ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அடிமை கண்ட ஆனந்தம் |
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!
பத்து மூட்டை பத்துமா?
சிறுவனும், பெரியவரும் இரண்டு பெரிய சாக்குப் பைகளைத் தோளில் போட்டுக் கொண்டு, வேகவதி நதிக் கரையில், (அப்போது இதில் நீர் நன்கு ஓடிய காலம்), வயல் வெளிகளில் சமித்துக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, சத்திர மண்டபத்தில் குவித்தனர். சாக்குகளை அவிழ்த்துக் கொட்டிய பிறகுதான் சிறுவன் பார்த்தான். சமித்துக்களின் கொள்ளளவு பத்து மூட்டைகளுக்கு மேல் தேறும் போல் இருந்தது! அனைத்தையும் தோளிலா சுமந்து வந்தோம்? சிறுவன் அசந்தே போனான்!
“என்ன இது, எதற்காக இவ்வளவு சமித்துக்கள்? ஏதாவது பிரம்மாண்டமான அகண்டகார ஹோமமா?”
ஆங்காங்கே சில எண்ணெய்க் கடைகளுக்குச் சென்று, செக்காலைகளையும் பார்த்து, இருவரும், பெரிய வட்டில்களில் சுத்தமான பசு நெய்யைக் கொண்டு வந்தார்கள். ஹோமம் என்றாலே மிகுந்த பவ்யத்துடன், வினயத்துடன், பக்தியுடன் வியாபாரிகளும், குடும்பத்தினரும், சமித்துகள், பசு நெய், ஹோம திரவியங்களைத் தாராளமாக வழங்கி, புனிதம் பீறிட்ட காலமது!
வேகவதி ஆறு
காஞ்சிபுரம்
மணி மூன்றில் மணியான ஹோமம்!
அவர்கள் தங்கி இருந்தது நல்ல பழமையான மடம்! காலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே இருவரும் எழுந்து அருகில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயக் குளத்தில் நீராடிட, பெரியவர் பஞ்ச கச்சத்துடன் சிவப் பழமாய் வந்து, சிறுவனுக்கும் ஒரு நார்ப் பட்டுத் துண்டைச் சுற்றி உடுத்தி விட…
அமைதி, ஆனந்தம் கொழிக்கும் பிரம்ம முகூர்த்த நேரத்தில், இருவரும் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்தார்கள். நல்ல பிரம்மாண்டமான ஹோமகுண்டம்! பெரியவர் அதில் 12 விதமான அக்னி லோகங்களை ஆங்கே அற்புதமான கிளை ஹோம குண்டங்களாக வடித்திருந்தார்!
பெரியவர் அமைத்திருந்த அற்புதமான அந்த ஹோம குண்டங்களின் அமைப்பை நன்கு கவனித்து வந்த சிறுவன்…
திடீரென்று திரும்பிப் பார்த்தால்…
பெரியவரைக் காணவில்லை! சிறுவன் சற்றே திகைத்து விட்டான்! அவனுக்கு ஒருவிதமான கிலி வந்து விட்டது!
‘இவ்வளவு சமித்து மலையை வைத்துத் தான் ஒருவனே ஹோமத்தை நடத்தியாக வேண்டும்!’ – என்று பெரியவர் ஆணையிட்டு விட்டால், அவனால் என்ன செய்ய முடியும்?
வாசலில் ஏதோ சப்தம் கேட்டிடவே… சிறுவன் எகிறிக் குதித்து ஓடினான்!
தலைமுறை தாண்டிய தகைமையான தணல்!
சிறுவன் வாசலுக்கு விரைந்தான்! அங்கே பெரியவர், ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் அகல் தீபத்தை வைத்துக் கொண்டு, கரங்களில் பவ்யமாக ஏந்தி வந்தார்!
“சின்ன காஞ்சீவத்துல ஒரு குடும்பத்துல பல தலைமுறையா அக்னி ஹோத்ரம் தினமும் பண்ணிக் கிட்டு வராங்க! பல நூறு வருஷமா வீட்டுல, தினமும் அக்னி ஹோத்ர பூஜை பண்ற குடும்பம்! காலம், காலமா அதே அக்னியை போஷிச்சுக் கிட்டு வர்றாங்க! ரொம்ப ரொம்பப் பவித்ரமான அக்னி! கண்ணுல தொட்டுக் கும்பிட்டுக்கோடா!”
சிறுவனுக்குப் பரம சந்தோஷம்!
“இதை வச்சுத்தான் நாம இன்னிக்கு ஹோமம் பண்ணப் போறோம்! இந்த மாதிரி, காலம், காலமா வளர்ந்து வர்ற அக்னியில ஹோம பூஜை செய்யறது ரொம்ப, ரொம்ப பாக்யம்! அதுவும் பிரம்மா யாகம் பண்ணின காஞ்சி பூமியாச்சே இது! ஒண்ணுக்கு ஆயிரமா ஹோம பலன்கள் வந்து சேரும்!”
ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம்
பிரம்ம யாக பூமியில் 60 நாழிகை ஹோமம்!
பிரம்ம முகூர்த்த நேரமான காலை மூன்றரை மணிக்கு ஹோமம் தொடங்கியது. வார்த்தார்கள், வார்த்தார்கள், சமித்துக்களையும், ஹோம சமூலங்களையும், பசு நெய்யையும் ஹோமாக்னியில் நாள் முழுதும், திறம்பட மந்திரங்களை ஓதியவாறு இருவரும் வார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆம், சற்றும் இடைவெளி, ஓய்வு எதுவுமே இல்லாது, முதல் நாள் மூன்றரை மணிக்கு ஆரம்பித்த ஹோமமானது, மறுநாள் காலை நான்கு மணி வரை தொடர்ந்து நடந்தது.
வெளியிலோ ஹோமத்தை வரவேற்பது போல், நல்ல மழை பெய்தது! பெருமழைச் சாரல் பெருகி வந்து, உள்ளே சாய்ந்து வீழ்ந்தாலும், ஹோமத்தை இடைவிடாது தொடர்ந்தார் பெரியவர். நடுவில் யார் வந்தார்கள், சென்றார்கள், எதுவும் சிறுவனுக்குத் தெரியாது.
(இடைவெளி இல்லாத) அகண்டகார சமுதாயப் பணியான அக்னி ஹோமம் என்றதுமே பலரும் திரளாக வந்து, ஹோமத்திற்கான பொருட்களை, திரவியங்களை நிறைய அளித்துச் சென்றனர். நாள் முழுதும், எந்த இடைவெளியும் இல்லாது, நடுவில் எதற்கும் எழுந்து செல்லாது இருக்கின்றோம் என்ற எண்ணம் கூட அவனுக்குள் எழவில்லை!
அகண்டகார ஹோமத்தில் அருள்வர மழை!
மறுநாள் காலை நான்கு மணிக்கு ஹோமத்தைப் பூர்ணாஹூதி அளித்து நிறைவு செய்தார் பெரியவர்!
“இந்தக் காஞ்சீபுரம், சிவமஹா ருத்ர பூமியப்பா! பிரம்மாவே நேரா வந்து ஒரு மண்டல காலம் தொடர்ந்து யாகம் நடத்தின பூமி! ருத்ர பூமிங்கறதுனால இந்த காஞ்சீபுரத்துல ஒரு நாள் முழுக்க, 60 நாழிகையும் ஒரு நாள் முழுக்க, 60 நாழிகையும் ஹோமம் நடத்தறது ரொம்ப ரொம்ப விசேஷம்! அதுவும் பல வருஷமா, தலைமுறை, தலைமுறையா வளர்ந்து வர அக்னி ஹோத்ர அரணிக் (அரசங்) கட்டை நெருப்பை, மூலாதாரமா வச்சுப் பண்றது மகா விசேஷம்!” நூற்றுக் கணக்கானோர் அக்னி குண்டத்தை வலம் வந்து சேவித்தார்கள்!
“நாள் முழுக்க அறுபது நாழிகையும், பசுநெய் ஊத்தி ஹோமத் தீ வளர்க்கறது பெரிய புண்ய காரியமாச்சே! ஆயுள்ல ஒரு தடவையாவது இந்த மாதிரி எல்லாரும் அகண்டகார ஹோமமா காஞ்சிபுரத்துல ஒரு நாள் முழுக்க நடத்தியாகணும்!”
பெரியவர் சற்றே நிறுத்தினார்.
ஸ்ரீபோடாசித்தர்
காஞ்சிபுரம்
“யாருக்காவது இந்த அக்னிப் பிரசாதம் வேணும்னா, விளக்கைக் கொண்டு வந்து ஏத்திக் கிட்டுப் போகலாம்! காலம் காலமா வந்த அக்னி, அதுவும் 60 நாழிகை முழுவதுமா நடந்த ஹோம அக்னி!” என்று பெரியவர் உரைத்தவுடன் பலரும் வீட்டிற்குப் போய் விளக்குகளைக் கொண்டு வந்து அபூர்வமான “அக்னி பிரசாதத்தைப்” பரமானந்தத்துடன் எடுத்துச் சென்றார்கள்!
இதுவன்றோ சித்தர்கள் பாணி! தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை! தாம் செய்வது யாவும் பிற ஜீவன்களின் நலன்களுக்காகவே!
“ஆமாம், நேத்து ராத்திரி நீ கனவுல, அக்னி லோகமெல்லாம் போய்ட்டு வந்தியே, அதெல்லாம் உண்மையிலேயே அக்னி பகவான் வசிக்கிற அக்னி லோகம்தாண்டா!”
சிறுவன் வியப்பு மலர விழித்தான்!
“நீ பார்த்த அக்னி லோகத்தோட பலாபலன் தான் இந்த அறுபது நாழி அகண்டகார ஹோமத்துல நீ இன்னிக்கு உட்கார்ந்தது! இது எல்லாத்துக்கும் உனக்கு அனுகிரகம் பண்ணித் தந்தவர் அந்த அக்னி லோகத்துச் சித்தர் போடா சுவாமிகள் தான்! இதை முதல்ல நல்லாத் தெரிஞ்சுக்கோ! இப்படித்தான் சித்தர்களோட ஆசீர்வாதத்தைப் புரிஞ்சுக்கணும்! கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஐஸ்வர்யம் கொட்டணும்னு நினைக்கக் கூடாது!”
“என்னே சக்தி வாய்ந்த வாக்கியங்கள்!” – சிறுவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது!
தப்பில்லாத தருணம் வருமா?
ஒரு முறை சிறுவன், பெரியவரிடம் மிகவும் சலித்துக் கொண்டான்.
“ஏன் வாத்தியாரே, இந்த ஜனங்க எல்லாம் தப்பு மேல தப்பு செஞ்சுகிட்டே இருக்காங்களே, இதை நிறுத்தறத்துக்கு வழியே கிடையாதா?”
பெரியவர் கலகலவென்று சிரித்தார்.
பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !
“ஏண்டா, தப்பே நடக்காம புண்ணிய பூமியா இருந்தா, நாங்க எதுக்குடா இங்க வரணும்? தப்பு நடக்காட்டி எப்படிடா உலகம் இயங்கும்? இன்னைக்கு நல்லது பண்ற அதே மனுஷன் நாளைக்குத் தப்புப் பண்ணலாம்! இதுவரைக்கும் தப்புப் பண்ணினவன், நாளைக்கே திருந்தி, ஆயிரம் பேரைத் திருத்தறதுக்கும் வழி செய்யலாம்! நல்லது, கெட்டது, தப்பு, ரைட்டு எல்லாமே கடவுள் லீலைதான் கண்ணு! நாமெல்லாம் ஆண்டவன் ஆட்டி வைக்கறபடி ஆடறோம், அவ்வளவுதான்!”
கலியுகமாயிற்றே! சிறுவனுக்கு இந்த பதில் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை!
“இருந்தாலும் .. வாத்தியாரே! தப்பு செஞ்சுட்டு, இதுவும் கடவுள் செயல்னு சொல்லி இப்பத்தி மனுஷங்க தப்பிச்சுடுவாங்களே!” என்று சொல்லியவாறு சற்றே இழுத்தான்.
பெரியவர் மேலும் தொடர்ந்தார்..
“தவறு பண்ணாதவனே இந்த உலகத்துல கிடையாதுடா! இப்ப என்னையே எடுத்துக்கோயேன்! அடியேன் ஒரு சமயம் தப்பு செஞ்சுருக்கேன்!”
சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்!
“என்ன வாத்தியாரே சொல்றே நீ! முக்காலமும் அறிஞ்சவன் நீ! அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாததுனாலத்தான் மனுஷன் தப்புப் பண்றான்! நீயோ பல ஆயிரம் வருஷம் காலத்துக்கு முன்னாடியும், பின்னாடியுமாப் போற சித்தரு! நீ கூடவா தப்பு செஞ்சிருக்கே?”
பெரியவர் சிறுவன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாதவராய், விவரிக்க ஆரம்பித்தார்..
பசித்திரு! நடந்திரு!
பெரியவர்… ஒரு முறை…. திருஅண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.!
பச்சைத் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் உபவாசத்துடன், உண்ணாநோன்புடன் ஆன நிர்ஜல ஏகாதசி விரத கிரிவலம்! எப்போதும் வயிறு நிறைய உண்டு கிரிவலம் வருவதைச் சொல்லி வந்தவர் அறுபது ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற “உவந்தபிரான் ஏகாதசி” ஆனதால் நிர்ஜல விரத கிரிவலம் கொண்டார். ஏகாதசி திதி நேரம் முழுதும் 60 நாழிகையும், உண்ணாமல், உறங்காமல் கிரிவலம் வந்து அண்ணாமலையார் ஆலய ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் (ஸ்ரீகிருஷ்ணன்) சன்னதியில் நிறைவுறுவது!
மிகவும் களைப்புற்றார் பெரியவர், நல்ல சரியான பசி! தொண்டை வறண்டு விட்டது! நல்ல தாகம்! எங்கேயாவது சிறிது அமரலாம் என்றால் ஏகாதசியும் அதுவுமாய் 60 நாழிகையும் தொடர்ந்து கிரிவலம் வருவது விசேஷம் என்பதால் எங்கும் அமர மனம் வரவில்லை! களைப்பினால் அரையடி, அரையடியாய் நடந்து, வலி, பசி, தலை சுற்றலைப் பொருட்படுத்தாமல், பல்லைக் கடித்துக் கொண்டு மிகவும் மெதுவாக ஆமை போல் கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.
ஓரிடத்தில்.. கிரிவலப் பாதை ஓரத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பெரியவரைப் பார்த்தவுடன், “தம்பி, தம்பி! இங்கே வாயேன்! ரொம்பக் கால் வலிக்குதுப்பா! கொஞ்சம் காலைப் பிடிச்சு அமுக்கி விடேன்!”
அந்த ஆள் வெளிப் பார்வைக்கு, ரொம்ப அழுக்காக, ஊர்சுற்றி மாதிரி இருந்தமையால், “இவனுக்கு நாம் கால் பிடித்து விட்டால், சிந்துபாத் கதை மாதிரி முதுகில் ஏறிக் கொள்வான்! நாமோ ஏற்கனவே ஆடிக் கிடக்கிறோம்!” என்று எண்ணிய பெரியவர்..
“அட போய்யா! நானே பாதி ரிப்பேராகிக் கிடக்கேன்! எனக்கே யாராவது கால் அமுக்கி விட்டாத் தேவலைதான்! இதுல நீ வேற! நேரம், காலம் தெரியாம உயிரை வாங்குறியே!” என்று ஆயாசத்தில் சொல்லி விட்டார்.
அவ்வளவுதான், அங்கே…. (ஆனந்தம் தொடரும்)
புனிதமான குடும்ப வாழ்க்கை |
கலியுகத்தில் சிறப்புடையது உத்தம இல்ல தர்மம்!
தற்காலத்தில் பலரும் தெய்வீகம், ஆஸ்ரம சேவைகள் என்றாலே இல்லறத்தை விட்டு விலகி வாழ்தல் என்று அஞ்சி ஒதுங்குகின்றனர். கலியுகத்தில் சந்நியாசியாக, பிரம்மச்சாரியாக, துறவற வாழ்க்கை கொள்வது மிக மிகக் கடினம். ஏனெனில் பிரம்மச்சரியம் என்பது உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றாலும் காமத்தைத் தீண்டாது வாழ்வதாகும் காமம் என்றால் ஆசை, விருப்பம் என்றும் பொருளுண்டு.
ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை
எனவேதாம் கலியுகத்தில், கரணம் தவறினால் பிறவிச் சுழல் என்ற வகையாக உள்ள கடுமையான பிரம்மச்சரிய வாழ்வை விட, இல்லற தர்மமே, குடும்ப வாழ்க்கையே உத்தம தெய்வீக நிலைகளை அடைய, மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது, சிறப்புடையது என நம் பெரியோர்கள் பகன்றுள்ளனர். தக்க சற்குருவைப் பெறவும் இல்லற தர்மமே துணை புரியும்.
பணப் பிரச்னைகள், நோய்கள், கல்விச் செலவுகள், மனஸ்தாபங்கள், வீட்டு வாடகை, இதர செலவினங்கள் இவற்றின் ஊடே குடும்பத்தை நடத்திச் செல்வதுடன், தெய்வீகத்தோடு ஒட்டிய வாழ்க்கையையும் அடைய, இல்லற தர்மத்தில் தார்மீகமான வழிமுறைகள் நிறைய உண்டு.
கணவன் மனைவி புரிந்து வாழும் இல்லறம்!
முதலில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ வேண்டும். இதற்குக் குறைந்தது 25 வருடங்கள் ஆகும். நான்கைந்து ஆண்டுத் திருமண வாழ்விலேயே பரிபூரண மன ஒற்றுமை வந்து விடாது. கணவனே கண் கண்ட தெய்வம் என நன்கு உணர்த்தும் பாரதப் பண்பாட்டுக் குடும்ப வாழ்க்கை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது! மற்றும் உமையாள்புரம் குங்கும சுந்தரி, நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை அற்புதமான குடும்ப வாழ்க்கையை நல்கும் அம்பிகையர். அனைத்துப் பெண்களும் தம் வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய ஸ்ரீஅமிர்தாம்பிகை அம்பிகை!
ஸ்ரீவராஹி அம்மன்
சுவாமிமலை
கணவனிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப, மனைவி வாழ்ந்திடில், இந்த ஆழ்ந்த நம்பிக்கையே கணவனை நன்கு திருந்தி வாழச் செய்யும், சதுர்த்தி திதி தோறும் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரை வழிபட்டு வர, எத்தகைய தீய வழக்கங்களும் அகல நல்வழி பிறக்கும்.
குடும்ப வழிபாடு ஒற்றுமை தரும்!
கணவனும், மனைவியிடம் உண்மையான புனிதமான அன்பைச் செலுத்திட வேண்டும். மாதம் ஒரு முறையேனும் குடும்பத்தோடு அருணாசல கிரிவலம், செவ்வாய், வெள்ளிதோறும் குடும்பத்தோடு அம்பிகை தரிசனம், மிருகசீரிஷ நட்சத்திர நாளில் குலதெய்வ, எல்லை தெய்வ வழிபாடு, அனுஷ, துவாதசி நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி தரிசனம், ஏகாதசியில் பெருமாள் தரிசனம் போன்றவற்றை, குடும்ப சகிதம் ஆற்றி வர நல்ல மன ஒருமைப்பாடு ஏற்படும். சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீவராஹி அம்பிகையை வழிபட்டு வர, தம்பதியரிடையே நல்ல அன்புப் பரிணாமம் உண்டாகும்.
மனவேறுபாடு அகற்றும் சந்திர வழிபாடுகள்!
கணவன் மனைவி இடையே பலத்த மனவேறுபாடுகள் இருந்தால் திங்கள் தோறும், சந்திர ஹோரை அல்லது குருஹோரை நேரத்தில் ஆலயத் தல விருட்சத்திற்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு வழிபட்டு வருதல் வேண்டும். மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில் ரோஹிணி, கார்த்திகை தேவியர் சமேதராய் ஸ்ரீசந்திர பகவான், மிகவும் அபூர்வமாக, தனித்து விமானம் கொண்டு அருளும் சன்னதியில், திங்கள் அன்றும், ரோஹிணி , ஹஸ்தம், திருவோணம், கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வழிபட்டு வர, கணவன், மனைவி இடையே எத்தகைய மன வேறுபாடுகள் இருப்பினும் மறைந்து, குடும்ப வாழ்வில் சாந்தம் ஏற்படும். அற்புதமான, பலரும் அறியாத சந்திர ஸ்தலம் இது!
மனைவி அதிகமாகப் பேசுவதால் பிரச்னைகள் வருமாயின், திங்கள் தோறும் மனைவி நாள் முழுவதும் மௌன விரதம் அல்லது குறைந்தது 12 மணி நேரமாவது மௌன விரதம் இருந்து, மௌன சக்திகள் நன்கு பரிமாணம் பெற, இதன் பிறகு குறைந்தது 12 மணி நேரமேனும், அன்று பேசும் வார்த்தைகளில் உண்மை, புனிதம், தெய்வீகம் உறையும்படி வாக்கியங்களை அமைத்துக் கொண்டு பேச வேண்டும். கணவன், அதிகமாகப் பேசி பிரச்னைகள் எழுமாயின், வியாழனன்று மௌன விரதம் பூண்டு குளிகை நேரத்தில் பைரவருக்கு பஞ்சுமாலை அணிவித்து வழிபட்டு வரவேண்டும்.
ஸ்ரீரோகிணி கார்த்திகை சமேத
சந்திரபகவான்
சந்திரசேகரபுரம்
தீய வழக்கங்கள் அகல
புகை பிடித்தல், மது, சூதாடுதல் போன்ற தீய வழக்கங்கள் கணவனுக்கு இருந்தால் ஆலயங்களிலும், இல்லங்களிலும் திருவெள்ளறைச் சிவாலயத்திலும், அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வழிபட வேண்டும். திருச்சி அருகே திருவெள்ளறைப் பெருமாள், ஆலயம் முழுதும் நிறைய சாம்பிராணி தூபமிட்டு, உத்தராயண, தட்சிணாயணப் படிக்கட்டுகளுக்குப் படி பூஜை செய்து வழிபடுதலால் குடும்பத்தில் சுமுகம் ஏற்படும். நல்ஒழுக்க நியதிகள் உண்டாகும்.
உறவினர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு, குடும்ப அமைதி பாதிக்கப்படுமானால், குலதெய்வ வழிபாடு நெடுங்காலமாகப் பாக்கியாக உள்ளது எனப் பொருள். ஆண்டிற்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டைக் குடும்ப சகிதம் முறையாக மேற்கொள்ள வேண்டும். மதுரை அருகே கள்ளிக்குடி கிராம ஸ்ரீகுலசேகரப் பெருமாள் வழிபாடு குலதெய்வ பிரார்த்தனைக் குறைபாடுகளை நீக்கும்.
பணப் பிரச்னைகள் குடும்ப அமைதியைப் பெரிதும் பாதிக்கக் கூடியவை. தினமும் எறும்புகளுக்கு உணவிடல், தினசரித் தர்ப்பணம், புனிதமான நாட்களில் பசு, கன்றினை நீராட்டி, மஞ்சள் ,குங்குமம், இட்டு வழிபடுதல், பசு, எருமைக்கு அகத்திக் கீரை அளித்தல், ஜாதி, இன பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு மெட்டிகளைத் தானமாக அளித்தல், அனுஷ நட்சத்திரம், துவாதசி நாட்களில் விரதம் ஆகியவற்றைக் கடைபிடித்து வர, பணச் சுமை தணியும். திருச்சி அருகே திருநெடுங்களத்தில் அபூர்வமாக அமைந்துள்ள அமர்ந்த கோல ஸ்ரீவரதராஜரைப் புதன் தோறும் வழிபட்டு வர, நல்உதவிகள் கிட்டி நஷ்டங்கள் தீரும்.
கல்லூரிப் பருவப் பிள்ளைகள் தினமும் தியாக, யோகப் பயிற்சிகளில் ஈடுபடச் செய்திடுங்கள், பெரிய பிள்ளைகளுடன், திருவாதிரை, பௌர்ணமியில் திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்திட, இவர்கள் வாழ்க்கை நங்கு அமைய உதவும். இவை யாவும் இல்லறத்தை ஒட்டிய மிகவும் சக்தி வாய்ந்த இறை வழிபாடுகளாகும்.
திருப்பாற்கடல் அத்தி ரங்கர் |
திருப்பாற்கடல் அத்தி ரங்கர்
திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!
ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:
விஷ்ணுபதி புண்யகாலத் தலம் மிகவும் அபூர்வமான அத்திமர ஸ்ரீரங்கநாத வடிவு திருப்பாற்கடல் அத்திர ரங்கர் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயம்
சென்னை – காவேரிப்பாக்கம் – திருப்பாற்கடல் – வேலூர் மார்கத்தில் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் திருப்பாற்கடல் உள்ளது.
பொதுவாக, பூலோகத்தில் பன்னிரண்டாயிரம் ஸ்ரீரங்காநாத (கல்) விக்ரகங்களுக்கு மூத்ததாக ஓர் அத்தி (மரத்தாலான) ரங்கர் தோன்றுவார். 12000 அத்தி ரங்கர்களுக்கு ஒரு தாரு (அத்தி) ரங்கர் தோன்றுவார். தாரு என்பது பாவன வைகுண்ட நந்தவனத்தில் காணப் பெறும் தேவசுத ஸ்வர்ணப்ரகாச அத்தி விருட்சச் சிலாவாகும். அத்தி வரதர், அத்தி ரங்கர், அத்தி மாதவர் என அத்தி விருட்சச் சுடர்ப் பெருமாள் மூர்த்திகளும் உண்டு.
அத்தி ரங்கரில் ஆதி மூல ரங்கரே, காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீரங்கநாதர்!
“அத்தியில் மூத்ததாய்
உத்தமத் தோத்தாத்ரியன்
எத்திசைத் திருமாலப்பர்
இத்தரைத் திருப்பாற் கடலமுதன்!”
இங்கு மூலவரான ஸ்ரீரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீக்ஷீராப்திநாதன்), அத்தி மர வடிவினராய், ஸ்ரீரங்கநாயகித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். மிகவும் தொன்மையான ஆலயம்! விகனஸ மகரிஷி தந்த ஆகம முறையில் பூஜைகள் திளைக்கும் நல்ஆலயம்.
சக்தி வாய்ந்த சப்தக விமானம்
இவ்வாலயத்தின் சப்தக விமான தரிசனம் மிகவும் சக்தி வாய்ந்ததாம். ஓங்காரத்தில் சரத்சாரங்கம் என்ற ஒரு வகை விசேஷமான பீஜ சப்தங்கள் உண்டு. அத்தி மரச் சிலாவில் (பலகை) மட்டுமே எழும் ஓங்கார சப்தமிது! இவ்வகை சரத்சாரங்க ஓங்கார சக்திகள் நிறைந்த சப்தக விமானம் கொண்ட ஆலயம்! சற்குரு மூலம் பெற்ற மந்திர உபாசனைகட்குப் பரிபூரண சத்சித்திகளைத் தரவல்லதே சப்தக விமானமாம்! அதாவது இவ்விமான அந்தரத்துள் ஓங்காரத்தின் சரத்சாரங்க பீஜாட்சர வேத ஒலிகள் எப்போதும் பரிணமித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் தமக்கு உபதேசிக்கப் பெற்ற மந்திரங்களை இங்கு ஓதுதலால் மந்திர சத்சித்திகள் நன்கு கனியும்.
சாமவேத கானத்தில் வல்லமை பெற்ற சாரங்கப் பறவைகளின் மந்திர ஓதலின் ஊடே, விஸ்வதாரர்கள், இவ்வகை சப்தக விமானங்களை, இறையாணையால் பூவுலகிற்குக் கொணர்கின்றனர். சப்தக விமான தரிசனப் பலன்களாக, வாக்சக்திகள் விருத்தியாகும். உபன்யாசம், சொற்பொழிவு, புனிதமான ஆசிரியப் பணி, பேச்சுத் துறையில் இருப்பவர்கள், சனிக்கிழமை தோறும், இவ்வாலயத்தில் சப்தக விமான தரிசனம் பெற்று, அத்தி ரங்கரை வழிபடுதலால், வாக்வன்மை நன்முறையில் விருத்தி ஆகும்.
சப்தரிஷிகளும், ஒரு யுகத்தில் சூறாவளியில் சிக்குண்டு, கரை ஏற முடியாது. நித்திய வேத மந்திரக் கடமைகளை ஆற்றும் பணிகளைச் செய்ய இயலாது தவித்த போது, இவ்வாலய சப்தக விமானத்தில் எழுந்த சரத்சாரங்க ஓங்கார சப்த நாளங்கள்தாம் அவர்களை ஈர்த்திடவே, அவர்கள் சப்தக விமான தரிசனம் பெற்றுக் கரை சேர்ந்தனர். சப்தரிஷிகளையும், ஒரு யுகத்தில் (மாயா) வெள்ளத்தில் இருந்து காத்துக் கரை சேர்த்தமையால், இவ்வூருக்குத் (திருக்)கரைபுரம் என்ற பெயரும் உண்டு. இது நிகழ்ந்ததும், ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்!
திருப்பாற்கடல்
அன்றிலிருந்து அந்தந்த யுக சப்த ரிஷிகளும், சப்தமித் திதி தோறும் இங்கு வேதமோதி வழிபடும் திவ்யத் தலமாகத் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் பொலிகின்றது! இரண்டு பட்சங்களின் (அமாவாசை, பௌர்ணமி) ஏழாம் திதி நாளாகிய சப்தமித் திதி நாட்களில் இங்கு,
“அத்தி ரங்க அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்!
இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்!”
“ரங்கபால ரங்கநாத ரங்கமன்ன பாவனம்
ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கபாஷ்ய ராகவம்!”
என்ற சப்த ரிஷிகள் அளித்துள்ள ஸ்ரீரங்க காருண்ய மாமந்திரத் துதியை ஓதியவாறு, ஆலயத்தை ஏழு முறை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து, ஆலயத்தின் சப்தக விமான தரிசனத்துடன் வழிபடுவோர்க்கு, பழி, அவச்சொல், பொய்மையால் விளைந்த பெரும் துன்பங்கள் நீங்கிடும், தேவையற்ற அவச்சொல், வீண் பழித் துன்பங்களில் இருந்து காக்கப் பெறுவர். இழந்த சொத்து, மானம், கௌரவத்தை முறையாக மீட்டுத் தரவல்ல ஜீவப்ரகாசத் தலமே திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்!
மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் நல்விரதம் பூண்டு, இங்கு வழிபட்டு, துளசித் தீர்த்தம் அருந்தி, விரத நிறைவு செய்வோர்க்குக் காரிய சித்திகள் நன்கு கனியும். பலவிதமான விரதங்களை மேற்கொண்டும் மன நிறைவைப் பெறாத ஸ்ரீகண்வ மகரிஷி, இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தோடு கூடி வந்த மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்து, பாற்கடற் பரந்தாமனின் திவ்ய தரிசனத்தை இங்கு அத்தி ரங்கராகப் பெற்று, சமஷ்டி விரத மகாபலன்களைப் பெற்றார். அதாவது அனைத்து விரதங்களின் மகாபலன்களைத் தரவல்ல அத்தி ரங்கத் தலமென அறிந்து இங்கு சகல (சமஷ்டி) விரத பலன்களையும் கண் கூடாக அடைந்து ஆனந்தமுற்று புண்ய விரத க்ஷேத்திரமாக அனைவர்க்கும் உணர்த்தினார். இது நிகழ்ந்ததும் ஒரு விஷ்ணுபதிப் புண்ய கால வைபவத்தில்தாம்!
சித்ரகுப்த மூர்த்தி கருணை பொழியும் தலம்
ஜீவன்களின் கர்ம வினைக் கணக்குகளைத் துல்லியமாக எழுதி வரும் சித்ரகுப்த மூர்த்திக்கு, யுகங்களில் உத்தம தர்மநிலைகள் மாற, மாற ஜீவன்களின் தீவினைக் கணக்குகளே பெருகியமையால், அவற்றை எழுத வேண்டிய நிலையில், அவருக்கு மிதமிஞ்சிய கபாலச் சூடு ஏற்பட்டு அல்லலுற்றார்.
அப்போது அவர் ஸ்ரீபிரம்மாவிடம் முறையிடவே, பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தில் கூடிய விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், பிரம்ம மூர்த்தியே அவரை இங்கு ஈர்த்து வந்து, ஸ்ரீரங்கநாதருக்கு இட்ட தைலவடியை, பிரசாதமாகச் சித்திர குப்தரின் சிரசில் இட்டார். இதனால் பரமானந்த அனுபூதி பெற்ற சித்திர குப்தர், இதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், திருப்பாற்கடலில் ஸ்ரீரங்கநாதரை, உண்மையான பக்தி நிலையுடன் தரிசிப்போர்க்கு, கர்ம பரிபாலனத்தில் தார்மீக ரீதியான நன்மைப் பரல்களை இன்றும் அளித்து வருகின்றார். அவர்களுடைய தீவினைக் கர்மங்களும் சித்ரகுப்தரால் தணிக்கப்படுகின்றன. மேலும் கர்மவினைக் களைவு வழிமுறைகளும் அவர்களுக்குக் கிட்டுவதால் பலவிதமான பாவங்களும் எளிதில் இத்தலத்தில் அகல்கின்றன.
விதிமாறும் பெருமாள் கதித் தலம்!
இங்கு பக்தியுடன் அத்தி ரங்கரை தரிசித்தலால் சித்ரகுப்தர் தீவினைக் களைவிற்கு வழிவகுத்தல் கலியுகத்தில் பெறுதற்கரிய பாக்கியமன்றோ!
ஓவ்வொரு மாத ரேவதி நட்சத்திர நாளிலும், குறிப்பாக, பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கநாதரைப் பக்தியுடன் கண்ணீர் மல்கச் சேவிப்பதால், அவரவர் விதிக் கணக்காய், சித்திரகுப்தர் எழுதி வைத்த பாவ உறைகள் கரைந்திட, சித்திர குப்த மூர்த்தியே விசேஷமாகப் பிரார்த்திக்கின்றார். இவ்வாறு திறம்பட அத்தி ரங்க பக்தி கூடிடின், கர்ம பரிபாலன நியதிகளையே, விதிகளையே மாற்றவல்ல அதியற்புதத் தலம்!
சத்தியம் கொழிக்கும் தலம் நீதித் துறைக்கான சீர்மிகு தலம்!
மகாராஜா அரிச்சந்திரன் இங்கு ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வழிபட்டு சத்தியத் தன்மையில் இருந்து தான் பிறழாதிருக்கப் பெரும் வரங்களையும், இங்கிருந்து விண்ணில் சித்தஜோதி நட்சத்திர தரிசனத்தையும் மூன்றாம் பிறை நாளில் பெற்றமையால், சத்யவ்ரதம் என்ற பண்டைய காலப் பெயரும் இந்த ஊருக்கு உண்டு!
அரிச்சந்திரனுக்கு ஸ்ரீரங்கநாதருடைய அருந்தைலத்தை, மெய்த்தைலமாக ஒரு விஷ்ணுபதிப் புண்யகாலத்தில், சத்யபாஷாட மகரிஷியே இத்தலத்தில் அருட்பிரசாதமாக வழங்கியமையால், அக்னியும் தீண்ட இயலாத ஜோதிப் பிரகாச சத்தியத் திருமேனியை அரிச்சந்திரன் பெற்று இன்றும் விண்ணுலகில் சத்திய லோகத்தில் பிரகாசிக்கின்றார். சித்ரகுப்த சக்தி பரிபூரணிக்கும் தலமாதலால், நீதி தேவதைகள் பூஜித்துப் பரிமளிக்கும் தலமாகவும் இது விளங்குகின்றது!
எனவே, சத்தியத் தன்மை பிரகாசிக்க வேண்டிய நீதித் துறையைச் சார்ந்த அனைவரும், குறிப்பாக நீதிபதிகளும், வக்கீல்களும் சனிக்கிழமை தோறும் இங்கு வழிபட்டு, நீதி தேவதைகளின் நல்வரங்களைப் பெற வேண்டிய தலம்!
எத்தகைய குற்றவாளிகளும், பாவ வினைகளைச் செய்தோரும் இங்கு மனமுருகித் திருந்தி வாழச் சங்கல்பித்து வேண்டிடில், நல்வழி காட்டும் அற்புதத் தலம்!
ஸ்ரீராமரின் ரவிகுல தெய்வ மூர்த்தியே ஸ்ரீரங்கநாதர்!
ஸ்ரீராமரின் சூரிய குலத்தார் பூஜித்த, (அவர்களுடைய) ரவி வம்ச குலதெய்வ மூர்த்தியே ஸ்ரீரங்கநாத மூர்த்தி ஆவார்! ஸ்ரீராமர் சிறுவயதிலேயே அனைத்துவிதமான தர்ம ராஜ்ய நெறிகளுடன், ராஜ்ய பரிபாலன அறவாழி நியதிகளுடன், ஞானப் பாடங்களையும் கற்றுத் தெளிந்தவர். வசிஷ்டரின் நேரடி யோகவழி முறைகளால், தம் மானுட சரீரத்திலேயே, இளவயதிலேயே பிரம்ம ஞான நிலையை அடைந்து, வசிஷ்டரிடம், “சற்குருநாதா! இவ்வளவு கலைகளையும் தாங்கள் எனக்கு அளித்து, பிரம்ம ஞானநிலையையும் பெறச் செய்து, ராஜ்ய பாரத்தையும் சுமக்கச் செய்தால் இது எவ்வாறு சாத்தியமாகும்? அடியேனால் ஜனகமகாராஜா போல விதேக முக்தி ஞானத்துடன் மானுட சரீரத்தைத் தரிக்க இயலுமா? அடியேன் தங்களுடைய ஆசியால் இப்போது கொண்டிருக்கும் அரிய (பிரம்ம) ஞான நிலையிலேயே இருந்து விடுகின்றேனே!” என உரைத்தார்.
பரபிரம்மமான ஸ்ரீராமர் அறியாதது ஏதும் உண்டா என்ன? எனினும் தாம் கொண்ட மானுட சரீர இலக்கணங்களுக்கு ஏற்ப ஸ்ரீராமர் நன்கு திறம்பட ஒழுகினாரன்றோ! அப்போது, வசிஷ்டரும் ஸ்ரீராமருக்கு அவருடைய அவதார மேன்மைகளையும், மானுட சரீரத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறி, ஸ்ரீராமருக்கு ஞான வாசிஷ்டம் அல்லது யோக வாசிஷ்டம் எனப்படும் அற்புதமான, எளிமையான அற போதனைகளை அளித்திட்டார்.
ஸ்ரீராமர் பெற்றளித்த பிரம்ம ஞான நிலை!
வசிஷ்டர் அளித்த அறிவுரையின் படி, எளிய யோக வாசிஷ்ட நிலைகளை அடையும் முன், ஸ்ரீராமர், ஒரு முகூர்த்த காலம் தாமிருந்த பிரம்ம ஞான நிலையிலேயே திளைத்திட வேண்டி, தாம் வழிபட்டு வந்த, தம் குலதெய்வமான ஸ்ரீரங்கநாத மூர்த்தியிடம் பிரார்த்தித்தார். அதன்படி ஸ்ரீரங்கநாதரின் திருவருட்புலனில், அப்போது இளவயதில் திளைத்திருந்த ஸ்ரீராமரின் பிரம்ம ஞானத் திருவதனம், ரகு குல வம்ச குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் பொதிந்தது.
அதாவது, ஒரு முகூர்த்த நேரம் ஸ்ரீரங்கநாதரின் திருப்பார்வையில் ஸ்ரீராமரே விரும்பியபடி, ஸ்ரீராமரின் பிரம்ம ஞான நிலைச் சாரல் ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் பதிவாகியது.
அவதாரத்துள் அவதார ஞானப் பொலிவு!
ஸ்ரீராமரும் பின்னர், தாம் ராஜ்ய பாரத்தை ஏற்க வேண்டிய நிலையில், ஒரு முகூர்த்த நேரம், தம் குலகுருவாம் ஸ்ரீவசிஷ்டரின் ஆக்ஞைப்படி, தாம் லயித்திருந்த அந்த பிரம்ம ஞான நிலையில் இருந்து பிரியாப் பிரிவு கொண்டார். இதனை அவதாரப் பெருநிலையில் தாமே ஆக்க இயலும்! ஸ்ரீராம அவதாரமே ஜீவன்களுக்கு பிரம்ம ஞானநிலை அளிக்கத் தோன்றியது தாமே!
எனினும் அரசாட்சி நிலைகளைக் காணும் முன், தாம் பெற்ற பிரம்ம ஞானநிலையை வருங்காலத்தில், வேண்டும் போது, ஸ்ரீரங்கநாதரிடம் இருந்தே மீண்டும் கண்டு ஆனந்திக்கும் பொருட்டு, ஸ்ரீராமர், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் அத்தி இலைகளை பரப்பி, அதில் சரயு, கங்கை, மந்தாகினி, பாகீரதி, காவிரி, யமுனா, ஆகாச சரஸ்வதி (இதுவே வேகவதி ஆறு, திருப்பாற்கடல், காஞ்சியில் ஓடுகின்ற பாலாற்றின் உபநதி) ஆகிய ஏழு தீர்த்தங்களைத் தெளித்து, வெற்றிலையில் மஞ்சள் பதுமை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
இவ்வகையில், ஸ்ரீரங்கநாதரே போற்றும் வண்ணம், ஒரு முகூர்த்த நேரம், ஸ்ரீராமருடைய பிரம்ம ஞான நிலை அவருடைய மானுட ரூபத்தில் பிரகாசித்தது. இதில் திரண்ட பரம்பிரம்ம, பரமானந்த பரதத்துவ சக்திகளால், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் ஸ்ரீராமர் பரப்பிய அத்தி இலைகளும், தண்டுகளும் பூரித்து, அதன் பல அம்சங்களும் வைகுண்டத்தில் இருந்த தர்பாஜன தாருக அத்தி மரச் சிலாவில் ஐக்கியமாயின! ஏனையவை பிரபஞ்சத்தின் பிரசித்தி பெற்ற தாரு வகை அத்தி மரங்களாயின! பிறகு, ஸ்ரீராமர் மரவுரி தரித்துக் கானகம் ஏகியபோது, முதலில் அத்தித் தழைகளையே மரவுரியாகக் கொண்டிட்டார்.
ஸ்ரீராமர் பரமானந்த பிரம்ம நிலை கொண்டிட்ட ஆனந்த சாகர நிலையை ஸ்ரீரங்கநாதரே தர்பாஜன தாருக அத்தியில் செறிவு பெறக் கொண்டார். மேலும் பிரபஞ்சத்தில் பல இடங்களில் தம் அத்தி அர்ச்சங்களையும் ரங்கநாதராக, வரதராஜராக, மாதவராக, சுயம்பாய் அர்ச்சப் பரிபாலனம் கொண்டிட்டார். இத்தகைய அற்புதமான வைபவங்களும் அந்த யுக விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் தாம் நிகழ்ந்தன!
அத்தி ரங்க தரிசனம் அனைத்தையும் தரும்!
திருப்பாற்கடலில் உள்ளது தர்பாஜன தாருக அத்தி ஸ்ரீரங்கநாத மூர்த்தியாகும். காஞ்சீபுரம் அத்தி வரதர் போல அத்தி ரங்கம் எனச் சித்தர்களால் போற்றப்படும் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாத மூர்த்தமானது, மானுடர்களுக்கும், சகல ஜீவன்களுக்கும், பக்தியுடன் கண்களால் தரிசித்தாலேயே பரப்பிரம்ம ஞான தரிசனப் பலன்களைத் தரவல்லது!
ஸ்ரீராமர் பெற்றிருந்த அற்புதத் தவ நிலைகளை நல்வரங்களாக, ஸ்ரீராம பக்திப் பிரசாதமாக அளிக்க வல்லது. சித்தர்களுக்கும், பிரம்ம ரிஷிகளுக்கும் கூட பிரம்ம ஞான நிலையைத் தரவல்லது!
பார்த்தால் (ஞானப்) பசி தீர்க்கும் பரந்தாமத் திருக்கோலம்! கண்டால் போதும் கலியுகத்தில் நல்வரங்களைப் பொழிந்திடும் திருத்தலம்! கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்திக்கான அபிஷேக, ஆராதனைகளை சக்திகளுடன், அத்தி ரங்கனின் தரிசனக் கோலமே அனைத்து வழிபாட்டுப் பலன்களையும் தரவல்லது என ஸ்ரீஅகஸ்திய மாமுனியே அருளிச் செய்த அமுதனை, அரங்கநாதராக நமக்குத் தந்திருக்கும் திருத்தலம். அருளார்ந்த நல்வரங்களைத் தரிசனப் பலன்களாக பெற்றிடுவீர்!
பிரம்ம மூர்த்திகள் ஐக்கியமாகும் தாருகா அத்திச் சிலா!
பலகோடி பிரம்ம மூர்த்திகள் தோன்றி மறைந்துள்ளனர். அனைவர்க்கும் மூலமான ஆதிமூல பிரம்ம மூர்த்தியே பெருமாளின் நாபியில் உற்பவித்தார். பல கற்பங்களிலும் தோன்றுகின்ற பிரம்ம மூர்த்திகள், தம் அருட்பணி நிறைவேறிய பின், இறையருளால், திருமாலின் நாபியிலேயே ஐக்கியமாகும் முன் ஸ்ரீரங்கநாதரின் ஆணைப்படி தர்பாஜன தாருகம் எனப்படும் அத்தி விருட்ச ஸ்வர்ணப் படிவில் ஐக்கியமாகின்றனர்.
அனைத்துத் கோடி பிரம்ம மூர்த்திகளும் இந்த தர்பாஜன தாருகத்தில் ஐக்கியம் கொண்டமையில், இது கோடி சூர்ய ஸ்வர்ணப் பிரகாசத்துடன் ஜ்வலிக்கின்றது!
ஒரு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், ஸ்ரீமகாவிஷ்ணு இந்த தர்பாஜன தாருகத்தை, அத்தி அர்ச்சமாய் உற்பவித்து, இதில் ஸ்ரீரங்கநாதராய்ப் பரிமளித்தார்.
எனவே தற்போது திருப்பாற்கடலில் உறையும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் தாரு அத்தியில் சுயம்புவாய் உற்பவித்தார். காணக் கிடைக்காத மூர்த்தி!
வைகுண்டத்தில் பலகோடி பிரம்ம மூர்த்திகள் ஐக்கியப் பிரகாசம் கொண்ட கற்பதாய தாரு அத்தி விருட்சங்கள் உண்டு. இதனைக் கண்டு தரிசிக்கவே அதியற்புதத் தவ சக்திகளைப் பூண்டிருக்க வேண்டும்.
வைகுண்டத்தை ஒட்டி விரஜா முக்தி நதிப் பிரவாக சமுத்திரம், ஜனமுக்திச் சமுத்திரம், விதேக முக்திச் சமுத்திரம், மந்த்ர முக்திச் சமுத்திரம், பிரபஞ்ச முக்திச் சமுத்திரம், பரமார்க முக்திச் சமுத்திரம் போன்ற மிகவும் முக்கியமான சில வகை முக்திச் சமுத்திரங்கள் உண்டு.
தாரு அத்தி மூர்த்தியைத் தரிசிப்போர்க்கே இம்முக்திச் சமுத்திரங்களின் தரிசனம் கிட்டிடும். பாற்கடல்களிலும் பஞ்சாக்னி க்ஷீர சமுத்திரம், பரமார்த்த க்ஷீர சமுத்திரம் போன்ற ஐவகைப் பாற்கடல்களின் சுயம்புத் திரட்சியாக மலர்வதே ஸ்ரீரங்கநாதர் உருக் கொண்டுள்ள தாரு அத்தி விருட்சம். பூமியில் இதனைக் காணுதல் மிகமிக அரிது.
அத்திரங்க தரிசனம் பெறுவோருடைய பாவவினைக் கணக்குகளைத் திருத்தி, சீரான வாழ்வு பெற சித்ரகுப்த மூர்த்தியே இங்கு அத்திமர சமித்துக்களால் ஆன அரிய ஹோமத்தை ஆற்றினார்.
எனவே இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் அத்திமர சமித்துக்களைக் கொண்டு ஆஹுதி அளித்தலால் நற்சந்ததி தழைக்கும்.
“அத்தி ரங்க, அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்!
இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்!”
“ரங்கபால ரங்கநாத, ரங்கமன்ன பாவனம்
ரங்க ரங்க, ரங்க ரங்க, ரங்கபாஷ்ய ராகவம்!”
விஷ்ணுபதிப் புண்ய கால நேரத்தை, பூலோகத் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகள், ஹோமம், தர்ப்பணாதிகளுடன் கொண்டாடுவதால் அற்புதமான பலாபலன்கள் கிடைக்கக் காத்திருக்கின்றன. சகல மகரிஷிகளின், வாலகில்லிய மகரிஷிகளின், நித்யசூரிகளின் சூக்கும மேற்பார்வையில் நிகழும் விஷ்ணுபதி வைபவமிது!
ஆத்ம விசாரம் |
பாமரர் முதல் படித்தவர் வரை யாவர்க்கும் உரித்தானதே ஆத்மவிசாரம் எனும் மனயோகம்!
அடியார்: குருவே! ஆத்ம விசாரம் என்பது என்ன?
சற்குரு : ஆத்மவிசாரம் என்பது தன்னை நோக்கிய உள் (மனப்) பயணம்! தன் நிலையை உணர்த்தவல்ல ஆன்ம சாதனம்! தன்னை உண்மையாகத் தானே அறிய வைக்க வல்ல ஆன்மப் பயிற்சி!
அடியார் : குருவே! எல்லோராலும் ஆத்மவிசாரத்தைக் கடைபிடித்திட இயலுமா?
சற்குரு : சித்தர்கள், யோகிகள், ஞானியர், மகரிஷிகள் என அனைவருமே ஞானப் பூர்வமாக, ஆத்மவிசாரம் பயில்கையில், சாதாரண மனிதர்களும், பாமரர்களும் அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப தினமும் ஆத்மவிசாரம் செய்துதானே ஆக வேண்டும்! இது மிக மிக எளிமையான ஆரம்ப நிலை மனயோகப் பயிற்சிதானே! இதற்காக, அவரவருடைய மனோபாவன நிலைகளுக்கு ஏற்ப, ஆத்ம விசாரத்தில் உதவுபவரே சற்குரு ஆவார். சற்குரு கிட்டும் வரை சித்தர்கள் அளிக்கும் இத்தகைய அறவழி முறைகளைக் கடைபிடித்து வர வேண்டும்.
அடியார் : ஆத்மவிசாரம், தினந்தோறும் கடைபிடிக்கப்பட வேண்டிய யோக சாதனமா?
சற்குரு : ஆம், அனைவரும், தினந்தோறும் ஆத்மவிசாரத்தைக் கடைபிடித்தாக வேண்டும். எவ்வாறு தினசரி உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிக மிக அவசியம் என அனைவரும் உணர்கின்றார்களோ, இதைப் போல, உள்ளத்தின், மனத்தின், உடலின் ஆரோக்கியத்திற்கும், ஆன்ம வளத்திற்கும் துணை புரிவதே ஆத்மவிசாரம் எனும் அருமருந்தாகும்!
இவ்வாறாக, ஆத்மவிசாரம் என்பது மனயோகம், மானசீக பூஜை, ஞானசக்திகளை உள்ளடக்கிய பல ஆன்மீக சாதனங்களின் யோகப் பெட்டகமும் ஆகும். மனத்தால், உள்ளத்தால் உடல் இயங்குவதால், இயக்கப்படுவதால், ஆத்மவிசாரம் எனும் மனயோகம் பாமரர் முதல் பண்டிதர், புனிதமான துறவியர் வரை யாவர்க்கும் உரித்தானதே! தேவையானதே! தினசரி கடைபிடிக்கப் பட வேண்டியதே!
ஆத்மம், ஆத்ம சக்தி, ஆத்ம விசாரம்!
அடியார் : ஆத்மவிசாரத்தில் ஒளிரும் ‘ஆத்மத்தின்’ பொருளென்னவோ, குருதேவா?
சற்குரு: ஆத்மம் என்பது ஒவ்வொரு ஜீவனின் உள்ளே ஒளிர்கின்ற கடவுள் சக்தியே! சரீரம் கலைந்தாலும், மறைந்தாலும், இறைமையாய் எப்போதும் சாசுவதமாக ஒளிர்வதே ஆத்மமாவது! ஒவ்வொருவருள்ளும் இறைஜோதியாகத் துலங்கும் ஆத்மசக்தியை, அவரவரே உணர்ந்து, வெளிப்படுத்தி, மனிதன், தனக்கும், சமுதாயத்திற்கும் ஆன்மப் பூர்வமாகப் பயன்படுத்த உதவும் சாதனங்களே பூஜைகள், தியானம், ஆலய தரிசனம், ஆத்மவிசாரம், யோகம் போன்றவையாம்.
அடியார்: அப்படியானால் ஆத்மம் தோன்றி வந்த பாதையை நோக்கிச் செல்வதே ஆத்மவிசாரமா?
சற்குரு : ஆம்! உண்மையில் இதுதான் ஒவ்வொருவருடைய பிறவி லட்சியமே! மனித வாழ்வின் லட்சியத்தையும், உலக வாழ்வின் மகிமையையும் உணர உதவும் எளிய ஆன்ம சாதனமுமே ஆத்மவிசாரம்! ஆத்ம விசாரம் ஆயிரமாயிரம் வழிகளில் செயல்படும். எனவே ஆத்மவிசார வழிமுறைகளை, பலன்களை வெறும் வார்த்தை விளக்கங்களால் உணர்த்த இயலாது! அப்பர் சுவாமிகள், ‘கண்டேன் அவன் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்!’ என உரைப்பது போல, ஆத்ம விசாரத்தில் நன்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறங்குவோர்க்குத் தான் வெறும் கண்களால், கண்டறியாதன பலவும் உட்கண்ணுக்குப் புலனாகும். பாமரர் முதல் பெரும் பதவி பூண்டோர் வரை யாவர்க்கும் இந்த இனிய இறை அனுபூதிகள் கிட்டுவதாகும்!
அடியார் : தன் வாழ்க்கை லட்சியத்தை அறியவும், இப்பரந்த உலக வாழ்வின் மகிமையை உணரவும், அனைத்தையும் அறிய, ஆத்மவிசாரம் ஆரம்ப ஆதாரப் படியாக ஆகி உதவுமா?
சற்குரு: ஆம், நிச்சயமாக உதவும்! பலரும் கலியுகத்தில் தத்தம் வாழ்வின் மகிமையை அறியாது ஏனோதானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவரவருக்கான தெய்வீக வாழ்க்கைக் குறிக்கோளை, அவரவராகவே உணர வைப்பதே ஆத்மவிசாரம்!
அடியார்: ஆத்ம விசாரத்தில் மனம் என்ன செய்கின்றது? அறிவு என்ன செய்கின்றது?
சற்குரு: மனிதன் என்பவன் உள்ளம், புத்தி, மனம், உடலாக விரிந்து இருக்கும் வடிவினன். மனம், புத்தி, உள்ளம் இவற்றை வகை பிரிக்கும் பகுத்தறிவு சக்தியை அளிப்பதாகவும் ஆத்மவிசாரம் துலங்குகின்றது! வெறும் அறிவால் மனம், புத்தி, உள்ளத்தைப் பகுத்துக் காண முடியாது! ஆறறிவு கூடிய முழுமையான பகுத்தறிவு, ஆத்மவிசாரத்தில்தான் தோன்றி, எழுந்து அறிவு, மனம், உள்ளம் யாதென வகை பிரித்துப் பரிணமித்துக் காட்டும்! அது வரையில் உலகில் பெருமளவில் மனிதன் மூன்றறிவு, நாலறிவு போன்று அரைகுறைப் பகுத்தறிவுடன் தான் வாழ்கின்றான்!
அடியார்: ஆத்மவிசாரம் என்பது எவ்வாறு மன உடலுக்கான உடற்பயிற்சி ஆகின்றது?
சற்குரு: வெளி உடல் போல, மனிதனுக்கு உள்ளேயும் பல சரீரங்களும் உண்டு. வெளி உடல் கொண்டு உள் சரீரங்களுடன் உரையாடும் ஒரு வழியும், மார்கமுமே ஆத்மவிசாரமாகும். எவ்வாறு உடற்பயிற்சியானது உடலுக்கு வலுவும், ஆரோக்கியமும் தருகின்றதோ, இதே போல மன உடலுக்கும், புற (வெளி) உடலுக்கும் ஆரம்ப நிலையில், மனத்தூய்மை, புறத்தூய்மை, மனசாந்தம், மனோசக்தி, நல்ஆரோக்யம் போன்றவை கிட்டிட ஆத்மவிசாரம் உதவுகின்றது. ஏனெனில் மனமும், புத்தியும் தாமே கலியுக மனித உடலை இயக்குகின்றன! மனம் ஓரளவேனும் அமைதியாக இருந்தால்தானே உணர்ச்சி வசப்படுதல், கோபம், அவசரம், பழிவாங்கும் எண்ணம், பகைமை, விரோதம் இல்லாமல் எதனையும், எந்தத் துன்பத்தையும், உடல்பூர்வமாகவும், மனோரீதியாகவும் வாழ்வில் சந்திக்க முடியும்.
மனத்தெளிவு தரும் ஆத்ம விசாரம்
அடியார்: அப்படியானால், ஆத்மவிசாரம் என்பது முதலில் ஆரம்பக் கட்டத்தில் மனதை அமைதிப்படுத்த உதவுமா?
சற்குரு: ஆம், முதலில் ஆத்மவிசாரம் மனத் தெளிவிற்கு உதவும் மிகவும் எளிமையான யோக, தியான சாதனமுமாக ஆகின்றது!
அடியார்: மனிதர்களின் மனம், அறிவு பலவகைப்படுவதால், வேறு எவ்வகையில் எல்லாம் ஆத்ம விசாரம் பற்றித் தாங்கள் விளக்கி உரைக்க முடியும்? ஏனெனில் பெரிய அறிவாளி முதல் படிக்காத பாமரர் வரை அனைவரும் ஆத்ம விசாரம் செய்தாக வேண்டும் அல்லவா! அனைவரும் ஒவ்வொரு வகையில், தத்தம் அறிவு நிலைகளுக்கு ஏற்ப, தங்களிடம் அறிந்து இதனைப் புரிந்து கடைபிடிக்கலாம் அல்லவா!
சற்குரு : நல்ல கேள்வி! ஆத்மவிசாரம் என்பது வெறுமனே படித்து, கேட்டு மட்டும் வருவதல்ல! தினமும் பயிலப்பட்டுப் பலன்களை அடைய வேண்டும். பல திசைகளில் இருந்தும் பலவகைத் துன்பங்கள் வரும் இக்கலியுகத்தில், நிச்சயமாக அனைவரும் படித்தவரோ, பாமரரோ, ஏழையோ, பணக்காரரோ தினமும் யாவரும் ஆத்மவிசாரம் செய்தே ஆக வேண்டும்.
தியானமும், யோகமும் எடுத்த உடனேயே ஆழப் பயில்தல் கடினம்! இவ்விரண்டையும் எளிமைப் படுத்தித் தருவதே ஆத்மவிசாரம்!
ஆத்ம விசார வழிமுறைகள்
உறங்கும் முன்னர் சிறிது நேரம், பகலிலோ, மாலையிலோ ஓய்வெடுக்கும் போது சிறிது நேரம், விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரம், அபிஜித் முகூர்த்த நேரம் எனப்படும் பகல் உச்சிப் பொழுது, மாலை சந்தியா வேளை போன்றவை ஆத்ம விசாரம் நன்கு அமையும் புனிதமான நேரங்கள், குறித்த நேரத்தில் தினமும் ஆத்ம விசாரத்தைப் பழகுதல் விசேஷமானது!
ஆத்ம விசாரம் என்றால்,
எனப் பாமரர் முதல் பரந்த அறிவாளர் வரை யாவரும் எதை ஒட்டியும் ஆத்ம விசாரம் செய்திடலாம்.
அடியார்: ஆத்ம விசாரம் யோகம், தியான வகையைச் சார்ந்ததா?
சற்குரு: ஆம்! ஆனால் நீ இப்போது கேட்கப் போகும் கேள்வி, எந்த ஒரு நிகழ்ச்சி, செயலைப் பற்றியும் ஆத்ம விசாரம் செய்தல் எனில் இது எவ்வாறு கடவுளைப் பற்றிய சிந்தனை, யோகம், தியானமுமாக, ஆத்மவிசாரமுமாக ஆகும் என்பது தானே!
அடியார்: ஆம் குருவே! ஒருவன் தனக்குத் தானே எந்த வினாவையும் எழுப்பித் தன்னுள் விடை காண ஆழ முயற்சித்தலும், ஆத்மவிசாரத்தின் ஓர் அங்கம் என்றால் அது இறைவனைப் பற்றிய சிந்தனையே இல்லாத கேள்வியாக, தேவையற்ற விஷயம் ஒன்றைப் பற்றியதாக இருந்துவிட்டால், ஆத்மவிசாரத்தின் அடித்தளமே மாறி விடும் அல்லவா!
சற்குரு: இது உன்னுடைய (தவறான) கருத்து! அனைத்தும் ஆவது, இயங்குவது இறைவனால் தான் எனில், இப்பிரபஞ்சத்தில் எதுவுமே இறைமையைச் சார்ந்தது தானே! அப்படியானால் இறைமை சாராத பொருளோ, காரியமோ, இயக்கமோ இவ்வுலகில் எதுவுமே இல்லை அன்றோ! இதனை மேலும் ஒரு உதாரணத்தால் விளக்குவோம்.
அனைத்திற்கும் ஆன்ம காரணங்கள் ஆயிரம் உண்டு!
உதாரணமாக, இன்று ஏன் மழை பெய்தது, வெயில் கடுமையாக இருந்தது எனக் கூட ஒருவர் ஆத்மவிசாரம் செய்திடலாம். மற்றொருவர், இன்று தன்னுடைய ஸ்கூட்டர் நடுவழியில் நின்று போனது ஏன் எனவும் தன்னைத் தானே கேட்டு ஆத்மவிசாரம் செய்திடலாம்!
ஸ்கூட்டர் நின்று போனதற்கு விஞ்ஞானப் பூர்வமான காரணங்களை வண்டி மெக்கானிக் தெரிவிக்கலாம்! ஆனால் ஸ்கூட்டர் நின்று போனதை ஒட்டி, அன்று அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு மாற்றங்கள் தோன்றுகின்றன! இதற்கான காரணங்களை யார் மூலமாக எப்படி அறிவது?
ஸ்கூட்டரோ, மழையோ அனைத்தும் பூர்வ ஜன்மத் தொடர்க் காரியம்தானே! ஜன்மப் பூர்வமாக மெக்கானிக்கிற்கு அளிக்க வேண்டிய தொகையை, ரிப்பேர் செலவு என்ற வகையில் இவ்வாறு அளித்தால் தானே அது சம்பந்தமான அவருடன் உள்ள பூர்வ ஜன்ம பாக்கி தீர்வுறும்! இல்லையெனில் வட்டியும், முதலுமாக இந்த பாக்கியும் ஜன்மம், ஜன்மமாகப் பெருகும்தானே!
ஸ்கூட்டர் பயணத் தாமதத்தால் அடுத்தடுத்த காரியங்களில் எவ்வளவு மாறுதல்கள் ஏற்படுகின்றன? இதனை இவ்வாறு ஆத்ம விசாரத்தால் உணர, உணர, தெளிய, தெளியத்தான், அத்தொடர்பு சம்பந்தமாகத் தொக்கி நிற்கும் வினைகள் நிறைவுறும், மீண்டும் தொடரா!
வெறுமனே விளக்கங்களைக் கேட்டு, கேள்விகளாய்க் கேட்டுத் துளைப்பதை விட, அவரவர் (ஆத்மவிசாரம்) செய்து பார்த்தால்தானே இவ்வாறு பல அற்புதமான விளக்கங்கள் தன் உள்ளேயே ஊறக் கண்டு ஆனந்தித்திடலாம்!
அனைத்தும் ஆண்டவ லீலையைப் பற்றியதே!
அடியார்: இறைவனைப் பற்றிய சிந்தனை அல்லாது, தினமும் இரவு, அவரவர் அந்நாளில் செய்த (சொந்தக்) காரியங்களைப் பற்றி எண்ணுவதும் எப்படி ஆத்ம விசாரமாகும்?
ஆத்ம விசாரம் – ஓர் ஆன்ம விசாரனை மண்டபம்!
சற்குரு: ஆத்மவிசாரம் என்றாலும், இறைச் சிந்தனை என்றாலும் என்னவென்றே தெரியாது, ஆத்மவிசாரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அரைகுறையாக முடிவு கட்டுவது சரிதானா? முதலில், மனிதன் தன்னிடம் உள்ள தவறுகளைத் திருத்தி, மனம் நல்சிந்தனையில் ஒருமுகப் பட்டால்தான் இறைச் சிந்தனை பலிதமாகும். எடுத்த உடனேயே நல்ல எண்ணங்கள், ஆழ்ந்த இறைபக்தி தோன்றி விடாது! தியானம் என்று கண்களை மூடிச் சற்றே அமர்ந்தால் போதும், பணப் பிரச்னை முதல் அலுவலக, குடும்பப் பிரச்னைகள் ஈறாக அனைத்தும் மனதில் நிழலாடும்! பிறகு எப்படி மனசாந்தம் கிட்டும். தியானம் கை கூடும்?
உடலளவில் சுத்தமாக இருப்பவர்கள் தீய எண்ணங்கள் முறையற்ற காம உணர்வுகள் வராது மனத்தளவிலும், சுத்தமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இது அவ்வளவு எளிதல்லவே!
இருபது, முப்பது ஆண்டுகளாக, பற்பல எண்ணங்கள், ஆசைகள், முறையற்ற காம உணர்வுகள், தேவையற்ற எண்ணங்கள், பேராசைகள், பிறரிடம் சொல்ல முடியாத (வாழ்க்கை) நிகழ்ச்சிப் படிவுகள் மனதில் பாறையாக இறுகி இருக்கும்போது, பரிபூரணமான புனிதமான இறைச் சிந்தனை எப்படி உடனடியாக எழுதல் கை கூடும்? ஆனால் ஆத்மவிசாரத்தில் இக்கசடுகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆழ்மனம் சுத்திகரிக்கப்படுகின்றது!
எனவே ஒருவர் தன்னை நோக்கித் தானே, தன்னுள் ஆத்மப் பயணம் மேற்கொண்டு தன்னை மனப்பூர்வமாகச் சுத்திகரித்துக் கொள்ள முதலில் ஆத்மவிசாரம் என்ற உள்மனப் பாத யாத்திரையாகிய மனயோகப் பயிற்சி தினமும் தேவையானதே! இதனைப் பயிற்சி என்பதைவிட ஆலய தரிசனம், பூஜை போல தினசரிக் கடமை என்றே கொள்ள வேண்டும். தற்காலத்தில் தியானம் என்று பயிலத் துவங்குவோர் யாவரும் முதலில், அறிந்தோ, அறியாமலோ, ஆத்மவிசாரத்தில்தான் சில காலம் ஈடுபடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தினமும் தான் செய்த காரியங்களை மனக்கண் முன் கொணரும் ஆத்ம விசாரப் படலமானது, நல்ல ஆன்ம விசாரனை மண்டபமாகவும் உள்ளுக்குள்ளேயே மிளிர்கின்றது. முதலில் நாம் எங்கு, எந்நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தால்தானே மனப் பயணத்தை, வாழ்க்கைப் பயணத்தைச் சீராகத் தொடர இயலும்?
எனவே நாமிருக்கும் நிலையறிய உதவும் மனவிசாரணை மன்றமுமே ஆத்மவிசாரம் ஆகும். மனவீட்டைச் சுத்தம் செய்யும் காரியமும், சாதனமுமே ஆத்மவிசாரம் எனப்படுவது! இவ்வாறாக, ஆத்மவிசாரம் பல தெய்வீகமான வழிகளில் செயல்படுகின்றது.
திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம். ஆவுடை மேல் நின்று பெருமாள் அருள்பாலிக்கும் அரிய திருமால் திருத்தலம்!
சென்னை – வேலூர் சாலையில், காவேரிப்பாக்கத்தில் இறங்கி, இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் தலத்தை அடைய வேண்டும். பஸ் வசதிகள் மிகவும் குறைவு, காவேரிப்பாக்கத்தில் இருந்து ஆட்டோ அல்லது சைக்கிளில் செல்ல வேண்டும்!
ஒரு யுகத்தில், கோயில்கள் செழித்த நகரமாக, மாபெரும் இறைத் தலமாகப் பொலிந்து, சிறந்து விளங்கியதே தற்போதைய திருப்பாற்கடல் கிராமம் ஆகும். தற்போதும் கூட, இரண்டு புராதனமான சிவாலயங்கள், இரண்டு தொன்மையான பெருமாள் ஆலயங்களுடன் சிறந்து விளங்கும் திருப்பாற்கடலின் மகிமையைப் பலரும் அறியாததினால், பக்தர்கள் மிகவும் குறைவாகவே வந்து செல்கின்ற தலமாகவே இப்போது இருக்கின்றது.
பல திருத்தலங்களும் அற்புதமான நாமசக்திகளைப் பூண்டிருக்கும். இவற்றுள் மிகவும் அமிர்தமயமான பெயரைக் கொண்டு, பரந்தாம “நாம சக்திகள்” பரந்து நிறைந்த அருமையான தலங்களுள் திருப்பாற்கடலும் ஒன்று. இத்தலத்தில் ஸ்ரீஅலர்மேலுமங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்க நாதர் ஆலயம் ஆகிய இரண்டு பழமையான பெருமாள் ஆலயங்கள் உள்ளன!
திருவோண நட்சத்திர ஆலயம்
திருவோண நட்சத்திரத் தலமாகப் பொலியும் ஸ்ரீஅலர்மேலுமங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மிகவும் அபூர்வமாக, ஆவுடை மேல் நின்ற கோலத்தில் உள்ளார். இவ்வாறு சிவ, விஷ்ணு அர்ச்சங்கள் இணைந்து இருப்பது மிகவும் விசேஷமானது! பிரத்யட்சமாக, மூல மூர்த்திப் பெருமாள் அருட்பிரவாகமாய்ப் பொழிந்தருளும் பாங்கை இது உணர்த்துகின்றது.
வைகுண்டத்தில் திருப்பாற்கடலில், உள்ள க்ஷீரம் எனும் “அமிர்தப் பாற்கடல்” சக்தியானது, பூமியடி நீரோட்டமாய்ப் பொங்கும் அற்புதத் தலங்களுள் இதுவும் ஒன்றாம்!
திருவோணம் என்பது திருமாலுக்கு மிகவும் ப்ரீதியான நட்சத்திரம் என்பதை நாம் நன்கு அறிவோம். “ஓணத்தில் கோணமில்லை” என்ற ஜோதிட ஆன்றோர் மொழிக்கேற்ப, அனைத்துச் சுபகாரியங்களுக்கும் கிரகப் பிரவேசம், காது குத்தல் முதல் திருமணம், சீமந்தம் உட்பட அனைத்திற்கும் பொருந்திய சுப நட்சத்திரமாகத் திருவோணம் பொலிகின்றது. சிராவண நட்சத்திரம் எனவும் பிரசித்திப் பெற்ற நட்சத்திரமே திருவோணம்! காதால் கேட்கக் கூடிய (வேத) மந்திரங்களை நன்கு கிரகிக்கும் சக்திகளைத் தருகின்ற நட்சத்திரம்!
காடு நாள சக்திகள் கவினுறும் தலம்!
காது கேட்கும் சக்தி மந்தமாக உள்ளோர் மற்றும் காது கேளாதோர் யாவரும், ஜால்ரா, பொற்றாளம், சப்ளாக் கட்டை போன்ற பஜனைச் சாதனக் கருவிகளைக் கொண்டு, தனக்கு ஜால்ரா ஒலி நன்கு கேட்காவிட்டாலும் அல்லது மெலிதாகக் கேட்டாலும், அவற்றை ஒலித்துக் கொண்டே சிராவணம் ஆகிய திருவோண நட்சத்திர நாளில், சிராவண சக்திகள் நிறைந்த திருப்பாற்கடல் மற்றும் கீழ்க்கண்ட இறைத் தலங்களில் பஜனை செய்து வழிபட்டு வரவேண்டும்.
போன்ற சப்த சக்தித் தலங்களில், பூஜித்தும், பஜனை செய்தும் வந்தால், இறையருளால் காது நாள சக்திகள் விருத்தியாகும். ENT துறை மருத்துவர்களும், Audio துறை சம்பந்தமானவர்களும் தம் துறையில் பிரகாசித்திட, திருவோண நட்சத்திரம், சப்தமித் திதி நாட்களில் சிறப்பாக வழிபட வேண்டிய தலங்களே இவையாவும்!
27 நட்சத்திரங்களில் “திரு” என்ற தெய்வ அடைமொழியைத் தாங்கி வருகின்ற நட்சத்திரங்கள் திருவோணம், திருவாதிரை ஆகிய இரண்டு மட்டுமே! இவை முறையே திருமாலுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள்.
தாமோதரனே தனித்துவந்து தண்ணருள் புரியும் தலம்!
புண்டரீக மாமுனிவருக்குப் பெருமாள், தாமே மனமுவந்து, நேரடியாகத் தோன்றிக் காட்சியளித்தத் திருத்தலமே திருப்பாற்கடல் ஆகும். பூலோகத்திலேயே இறையருளால் திருப்பாற்கடல் என்ற அற்புதமான அருட்பெயரையே மிகவும் அபூர்வமாகத் தாங்கி, பாற்கடலின் அமுத சக்திகளைப் பொழிகின்ற தலம்!
ஸ்ரீசந்திர பகவான், ஒரு யுகத்தில் தம்முடைய கலைகள் மலிந்து வாடிய போது, திருவோண நட்சத்திர தேவி, இங்கு பெருமாளை வேண்டி, “திருப்பாற்கடல்” சக்திகள் ததும்பிய பாலாற்றங்கரையில் (வேகவதி ஆறு) தவமிருந்து, சந்திர பகவானுக்கு, மூன்றாம் பிறை நாளில், பிரசன்ன சந்திரபாஸம் என்ற விசேஷமான “பாலினும் வெண்மையான” அமுதக் கதிர்க் கிரண சக்திகளை, ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் அருள் வரமாய்ப் பெற்றுத் தந்த தலம்!
இங்கிருந்து மாதந்தோறும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெறுதலால், பிள்ளைகளின் அறிவுக் கூர்மை நன்கு விருத்தி அடையும். படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய சந்திர மூர்த்திக்கு உரிய நட்சத்திர நாட்களில் இங்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு, சந்திர தரிசனம் பெற்று வர, அறிவு நன்கு விருத்தியாகும்.
அடியாரைத் தேடி இறைவனே வந்து அருள்கின்ற கருணசாகரத் திருத்தலங்களுள் திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் ஒன்றாகும். சிறிய, எளிமையான ஆலயமானாலும், மிகவும் புராதனமானதும், தன்னுள் பல சீரிய புராண வைபவங்களைக் கொண்டதும் ஆகும். புண்டரீக மகரிஷி மட்டுமின்றி, வைகுண்டத்தில் உறையும் நித்திய சூரிகள் யாவருமே நித்திய சூரிகளாய் ஆகுதற்கு முன், இதற்கான பரம்பொருளின் திருவருள் பெற்றதும் திருப்பாற்கடலில் தாம்!
அனைத்துக் கோலங்களும் ஆளும் பாற்கடல் திருவளாகம்
வைகுண்டத் திருப்பாற்கடல் என்றாலே பெருமாள் சயனக் கோலம் மட்டுமே கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனாய் மட்டும் அருளும் இடம் என்றே பலரும் கருதுகின்றார்கள்.
நின்று, இருந்து, கிடந்து, நடந்த மற்றும் ப(ர)றந்த கோலங்கள் பலவும் கொண்டு பரந்தாமனாம் ஸ்ரீமகாவிஷ்ணு காட்சி தரும் அருட்கூடமே வைகுண்டத்தின் திருப்பாற்கடலாகும். உண்மையில், பூமியில் உள்ள உப்புக் கடல் போல, பூமிக்குள்ளும், பூமியைச் சுற்றியும், பூமிக்கு வெளியிலுமாக, கரும்புச்சாறுக் கடல், தேன் கடல் என்ற பலவிதமான திரவக் கடல்களும், கடல் த்வீபங்களும் நிறைய உள்ளன. நாம் இங்கு காணும் திருத்தலம் திருப்பாற்கடல் எனப் பெயர் கொள்ளக் காரணமே, பாற்கடலில் எவ்வாறு ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தோன்றுகின்றாரோ, அதே ரூபத்தில், புண்டரீக மகரிஷிக்கும் இங்கு திருக்காட்சி அளித்ததே ஆகும்.
எனவே திருப்பாற்கடல் என்றாலே அமிர்த வளம், அமிர்த சக்திகள், அமிர்தக் கிரணங்கள், நிறைந்த, வற்றாத தீஞ்சுவைப் பாலாலான கடலாகும். எனவேதாம் பால், தேன் , பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக ஆராதனை வழிபாடுகள் இங்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் மகத்தான நல்வரங்களையும், காரிய சித்திகளையும் தருவனவாம்!
அனைத்து யுகங்களிலும் உலா வரும் வெங்கடேசர்!
திருமால் தரிசனம் பெற வந்த புண்டரீக மகரிஷிக்கு எம்பெருமான் வெங்கடேசப் பெருமாளாக இங்கு காட்சி தந்தது ஏனோ?
பலரும் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளை, கலியுகத்தில் திருப்பதியில் தோன்றிய பிரதட்சிய மூர்த்தியாக மட்டுமே கருதுகின்றார்கள். எத்தனையோ கலியுகங்கள் வந்து சென்றுள்ளன. அனைத்து யுகங்களிலுமே, ஸ்ரீவெங்கடேசப் பெருமாளின் அவதார உற்பவிப்பு உண்டு.
புண்டரீக மகரிஷி, காலம் காலமாய்ப் பல யுகங்களிலும், பலவிதமான விஷ்ணு தரிசனங்களைப் பல லோகங்களிலும் பெற்று வருபவர் ஆவார். எந்தத் திருக்கோலமானது, கலியுகத்தில் இறைவனின் அனைத்து அவதார சக்திகளையும் தருகின்றதோ, அதனை ஒரு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், புண்டரீக மகரிஷி பெற விழைந்தமையால், இறைவனே தாமே ஆனந்தித்து நேரில் தோன்றி அளித்த திருக்கோலமாகத் திருப்பாற்கடல் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் மூர்த்தம் பொலிகின்றது. பரம்பொருளே தாமே மனமுவந்தளித்த திருக்கோல மூர்த்தியே திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அவதார மூர்த்தமாம்!
வைகுண்டத்தில் அமிர்த கலச பூஜை!
வைகுண்டத்தில், திருப்பாற்கடலில் தினமும் அமிர்தக் கலச பூஜை நிகழ்வது உண்டு. அமிர்த கலசத்தின் முகத்தை ஸ்ரீவிஷ்ணுவாகவும், கலசத்தின் கண்டத்தைச் சிவனாகவும், அனைத்துச் சித்தர்களும், மகரிஷிகளும் இங்கு பூஜித்து வணங்குவர்.
இந்த அமிர்த கலச பூஜையில் பிரசித்தி பெற்றவரே புண்டரீக மகரிஷி ஆவார். திருவோண நட்சத்திர தினத்தில், இந்த அமிர்தக் கலச பூஜை பெரும் பிரம்மோற்சவமாக, நித்திய சூரிகளால் வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் கொண்டாடப்படுகின்றது. இந்த அமிர்தக் கலசத்தில், அனைத்து விஷ்ணு அவதாரங்களின் தோற்றங்களும் காணப் பெறுவதே இதன் மகத்தான தாத்பர்யமாகும்.
இந்த அமிர்தக் கலச பூஜையின் பலாபலன்களாக, அனைத்துத் திருமால் அவதார தரிசனப் பலன்களையும் அவதார தரிசனப் பலன்களையும் ஒருமித்ததாக இங்கு புண்டரீக மகரிஷிக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காட்சி தந்து அரவணைத்தார்.
இதனால்தான் திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்போர்க்கு, பரந்தாமனின் அனைத்துக் கோல தரிசனப் பலாபலன்களும் தாமாகவே வந்து கூடுகின்றன.
எனவே, அனைவரும், குறிப்பாக திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளைத் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும். திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் வழிபாட்டின் முக்கியத்துவம் யாதெனில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனா தெய்வம், பிரார்த்தனா தெய்வம், நேர்த்தி தெய்வம் போன்ற பல அனைத்துத் தெய்வ வழிபாடுகளும் இதில் ஐக்கியமாவதால், இங்கு திருவோண நட்சத்திர தின வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.
வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
வெங்கடேச வெங்கடேச வெங்கடேச ரட்சமாம்
பலருடைய உதவிகளை நாடி, தேங்கி நிற்கும் நற்காரியங்கள் நிறைவு பெற உதவும் விஷ்ணுபதிப் புண்யகாலம்! தன்னுடைய முன்னேற்றத்திற்கு பெரும் துணை புரிவார் என்று ஒருவரை நம்பி தன் தொழில், பதவி, முதலீடுகளை, செல்வங்களை அளித்து ஏமாந்தோர் தக்க மீட்சி பெற உதவும் விஷ்ணுபதி புண்யகால பெருமாள் பூஜை!
திருமாலப்பர், ஸ்ரீரங்கநாத மூர்த்தியாக, எத்தனையோ திருத்தலங்களில் தோன்றி இருப்பினும், ஒவ்வொரு அர்ச்சத்திற்கும் ஒவ்வொரு அர்ச்சாவதாரத்தின் பின்னணியிலும் எண்ணற்ற அனுபூதிகள் நிறைந்துள்ளன. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனாகத் துலங்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் திருத்தலத்திலேயே அதே தெய்வத் திண்மையில் எழுந்தருளி உள்ளார் என்றால், இதிலும் அதியற்புத புராதனப் புராண வைபவங்கள் நிறைந்துள்ளமைதாமே!
திருமாலின் மிகவும் பழமையான அவதாரங்களுள் ஒன்றே ஸ்ரீரங்கநாத மகாத்மியம் ஆகும். பரந்த கோசலையில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தர்மாட்சி புரிந்த தசரதருடைய, ஸ்ரீராமருடைய வம்சா வழி இஷ்டதெய்வ மூர்த்தியாக ஸ்ரீரங்கநாதர் விளங்குகின்றார் எனில், யுகாதி யுகங்களுக்கும் மூத்ததான திருமால் அவதாரம் தானே ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் திருக்கோலம் ஆகின்றது!
அத்தி மரத்து ரங்கபிரான்!
ஸ்ரீரங்கநாயகித் தாயார் சமேதராகத் திருப்பாற்கடலில் தோன்றியுள்ள ஸ்ரீரங்கநாதர், அற்புதமான மகிமைகளைக் கொண்டவர் ஆவார். கல் விக்ரகங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னரேயே, மர விக்ரகங்கள் தோன்றின, மர விக்ரகங்களுக்கும் மூத்தவையே சுதை ரூபங்கள் ஆகும். சுதை ரூபங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! எண்ணிய எண்ணியாங்கு நற்பலன்களைத் தரவல்லவை! பிரார்த்தனா சக்திகள் நிறைந்தவை!
இங்கு, திருப்பாற்கடலில் உள்ள ரங்கநாதர் சுயம்புத் திருமேனியாக “தாரு” எனும் அத்தி மரத்தில் தோன்றியவர்! ஆம், மிகவும் சக்தி வாய்ந்த “தாரு அத்தி மரத் திருமேனியராய்த் திருப்பாற்கடலில் ஸ்ரீரங்கநாதர்” அருள்வது கலியுகத்தின் பெரும் பாக்கியமே! இறைத் தூதுவர்களான சித்தர்களும், மகரிஷிகளுக்கும் பல விதங்களில் காட்சி தந்து அருள்புரிகின்ற தெய்வ மூர்த்திகள், இவற்றின் மூலம் பூலோக ஜீவன்களுக்கு அருள்புரியும் வண்ணமாகவும், அந்தந்த அனுபூதிகளை ஒட்டித் திருக்கோலக் காட்சிகளை அருள்கின்றனர். அந்தந்த யுக வழிபாட்டு அம்சங்களுக்கு ஏற்ப, அவ்வடிவிலேயே பல தலங்களில் தோன்றி மக்களுக்கும் அருள்பாலிகின்றனர். இவ்வாறு பல தலங்களுக்கும், ஆலயங்களுக்கும் கோயில் தல புராணங்கள் தோன்றுகின்றன.
பொதுவாக, பல்லாயிரம் ஆண்டு முதுமை பூண்ட தாரு அத்தி மரமே தல விருட்சத்திற்கு ஏதுவாகும். இத்தகைய பல லட்ச ஆயுட்காலத்தாரு அத்தி மரத்தில்தாம் தெய்வ மூர்த்திகள் வடிவு கொள்வர். ஆனால் இங்கு சுயம்புவாய்ப் பரிமளிக்கும் தாரு அத்தி மர ரங்கநாதர், மகாபரந்தாமச் சுயம்புவாய்த் தோன்றியவர். அத்ரி, ஆத்ரேயர், பிருகு, ப்ருங்கி, வசிஷ்டர், பரத்வாஜர், அகஸ்தியர் போன்ற பல யுக கால ரிஷிகளாகும் வழிபடப் பெற்ற அதியற்புத மூர்த்தி.
ஆதி மூல பிரம்மா, சந்தனக் கற்பக காலத்தில் அண்டங்களைப் படைத்தபோது, அதற்குரிய ஆதி பிரம்மாவைத் தோற்றுவித்த ரங்கநாத மூர்த்தியே இப்பெருமானா! இவ்வைபவம் பிரம்ம மூர்த்திக்கு நல் அனுகிரகமாக நிகழ்ந்த திருக்காலமும் அந்தச் சந்தனக் கற்ப யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்!
எனவே “அத்தி ரங்கநாதனம், அகண்டகார சோபிதம்” எனத் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதரைச் சித்தர்கள் போற்றுகின்றனர்.
நவநாத சித்தர்கள் |
பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!
காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில் நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்,! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!
ஸ்ரீபாண்கத்ர நவநாத சித்தர்
பாணம் என்றால் பல அர்த்தங்கள் உண்டு. பல அஸ்திரங்களும், வாத்யங்களின் ஒலிப்பு இழைகளும் பாணமாகின்றன. மனிதன் வாழ்வதே சப்த சக்திகளினால்தாமே! ஒலியின்றியும், ஒளியின்றியும் மனிதனால் வாழ இயலாது. ஆனால் இதனை மனிதன் உணர்வது கிடையாது. அதாவது ஒலி, ஒளி சக்திகள் தாம் மனிதனின் ஜீவ வாழ்க்கையை ஆக்கப்படுத்துகின்றன. இத்தகைய ஒலி, ஒளிநிறைப் பிணை சக்திகளை, பிராண கத்ர சக்திகளாக உலகில் நிரவிடவும், பாணகத்ர சித்தர் சிவபெருமானால், நவநாத சித்தர்களுள் ஒருவராகத் தோற்றுவிக்கப்பட்டார்.
சுபானு ஆண்டின் வரும் கார்த்திகை மாத சிவராத்திரியில், பாணகத்ர சித்தர், தூல சூக்கும காரண, காரிய வடிவில், அவரவர், தத்தம் புண்ய நிலைகளைப் பொறுத்துக் காணும் வண்ணம், பல வடிவுகளில் வலம் வந்து, பாணகத்ர சக்திகளை, அருணாசலக் கிரிவலமெங்கும், பல முக்கியமான தரிசனப் பகுதிகளில், மூலிகைகளில், பாறைகளில், தாவரங்களில், நட்சத்திர தாரைகளில் மாமழை போல், இறையருளால் பொழிய வைக்கின்றார் இம்மாத சிவராத்திரியில் ஆழ்ந்த பக்தியுடன் அருணாசல கிரிவலம் வருவோர்க்கு, இவை யாவும் அருட்பரிசாய்க் கிட்டிட, பாணகத்ர சித்தர் துணை புரிகின்றார்.
எனவே இம்மாத சிவராத்திரி நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வருவோர் ருத்ராட்சம், துளசி மாலை, தாமரை மணி மாலை, பூணூல், புது அரைஞாண் (இடுப்புக்) கயிறு, இரண்டு மணிக்கட்டுகளிலும் காசிக் கயிறு, மிருதுள மணிகங்கண், ஸ்திர கங்கண், காலில் திருவெண்டயம் போன்ற சகல இறை சாதனங்களையும் அணிந்து கிரிவலம் வருதல் விசேஷமானதாகும்.
(மனக்) கசடுகளை நீக்கும் மாமருந்தான மாத சிவராத்திரிப் பாதயாத்திரையாக, இந்த மாத சிவராத்திரி அருணாசல கிரிவலத்தைச் சித்தர்கள் பெரிதும் போற்றுகின்றனர்.
கசடு என்றால் மன அழுக்கு, உள்ளத்தின் வேதனைகள், உள்ளத்தில் படிந்திருக்கும் மாசு, தீவினைக் கழிவுகள், பூர்வ ஜன்மக் கர்மப் படிவங்கள், கெட்ட வினைச் சாயைகள், ஆவி நிழல் படிதல், பிரேத தோஷச் சாயை விழுதல் போன்ற பலவிதமான தீய கசடுகளைக் குறிப்பதாகும். பலரிடத்திலும் அறிந்தோ, அறியாமலோ இவற்றில் பலவும் ஒட்டி இருக்கும். இவற்றை நீக்கிட இம்மாத அருணாசல கிரிவலம் உதவுகின்றது.
மூலிகையோடு முத்தான கிரிவலம்!
கண்டங் கத்திரி, அரிசித் திப்பிலி, கண்ட திப்பிலி போன்றவற்றில், மேற்கண்ட கசடுகளை நீக்கும் கத்ர சக்திகள் நிறைந்துள்ளன. எனவே இந்த மாத சிவராத்திரியில், ஒரு மஞ்சள் துணியில் உங்களால் எவ்வளவு நாட்டு மூலிகை மருந்துத் திரவியங்களைப் பெற முடியுமோ, அவற்றைச் சிறிதளிவிலேனும் (குறைந்தது 108 வகைகள்) திரட்டிப் பெற்று, அவற்றை முடிந்து சிறு முடிச்சாய் ஆக்கி, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதியவாறு, அருணாசலத்தைக் கிரிவலம் வலம் வந்திடுக!
அருணாசல மாத சிவராத்திரி கிரிவலத்தில் ஓத வேண்டிய மகாமந்திரம்
ஸமானோ மந்த்ர ஸமிதி ஸமானீ
ஸமானம் மனஸஹ சித்தமேஷாம்
ஒன்றே மனமாகி ஒன்றே உளமாகி
ஒன்றே துதியாகி ஒன்றே குலமாகி
நன்றாய்த் துலங்கிடவே நாதா நின்பதம் சார்வோம்
கிரிவலம் முடிந்த பின் இம்மூலிகை முடிச்சை இல்லத்திற்கு எடுத்துச் சென்று, மறுநாள் அமாவாசையன்று இதன் முன்னிலையில் தர்ப்பணம் அளித்துப் பிறகு ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடலாம். ஹோமம் நிகழ்த்த வாய்ப்பு இல்லாவிடில், ஒரு பெரிய மண் வட்டிலில் நிறைய சாம்பிராணித் தணலை எழுப்பி, நன்கு தூபம் எழும்பிய பின், நிறை தணலாய் இருக்கும் போது இந்த மூலிகை முடிச்சைத் தணலுள் இட்டு, வீட்டுத் தாழ்வாரம், நிலைப்படி, முற்றம், கொல்லைப் பகுதி, தோட்டம், வயல், மாடி எனப் பல பகுதிகளுக்கும் மூலிகை நறுமணம் நிரம்பும் வண்ணம் தூபக் கனலை எடுத்துச் சென்று நிரவிட வேண்டும்.
வரும் அமாவாசை தினத்தன்று இவ்வாறு மூலிகை அக்னிக் கொழுந்து வாஸ்ய கத்ரச் சக்திகளிய இவ்வகையில் பெற்றிடுங்கள். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இவ்வாறு வாஸ்ய கத்ர சக்திகளை மூலிகாக்னி மூலமாய்ப் பெறும் நல்வாய்ப்பு பூமியில் கிட்டும் என்பதும் நினைவிருக்கட்டும். முதல் நாள் மூலிகை பந்தனத்துடன் கூடிய மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமே இதற்கு அடிப்படை ஆதாரம் என்பதை அறிந்து கொள்க!
மாத சிவராத்திரி அருணாசல கிரிவல பலாபலன்கள்
இதன் பலாபலன்களாக, நல்ல திட்டம் (Project Plan) வைத்திருந்தும் முறையாகச் செயல்படுத்த இயலாமையால் திணறுவோர் நன்முறையில் முன்னேற்றம் பெற உதவும் மாத சிவராத்திரி கிரிவலம் இதுவே ஆகும்.
எவ்வளவு கடினமாக உழைத்தும் முன்னுக்கு வர இயலாமல் திணறுவோர், பல நல்முன்னேற்றங்களைக் காண உதவும் மாத சிவராத்திரி கிரிவலம்!
நல்ல வியாபாரம் இருந்தும், முறையாக வரவுத் தொகைகள் வந்து சேராமையால் அவதியுறுவோர் பொருளாதார ரீதியாக முன்னேற உதவும் மாத சிவராத்திரி கிரிவலம்.
கணவன் சார்புடை உறவினர்களால் எப்போதும் பல பிரச்னைகளுக்கு ஆளாகி இருப்போர், சுமுகமாய் நன்னிலை பெற உதவும் கிரிவலம்.
மேற்கண்ட பலாபலன்கள் யாவும் பலவிதமான கத்ர சக்திகளால் நல்வரங்களாக ஏற்படுபவை. இவற்றை நமக்குப் பெற்றுத் தருவதற்காகவே, பல்வேறு யுகங்களிலும் பாணகத்ர சித்தர் திருஅண்ணாமலையில், அருணாசல கிரிவலம் வந்து இதன் பலாபலன்களை, கிரிவல தரிசனங்களிலும், இரவில் அபூர்வமாகக் கேட்கும் கிளிகளின் தேவ சப்தம், உலவாக்கிளி எனும் அபூர்வமான பட்சியின் தரிசனம், கீரிப் பிள்ளை தரிசனம், கழுதையின் சுப தரிசனம் போன்றவை மூலமாக, கத்ர சக்திகளின் பரிமாணங்களை நிரவுகின்றார். சற்குரு தரும் இத்தகைய பொக்கிஷங்களை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தர்ப்பண மகத்துவம் |
எள்ளும், நீரும், எழில் தர்பையுடனே சொல்லிய அருள்தரு தர்ப்பண மகத்துவம்!
தேவகடன், ரிஷிகடன், பித்ருகடன் ஆகிய மூன்றும் அதிகமான அளவில் ஒருவரிடம் சேர்ந்திடும் போது, இவையாவும் பணக் கடன்கள், உடற் பிணிகள் போன்ற வல்வினைகளாய் மனிதனுக்கு உரைக்கப்படுகின்றன எனவும், பித்ருத் தர்ப்பண பூஜைகள் பலவும் பணக்கடன் சுமையைத் தணிக்க வல்ல ஆன்ம சாதனங்களாகும் எனவும் கடந்த இதழில் தக்க விளக்கங்கள் மூலமாக இதுகாறும் அறிந்தோம் அல்லவா!
பலவகையான பித்ரு கடன்களை, சாபங்களையும் தீர்த்து, கடன் சுமையையும் தணிக்கும் மிக எளிய, பாமரரும் பண்ண வல்ல பூஜையாகப் பித்ருத் தர்ப்பணம் விளங்குவதால், தர்ப்பண பூஜையை, அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண நாட்கள் தோறும் மகத்தான சமுதாய பூஜையாக நிகழ்த்துதல், நாட்டின் சுபிட்சத்திற்கும் நன்கு வழி வகுக்கும்.
அக்னி அஸ்திர சக்திகள் நிறைந்த எள்!
பித்ருத் தர்ப்பணத்தில் தர்பையும், எள்ளும் மிகவும் ஆன்ம முக்யத்துவம் கொண்டவையாம். எள் என்பதைச் சித்புருஷர்கள் “திலவணுத் திறள்” என்றும் உரைக்கின்றார்கள். அணுகுண்டு என்றாலேயே தற்போது அலறுகின்றதன்றோ இப்பூவுலகம்! ஆனால் இந்த அணுகுண்டு போன்ற அக்னி வகை பாண ரசாயனச் சூத்திரங்கள் பலவும் ஒரு சிறு எள் மணியில் அடங்கியுள்ளன என்பது பலரும் அறிந்திடாத ஒரு தெய்வீக ரகசியமாகும். ஆனால் அழிவை ஒட்டிய எக்காரியத்திற்கும் இம்மெய்ஞானச் சூத்திரங்கள் பயன்படாமற் போகும் என்பதும் குறிப்பிடத் தக்கதாம். ஆக்கலுக்கு ஆனதே ஆன்மீக விஞ்ஞானமே அன்றித் தற்காலப் போர் முறை ஆயுத விஞ்ஞானம் போல் அழிவுப் பாதை வகுப்பதற்கல்ல!
திருவெறும்பூர்
அணுகுண்டிற்கும், எறும்பிற்கும், எள்ளிற்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு. எறும்புகளின் குலதேவைகளில் ஒன்றே திலதான்யாம்பாள் ஆவாள். திருச்சி அருகே திருஎறும்பூரில் எறும்பீஸ்வரர் ஆலயத்தில் வழிபடும் தேவாதி தேவ மூர்த்தி! எறும்புகளும் அமாவாசை மற்றும் குறித்த சில திதிகளிலும், எள் தான்ய மணிகளை வைத்துத் திலதான்யாம்பாள் தேவியை உபாசித்து, வழிபாடு செய்கின்றன. இதனால் தாம் எத்தகைய பூகம்பம், சூறாவளியையும் முன் கூட்டியே அறிய வல்லனவாய் எறும்புகள் விளங்குவதுடன், கடும் அணுகுண்டு வெடிப்பிலும் பல வகை எறும்புகள் அழியாது பிழைக்கின்றன என்பதும் நாம் அறிய வேண்டுவனவாகும்.
இதே போன்று, எத்தகைய அணுகுண்டு வெடிப்பிலும், எள் தான்யமானது சிதைவுறாது, எவ்வித பங்கத்திற்கும் ஆளாகாது நிலைத்து நிற்கின்ற தன்மையைப் பெற்றுள்ளதால் தான் எள்ளைத் “திலவணுத் திறள்” என்று சித்தர்கள் விளக்குகின்றார்கள்.
ஆக்கப்பூர்வ ஆன்மீக மெய்ஞானம்!
இக்காலத்தில் வெறும் அழிவை நோக்கியே செல்கின்ற பல விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகள் உண்டு. இதற்காகக் கோடி, கோடியாய்த் திரவியங்களும், செல்வமும் விரயமாகின்றன. ஆனால் ஓர் அணுகுண்டு போன்ற பல அக்னி அஸ்திர சாத்திர மெய்ஞானச் சூத்திரங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள எள் தான்ய மணியின் ஆன்மீக சக்திகளை இவ்வுலகம் இதுவரையில் அறியாமல் இருப்பதேனோ?
இவை தக்க சற்குரு மூலமாகவே, மெய்ஞான வழிகளுக்கே அளிக்கப் பெறுவன! அனைவரும் அறிய முற்படலாகாது! முற்படினும் கிட்டாது. ஏனெனில் இதனைத் தவறாகப் பயன்படுத்தி வலிய நாடுகள், மெலிந்த நாடுகளை நசுக்க முற்படும் அன்றோ!
அல்லல்போம்! வல்வினைபோம்!
அணுகுண்டு போன்ற அழிவுடைப் பொருளை வெடிக்காமல், அதைச் செயல் இழக்கச் செய்து, உலகத்தையும், உலக ஜீவன்களையும், பாதுகாக்க வேண்டும் என்றால் எறும்புகளையும், எள் தான்ய மணிகளையும் கொண்டு, காப்பு பூஜைகளாக இதனை எளிதில் நிறைவேற்றிடலாம். இதற்கான வேத சூத்திர, சூக்த, சக்கர, யந்திரக் காப்பு வழிபாடுகள் நிறைய உண்டு. இவற்றிற்கு மூலமாமுனியே பிப்பலாத மகரிஷி ஆவார். பண்டைய யுகங்களில் அணுகுண்டினும் பிரம்மாண்டமான பிரம்மாஸ்திரங்கள் இவருடைய தவத்தின் முன் செயலற்றுப் போகும்! எனினும் இவர் கைவசம் எப்போதும் இருப்பதோ வன்னி மரச் சமித்தும், ஓடவள்ளி எனும் மூலிகை இலையில் சுருட்டி வைக்கப்பட்ட எள் தான்ய மணிகளுமே ஆகும்.
குறித்த மாமந்திர மணி யந்திரத்தின் மீது வைக்கப்பட்ட எள் தான்ய மணிகளை எத்தகைய அணுகுண்டு போன்ற அழிவு சக்திகளும் எத்தகைய விளைவையும் ஏற்படுத்த முடியாது. இதற்குக் காரணம், காக்கும் கடவுளாகிய ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் திருமேனியில் இருந்து உதித்ததே எள் தானியமாதலால், எள்ளிற்குள் இயற்கையாகவே காக்கும் சக்திகள் நிறைய உண்டு.
எள்ளின் “காப்பே காப்பு”!
இதற்காகத்தான் சுவாமிக்கான தைல பூஜையை, தைலக் காப்பு, எண்ணெய்க் காப்பு, திலக் காப்பு என்று “காப்பு” சகிதமாய் உரைத்து “காப்பு” என்பதில் பல ஆன்ம சக்திகளைப் பதிக்கின்றனர். எனவே நல்லெணெய் தேய்த்து நீராடும் வழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி வந்தால், எத்தகைய கொடிய நோய்களிலிருந்தும் தற்காத்துக் கொள்கின்ற அதியற்புதக் “காப்பு சக்தியைப்” பெற்றிடலாம்.
இவ்வாறாகப் பல தற்காப்பு சக்திகளைக் கொண்ட எள் மணிகளைக் கொண்டு, பலவிதமான ஆகர்ஷண சக்திகள் உடைய தர்ப்பைகளுடன் சேர்த்து, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிக்கையில், நீர், எள், தர்ப்பை மூன்றுமே மெய்ஞான ரீதியாகப் பல அற்புதமான வேத சக்திகளை, யந்திர சக்திகளாக உருவாக்குகின்றன. இவை பூமியிலிருந்து ஆகாச மார்கமாகவும் பித்ரு லோகங்களை அடைவதும் உண்டு அல்லது எள் தான்ய மணிகளில் ஆவாகனமாகும் பித்ருக்களை நேரடியாகவே சென்று அடைவதும் உண்டு.
நாம் தர்ப்பணம் அளிக்கின்ற வெள்ளி, செம்பு, வெண்கலத் தாம்பாளம், உத்தராணி மரத் தாம்பாளம் போன்றவற்றில் ஆவாகனமாகின்ற பித்ரு மூர்த்திகள், பித்ரு தேவதைகளையும் இவை நேரடியாகவும் சென்றடைவதும் உண்டு. இவ்வாறாக, நாம் மிகவும் சாதாரணமாக, எளிமையானதாக, செலவில்லாமல் இருப்பதாக, நினைக்கின்ற தர்ப்பணப் பூஜையானது, பித்ரு மூர்த்திகளுக்கு மிகுந்த ப்ரீதியையும், ஆனந்தத்தையும், பலாபலன்களையும் அளிக்கின்றது.
எனவே, அமாவாசை, மற்றும் வருடாந்திரத் திவசம் அல்லது படையல் நாளில் மட்டும் அல்லாது, தினந்தோறும் தர்ப்பணம் அளித்து வருதலால், பித்ருக் கடன்கள் எளிதில் நிவர்த்தியாக வழி பிறப்பதால், பணக் கடன் சுமைகளும் தணிய நல்வழி கிட்டும். தர்ப்பணம் என்றால் அமாவாசை அன்று மட்டுமே அளிப்பது என்று பலரும் எண்ணுகின்றார்கள்! அக்னிஹோத்ர தினசரி அக்னி வழிபாடு போல நம் முன்னோர்கள் தினசரித் தர்ப்பணம் இட்டுச் செழித்து வாழ்ந்தனர். எனவே தாங்க முடியாத அளவு நிறையக் கடன்களால் அவதியுறுவோர், தினமும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்து வந்தால், முதலில் பித்ருக் கடன்கள் ஓரளவு நிவர்த்தியாகி, பிறகு பணக் கடன் சுமைகளும் நாளடைவில் தணியும் என்பது மகத்தான கடன் நிவர்த்திப் பரிகாரங்களுள் ஒன்றாக ஆகின்றது.
ரிஷிகடன் தீர்ப்பு
நாம் பஞ்சாங்கத்தில் காண்கின்ற பலவிதமான விரதங்கள், பண்டிகைகள் அனைத்துமே மகரிஷிகளாலும், மகரிஷிப் பத்னிகளாலும் கடைபிடிக்கப் பெற்று, இதன் பலாபலன்கள் யாவும் பூலோக ஜீவன்களின் மேன்மைக்காக அந்தந்த நாளில் பூஜைகளை அனுஷ்டிப்போர்க்குக் கிட்டுவதாக அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். ஆனால் இத்தகைய விரதங்களை, பண்டிகைகளைக் கடைபிடித்தால் தாமே எவரும் இப்பலன்களைப் பெற இயலும், இவற்றின் மகிமைகளை எடுத்துரைக்கின்ற சற்குருமார்களையும், பெரியோர்களையும் சமுதாயம் மதிப்பதில்லை. நடப்புக் காலத்தில் மனித சமுதாயம் பலவிதமான விரதங்களை, பூஜைகளைம் மறந்து விட்ட காரணத்தால் தான், தனித்தும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்குமான விரத சக்திகள் குறைந்து, எண்ணற்ற இன்னல்களுக்கு மக்கள் கலியுகத்தில் ஆளாகி உள்ளனர். எனவே இயன்ற வரையில், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொருவரும், மாதந்தோறும் சில விரதங்களை, பண்டிகைகளையாவது கடைபிடித்து வந்தால் தான் ரிஷி கடன் என்று கூறப்படுகின்ற நம் குல மாமுனிகளுக்குத் தீர்க்க வேண்டிய நன்றிக் கடனை ஓரளவேனும் செலுத்தித் தீர்க்க இயலும்.
நம் மூதாதையர்களுடைய வம்சாவளி இரத்த அணுக்கள் நம் உடலில் தோய்ந்து இருப்பதால், நாம் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களைக் கண்டிப்பாகப் பல வழிபாடுகள், தான தர்மங்கள் மூலமாக எவ்வகையிலேனும் செலுத்தியாக வேண்டும். எள்ளும், நீரும் வார்த்தலாகிய மிகமிக எளிமையான தர்ப்பணமே, பித்ருக்களுக்கு மகத்தான ஆனந்தத்தைத் தரவல்லது எனில் நம் குலமாமுனிகளுக்கும், ஆதி மாமுனிகளுக்கும் நாம் கடைபிடிக்கின்ற பூஜைகளும், விரதங்களும் பண்டிகைகளுமே அவர்களுக்கும் மகத்தான பலன்களை அளித்து, நமக்கும் சந்ததி, சந்ததியாகவும் அவை வர்ஷிக்கும் அல்லவா! அவர்கள் நன்கு பக்தியுடன் கடைபிடித்து மகிழ்ந்த விரதங்கள் ஆதலின், அந்தந்த விரதத்தில் படிந்துள்ள தபோபலன்கள் யாவும் அவற்றை முறையாகக் கடைபிடிக்கின்றவர்களுக்கும் தாராளமாக வந்து சேர்ந்திடும்!
தேவ கடன் தீர்ப்பு!
அடுத்தபடியாக, தேவகடன் என்பது நாம் கடைபிடிக்க வேண்டிய அக்னி வழிபாடுகள், சூரிய வழிபாடு, நட்சத்திர வழிபாடுகள் போன்றவற்றைக் குறிக்கின்றன.
வருடத்திற்குப் பன்னிரெண்டு முறைகளாவது முறையான ஹோம வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். தான் செய்யாதது மட்டுமல்லாது, ஆலயங்களில் கடைபிடிக்கப்படுகின்ற ஹோம வழிபாட்டிலும் பலரும் பங்கு கொள்வதும் கிடையாது. எனவே ஆலய ஹோம பூஜைக்குத் தேவையான பசுநெய், ஆஹூதிகள், நவதானியங்கள், நெய் போன்ற 108 ஹோமத் திரவியங்களையாவது வாங்கிக் கொடுத்து, ஹோமத்தை நடத்திடத் துணை புரிந்து, இயன்ற புண்ணிய சக்தியையாவது பெற்றிடல் வேண்டும். இவ்வகையிலே தேவ கடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகிய மூன்றையும் நீக்கினால்தான் பலவிதமான வாழ்க்கைக் கடன் சுமைகளை நாம் தணித்திடல் முடியும்.
இத்தகைய மூதாதையர் வழிபாடுகளை நாம் முறையாக நிறைவேற்றாத போது, இவை பணக் கடன்களாக வந்து நம்மை வருத்துகின்றன. எனவே வெறுமனே பிராயச்சித்தப் பரிகாரங்களை மட்டுமே செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்காமல், தேவகடன், பித்ரு கடன், ரிஷி கடன்களை நிவர்த்தி செய்வதற்கான நல்வழி முறைகளையும் நம் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்தல் வேண்டும். இம்மூன்று கடன் சுமைகளும் நம் வாழ்க்கையில் பெருமளவு குறைந்தால்தான் ருணவிமோசன பூஜை, மகாலக்ஷ்மி வழிபாடு போன்ற செல்வ கடாட்ச பூஜைகளில் பரிபூரணமான நல்ல பலன்கள் கிட்டும். அதுவரையில், முதலில் இத்தகைய வழிபாடுகளின் பலாபலன்கள் தேவகடன், ரிஷிகடன், பித்ருகடன்களை தீர்ப்பதற்கு பயன்படும். இதன் பிறகுதான் பணக் கடன்கள் தீர்வதற்கும், செல்வ விருத்திக்கும் நல்வழிகள் காட்டப் பெறும்.
எனவே பணக்கடன்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை உணர்ந்து கொண்டால்தான் அவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வழிமுறைகளைப் பெற முடியும்.
மிருத்யு தோஷ, மரண தோஷ நிவர்த்திக்கு உதவும் நேமம் திருத்தலத் தர்ப்பணம்
நம் வாழ்வில், பல வழிகளிலும், கல் குத்துதல், ஊசி, பிளேடு, கத்தி, தகரத்தால் ரண காயம் போன்ற வகையில் அடிக்கடி ஏதேனும் ஒரு வகையில் காயங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்கு ருணவத வினைகளே காரணமாகும். விபத்துக்களில் அடிபட்டு இறப்பது ஒருவகை துர்மரணமே! இயற்கையான வழியில் அன்றி வேறு எவ்வகையில் மரணம் வருவதும் சிறப்புடையது அல்ல! விதிக்கு ஏற்றபடிதான் அனைத்தும் நடக்கும் என்றாலும், தீவினைகளைத் தணித்து, அகற்றி, நற்காரியங்களைப் பெருக்கினால், ருணவத இம்சைகளை, துர்மரண தோஷங்களை, மிருத்யு தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்து விடலாம். தன் வாழ்வை, நற்காரியங்களுடன், நற்சிந்தனைகளுடன், பிறருக்குச் சேவை, நன்மைகள் செய்வதாக வாழ்பவர்க்கு, மரணம் என்பது ஒரு வேதனையான முடிவாய்த் தோன்றாது. ஆனால் குரு அருள் இல்லாது இந்த உத்தம நிலையைப் பெற முடியாது.
அமாவாசையன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் சென்னை -பூந்தமல்லி – வெள்ளவேடு அருகே உள்ள நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயத் திருக்குளத்தில் தர்ப்பணம் அளிப்பது, விபத்தில் இறந்தோர்க்கான நற்கதிக்கான நல்வழிமுறைகளை அளிக்கும். இயந்திரங்களை ஓட்டிப் பணிபுரிவோரும், மேற்கண்ட வகையில் ரணம், அடிபடுதல், காயம் அடைந்தோரும், இராணுவம், காவல்துறை, கன ரகத் துறையில் இருப்போரும், இங்கு நேமத்தில் பலாமரப் பலகையில், கால்கள் கீழே படாவண்ணம் நன்கு அமர்ந்து, அமாவாசையில், செவ்வாய் ஹோரை நேரத்தில், மூதாதையர்க்கும், விபத்தால் இறந்தோர்க்கும் தர்ப்பணம் அளித்து, ஓடுவகைப் பழங்களையும் (விளாம்பழம், மங்குஸ்தான், தேங்காய்), மூடு வகை சமையல் உணவுப் பண்டங்களையும் (கொழுக்கட்டை, இடியாப்பம், இட்லி, சுய்யம், போண்டா போன்றவை) தானமாக அளித்து வர, நல்ல காப்பு சக்திகளைப் பெறுவர். நஷ்டங்கள், சேதங்கள், திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல தீர்வுகளையும் பெறுவர்.
தன்வந்த்ரீ மாமுனி |
யாவரும் மாமுனி வழி வந்தவரே!
நாமனைவரும், ஜாதி, மத, குல, இன பேதமிண்றி ஒவ்வொரு மகரிஷியின் வழிவந்தவர்களே என்பதை முதலில் நன்கு அறிந்து கொள்ளுங்கள்!
கோத்ராதிபதிகளை அறியாதோர் ஒவ்வொருவரும், தாம் எம்மகரிஷி வழிவந்தோர் என அறியும் பாங்கினை, இத்தொடரில், சித்தர்களின் “மாமுனிப் பதியவடிகம்” என்ற முறைப்படி அளிக்கின்றோம்.
தன்வந்த்ரீ மகரிஷி கோத்திரம் என்ற ஒன்றுண்டு. அதாவது தன்வந்த்ரீ மாமுனியை, மூல மாமுனியாகக் கொண்டிருப்பவர்கள் தன்வந்த்ரீ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோத்திர ரிஷிகள் (தமிழில் மூலமாமுனிகள்) உண்டு. இதே போல, மூலமாமுனிகள் வழிவரும் மிகவும் பிரசித்தி பெற்ற ப்ரவர ரிஷிகளும் (தமிழில் முத்திரை மாமுனிகள்) நிறைய உண்டு என ஏற்கனவே கண்டோம். ஒவ்வொருவரும் தம் மூலமாமுனி, முத்திரை மாமுனிகளை அறிந்து, தினமும் ஆறு வேளைகளிலும் போற்றித் துதித்து வர வேண்டும்.
தன்வந்த்ரீ மாமுனி தந்த ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தி உபாசனை!
ஸ்ரீஏரண்ட மகரிஷி
கொட்டையூர்
ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தி, பாற்கடலில் அமுதம் தோன்றியபோது தான் அமிர்தக் கலசத்தவராய் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றினார் என்றே பலரும் எண்ணுகின்றனர். ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தி, அதற்கு முன்னரேயே பல லோகங்களிலும் வழிபடப் பெற்றவர் ஆவார். பூலோக வழிபாட்டிற்காகவே பாற்கடல் அமிர்தகாரண வைபவம் மூலமாக, திருமால் லீலையாக, ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தி மீண்டும் விசேஷமாகத் தோன்றினார் என்பதே உண்மை. தன்வந்த்ரீ மகரிஷி தாம் ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தியை, வழிபாட்டுத் தெய்வமாக மக்களுக்கு உணர்த்தி, தாமும் அவரை வழிபட்டு, இப்பூவுலகிற்கு ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு உபாசனையை, வடிவை, பூஜை முறைகளை அளித்தவர் ஆவார்.
ஆத்ரேய கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஆத்ரேய மகரிஷியின் வடிவமாக, ஸ்ரீஹேரண்ட மாமுனியின் திருஉருவம் கும்பகோணம் அருகே கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர் ஆலயத்தில் காணக் கிடைப்பது போல, தன்வந்த்ரீ மகரிஷியின் பல யுகாந்த்ர வடிவங்கள் சில ஆலயத் தூண்களில் கிட்டுகின்றன.
மருத்துவர்க்குரிய மாமுனி!
கடவுளுக்கான உருவ வழிபாடுகள் தோன்றாத ஆதிகால பார்த்திப யுகத்தில், மாமந்திரங்கள் சப்த வடிவிலும், தீபங்கள் ஜோதி வடிவிலும் கடவுளின் வடிவை உணர்த்தின. இக்கால கட்டத்தில் தன்வந்த்ரீ மகரிஷி, தாம் தரிசித்த ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு மூர்த்தியின் வடிவைப் பலவிதமான ஜோதிகளில், மந்திர சப்த வடிவாக அமைத்துத் தந்திட்டார்.
தன்வந்த்ரீ மகரிஷி மூலமாமுனியாக விளங்கிட, இவர் வழிவந்த முக்கியமான முத்திரை மாமுனிகளாக காஸ்யபர், சாண்டில்யர், ஆஸிதர், தைவலர் ஆகிய மகரிஷிகள் துலங்குகின்றனர். இவர்களும் ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணு உபாசனையைப் பரப்பிட அரும்பணி ஆற்றினர். இவர்கள் யாவரும் கோதாயன அம்சங்களைக் கொண்டவர்கள்.
ஆங்கில மருத்துவத்துறை டாக்டர்களும், (Allopaths) ஹோமியோபதித் துறையினரும், தமக்குரிய கோத்திரத்தை, தம்முடைய மூலமாமுனியை அறியாவிடில், தன்வந்த்ரீ மகரிஷியைத் தம்முடைய மூலமாமுனியாகக் (கோத்ராதிபதி) கொண்டு வழிபட்டிட வேண்டும். காஸ்யபர், சாண்டில்யர், ஆவத்சாரர் ஆகிய மூன்று மகரிஷிகள் இவர்களுக்கான முதல் முத்திரை மாமுனிகள் (ப்ரவர ரிஷிகள்) ஆவர்.
தன்வந்த்ரீ மகரிஷியைத் தமிழிலே மருத்துவச் சித்தர் என்று உரைக்கின்றனர். சித்த வைத்தியத் துறை மற்றும் இயற்கை மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் தன்வந்த்ரீ மகரிஷியை, மூலமாமுனியாகவும், காஸ்யபர், சாண்டில்யர், ஆஸிதர் ஆகிய மகரிஷிகளை முத்திரை மாமுனிகளாகவும் ஏற்று வணங்குதல் வேண்டும். இவர்கள் வைதீஸ்வரன் கோயிலில் உள்ள தன்வந்த்ரீ சித்தரின் வடிவை மூலமாமுனி வடிவாக ஏற்று வழிபடலாம். எனினும் கோத்திராதிபதிகளை அறிந்தோர் அவர்களையே வணங்கி வருதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுர்வேத மருத்துவத் துறையினர், தமக்குரிய கோத்ராதிபதியை அறிய இயலாவிடில், தன்வந்த்ரீ மகரிஷியை மூலமாமுனியாகக் கொண்டு காஸ்யபர், ஆஸிதர், தைவலர் ஆகிய மூன்று மகரிஷிகளை முத்திரை மாமுனிகளாக ஏற்று வழிபடுதல் வேண்டும். எவ்வாறு குலமாமுனிகளையும் முத்திரை மாமுனிகளையும் வழிபடுவது?
பெரியோரை வழிபட அபிவந்தன மந்திரத் துதி!
பொதுவாக, கடவுளை வணங்குவதற்கு முன், நம் பெரியோர்களை, பெற்றோரை, குலகுருவை எண்ணிப் போற்றுவது மிகவும் அவசியமானது. பெரியோர்களை வணங்கும் போது, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வணங்குதல் சிறப்புடையதாகும். இதனை அபிவந்தன மந்திரம் என்று சந்தியாவந்தன மந்திரங்களில் குறிப்பார்கள்.
சந்தியா வந்தன மந்திரங்கள் ஜாதி, இன, வேறுபாடின்றி யாவர்க்கும் உரித்தானதாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியோர்களை வணங்கும் போது, பணிவுடன் தலை வணங்கிக் குனிந்து, கைகளால் இரு காதுகளையும் தொட்டவாறு, “குறிப்பிட்ட மகரிஷியை மூலமாமுனியாகக் கொண்டு, குறித்த சில முத்திரை மாமுனிகளின் வம்ச வழியாக வந்த அடியேன், தங்களுடைய ஆசிகளை வேண்டுகின்றேன்!” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பெரியோர்களை வணங்குவது அபிவந்தன வழிபாடு ஆகும். எனவே, தன்வந்த்ரீ மகரிஷியை மூலமாமுனியாக ஏற்றோர்,
“தன்வந்த்ரீ மாமுனித் தண்டலமே!
காஸ்யபர், ஆவத்சாரர், சாண்டில்ய
முத்திரை மாமுனிப் பராபரலாய்,
அடியேன் கதித்தளிக்கும் நன்னா!
வீழ்ந்தேன் நின்திருவடி,ஆசி கோரியே!”
என்று சொல்லிப் பெரியோர்களை வணங்குதல் வேண்டும். இதுவே தமிழ் (மு)மறை அபிவந்தன மந்திரம்.
தமிழும், தேவமொழியும் இறைவனின் இரு கண்களே!
சர்வேஸ்வரனின் வல, இடக் கண்களாகத் தேவமொழியும், தமிழ் மொழியும் துலங்கி, உலக மொழிகள் யாவைக்கும் இவ்விரு தெய்வ மொழிகளும் அம்மையப்பனாய்ப் பிரகாசித்தல் குறிப்பிடத்தக்கதாம். மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத் தமிழ் மறை சர்வேஸ்வரனால் முத்திரை செய்து அளிக்கப் பெற்றதாகும். சமயக் குரவர்களுக்கு ஈஸ்வரனே தமிழ் மறைப் பாவிற்கு “அடியெடுத்துக் கொடுத்த” அனுபூதிகள் தமிழ் மறைகளின் சிறப்பை உணர்விக்கும். எனவே வேதமென்பது சப்த வடிவில் இறைவனை உணர்விப்பதால், தேவமொழி மறை, தமிழ் மொழி மறை என வேறுபாடு காணாது, ஜாதி, மத, பேதமில்லாது அவரவரால் இயன்ற வேத மந்திரங்களை ஓதி வருதல் வேண்டும்.
பல மேல் நாட்டு ஆங்கில அறிஞர்களும், இறையடியார்களாக, வேதங்களைப் பற்றிச் சிறப்பான நூல்களைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்து மாமறைகளின் திரட்சியாகத் துலங்கும் ஸ்ரீகாயத்ரீ மகா மந்திரம் சகல ஜீவன்களுக்கும், உலக மக்கள் யாவருக்கும் உரித்தான முத்திரை மாமந்திரமாகப் பிரகாசிக்கின்றது.
ஜீவாலயங்களில் அபிவந்தனத் துதி!
இறைவனின் தூதுவர்களாக விளங்கும் சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதி, ஜீவாலயங்கள், அதிஷ்டானங்கள் பிருந்தாவனங்களில் இந்த அபிவந்தனத் துதியை ஓதி வணங்கிடுக! தூய துறவியரை நேரில் கண்டு வணங்குகையில், அபிவந்தனம் ஓதுதல் அல்லாது, தம் பராபர சற்குருவின் ஸ்வரூபமாக எண்ணி வணங்கும் வழக்கமும் நிலவுகின்றது.
இதே போல, மற்ற மாமுனிகளின் நாமங்களை வைத்து அந்தந்த கோத்திரத்தார், நாம அபிவந்தனத்தைக் கூறிப் பெரியோர்களை வணங்கிடலாம். நம் முன்னோர்களுக்கும் முன்னோர்களான மாமுனிகளின் “ரத்த பந்த அணுக் கூறுகள்” நம் உடலிற் பொலிவதால் குலமாமுனிகளை நாம் நிச்சயமாக அறிந்து கொண்டு வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும்.
ஆயிரக் கணக்கிலே, மூலமாமுனிகளின் பெயர்கள் இருந்தாலும், காலப்போக்கிலே பலரும் முக்கியமான மகரிஷிகளை மறந்து விட்டமையால், ஆத்ரேயர், பாரத்வாஜர், ஸ்ரீவத்சர் போன்ற முக்யமான கோத்திர மாமுனிகளையே பலரும் ஞாபகம் கொண்டிருக்கின்றார்கள். சித்தர்களின் பேரருளால், மாமுனி அறநினைவு வழிபாடானது சற்குருமார்களின் குருவருளால், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் தற்போது மீண்டும் ஆத்மீகப் புத்துணர்ச்சி பெறுகின்றது.
தன்வந்த்ர மகாசக்தி ததும்பும் திருத்தலங்கள்
தன்வந்த்ரீ மகரிஷி வழிபட்ட திருத்தலங்கள் பல உண்டு. பொதுவாக, ஹோம வழிபாடு ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியானதாகும். ஸ்ரீதன்வந்த்ரீ மகரிஷியை மூல மாமுனியாக, கோத்ர ரிஷியாக ஏற்றோர், ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில், கேரளாவில் திருச்சூர் அருகிலுள்ள நெல்லுவாய்புரம் ஸ்ரீதன்வந்த்ரீ ஆலயம், குருவாயூரப்பன் ஆலயம், திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவஔஷதீஸ்வரர் ஆலயம், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் போன்ற ஆலயங்களில் ஹோம பூஜைகளுடன் அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும்.
தன்வந்த்ரீ மகரிஷி குலத்தைச் சார்ந்தவர்கள், பசு, எருமைகளுக்கு அகத்திக் கீரை அளித்தல், ஏழைகளுக்குக் கீரை வகை உணவுகள் மற்றும் மருந்து வகைகளை இலவசமாக அளித்தல் போன்ற முக்கியமான இறைப் பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் ஆற்றி வருதல் வேண்டும்.
சென்ற இதழில் நாம் குறித்துள்ளது போல, பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய தலங்களில் ஒன்றே திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் சிவாலயம் ஆகும்.
தீபாவளி |
தீபாவளி அன்று ஏற்றப்படும் எந்த வீட்டு, ஆலய தீபத்திலும் ஸ்ரீகிருஷ்ணரே தம் திருக்கரங்களால் கிருஷ்ணாங்காரக தீப ஜோதியை உற்பவிக்கின்றார்!
தீபாவளிப் பண்டிகையின் மகத்துவத்தைப் பலரும் நன்கு உணர்வதில்லை. ஏதோ புது டிரெஸ் போடுவது, வெடி வெடிப்பது என்ற அளவில் மட்டும் தீபாவளியை அனுசரித்து விடுகின்றனர். மேலும், பெரும்பாலோர் ஸ்ரீகிருஷ்ணனால் நரகாசுரவதம் நிகழ்ந்த வைபவமே தீபாவளி என்றளவில் மட்டுமே புனிதமான தீபாவளி பண்டிகையைப் பற்றி நினைக்கின்றனர். தீபாவளி அன்று எண்ணற்ற புராண சம்பவங்கள், பல யுகங்களிலும் நிகழ்ந்துள்ளன.
கலியுக அசுரர்கள்!
நரகாசுரன், ஹிரண்யாட்சசன், ஹிரண்ய கசிபு, கம்சன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் புராண காலத்தோடு ஓய்ந்து விட்டார்கள் என எண்ணாதீர்கள். ராவணனை விட அதிபயங்கரக் காமாந்தக, அசுர, பகைமை, குரோத, விரோத, பொய்மை எண்ணங்களுடன் இருக்கின்ற கலியுக மனிதர்கள் உண்டு. மனம் சுத்தமின்மைக்குக் காரணமே அசுரத்தனமாக தீய எண்ணங்கள் உட்புகுதல்தாம்.
கோபம், விரோதம், பகைமை, குரோதம், முறையற்ற காமாந்திர எண்ணங்கள், பழி வாங்கும் எண்ணம், வஞ்சகம், பொய்மை, இவை யாவுமே அசுர எண்ணங்களே!
அதாவது கலியுக மனிதன், ஆறறிவுப் பகுத்தறிவுடன் முழுமையான மனிதனாக வாழாது, பலவிதமான கேவலமான எண்ணங்களுடன், பல வகைகளில் அசுரனாகவும் வாழ்கின்றான் என்பது இதன் மூலம் புலப்படுகின்றது அல்லவா! இத்தகைய அசுர எண்ணங்களின் தீய விளைவுகளை உணர்த்தி, இவற்றை அகற்றும் வழி முறைகளையும் பூவுலகிற்கு அளித்திடவே, ஸ்ரீகிருஷ்ணனின் நரகாசுரவத லீலை நிகழ்ந்தது!
நரகாசுரன், தான் அசுரத்தன்மைகளால் பிறர்க்குத் தீங்கிழைத்தது போல் வேறு எவரும் செய்து, பாவச் சுழலில் சிக்கலாகாது என்பதற்காகவே ஸ்ரீகிருஷ்ணனிடம் பல நல்வரங்களையும், அருள்வழி முறைகளையும் வேண்டிப் பெற்றான். இத்திருநாளே தீபாவளி! அசுரன் திருந்திய நாள்! கலியுகத்திலும் மாசுபட்ட அசுர எண்ணங்களை அகற்றத் துணை புரியும் புனிதமான நன்னாள்!
சிவகங்கை தீர்த்தம்
லால்குடி
ஸ்ரீகிருஷ்ணன் சதுர்த்தசிக்கு ஊட்டிய தேவசக்திகள்!
ஐப்பசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியாகிய மாத சிவராத்திரி நாளை (தீபாவளி நாள்) மாதவ ஜோதித் தீப வகைப் பூஜைத் திருநாளாக அமைத்துத் தந்து, அசுர மாயைகளை, அசுரத் தன்மைகளை, தீய சக்திகளை அகற்றும் மகத்துவத்தை இச்சதுர்த்தசித் திதிக்குத் தந்தருளுமாறு ஸ்ரீகிருஷ்ணரை, நரகாசுரன் வேண்டினன். இதனால் ஐப்பசி மாதக் கிருஷ்ண பட்சச் சதுர்த்தசித் திதிக்கு, தீப ஜோதி சக்தி மூலம் பாவங்களைக் களையும் அபூர்வமான, அரிய தெய்வீக சக்திகளை ஸ்ரீகிருஷ்ணன் அளித்துள்ளார்.
அதாவது அனைத்துத் தேய்பிறைச் சதுர்த்தசித் திதிகளுக்கும் தலைமையானதாகத் துலங்குமாறு, வரத ஜோதிச் சதுர்த்தசித் திதியாக இதனை ஸ்ரீகிருஷ்ணர் ஆக்கித் தந்தார்!
தீபாவளி அன்று, அதிகாலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானே, இன்று பூவுலகெங்கும் ஏற்றப்படும் தீபங்களுக்கான மூலாதார மாதவ ஜோதி சக்திக் கிரணங்களை அளிப்பதால், தீபாவளி நாளில், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், (காலை 3 மணி முதல் 5 மணி வரை) குறைந்தது, 12 தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்பரிசம் தீபத்தில் படுகையில் மாதவ ஜோதியாகி, பகவானின் விசேஷ தீபக் கிரணங்கள் கூடியவுடன் கிருஷ்ணாங்காரக தீபஜோதி சக்தியாக இல்லத்திலும், சுற்றிலும், பரவெளியிலும் நிரவி, தீயசக்திகளை மாய்த்து, நல்ல இறைவள சக்திகளை விருத்தி செய்கின்றது.
தீபாவளியன்று கிருஷ்ணாங்காரகத் தீபம் பொலியட்டும்!
எனவே தீபாவளியன்று அதிகாலையில் ஸ்ரீகிருஷ்ண நாமசக்தியுடன் தீபங்களை ஏற்றி, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!”
என்ற சக்தி வாய்ந்த ஸ்ரீகிருஷ்ண நாமாவளியைக் குடும்ப சகிதமாக ஓதி, தீபங்களை ஏற்றுதல் வேண்டும். இன்று தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்கள் யாவற்றிற்கும் கிருஷ்ணாங்காரக தீபம் என்று பெயர்.
ஸ்ரீஆதிநாதர் வயலூர்
ஸ்ரீஆதிநாயகி வயலூர்
ஸ்ரீகிருஷ்ண பகவான் தீபாவளி அன்று பூவுலகில், அனைத்து விளக்குகளிலும் தம் கிருஷ்ண தீபக் கிரணங்களை அளித்துச் சிறப்பிக்கின்றார். கிருஷ்ண பரமாத்மா தீபாவளி அன்று தாமே முதலில் தீபத்தை ஏற்றி, அதன் முன் தம் புல்லாங்குழலால் கீதம் இசைத்திட, இன்னிசையொலி மூலம் மாதவ ஜோதி பிரபஞ்சமெங்கும் நிரவுகின்றது.
நரகாசுர புராணமன்றி, எத்தனையோ அனுபூதிகளை தீபாவளி நன்னாளில் நிகழ்ந்தன! இன்றும் பிற லோகங்களில் நிகழ்கின்றன. இவையாவும் சித்தர்களின் படைப்பான இருடிகள் ராமாயணம், இருடிகள் மகாபாரதத்தில் காணப் பெறுகின்றன.
… ஒரு கற்ப காலத்தில்.. யமுனா நதி தேவி, ஸ்ரீகிருஷ்ணரை மணக்க வேண்டித் தவம் புரிந்த காலை…
யமுனை நதிக் கரையில், பல்லாயிரம் மகரிஷிகள் கிருஷ்ண பரமாத்மா தலைமையில், வேத சத்சங்கம் நிகழ்த்திட ஒன்று கூடினர். அதிகாலையில் அனைத்து மகரிஷிகளும், அடியார்களும் யமுனா நதியில் நீராடிப் புனிதம் பெற்றிட்டனர்.
யமுனா தேவியோ, ஸ்ரீகிருஷ்ணனின் நீராடல் தருணத்திற்காக, அவர் ஸ்பரிசம் பட்டுத்தான் உய்யவும், மேன்மையும் பெறுவதற்காகக் காத்திருந்தாள்! ஆனால் நெடு நேரமாகியும் கிருஷ்ணன் நீராட வராமையால், வேண்டுமென்றே, கிருஷ்ணன் தன்னை அலட்சியப் படுத்துவதாக எண்ணிய யமுனா தேவி, மிகவும் கோபமுற்று, பலத்த வெள்ளமாய்ப் பெரு(க்)கினாள். ஆனால் இவை யாவும் ஸ்ரீகிருஷ்ண லீலையின் பகுதியென யமுனா தேவி அறியாள்! கரைபுரண்டு வரும் யமுனா நதி வெள்ளம் கண்டு அஞ்சி ஓடிய அடியார்களையும், மகரிஷிகளையும் கிருஷ்ணன் தேற்றி, அவர்களை துர்வாச மாமுனியிடம் தக்க மந்திரத்தைப் பெற்று, யமுனையைக் கடக்குமாறு ஆணையிட்டார்.
ஒரு வரி மந்திரம் பல்லாயிரம் அற்புதங்கள்
துர்வாச மகரிஷியும், “நைஷ்டிக பிரம்மச்சாரியான ஸ்ரீகிருஷ்ணா போற்றி, போற்றி, போற்றி!” என்ற அர்த்தம் பொதிந்த ஒரு வரி மந்திரத்தை அளித்திட்டார். என்னே மந்திரப் பொருள்! திருமணமான ஸ்ரீகிருஷ்ணன், துர்வாசரின் கண்களுக்கு நைஷ்டிக பிரம்மச்சாரியாம்! ஆனால் துர்வாசர் வாக்கு வேதவாக்கு ஆயிற்றே! இறைவனே சோதனை தந்து ஆழ்ந்த இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் லீலை தானே இது!
அப்போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஒரு அகல் தீபத்தைத் தம் கைப்பட ஏற்றி, ஆல மர இலையில் வைத்து, யமுனையில் மிதக்க விட்டார். ஆடியோடி வரும் மிகப் பெரிய யமுனை வெள்ளோட்டத்திலும், ஸ்ரீகிருஷ்ணன் ஏற்றிய அகல் தீபம் அசல தீபமாக, ஆடாது, அசையாது ஒளிர்ந்தது! அனைவரும் இதனை அதிசயமாகக் கண்டனர். துர்வாசர் அளித்த ஒரு வரி மந்திரத்தை ஓதியவாறே, பலரும் யமுனையில் நீராடினர், பலரும் அதனைக் கடந்தனர். இம்மந்திரம் ஓதப்பட்ட இடமெங்கும் யமுனை நீர் விலகி வழி விட, அனைவரும், யமுனையின் பெரு வெள்ளத்திலும் நடந்தே யமுனையைக் கடந்தனர்.
பொருளறியா! அருளறிந்தார்!
மந்திரத்தின் பொருள் என்னவென்று அறியாத பாமரர்களும், பொருளறிந்த அறிஞர்களும், பண்டிதர்களும், “பொருளென் செய்யும், பரந்தாமன் அருளின்கண்!” என்று எண்ணி, ஸ்ரீகிருஷ்ண பக்தியில் திளைத்தமையால், யமுனையின் உஷ்ணமும், வெள்ளப் பெருக்கும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை! யமுனையின் வேக ஓட்டமும், மிகவும் வெட்கமுற்று நாணினள்! அப்போதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஏற்றிய கிருஷ்ணாங்காரக தீபமும், தம் நீரோட்டத்தின் மீது பட்ட அடியார்கள் பாதமும் தம்மை உத்தம நிலைகளுக்கு உயர்த்தியதை யமுனா தேவி உணர்ந்து ஆனந்தம் கொண்டனள்! இதுவும் தீபாவளித் திருநாளின் புராண அனுபூதி ஆயிற்று!
அப்போதுதான், இறைவனே, தம் அடியார்களின் பாதங்களையே பெரிதும் போற்றுவதை உணர்ந்தனள் யமுனா தேவி! யமுனா தேவியும், ஏனையோரும், இறையடியார்களின் திருப்பாத மகிமையை அன்று ஸ்ரீகிருஷ்ணனின் திருவாயால் உரைக்க, அறிந்து பரமானந்தமும் கொண்டனர்.
அடியார் மகிமை சொல்லவும் பெரிதே!
இதன் பிறகும், அந்தத் தீபாவளித் திருநாளில், “இறையடியார்களின் திருவடி மகிமையை” ஸ்ரீகிருஷ்ணரே யமுன கீதையாக அனைவருக்கும் உரைத்தார். இறையடியார்களின் திருப்பாத மகிமை பற்றி இதில் பரிபூரணமாக உரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் தம் திருக்கரங்களால் யமுனையில் தீபமேற்றியதும், யமுன கீதை உரைக்கப்பட்ட நாளும் தீபாவளித் திருநாள் ஆகும்.
மேலும், “தீபாவளி அன்று எங்கு எவ்வகை தீபம் எவரால் ஏற்றப்பட்டாலும், அவ்விளக்கின் அடிப்பகுதியாக, விளக்குப் பாதமாகத் தான் துலங்க வேண்டும்! தீபாவளியன்று எவர் தீபம் ஏற்றிடினும் அதில் ஸ்ரீகிருஷ்ண ஸ்பரிசமும், கிருஷ்ணாங்காரக தீப சக்திகளும் படிய வேண்டும்!” என்ற நல்வரத்தையும் யமுனா தேவி பெற்றனள், நமக்கும் பெற்றுத் தந்தனள்! இது நிகழ்ந்த நன்னாளும் ஒரு யுகத் தீபாவளித் திருநாளே!
எனவே தீபாவளி அன்று, தீபாவளி தீபஜோதியின் மகிமையை அறிந்தோ, அறியாமலோ, உலகெங்கும் எவ்வகை தீபம், எவராலும், எங்கு ஏற்றப்பட்டாலும், அனைத்து விளக்குகளின் பாதமாக, அடிப்பகுதியாக யமுனா தேவி துலங்குகின்றாள். இதனால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஏற்றும் கிருஷ்ணாங்காரக தீப ஜோதியும் அதில் செறிவதாகும்.
அனைத்து விளக்குப் பாதமுமாக யமுனா நதிதேவி!
எனவே, தீபாவளி அன்று, கங்கை ஜலத்தோடு யமுனா நதித் தீர்த்தமும் கலந்து நீராடுவது விசேஷமானதாகும். ஆனால் அனைவராலுமா யமுனா தீர்த்தத்தைப் பெற முடியும்? இதற்கும் ஆன்மீகத்தில் வழிவகை தரப்பட்டுள்ளது! ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிடில், ஆன்மீக தீபமே அனைத்துத் துன்பங்களுக்கும் தீர்வுகளைத் தருவதாகும்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஒன்பது நதி தேவதா மூர்த்திகளின் சிலா ரூபங்கள் ஒரு சேர, தரிசனத்திற்கு, வழிபாட்டிற்கு உள்ளது. இங்கு அனைத்து நதி தேவதா மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, யமுனை நதி தேவதா மூர்த்தியின் திருவடிப் பாத நீரைப் பெற்று யமுனைத் தீர்த்தமாகக் கொண்டிடலாம்.
மகாமகக் குளம், ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், திருஅண்ணாமலை சிவகங்கைத் தீர்த்தம், லால்குடி சிவகங்கைத் தீர்த்தம் போன்ற ஆலயத் தீர்த்தங்களில், அனைத்து நதி மூர்த்திகளும் நீராடி வழிபடுவதால், இத்தீர்த்தங்களிலும் யமுனைத் தீர்த்தம் செறிந்துள்ளது!
எனவே தீபாவளி அன்று பெரியோர்களை நமஸ்கரித்தலும், தீபங்களை நிறைய ஏற்றுதலும், ஏழைகளுக்கு எண்ணெய், சிகைக்காய், கங்கை, யமுனைத் தீர்த்தம், இனிப்புகள் வழங்குதலும் பல கர்ம வினைகளைப் போக்கும் எளிய தெய்வீக வழிகளாகும்.
ஜ்வாலஜல ஸ்நானம்
தீபாவளியன்று விளக்கு, எண்ணெய் தானம் செய்து, நிறைய தீபங்களை ஏற்றி, மனமாரக் கண்டு தரிசித்தலுக்கு ஜ்வாலஜல ஸ்நானம் என்று பெயர்! எவ்வாறு புனித நதி நீரில் மூழ்கிப் பாவம் களைகின்றோமோ, இதே போல பல விளக்குகளின் தீப தரிசனம் செய்கையில், இதன் ஜோதி நீரோட்டம் நம்முடைய உடல் நாளங்களில் பாய்ந்து, நதியோட்டமாய்ச் சுழன்று, உடல், மனம், உள்ளத்தைச் சுத்திகரிக்கும், பாவ வினைகளையும் போக்கும். தீபாவளி அன்று பட்டாசுகளில் எழும் ஒளியும் ஒரு வகை தாரண வகை ஜோதியே ஆகும். அக்காலத்தில் செயற்கை ரசாயனக் கலவை இன்றி, மூலிகா இயற்கைத் திரவியங்களால் வெடி வகைகள் ஆக்கப்பட்டமையால் ஹோமப் புகை போல் இது நன்மை பயத்தது! இதில் எழும் ஜோதியும் பயனளிப்பதாக, விசேஷமாக இருந்தது! காலப்போக்கில் செயற்கை ரசாயனக் கலவையே பட்டாசுகளில் பெருகி விட்டது.
எனவே வரும் தீபாவளி நாளில், ஒவ்வொருவரும் குடும்பத்திலும், ஆலயத்திலும், நதிக் கரைகளிலும் குறைந்தது 108 தீபங்களையாவது ஏற்றி ஸ்ரீகிருஷ்ணாங்காரக ஜோதியாகக் கண்டு வழிபட வேண்டும்.
ஸ்ரீகொன்றையடி விநாயகர் |
அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் மகிமை (புதுக்கோட்டை – திருமயம் – அரண்மனைப்பட்டி – கோட்டையூர் – காரைக்குடி பஸ் மார்க்கம்)
சதுர்த்தித் திதி விநாயகருக்கு மிகவும் ப்ரீதியானது என்பதை நாம் நன்கு அறிவோம். வேத ப்ரமாணங்களிலும் சதுர்த்தித் திதிகளை (வளர்பிறை, தேய்பிறை இரண்டும்) விநாயக சாந்நித்யம் நிறைந்த காலமாக உரைக்கின்றனர். வேத விநாயகர், ஓலமிட்ட விநாயகர், செவி சாய்த்த விநாயகர் என்ற நாமங்களில், விநாயக மூர்த்தி, சதுர்த்தித் திதிகளில், வேதத்தைக் கேட்டவராக, உரைத்தவராக, ஓதியவராக, உணர்விப்பவராகப் பொலிகின்றார்.
மறையொளியும் மறையொலியும்!
இவ்வகையில் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் எவ்வித நாமமும் தாங்காது, வேதம் போல ஒளியொலிப் பிரவாள விநாயகராகப் பிரகாசிக்கின்றார். ஆம் இன்று கொன்றை மரத்தடியில் வடிவு கொண்டவராக விளங்கும் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயக மூர்த்திக்கு மறையொளி, வேதஒலிகள் தாம் விரும்பிய நாமமாகும். இவர் தனிப் பெயர் கொள்ளாது வேதசாரமான கொன்றை மரத்தைச் சார்ந்தே நாமம் கொள்கின்றார் எனில் இம்மூர்த்தியே வேததீப, வேதசப்த நாயகரன்றோ!
ஸ்ரீசெவிசாய்த்த விநாயகர்
அன்பிலாந்துறை
இரண்டு சதுர்த்தித் திதிகளிலும் கொன்றையடி விநாயகரிடம் வேத சக்திகள் சப்த வடிவில் ஒளி வடிவம் கொள்கின்றன. அதாவது வளர்பிறைச் சதுர்த்தியில் இங்கு விநாயகர் ஜோதி (ஒளி) வடிவில் வேத சப்தங்களைப் பரிபூரணித்தும், தேய்பிறைச் சதுர்த்தியில், வேத சப்த வடிவில் வேதஜோதியைப் பரிபூரணித்தும் அருள்கின்றார்.
அதாவது வேதம் என்றால் வெறும் மந்திரங்கள் என்று மட்டும் பொருள் அல்ல. மனிதன் கேட்டு கேட்டு வாழும் தன்மையைக் கலியுகத்தில் பெரிதும் கொண்டிருப்பதாலும், கண்ணால் காண்பதையே நம்பி வாழ்வதாலும், வேதசக்திகள் ஒலிச் சக்திகளும், ஒளி சக்திகளுமாக கொன்றையடி விநாயகரிடம் பரிமளிகின்றன. சதுர்த்தித் திதியில் இங்கு இவை பொங்கிப் புனலாகப் பொழிகின்றன.
தைல சக்திகள் பொழியும் சதுர்த்தி!
அதாவது வளர்பிறை சதுர்த்தித் திதியில் (அமாவாசையில் இருந்து நாலாவது திதியாகிய சதுர்த்தித் திதி) கொன்றையடி விநாயகரிடம் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், நீலிபிருங்காதித் தைலம் (நெல்லித் தைலம்), கரிசலாங்கண்ணித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம், மருதாணித் தைலம், செம்பருத்தித் தைலம், தேங்காய் எண்ணெய் போன்ற அனைத்து வகை எண்ணெய்த் தைல தீபங்களால், விளக்குகளையோ, அகல் விளக்குகளையோ ஏற்றி வைத்து
ஓம் கம் கணபதயே நம:
ஓம் வம் கணபதயே நம:
ஓம் பம் கணபதயே நம:
ஓம் லம் கணபதயே நம:
ஆகிய நான்கு சதுர்த்த விநாயக மந்திர பீஜாட்சரங்களைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் ஓதி, சத்சங்கமாகப் பலருடன் ஒன்று கூடி வழிபட்டு வந்தால் எத்தகைய காரியத் தடங்கல்களும் நீங்கி நற்காரியங்கள் ஜெயம் அடைவதைக் கண்கூடாகக் காணலாம்.
“சார விசாரம்”
மேற்கண்ட நான்கு சதுர்த்த பீஜ மந்திரக் கற்றைக்குச் “சாரவிசாரம்” என்று பெயர். ஜோதியில், சார ஜோதி என்பது இருளில் தோன்றுகின்ற தீபமாகும். ஆலயங்களில் மூலத்தானக் கருவறை இருட்டாக இருப்பது போல் தோன்றும். இதனை இருட்டு என்று சொல்வதே தவறு. தாயின் வயிற்றுள் சிசு உறையும் கருவறையை இருட்டு என்றா சொல்வார்கள்? புனிதமான கரு வளரும் கர்ப்பப் பையினுள் இருக்கும் சுயம் பிரகாச வெளிச்சத்திற்கு “சில்ப ஜோதி” என்று பெயர். மூலத்தானக் கருவறை என்பது இறைவனிடம் இருந்து நாம் தோன்றியதைக் குறிப்பதாகும். இதனால் தான் “மீண்டும் பிறவாமை வேண்டும், பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும்!” என்று நாம் தோன்றிய ஆத்மக் கருவறையை நோக்கியே காரைக்கால் அம்மையார் நமக்குப் பாடித் தந்துள்ளார்.
மூலத்தானக் கருவறைக்குள் கற்பூர தீபாராதனை காட்டும் போது எழும் ஜோதிக்குக் “கற்பஸ்ரீ ஜோதி” என்று பெயர். இக்கற்ப ஜோதியில் நாம் மூலவரைக் காணு போது, எந்த வெளிச்சத்தில் லிங்கமோ, சிலா மூர்த்தியோ தோன்றுகின்றாரோ அந்த வெளிச்சத்திற்குக் “கற்பக ஜோதி” என்று பெயர்.
ஸ்ரீகொன்றையடி விநாயகர்
அரண்மனைப்பட்டி
மூலத்தானத்தில் உள்ள எண்ணெய் விளக்கு காட்டும் வெளிச்சத்திற்கு, தீப ஜோதிக்குக் “கல்ப ஜோதி” என்று பெயர், எந்த மூலத்தான விளக்கு ஒளியில் இறைவனைக் காண்கிண்றோமோ அந்த ஒளிக்கு “கல்பனா ஜோதி” என்று பெயர். இந்த ஜோதிகளில் எத்தனையோ வகைகள் உண்டு.
அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகருக்கான, சதுர்த்தித் திதியில் ஓத வேண்டிய மேற்கண்ட “சதுர்த்த பீஜ விநாயக மந்திரத்தில்”, மூலத்தானக் கருவறையில் காண்கின்ற நான்கு வகை கற்பஸ்ரீ ஜோதி, கற்பக ஜோதி, கல்ப ஜோதி, கல்பனா ஜோதி நான்கும், கம், வம், பம், லம், ஆகிய நான்கு மகா ஜோதி பீஜங்களைக் கொண்டதாகும்.
பிரபஞ்சமே பெருங்கருவறை!
இதில் உள்ள அற்புதம் என்னவென்றால், இங்கு நாம் காணும் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் வெட்டவெளி மூர்த்தியாக இருந்தாலும், மிகவும் அபூர்வமான பரவெளிச்சக் கருவறை பூண்ட மூர்த்தி ஆவார். ஆம், பரந்த பிரம்மாண்டமான பரவெளியையே அகண்டகாரக் கருவறையாகக் கொண்டவர்.
காலப்போக்கில் இத்தகையப் பரவெளி மூர்த்திகள், சித்தர்கள் மூலமாக ஆலயக் கருவறைக் குடில் கொள்வதும் நிகழ்வது உண்டு. இவ்வாறாக, பிரபஞ்ச அகண்டாகாரக் கருவறை பூண்டு அனுக்ரகம் செய்யும் ஸ்ரீகொன்றையடி விநாயகரை வளர்பிறைச் சதுர்த்தித் திதியில் அனைத்து வகை தைல, எண்ணெய் தீபங்களைத் தனித் தனி உலோக, அகல் விளக்குகளாக ஏற்றி வழிபடுதல் பலவிதமான காரியத் தடங்கல்களைப் போக்கும். குறிப்பாக திருமணம் ஆகாமை, பிள்ளைப் பேறு இல்லாமை, வேலை கிட்டாமை, நல்வீடு அமையாமை, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமை போன்ற குறைபாடுகள் தீர, வளர்பிறைச் சதுர்த்தியில், பலவகைத் தைல தீபங்களை ஏற்றி, ஏழைகளுக்கு விளக்கு தைலம், எண்ணெய், விறகு போன்ற அக்னி சம்பந்தப்பட்ட பொருட்களைத் தானமாக அளித்து, அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரை வழிபட்டு வரவும். ஓம்
நவம்பர் 2003 பௌர்ணமி நாள் : 8.11.2003 சனிக் கிழமை விடியற்காலை 4.15 மணி முதல் 9.11.2003 ஞாயிற்றுக் கிழமை காலை 6.43 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 8.11.2003 சனிக்கிழமை இரவு
22.11.2003 சனிக்கிழமை மதியம் 11.46 மணி முதல் 23.11.2003 ஞாயிற்றுக்கிழமை காலை 8.13 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கார்த்திகை மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 22.11.2003 சனிக்கிழமை இரவு
அமுத தாரைகள் |
திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் ஆலயம் ஹ்ருத்தாப நாசினி புஷ்கரிணி (அட்டைப்பட விளக்கம்)
சென்னை அருகே உள்ள திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தொன்மையான நோய் நிவாரணத் தலமும், பித்ருமுக்தித் தலமும் ஆகும். சாலிஹோத்ர மாமுனிக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலம். ஒவ்வொரு அமாவாசைதோறும் சாலிஹோத்ர மகரிஷியே இத்தலத்தின் ஹிருத்தாப நாசினித் தீர்த்தக் கரையில் பூலோக ஜீவன்களின் மேன்மைக்காகவும், பித்ருக்கள் உத்தம நிலைகளைப் பெற வேண்டியும் மானுட வடிவில் காருண்யத் தர்ப்பணம், கதிமோட்சத் தர்ப்பணம், கல்பகூடத் தர்ப்பணம், கற்பகத் தர்ப்பணம் போன்ற 96 வகைத் தர்ப்பணங்களை அளித்துச் சிறப்பிக்கும் தலம். இங்குள்ள ஹ்ருத்தாப நாசினிப் புஷ்கரிணித் தீர்த்தத்தில் அமாவாசை தோறும் அஸ்வினி தேவர்கள், மருத்துவச் சித்தர்கள் பொதிய மலை, கொல்லி மலை, மேருமலை, இமாலயம், திருமலை போன்ற மூலிகைச் சாரல் மலைகளில் இருந்து மூலிகாபந்தனம், குளிகை, ஆயிர்வேதக் கஷாய சக்திகளை இத்தீர்த்தத்தில் சேர்த்து, நோய் நிவாரண சக்திகளை பெருமாளின் திருவருளாய் விருத்தி செய்கின்றனர்.
பண்டைய காலத்தில் அஷ்டாங்க பரிசத் துறையாக எட்டுத் துறைகளுடன் பரிமளித்த தலம். குளத்தில் எட்டுத் துறைகள் அமைவது மிகவும் அபூர்வமானது. இந்திராதி தேவர்களுக்கும், பல மகரிஷிகளுக்கும் பலவிதமான சாபங்களால் ஏற்பட்ட நோய்களைப் பெருமாள் தீர்த்த தலம். கலியுகத்தில் கர்ம வினைகளை விரைவில் அகற்றவல்ல தலம்.
ஸ்ரீவாமன மூர்த்தி
பெருமாள்மலை
வாமன பாதாம்புஜ சக்தி மலரும் திருநாள்!
வாமன அவதாரத்தில், திருவிக்ரமப் பெருமாள் விண்ணளாவ பாதத்தை உயர்த்திய போது, பிரம்மா உட்பட அனைத்து தேவாதி தேவ மூர்த்திகளும், தேவர்களும், மகரிஷிகளும் வாமன மூர்த்திக்கு விண்ணில் திருப்பாத பூஜை செய்திட விழைந்தனர். அப்போது பூமியில் இருந்த வாமன சுவாமியின் பாத ரட்சைக்கு அவருடைய அருளாணையைப் பெற்று, பூமாதேவியும், சித்தர்களும் பாதரட்சையையே, திருவருள், குருவருளாய்ப் பொங்கும் அருள் வடிவாகக் கொண்டு பக்தியுடன் பூஜித்தனர். ஆனால், விண்ணளாவிய வாமன பாதம் உயர்ந்து கொண்டே சென்றமையால், விண்ணில், வாமன மூர்த்தியின் திருப்பாதத் தரிசனமே கிட்டாது, பிரம்மா உட்பட அனைவராலும் பாதபூஜையை முதலில் கைக்கொள்ள இயலவில்லை. இதனால் ஏங்கியோர்க்கு, பூமியில் படிந்திருந்த வாமனப் பெருமாளின் பாதரட்சையைப் பூஜித்த பூமாதேவியும், சித்தர்களும் தங்களுடைய வாமன பாதாம்புஜ பூஜா பலன்களைத் தாரை வார்த்துத் தந்தனர். இதனால் வாமன மூர்த்தியின் திருப்பாத சக்திகள் பூரித்து, தங்கி, விரவி, நிரவி பல கோடி அண்டங்களுக்கும் பெய்து அருள்பாலித்தது, இதன் பிறகே அவர்களுக்கு விண்ணில் பாதபூஜை செய்யும் பாக்யம் கிட்டியது. இந்த நன்னாள் நிகழ்ந்த தினமே பாதாம்புஜத் திருநாளாகும்.
பொதுவாக சனிக்கிழமை, புனர்பூசம், தசமி போன்ற பல நாள் இலக்கணங்கள் கூடும் பாதாம்புஜத் திருநாளிலும், வாமனஜயந்தி நாளிலும் வாமன சக்தி பூவுலகில் நன்கு பூரிக்கும். இத்தகைய நாள் கிட்டுவது மிகவும் அரிதெனினும் புனர்பூச நாள் தோறும் வாமன சக்தி அம்சங்கள் பலவும் பூமியில் பூரிப்பதால், புனர்பூச நாளில் மரப் பாதணிகளை அணிந்து யோக நடை கொண்டு நடத்தல் யோக சக்திகளைத் தருவதாகும். புனர்பூச நாளில் வாமன அவதார மூர்த்தியைத் தரிசித்து, ஏழைகளுக்குப் புதுக் காலணிகளைத் தானமாக அளித்தலால், ஸ்திரமான வாழ்க்கை இல்லாதோர்க்கு, நல்ல வலுவான அஸ்திவாரத்துடன் கூடிய நல்வாழ்க்கையைப் பெற்றிட உதவும் நன்னாளாகும்.
வ்யதிபாதத் தர்ப்பண, திவச நாள்
நாள், கிழமை, நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்ச (ஐந்து) அங்கமாகிய பஞ்சாங்கம் ஆகும் என நாமறிவோம். இதில் 27 யோகங்களும், 7 கரணங்களும் உண்டு. தற்காலத்தில் இவற்றை எல்லாம் சரிவரப் பார்க்காமல் முகூர்த்தத்தை வைத்து விடுகின்றார்கள். 27 யோகங்களில் வ்யதிபாதம் என்ற அற்புதமான யோக நாள், தர்ப்பண நாளாக, திவச நாளாக, படையல் நாளாக, பித்ரு மூர்த்திகளின் ஆசிகளைப் பெற்றுத் தரும் நாளாக அமைகின்றது! ஸ்ரீகால பைரவ மூர்த்தியின் திருப்பாதங்களில், வலது பாதத்தின் மோதிர விரலிலிருந்து, வ்யதிபாத யோக கால சக்தி உருவாகின்றது. எனவே வ்யதிபாத யோக நாளைப் பஞ்சாங்கம் மூலமாக அறிந்து, இத்தினத்தில் பூஜை, தர்ப்பணம், அன்னதான சமையல், ஹோமம், ஆலய தரிசனம் போன்றவற்றைக் கைக்கொண்டு, அனைத்திற்குமே வலது கை மோதிர விரலில் பவித்ரமாகிய தர்பை மோதிரம் அணிந்து செய்தல் விசேஷமானது. வ்யதிபாத யோக நாளன்று முழு வாழை இலை நிறைய அன்னம் வைத்து, நிறைய காய்கறி பாயசத்துடன் ஒரு ஏழைக்காவது வயிறு நிறைய அல்லது ஒரு குடும்பத்தினர் முழுவதுக்குமாக வயிறு நிறைய அன்னமிட்டால், அதிதி தேவதா மூர்த்திகள் மனமுவந்து ஆசி அளிப்பர். இதனால் பித்ரு சாபங்கள் தணியும். நல்ல ஒழுக்கம் இல்லாத பிள்ளைகள், பெண்கள் திருந்தி நன்னிலை பெற நல்வழி பிறக்கும்.
ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்
சென்னை சிங்கப் பெருமாள் கோயில் அருகே திருக்கச்சூர் மலைக் கோயிலாம் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள, நான்கு சிரசுகளுடன் கூடிய ஸ்ரீசதுர்முகச் சண்டேஸ்வர மூர்த்தியே அண்ட சராசரத்திற்குமான ஆத்மவிசார மகாமூர்த்தி ஆவார்! மனத் துயரங்களைப் போக்கும் மகாசக்தி வாய்ந்த மூர்த்தி! திங்கள், திருவாதிரை நாட்களில் இங்கு ஸ்ரீசதுர்முக சண்டேஸ்வரரை மலைத் தேனால் அபிஷேகித்து, வழிபட்டு, மலைத் தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர, எத்தகையப் பெருந் துயரங்களுக்கும் மாமருந்து கிட்டிடும். மிகவும் பிரத்யட்சமான, பித்ரு மூர்த்திகளே தேடி வந்து வணங்கும் மூர்த்தி!
இறைவனிடமிருந்து தோன்றும் ஆத்மமானது, இறைசக்தியின் ஒரு வடிவாக, ஆத்ம சக்தியாக, ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு ஜீவனிடமும் உள்ளே மிளிர்கின்றது! இந்த ஆழ்துறை ஆத்ம சக்தியே, பரிபூரண ஆத்மமாகிய இறைவனைப் பற்றி எளிதில் உணர வைக்க வல்லதாகும். இது ஆத்ம விசாரத்தில் தான் சாத்தியமாகும். இதனால்தான் ஆத்ம விசாரமானது இல்லத்திலேயே பயிலக் கூடிய எளிமையான, சிறப்பான, யோக, தியான சாதனமாகவும் விளங்குகின்றது.
ஒவ்வொரு மனிதனின், ஜீவனின் உடலும், ஆத்மசக்தியைத் தாங்கியிருக்கும் வடிவமே! அதாவது எங்கும் நீக்கமற வியாபித்திருக்கும் கடவுளை, தன்னுள் பொதிந்திருக்கும் ஆத்மசக்தி மூலமாக, ஒவ்வொருவரும் தம் உள்ளத்தால், மனதால், உடலால் உணர உதவுவதும் ஆத்மவிசாரமாகும். இதனால்தான் ஆத்மவிசாரம் செய்ய வல்ல அற்புத சாதனமாக, பெறுதற்கு அரியதென மனிதப் பிறப்பு அனைவராலும் போற்றப்படுகின்றது.
தினமும் ஆலயத்தில் ஸ்ரீசண்டேஸ்வரரைப் பக்திப் பூர்வமாகத் துதித்து, “தங்களுடைய தியானத்தில் அடியேனையும் சேர்த்துக் கொண்டு அருளிடுவீர்களாக!” என்று வேண்டி வணங்கி வருதல் ஆத்மவிசாரத்தை நெறிப்படுத்தும்.
ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்
படி தாண்டுவதில் பரம தத்துவம்!
ரயில்வே ஸ்டேஷனிலோ, பிளாட்டுகளிலோ, பொது அலுவலகங்களிலோ, வீட்டிலோ, அலுவலகத்திலோ மாடிப் படியில் ஏறும்போதும், இறங்கும் போதும் எப்போதும் சில மந்திரத் துதிகளை ஓதும் பழக்கத்தைக் கைக் கொள்ளுங்கள். நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் ஏறி, இறங்கும் படிக்கட்டுக்களாக இருப்பதால், நீங்கள் மானசீகமாக உரைக்கும் மந்திரப் படிவுகள், ஒவ்வொரு படியிலும் பதிந்து, அதில் நடப்பவர்களின் பாதங்களில் உள்ள ரேகைகள் மூலமாக அவர்களை அடைந்து அவர்களுக்கு நன்மைகளை அளிக்கும். படி சார்ந்த பூமியும் நல்ல தெய்வீக ஆற்றலைப் பெறும். இது எளிய, மகத்தான இறைச் சமுதாயச் சேவையாகவும் ஆகின்றது! படிகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் ஓத வேண்டிய மந்திரங்கள்:
ஓம் ஸத்ரீசீனான் வ ஸம்மனஸஸ் க்ருணோம்
தமிழ் மந்திரம்:
“அன்புப் படியடி! அரனார் நிழலடி!
அரங்கன் திருவடி! சிக்கெனப் பிடி, பிடி!”
“திருமலைப் படியாய்க் கிடப்பேனோ பரந்தாமா! – நின் அடியார்
திருப்பாதம் ஏந்துதல் எம் கடனே!”
ஸ்ரீமாற்றகலீஸ்வர பைரவர்
திருப்பாச்சேத்தி
காக்க, காக்க கட்டிய பூ காக்க…
தினமும் மல்லிகை, சம்பங்கி போன்ற மணமுள்ள பூக்களைத் தொடுத்து ஆலயங்களில் அளித்து, இல்லத்திலும் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு வருதலால் இல்லப் பரவெளி தூய்மை பெறும். மல்லிகை, கதம்பம், சம்பங்கி, தவனம், மரிக் கொழுந்து போன்ற பலவகை மணமுள்ள பூக்கள், தளங்கள் பரவெளியைச் சுத்திகரித்து இறை அருள் கிரணங்களை ஈர்த்து நமக்கு அளிக்கும் தெய்வீகத் தன்மைகளைக் கொண்டவை! பூத்தொடுக்கும் இத்தகைய எளிய இறை சேவை பலவிதமான பலத்த கர்ம வினைகளை எளிதில் தீர்த்து நம்மைக் காக்கின்றன!
மலர்களின் மாதவ சேவை
வண்ண, வண்ணமாக இருக்கின்றதே என்று அனைத்து நிறப் பூக்களையும் பெண்கள் தலையில் சூடிக் கொள்ளக் கூடாது. இறைவனுடைய படைப்பில் அழகான வண்ணப் பூக்கள் தோன்றிடப் பல காரணங்கள் உண்டு! அனைத்துத் தாவரங்களையுமா நாம் சமைத்து உண்கின்றோம்? வாசனையற்ற கனகாம்பரம், டிசம்பர் பூ, ஜவ்வந்தி போன்ற மலர்களை ஒரு போதும் இறைவனுக்குச் சூட்டக் கூடாது. இவற்றைப் பெண்கள் தலையிலும் சூடுதலும் கூடாது. காரணம், பரவெளியில் மிதக்கும், பறக்கும் பல தீய சக்திகளையும், எண்ணங்களையும் தம்முள் இவை ஈர்த்து வைத்திருப்பதால், கனகாம்பரம், டிசம்பர் பூ போன்ற மணமற்ற பூக்களை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். பலவிதமான மலர்கள் எக்காரணங்களுக்காகப் படைக்கப்பட்டனவோ அவற்றோடு அவை வாழட்டும். இத்தகைய பூக்கள் தீய சக்திகளைத் தம்முள் ஈர்த்துப் பரவெளியைத் தூய்மையாக்கும் சேவைக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்க!
உத்தம இறைநிலைகளில், சிவ, விஷ்ணு பேதம் கிடையாது. கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் எவ்வித சிவ விஷ்ணு பேதமும் கிடையாது. பல்லாயிரம் மகரிஷிகளும் வியந்து போற்றும் வண்ணம், மகாசிவரத்திரி அன்று திருக்கயிலாயத்தில் திருமால் மூர்த்தி, சிவபெருமானை வழிபடுவதும், வைகுண்ட ஏகாதசியன்று, வைகுண்டத்தில், சிவபெருமான் பெருமாளை வழிபடுவதும் அன்றும், இன்றும், என்றுமாய் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன.
எனவே இப்பிறவியில் சிவனை துவேஷிப்பவர்கள் மறுபிறவியில் சிவனை வழிபட்டாக வேண்டிய நியதிகளுக்கு ஆட்பட வேண்டும். இப்பிறவியில் விஷ்ணுவைத் துவேஷிப்பவர்கள், பல பிறவிகளிலும் விஷ்ணுவை வழிபட்டாக வேண்டும். எனவே அறிந்தோ, அறியாமலோ தம் வாழ்வில் சிவனை, விஷ்ணுவை, இறைவனை நிந்தித்தவர்கள், திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் வழிபட்டுப் பிராயச்சித்தப் பரிகாரங்களைப் பெற்றாக வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதோர் திருந்தி வாழ்ந்து இறைவனடி சேரத் துணை புரியும் தலம்.
ஸ்ரீபைரவ மூர்த்தி
ஒழுகமங்கலம்
ஸ்ரீவீரபத்திர மூர்த்திக்கு மட்டைத் தேங்காய்களால் ஆன மாலையை, சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை நாழிகைக்குள் (36 நிமிடங்கள்) சார்த்தி, தன்னைத் தானே 9 முறை வட்டமடித்து ஆத்மப் பிரதட்சிணம் செய்து, வட்ட வடிவ உணவுப் பண்டங்களைத் தானமாக (இட்லி, வடை, போண்டா போன்றவை) வழிபட்டு வந்தால், பகைவர்கள், எதிரிகளின் கொட்டம் அடங்க ஸ்ரீவீரபத்ர சுவாமி துணை புரிவார்.
குழந்தைகளையும் அமர வைத்துக் குடும்பத்தோடு கூட்டுப் பூஜை செய்திட வேண்டும். பள்ளிப் பருவத்தில் உள்ள பிள்ளைகளிடம் தினமும் அந்தந்த நட்சத்திர தூபம், திதித் தைல தீபம் ஏற்றச் செய்திடுங்கள். பிள்ளைகளுடன், புதுக்கோட்டை அருகே உள்ள தேனிமலையில் புனர்பூச நாளில் கிரிவலம் வந்திட நல்ல கல்விச் செல்வம் கிட்டும்.
நல்ல பணியாளர்கள் அமைந்திட
பலருக்கும் தம் அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் உதவியாளர்கள், அலுவலர்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. பலரும் வந்து, இருந்து, விலகிச் செல்வதால், அலுவலகப் பணிகள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றன என்று பெரிதும் வருந்துவோரும் உண்டு. இதற்கு லௌகீகமாகவும், ஆன்மீகமாகவும் பல காரணங்கள் உண்டு. அவற்றை எடுத்து உரைத்தாலும் மனமும் ஏற்காது.
தன் கீழ் பணிபுரிபவர்கள் நிலைத்து நின்று, நம்பிக்கையுடன் பணிகளை ஆற்றிட, இவர்கள் செவ்வாய், சனிக்கிழமைகளில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒழுகமங்கலம் சிவாலயத்தில் தனி விமானம் கொண்டு அருளும் ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்தி, செவ்வந்திப் பூக்களால் கிரீடம் அமைத்து வழிபடுவதுடன், ஸ்திர கங்கணக் கனி வகைகளான பூசணி, பறங்கி, சுரைக்காய், விளாம்பழம் போன்ற ஓட்டு வகைக் காய்கறி, கனி வகை கலந்த உணவு வகைகளையும் தானமாக அளித்து வந்தால் உதவியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் நிலைத்து, உண்மையுடன் தொண்டாற்றுவர். பல இந்திரர்களும் பலவிதமான சாபங்களுக்கு ஆளாகி வருந்திட்ட போது, ஸ்திர கங்கண் அணிந்து கூப்பிய கரங்களோடு பன்னெடுங்காலம் தவம் புரிந்து ஸ்ரீகாலபைரவரை வணங்கி, இந்திர பதவியில் நிலைத்திட அருள் பெற்ற தலம்!
பல் தேவதைகள்
பல குடும்பங்களிலும் நடுத்தர வயதிலேயே பலருக்கும் பற்கள் கொட்டிப் பொக்கை வாயாகி, செயற்கைப் பல்செட் மாட்ட வேண்டியதாகி விடுகிறது அல்லது 20, 30 வயதிற்குள்ளேயே ஒரு சில பற்களைப் பிடுங்க வேண்டியதாகி விடுகின்றது. உதிர்ந்த பல்லுக்குப் பதிலாக, செயற்கைப் பல்லை ஒட்ட வைத்து வாழ்வோரும் உண்டு. பொதுவாக, பற்களைக் காக்கும் தந்த தேவதைகளின் ஆசிக் குறைவால் தாம் மேற்கண்ட நிலைகள் ஏற்படுகின்றன. பூர்வ ஜன்ம வினைகளும், தவறான பழக்க வழக்கங்களும், உணவு முறைகளும் இதற்கான காரணங்களுள் சிலவாம்! இறைவன் அளித்துள்ள 32 பற்களுடன் வாழ்வின் இறுதி வரை ஒரு பல் கூட உதிராது, பிடுங்கிடாது வாழ்தலும் ஒரு பெரும் பாக்யமே! மேலும் பொக்கைவாய் நடுத்தர அல்லது முதிய வயதில் ஏற்படுவதும் தந்த தேவதைகளின் சாபத்தினால்தாம், தந்த தேவதைகளின் சாபம் ஏற்படக் காரணம் என்ன?
ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
தியாகசமுத்திரம்
பூர்வ ஜன்மங்களிலோ தற்போதோ பிறருடைய சொத்து, உழைப்பு, லாபத்தில், பணத்தில் நெடுங்காலம் வாழ்ந்தவர்களுக்கும், பெறும் ஊதியத்திற்கேற்ப உழைக்காதவர்களுக்கும் தந்த தேவதைகளின் சாபம் ஏற்படும். உணவே உயிர் வாழும் சரீரத்திற்கு உத்தம மூலப் பொருள் ஆனதால், உண்ணும் உணவு செரித்து, ஆரோக்ய வள, நல் சக்தி ஆகிடப் பற்கள் பெருந்துணை புரிவதாலும், கடவுள் ஆத்மாவாக உறையும் சரீர ஆலயத்திற்குப் பற்களே துவாரபாலகர்களாகத் துலங்குவதாலும், வாய்க்கு வரும் உணவின் அம்சங்களைப் பகுத்து வகை பிரிக்க வேண்டிய கடமை பல் தேவதைகளுக்கு உண்டு. முறையாக உழைத்துச் சம்பாதித்து வந்த உணவு, நன்முறையில் சமைக்கப் பெற்ற உணவு போன்றவை பல் தேவதைகளைச் சந்தோஷப்படுத்தும், ஓசியில் வந்தது, தவறான வழியில் அல்லது நன்கு உழைக்காது வந்த பணத்தால் ஆன உணவு வாய்க்கு வரும் போது, பல் தேவதைகள் வருந்திச் சாபம் இடுகின்றன. நன்முறையில் நல்ல உணவு வரவில்லையே என்ற அவற்றின் ஏக்கமுமே சாபமாக ஆவதும் உண்டு.
எனவே இத்தகைய நிலை வாழ்வில் இனியும் வந்திராவண்ணம் காத்திடவும், இனியேனும் பல்தேவதைகளையும், தந்த தேவதைகள் வழிபடும் தலங்களிலும் முறையாகப் பூஜித்து வர வேண்டும், சென்னை அருகே உள்ள ஞாயிறு சிவாலயம், திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகளீஸ்வர பைரவர், கும்பகோணம் அருகே தியாகசமுத்திரம் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் போன்ற தலங்கள் தந்த தேவதைகள் வழிபடுகின்ற முக்கியமான தலங்கள் ஆகும். இத்தலங்களில் பல்தேவதைகளுக்கு ப்ரீதியான கரும்புச் சாறு, மாதுளைச் சாறால் சுவாமியை அபிஷேகித்து, ஏழைகளுக்கு, பற்களால் நன்கு கடித்து உண்ணக் கூடிய சுவையான உணவு வகைகளை, பண்டங்களைத் (கரும்பு, கற்கண்டு போன்றவை) தானமாக அளித்து வந்தால் பல் தேவதைகளின் சாபங்கள் தணியும், பற்கள் காக்கப்படும்.
குற்றம் பொறுக்கும் சிவலிங்க நாதர்
தெய்வீகக் காரியங்களை, நற்காரியங்களை ஆற்றுவதிலும் கூட, “தான்” எனும் அகந்தை, போட்டி, பொறாமையோடு பகைமை, விரோதம், குரோதமும் இருப்பதைக் கலியுகத்தில் காண்கின்றோம். இதற்குக் காரணம், “இறையருளால்தான் நம்மால் இதனை ஆற்ற முடிந்தது. இப்பிரஞ்சத்தில் நாம் ஒரு சிறு இறைக் கருவியே! இறுதிவரையில் நம்மை இறைவன் ஒரு சிறு கருவியாகவேனும் வைத்துச் செயல்படக் கருணை புரிய வேண்டும்!” என்று வேண்டிப் பலரும் உணர்வதில்லை! தன்னால் ஆவதே யாவும், தானின்றி எதுவும் ஆகாது என்றே பலரும் அகந்தையால் எண்ணுகின்றனர். தம்முடைய தனிப்பட்ட மனிதக் குற்றங்களினால், மனிதக் காரியங்களினால், எவ்விதத்திலும், இறை காரியங்களுக்குத் தடைக்கல்லாக இருத்தல் கூடாது. தம் வாழ்வில், இதுவரையில், அறிந்தோ, அறியாமலோ, தெய்வக் காரியங்களுக்கு, சமுதாயப் பணிகளுக்கு, பிறருடைய முன்னேற்றத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினோர், இப்பிறவியிலேயே தக்கப் பிராயச்சித்தங்களைப் பெற்றிட வேண்டும், இதற்காக, மாயூரம் அருகில் திருக்கறுப்பறியலூர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் குற்றம்பொறுத்த நாதராம் சிவலிங்கத்தை (ஸ்ரீஅபராதக்ஷமேஸ்வரர்) வழிபட்டு வருதல் வேண்டும். அங்கப்பிரதட்சிண காரிய சக்திகள் நிறைந்த, இறைவனின் மெய்ச்சார சக்திகள் நிறைந்த உத்தமத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
தொடரும் ஆனந்தம் ... |
நம் சற்குரு திருச்சி வயலூர் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அப்போது மூலத்தான கருவறையில் அதாவது முருகப் பெருமான் எழுந்தருளிய சன்னதியில் அடியார்கள் வழக்கம்போல் தரையை நீர் விட்டு ஊறவைத்து அதை நிர்மா சோப் பவுடராலும் செங்கற்கலாலும் தேய்த்து அலம்பிக் கொண்டிருந்தனர். சற்குருவோ மேற்கூரையில் குழாய் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு பல ஆண்டுகளாக அந்த சன்னதியில் படிந்திருந்த சூடப் புகை, தீபப் புகை, தரையில் மண்டிக் கிடந்த அழுக்கு இவை அனைத்துமே கோமுகம் வழியாக தாரைபோல் வழிந்து கொண்டிருந்தன. நம் சற்குருவின் திருப்பணி எப்போதுமே எந்தவித விளம்பரமோ ஆரவாரமோ இல்லாமல் நடைபெறுவது வழக்கம் என்பதால் மூலத்தானத்தில் அடியார்கள் பலர் உழவாரப் பணி நிறைவேற்றுவதால் அங்கு சேரும் அழுக்கு நீர் கோமுகம் வழியாக வழிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத பல கிராமத்து மக்கள் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நிறைவேறுகிறது, அது பால் அபிஷேகம் என்பதால் மஞ்சளாக இருக்கிறது என்று நினைத்தார்களோ என்னவோ அனைவரும் மடமடவென்று ஒவ்வொரு வாய் அந்த “தீர்த்தத்தை” பிடித்து அருந்தத் தொடங்கி விட்டனர்.
குமாரவயலூர் திருச்சி
அங்கு வாசலில் நின்ற அடியார்களுக்கு பிரமிப்பு மேலிடவே அவர்களால் அந்த மக்களிடம் கோமுகம் வழியாக வருவது அழுக்கு நீர்தான் என்று சொல்ல முடியவில்லை. அடியார்களுக்கு எல்லாம் ஒரே எண்ணம், நம் சற்குரு கருவறையில் இருந்தாலும் இவ்வாறு பக்தர்கள் கோமுகம் வழியாக பொலியும் அழுக்கு நீரை பிடித்து பிடித்து பிரசாதமாக உண்கின்றார்கள் என்பதை அறியாமலா இருப்பார் என்று நினைத்து அந்த பக்தர்களிடம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டனர். உழவாரப் பணிகள் நிறைவேறிய பின் பக்தர்கள் பலரும் இவ்வாறு கோமுகம் வழியாக வந்த அழுக்கு நீரை பிரசாதமாக அருந்திச் சென்றனர் என்று நம் சற்குருவிடம் தெரிவித்தனர். அதைப் பற்றி நம் சற்குரு சற்றும் கவலைப்படாமல் ஆனால் மிகவும் கவனமாக அடியார்கள் கூறுவதைக் கேட்டு விட்டு ஒரு வழக்கமான புன்னகையை உதிர்த்து விட்டுச் சென்று விட்டார்கள். “நீங்கள் பலரும் அடியேனுடன் பல ஆண்டுகள் சீடர்களாக பணி புரிகிறீர்கள். ஆனால், அந்த கிராமத்து மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒரு துளி கூட உங்களுக்கு இல்லையே. நீங்கள் கோமுகத்தின் வழியாகப் பொழிவது அழுக்கு நீர் என்று நினைக்கிறீர்கள். அந்த கிராமத்துப் பாமர மக்களோ கோமுகத்தின் வழியாகப் பொழிவது முருகப் பிரசாதம்தான் என்று நம்பி அதைப் பருகுகிறார்கள். ஒரு துளி நிர்மா சோப் நீர் நம் வாயில் பட்டாலே குமட்டிக் கொண்டு வந்து விடும். அவ்வாறு இருக்க வாய் நிறைய நிர்மா தீர்த்தத்தை அவர்கள் பருகியும் ஒரு சிறிது குமட்டலோ, வாந்தியோ எவருக்கும் ஏற்படவில்லை என்பதே அவர்களின் அன்பின் ஆழத்தை உணர்த்துகிறது ...”, என்ற அனைத்தும் நம் சற்குரு வாய் விட்டு வெளியே கூறாமல் சூட்சுமமாய் உணர்த்திய கீதை உபதேசம். அபூர்வமாக வயலூர் திருத்தலத்தில் அக்னி மூலையில் அக்னி தீர்த்தமும் தலவிருட்சமான வன்னி மரமும் எழுந்தருளி உள்ளன. இனந் தெரியாத காய்ச்சல் நோய்களால் அவதியுறுவோர் தேய்பிறை கூடும் செவ்வாய்க் கிழமைகளில், கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திர நாட்களில் அக்னி தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தை 27, 36, 54 என்ற முறையில் வலம் வந்து வணங்குதலால் காய்ச்சல் நோய்கள் வராமல் வருமுன் காக்கும் பாதுகாப்பு சக்திகளைப் பெறுவர். அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டால் விரைவில் உடல் களைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்