அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நலமே தரும் நவகிரக மூர்த்திகள்

நலமே தரும் நவகிரஹ மூர்த்திகள்
நவகிரஹ மூர்த்திகளைப் பற்றி நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. நவகிரஹங்கள் அனைத்துமே சர்வேஸ்வரனின் அம்சங்களேயாகும். எவ்வாறு ஒரு நாட்டின் அரசாங்கப் பொறுப்புகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளனவோ அதே போல் பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாய் உள்ள சர்வேஸ்வர மூர்த்தி தம்முடைய பல தெய்வ மூர்த்திகளாகப் பல அம்சங்களைத் தோற்றுவித்து பிரபஞ்ச வாழ்க்கையின் பரிபாலனத் தொகுப்புக்களைப் பகுத்துத் தந்துள்ளார். இதை உணர்ந்து கொள்வதே பகுத்தறிவாகும். இவ்வகையில் நம் கர்மவினைகளை நாம் அனுபவிப்பதற்கு தெய்வ சாட்சியாக நின்று நம்மை நல்வழிப்படுத்துபவர்களே நவகிரஹ மூர்த்திகளாவர். சில அபூர்வமான தலங்களில் நவகிரஹ மூர்த்திகள் விதவிதமான கோலங்களில் அமர்ந்து அருள்பாலிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்!
திருக்குவளை, வைதீஸ்வரன் கோயில் போன்ற ஆலயங்களில் நவகிரஹங்கள் நேர்வரிசையில் வக்கிரமின்றி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

நவகிரக மூர்த்திகள்
திருப்புகலூர்

“ட” வடிவ நவகிரஹங்கள் : தஞ்சை நன்னிலம் அருகிலுள்ள திருப்புகலூரில் நவகிரஹ மூர்த்திகள் “ட” வடிவில் அமைந்து அருள்புரிகின்றனர் என்பது பலரும் அறியாத விஷயமாகும். நம்முடைய ஜாதகக் கணிப்பில் திரிகோணம், திரிக்கோணம், அஷ்டாம்சம், தசாம்சம் போன்ற கோணப் பகுப்புகள் உண்டு. லக்னத்தின் அம்சங்களை 360 டிகிரிகளாகப் பிரித்து நம் ஆயுளைப் பகுத்து பலாபலன்களை அறிவிப்பதே இந்த மிகச் சிறந்த ஜோதிட கணிதமாகும்.. நிறைந்த பக்தி இருப்பின் நம்முடைய ஆயுளை இந்த கணிப்பின் மூலம் நாமே பகுத்துணரலாம். இத்தகைய லக்ன கோண அம்சங்களைக் கொண்டு நம்முடைய கர்மவினைகளை நாமே அனுபவித்துக் கழிப்பதற்கும் நன்முறையில் தெய்வீக நிலையில் உய்வதற்குமாக ஆக ஏற்படுத்தப்பட்டவையே திருப்புகலூரில் உள்ள நவகிரஹ மூர்த்திகளாகும். இங்கு 90 டிகிரி கோணத்தில் “ட” வடிவில் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளமையால் இதற்கு நிறைந்த இறை சாந்நித்யங்கள் உண்டு. நவகிரஹ மூர்த்திகள் அனைவருமே நம்முடைய கர்மவினைகளை நாமே உணர்ந்து அனுபவித்துக் கழித்து நன்னிலை அடைவதற்கு சாட்சியாக நின்று அருள்பாலிக்கின்றனர் என்பதே நவகிரஹ வழிபாட்டின் தத்துவமாகும். நம்முடைய துன்பங்களைக் களைய வேண்டும். அவற்றை விரட்டிட வேண்டும் என்று எண்ணுவதை விட நமக்கு உரித்தான கர்மவினைகளாக நம்முடைய துன்பங்களை நாமே அனுபவித்துக் கழித்து விடுவோமேயாயின் கர்மவினைகளையற்ற தெயவீக வாழ்க்கையை நாம் பெறலாம் அல்லவா? இதற்கு உதவுபவர்களே நவகிரஹ மூர்த்திகள்! இவ்வாறு உணர்வதே உத்தமமான தெய்வீக நிலை!
தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் வேறு எங்கும் காணப்படாத வகையிலே நவகிரஹ மூர்த்திகள் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இதைப் பற்றிய சில விளக்கங்களை நாம் முன்பே அளித்துள்ள போதிலும் மீண்டும் நாம் அன்பர்களுக்கு இங்கு நினைவுபடுத்துகிறோம்.. உண்மையில் சர்வேஸ்வரனைப் போலவே நவகிரஹங்களுக்கும் உருவமில்லை தான். ஆனால் கலியுகத்தில் உருவ வழிபாட்டின் மூலமாக மிக எளிய முறையில் இறையருள் நிறைந்த உத்தம நிலைகளைப் பெற முடியும் என்பதால் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய தெய்வீக வடிவை மகரிஷிகள் நமக்கு அளித்துள்ளனர். தஞ்சையில் நாம் காணுகின்ற லிங்க வடிவுதான் ஒவ்வொரு நவகிரஹ மூர்த்தியின் ஆதிமூல வடிவமாகும்.
லிங்க வழிபாடு என்பது உருவமற்ற இறைவனின் உட்பொருளை உணர்த்துவது தானே! ஜாதகங்கள், நம் கை, கால்களில் உள்ள ரேகைகள், உடலில் உள்ள மச்சங்கள், உச்சந் தலையிலுள்ள சுழி, உள்ளங்கை மணிக்கட்டுப் பகுதியில் உள்ள வளையங்கள், நாடிகளின் அமைப்புகள் போன்ற இவை அனைத்துமே நம்முடைய கர்மவினைகளை நாமே அறியும் வண்ணம் இயற்கையாகவே பகுத்துக் கூறுவதாகும். நம் வினையை நாமே உய்த்து உணர்வதற்காகத் தான் பவித்திரமான ஜாதக கணித முறையும் ஏற்பட்டது. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் இது வியாபாரமாகி விட்டது என்பது வருத்தத்திற்குரியதாகும். எனவே தான் பல ஜோதிடக் கணிப்புகள் பலிக்காமல் போய் விடுகின்றன. தஞ்சாவூர் நவக்கிரஹ லிங்க மூர்த்திகள் விசேஷமான தாத்பரியம் என்னவென்றால் முதன் முதலாக நம்முடைய குழந்தைக்கு ஜாதகம் கணித்தவுடன் அதனை எடுத்துச் சென்று இந்நவகிரஹ மூர்த்திகளிடம் சமர்ப்பித்துக் கோயிலை வலம் வரவேண்டும். இங்கு ஒரு மூலையில் நவகிரஹங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு கோயிலையே நவகிரஹ வலமாகப் பெருவலம் வருவது தான் சிறப்புடையதாகும்.

சகஸ்ரலிங்கம் காளையார்கோவில்

சஹஸ்ர லிங்க வலம் : ஏனென்றால் ஒரு தெய்வ மூர்த்தியை வலம் வருதல் என்றால் அதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்களும், பலா பலன்களும் உண்டு. இதற்காகத்தான் எத்தனையோ ஆலயங்களிலுள்ள சஹஸ்ர லிங்க மூர்த்திகளை (பாணலிங்கத்தில் ஆயிரம் லிங்க மூர்த்திகள் அமைந்திருக்கும்.) ஒரு முறை வலம் வந்தால் கிட்டுகின்ற பலாபலன்களோ எத்தனையெத்தனையோ! எனவே சஹஸ்ர லிங்கத்தை எளிதில் வலம் வந்து பெருத்த புண்ணியத்தைப் பெற்றிடுவார்கள் என்று எண்ணித்தாமோ என்னவோ, பெரும்பாலான சஹஸ்ர லிங்க மூர்த்திகள் கோயிலின் பிரஹார மூலையில் அமைக்கப் பெற்றுத் தனிவலமின்றிக் கோயிலைய்யே வலம் வந்தால் தான் சஹஸ்ரலிங்க மூர்த்தியை வலம் வந்தது போல் ஆகும் என்பதற்காக இறை நியதியாக இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது போலும்! ஆனால், சோம்பேறித்தனம் காரணமாகப் பலரும் சஹஸ்ர லிங்க மூர்த்திகளை ஆலயப் பெருவலமாகப் பிரதட்சிணம் வருவதில்லை.! யாருக்கு இதனால் இழப்பு சொல்லுங்கள்! தஞ்சாவூரில் உள்ள லிங்க வடிவிலான நவகிரஹ மூர்த்திகளின் திருப்படத்தைத் தான் நீங்கள் இவ்இதழின் பின்புற அட்டைப் படமாகக் காண்கின்றீர்கள். நவகிரஹ லிங்க மூர்த்திகளுக்கு இங்கு விசேஷமான வழிபாட்டு முறையும் உண்டு. பிறந்த தேதியோ, நட்சத்திரமோ அறியாதவர்கள் புனிதமான நாடிகளின் மூலமாகவும், பக்தி நிறைந்த பெரியோர்களின் நல்வாக்கு மூலமாகவும், நட்சத்திரத்தைக் கேட்டுப் பெறுகின்ற பொழுது அதற்கான புது ஜாதகத்தைக் கணித்து நவகிரஹ லிங்கத்திற்கும் சமர்ப்பித்து வலம் வந்து வணங்குதல் வேண்டும். சந்திர தரிசன நாளில் அதாவது அமாவாசையினின்று பெரும்பாலும் மூன்றாவது தினமாக வருகின்ற மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தன்று தஞ்சாவூர் நவகிரஹ லிங்க மூர்த்திகளுக்குத் தேங்காய் எண்ணெய்க் காப்பிட்டு நவதானியங்களுடன் சிறு வெல்லம் கலந்து பொடி செய்து கோயில் மதில் ஓரங்களின் எறும்புகளுக்கு அன்னதானமாக இட்டு வந்தால் வறுமையும் பணக் கஷ்டமும் தீரும். பௌர்ணமி தினத்தன்று சூரியனும் சந்திரனும் எதிர் எதிர் கோணங்களில் அமைந்து அவற்றின் ஆகர்ஷண சக்திகள் ஒன்றுக்கொன்று பார்வையாக இருக்கின்ற போது, அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று இங்கு சூரியனுக்கு ஆரஞ்சு வண்ண வஸ்திரத்தையும் சந்திரனுக்கு வெண்பட்டையும் சார்த்தி, சூரியனுக்கு உரித்தான கோதுமைப் பண்டத்தையும் சந்திரனுக்கு உரித்தான அரிசி, உளுந்து உணவுப் பொருளை படைத்து ஏழைகளுக்கு தானமாக அளித்து வர தம்பதியினரிடையே இருக்கும் மனக்கசப்பும் வேறுபாடுகளும் நீங்கும்.

பாபநாசம்

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்தில் பாணலிங்க மூர்த்திகளாக விளங்குகின்ற நவகிரஹ லிங்க மூர்த்திகளின் மஹிமை மிகவும் பரந்ததாகும். நம்முடைய கர்மவினைகளின் வடிவே நமக்கு வருகின்ற இன்ப துன்பங்கள் என்பதை நாமே உணர்ந்தால் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற தமிழ்மறை வாக்கின் சத்தியத்தன்மை நன்கு புரியும். துன்பங்களைக் குறைப்பதற்கான தூய வழியானது அவற்றிற்குரிய காரண காரியங்களை உணர்வதே! இதுவே ஆரம்ப நிலையாகும்! இதற்கு அருள் பாலிப்பவர்களே நவகிரஹ மூர்த்திகள். திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலியில் தரையில் உள்ள 9 மிகச் சிறிய குழிகளாக நவகிரஹ அம்சங்கள் விளங்குவதால், இதனருகே (குழிகளுக்குள் அல்ல) தேங்காய் எண்ணெய்,  நல்லெண்ணைய், பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய் போன்ற ஐந்து வித எண்ணைகள் கலந்த பஞ்ச தீப அகல் விளக்குகளை ஏற்றி இந்த ஜோதியை வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் உற்று நோக்கி தரிசித்து வந்தால் கண் திருஷ்டிகளால் வருகின்ற தோஷங்கள் நீங்கும்.
எப்போதுமே பாணலிங்கங்கட்கு மகத்துவம் அதிகமாகும். அதிலும், வெயில், மழை பனியைத் தாங்கி மேற்கூரையற்று அமைந்துள்ள (ஆவுடையற்ற) பாண லிங்களுக்கு நோய் தீர்க்கும் தெய்வீக சக்தி பூரணமாக விளங்குகின்றது. உதாரணம் சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரன் ஆலயம். சனிக்கிழமையின் உச்சி நேரத்தில் தாமே அரைத்த சந்தனக் காப்பிட்டு ஆவுடை இல்லாத பாண லிங்க மூர்த்திகளை வணங்கி வந்தால் தோல் மற்றும் கபால நோய்களுக்கு நிவர்த்தி கிட்டும். பொதுவாக செவ்வாய் தோஷம், பாலாரிஷ்டம், எட்டாம் இடத்துப் பார்வை தோஷங்கள் போன்ற பலவித தோஷங்களைப் பெற்றிருப்பவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்களை ஒரே ஆலயத்தில் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.. இவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்க தரிசனங்களோடு 9 பாண லிங்க நவகிரஹ மூர்த்திகளையும் நாம் தஞ்சாவூர் ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம் (திருவிடைமருதூர், தஞ்சை பாபநாசம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வர ஆலயம் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ள இடங்கள்)
ஒவ்வொரு வரும் தம்முடைய ஜாதகத்தையே (நன்கு பிழையின்றி கணித்து செப்பு, வெள்ளித் தகடுகளில் பொறித்து நவகிரஹ லிங்க மூர்த்திகளிடம் வைத்து வணங்கி தினந்தோறும் இந்த ஜாதகச் சக்கரத்திற்கு மஞ்சள், குங்குமம், பொட்டிட்டு, தொட்டு வணங்கி வருதலால் இது மிகச் சிறந்த ஆத்ம வழிபாடாக மலர்ந்து தோஷ விளைவுகளைத் தணித்து நற்காரிய சித்திகளுக்கு வழிகாட்டும். மாதந்தோறும் அவரவர் நட்சத்திர தினத்தன்று தம்முடைய ஜாதகச் சக்கரத்தை தஞ்சை நவகிரஹ மூர்த்திகளிடம் வைத்து வணங்குதலால் நல்லொழுக்கங்கள் கை கூடி நல்வாழ்க்கை அமையும். சிகரெட், மது, முறையற்ற காமம் போன்ற தீய வழக்கங்களில் இருந்து விடுதலை பெற மேற்கண்ட நட்சத்திர ஜாதகச் சக்கர வழிபாடு பெரிதும் உதவுகிறது.. எதிர்காலத்தில் இன்னும் பல கிரஹ மூர்த்திகளின் வழிபாடு வரவிருப்பதைச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் விளக்குகின்றன.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்.
ஆமாம், ராஜஸ்தான் பகுதியில் சிறுவன் ஓர் அற்புதமான சித்புருஷரைத் தரிசித்ததாகக் கண்டோமல்லவோ!  அதில் தொடங்கியது எவ்வாறாகவோ விரிந்து விட்டது! யாரோ அவர் யாரோ? ராஜஸ்தானில் சிறுவன் கண்டது ஸ்ரீதாகூர் பரமஹம்சரெனும் அற்புத ஞானியாவார்! கேதார், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற வடஇந்தியத் திருத்தலங்களிலும் பெரியவரின் குருகடாட்சத்தால் பல சித்புருஷர்களை, யோகியரைத் தரிசிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றான் சிறுவன்.
ஸ்ரீநகர் – கேதார்நாத் பாதையில் அகஸ்தியமுனி என்னுமிடத்தில் உள்ள சிவாலயத்தில் சப்தரிஷிகளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றான்... இவ்வாறாக குப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர், கொடுக்கு வால் குடுமிச் சித்தர், ஹரிக்கேன் விளக்குச் சித்தர் என பெரியவர் சிறுவனுக்கு எத்தனையோ மஹான்களின் யோகியரின், சித்புருஷர்களின் தரிசனங்களைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி அவர்களுக்கு சேவை புரியும் அரிய வாய்ப்பினையும் அள்ளித் தந்தார்.
சற்குருவின் அருட்பரிபாலனத்தில் தான் இவையெல்லாம் சாத்யாகும்... வேறு எந்த முறையிலுமல்ல! ஆனால், இதில் என்ன பெருஞ்சோதனை என்றால் அவர்களுடன் அளவளாவி, சேவைபுரிந்து அவர்களின் தரிசனம் மறைந்தவுடன் தான் அவர்களை இன்னாரென்று பெரியவர் புரிய வைப்பார்!!
சிறுவன் சற்று அலுத்துக் கொண்டே “என்ன வாத்யாரே! எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் இப்ப சொல்லி என்ன பண்றது? கொஞ்சம் முன்னாடி தெரிஞ்சாலாச்சும் கொஞ்சம் நல்லாப் பண்ணியிருக்கலாம்...”
“ஏண்டா, எல்லாமே தெரியாம இருந்த  மாதிரி சேவை செஞ்சாத்தாண்டா உண்மையான ஆர்வமும், பக்தியும் தெரிய வரும்.... தெரிஞ்சா நல்லா செஞ்சிருப்பேனேன்னு சொல்றது என்னடா வார்த்தை அது! இதுக்கா உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே கூட்டி வந்தேன்! யார், யாரை எங்கெங்கே தரிசனம் பண்ணனுமோ அங்கங்க தரிசனம் பண்றது தாண்டா விசேஷம். இப்ப நீ இந்த மந்தாகினி (கேதார்நாத்) ஆத்தங்கரையில் பரமஹம்ஸரை நீ தரிசனம் பண்ணனும்னு வேண்டிகிட்டேன்னு வச்சுக்கே, உன்னோட உண்மையான பக்திக்கு, அழைப்புக்குக் கட்டுப்பட்டு அவரு ஓடோடி வந்துடுவாரு! ஆனா... இந்த வயசுல அந்த உடம்ப தூக்கிட்டு அன்புக்குக் கட்டுப்பட்டு பரமஹம்சரு ஓடி வந்து தரிசனங் கொடுக்கறப்போ நீ என்னடா கைமாறு செய்யப் போற அவருக்கு! இந்த மாதிரி மஹானுங்க என்ன எதிர்பார்க்கறாங்க, சொல்லும் பார்க்கலாம்?”
“சுவாமி கொடுத்த இந்த உடம்ப வச்சுக்கிட்டு, நீ எப்படி மக்களுக்கு சுயநலமில்லாம சேவை செய்யப் போறனேனு அவங்க எதிர்பார்க்கறாங்கடா! அவங்க வந்தாக்க நான் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் பண்றேன், கோயில், குளம் செஞ்சு தர்றேன்னா ரொம்ப சந்தோஷப்படு வாங்கடா, சும்மாவாச்சும் அவங்க கிட்ட போய், அதக்கொடு, இதக் கொடுன்னு சுயநலமா கேட்டா நல்லா இருக்குமா சொல்லு...?”
................. இப்படிச் சொல்லியே பெரியவர் எத்தனையோ அபூர்வ தரிசனங்களையும் தெய்வீகக் காட்சிகளையும் காட்டிட... சிறுவன் எத்தனையோ முறை பரவசத்தில் ஆழ்ந்திருக்கின்றான்....!
ரதசப்தமி தந்த பதமருள் தரிசனம்...!
ஒரு முறை.... ரதசப்தமி தினமது... விடியற் காலையிலேயே சிறுவனை அங்காளி ஆலயத்திற்கு வரச் செய்த பெரியவர் அவனை இழுத்துக் கொண்டே வேக வேகமாக நடந்தார்... எங்கே போகிறார்? என்ன செய்யப் போகிறார்? வழக்கம் போல் சிறுவனுக்கு ஏதும் தெரியாதே! தை மாத விடியற்காலை இருட்டு..... சூரியோதய நேரம் சற்றுத் தள்ளித்தானே வரும்!
“தை மாதம் தரையும் குளிரும்” என்பதற்கேற்ப சிறுவன் வெட வெடத்துக் கொண்டே நடந்தான்.. இல்லையில்லை ஓடினான்!
“மார்கழிக் குளிர்னு சொல்றாங்களே! அது குளிர் இல்லைடா.... ஓஸுன்னு (ozone) சொல்றாங்க பாரு அந்த பரிசுத்தமான காத்துத் தாண்டா மார்கழில வீசுது.! அம்பாள்ல.... சீதளாம்பிகைன்னு ஒரு அம்பாள் உண்டு.. அவதான் பிரம்ம முகூர்த்த நேர தரிசன அம்பாள்! மானசரோவர்லேந்து நம்ப பார்த்தோமே கைலாச மலை.. எப்படிப் பனிகொட்டிச்சு..... அந்த கைலாச மலைச் சிகரம் ஒண்ணொன்னும் நம்ப ராஜ கோபுரங்கள் மாதிரியே இருக்கும்... இன்னிக்கு பூலோகத்துல இருக்கற அத்தனைக் கோபுர தரிசனங்களையும், கைலாச மலையில பார்க்கலாம்.. அண்ணாமலை மாதிரி கைலாச மலைய கிரிவலம் வந்தா நொடிக்கு நொடி மலைத் தரிசனம் மாறிக்கிட்டேயிருக்கும்.. கங்கைல நம்ம பாக்கற மணிகர்ணிகா காட் மாதிரி வேதாரண்யத்திலேயும் இருக்கு, காசிக்குப் போயி மணிகர்ணிகா கங்கைக் கரைல தர்ப்பணம் செய்ய முடியாதவங்க வேதாரண்யத்துல மணிகர்ணிகா தீர்த்தத்துல எல்லாம் நல்லாப் பண்ணிடலாம்..!”
“கயைல ஒடறப் பல்குனி நதிதான் திருச்சிப் பூவாளூர் பக்கத்துல இன்னொருப் பல்குனி நதியா ஓடுது, கயைல சிராத்தம் பண்ண முடியாதவங்க பூவாளூர் பல்குனி நதிக் கரையில் பண்றது ரொம்ப விசேஷம். ............ காசில கங்கைக்கு மறுகரைல வியாச காசி இருக்கு.. இன்னிக்கும் வியாச பகவான் வர்ற இடம்டா.... எங்கல்லாம் வேதசக்தி நிறைஞ்சு இருக்கோ அங்கல்லாம் தினசரி வியாசர் வந்து போறார். திருக்கழுக்குன்றத்துல வேதமே மலையா இருக்கு..... அங்கே வராரு.”
இவ்வாறாக பெரியவர் எத்தனையோ சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டே சிறுவனை ஏதோ ஒரு கோயிலுக்கு அழைத்து வந்து விட்டார்... எத்துணையோ ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. சிறுவன் நன்றாக உற்றுப் பார்த்தான்.., ஏற்கனவே நாம் வந்த கோயில் போலிருக்குதே!  அக்காலத்தில் அந்தக் கோயிலுக்கு எதிரில் குளம் நன்றாக இருந்தது.. தற்போது அது ஏனோ, தானோ என்றாகி விட்டது..
பெரியவர் குளக்கரைக்குச் சென்றார்... “நீரில் ஏதோ சலசலப்பு சப்தம் கேட்கிறதோ”. சிறுவன் உற்றுப் பார்த்தான்.. பெரியவர் சிறுவனை குளக்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை. ஏனோ தெரியவில்லை... !  யாரோ தீர்த்தக் கரையில் அமர்ந்து ஏதோ ஜல பூஜையோ, தர்ப்பணமோ செய்வது போலிருந்தது. தர்ப்பை வாசனை வந்தது..! சூரியனார் கோயில், தஞ்சை அகழி வாய்க்கால், கும்பகோணம் காவேரி உப நதிகள், எத்துணையோ கோயில் குளங்கள் எல்லாம் அழுக்கடைந்தது போல் காணப்பட்டாலும் பெரியவர் சிறுவனை அவற்றிலெல்லாம் நீராட வைத்து தீர்த்தத்தையும் நிறையப் பருகச் செய்தார்.. “குளம் நாறுகின்றதே” எனத் தயங்கித் தயங்கி நீரில் இறங்கும் சிறுவன் நீராடியவுடன் தன் மேனியில் நறுமணம் வீசுவது உண்டு வியந்திருக்கின்றான்..
“இது தாண்டா மாயை! உண்மையாகவே புண்ணியத் தீர்த்தம்னு நெனச்சாப் புண்யத் தீர்த்தம் தான்... வேற மாதிரி நெனச்சா வேற மாதிரிதான்...”, என்று பெரியவர் வியாக்யானம் கொடுப்பார்...! சிறுவன் குளத்தடியில் ஏதோ சலசலப்பு சத்தத்தைக் கேட்டானல்லவா? யாரோ ஒருவர் அங்கிருந்து வேகவேகமாகக் கோயிலினுள் நுழைந்தார்.... சிறுவன் திரும்பிப் பார்ப்பதற்குள் பெரியவரே அங்கு வந்து சிறுவனைத் தரதர என்று இழுத்துக் கொண்டுக் கோயிலினுள் சென்றார்...அது திருவானைக் கோயில் போல சாளரக் கோயில்..! அதாவது மூலவரின் எதிரே சாளரமாகிய பலகணி இருக்கும். பலகணி துவார ஓட்டைகளின் வழியே சுவாமியைப் பார்ப்பது மிகவும் சிறப்பானது என்று சிறுவன் உணர்ந்திருக்கின்றான்... இத்தகைய சாளரக் கோயில் மூர்த்திகளுக்கு நேத்திர பாஸுர சக்தி அதிகம் என்பதால், முதலில் சாளரம் வழியே சுவாமியை தரிசித்துத் விட்டுதான் பக்க வழியாக உள்ளே செல்வர்....
யாரோ ஒரு பெரியவர் உள்ளே சென்றார் அல்லவா? பெரியவர் சாளரத்தில் கண்களை வைத்துக் கொண்டு உள்ளே பார்க்கச் செய்தார். சிறுவனுக்கும் எதையோ காட்டினார்! விடியும் பொழுதிற்கு முந்திய சாமம் ஆதலின் சற்றே இருட்டாய் இருந்தமையால், உள்ளே இருப்பவரை அரைகுறையாய்த்தான் சிறுவனால் பார்க்க முடிந்தது.. மூலஸ்தானத்தில் விளக்கையேற்றிய அவர், விரைவாக வெளிவந்து கோயிலை வலம் வரத் தொடங்கிடவே பெரியவரின் பின்னால் சிறுவனும் விரைந்தான்... ஆனால் பெரியவர் முன் சென்றமையால், யார் வந்தது என்பதைக் காண முடியாதபடி பட்டும் படாமலுமே அவர் உருவம் தெரிந்தது.
வன்னி மரத்தை அவர் சுற்றிய போது தான் ஏதோ அரைகுறையாக சிறுவனால் அவரைப் பார்க்க முடிந்தது, பெரியவருடன் சிறுவன் வன்னியை வலம் வந்து முடிப்பதற்குள் அவர் கோயில் வாசலுக்கு வந்து விட்டார்.. பெரியவர் மிக விரைவாக வந்தும் சிறுவன் பின்னால் ஓடோடி வந்தாலும் கூட முன் சென்றவர் கொடி மரத்தின் கீழ் இறைவனை வணங்கிச் செல்வதையே அரைகுறையாகப் பொழுது புலர்ந்தும் புலரா நிலையில் சிறுவனால் காண முடிந்தது... இப்போது சற்றே சூரியனின் புண்ணியக் கதிர்கள் வந்திட அப்போது தான் சிறுவன் கவனித்தான்... ஆம்! அதுதான் ஸ்ரீவியாசர்பாடி இரவீஸ்வரர் ஆலயம், சூரிய பகவான் தரிசித்த தலம்! இங்கு ஸ்ரீஇரவீஸ்வர லிங்கத்தின் திருமேனியிலோ பல கோடி, கோடானு கோடி சூர்யப்பிரகாச அக்னியைத் தம்முள் சூட்சுமமாய்த் தாங்கியுள்ளார்... இவரை வழிபட்டுத்தான் ஸ்ரீவியாச மாமுனி நான்கு வேதங்களையும் பகுத்து இதிகாசங்களையும் படைத்தார்... தினந்தோறும் ஸ்ரீவியாச பகவான் வந்து செல்கின்ற புனிதமான திருக்கோயிலே சென்னை வியாசர் பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயமாகும். அதிலும் சூரிய பகவானுக்குரித்தான ரதசப்தமி தினத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் ஏதேனும் ஒரு உருவில் ஸ்ரீரவீஸ்வரரை வழிபடும் ஸ்ரீவியாச பகவானின் அருள் தரும் தரிசனம் பாக்யம் உள்ளவருக்கே குருவருளால் கிட்டும்! சற்குருவை நம்பிச் சரணடைந்தால் அவரால் அளிக்க முடியாத (அருட்) செல்வம் ஏதுமுண்டோ?

தெய்வீகமாய் வாழ்வது எப்படி ?

தெய்வீகமாய் வாழ்வது எப்படி?
(இத் தொடரில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் தெய்வீகத்தை இணைக்கும் எளிய அருள் வழி முறைகளை நல்குகின்றார்கள்...)
வயதான பின் தெய்வீகத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணாது, உங்களுடைய குழந்தைகளையும், சிறுவயதிலேயே, பள்ளி, கல்லூரிப் பருவத்திலேயே ஏன் நீங்களும் இளைய நடுத்தர வயதிலேயே தெய்வீகமாக வாழக் கற்றுக் கொண்டால் இறுதி வாழ்க்கையில் இறை நினைவோடு சாந்தமாக நன்முறையாக மலர்வதோடு மட்டுமின்றி, நடைமுறை வாழ்க்கையிலும், சூரியப் பிரபை போல இறைவட்டத்தினுள் நம் வாழ்க்கைப் புனிதமாகத் துலங்குமன்றோ! இதுவே சற்குருவின் அருட்கடாட்சமாகும்.
கடந்த பல வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்களில் அப்பர் சுவாமிகளின் அருளுரையாம் உழவாரத் திருப்பணிகளை நான்கு வயது முதல் எண்பது வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வரை பாலகர்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி, கல்லூரிப் பருவத்தினர் என ஜாதி, இன பேதமின்றி பலவகையினரும் பங்கு கொள்ளும் வண்ணம் அரிய உழவாரத் திருப்பணிகளை நம் குரு மங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் நடத்தி வருகின்றார்கள்.  ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீகாமாட்சி ஆலயம், ஸ்ரீவரதராஜர் ஆலயம், திருவானைக் காவல், திருவிடைமருதூர், ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி ஆலயங்கள், திருவையாறு, திருப்பூந்துருத்தி, கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம், குணசீலம், சுவாமி மலை, திருவலஞ்சுழி போன்ற இப்பிறவியிலும் இனியும் இத்தகு தெய்வீக வாய்ப்பு கிட்டுமா என்று பலரும் ஏங்கும் வகையில் பல ஆலய உழவாரத் திருப்பணிகளை ஆற்றும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்த சற்குருவாம் நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகட்கு ஞாபக சக்தி இல்லை, நன்கு படிக்கவில்லை எனுங் குறையே விஞ்சி நிற்கிறது.. அதிலும், தம்பதியர் வேலைக்குச் செல்பவர்களாயின், குழந்தைகள் படும் கஷ்டமோ அளவிட இயலாது. மூன்று வயதிலேயே குழந்தைகளை crèche  எனப்படும் குழந்தைக் காப்பகத்திற்கு அனுப்பி விட்டால் பெற்றோரின் அன்புப் பரிமாற்றத்திற்கு அங்கே இடமேது? தாயினும் சாலப்பரிந்தூட்டும் இடம் எதுவும் உண்டா என்ன?

எழுத்தறிவிக்கும் இன்னம்பர்

எழுத்தறிவிக்கும் ஏகம்பர்!
எல்.கே.ஜி, யு.கே.ஜி என மூன்று வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு விரட்டி விடாமல் நம் முதியோர்கள் வகுத்த வழிப்படி 5 வயது வரை பெற்றோர்கள் குழந்தைகளுடன் நன்கு பழகி, விளையாடி, தாயன்பை உணர வைத்து, தந்தையின் பாசத்தை ஊட்டுவித்து ஐந்து வயதிற்கு மேல் பள்ளிக்கு அனுப்புவதே சாலச் சிறந்ததாகும்.. தஞ்சை திருவையாறு அருகே உள்ள இன்னம்பூர் எனும் திருத்தலத்தில் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிக்கு இலக்கணம் உபதேசித்த எழுத்தறிவித்த நாதராக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். முதன் முதலாகக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் முன் இத்திருத்தலத்திற்கு வந்து ஒரு தட்டில் முழு நெல்மணிகளைப் பரப்பி அதில்.....
1. பிள்ளையார் சுழியும், அதற்கு அடியில் இரண்டு பீடங்களும் இட்டு,
2. ஓம் நமசிவாய!
3. ஓம் ஹரி ஓம்!
4. ஓம் ஹயக்ரீவா போற்றி!
5. ஓம் ஸ்ரீசரஸ்வதி துணை
எனக் குழந்தையின் வலது குருவிரலால் (ஆள்காட்டி விரலால்) எழுத வைத்துக் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கி இங்கு வழிபட வேண்டும். உங்கள் குழந்தையையே இத்தலத்தில் சந்தனத்தை அரைக்க வைத்து ஸ்ரீவிநாயகருக்கும், அம்பிகைக்கும், ஈஸ்வரனுக்கும் இட்டு அடிப்பிரதட்சிணம் செய்ய வைத்து வழிபடுக! இது மட்டுமல்லாது தின்ந்தோறும், உங்கள் வீட்டின் அருகில்/பிளாட்டில் உள்ள விநாயகர் அல்லது எந்த தெய்வமூர்த்திக்கும் அரைத்த சந்தனத்தை இட்டு வரச் செய்யுங்கள். இது நல்ஒழுக்கத்தைத் தரும்! பிள்ளைகள் எதிர்த்துப் பேசாமல் பணிவுடன் வளர்வர். எப்போது புத்தாடைகள் வாங்கினாலும், உங்கள் வசதிக்கேற்ப கூடவே ஒரு செட் உடைகளை எடுத்து உங்கள் குழந்தைகள் மூலமே கோயிலில் ஏழைக்கு தானம் செய்கின்ற நற்பழக்கத்தை ஊட்டி விடுங்கள். இது பக்தியை வளர்க்கும்.
காலணி தானம் சாலவும் பெரிதே!

உங்களுடைய காலணிகளைக் கடைசி மயிரிழை வரை ஒட்டிக் கொண்டு கிழியும் நிலை வரை வைத்துக் கொள்ளாது ஓரளவு போட்டுப் பழகிய பின்னர், காலணி தானத்தையும் செய்திட, காலில் அடிபடுதல், கால் ஆணி, சேற்றுப்புண் போன்றவை கர்மவினைகளாக நமக்கு அண்டா வண்ணம் இத்தகைய காலணி தானப் புண்ணிய சக்தியே நமக்குப் பெரிதும் உதவும். வசதியுடையோர் புதிய காலணி, ஆடைகளை தானமாக அளித்தலே சிறப்பானது..
முத்திரை தரும் முக்தியுரை :
சென்ற இதழில் ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசனமாக கைவிரல் முத்திரைதனை அளித்துள்ளோம். உங்கள் குழந்தைகட்கு இதைக் கற்பித்து இம்முத்திரை மூலமாக கோபுர தரிசனங்களைக் காண்கின்ற நற்பழக்கத்தை கற்றுத் தருவீராக ! திருஅண்ணாமலை, சென்னை திருக்கச்சூர், பழனி, குளித்தலை அருகில் அய்யர்மலை, திருப்பரங்குன்றம், திருச்சி மலைக்கோட்டை, குன்றக்குடி போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் வரும் போது, ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை மூலமாக ஆயிரக்கணக்கான மலை தரிசனங்களைக் காண்கின்ற அரிய அற்புத தெய்வீக வாய்ப்பைப் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தாருங்கள். இதுவே சாசுவதமாக அவர்தம் வாழ்வில் நிலைத்து நின்று உதவும்.
உற்றம், சுற்றம், நட்பின் உதவிகூட நிலையல்ல. இத்தகைய தரிசன பலன்களே என்றும் கூட இருந்து நிலைத்து நிற்கும். இறையருளாக, வேறு நாடுகளில் பெற இயலாத பாக்யமாக நம் பாரதத் திருநாட்டில் நம் தெருவில் தினந்தோறும் கோமாதாவாக பசுவை தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டுகின்றது.. சிவன், பார்வதி, பெருமாள், அகத்தியர், சப்தரிஷிகள், சூரியன், சந்திரன், பிரம்மா என அனைத்து தெய்வமூர்த்திகளும் உறைகின்ற பசு நடமாடுங் கோயிலாகும், கோயிலுக்குச் செல்கின்ற பழக்கமே நின்று விட்ட நிலையில் ஒரு பசுவைத் தொட்டுக் கும்பிடுவதால் அனைத்து தெய்வமூர்த்தி தரிசனப் பலனேனும் கிட்டுமல்லவா?

ருத்ர சாவர்ணி மனு
மிகவும் விசேஷமான ருத்ர சாவர்ணி மனு தர்ப்பண நாள் : நாம் நினைப்பது போல அமாவாசை மட்டுமே தர்ப்பண நாள் என்பது இல்லை. நாம் பன்முறை எடுத்துரைத்து வருவது போல அக்காலத்தில் நம் முன்னோர்கள் தினந்தோறும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் இட்டு வந்தார்கள். இது மட்டுமின்றி சந்தியா வந்தன வழிபாடுகளில் அனைத்து தெய்வமூர்த்திகளுக்கும் தர்ப்பண அர்க்யம் அளிப்பதும் உண்டு. இவ்வழியில் மனுக்கள் என்பார் நம்முடைய ஆதிமூல கர்த்தாக்கள் ஆவார்கள். அதாவது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனுவின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் தாம்..
எனவே, அனைத்து மனிதர்களும் ஒரு மனுவின் பாரம்பரியத்தில் உதித்தவர்கள் ஆதலின் நம்மிடையே எவ்வித ஜாதி, மத, இன, குல வேறுபாடுகள் கிடையாது. இது மட்டுமல்லாமல் தாவரங்களும், விலங்கினங்களும் கூட, தத்தமக்கு ஒவ்வொரு மனுவையும், மகரிஷியையும் தம்முடைய பாரம்பரிய ரிஷியாகக் கொண்டுள்ளனர்.. எனவே தான் நித்திய தர்ப்பணம் என்பது மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணமாக கலியுகத்தில் மாறிவிடும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த மகரிஷிகள் மாளயபட்சம் என்ற அபூர்வமான தர்ப்பண நாட்களை நமக்கு விதித்து இந்த மாளய பட்ச பதினைந்து தினங்களிலும் நம்முடைய உறவினர்களுக்கு மட்டுமின்றி ஜாதி, வேறுபாடின்றி உற்றம், சுற்றம், நட்பு, அசைவர்களாய்/சைவர்களாய் உண்டு களித்த உயிரினங்களுக்கும், காய்கறிகளுக்கும், ஏனைய தாவரங்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் அளிக்கின்ற மகத்தான பண்பாடு இன்றும் விளங்குகின்றது.
ஒரு அருகம்புல் கொடியை/செடியை பசு, ஆடுகள், உண்ணும் போது அதனுடைய மூலிகைத் தன்மையானது அவ்விலங்கின் உடலெங்கும் பரவி அது பசும்பாலாய், ஆட்டுப் பாலாய் அதனுடைய தெய்வீக சக்தி நிரவுகின்றது.. இப்பசும் பாலையும், ஆட்டுப் பாலையும், அருந்துபவர்களுக்கும் அவருடைய சந்ததிகளுக்கும் ஜீன்ஸ் எனப்படும் ஜீவ அணுக்களின் வழியாக அந்த ஒரு சிறிய அருகம்புல்லின் தெய்வீகத் தன்மையானது எத்தணையோ சந்ததிகளுக்கு ஜீவதாதுவாய் பரவுகின்றது அல்லவா? எனவே, இது மட்டுமல்லாது ஒரு சிறிய அருகம்புல்லை எடுத்து விநாயகருக்கு அர்ப்பணித்தால் கூட அதே மிகச் சிறந்த தவமாகின்றது அல்லவா! ஸ்ரீவிநாயகப் பெருமானின் மேல் இடப்படுகின்ற அருகம்புல்லும், அருகம்புல் மாலைய்ம் காய்ந்து விழுந்தாலும் கூட அது மக்கி, எருவாகி எத்தனையோ தாவரங்களுக்கு மூல சக்தியாக மீண்டும் வெளிவருகின்றது.. எனவே, ஒரு சிறிய அருகம்புல்லின் தியாகசீலத்தைக் கூட மனிதர்கள் பெற்றார் இல்லை.
இவ்வகையில் பதினான்கு விதமான மனுக்கள் வரிசையாக பிரபஞ்சத்தை இறை ஆணையாக ஆளுகின்றனர். ஒவ்வொரு மனுவும் பல லட்சம் வருடங்களுக்கு ஒரு மன்னர் ஆட்சி செய்கின்றார்... அக்னி புராணத்தின்படி நம்முடைய தற்போதைய கலியுகத்தின் மனுவாக அதவாவது ஏழாவது மனுவாக விளங்குபவரே ஸ்ரீவைவஸ்வத மனு. சிருஷ்டியின் போது பிரம்மா பலவித சிருஷ்டி இலக்கணங்களையும், தத்துவங்களையும் படைத்தார். உண்மையில் ஆண், பெண் என்ற வேறுபாடு நம்முடைய வெளி கண்களுக்குத்தான் தெரிகின்றதே தவிர, ஆத்ம தத்துவத்தில் இரண்டும் ஒன்றே.
ஸ்ரீபிரம்ம மூர்த்தியே தம்முடைய தேக காந்தியை ஆண் அம்சமாகவும், பெண் அம்சமாகவும் படைத்தார்.. இதையே ஈஸ்வரனின் அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் நமக்கு புலப்படுத்துகின்றது... இவ்வாறாகத் தான் பதினான்கு மனுக்களும் தோன்றி அவருடைய பாரம்பரிய கர்த்தாக்களாக நாம் இன்று உதித்துள்ளோம். இவ்வாறாக ஒவ்வொரு மனுவும் ஒவ்வொரு யுகத்தை ஆண்டனர். ஒரு யுகாந்திரம் என்பது நம்முடைய பூலோகக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டதாம்.. ஏனென்றால் பதினான்கு மனுக்களின் காலம் முடியும்போதுதான் பிரம்மனுக்கு ஒரு பகல் கழிந்ததாக ஆகின்றது.. அதாவது பிரம்மனுடைய ஒரு பகல் கால ஆட்சிதான் இந்த பதினான்கு மனுக்களின் ஆட்சியாகும்... எவ்வாறு நம் மூதாதையர்களுக்கு நன்றி செலுத்தும் வகையாகத் தான் தர்ப்பணம் அளிக்கின்றோமோ அதே போல நம்முடைய ஆதிமூல கர்த்தாவாக விளங்குகின்ற மனுவிற்கும் தர்ப்பண அர்க்யம் அளித்தாக வேண்டும்.
நம்முடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனுவின் அம்சமாக, வம்சமாகப் பிறந்திருக்கக் கூடும் அல்லவா? எனவே தான் இந்த பதினான்கு மனுக்கள் அவதரித்த நாட்களை எல்லாம் அந்தந்த மனுக்குரிய தர்ப்பணத் தினங்களாக நாம் கொண்டாடுகின்றோம்.. ஆனால் இந்த மனுதர்ப்பண வழிபாடெல்லாம் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்டது... மனு என்பவர் நம்முடைய ஆதிமூல கர்த்தாவாக விளங்குவதால் மனித சமுதாயத்தில் எவ்வித ஜாதி, மத, இன, ஆண், பெண் வேறுபாடு கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் முகமாகத்தான் மனு தர்ப்பண வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது... எனவே, தர்ப்பண வழிபாடு மீண்டும் மறுமலர்ச்சி பெறுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்குள் விளங்குகின்ற இன, குல, ஜாதி, மத வேறுபாடுகள் மறைந்து இவ்வுலகமே அமைதிப் பூங்காவாக விளங்கும் என்பதில் ஐயமில்லை..
இனிமேல் ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைந்து விட்ட தர்ப்பண அர்க்ய வழிபாட்டைத் தாமே தொடர்ந்து வந்திடில் இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாக மாறுகின்றது என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் ருத்ர சாவர்ணி மனு தினமானது பங்குனி மாதம் 3ஆம் நாள் 17.3.1999 அன்று வருவதால் இன்று ருத்ர சாவர்ணி மனுவிற்கு தர்ப்பணமும், பித்ரு திவசமும் அளிப்பது சிறப்புடையதாகும். ருத்ர சாவர்ணி மனு மூர்த்தியே உலகெங்கும் வில்வ வனங்களைத் தோற்று வில்வ மரத்தடியில் பலவிதமான தர்ப்பண பூஜைகளைச் செய்து அனைவருக்கும் இதன் மகிமைகளைப் புகட்டி வந்தார். எனவே, சிருஷ்டி காலத்திலேயே தர்ப்பண வழிபாடு தொடங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த ருத்ர சாவர்ணி மனுதினம் மிகச் சிறந்த தர்ப்பண தினமாகும். இன்றைக்கு அளிக்கப்படுகின்ற தர்ப்பண பூஜைகள் இதுவரை விட்டுப் போன எத்தனையோ ஆயிரம் தர்ப்பணங்களுக்கும், ஸ்ராத்த பூஜைகளுக்கும் பரிஹாரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஆதிமூல மனுக்களின், மகரிஷிகளின் கோத்ராதிபதிகளின் ஆசீர்வாதமும் நமக்கு பெற்றுத் தருகின்றது. ருத்ரசாவர்ணி மனு தர்ப்பணம் அனைவருக்கும் உரித்தானதே.. இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது.
சுபர்ணன் என்பவன் தான் ருத்ர சாவர்ணி மனுக்குரிய தர்ப்பண வழிபாட்டை நமக்கு பெற்றுத் தந்தவர். இவர் பிரபஞ்சமெங்கும் வலம் வந்து ருத்ர சார்வணி மனுமூர்த்தி கண்ட வில்வ மரங்களையெல்லாம் வழிபடும் வகையில் நமக்கு ஸ்தல விருட்சங்களாகவும், மூலிகை மரமாகவும், வில்வத்தை நமக்கு வழிப்படுத்தித் தந்தார். எனவே சாவர்ணி மனு தினமாகிய இன்று 17.3.1999 விடியற்காலையில் 4 மணி அளவில் தர்ப்பணம் அளிப்பது தான் சிறப்புடையது. இதுவே மனுக்களின், மகரிஷிகளின், தேவர்களுடைய பூஜை நேரமாகும்.
ஒரு நுனி வாழை இலையில் முழு அரிசி மணிகளை பரப்பி, அதன் மேல் வட்டமாக சம்பங்கி பூக்களைப் பரப்பி, தர்ப்பைச் சட்டம் வைத்து அதன் மேல் தர்ப்பணம் இடுதல் வேண்டும். தர்ப்பண மந்திரங்கள் மிகவும் எளிமையானவையே.. எவருடைய உதவியுமின்றி, அனைவரும் எத்தகைய வேறுபாடுமின்றி தாங்களே இத்தகைய தர்ப்பண பூஜைகளைச் செய்யலாம். சம்பங்கி வட்டச் சக்கரத்தின் மேல் தர்பைகளை பரப்பி, தர்பை சட்டத்தையும் அமைத்து பதினான்கு மனுக்களின் பெயரைச் சொல்லி அர்க்யம் அளிப்பது மிகவும் சிறப்புடையதாகும்..
இத்தகைய தர்ப்பண பூஜையை நீங்கள் வாழ்நாளில் என்றேனும் செய்திருக்கிறீர்களா? உங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்... இன்றைக்கு நாம் இந்த பதினான்கு மனுக்களின் பாரம்பரியமாகத்தான் மனிதசமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றோம். மனிதரிடையே மட்டுமின்றி, ஆண், பெண் என்ற வித்யாசமின்றி உள்ளே உரைவது ஆத்மாதான், ஆன்மஜோதியாம் என்பதை நமக்கு உணர்த்துகின்ற வகையில் தான் இத்தகைய தர்ப்பண வழிபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..  எனவே இன்று ருத்ர சாவர்ணி மனு தினத்தில் 4 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம்  நேரத்தில் இத்தகைய தர்ப்பண பூஜை முடித்து சூர்ய உதயத்திற்கு மேல் ஏதேனும் ஆலயத்தில் வில்வ மர தரிசனத்தைப் பெற்று, அதன் அடிப் பகுதியை நன்கு (வேர்ப்பகுதி) சுத்தம் செய்து, கோலம், மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அடிப்பிரதட்சிணம் செய்து பதினான்கு முறை வலம் வருதல் வேண்டும்.. பிறகு சிருஷ்டியின் போது முதன் முதலாகத் தோன்றிய தானியமான அரிசியால் ஆன அன்னம் வடித்து தானம் செய்திட வேண்டும்..

1. ஸ்ரீஸ்வாயம்பு மனு தர்ப்பயாமி

2. ஸ்ரீசுவாரோஷன் மனு தர்ப்பயாமி

3. ஸ்ரீ உத்தமன் மனு தர்ப்பயாமி

4. ஸ்ரீ தாமசன் மனு தர்ப்பயாமி

5. ஸ்ரீ ரைவதன் மனு தர்ப்பயாமி

6. ஸ்ரீசாக்ஷுஷன்/சாட்சுஷன் மனு தர்ப்பயாமி

7. ஸ்ரீவைவஸ்தன் மனு தர்ப்பயாமி

8. ஸ்ரீ சாவர்ணி மனு தர்ப்பயாமி

9. ஸ்ரீதக்ஷ சாவர்ணி மனு தார்ப்பயாமி

10. ஸ்ரீபிரம்ம சாவர்ணி மனு தர்ப்பயாமி

11. ஸ்ரீதர்ம சாவர்ணி மனு தர்ப்பயாமி

12. ஸ்ரீருத்ர சாவர்ணி மனு தர்ப்பயாமி

13. ஸ்ரீரௌச்யன் மனு தர்ப்பயாமி

14. ஸ்ரீபௌத்யன் மனு தர்ப்பயாமி

பங்குனி உத்திரம்

தற்காலத்தில் திருமணங்களில் காணப்படுகின்ற குறைகளுக்கு நிவர்த்தியாக அமைவது பங்குனி உத்திரப் பூஜையாகும். பங்குனி உத்திரம் திருநாளன்று பூலோகம் மட்டுமின்றி சகல லோகங்களிலும் மாங்கல்ய மங்களம் பொங்குகின்றது.
பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரித்தான நாளாகவும், தெய்வமூர்த்திகளின் திருமண உற்சவ தினமாகவும் பிரபலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.. சித்புருஷர்கள் பங்குனி உத்திரத்தின் மகிமையை மிகவும் சிறப்புடன் எடுத்துரைக்கின்றனர். தற்காலத் திருமணங்களில் உள்ள குறைபாடுகளை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் சுட்டிக் காட்டி அதற்குரிய நிவர்த்திகளையும் சித்புருஷர்களின் அருள்வழி முறைகளாக நம் குருமங்கள கந்தர்வா அளித்து வருகின்றார் அல்லவா!
தற்காலத் திருமணங்களில் உள்ள மிகவும் முக்கியமான குறைபாடு என்னவென்றால், ஜாதகப் பொருத்தங்கள் சரிவர கணிக்கப்படுவதில்லை என்பதேயாகும்.. ஏனெனில் ஜோதிடம் என்பது மிகவும் புனிதமான தொழில் என்று சொல்வதை விட மிகவும் பவித்ரமான இறை வழிபாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது என்பதே சாலப் பொருத்தமாகும். ஜோதிடர்கள் அனைவரும் தக்க காலதேவதா பூஜை முறைகளை கைக்கொண்டு இதனை ஒரு புனிதமான சமுதாய சேவையாகக் கருதி எவ்வித ஆதாயத்தையோ, வருமானத்தையோ எதிர்பாராமல் இறையருளால் தங்களுக்கு சமுதாயப் பணியாக ஆற்றிட அளிக்கப்பட்ட மாபெரும் மனிதப் பிறவி என்று உணர்ந்து செயலாற்றினால் தான் இறையருள் மிகுந்து ஜோதிடராகத் திகழ முடியும் என்று உணர்க! மனப் பொருத்தம், நாடிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், வேதை பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம் இப்படி பலவிதமான பொருத்தங்களையும், பிள்ளை பெண்களுடைய ஜாதகச் சக்கரங்களையும் நன்கு கணித்து நல்லுரை கூறுவதற்குத் தக்க தெய்வீக சக்தியையும் ஜோதிடத்தில் பெற்றாக வேண்டும்.

ஸ்ரீபூதேஷ்வர மூர்த்தி
திருப்புகலூர்

ஸ்ரீபவிஸ்யேஷ்வர மூர்த்தி
திருப்புகலூர்

இதற்கு வரம் தருகின்ற மூர்த்திகள் பாரத நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள். திருப்புகலூரில் சிவாலயத்தில் உள்ள 3 முக்கியமான லிங்க மூர்த்திகள் தாம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை உணர்த்த வல்ல முக்கியமான தெய்வ மூர்த்திகள் ஆவர். எனவே, ஜோதிடர் மட்டுமின்றி மக்கள் அனைவருமே தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள இந்த 3 லிங்க மூர்த்திகளையும் முறையாக வழிபட்டு வருவார்களேயானால் அதிலும் குறித்த நாளில் குறித்த நக்ஷத்திரத் திதிகளில் குறித்த வழிபாடுகளுடன் பூஜித்து வருவார்களேயானால், அவருக்கு முக்காலத்தையும் உணர்கின்ற தெய்வீக சக்தி கிட்டுவதோடு அனைத்தையும் தம்முடைய கர்மவினைகளின் தொகுப்பாகவே ஏற்று வாழ்க்கையை மிகவும் செம்மையாக தெய்வீக நிலையில் நடத்திட இயலும்.
முக்காலங்காட்டும் மூம்மூர்த்திகள் :- இறந்த காலத்தைப் பற்றி அதாவது நடந்த காலத்தைப் பற்றிய தொகுப்பினை உணர்த்தவல்ல திருப்புகலூர் ஸ்ரீபூதேஸ்வர லிங்க மூர்த்திக்கு மகம் நக்ஷத்திரம் தோறும் எள்ளுக் காப்பிட்டு, அந்தாதிப் பாடல்களை ஓதி வருவது மிகவும் சிறப்புடையதாகும். இதனால் தற்போது நமக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கான கடந்த கால வினைகளின் தன்மையை நாம் நன்கு உணர்வதோடு, அதற்குரிய தக்க பரிகார முறைகளையும் குருவருளால் பெற்றிட முடியும்.
ஸ்ரீபவிஷ்யேஸ்வரர் நிகழ்காலப் பாகுபாடுகளை உணர்த்தவல்லவர். ஸ்ரீபவிஷ்யேஸ்வரர் ஸ்ரீலிங்க மூர்த்திக்கு அவரவர்க்குரிய நட்சத்திர தினத்திலும், திருவாதிரை நட்சத்திர தினத்திலும், குரு ஹோரையில் சந்தனக் காப்பிட்டு அந்தந்த தினத்திற்குரிய நிறத்திலான ஆடைகளை ஏழைகளுக்கு அளித்து வந்தால், இந்த வஸ்திர தானத்தின் மகிமையால் கிரக சஞ்சாரங்களினால் ஏற்படுகின்ற விளைவுகளைத் தாங்குகின்ற சக்தி ஏற்படுவதோடு கிரக மூர்த்திகளின் அருளையும் நன்முறையில் பெற்றிடலாம். எதிர்காலத்தைக் குறிக்கின்ற ஸ்ரீவர்த்மான ஸ்ரீலிங்க மூர்த்திக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் குறித்த ஹோரையில் முக்கூட்டுத் தைலக் காப்பிட்டும், வெண்ணெய்க் காப்பிட்டும் அமாவாசை தினத்தன்று தக்க தர்ப்பணங்களையும், ஏழைகளுக்கு நுனி வாழையில் பலவிதமான உணவுப் பண்டங்களை வைத்து அன்னதானம் செய்வது பௌர்ணமி திதிகளில் மூன்று தாமரை இலைகளை வைத்து சித்ரான்னத்தை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களுடன் உணவு படைப்பதும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் ஆகாமிக் (எதிர்வரும்) கர்மவினைகளுக்குத் தக்க பரிகாரம் தேடித் தருவதுமல்லாமல் இம்மூன்று லிங்க மூர்த்தி வழிபாடுகளையும்  தொடர்ந்து முறையாகக் கடைப்பிடித்து வருபவர்க்கு ஜோதிட ஞானத்தில் மிகச் சிறந்த கீர்த்தி உண்டாகும். ஆனால் எக்காரணம் கொண்டும் தன் ஜோதிட ஞானம்  மூலமாக எவ்விதமான ஆதாயத்தையும் எதிர்பாராது சிறந்த இறைச் சேவையாக  இலவச மக்கள் சேவையாக இதனை நடைமுறையில் கடைபிடித்து வர வேண்டும்..
சத்திரத்தில் திருமணமா ? தற்காலத்தில் உள்ள திருமணங்கள் பெரும்பாலும் சத்திரங்களில்தான் நடைபெறுகின்றன. சீட்டாட்டம், மது அருந்துதல், பீடி, சிகரெட் பிடித்தல் போன்ற பலவிதமான தீய செயல்கள் கூடி நடைபெறுகின்ற சத்திரங்களில் எந்தவிதமான தெய்வீக கதிர்ப் பரிமாணங்களை நாம் எதிர் பார்க்க முடியும்? எனவே பெரும்பாலான சத்திரங்களில் Negative forces எனப்படும் எதிர்வினை சக்திகள் தாம் நிறைந்துள்ளபடியால் இதன் மத்தியில் திருமணம் நிகழ்ந்தால், அது எத்தகைய வாழ்க்கையைத் தரமுடியும் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்! அக்காலத்தில் கோயிலருகே உள்ள அல்லது கோயிலுக்குரித்தான சத்திரங்களில் திருமணத்தை வைத்துக் கொண்டாலும் தாலிகட்டும் வைபவத்தை ஆலயங்களில் நிகழ்த்துவார்கள் அல்லது பெரும்பாலும் அவரவர்க்குரித்தான சொந்த இல்லங்களிலேயே திருமணங்கள் நடைபெற்று விடும்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சத்திரத்தில் திருமணம் என்பது நடைமுறை வழக்கமாகி விட்டாலும் குறைந்த பட்சம் தாலிகட்டும் வைபவத்தையாவது இறைச் சந்நிதியில் வைத்துக் கொள்வதுதான் சிறப்புடையதாகும். சாந்தி முகூர்த்தம் எனப்படும் மிகவும் புனிதமான வைபவமும் ஏதேதோ சத்திரத்தில் இல்லாமல் அவரவர் சொந்த இல்லத்திலேயே நல்ல புனிதமான நாளைத் தேர்ந்தெடுத்து நடைபெறுவது தான் தெய்வீகமானதாகும். மேலும் தற்காலத் திருமணங்களில் மந்திரங்கள் சரியான முறையில் ஓதப்படாததோடு மட்டுமல்லாமல் திருமணச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறுகின்ற ஹோமங்கள், அக்னி வழிபாடுகள், பித்ரு வழிபாடுகள் முதலியவை சிரத்தையுடன் நடத்தப்படுவதில்லை என்பதும் நாம் அறிந்த ஒன்றாகும்.
அனைத்துமே கடகடவென்று இயந்திர கதியில் நடைபெறுவதால் திருமண மந்திரங்களிலிருந்து பெற வேண்டிய தெய்வீக சக்தியையும் மணமக்கள் பெற இயலாமல் போய்விடுகின்றது. மேலும், முகூர்த்தத்துக்கு முன்னரேயே தம்பதிகளை ஒன்றாக அமர வைத்து வரவேற்பு (Reception) என்ற பெயரில் திருமணத்தின் தெய்வீகத் தன்மையையே பாதிக்கின்ற நடைமுறை வழக்கத்தையும் கண்டு நாம் வேதனையுறுகின்றோம்.
சப்தபதி என்கின்ற மிகவும் முக்கியமான சடங்கு நன்முறையில் நிகழ்ந்து முடியும் வரை மணமக்கள் எவருடனும் கை குலுக்குதல் கூடாது. இத்தகைய தோஷங்களுக்குப் பரிகாரமாகத்தான் ஆலயங்களில் திருமணம் நடைபெறுகின்ற போது மேற்கண்டபடி ஏற்படுகின்ற வேதச் சொற்குற்றங்கள், புனிதச் சடங்குகளை மதியாமை, எதிர்வினைச் சக்திகளின் ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்குப் பரிகாரமாக கோயிலில் உறைகின்ற கோடிக்கணக்கான தேவதைகள் தம்முடைய புண்ணிய சக்திகளையும் இவற்றிற்கான நல்ல பரிகாரங்களையும் நமக்குத் தந்தருள்கின்றனர். மேலும் மூலமூர்ர்த்தியின் நேத்திரப் பார்வையில் நடைபெறுகின்ற அனைத்து நற்காரியங்களுக்கும் மகத்தான சக்தி உண்டல்லவா? 
இறைவனுடைய பொற்பாதங்களில் பொன் மாங்கல்யத்தைச் சமர்ப்பித்து, அதனை இறைப்பரிசாக, மாங்கல்யமாக ஏற்கின்ற போது தோஷங்களை வடித்துப் புனிதமாக்குகின்ற அதன் மகத்துவத்தை எவ்வாறு வடித்துரைக்க இயலும்!  கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆதிசிவனை வழிபட்ட சௌர்ந்தர்ய நாயகி என்ற சாதாரணப் பெண்மணி தன்னுடைய உத்தம பக்தியினால் பங்குனி உத்திரத்தன்று சிவபெருமானையே அடைகின்ற உத்தமப் பெருநிலையை அடைந்த திருத்தலமாக இது இன்றும் பொலிகின்றதை நாம் காண்கின்றோம். எனவே இத்திருத்தலத்தில் பங்குனி உத்திரத்தன்று திருமணமாக வேண்டிய பெண்ணிற்குரிய பொன் மாங்கல்யத்தை ஸ்ரீசௌந்தர்ய அம்பாளுக்குச் சமர்ப்பித்து அதனை மாங்கல்ய தாரணத்தில் பயன்படுத்துவார்களேயானால் அதற்கு மகத்தான தெய்வீக சக்தியும் எத்தனையோ ஜென்மங்களைக் கரையேற்றுகின்ற புண்ணிய சக்தியும் தானாக வந்து சேர்வதுடன் கணவனுக்குத் தீர்க்கமான ஆயுளும் தீர்க்க தரிசனமும், தெய்வபக்தியும் கிட்டுவதற்கு இந்தப் பங்குனி உத்திர மாங்கல்ய வழிபாடு பெரிதும் உதவுகின்றது.

ஸ்ரீசௌந்தர நாயகி அம்மன்
கரூர்

எனவே பங்குனி உத்திரத்தன்று அம்பிகையின் திருப்பாதங்களில் புதிய மாங்கல்ய சரடுகளைச் சமர்ப்பித்து ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீஅபிராமி அந்தாதி போன்ற 1008 போற்றிகளை ஓதி குங்கும அர்ச்சனை செய்து மாங்கல்யத்தை மாற்றிக் கொள்வதோ அல்லது மணப்பெண்ணிற்கு அதனை மாங்கல்ய தானமாக அளிப்பதோ மிகவும் சிறப்புடையதாகும்.
விருட்ச பாக்ய மாங்கல்ய பூஜை :- பங்குனி உத்திரத்திற்கு முந்தைய மாசி மாத உத்திர நட்சத்திரத்தன்று உத்திர மாங்கல்ய பூஜை என்கின்ற அற்புதமான சித்புருஷர்கள் அருள்கின்ற பூஜையைத் தொடங்கி, இதனைப் பங்குனி உத்திரத்தன்று நிறைவுறச் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். இந்த விசேஷமான பூஜைக்கு விருட்சபாக்கிய மாங்கல்ய தாரண பூஜை என்று பெயர். உத்திர நட்சத்திரத் தினத்தன்று மஞ்சள் காப்பிட்ட புதிய மாங்கல்ய சரட்டினை, பலநூறு ஆண்டுகளாகத் திகழ்ந்து வருகின்ற ஆலய ஸ்தல விருட்சத்திற்குச் சார்த்தி வழிபடுதல் வேண்டும். உதாரணமாக காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மாமரமானது பல கோடி யுகங்களாக இருந்து வருகின்ற மிகவும் தொன்மையான, ஸ்ரீஉமையாம்பிகையால் வழிபடப்பட்ட மிகவும் விசேஷமான மரமாகும். இங்கு நான்கு வேதங்களே நான்கு வகை சுவை தரும் மாமரங்களாகத் தழைத்துள்ளமையால் வேதசக்தி நிறைந்த மாமரமாய் இது விளங்குகின்றது. இதன் காய், கனி சக்தி வாய்ந்த தெய்வீகப் பிரசாதமாகும். பங்குனி உத்திரத் திருநாளன்று இத்தகைய ஸ்தல விருட்சத்திற்கு மாங்கல்யத்தைச் சார்த்தி 108 முறை அடிப்பிரதட்சிணம் செய்து ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீஅபிராமி அந்தாதி, சிவ மற்றும் விஷ்ணு 1008 (ஸஹஸ்ரநாமம்) போற்றிகளை, துதிகளை ஓதி பிரதட்சிணம் செய்து வலம் வந்து வணங்கி அதனை இல்லத்தில் வைத்து தினந்தோறும் வழிபடுதல் வேண்டும். வசதியுள்ளோர் அல்லது ஆலயங்களுக்கு அருகில் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றோர் இந்த மாங்கல்யத்தைத் தினந்தோறும் மாசி மாத உத்திர நட்சத்திரம் முதல் பங்குனி உத்திரம் வரை ஸ்தல விருட்சத்திற்குச் சார்த்தி, மேற்கண்ட முறையில் சுற்றி வணங்கி வழிபட்டு வந்து பங்குனி உத்திரத்தன்று அம்பிகைக்கு அணிவித்து அதனைக் கொண்டு மாங்கல்யச் சரட்டினை மாற்றிக் கொள்வார்களேயானால்/மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்த, பகுதான்ய வருடத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய பாக்கியமாக விளங்குகின்றது. ஏனென்றால் ஸ்தல விருட்சங்கள் பகுதான்ய வருடத்தில் அதிகமாகத் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பகுதான்ய ஆண்டில் மாங்கல்யத்தை ஆலயத் தல விருட்சத்திற்குச் சாற்றி, அம்மரத்திற்கு அன்னம் படைத்து, ஆடைகள் சாற்றி அவற்றை அன்னதானமாக, வஸ்திர தானமாக அளித்தல் மாங்கல்யத்தின் பலனைப் பன்மடங்காகப் பெருக்குகின்றது.

திருப்பத்தூர் சிவாலயம்

உத்தம சுமங்கலிகளே விருட்ச தேவதைகளாக ஆகின்றனர். தங்களுடைய கணவன் நோய், நொடிகளில் வருந்துவதைக் கண்டு துயருடன் வாழ்கின்ற பெண் மணிகள் எத்தனையோ உண்டு. இவர்கள் இந்த விருட்ச பாக்கிய மாங்கல்ய தாரண பூஜையினைச் சிறப்பாகக் கடைபிடித்து மேற்கூறிய தான, தருமங்களுடன் இதனை நிறைவேற்றுவார்களேயானால் கணவனுக்குத் தக்க ஆயுள் விருத்தியையும், தீர்க்க தரிசனத்தையும் பெற்றுத் தருகின்ற நல்வழி காட்டுகின்ற பூஜையாக இது மலர்கின்றது. ஆலய ஸ்தல விருட்சங்கள் இல்லாத இடங்களில் வள்ளி, தெய்வானையுடன் தரிசனம் தருகின்ற ஸ்ரீ முருகப் பெருமான் திருச்சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை திருப்பாதங்களில் மாங்கல்யச் சரட்டினைச் சமர்ப்பித்து மேற்கண்ட பிரதட்சிணம், பூஜைகள், தோத்திரங்கள், வழிபாடுகள் ஆகியவற்றைக் கடைபிடித்து வருதலும் சிறந்ததுதாம்.
நாம் தான் நன்முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமே, நமக்கு எதற்கு இத்தகைய பூஜை என்றெல்லாம் எண்ணுதல் வேண்டாம். எதிர்காலத்தில் தன்னுடைய கணவன் நோய் நொடியின்றி நல்வாழ்க்கை பெறுவதற்காகவும் அனைத்து இல்லறப் பெண்மணிகளும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பூஜைகளில் ஒன்றே விருட்ச பாக்கிய மாங்கல்ய தாரண பூஜையாகும்.. பல ஆலயங்களிலும், அரச மரமும், வேப்ப மரமும் இணைந்திருக்கின்ற புனித தரிசனமும் காணுதற்கரியதாகும். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம், கரூரில் உள்ள ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்  போன்றத் திருத்தலங்களில் அரசமரமும், வேப்ப மரமும் இணைந்து இருப்பதைக் காணலாம்.
இத்திருத்தலங்களை உத்திர நட்சத்திரத்தன்று குறிப்பாக பங்குனி உத்திரத்தன்று இப்புனித மரங்களுக்கு மஞ்சள் காப்பிட்டு சந்தன, குங்குமம் இட்டு மஞ்சள் நிற ஆடைகளைச் சார்த்தி பிரதட்சிணம் செய்து வழிபட்டு ஆடைகளை ஏழைகளுக்குத் தானம் செய்து வர தம்பதிகளுக்கிடையே உள்ள மனக் கசப்புகள் நீங்கி நன்முறையில் தாம்பத்திய வாழ்க்கைத் தொடரும். எனவே, பங்குனி உத்திரம் என்பது இல்லற வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பூஜையாகும். கணவன், மனைவியரிடையே நன்முறையில் தெய்வீக அன்பு பிணைப்பு ஏற்படவும் தாம்பத்திய வாழ்வின் மூலம் முக்திக்கு வழிகாட்டும் தெய்வீக நிலையை அடைந்திடவும் பங்குனி உத்திர பூஜை பெரிதும் உதவுகின்றது. மாங்கல்யத்தை விருத்தி செய்கின்ற அற்புதமான தெய்வீக சக்தி கொண்டவை கொன்றை, மகிழம்பூ போன்ற விருட்சங்களாகும்.. இவை ஸ்தல விருட்சமாக உள்ள இடங்களிலும் இப்பூஜையை மேற்கொள்வது மிகவும் புனிதமானதாகும்.

தர்மராஜ தசமி

ஸ்ரீஎமதர்மராஜ பகவானும் நாம் வழிபட வேண்டிய மூர்த்திகளில் ஒருவரே! மகம், தசமி திதிகள் ஸ்ரீஎமதர்ம பகவானுக்குரித்தான நாட்களாகும். ஸ்ரீஎமனை வழிபட்டால் தான் எமபயம் நீங்கும்.
ஸ்ரீஎமபகவான், ஸ்ரீகுபேரன், ஸ்ரீசித்திரகுப்தன், ஸ்ரீதுவாரபாலக மூர்த்திகள் போன்ற தெய்வ மூர்த்திகளை நாம் வழிபட்டாக வேண்டும். எமன் என்றால் அஞ்சுதற்குரியவர் என்று எண்ணுதல் வேண்டாம்.
எமபயம் நீங்குதல் என்பது முக்திக்கும் மோட்சத்திற்கும் தேவையான முதல்படியாகும்.. எமனை அஞ்சுதல் கூடாது என்றால் எம பகவானை எதிர்த்து நிற்பது என்று பொருளல்ல. ஸ்ரீஎம மூர்த்தியானவர் நம்முடைய ஆத்ம ஜோதியை, கர்மவினைக்கேற்ப ஒரு உடலிலிருந்து மற்றொரு தேகத்திற்கு மாற்ற உதவும் ஆதார இறை மூர்த்தியாக விளங்குகின்றார். எனவே, மரணம் என்பது மற்றொரு பிறவியின் தொடக்கமாகவோ அல்லது மிகச் சிறந்த உத்தம நிலையில் பிறப்பு, இறப்பின் முடிவாகவோ அமைகின்றது. இதற்குரிய தெய்வீக சக்தியை அனுக்கிரகமாகத் தருபவரே ஸ்ரீஎம மூர்த்தியாவார். எனவே தான், எமதீபம், எம தர்ப்பணம் போன்ற விசேஷ தினங்கள் மிகவும் முக்கியமான வழிபாடுகளாக நமக்கு விதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஎமபகவானுக்கு உரித்தான சந்நிதிகள் ஒரு சில ஆலயங்களிலேயே மிகவும் அரிதாகக் காணப்படுவதால் மக்களும் ஸ்ரீஎம வழிபாட்டை அவ்வளவாக சிரத்தையுடன் தற்காலத்தில் எடுத்துக் கொள்வத்தில்லை.. இது மிகவும் தவறானதாகும். ஸ்ரீஎமனை வழிபட்டால் தான் எமபயம் தரும் நோய்களும் தீரும்.
எமபயம் என்றால் என்ன? நல்ல இளமையும், திடகாத்திரமும் இருக்கும் போது எது வந்தாலும் ஏற்பேன் என்ற ஒரு போலியான மன உறுதி ஏற்படும்.. ஆனால் நோயோ, முதுமையோ வந்தவுடன் எப்போது உயிர் பிரியுமோ என்ற அச்சம் தான் நம்மைச் சூழ்ந்து ஆசாபாசங்களில் ஆழ்த்தி விடுகிறது.. எனவே மரணம் வரும் போது மரணபயமின்றி, எம பயமின்றி அதனை எதிர்கொள்வது தான் எம பயம் நீங்குதலாகும்.
ஏனெனில் மரணப் படுக்கையில் இருக்கும் போதுதான் மாயையாக, கர்மவினைகளின் தொகுப்பாக, மீண்டும் வாழ வேண்டும். இன்னும் வாழ வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து கொண்டே இருக்கும்.. இந்த ஆசைகளிலேயே மனதைச் செலுத்துவதால் தான் இறக்கும் போது எந்தவிதச் தெய்வீகச் சிந்தனையும் ஒருவனை அண்டாது போய் விடுகிறது.
இறைச் சிந்தனையுடன் இறைநாமத்தை ஜெபித்தவாறே இறத்தல் என்பது பலர் மிகவும் பெறுதற்கரிய பாக்கியமாகும்.. ஏனெனில் எப்போதுமே இறை நாமத்தை, ஸ்ரீகாயத்ரீ ஜபத்தை விடாது ஜெபிக்கின்ற பழக்கம் இருந்தால் தானே மரணத் தறுவாயில் கூட இறைநாமம் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். இதற்கும் உதவுவதே எம வழிபாடு!  எனவே, உங்களுடைய வாழ்வில் மாதத்திற்கு ஒரு முறையாவது ஸ்ரீஎமபகவான் அருள்பாலிக்கின்ற விசேஷமான தலங்களுக்குச் சென்று ஸ்ரீஎம மூர்த்தியைத் தக்க முறையில் வழிபட்டு வாருங்கள். அப்போது தான் எமபயம் தீருவதோடு மட்டுமல்லாமல் நோய், நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கும் ஸ்ரீஎம வழிபாடு அருள்பாலிக்கும்.

ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பைஞ்ஞீலி

திருச்சி அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி, கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம், சென்னை வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயம், திருக்கடவூர், திருவைகாவூர் போன்ற இடங்கள் ஸ்ரீஎம மூர்த்திக்கு மிகவும் விசேஷமான தலங்களாகும். இத்தகைய தலங்களில் ஸ்ரீஎம பகவானின் இறைப் பெரும் சக்தியிருப்பது மட்டுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஸ்ரீஎமபகவானுக்குச் சந்நிதி இல்லாவிட்டாலும் கூட அவ்விடத்தில் எமவாதனையின்றி ஸ்ரீஎமபகவானின் அருட்சக்தி பரிணமித்து விளங்குவதை நம் பெரியோர்கள் எடுத்துரைத்து உள்ளார்கள். அமாவாசை தோறும் நாம் அளிக்கின்ற தர்ப்பணப் பூஜையின் ஒரு பங்கு எமலோகத்திற்குத் தான் செல்கின்றது. உண்மையில் நாம் தினந்தோறும் நம் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்தாக வேண்டும்.. அக்காலத்தில் நம் மூதாதையர்கள் நித்தியத் தர்ப்பணத்தை, அதாவது தினந்தோறும் தர்ப்பணம் அளிக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்க இதுவே  ஒரு மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணமாக மாறிவிட்டது கண்டு நாம் வேதனையுறுகின்றோம்..
பூஜையைச் சுருக்குவதா? என்னே கேவல வாழ்க்கை! எம வழிபாட்டைத்தான் தினந்தோறும் செய்ய வேண்டிய சந்தியா வந்தனம், காலை, மதியம், மாலை இம்மூன்று வேளைக்குரித்தான சந்தியா வந்தனம் வழிபாடுகளில் எமத்தர்ப்பணம் என்ற மிகச் சிறப்பான துதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யார் இதனை முறையாகச் செய்கின்றார்கள்! நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். காலையில் எழுந்து நீராடியவுடன் “ஸ்ரீஎமமூர்த்தி தர்ப்பயாமி, ஸ்ரீஎமமூர்த்தி தர்ப்பயாமி, ஸ்ரீஎமமூர்த்தி தர்ப்பயாமி” என்று ஓதி 3 முறை நீரால் அர்க்யம் வார்த்து எமத்தர்ப்பணம் செய்வீர்களேயானால் இது மிகச் சிறந்த எமப்ரீதியாக தினசரி பூஜையாக அமைகின்றது. நம் மூதாதையர்க்கு நாம் அளிப்பது தர்ப்பணமாகின்றது.. ஆனால் தெய்வமூர்த்திகளுக்கு அளிப்பது அர்க்யமாக மாறுகின்றது.
இதேபோன்று ஸ்ரீஎமம் தர்ப்பயாமி ; ஸ்ரீகிருஷ்ணம் தர்ப்பயாமி ; ஸ்ரீவிஷ்ணும் தர்ப்பயாமி என்று அனைத்து மூர்த்திகளுக்கும் நாம் தினந்தோறும் அர்க்யம் அளிப்பது மிகவும் சிறப்புடையதாகும். எந்தெந்த மூர்த்திகளின் வழிபாடெல்லாம் விடப்பட்டிருக்கின்றோ, உதாரணமாக ஸ்ரீசித்ரகுப்தர், ஸ்ரீஎமபகவான், ஸ்ரீகுபேரன், ஸ்ரீஇந்திரன், ஸ்ரீவாயு பகவான் போன்ற பல மூர்த்திகளையும் உங்களுடைய தினசரி பூஜை வழிபாட்டில் சேர்த்துக் கொண்டு, ஸ்ரீசுக்ரமூர்த்தி தர்ப்பயாமி ; ஸ்ரீசித்ரகுப்தம் தர்ப்பயாமி ; ஸ்ரீகால மூர்த்தி தர்ப்பயாமி என்று அனைத்து மூர்த்திகளுக்கும் நீங்கள் அர்க்யம் அளித்திடலாம். இவையெல்லாம் ஜல பூஜை எனப்படும் மிகச் சிறந்த வகையான பூஜையாகும்...
உங்கள் குல தேவதையின் பெயரைச் சொல்லியும் அர்க்யம் அளிப்பது மிகச் சிறந்த தினசரி பூஜையாகிறது. நம் உடலானது பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், ஆகாயம், அக்னி, வாயு போன்ற ஐந்து விதமான பஞ்சபூதத் தத்துவங்களால் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஐவிதமான பூஜைகளை (அர்க்யம், தர்ப்பணம், ஹோமம், தீபம், அர்ச்சனை) நாம் தினந்தோறும் செய்து வர வேண்டும். ஆனால் கலியுகத்தில் கோயிலுக்குப் போய்விட்டு வருவது என்பது மட்டுமே ஒரு பெரிய பூஜையாக பலருக்கும் ஆகி விட்டது. வழிபாடுகளை மறந்ததால் தான் என்ன வசதிகள் இருந்தாலும் இன்றைக்கு நம் கலியுக வாழ்க்கையானது துன்பங்கள் நிறைந்ததாக விளங்குகின்றது என்பதை நாம் மறந்து விடலாகாது..
எனவே, நாம் மறந்து விட்ட பலவிதபூஜைகளுக்கு நிவர்த்தியாகத்தான் இன்றைக்கும் நம் பஞ்சாங்கத்திலேயே பலவிதமான விசேஷ தினங்களைக் காணுகின்றோம். தர்மராஜ தசமி, எம தர்ப்பணம், எம தீபம், சித்திர குப்த பூஜை, வசந்த பூஜை, இந்திர பூஜை போன்ற விதவிதமான விசேஷ தினங்களைக் குறிப்பிடக் காரணம், நாம் எந்த வித தெய்வ மூர்த்திகளின் வழிபாட்டை மறந்து விட்டோமோ அவற்றுக்கு நிவர்த்தியாகவே பல ஆலயங்களிலும் இத்தகைய பூஜைகள் சமுதாய பூஜையாக பூலோக மக்கள் அனைவருக்குமாக இத்தகைய பூஜைகள் நடத்தப்படுகின்றன என்பதை உணர்த்திடவே!
எனவே உங்கள் உள்ளூர் ஆலயத்தில் பஞ்சாங்கத்தில் காணப்படுகின்ற அனைத்து விசேஷ தினங்களையும் கொண்டாடுவதற்கு நீங்கள் ஆவன செய்வீர்களேயானால் உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும், நீங்கள் செய்கின்ற மிகச் சீரிய சமுதாய சேவையாக விளங்கும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். உதாரணமாக தர்மராஜ தசமி என்கின்ற இந்த விசேஷ தினத்தை உங்கள் உள்ளூர் ஆலயத்தில் கொண்டாடுவதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்.. எமபகவானுடைய உருவம் ஆலயங்களில் இல்லாவிடினும் கூட ஸ்ரீஎம தர்மராஜானின் திருஉருவத்தை வரைந்தோ அல்லது திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற ஸ்ரீஎமதர்மராஜாவின் உருவத்தை வைத்தோ அல்லது ஒன்றுமே இல்லாவிடில் எள் உருண்டையில் மஞ்சள் பிள்ளையார் போல் வெற்றிலையில் பிடித்து வைத்து ஸ்ரீஎம தர்மராஜாவாக பாவித்து தர்மராஜ தசமியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவீர்களேயானால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, பாரத தேசத்திற்கு மட்டுமன்றி, உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் மிகச் சிறந்த சமுதாய சேவையாக தர்மராஜ தசமியை மிகச் சிறப்பாகக் கொண்டாடிடலாம்.
இதை விட மகத்தான இறைச் சேவை வேறு என்ன இருக்க முடியும்? இதற்காகத் தானே உடலை நாம் பெற்றிருக்கின்றோம் நமக்கென சுயநல பூஜை செய்வதற்காகவா இந்த உடல் நமக்கு தரப்பட்டுள்ளது? இத்தகைய பூஜைகளை மிகச் சிறந்த சமுதாயப் பணியாக ஏற்று நடத்துவதில்தான் உங்களுடைய வாழ்க்கையின் லட்சியமே அடங்கியிருக்கிறது. தர்மராஜ தசமியான இன்று ஸ்ரீஎமதர்ம பகவானுக்கு அர்க்யம் அளிப்பது மிகச் சிறந்ததாகும் என்று கண்டோமல்லவா!
ஸ்ரீகாலதேவமூர்த்தி தர்ப்பயாமி
ஸ்ரீதர்மராஜ தேவமூர்த்தி தர்ப்பயாமி
ஸ்ரீகால மூர்த்திம் தர்ப்பயாமி
ஸ்ரீஎம தேவமூர்த்தி தர்ப்பயாமி
ஸ்ரீதண்டீஸ்ர மூர்த்தி தர்ப்பயாமி
என்று எமபகவானுடைய பலவித நாமங்களைச் சொல்லி ஸ்ரீஎமபகவானுக்கு அர்க்யம் அளித்தல் வேண்டும்.. இன்று அதிதி வழிபாடு என்று சொல்லப்படுகின்ற  நுனி வாழையிலையிட்டு ஏழைகளுக்குழ் அன்னம்பாலிப்பது மிகவும் சிறப்புடையதாகும்.

நட்சத்திர லிங்க மூர்த்திகள்
திருவொற்றியூர்

பிரண்டைத் துவையல், எள் சாதம் அல்லது எள்பொடி கலந்த சாதம், உளுந்து வடை போன்றவற்றை வயிறு நிறையும்படி ஏழைகளுக்கு அன்னம் பாலித்திட வேண்டும். எமபகவான் தம்முடைய குடும்ப சகிதமாகப் பரிவாரத்துடன் எழுந்து அருள் பாலிக்கின்ற மிகச் சிறப்பான தலமே திருச்சி அருகே உள்ள திருப்பைங்ஞீலி ஆகும். பலரும் இதனைப் பற்றி நன்கு அறியாமையினால் இங்கு இச்சந்நிதி சற்று பிரபால்யமின்றி உள்ளது. இன்று இச்சந்நிதியை நீரால் கழுவி, நன்கு சுத்தம் செய்து பச்சரிசி மாவினால் கோலமிட்டு மாவிலை, தென்னைச் சரங்களால் அலங்கரித்து ஸ்ரீஎமதர்ம ராஜர், அவர்தம் பத்தினி தெய்வ மூர்த்திகளுக்குச் செம்பருத்தி, தேங்காய் எண்ணெய், பொன்னாங்கண்ணித் தைலம் ஆகிய முக்கூட்டுத் தைலக்காப்பிட்டு, நிறைந்த சாம்பிராணி தூபமிட்டு, எள்வகை உணவு, 10 வகையான உணவுப் பண்டங்களைப் படைத்து அன்னதானம் அளித்து , ஸ்ரீகால பைரவ துதிகளை ஓதி இச்சந்நதியை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.
எமபயம் தெளிதல் என்பது மரணம் பற்றிய பயத்தைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் நோய், நொடியிலிருந்து நிவாரணம் பெறுதலும் ஆகும். ஏனெனில் மனிதனுக்கு பெரும்பாலும் நோய், விபத்துகள் போன்றவை மூலமாகத் தானே மரணம் அவனைத் தழுவுகின்றது. எனவே, நோய்களிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்லாது நோய்களால் பாதிக்கப்படும் போது உடல், மனம் தளர்ச்சியடையாது தெய்வீக சிந்தனை பெறுவதற்கும் எமபூஜை பெரிதும் உதவுகின்றது. எம தர்மராஜ மூர்த்திக்குச் செய்ய வேண்டிய ரட்சை பூஜை ஒன்றும் உண்டு. ஒவ்வொரு தெய்வ மூர்த்திக்கும் உரித்தான ப்ரீதி தரக் கூடிய பல பூஜைப் பொருட்களுண்டு அன்றோ! இவ்வகையில் ஸ்ரீஎமதர்ம மூர்த்திக்குப் ப்ரீதியாக இருப்பவை பொன்னாலான வாழைக்குலை, கலசச் செம்பு, ருத்ராட்சம், துளசிமணி மாலை, பவழத்தாலான சிவலிங்கம், விநாயக மூர்த்தி ஸ்படிக மற்றும் சாளக்கிரம மூர்த்திகள் சந்தனக் கட்டையாலான விக்கிரகம்.
வசதியுள்ளவர்கள் இத்தகைய 10 பொருட்களையும் ஒரு வாழையிலையில் வைத்து, வசதியற்றோர் இந்தப் பத்தில் ஏதேனும் ஒன்றை பச்சரிசி பரப்பிய ஒரு நுனி வாழையின் மேல் வைத்து ஸ்ரீமார்க்கண்டேயர் அருளியுள்ள ஸ்ரீசந்திர சேகர அஷ்டகத்தை பத்து முறை குடும்பத்தோடு சேர்ந்து ஓதி, பிரசாதத்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற கணவன், மனைவி, தந்தை, தாய், சுற்றம், நட்பு போன்றவர்க்கு இதனை அளித்தால், அவர்கட்கு விரைவில் நோய், நொடியிலிருந்து நிவாரணம் கிட்டுவதோடு அவர்களும் பலவிதமான வறுமைத் துன்பங்களில் இருந்தும் மீள்வர். எனவே, எமவழிபாடு என்பது எமபயத்தை நீக்குவது மட்டுமின்றி, தீர்க்க ஆயுளைத் தருவதோடு மட்டுமல்லாது நோய், நொடியில்லா ஆரோக்யமான வாழ்க்கையையும் தந்து வறுமையையும் நீக்க வல்லது என்பதை அறிவீர்களாக.
தர்மராஜ தசமியாகிய இன்று செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான வழிபாடு என்னவென்றால் சென்னைத் திருவொற்றியூரில் 27 நட்சத்திர லிங்க மூர்த்திகள் அருள்பாலிக்கின்றார்கள் அல்லவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய லிங்கமூர்த்திக்குத் திருவொற்றியூரில் உள்ள சிவாலயத்திலும் திருவிடைமருதூர் சிவாலயத்தில் உள்ள நட்சத்திர லிங்க மூர்த்திக்கும் சதய நட்சத்திர வழிபாடு செய்து வருதல் சிறப்புடையதாகும். சதய நட்சத்திரத்திற்குரிய அதிதேவதா மூர்த்தியாக ஸ்ரீஎமபகவான் விளங்குவதால், தர்மராஜ தசமியாகிய இன்று திருவொற்றியூரிலும், திருவிடைமருதூரிலும் உள்ள சதய நட்சத்திர லிங்க மூர்த்திக்கு எள், நல்லெண்ணெய் தைலம், சந்தனக் காப்பிட்டும், ஆயுள் விருத்திக்கு நல்வழி காட்டுகின்ற தேனை, தேன் கலந்த உணவுப் பண்டத்தினை (சர்க்கரைப் பொங்கல்) கேசரி, மற்றும் இயன்றவற்றை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்தலால் பலவருடங்களாக நீடித்திருக்கும் நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். இதனை மாதந்தோறும் ஸ்ரீஎமனுக்குரிய சதய நட்சத்திரத்தில் செய்து வருவது சிறப்புடையதாகும்.

சர்வ காமதா ஏகாதசி

ஏகாதசியில் வரும் சூர்ய, சந்திர தூர வித்யாச கிரஹ ஆகர்ஷண சக்தியால் மன அமைதிக்கான விரத அம்சப் பலன்கள் மிகுகின்றன. ஏகாதசியில் அன்னதானம் செய்திடலாம். ஏகாதசியில்., இளநீர், தேன் அபிஷேகத்திற்குக் காரிய சித்தி பலன்கள் அதிகம்!
தமிழ் வருடம் ஒன்றிற்குள் ஏறக்குறைய 25 ஏகாதசிகள் வருகின்றன அல்லவா ஒரு மாதத்திற்கு இரண்டாக! உண்மையில் திதி என்பது சந்திர கிரகத்திற்கும், சூரிய கிரகத்திற்கும் இடையே உள்ள இடைதூரமாக ஜோதிட கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. எனவேதான், ஒவ்வொரு திதிக்கும் தினசரியாக சூரிய, சந்திர மற்றும் ஏனைய கிரகங்களின் ஆகர்ஷண சக்திகள் வேறுபடுகின்றன . எந்தெந்தத் திதியில் சூரிய, சந்திர கிரகங்களின் சக்தி மிகுந்துள்ளதோ, ஏனைய கிரகங்களின் ஆதிக்கமும் கூடுகின்றதோ அதற்கேற்றவாறு தான் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள், தியான யோக பூஜை முறைகளையும் நம்முடைய பெரியோர்கள் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். இவ்வகையில் ஏகாதசி தினமானது நாம் மிகவும் போற்றிக் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்களுள் ஒன்றாகும்.
அதிலும், ஒவ்வொரு மாதத்திலும் எந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றாரோ அதனைப் பொறுத்து ஏகாதசியின் மகத்துவங்கள் மாறுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற இரண்டு ஏகாதசிகளின் பலாபலன்களும் வெவ்வேறாகும். இதன்படி பங்குனி மாத சர்வகாமதா ஏகாதசி என்பது மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது ஆகும்.. காமம் என்றால் பொதுவாக ஆசை என்பது பொருள். சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு பெரிய காரை வாங்குவதற்காகப் பேராசை கொண்டால் அதுவும் காமம் என்றே அழைக்கப்படும். எனவே, நமது தகுதிக்கு மீறிய ஆசைகளை, அகற்றுவதற்காக ஏற்பட்ட ஏகாதசி வழிபாடே சர்வகாமதா ஏகாதசியாகும். மேலும் இறைச் சாந்தியத்தைப் பெருக்குவதற்காக அமைந்துள்ள முக்கியமான திதிகளுள் ஒன்றாக சர்வகாமதா ஏகாதசி விளங்குகின்றது.
பொதுவாக இன்று ஆலயங்களில் விக்கிரகப் பிரதிஷ்டையும் அன்னதானம் செய்வதும் விசேஷமானதாகும். நிதி வசதியின்மை காரணமாக உடனடியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட இயலாத இடங்களில் நூதன அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகிய வைபவத்தை இந்நாளில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாக விளங்குகிறது..‘ சர்வகாமதா ஏகாதசியான இன்று ஏகாதசி திதி தொடங்கும் நேரத்தில் இருந்து முடிகின்ற நேரம் வரை உண்ணாநோன்பு ஏற்பது மிகவும் புனிதமானதாகும். நீர், துளசி, அல்லது வில்வ நீர் மட்டும் அருந்துவது, மூன்று வேளைகளில் இரண்டு வேளை மட்டும் விரதமிருந்து மூன்றாவது வேளையில் பழமோ அல்லது சிற்றுண்டியுடனோ விரதத்தை மேற்கொள்வது இவ்வாறான பலவிதமான விரத முறைகள் உண்டு. ஒவ்வொரு முறைக்கும் வெவ்வேறான பலன்களாம்!
சர்வகாமதா ஏகாதசிப் பண்டிகையின் மகிமையாக, பலாபலன்களாக விட்டுப்போன குல தெய்வ வழிபாடு மற்றும் இறைச் சாந்நித்யத்தைப் பெருக்குவதற்கான விசேஷ வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், திருமஞ்சன அபிஷேகத்திற்குரிய விசேஷ நாளாகவும் சர்வகாமதா ஏகாதசி பண்டிகை விளங்குகின்றது...
விசேஷ விரத முறைகள் :- பங்குனி மாதம் வருகின்ற ஏகாதசியை வழிபடும் விசேஷ முறை ஒன்று உண்டு. இது சற்றுக் கடினம் போல் தோன்றினாலும் கடைபிடிப்பதற்கு மிகவும் எளிமையானதே இதுவே. உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்துகின்ற ஒரு பட்சகால (15 நாட்கள்) சர்வ காமதா ஏகாதசி பூஜையாகவும் விளங்குகின்றது.. அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து தொடங்கி பதினோராம் நாள் திதியாக விளங்குவதே ஏகாதசி. சர்வ காமதா ஏகாதசி விரத முறையில் ஒரு நாள் முழுதும் ஒரே வகையான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இயன்றோர் ஒரு வேளையோ, இரு வேளையோ உபவாசம் இருந்திடலாம். ஒருநாள் முழுதும் ஒரு வகைப் பழம், கீரை, காய்கறி, பால், மோர், வில்வம்/துளசி/அருகம்புல் தீர்த்தம் – இவ்வாறாக, வாழைப்பழம் எனில் அன்று முழுவதும் வாழைப்பழம் மட்டுமே ஆகாரமாகவும், கீரை எனில் கீரையை மட்டுமே உணவாகவும், பால் எனில் அன்று முழுவதும் பால் மட்டுமே உணவாகும்.
இவ்வாறாக பங்குனி பிரதமை திதியிலிருந்து முதல் சர்வகாமதா ஏகாதசி நாள் வரை தினந்தோறும் மேற்கூறிய முறையில் ஒரே வித உணவை ஏற்று 15 தினங்களும் 15வித உணவையே ஏற்க வேண்டும். முந்தைய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் ஏகாதசி நாள் முழுவதும் உண்ணாநோன்பிருந்து மறுநாள் காலை நெல்லிக் காயுடன், அகத்திக் கீரை சேர்த்து துவாதசி பாரணையாக ஏகாதசி விரதத்தை நிறைவு செய்வார்கள். தற்காலத்திலோ, காலண்டரைப் பார்த்தவுடன் ஏகாதசியா என்று ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் முறையே நிலவுகிறது...
ஏகாதசி விரதம் எனில் தசமி திதி முடிந்து ஏகாதசி எப்போது துவங்குகிறதோ அப்போதே விரதத்தை மேற்கொண்டு துவாதசி தொடங்கும் வரை விரதம் இருந்து முடிக்க வேண்டும்.. இதுவே உண்மையான ஏகாதசி விரதமாகும். மீண்டும் வலியுறுத்துகிறோம், ஏகாதசியன்று அன்னதானம் கூடாது என்பது கலியுகத்திற்குச் சற்றும் பொருந்தாது, ஏனெனில் நூற்றுக்குப் பெரும்பாலும் நூறு சதவிகித மக்கள் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளாத போது இந்நியதி ஏற்புடையதல்ல! வேண்டுமானால் ஏகாதசி விரதம் இருப்பவருக்கு அன்னதானம் அளித்திடாது ஏனையோர்க்கு அன்று அன்னம் அளிப்பதில் எவ்விதத் தவறுமில்லை. எனவே, கலியுக நியதிப்படி ஏகாதசியில் அன்னதானம் சிறப்பானதே.  
ஏகாதசியின் எழிலார்ந்த பெருமாள்!

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம்

மேற்கண்ட முறையில் சர்வ காமதா ஏகாதசியை மேற்கொள்வோர்க்கு இது வரைத் தடங்கலாகி வந்துள்ள பலவித நற்காரியங்கள் நன்கு கைகூடும். சர்வ காமதா ஏகாதசி திதியன்று அமர்ந்த நிலையிலுள்ள ஸ்ரீபெருமாள் தரிசனம் மிகவும் விசேடமானதாகும். காஞ்சீபுரத்தில் ஸ்ரீபாண்டவ தூத ஸ்ரீகிருஷ்ணனன் கோயிலில் (குமரக் கோட்டத்திற்கு எதிர்ப்புறப் பகுதியிலுள்ள) வேறு எங்கும் காணக் கிட்டாத தரிசனமாக ஸ்ரீகிருஷ்ண பகவான் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். சர்வகாமதா ஏகாதசி அன்று இக்கண்ணபிரானை தரிசிப்போர்க்கு உறவு வியாபார, அலுவலகப் பகைமையால் ஏற்பட்டுள்ள நிலபுல, சொத்து, கடன், கஷ்டங்கள், நாள்பட்ட கோர்ட்டு வழக்குகள் நன்முறையில் தீர்வு பெறும்.
திருச்சி திருநெடுங்களத்திலுள்ள வரதராஜப் பெருமாள், ஸ்ரீஹயக்கீரிவர், நரசிம்மர் போன்ற அமர்ந்த நிலையில் அருள்புரியும் தெய்வ மூர்த்திகளும் இந்நாளில் வணங்க வேண்டிய தெய்வ மூர்த்திகளாவர்.. சர்வ காமதா ஏகாதசியின் மிகச் சிறப்பான வழிபாடுகளுள் ஒன்றாக விளங்குவதே சர்வேஸ்வரனாம், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை நின்று, இருந்து, கிடந்து, நடந்த நான்கு அவதார நிலை மூர்த்திகளாக இந்த ஏகாதசி நாளில் தரிசிப்பதாகும். காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய திருத்தலங்கள் மேற்கண்ட பெருமாளின் நான்கு நிலை அவதார தரிசனங்களை நமக்குப் பெற்றுத் தரக்கூடிய உத்தம தெய்வீகத் தலங்களாகும்...
சென்னை திருநீர்மலையில், நின்று (ஸ்ரீராமர்) இருந்து (ஸ்ரீநரசிம்மர்) கிடந்து (ஸ்ரீரங்கநாதர்) நடந்து (ஸ்ரீஉலகளந்தப் பெருமாள்) அருள்பாலிக்கின்ற மூர்த்திகளின் அற்புதப் பெருமாள் தரிசனத்தைப் பெற்றிடலாம் சர்வ காமதா ஏகாதசி அன்று! பொதுவாக, வசிப்பதற்கு சிறு இல்லங்கூட இல்லாமல் வாடுகின்ற குடும்பங்கள் பல உண்டு. பணவசதி இருந்தும் வீடு கை கூடாதோரும் உண்டு. நல்ல வாடகை வீடு கிடைக்காமல் அவதியுறுவோரும் உண்டு! இத்தகையோர் மேற்கண்ட முறையில் சர்வகாமதா ஏகாதசியை மேற்கொண்டு பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நின்று, இருந்து, கிடந்த, நடந்த கோல தரிசனத்தைப் பெற்று, பெருமாளுக்குப் ப்ரீதியான சர்க்கரைப் பொங்கலைப் படைத்து அன்னதானம் அளித்திடப் பெருமாளே நல்வழி காட்டுவார், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிடில்.!

சூரிய பூஜை

சூரிய வழிபாடு அல்லது பாஸ்கர பூஜை – லிங்கத்தின் மேல்படுகின்ற சூரிய கிரணங்கள்
கடந்த பல யுகங்களாகவே லிங்கத்தின் மேல், மூலஸ்தான ஆதி மூல சுவாமியின் மேல்பட்டு வருகின்ற சூரிய கிரணங்களின் மகத்துவத்தைப் பற்றி பாஸ்கர பூஜை தினங்களாக சூரிய பூஜை விஷேச தினங்களாக சித்புருஷர்களின் விளக்கங்களை எடுத்துரைத்து வருகின்றோம்! சென்னை பூவிருந்தவல்லி ஸ்ரீவைதீஸ்வரர் ஆலயம், சேலம் ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்பமூர்த்தி ஈஸ்வரர் சிவாலயம், கும்பகோணம் திருநாகேஸ்வரர் ஆலயம், கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம், வாங்கல் (கரூர்) ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம், அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம் (சிவராத்திரி தினத்தன்று), ஈங்கோய் மலை ஸ்ரீமரகதாலேஸ்வரர் சிவாலயம் (சிவராத்திரி அன்று), திருச்சேறை பெருமாள் ஆலயம்.

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம்
வாங்கல் கரூர்

இவ்வாறாக சூரிய கிரணங்கள் மூலவர்களின் மேல்படுகின்ற பல ஆலயங்களின் சூரிய பூஜையில் பங்கு கொண்டு அதனைக் கடைபிடிப்பதால் கிட்டுகின்ற மகத்தான பலன்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் குருவாய் மொழியாக நாம் நன்கு விளக்கி வருகின்றோம். வருடத்திற்கு ஒரு சில நாட்களிலேயே நிகழ்கின்ற, அதிலும் எத்தனையோ ஆயிரமாயிரம் ஆலயங்களினுள் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே அற்புதமாக நிகழ்கின்ற இந்த பாஸ்கர பூஜை தினங்களில் ஸ்ரீசூரிய பகவானோடு சேர்ந்து நாமும் பூஜை செய்வதற்கு எத்தகைய பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டால் தான் இந்த பாஸ்கர மகத்துவத்தை நாம் ஓரளவேனும் அறிந்து கொள்ள முடியும். உலக ஜீவன்களுக்கெல்லாம் ஜீவாத்ம சக்தியைத் தினந்தோறும் அளிக்கும் வல்லமை பெற்ற சூரியகிரணங்களுக்கு, மனம், புத்திக்கு தெளிந்த நிலையையும் மனதிற்கு சாந்தத்தையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கவல்ல தெய்வீக சக்திகளும் உண்டல்லவா! இந்த அரிய சூரியகிரண இறையருள் சக்திகளைப் பெற பலவிதமான யோக, தியான வழிமுறைகள் உண்டு. இதனால்தான் நம் பெரியோர்கள் சூரிய நமஸ்காரம் போன்ற அற்புதமான மந்திரங்களை அளித்து தினந்தோறும் விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது செய்ய வேண்டிய சந்தியா வந்தன மற்றும் சூரிய நமஸ்கார உத்தம மந்திரங்களாக நமக்கு அளித்தனர். ஆனால் எத்தனை பேர் இதனை அறிவார்கள்! அறிந்தாலும் சரியாக கடைபிடிப்பார் எத்தனை பேர்கள்?
ஸ்ரீராமருக்கு முந்தைய கிருதயுகத்திலும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மக்களோடு மக்களாக நடமாடி வாழ்ந்த திரேதா யுகத்திலும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருள்பாலித்த துவாபர யுகத்திலும், ஸ்ரீசூரிய நமஸ்கார மந்திரங்களை ஓதாமல் (ஜாதி, மத, இன பேதமின்றி) சூரிய வழிபாடின்றி ஏற்க மாட்டார்கள். ஒவ்வொரு வீதியிலும் சத்சங்கமாக, கூட்டங்கூட்டமாகப் பலரும் சூரிய வழிபாட்டினை மேற்கொண்டு வந்தமையால் தான் அவர்கள் தீர்க்கமான நேத்திர சக்திகளுடனும், நல்ஆயுளுடனும், பல ஆண்டுகள் வாழ்ந்து நம்முடைய மூதாதையர்களாக, பித்ருக்களாக இன்றும் மேலுலகில் பரிணமிக்கின்றார்கள். ஆனால், அந்தோ பரிதாபம்! கலியுகத்தில் தான் தெய்வீக வழிபாடுகள் அனைத்துமே மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு மனித வாழ்க்கையே மோக, போக வாழ்க்கையாக மாறி வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இயந்திர கதியில் தான் மனித வாழ்க்கை கலியுகத்தில் நடைபெறுகின்றதே தவிர உத்தமமான தெய்வீகப் பண்பாடு குறைந்து வருகின்றது. இதனை இடித்துரைத்து சீர்திருத்தி வரும் மஹான்களும், சித்புருஷர்களும், யோகிகளும், நம்மிடையே இருந்தாலும், அவநம்பிக்கையும் போலி கௌரவமும், சீரற்ற பக்தியும் மலிந்து வருவதால், அவர்களை அறிந்து, உணர்ந்து, அவர்தம் தலைமையில் இயங்கும் சத்சங்க மஹிமைகளை நன்கு உணர வேண்டுமே! சுயநலமும், ஆணவமும், அகங்காரமும் மிகுந்து மனிதன் தன்னுடைய இயற்கையான தெய்வீக சக்தியை இழந்து வருகின்றான். இவ்வாறு மனம் போன போக்கில் வாழ்ந்து மூதாதையர்களும், பெரியவர்களும் தந்த இறை வழிபாடுகளை மறந்து விட்ட மனித சமுதாயத்திற்கு இவற்றிற்கெல்லாம் ஈடுசெய்யும் பொருட்டுத்தான் பலவிதமான விசேஷ தினங்கள் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றையாவது நாம் முறையாகக் கொண்டாடினால் தான் இழந்த பூஜைகளை ஈடு செய்ய முடியும். இவை எத்தகைய பல மஹாத்மியங்களைக் கொண்டுள்ளான என்பது தெய்வீக இரகசியங்களாகும். குருமூலம் உய்த்து உணர வேண்டும். உதாரணமாக சூரிய பூஜை நிகழ்கின்ற இந்நாட்களில் அந்தந்த ஆலயங்கட்குச் சென்று தக்க வழிபாடுகளை மேற்கொண்டு மூலவரின் மேல் பட்டுப் பிரதிபலிக்கின்ற சூரிய கிரணங்களை தம்முடலில் ஏற்கும் வண்ணம் வழிபடுபவர்க்கு எண்ணற்ற தீய கரும வினைகள் தீருவதோடு மட்டுமல்லாமல் பல நெடுநாட்பட்ட நோய்களுக்கும் , குறைகளுக்கும் நிவாரணம் கிட்டுகின்றன.. இது மட்டுமா? இந்த பாஸ்கர பூஜையைக் காண வரும் எண்ணற்ற மஹான்களும், சித்புருஷர்களும் தங்களுடைய அருளாசிகளையும் அங்கு வருபவர்க்கு வழங்கிச் செல்வதால் கூடுதல் பலனாக இவற்றின் மூலமாகப் பல தீவினைகளை அழித்து நல்ல புத்தியுடன் வாழ்ந்திடலாமல்லவா?  எனவே வருடத்தில் நாமறிந்த வரையில் சுமார் இருபது அல்லது இருபத்தைந்து ஆலயங்களில் மட்டுமே நிகழ்கின்ற இந்த சூரிய பூஜைகளை விட்டுவிடாது அந்தந்த ஆலயங்களில் இவற்றைக் கொண்டாடி உத்தமப் பலன்களை அடைய பக்தர்களை வேண்டுகின்றோம்..
பனங்காட்டூர் பரமசிவம்
இவ்வகையில் விழுப்புரம் அருகேயுள்ள புறவார் பனங்காட்டூர் என்னும் சிவாலயத்தில் சித்திரை 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை (ஏப்ரல் 14-20, 1999) சூரிய பூஜை நடைபெறுகிறது. அதாவது சூரிய பகவானே இங்கு எழுந்தருளி இவ்வேழு நாட்களில் கிரணங்களைப் பெய்து பனங்காட்டீஸ்வரர் மூர்த்திக்குப் பூஜை செய்கிறார் என்பது மிகவும் விசேஷமானதாகும். சூரியனுடைய கிரணங்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பல இடங்களிலும் பல கோணங்களில் சூரிய கிரணங்களின் வீச்சு மாறுபடுவதால் அவற்றின் தன்மைகளும் மாறுபடும். சூரிய ஒளி பாயும் கோணங்களிலும் இடைப்படும் கிரஹங்களின் ஆகர்ஷ்ண சக்திகள், தாவரங்கள், நில, நீர் மட்டங்கள், கோபுர அமைப்புகள், போன்றவற்றைப் பொருத்தும் சூரிய கதிர்களின் தெய்வீக சக்திகள் மாறுபடும்.
இவ்வகையில் புறவார் பனங்காட்டூர்ச் சிவாலயத்தில் சித்திரை முதல் வாரத்தில் சூரிய கிரணங்கள் முதலில் ஈச்வர லிங்கத்தின் மேலும் பிறகு அம்பாளின் திருமேனியிலும் சூரிய கிரணங்கள் தோய்வது அதி அற்புதக் காட்சியாக, தெய்வ தரிசனத்தை உலகத்திற்குத் தருவதாக காணக் கிடைக்காத காட்சியாகும். பல ஆலயங்களிலும் சிவலிங்கத்தின் மீது சூரியகிரணங்கள் படுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! அம்பாளின் திருமேனியில் சூரிய கிரணங்கள் படுவது ஒரு சில ஆலயங்கள் தாம்! ஸ்ரீசாயா தேவியை சூரிய பகவான் மணந்த போது, ஸ்ரீசாயா தேவியினால் சூரியாக்னி மண்டலத்தில் உள்ள வெப்பத்தைத் தாங்க இயலாது தவித்தனள். எனவே, ஸ்ரீசாயா தேவி தனக்கு சூரிய பகவானுடைய அக்னி சக்தியைத் தாங்கும் அளவிற்கு பாஸ்கர சக்தியைப் பெறுதல் வேண்டும் என்பதற்காகத் தக்க தவமாற்றுவதற்காகப் பல தலங்களுக்குச் சென்று இறுதியில் அருணாச்சல க்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலை அடைந்த புராண வைபவத்தை நாம் நன்கு அறிவோம் அல்லவா!
இவ்வாறு பல தலங்களிலும் சிவ-விஷ்ணு பூஜைகளையும் மேற்கொண்டு தனக்கு சூரிய மண்டல அக்னியைத் தாங்குகின்ற அக்னி சக்தியைத் தர வேண்டும் என்று சர்வேஸ்வரனை வேண்டி மேலுந் தவமாற்றச் செல்லும் முன், தன்னுடைய நிழலாக சூரிய மண்டலமருகே ஒரு தேவியைப் படைத்து சூரிய மண்டலத்தை விட்டுச் சென்றனள் ஸ்ரீசாயா தேவி! உண்மையில் சாயா தேவிக்கு சூர்யாக்னி சக்தியைத் தாங்கும் சக்தி நிரம்ப உண்டு. ஆஞ்சநேயர் போல் இதனை ஸ்ரீசாயா தேவியே அறியாமல் இருந்ததால் தான் இறைவன் ஒரு திருவிளையாடலாக நிகழ்த்தி ஸ்ரீசாயாதேவியின் சக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பினார். காரணம் ஸ்ரீசாயா தேவியானவள் தன்னுடைய சிறு வயதிலேயே ஸ்ரீதுர்வாசரின் உபதேச மொழியாக சூரிய ஹோரையில் பலவிதமான சூரிய யோக முத்திரைகளைப் பயின்று பல அற்புத பூஜைகளை பல பூஜா வரங்களையும் பாஸ்கராக்னி சக்தியையும் நன்கு பெற்றிருந்தாள். ஆனால் எவ்வாறு ஸ்ரீஆஞ்சநேயருக்கு தன்னுடைய சக்தியை அறிகின்ற வல்லமை முன்பு இல்லாமலிருந்ததோ அது போலவே ஸ்ரீசாயாதேவிக்கும் சூரியாக்னி சக்தியின் மகத்துவத்தை உணராமலேயே ஸ்ரீசூர்ய பகவானை மணம் புரிந்தனள்..
ஸ்ரீசாயா தேவி தன்னுடைய நிழலை விட்டுச் சென்றனளல்லவா? இறைத் திருவிளையாடலாக இந்நிழல் பிம்பத்தின் கருமையானது சூர்ய பகவானைப் பிடித்துக் கொண்டது. அதாவது சூர்ய மண்டலத்தில் ஒரு பகுதியானது கருப்பு நிறம் கொண்டு விட்டது. சூரிய பகவானே திகைத்தார்! தன்னுடைய அக்னியைத் தாங்க இயலாது என்று சொல்லித் தவம் புரியச் சென்ற சாயா தேவிக்கு இத்தகைய நிழல் பிம்பம் படைக்கும் வல்லமை இருந்தால் அவளுடைய தெய்வீக சக்தி எப்படி இருக்கும் என்று வியந்த சூரியபகவான் ஸ்ரீசாயாதேவி இருக்குமிடம் தேடிப் பல தலங்களுக்கும் சென்று இறுதியில் அருணாசலத்தை வலம் வந்தார்.
ஈஸ்வரனும், அம்பிகையும் அடுத்தடுத்து அமர்ந்து அருள்பாலிக்கும் தலங்களையே கல்யாணக் கோலக் காட்சியாக கொண்டு வணங்குகின்ற ஐதீகம் உண்டும். அதுவும் ஈஸ்வரனுக்கு வலப்பக்கம் அம்பிகை அமர்ந்து அருள்பாலிக்கும் தலங்கள் திருமண பாக்கியத்தை அருள்கின்ற அருட்பெரும் தலங்களாக இன்றும் வழிபடப்படுகின்றன அல்லவா? எனவே தான் ஸ்ரீசாயா தேவியுடன் மீண்டும் இணைந்து தமது இறைத் திருப்பணியைத் தொடர வேண்டும் என்று ஸ்ரீசூரியபகவான் விரும்பி எங்கெல்லாம் அம்மையும், அப்பனும் அருகருகே சன்னதிகளைக் கொண்டு அருள்பாலிக்கின்றார்களோ அத்தலங்களிலெல்லாம் தம்முடைய பூஜைகளைத் தொடர்ந்தார். இது மட்டுமல்லாது கரிய தன்மையைப் போக்குகின்ற சில அரிய சிவலிங்கத்திற்கும், சூரிய பூஜை செய்தார். இவ்வாறு ஸ்ரீசூரிய பகவான் பூஜை செய்ததனால்தான் இவை பாஸ்கர பூஜைக்குரிய தலங்களாக இன்றும் வழிபடப்படுகின்றன. இவ்வாறாக ஸ்ரீசூரியபகவான் பனங்காட்டு ஈசர் அருள்பாலிக்கின்ற ஆலயத்திற்கு வந்து தன்னுடைய பாஸ்கர பூஜையின் பலாபலன்களால் ஸ்ரீசாயாதேவியுடன் மீண்டும் இணையும் பாக்கியத்தைப் பெற்றார்.
இத்தகைய திருத்தலம் தான் விழுப்புரம் அருகிலுள்ள புறவார் பனங்காட்டூர் சிவாலயமாகும். சித்திரை முதல் வாரத்தில் இங்கு சூரிய கிரணங்கள் முதலில் ஈஸ்வர லிங்கத்தின் மீதும் பிறகு அம்பாளின் திருமேனியிலும் பாய்வதால் இந்நாட்களில் சிவலிங்கத்திற்கும், அம்பிகைக்கும் பொன்னாங்கண்ணி, செம்பருத்தி, தேங்காயெண்ணெய்த் தைலம், பால், பழங்களால் ஆன பழக்காப்பை இட்டு, வழிபட்டு, தம்பதிகளுக்குப் பொன் மாங்கல்யத்தை (குறைந்தது ஒரு ஏழைக்கேனும் அவரவர் வசதிக்கேற்ப) தானமாக அளிப்பதால் கணவன்  மனைவிக்கிடையே இருக்கும் பிணக்குகள், மனக்கசப்புகள் தீர்ந்து, நன்முறையில் மீண்டும் இணைய நல்வழிகள் பிறக்கும்.. ஆனால் இதனைத் தொடர்ந்து முறையாகச் செய்து வருதல் வேண்டும். மனைவிக்குக் கொடுமைகளை இழைத்து விட்டு அவள் அங்கஹீனம், சித்திரவதைகள், மனஹீனம் அல்லது பல விதமான இழப்புகளுக்குள்ளாகி இருப்பின் ஒரே சூரிய பூஜையில் அவற்றிற்கு நிவர்த்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவது நியாயமாகுமா? எனவே, ஆண்டு தோறும் இப்பூஜையை இத்தலத்தில் மட்டுமல்லாது எங்கெல்லாம் சூரிய பூஜை நிகழ்கின்றதோ அவ்வாலயங்களில் நிகழ்கின்ற பாஸ்கர பூஜையில் ஈடுபட்டு வழிபட்டு தக்க தான, தர்மங்களை மேற்கொண்டு, தன்னுடைய தவறுகட்கும், பாவங்கட்கும் பிராயச்சித்தம் பெறுவார்களாக!
சித்திரை மாதம் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பனங்காட்டூரில் நிகழ்கின்ற சூரிய பூஜை தருணத்தில் சூரிய நிறமான ஆரஞ்சு நிற ஆடையினை ஈஸ்வரனுக்கும், அம்பிகைக்கும் அணிவித்து  ஆடை தானமாக அளிப்பது மிகச் சிறந்த தானமாக விளங்குகின்றது. ஏனென்றால் கடுமையான தோல் நோய்களால் பல ஆண்டுகளாக அவதியுறுவோர் தம்முடைய தோல் வியாதிகளின் கடுமையைத் தணிக்கவும், நிவர்த்தி செய்து கொள்வதற்கும் இந்த ஆரஞ்சு வண்ண ஆடைதானம் நல்வழி காட்டும். மூல லிங்கத்தில்படும் சூரிய கிரணங்கள் பிரதிபலிக்கின்ற சக்தி வாய்ந்த கதிர்களானவை ஆரஞ்சு வண்ண ஆடைகளில் படிந்து அவற்றை ஏழைகளுக்கு அளிக்கும் போது அவற்றின் தெய்வீகக் கதிர்கள் ஏழைகளின் நல்வாழ்விற்கு பெரிதும் உதவுவதால் இது மிகச் சிறந்த இறைப்பணியாக நல்ல பலாபலன்களைத் தந்து நல்வழியாக தோல் வியாதிகளுக்கு நிவாரணம் கிட்டும்..
நண்பர்கள், உறவினர்கள் வியாபாரத்தில் ஏமாற்றி அதன் மூலம் தாம் பெற்ற செல்வத்தை அனுபவிப்பதால் பெரிய பாவங்களைச் சுமந்து வருந்துவோர் பலருண்டு. பனங்காட்டு ஈசனின் சூரிய பூஜையின் போது ஈசனையும், அம்பிகையையும், மேற்கண்ட முறையில் வழிபடுவதால் இவர்கள் இச்சூரியப் பூஜையில் பங்கு கொண்டு தங்களால் பாதிக்கபட்டவர்களுக்குத் தக்க நிவாரணம் அளிப்பார்களேயானால் மன சாந்தியும், பாவத்திற்கு தக்கப் பிராயச்சித்தமும் கிட்டும். இதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளாவது செய்து வருதலால் பல கொடிய பாவங்களிலிருந்தும், கரும வினைகளிலிருந்தும், விடுபடுவதற்கான நல் வாய்ப்புகள் கிட்டும்.
இல்லையேல் இப்பாவத்தின் கொடுந்தன்மையானது பலருடைய துன்பத்திற்கும் வழிவகுத்து பிறரை ஏமாற்றிய பாவத்திற்காகச் சொல்லொண்ணாத் துன்பங்கள் சூழ்ந்த பிறவிகளையும், பல வதைகளையும் இந்த ஜன்மத்திலேயே எதிர் கொள்ள் நேரிடும். தாம் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ மணக்க இயலாமல், வேறிடத்தில் திருமணங் கொண்டு தாம் விரும்பியவரிடம் தொடர்பு கொண்டு பலவிதமான இல்லறத் துன்பங்களுக்கும், பெரும் பாவங்களுக்கும் ஆட்படுவோர்களும் உண்டு.
எவ்வாறு விதவிதமான பாவங்கள் சேர்கின்றனவோ விதவிதமான பூஜைகளால், வழிபாடுகளால் தருமங்களால் தான் அவற்றுக்கு நிவாரணம் பெற இயலும். மேற்கண்ட வகையிலான பாவங்கட்குப் பரிகாரங்களைப் பெற்றுத் தரும் வகையில் தான் இத்தகைய சூரிய பூஜை விசேஷ தினங்கள் அமைந்துள்ளன என்பதை மறத்தலாகாது. எத்தகைய பாவங்கட்கும் இந்த விசேஷ பூஜைகளால் தான் பிராயச் சித்தம் அடைய முடியுமே தவிர நல்ல சற்குரு அருள்மொழி வாயிலாக இவை கிட்டும் போது தான் இவற்றுக்கான பரிகாரங்கள் நமக்கு அருளப்படுகின்றன. இல்லையேல் இப் பாவங்களுடன் தான் மனித வாழ்க்கை தொடர வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
கண்களைக் காக்கும் திருக்கண்மாலீஸ்வரர்
திருச்சி கரூர் சாலையில் குளித்தலைத் தாண்டியுள்ள கிருஷ்ணராயபுரம் (சித்தலவாய்) கிராமத்தில் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரராக சிவபிரான் அருள்பாலிக்கிறார். இதே போல் கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்ரீகரியமாலீஸ்வரர் அற்புத லிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பதைப் பலரும் அறியார். இந்த அரிய லிங்க மூர்த்திகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. கரியமாலீஸ்வரர் லிங்கத் திருமேனி காண்பதற்கரிய அற்புதமான லிங்க மூர்த்தியாகும். இறைத் திருவிளையாடலாக நாரத முனிவரும் மற்றும் பல முனிவர்களும் ஸ்ரீமதிதேவியை மணம் புரிவதற்காக சுயம்வர வைபவத்திற்குச் சென்ற புராணத்தை நாம் நன்கு அறிவோம். நாரதர் தாம் இயல், இசை, ஆடகம் ஆகிய அனைத்திலும் தலை சிறந்தவர் என்று செருக்குற்றமையால் இதற்குப் பாடம் புகட்டும் வண்ணமாக நெடுந் திருமாலும் சுயம்வரத்திற்கு வருகை புரிந்து நாரதருடைய திருமுகத்தையும் மற்றவர்களுக்கும் மந்தி வடிவமாகத் தோன்றும்படி செய்துவிட்டார்.

ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர்
சித்தலவாய்

ஸ்ரீகரியமாலீஸ்வரர்
கரூர்

எனவே, மணப்பெண்ணாக வந்த ஸ்ரீமதியும் மற்றவர்களும் ஸ்ரீநாரதரின் குரங்கு முகத்தைக் கண்டு நகைத்தனர். இதனால் வெகுண்ட நாரதர் வந்திருப்பவர் திருமாலென்றறியாது “உம்முடைய ராஜ்ஜியத்தில் இருள் சூழ்வதாக“ என்று சாபமிட்டுச் சென்று விட்டார். மஹரிஷிகளின் வாக்கை மெய்ப்பிப்பது தானே மாதவனின் கடமையும் பெருமையும்! எனவே, நாரதரும் ,ஏனைய முனியும் இட்ட சாபமாக பிரபஞ்சத்தில் சூழ்ந்த இருளைத் தன் பக்தனுக்காகத் தன் உடலிலேற்று கரியமேனித் திருமாலாகப் பிரபஞ்சத்தை வலம் வந்தார் பெருமாள்! பல புனித நதி தீரங்களிலெல்லாம், பல திருத்தலங்களிலும் எழுந்தருளித் தம் அடியார்களுக்கு நல்லருள் கூட்டி வருங்கால் ஓரிடத்தில்... காவேரி நதி கரை புரண்டோடிட.. ஆங்கே பல்லாயிரக்கணக்கான ரிஷிகளும், யோகியரும் யாகமும், வேள்வியும் புரியக் கண்டு, அவ்விடத்தில் நிலைகொண்ட சிவபிரானைத் திருமாலும் வழிபட்டிடவே , இவ்வேள்வியின் பயனாக ஆங்கே காவிரி நதியில் மிதந்து வந்த 1008 பொற்றாமரை மலர்களை மஹரிஷிகளும், யோகியரும் திருமாலிடம் அளித்தனர். அவரும் அவற்றை ஏற்று ஈஸ்வரனுக்கு அர்ச்சித்து, அர்ப்பணித்திடவே திருக்கண் மாலீஸ்வரராக, முக்கண் மாலீஸ்வரராக சர்வேசன் காட்சி தந்து அனைவருக்கும் அருள்பாலித்தான். ஆங்கே திருக்கண்மாலீஸ்வரராக முக்கண் மாலீஸ்வரராக சர்வேஸ்வரன் காட்சி தந்து திருமாலுக்கு காவேரி புனித நீரையே நீர்த்தாரையாக அளித்திட அதனைத் தம் சிரசில் தெளித்தவாறு, 1008 பொற்றாமரை மலர்களும் சர்வேசனின் திருமேனியில் ஜ்வலிக்க, அவற்றைக் கண்ணாரக் கண்டு தரிசித்த தருவாயில் கரிய நிறமும் மங்கலாகியிற்று!
ஸ்ரீமதியை மணந்தவர் தாம் திருமால் என்றறியாது நாரதரும், சில ரிஷிகளும் சாபமிட்டார்களல்லவா? அவர்கள் தம்முடைய தவறுகளை உணர்ந்து பிராயச்சித்தம் தேடலாயினர். இறைத் திருவிளையாடலாக லீலா வினோதம் புரியத் தொடங்கிய திருமால் தம்முடைய கரிய நிறம் மாறிட பிரபஞ்சமெங்கும் சர்வேஸ்வரனைத் துதித்து வரச் சென்றிட நாரதரும், மற்ற முனிவர்களும் திருமாலை நாடுவாராயினர்.. நாரதரும், மாமுனிகளும் திருமாலை தரிசித்த இடம் தான் இன்றைக்கு சித்தலவாய் (அ) கிருஷ்ணராயபுரம் என்னும் காவிரி நதி தீரமாகும். நாரத முனி அறியாமையால் தான் தவறாகச் சாபமிட்டு, தம்முடைய தபோபலன்களை இழந்தமையால் கண் பார்வை மங்கலாயிற்று. அதாவது பார்க்குமிடமெங்கும் நீக்கமற இருள் சூழ்ந்து அவர் பார்வை மறைந்திடவே அவரும் அஞ்சித் திருமாலைச் சரணடைந்தார். இவ்வாறு அவர் திருமாலை தரிசித்த சித்தலவாய்  (அ) கிருஷ்ணராயபுரம். தலக் காவிரியில் மிதந்து வந்த 1008 பொற்றாமரை மலர்களால் சுவாமியை அர்ச்சித்திட அங்கே திருக்கண் மாலீஸ்வரராக முக்கண் மாலீஸ்வராக சிவபெருமான் காட்சி தந்து அவருடைய நேத்திரப் பெருவொளியின் பாக்கியத்தால் நாரதரும், ஏனைய மாமுனிவர்களும், தத்தம் தீர்க்கமான நேத்திர சக்தியை மீண்டும் பெற்றனர்.. இதன் பிறகு மீண்டும் திருமால் மகரிஷி பரிவாரங்களுடன் ஏனைய திருத்தலங்களுக்கும் சென்று அவர்களுக்கு ஈசனின் வழிபாட்டு முறைகளை உபதேசமாக அளித்து வருகையில், அமராவதிப் பட்டினமாகிய கரூர் மாநகரில் தான் ஈசன் கரியமாலீஸ்வரராகத் தோன்றி திருமாலின் திருவதனத்தில் படிந்திருந்த காரிருளைத் தம்முள் ஏற்று கரியமாலீஸ்வரராகக் காட்சியளித்து அருள்பாலித்தார். இன்றைக்கும் ஸ்ரீகரியமாலீச லிங்க மூர்த்தியின் தரிசனத்தை கரூர் கல்யாண பசுவதீஸ்வரர் ஆலயத்தில் பெற்றிடலாம். காணக்கிடைக்காத மூர்த்தி! மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி, எத்தனையோ கர்ம வினைகளைத் தீர்த்து எண்ணற்ற நல்வரங்களைத் தந்தருளுகின்ற அதிஅற்புத  கரியமாலீஸ்வர லிங்க மூர்த்தியைக் கரூரில் தரிசிப்பது வாழ்க்கையில் நமக்குக் கிட்டுகின்ற ஒரு பெரும் பேறன்றோ! கிருஷ்ணராயபுரத்தில் மங்க தொடங்கிய காரிருள் நிறம் கரூரில் ஸ்ரீகரியமாலீஸ்வரரின் அருட்திறத்தினால் பொன் மேனியாயிற்று.. வாமனவதார புராணத்திலே நீர்த்தாரை கண்டியின் வண்டாக நுழைந்து தன்னுடைய கண்பார்வை இழந்த சுக்கிராச்சாரியார் ‘சுவாமிக்கு நோன்பிருந்து’ தம்முடைய நேத்திர ஜீவசக்தியைப் பெருக்கிக் கொண்ட எண்ணற்ற கோயிலகளில், திருத்தலத்தில் கிருஷ்ண ராயபுரம் ஸ்ரீதிருக்கண் மாலீஸ்வரர் மூர்த்தியும் ஒன்றாகும். இன்றைக்கும் பெரும்பாலான ஆலயங்கள் சமீபத்தில் தான் தோன்றியவையாகக் காணப்பட்டப் போதிலும், அங்கு அருள்பாலிக்கின்ற மூர்த்திகளும் கோயிலில்லாக் காலங்களிலும் அரச மரத்தடிப் பிள்ளையார் போல தனித்தே லிங்க/அர்சாவதார மூர்த்திகளாக பலகோடி யுகங்கள் அருள்பாலித்து வந்தனர். மன்னர்களின் மிக அரிய இறைத் திருப்பணிகளின் மூலமாகத் தான் அம்மூர்த்திகள் ஆலயங்களில் குடி கொண்டனர்... திருக்கண் மாலீஸ்வரருக்கு வெள்ளி தோறும் சுக்கிர ஹோரை வேளையில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) நூற்பட்டு மாலை சார்த்திப் பசும்பாலால், கறந்த பாலில் இளஞ்சூடு தணிவதற்கு முன்னரே அதாவது பால் கறந்த சில வினாடிகட்கு உள்ளாகவே அவ்விளஞ்சூட்டுடன் அபிஷேகம் செய்து பால் பொங்கல் படைத்து வெண்பட்டையும், பால் பொங்கலையும் தானமாக அளித்து வந்தால் . காட்ராக்ட், குளுக்கோமா (cataract, Glaucoma) மற்றும் பல கொடிய கருமையான கண் ரோகங்கட்கும், தக்க நிவர்த்தியைப் பெற்றிடலாம். ஆனால் இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன்  ஒவ்வொரு வெள்ளியும் செய்து வருதல் வேண்டும்.
தேங்காய்க்கு மூன்று கண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் 1,2 கண்களுடைய தேங்காய்களும் உண்டு. இரண்டு கண்களுடைய ஆறு தேங்காய்களை வாழை நாறில் சேர்த்துக் கோர்த்துக் தேங்காய் மாலையாக ஆக்கித் திருக்கண்மாலீஸ்வரருக்கு வெள்ளிக்கிழமைகளில் சார்த்தி அடிப்பிரதட்சிணம் செய்து, அதனைப் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்துச் சென்று தேங்காய் சாதம், காய்கறி பொறியல் போன்றவற்றில் சேர்த்து அன்னதானமாக அளித்து வந்தால் மஞ்சள் மாலைக் கண் நோய், குளுக்கோமா போன்ற நோய்கட்கு பிராயச்சித்தம் கிட்டும். சிறுவர்களை இளவயதிலேயே இவ்வாலயத்திற்கு அழைத்துச் சென்று அடிப்பிரதட்சிணம்தனை, இயன்ற போதெல்லாம் செய்ய வைத்தால் எவ்விதமான கண் நோய்களும் ஏற்படாவண்ணம் தீர்கமான பார்வையைப் பெற்றிடலாம். கண்ணாடி அணியும் நிலையும் ஏற்படாது. கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகரியமாலீஸ்வரருக்கு சனிக்கிழமை தோறும் கருநீலம் (அ) கறுப்பு வஸ்திரம் சார்த்திப் பஞ்சாமிர்தம் காப்பிட்டு, ஏழைகட்கு தானமாக அளித்தால் கொடிய தோல் நோய்கட்கு நிவாரணம் கிட்டும். வருடக் கணக்காகப் பலரும் தீராத தோல் நோய்களால் அவதிப்பட்டு வருகின்றார்களல்லவா?  அவர்களுக்கு இக் கரியமாலீஸ்வரர் லிங்க வழிபாடு தோல் வியாதி கட்குத் தக்க நிவாரணங்களைப் பெற்றுத் தருகின்றது.. பல பெண்களும், ஆண்களும் தாங்கள் கருப்பாக இருக்கிறோமே, இதனால் தத்தம் திருமணம் பாதிக்கப்படுகின்றதே என்று ஏங்கி மனமுருகி உள்ளூரக் கதறி வாழ்கின்றனரல்லவா? அவர்கள் கரூர் ஸ்ரீகரியமாலீஸ்வரரை வேண்டி வணங்கி வந்தால் நன்முறையிலே திருமண வாழ்வு அமையும்.
ஆசீர்வாத முறைகள்
பெரியோர்களிடம், பெற்றோர்களிடம் ஆசி பெறுதலால் பல விசேஷமான புண்ய சக்திகள் கிட்டுகின்றன. ஆசியைப் பெற்றுத் தரும் இறைக் கருவிகளே அட்சதைகள், பூக்கள்! பௌர்ணமி தோறும் ரிஷிகளின்/ ஞானிகளின்/ சித்புருஷர்களின் ஜீவசமாதி தரிசனம் நல் ஆசிகளைப் பெற்றுத் தருகின்றது.
ஆசியுமொரு தானமே! – பலவிதமான தான, தர்மங்களில் புண்ணிய தானம் என்று ஒன்று உண்டு. இதில் தலை சிறந்து விளங்கியவனே மகாபாரதத்தில் நாம் காணுகின்ற கர்ணன். எதையும் தானமாக அளிக்கும் போது அங்கு சுயநலம் மறைகின்றதல்லவா? அதாவது சுயநலமற்ற காரியங்கள் அனைத்திலுஏ ஓர் ஆத்ம மகிழ்ச்சி உண்டாகும். இதுவே இறை உணர்வாகப் பிரகாசித்து ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு உதவுகின்றது. இதுவே மஹேஸன் சேவையான மக்கள் சேவை! ஒவ்வொரு வழிபாட்டின் போதும், ஹோம, ஆராதனையோ, அர்ச்சனையோ அதில் சங்கல்பம் என்ற ஒன்றை மேற்கொள்வார்கள். நீங்கள் கோயிலில் பூஜைக்குச் செல்கின்ற போது அர்ச்சகர்கள் சிறிது தீர்த்தத்தை உங்கள் கைகளில் வார்த்து அதனை பூமியில் விட்டு விடுமாறு சொல்கின்றார்கள் அல்லவா? இதுவே சங்கல்பமாக ஆகும். அதாவது இந்த அபிஷேக, ஆராதனைகளில் ஏற்படுகின்ற பலாபலன்கள் இன்னாருக்காக, இன்ன காரியத்திற்காக அர்ப்பணம் செய்வதாக சங்கல்ப “சத்யம்“ செய்கிறேன் என்று பொருளாகும். பூமியில் நீரைத் தாரை வார்க்கும் போது எப்போழுதும் நித்திய சத்தியமாக விளங்குகின்ற பூமாதேவியின் சாட்சியமாக இதனைச் செய்கின்றேன் என்பது பொருளாகும். இரண்டாவதாக , நீரைத் தாரையாக வார்த்து ஒரு பொருளை இன்னொருவர்க்கு அளிக்கின்ற போது அப்பொருளின் மீது மறுபடியும் எக்காரணம் கொண்டும் உரிமை கொண்டாடுதல் ஆகாது என்பதற்காகத்தான் இந்த சங்கல்ப பூஜை செய்து கொள்ளப்படுகிறது.. இதைப் போல பெற்றோர்களை வணங்குகையில் அவர்கள் அளிக்கின்ற “நேத்ர பூஷண ஆசீர்வாதத்தில்“ அவர்களுடைய பூஜா பலன்களின் புண்ய சக்தியும் சேர்ந்திருக்கும். சங்கல்பத்தின் போது நீரைத் தாரையாக வார்ப்பதற்கு போல.., ஆசிர்வாதத்தின் போது கைகளை உயர்த்தி, ஆட்டி, ஆசிர்வாதித்தோ அல்லது அட்சதை, புஷ்பங்கள் போன்றவற்றை அளித்தும் ஆசீர்வதிக்கின்றார்கள். அட்சதை போன்றவையெல்லாம் ஆசீர்வாத தேவதைகளாகும். இவற்றின் முன்னிலையில் அன்னதானம் போல புண்ணிய சக்தி தானம் நடைபெறுகிறது.
பூக்களை விட்டெறிந்து ஆசீர்வாதம் செய்யக் கூடாது, பூக்களைக் கையில் எடுத்துக் கொண்டு, குனிந்து, வணங்குகின்றவரின் தலையிலோ,, உடலிலோ படுமாறு வைத்து ஆசீர்வதிக்க வேண்டுமே தவிர, விட்டெறிதல் கூடாது. அதே போல் ஆசீர்வாத அட்சதையான அரிசி மணிகள் முழுமையாக இருந்து மஞ்சள் பூசியிருக்க வேண்டும். குருணையாகவோ, உடைந்த அரிசிமணிகளையோ  ஆசீர்வாதத்துக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் , ஆசீர்வாத தேவதைகள் ஆவாஹனமாகின்ற முக்கியமான பொருட்களில் நீர், புஷ்பம், அட்சதை போன்றவை அடங்கும். ஆசீர்வாதம் செய்யப்பட்ட அட்சதையைப் பலரும் அப்படியே தரையில் விட்டுவிட்டுச் செல்கின்றார்கள்.. பிறகு, விளக்குமாற்றால் கூட்டும் போது அட்சதைகளை அள்ளி எறிந்து விடுகின்றார்கள். இவ்வாறு செய்தல் கூடாது. அட்சதைகளைப் போட்டு ஆசீர்வாதம் செய்கின்ற போது, கை நிறைய அரிசி மணிகளை அள்ளித் தெளிக்காது, பணிந்து பன்னிரெண்டு அரிசி மணிகளுக்குள்ளாகவே எடுத்து, குனிந்து சற்றே தலை, உடலில் தெளிக்க வேண்டும். அதிலும் எந்தெந்த விரல்களால் அரிசி மணிகளை எடுத்தல் வேண்டும் என்ற கணிப்பு முறையும் உண்டு. மொத்தமாக ஐந்து விரல்களிலும் அள்ளி எடுத்து ஆசீர்வாதம் செய்வதில்லை . மகான்கள் அட்சதைகளை வைத்து ஆசீர்வதிக்கின்ற போது கூட, அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்பவே சில விரல்களையே பயன்படுத்துவார்கள். உதாரணமாக கட்டை விரலும், மோதிர விரலும் சேர்ந்து அட்சதைகளை எடுக்கின்ற போது, அவர்க்கு பித்ரு ஆசீர்வாதங்கள் நிறைந்து வரும்.. பொதுவாக, தர்ப்பணத்திற்காக எள்ளை எடுக்கின்ற போது கட்டைவிரலும், ஆள்காட்டி விரலும் சேர்ந்து எடுப்பது கிடையாது.., புஷ்பங்களை எடுக்கும் போது மட்டும் தான் ஐந்து விரல்களையும் ஒன்றாகச் சேர்த்து வராஹ முத்திரையாகப் புஷ்பத்தை எடுப்பார்கள், முழு அரிசி மணிகளை கட்டை விரலையும், நடுவிரலையும் சேர்த்து வைத்து எடுத்து ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதிலும் தாய், தந்தையரோ , உறவினரோ அல்லது வேறு பெரியவர்களோ அட்சதையை எடுக்கின்ற போது வெவ்வேறு விரல்களைப் பயன்படுத்த வேண்டும் என்கின்ற நியதியும் உண்டு. இவையெல்லாம் ஆசீர்வாத சங்கல்ப இலக்கண முறைகளில் வருகின்றன.. ஒரு மஹான் ஆனவர் ஒருவர்க்கு எவ்வகையில் எதை வைத்து ஆசீர்வதிக்கின்றார் என்பதைப் பொறுத்து அந்த ஆசீர்வாதத்தின் லட்சணங்களையும் அவருக்கு எதிர்வரவிருக்கின்ற கர்மவினைகளையும், பலாபலன்களையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.  காஞ்சியில் அன்றும், இன்றும், என்றும் வேதஞானியாக அருள்பாலிக்கின்ற காஞ்சி ஸ்ரீபரமாச்சார்ய சுவாமிகள் ஆசீர்வாத முறைகளில் பலமுறைகளைக் கையாள்வது கண்டு ஆனந்தம் அடைந்திருப்பீர்கள். சிலருக்குத் தேங்காயைக் கீழே சில எண்ணிக்கையில் பூமியில் தட்டியும், வில்வம், துளசி, புஷ்பம் போன்றவற்றைத் தம் தலை, தோள்களில் வைத்தும் பலவிதங்களில் ஆசீர்வதிக்கின்ற முறையைப் பொறுத்துப் பலாபலன்கள் மாறி அமைகின்றன. இவையெல்லாம் தக்க ஒரு சத்குருவின் மூலமாகவே அறியப்பாலதாகும்.
குழந்தைகளுக்கு, பெற்றோரை நமஸ்காரம் செய்கின்ற நற்பழக்கத்தை ஏற்படுத்தித் தாருங்கள், அவர்களை ஆசீர்வதிக்கின்ற முறைகளையும் கற்றுக் கொள்ளுங்கள். வெறுமனே பூ அல்லது அட்சதையை விட்டெறிவது சரியானதல்ல. மேலும் நீங்கள் மேற்கிலோ அல்லது தெற்கிலோ நின்று கொண்டிருக்க உங்கள் குழந்தைகள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் வணங்குதல் வேண்டும். உங்கள் குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்காகவே வியாழன், வெள்ளிக் கிழமைகளில் , நீராடி உலர்ந்த ஆடைகளை அணிந்து மரப் பலகையில் அமர்ந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராணம், அபிராமி அந்தாதி போன்ற பல இறைத் துதிகளை ஓதியவாறே நல்ல அரிசி மணிகளைப் பொறுக்கி எடுத்து மஞ்சளில் தோய்த்து எடுத்து வைத்திருங்கள். ஆசீர்வாத அட்சதைகளைத் தேர்ந்தெடுக்கின்ற நேரம் கூட சுக்கிர, குரு, புதன் , சந்திர ஹோரைகளில் அமைந்தால் மிகவும் பிரமாதமான ஆசீர்வாத சித்திகள் அமையும். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்கானப் புண்ணிய சக்திகளைப் பெற்றால் தானே நன்கு ஆசீர்வதிக்க முடியும்? சட்டியில் இல்லாமல் அகப்பையில் எப்படி வர முடியும்? எனவே உங்கள் குழந்தைகளை ஆசீர்வதிப்பதற்காகவே வாரத்தில் சிலமணி நேர பூஜைகளை அவர்களுக்காக ஒதுக்கி, உங்கள் ஆசீர்வாத சக்திகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
நமக்குத்தான் கெட்ட வழக்கங்கள் நிறைய இருக்கின்றனவே, நமக்கு ஆசீர்வாத சக்தி எங்கிருக்கிறது என்று வேதனை கொள்ளாதீர்கள். இன்றைக்குப் பெற்றோர்களே சிகரெட், புகையிலை, மூக்குப் பொடி, முறையற்ற காமம், பொய், ஊழல், அரட்டை அடித்தல், தீய வார்த்தைகள் பேசுதல் போன்ற பலவிதமான தீய வழக்கங்களுக்கு ஆளாகி இருப்பதால் எவ்வகையில் அவர்களுடைய சந்ததியினர் நல்லொழுக்கத்தில் வளர்வார்கள் என்ற உறுதியைத் தர முடியும்? ஆன்மீகத்தில் அனைத்துத் தீய வழக்கங்களுக்கான பரிகாரங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சத்குருவைச் சார்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன், அவருடைய நல்வார்த்தைகளைக் கடைபிடிப்பார்களேயானால் தான், அதற்குரிய பரிகாரங்கள் நன்முறையில் பலனளிக்கும். எத்தனையோ ஆண்டுகளாகப் பல தீயவழக்கங்களுக்கு அடிமையாயிருந்த பலரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய சத்சங்கத்தில் ஜாதி, மத பேதமின்றி பலவிதமான இறைப்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்து இன்றைக்குத் தீயவழக்கங்களிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றவர்களாக நல்லொழுக்கத்துடன் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனிந்த இழிநிலை?
சிகரெட் பிடித்தலுக்கு அடிமையாக இருப்போர் அதிலிருந்து உடனே வெளிவருவது என்பது நிச்சயமான இயலாத காரியம். என்னதான் சபரிமலைக்கு விரதமிருந்து, கோயில் தீர்த்தம், தல மூர்த்திகளை வழிபட்டாலும் மீண்டும் அதே பழக்கம் தான் தலை தூக்கும். இதற்குக் காரணம் எத்தகைய பகுத்தறிவு கொண்டிருந்தாலும் மனிதன் இரண்டு அங்குலம் அளவுள்ள காகித உருண்டைக்குத் தான், ஒரு கப் பழ ரசத்துக்குத்தான் அடிமையாய் இருக்கின்றான் என்ற அவர்களுடைய அவல நிலையைக் காட்டுகிறது. ஆனால் இத்தகைய தீய வழக்கங்களிலிருந்து விடுதலை பெறாமல் அவர்களுடைய வாழ்க்கை முடிந்து விடுமேயானால் இதற்கு கொடிய நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரிடும் என்பதை மறத்தலாகாது! என்றேனும் ஒரு நாள் இதிலிருந்து விடுபட்டாக வேண்டும். நம்முடைய உடல்தானே இதில் பாதிக்கப்படுகின்றது என்று எண்ணாதீர்கள். ஒரு முறை சிகரெட் பிடித்தால் அதனால் ஆயிரக்கணக்கானவர்களுடைய நுரையீரலுக்கு விஷத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது நாட்டிற்கே கேடு விளைவிக்கின்ற மிகவும் மோசமான பாவகரமான செயல் ஆகும். அதே போல மது அருந்தினால் தம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதோடு உங்களை நம்பி வாழ்கின்ற குடும்பத்துக்கும், அலுவலகத்துக்கும் பெரும் சோதனைகளைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. எந்த மனித உடலை ஒரு கருவியாக வைத்து, முக்திக்கும், மோட்சத்திற்கும் வழிகாட்டுகின்ற நல்வாழ்க்கையை வாழ்ந்து பிறருக்குப் பயன்படும் வகையில் வாழவேண்டுமோ அதை விடுத்து சுயநலமிக்கத் தன்னுடைய சுயஇன்பத்திற்காக இத்தகைய வழ்க்கங்களில் ஈடுபட்டால் இதை விட மோசமான சுயநலவாதியை நாம் காண முடியாது என்பதை நீங்கள் அடிக்கடி நினைவுறுத்திக் கொள்ளுங்கள்.
தினந்தோறும் புகைத்துப் புகைத்துப் பரவெளிக்கும் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஜீவன்களின், தாவரங்களின், புழு, பூச்சிகளின் நுரையீரலுக்கு விஷக் காற்றினை செலுத்திக் கொண்டிருப்போர் தினந்தோறும் இதற்கு ஓரளவுப் பரிகாரமாக ஆலயங்களுக்குச் சென்று சாம்பிராணி தூபம் இட்டு வருதல் வேண்டும். சாம்பிராணிக்குப் பரவெளியைத் தூய்மைப்படுத்தக் கூடிய புனிதத் தன்மை உண்டு. இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வருவீர்களேயானால் உங்களையும் அறியாமலே இந்தப் புகைப்பழக்கம் அகன்றுவிடும். எந்த காற்று வெளியைப் புகைத்து விஷமாக்கினார்களோ அதனை சாம்பிராணி தூபப் புகையினால் புனிதமாக்குவதே சிறந்த பரிகாரம்!

கெட்டதை விலக்கும் செட்டிமுகப் பெம்மான்

திருச்சி அருகே செட்டிகுளத்தின் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சிவகங்கை தீர்த்தம் என்ற ஒரு அற்புதமான கிணற்றுத் தீர்த்தம் இருக்கிறது. இதனுடைய மகத்துவத்தைப் பலரும் இன்று அறியாமல் இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி, இந்நீரைப் பிரசாதமாக எடுத்து வந்து தினந்தோறும் சிறிது அருந்தி வந்தால், மதுப்பழக்கம் போன்ற தீய வழக்கங்கள் நாளடைவில் விலகிவிடும். ஆனால் இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வருதல் வேண்டும்.

செட்டிக்குளம் திருத்தலம்

அவரவருடைய நட்சத்திர தினத்தில் மாதந்தோறும் இத்திருக்கோயிலுக்குச் சென்று இத்தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்று ஆலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் மதுப்பழக்கம் அகல்வது உறுதியே. ஏனென்றால் இங்கு நாகமூர்த்திகளுடன் சேர்ந்து அருள்பாலிக்கின்ற ஸ்ரீவரகுண கணபதியின் அநுகிரஹமும், மனதைச் சாந்தப்படுத்துகின்ற இங்குள்ள பத்துவிதமான இசைத் தூண்களிலிருந்து வெளிவருகின்ற சூட்சும இசை ஸ்வரக் கதிர்களும், பங்குனி மாதத்தில், 18, 19, 20 தேதிகளில் இவ்வாலயத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் லிங்க மூர்த்தியின் மீதும், ஸ்ரீகாமாட்சி அம்பிகையின் மீதும்படுகின்ற சூரிய கிரணக் கதிர்களின் தெய்வீகச் சக்திகளானவை இவ்வாலயத்தில் எப்போதும் நிறைந்து இருப்பதால், இவற்றின் நல்வரத்தாலும், இவ்வாலயத்தின் எதிரே வடபழனி முருகன் ஆலயம் எனப்படும் கந்தவேளின் ஆலயத்தில் சாதாரணமான வேலின்றி செங்கரும்பை ஏந்தி அருள்பாலிக்கின்றத் திருமுருகனின் நேத்ர அநுகிரஹத்தாலும், மதுப் பழக்கத்திலிருந்து நிச்சயமாக விடுதலை பெறலாம். குடிப்பழக்கமுடையோர் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து எத்தனையோ சித்தர்கள் அமர்ந்து அருள்பாலிக்கின்ற தூண்களைச் சுத்தம் செய்தல், தரையை நீர் விட்டுக் கழுவுதல், ஒட்டடை அடித்தல் போன்ற சாதாரணமான இறைப்பணிகளைப் பலருடன் சேர்ந்து சத்சங்கமாக உழவார இறைத் திருப்பணியாக செய்து வருவார்களேயானால் மிக விரைவில் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டுமின்றி, பலரையும் நன்னிலைப்படுத்துவதற்கான அறவழிகளைக் கைக் கொண்டு வாழ்ந்திடலாம். பல்லாயிரக்கணக்கானோர் வருகின்ற ஆலய சுத்தப் பணியே, மன, உடலை சுத்திகரிக்கும் திருவருளைத் தரும்..

ஸ்ரீமாங்கனி விநாயகர் செட்டிக்குளம்

மாங்கனி விநாயகர் !  மாங்கனியைப் பெறுகின்ற போது விநாயகப் பெருமான் தாய், தந்தையரை வணங்கிட, அப்போது பார்வதி பரமேஸ்வர மூர்த்திகள் ஆசியாக இட்ட அரிசிமணி, அட்சதைகள் தாம் இன்று அரசமர, ஆலமரத்தடிகளிலும், குளக்கரைகளிலும், யாங்கனுமாக விநாயக முர்த்திகளாகத் தோன்றின. ஏனென்றால் உலகை வலம் வந்ததாகப் பொருள் கொண்டு உத்தம விநாயகர் தம் தாய், தந்தையரை வணங்கினார் அல்லவா! “எனவே, யாங்கனும் உன் திரு உருவங்கள் எழுவதாக”, என்ற வகையில் அந்த ஆசீர்வாத சக்தி அமைந்து இன்று நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது. இதன் பிறகு அவர் பெற்ற மாங்கனிதாம் நான்கு வேதங்களின் ஷரத்துகளாக விளங்குகின்றன.
இவ்வாறு மாங்கனியைப் பெற்ற விநாயகர் தான் கற்பக விநாயகராகிப் போற்றப்படுகின்றார். பார்வதி, பரமேஸ்வர மூர்த்திகள் அளித்த மாங்கனியானது விநாயகப் பெருமானின் திருக்கரங்களில் ஓர் அற்புதமான சிவலிங்கமாக மலர்ந்தது. இவ்வாறு சிவலிங்கத்தைக் கையில் தாங்கு அருள்பாலிக்கின்ற ஸ்ரீவிநாயகருக்கு பாக்ய ஆசீர்வாதச் சக்திகள் நிறைய உண்டு. அரிய காரிய சித்தியைப் பெற்றுத் தரவல்லவர். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் இக்கோலத்தில் தான் இன்றும் நமக்குப் பேரருள் பாலிக்கின்றார். இவ்வாறாக ஸ்ரீகணபதிநாதர் தம் தாய், தந்தையரிடமிருந்து பெறுவதற்காகத் தம் தும்பிக்கையை வலமாகச் சுழித்து மாங்கனியைப் பெற்றுச் சிறிது நேரம் மாங்கனி தாங்கிய விநாயகராகவும் பிறகு சிவலிங்கம் தாங்கிய விநாயகராகவும் இன்றும் பல இடங்களில் வலஞ்சுழிப் பெருமானாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். திருத்துறைப்பூண்டி அருகே திருக்கடிக்குளம் எனும் தலத்தில் மாங்கனி பெற்ற விநாயகராக ஸ்ரீவிநாயகப் பெருமான் அருள்பாலிக்கின்றார். இவருக்குத் தாய், தந்தையர்கள் அளிக்கின்ற ஆசீர்வாதச் சக்தியைப் பலாபலன்களாக மாற்றுகின்ற அருட்சக்தி உண்டு. எனவே பலரும் தம் தாய், தந்தையரின் பல சொத்துக்களைப் பெற்ற போதிலும் உற்றம்/சுற்றம்/நட்புகளின் ஏமாற்று வேலையில் சொத்துக்களை இழந்திருப்போர் தமக்குரித்தான நில பாத்தியங்களையும், சொத்துக்களையும் மீண்டும் பெறத் திருக்கடிக்குளம் தனிக் கோயிலில் மாம்பழப் பஞ்சாமிர்தக் காப்பிட்டு இக்கோயிலுக்குரிய இறைப் பணிகளைச் செய்து வந்தால் தாம் இழந்த சொத்துக்களை நியாயமான முறையில் மீண்டும் பெறுவர். இத்தல சிவாலய சிவலிங்க மூர்த்திக்கு லிங்கப் பட்டைகள் உண்டு.. சிவலிங்கத்தின் ஒவ்வொரு பட்டையும் கைலாயத்தின் ஒவ்வொரு பகுதியைக் குறிக்கிறது.
மானசரோவரில் நாம் காண்கின்ற கைலாய தரிசனம் விசேஷமான ஒன்றாகும். திருஅண்ணாமலை போல திருக்கயிலாயத்தை கிரிவலம் வருகின்ற முறை ஒன்று உண்டு. மிகவும் குளிரான பகுதியாகையால் திபெத்யர்கள், நேபாளிகள், லாமாக்கள் போன்றோரே இதனை வலம் வருகின்ற உடல்பாங்கினைப் பெற்றிருக்கின்றனர். வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமே திருக்கயிலாய கிரிவலம் ஆகும். “நம்மால் மானசரோவருக்குச் செல்ல முடியவில்லையே., திருக்கயிலாயத்திற்குச் செல்ல முடியவில்லையே”, என்று ஏங்குவோர் கோணப்பட்டைகளுடன் கூடிய சிவலிங்கங்களை திங்கள் கிழமைகளிலும் திருவாதிரை நட்சத்திரங்களிலும், வெண்ணெய்க் காப்பிட்டுத் தரிசித்து வந்திட மானசரோவர் செல்லுதற்கான யாத்திரை பாக்கியமோ, அல்லது அதனுடைய பலாபலன்களோ கிட்டிட, மூதாதையர்கள் வழிவகுப்பர்.

பாஸ்கர சுபிட்ச ஹோமம்

மார்கழிப் பௌர்ணமியில் மகத்தான பாஸ்கர சுபிட்ச ஹோமம்
அக்னி வழிபாடாகிய ஹோமம் யாவராலும் கடைபிடிக்க வேண்டிய மிகச் சிறந்த தெய்வீக வழிபாடாகும். ஒவ்வொரு இல்லத்திலும் மிக எளிய முறையில் வாரம் ஒரு முறையேனும் ஹோமத்தை நிகழ்த்துதல் வேண்டும். சத்சங்க முறையில் எவ்வித பேதமுமின்றி பலரும் கூட்டு ஹோம வழிபாட்டைச் செய்தல் மிகச் சிறந்த சமுதாய பூஜையாகும். கடந்த மார்கழி மாதப் பௌர்ணமியின் போது நம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஜாதி, மத, இன பேதமின்றி உலகமக்களின் சுபிட்சத்திற்காக மிகவும் எளிமையான முறையில் பாஸ்கர பல்குன சுபிட்ச ஹோமம் நம் குருமங்கள கந்தர்வா வெங்கடராமன் அவர்களுடைய அருள் வழியின்படி நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள் முதல் பெரியோர்வரை எவ்வித பேதமுமின்றி அனைவரும் பங்கு கொண்டனர்.
இதற்காக அமைக்கப் பெற்ற ஹோம குண்டமானது சித்புருஷர்களின் கிரந்தங்களில் அருளியுள்ளபடி பாஸ்கர ஹோம சூத்திரங்களின் விதிகளின்படி அமைக்கப் பெற்றது. அந்த ஹோம குண்டத்தின் அமைப்பே இவ்விதழில் படமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபூர்வமான முறையில் சித்புருஷர்களுடைய பாஸ்கர ஹோம நியதிகளுக்கேற்ப நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் நிர்மாணிக்கப் பெற்ற ஹோம யோக குண்டமாகும். குறித்த சில சூரியச் சக்கரங்களின் மேல்தான் இத்தகைய 18 குண்டங்களும் நிலைநிறுத்தப்பட வேண்டும். ஆஸ்ரமத்தின் சூட்சும சித்த பரிபாலன ராஜகோபுரத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள அரிய 18 விதமான கோபுரக் கலசங்களுக்கு தெய்வீக சக்தியை மேன்மேலும் ஆவாஹனம் செய்யும் பொருட்டும், இக்கோபுரக் கலசங்களைத் தரிசிக்கின்றவர்களுக்கும், கிரிவலம் வரும் அடியார்கட்கும், அனைத்து மக்களுக்கும் மட்டுமின்றி அனைத்துவித தாவர, விலங்கினங்கட்கும் சுபிட்ச சக்தியைத் தரவல்ல சந்திர, பாஸ்கர அமுத சக்தியை அளிப்பதற்கும் இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ளப்பட்டது.
பதினெண் சித்தர்களின் அருட்கடாட்சத்தைப் பதினெட்டு கலசங்களின் மூலம் ஜாதி, மத, இன, குல வேறுபாடு இன்றியும், ஆண், பெண், மனிதன், விலங்கு எவ்வித வித்யாசமின்றியும் இறைவனின் சிருஷ்டித் தத்துவத்தில் யாவரும், யாதும் அவரவர், அதனதன் கர்மவினைகளுக்கேற்ப பிறப்பு, இறப்பு விதிகளைச் சுமக்கின்றனர் என்பதை உணர்த்திடவும், ஸ்ரீஅருணாசலப் பெருமானின் அருட் திருவடிகளே சாசுவதமானது என்ற உத்தம தெய்வீக நிலையை யாவரும் உணரும் முகமாகவும், ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ளப்பட்டது. இறைவன் அளித்துள்ள இவ்வுடல், மனம் உள்ளம் கொண்டு பிறருக்காகச் சேவை செய்வதே தாம் எடுத்த பிறவியின் லட்சியம்! மக்கள் பணியே மகேசன் பணி இதற்கான இறையருளைப் பெறுவதே நம் பிரார்த்தனை என்பதை உணர்த்தும் முகமாகவும் அடியார்களுக்கு பொதுநலச் சங்கல்பம் செய்விக்கப்பட்டு உலக சுபிட்சத்திற்காக பலவிதமான ஹோம ஆஹுதிகள் அளிக்கப்பட்டன..
நிம்பூத்ரய முத்ரா யோகம்
ஹோமத்தில் அமர்வதற்கு முன் மனதை ஒரு நிலைப்படுத்தும் நிம்பூத்ரய யோகம் என்னும் முறையில் 18 ஹோம குண்டங்களில் ஆஸ்ரம அடியார்களுக்கு அவரவர்க்குரிய ஹோம குண்டத்தை உணரும்  முறையையும் கடைபிடிக்கப்பட்டது.. அக்காலத்தில் குருகுலவாசம் நிகழ்ந்த பர்ணசாலைகளில் நாள் முழுவதுமாக நூற்றுக் கணக்கான ஹோமங்கள் நிகழ்ந்தவாறு இருக்கும். அந்தந்த நாள், திதிகளில் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களைப் பொறுத்து ஹோம குண்ட அமைப்புகளும், ஆஹுதிகளும் சற்குருவால் அளிக்கப்படும். பொது மக்கள் யாவரும் இதில் பங்கு கொண்டு ஆஹுதி அளித்தனர்.
தனக்கென வாழாது பிற ஜீவன்களின் நன்மைக்காகத் தம்மை எப்போதும் தியாகம் செய்து உத்தம வாழ்வினைப் பெற்றிட, மாமுனிகளும், துறவிகளும், ரிஷிகளும், சந்நியாசிகளும் மிகவும் பவித்ரமான புனிதமான ஹோம குண்டங்களை நடத்தி அதன் பலாபலன்கள் யாவருக்கும் சென்று அடையும் வண்ணம் உத்தம தெய்வீக வாழ்க்கைதனை வாழ்ந்தனர். தம்முடைய கல்வி, செல்வம், வீரம், பதவி, அழகு, அறிவு ஆகியவற்றைத் துறந்து மோக, போக இச்சைகளை அகற்றிப் பிறருக்காக வாழ்வோரே காவி உடை தரிக்கும் தகுதி பெறுகின்றனர். ஆனால் தற்காலத்திலோ அவ்வப்போது காவி உடையை மாட்டியும், சுழற்றியும் அதன் புனிதத்தை மாசுபடுத்தும் வண்ணமும் பலரும் நடந்து கொள்வது வருத்தத்திற்குரியதாகவுள்ளது. ஒருமுறை காவியை அணிந்தால் அதனைக் கழற்றாது புனிதத்தோடு வாழ்ந்தாக வேண்டும். காவியின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் கடுஞ்சாபங்கள் ஏற்படும்.
படத்தில் காட்டியுள்ள பாஸ்கர சுபிட்ச ஹோம குண்டத்தின் அடிப்படுகைக் கோட்டிற்கு இணையாக ஒரு நேர்கோட்டை வரைந்து அதில் ஒவ்வொரு ஆஸ்ரம அடியாரும் இரு கண்களையும் மூடிய வண்ணம், ஒரு முனையிலிருந்து மறுமுனையைச் சரியாக சென்று அடைந்து திரும்பி வருகையில் உள்ளுணர்வினால் எந்த ஹோம குண்டத்திற்கு முன் தானாக நிற்கின்றனரோ அதுவே அவ்வடியாருக்குரிய ஹோம குண்டமாக அளிக்கப்பட்டது.. இது மட்டுமல்லாது இரு கண்களையும் மூடிச் செல்கையில் வலது கையைத் திருப்பி வைத்துக் குரு விரலாகிய ஆள்காட்டி விரலும், சுக்கிர விரலாகிய கட்டை விரலும் தொட்டு வளையமாக்கிட, அதனுள் இடக்கையின் சுக்கிர, குரு விரல்கள் வளையமாகக் கோர்த்து நிற்க, வலது நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல்களின் மேல் எலுமிச்சைக் கனி ஒன்று வைக்கப்பட்டு கீழே விழா வண்ணம் படுகைக் கோட்டின் மற்றோர் முனைக்குச் சென்று வருதல் வேண்டும். கண் மூடுதல், விரல்களை மடித்தல், கனி கீழே விழா வண்ணம் மனதை ஒருமுகப்படுத்துதல் கண்களை மூடியவண்ணம் நேராகச் செல்லுதல், மறுமுனையை உள்மனதால் உணர்ந்து திரும்புதல், தனக்குரிய ஹோம குண்டத்தை இறை உள் ஆணையாக அறிதல் இவையனைத்தையும் ஒன்றாகச் செய்தல் என்றால் எத்தகைய மனக்கட்டுப்பாடு தேவை! சற்றே சிந்தனை செய்து பாருங்கள்! அதுவும் சற்குருவின் அருட்பார்வையில் நிகழ்கின்ற யோக நிலை என்றால் என்னே அதன் மஹிமை!
பொதுவாக 1999ஆம் ஆண்டில் பலவிதமான உடல் உபாதைகளும், பயிர் விளைச்சல் குறைவு போன்ற பலவிதமான விளைவுகள் ஏற்படக் கூடுமாதலின் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்குரிய மூல, பீஜாட்சர மந்திரங்களுடன், பிரதான ஆஹுதிகள் அமைந்தன. எவ்வித வேறுபாடுமின்றி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர் என அனைவரும் 18 ஹோம குண்டங்களிலும் அமர்ந்து ஒரே சமயத்தில் உரத்த குரலில் மந்திரங்களை ஓதி ஹோமத்தில் எழுகின்ற தெய்வீகப் புகையினால் ஆஸ்ரமத்தையும், அதன் சுற்றுப் பரவெளியையும் நிரப்பினர்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஹோமப் புகையானது மேலெழும்பி மேற்புறத்தில் 18 கலசங்களையும் அடைந்தது பார்ப்பதற்கு தெய்வீக விந்தையாக விளங்கியது. உடல், உள்ளம் மட்டுமின்றி பரவெளியையும் எத்துணையோ சதுர மைல்கட்குப் பரிசுத்தமாக்கி புனிதப்படுத்தும் தெய்வீகச் சக்தியைக் கொண்டதே பாஸ்கர சுபிட்ச ஹோமப் பலன்களாகும். பலவிதமான இயந்திரச் சக்கரங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சூரிய விரலால் பாஸ்கர சுபிட்ச சக்தியைத் தரவல்ல இயந்திரங்களாக முதலில் மணலில் பொறித்திட அவற்றின் மேல் ஐந்தெழுத்து மந்திரங்களாம் நமசிவாய, நாராயணாய போன்ற மந்திர உருக்கள் ஏற்றப்பட்ட செங்கற்களால் ஹோம குண்டம் அமைக்கப்பட்டது.
பசுஞ்சாணத்தாலான விரட்டி, தர்ப்பை, கொப்பரைத் தேங்காய், நவதானியங்கள், நாயுருவி, கருங்காலி, எருக்கு, அத்தி, அரசு, புரசு, ஆல்சந்தனம், வில்வம் போன்ற மூலிகைச் சமித்துகள், அனைத்து விதப் பழங்களும், தோல் விதை நீங்கி சுத்தம் செய்யப்படும். அக்னியில் ஸ்ரீதன்வந்தரீ மற்றும் ஏனைய பீஜாட்சர மந்திரங்களுடன் ஆஹுதி அளிக்கப்பட்டன ஸ்ரீதன்வந்தீரி மந்திரங்களுடன் சேர்ந்த தெய்வீகக் காற்று இருதயத்தை அடைந்து 72,000 நாடி, நரம்புகளையும் சென்று அடைகின்றன எனில் இதன் மஹிமை தான் என்னே!
18 ஹோம குண்டங்களிலும் ஒரே சமயத்தில் அக்னி எழுகின்ற போது அதனுடைய தெய்வீக ஆற்றல் எவ்வளவு தூரத்திற்கு செல்கிறது என்பதை நாம் மானசீகமாக உணர்தல் வேண்டும். இவ்வாறாக இல்லந்தோறும் கிராமம் எங்கும், சத்சங்க வழிபாடாக எவ்வித பேதமுமின்றி பலரும் ஒன்று சேர்ந்து ஹோம வழிபாட்டை மேற்கொள்வாராயின் நாட்டில் சாந்தம் பூத்துக் குலுங்குமன்றோ! மிகவும் எளிமையான முறையில் ஹோம வழிபாட்டை அவரவர் வசதிக்கேற்ப அமைத்திடலாம்.
இன்று உலகெங்கும் விரவிக் கிடக்கின்ற மது, போதை, புகையிலை, புகைபிடித்தல், மத ஒற்றுமையின்மை, ஜாதி, இன வேறுபாடுகள் போன்ற சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும். தீய எண்ணங்களும், தீயச் செயல்களும், நீங்கவதற்கு ஹோம வழிபாடுதான் மிகச் சிறந்த இறைவழிபாடாக விளங்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் வாரம் தோறும் அனைத்து மக்களும், ஒன்று கூடி சத்சங்க  ஹோம வழிபாட்டை மேற்கொண்டு யாவர்க்கும் ஹோம ஆஹுதிகளை அளிக்கின்ற  வாய்ப்பையளித்து ஹோமங்களை நிகழ்த்தி இதன் பலனாய் இறையருள் யாங்கனும் பொலிந்திட திருஅண்ணாமலையானை வேண்டுகின்றோம்.

தலவிருட்ச பூஜை

ஒரு ஆலயத்தில் ஸ்தல விருட்சமாக அமைவது என்பது தேவாதி தேவ தெய்வ மூர்த்திகட்கும் பெறுதற்கரிய பாக்கியமாகும். எத்துணையோ சுதை உருவங்களும், சிற்பங்களும், கற்சிலைகளும் மாறிக் கொண்டேயிருந்தால் கூட பெரும்பாலான ஸ்தல விருட்சங்கள் கோடிக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நிலைத்து நின்று தழைப்பதை நாம் காண்கின்றோம் . ஏதோ அங்கும் இங்குமாக ஸ்தல விருட்சம் பட்டுப் போய் மீண்டும் துளிர்ப்பதாக நமக்குத் தோன்றினாலும் கூட உண்மை அதுவல்ல! அந்த ஸ்தல விருட்சமாக இருந்த தேவாதி தேவர்களும், தேவ மூர்த்திகளும், தேவதைகளும், தங்களுக்குரித்தான பரிபாலன ஸ்தலவிருட்ச காலம் முடிந்தவுடன் மற்ற தேவதா மூர்த்திகளுக்கு வழிகாட்டுகின்றனர்.. இதைத்தான் நாம் ஸ்தல விருட்சம் பட்டு மீண்டும் துளிர்த்ததாகக் கூறுகின்றோம்.

தலமரம் கடுக்காய் திருக்குறுக்கை

மேலும் நாம் பன்முறை விளக்கி வந்துள்ளது போல ஆலயங்களில் நடை சார்த்தப்படும் போது உள்ளே தேவபூஜை நிகழ்கின்றதல்லவா? அப்போது மூல தேவதா மூர்த்தியின் அனுக்கிரஹ சக்திகள் பலவும் ஸ்தல விருட்சத்திற்கு மாற்றப்படுவதால், ஆலயம் நடைசார்த்தப்பட்டு விட்டதே என வருந்திடாமல் ஸ்தல விருட்சத்தைத் தரிசித்து வருதல் வேண்டும். இதற்காகத்தான் கோயில் மதில் சுவரையும் மீறி பீறிட்டுக் கிளம்புவதாக ஸ்தல விருட்சங்கள் அமைந்துள்ளதை நாம் காண்கின்றோம். பலரும் ஸ்தல விருட்சம் காற்றில் அசைவதை நல்ல சகுனமாகக் கொண்டு தம் நற்காரியங்களைத் துவங்குவதும் உண்டு.
ஸ்தல விருட்சத்திலுள்ள ஒவ்வொரு இலையும், பூவும், காயும், கனியும், வேரும், மரப்பட்டையும், ஒவ்வொரு தெய்வ மூர்த்தியாகும். பல பித்ரு தேவர்களும், வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகள் கூட ஸ்தல விருட்ச இலைகளாக மாறி நமக்கு அருள்பாலிக்கின்றனர். நீங்கள் காண்கின்ற ஸ்தல விருட்ச இலைகள் கூட உங்கள் பித்ருக்களாக இருக்கக் கூடும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மரம் உண்டு. அவரவர் நட்சத்திரத்திற்குரிய மரமானது தல விருட்சமாக உள்ள ஆலயத்தில் பிறந்த நட்சத்திர தினத்தன்று தலவிருட்ச பூஜை செய்வது கிடைத்தற்கரிய பெரும் பேறாகும்.
ஸ்தல விருட்சங்களின் இலைகளாகவோ, பூக்களாகவோ, கனிகளாகவோ இலங்குவது கூட உத்தம இறைப் பெரும் நிலையே! ஏனெனில் கோடானுகோடி தேவர்களும், ரிஷிகளும், ஆலய வழிபாட்டிற்கு வருகையில், தம் ஒளிமயமான சூட்சும ரூபத்தை ராஜ கோபுரங்களிலும், ஸ்தல விருட்சங்களிலும் தான் இட்டுச் செல்கின்றனர். ஏனென்றால் அவர்களது ஒளி பொருந்திய உருவமோ, கோடானு கோடி சூரியப் பிரகாசத்தைக் கொண்டமையால் அவற்றைத் தாங்கும் வல்லமை, பூலோகத்திலுள்ள பொருட்களுக்குக் கிடையாது!
ஆகையால், அவற்றைத் தாங்கக் கூடியத் தெய்வீகத் தன்மைகளைக் கொண்ட தலமரம் போன்ற பொருட்களையே அவர்கள் நாடுவர். ஸ்தல விருட்சத்தின் இலைகள் கூட காய்ந்து, உதிர்ந்து கீழே கொட்டுவது போல் தோன்றினாலும், அவற்றின் சக்தியை பூமாதேவியே பெறுகின்றாள். பூலோக மக்களின் தீவினைகளால் வேதனையுறும் பூமாதேவி இவ்விலைகளின் தெய்வீக சீதளத் தன்மையால் தன்னுடைய வருத்தத்தைத் தணித்துக் கொள்கிறாள். எனவே, ஸ்தல விருட்சங்களின் காய்ந்த இலைகள் கூட எல்லாம் வல்ல பராசக்தியாகிய ஸ்ரீபூமா தேவியின் வேதனைகளைத் தணிக்கின்றதெனில் அந்த ஸ்தல விருட்சத்தின் பரிபூரண சக்தி எப்படிப்பட்டது என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.. இவ்வாறாகத்தான் நாம் சிறிது சிறிதாக ஆத்மவிசாரம் செய்து நம்மூளையின் சக்தியைப் பெருக்கி தெய்வீகத்தை நாமே உய்த்துணர வேண்டும்..

மீனாட்சி சுந்தரரேஸ்வர திருக்கல்யாணம்

அட்டைப்பட விளக்கம் :- பூமா தேவிக்குத்தான் நாம் எத்தனை, துன்பங்களை அளிக்கின்றோம். சிகரெட், மது வகைகள், குப்பைகள், கழிவுநீர், எச்சில், இரசாயனக் கழிப்புகள், பிளாஸ்டிக், துருப்பிடித்த இரும்பு போன்ற உதிரிக் கூளங்கள் போன்ற எத்துணையோ கழிப்பினை ஏற்கும், பொறுமையின் சிகரமான பூமாதேவிக்குத் தானே அசுத்தப் பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன... நம் அசுத்தங்களை ஏற்கும் இதற்கு நன்றி செலுத்தும் முகமாக என்றேனும் நாம் பூமா தேவிக்கு வழிபாடு நிகழ்த்தியுள்ளோமா? இதற்காகத் தான் சர்வேஸ்வரனே, ஸ்ரீசுந்தரேஸ்வரனாகவும், ஸ்ரீமீனாட்சி தேவியாகவும், பூமியில் அவதாரம் செய்கின்றார்கள்.
இவ்வாறு இறைவனே மனித உருக் கொண்டு பூமியில் நடமாடும்போது, ஸ்ரீபூமா தேவி மகிழ்ச்சி கொண்டு தன் வேதனைக்குத் தீர்வு பெறுகின்றாள். அதிலும், பங்குனி உத்திரமானது ஸ்ரீபூமாதேவி வேண்டிப் பெற்ற மகத்தான திருநாளாகும். ஏனெனில் இத்திருநாளில் தான் அவதார மூர்த்திகளின் திருமண வைபவங்கள் நிகழ்ந்தன. பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருவிடந்தைப் பெருமாளின் திருக்கல்யாணம், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள் என்றால் கோடானு கோடி மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியரும், ஞானியரும், ஏனைய தெய்வ மூர்த்திகளுடன் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் குழுமுகின்றனர். எனில் இவர்களைத் தாங்குவதில் பூமா தேவிக்குத்தான் என்னே மகிழ்ச்சி! எனவே, பங்குனி உத்திரம் என்றால் பூமாதேவிக்குப் படுகொண்டாட்டம் தான்!
ஸ்ரீபூமாதேவியின் தவத்திற்கு ஏற்பவே ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர்  அவதாரம் நிகழ்ந்தது எனில் அது மிகையாகாது. எனவே, உங்களுடைய திருமண நாளை எங்கெங்கோ வீணே கழிக்காது இறைவனின் திருமணக் கோலக் காட்சி நிகழ்ந்த ஆலயங்களில் சென்று இறை தரிசனம் கண்டு பெருமகிழ்ச்சியுறுங்கள். அதிலும். தெய்வமூர்த்திகளின் திருமண நாளாக விளங்கும் பங்குனி உத்திரத்தன்று, நம்முடைய பெற்றோர்களாக ஜாதி, இன, மத, குல பேதமின்றி அனைத்து நாட்டு மக்களின், ஜீவன்களின், தாவர விலங்கினங்களின் அம்மை, அப்பனாக விளங்கும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நதியில் தம்பதி குடும்ப சகிதமாகச் சென்று ஸ்ரீபூமா தேவிக்கான வழிபாடாகக் கொண்டாடி மகிழ்வோமாக!
நீங்கள் வசிக்கும் இல்லம், பணிபுரியும் அலுவலகம், உண்ணும் உணவு, உடுத்து உடை, நோய் தீர்க்கும் மருந்துவமனை, வழிபடும் ஆலயம் அனைத்துமே வழிபடும் ஆலயம் அனைத்துமே பூமாதேவியின் அன்பளிப்புதானே! நம்மைப் பெற்றுக் காத்து, அரவணைத்துப் பரிபாலிக்கும் ஸ்ரீபூமா தேவியே பிரசன்னமாகி தரிசிக்கின்ற ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற பங்குனி உத்திர/சித்திரை தெய்வத் திருக்கல்யாண உற்சவத்தில் நீங்கள் குடும்ப சகிதம் சென்று வழிபடுவதே நம்முடைய அம்மையப்பனின் திருமண நாளைக் கொண்டாடும் உத்தம முறையாகும்.. குத்தாலம் (மாயூரம்), வேதாரண்யம், காஞ்சீபுரம், திருவேற்காடு, மதுரை போன்ற திருத்தலங்களும் அகத்தியர் பெற்ற திருமணக் காட்சித் தலங்களும் பங்குனி உத்திரத்திற்குரிய வழிபாட்டுத் தலங்களாகும். இதனால் தம்பதியரிடையே பரிபூரண அன்பு பரிணமித்து, இல்லற வாழ்க்கை சாந்தமான முறையில் நன்கு அமையும்.
பங்குனி உத்திரம் தந்திடும் பரிஹாரம் :- மேலும் தற்காலத் திருமணங்கள் யாவும் முறையான மந்திர தீர்த்த, ஹோம வழிபாடுகளுடன் நிகழ்வதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி நட்சத்திர தரிசனத்தைப் பெறுகின்ற உத்தமத் திருமண வழிமுறைகளும் மறைந்து விட்டன. எப்படித்தான் இதனை ஈடு செய்ய முடியும்? இதனால் தான் திருமண வாழ்வில் ஏகப்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள்! இதற்குப் பரிஹாரம் தேடும் வகையில் தான் பங்குனி உத்திரத்தன்று இறைவனுடைய திருக்கல்யாண உற்சவங்களை நிகழ்த்துவதாகும்.
பங்குனி உத்திரமாகிய இன்று அவரவர் வசதிக்கேற்ப குறைந்தது ஒரு பொன் மாங்கல்யத்தையேனும் ஜாதி, இன, பேதமின்றி ஓர் ஏழை தம்பதிக்கு அளித்திடுக! இறைவனே மனம் மகிழும் வண்ணம் பங்குனி உத்திரத்தன்று நீங்கள் செய்ய வேண்டிய நற்காரியம் என்ன தெரியுமா? ஏழைத் தொழிலாளிகளான ரிக்ஷாக்காரர்கள், கழிவுத் துறைப் பணியாளர்கள் காலணி தைப்போர் போன்ற ஏழைக் குடும்பப் பெண்மணிகள் பலரும், பொன் மாங்கல்யத்திற்கு வசதி இல்லாது வெறும் மஞ்சள் தாலிச் சரடுடன் இருக்கின்றார்கள் அல்லவா?
புதுமணத் தம்பதிகளுக்குத்தான் பொன் மாங்கல்ய தானம் என்று எண்ணாது மேற்கண்ட வகையில் தங்கத்திற்கான வசதியில்லாது வெறும் தாலிச்சரடை அணிந்துள்ள பெண்மணியை, அவர்தம் கணவருடன் தம்பதி சகிதம் ஆலயத்திற்கு அழைத்து வந்து புத்தாடைகள் அளித்திடுக! அம்பிகைக்கு பொன்மாங்கல்யம் சார்த்தி அதனை ஸ்வர்ண தானமாக அந்த ஏழைச் சுமங்கலிக்கு அளித்திட அவர்கள் அடைகின்ற ஆனந்தமே நீங்கள் பெறுகின்ற பரமானந்தம்!

வலஞ்சுழியும் வலம்புரியும்

பல ஆலயங்களிலும் வலஞ்சுழி விநாயகர், வலம்புரி விநாயகர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இரண்டும் ஒன்று தானா? வலம்புரி விநாயகர், வலஞ்சுழி விநாயகரின் தெய்வாம்சங்கள் யாவை? சித்புருஷர்களின் கிரந்தங்களில் கணபதி மஹிமை என்ற தலைப்பில் லட்சக்கணக்கான கிரந்த வாக்கியங்கள் காணப்படுகின்றன. விநாயகரின் மஹிமை சொல்லவும் பெரிதே!
விநாயகர் யானை முகத்தோனாகத் தோன்றுவதற்கு முன்னால், ஆதிமூல விநாயகராக, நரமுகப் பிள்ளையாராக விளங்கிய கோலத்தில் இன்றைக்கும் சில தலங்களில் அருள்பாலிக்கின்றார். திருச்சி மலைக்கோட்டை அருகேயுள்ள நன்றுடையார் திருக்கோயில், திருவாரூர் அருகே (கோயில்) பத்து திலதைப்பதியிலும், ஆதிமூல விநாயகராக, நரமுகப் பிள்ளையாராக (யானை முகமில்லாது, ஆதிமூல விநாயகராக) அருள்பாலித்துக் கொண்டுள்ளார். இந்த ஆதிமூல விநாயகர் தரிசனம் மிகவும் அற்புதமான தரிசனமாகும். பொதுவாக, தீய வழக்கங்களினால் வந்த நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களினால் தவிப்போர்க்கு (தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்கள், மதுப்பழக்கம், முறையற்ற காம தீச்செயல்கள் போன்றவை) இதிலிருந்து விடுபட ஸ்ரீஆதிமூல விநாயகர் வழிபாடு பெரிதும் உதவுகிறது.

ஸ்ரீநரமுக விநாயகர் திருச்சி

நரமுகப் பிள்ளையாராக, ஆதிமூல விநாயகராக விளங்குகின்ற இப்பிள்ளையாருக்கு புதனும், பஞ்சமியும் சேர்ந்த நாட்களிலும், செவ்வாயும், சதுர்த்தியும் சேர்ந்த தினங்களிலும்  தைலக் காப்பு, சந்தனக் காப்பு, பஞ்சாமிருதக் காப்பு மூன்றையுமிட்டு இயன்றால் அங்கப் பிரதட்சிணம் செய்து சதுர்த்தசியிலும், புதன்கிழமையிலும், அருகம்புல் தீர்த்தம் மட்டும் அருந்தி உண்ணாநோன்பு ஏற்று, வழிபட்டு வந்தால் தீய பழக்கத்தால் உண்டான நோய்களிலிருந்து விடுபடும் நல்வழிகளையும் அறவழிகளையும் பெற்றிடலாம். மேலும், நாக தெய்வத்துடன் கூடிய கணபதி வழிபாடும் மிகவும் விசேஷமானதாகும். நாக தோஷம் தீர திருச்சி அருகேயுள்ள செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வர்ர் ஆலயத்தின் அருகில் நாக தெய்வத்துடன் கூடிய ஸ்ரீவரகுண கணபதி மெய்யுருவத்தைக் கண்டு தரிசித்து வணங்கிடுக. நாகத்துடன் கூடிய ஸ்ரீகணபதி மூர்த்திக்கு பஞ்சமி திதி அல்லது நாக சதுர்த்தியன்று, வியாழக்கிழமை சந்திர ஹோரை நேரம், அமாவாசையிலிருந்து மூன்றாம் நாளான சந்திர தரிசனத்தன்று நாகத்துடன் அல்லது நாகாபரணத்தை அணிந்து அருள்பாலிக்கும் கணபதி மூர்த்திக்குப் பால் பொங்கல் அல்லது பால் பாயசம் படைத்து விநாயகக் கவசம், விநாயகர் அந்தாதி போன்ற துதிகளை ஒன்பது முறை வந்தால், பலவிதமான திருமண தோஷங்கட்கு தீர்வுகள் கிட்டுவதுடன் கூடிய விரைவில் திருமண பாக்கியமும் கிட்டும். (ஸ்ரீநாகாபரண விநாயகர் சென்னை திரிசூலம் சிவன் கோயில்).
விநாயகப் பெருமானே வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு விதமான கண் நோய்களைத் தீர்க்கும் பலவிதமான நல்வரங்களைத் தந்தருள்கின்ற மூர்த்தியாக கலியுகத்தில் விளங்குகின்றார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (சுவாமிமலை ஸ்ரீநேத்ர கணபதி). வலம்புரி விநாயகரானவர் சுழி முழுமையாகாது வலப்புறம் மட்டும் சற்றே வளைந்திருக்கும். இதற்குரிய புராண வைபவம் உண்டு. இத்தகைய வலம்புரி விநாயகருக்கு எத்தகைய காரியத்திற்கும் முதல் பூஜையை இவருக்கு அளிப்பது சிறப்புடையதாகும். ஏனென்றால் பிள்ளையாரில் சுழி தோன்றுவதற்குக் காரணமான அகமர்ஷண மாமுனி (நம்முடைய ஸ்ரீஅகஸ்திய விஜயத்திற்கு இவர் பெயரில் தான் இதழ் எண்முறை அளிக்கப்பட்டு வருகின்றது). ஸ்ரீவிநாயகப் பெருமானின் திருவயிற்றில் இன்றைக்கும் கற்பகத் தவ புருஷராக விளங்கி உலகிற்கு அருள்பாலித்து வருகின்றார். அவருடைய திரு உதரத்திற்குச் செல்லும் திருவழியாக விநாயகருடைய வலம்புரி நிலையில் துதிக்கை மூலமாகத்தான் அவருடைய திருவயிற்றை அடைந்தார்.
எனவே, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் வலம்புரி விநாயகரை வணங்கித் தொடங்குவது மிகவும் சிறப்புடையதாகும்.. வலஞ்சுழி விநாயகர் பெரும்பாலும் லிங்க மூர்த்தி, மாங்கனி, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பார். பித்ரு ஆசீர்வாதங்களையும் சந்தான பாக்கியத்தையும் பெற்றுத் தரவல்லவரே ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்.

படிக்கட்டுப் பூஜை

மூதாதைய தேவர்களின் ஆசியை வேண்டும் படிக்கட்டுப் பூஜை
திருஅண்ணாமலையில் நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் உள்ள 12 படிகளின் மகாத்மியத்தைப் பற்றி நாம் ஓரளவு எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா! ஒவ்வொருவருக்கும் உரிய மூதாதையர் பாரம்பரியத்தில் எத்தனையோ தலைமுறைகள் இருப்பினும், குறிப்பாக நமக்கு முந்தைய, தாய், தந்தை வழியில், குறைந்த பட்சம் ஆண், பெண் வர்க்கத்தில் மொத்தம் பன்னிரெண்டு மூதாதையர்களுக்குத் தர்ப்பணம், சிராத்தம் எனப்படும் திவச பூஜை செய்வது மிகவும் முக்கியமானதாகும். பித்ருபூஜை எனப்படும் மூதாதையர் வழிபாட்டின் மூலமாகத்தான் நமக்கு கல்வி, செல்வ, சந்தான மற்றும் நல்வழி பாக்யங்கள் அமைகின்றன என்பதை நாம் மறந்து விடலாகாது, நாம் நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கும், முக்தி தரும் மோட்சப் பெருவழியில் நடப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நல்லதோர் சற்குருவின் அருட்கடாட்சத்தை அடைவதற்கும் நம் மூதாதையர்களின் ஆசி பெரிதும் தேவையானதாகும்.. தினசரி பித்ரு வழிபாடு, மாதப் பிறப்பு, அமாவாசை, மூதாதையர் இறந்த திதிகளுக்கு உரித்தான வழிபாடு, விஷ்ணுபதி, ஷடசீதி, மனு/யுகாதி நாட்களுக்கான பித்ரு பூஜைகள் இவையெல்லாம் மிக மிக எளிதான, சாதாரணமானோரும் கடைபிடிக்கக் கூடிய பூஜைகளே!

பித்ரு படிக்கட்டுகள்
திருஅண்ணாமலை ஆஸ்ரமம்

ஆனால் அறிந்தோ, அறியாமலோ பலரும் இதனைக் கடைபிடிப்பதில்லை. இதன் பொருட்டுத்தான் கலியுகத்தில் மூதாதையர் வழிபாட்டின் பரிபூரணத்வம் மக்களால் மறக்கப்படும் என்பதை பெரியவர்கள் கணித்து 18 படி பூஜை, திருத்தணி படிக்கட்டு பூஜை, மலைக் கோட்டை, திருப்பதி, அய்யர்மலை போன்ற மலைத்தலப் படிக்கட்டு பூஜை/படி ஏறிக் காவடி எடுத்தல் போன்றவைகளை, நாம் மறந்துவிட்ட பூஜைகளின் பலாபலன்களைத் தருவதாக ஏற்படுத்தி உள்ளனர். இவ்வகையில் திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில் உள்ள 12 படிக்கட்டுகளும் ஜாதி, இன பேதமின்றி நம் தாய், தந்தை வழியில் முதல் 12 பித்ருக்களைக் குறிப்பதாக அமைந்துள்ளன.
ஆண் சந்ததி  (தந்தை வழியில்) - தந்தை, தாத்தா, பாட்டனார் வழிமுறை
தாய் வழியில் – தாத்தா, பாட்டனார், தாத்தாவின் தாத்தா, வழிமுறை
பெண் சந்ததி (தந்தை வழியில்) – தாய், பாட்டி, பாட்டியின் தாய், வழிமுறை
தாய் வழியில் – பாட்டி, பாட்டியின் தாய், பாட்டியின் பாட்டி வழிமுறை
ஆக 12 மூதாதையர்கள் பித்ரு வழிபாட்டிற்குரியவர்கள் ஆகின்றனர். ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவருக்கும் இது பொருந்தும், தாயோ, தந்தையோ, தாத்தாவோ, பாட்டியோ நம்முடன் இருப்பின் அவர்கட்கு முந்தைய வம்சாவளி பித்ரு வழிபாட்டிற்கு உரியதாகின்றது. இந்த 12 பித்ருக்களுக்கு உரிய பித்ரு பூஜா, எந்திர, தந்திர சக்கரங்களின் தத்வார்த்த பிருத்வி பூஜா சக்திகளாக இப்படிக்கட்டுகள் விளங்குகின்றன.
கடந்த பகுதான்ய ஆண்டு கார்த்திகை தீபம் முதல் ஒவ்வொரு பௌர்ணமி திதியிலும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தை ஒட்டிய நேரத்தில், அதாவது விடியற்காலை 4 மணி முதல் 6.00க்குள்ளாக சமுதாய பூஜையாக படிக்கட்டு பூஜையாக, மூதாதையர்களுக்கான தீபவழிபாடு நடைபெற்று வருகின்றது. பொதுவாக நம்முடைய பரம்பரையில் 24 வம்சாவளிப் பித்ரு தேவர்களுக்குப் பூஜை செய்வதே சிறப்புடையது. ஆனால் கலியுக மனிதனின் குறைந்த மூளைசக்தி நினைவாற்றலைக் கருத்திற் கொண்டு இது 12 பித்ருக்களின் வழிபாடாக, அமாவாசைத் தர்ப்பண பூஜையாகக் குறுகிவிட்டது..
படிக்கட்டுப் பூஜை முறை : மேற்கண்ட மூதாதையர் பூஜையின் போது 12 படிகளிலும், இரு ஓரங்களிலும் 24 (12+12) தீபங்களும் படத்தில் காட்டியுள்ளது போல் நடுவில் 12 நுனிவாழை இலைகளை வைத்து அவற்றின் இரு புறங்களிலும் வரிசைக்கு 12 ஆக 24 தீபங்களும் மொத்தம் 48 ஜோதிகள் ஏற்றப்படுகின்றன. இது நம் அனைவருடைய 48 தலைமுறை  மூதாதைய ஜோதி வழிபாடாக மலர்கின்றது.
வாழை என்பது மங்களகரமான சந்ததி அபிவிருத்தியைக் குறிக்கின்றது.. எப்போதும் காற்றில் அசைந்து கொண்டிருப்பதால் வாழை இலைக்கு பஞ்சபூத வாயு சக்திகள் நிறைய உண்டு. இந்த பஞ்சபூத வாயு அம்சமே, மனித உடலில் தசவாயுக்களாக விரவியுள்ளது.. ஆகவே நுனி வாழை இலைக்கு ஆயுள் விருத்தி, ஆரோக்கிய விருத்தி அருளும் சக்திகள் நிரம்ப உண்டு.. இன்றைக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் நிவாரணத்திற்காக வாழையிலைக் குளியல் முறை உண்டு. மேற்கண்ட பூஜையில் நுனி வாழையிலையில் அரிசி, தானியங்கள், உப்பு, புளி, மிளகாய், பழங்கள், காய்கறிகள் போன்ற நமக்கு ஜீவ சக்தியைத் தருகின்ற பொருட்கள் திருஅண்ணாமலையாருக்கு தீப ஜோதிகளின் சாட்சியாகப் படைக்கப் பெற்று பித்ரு ஆசி நல்கும் படிக்கட்டுப் பூஜை பரிபூரணம் அடைகின்றது. இப்பூஜையின் போது திருவாசக, தேவார, வேத பாராயண துதிகளை அடியார்கள் ஓதுவதும் பூஜையின் பலன்களைப் பன்மடங்கு பெருக்குகிறது. திருஅண்ணாமலையாருக்கும் பித்ருக்கள் ஆவாஹனம் ஆகின்ற 12 படிக்கட்டுகளுக்கும் குருவழி முறையாக 12 முறை வணக்கம் செலுத்தி, தேன், பால், நைவேத்யம் செய்யப்பட்டுப் பிரசாதமாகவும் அளிக்கப்படுவதும் உண்டு. கிரிவல அடியார்கள் இதனைக் கண்டு சிறப்புறப் பங்கேற்று அவரவர் மூதாதையர்களின் ஆசியைப் பெற வேண்டுகிறோம்.

அமுத தாரைகள்

1. திருமணப் பொருத்தம்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அனுஷம், ஆயில்யம், விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தம்பதிகள் மன ஒற்றுமையற்று பலவித சஞ்சலங்களுக்கு ஆட்பட்டு மனப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆகவே, இவ்வாறு மணந்த தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ கணவனும், மனைவியும் குழந்தைகளோடும் மதுரைக்கு அருகிலுள்ள விராதனூர் என்னும் சிவத்தலத்தில் உள்ள ரிஷப வடிவத்தில் உள்ள சிவபார்வதிக்கு பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாங்கல்ய தானம், அன்ன தானம் செய்து வர குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

திருமயேந்திரபள்ளி

2. எண்ணெய்க் குளியல் தேவையே!
இக்காலத்து குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுபவர்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது. ஏன்? எண்ணெய்க் குளியலின் பலாபலன்களைக் கண்டு ஆங்கில மருத்துவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வாரமிருமுறை எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும்.. அதோடு மட்டுமல்லாமல் உடம்பில் தேமல், வெண் புள்ளி, கட்டிகள் தோன்றி உடலழகை இழப்பவர்களுக்கு ஆன்மீகம் மிகச் சிறந்த பரிகாரத்தை உலகுக்கு அளித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருமயேந்திரப்பள்ளியில் உள்ள சிவாலய இந்திர தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி வழிபட்டால் நோய் நொடியில்லாமல் மேனி அழகோடு வாழலாம்.
3. திருமண தோஷ நிவர்த்தி :
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், விசாகம், மகம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்துக் கொள்வதைத் தவிர்த்திடவும். விதி வசத்தால் இவ்வகையில் திருமணம் நடந்து விட்டால் குடும்பத்தில் பொய் சண்டைகளும், தேவையற்ற சந்தேகத்தால் மனக் குழப்பங்கள் வரும். ஆகவே இத்தம்பதியர் வெள்ளி தோறும் குறிப்பாக தை மாத வெள்ளிக் கிழமைகளில் திருச்சிக்கு அருகே சமயபுரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள ஆனந்த சௌபாக்கிய சுந்தரி அழகம்மை என்ற அம்மனுக்கு பூ ஆடை சாற்றி ஜாதி, பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் அளித்து தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தால் தம்பதியர் நல்வாழ்வு பெறுவர்.
4. ஏவல் வியாதிகள் தீர :
வியாதிகள் அனைவருக்கும் வரும், போகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால் பகைமையாலும், வெறுப்பாலும் பழி வாங்கும் குணத்தாலும் பலர் மந்திர ஏவலால் வியாதிகளை அனுபவிக்கும்படி செய்து விடுவர். இது எக்காலத்திலும் நடைபெறும். இவ்வாறு மந்திர ஏவலால் வரும் வியாதிகளைத் தீர்க்கப் பல வழிகள் உண்டு. இருந்தாலும் முக்கியமாக அனைவரும் நம்பிக்கையுடன் குணமடைய அற்புதமான ஸ்ரீதன்வந்த்ரீ பகவான் அமர்ந்துள்ளார் ஸ்ரீரங்கத்தில், இவரைச் சரணடைந்து திருமஞ்சனம் செய்து (இராக்கால் தீர்த்தம்) இரவு துளசீ தீர்த்தம் வைத்து மறுநாள் காலை பருகி அருகிலுள்ள சுந்தர புஷ்கரிணி அருகில் அமர்ந்து ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரத்தை இரண்டு மணி நேரம் ஜபித்து வந்திடில் பில்லி, சூனியம், ஏவலால் வந்த நோய்கள் தீரும்..
5. நல்ல திருமண வாழ்வை பெற!
திருமணம் செய்து கொண்டு பல ஆண்களும், பெண்களும் படும்பாட்டைச் சொல்லி விட முடியாது. திருமணத்திற்கு முன் அவரவர் மனதில் கொள்ளும் கற்பனைக்கோ அளவே கிடையாது. ஆனால் கற்பனையின்படி வாழ்க்கை அமையாவிட்டால் குடும்பத்தில் ஒரே அமளிதான். மனைவியின் கோபத்திற்கு ஆளான கணவனைப் பெண் வீட்டார் ஆள் வைத்து அடிக்கின்ற அளவிற்கு பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவதும், அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் மனைவியைப் பலவாறு துன்புறுத்துவதும் உண்டு. இதற்கு காரணம் என்ன? மனதில் கற்பனைப்படி வாழ்வு அமையாததே காரணம். ஆகவே திருமணத்திற்கு முன் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தன்னுடைய வசதி, நிலைக்கு ஏற்பவே கற்பனை பண்ணுவது நலமாகும். மேலே சொன்னபடி குடும்ப குழப்பம் துன்பம், தீருமளவில் குடும்ப நல்ல வாழ்வைப் பெறும் வழி யாதோ! மிருகண்டு முனிவர் வனதுர்க்கா பரமேஸ்வரிக்கு கதிராமங்கலத்தில் ஒரு கோயில் கட்டியுள்ளார். இங்கு அம்பிகையை மன்றாடி வேண்டி வியாழனன்று ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை, அன்னதானம், வஸ்திர தானம் செய்து தொடர்ந்து வணங்கிடில் நல்ல குடும்ப வாழ்வு கிட்டும்.
6. சகோதரிகளின் திருமணங்கள் நடந்தேற!
சில குடும்பத்தில் மூத்த சகோதரி இருந்தாலும் இளைய சகோதரியை மணம் முடிக்க நிறைய பேர் முன் வருவர். மூத்தவள் திருமணம் ஆகாமல் இளையவளை எப்படி மணம் முடிப்பது என்பது பல வீட்டில் ஏற்படுகின்ற சிக்கலாகும். இத்தகைய நிலைமை வீட்டில் ஏற்பட்டால் திருக்கோயிலூர் பெருமாள் கோயிலில் இளைவளுக்கு முதலில் திருமணம் செய்து தான, தர்மம் செய்திடில் மூத்தவளுக்குத் திருமண பாக்யம் தானாகவே வந்து விடும். பெருமாள் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் கொண்டுள்ள அற்புத தரிசனமாகும்.
7. அண்ணனின் திருமணம் நிறைவேற
சில வீடுகளில் மூத்தவன் குறைவாகப் படித்திருப்பான். சாதாரண உத்தியோகத்தில் இருப்பான். ஆனால் இளையவனோ அதிகம் படித்து உயர்ந்த உத்தியோகத்திலோ, வியாபாரத்திலோ இருப்பான். பொதுவாக பெண் கொடுக்க விரும்புகிறவர்கள். இளையவனுக்குத்தான் கொடுக்க விரும்புவார்கள். இதனால் வீட்டில் பெரிய போரட்டமே வந்து விடும். இந்தப் போராட்டம் சுமூகமாக முடிய வேண்டுமே! தேரழுந்தூர் தலத்தில் பெருமாளின் இடப்பக்கம் அருள்பாலிக்கும் ஸ்ரீகருட பகவானுக்கு தேன் கலந்த பாலை நிவேதனம் செய்து அன்னதானம், வஸ்திர தானம் பன்னிரெண்டு துவாதசி திதிகளில் செய்து வர மூத்தவனுக்கு நல்ல வரன் தானே அமையும்.
8. பிள்ளைகள் ஒழுக்கமுடன் வளர!
நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் குடும்ப கஷ்டம் என்றால் ஓரளவு புரியும். வறுமையின் பிடியில் இருக்கின்ற குடும்பப் பிள்ளைகள் அன்றாட உணவு பிரச்னையிலிருந்து பணத்தட்டுப் பாடுகளுக்காக பாடுபடும் நிலையையும் உணர்வர். ஆனால் பலவித வருமானங்களைப் பார்த்த பெற்றோரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு குடும்ப கஷ்டம், உணவு பிரச்சினைகள் தெரியவே தெரியாது. அந்த பிள்ளைகள் தான் ஊதாரித்தனத்தில்  தாய், தந்தை சம்பாதித்த பொருளை மது, போதை, வாகனங்களைத் தலை தெறிக்க வேகத்தில் ஓட்டுதல், அறிவில்லாமலும் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோ குழந்தைகள் கையில் எவ்வளவு பணமானாலும் தடையில்லாமல் கொடுத்தோ வளர்ப்பதால் அக்குழந்தைகள் எதிர்காலத்தில் பல தீய வழிகளில் சென்று தம்மையும் குடும்பத்தின் பெயரையும் அழித்து விடுகின்றன. இவ்வாறு குழந்தைகள் தவறான வழியில் சென்று குடும்பமானத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வராமல் இருக்க தாய், தந்தை குடும்பம் அனைவரும் சரணடைய வேண்டிய தெய்வம் ஒன்று உண்டு. அவர்தாம் கங்கையணி தட்சிணாமூர்த்தி. காஞ்சிக்கு அருகே வந்தவாசியில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் கங்கையை அணிந்த தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து குடும்பத்தோடு தரிசித்து தேனாபிஷேகம், பால் நிவேதனம் செய்து தானமளித்திட பிள்ளைகள் நன்கு வளர்ந்து குடும்ப மானம் காக்கப்படும்.

திருச்சோற்றுத்துறை

9. நன்மேனி பெற
பலருக்குத் தான் அழகாக இல்லையே என்ற ஏக்கம் உண்டு. தலையில் முடி இல்லாதவர்கள், சுருண்ட முடி தலையில் நிறைய உடையவர்களைப் பார்த்தால் மனம் வருத்தம் கொள்வர். கருப்பாக உள்ளவர் வெள்ளையாக இருப்பவரைப் பார்த்தால் மனம் தாங்க மாட்டார். உயரமாக இருப்பவரை குள்ளமாக இருப்பவர் பார்த்தால் மிகுந்த வேதனை அடைவார். கம்பீரமாக இருப்பவரை ஒல்லியாக இருப்பவர் பார்த்தால் சபித்தே விடுவார். கண்ணாடி போட்டவர் தனக்கு ஒத்த வயதுடையவர் கண்ணாடி இல்லாமல் தெளிவாகப் படிப்பதைப் பார்த்தால் பொறாமை கொள்வார். இதுதான் இன்றைய கால சாபக் கேடு. அழகும், ஆண்மையும், வீரமும் ஆண்கள் பெறவும், மகாலட்சுமியின் அழகைப் போலவும் அனைத்து உயர்வையும் பெற வேண்டும் என்று விரும்பும் பெண்களும் தென்திருப்பேரையில் மகர நெடுங்குழைக் காதனாகிய பெருமாளுக்குத் தொடர்ந்து இறைச் சேவை செய்து தான, தர்மங்கள் செய்திடில் அனைத்தையும் பெறலாம் எதிர்காலத்தில்.
10. கணவனுக்கு நல் ஆயுளைத் தருகின்ற கோயில் :
இது பற்றி நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். அற்புதமான ஆலயம். கல்லால மரமுள்ள ஆலயம். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யூர் என்ற இடத்தில் உள்ள சிவாலயமே..
11. நல்வரன் தரும் ஸ்ரீவரகுண கணபதி :
பல குடும்பங்களிலும், நன்முறையில் ஜாதகம் பொருந்தினாலும், நிச்சயதார்த்தம் வரை வந்த திருமணங்கள் கூட வரதட்சிணப் பிரச்சினைகளால் நின்று போய், கன்னிப் பெண்களுக்கு சொல்லொணா வேதனைகளைத் தருகின்றன. பெண்ணும், பிள்ளையும் மனம் ஒப்பினாலும் சீர்வரிசைதாம் திருமணத்தை நடத்தவிடாது சீர்குலைய வைத்து விடுகிறது. இவ்வாறு பெண்ணும், பிள்ளையும் விரும்பியவாறு நன்முறையில் திருமணம் கைகூட அருள்புரிகின்ற, அருகில் ஸ்ரீநாகதேவ மூர்த்தியுடன் அருள்பாலிக்கின்ற ஸ்ரீவரகுண கணபதி திருச்சி அருகே செட்டிகுளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கின்றார். இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி, பஞ்சமி திதிகளில் வெண்ணெய் சார்த்தி, வெண்ணெயிட்ட வெண்பொங்கலைப் படைத்து தானமளித்து வர சீர்வரிசைகளாலும் , நாக தோஷங்களாலும் தடைபட்டுள்ள திருமணங்கள் நன்முறையில் நிறைவேறும்.
12.  அரசியல், பதவி, உடல் வலு, செல்வம் அதிகாரம், லஞ்சம் காரணமாகப் பிறரைப் பழி வாங்கியோர்/ துன்புறுத்தியோர்  இன்று ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானமிட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தக்க உதவிகள் செய்து நல்ல பரிஹாரந் தேடக்கூடி நன்னாள். இதனை அன்ன அம்சமே லிங்கமாயிருக்கின்ற தஞ்சை அருகே திருச்சோற்றுத்துறைச் சிவாலயத்தில் செய்தல் சிறப்புடையது.

நித்ய கர்ம நிவாரண சாந்தி

நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்..
1.3.1999 - இன்று புதுப்பானை வாங்கி அதில் அரிசி, பருப்பு போட்டு ஏழைகளுக்கு தானம் (பானை கழுத்து நிறைய) – கருப்பையில் இருக்கும் உயிர் மகிழ்வுறும் – பிறருக்காகவும் செய்யலாம்.
2.3.1999 – 51 ஆடுகளுக்கு வயிறார உண்ண புல்,தழைகள் அளித்து மஞ்சள் நீர் தெளித்து வலம் வந்து வணங்கிடில் – நண்பனாய் இருந்து பகையாளாய் ஆனவருடைய ஏவல் தோஷங்கள் தீரும். (ஆடு – செவ்வாய் கிரஹ வாகனம்).
3.3.1999 – கணவனே கண் கண்ட தெய்வம் என்ற சீரிய உத்தம நெறியைக் கை கொண்டுள்ள இளம் விதவைகள் இன்று மட்டும் மஞ்சள் அரைத்து மஞ்சள் நீரால் குளித்து கௌடி மாதாவை உண்ணாவிரதம் இருந்து வேண்டிடில் – இறந்த கணவன் ஆத்மா சாந்தியடையும்.
4.3.1999 – இன்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளம் நுங்கு தானம் – வயிறு சம்பந்தமான கோளாறுகள் தணியும்.
5.3.1999  - இரண்டு தல விருட்சங்கள் இருக்கின்ற கோயிலில் தலவிருட்சங்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி அன்னதானம் – பங்காளிகள் சொத்தை மறைத்து வைத்திருந்தால் குட்டு உடைந்து வெளிவரும்.
6.3.1999 – முன்னோர்களுடைய பொருட்களை அபிஷேகித்து, மஞ்சள், குங்குமம், பூசி பூஜித்து அன்னதானம்  - உத்தியோகத்தில் இரகசியமாக செய்த தவறுகளிலிருந்து திருந்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.
7.3.1999 – வண்டி இழுக்கும் மாடுகள், குதிரைகள், ஏர் உழும் மாடுகளுக்கு இன்று லாடம் அடித்து கோதுமை, தவிடு தானம் அளிப்பதால் – மூட்டி வலி, எலும்பு வீக்க நோய்கள் தணியும்.
8.3.1999 – மயில்களுக்கு உணவளித்தல் – எதிரிகளால் வரும் துன்பம் விலகும்.
9.3.1999 – பசு மாட்டிற்கு மஞ்சள் தடவி குங்குமமிட்டு வயிறார புல், தவிடு அளித்தல் – வியாபாரத்தில் வருகின்ற நஷ்டங்கள் தீரும்.
`10.3.1999 – ஏழைகளுக்கு, பள்ளிகளுக்கு மின்விசிறி தானம் – ஆஸ்துமா நோய்கள் தணியும்.
11.3.1999 – ஏழை விவசாயிகளுக்கு தண்ணீர் இறைக்கும் குவளை தானம் – நீர் சம்பந்தமான நோய்கள் தீரும்.
12.3.1999 – இந்நாளுக்குரிய அமுத தாரையை பார்க்கவும் – (அமுத தாரை – no.12)
13.3.1999 – இன்று பசுஞ்சாணத்தால் மெழுகிய புதிய முறத்தில் கோதுமை, அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் – முற தேவதைக்கு வாழை இலையில் நைவேத்யம் படைத்து முறத்துடன் தானமளித்தால் உடல் துடிப்பு, ஊறல், அரிப்பு போன்ற அலர்ஜி நோய்கள் தணியும்..
14.3.1999 – ஊர்த்துவ தாண்டவம் ஆடுகின்ற தெய்வ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை, வெண்பொங்கல் அன்னதானம் செய்திடில் – கணவனின் நல்வார்த்தையை மனைவி கேட்டு நடந்து குடும்ப வாழ்வு அமைதி பெறும்.
15.3.1999 – வயதானவர்களுக் குழாய் புட்டு தானம் – அக்கரையில் இருக்கின்ற உறவினர்களுக்கு நல்ல செய்தி வரும்.
16.3.1999 – ஜாதி, மத பேதமின்றி சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டி தானம் – தீயோருடன் சேர்ந்து செய்த பாவ விளைவுகள் தணியும்.
17.3.1999 – மணியில்லாத கோயில்களில் வெண்கலமணி தானம் – தொண்டை, வாய் சம்பந்தமான நோய்கள் விலகும், தணியும்.
18.3.1999 – கூரை இல்லாத பள்ளிகளில் புதிய கூரை அமைத்தல் – தலைச் சுற்றல், தலை பளு, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்களுக்கு ஓரளவு பரிகாரமாய் அமையும்.
19.3.1999 – கிராம ரோடுகள் இலவசமாக அமைத்தல் – Bed Sores வகையிலான நோய்கள் தணியும்.
21.3.1999 – தங்கப்பல் கட்டிய பக்தியுடைய பெரியவர்களுக்கு (ஆண்/பெண்) பாதபூஜை செய்து வஸ்திர தானம் செய்திடில் பேராசிரியர் போன்ற பெரிய பதவிக்காக பல்லாண்டு காலமாகப் பணச் செலவு செய்து ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
22.3.1999 – விளக்கில்லா ஏழை குடிசைகளுக்கு மின்சார ஒளி விளக்கு ஏற்றுதல் நேர்மையான வியாபாரத்தில் முன்னுக்கு வர வழி தெரியும்.
23.3.1999 – ஏழை விவசாய நிலங்களை டிராக்டர் வைத்து இலவசமாக ஆழமாக உழுது பயிரிடுவதற்கு ஏதுவாக்கி அளித்திடில் – வெளிநாட்டிற்கு சென்ற மகனோ, மகளோ நல்லவிதமாக தன் வாழ்நாளைக் கழிப்பர்.
24.3.1999 – பள்ளம் தோண்டும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவளித்து வெற்றிலை பாக்கு அளித்தல் – குழிப் புண்கள் (Deep Wounds) ஆறும்.
25.3.1999 – இன்று கோசாலையை சுத்தப்படுத்தி பசுக்களை நீராட்டி வயிறார புல், வைக்கோல், தவிடு இட்டு, தூப தீபமிட்டு வணங்கிடில் – சமாதி கொண்ட பெரியோர்களுடைய ஆசியைப் பெறலாம், குழந்தைகளின் நோய் நிவாரணமடையும்.
26.3.1999 – கண்ணாடிக்கு ரசம் பூசுகின்ற தொழிலாளர்களுக்கு உணவு, ஆடை தானம் – குடும்பத்தில் புகைப்படம் பிடிக்காமல் இறந்தவர்களின் ஆசியைப் பெறலாம் (புகைப்படம் எடுக்கப்படாது மறைதல் ஒரு பெரும் பேறு)
27.3.1999 – வாகன மெக்கானிக்குகளுக்கு அன்ன, ஆடை தானங்கள் – பணத்தைக் கைமாற்றாக வாங்கியவர்கள் திருப்பித் தர வழியுண்டு.
28.3.1999 – திருமண விழாக்களுக்காக மூங்கிலில் இறைவனின் வடிவுகள், வளைவுகள் செய்கின்ற தொழிலாளிகளுக்கு  அன்னதானம், ஆடைதானம் – வியாபார, நெளிவு, சுழிவுகளில் தடுமாற்றம் காணாமல் சமாளிப்பர்.
29.3.1999 – கிராமங்களில் மின்சார தெருவிளக்கு இலவசமாக அமைத்துத் தருதல் – திரும்பிச் சென்ற உறவினரின் நல்ல நட்பு புதுப்பிக்கப்படும்.
30.3.1999 – ஏழைகளுக்கு பூட்டோடு இரும்புப் பெட்டி தானமாய் அளித்தல் – குகைக் கோயில் தேவதைகளின் ஆசியைப் பெறலாம்.
31.3.1999 -  சீப்பு (மரம், பிளாஸ்டிக்) செய்கின்ற தொழிலாளர்களுக்கு அன்னதானம், வாசனை திரவியமளித்தல் – கன்னிப் பெண்களுக்கு வரும் காத்துவாரி நோய் விலகும்.’
ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு
துன்பங்களைக் களைவதற்கான சித்புருஷர்களின் நன்னெறிகளைப் போதிப்பதற்கும், யாவரும் தெய்வீக அறவழியில் நின்று இறை தரிசனம் பெறுவதற்கும் திருஅருணாசல மஹிமையைப் பரப்புவதற்கும் நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் (திருஅண்ணாமலை) சார்பில் கீழ்க்கண்ட  International Website 21.1.1999 முதல் தொடங்கப்பட்டுள்ளது..

WEBSITE ADDRESS :-  http://www.agasthiar.org
கன்னியாகுமரியிலிருந்து டோக்கியோ, கான்ஸ்டாண்டிநோபிள், சிலி என அனைத்து நாடுகளிலும்/ஊர்களிலும் அருணாசலத்தின் மகிமை சிறப்புடன் விளங்கி, ஜாதி, மத, இன குல வேறுபாடின்றி அனைவரும் தெய்வீக நிலையை உய்த்து உணர்வதற்காக இந்த WEBSITE இறையருளால் நன்முறையில் பிரகாசித்திட எல்லாம் வல்ல அருணாசலப் பெருமானை வேண்டுகின்றோம்.
மார்ச் 1999 – விசேஷ தினங்கள்
1.3.1999 – மாசி மகம்
15.3.1999 – ஷடசீதி – தர்ப்பணம் அளிக்க வேண்டிய மாதப் பிறப்பு நாள் (தாமரை இலை மேல் தர்ப்பணச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.)
17.3.1999 – ருத்ர சாவர்ணி மனு தர்ப்பண நாள் (ஸ்ரீருத்ர சாவர்ணி மனு தர்ப்பயாமி என்று தர்ப்பண அர்க்யம் அளித்திடவும்..)
19.3.1999 – மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாள். ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் என்ற நாமம் தாங்கிய லிங்க மூர்த்திக்குப் பாலாபிஷேகம் செய்து சந்திரனைத் தரிசிப்பதால் சித்த ஸ்வாதீனம் உள்ளோர்க்கான நல்வழிகள் பித்ருக்களின் ஆசியாற் கிட்டும். திண்டிவனம் அருகே திருவக்கரை சிவாலயம்..)
25.3.1999 – ஸ்ரீராமநவமி
26.3.1999 – தர்மராஜ தசமி
27.3.1999 – சர்வ காமதா ஏகாதசி
30.3.1999 – இரவு 2.55 முதல் 31.3.1999 இரவு 4.19 வரை பௌர்ணமி திதி அமைகிறது.
31.3.1999 – பங்குனி உத்திரம் – பௌர்ணமி கிரிவல நாள்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam