து ஹோமம் செய்யும் விசேஷ முறை ஒன்றுண்டு. இதனை முறையாகச் செய்தால் அசோகச் சக்கரத்தின் 24 ஆரங்களிலும் ஒரு தலை முறைக்குரித்தான 24 மூதாதையர்களை (இதில்) ஆவாஹனம் பெறச் செய்யலாம்.
எனவே அசோக த்ரிராத்திரி விரதத்தின் மூன்று நாட்களிலும் மாலை விளக்கேற்றிய பின் இருள் சூழும் இராத்திரியில் 24 பேர் ஒன்றாக அமர்ந்து குறைந்தது 12 ஆண்கள் 12 பெண்கள் சுற்றிலும் அமர்ந்து நடுவில் பச்சரிசி மாவினால் அசோக சக்கரம் வரைந்து 24 அட்சரங்கள் உள்ள ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பிறகு ஸ்ரீஅகஸ்தியர் ஸ்ரீராமனுக்கு உபதேசித்த ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் அல்லது பாம்பன் சுவாமிகளின் “பகை கடிதல்“ என்ற  (அற்புதமான பீஜாட்சரங்கள் கூடிய) பாடலையும் 36 முறை ஓதி, குறைந்தது 24 பெரிய எள் (இனிப்பு) உருண்டைகளை நைவேத்யம் செய்து தானம் அளிக்க வேண்டும்!
அசோக த்ரிராத்ரியின் மூன்று நாட்களிலும் இத்தகைய பூஜை செய்து “எங்கு போர்க்கள சூழ்நிலைகள்“ நிறைய உள்ளனவோ அங்கு அமைதி நிலவ வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புதிய (பச்சரிசி மாவுக்கோல) அசோக சக்கரம் வரைய வேண்டும். அல்லது இரண்டு/மூன்றுபடி பச்சரிசி மாவினையே ஒரு நல்ல துணியில் வட்டமாக அசோகச் சக்கரம் போல், 24 ஆரங்களுடனும் வடிவமைக்கலாம்.
அந்தந்த நாள் பூஜை முடிந்தபின் அசோக சக்கரக் கோல மாவினைத் திரட்டித் தனியே எடுத்து வைத்து மூன்று நாள் அசோகச் சக்கரக் கோலப் பொடியினைப் பல கோயில்களிலும் உள்ள எறும்புகளுக்கு நவதானியம், ரவை, அரிசி, சர்க்கரையுடன் சேர்த்து இடுவதோடு மட்டுமல்லாது சிறதளவு அக்கோலப் பிரசாத மாவினை
1. புண்யமான கடல் ஸ்தானங்கள் குறிப்பாக கன்யாகுமரி, பூம்புகார், இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டணம் அருகே நவபாஷாணம், திருச்செந்தூர் போன்ற இடங்கள்
2. நதிகள் குறிப்பாக கங்கை,காவிரி, தாமிரவருணி, கிருஷ்ணா, நர்மதை, யமுனை etc…
3. தீர்த்தங்கள் குறிப்பாக மகாமகக் குளம், காவிரி, கங்கை படித்துறைகள்.
4. காசி, திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருக்குற்றாலம், கொல்லிமலைக் குளம்/சுனை etc..,
போன்ற இடங்களில் அசோகசக்கர பிரசாத மாவினைக் கரைக்க வேண்டும்.
இந்த மாவினால் நீர்க்கொழுக் கட்டை செய்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறாக நதி, கடல், எறுபுகளின் மூலம் பூமிக்கடியில் உள்ள நீரோட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக அசோக த்ரீராத்திரி விரதபூஜையின் ஆன்ம சக்தி குறிப்பிட்ட (போர் நடக்கும்) இடத்திற்குப் பரவி சாந்தத்தை இறையருளால் உருவாக்கும். ஆழ்ந்த நம்பிக்கையே இதற்கு அஸ்திவாரம் இவ்வாறாகவே ஒரு மனிதன் உலக சமானத்திற்கு (வெறும் உதட்டளவில் இல்லாது) ஆன்மீக முறையில் பயனுள்ள முறையில் பணி ஆற்ற முடியும்!
இராகுகாலம், எமகண்டம் போன்று அர்த்தப்பிரகரணன் நேரமும் உண்டு. தீயசக்திகள் வலுப்பெறும் நேரமிது!. இந்நேரத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்குப் பூஜை செய்து வேட்டி, துண்டு, பனியன், சட்டை, புடவை, இரவிக்கை என்ற வகையில் ஆண் பெண் உடை வகைகளை செட்டாக தானம் செய்த பின் அரைகுறையாக நின்று விட்ட கட்டிடம், திட்டம், வியாபாரக் காரியங்களும் அலுவலகங்கள் போன்றவற்றை முழுதும் நிறைவேற்ற தேவையான காரியங்களைத் திட்டமிட வேண்டும். ஆனால் அக்காரியங்களை அர்த்தபிரகரணன் முடிந்தவுடன் நல்ல நேரத்தில் உடனே செயல்பட வேண்டும் ஒரு காரியம் அரைகுறையாக நிற்பதற்குப் பல தீய சக்திகள் அர்த்தப்பிரகரண நேரத்தில் தான் கூடுகின்றன. இந்நேரத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் வழிபாடு, அதற்குரிய தர்மங்களை நிறைவேற்றினால் இதன் புண்யசக்தியால் அத்தகைய (ஒன்று கூடி நிற்கின்ற) தீய சக்திகளைப் பூண்டோடு அழித்து விடலாம். அரைகுறைக்காரியங்களும் முழுமை பெறும்.

இராசி கர்ம நிவாரண தீபிகை

மேஷம்
அலுவலகம் செல்வோர் :  அதிகாரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும் வயிற்றுக் கோளாறிலிருந்து அமைதி பெறவும், உணவுக் கட்டுபாடு அவசியம். அதிகம் காரம், புளிப்பு இல்லாத உணவை ஏற்பது தேவை. தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பன்னிரெண்டு முறைக்குக் குறையாமல் இப்பதிகத்தை ஓதுதல் வேண்டும்.
“மற்றுப் பற்றெனக்கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர்தொழுதேத்துஞ்சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும் நாநமச்சிவாயவே”
முதியோர்கள்: பந்துக்களோடு தர்க்கம் செய்யாமல் இருத்தல் நலம். பிரயாணத் தொல்லை உண்டு. செவ்வாய் பகவானைத் துதித்திடுக!
பெண்களுக்கு : இவர்களுக்குப் பெண்களே எதிரிகள். ஆகவே கவனமாய்ப் பேச வேண்டும். சௌந்தர்யலஹரியில் முதல் பாட்டை 21 முறைக்குக் குறையாமல் பாடி பாயாசம் நைவேத்தியம் வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தல் நலம்.
மாணவ மாணவிகள் : தலைவலி போன்ற துன்பங்களைப் போக்குவதற்கும் கணக்கு, மிருகஇயல் மற்றும் பொறியியல் மாணவர்கள் வீண் அலைச்சலைப் போக்குவதற்கு புஷ்பதந்தர் இயற்றிய சிவமஹிம்ன ஸ்தோத்திரம் மாதம் பூராவும் ஓதுவதால் தெளிவு கிடைக்கும்.
கணவனை இழந்தோர் : கோபம் அதிகமாக வரும். இதை அடக்க வேண்டும். பிள்ளையார் கோவிலில் அடிப்பிரதட்சணம் செய்து கணபதி துதியை விடாமல் ஜபிக்க வேண்டும்.
வியாபாரிகள் : பணமுடை, சிரமம் காரியத்தடங்கள், வீண் அலைச்சலும் அதிகமாக வராமல் இருக்க துர்க்கையை விடாமல் துதித்துப் பசுவிற்குப் பழம் அளித்தல் நலம்.
ரிஷபம்
 அலுவலகம் செல்வோர் : வேலை செய்யும் இடத்தில் வரும் துன்பமும் வேலை சம்பந்தமான அலைச்சலும், மனசஞ்சலமும், ரத்தக் கொதிப்பும் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளதால் பொறுமையைக் கையாளுதல் மிகவும் தேவை. இவர்கள் முடிந்த மட்டும் சிகப்பு நிறக் கோடுகள் உள்ள ஆடையை அணிவது நலம் தரும். மேலும் தினமும்

“பொடியுடை மார்பினர் போர்விடையேறிப் பூதகணம ்புடைசூழக்
கொடியுடையூர் திரிந்தையங் கொண்டு பலபல கூறி
வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக மாயவன் வாழ்கொளிபுத்தூர்க்
கடிக்கமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம் “
என்ற பாடலை தினமும் பதினெட்டு முறைக்குக் குறையாமல் ஓதி தக்காளி சாதம்தனை ஒருவருக்காவது தருமம் செய்திடல் நலம் தரும்.
மாணவ மாணவிகள் : கடிதத்தால் தொல்லை, ஆங்கிலம், கம்யூட்டபடிப்பு, DCE படிப்பு, தட்டெழுத்து படிக்கும் மாணவர், மாணவியர் கவனக்குறையால் வீண்பழி சுமத்தலுக்கு ஆளாகாமல் இருக்க கருப்புக்கோடுகள் அமைந்த ஆடையை அணிந்து துர்வாசர் இயற்றிய சக்தி மஹிம்ன ஸ்தோத்ரம் படிப்பது துன்பத்தைக் குறைத்து நல்வழி காட்டும்.
முதியோர்கள் : பிறர் தொல்லை அதிகரிக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் நிலை வரும். வாயுபிடிப்பு தொல்லை வரும் என்பதால் தூரப் பிரயாணத்தைத் தவிர்க்கவும். இந்த மாதம் பூராவும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல துன்பம் குறையும்.
அநந்த சௌக்யாமல கோக்ஷதாத்ரி
துரந்த ஸம்சார விமோச நாங்த்ரீ
சஹ்யாசலோத்பந்த விச்வரூபே
காவேரி காவேரிமம ப்ரஸீத!!
திருமணம் ஆகாதோர் : இராகு காலத்தில் எலுமிச்சம் பழம் விளக்குதனை பைரவர்க்கு ஏற்றி நாய்களுக்குப் பொறை பிஸ்கட் போன்றவற்றை தினமும் அளித்திட திருமணப் பேச்சில் தடங்கல் வராது.
வியாபாரிகள் : துவரை, எள்ளு, கொள்ளு வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை. இரும்பு welding, வாகனத்தில் உதிரிபாகங்கள் விற்போர் எமகண்ட நேரத்தில் இந்தப் பாடலை 51 முறைக்குக் குறையாமல் ஓதி வியாபாரம் செய்தல் நலம்.
“இறைவனேயெவ்வுயிருந் தோற்றுவிப்பான்றோற்றி
இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் இறைவனே எந்தாயென
விரங்கு மெங்கள்மேல் வெந்துயரம் வந்தாலது மாற்றுவான்.”
மிதுனம்
அலுவலகம் செல்வோர் : உத்தியோகத்தில் மேலஅதிகாரிகள் உதவுதல் மேலும், பச்சை நிற ஆடைகளை அணிதல் நலம். உறவினர் வருகையால் ஆத்ம விசாரங்கள் அதிகமாகும். புதிதாகப் பொன் ஆபரணங்கள் வாங்கலாம். திரிவிக்ரமன் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது. பச்சைவாழைப் பழம் தானம் சிறந்தது.
முதியோர் : சந்ததிகளால் நன்மை அடைவார்கள். பேரன் பேத்திகளைக் கவனமாய் பார்த்துக் கொள்க! அவர்களுடைய குறும்புத்தனத்தால் சிறுகாயங்களை அடைய வழியுண்டு. ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய சரணாக்தி கத்யம் படிப்பது நல்லது.
மாணவ மாணவியர் : போட்டியில் கலந்து கொள்வது நல்லது. மேல்படிப்பிற்குப் புதிய பாடங்களைக் குழப்பிக் கொள்ளாமல் தேர்ந்தெடுத்துப் படிப்பது நலம் தரும். வேலைக்கான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அதைப் படிக்க முயற்சி செய்வது நலம், வெள்ளையில் பச்சைப் புள்ளி, கோடுகள் உள்ள ஆடைகளை இம்மாதம் உபயோகிப்பது நல்லது.
திருமணமாகாதோர் : மஞ்சள் நிற ஆடை அணிந்து அம்பாளை அடிப்பிரதட்சணம் செய்து சுமங்கலிகளுக்குப் பாதபூசை செய்திட நல்ல வரன் வர வழியுண்டு. வல்லபாச்சாரியார் எழுதிய மதுராஷ்டகம் படிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.
மனைவியை இழந்தோர் : இம்மாதம் பூராவும் காலை, மாலை இரண்டு மணிநேரம் மௌனமாய் சிக்கல் சிங்காரவேலனைத் தியானித்தல் வேண்டும். இதனால் மனவேதனைகள் குறைய வழியுண்டு.
கணவனை இழந்தோர் : வெள்ளைத் தாளில் ஸ்ரீராமஜெயம் என்று 1008க்குக் குறையாமல் எழுதி அந்த தாள்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு இராமர் படத்திற்கோ, விக்ரஹத்திற்கோ அர்ச்சனை செய்திடில் கணவனின் ஆசியைப் பெற்று நற்காரியங்கள் செய்யலாம்.
வியாபாரிகள் : வியாபாரத்தில் புதுப் பணவரவுகள் உண்டு. கொடுக்கல் வாங்கலில் தெளிவு பிறக்கும். கஜலட்சுமி உள்ள கோயிலில் புத்தாடை தானம் செய்க
கடகம்
அலுவலகம் செல்வோர்: நிறைய விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம். ஆனால் பெண்களால் சில சிறு சலசலப்பு ஏற்படலாம். தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவும், அவர்கள் விருப்பத்தை அறிந்து நடக்கவும், வெளிர் நீலநிற ஆடைகளை அணிவது நலம் தரும். நண்பர்கள் உதவ வழியுண்டு. தேவேந்திர் இயற்றிய மகாலக்ஷ்மி அஷ்டகம் படிப்பது மிகவும் நலம் செய்யும்.
கன்னிப் பெண்கள்: Sky Blue நிற ஆடைகளை அணிவது மாதம் பூராவும் நலம் தரும். முடிந்த மட்டும் நண்பர்களோடு கவனமாய் இருக்கவும். நீங்கள் சொல்லாததை யெல்லாம் சொன்னதாகவே வதந்தி பரப்பிடுவர். சிவன் கோயிலில் வில்வ அர்ச்சனை செய்து சிறுவர்களுக்கு இனிப்பு வழங்குவது நலம் தரும்.
சுமங்கலிகள் : பராசரபட்டர் எழுதிய ஸ்ரீகுணரத்ன கோசம் துதித்திட தனக்கு வரும் துன்பங்களைக் களையவும், கணவனுக்கு அலுவலகத்திலும் எதிர்பாராது வரும் தொல்லைகள் தொலையவும் வழிசெய்யும். மாதவப்பெருமாளை அடிப்பிரதட்சணம் செய்து மாவிளக்கு இடுதல் மிகவும் நலம் தரும்.
வியாபாரிகள் : கடலை, மொச்சை, தங்கம், வெள்ளி, வெளிநாட்டுப் பொருட்கள் விற்போர், புதுநண்பர்களை நம்பாமல் பழக்கமுள்ளோரையே நம்புதல் நலம் தரும். சன்ன குரலுடையோரிடம்  கவனம் தேவை.
மாணவ மாணவியர் : வைத்தியப் படிப்பு, வாணிபப்படிப்பு, குளிர்சாதன, படம்பிடிக்கும் படிப்பு படிப்போர், சிறுதவறுகள் செய்ய வழி உண்டு. இது சிலகாலம் கழித்து பெரிதாகி துன்பம் தரும்.
ஆகவே இவர்கள் :-
இடரினும் தளரினும்எனதுறு நோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல்
அதுவேவுனதின்னருள் ஆவடுதுறைஅரனே.
என்ற பாடலை மாதம் முழுவதும் 21 முறைக்கு குறையாமல் தினமும் ஓதிவந்திடில் நலம் பயக்கும்.
சிம்மம்
அலுவலகம் செல்வோர் : பிரயாணத்தில் கவனம் தேவை. விரயம் அதனால் தர்க்கம் ஏற்பட வாய்ப்புண்டு. கணக்குகள் எழுதுவோர் கூட்டலில், கழித்தலில் தவறுகள் செய்ய வழியுண்டு. இதனால் துன்பம் அடைய வழிஉண்டு. ஆரஞ்சு நிற உடையணிதல் ஓரளவு உதவியாய் இருக்கும். தினமும் இந்த பாடலை ஓதி இரண்டு ஏழைக்காவது அன்னமிடல் நலம் தரும்.
ஆன்ந்தரூபே நிஜபோதரூபே:
ப்ரும்மஸ்வரூபே ச்ருதி மூர்த்திரூபே!
சசாங்கரூபே ரமணீயரூபே,
ஸ்ரீரங்கரூபே ரமதாம் மனோமே!!
பெண்கள் : அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மீது தேவையில்லாத பொறுப்பை சுமத்தி வலுச்சண்டைக்கு இழுப்பர். பேசுவதை அளவோடு வைத்துக் கொள்ளல் நலம். கேசவபெருமாள் கோவிலுக்குச் சென்று அடிப்பிரதட்சிணம் செய்வது நலம். குலசேகரர் இயற்றிய முகுந்த மாலாதோத்திரத்தை பாடுவது நலம் பயக்கும்.
முதியோர் : நேரத்தை எப்படிக் கழிப்பது என்பது தெரியாமல் வீண் மனக்குழப்பங்களை தங்களுக்குள்ளேயே உண்டாக்கி அவதியுறுவர். என்ன இழந்தாய்? நீ எதைப் பெறுதற்கு ஏங்குகிறாய் நீ? என்ற கேள்வியை கேட்டுப் பாருங்கள், வீணாகத் தனியாக இருக்கும் போது கதவைத் திறந்து விடாதீர்கள்.
மாணவ மாணவியர் : தமிழ்த் துறை, ஆங்கிலம், சுருக்கெழுத்துப் படிப்பு, ஆசிரியை, ஆசிரியர் இவர்களிடம் கவனம் தேவை. வீண் கோபத்திற்கு ஆளாவீர்கள். இந்தப்பாடலை தினமும், 18 முறைக்கு குறையாமல் ஓதவும்.
நமச்சிவாயவே ஞானமும்கல்வியும்
நமச்சிவாயவே நானறிவிச்சையும்
நமச்சிவாயவே நாநவின்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறிகாட்டுமே.
வியாபாரிகள் : அவரசப் பட்டுப் பொருட்களை அனுப்பி விட வேண்டாம். பொறுமையாக நிதானமாய் யோசித்து  செய்யவும். புதிய கடன்களை கொடுக்காதீர். உங்கள் பக்கத்தில் இருப்பவரே திட்டம் தீட்டலாம் கவனம் தேவை.
கன்னி
 அலுவலகம் செல்வோர்: அதிகாரிகளால் சிறுதொல்லைகள் வரும். ஜலதோஷம், மூச்சு சம்பந்தமான தொல்லைகள் துன்புறுத்தும். மனதில் ஏதோ இனம் புரியாத கவலை இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியாத நிலை இருக்கும். புதிய பொறுப்புகளை முடிந்த மட்டும் எடுக்காமல் இருத்தல் நலம். பச்சைநிற ஆடை அணிதல் நலம் தரும். தினமும் இந்தப் பாடலை 21 முறைக்கு குறையாமல் ஓதி பசுவிற்கு வாழைப்பழம் தருதல் நலம் தரும்.
செம்மான்மகளைத் திருடும்திருடன்
பெம்மான்முருகன் பிறலான் இறவான்
சும்மாஇரு சொல்அற என்றலுமே
அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே.
பெண்கள் : சோம்பல், கோபம் இதனால் எரிச்சல் ஏற்பட்டு பிறரோடு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே எழுதுவதில் கவனம் தேவை. கறுப்புக் நிறக்கோடுகள் உள்ள ஆடைகளை அணிந்து இந்தப் பாடலை விடாமல் காலை, மாலை, இரவு ஓதி ஏதாவது ஒரு ஏழைக்கு கோவிலில் பலகாரம் அளித்தல் நலம் தரும்.  
நாயேன்பலநாளு நினைப்பின்றிமனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்தேன் பெறலாகாவருள்பெற்றேன்
வேயார் பெண்ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூரருட்டுறையுள்
ஆயாவுனக்காளாயினியல்லேனெனலாமே
முதியோர்: ரத்தக்கொதிப்பு அதிகம் ஆகவழியுண்டு. வீனாக அலையாதீர். தங்களுடைய குழந்தைகள் நிறைய கடன் வாங்கும் நிலைக்கு வைத்துவிட்டோமே என்று மனதில் வருத்தப்படாதீர். அவர்களுக்கு உலகம் தெரிய ஆரம்பித்து விட்டது.
மாணவ மாணவிகள் : ஜர்னலிசம், பொதுஜனத் தொடர்பு, பிலிம் டெக்னால்ஜி, ஏசி, ரேடியோ, வாகன/மெகானிக் படிப்போர் பொறுமையை இழக்கும் சந்தர்ப்பம் வரும். அமைதியாய் இருந்து கீழ் வரும் பாடலை விடாமல் ஜபித்துக் கொண்டு வந்தால் துன்பம் குறையும்.
காரூப்புனலெய்திர்கரை கல்லித்திரைக்கையாற்
பாரூர்புகழெய்தித்திகழ் பன்மாமணியுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காளாயினியல்லேனெனலாமே
வியாபாரிகள் : சரக்குகளை கணகெடுத்துக் கண்காணிக்கவும், அசட்டையாய் இருந்துவிடக் கூடாது. வங்கிக் கடன்கள் சிறிது தொல்லை தரும். ஆகவே கவனம் தேவை. பழைய கடன்கள் தொல்லை தரும். உறவினர் சொல்லால் துன்புறுத்துவர். கோளறுபதிகம் தினம் படித்து வயதானவர்களுக்குக் கோயிலில் உணவு அளிக்கவும்.
அலுவலகம் செல்வோர் : இந்த மாதம் ஓரளவு விடிவுகாலம் என்றே சொல்ல வேண்டும். மேல் அதிகாரிகள் உதவியாய் இருப்பர். சகதொழிலாளர்களிடம் பண புழக்கம் உண்டு. ஆகவே தன்மையாய்க் கேட்டால் தேவைக்கு உதவியாய் இருப்பர். விடுபட்ட கணக்குகள் கண்ணில் மாட்டும். முடிந்த மட்டும் மஞ்சள் நிறக்கோடுகள் உள்ள ஆடைகள் அணிவது நலம். பச்சை நிறவாழைப்பழம் தானம் செய்து இந்தப் பாடலை விடாமல் ஓதுவதால் தேவையில்லாத வேலை பளு குறைய வழியுண்டு.
அருந்தமதாவது நீறுஅவலமறுப்பது நீறு
வருத்தந்தணிப்பது நீறுவானமளிப்பது நீறு
பொருத்தமதாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகை சூழ்ந்ததிருவாலவாயான் திருநீறே.
முதியோர்கள் : பந்துக்கள் வருகை ஓர் அளவு ஆதரவு தரும். உறவினர் இல்லங்களுக்கு செல்வது நலம் தரும். பெண்குழந்தைகளுக்கு/ஆண்குழந்தைகளுக்கு ஆதரவாய் போய் வருவது நலம் தரும். குழந்தைகள் உங்களுடைய முக்கியத்துவத்தை ஓரளவு உணர்ந்து கொள்வார்கள். இருந்தாலும் கைப்பணத்தையெல்லாம் வாரிவழங்கி விடாதீர்கள்.
வியாபாரிகள் : வியாபாரம் சுறுசுறுப்பாய் ஆரம்பத்தில் நடக்கும். இந்த சமயத்தில் கணக்கு விஷயத்திலும் அதிகாரிகள் விஷயத்திலும் பொறுப்புடன் நடத்தல் அவசியம். நன்றாகப் பழகியவரே சிறிது ஒதுங்கி தன் காரியத்தை அதிகமாக கவனிப்பார். உங்களுடைய பேச்சுத்திறன் அதிகம் ஆக, தினமும் முருகன் கோயிலில் தக்காளி சாதம் தானம் செய்து இப்பாடலை ஓதினால் நல்ல பலன் கிட்டும்.
துஞ்சலுந்துஞ்சலிலாத போழ்தினு
நெஞ்சகநைந்து நினைமினாடொறும்
வஞ்சகமற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவுதைத்தனவஞ்செழுத்துமே
மாணவ மாணவிகள் : சிகப்பு நிறக்கோடுகள் சிகப்புநிற ஆடைகளைத் தவிர்க்கவும். விளையாட்டில் கவனம் தேவை. சிறு காயங்கள் பட வழியுண்டு. சைக்கிள் வாகனங்கள் ஓட்டுவதில் பொறுமை, நிதானம் வேண்டும். வலுச்சண்டைகள் வரவழி உண்டு. இந்தப் பாடலை ஓதி படிப்பில் கவனம் செலுத்துதல் நலம்.
நம்புவார் நமர் நாவினவிற்றினால்
வம்புநாண்மலர் வார்மதுவொப்பது
செம் பொனார் திலகம்முலகுக் கெலா
நம்பனாம நமச்சிவாயவே.
பெண்கள் : குடும்பத்தில் போதிய வருமானங்கள் வந்தாலும், நூதனப் பொருட்களை சேகரிக்கும் ஆசை அதிகமாகும். தாய்தந்தையின் உதவியை நாட வேண்டி வரும். கணவனிடம் பேச்சில் கவனம் தேவை. சிறுசிறு விஷயங்களைப் பெரிது படுத்த வேண்டாம். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நலம் தரும். முருகன் கோவிலை மூன்று முறை வலம் வந்து ஆறுநமஸ்காரங்கள் செய்வது நலம். இதை மூன்று முறை செய்தல் வேண்டும் தினமும்.
விருச்சிகம்
லுவலகம் செல்வோர் : இடமாற்றத்தால் குழப்பம், புதிய பொறுப்புகள் வர வாய்ப்புண்டு. பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. பேசாத பேச்சிற்கு பொறுப்பேற்க வழியுண்டு. குழந்தைகளுக்காக சில தியாகம் செய்துதான் தீர வேண்டிய சூழ்நிலை அமையும். பெண் குழந்தைகளைக் கவனமாய்ப் பார்க்கவும். குழந்தைகள் ஏங்க ஆரம்பித்துவிடும். சிவஅஷ்டோத்திரம் படித்து சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்திடில் பல நன்மைகள் விளையும்.
பெண்கள் : தாய்வழி நினைவுகள் அதிகமாகும். சகோதர சகோதரிகள் சகாயம் ஏற்படும். வசதியுள்ளோர் முடிந்த உதவியைச் செய்தல் நலம் தரும். ஓயாமல் சமையல் செய்து கொண்டிருப்பவர்கள் சிறிதாவது ஓய்வு எடுத்துக் கொள்வது நலம் தரும். மனதில் உள்ளதை, நல்ல நம்பிக்கையுடயவரிடம் சொல்லுவது நலம். புதிய ஆடைகள் வாங்குவது நலம் தரும். வெள்ளையில் நீலம் கலந்த ஆடைகள் வாங்குவது, அணிவது நலம்.
முதியோர்கள் : உற்சாகம் தரக்கூடிய மாதமாக இருந்தாலும் உணவு ஏற்பதில் கவனம் தேவை. ஆண் குழந்தைகளுக்காக வருத்தப்பட்டுப் பலனில்லை. உங்களுடைய மனைவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களுடைய விருப்பத்தை ஓரளவாவது பூர்த்தி செய்யவும். கடிதங்கள் போடுவது முக்கியமாய் இருந்தால் மறந்து விடாமல் கடிதம் போடவும். கீழ்கண்ட பாடலை விடாமல் ஜபிப்பது நலம் தரும்.
“அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரணலிங்கம்
அஷ்ட தரித்ர வினாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
வியாபாரிகள் : எந்த வியாபாரத்திலும் தாங்களே தலையீடு செய்து வியாபாரத்தை செய்யவும். கமிஷன் ஏஜட்டுகளிடம் கொடுக்கும் வியாபாரம் உங்களுடைய வருவாயை குறைக்கும். உங்கள் திறமையை நன்றாகப் பயன்படுத்தும் மாதம் இது. படபட என்று பேசுபவர்களிடம் தீர யோசித்து வேலைகளை வாங்கவும். ஸ்டெனோவிடம் (stenographers)கவனமாக இருக்கவும்.இந்த குறிப்பிட்ட பாடலை இவர்கள் மாதம் பூராவும் விடாமல் ஜபித்து வந்தால் நலம் பயக்கும்.
“காணவினியது நீறுகவினைத் தருவது நீறு
பேணியணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறுமதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.”
இவர்கள் முடிந்த மட்டும் வெள்ளை சட்டை வெள்ளை பேன்ட் (pant and shirt) அணிவது நலம். பெண் வியாபாரிகளாய் இருந்தால்  வெள்ளையில் நீலப்பூ போட்ட புடவை அணியவும்.
மாணவ மாணவியர்கள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும். ஆனால் சரியாக சாப்பிட மாட்டார்கள். இரவில் நீண்ட நேரம் படிக்க வைக்காதீர்கள்.  civil, electronic engineering, தட்டெழுத்து, கம்ப்யூட்டர், விஞ்ஞானம் படிக்கின்றவர்கள் அதிகமாக கவனம் செலுத்தி படித்தல் நலம் தரும். ஆங்கிலப் பாடம்  பெரிய முட்டுக்கட்டையாய் இருக்கும். பலமுறை முயற்சி செய்து படித்தல் நலம். இப்பாடலை விடாமல் ஜபித்தால் எல்லா இடையூறுகளும் விலகும்.
“பொன்போல மிளிர்வதோர்மேனியினீர்
புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணியென் றிவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகளும் மையினித் தெளியா
ரடியார் படுவதிதுவே யாகில்
அன்பே யமையும் மதிகைத் கெடில
வீரட்டானத் துறையம்மானே”
கணவன் மனைவியை இழந்தோர் : எங்காவது இடம் மாறி ஒரு அமைதியான இடத்திற்கு போய் வருவது மன அமைதியை தரும். உங்களை வேலை வாங்குவதற்காகத்தான் பயன் படுத்துவார்களே தவிர, ஆறுதலாய் இருப்பதற்கு விடமாட்டார்கள். முடிந்த மட்டும் திங்கள், வியாழன், வெள்ளி இந்த நாட்களில் மௌனமாய் இருப்பது நல்லது. இந்த பாடலை மௌனமாய் இருக்கும்பொழுது மனத்தில் ஜபித்துக் கொண்டே இருப்பது ஆறுதல் தரும்.
மதியாவடலவுணர் மாமதின்மூன்றட்ட
மதியார் வளர்சடையினானை மதியாலே
என் பாக்கை யாலிகழா தேத்துவரேலிவ்வுலகில்
என் பாக்கை யாயிபிறவா ரீண்டு”.
தனுசு
அலுவலகம் செல்வோர்  : அரசாங்கத்தில் வேலை செய்வோர் சிறுசிறு தவறே பெரிதாகத் தெரியும். கவனம் தேவை. தேவையில்லாமல் உயர் அதிகாரிகள் கடிவறமற்ற மற்ற தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் சிரமத்தின் மீது காரியம் கைகூடும். யார் வீட்டிற்கும் சென்று சாப்பிடாதீர்கள், ஓட்டலிலும் சென்று சாப்பிடாதீர்கள். முடிந்த மட்டும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைஅணிவது நலம் தரும். கீழ்கண்ட பாடலை எப்போதும் ஓதிட வேதனைகள் படிப்படியாய்க் குறையும்.
“மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அன்னேயுனக் காளாயினியல்லேனெனலாமே”
இடம் மாற்றம் வர ஏது உண்டு. ஆகவே உயரதிகாரி காலைப் பிடித்துக் கொண்டு கதறுங்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு : பெரியோர்கள் தேவையில்லாத வரனைப் பார்த்து தலையில் கட்ட நினைப்பர். ஆகவே உங்கள் மனதில் உள்ள விருப்பங்களை பெரியோர்களிடம் சொல்லி விடுங்கள். பெண்களுக்கு மாதவிடாய்த் துன்பங்கள் வரும். உடலை பத்திரமாக குளிச்சியாக வைத்துக் கொள்ளவும். அக்கா தங்கைகளிடம், அண்ணன் தம்பிகளிடம் அளவோடு பேசுங்கள். அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்காதீர்கள். சிகப்பில் ஆரஞ்சு கோடு போட்ட ஆடைகளை அணிவது நலம் தரும். கீழ்கண்ட பாடலை விடாமல் ஜபித்து ஒரு குழந்தைக்காவது வாழைப்பழம் தருவது நலம் தரும்.
“ஸ்ரீராம லௌமித்ரீ ஜடாயுவேத
ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய
ஸ்ரீவைத்யநாதாய நம : சிவாய”
கணவன் மனைவியை இழந்தோர்க்கு : பெண்களுக்கு பெண்களே எதிரி, உங்களுக்கு பெண்கள் தான் எதிரி. உறவினரோடு பேச்சு வார்த்தை சண்டையில் முடியும். ஆகவே கவனம் தேவை. நீங்கள் ஏன் ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விடக் கூடாது. நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் அனுபவிக்கின்ற தொல்லை அப்பப்பா!!
போதும் போதும், என்ன உழைத்தாலும் பேர் கிடையாது. ஆகவே கீழ்கண்ட பாடலை ஜபித்து இரண்டு ஏழைக்காவது அன்னதானம் அளித்திடல் நலம்.
“இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்போற்றி
இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் – இறைவனே
எந்தா யென விரங்கு மெங்கள் மேல் வெந்துயரம் வந்தாலது மாற்றுவான்”.
வியாபாரிகள் : கோதுமை, உளுந்து, கொள்ளு வியாபாரம் செய்கின்றவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். சிவப்பு வஸ்திரத்தில் கருப்பு கோடுகள் உள்ள ஆடைகள் அணிவது நல்லது. தொழிலாளர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் strike செய்துவிடாதீர்கள். குடும்பம் துன்பமடையும். வாகனங்கள் வியாபாரம் செய்பவர்கள், வாடகைக்கு விடுபவர்கள் தொல்லைக்கு உள்ளாவார்கள். ஆகவே செந்தாமரை செவ்வல்லி இந்த புஷ்பங்களை கணபதிக்கும், சூரியனுக்கும் அர்ச்சித்து கோவிலில் உள்ள 6 ஏழைக்களுக்காவது உணவிட வேண்டும். கிரானைட் கல் (granite stone) ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் நேரடி பார்வையில் வாங்குவோர்களை குஷிப்படுத்தி திறமையாக ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும். கீழ்கண்ட பாடலை விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தால் ஓரளவு விடிவு பிறக்கும்.
“நல்லவர் தீயரெனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டுபோமிடத்
தல்லல் கெடுப்பன வஞ்செழுத்துமே
மாணாவ மாணவியர்கள் : ஆசிரியர், ஆசிரியைகளுடைய கண்டிப்பால் குழந்தைகள் மிரண்டு போவதற்கு சந்தர்ப்பம் உண்டு. தாய் தந்தையரே வீட்டு பாடங்களை செய்து கொடுத்து விடுவது நலம் தரும். விளையாட்டில் கவனம் செலுத்தும் மாணவ மாணவியர் முடிந்த மட்டும் தங்களுடைய திறமையை அதிகமாக வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. கீழ் கண்ட பாடலை சொல்லி வில்வத்தால் சிவனுக்கு அரிச்சிப்பது நலம்.
கோரபாதக தாவாக்னிம்
ஜன்ம கர்ம விவர்ஜிதம்|
கபால மாலாபரணம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்|

முதியோர்கள் : பட்டபாட்டிலிருந்து விடிவே கிடையாதா என்று ஏக்கம் நிறையயிருக்கும். ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். அவரவர் கர்ம வினைப்படி அனைத்தும் நடக்கிறது. நாம் நினைத்தபடி அனைத்தும் நடக்கவில்லையே என்று யோசிப்பது சரியா. நீங்கள் யோசித்து பாருங்கள். தெரிந்து ஒரு தவறும் செய்யாத பொழுது எனக்கு ஏன் இந்த சோதனை. இந்த கேள்வி உங்கள் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். துன்பம் இருந்தால் தான் இறைவனை நீங்கள் மறக்காமல் விடாமல் பிடித்துக் கொள்வீர்கள் என்று இறைவனே கொடுத்த ஆசிதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். தாத்தா பாட்டிமார்களே. கீழ்கண்ட பாடலை விடாமல் ஜபியுங்கள் வேகம் தணியும்.
பந்து சேர்விரலாள் பவளத்துவர்
வாயினாள் மாமதிபோன்முகத்
தந்தமில் புகழாண்மலை மாதொடு மாதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவரெத்திசையுந்
நிறைந்துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ்சிப் பொழிற்பூந்தராய் போற்றுதுமே
மகரம்
அலுவலகம் செல்வோர்க்கு : பந்துக்களால் செலவு தான். போகக் கூடாது, பார்க்கக் கூடாது என்று எண்ணியிருந்தாலும் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்கலாம் என்று திட்டம் தீட்டி கொண்டிருப்பார்கள். நாசுக்காக சரிகட்டி வைத்துவிடுங்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். அழவேண்டிய இடத்தில் அழுது நடித்து விடுங்கள். அழுகின்றோமே என்று வருத்தப்படாதீர்கள். வெளியூர் செல்வதற்கு முறசிக்காதீர்கள். அலைச்சல் தான் மிஞ்சும். ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா என்று குழப்பிக் கொள்வீர்கள். சாம்பல் நிற ஆடை அணிவது நலம். கீழ்கண்ட பாடலை விடாமல் ஜபித்து 3 பேருக்கு கோவிலில் உணவு இடுங்கள். துன்பம் குறையும்
முன்னெறியாகிய முதல்வன் முக்கண்ணன்
தன் நெறியே சரணாதல் திண்ணமே
அந் நெறியே சென்றுஅங்கு அடைந்தவர்க்கெல்லாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே
வியாபாரிகள் : புளி, கொள்ளு வியாபாரிகள் கவனமாய் இருத்தல் நலம். துவரை வியாபாரிகள், எள்ளு வியாபாரிகளுக்கு புரட்டல் உருட்டல்கள் நிறைய இருக்கும். நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். சிகப்பில் கருப்புக்கோடு உள்ள ஆடைகளை அணிவது நலம். வன்னி மரத்தடி விநாயகருக்கு அர்ச்சனை செய்வது நலம் தரும். வடமேற்கு, தெற்கு திக்குகளில் வருகின்ற வியாபாரங்களிலோ. காரியங்களிளோ கவனமாக இருத்தல் வேண்டும். பணியாளர்களிடம் கவனம் தேவை. பிள்ளையார் கோவிலில் கொழுக்கட்டை தானம் நல்ல திருப்பத்தை தரும் வியாபாரத்தில். கீழ்கண்ட துதிகளை விடாமல் ஜபிக்கவும்.
ஓம் ஸ்திராய நம :
ஓம் ஸ்தானவே நம :
ஓம் ப்ரபவே நம :
ஓம் பீமாய நம :
ஓம் ப்ரவராய நம :
ஓம் வரதாய நம :
ஓம் ஸ்ர்வாத்மனே நம :
ஓம் ஸ்ர்வ விக்யாதாய நம :
ஓம் ஸர்வஸ்மை நம :
ஓம் ஸர்வகராய நம :
ஓம் பவாய நம : 
இந்த 12 நாமாவளியை விடாமல் ஜபிப்பது நல்லது.
திருமணம் ஆகாதவர்களுக்கு : திடீரென்று பெண் பார்க்க வேண்டும் என்று செய்திகள் வரும். வந்த பிறகு ஆசைகாட்டிவிட்டு போவார்கள் ஏதாவது குறை சொல்லி எழுதுவார்கள். இல்லாவிட்டால் பதிலே கொடுக்க மாட்டார்கள், ஆகவே பெண் பார்க்க வருகிறேன் என்று கடிதம் வந்தால், இந்த மாதம் தயவு செய்து உங்கள் அழகான குழ்ந்தையை காட்டிவிடாதீர்கள். குறை சொன்னால் உங்கள் மனது தாங்காது. வேறொரு நாளிற்கு ஒத்திபோடுங்கள். ஆண்களுக்கும் அறிவில்லை., தாய் தந்தையர் பார்த்து சரி என்று சொல்லுகின்ற பெண்ணை திருமணம் செய்ய மறந்துவிட்டார்கள். சஞ்சலமனத்தோடு உருவம், பணம், சொத்து, தங்கநகை, உயரம், ஒல்லி, குண்டு இதைத்தான் பார்க்கின்ற நிலையில் இப்போதைய இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆகவே அப்போது பெண்ணை காட்ட வேண்டாம். வேலை செய்கின்ற பெண்ணாய் இருந்தால் உதவியாய் இருக்கும் என்று சொல்லிவிட்டு குழந்தையை பார்ப்பதற்கு தாய் தந்தையரையே ஆயாக்களாக வைத்துவிடுகிறார்கள். தற்கால நிலை அப்படியுள்ளது .
கணவன், மனைவியை இழந்தோர் : தவளை கத்துவது போல் விடாமல் அறிவுரை கொடுத்துக் கொண்டிருந்தால் கேட்பதற்கு ஆளில்லாமல் போய்விடும். உங்களை பார்க்க வருவதற்கே தயங்குவார்கள்., நீங்கள் யாருக்காவது அறிவுரையை சொல்ல வேண்டியிருந்தால் ஆண்டவனிடம் சொல்லுங்கள் அவரவர் குறைதீர்க்க இப்பொழுது கோவிலிற்கு போவதை நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள்? உங்கள் குறைகளை கொட்டுவதற்கு ஏற்ற இடமல்லவா? அதோடு மட்டுமா?
அக்கம் பக்கம் கதைகளும் ஆர்வத்தோடு கேட்குமிடமல்லவா? சரி பரவாயில்லை. கடவுளுக்கு புரிந்து விடும் உங்கள் நிலைமை. காசிக்கு போய் வந்தீர்களா? எந்த கணவன் மனைவி ஆசைபட்ட பதார்த்தத்தை விட்டுவந்தார்கள் ? அதை செய்யுங்கள், உங்கள் மனக்குறை ஓடிவிடும். கீழ்க்கண்ட பாடலை பாராயணம் செய்யவும்.
‘ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க வினாசக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்”
கும்பம்
அலுவலகம் செல்பவர்களுக்கு : ஓடி ஓடி வேலை செய்தாலும் வருமானம் உயர்ந்ததா? என்ன மாதிரி ஆதாயக்காரர்களிடம் வேலை செய்கிறீர்கள்? நல்ல வேலை கிடைத்தால் மாறிவிடுங்கள். அதற்கான முயற்சியும் செய்யுங்கள்., சதயம், பூரட்டாதி நக்ஷத்திரக்காரர்களுக்கு நல்ல திருப்பம் உண்டு. வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருக்கிறதே உங்களுக்கு. நியாயமான அழைப்பாக இருந்தாலும் நேர்மையான அழைப்பு ஸ்தலமாக இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்யலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் கணவனை நிச்சயமாக இந்த மாதம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் அலுவலகம் செல்லும் கணவனும் மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன ப்ரேக் கொடுத்து ஸ்தலயாத்திரை சென்று விட வேண்டும்.
அப்பா! அம்மா!! இவ்வாறு ஏங்கும் குழந்தைகளை நீங்கள் ஏன் கொஞ்சி மகிழவில்லை? இந்த மாதம் செய்யுங்கள். நீண்ட நாளாக உங்கள் குழந்தைகள் (Ice-Cream) கேட்டார்களே, வாங்கித் தந்தீர்களா? செய்தால் சந்தோஷம். செய்யவில்லையென்றால் செய்து முடித்துவிடுங்கள்
முதியோர்கள் : நீங்கள் படித்தது போதும், இறைவனை பூஜை செய்வதில் ஈடுங்கள். உலகத்தில் நடக்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் இறைவனை அடைவதற்காக விடாமல் பூஜை செய்யுங்கள். போதும் இந்த வாழ்க்கையப்பா; பொல்லாத ஆசையாலே!
வியாபார்களுக்கு : பச்சைபயிர், கடலை, உப்பு, இனிப்பு, பொன் வியாபாரிகளுக்கு திடீர் திருப்பங்கள் வரும். பச்சை நிறம் அல்லது மஞ்சள் நிற ஆடைகளும் சிவப்பு கோடுகள் போட்ட ஆடைகளை அணிவது நலம் வடகிழக்கு, வடக்கு திக்குகளிலிருந்து வருகின்ற புது ஆர்டர் அனுப்ப வேண்டிய பொருட்களை நல்ல விலைக்கு அனுப்புங்கள். குறைந்த விலைக்கு அனுப்பாதீர்கள். அரசமரத்தடியில் உள்ள நாகங்களை காலையில் வலம் வந்து வணங்குவது வியாபார விருத்தியை தரும். உங்கள் மனது நிறைய ஆராய்ச்சியில் ஈடுபடும். ஆராய்ச்சியில் நீங்கள் துரிதமாக முடிவு எடுக்க வேண்டும். உங்கள் ஆராய்ச்சிக்கு பலன் தரும் மாதமிது, அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது கீழ்கண்ட நாமாவளியை சொல்லி 2 ஏழைகளுக்கு உணவளிக்கவும்.
ஓம் ஜடினே நம :
ஓம் சர்மினே நம :
ஓம் சிகண்டினே நம :
ஓம் ஸர்வாங்காய நம :
ஓம் ஸர்வபாவனாய நம :
ஓம் ஹராய நம :
ஓம் அரிணாக்க்ஷாய நம :
ஓம் ஸர்வபூதஹராய நம :
ஓம் ப்ரபவே நம :
ஓம் ப்ரவ்ருத்தயே நம :
ஓம் நிவ்ருத்தயே நம :
ஓம் நியதாய நம :
திருமணம் ஆகாதவர்களுக்கு : இந்த மாதம் பெண்பார்க்க வருகின்றவர்களுக்கு ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். பெண்ணை மாப்பிளை பார்ப்பதற்கு பதிலாக தாய் தந்தையரே முதலில் பார்க்க அனுமதிக்க வேண்டும். உடனே கேட்டுவிட வேண்டும் அவர்களிடம் பெண்ணைப் பித்துள்ளதா என்று கேட்டு. தாய் தந்தையர் பிடிக்க வில்லை என்று சொல்லாமல் பையன் பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னால் பெண்ணை பையனுக்கு காட்டாதீர்கள். திருமணப் பெண் என்ன பொம்மையா? நன்றாக யோசித்துபாருங்கள். தாய் தந்தையருக்கு பிடித்திருந்தால் தான் எதிர்காலத்தில் மாமியார் மாமனார் கொடுமைகள் வராது. கைதேர்ந்த ஜோசியரிடம் தான் திருமணப் பொருத்தம் பார்க்க கொடுக்க வேண்டும். ஏனென்றால் தற்காலத்தில் நிறைய ஜோசியர்கள் சரியாக பொருத்தம் பார்ப்பது கிடையாது.
பலர் தீய நேரங்களிலேயே கொடூரமான ஓரைகளிலேயே கொடூரமான திதிகளிலேயே கொடூரமான பாவ கிரஹங்களின் பார்வைகளிலேயே முகூர்த்தம் வைத்து விடுகிறார்கள். கூடாநாட்களிலும் முகூர்த்தம் வைத்து விடுகிறார்கள். இதுதான் மணவாழ்வில் பல துன்பங்கள் ஏற்படுவதற்கு மூலகாரணம். கீழ்கண்ட பாடலை படித்து தினமும் இரண்டு ஏழைக்கு தக்காளி சாதம் கொடுத்தல் நலம்.
பீஜாதாரம் பீஜரூபம்
நிர்பீஜம் பீஜவ்ருத்திதம்|
பரேசம் பீஜ நாசஞ்ச
ஏக பில்வம் சிவார்ப்பணம் |
மாணவ மாணவியர்களுக்கு : படிப்பிற்கு சிறந்த மாதம் இது, கவனம் சிறிது அதிகமாய் செலுத்தினால் போதும் பலன் தரும் மாதம் இது  தாயார் பேச்சைக் கேட்டால் நன்றாகப் படிக்கலாம். விளையாட்டிலும் பலன் தரும் மாதம் இது. பிறமொழிப் பாடங்களை படிப்பவர்களை படிப்பவர் கவனமாய்  படித்தால் நல்ல பலன் பெறுவர். இந்தப் பாடலை விடாமல் ஜபித்து வந்தால் பலன் கிட்டும்.
“குந்தேந்து சங்க தவனம்
பக நேத்ர பிதுஜ்வலம்
காலாக்னி ருத்ரம் ஸர்வக்ஞ்யம்
ஏக பில்வம் சிவார்ப்பணம் “
அலுவலகம் செல்வோர்க்கு :  தாய்வழி நினைவால் அவர்களுக்கு சேவை செய்கின்ற எண்ணம் தான் மிகுமே தவிர நேரம் கிடைக்காது. ஆகவே அதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். கணவனோ மனைவியோ அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். தாயை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாய் இருக்க வேண்டும். இம்மாதம் அதிகமாக துன்பத்தை தராது. ஆகவே துன்பம் வராததால், கடவுளை மறந்து விட வேண்டாம். தெய்வத்திற்காக அதிகமாக நேரம் ஒதுக்குங்கள். தேவையற்ற பேச்சைக் குறையுங்கள். கணவன் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். மனைவி கணவனை நினைத்துக் கொள்ளுங்கள். பலவழிகளில் பணம் வரவழியுண்டு. ஜாக்கிரதையாக நீங்களே தேர்ந்து எடுங்கள். விநாயகக் கவசம் படியுங்கள். மஞ்சளில் வெள்ளை கோடுப் போட்ட ஆடையை அணியுங்கள் அல்லது பெண்கள் வெள்ளையில் மஞ்சள் பூ போட்ட ஆடையை அணியுங்கள். அணிந்து ஒருவருக்காவது எலுமிச்சை பழம் சாதம் கொடுத்து விடுங்கள். கோவிலில் ஒரு ஏழைக்காவது அவர் விரும்பும் தானத்தை அளியுங்கள். அவ்வளவு தான் உங்கள் வேலையில் திருப்பத்தை பாருங்கள்!
வியாபாரிகள் : வியாபாரிகளுக்கு ஒரு நல்ல மாதம் இது. முடிந்த அளவுக்கு திறமையை பயன்படுத்தி மாதம் பூராவும் தெருதெருவாய் சுற்றி காரியத்தை சாதித்துவிடலாம். இதற்கு முன்னால்  இருந்த மாதத்தைப் போல இல்லை. சுற்றினால் பலனில்லாத மாதத்தைப் பார்த்திருக்கலாம். இம்மாதம் அப்படி கிடையாது. இம்மாதத்தில் முழுதிறமையைக் காட்டிவிடுங்கள். இம்மாதத்தில் முழுதிறமையைக் காட்டவில்லை என்றால். அடுத்த மாதம் பண அறுவடை குறைந்துவிடும். மதுவாடை வீசுதையா! மானம் பறந்து விடும்! கவனம் இருக்கட்டும் ஐயா!!  வான நீலநிற ஆடை (skyblue) அதில் வெள்ளை கோடுகளும், அல்லது மஞ்சள் நிற ஆடைகளும் உங்களுக்கு உதவியாய் இருக்கும். கீழ்கண்ட பாடலை ஜபித்து கோவிலில் வரும் 10 பேருக்கு உணவிடுதல் நலன் தரும்.
அந்தாமரைப் போதலர்ந்த வடி
யரக்கனையு மாற்றலழித்த வடி
முந்தாகி முன்னேமுனைத்த வடி
முழங்கழலாய் நீண்ட வெம்மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகனடி
பவளத் தடவரையே போல்வானடி “
மாணவ மாணவியர்களுக்கு : கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளே காதல்! காதல்! என்று ஏமாந்து விடாதீர்கள்!! இந்த மாதம் உங்கள் உண்மையான காதலை காட்டிவிடும். அது முழுக்க முழுக்க உள்ளத்தைச் சேர்ந்த காதல் இல்லை என்று. உடலை சேர்ந்த காதல் என்று தெரிந்து விட்டால் இன்றோடு முழுக்கு போட்டு விடுங்கள். காதலும் வேண்டாம், கடலோர சுண்டலும் வேண்டாம், இது படிக்க வேண்டிய வயது.
புருவத்தையும் சிரைத்துக் கொள்ளாதீர்கள், புருவத்தை சிரைத்தால் எதிர்காலத்தில் வருகின்ற புருஷன் உங்களை சிறகறுத்து துடிக்க வைத்துவிடுவான். ஆகவே புதிய காதலும் ஆரம்பம் வேண்டாம். பழைய காதலுக்கும் முற்று புள்ளி வைத்துவிடுங்கள். இந்த மாதம் படிக்கின்றவர்களை காதலில் ஆழ்த்தி அலைக்கழிக்கின்ற மாதமிது. இந்த பாடலை பல முறை மனதில் படித்து வாழ்க்கையில் தாய் தந்தையரை மகிழவையுங்கள்.
“உரைமாலையெல்லாமுடைய வடி
யுரையாலுணரப் படாத வடி
வரைமாதை வாடாமை வைக்கும் மடி
வானவர்கடாம் வணங்கி வாழ்த்தும் மடி
யரை மாத்திரையிலடங்கும் மடி
யகல மளக்கிற்பாரில்லா வடி
கரைமாங்கலிக் கெடில நாடன்னடி
கமழ் வீரட்டானக் காபாலி யடி.”
முதியோர்கள்: என்ன பூசை பண்ணினாலும் எங்கள் மனம் பாசப்பிணைப்பில் தான் சுழண்டு கொண்டு இருக்கிறது. ஏன் என்றால் நாங்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ளதே என்று மனம் குரங்கு பிடிவாதம் செய்கிறது. எதை நீங்கள் இதுவரை செய்தீர் எதுவும் உங்களால் நடத்தப்படவில்லை. எல்லாம் இறைவன் அருளால் தான் நடந்தது என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை, வயதும் ஆகி விட்டது. இதுவரை உணராது இந்த மாதமாவது கடைசியாக இறைவன் பாதம் தான் நிரந்தரம் என்று பிடித்து வணங்குங்கள். நீங்கள் கரையேறலாம். இல்லையேல் மீண்டும் கர்ப்பசஞ்சாரத்திற்கு உங்களை விதி ஆழ்த்த வழி பார்க்கிறது. ஏன் என்றால் இந்த மாத புத்தியாதிபதியும், பிரகஸ்பதியும் பில்வயோக ஸ்தானத்தை ஏற்பதால் இந்நிலையை விளக்கினோம். கீழ்கண்ட பாடலை விடாமல் இன்று முதல் ஓதத் துவங்குங்கள் வேறு எதுவும் வேண்டாம். தேவை தேவை என்பதை உதறுங்கள்.
பிச்சாடல்பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாட னன்று முகந்தாய் போற்றி
மருவி யென்சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போதாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

அடிமை கண்ட ஆனந்தம்

முன்னிரவில் நடந்த சம்பவங்களில் பிரதிபலிப்பாய்ச் சிறுவனுடைய கை, கால்கள் இன்னமும் வெடவெடத்துக் கொண்டிருந்தன. இதில், பெரியவருடைய உடல் மேலிருந்த எட்டு முழத் துணியையும் காணவில்லை! “ஒரு வேளை மந்திரவாதிகள், வேறு எதையும் தான் செய்ய முடியவில்லை, அந்தத் துணியையேனும் அபகரித்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து இரவில் எடுத்துச் சென்று விட்டார்களோ“ இந்த எண்ணத்தில் உழல் ஆரம்பித்ததும் சிறுவனின் கவலையும் உதறல்களும் உளறலும் அதிகரித்துவிட்டன.
“அட கடவுளே! நன்றாகத் தூங்கி விட்டேன். நேற்றிரவு நடந்த அமர்க்களத்தில் நம் வாத்யார் மீதல்லவா சிறுநீர் கழித்து விட்டேன். பரம்பொருளாகத் திகழும் வாத்யாருக்கு எத்தகைய அவமரியாதை! என்னதான் பயமென்றாலும் இப்படியா செய்வது!”- சிறுவனுக்குக் கண்ணில் தாரைதாரையாக நீர் வழிந்தது.
எப்படியோ தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனம் எதையும் ஏற்கவில்லை. “நம்மை எப்படியெல்லாம் கட்டிக் காத்தவர். பஞ்சு மிட்டாயென்றும், வேர்க்கடலையென்றும் கேட்டதையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாயும் (உண்மையிலேயே சிறுபிள்ளைதானே!) பேசலானான். ஆனால் எத்தகைய கடுமையான சோதனைகளை சற்குரு அளிக்கின்றார் பாருங்கள்! சிறுவனென்றாலும் இவையெல்லாம் ஏன்?
ஸ்புடம் போட்ட தங்கமாகச் சி(றுவனை)ஷ்யனை ஆக்குவதற்குத்தான், சங்கு சுட்டாலும் வெண்மைதானே தரும்! “சரி நடந்தது விட்டது! இனி நடப்பதைப் பார்ப்போம்”. உண்மையில் சந்நியாஸ நிலையின் பரிணாமங்களையே, இவற்றின் மூலம் தனக்கு சற்குரு ஒரு அனுபவப் பாடமாக போதிக்கிறார் என்பதை சிறுவனால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. தன் காலைக் கடன்களை முடித்து விட்டுச் சுனையில் இறங்கித் திருவோட்டில் நீரை நிரப்பிய சிறுவன், அப்போது தான் தெளிந்த நீரின் பிம்பத்தில், தன் முகத்தைப் பார்த்தான்.
வீங்கிச் சிவந்த கண்கள்!
உப்பிய கன்னங்கள்!
சிந்திச் சிந்திக் கனிந்த மூக்கு!
மொத்தத்தில் சோகம் ததும்பும் முகம்!
“வாத்யாரிடம் என்றும் முழுநம்பிக்கை வரணும். அதுக்கு இதெல்லாம் தேவை தான்” என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தான் சிறுவன், தெளிந்த சுனையில் தெளிந்த நினைவுகள்! “ஆமாம், வாத்யார் உடம்பைத் தண்ணி விட்டுத் துடைக்கிறதுக்கு துணி” ..... இந்த எண்ணம் வந்ததும் கிடுகிடுவென்று தன் சட்டையைக் கழற்றினான். இங்குமங்குமாகப் பல முறைகள் அலைந்து திருவோட்டில் சுனைநீர் கொண்டு வந்து பெரியவரின் தேகத்தை நன்றாகத் தேய்த்து நீராட்டித் தன் சட்டையால் நன்றாகத் துடைத்தான்.
சுனையருகேயிருந்த கோரைப் புற்களை (உண்மையில் அவை தர்பைப் புற்கள்) ஒன்று சேர்த்து ஒரு பிடி கட்டாக்கி அதனால் பெரியவரின் உடலைச் சுற்றிக் கூட்டிச் சுத்தமாக்கினான். சித்த புருஷர் சமாதிநிலையில் அருள்புரியும் இடமல்லவா? எனவே தான் அவனையுமறியாமல் தெய்வ கட்டளையாய் புனிதமான தர்ப்பைப் புல் கொண்டு அவ்விடம் மேலும் புனிதமாக்கப்பட்டது.
அந்தக் கோரைக் (தர்பை) கட்டினைச் சுனையருகே தூக்கி எறிந்தான் சிறுவன். ஆனால் அது தரையில் விழவில்லை! விழும் முன்னரே புஸ்..... என்ற ஸப்தத்துடன் சூர்ய ஒளியில் அக்னியில் பஸ்மம் ஆனது போல் மறைந்துவிட்டது! சிறுவன் வியப்படைந்தான். (பின்னர் தர்பைப் புல் என்று பெரியவர் சொல்ல அறிந்து கொண்டான்).
நாகலோக ஆடை :- அச்சிரிய உணவுடன் மீண்டும் சுனைக்கு வந்தான் சிறுவன் பெரியவரின் தேகத்தை ஸ்பரிசிக்கும் பாக்யம் பெற்ற அந்தச் சட்டையை அலசிய வேகத்தில்....... கை நழுவி சட்டை நீருக்குள் தள்ளிச் சென்று ஆழத்தில் அமிழ்ந்தது! “டேய் , சுனைல ரொம்ப எறங்காதே! ஆழம் ஜாஸ்தி! அஞ்சு தலை கருநாகம் தான் அதைக் காவல் காக்குது! உன்னை ஒண்ணும் பண்ணாது! ஆன ரொம்ப எறங்காதே” – பெரியவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தமையால் சிறுவன் அதற்கு மேல் செல்லவில்லை . இருப்பினும் “காலடியில் தானே கிடக்கும்” என்று அங்கேயே நீருக்குள் கைகளை விட்டுத் தேடினான்.
“ஆஹா! இதோ கிடைத்து விட்டதே!” நீரினுள் கிடைத்த துணியை மேலே இழுத்தான், அது சட்டையல்ல! .... காணாமல் .... போன அந்த வேட்டித் துணி! “வாத்யாரின் உடம்புமேலே தானே நேத்திகிடந்துச்சி, எப்படி இங்கே வந்தது?”
அந்த வெள்ளை வேட்டி சுத்தமாய் மஞ்சளாக மாறியிருந்தது.  “என்னதான் சுனைநீரில் அழுக்கடைந்திருந்தாலும்” காமன் பண்டிகை மஞ்சள் வேட்டி மாதிரி இப்படியா சுத்தமான மஞ்சளாக மாறும்?” சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.”என்ன இது! வாத்யாரோட திருவிளையாடலா!” “சரி இதை வைத்து வாத்யாரின் உடம்பை இன்னொரு வாட்டி துடைச்சிடுவோம் “
அந்த மஞ்சள் துணியைக் கொண்டு பெரியவரின் உடலைத் துடைத்து மீண்டும் சுத்தப்படுத்தினான் சிறுவன். “இதையே போர்த்திவிடுவோம்” என்று எண்ணி வேட்டியை காற்றில் நன்றாக உதறி சூரிய ஒளிக்கு நேரே நன்றாக விரித்தான்!
“ஆங் ..... “ சிறுவனுக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. வேட்டியில் ஒரு பெரிய ஐந்துதலை கருநாகத்தின் பிம்பம் தெரிந்தது! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் உற்றுப் பார்த்தான் சிறுவன். எட்டு முழுத்துணி முழுதும் ஒரு பெரிய கருநாகத்தை ஓவியமாக வரைந்தாற் போல் ஒரு பிரதிபிம்பம்!
சிறுவன் பிடித்தானே ஓட்டம் சுனைக்கு! வேட்டியைச் சுருட்டித் தன் கைபலம் கொண்ட மட்டும் சுனைநீருக்குள் தூக்கி எறிந்தான். நீர் மட்டம் மேல் விழுந்த துணிஉடனே மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அதைப் பார்க்க சிறுவன் அங்கு நின்றால் தானே!  
“(அது நாகலோகத்து வஸ்திரம்டா, சுனைல எனக்குக் கிடைச்சது, அது தான் அது கெடச்ச இடத்துக்கே போயிடுச்சு, நான் ஏன் அதை எடுத்தேன்னு கேக்கறீயா? சர்பகந்தி, அருகம்புல் செண்டு மூலிகையையும் முறையான மந்திரம் சொல்லிச் சாறாக்கி அதுலதான் அந்தச் துணியை நனைச்சேன். ஏன்னா இப்படிச் செஞ்ச வஸ்திரத்தை உடம்புல கட்டிக்கிட்டா எந்த நாகமும் தீண்டாது. தேள், பூரான், நட்டுவாக்களி எதுவும் கடிக்காது. கடிச்சாலும் விஷமும் ஏறாது !” – பின்னால் பெரியவர் தந்த விளக்கமிது!)
அதில் ஆயிரத்தெட்டு அர்த்தங்கள் பொதிந்திருக்கும்! ‘வரவர வாத்யாரின் திருவிளையாடல் ஜாஸ்தியாகி விட்டதே! ரொம்பப் பாடாப்படுத்தறாரே!” – சிறுவன் சலித்துக் கொண்டான். அடுத்து என்ன வரப் போகிறதோ, நடக்கப் போகிறதோ! யாருக்குத் தெரியும்? அரைடிராயருடன் பெரியவரின் உடலருகே நின்றான் சிறுவன். காலை இளஞ்சூரிய ஒளியில் தன்னைத் தானாக, சட்டையில்லாத தன் திருமேனியைப் பார்த்துக் கொண்ட சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது! “இருப்பதோ ஒரே ஒரு ஓட்டை டிராயர்! சட்டையில்லாத தன் திருமேனியைப் பார்த்துக் கொண்ட சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது!
“ இருப்பதோ ஒரே ஒரு ஓட்டை டிராயர்! சட்டையும் போச்சு, துணியும் போச்சு, இந்த டிராயரும் எப்பப் போகப் போகுதோ!” சிறுவன் பெரியவரின் உடலருகே எவ்வித உணர்ச்சியுமின்றி அமர்ந்தான்.  பெரியவர் எப்போதோ சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன! “ராஜா! யாருக்காவது இராத்திரி கனவுல கருங்குரங்கு வந்துச்சுன்னா மறுநாள் காலைலேயே அவங்க ஏதச்சும் ஆடை தானம் செய்யறது நல்லது. இல்லாட்டி அன்னிக்கோ, அடுத்த சில நாளுக்குள்ளாறவோ வீட்டுல துணி திருடு போகும். இல்லாட்டி துணி கிழியும்.
அந்த மாதிரி என்னிக்காச்சும் துணில நெருப்புபட்டா, (ஊதுபத்தியோ, தீக்குச்சி, ஜ்வாலை பட்டு பொத்தல் ஆனாக் கூட) அன்னிக்கு ஸ்ரீஆஞ்சநேயரை சேவிச்சு, ஏழைக் குழந்தைகளுக்கு வெண்ணெய் தானம் பண்ணனும்! இதனால் நெறைய கர்மங்கள் கழியுது. இந்த மாதிரி பரிஹாரம் பண்ணினா மானம், கற்பு எதுக்கும் பங்கம் வராது. துணி அலர்ஜி நோயும் அண்டாது!
”நெருப்புப் பொறிபட்ட வஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது”
சிறுவன் அமைதியாகப் பெரியவரின் உடலைப் பார்த்தான். தலையிலிருந்து கால்மாட்டைப் பார்த்துக் கொண்டே வர, கால் மாட்டில்.... அந்த “பழத் துணி” முடிச்சு கண்ணில் பட்டது. உடனே வயிற்றில் பசி ஏற்பட்டாற்போல் ஒரு பிரமை! “சரியான சோத்து மூட்டை சுப்பராயடு!” சிறுவனால் கைகளால் மூடியும் கைவிரல்களின் இடுக்கு வழியே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது! அந்த நான்கு நாட்களில் முதன்முதலாக மனமாரச் சிரித்தான் சிறுவன்.
அவசரமாக பழத்துணி மூட்டையைப் பிரித்து ஒரு மாம்பழத்தை உருவினான். அதை வாயில் வைத்துக் கடித்திட, பழம் பற்களில் வழுக்கி வழுக்கி.......சிறுவன் பழத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“கர்....... கர்.......... கர்.............” என்று ஏதோ  ஒரு சப்தம்!  பழத்தை யாரோ கையிலிருந்து பிடுங்குவது போல்.... என்ன இது பிரமையா? அல்லது யாரேனும் பிடுங்குகின்றார்களா? சிறுவன் ஏதோ எண்ணங்களில் மருகிட... அதற்குள் பழத்தை யாரோ நிஜமாகவே பிடுங்க முயற்சி செய்ய.... அரண்டு போன சிறுவன் பழத்தைக் கெட்டியாகப் பிடித்தவாறே மெதுவாகத் தலையைத் திருப்பிட.......... “அம்மா! தாயே!.............. “, சிறுவன் வீறிட்டவாறே பெரிவரின் உடலை ஒரு கையால் பிடித்துக் கொண்டான்.
அங்கே......  ஒரு பெரிய கருங்குரங்கு !................

இறை அணுகு முறை

அடியார் : குருவே! இறைவனைப் பற்றி ஆழ்ந்த நம்பிக்கையிருந்தாலும் பலருக்கு இறைவனை ஏன் தரிசிக்க முடியவில்லை என்பதற்கு விடை தெரியாமல் குழம்புகிறார்களே? இருக்கின்ற விளக்கங்கள் எல்லாம் தத்வார்த்தமாகவே உள்ளன !
சற்குரு : இதனை எப்படி அணுகவேண்டுமென்று சொல்கிறேன், பிறகு புரிகிறதா என்று பார்க்கலாம்..,
இறைவனை எந்த ரூபத்தில் தரிசிக்க விரும்புகிறாய்?  சிவனாகவா, விஷ்ணுவாகவா, அம்பாளாகவா .........? பல கைகளோடா? அவ்வாறு நீ எண்ணுகின்ற ரூபத்தில் இறைவன் தோன்றியவுடன் உன் நிலை என்ன? வணங்குவாயா ? எதையாவது கேட்பாயா? அவ்வாறு நீ கேட்டவுடன் இறைவனின் பதில் என்னவாக இருக்கும்?
இறை தரிசனம் தனில் இறைவனிடம் உன் கேள்வி பதில் முடிந்தவுடன் நீ கண்ட இறை தரிசனம் எப்படியிருக்கும்? அது மறையுமா? நீ மறந்து விடுவாயா? – இந்த தரிசனத்திற்குப் பிறகு உன் நிலை என்ன? நீ கண்ட இறை தரிசனத்துடன் நீ ஜக்யமாக விரும்பினால் உன்னை நம்பி வாழும் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களின் கதி என்ன? அப்படியானால் நீ கண்ட இறை தரிசனம் வெறும் சுயநலமாகி விடாதா?
இறை தரிசனம் பெறுமளவிற்கு உன்னைத் தக்க ஆன்மீக நிலைக்கு உயர்த்திக் கொண்டாய் அல்லவா? அந்த அளவிற்கு உன் மனைவி  மக்களையும் ஏன் அந்த ஓர் அற்புத ஆன்மீக நிலைக்குக் கொண்டு வர இயலவில்லை? சுயநலமா? அவர்களுக்கு உன்னளவு ஈடுபாடு இல்லையா? இது யாருடைய பிழை? – உனக்கு தரிசனம் தரவிழையும் இறைவன் உன்னைத் தன்னுள் ஐக்யப் படுத்தி உன் குடும்பத்தைத் தவிக்க விட்டு விடுவானா?
அது சரி, இறைவனிடம் உன் குடும்பத்தினர் அனைவருக்கும் தரிசனம் பெற வேண்டிய பிரார்த்தனை செய்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்! கோடிக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்ற இவ்வுலகில் உன் குடும்பத்திற்காக மட்டும் எதையோ வேண்டுவதனால் என்ன பயன்? நீ மட்டுமா உத்தம நிலை என்று ஆண்டவன் விரும்புகிறான்? இறைவனுடன் ஐக்யமாவது என்றால் என்ன? ஜோதியாகக் கலப்பதா? அப்படியானால் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள், மும்முடிவரம் ஸ்ரீபால யோகி, ஸ்ரீபரமாச்சார்யாள் (ஸ்ரீசந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள்) ஸ்ரீபூண்டி மகான், ஸ்ரீஷிரடி சாய்பாபா, ஸ்ரீஅன்னை அரவிந்தமாதா (பாண்டிச்சேரி), காஞ்சீபுரம் ஸ்ரீபோடா (நாகநாதஸ்வாமி) சித்த சுவாமிகள், ஸ்ரீபாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் போன்ற எண்ணற்ற மஹான்கள் பூவுடலில் சாதாரணமாகத்தானே வாழ்ந்து பூதவுடலில் மறை(ந்)த்து  இன்றும் ஜீவ சமாதிகளில் அருள்புரிகின்றனர். அவர்கள் கண்ட இறை தரிசனம்  யாதோ?
இவற்றையெல்லாம் ஒரு மனிதன் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். முதலில் இது குழந்தைத்தனமாகவும், வெறும் கற்பனையாகவும் எழுவதை நீ உணர்வாய்! செய்து பாருங்கள் புரியும்.
இறை தரிசனம் கண்ட மஹான்களின் நிலை என்ன? அதுதான் இறை தரிசனத்தைப் பெற்று விட்டார்களே, பின் ஏன் அவர்கள் பூலோகத்திற்கு பிறப்பெடுத்து நம்மைப் போலவே பூமியில் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துப் பலரை உத்தம நிலைக்கு உயர்த்துகின்றனர். இதுவே மஹான்களின் பிறப்பின் ரகசியம்!
இதன் பொருள் என்ன?
இறைவனுடன்  ஐக்யமடைந்த மஹான்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டு அதாவது பிறருடைய பல கர்மங்களைச் சுமந்து கொண்டு பூமியில் பிறப்பெடுத்து  அனைத்து இன்ப, துன்பங்களையும் நம்மைப் போல் அனுபவித்து பலருக்கும் இறை தரிசனம் பெறும் நல்வழி முறைகளை விளக்குகின்றனர். எனவே சுயநலமின்றி வாழ முயற்சிப்பதே இறை தரிசனத்தின் முதல் படி. இறைவன் அளித்துள்ள இவ்வுடலைக் கொண்டு பிறருக்கான சேவைகளைச் செய்ய வேண்டும். இறைப் பணிகளையும் மக்கள் சேவையையும் புரிய வேண்டும். இறைப் பணி எப்படி மக்கள் சேவையாகும்.
ஒரு கோயிலைப் பலர் ஒன்று கூடிச் சுத்தம் செய்தால் அங்கு வரும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும் அல்லவா? இது சுயநலமற்ற சேவைக்கு ஓர் உதாரணம். கோயில் வாகனங்களைத் துடைத்துத் தருதல், சந்நதியில் எண்ணெய் பிசுக்கை அகற்றிச் சுத்தஞ் செய்தல், மின் விளக்குகள் அளித்தல், உற்சவ மூர்த்தி புற்ப்பாட்டிற்குத் தோள் கொடுத்தல், விளக்கிற்கு எண்ணெய் அளிப்பதோடு கோயில் முழுதும் விளக்கேற்றி வைத்தல், பச்சரிசி மாவுக் கோலமிடுதல், சாம்பிராணி தூபம் இடுதல், காகிதம், காய்ந்த புஷ்பம், தேங்காய் நார் போன்ற குப்பைகளை அகற்றுதல் போன்றவையும் சுயநலமற்ற சேவைக்கான தெய்வத் தொண்டின் ஆரம்பப் பாடங்கள்!
பசுவிற்கு உண்வளித்தல், ஏழைகளுக்குச் சிறு சிறு தானங்கள், (பழைய, புதிய உடைகள், புத்தகங்கள், செப்பனிடப் பட்ட, புதிய காலணி etc..,) புதிய சுவையான இனிப்பு, உணவு வகைகள் கொண்ட அன்னதானம், ஈ எறும்பிற்கு தான்ய மாவு போடுதல், குதிரைக்குத் தீனி, யானைக்கு உணவு அளித்தல் போன்றவை மஹேஸன் சேவையான மக்கள் தொண்டின் ஆரம்பப் பாடங்கள்!
இதையெல்லாம் விட்டுவிட்டு நாமுண்டு நம் வேலையுண்டு, ஏதோ கோயிலுக்குப் போவோம் வருவோம், முடிந்த பூஜையைச் செய்வோம், பிறர் விவகாரமே வேண்டாம். இப்படி வாழ்வது நல்ல வாழ்க்கை போலவும், “ரொம்ப நல்லவர், தப்பு தண்டாவிற்குப் போகமாட்டார்.” என்று பிறர் மெச்ச வாழ்வதும் ஒரு பிரயோஜனமற்ற வாழ்க்கையே!
உன்னளவில் நல்லவனாக உனக்காகவே வாழ்ந்தால் அதுதான் மிகவும் மோசமான சுயநலமான வாழ்க்கை! உனக்காக என்றும் வாழாதே! நல்லவர் என்பதன் பொருளே வேறு! கோயிலுக்குச் சென்றால் கூட இறைவன் வெறுமனே அருளை வாரி வழங்குவதில்லை! அப்படியானால் தீயவர்கள் தான் கோயிலையே மொய்த்து விடுவார்களே! உன்னுடைய நல்வினைகளை இறைவன் புண்ய சக்தியாக மாற்றி அதன்மூலம் உன்னுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றான்.
எனவே தான் கோயிலுக்குச் செல்கையில் இரண்டு வாழைப்பழங்களையேனும் வாங்கி “ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய” என்று இறை நாமங்களையும், மந்திரங்களையும் ஜபித்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து, “இறைவா! உன்னருளால் இன்றைக்கு ஒரு நல்வினையை, நற்காரியத்தைப் புரியவைத்தாய்! ஏதோ என் பிரார்த்தனையை உன் முன் வைக்கிறேன்” என்று உன்னுடைய நியாயமான பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்தால் வாழைப் பழம் தனை ஏழைக்கு தானம் செய்கின்ற நல்வினையின் பிரதிபலனாய் அதன்புண்ய சக்தி மூலம் தார்மீகமான பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறான்!
அப்படியானால் கோயிலுக்குச் சென்று, வெறும் அர்ச்சனை செய்து கொண்டு தரிசித்து வருவது தவறா என்ற வினா எழும்! கோயிலுக்குச் சென்று வருவதால் எதுவுமில்லையா?  என்ற எண்ணமே ஏற்படலாம். இதனையும் விளக்க முயற்சிப்போல்ம்!
1. அர்ச்சனைக்கு மட்டும் செய்து சுவாமியை தரிசித்தல்.
2. அன்னம், வாழைப் பழம், பிரட் போன்றவற்றை அளித்து அர்ச்சனை அர்ச்சனை செய்தல்.
3. அர்ச்சனைக்கு ஆகும் செலவில் அன்னதானம் செய்து சுவாமியை தரிசித்தல்.
4. அர்ச்சனை செய்து வந்த தேங்காய், பழங்களை தானமாக அளித்தல்.
5. அர்ச்சனை செய்து வந்த தேங்காயை உணவில் சேர்த்து அன்னதானம் செய்தல்
6. கோயிலில் காகிதம், நார், பழத்தோல் போன்றவற்றை (சங்கோஜமில்லாமல்) அப்புறப் படுத்தி பசுநெய்/நல்லெண்ணெய் அகல் தீபமேற்றி , பச்சரிசி மாவு கோலமிட்டு தரிசித்தல்.
7. கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் பழைய துணி, குடை, பேனா, பென்ஸில், நோட்டுப் புத்தகம் போன்றவற்றைத் தானமளித்து இறைவனை தரிசித்தல்.
8. மௌனம் விரதமிருந்து, வளையல், கண்ணாடி, சீப்பு, இரவிக்கைத் துணி போன்ற மங்கலப் பொருட்களைக் கோயிலில் ஏழைகளுக்குத் தானமாக அளித்துப் பின் இறைவனை தரிசித்தல்.
9. ஏதேனும் ஓர் ஏழையின் நல்வாழ்விற்காகக் கோயிலுக்குச் சென்று 108/1008... முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம், பஞ்சாட்சரம் போன்ற இறைநாமங்களை ஓதி அதன் பலனை அந்த ஏழையின் நல்வாழ்விற்காக மானசீகமாக இறைவனிடம் அர்ப்பணித்தல்.
10. அன்றைய பொழுதின் தான தர்மங்களின் பலனை கோயிலில் இறைவனிடம் மானசீகமாக அர்ப்பணித்தல்.
இப்படியாக, பார்த்தீர்களா, ஒரே விதமான மனித வாழ்வின் விதவிதமான பிரார்த்தனைகளை! இத்தனை பேருக்கும் எப்படி அருளை வழங்க வேண்டும்! இறைவனுக்கே சோதனையா? எப்படி விதவிதமான முறைகளில் அவரவருக்கு அருளை வழங்குவதென்று! இவ்வாறாக ஆயிரக்கணக்கான பிரார்த்தனைகளைத் தன்னுள் ஏற்றுத் திகழும் மூர்த்தியின் சக்தியை, தரிசன ஒளியை மனிதனால் எடை போட முடியுமா? இந்நிலையாவாது. இதை இனிமேலும் உணர்ந்தாவது இறை தரிசனத்திற்கான தகுதியைத் தான் பெற்று விட்டோமா என்று ஒவ்வொரு மனிதனும் ஆத்ம விசாரம் செய்து தன்னைத் தானே அலசி ஆராய முற்பட வேண்டும்! எங்கெல்லாம், எந்த நேரத்தில் எல்லாம் ஒரு மனிதன் தனக்காக அல்லாமல் பிறர்க்காகச் சேவை செய்து வாழ்கின்றானோ அவனுக்குத்தான் இறை தரிசனத்தின் மஹிமை புலப்படும்.
மனம், வாக்கு, உடல் அவயங்கள், இவற்றால் பொய், சூது, வாது, அதர்மம் செய்யாதவனே இறை தரிசனத்திற்குப் பரிபூரணமாக உரித்தானவன்! ஆனால் கலியுகத்தில் இது முடியுமா? இந்த நிமிடம் வரை செய்த தீவினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, இறைப்பணி, மக்கள் பணியில் சுயநலமற்ற தொண்டாற்றினால் அவனுக்கு நிச்சயம் இறை தரிசனம் உண்டு! இதனால் அவனுடைய தீவினைகள் அழிந்து விடுமா? இல்லையில்லை, தீவினைகளுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு! ஆனால் அவனுடைய சுயநலமற்ற இறைப் பணியைக் கண்டு மகிழ்ந்து இறைவனே அனுப்புகின்ற மஹான்களே அத்தீவினைகளைச் சுமந்து தங்கள் உடலில் துன்புறுகிறார்கள்.
இதுவே ஸ்ரீரமண மகரிஷி புற்று நோயால் பாதிக்கப்பட்டதன், ஸ்ரீபரமாச்சார்யாள் காடராக்ட், ஆஸ்த்மா போன்றவற்றால் அவதியுற்றதன், ஸ்ரீஅன்னை (பாண்டிச்சேரி) நோயுற்றதின் இவ்வாறு பல மஹான்கள் துன்பப்படுவதற்கான ஆன்மீக இரகசிய காரணங்களாகும்! உணர்ந்தீர்களா மஹான்களின் மஹிமையை! இறைவழியை  உண்மையாக நாடும் அடியார்களின்  தீவினைகளையே இயேசுநாதர், வள்ளலார்,  பூண்டி மஹான், பரமஹம்சர், இரமண மஹரிஷி, தட்சிணாமூர்த்தி சுவாமிகள் போன்ற மஹான்கள் தங்கள் தேகங்களில் தாங்கி அனுபவித்து அருட்பெருஞ்ஜோதியாய், தியாகச் செம்மலாய் இன்றும் நமக்கு தெய்வ தரிசனத்திற்காக அருள்வழி காட்டுகின்றார்கள்! மஹான்களின் பிறப்பு இரகசியங்களில் இதுவும் ஒன்று!
இன்றைக்கும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் (சுற்றளவு 14 கி.மீ) அடியார்களின் கால்வலி, மூச்சிரைப்பு, தலைவலி, உடல்வலி, கால்சூடு, முள்குத்துவலி, தாகம், தொண்டை வறட்சி போன்ற உடல் உபாதைகளைத் தங்கள் உடலில் ஏற்கும் ஆயிரக்கணக்கான மஹான்கள் எப்போதும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தவாறு இருக்கின்றனர்! காரணம் என்ன? ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில்

  1. கரையும் கொடிய கர்மவினைகள்!
  2. பொசுங்கும் பெரிய தோஷங்கள்!
  3. தீரும் தீராநோய்கள்!
  4. கழியும் பழந்தீவினைகள்!
  5. தொலையும் சொல்லொணாப் பாவங்கள்.....!!

வேண்டும் இறை தரிசனம், வேண்டும் இறைதரிசனம் என்று புலம்புகின்றோமே, சாட்சாத் சிவபெருமானே கிரிரூபமாக திருஅண்ணாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்! இதை உணரவா முடிகிறது!
வெறும் கல்மலையாகத் தானே அது சாதாரணக் கண்களுக்குத் தோன்றுகிறது! ஆனால் இதைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த மஹான்கள் , “தீவினைகளைக் கழிக்கின்ற எளிமையான நல்வழியாம் திருஅண்ணாமலையை சாட்சாத் பரம்பொருளையே” வலம் வரும் அடியார்களின் நல்வாழ்விற்காக அவர்களுடைய உடல்நோவுகளை இறை ஆணையாகத் தம்பால் ஏற்கின்றனர்.
நம்முடனேயே ஒருவர் கிரிவலம் வந்து கொண்டிருப்பவர். கால் வலி காரணமாகத் தள்ளாடியபடி நொண்டி நொண்டி வருவார்! தஸ்புஸ்ஸென்று மூச்சு இரைக்கும்! “ஏதோ முடியவில்லை போலிருக்கிறது” என்று எண்ணுவோம். உண்மையில் நம் உடல்வலியினையே அவர் (மஹான்) ஏற்று நம்மைப் போலவே நடந்து வருவார்.
“எனக்கு ஆஸ்த்மா/யூஸினோபீலியோ இருந்தும் கிரிவலத்தில் எதுவும் வரலை. High B.P இருந்தும் ஒண்ணும் பண்ணலை! ஏதோ கொஞ்சம் வலி இருந்தது சரியாபோச்சு! சாதாரணமாக ஒரு கி.மீ கூட நடக்க மாட்டேன்! இறங்கி ஏறினா ஆட்டோதான்! ஆனா கிரிவலம் புல்லா எப்படியோ வந்துவிட்டேன்” இவ்வாறாகப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்! இதன் ஆன்மீகப் பின்னணி என்னவென்று தெரிகின்றதா? இதுவே மஹான்களின் அற்புதங்கள்!

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்

ஸ்ரீசிங்கராஜ பிருங்கி என்ற பெரிய தவசிரேஷ்டரின் தலைமையில் ஆறு பிரம்ம ரிஷிகள் தொடர்ந்து 400 பிரம்ம ஆண்டுகளுக்கும் மேற்பட்டுத் தழைத்து வளர்ந்த சத்சங்கமொன்றை நிறுவி அரும்பெரும் ஆன்மீகத் தொண்டாற்ற வந்தனர். சத்சங்கத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர், அவ்வேழுரிஷிகளும்! அவர்களுக்கு சப்தரிஷிகள் என்ற பெயரும் உண்டு.
1. சிங்கராஜ பிருங்கி
2. ராதாநாத பருங்கி
3. பூதநாத பிருங்கி
4. நாதநாத பிருங்கி
5. ராகநாத பிருங்கி
6. வேதநாத பிருங்கி
7. நாகநாத பிருங்கி
என்ற அந்த ஏழு சித்தர்களும் மோக்ஷத்தின், ஞானத்தின் முதற்படி சத்சங்கம் என்பதைப் பூவிலகிற்கு அறிவுறுத்த வேண்டியது தங்கள் கடமை என உணர்ந்தனர். எனவே சிங்கராஜ பிருங்கி ஆறு சித்தர்களிடமும், “நீங்கள் அனைவரும் பூலோகம் சென்று ஆங்காங்கே சத்சங்கங்களை நிறுவி, சத்சங்கத்தின் மேன்மையை எடுத்துரைத்து அனைவரும் மேன்மை பெற அருள் செய்வீர்“ என வேண்டியதோடு“, இதைவிட நம்முடைய தலையான கடமை என்னவென்றால் நன்கு வளர்ந்து வரும் சத்சங்கத்திலிருந்து ஒருவர் பிரியக் காரணமென்ன? எவ்வாறு அந்த எதிர்ப்பு சக்திகளை வெல்லலாம்? அந்த சத்சங்கத்தில் நிலைபெறுவதினால், அந்த ஆன்மா எவ்வாறு மேன்மையடைகிறது போன்ற சத்விஷயங்களை மக்களுக்கு அறிவுறுத்தி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சத்சங்கம் தழைத்தோங்க நாம் சிறந்த பணியாற்றுவோம்“, என்றவாறு ஏனைய பிற ஆறு பிருங்கிச் சித்தர்களுடன் அவர் பூலோகத்திற்கு இறங்கி வந்தார்.
இமாலயப் பகுதி, பஞ்சாப், டெல்லி
ஜம்மு , காஷ்மீர்
கர்நாடகப் பகுதி
ஆந்திரப் பகுதி
என நான்கு பகுதிகட்கும் நான்கு சப்தரிஷிச் சித்தர்கள் செல்ல, தமிழ்நாட்டிற்கும் மட்டும் சிங்கராஜ பிருங்கியும், பூதநாத பிருங்கியும் இருவராக வந்தனர். தமிழ் நாட்டிற்கு மட்டும் இரண்டு சித்தர்கள் வரக் காரணம் ?
தியாகப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைப்பதில் முன்னிற்பது நம் தமிழ்நாடு. தியாகச் சீலத்தின் இலக்கணமாகத் திகழ்வது இத்தமிழகமே. எனவே தான் வடக்கில் பல ஆன்மீகப் பணிகளைச் செய்தாலும், அகஸ்தியமாமுனிவர் தனது நிரந்தர வாசத்திற்கென தமிழகத்தின் பொதியமலையையே தேர்ந்தெடுத்தார். இந்தத் தியாக பூமியில் வந்திறங்கிய இருவரும் சோழநாட்டையே முதன் முதலில் தங்களது களமாகக் கொண்டனர். எவ்விதத் தியாகத்தைச் செய்வது என்று சிந்தனையில் ஆழ்ந்தவாறே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தார் சிங்கராஜ பிருங்கி.
அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருந்த இடைச் சிறுவர்கள் “யாரோ ஒரு சாமியார் வந்திருக்கிறர். நமக்கெல்லாம் இனிப்புத் தருவார்.” என்று பேசியவாறு மகிழ்ச்சியோடு அவர்முன் நின்றனர். துறவி என்றால் அனைவருக்கும் இனிப்பு வழங்குவார் என்று மக்கள் எண்ணிய காலமது. மற்றப் பகுதிகளிலாவது முனிவர் என்றால் அவரைச் சீண்டித் துருவிப்பார்ப்பது இயல்பாக இருக்க, தமிழ்நாட்டிலோ ஒரு முன் உரை கல்லாகவே பயபக்தியுடன் மக்கள் அவர் முன்பணிவர்.
இந்தச் சிறுவர்கள் சிங்கராஜ பிருங்கியின் முன் நின்று , “பிள்ளையாரப்பா!” என்று வளைத்துத் தோப்புக்கரணமிட்டனர். அழைத்தால் அணைக்க வரும் விநாயகர், சிறுவர்களது பக்தியில் உருகி, முனிவருடைய நிஷ்டையைச் சீராக்கி தன் பக்தர்களைக் கவனிக்குமாறு உத்தரவிட்டார். கண்ணைத் திறவாமலேயே ஞான திருஷ்டியால் அச்சிறுவர்களின் உரையாடலை அறிகிறார் அவர். எவ்வாறு தியாகத்தை தொடங்கலாம் என்று எண்ணி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்க “பிள்ளையாரப்பா” என்றழைத்து எதிர்நிற்கும் இந்த மாதிரி இளஞ் சிறார்களல்லவா நமக்குத் தேவை, இதுவும்  கணபதியின் தொடக்க ஆசிர்வாதமே,” என்று மகிழ்ந்தவாறே சிறுவர்களின் பேச்சைக் கூர்ந்து கேட்கலானார்.
“பிள்ளையாரப்பா! எங்கள் வீட்டுப் பசுக்கள் ஒன்றாக வளர்ந்து குடம்குடமாக பால் கறக்க வேண்டும்”
“அந்தப் பாலை வைத்து என்னடா செய்வாய்”
“பிள்ளையாருக்குக் குடம் குடமாக அபிஷேகம் செய்வேன்.”
“அந்தப் பாலை நாம், அனைவரும் பிரசாதமாக அருந்த வேண்டும். “
“நான் குடித்தால் போதுமா? என் தந்தை தாய், தங்கை, அண்ணன் எல்லோருக்கும் வேண்டுமே”!
“அப்படியானால் உனக்கு சற்று அதிகமாகப் பால் கொடுக்கிறோம்.”
“ஏன் எல்லோருமே அதிகமாக எடுத்துச் சென்றால் அனைவரும் குடிக்கலாமே!“
தனக்கு என்றில்லாது தன் குடும்பம்..... சுற்றம் என்று தியாகம் பிறக்கும் இளம் பிராயம் இத்தமிழ் மண்ணின் விசேஷமே என்று வியந்தவாறே மேலும் கவனிக்கிறான் சிருங்கராஜ பிருங்கி..... “அந்தப்பாலை .... பொருள் சேர்த்து வீடு, வயலென வாங்கி, விவசாயம் செய்து மீண்டும் பொருள் சேர்த்துக் கோவில் கட்டி, விரிவாக்கி.......... “
“ஏண்டா!! இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டு இந்த சாமியாரையே கேட்போமே!”“ அனைவரும் அவரை வணங்கி எழுந்தனர்.
“என்ன வேண்டும் உங்களுக்கு?“
சிறுவர்கள் பயபக்தியில் வாயடைத்து நின்றனர்.

ஸ்ரீவாஸ்து புருஷன் மகிமை

அடியார் : பலர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். ஏற்கனவே கட்டிய வீட்டினை / பிளாட்டினை வாங்கியிருப்போரும் உண்டு. காலி மனையாக வைத்திருப்போரும் உண்டு! இத்தகையோர் ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரை விடும் நாளில் என்ன செய்வது குருதேவா?
சற்குரு : பிளாட்டுகள் (Flats) மலிந்து விட்ட  இந்நாளில் பலர் ஏதோ, நகரத்தின் மத்தியில் எதையேனும் வாங்கினால் போதும் என்று அவசரக் கோலமாக வாங்கி விடுகின்றனர். சமையலறை, பூஜை அறை போன்றவை எங்கெங்கிருக்க வேண்டும் என்று வாஸ்து லட்சணங்களை நன்கு கவனிக்காது, எத்தகைய (வீட்டு) அமைப்பையும் வாங்கி விடுகின்றனர். (உதாரணமாக சமையலறையானது அக்னி மூலை எனப்படும் தென்கிழங்குத் திசையில் தான் இருக்க வேண்டும்)
சரியானபடி, அதாவது வாஸ்து லட்சண முறையில் அமையாத வீட்டில் வசித்தால் பல வித தோஷங்களும், ஆஸ்த்மா, தோல் நோய்கள், மனநோய்கள், மூட்டு நோய்கள், திருடு போதல், கட்டிடம் விரிதல், கறையான் தொல்லைகள், நீர் ஓதம் ஏற்படுதல் வீட்டில் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுதல், சாமான்கள் உடைதல், கழிவு நீர் அடைப்புகள் போன்ற துன்பங்கள் ஏற்படும். ஆனால் கட்டிய வீடு, பிளாட்டுகளை (Ready Made House Flats) வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அல்லது கிடைத்த வீட்டில் குடிபுக நேரிட்டால்......
இவர்கள் ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரை விடுகின்ற நாட்களில்
1. தந்ததாவனம், ஸ்நானம், பூஜை ஆகிய (3x18) 54 நிமிடங்களிலும் ஸ்ரீவிஷ்ணு/பெருமாள் துதிகளைப் பாராயணம் செய்தல் வேண்டும், நாம சங்கீர்த்தனம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம , அபிஷேகம், ஹோமம், ஜபம், தியானம், ஸ்ரீவிஷ்ணு பூஜை, ஸ்ரீவிஷ்ணு தலங்களில் நீராடுதல், தரிசனம் செய்தல் போன்ற இறைப் பணிகளைச் செய்தல் வேண்டும். மொத்தத்தில் இந்த 54 நிமிடங்களிலும் பெருமாள் நினைவிலேயே ஊறியிருக்க வேண்டும்.
2. பிறகு ஸ்ரீவாஸ்துபுருஷன் பூஜை, தாம்பூலம் தரிக்கின்ற 36 நிமிடங்களிலும் ஸ்ரீவாஸ்து புருஷநாயகரின் படத்திற்குச் சந்தனம் (அரைத்து) இட்டு குங்குமம் வைத்து புஷ்பம், துளஸி அர்ச்சித்து, வாசனைத் தாம்பூலத்துடன் இனிப்புகளை (sweets) நைவேத்யம் செய்து தானமாக வழங்க வேண்டும்.
3. கங்கை, காவிரி போன்ற புனித நதிகளின் நீர் நிரம்பிய செம்பை மாவிலை தேங்காய் வைத்துமூடி ஸ்ரீபுருஷ ஸுக்தம், நவகிரஹதுதிகள், குறைந்தது 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம், திருவெம்பாவை, திவ்யப் பிரபந்தம் போன்றவற்றைப் பலருடன் கூட்டாக ஓதிப் இப்புனித நீரை மாவிலை கொண்டு இல்லம் எங்கும் தெளிக்க வேண்டும்.
4. ஸ்ரீவாஸ்து புருஷர் நித்திரை விடுத்து விழித்திருக்கும் 90 நிமிடங்களிலும் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீவாஸ்து புருஷனுக்கு மிகவும் ப்ரீதி அளிக்கும்.

 ஸ்ரீவாஸ்து பகவானைத் தியானித்து, இப்புனித நேரத்தில், வீடில்லாமல் தெருவிலும், பிளாட்பாரங்களிலும் வாழ்ந்து வரும் ஏழை ஜனங்களுக்குத் தேவையான உணவு, உடை, பாய், படுக்கை, மருந்துகள், டானிக், பாத்திரங்கள், விளக்குகள், எண்ணெய் போன்றவற்றையளித்து வர
1. வீடு இல்லாதோர்க்கு நியாயமான முறையில் வீடு பாக்யம் கிட்டும்.
2. ஸ்ரீவாஸ்து லட்சணப்படி இல்லாத வீடுகளில் வசிப்பதால் ஏற்படும் தோஷங்களுக்கு ஓரளவு பரிஹாரம் கிட்டும்.
மேற்படிப் பரிஹாரங்களை பக்தி சிரத்தையுடன் செய்து வந்தால் ஸ்ரீவாஸ்து லட்சணங்களுடன் கூடிய வீட்டினைப் பெறும் நல்பாக்யம் இறையருளால் கிட்டும். மொத்தத்தில் வருடத்திற்கு எட்டு நாட்களே ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரையிலிருந்து விழிப்பதால் இந்த 8X90 = 720 = 12 மணி நேரத்தை வீணாக்காதீர்கள். குறிப்பாக ஸ்ரீவாஸ்து புருஷனின்  போஜன, தாம்பூல நேரமான 8X36=288= 4  மணி 48 நிமிடங்கள் வையத்தில் மிகமிகப் புனிதமான நேரமாகக் கிடைத்தற்கரிய நேரம்.
ஏதோ புது வீட்டிற்கு அஸ்திவாரம் போடுபவர்களுக்கே இந்தச் ஜோதிட நேரம் என்று எண்ணாது அனைவரும் இந்த நேரங்களை அறிந்து கொண்டு நன்கு பயன்பெற வேண்டும். இறைவன் படைத்துள்ள இந்த ஸ்ரீவாஸ்து புருஷ விழிப்பு நிலை நேரங்கள் அனைத்து மனிதர்களுக்கும் உரித்தானவை! எனவே இந்த அரிய ஆன்மீக இரகசியங்களை நன்கு அறிந்து கொண்டு பலருக்கும் எடுத்துரைத்து அனைவரும் வீடு, வாசலுடன் இறையருளால் நன்கு வாழநம்மால் ஆன சரீர சேவையை, பூஜையை தான தர்மங்களை இதனை எடுத்துச் சொல்கின்ற நற்காரியத்தையாவது செய்ய வேண்டும்.

ஸ்ரீவாஸ்து புருஷனின் கார்ய நேரங்கள்

ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரை விடும் நாள்

தந்தாவன (பல்துலக்குதல்) நேரம் காலை

ஸ்நான (நீராடுதல்) நேரம்

பூஜை நேரம்

போஜன (அன்னம் அருந்துதல்) நேரம்

தாம்பூல நேரம்

சித்திரை 10

7.56 முதல் 8.14வரை

8.14முதல் 8.32 வரை

8.32முதல் 8.50வரை

8.50முதல் 9.08வரை

9.08முதல் 9.26வரை

வைகாசி 21

12.23 – 12.41

12.41 –12.59

12.59 – 1.17

1.17 – 1.35

1.35 – 1.53

ஆடி 11

6.44 – 7.02

7.02 – 7.20

7.20 – 7.38

7.38 – 7.56

7.56 – 8.14

ஆவணி 6

பகல்2.25 -2.43

2.43 -3.01

3.01 – 3.19

3.19 – 3.37

3.37 – 3.55

ஐப்பசி 11

6.53 – 7.11

7.11 – 7.29

7.29 – 7.47

7.47 – 8.05

8.05 – 8.23

கார்த்திகை 8

10.15 – 10.33

10.33 -10.51

10.51 - 11.09

11.09 - 11.27

11.27 – 11.45

தை 12

9.52 – 10.10

10.10 -10.28

10.28- 10.46

10.46 -11.04

11.04 – 11.22

மாசி 23

9.38 – 9.56

9.56 -10.14

10.14 – 10.32

10.32 – 10.50

10.50 – 11.08

  1. இது அனைத்துத் தமிழ் வருடங்களுக்கும் பொதுவானதாகும். அனைத்து வருடங்களிலும் இந்நாட்களிலேயே ஸ்ரீவாஸ்து புருஷன் விழித்திருக்கிறார்.
  2. இது இவ்வருட சென்னை சூரியோதய நேரத்துக்கு உட்பட்டது. அந்தந்தப்ப பகுதிகளின் சூரியோதய நேரத்திற்கு ஏற்றபடி இவை சற்றே மாறும்.
  3. ஸ்ரீவாஸ்து புருஷன் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் சயனத்திலிருக்கிறார். இம்மாதங்களில் அவர் நித்திரையிலிருப்பதால் இம் மாதங்களில் கிரஹாம்பரம் கூடாது.
பூரண தாம்பூலம்

முற்காலத்தில் சுண்ணாம்பு சேர்ந்த தாம்பூலமே பரிபூர்ணமான, மங்களகரமான தாம்பூலமாகக் கருதப்பட்டது. முழுப்பாக்கு வைக்கும் நற்பழக்கம் மறைந்து காகிதப் பொட்டலத்தோடு துகள் பாக்கு வைக்கும் அசட்டைத் தனம் தற்போது நடைமுறைக்கு வந்து விட்டது போலவே, அசிரத்தை காரணமாகவே தாம்பூலத்தோடு சுண்ணாம்பு வைக்கும் பழக்கமும் காலப்போக்கில் மறைந்து விட்டது.
(நீர்த்த) சுண்ணாம்பின்றி வெறும் வெற்றிலை, பாக்கோடு எந்தத் தாம்பூலத்தையும் வைக்கக் கூடாது. இறைவனுக்குப் படைக்கும் தாம்பூலம், ஆசிர்வாதத்திற்கான தாம்பூலம், உணவிற்குப் பின்னான தாம்பூலம் - ஆக எத்தாம்பூலமாயினும் சரி (நீர்த்த) சுண்ணாம்பைச் சேர்த்தால் தான் தாம்பூல தேவைதயின் பரிபூர்ண ஆசிகிட்டும். உணவு உண்ட பின் போடும் தாம்பூலத்தில், சுண்ணாபின்றித் தாம்பூலம் நிறைவடைவதில்லையே! அது போலவே எத்தகைய தாம்பூலத் தட்டிலும் வெற்றிலை, பாக்குடன் சுண்ணாம்பு சேர்ந்தால் தான் தாம்பூல ஆசிர்வாதப் பலன்கள் முழுமையடையும்.
முழுமையான பாக்குகளே விசேஷமானவை. அரைப் பாக்குகளையும் வைத்திடலாம். முந்திரி, தேங்காய், பாக்கு போன்றவற்றை முழுமையாகவோ, பாதியாகவோ பயன்படுத்தலாம். துகள் பாக்கினைத் தாம்பூலத்தில் சேர்க்கவே கூடாது. தூள்பாக்கு சேர்ந்து தாம்பூலத்தில் தாம்பூலதேவதை ஆவாஹனம் ஆவதில்லை. மாறாக அத்தகைய அரைகுறைத் தாம்பூலத்தினல் தோஷங்களே பெருகும்.
சுண்ணாம்பும் காயந்ததாக இருக்கக் கூடாது. நீர் விட்டுக் கலந்த, நீர்த்த சுண்ணாம்பாக இருக்க வேண்டும். வெற்றிலையிலேயே நீர்த்த சுண்ணாம்பை வைத்தல் சிறப்பானது. வெற்றிலைக் கடையில் கூட, வெற்றிலை என்று கேட்டால், சிறிது,சீவல், சுண்ணாம்புடன் சேர்த்துத் தருகின்ற நற்பழக்கத்தைக் காண்கிறோம். வெற்றிலை விற்பவர் இதர மதத்தவராயினும் வெற்றிலையுடன் சேர்த்துத் தருகின்ற உயர்ந்த பண்பாட்டை இன்றும் எங்கும் கண்டு ஆனந்திக்கலாம்.
சுண்ணாம்பு இல்லாமல் தாம்பூலம் முழுமை பெறாது சுண்ணாம்பும் காய்ந்தாக இருக்கக் கூடாது. நீர்த்த (நீர் விட்டுக் கலந்த)சுண்ணாம்பாக இருக்க வேண்டும். வெற்றிலையில் நீர்த்த சுண்ணாம்பை வைத்தல் சிறப்பானது. ஸ்ரீஅகஸ்தியருடைய “ஸ்ரீஅகஸ்த்ய ஸம்ஹிதாவில்“ த்ரிம்சோத்யாய : ஸ்ரீராம பூஜாக்ரமத்தில்“ ஸ்ரீஸுதீக்ஷணருக்குப் பாஹ்ய பூஜையைப் பற்றி ஸ்ரீஅகஸ்தியர் விளக்கம் அளிக்கின்ற பகுதியில் தாம்பூல முறை பற்றிய ஸ்லோகத்தில்

ஸ்ரீஅகஸ்தியரின் ஸ்லோகம்
“கர்ப்பூரசகலைர் யுக்தம் நாகவல்லீதளாந்விதம்!
ஸுதாபிந்து ஸமாயுக்தம் பூகிபலஸமந்விதம்!!
தாம்பூலம் ரகுநாதஸ்ய தத்வாகாமா நவாப்னுயாத்”

“பச்சைக் கற்பூரத்துடன் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு நீர்த்துளியுடன் ஸ்ரீராமனுக்குத் தாம்பூலம்தனை அளித்திட அனைத்துவிதமான பிராத்தனைகளும் கனியுமென” ஸ்ரீஅகஸ்த்ய மஹாபிரபு அருள்கின்றார். வெற்றிலை, பாக்கு, (நீர்த்த) சுண்ணாம்பு இவை மூன்றும் சேர்ந்தாலே தாம்பூலம் பரிபூர்ணமடையும். இவற்றோடு,கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்ப்பதும் விசேஷமானதே. இனியாவது பக்தகோடிகள் தாம்பூலத்தில் (நீர்த்த) சுண்ணாம்பு சேர்த்துத் தாம்பூலத்தை அளிப்பார்களாக! இதன் மூலம் தான் தாம்பூல தேவதைகளின் பரிபூர்ண ஆசி கிட்டுவதோடு தாம்பூல ஆசி முழுமையாகப் பரிபூரணமாகக் கிட்டும்.

ஞாயிறு கிரிவலம்

ஸ்ரீசூர்ய பகவான் இன்றும் திருஅண்ணாமலையைக் குறுக்காக வலம் வருவதில்லை. மலையைச் சுற்றியே வருகின்றார். பிரபஞ்சத்தில் பலகோடி சூர்யன்கள் உண்டு. அவற்றிற் கெல்லாம் ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியே அதிபதி ஆவார். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஸ்ரீசூர்யபகவானே. பூலோகத்திற்கு ஏதேனும் ஓர் உருவில் வந்து திருஅண்ணாமலையே கிரிவலம் வருகிறார். பலகோடி சூர்யன்களும் தங்களுக்குரித்தான வெப்பத்திற்கான அக்னியினை பஞ்ச பூதலிங்கங்களுள் அக்னிலிங்கமாக விளங்கும் திருஅண்ணாமலையிலிருந்தே பெறுகின்றன. ஸ்ரீசூர்யபகவான் ஸ்வர்ச்சலா தேவியை (ஸம்க்ஞை) மணந்திட, அவர்தம் அக்னியைத் தாங்க இயலாது ஸ்வர்ச்சலாம்பாள் தன் நிழலை சூர்ய சவிதா மண்டலத்தில் நிலை நிறுத்திவிட்டுத் தன் தந்தை த்வஷ்டாவிடம் சென்றடைந்தாள். அந்நிழல் தேவியே சாயா தேவி! சனீஸ்வரனைப் பெற்றதாய்!
ஸ்வர்ச்சலாம்பாவை மீண்டும் அடைய ஸ்ரீசூர்ய பகவான் அக்னி சேத்திரமாம் அருணாசலத்தை (திருஅண்ணாமலை) அடைந்து தவம் புரிந்தார். பல சதுர்யுகங்கள் தவமிருந்தும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் தரிசனம் கிட்டவில்லை. ஸ்ரீசூர்ய பகவானின் தவங்கண்டு ஆனந்தித்த ஸ்ரீஅம்பிகை தரிசனம் தந்து. “ஸ்ரீபாஸ்கரா! தம்பதி சகிதம் வந்து வணங்குவதையே பகவானாம் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் விரும்புகிறார். தம்பதி சதிகம் வந்து வணங்குபவர்களுக்குத் தரிசனம் தருவதில் தான் பரம்பொருளுக்குப் பரமானந்தம் கிட்டுகிறது. ஆனால் நீயோ மனைவியை மீண்டும் அடைய வேண்டித் தவம் செய்து வருகிறாய்!“
“உன் அக்னி ஸ்வரூபத்தைத் தாங்காது. ஸவர்ச்சலாம்பா தேவி பிரிந்து சென்றிருக்கின்றாள். எனவே நீ உன் அக்னியை சாந்தப் படுத்தும்படி வேண்டி அருணாசலத்தை கிரிவலம் வருவாயாக! அதே சமயத்தில் உன் பத்னியாம் ஸ்வர்ச்சலாம்பா தேவியும் உன் அக்னியைத் தாங்கும் சக்தி பெற வேண்டி கிரிவலம் வர வேண்டும். இருவருமே ஆதிசிவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை வைத்து கிரிவலம் வருவீர்களாக!“ என்று அறிவுரை கூறி ஆசீர்வதித்தாள். அப்போது குருக்ஷேத்திரம் சென்று தவம் புரிந்து வந்த ஸ்வர்ச்சலாம்பா தேவிக்கு “உன் தவம் இங்கு பரிபூர்ண மடைந்து அதன் பலன்களை அக்னிக்ஷேத்திரத்தில் பெற்று மகிழ்வாயாக” என்ற தெய்வவாக்கு கிட்டியது.
இவ்வாறு ஸ்ரீஅம்பிகையின் திருவாக்கின்படி ஸ்ரீசூர்யபகவானும் ஸ்ரீஸ்வர்ச்சலாம்பா தேவியும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த திருநாளே ஞாயிற்றுக்கிழமையாகும். முன்னே ஸ்ரீசூர்ய பகவான் செல்ல பின்னே ஸ்ரீசூர்யபகவானின் சுடர்களைத் தன் தேகம் தாங்கும் தூரத்தில் ஸ்வர்ச்சலாம்பா சிவ தியானத்தில் ஆழ்ந்தவாறே ஆனந்தத்தில் திளைத்து கிரிவலம் வந்தனள்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் இருவருக்கும் அக்னி ஜோதிலிங்கமாய்க் காட்சி தந்து, “பாஸ்கரா! உன் பத்னியாம் ஸ்வர்ச்சலாம்பா தேவிக்கு உன் அக்னி ஸ்வரூபதேக காந்தியைத் தாங்கும் வல்லமையை யாம் அளிக்குமுன் உன்னுடைய அக்னிக் கதிர்களின் சுமையை அவள் விரும்பிய வண்ணம் தணிப்பதற்காக சிலவற்றை அமிர்த கிரணங்களாக மாற்றி அவற்றை (அப்போது) பலகலைகள் குறைந்துவாடும் சந்திரனுக்கும், மேலும் பல கிரணங்களை ஆயுதங்கள் வேண்டி இங்கு அருணாசல க்ஷேத்திரத்தில் தவங்கிடக்கும் தேவர்களுக்கும் ஆயுதங்களாகவும் மாற்றியளிக்றேன்... மேலும் பல சூர்ய கிரணங்களைப் பல பொருட்களாக, ஜீவன்களாக மாற்றிப் படைக்கின்றேன்” என்று அருளினார். இரவில் ஒளிரும் பூக்கள், பூச்சிகள , பாதரசம், இரவில் ஒளி பெறும் ஆந்தை, பூனை போன்ற ஜீவன்களின் கண்கள் இவ்வாறாகவே சிருஷ்டிக்கப்பட்டன.
இதன் பிறகு முப்பத்து முக்கோடி தேவர்களும் பூஜித்திட ஸ்ரீசூர்யபகவான் தன் பத்னியாம் ஸ்வர்ச்சலாம்பா தேவியுடன் இணைந்தார்.
 எனவே குடும்பப் பிரச்சனைகள் , சொத்து, மன வேறுபாடுகள் போன்றவற்றால் பிரிந்து வாழும் கணவன், மனைவியர் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிவலம் வந்து ஏழைத் தம்பதிகளுக்கு வளையல்கள், சீப்பு, கண்ணாடி போன்ற மங்களப் பொருட்கள் போன்றவற்றை தானமாக அளித்து வரப் பிரிந்தவர் ஒன்று கூடுவர். விவகாரத்து நிலைகளில் உள்ள கணவன் மனைவியர் கூட, தம்பதியர் இருவரும் கிரிவலம் வந்திட (தனித்தனியே செய்தாலும், வெவ்வேறு ஞாயிற்றுக் கிழமைகளிலும் செய்தாலும் சரி) நன்முறையில் தம்பதியர் இணைவர். சில திருமணங்கள் ஓப்புக் கொள்ளப்பட்ட நிலையிலும் பலகாரணங்களால் திருமணம் கைகூடாமல் இருக்கும். இக்குடும்பத்தினர் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து குறித்த தானதர்மங்களை நிறைவேற்றி வந்திட அத்தகைய திருமணங்கள் எளிதில் கைகூடும்.
எனவே பற்பல காரணங்களால் பிரிந்து வாழும் கணவன், மனைவியினர் வாழும் கணவன், மனைவியினர் ஒற்றுமையுடன் சேர்ந்து நன்கு வாழ ஞாயிறு திருஅண்ணாமலை  கிரிவலம் மிகவும் விசேஷமானதாகும். ஞாயிற்றுக்கிழமையில் சூரிய ஹோரை நேரங்களில் காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, நள்ளிரவு 3-4 கிரிவலத்தைத் துவங்குதல் மேலும் விசேஷமான அருளைத் தரும்.

ஞாயிற்றுக் கிழமையில் சூர்ய பகவானுக்குப் பரீதியான வெளிர் மஞ்சள் (சந்தன) நிற ஆடை அணிந்து கிரிவலம் வருதல், கோதுமை உணவு தானம், மாணிக்க கல் (சிவப்பு) பதித்த மோதிரம் அணிந்து வருதல், தாமிர உலோகப் பொருட்கள் தானம் (தட்டு, பஞ்ச பாத்திரம், உத்தரணி, தாம்பாளம், உலோகச்சிறபம்) போன்றவை கிரிவலத்தின் ஸங்கல்பப் பலன்களை மேம்படுத்தும்.
ஸ்ரீஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம். சூர்ய நமஸ்காரங்கள். “ஸ்ரீசூர்யா போற்றி, ஸ்ரீபாஸ்கரா போற்றி, ஸ்ரீமித்ரா போற்றி, ஸ்ரீசூர்ய நாமங்கள், அபிராமி அந்தாதியின் “உதிக்கின்ற செங்கதிர்” என்ற முதல் பாடல் போன்றவற்றைத் துதித்தவாறே ஞாயிற்றுக் கிழமைகளில் கிரிவலம் வருதல் சிறந்த பலன்களைத் தரும். ஞாயிற்றுக் கிழமை கிரிவலப் பலன்கள் ஏராளம் ஏராளம்.

கடவுள் படங்கள்

வினா : கடவுள் படங்களை எந்தெந்தத் திசையில் மாட்ட வேண்டும்?
விடை
இது எல்லையில்லாத விளக்கமுடையதாயிற்றே! எவ்வாறு சுருக்கித் தர முடியும்?
1. பிள்ளையார் படம் அனைத்துப் படங்களுக்கும் மேல் தளத்தில் இருக்க வேண்டும். சிறுபடமாயினும் சற்று உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும் இதற்கு உச்சிமேல் திக்கு என்று பெயர். ஓம்கார ஸ்வரூபரே ஸ்ரீவிநாயகர்! ஓம்காரத்தில் உருவானதே அனைத்தும் ! எனவே பிள்ளையார் படமே அனைத்துப் படங்களுக்கும் மேல்/உச்சிமேல் திக்கில் அமைய வேண்டும். ஸர்வமும் அவரே! சிவனும், பார்வதியும் நாராயணனும், சக்தியும் வணங்கிய பெருமை பெற்றவரே ஸ்ரீகணபதி!
2. பிள்ளையாருக்கு வலப்புறம் ஸ்ரீசரஸ்வதி இடப்புறம் ஸ்ரீலக்ஷ்மி! அதாவது உச்சிநடுவலத்தில் ஸ்ரீசரஸ்வதி உச்சி இடவலத்தில் ஸ்ரீலக்ஷ்மி.
வலப்புறம் பிங்கள சுவாசத்தையும் இடப்புறம் இடகலை சுவாசத்தையும் யோக முறையில் குறிக்கும். பிங்களம் ஸ்ரீசரஸ்வதி படத்தை வலப்புறத்திலும், இடகலை சந்திர பாவம் உடையதால் (பாற்கடலில் சந்திரனோடு தோன்றியவள்) ஸ்ரீலக்ஷ்மியை இடப்புறத்திலும் வைக்க வேண்டும்.
3. பிள்ளையார் – ஸ்ரீசரஸ்வதி, பிள்ளையார் – ஸ்ரீலக்ஷ்மிக்கு இடையே உள்ள மேல் தளப்பகுதியில் ஸ்ரீசக்கரம், ஸ்ரீசுதர்சனம் மேரு சக்கரம் போன்ற சக்கரப்படங்கள்/யந்திரப் படங்களை வைக்க வேண்டும்.
4. உபாசனா தெய்வங்கள்/யந்திரங்கள்/சக்கரங்கள் இருந்தால் அவற்றின் பூஜா நியதிகளே வேறு! இவற்றைத் தக்க சற்குருவிடம் பெற வேண்டும்.
5. ஸ்ரீசரஸ்வதிக்கு வலப்புறம் ஸ்ரீபார்வதி, ஸ்ரீகாமாட்சி போன்ற சக்தி அம்சப் படங்களையும் இவற்றிற்கு வலப்புறம் ஸ்ரீசிவபெருமான் , ஸ்ரீதட்சிணாமூர்த்தி போன்ற சிவாம்சப் படங்களையும் வைக்க வேண்டும்.
6. ஸ்ரீலக்ஷ்மிக்கு இடப்புறம் ஸ்ரீவிஷ்ணு/ஸ்ரீகிருஷ்ணன்/ஸ்ரீரங்கநாதர் அம்சப் படங்களையும் இவற்றிற்கு இடப்புறம் ஸ்ரீலக்ஷ்மி அம்சப்படங்கள், ஸ்ரீமுருகன் படங்களையும் வைக்க வேண்டும்.
7. மூன்றாவது தளத்தில் பெற்றோர்கள்/மூதாதையர்கள் படங்களை (முதல் தளம் – ஸ்ரீகணபதி இரண்டாவது தளம் – ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி etc) வைக்க வேண்டும்.
8. நான்காவது தளத்தில் (வரிசையில்) ஆழ்வார்கள், மஹான்கள், யோகி, ஞானி etc இவ்வரிசையில் நடுநாயகமாகத் தான் வணங்கிப் போற்றுகின்ற சற்குரு!
9. ஸ்ரீராமர் தெற்கு நோக்குதல் கூடாது. ஏனைய மூர்த்திகள் பொதுவாக எத்திசையும் நோக்கலாம். கிழக்கு/வடக்கு நோக்குதல் விசேஷமானதாம்.
இது எளிமையான பொதுப்படையான விளக்கமே! மேலும் விளக்கம் வேண்டுவோர் விரிவாக எழுதிக் கேட்கலாம்.
விக்ரஹங்களுக்குத் தனி நியதிகள் உண்டு.

தர்ப்பணம் அர்க்யம் விளக்கம்

தர்ப்பணம் என்றால் இறந்தவர்களுக்கு மட்டும் அளிப்பது என்று தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. தர்ப்பணம் என்றால் “திருப்தி அளிப்பது” என்று பொருள். பித்ரு தர்ப்பணம் தவிர, தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம், பிரம்ம தர்ப்பணம் என்றவாறு பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நித்ய தர்ப்பண பூஜை செய்து தினமும் மூதாதையர்களை வணங்க வேண்டும். ஏனெனில் அவர்களுடைய பூஜா, தான, தர்மங்களின் பலன்களினால்தான் இவன் ஓரளவாவது சௌகரியமாக வாழ்கிறான். கலியுக மனிதன் தான் ஒழுங்காக, உள்ளன்போடு பூஜைகளையோ, தான தர்மங்களையோ செய்வதில்லையே! ஏதோ பெரியோர்களின் ஆசியால் இவனுடைய வாழ்க்கை ஓடுகிறது! அதற்கான நன்றியே நித்ய தர்ப்பணம்.
பித்ருக்களுக்குச் செய்கின்ற தர்ப்பணத்தில் வலது உள்ளங்கை ஓரத்தில் கட்டைவிரல், ஆள்காட்டி விரலுக்கிடையே எள் கலந்த நீரை வார்த்துப் பித்ருக்களுக்குத் தர்ப்பணமிடல் வேண்டும். கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தையும் சேர்த்தல் விசேஷமானதாகும்.
உத்தம ஆன்மீக நிலையடைந்தோர். மஹரிஷிகள், ஞானிகள், யோகிகள், போன்றோர்க்கு கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தம் கலந்த நீரால் அல்லது துளஸி சேர்ந்த வலது கை சுண்டு விரல் வழியாக அர்க்யம் விடவேண்டும். இது ரிஷி தர்ப்பணமாகும். தேவர்களுக்கு, கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தம் சேர்ந்த நீரை வலது கையின் ஐந்து விரல்கள் வழியாக அர்க்யம் விட வேண்டும். இது தேவ தர்ப்பணமாகும்.

உள்ளங்கை பிரம்ம தீர்த்தம்
உள்ளங்கையின் மணிக்கட்டை ஒட்டிய பகுதிக்கு “பிரம்ம ஸ்தானம்” என்று பெயர். உள்ளங்கையில் நீரெடுத்து, உட்புறமாக மணிக்கட்டு வழியே நீரை அர்க்யம் வார்த்தலுக்கு பிரம்மார்க்யம் அல்லது பிரம்ம தர்ப்பணம் என்று பெயர். பிரம்ம ஸ்தானத்தில் பட்டு வரும் எந்த நீரும் புனித பிரம்ம தீர்த்தமாக அமைந்து நம்மைப் புனிதப் படுத்தும் சக்தியைப் பெறுகிறது. இதன் காரணமாகத் தான் சந்தியா வந்தனத்தில் “கேசவா, நாராயணா, மாதவா” என்றும் உள்ளங்கையில் சிறிது நீரை ஊற்றி பிரசாதம், கோயில் தீர்த்தங்கள், புண்யநதி ஜலம் போன்றவற்றையும் பிரம்ம தீர்த்தமாகவே உள்ளங்கையில் ஏற்று அருந்துகிறோம்.

ரிஷி தர்ப்பணம்

பொதுவாக தெய்வ மூர்த்திகளுக்கும், மஹரிஷி மஹான்கள், யோகி போன்ற உத்தம இறைநிலையடைந்தோர்க்கும் அர்க்யம் அளிக்கப்படுகிறது. இதனைத் தர்ப்பண பூஜையாகவே செய்கின்றோம். தெய்வமூர்த்திகளுக்கான அர்க்யத்தில் உள்ளங்கை, சுண்டுவிரலின் கீழ்ப் பகுதியில் வலது கையைச் சாய்த்து மேடு வழியே நீரை விடுதலே அர்க்யம் ஆகும்.
ஸ்ரீகாயத்ரீ தபஸ்
நம்முடைய உடல் அவயம் ஒவ்வொன்றாலும் எத்தனையோ காரியங்களைச் செய்கின்றோம். இவற்றில் நல்லவையும் தீயவையும் அடங்கும். ஒவ்வொரு அவயத்திலும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தி “உரு” ஏறினால் தான் செய்த தீவினைகளுக்குப் பிராயச்சித்தந் தரும் நல்வழிகளை பெறும். அந்த நல்வழியாம் பிராயச்சித்தங்களைச் செய்தால் அந்த அவயம் நன்னெறி அடைகின்றது.

பிரம்ம அர்க்யம்

உதாரணமாக இடக் கரத்தால் பெரியவர்களை அடித்தல், பசு, நாய், பூச்சிகளை வதைத்தல், காசு, பணத்தை வாங்குதல்/கொடுத்தல், குழந்தைகளை அடித்தல், புத்தங்களைத் தூக்கி எறிதல், கெட்ட காரியங்களைச் செய்தல் தீவினைகளுக்குப் பரிஹாரமாக சற்குரு பல நல்வழிகளைக் காட்டுகின்றார். கண்களுக்கும் அவயங்களுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. கண்களால் தூண்டப்பட்டுத்தான் பெரும்பாலான அவயங்கள் காரியங்களைச்  செய்கின்றன. எனவேதான் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்க “கண்களால்” அதன் “ஸப்த ஸ்தானியை” (ஒலிக் கூற்றைவெளிப் பரப்புதல்) அவயத்தில் செலுத்துகிறோம். அதாவது சிரசு முதம் பாதம் வரை ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை ஏற்றினால் தான் ஒரு மனிதன் முழுமையான தியான நிலையை அடைய முடியும். இந்த பிங்களஸ்தம்ப தியான முறையில் இடதுகையை உயர்த்துகின்ற பொழுது வலதுபுற சூரியக்கலை சுவாசம் மேம்படுகிறது. நல்ல எண்ணங்களையும் நல்ல ஒழுக்கத்தையும் பேண வல்லது சூரியகலை சுவாசம்.

அர்க்யம்

பிங்களஸ்தம்ப தியானத்தின் பலன்கள்:
1. மனக் குழப்பங்கள் அதிக முடையோர்க்கு, குறிப்பாக ஆண்களுக்கு இப்பயிற்சி சீரான மனநிலையைப் பெற்றுத்தரும்.
2. கெட்ட வழிகளில் செல்லும் மன ஓட்டத்தை இம்முத்திரைப் பயிற்சியினால் முறைப்படுத்தலாம்.
இப்பயிற்சியை தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களுக்கேனும் செய்து வர வேண்டும். துவக்கத்தில் இந்த எளிய பயிற்சியில் கூட இடதுகைப் பகுதியில் ஆங்காங்கு வலி ஏற்படக் கூடும். அவ்வவப்போது கையை சற்று இறக்கி பயிற்சியை மீண்டும் தொடரலாம்.
ஸ்ரீகாயத்ரீ முத்திரை விளக்கங்கள்
1.ஓங்காரக் கூட்டு தியானம்
2. பிங்கள ஸ்த்ம்பம்
என்ற இரண்டு முத்திரைகளும் விளக்கப்பட்டுள்ளன. பிங்கள ஸ்தம்ப முத்திரையில், நன்கு பயிலும் வரை முதலில் சிறிது வலி ஏற்படலாம். விஞ்ஞானத்தில் வலி ஏற்படுவதற்கு மருததுவ ரீதியாகப் பல காரணங்கள் கூறப்படும். ஆனால் ஆன்மீக ரீதியாக இதன் விளக்கம் யாதோ?
1. நம் உடலும், மனமும் எப்போதுமே ஆனந்த நிலையில் இருக்கவே விரும்புகிறது. ஒரு சிறு எறும்புக் கடியைக் கூட நம்முடல் பொறுப்பதில்லை. நம்முடைய பிறவிகளுக்கெல்லாம் காரணமாக “காரண சரீரம்” சத்சித்ஆனந்தமான பரிபூரணப் பரம்பொருளிலிருந்தே வந்தது. அதுவே உண்மையான ஆனந்தம்! எவ்வளவு எடுத்தாலும் அதன் பரமானந்தம் குறையாது. காரண சரீரத்திலிருந்து பல கோடி பிறவிகள் எடுத்தாலும் எங்கிருந்து வந்ததோ அந்த பரம்பொருளின் ஆனந்தத்தையே நம் உடலும், மனமும் நாடுகிறது. ஆனால் கர்மவினைகளின் பயனாய் நிரந்தரமற்ற சுகத்தையே மாயையால் உடலோ, மனமோ ஆனந்தமாய் நாடுகிறது. உண்மையான சாஸ்வதமான சத்சித் ஆனந்ததைப் பெறும் வரை பிறவிகள் தொடரும்.
2. இரண்டு சுக நிலைகளுக்கு இடையே உள்ள கால நேரமே வலியாகும். வலியேற்படும்போது நம் சுகத்தை மறப்பதில்லை. மாறாக உண்மையான சுகத்தின் பண்பை உணர்கிறோம்.
3. சற்குருவால் தான் தீவினைகளை எரிக்க முடியும். மற்றவர்கள் எதையும் அனுபவித்தே ஆக வேண்டும். எனவே தீவினைகளின் தொகுப்பே “வலி” வடிவில் ஒரு வகைத் துன்பமாக அனுபவித்துக் கழிக்கப்படுகின்றது. இவ்வாறு ஸ்ரீகாயத்ரீ முத்திரையில் கர்மவினைகளைக் கழிக்கும் பாங்கு எளிமையான முறையில் அமைந்திருக்கிறது. ஸ்ரீகாயத்ரீ முத்திரையின் மஹிமைகளில் இதுவும் ஒன்று.
4. இடதுகை அவயத்தால் நாம் எத்தனையோ தீய வினைகளைச் செய்திருக்கக் கூடும். அன்னத்தை உதறுதல், பெரியோர்களை, பெற்றோர்களை அடித்தல், பசு, பறவை போன்ற தீவினைகளைச் சுமந்து வரும். இடதுகையில், பிங்கள ஸ்தம்ப முத்திரையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைக் கண்களால் “பரப்பிட” இதன் சக்தியால் தீவினைகள் ஓரளவு கழிகின்றன.

காயத்ரீ அனுசந்தான முத்திரை

1. மூன்றாவது ஸ்ரீகாயத்ரீ முத்திரையான அனுசந்தான முத்திரையில் பத்மாஸனமே சிறந்ததாகும். இயலாதோர் சுகாசனத்தை (சாதாரண முறையில் சம்மணமிடுவது) ஏற்கலாம்.
2. நன்றாக நிமிர்ந்து அமர்ந்து இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை வைத்தல் வேண்டும். விரல்கள் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். கட்டை விரல் மட்டும் விரிந்து ஒன்றையொன்று தொட்டவாறிருக்க வேண்டும்.
3.பார்வையைச் சற்றே தணித்து, முகத்தை அசைக்காமல், விழிகளின் பார்வையினை மட்டும் இடதுகையின் மேல் விளிம்பில் தொடங்கி கையின் விளிம்பு வழியே படர்ந்து. இரு கட்டை விரல்களின் ஓரங்களின் வழியே வலதுகை மேல் விளிம்பு வழியாக வலது தோளை அடைதல் வேண்டும். மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே இருக்க வேண்டும்.

அனுசந்தான முத்திரை

4. மீண்டும் வலது தோளில் பார்வையினைத் தொடங்கி உள்கை ஒரங்களில் பார்வையைச் செலுத்தி இருகைகளின் சுண்டு விரல் விளிம்புகள் வழியே இடது கை உள் ஒரமாக இடது தோளை அடைய வேண்டும்.
5. ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் மனதில் ஒடிக் கொண்டிருக்க முத்திரைப் பயிற்சியும் தொடர வேண்டும். கழுத்தை அசைக்காது விழிகளை மட்டும் உருட்டி கரங்களின் விளிம்புகளில் விழியோட்டத்தை/ பார்வையைச் செலுத்த வேண்டும்.
5. இப்பயிற்சியைத் துவக்கத்தில் ஐந்து நிமிடங்களேனும் செய்தல் வேண்டும்.
பலன்கள்
ஸ்ரீகாயத்ரீ தேவியின் தரிசனத்திற்கு இம்முத்திரை மிகவும் முக்யமானதாகும். முறையற்ற காம எண்ணங்கள், மனசஞ்சலங்கள் நீங்குதலே புனிதமான மனதிற்கு முதற்படி! இதற்கு அனுசரணையாக இருப்பதே அனுசந்தான முத்திரை.!

ருது தான தர்மங்கள்

1. ருதுவான நட்சத்திர நாள்
2. பிறந்த நட்சத்திர தினம்
3. கீழ்க்கண்ட (அந்தந்த நட்சத்திரத்திற்குரிய) கிழமை
 இம்மூன்றில் எந்நாளிலும் செய்திடலாம். வாரத்திற்கு ஒரு முறையும், மாதத்திற்கு ஒரு முறையான நட்சத்திரத்திலும் இயன்றால் கூடுதலாகச் செய்திடில் பூஜா சக்தியை அதிகமாகப் பெற்றிடலாமல்லவா?
ருதுவான பருவ காலம் முதல் திருமணமாகும் வரை மேற்கண்ட தானதர்மப் பரிகார முறைகளை உண்மையான உள்ளத்துடன் பெற்றோர்களோ, அவர்களின் புதல்வியோ, ஏனைய அன்புள்ளோரோ நிறைவேற்றி வர எவ்விதமான இடையூறுகளுமின்றி அவர்களுடைய திருமணங்கள் நிறைவேறும்.

“என் பெண்ணுக்கு சுத்தமான ஜாதகம், எவ்வித தோஷமும் இல்லையே. திருமணம் தானே! இப்போது தான் பருவமடைந்திருக்கிறாள்! கல்யாண வயதில் பரிகாரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்” என்றெல்லாம் எண்ணாது வருமுன் காப்பது நல்லது!

பருவமடைந்த அல்லது
பிறந்த நட்சத்திரம்

பரிகாரம் அல்லது தானம் செய்ய வேண்டிய நாட்கள்

அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோஹினி,  மிருகசீரிஷம்

ஞாயிற்றுக்கிழமை

திருவாதிரை, புனர்பூசம், பூசம்

திங்கள்கிழமை

ஆயில்யம், மகம், பூரம்,உத்திரம்

செவ்வாய்கிழமை

அஸ்தம், சித்திரை, சுவாதி,  விசாகம், அனுஷம்

புதன்கிழமை

கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்

வியாழக்கிழமை

திருவோணம் , அவிட்டம்

வெள்ளிக்கிழமை

சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

சனிக்கிழமை

 உதாரணமாக சுமார் 12 வயதில் ருதுவாகும் பெண்ணிற்காக மேற்கண்ட தானதர்மங்களை அந்தந்தக் கிழமைகளில் (வாரத்திற்கொரு முறை) செய்து வர, திருமணமாக வேண்டிய 21 வயதில் 10 வருட தானதர்மங்களின் அபரிமிதமான புண்ணிய சக்தி முன்நின்று ரட்சையாகச் காத்திட... திருமணம் இறையருளால் எளிதில் நிறைவேறும் எத்தகைய எளிமையான பிரார்த்தனா முறையைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர் பார்த்தீர்களா! கடைபிடிப்போம்! நம் சந்ததிகளுக்குச் சற்குருவின் நல்லருளைத் தந்திடுவோம்! எவ்வித இடையூறுமின்றி அவர்களுக்குச் செம்மையான திருமண வாழ்வைக் குருவருளால் அளிப்போமாக!
ருது திதி – ருதுவான திதி காலத்தைச் சிலர் குறிப்பதுண்டு. இதுவும் விசேஷமானதே! ருதுவான திதி அறிந்தால் அதற்குரித்தான தான தர்ம பரிகாரங்களைவ் செய்துவர, தக்க பருவத்தில் திருமண பாக்கியம் கைகூடும்.
திதிக்குரிய தானதர்ம பரிகாரங்கள்
பிரதமை : இல்லறப் பெண், அநாதை, கன்னிகா மடத்திலுள்ள ஏழைக்கன்னிப் பெண்களுக்கு உணவு, உடை வைத்தியம் போன்ற உதவிகள்.
துவிதியை : பத்து மாதத்திற்குட்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, உடை, வைத்தியம் காது குத்துதல், பிரார்த்தனை, மொட்டையடித்தல், நோய்தடுப்பு ஊசி போடுதல் போன்ற உதவிகள்.
சதுர்த்தி : ஏழை சகோதரிகள், ஒன்று விட்ட சகோதரிகளுக்கு உதவி.
பஞ்சமி : மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஏழைத்தம்பதிகளுக்குப் பாதபூஜை , உதவிகள் செய்தல்.
சஷ்டி : வடமொழி, தமிழ் வேதங்களை ஓதுவோர்க்கு உதவி.
சப்தமி : ஆறு குழ்ந்தைகளுக்கு மேல் பெற்ற ஏழைத் தம்பதிகளுக்கு உதவி
அஷ்டமி : இலவச பிரசவ உதவிகள்
நவமி : ஏழைக் குடும்பங்களில் அந்திமக் கிரியைகள், மயானச் செலவுகளுக்கு உதவிகள்.
(அல்லது) வெண்கலக் கிண்ணத்தில் எண்ணெய்த் தைலம் (செம்பருத்தி மருதாணி Etc.) ஊற்றிக் கிண்ணத்துடன் தானமளித்தல்.
தசமி : கன்றுடன் கூடிய பசுவிற்குக் கோ பூஜை, மாட்டுக்காரருக்கும் உதவிகள்.
ஏகாதசி : வாத்து வளர்க்கின்ற ஏழைகளுக்கு உதவிகள்
துவாதசி : உடற்பயிற்சி ஆசிரியைகளுக்கு உதவி
திரயோதசி : ஓடம், படகு, பரிசல் ஓட்டுபவர்களுக்கு உதவி.
சதுர்த்தசி : சணல், கோரை, கயிறு திரிக்கும் ஏழைகளுக்கு உதவி.
பௌர்ணமி/அமாவாசை : கூலிகள், வேலைக்காரர்களுக்கு உதவி.
பருவமடைந்த திதியைக் குறிக்காவிடில் அவரவர் பிறந்த திதியில் குறித்த தான தர்மங்களைச் செய்தல் வேண்டும்.

கோயில் கும்பாபிஷேகம்

SAND BLASTING ஐத் தவிர்ப்பீர்!
தற்போது கோயில் கும்பாபிஷேகத் திருப்பணியில் “SAND BLASTING” என்ற நவீன முறையில் கோயில் தூண்களைச் சுத்தம் செய்கின்ற முறை கையாளப்படுகிறது. ஒரு குழாயில் சிறு கூழாங்கற்கள், மணல், சிறு இரும்பு குண்டுகளை (iron balls) இரசாயன கலவைகளை நிரப்பி, மின்சார மோட்டாரின் உதவியால் இக்கலவையை அதிவேகமாகத் தூண்களில் பீறிட்டு மோதும் வண்ணம் செலுத்திட... இதுவே நவீன முறை!
இதன் விளைவுகளோ மிகவும் வேதனைக்குரியதாம். கோயில் தூண்கள், சுவர்களிலுள்ள தெய்வ சிற்பங்கள், தேவதா மூர்த்திகள், சித்தர்கள், மஹரிஷிகள், நாக தேவதைகள். அபூர்வமான சக்கரங்கள் உட்பட அனைத்தும் துல்லியமாகச் சிதைந்து விடுகின்றன. பல தேவதா மூர்த்திகளின் திருமேனியில் இந்த இரும்பு குண்டு கூழாங்கற்களை விசை கொண்டு பாய்ச்சினால் என்ன ஆகும்? சொல்லொணாப் பாவச் செயலன்றோ இது! தெய்வ மூர்த்திகளின் நேர்த்தியான கண்கள். நாசிகள் மூளியாகி விடுகின்றனவே!
கோயில்தூண்கள் வெறும் கல்தூண்கள் தானா? இல்லையில்லை! ஆயிரமாயிரம் மஹரிஷிகளும் சித்த புருஷர்களும், யோகியரும், ஞானியரும், ஜீவசமாதி பூண்டு இன்றும் அருள்வாரி வழங்கும் இடமல்லவா கோயில் தூண்களும் சுவர்களும்!
தூண்களிலும் தெய்வீகம்
எத்தனையோ மஹான்களும் சித்த புருஷர்களும் வடித்துத் தந்துள்ள யந்திரங்கள், சூட்சும சக்கரங்கள், பீஜாட்சரங்கள் பொருந்தியுள்ள கோலங்கள், ஜீவகளை ததும்பும் சிற்பங்கள், அமைந்திருக்கும் ஆயிரக்கணக்கான சிவ, நாராயண கணங்கள், தேவதைகள் உறையும், அருள்பாலிக்கும் இடம்தானே கோயில் தூண்கள்!
இறைவன் கோயில் மூலமூர்த்தி மற்றும் உற்சவ விக்ரஹங்களில் மட்டும்தானா உறைகின்றார்கள்? திருஅண்ணாமலையில் ஒரு கோயில் தூணில் அல்லவா கம்பத்திளையனாராக ஸ்ரீஅருணகிரி நாதருக்கு ஸ்ரீமுருகன் தரிசனம் தந்தான்! ஸ்ரீசரபேஸ்வரர், நாக மூர்த்திகள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநரஸிமஹர் போன்ற மூர்த்திகள் பெரும்பாலும் கோயில் தூண்களில் தானே எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
கோயில் தூண்களிலுள்ள இறைத் திருமேனிகளை கல், மண் கொண்டு அடித்து மூளியாக்கலாமா? இந்த SAND BLASTING  முறையில் கோயில் தூண்களும் சுவர்களும் வெண்மையாவது போல் தோன்றுகிறதே தவிர எத்தகைய சாபங்கள், இதனால் விளைகின்றன தெரியுமா? உண்மையான பக்தனுக்கு மூலமூர்த்தியும் கோயில் தூணில், சுவரில் உறையும் மூர்த்தியும் ஒன்றே!
 பாவத்தைச் சுமக்கிறீர்கள்!
 கும்பாபிஷேகம் என்பது ஆலயத்தின் புனிதத்தை மேம்படுத்துவதே தவிர SAND PLASTING என்ற முறையால் புனிதத்தைப் பாழ்படுத்தும் இக்கொடுமையான செயலைச் செய்வோரும் இதில் சம்பந்தப் பட்டவர்களும் கடுமையான சாபத்திற்கு உள்ளாவார்கள்.
எத்தனையோ மஹான்களைக் கொடூரப்படுத்தி துன்புறுத்தி வதைத்து இம்சித்து கிண்டல் செய்தோர்களின் குடும்பங்கள் இன்றும் பல தலைமுறைகளாக எண்ணற்ற துன்பங்களால் வாடுகின்றனர். தெய்வீகம் என்பது விளையாட்டல்ல. எனவே யுகயுகமாய் அமைந்துள்ள கோயில் தூண்களைப் பாழ்படுத்தலாகாது.
எண்ணெய் பிசுக்கு, நாள்பட்ட அழுக்கு இவற்றை நீக்கி சுத்தப்படுத்துவதற்கு கங்கணபுரிகாப்பு, தேகபலக்காப்பு, ஜலப்பூசுக் காப்பு போன்ற மூலிகைப் பொருட்களால் சுத்தம் செய்யும் காப்பு முறைகளைக் தக்க சற்குருமார்களிடம் கேட்டறிந்து செயல்பட வேண்டும். இவை பலகிரந்த நூல்களிலும் அகத்திய கிரந்த நாடிகளிலும் விளக்கப்பட்டுள்ளன.
கோயில் தூண்கள் சுவர்களிலுமுள்ள தேவ மூர்த்திகளைச் சிதைத்து மூளியாக்குவோர் பல அறுவை சிகிச்சைகள் கூடிய கொடிய நோய்களுக்கு  ஆளாவர். அறிந்தோ அறியாமலோ இவ்வாறு செய்திருந்தால் தக்க சற்குருவை நாடி உடனே பரிஹாரம் தேடுதல் வேண்டும்.
பெரியோர்களின் கடமை
ஆன்மீகப் பெரியோர்களும் பக்தர்களும், இவ்வித SAND BLASTING மூலம் கோயில் தூண்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடல் வேண்டும். மிகவும் பாவகரமான இச்செயலைப் பற்றி அறிந்திராமையால் இதுகாறும் நடந்திருந்தாலும் அதற்குத் தக்க சற்குருவை நாடிப் பிராயச்சித்தம் காண வேண்டும். இதையறிந்த பிறகாவது இத்தவறான முறையைக் கைவிட வேண்டும்.
தெய்வ நிந்தனைக்குரிய  “SAND BLASTING“ முறையைக் கோயில் திருப்பணியில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தலாகாது. பிரம்மஹத்தி ருணஹத்தி, ரணஹத்தி, சுக்ரூரஹத்தி தோஷங்கள் போல் இதனால் கடுமையான தோஷங்கள் உருவாகும். கோயில் திருப்பணிகளில் நவீன முறைகளைக் கடைபிடிப்பது தவறல்ல, ஆனால் அவற்றால் தெய்வீகச் சூழ்நிலைகள் பாதிக்கப்படலாகாது.

காலபந்தி தோஷங்கள்
வீட்டில் சதாசர்வ காலமும் ஏதேனும் குழ்ப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல், மன நிம்மதி இல்லாமை, குழந்தைகள், மனைவி, முதியோர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், இது பல குடும்பங்களில் நிலவுகின்ற சூழ்நிலையாகும் .எவ்வித காரண காரியங்கள் தெரியாமல் ஏற்படுகின்ற இவற்றிற்கு “கால பந்தி” தோஷங்கள் என்று பெயர்.
இந்த “கால பந்திதோஷங்களை” நிவர்த்தி செய்யும் வண்ணமாகவே கோயில்களில் “சந்தி மூலத் தூண்கள்“ அமைக்கப்பட்டுள்ளன. மூலமூர்த்தியின் பல கலைகள் கூடிய இறையம்சங்களைத் தாங்கி சித்த புருஷர்களும், மஹரிஷிகளும், யோகியரும், ஞானியரும் ஜீவசமாதி பூண்டு,அர்ச்சாரூபத்திலும், அரூவமாகவும் கோயில் தூண்கலில்/சுவர்களில் தோன்றி அருள்பாலிக்கின்றனர்.
தூண்களில் நிரவியிருக்கும் மூல மூர்த்தியின் ஆகர்ஷண சக்திகளை நேரடியாகப் பெறுவதற்கு ஒரு புனிதமான தேகம் தேவை. சாதாரண மனிதன் அத்தகைய உயர்ந்த ஆன்மீக நிலையில் தன்னை வைத்திருப்பதில்லை. ஆசாபாசங்களில் உழன்று தேவையற்ற தீயகர்ம வினைகளைச் சுமந்து அவன் வாழ்கின்றான்.
சித்த புருஷர்கள், மஹரிஷிகள் போன்ற இறையுள்ளம் படைத்த பரிசுத்தமான ஆன்ம ரூபங்கள், மனிதகுல நல்வாழ்விற்காக இறையாணைப்படி கோயில் தூண்களிலும் சுவர்களிலும் உறைந்து மூலமூர்த்தியின் இறை சக்திகளைத் ஏற்றுச் சிறிது சிறிதாக வாயுப் பரிணாமங்களாக அவற்றை பரவெளியில் தூண்களைச் சுற்றிப் பரப்புகின்றனர். இவை வானொலி, தொலைக்காட்சி ஒலி ஒளிக் கதிர்களைப் போல் பரவெளியில் விரவி நல்லெண்ணங்களை தார்மீக சிந்தனைகளை, சத்ய குணங்களை, தெய்வீக மனப்பான்மையை உருவாக்குகின்றன. எனவே தான் கோயில்களில் அங்க பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், முட்டிப் பிரதட்சிணம் போன்ற பலவகைப் பிரதட்சிணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சித்த புருஷர்களும் மஹரிஷிகளும் தங்களுடைய தபோபலனையும், புண்ய சக்தியையும் அருளாசியாக வழங்குகின்றனர். இத்தகைய இறைப் பெரியோர்களின் ஆசியால் தான் பந்தி தோஷங்கள் தீர்கின்றன.
இது மட்டுமின்றி தூண்களில் பிறை வடிவங்கள், அரைவட்டங்கள், முழுநிலவு, பூக்கோலங்கள், மிருகங்கள் போன்ற  வடிவங்களும், தோற்றங்களும் காணப்படும். இவை இரகசியமான பீஜாட்சரங்கள் பொதிந்த சக்கரங்கள். ஹோம குண்டங்கள், யந்திரங்கள் ஆகும். காலசந்தி தோஷத்தை இப்பிம்பங்களும் பீஜாட்சரசக்தியால் நிவர்த்தி செய்கின்றன.
 இவ்வாறு காலபந்தி தோஷங்களை நிவர்த்தி செய்யும் தெய்வீக சக்தி வாயந்த தூண்களையா பெயர்ப்பது?  யந்திரங்களிலும், சக்கரங்களிலும் ஆயிரமாயிரம் தேவதைகள் உறைகின்றன. ஸ்ரீவித்யா சக்கரத்தில் 43 கோடி தெய்வமூர்த்திகள்/தேவதைகள் உறைவதை வரிவஸ்ய இரகசிய நூல்கள் எடுத்து கூறுகின்றன.
இவ்வகையில் மனிதகுலத் துன்பங்களைத் தாங்கும் வண்ணம் கோயில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை SAND BLASTING  கொண்டு சிதைக்கலாகாது. கோயில் தூண்களைச் சுத்தம் செய்யும் முறைகளை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணலாம். ஆழ்ந்த நம்பிக்கையுடன் எவ்வித சுயலாப நோக்கமும் இன்றித் தியாக மனப்பான்மையுடன் தெய்வீகத்திற்குச் சேவை ஆற்று ஒரே நோக்கத்துடன் தக்க சற்குருமார்களை நாடினால் அவர்கள் நிச்சயமாக நல்வழிகாட்டத் தயாராகவே உள்ளனர்.
குரு ஒன்றே தெய்வம்!
மகான்கள் பல உண்டு. அவர்களுக்கு வேலைகளும் பல உண்டு... ஆகவே அந்த மகானிடம் செல்லலாமா? அல்லது இந்த மகானிடம் செல்லலாமா? என்று நம் மனது அலைபாயக் கூடாது... நமக்கு “குரு” கிடைத்து விட்டால். ... அனைத்து தேவர்களையும், தெய்வங்களையும், மகான்களையும் நாம் அவரிடத்திலேயே கண்டுவிடலாம்.... “ஒன்றாக” நிற்கும் குரு ‘பல‘வாகவும் விரிந்து நிற்பார். ஆகவே ‘ஒன்றை நாடு ஒன்றைப் பிடி என்றும் பிடி அந்த ‘ஒன்றே’‘ உன் ‘குரு’‘ உன்  தெய்வம் என்பதை நீ உணர்வாய்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam