அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரம்

இவ்விதழ் அட்டைப் படத்திலே நீங்கள் காண்பது “ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரம்” என்னும் மிக அரிய யோக, யந்திரச் சக்கரமாகும். பூமியில் நிலத்தில், plot-இல் தொழிற்சாலைகளில், இல்லங்களில், அலுலகங்களில் உள்ள பூமி தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற அற்புதமான ஸ்ரீவாஸ்து சக்கரம், சித்புருஷர்களின் கிரந்தங்களில் காணப்படுகின்ற சித்தாந்தங்களின்படி இச்சக்கரத்தில் உள்ள யந்திரக் கோணங்களும், பீஜார்சர முடிச்சுகளும் செவ்வாய் கிரக அம்ச பிம்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இச்சக்கரமானது சாதாரண முறையில் வரையப்பட்டதன்று. சற்குருவின் அருளாணையின்படி முறையான பஞ்சலோகத் தகட்டில் தக்க பீஜாட்சரங்களுடன் பொறிக்கப்பட்டு நெல், துவரை, உளுந்து, கடலை போன்ற நவகிரஹ தானிய மணிகளிலும், தேன், பால், கரும்புச்சாறு, கங்கை, காவிரி, கிருஷ்ணா போன்ற புனித நீர் தீர்த்தங்களிலும் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி போன்ற புனிதத் தைலங்களிலும் இவ்வாறாக 48 விதமான திரவியங்களிலும், தீர்த்தங்களிலும், தைலப் பொருட்களிலும் 48 மண்டலங்கள் வைக்கப்பட்டு சித்புருஷர்கள் அருளிய முறையில் நன்முறையில் பூஜிக்கப்பட்டு ஸ்ரீவாஸ்து ஹோமம், ஸ்ரீ பூ சூக்த ஹோமங்களுடன் வழிபடப்பட்டு  இத்தகைய சக்தி வாய்ந்த யந்திர சக்கரத்திலிருந்து பொறிக்கப்பட்டதாக தற்போது இவ்விதழின் அட்டைப் படமாகத் தங்கள் கரங்களில் மலர்கின்றது.
பீஜாட்சர கிரந்திகளானவை சித்தர்களின் பரிபாஷை சூட்சும அட்சரங்களாகப் பதிக்கப்பட்டுள்ளன. இச்சக்கரத்தில் பதிந்துள்ள பீஜாட்சர கோணங்கள் பெறுதற்கரியவை. தக்க சற்குரு மூலமாகவே உணரப்பட வேண்டியவை. இவற்றில் உள்ள பீஜாட்சர முடிச்சுகளெல்லாம் பலவிதமான கவச மந்திரங்களுடன் பூரித்து நிற்பவை. வாக்பீஜங்கள் நிறைந்த ஸ்ரீவாஸ்து சக்கரம். இதனை அனைத்து இல்லங்களிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும், வியாபாரத் தலங்களிலும், வைத்திருந்து தினந்தோறும் செவ்வாய் ஹோரை நேரத்திலும் வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே வருகின்ற வாஸ்து நாட்களிலும் இதற்குத் தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் ஆகியவற்றை எட்டு திக்குகளிலும் இட்டு ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரத்தை 24/108/1008 முறைகள் ஓதித் துதித்து வந்தால் நில தோஷங்களும், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பில்லி, சூன்ய, மந்திர ஏவல், தகடுகளின் சூன்ய தோஷங்களும் முற்றிலும் அகலும்.

மேலும் விலங்குகளைப் புதைத்தல், நல்ல மரங்களை வெட்டுதல், கழிவு நீரைத் தேக்குதல், சூது, கேளிக்கைகள், தற்கொலை, ஆவி நடமாட்டங்கள் போன்ற பல விதமான பூமி சம்பந்தப்பட்ட சூன்யங்களுக்கும், தோஷங்களுக்கும் நிவர்த்தி தருவதாகவே இந்த பூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரம் வழிபாடு அமைந்துள்ளது. இச்சக்கரத்திற்குரிய பூஜையாக ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரத்தையும், ஏனைய ஸ்ரீவாஸ்து மந்திரங்களையும் கூட்டாக ஓதிட இதன் மகத்துவம், பூஜா சக்தி பல்கிப் பெருகுகின்றது. எனவே, இல்லத்தில்/கடையில் இதனை வெறுமனே மாட்டி வைத்திடாமல் தினந்தோறும் ஸ்ரீவாஸ்து காயத்ரீ மந்திரத்தை 12/24 முறையேனும் ஓதி வந்து இச்சக்கரத்தின் தெய்வீக சக்தியைப் பெருக்கி உங்களைப் பலவிதமான பூமி தோஷங்களிலிருந்து காத்துக் கொள்வீர்களாக! மொத்தத்தில் பலவிதமான நில தோஷங்களிலிருந்து உங்களைக் காக்கும் இரட்சையே இந்த ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரமாகும்.
ஸ்ரீவாஸ்து தேவமூர்த்தி காயத்ரீ மந்திரம்
“ஓம் பிருத்வி மூல தேவாய வித்மஹே பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ஈஸ்வரப் பிரசோதயாத்!”
ஸ்ரீபூலோக நாதர் மகாத்மியம்
நம்மை ஆளும் இறைவன் ஸ்ரீபூலோகநாதர் என்ற அரிய இறை திருநாமம் கொண்டு ஒரு சில இடங்களில் அருள்பாலிக்கின்றார். ஸ்ரீவாஸ்து சக்திகள் நிரம்பப் பெற்ற திவ்யமான லிங்க மூர்த்தி இவரே! ஸ்ரீவாஸ்து புருஷ தெய்வ மூர்த்தியின் தரிசனத்தைப் பெற முடியவில்லையே என்று ஏங்குவோருக்கு ஸ்ரீபூலோகநாதரின் திவ்ய தரிசனமே நல்வரங்களைப் பெற்றுத் தருவதாகும்.. ஸ்ரீவாலீஸ்வர மூர்த்தி, ஸ்ரீவாஞ்சிநாதன், ஸ்ரீமருந்தீஸ்வரர், ஸ்ரீஉலகநாதன், ஸ்ரீஒத்தாண்டேஸ்வரர், ஸ்ரீகைலாசநாதர் என சர்வேஸ்வரன் தான் எத்தனை எத்தனை திருநாமங்களைப் பூண்டு நமக்குப் பலவிதமான முறைகளில் அருள்பாலிக்கின்றார்.!
யாவரும் வணங்கும் ஸ்ரீபூலோகநாதர்
இவ்வகையில் ஸ்ரீபூலோக நாதரானவர் எட்டு திசைகளுக்குரிய அஷ்டதிக்கு தேவதா மூர்த்திகளாலும், அஷ்டதிக்கு கஜங்களாலும், குபேரன், இந்திரன், எமன், நிருதி, வாயு, வருணன், அக்னி, ஈசானர் ஆகிய எண்திசை தெய்வ மூர்த்திகளால் தினந்தோறும் வழிபடபடுகின்ற பூலோக மூர்த்தியாவார். பலவித காரணங்களுக்காகவும், அவதார லீலைகளுக்காகவும் பூலோகத்திற்கு வருகின்ற தெய்வ மூர்த்திகளாலும், மகரிஷிகளாலும், சித்புருஷர்களாலும், யோகியர்களாலும், வழிபடப்படுகின்ற மூர்த்தியே ஸ்ரீபூலோகநாதராவார். ஏதோ நம் பூமிக்கு மட்டும் உரியவர் என்று ஸ்ரீபூலோக நாதலிங்கத்தைப் பற்றி எண்ணிடாதீர்கள். எத்தனையோ கோடி பூலோகங்களுடன் எத்தனையோ கோடி சூரிய, சந்திர மூர்த்திகளும் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ளனர் அல்லவா! அனைத்திற்கும் அனைவர்க்கும் உரிய மூர்த்தி!
இராமாவதாரமோ, கிருஷ்ணாவதாரமோ எப்போதோ முடிந்து விட்டதாகக் கருதாதீர்கள். இன்றைக்கும் கோடிக்கணக்கான பூலோகங்களில் ஏதேனும் ஒன்றில் ஸ்ரீஇராமாவதாரம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, ஸ்ரீகிருஷ்ணாவதாரம் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது. சில பூமிகளில் திரேதாயுகம், சிலவற்றில் கிருதயுகம், சிலவற்றில் துவாபரயுகமும், நம் பூமியைப் போன்ற சிலவற்றில் கலியுகமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் நம் விஞ்ஞான அறிவிற்கு எட்டாத, அப்பாற்பட்ட மெய்ஞான அற்புதங்களாகும். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆழ்ந்த இறை நம்பிக்கையும், தக்க சற்குருவின் குரு கடாட்சமும், நிச்சயமாகத் தேவை. வெறும் ஏட்டுப் படிப்பு எதையும் காட்டாது! விண்ணிலுள்ள நட்சத்திரங்களில் ஒரு அணு அளவைக் கூட விஞ்ஞானத்தால் அறிய முடியவில்லை..
வீடு/பூமி பாக்யம் பெற : இதுவரைக்கும் வீடு பாக்கியம் அமையாதவர்களும், தக்க அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குமாக இடத்தைத் தேடிக் கொண்டிருப்போரும். இருக்கின்ற இல்லம் போதாதென நல்ல பெரிய புதிய வீடு அமைய வேண்டும் என்று காத்திருப்போரும் ஸ்ரீவாஸ்து பூஜையை முறையாக நிகழ்த்தி வருதல் வேண்டும்.. இதற்கு உதவுவதே ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கர பூஜையாகும். இவர்கள் இச்சக்கர வழிபாட்டை தினசரி பூஜையாக மேற்கொண்டு ஸ்ரீபூலோகநாதர் எழுந்தருளி உள்ள தலங்களில் குறிப்பாக செவ்வாய் கிழமையில் நில, வாகன, பூமி பாக்யத்தைத் தருகின்ற செவ்வாய் பகவானுக்கு உரித்தான செவ்வாய் ஹோரை நேரத்தில் ஸ்ரீபூலோகநாதருக்கும், அம்பிகைக்கும் தைலக் காப்பிட்டு கிழங்கு வகையாலான உணவுகளைப் படைத்து, அன்னதானம் செய்து வருவார்களேயானால் அவர்களுக்கு நன்முறையிலே பூமி பாக்யம் அமைந்திடும்.
ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் மேற்குறித்த விசேஷமான ஹோரை நேரங்களிலும், வாஸ்து நாட்களிலும் இதனை முறையாகச் செய்து வருதல் வேண்டும். இந்த ஸ்ரீவாஸ்து சக்கரத்திற்கு தினசரி பூஜையாக செவ்வாய் ஹோரை நேரத்தில் சந்தனமிட்டு வழிபடுவது சிறப்புடையதாகும்.. ஆமாம். ஸ்ரீபூலோகநாதர் ஆலயம் எங்கு இருக்குகின்றது? திருச்சி மாநகரிலே உள்ள மிக அற்புதமான பஞ்ச ஸ்தலக் கோவில்களில் ஒன்றாக விளங்குவதே ஸ்ரீபூலோகநாதர் ஆலயம் ஆகும்.. வாஸ்து பூஜைகளுக்கு உரித்தான மிகவும் அற்புதமான சிவாலயம்... ஸ்ரீவாஸ்து பூஜையை நிகழ்த்துவதற்கான அதியற்புதத் தலம்! பழமையான ஆலயம்! பரம்பொருட் சக்தி நிறைந்த திருத்தலம்! குறுந்த மரம், மகிழ மரம், அத்தி மரம், வில்வ மரம், வன்னி மரம் ஆகிய ஐந்து தெய்வீக விருட்சங்களைக் கொண்ட தலம்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்..!
பள்ளிச் சிறுவனாய் இருக்கும் போதே தம் சற்குருநாதராம் ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் குருகுலவாசம் பெறும் பேறு பெற்றவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் ஆவார். தெய்வீகச் சுவை ததும்பும் அமிர்தமயமான அவர்தம் குருகுலவாச அனுபூதிகளே இங்கு அடிமை கண்ட ஆனந்தச் சுடராய்ப் பரிமளிக்கின்றது.. சற்குருவின் அருளை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும் என்ற உத்வேகத்தை உணர்விக்கும் உன்னத இறைத் தொகை அனுபூதிகள்!!
அன்று வழக்கத்திற்கு மாறாகப் பெரியவர் பெருங்குதூகலத்துடன் இருந்தார்! ஏனென்றால் அன்று சிறுவனுக்கு கோலி மிட்டாய், பரோட்டா, பூரி கிழங்கு என்று அவன் எதையும் கேட்காமலேயே வாங்கித் தந்தார். சிறுவனுக்கு உள்ளூற கிலிதான்!
“ஏன் இந்தக் கொண்டாட்டமோ, பின்னால் எதுவும் இருக்குமோ?”
கடைசி வரையில் அதாவது பெரியவர் தன் உடலைத் தானாகவே மறைத்துக் கொண்ட வரையில் ஒரு terror  ஆகவே .. அதாவது .. “எந்த சமயத்தில் எதைச் சொல்வாரோ, எதைச் செய்வாரோ” என்ற பயத்தில் தான் சிறுவன் அவருடன் இருந்தான். என்னதான் இருந்தாலும் சிறுவன் தானே! தனக்கு வேண்டும் போதெல்லாம் மிகவும் பிடித்தமான விமுக்தி ஸ்வீட்ஸும், பரோட்டாவும் வாங்கித் தருபவர்தான் என்று மிகவும் சாதாரணமாக அவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.. கிரிவலம், அன்னதானம், தலயாத்திரை, கோயில் இறைப்பணி, ஹோமம், நாம சங்கீர்த்தன மஹிமை என அவர் அருளியபடி எத்தனையோ வகையான இறைப்பணிகளைச் செய்து வருகையில் தான் தம்முடன் கூட இருந்து வருவது அண்டசராசரத்தின் அருட்பெருஞ் சித்தரே, எளிய வடிவில் தன்னை சற்குருவாக ஆட்கொள்ள வந்திருக்கிறார் என்பதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினானோ இல்லையோ அன்று முதலே அவர் தன்னை மறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார். இன்னும் சொல்லப் போனால் என்று அவர் இவ்வாறு தன் தூல உடலை மறைத்துக் கொண்டார் என்பது mysterious ஆகவே சிறுவனுக்குத் தோன்றும்.. வெங்கடராமனாக மலர்ந்திருக்கும் குருமங்கள கந்தர்வாவிற்கு இன்றும் அவ்வாறாகத் தானோ தோன்றுகிறது!
ஏனென்றால், ஒரு முறை அங்காளிக்குள் அவர் ஐக்யமானதாக அவன் உணர்ந்த போது அவர்தம் பிரிவைத் தாங்காது அவன் வீறிட்டு அழுதான்! அதற்கு சமாதானமாக அவரே நேரில் வந்து ஆறுதல் சொன்னது போலிருந்தது.. எங்கோ? கொல்லி மலையில்! பின்னர் ஒரு முறை திருஅண்ணாமலை கிரிவலத்தில் திடீரென்று அவர் தன்னை விட்டுச் சென்று விட்டதாக உணர்ந்தான்! அங்கும் கிரிவலத்தில் முன்னால் செல்வது போல் தோன்றி மறைந்து விட்டார். இவ்வாறு மறைந்தும் மறையாது மறையோனாகவே இன்றளவும் என்றும் இறைமையில் வாழும் ஏகாந்த ஜோதியாய் உறைகின்றார்.
“ஏண்டா லீவு வுட்டுட்டாங்களே என்னடா செய்யப் போறேன்னு கேட்டா பேந்த பேந்த எதையோ நெனச்சுக்கிட்டு நிக்கிறியே!”
சிறுவன் தன் நிலைக்கு வந்தான்..
“என்ன வாத்யாரே! லீவு வுட்டா நீ தானே எங்கனாச்சும் கூட்டிக்கிட்டுப் போவ, இப்ப திடீர்னு என்னன்னு கேட்டா எப்படி?”
“ஏண்டா அடிக்கடி வெளியூர் போனா துட்டுதாண்டா செலவாகும்... அப்படி கோயில், கொளம்னு சுத்தினோமே நீ எதத்தான் ஞாபகம் வச்சுருக்க சொல்லு பார்க்கலாம்! அக்னி கச்ச சித்தர்னு ஒருத்தரைப் பத்திச் சொன்னேன். கீரபாண சித்தரைப் பத்திச் சொன்னேன்.. அவங்க எங்க இருக்காங்க சொல்லு பார்க்கலாம்.. இதாண்டா நம்ப தெய்வீகத்துல குவிஸ்ஸு!”
திடீரென்று பெரியவர் போட்ட குவிஸ்ஸில் (QUIZ)ல் சிறுவன் திடுக்கிட்டான்! என்னதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் அவனுக்கு எந்த நினைப்பும் வரவில்லை! சிறுவன் மிரண்டு விட்டான்!
“இதுகூடத் தெரியலையாடா”, என்று சொல்லி, “மூணு நாள் தண்ணி கூடக் குடிக்கக் கூடாது”, என்று தண்டனை கொடுத்தால் கூடப் பரவாயில்லை... ஆனால், “உனக்குத் தான் பத்துப் பதினஞ்சு நாள் லீவு இருக்கே, அக்னி கச்ச சித்தரையும், கீரபாண சித்தரையும் எந்தக் கோயில்ல இருக்காங்கன்னு கண்டுபிடிச் சுட்டு வான்னு”, சொல்லிவிட்டால் என்ன செய்வது? Perhaps the solution is more intriguing than the problem itself!  சிறுவனுக்குத் தலை சுற்றியது!
“இன்று என்ன நமக்கு சந்திராஷ்டம தினமா? ஏடாகூடமாக மாட்டிக் கொண்டு விட்டோமே?”..
பெரியவர் சீறினார்... “ஏண்டா ஒரு நல்ல விஷயத்த ஞாபகம் வச்சுக்க முடியலையே, இதுக்கு ஏண்டா சந்திராஷ்டமத்தை லிங்க் (link) பண்ணிக்கிறே!”
“சரி! சரி, போய் நல்லா யோசிச்சுப் பாத்துட்டு யாராச்சும் ஒரு சித்தரையாச்சும் தரிசனம் பண்ணிட்டு நாளைக்குக் காலைல மூணு மணிக்கு இங்க வந்துடு!”
சிறுவன் விட்டானே சவாரி!
“இன்னும் கொஞ்சம் நின்றால் என்னென்ன கூடுதலாக, வேறென்ன சேர்ப்பாரோ தெரியவில்லையே?” என்ற பயம் தான்...
“உனக்கு ஞானம் பொறக்கணும்னா எதையும் நல்லா ஞாபகம் வச்சுக்கற சக்தி வேணும்னா ஞான சரஸ்வதிய தியானம் பண்ணு, அப்பத்தாண்டா இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூணையும் தெரிஞ்சு கிட்டு இருக்கற தீர்க தரிசனம் கெடைக்கும்... இதுக்குத் தாண்டா ஞானசரஸ்வதியைக் கும்பிடணும்.. இந்த அம்பாள் எங்க இருக்கா தெரியுமா...”
பெரியவர் கேட்கு முன்னேயே பட்டென்று விடையளித்தான் சிறுவன்.... “சுருட்டப் பள்ளில வாத்யாரே!”
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் சுரட்டப்பள்ளி உள்ளது.. அபூர்வமாக, அதிசயமாக சுதை ரூபத்தில் ஸ்ரீரங்கநாதர் போல சயனக் கோலத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கின்றார்.. பெரும்பாலும் ஸ்ரீபிரம்மா, தட்சிணாமூர்த்தி உட்பட அனைவரும் இங்கு தம் பத்னி தேவி மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் அற்புதத் தலம்!
பெரியவர் அவனைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த சிறுவனுக்கு.. அவன் காதுகளைப் பிடித்து திருகி ..”ஏண்டா முன்னாடியே நாலு கையோட தெய்வம் வந்து நின்னாக்கூட உனக்குக் கண்ணு தெரியாதுடா...”

ஸ்ரீஞானசரஸ்வதி கோயம்பேடு

பெரியவர் காதைத் திருகியது.. நெற்றிக்குள் உள்தலைப்பகுதியில் ஏதோ சொட்டியது போல் தோன்றியது சிறுவனுக்கு... ஞானத் தேன் சொட்டோ! ஏனென்றால் மூளை விரிந்து, பெருகி, பெரிதாகி, விருத்தியாகி அறிவு மலர்ந்தாற் போல் ஒரு பாவனை! எதிரே பார்த்தான்.. கண்ணைக் கசக்கிப் பார்த்தான் சிறுவன்..! அவர்கள் அன்று வந்திருந்தது சென்னை அருகே கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயத்திற்கு! மூலவருக்கு அடுத்த பிரகாரத்தில் மிகவும் இருட்டாக இருந்தமையால் அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீஞான சரஸ்வதியை (கையில் வீணையில்லாது அருள்பாலிக்கின்ற அபூர்வ மூர்த்தி) அப்போது தான் தரிசித்தான் சிறுவன் பெரியவர் கூட்டிய ஞான ஒளியில்!
அடுத்த நாளிலிருந்து சிறுவனுக்கு அரையாண்டு விடுமுறை! எல்லா பிள்ளைகளுக்கும் உள்ள குஷி. இதில் சிறுவனுக்கும் உண்டு என்றாலும் விசேஷமான சந்தோஷமும் ஒன்றுண்டு.. ஏனென்றால் இந்த மாதிரி விடுமுறை என்றால் தான் பெரியவருடன் நாள் கணக்கில் திருஅண்ணாமலை, பர்வத மலை, போன்ற கிரிவலப் பகுதிகள், பொதியமலை, துவாரகா... எனப் பல திருத்தலங்களுக்கும் இட்டுச் செல்வார்!....
எப்படி? வெளிப் பார்வைக்குத்தான் ரயில் பிரயாணம் போல் தோன்றும்! எப்படி, எங்கே, எவ்வாறு டிக்கட் வாங்குகிறார் என்பது தேவரகசியம்! ஆனால் டிக்கட்டும் கையுமாகவும் தான் எப்போதும் இருப்பார்! TTRஇடம் ரொம்ப பவ்யமாக டிக்கட்டை நீட்டுவார்! அக்காலத்தில் வாரம் ஒரு முறையோ இருமுறைதான் டெல்லி, மும்பை, கல்கத்தாவிற்கு டிரெயின் இருக்கும்...
ஒரு முறை இப்படித்தான்.. காசிக்குப் போவதற்காக ராமேஸ்வரம் போய் தனுஷ்கோடியில் மண்ணெடுத்து... இரவில் டிரெயினில் ஏறிப் படுத்ததுதான் தெரியும், எழுந்து பார்த்தால் நாக்பூர் ஸ்டேஷன் பிளாட்பாரம்... எங்கு ஏறினான்.. இறங்கினான் இறைவனுக்கே வெளிச்சம்! “ஏண்டா அடிச்சுப் போட்ட மாதிரியா தூங்குவாங்க..., அங்கங்க உன்னை ஏத்தி இறக்கி, பிராட்கேஜ் மீட்டர் கேஜ்னு மாத்தி மாத்தித் தூக்கித் தோளெல்லாம் வலிக்குதுடா...!”  எங்கோ பார்த்தவாறு பெரியவர் கூறிட... சிறுவன் குறும்புடன்... “அதெப்படி வாத்யாரே, மெட்ராஸ், விஜயவாடா வராம நேரே டிரெயின் ராமேஸ்வரத்துலேந்து நாக்பூருக்கு வந்துடிச்சு!” என்று கேட்டிட,, “ஏண்டா பூரி-கிழங்கு வேணுமா, இல்லாட்டி மொத்த மொத்தயா பெரிய அரிசிச் சோறு சாப்பிடறியா! நாக்பூர் சந்த்ரா..... அதுதாண்டா இங்கு ஆரஞ்சு ரொம்ப விசேஷம்டா...” என்று ஏதேதோ சொல்லி பேச்சை மாற்றி விடுவார்... எந்த சித்தியையும், அற்புதத்தையும் துளியும் வெளிக்காட்டாது இயற்கையுடன் இணைப்பது அவருடைய கைவந்த கலைகளுள் ஒன்று! சித்தருக்கு இது “மெத்த கடினம் இல்லையே!” .... “இப்படியெல்லாம் ஏதேதோ பண்ணி டிரெயினெல்லாம் மாத்தி..... என்னென்னவோ பண்றியே, மெட்ராஸ்லேந்து திருஅண்ணாமலைக்கு மட்டும் பொட்ட வெயில்லே நடத்திக் கூட்டிக் கிட்டுப் போறியே இது நியாயமா? அதுலயும் பஸ் உள்ளாற தூங்க வச்சு, எழுந்திருச்சா திருஅண்ணாமலை வர்றமாறி பண்ணினா என்னவாம்?” சிறுவன் ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து சற்று சூடாகவே அன்று கேட்டு விட்டான் ஒரு மாதிரியாக!
“ஸ்ஸ்ஸ்...... சித்தி, கித்தியெல்லாம் ஒரு துளியும் பண்ணக் கூடாதுடா! எனக்கு அது தெரியவும் தெரியாதுடா! பூலோகத்துல சித்தி பண்ணினாக்க மேலோகத்துல வச்சு நாலு சாத்து சாத்தி இந்தா பிடி சாபம்னு சொல்லி ஒரு கோடி பிறவின்னு பனிஷ்மெண்ட்டு கொடுத்தாக்க எவண்டா இங்க லோல்படறது? அன்னதானம், ஹோமம், அது இதுன்னு சேவை நெறய செய்யறேன்னு வச்சுக்கோ சின்ன சின்ன சித்தியெல்லாம் தானாகவே நெறய வந்து சேரும்.... உன்னோட புண்ய சக்திக்கு தெய்வீக சக்திக்குக் கட்டுப்பட்டு ஆயிரமாயிரம் தேவதைங்க உன்ன சுத்திக்கிட்டு நிக்கும்! சாமீ இதச் செய்யட்டுமா, அது செஞ்சு தரட்டுமா, இந்த பிள்ளையார அங்க கொண்டே வக்கட்டுமா, இந்த தேங்காயை மறச்சு வேற எங்கனாச்சும் எடுத்துத் தரட்டுமா! அந்த அரிசிப் பானைக்குள்ள இந்த பழத்தைக் கொண்டு போய் வக்கட்டுமான்னு. எக்கச்சக்கமா தேவதைகங்க கிட்டேந்து கொரீஸ் (QUERIES) வரும்டா! ஆனா இந்த மாயைல சிக்காம வெளில வர்றது பெரிய விஷயம்டா! இந்த மாதிரி சித்தி விஷயங்கள்ல மாட்டிகிட்ட வெளில வர்றது கஷ்டம்டா! நல்லா வாரி விட்டுடும்! ”
எவ்வளவு எளிமையான தாந்த்ரீக யோகப் பாடங்கள்!
சமீபத்தில் கேதார்நாத்தில், அன்றைய சிறுவனாம் இன்றைய குருமங்கள கந்தர்வா வெங்கடராமனுக்கு, சபரிமலை மகரஜோதி போல் கேதார்நாத்தில் மாலையில் தோன்றும் “ஆதிமூல கேதார்நாத் ஜோதி” தரிசனம் கிட்டிய போது சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் ஆங்கே புனிதமான மந்தாகினி நதிக் கரையில், “இந்த மாதிரி எந்த சித்தி மாயையிலும் சிக்காம, சற்குரு காட்டற நல்ல பாதைல சற்குருவா பரிபாலனம் பண்றதுக்கு ரொம்ப பாக்யம் பண்ணியிருக்கணும், அதுக்கு இந்த கேதார ஜோதி ரொம்ப அனுக்ரஹம் பண்ணும், எல்லாம் வல்ல கேதார்நாதரோட கருணை தான் அது!” என்று சூட்சுமமாக அருள்வாக்கு நல்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆமா அய்யாவுக்கு நாளைலேந்து லீவா! ஜாலிதான்! ஆமா, என்ன சார் புரொக்ராம் வச்சுருக்கீங்க!.. பெரியவர் திடீரென்று “சார்”, “வாங்க ஐயா”, என்று மிகவும் மரியாதையுடன் அதுவும் அழுத்தந் திருத்தமாகப் பேசுகின்றார் என்றாலே பையனுக்கு கிலிதான்..!
ஏனென்றால், “நீ பெரிய குற்றத்தைச் செய்து விட்டாய், அடி, உதை, தண்டனைக்குத் தயாராக இரு!” என்பதே, இந்த முதல் மரியாதையின் முதற்பொருள்! மேலும் சிறுவன் பெரியவரைப் பார்த்து இரண்டு மூன்று நாட்களாகி விட்டன.
“இத பார்டா கொஞ்சம் வெளியூரு போறேன் அப்பப்ப அங்காளி கோயில்ல கொஞ்சம் எட்டிப் பாத்து, இந்த கிழவன் இங்க உக்காந்திருக்கானான்னு வந்து பார்த்துட்டுப் போ!” என்று தூணுக்குப் பின்னால் சென்றவர் மாயமாய் மறைந்து விட்டார்!
என்ன இருந்தாலும் தினமும் பெரியவரைப் பார்க்கா விட்டால் சிறுவனுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது! எதையோ பறிகொடுத்தவன் போல் சிறுவன் இங்கும், அங்குமாய் அலைந்து திரிவான்! ஆனால் எங்கிருந்து வருகிறார், போகிறார், யாரறிவார் பராபரமே!
“இந்த உடம்பு மேல அட்டாச்மெண்ட் ரொம்ப வச்சுக்காதேடா! இப்ப உன்னோட சுத்திக்கிட்டு இருக்கற இந்த உடம்பு திடீர்னு காணாமப் போயிடும்.. அந்த மாதிரி வரதுக்கு முன்னாடி நீ தெய்வீகத்துல நல்லா டெவலப் ஆகணும்டா! நீ நெறயப் பேருக்கு நல்ல வழி காட்டணும்னு உன் தலைல எழுதிருக்கே என்ன செய்யறது! அதுல ஆயிரத்தெட்டு கஷ்டம் வரும், போகும்! இதுதாண்டா தெய்வீகம், ராமாயணத்துல ராமருக்கு வராத சோதனையா, வேதனையா? அவர நெனச்சுக்கிட்டு குருவை கெட்டியா புடிச்சுக்கிட்டு நீயும் கரையேறி மத்தவங்களையும் கரையேத்தற வழியச் சொல்லிக் கொடு!”

குபேர குப்த சாகர பௌர்ணமி

குபேர ஸாகர பௌர்ணமியாக விளங்குவதே பிரமாதி வருட ஆனி மாத பௌர்ணமியாகும்..! குபேர பகவானுடைய தணிப்பெரும் வாகனமே மனித வாகனம். வேறு எந்த தெய்வமூர்த்திக்கும் இல்லாத ஒரு விசேஷமான அம்சமாகும் இது.. சூட்சும ரூபத்தில் ஸ்ரீகுபேர பகவான் கிரிவலம் வந்து ஐஸ்வர்ய கடாட்சத்தைத் தந்தருளும் அற்புதப் பௌர்ணமி திதி. வறுமையில் உழல்வோர்க்கும் தரித்திர நிலையில் இருப்போருக்கும் நிவாரணத்தைத் தரும் சிறப்பான பௌர்ணமி திதி.
ஒவ்வொரு வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமிக்கும் பல விசேஷமான சக்திகள் உண்டு. ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் குருவாய் மொழியாய் அளித்து வருவது போல இன்றைக்கும் எந்நாளும், எந்நேரத்திலும், யாரேனும், ஒருவரேனும் அருணாசல தெய்வ பூமியை கிரிவலம் வந்த வண்ணமாகத்தான் இருக்கின்றார்கள். இதனை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம்.. இதுவே இறைலீலை! தெய்வீக அற்புதம்! யோகியர்களும், மகான்களும் எப்போதும், எந்நேரமும் தரிசிக்கின்ற பிரபஞ்சத்தின் முதன்மையான இறைத்தலமாக திருஅண்ணாமலை இருப்பதால் இங்கு சித்தர்களின் நடமாட்டம் இல்லாத நேரமே கிடையாது..
இவ்வாறாக ஒவ்வொரு பௌர்ணமியிலும் கோடானு கோடி தேவர்களும், தெய்வ மூர்த்திகளும், அம்பிகையின் அவதார அம்சங்களும், கந்தர்வர்களும், கிம்புருடர்களும், இன்னும் பலர் சூட்சும வடிவுகளிலும் என்றைக்கும் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்ற திருத்தலமே திருஅண்ணாமலைத் திருத்தல பூமியாகும்.. இந்த நேரம்தான், இந்த நாள்தான் கிரிவலத்திற்குச் சிறப்புடையது என்று சொல்ல முடியாத வண்ணம் எந்நாளுமே கிரிவலத்திற்கு விசேஷமானதே என்று சித்தர்கள் பகர்கின்ற இறைத்தலமே அருணாசல தெய்வ பூமி! திருஅண்ணாமலையே பிரபஞ்சத்தின் கோடானு கோடி வாசிகளுக்கும் எந்நேரமும், எந்நாளிலும் கிரிவல வழிபாட்டிற்கு உரித்தானதாக இத்தலம் விளங்குகின்றது. இதுவே பிரபஞ்சத்தின் தெய்வீக மையம்.. (Spiritual Epic Centre) பூவுலகின் புனிதச் சுடர்ப் பாதம்! விண்ணுலகின் இறைத் திருவலையம் (Celestial Net)!
இராகு காலம், எமகண்டம், அர்த்தப் பிரகரணன், சூன்ய திதி நாளான கூடாநாள் போன்ற அனைத்துமே இறை வழிபாடுகளுக்கு நிச்சயமாக உகந்த நேரங்களே ஆகும்.. எந்நேரம் தான் இறைவனுக்கு உவப்பில்லாதது? உதாரணமாக, இராகு காலம் என்றால் இராகு பகவான் ப்ரீதியுடன், மிகுந்த சக்தியுடன் விளங்குகின்ற நேரமாக விளங்குவதால் இராகு காலத்தில் ஸ்ரீஇராகு பகவானுக்கோ அல்லது ராகு கிரஹ அதி தேவதையான ஸ்ரீதுர்க்கைக்கோ பூஜை செய்வது மிகவும் அபரிமிதமான பலன்களைத் தந்தருள்கின்றது அல்லவா! எனவே, சுப காரியங்களுக்கு ஏற்றவை அல்ல என்று எவை கருதப்படுகின்றனவோ அவையாவும் அந்தந்த குறித்த மூர்த்திகளுக்கு உரித்தான மிகச் சிறந்த வழிபாட்டு நேரங்களாக அமைந்துள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்!
இராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கை தேவியையும், ஸ்ரீஇராகு பகவானையும் எமகண்ட நேரத்தில் ஸ்ரீஎமபகவானையும், அர்த்தப் பிரகரண நேரத்தில் ஸ்ரீகால பைரவரையும், ஸ்ரீவடுகநாதரையும் மற்றும் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியையும் வழிபட்டு வந்தால் தான் கால தோஷங்களுக்கான நிவர்த்தியை நாம் பெற முடியும். இவ்வாறு செய்து வந்தால்தான் அகால மரணம், துர்மரணம், விபத்துக்களால் ஏற்படும் சேதங்கள், விஷக்கடி துன்பங்கள், பெரிய காரியத் தடங்கல்கள் தாங்க இயலாத நஷ்டங்கள் போன்றவற்றையெல்லாம் நம் கர்மவினைகளாக ஏற்று அவற்றிற்கான தக்க நிவர்த்திகளைப் பெற்றிடலாம்.. காலா காலங்களில் நாம் செய்ய வேண்டிய பூஜைகளை நாம் செய்யாது இருப்பதால் தான் இத்தகைய கால தோஷங்கள் நமக்கு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, இராகு காலம், எமகண்டம், அர்த்த பிரகரணன் நேர பூஜைகள் போன்றவை யாவும் கால தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய அற்புதமான பூஜை நேரம் என்பதை உணர்ந்திடுக. எனவே, ஆயுள் என்பது பெறுதற்கரிய செல்வம்! அதனை விரயம் செய்யாது காலத்தைப் படைத்த கால பைரவருக்கே நற்காரியங்களை அர்ப்பணித்திட வேண்டும்..
குபேர சம்பத்து : நம்முடைய ஆயுளைக் கூட செல்வம் என்று தான் குறிப்பிடுகின்றார்கள் அல்லவா! கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற இல்லறப் பெண்மணியின் சுமங்கலித்வம் கூடப் பெறுதற்கரிய ஒரு அற்புதமான ஐஸ்வர்யமே! குழந்தைகளைக் கூட மக்கள் செல்வம் என்றுதானே விளிக்கின்றோம். எனவே, “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று சொல்கின்ற பொழுது மூலச் செல்வங்களான இந்த பதினாறு செல்வங்களைக் காட்டிலும் இன்றும் எத்தனையோ வகையான செல்வங்களை நமக்கு ஸ்ரீகுபேர மூர்த்தி அருளக் காத்திருக்கின்றார் என்பதை உணர்ந்திடலாம். கோடி கோடியாய்ப் பணத்தில் புரண்டால் மட்டும் செல்வமாகி விடுமா! எத்தனை கோடீஸ்வரர்கள், ஒரு தம்ளர் காபியைக் கூட அருந்த முடியாமல் சர்க்கரை வியாதியால் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எனவே நிரந்தரமான செல்வம் எது என்பதை நன்கு தெய்வீக பூர்வமாக அனுபவித்தே உணர்ந்து கொள்ளுங்கள்.. எங்கும் செல்லாது நம்மிடம் நிரந்தரமாகத் தங்குகின்ற செல்வமே குருவருள் கூடிய திருவருள்!
ஸ்ரீகுபேர மூர்த்தியினுடைய விசேஷமான வாகனத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? ஒவ்வொரு மூர்த்திக்கும் விதவிதமான வாகனங்கள் உண்டு. ஸ்ரீமுருகப் பெருமான் மயில் வாகனத்தில் மட்டும் அல்லாது கோழி வாகனம் கொண்டும், யானை வாகனம் கொண்டும் அருள்பாலிக்கின்றார் அல்லவா! இதைப் போல ஸ்ரீகுபேரமூர்த்திக்குப் பிரதானமான வாகனமாக அமைவது மானுஷ வாகனம் எனப்படும் மனித வாகனமாகும்.. எவ்வாறு தாய், தந்தையர்கள் குழந்தைகளைத் தங்கள் தோள்களில் தூக்கி கொஞ்சி குலாவி மகிழ்கின்றார்களோ அதே போல தமக்கு மக்கட் செல்வத்தைத் தந்த ஸ்ரீகுபேர மூர்த்தியை அருந்தவத்திற்குரிய பெற்றோர்கள் தங்கள் தோள்களில் சுமந்து பரமானந்தம் அடைகின்றனர். மக்கள் செல்வத்தைத் தருவது ஸ்ரீகுபேர மூர்த்தியா? ஸ்ரீசந்தான லக்ஷ்மியா? அல்லது பித்ருக்களின் ஆசீர்வாதமா? இவை அனைத்தும் திரண்டு பூர்வஜென்மப் புண்ணிய சக்தியாகக் கிடைப்பதுதான் மக்கள் செல்வம் ஆகும்.

ஸ்ரீகுபேரலிங்கம் திருஆனைக்காவல்

மக்கட் செல்வமே மகத்தான செல்வம்!
ஸ்ரீகுபேர மூர்த்தியானவர் மக்கள் செல்வத்தையும் தருகின்ற மகத்தான தெய்வமூர்த்தியாவார். இன்றைக்கும் சில ஸ்தலங்களில் குபேரலிங்கம் என்ற அற்புதமான மூர்த்தி உண்டு. மக்கள் செல்வத்தையுந் தரவல்ல ஈஸ்வர மூர்த்தி. எங்கெல்லாம் குபேரலிங்கமாக சர்வேஸ்வரன் எழுந்தருளியுள்ளாரோ அங்கெல்லாம் ஸ்ரீகுபேர மூர்த்தி இவ்வரிய ஸ்ரீகுபேரலிங்க ஈஸ்வரனை தினந்தோறும் வழிபடுகின்றார் என்பது தெய்வீக ரகசியமாகும்.. அதாவது ஸ்ரீகுபேர மூர்த்தியால் தினந்தோறும் வழிபடப்படுகின்ற ஸ்ரீகுபேரலிங்க ஈஸ்வர மூர்த்திக்கு உரித்தான சில வழிபாடுகளை அனுஷ நட்சத்திர நாட்களில் மேற்கொண்டு வந்தால் தார்மீகமான குபேர சம்பத்திற்கான நல்வழிகளைக் காண்பதோடு வியாபாரத்தில் ஏற்படுகின்ற பெருத்த நஷ்டங்களுக்கும் தக்க தீர்வு கிட்டும். ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உரித்தான அனுஷ நட்சத்திர நாளன்றும் செல்வம் தரும் சுக்கிர பகவானுக்கு உரித்தான வெள்ளிக்கிழமை அன்றும், சுக்ர ஹோரை நேரத்தில் வெறும் வில்வம் சேர்ந்த நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருந்து வில்வ தளங்களால் ஸ்ரீகுபேர லிங்கத்தை அர்ச்சித்து ஸ்ரீமகா லக்ஷ்மிக்குப் ப்ரீதியான சர்க்கரைப் பொங்கலைப் படைத்து ஏழைகளுக்குத் தானம் செய்து வந்தால் மக்கள் செல்வம் நன்கு பூரித்து பிள்ளைகளும் நன்முறையில் நல்லொழுக்கத்துடன் வளர்ந்து வாழ்க்கையில் சிறப்படைவர்.. திருச்சி அருகே திருஆனைக்கோயிலில் ஸ்ரீஆதிஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்... (இங்கு பெரிய கோவிலுக்குப் பின்புறம் உள்ள ஆலயம்) ஸ்ரீகுபேர லிங்க மூர்த்தி அருள்பாலிக்கின்றார்.. இந்த ஸ்ரீகுபேர லிங்கத்திற்கு மேற்கண்ட முறையில் பூஜைகள் செய்து நற்பலன்களை அடைவீர்களாக! ஸ்ரீகுபேர மூர்த்தியே திருஅண்ணாமலையை வலம் வருகின்ற சிறப்பான நாட்களும் உண்டு.. அவற்றுள் ஒன்று தான் ஆனி மாதப் பௌர்ணமி தினமான பில்வ த்ரிராத்ரி விரதம் கூடும் பௌர்ணமியாகும். வில்வார்ச்சனையில் பலவிதமான தெய்வீக இரகசியங்கள் உண்டு.. ஸ்ரீகுபேரமூர்த்தி அத்தகைய வழிபாட்டு முறை இரகசியங்களை தம்முடைய இஷ்ட தெய்வமாகிய ஸ்ரீமகாலக்ஷ்மி அம்பிகையிடமிருந்துதான் பெற்றார்..
எப்போதும் வில்வ தளத்தில் உறைகின்ற தேவியே ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியாவாள். பில்வ த்ரிராத்ரி விரத தினத்தன்று பாக்கியம் உள்ளோருக்கு தரிசனம் கிட்டும் வகையில் ஸ்ரீகுபேரமூர்த்தி சூட்சும வடிவிலும் ஸ்தூல சரீரம் ஏற்றும் திருஅருணாசல பூமியை கிரிவலம் வருகின்றார். இவ்வாறாக, எண்ணற்ற கோடனு கோடி தேவாதி தேவர்களும், தெய்வமூர்த்திகளும் அன்றும், இன்றும், என்றும், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழ்கின்ற திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. எனவே, பில்வ த்ரிராத்ரி விரதம் கூடும் இந்த ஆனிப் பௌர்ணமி தினத்தன்று ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தம்முடைய தோளில் சுமந்து கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.. இயற்கை ரீதியான காரணங்களைத் தவிர இயன்ற அளவு இன்று கிரிவல நேரம் முழுவதும் குழந்தைகளைத் தாங்கி இருப்பது மிகவும் விசேஷமானதாகும். மானுட வாகனத்தில் பிருங்க தேவரின் தோளில் அமர்ந்து ஸ்ரீகுபேர மூர்த்தி ஜகத் ஜோதியாய் சூட்சும தரிசனம் தருகின்ற திருநாள் இது. மக்கள் செல்வத்திற்கு அருள்பாலிக்கின்ற மகத்தான ஸ்ரீசந்தான  சற்குண குபேர மூர்த்தியானவர் இன்று தம்முடைய குழந்தைகளைச் சுமந்து கொண்டு கிரிவலம் வருவோர்க்கு அருள்பாலிக்கின்றார்....
குழந்தைப் பேறு இல்லாதோர்க்கு.... இன்றைக்கு எத்தனையோ இல்லறப் பெண்மணிகள் தங்களுக்குக் குழந்தைச் செல்வம் கிட்டவில்லையே என்று ஏங்குகின்றார்கள்.. எத்தனையோ பரிகாரங்களைச் செய்தும், திருத்தல யாத்திரகளை மேற்கொண்டும், விரதங்கள் பூண்டும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் தங்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டவில்லையே என்பது பலருக்கும் பெரும் மன வருத்தமாகும்.. இதற்கு என்னதான் சமாதானங்கள் சொல்லிடினும், இதற்குரிய தகுந்த ஆன்மீக உண்மைகளை விளக்கினாலும் மனம் ஏற்காது.. இத்தகைய வேதனைகளைச் சுமந்து கொண்டு வாழ்வோர் எத்தனை எத்தனையோ!

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை

இவ்வாறாக குழந்தை பாக்கியம் வேண்டுவோரும், மக்கட்செல்வத்தைப் பெற்றிருந்தாலும், பலவிதமான தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டு, சீரற்ற வாழ்க்கைப் பாதையை நோக்கிச் செல்கின்ற தம்முடைய பிள்ளைகளைத் திருத்துவதற்கும், இன்று ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தங்களுடைய தோள்களில் தாங்கி இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலால் தக்க பரிகார, நல்வழிகளைப் பெற்றிடலாம்.. நல்வழி என்றால் நம்முடைய பிரார்த்தனைகளை எல்லாம் இறைவன் அப்படியே ஏற்று அனுகிரகம் செய்திடல் வேண்டும் என்று எண்ணாதீர்கள்.. எது நமக்கு உகந்தது என்று இறைவனே நமக்கு அறிவான்! நம்முடைய பிரார்த்தனைகளுக்கெல்லாம் இறைவன் செவி சாய்ப்பானேயானால் இந்த உலக வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும்! ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொருவருடைய மனதிலும் கோடிக்கணக்கான ஆசைகளும், விருப்பங்களும், பேராசைகளும், பின்னிப் பிணைந்து கொட்டிக் கிடக்கின்றன.. இவற்றில் எது நமக்கு ஏற்றதோ, நல்லதைச் செய்யுமோ அதைத்தான் இறைவன் அனுகிரகமாக, நல்வரமாகத் தருகின்றான் என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஐந்து வயதிற்கு உட்பட்ட வயது வரம்பில் குழந்தைகள் இல்லையென்றால் பேரன், பேத்திகளைச் சுமந்து வந்திடலாம். உற்றம், சுற்றம், நட்பு என அவர்களுடைய முன் அனுமதி பெற்று அவர்களுடைய குழந்தைகளையும் தோள்களில் சுமந்து வருகின்ற நல்வாய்ப்பைப் பெற்றிடுங்கள். பிறருடைய குழந்தையாக இருந்தால் மிகுந்த கவனத்துடன், பெற்றோர்களுடைய, பெரியோர்களுடைய முன் அனுமதியையும், நல்லாசிகளையும் பெற்று இறைவனை வேண்டி வலம் வந்திடுக! ஆனால் அனைவருக்குமே இந்த நியதிகள் கைகூடி வருமா? இந்த நியதிகளுக்குள், இந்த கட்டுப்பாட்டுக்குள் வர இயலாதவர்கள் என் செய்வது? இவர்களுக்கு என உரித்தான சில திருத்தலங்கள் உண்டு.. அக்கோயில்களிலேயேனும் பில்வ த்ரிராத்ரி விரதத்தை நன்முறையில் கடைபிடித்து பெறுதற்கரிய இப்பௌர்ணமி தினத்தை மிகவும் சிறப்புடன் கொண்டாடிட வேண்டும்.. பில்வ திரிராத்ரி விரததிற்கான விசேஷமான திருக்கோயில்கள் : ஸ்ரீகுபேரனும், வில்வ மர தேவதா மூர்த்தியும் பூஜித்த தலங்களாகும், ஸ்ரீகுபேர லிங்கம் உள்ள ஆலயங்களும், வில்வ திரிராத்ரி விரத பூஜைக்கு ஏற்ற கோயில்களாகும். உதாரணம் :- மானாமதுரை சிவாலயம், அச்சுத மங்கலம், கும்பகோணம் அருகே திருவைகாவூர், மதுரை – காரைக்குடி இடையிலுள்ள திருப்பத்தூர் ஸ்ரீ ஸ்ரீதளிநாதர் ஆலயம்..
பில்வ த்ரிராத்ரி விரத பூஜா பலன்கள்
மேற்கண்ட முறையில் உண்மையாக பக்தி நெறியுடன் விரதமிருந்து பில்வ த்ரிராத்ரி விரத தினத்தன்று தம்முடைய தோள்களிலே ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தாங்கி  இன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் கிட்டுகின்ற பலாபலன்களாவன...
1. மக்கள் செல்வம் என்பது செல்வங்களுள் மிகவும் தலையானதாகும்.. எனவே குழந்தை பாக்கியம் இல்லாதோர் இந்த பில்வ த்ரிராத்ரி விரதத்தைத் தக்க நியதியுடன் கைக்கொண்டு இங்கு கிரிவலம் வந்திட இறையருளால் அவர்களுக்கு எது நன்மையோ அது நிச்சயமாக நடக்கும்... நம் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அனைத்தையும் இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்திடக் கற்றுக் கொள்ளுங்கள்! இதுவே உண்மையான தெய்வீக வாழ்வு!
அனைத்திற்கும் காரண, காரியம் உண்டு!
குழந்தை பாக்யம் இல்லாதோருக்கு ஒரேயொரு அறிவுரை, ஒரு மகானுடைய பரமபக்தராக இருந்தவருக்குக் குழந்தைகள் கிடையாது.. பல ஆண்டுகளாக அந்த மகானுடன் சிறப்புடன் இறைப்பணி புரிந்த அத்தொண்டர் ஒரு நாள் மகானிடம், “சுவாமி! எனக்கு இறைவன் பிள்ளைச் செல்வம் தராதது பற்றி அடியேன் வருந்திடவில்லை. ஆனால் எனக்கு ஏன் இக்குறையை ஆண்டவன் வைத்துள்ளான் என்பதை மட்டும் அடியேன் அறிந்து கொள்ளலாமா...!”என்று மிகவும் பணிவன்புடன் வினவினார்.
வயது முதிர்ந்த நிலையிலே அத்தொண்டர் கேட்டமைக்குச் அம்மகான், “உன் நன்மைக்காகவே!  நீ கேட்டபடிதான் உனக்கு இறைவன் தந்துள்ளான்..! உன்னுடைய கடந்த பிறவியிலே நீ நிறைய பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்வதற்குள் உனக்குப் போதும், போதும்,  என்றாகி விட்டது.. எனவே அப்பிறவியில் உன்னுடைய கடைசிப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த பொழுது நீ இங்கு வந்து இறைவா! நீ எனக்கு பெண் பிள்ளைகளை அளித்தது போதும், இனி எப்பிறவியிலும் எனக்கு எக்குழந்தையும் வேண்டாம். என்று உன்னையும் அறியாமல் உள்ளன்புடன் வேண்டி விட்டாய். அதன் பயனைத்தான் இன்று நீ அனுபவித்துக் கொண்டு இருக்கின்றாய்... ”, என்று பரிவன்புடன் பிறவி இரகசியத்தை அவருக்கு வெளிப்படுத்தினார்.
எனவே, நாம் வேண்டியது நமக்கு வருகிறது.. ! எனவே வேண்டுதல் வேண்டா!!
இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைச் செல்வம் இருப்பவர்களோ, இல்லாதவர்களோ இருவருக்குமே பொதுவான இறை நியதி ஒன்றுதான்.. உங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே, எனவே, ஆண்டவனிடம் நியாயமான பிரார்த்தனைகளை வைப்பதில் தவறு கிடையாது... ஆனால் அவை நிறைவேறுகின்றதா, இல்லையா என்று எண்ணாது வருவதை, நடப்பதை இறைவனுடைய இனிய முடிவாக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்..!
2. மக்கட் செல்வம் இல்லை என்று வருந்துவோர் பலர் இருக்க நிறைய மக்களைப் பெற்றுவிட்டு அவர்களைக் கரையேற்ற முடியாமல் திணறுவோரும் உண்டு. சில குழந்தைகளைப் பெற்றாலும் அவர்களும் நல்லொழுக்கத்தில் வாழாது ஏதேதோ தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டு அதர்மமப் பாதையில் செல்வதைப் பார்த்து வேதனை அடைகின்ற பெற்றோர்கள் ஏராளம்.. இவர்களும் மேற்கொண்ட முறையிலே ஆனிப் பௌர்ணமியன்று கிரிவலம் வருவார்களேயானால் அருணாசல பெருமானின் திருஅருளால் தம் மக்கள் திருந்தி நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்குத் தக்க நல்வழிகளைப் பெறலாம்...
3. தம்முடைய பெற்றோர்களுக்குரிய கடமைகளைச் செய்வதிலிருந்து தவறியோர் பலரும் உண்டு. மனைவியின்/கணவனின் பேச்சைக் கேட்டும், அதிகாரம், அகங்காரம், ஆணவம், சொத்துத் தகராறு காரணமாகவும் பலரும் தங்களுடைய பெற்றோர்களை நன்முறையில் நடத்துவது இல்லை. இதுவே, பின்னர் பித்ரு தோஷமாக மாறி அக்குடும்பத்தையே படாதபாடு படுத்திவிடும்.. எனவே, தங்களுடைய பெற்றோர்களுக்கு முறையான சேவை செய்கின்ற தெய்வீகக் கடமைகளிலிருந்து தவறியவர்கள், ஆனி மாதப் பௌர்ணமி பூஜையை முறையோடு கடைபிடித்தால் தக்க பிராயச்சித்தங்கள் கிட்டும்..
தோளில் குழந்தையைச் சுமந்தவாறு கிரிவலம் வர வேண்டிய சிறப்பான பௌர்ணமி! அரிய தெய்வீக வாய்ப்பு! நழுவ விடாதீர்கள்..! பில்வ த்ரிராத்ரி விரத திருஅண்ணாமலை கிரிவல மஹிமை
பில்வ த்ரிராத்ரி விரதம் பூண்டு திருஅண்ணாமலையை வலம் வருவீர்! 
தோளில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இன்று கிரிவலம் வருதல் விசேஷமானதாகும். தாய், தந்தையருக்கு உரிய கடமைகளை செய்கின்ற அரிய தெய்வீக வாய்ப்பினை இழந்தோர் இன்று தம் குழந்தைகளையோ, பேரக் குழந்தைகளையோ தோளில் தாங்கி கிரிவலம் வருதலால் பல அரிய பரிகாரங்களைப் பெற்றிடலாம்...
குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு தக்க நல்வழிகளைத் தருவதே பிரமாதி வருட ஆனிமாதத்திற்குரிய அற்புதமான பில்வ த்ரிராத்ரி விரத அருணாசல கிரிவலமாகும்...
மூன்று தினங்களுக்குரிய வில்வ த்ரிராத்ரி விரதப் பண்டிகையின் மகாத்மியத்தைப் பற்றி இந்த இதழில் நன்கு எடுத்துரைத்துள்ளோம். பௌர்ணமி இரவுடன் சேர்த்து மூன்று தினங்களின் இரவிலும், திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வருதல் சிறப்புடையது... இம்மூன்று நாட்களிலும் கிரிவலம் வர இயலாதோர் மூன்றாவது நாளான ஆனி மாதப் பௌர்ணமியாக அமைகின்ற பில்வ த்ரிராத்ரி விரத பௌர்ணமி தினத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருதற்கான சிறப்பான விதிமுறை ஒன்றும் உண்டு...
தாய், தந்தை சேவை தந்திடும் நற்பாதை :-
சிரவணன் கதை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கண் பார்வை அற்ற சிரவணன் தன் தாய், தந்தையருக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகப் பெரும் மகரிஷிகள் அடைகின்ற தெய்வீக சக்தியைப் பெற்றான். பாருங்கள்! தம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஒருவர் சிறப்பாகச் செய்து வந்தாலே போதும், அதுவே முக்திக்கு வழிவகுக்கும் நல்வழிகளில் ஒன்று என்பது சிரவணனின் கதை தரும் நீதி அல்லவா! இப்புராணம் சிரவணனுக்கு தேக முடிவைத் தந்ததாகத் தோன்றினாலும், சிரவணன் முக்திப் பெறு நிலையில்தான் இன்றும் உத்தம யோகத்தில் அமர்ந்து பூலோகத்தில் யாரெல்லாம் பெற்றோர்களுக்கு பணி விடைகளைச் செய்து வருகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் தன்னுடைய புண்ணிய தபோ பலத்தின் சக்தியை இன்றும் அருளிக் கொண்டு இருக்கின்றார். உத்தம மஹரிஷிகள், பித்ருக்கள் போன்ற உத்தம தெய்வ லோக நிலை அது!
உத்தம சிரவணனின் கதை இப்படியிருக்க... கலியுகத்தில் திருமணம் செய்து கொண்ட உடனேயே, தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து தனித்தே வாழ்கின்ற தனிக் குடும்பங்கள் எத்தனை, எத்தனை! தனிக் குடும்பமாக வாழ்வதில் தவறில்லை தான் என்றாலும் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து ஆக வேண்டும் அல்லவா! இக்கடமையிலிருந்து ஒரு சிறிதே பிறழ்ந்தாலும் அவர்களுக்குக் கிட்டுகின்ற சாபங்கள் எத்தனை எத்தனை தெரியுமா? பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்யாதோருக்கும் ஆதரவற்ற அதே நிலைதான் அவர்களுக்கு முதிய வயதிலும், ஏனைய பிறவிகளிலும் வந்து சேரும் என்பதை மறந்துவிடலாகாது.. எனவே தம் தாய், தந்தையர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து தவறியோரும், பெற்றோர்களை ஏசியோரும் இன்று ஐந்து வயதிற்கு உள்ளான தம் குழந்தைகளைத் தோளில் தாங்கி திருஅண்ணாமலையை (ஆனி பௌர்ணமி தினத்தன்று 28.6.1999) பில்வ திரிராத்ரி விரதம் பூண்டு கிரிவலம் வருதல் வேண்டும்.. தம் தாய், தந்தையர்களுக்கும், பெரியோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறியதற்கான தக்க பிராயச்சித்தங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் இத்தகைய தவறான காரியங்களினால் ஏற்பட்ட பித்ரு சாபங்களினால் விளைகின்ற துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெற்றுப் பித்ருக்களின் மன்னிப்பைப் பெறும் பொருட்டு இந்த கிரிவலம் அமைகின்றது....
குழந்தைப் பேறு ஒரு ஐஸ்வர்யமே!
குழந்தைப் பேற்றை வேண்டி திருஅண்ணாமலையானை கிரிவலம் வருவதில் தவறில்லைதான். ஆனால் குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர் அருணாசல பெருமானிடம் “அப்பனே! ஈஸ்வரனே! எனக்கு குழந்தை இல்லாததற்கான காரணத்தை நான் அறியேன்! எங்களுக்கு குழந்தை பாக்கியம் தா என்று நாங்கள் சிறுகுழந்தைத் தனமாக வேண்டினாலும் கூட அம்மையப்பனாகியவனே எங்களுக்கு எது நன்மையோ அதனையே செய்வாயாக.!” என்று வேண்டினால் அதுதான் உண்மையான தெய்வீகம் நிறைந்த பிரார்த்தனையாக இருக்கும்... “இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும்”, என்று இறைவனிடம் பேரம் பேசுதல்,, சிறுகுழந்தைத்தனமானது ஆகும். அவர் உங்களுக்கு எது நன்மையோ அதைத்தான் நிச்சயமாகச் செய்திடுவார்.. இதை உணர்விப்பதும் பில்வ திரிராத்ரி விரத கிரிவலமே.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தை இல்லாது அனைவருமே பெரிய பிள்ளைகளாக இருந்தால் என் செய்வது? பேரன், பேத்திகள் என ஐந்து வயதினருக்கு உட்பட்டவர்கள் இருக்க மாட்டார்களா என்ன! எந்தக் குழந்தையுமே பிறந்தது முதல் தெய்வத்தின் பிரதிபலிப்பாகத் தான் விளங்குகின்றது. ஆனால் வயதாக வயதாக பகுத்தறிவு கூடுகின்ற பொழுது இந்த உலகத்தால் அளிக்கப்படுகின்ற செயற்கையான நிரந்திரமில்லாத அறிவை அது பெறுகின்ற பொழுது தன்னுடைய தெய்வீகத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்து சாதாரண மனிதனாக வாழத் தொடங்குகின்றது.. இவ்வாறு தெய்வீகத்தின் பிரதி பிம்பமாகப் பிறந்தவர்கள் தான் நாமும். ஆனால் வயதாக, வயதாக உண்மையான தெய்வீக அறிவை இழந்து விஞ்ஞான அறிவு என்ற நிலையற்ற ஒன்றைப் பெற்று மூளையை நன்கு பயன்படுத்தாது சாதாரண மனித அறிவுடன் வாழத் தலைப்பட்டு விட்டோம்.. எது சாசுவதமானதோ, எது நிரந்தரமானதோ, எது பொய்மை இல்லாததோ, எது சத்தியமானதாக என்றும் உண்மையானதாக விளங்குகின்றதோ அதுதான் இறைப்பரம் பொருளாகும். மற்ற அறிவெல்லாம் பொய்மையானது, மாயையாக விளங்குவதே!
மதிப்பு உயிருக்கா? உடலுக்கா?
நேற்று வரை அம்மா, அப்பா, மனைவி, குழந்தை, மாமன், நண்பன் என்று உற்றமும், சுற்றமும் கொண்டாடி மகிழ்ந்தோமே அந்த மனித உடலுக்கு மரணம் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் அடுத்த வினாடியே அதனை ஒதுக்கி வைத்து விடுகின்றோம் அல்லவா! சற்று சிந்தித்துப் பாருங்கள்! இந்த உலகத்தில் எதுதான் நிலையானது! திரேதாயுகம், கிருதயுகம் முதல் நம்மால் என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கிருஷ்ண பகவானும் இன்றைக்கு கலியுக மக்களாலும், மகரிஷிகளாலும், சித்புருஷர்களாலும், யோகியர்களாலும், என்றென்றும் எந்த யுகத்திலும் வழிபடப்படுகின்ற ஸ்ரீஅருணாசல மூர்த்தியும் தானே என்றைக்கும் நித்தியமான பரம்பொருள். அதனை அல்லவா நாம் நாட வேண்டும். எது சாசுவதமானதோ, எது என்றைக்கும் நமக்கு நெருக்கமானதாக இருக்கின்றதோ, எது என்றைக்கும் நமக்கு அருள் சுரக்கின்றதோ அதுதானே அருணாசலப் பரம்பொருள் அதைத்தானே நாம் பற்ற வேண்டும்!
இந்த பில்வ த்ரிராத்ரி விரதத்தின் போது ஏன் குழந்தைகளைத் தோளில் சுமந்து வருதல் வேண்டும்? இதற்குத் தக்க காரணங்கள் உள்ளன.. இதற்குரிய விளக்கங்களும் சித்புருஷர்களால் அருளப்பட்டுள்ளன. வில்வம் என்பது சுபர்ண மகரிஷியால் பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஓர் அற்புதமான சிவாம்சங்கள் நிறைந்த தேவ மூலிகை என்பதை நாம் நன்கு அறிவோம். ஒவ்வொரு வில்வ தளத்திலும் ஸ்ரீமகாலட்சுமி உறைகின்றாள் என்பதும் நாம் நன்கு அறிந்ததே! இதனால் தான் இன்றைக்கும் வைணவப் பெரும் தலைமையகமாக விளங்குகின்ற ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்தில் வில்வ மரமும் பரிணமிகின்றது.
அனுஷ நட்சத்திர நாளில் ஸ்ரீமகா லட்சுமியை வில்வ தளங்களால் அர்ச்சிக்கின்றச் சிறப்பான வழிபாடும் உண்டு, தரித்திரமும் நீங்கிடவே! சைவ, வைணவ பேதத்தைத் கடந்தால் தான் இறைப் பரம்பொருளின் தரிசனம் நமக்குப் பரிபூரணமாகக் கிட்டும்., பிரமாதி வருடத்தில் தான் சிரவணன் தன் வயது முதிர்ந்த தாய், தந்தையரை தராசு போல இரண்டு தட்டுகளில் வைத்துத் தோளில் தாங்கி திருஅருணாசலப் பெரும் பூமியை கிரிவலம் வந்தான். சிரவணனுக்கு எத்தனையோ மகரிஷிகளின் தரிசனம் கிடைத்தது. கண் பார்வையற்ற இளம்பிள்ளையாக இருந்தாலும் கண்பார்வை கொண்ட தம் பெற்றோர்கள் காட்டிய/கூறிய மகரிஷிகளின் தரிசன விளக்கங்களைக் கேட்டுப் பெருமகிழ்வு கொண்டான் சிரவணன்.
ஆனால் சிரவணன் மகரிஷிகளை தரிசித்தான் என்று சொல்வதை விட ஒவ்வொரு மகரிஷியும் சிரவணனைக் காண்பதில் தான் பெருமகிழ்வு கொண்டார்கள்.ஏனென்றால் இளவயதாய் இருந்திடினும் எத்தனையோ ஆசாபாசங்களை அடக்கி, மனதை ஒருமுகப்படுத்தித் தன் பெற்றோருக்கு உரிய கடமைகளைச் செவ்வனே செய்து வந்தமையால் சிரவணனுடைய தேகத்திலே ஸஹஸ்ர பிரம்ம தேஜஸ் ஒளிர்ந்தது... இது வேறெங்கும் காணக்கிட்டாதது என்பதை மகரிஷிகளே நன்கு உணர்ந்திருந்தனர். மிகவும் வயதான தம் தாய், தந்தையரை ஒரு மூங்கில் பட்டையில் தொங்கும் இரு கூடைகளில் அமர்த்தித் தோளில் தாங்கிய வண்ணம் சிரவணன் அருணாசலத் திருமலையை கிரிவலம் வந்த திருநாளே ஆனிமாதப் பௌர்ணமியாகும்..
சிரவணனின் திரேதாயுக கிரிவலத்திற்காக மூங்கிற் புல்லாங்குழல் நாயகனான ஸ்ரீகிருஷ்ணனே துவார யுகத்தில் ஒளி வடிவில் முக்தியளிக்கும் மோன வடிவில் யுகயுகமாக மஹரிஷி நிலையிலிருக்கு சிரவணனுக்கு சூட்சுமமாகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இவ்வாறாகக் கால் நடையாக சிரவணன் பாரதமெங்கும் தம் பெற்றோரைச் சுமந்த வண்ணம் தல யாத்திரை புரிந்து தம் பெற்றோருக்குச் சீரிய சேவை புரிந்தான்.... எனவேதான், பிரமாதி வருட ஆனி மாதப் பௌர்ணமி கிரிவலமானது பெற்றோருக்குச் சேவை புரியும் பாக்கியத்தைப் புண்ய சக்தியாக அளிக்கின்றது.. நம்மைத் தோளில் சுமந்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகத்தான் சந்ததிகளாய்த் தழைக்கும் பிள்ளைகளைத் தாங்கி கிரிவலம் வருகின்றோம்.

வில்வ த்ரிராத்ரி விரதம் – 28.6.1999  திங்கட்கிழமை
பல இரவு நேர வழிபாடுகளின் நிறைவாக விளங்குவதே பௌர்ணமி திதியாகும். இவற்றுள் மூன்று இரவுகள் கூடிய வில்வ த்ரிராத்ரி விரதம், ஸ்ரீசத்ய நாராயண பூஜை போன்றவையும் அடங்கும்.
மூன்று இரவுகள் வில்வ தளங்களில் ஊறிய நீருக்கு மகத்தான தெய்வீக சக்திகள் உண்டு. இதனை நன்முறையில் பயன்படுத்தும் வழிமுறைகளை சற்குரு மூலமாக அறிதல் வேண்டும்..
இரவு நேர வழிபாடுகள் பல உண்டு. இவற்றைத் தக்க முறையில் கடைபிடித்தால் தான் இரவு நேரத்தில் மனிதன் செய்கின்ற அதர்மமான காரியங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் தக்க பரிகாரத்தைப் பெறமுடியும்! இந்த பரிகாரத்தைச் செய்துவிட்டு இரவு நேரத்தில் பாவங்களை இனிமேல் தொடர்ந்து செய்யக் கூடாது. இது மிக முக்கியம்.
இரவு நேர வழிபாடுகள் :-
விழிப்பு நேரமான பகல் நேரத்தில் செய்ய வேண்டிய பூஜை முறைகள் தரிசனங்கள் எத்தனையோ இருப்பினும் கலியுக மனிதன் இவற்றைச் சரிவரச் செய்வதில்லை. இதனால் தான் கலியுக வாழ்க்கையே துன்பமயமாக விளங்குகின்றது. இதே போன்று இரவு நேரத்தில் செய்ய வேண்டிய சந்திர, நட்சத்திர வழிபாடுகளையும் ஏனைய பூஜை முறைகளையும் நம் பெரியோர்கள் நமக்கு வகுத்துத் தந்துள்ளனர். தக்க சற்குரு மூலமாக இவற்றை அறிந்து முறையாகக் கடைபிடித்தால் தான் பலவிதமான கர்மவினைகளுக்கு இவை தீர்வாக அமைவதோடு மட்டுமின்றி இரவு நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற பாவங்களுக்குத் தக்க பரிகாரங்களையும் பெறுகின்றான். பொதுவாக இரவு நேரத்தில் தான் தீவினை சக்திகள் ஆக்கம் பெறுவதால் திருட்டு, கொள்ளை, வன்முறைகள், காமக் குற்றங்கள் போன்றவை நிலவுகின்றன.
எனவே, ஒரு மனிதன் பகலெல்லாம் செய்கின்ற பூஜைகளின் பலன்களில் பெரும்பாலானவற்றை அவனை இரவு நேர தீவினை சக்திகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே செலவழித்து விடுவதால் கலியுக மனிதன் தான் முன்னேற மேன்மேலும் நிறைய பூஜைகளைச் செய்தாக வேண்டும். இரவு நேர வழிபாடுகள் முறையாகச் செய்யப்பட்டால் தான் அவை இரவு தீய சக்திகளின் ஆக்கத்திற்கு எதிராகப் போரிட்டு நம்மை இரட்சை போல காத்து நிற்கும்.. ஆனால் பகல் நேர வழிபாடுகளையே ஒருவன் முறையாகச் செய்யாத போது உறக்கத்தின் பாலும், கேளிக்கைகளிலும் இரவு நேரத்தைக் கழிக்கின்ற மனிதனுக்கு எவ்வாறு புண்ணிய சக்தி நிலைத்து நிற்கும்? உண்மையைச் சொல்லப் போனால் பகல் நேரத்தில் இறை தரிசனம், பூஜை என ஏதோ வழிபாடுகளைச் செய்தாலும் கூட, அதையும்  விஞ்சி இரவு நேரத்தில் செய்கின்ற பாவச் செயல்கள் தாம் அவனுடைய புண்ணிய சக்திகளையெல்லாம் கரைத்து அவனைத் தீய சக்தியின் பிம்பமாக வடிவமைத்து விடுகின்றது..
மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதிலிருந்து தொடங்குகின்ற இரவு நேர வழிபாடானது மிகவும் எளிமையானது தானே..! இரவு உறங்குவதற்கு முன் சொல்ல வேண்டிய வடமொழி, தமிழ் மறைத் துதிகளும், இரவு நேரத்தில் செய்ய வேண்டிய வைச்வதேவம் என்னும் அரிய ஹோம வழிபாடும் உண்டு. இரவு உறங்கச் செல்லும் முன் காலையில் ஸ்வாமிக்கு அரைத்து இட்ட சந்தனத்தைச் சிறிது எடுத்து நீர் விட்டுக் குழைத்து நெற்றியில் அணிந்து கொண்டால் தீயகனவுகள் வராமல் தடுக்கலாம். நவராத்திரி, பௌர்ணமி போன்று எத்தனையோ வித இரவு வழிபாடுகளுள் வில்வ த்ரிராத்ரி விரதம் மிகவும் சிறப்புடையதாக விளங்குகிறத., ஆனால் தற்காலத்தில் இதன் மகிமையை அறிந்து கடைபிடிப்போர் மிகவும் அருகிவிட்டனர்...
மூன்று புனிதமான இரவு பூஜைகள்
வில்வ த்ரிராத்ரி விரதம் என்பது மூன்று இரவுகளில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான இரவு பூஜையாகும். மூன்றாம் நாள் பூஜையானது பௌர்ணமி திதியோடு நிறைவு பெறுகின்றது.. விரதம் நிறைவுறும் மூன்றாம் நாளன்று திருஅண்ணாமலை, ஐயர்மலை போன்ற மலைத் தலங்களை இரவில் கிரிவலம் வருவதால் விரத பலாபலன்கள் பெருகின்றன... முதல் நாள் இரவு முழுவதும் வில்வ தளங்களில் நன்றாக ஊறிய தூய்மையான நீரை மட்டும் பருகி அடுத்த நாள் மூன்று வேளைகளிலும் உபவாசம் இருத்தல் வேண்டும்.. இவ்வாறு மூன்று நாட்களிலும் வில்வ தளம் ஊறிய நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருந்து பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து உண்ணாவிரத நோன்பை முடித்து வில்வ த்ரிராத்ரி விரதத்தை நிறைவு செய்வதால் அளப்பரிய பலன்கள் கிடைக்கின்றன.
மூன்று நாட்களும் வில்வதளம் ஊறிய நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பது என்பது கலியுகத்தில் சற்றுக் கடினமான காரியம் தானே, ஆனால் என் செய்வது? அற்புதமான அளப்பரிய பலாபலன்களைப் பெற வேண்டும் என்றால் இத்தகைய விரத நிலைகள் தாமே உடலையும், உள்ளத்தையும் புனிதப்படுத்தி அற்புத இறை அனுக்கிரகங்களைப் பெற்றுத்தந்து மனிதப் பிறவியின் அரிய பலாபலன்களைப் பெற்றுத் தரும்.. வருடத்தில் 3 நாட்கள் விரதம் என்பது சாத்யமானது தானே! வசதியும், வாய்ப்பும், சூழ்நிலையும், நன்முறையில் அமைந்திருப்பின் மூன்று நாட்களுமே கிரிவலம் வருதல் மிகவும் உத்தமமானதாகும்.. உடல்நிலை சுகமின்மை அலுவலகப் பணிகள், மற்று பல தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மூன்று நாட்களிலும் விரத நோன்பு இருக்க இயலாதோர் குறைந்த பட்சம் மூன்றாவது தினமான வில்வ த்ரிராத்ரி பௌர்ணமி தினத்தன்றாவது வில்வ தளம் ஊறிய நீரை மட்டும் அருந்தி அன்றைய இரவு திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை வலம் வந்து விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்..
விரத நாட்களில் வில்வாஷ்டகம், ருத்திரம், சமகம், அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகத் தேவாரப் பாடல்கள் வடமொழி மற்றும் தமிழ்ச் சிவ மறைகளை ஓதி சிவலிங்கத்திற்கு தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்திடல் வேண்டும். இன்று வில்வதளம் ஊறிய நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வாஷ்டகம், சிவ அஷ்டோத்திரம், சகஸ்ரநாம துதிகளை / சிவபுராணத்தை ஓதி வணங்கி வழிபடுதல் விசேஷமானது! வில்வத்ரிராத்ரி விரதமானது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாலும் ஸ்ரீவீரஆஞ்சநேய மூர்த்தியாலும், ஸ்ரீஅகத்தியப் பெருமானாலும் இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்ற மிகவும் முக்கியமான விரதங்களுள் ஒன்றாகும். மனத் தெளிவையும், மனத் தூய்மையையும் அளிக்க வல்ல ஏனைய பலன்களையும் அளித்திடும் முக்கியமான விரத வழிபாடு!
வில்வ த்ரிராத்ரி விரத பூஜா பலன்கள்!
பொதுவாக தன்னுடைய பிள்ளைகள், பெண்களின் எதிர்கால வாழ்வைப் பற்றியும் அவர்கள் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கி நல்லமுறையில் திருமண வாழ்வைப் பெற வேண்டும் என்று ஏங்கித் துடிக்கின்ற இல்லறப் பெண்கள் இந்த விரதத்தைக் கைக்கொள்வார்களேயானால் அவர்களுக்கு நல்ல மனோதிடமும், மனோவைராக்கியமும் ஏற்பட்டு அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்கால வாழ்வு அமையும்..
ஏகவில்வ சிவார்ச்சனை என்பது மிகவும் விசேஷமானதாகும். அதாவது இதற்கு ஒரே ஒரு வில்வதளத்தையே மீண்டும் மீண்டும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். மூன்று நாட்களிலும் ஒரே வில்வதளம் பயன்படுத்தப்படும். இந்த ஏக வில்வதளத்திற்குத் தான் அதாவது ஒரே ஒரு வில்வ இலைக்குத் தான் ஆதிமூல ப்ருகத் வில்வம் என்று பெயர். குறைந்தது 3, 5, 7, 9, 12 என்று இதழ்களுடைய ஏதேனும் ஒரு வில்வ தளத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வில்வ த்ரிராத்ரி விரத முதல் நாளன்று இந்த வில்வ தளத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு சிவபுராணம்/ வில்வாஷ்டகம்/ சிவ அஷ்டோத்திரம் சகஸ்ரநாமத் துதிகளை ஓதி இதனைப் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி தீர்த்தங்களை இதன் மேல் தெளித்து வில்வதளத்தை மேலும் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரேயொரு வில்வதளத்தைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். தும்பைப் பூக்களால் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்த பிறகு இந்த ஏகவில்வ அர்ச்சனையை செய்வது சிறப்புடையது.
சுபர்ண மஹரிஷி தந்த வில்வம்
மார்ச் 1999 மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் ஸ்ரீருத்ர சாவர்ணி மனுவின் மகிமையைப் பற்றி நாம் விவரித்திருந்தோம் அல்லவா! அதில், எவ்வாறு தேவலோக விருட்சமான வில்வமரமானது பூலோகத்திற்குக் கொண்டு வரப்பட்டது என விளக்கியுள்ளோம். எங்கெல்லாம் சிவமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனரோ அங்கெல்லாம் வில்வமரத்தைப் பிரதிஷ்டை  செய்து நமக்கு வில்வமர தரிசனத்தைப் பெற்றுத் தந்தவரே ஸ்ரீசுபர்ண மகரிஷி ஆவார். நாம் இன்றைக்கு பூலோகத்தில் வில்வ மரங்களைக் காண்பதற்கு பேருதவி புரிந்தவரும் இவரே! ஸ்ரீசுபர்ண மகரிஷி தான் இந்த த்ரிதள வில்வ த்ரிராத்ரி விரதத்தை நமக்கு எடுத்துரைத்தார்.
இவர் பூலோகத்திற்கு தேவ விருட்சமாகிய வில்வத்தைக் கொண்டு வந்த போது அவர் கையில் இருந்தது ஒரேயொரு வில்வதளம் தான், “இதனை வைத்துக் கொண்டு பூலோகமெங்கும் வில்வ மரத்தை விருத்தியடையச் செய்வாயாக!” என்று பிரம்மமூர்த்தி அனுக்கிரகம் செய்த போது அதை எடுத்து வந்து திருஅருணாசல புனித பூமி, 12 ஜோதிர்லிங்க மூர்த்தித் திருத்தலங்கள், புனித நீர்த் தடாகங்கள் போன்ற பல இடங்களிலும் ஒரேயொரு வில்வதளத்தை ஏந்தியவாறே இந்த வில்வ தளம் நன்முறையில் விருத்தியடைந்து வளர வேண்டும் என்று பிரார்த்தித்தவாறே பூலோகம் எங்கும் யாத்திரைகள் செய்து பூஜைகளை நிறைவு செய்தார். வில்வநாதர் என்ற பெயர் கொண்ட ஸ்ரீசுபர்ண மகரிஷி இன்றைக்கும் வில்வ த்ரிராத்ரி விரத மூன்று நாட்களிலும் திருஅண்ணாமலையை சூட்சும வடிவில் கிரிவலம் வந்து பரமானந்தம் கொள்கின்றார்.. பல கோடி யுகங்களாக இவர் வில்வ திரிராத்ரி விரதத்தைக் கைக் கொண்டதன் பலனாக ஈஸ்வரனே நேரில் தரிசனம் தந்து ஒரு பொன் வில்வ தளத்தைப் பரிசாகத் தந்தார்.
பொன்னாலான அந்த ஒரேயொரு வில்வ தளத்தைக் கொண்டு பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளுக்குத் தொடர்ந்து இன்றும் சூட்சுமமாக வில்வார்ச்சனை செய்து வரும் உத்தம மகரிஷியே ஸ்ரீசுபர்ண மகரிஷி ஆவார். இவருடைய திருவுருவம் இன்றும் பல ஆலயத் தூண்களில் செதுக்கப்படிருப்பதைக் காணலாம்.. இவரால் அர்ச்சிக்கப்படாத சுயம்பு லிங்க மூர்த்திகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் திருத்தலங்களிலும் வில்வ தளத்தை நட்டு விருத்தியடையச் செய்து வில்வநாதராய் இன்று பல கோடி யுகங்களில் பிரசித்தி பெற்று விளங்குகின்றார் ஸ்ரீசுபர்ண மகரிஷி..
ஒரேயொரு வில்வ தளத்தால் ஓராயிரம் அர்ச்சனையாம்!
எனவே தான், இன்றும் நாம் வில்வ த்ரிராத்ரி விரதத்தன்று பயன்படுத்துகின்ற ஒரேயொரு வில்வதளத்தை ஸ்ரீசுபர்ண மகரிஷியுடைய சுவர்ண வில்வ தளமாக பாவித்து அதனைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சிக்கின்றோம்.

ஐயர்மலை

அதெப்படி இறைவனுக்கு புஷ்பத்தையோ, துளசி, வில்வம் போன்ற தளங்களையோ ஒருமுறை அர்ச்சித்து விட்டால் அவை நிர்மால்ய புஷ்பம் ஆகிவிடாதா? ஒருமுறை அர்ச்சித்த பூவையோ, இலையையோ மீண்டும் எவ்வாறு பயன்படுத்த முடியும்? இது நல்ல கேள்விதான்.. இது உண்மையில் தெய்வீக நியதியும் கூடத்தான்! ஆனால் வில்வ த்ரிராத்ரி விரதத்தின் விசேஷம் என்னவென்றால், இம்மூன்று தினங்களின் இரவுகளிலும் இறைவனுக்குச் சார்த்தப்படுகின்ற வில்வ தளங்கள் யாவும் சூட்சுமம ரீதியாக ஸ்வர்ணமயமாக, பொன் மயமாக, தங்க மயமாக விளங்குகின்றன ஸ்ரீசுபர்ண மகரிஷியின் பேரருளால்!
தங்கத்திற்கு எப்போதும் தீட்டோ, தோஷமோ கிடையாது. வயதான சுமங்கலிகள் இறந்தால் கூட அவர்கள் உடலிலிருந்து புனிதமான திருமாங்கல்யத்தை அகற்றி அதனை அக்குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்களின் திருமணத்தின் போது புனிதமான பரிசாக, திருமாங்கல்யமாக அணிவிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டீருப்பீர்கள்! ஏனென்றால், சுமங்கலிகள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்துக்கு அத்தகைய விஷேசமான சக்தி உண்டு.. எனவே தான் இறந்து சவமாகி விட்டால் கூட, இறந்தோர் அணிந்திருக்கும் தங்க அணிகலன்களுக்கு எத்தகைய தோஷமும், அசுத்தமும் ஏற்படுவது கிடையாது.. இத்தகைய அபூர்வ சக்தியைப் பெற்றிருப்பது தங்கம் ஆகும். ஆகையால், “தங்கத்தைப் எப்போதும் போல் பரிசுத்தமானவர்கள்” “GOLDEN QUALITIES” என்று நாம் சொல்கின்றோம்..
மேலும், தங்கத்தினாலான எந்தப் பொருளும் கீழேயோ அல்லது வேறு எந்த அசுத்தமான இடத்திலோ விழுந்தால் கூட அது தன் புனிதத்துவத்தை இழப்பதில்லை. இதனால் தான் தங்கத்தாலான விக்கிரகங்களுக்கும், இறை வாகனங்களுக்கும், அர்ச்சனைப் பொருட்களுக்கும் மிகுந்த மகத்துவம் உண்டு. எனவே சுபர்ண மகரிஷியானவர் எவ்வாறு இறைவன் தமக்களித்த ஒரேயொரு பொன் வில்வதளத்தை கொண்டு அன்றிலிருந்து இன்று வரை பல கோடி யுகங்களாக இறைவனை அர்ச்சித்து ஆராதித்து வருகின்றாரோ, அதைப் போல இந்த மூன்று வில்வ த்ரிராத்ரி விரத தினங்களிலும் நாம் இறைவனை அர்ச்சிக்கின்ற ஒரேயொரு வில்வ தளமானது பொன் வில்வ தளத்திற்குரிய தெய்வீகத் தன்மையைப் பெறுவதால், இம்மூன்று தினங்களிலும் அதே வில்வ தளத்தைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது விசேஷமானதாகும். ஆனால் வருடத்தில் இம்மூன்று தினங்களில் மட்டும்தான் இத்தகைய தெய்வீக நியதிகள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. எனவே தான் இம்மூன்று தினங்களும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

மகரிஷியுடன் சேர்ந்து மகத்தான பூஜை!
மேலும் இம்மூன்று தினங்களிலும் பூவுலகில் எங்கெல்லாம் இந்த “ஏக பில்வ அர்ச்சனை” அதாவது ஒரேயொரு வில்வ தளத்தைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஸ்ரீசுபர்ண மகரிஷியானவர் எழுந்தருளி தம்முடைய அர்ச்சனையையும் சேர்த்துக் கொள்கின்றார். எனவே, இந்நாட்களில் வசதியுள்ளவர்கள் தங்கத்தாலான வில்வ தளத்தைக் கொண்டு சிவலிங்கத்தை அர்ச்சித்தல் விசேஷமானதாகும். அதாவது, ஒரேயொரு வில்வதளத்தைக் கொண்டு, தங்கத்தாலான அல்லது தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியாலான வில்வ தளத்தைக் கொண்டு 108 முறையோ, 1008 முறையோ சிவநாமாக்களை ஓதி அர்ச்சித்தல் சிறப்பானது.. எனவே, பெறுதற்கரிய இந்த பிரமாதி வருட வில்வ த்ரிராத்ரி தினங்களை இழந்து விடாமல் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா பலாபலன்களையும் பெற்றிடுங்கள்!
ஸ்ரீசுபர்ண மஹரிஷிக்கு அர்க்யம்!
இயன்றோர் இம்மூன்று நாட்களிலும் திருஅண்ணாமலை கிரிவலம் வந்திடலாம்.. குறைந்தபட்சம் மூன்றாவது தினமான பௌர்ணமி நாளன்றாவது திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பேரானந்தம் அடையுங்கள். திருஅண்ணாமலையை முறையில் “ஏகபில்வ அர்ச்சனை” செய்து குன்றக்குடி, அய்யர்மலை, பழனி, தான்தோன்றிமலை (கரூர் அருகே) , திருச்சி லாலாப்பேட்டை அருகே உள்ள சங்கரமலை, பர்வத மலை, ஈங்கோய் மலை, விராலிமலை போன்ற திருத்தலங்களில் கிரிவலம் வந்து விரதத்தைப் பரிபூர்ணமடையச் செய்யுங்கள். இம்மூன்று தினங்களிலும் வில்வ நீர் சிறிது சேர்ந்த அல்லது வில்வதளம் சிறிதே பிரசாதமாக சேர்க்கப்பட்ட சாம்பார் சாதம், புளியோதரை போன்ற அன்னவகைகளைப் படைத்து அன்னதானமாக இட்டிடுக! ஸ்ரீசுபர்ண மகரிஷியின் அரும் பெரும் தவத்தால் தான் நாம் இன்று பூலோகத்தில் வில்வதளங்களைப் பெற்றுள்ளோம். எனவே, ஸ்ரீசுபர்ண மகரிஷிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு “ஸ்ரீசுபர்ண மகரிஷியே போற்றி” என்று மூன்று முறை ஓதி,
ஸ்ரீசுபர்ண மகரிஷி தர்ப்பயாமி,
ஸ்ரீசுபர்ண மகரிஷி தர்ப்பயாமி,
ஸ்ரீசுபர்ண மகரிஷி தர்ப்பயாமி,
என்று ஓதி வில்வதளங்கள் கலந்த நீரால் வலது கை விரல் நுனிகள் வழியே நீர்த் தாரையாக வார்த்துத் அர்க்யமிட்டும் பூஜை செய்தல் வேண்டும் இது மிகவும் முக்கியமானதாகும்..

ஸ்ரீவில்வ த்ரிராத்ரி விரத பூஜாபலன்கள் : பெறுதற்கரிய இந்த ஸ்ரீவில்வ த்ரிராத்ரி விரத பூஜையினை முறையாகக் கடைபிடிப்போருக்கு மிகவும் விசேஷமான பலாபலன்கள் கிட்டுகின்றன.
1. ஸ்ரீவில்வ த்ரிராத்ரி விரத பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான இறைத் தலங்கள் பல உண்டு.. அவற்றில் ஒன்றுதான் இம்மூன்று தினங்களிலும் திருஅண்ணாமலையில் செய்ய வேண்டிய கிரிவல பூஜையாகும்.. இயன்றோர் இம்மூன்று இரவுகளிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடலாம். ஏனையோர் மேலே குறிப்பிட்ட மலைத்தலங்களில் ஈஸ்வரனை வேண்டி கிரிவலம் வந்திடுக.
2. இம்மூன்று தினங்களிலும் கடைபிடிக்கின்ற விரதநெறிகள், பூஜைகள் மற்றும் கிரிவலத்தால் கிட்டுகின்ற அபரிமிதமான புண்ணிய சக்தி இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமன்றி அன்றும், இன்றும் என்றும் நம்முடைய ஆத்ம ஐக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.
3. சிறு வயதிலேயே தாய், தந்தை, மகன், மகள், சகோதர சகோதரிகள் பிள்ளைகளை எங்கேனும் இழந்து, காணாமல் போய் அவர்கள் திரும்பி வராது இன்றும் அவதியுறுகின்ற குடும்பங்கள் பல உண்டு.. இதற்குரிய தக்க பிராயச்சித்தமாக அமைவதே வில்வ த்ரிராத்ரி விரதமாகும். இதனைப் பரிபூர்ணமாக கடைபிடித்து வந்தால், காணாமல் போனவர்கள் பற்றிய தக்க தகவல்களையும், நல்வழிகளையும் பெற்றிடலாம் இறைஅருளால்.. ஆனால் இவ்விரதத்தை வருடம் தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் முறையாகக் கடைபிடித்து வருதல் வேண்டும்..
4.  பலரும் ஆலயங்களில் உள்ள மலர்களையும், வில்வம், துளசி போன்ற தளங்களையும் அவற்றின் மதிப்பிற்கு ஈடான தொகையினை ஆலய உண்டியலில் சேர்த்திடாமலேயே இலவசம்தானே என்று எண்ணிப் பறித்துப் பயன்படுத்தியதால்.. “சிவன் சொத்து குலநாசம்”, என்ற சாபத்திற்கு உள்ளாகித் தவிக்கின்றனர். அதேபோல், ஆலயத்திற்குச் சொந்தமான நிலங்களையோ, இடங்களையோ குத்தகை மற்றும் வாடகைக்கு எடுத்தோர், நியாயமான தானியங்களையோ, வாடகைத் தொகையையோ இறைவனுக்குச் சேர்க்காது ஏமாற்றுவதும் தற்போது சகஜமாகி விட்டது! இறைவனையே ஏமாற்றிய கொடிய பாவங்களைச் செய்தோருக்குக் கூட தக்க பரிகாரமாய் அமைவதே இந்த வில்வ த்ரிராத்ரி விரதம். கோயில் சொத்துக்களை அதர்மமாய்ப் பயன்படுத்தியோருக்கு குலநாசம் நிச்சயம்! அதிலிருந்து யாருமே தப்ப முடியாது!
5000 ரூபாய் வாடகை தரவேண்டிய இடத்தில் வெறும் 50 ரூபாய் மட்டும் தந்து விட்டு சிவசொத்தில் சேர்த்த செல்வத்தில் கொழிப்பவர்கள் ஏராளம்.. ஏதோ வருடத்திற்கு ஒருமுறை மண்டகப்படி போன்ற செலவுகளை ஏற்றுக் கொள்வதால் மட்டும் இப்பாவம் தீர்ந்து விடாது. இத்தகைய தவறுகளைச் செய்தோர் தாங்கள் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய தொகையை நியாயமான முறையில் கணக்கிட்டு, இன்றைக்கு வில்வ த்ரிராத்ரி தினத்தில் திருஅண்ணாமலை, காஞ்சிபுரம், திருவிடைமருதூர், காசி, இராமேஸ்வரம் போன்ற அன்னதானம் செய்வதற்குரிய விசேஷமான திருத்தலங்களில் தாங்கள் கோயிலுக்கு தரவேண்டிய தொகைக்கு ஈடான அளவில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்து வந்தால் தான் தங்கள் தவறுகளுக்குப் பரிஹாரம் காணலாம். வருடம் முழுதும் இந்த நற்காரியங்களைச் செய்து முழுபிராயசித்தம் காணலாம்.. வில்வ த்ரிராத்ரி விரத நாட்களாகிய மூன்று தினங்களிலும் இத்தகைய பிராயசித்தங்களைச் செய்வது அபரிமிதமான பலன்களைப் பெற்றுத் தரும்...எனவே இதைப் படித்த பின்னராவது மற்றவர்களுக்கு இத்தகையப் பாவச் செயல்களின் கொடிய தன்மையை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்துவது ஒவ்வொரு வாசகரின் கடமையாகும் என்பதை உணர்க!
5. நகைக் கடை வைத்திருப்போரும், நகை வியாபாரம் செய்வோரும் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ பலவித குற்றங்களுக்கு ஆளாகியிருப்பர். தங்கத்தின் தரத்தைக் குறைத்து மதிப்பிடுதல், மாசு பார்ப்பதில் குறைவு, தரம் பார்ப்பதில் குறைவு, விலை அதிகம், எடை வித்தியாசம் போன்ற பலவிதமான தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இவை கடைகளில் பலருடைய கவனக் குறைவால் கூட நடக்கும். ஆனால் தங்கம் சம்பந்தமாக ஏற்படுகின்ற தோஷங்களுக்கும் ஏற்படுகின்ற பாவ விளைவுகளோ ஏராளம், ஏராளம்! ஏனென்றால் இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் புனிதமான பொருட்களில் ஒன்றாகத் தங்கம் விளங்குவதால் மேலும் புனிதத்தைக் கூட்டக் கூடிய திருமணம், கோயில் உற்சவம் போன்ற இடங்களில் எல்லாம் தங்கம் பெரிதும் புழங்குவதால் தங்க சம்பந்தமான வியாபாரத்தில், நகை வியாபாரத்தில் ஏற்படுகின்ற குற்றங்களுக்கு நிறைய தீவினைக் கர்மங்கள் சேர்கின்றன.
இதற்குப் பிராயசித்தமாக தங்கம் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளோர் மேற்கண்ட வில்வ த்ரிராத்ரி விரதத்தை நன்முறையில் கடைபிடித்திட வேண்டும். இவர்கள் தங்கத்தால் வில்வ தளங்களைச் செய்து இந்த மூன்று தினங்களில் மட்டுமல்லாது தினந்தோறும் பொன் வில்வத்தால் அர்ச்சித்து வருதலால் தங்கம் சம்பந்தப்பட்ட பெருங்குற்றங்களிலிருந்து இம்மனித வாழ்க்கையில் மீள்வதற்கான தக்க நல்வழி கிட்டும். இவற்றின் மேன்மையைத் தக்க சற்குருவின் மூலமாக உணர்ந்து அத்தகைய வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்தல் மிகவும் சிறப்புடையதாகும்..

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஸ்ரீசரபேஸ்வர மஹிமை என்னும் தலைப்பில் ஸ்ரீசரபேஸ்வர தெய்வ மூர்த்தியின் மகாத்மியங்களைப் பற்றி எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா? இவ்விளக்கங்களைத் தொகுத்து எம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் (திருஅண்ணாமலை) சார்பில் “ஸ்ரீசரபேஸ்வரர் மஹிமை” என்னும் புதுநூல் வெளியிடப்பட்டுள்ளது..
ஹிரண்யாட்சனின் கொடூரங்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். கலியுகத்தில் மட்டும் இவற்றிற்குப் பஞ்சமா என்ன? திருட்டு, கொள்ளை, வன்முறை என எத்தனை எத்தனை தீய அசுர சக்திகள்! இவற்றிற்கிடையே தானே நாம் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது! ஹிரண்யாட்சனுடைய கொடூரங்களை வென்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எங்கே ஹிரண்யாட்சனுடைய ஒரு அணுத்துளி இரத்தமோ, முடியோ, எலும்புத்துகளோ பூமியில் பட்டால் கூட கோடிக் கணக்கான ராட்சஸர்களும், கொடியவர்களும், தீயவர்களும் தோன்றிப் பெருகி விடுவார்களோ என்று அஞ்சி அவற்றையெல்லாம் தன் உடலில் ஏற்று பஸ்மம் செய்தமையால் அவருடைய உக்ர சக்தியானது பிரபஞ்சமே தாங்கமுடியாத அளவிற்கு உருகிப் பெருகிய போது ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திதான் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை அரவணைத்து அவர்தம் அதிஉக்கிர சக்தியைத் தம்முள் ஏற்று சாந்தப்படுத்தி  ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அவதார சக்தியானது பரம்பொருளின் பூரண சக்தியாக அனைத்து லோகங்களுக்கும் சென்றடைய வழிவகுத்தார். இன்றைக்குப் பரம்பொருள் மூர்த்தியாக நமக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அனுகிரகம் செய்வதற்கு அருள்வழி கூட்டியதே ஸ்ரீசரபேஸ்வர அவதார மகாத்மியம் ஆகும். சித்புருஷர்கள் அருளியுள்ளபடி ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை வழிபடுகின்ற முறைகளைப் பற்றி நாம் விவரித்து வருகின்றோம் அல்லவா! இவ்விதழில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்குரித்தான நைவேத்ய முறைகளைப் பற்றிக் காண்போம்..
ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியானது சுய்யம் எனப்படும் இனிப்புப் பணியாரம் ஆகும். எவ்வாறு பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும், ஸ்ரீமுருகப் பெருமானுக்குத் தேனும், தினைமாவும், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்குச் சர்க்கரைப் பொங்கலும், ஸ்ரீஆயுர்தேவிக்குப் பொன்னிற உணவும், ஸ்ரீஅப்பக்குடத்தானாகிய பெருமாளுக்கு அப்பமும், ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானுக்கு உளுந்து வடையும், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள் அன்னமும், ஸ்ரீஐயப்பனுக்கு நெய்ப் பொங்கலும், திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதிக்கு லட்டும், ஸ்ரீஉப்பிலியப்பனுக்கு உப்பில்லா அன்னமும், ஸ்ரீராமருக்கு அரவணைப் பாயசமும், ஸ்ரீசந்திர பகவானுக்குப் பால் அன்னமும் என்பது போல ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியான நைவேத்ய அன்னமாக அமைவதுதான் சுய்யம் எனப்படும் இனிப்புப் பணியாரமாகும். இது எவ்வகையில் ஸ்ரீசரபேஸ்வரருக்கு உகந்ததாக அமைகின்றது என்பதை அறிய ஆவலாக இருக்கின்றது அல்லவா!
அரனி அரவணைப்பில் அணைந்த அக்னிப் ப்ரவாகம்!
எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும், எழுதினாலும், உரைத்தாலும், ஸ்ரீநரசிம்ம புராணமானது நம் உள்ளத்துள் தெய்வீகக் கிளர்ச்சியை எழுப்பி, தீய சக்திகளை வெல்வதற்கான இறை சக்தியைப் பெருக்குகின்றது.. எனவே மீண்டும் அதே வைபவத்தைக் காண்போமா! மிகவும் கொடுங்கோலனாக இருந்து மக்களையும், இறையடியார்களையும் வதைத்த இரண்யனுக்கு ஒரு முடிவைக் காணவே ஸ்ரீநரசிம்மமூர்த்தி உக்ர மூர்த்தியாக அவதாரம் கொண்டு அவனை சம்ஹாரம் செய்தார் அன்றோ! எங்கே இரண்யனுடைய ஒரு துளி உதிரமோ, எலும்புத்துகளோ , சதைப் பிண்டமோ எங்கு விழுந்தாலும் அதிலிருந்து கோடானு கோடிக் கொடியவர்கள் தோன்றி விடுவார்களே என்பதற்காக இவை அனைத்தையும் பஸ்மமாக்கித் தன் உடலில் ஏற்றார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அல்லவா! பல கோடி பாவச் செயல்களையும் தீவினைக் கர்மங்களையும் புரிந்தமையால் இரண்யனுடைய அங்கமே பாவத்தின் கொழுந்தாய், தீவினையின் எரிமலையாகவும் விளங்கியது.. இத்தகைய கொடுந்தேகத்தை சம்ஹாரம் செய்தமையால் ஸ்ரீநரசிம்மருடைய உக்ரம் அபரிமிதமாகப் பெருகியது.. ஆனால் இவையனைத்தும் இறைவனுடைய லீலை தானே! ஸ்ரீநரசிம்மருடைய உக்ரத்தைத் தணிப்பதற்காக ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி அவதாரம் கொண்ட பொழுது முதன்முதலாக ஸ்ரீநரசிம்மரை அரவணைத்து அவருடைய உக்ரத்தைத் தணிப்பதற்கு முன்னர் அவருடைய தொண்டைப் பகுதியைச் சற்றே பற்றினார்... ஆனால் இதனைப் பலரும் ஸ்ரீநரசிம்மருடைய கண்டத்தைப் பிடித்ததாகத் தவறாக எடுத்துரைக்கின்றனர்..
ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி, ஸ்ரீநரசிம்மருடைய தொண்டையை சற்றே ஸ்பரிசித்த போது---
இரு அவதார மூர்த்திகளின் ஸ்பரிசத்தால், அவதார மூர்த்திகளின் சங்கமத்தால் ஆங்கே எழுந்த பேரொளியைக் கண்டு... தேவாதி தேவர்களும், தெய்வ மூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகியரும், சித்புருஷர்களும் , பரமானந்தம் அடைந்தனர்.... வேறெங்கும் காணக்கிடையா பேரொளியது! அவதார மூர்த்திகளின் சங்கம ஸ்பரிசம் என்றால் அதன் பரம்பொருட் பேரொளித் தன்மையை விண்டுரைக்கவா இயலும்! இரண்டு மூர்த்திகளுமே அக்னிப் ப்ரவாகமாக ஜ்வலித்தமையால், மேலும், இரு உக்ர அவதார ஸ்பரிசத்தால் ஏற்பட்ட அக்னி ப்ரவாகத்தால் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வடவாக்னி போன்ற ஸ்ரீருத்ராக்னி பசி உண்டாயிற்று. இந்த அக்னிப் பசியை எவ்வாறு நிவாரணம் செய்ய இயலும்? இதற்காகவே அங்கே அனைத்து ஜீவன்களுக்கும் அன்னம் படைக்கும் ஸ்ரீஅன்னபூரணி தேவி தோன்றினள்.. தம் அன்னம் வார்க்கும் திருக்கரங்களில் அன்னக் கரண்டியுடன்!
அனைவருக்கும் படியளக்கும் ஸ்ரீஅன்னபூரணியே படைத்த பிரசாதம்!
சாலுவேச ருத்ராக்னிப் பசியால் வாடிய அனைவருக்கும் எதைத் தந்து ருத்ராக்னிப் பசியைத் தீர்ப்பதோ என்று ஸ்ரீஅன்னபூரணி தேவி சற்றே திணறி நல்வழி காண இறைவனை வேண்டிட, அப்போது ஸ்ரீசாலுவேசராகிய ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி நரசிம்மருடைய தொண்டைக் குழியைச் சற்றே ஸ்பரிசித்து அரவணைத்திடவே, தெய்வ மூர்த்திகளின் சங்கம ஒளி ப்ரவாகத்தால் ஆங்கே ஜோதித் திவலைகள் திரண்டன! அவற்றையெல்லாம் தன்னுடைய அகப்பையில் தாங்கிய ஸ்ரீஅன்னபூரணி தேவி அனைத்தையும் அப்படியே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்குப் படைத்திட்டாள்... ஏனென்றால் அந்த ஜோதித் திவலைகளில் ஒன்றையேனும்,அவற்றுள் சிறு அணுத்திவலையையேனும் தாங்குவதற்கான சக்தி எவருக்கும் இல்லை..
எனவே இவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்திய ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி அவற்றைத் தம் தேகத்தில் ஏற்றிடவே ஆலகால விஷம் உண்ட சர்வேஸ்வரனின் தொண்டைக் குழிவழியே அத்திவலைகள் மெல்ல மெல்லச் செல்கையில்... ஆங்கே.... தொண்டைக் குழியிலிருந்து அமிர்தத் திவலைகள் தெறித்தன.. அவற்றைத், தன் அகப்பையில், மீண்டும் ஏந்தினாள்.. ஸ்ரீஅன்னபூரணி தேவி ., அதனையே சர்வேஸ்வரனுக்குப் படைத்து ஆங்கே குழுமியிருந்த அனைவருக்கும் தெய்வப் பிரசாதமாக அளித்திட்டாள்... இவ்வாறு திரண்ட அமிர்தத் திவலைகள் தாம் அகப்பையிலே சுய்யமாக, இனிப்புப் பணியாரமாக மாறி அமிர்த விருந்தாய் அனைவருக்கும் பிரசாதமாயிற்று... ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் திவ்யமான தொண்டைக் குழியில் திளைத்து எழுந்தமையால் இவை குழிப்பணியாரமாக அமிர்தத் திவலைகளுடன் சேர்ந்து சுய்யமாக இனிப்புப் பணியாரமாக மாறிற்று..எனவே, ஸ்ரீசரபேஸ்வரருக்கு மிகவும் ஏற்புடைய நைவேத்ய பிரசாதமே சுய்யம் எனப்படும் இனிப்புப் பனியாரமாகும்.. பிரதோஷ வேளையில் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையன்று ராகு காலத்தில் ஸ்ரீசரபேஸ்வரருக்கு வெண்ணெய் மற்றும் சந்தன உருண்டையால் அர்ச்சித்து, சுய்யம் எனப்படும் இனிப்புப் பணியாரத்தைப் படைத்து வணங்கி, இதனை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருவதால் ஏற்படும்  பலாபலன்களோ அபரிமிதமானவை..
நைவேத்திய பலன்கள்
அன்பான தன் மனைவியின் அன்பு நேயத்தை நன்கு உணராது மூர்க்கத் தனமாகவும், முரட்டுத் தனமாகவும் நடந்து வருகின்ற கணவன் நன்முறையில் திருந்தி வாழ்ந்திட மனைவியானவள் இத்தகைய சுய்யம் எனப்படும் இனிப்புப் பணியாரத்தை ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷ நேரத்தில் ஸ்ரீசரபேஸ்வரருக்குப் படைத்து அன்னதானமாக அளித்து வந்தால், கணவன் நல்லொழுக்கம் பெற்று, நன்முறையில் திருந்தி, இல்லற வாழ்க்கை சாந்தமாக அமையும்.,
பகைமை, முன்விரோதம், குரோதம் காரணமாக சுற்றத்தாரிடமும், நண்பர்களிடமும், நிலம், வீடு போன்ற பெரும் சொத்துக்களை இழந்தோர், அவற்றை நியாயமாக, தார்மீகமான முறையில் மீண்டும் பெற்றிட இத்தகைய சுய்யப் பிரசாதப் படைப்பும், ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி வழிபாடும் பெரிதும் உதவும்..
பெரும்பாலான குடும்பங்களில் தாயோ, தந்தையோ, அநாகரீகமான முறையில் வாழ்வதாலும், தீயொழுக்கத்தாலும் அவர்களுடைய குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்... ஒழுக்கம் தவறிச் செல்லும் தம்முடைய பெற்றோர்களோ, பிள்ளைகளோ, நன்முறையில் திருந்தி வாழ்ந்திட இத்தகைய ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி வழிபாடு பெரிதும் உதவுகின்றது.

ஐயப்ப விரத மகிமை

நடைமுறையில் ஸ்ரீஐயப்ப விரதத்தில் விளங்குகின்ற குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் கடந்த பல மாதங்களாக விளக்கி வருகின்றோம் அல்லவா? இது மட்டும் அல்லாது ஸ்ரீசித்புருஷர்கள் அருள்கின்ற பலவிதமான தெய்வமூர்த்தி வழிபாடுகளில் ஸ்ரீஐயப்ப விரத மகிமை பற்றிய விளக்கங்களும் நிறைந்து காணப்படுவதால் அவற்றையும் இத்தொடரில் நாம் எடுத்துரைத்து வருகின்றோம். இவற்றை ஐயப்ப பக்தர்கள் நன்கு உணர்ந்து கடைபிடித்து பரம்பொருளாம் ஸ்ரீஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகங்களைப் பெற்று உய்யுமாறு பிரார்த்தனை செய்கின்றோம்...
ஐயப்ப விரதத்திற்கான ஆடை இலக்கணம்
ஸ்ரீஐயப்ப விரதத்திற்குரிய ஆடை நிற இலக்கண விதிமுறைகளைப் பற்றி நாம் ஏற்கனவே நன்கு விளக்கியுள்ளோம். நீலம், கருநீலம், கறுப்பு நிற ஆடைகளே ஸ்ரீஐயப்ப விரதத்திற்கு ஏற்புடையதாகும், மீண்டும் வலியுறுத்துகின்றோம் புனிதமான துறவிகளைத் தவிர வேறு எவருமே காவி உடையை அணிதல் கூடாது... இந்த நியதியிலிருந்து எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.. 18 முறை, 21 முறை என எத்தனை முறை ஸ்ரீசபரிமலை யாத்திரை சென்றிருந்தாலும் சரி, ஸ்ரீஐயப்ப மகர ஜோதி தரிசனம் பலமுறை பெற்ற குருமார்களாக இருந்தாலும் சரி அவர்கள் இல்லறவாசிகளாக இருப்பின் அவர்களும் கூட முழுமையான துறவுத் தவம்தனை ஏற்காத போது விரத காலங்களில் கண்டிப்பாகக் காவியுடை அணியக் கூடாது.
ஏனென்றால் ஒரு முறை காவி அணிந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் காவி உடையை அணிந்து புனிதமான துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.. ஒரு மண்டலத்திற்குக் காவி அணிவது, பிறகு அதைக் கழற்றி விட்டு வேறு உடையை அணிவது என்பது காவி உடையையே அவமதிப்பது மட்டுமல்லாமல் இதனால் கடும் சாபங்களும் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. இந்த முக்கியமான தெய்வீக நியதியை, நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்குக் காரணமே தற்போது இரண்டு, மூன்று முறை ஸ்ரீஐயப்ப விரதம் பூண்டு ஸ்ரீஐயப்ப தரிசனம் பெற்றவர்களும் கூட குருமார்களாக ஆகிக் காவி அணிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்ற வேதனைக்குரிய நடைமுறை அமைப்புகளால் தான், பழக்கங்களால் தான்!
ஸ்ரீஐயப்ப விரதத்திற்காகப் பயன்படுத்த வேண்டிய நீல, கருநீல, கறுப்பு நிற ஆடைகள் மிகவும் பவித்திரமாக பூஜிக்கப்பட வேண்டிய ஆடைகளாகும். விரத ஏற்பு நாளை முன்னரே அறிந்து கொண்டு அதற்கு ஒரு மண்டலத்திற்கு முன்பே ஸ்ரீஐயப்ப விரதத்திற்கான ஆடைகளுக்கான பூஜைகளைத் தொடங்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று ஸ்ரீஐயப்ப விரதத்தைத் தொடங்க நினைத்தால் அவர் அதற்கு முன் 45/48 நாட்களுக்கு முன்னால் அதாவது புரட்டாசி தேர்ந்தெடுத்து அன்று விரத ஆடைகளுக்குரித்தான பூஜைகளைத் தொடங்க வேண்டும்.. ஏனென்றால் விரத பூஜைகள் பரிபூரணம் அடைய வேண்டும் என்றால் அதற்குரித்தான உபபூஜைகளையும் பூரணமாக நிறைவேற்றினால் தான் இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து விரத பூஜை மூலம் அனைத்து வரங்களையும் பெற்றுத் தர ஏதுவாகும். ஒவ்வொரு முறையும் விரதத்திற்காக புது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது சிறப்புடையதாகும். பலர் பல்லாண்டுகளாக அணிந்து வருகின்ற ஆடைகளைப் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமானது அல்லவே.
ஒரு முறை அணிந்த விரத ஆடைகளை நன்றாகத் துவைத்து சுத்தப்படுத்தி அதை தானமாக அளித்து விட்டால் அளப்பரிய பூஜா சக்திகளும், வரங்களும் அதை பெறுபவருக்குக் கிடைக்கின்றதல்லவா! இதற்குரிய இஷ்ட பூர்த்தி தான பலன் சிறப்பாக நம்மை வந்து சேரும். இந்த ஆடையை தானமாக வாங்க பிதுர்விரத பொன்னம்பல தேவதைகள் காத்து நிற்கும்.. பிறருடைய நல்வாழ்விற்காக ஒரு கருவியாக அமைவது தானே இந்த தெய்வீக வாழ்க்கையின் லட்சியம். இதற்கு ஸ்ரீஐயப்ப விரதம் பலவிதமான வழிகளிலும் நமக்குப் பெரிதும் உதவுகின்றது..
உண்மையில் வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலத்திற்கு நாம் அனுஷ்டிக்கும் ஸ்ரீஐயப்ப விரதமானது அடுத்து வரும் ஒரு வருடத்தில் நாம் எதிர்நோக்கும் இன்ப, துன்பங்களைச் சமாளிப்பதற்கும், அனுபவிப்பதற்கும் தேவையான நல்வரங்களைப் பெற்றுத் தருகிறது. மேலும், ஒரு வருட பரிபூரண ஸ்ரீஐயப்ப விரத பூஜையானது நமக்குத் தருகின்ற அருளை விளக்க முடியாது, அத்தகைய தெய்வீக சக்தியை தாராளமாகத் தந்துவிடுகின்றது.. பிறவியற்ற பெருவாழ்வைப் பெற்றுத் தருவதே ஸ்ரீஐயப்ப விரத பூஜையாகும்.
விரத ஆடைத் தேர்ந்தெடுப்பு
ஸ்ரீஐயப்ப விரதத்திற்கான புது ஆடைகளை வாங்கும் போது நல்ல நேரம், நாள் பார்த்து வாங்குவதே சிறப்புடையது. பொதுவாக புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் மூன்றுமே சிறப்புடையதாகும். திருஓணம் நட்சத்திரம் இதில் கூடுமாயின் அது மிகவும் உத்தமமாகின்றது. புதன், குரு, வளர்பிறை சந்திர ஹோரை நேரங்களிலும், அமிர்த, சித்த யோகத்திலும் ஆடைகளை வாங்குவது சிறப்புடையதாகும். உத்தராயணத்திலேயே (தை முதல் ஆனி வரை) ஆடைகளை வாங்கிட வேண்டும். ஏதோ கடைக்குப் போனோம், வாங்கினோம் என்றல்லாது நீங்களே இத்தகைய ஜோதிட கணித முறைகளை அறிந்து குல தெய்வ மூர்த்தியை நினைந்து வழிபட்டு, இஷ்ட தெய்வ மூர்த்தியை தியானித்து, வணங்கி வழிபடும் பிரார்த்தனா மூர்த்தியான ஸ்ரீஐயப்பனையும் வேண்டிக் கொண்டு மேற்குறித்த நல்ல நாட்களில் ஆடைகளை வாங்கிடுக!
எப்போதும் மூன்று செட் ஆடைகளை வாங்குவதே சிறப்புடையதாகும். புது ஆடைகளை சாக்குப் பையிலோ, தோல் பையிலோ, பிளாஸ்டிக் பையிலோ போட்டு எடுத்து வராமல் பருத்தி ஆடைப் பையில் போட்டு எடுத்து வர வேண்டும். ஏனென்றால் விரதத்திற்கு அணிகின்ற ஆடைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே புனித சக்தியை ஊட்டுவது உங்களுடைய முக்கியமான கடமையாகும்.. ஒரு மனிதன் 24 மணி நேரமும் பயன்படுத்துகின்ற பொருளாக அவன் அணியும் ஆடையும், அணிகலன்களும் அமைவதால் இவை நன்முறையில் அமைந்தால்தான் பக்தியும், நல்லொழுக்கமும் மேம்படும். புது ஆடைகளை வாங்கும் போதும் பலமுறை ஸ்ரீசபரி மலை யாத்திரை சென்று வந்தவர்கள், 80 வயது நிறைந்த சதாபிஷேகம் கொண்டாடிய தம்பதிகள், வேதங்களைக் கற்றுணர்ந்து நான்கு வேதங்களையும், தமிழ் மறைகளையும் முறையாக ஓதிவருகின்ற பெரியவர்கள், தாய்மார்கள், ஈன்ற தாய் இவர்கள் கையால் வாங்குவது உத்தமமாகும்.
மேலும், ஆறு குழந்தைகளுக்கு மேல் பெற்ற தம்பதிகளின் கரங்களால் ஆடைகளை வாங்கினால் விரத விருத்தி மேம்படும் என்பதையும் அறிந்து கொள்க. ஒரு ஆடையை வாங்கும் போது கூட எத்தகைய எளிய தெய்வீக வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள் என்றறியும் போதுதான் நாம் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு காரியத்தையும், தெய்வீக சிந்தனையோடு செயலாற்ற வேண்டும் என்று உணர்ந்து கொள்ள முடியும்.
ஐயப்ப விரதத்தில் பணபலத்தையோ, பதவி பலத்தையோ, அதிகார பலத்தையோ துளிக் கூட காட்டாமல் எளிமையாக இருப்பது மிக முக்கியமாகும்..
தர்ப விதான பூஜை
தர்ப்பணத்திற்கு மட்டுமல்லாது கோயில் கும்பாபிஷேகம், சஷ்டியப்த, சதாபிஷேகம் (60/80வயது நிறைவு) போன்ற புனிதமான காரியங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு தெய்வீக மூலிகையாக தர்பை அமைகின்றது. ஒவ்வொரு இல்லத்திலும் நுனி தர்ப்பையும், கட்டை தர்ப்பையும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம் இல்லத்திற்குப் பித்ருக்கள் விஜயம் செய்யும் போது (அமாவாசை, முக்கிய திதிகள், நட்சத்திர நாட்கள், மாத பிறப்பு நாட்கள்) முக்கியமான ஜோதி ப்ராக்ருத சக்திகள் நிறைந்த பொருட்களில் மட்டும் தான் தங்கிச் செல்வார்கள்.., அவர்களுடைய தேஜோ மயமான, சூட்சும ஒளி தேகங்கள், வடிவங்கள், தங்குகின்ற புனிதமான பொருட்களில் சிலவே – சந்தனம், குத்து விளக்கு, தர்ப்பையாகும்.,
பொதுவாக புத்தாடைகள் அணிவதற்கு ஏற்ற தினம் புதன்கிழமையாகும், வீட்டில் எந்தப் புது ஆடைகளை வாங்கி இருந்தாலும் அதை புதன் கிழமையில் புதன் ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2) உரிய பூஜை முறைகளை நிறைவேற்றி ஆடைகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு அணியும் வழக்கத்தை மேற்கொள்வீர்களேயானால். உங்கள் இல்லத்தில் ஆடைகளுக்குத் தட்டுப்பாடும், தரித்திரமும் எப்போதுமே ஏற்படாது. மேலும் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கொரு முறையாவது கிழிந்த இடங்களைத் தைத்து நன்முறையில் சலவை செய்து தானம் அளித்து பழகுங்கள், புதுத் துணி/ஆடை தானம் சிறப்புடையது. ஒரே வேஷ்டி, சட்டை, புடவையைப் பல வருடங்களுக்கு அணிகின்ற வழக்கத்தைத் தவிர்த்து ஆறு மாதத்திற்கொரு முறை ஆடைகளை தானமாக அளித்துப் புது ஆடைகளை அணிந்து ஆடை தான சக்தியின் புனிதத்தை உங்கள் வாழ்வில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் பழைய, கிழிந்த ஆடைகளைத் தானமாக அளித்தல் கூடாது.
விரத ஆடையைத் துவைக்கும் முறை
நாம் ஏற்கனவே கூறியது போல் 24 மணி நேரமும் நம்முடன் ஒட்டி உறைகின்ற ஆடைகளில் தீய கர்மப் படிவுகள் சேர்ந்து விட்டால் அது நமக்கு வேதனைகளையும், துன்பங்களையும் தான் பெற்றுத் தரும். வெறும் சோப்புப் போட்டு துவைத்து விடுவதால் மட்டும் அதில் உள்ள அழுக்கு நீங்கி விடும் என்று எண்ணாதீர்கள். அழுக்கு போவதை விட ஆடைகளில் உள்ள கர்மப் படிவுகள் நீங்குவது தான் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். என்னதான் சோப்புப் போட்டு அழுக்கை நீக்கினாலும் இறுதியாக பூந்திக் கொட்டை எனப்படும் மூலிகைத் தாவர வித்துக்கள் ஊறிய நீரில் ஆடைகளை அலசினால் தான் ஆடைகளில் உள்ள கர்மப்படிவுகள் ஓரளவு நீங்கும். வெறும் ரசாயணத்தால் கர்மவினைகள் போகாது! ஓடுகின்ற ஆற்று நீரில் துவைத்தல், ஆடைகளைப் பிழியும் போது சில மந்திரங்களை உச்சரித்தல், ஆடைகளை உலர வைக்கும் போது அதற்குரித்தான மந்திரங்களை ஓதுதல் இவற்றின் மூலம் ஆடைகளில் படிந்துள்ள கர்மப் படிவுகளை நீக்கி விடலாம். இதிலிருந்து தான் “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற ஆன்றோர் மொழி ஏற்பட்டது..
விரத ஆடைக்குரிய விழுமிய வழிபாடு!
நீராடிய பின்னர் ஒரு மரப்பலகையில் அமர்ந்து ஸ்ரீஐயப்ப விரதத்திற்கான ஆடைகளை ஒரு தட்டில் வைத்து மூன்று தர்பைகளை எடுத்துக் கொண்டு தர்பையின் ஒரு நுனி ஆடைகளின் மேலும், மேலும், மற்றொரு நுனி பஞ்சபாத்திரத்தில் (செப்பு, வெள்ளி, வெண்கலப் பாத்திரம்) உள்ள நீரில் படுமாறும் வைத்துக் கொள்ள வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரில் கங்கை, காவிரி போன்ற புனித நதி தீர்த்தங்களையும், துளசி, வில்வ தளங்களையும் சேர்க்க வேண்டும். மேலும் மூன்று தர்ப்பைகளை எடுத்துக் கொண்டு அவற்றை வலக்கையில் பிடித்துக் கொண்டு தர்பையின் மறு நுனியானது பஞ்சபாத்திரம், ஆடை இரண்டையும் தொட்டுக் கொண்டிருக்கும் தர்பையின் நடுப் பகுதியைத் தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்..,
நீங்கள் ஓதுகின்ற மந்திரமானது வலக்கை தர்ப்பை மூலமாக பஞ்ச பாத்திரத்தை அடைந்து தர்ப சக்தியையும், தீர்த்தங்களின் புனித சக்தியையும் சேர்த்துக் கொண்டு ஆடைகளை அடைந்து அவற்றை மேலும் புனிதமாகவும், தூய்மையாகவும் மாற்றுகின்றது. வலது கையில் நீங்கள் பிடிக்கின்ற தர்ப்பையை உங்கள் மனைவியிடம் அளித்து இருவரும் சங்கல்பம் செய்து கொண்டு மனைவியின் அனுமதியுடன் தான் நீங்கள் இந்த ஆடை பூஜையை மேற்கொள்ள வேண்டும். இதன் முக்கிய உள்ளர்த்தம் என்னவென்றால் எந்தவித விரத பூஜைக்கும் மனைவியின் முன் அனுமதி வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
இன்றைக்கும் முக்கியமான திருமணம், சீமந்தம் போன்ற சடங்குகளில் தர்ப்பைகளை முதலில் மனைவியிடம் தந்து அனுமதி பெற்றுத் தான் பூஜைகளைத் தொடங்குவர். இவ்வாறாக நாம் பெரியோர்கள் விதித்துள்ள எல்லா பூஜை முறைகளிலும் ஏராளமான தெய்வீக அர்த்தங்கள் பொதிந்துள்ளன. புத்தாடைக்கான மந்திரத்தை 108 முறை ஓதி ஆடை பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் (48/45 நாட்கள்) தினந்தோறும் விரதத்திற்கான ஆடை பூஜையைச் செய்த பின்னர்தான் அந்த ஆடைகளை ஐயப்ப விரதம் ஏற்கும் அன்று அணிந்து கொள்ள வேண்டும். நாளைக்கு விரதம் ஏற்க வேண்டும் என்றால் இன்றைக்கு கடைக்குப் போய் விரத ஆடைகளை வாங்குவதால் எவ்வித நன்மையும் கிடையாது.
ஸ்ரீஐயப்ப விரதன் என்றால் அதன் நெறிமுறைகளைப் பரிபூரணமாக தக்க பெரியோர்களிடம், சற்குருமார்களிடமிருந்தும் பெற்று முறையாக நிறைவேற்றினால் தான் பூரண அனுகிரக சக்தியையும், காரிய சித்தியையும் பெற்றிடலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் பூஜை முடிந்ததும் ஆடைகளை எடுத்து மடித்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் பூஜையைத் தொடர்ந்திட வேண்டும்.. விரத ஆடைக்கான பூஜையைத் தொடங்கும் போது ஒருமுறை மட்டும் மனைவியின் அனுமதியைப் பெற்றால் போதும், மறுநாளிலிருந்து யார் வேண்டுமானாலும் இல்லத்தில் இந்த பூஜையைத் தொடர்ந்து செய்திடலாம். தினமும் குறித்த நேரத்தில் இந்த ஆடை பூஜையை மேற்கொள்வது சிறப்புடையதாகும்.

பணத்தில் புழங்குவோருக்கு ...

பணத்தில் புழங்குவோருக்கு  சில ஆன்மீக வழிமுறைகள்
வங்கியில் கேஷியராகப் பணிபுரிபவர்கள், பணம் புரளும் பட்டணத்துப் பட்டுத் துணிக் கடைகளில், நகைக் கடைகளில், பல வியாபாரத் தலங்களிலும் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருப்பவர்கள், பல நிறுவனங்களிலும் Cash Counter-ல் பணிபுரிபவர்கள், கரன்ஸி செஸ்ட் (RBI Currency Chest) போன்ற இடங்களில், பெரிதும் பணம் புழங்கும் பகுதிகளில் இருப்போர், பெரும் தனவந்தர்கள், அபரிமிதமாக வியாபாரம் நடக்கின்ற கடைகள் இவ்வாறு தினந்தோறும் பணத்தில் புழங்குகின்றவர்கள் அல்லது பணம் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிகின்றவர்கள் ஏராளம்! ஏராளம்!!
நாம் உயிர் வாழ்வதற்குக் கலியுகத்தில் பணம் அல்லவா மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. பணம் என்றால் பாதாளம் வரைபாயும் என்று சொல்லும் அளவிற்கு இன்றைய உலகில் பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பணம் என்பது ஒரு மாயை! பணம் இன்றி வாழ்க்கை நடைபெறாது என்று எண்ணுவதும் ஒரு மாயைதான்! பிச்சைக்காரன் ஆயினும், பெரும் பணக்காரன் ஆயினும், புற்று எறும்பு ஆயினும் அனைவருக்கும் இறைவன் தான் படியளக்கின்றான் என்பதே உண்மை! ஆனால் கலியுகத்தில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு, சம்பாதிப்பதற்காகத் தானே அவன் நாள் முழுதும் உழைக்கின்றான். இதைப் பார்க்கும் போது பணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது அல்லவா? இல்லை நிச்சயமாக இல்லை! பசி எடுத்தால் பணத்தையா உண்ண முடியும்?
இறை நியதிப்படி ஒருவருக்கு எவ்வளவு பணம் வர வேண்டுமோ அல்லது சேர வேண்டுமோ அந்த அளவிற்குத்தான் அது சேரும். கோடி, கோடியாகப் பணம் சேர்கின்ற இடமானாலும் சரி, பைசா, பைசாவாகப் பணம் சேர்க்கின்ற பிச்சைக்காரனுடைய கிழிந்த பையாக இருந்தாலும் சரி, இறைநியதிப்படி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கிட்ட வேண்டுமோ அதில் எவ்வளவு சேமிப்பாக வேண்டுமோ, அல்லது எவ்வளவு செலவழிக்கப்பட வேண்டுமோ அது நிச்சயமாக நடந்தே தீரும்.!
பணத்தின் மேலுள்ள படிவுகள்!
பணத்தைப் பற்றிப் பலவிதமான தெய்வீக இரகசியங்கள் உண்டு. எந்தப் பணத்தையும் பதுக்கியோ, பூட்டியோ வைத்திடாதீர்கள். எதற்கும் அவசரச் செலவிற்கு ஆகட்டும் என்று ஒரு 100 ரூபாயையோ, 500 ரூபாயையோ எடுத்து டப்பாவிலோ, பீரோவிலோ நெடுநாள் வைப்பதும் கூடாது. இவ்வாறு வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ரூபாய் நோட்டு கிடப்பதால் யாருக்கும் எவ்விதப் பலனும் கிடையாது. அவ்வப்போது அது மாற்றப்பட வேண்டும். எப்பொருளும் வீணாகக் கிடக்காது, நன்முறையில் பயன்பட்டாக வேண்டும், ஒரு பண நோட்டில் படிகின்ற நல்ல, தீய கர்மவினைப் படிவுகள் ஏராளம், ஏராளம். அது எத்துணை ஆயிரம், லட்சக்கணக்கான கரங்களில் தவழ்ந்து வந்திருக்கும் என்பதை சற்றே யூகித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாணயமும், ஒவ்வொரு பண நோட்டும் நல்லவிதமாகவா வருகின்றது? மதுபானக் கடையிலிருந்து பீடி சிகரெட் விற்ற பணத்திலிருந்து என்றவாறாகத் தவறான முறையில் வருகின்ற பணமும் உண்டு அல்லவா?
நீங்கள் உங்களுக்குரிய சம்பளமாக எந்த விதத்தில் பணத்தைப் பெற்றாலும் அது பாவங்கள் நிறைந்த இடமாகிய மதுபானக் கடை, பீடி, சிகரெட் கடை, கேளிக்கை இடங்கள், ஆபாசப்படம் ஓடும் சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களிலிருந்து அந்தப் பணம் வருமேயானால் நிச்சயமாக அது உங்களை பாதிக்கத்தான் செய்யும். “அப்படியானால் இது மிகவும் அச்சம் தரக்கூடியதாக அல்லவா இருக்கின்றது? இதைப் பற்றி பயந்து கொண்டிருந்தால் நாம் எப்படி சாதாரண வாழ்க்கையா வாழ முடியும்?” என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? உண்மையே!
இதற்காகத்தான் எந்தப் பணம் உங்கள் கைக்கு வந்தாலும் சரி, அதிலுள்ள ஓரளவு கொடுமையான, கடுமையான தீவினைக் கர்மங்களை அகற்றுவதற்கு நீங்கள் சில பூஜைகளைச் செய்தாக வேண்டும். இப்படிச் செய்து வந்தால் பண நோட்டின் மேல் படிந்திருக்கும் தீவினைப் படிவுகளை ஓரளவு நீங்களாகவே அகற்றிடலாம்.. அது மட்டுமல்லாது இவ்வாறு பூஜை செய்யப்பட்ட ஒரு பண நோட்டானது உங்களால் செலவழிக்கப்படுமேயானால் அது செல்கின்ற இடமெல்லாம் நிச்சயமாக நன்முறையில் தான் பயன்படும் என்று உறுதியாகக் கூறமுடியும்.
லஞ்ச, லாவண்யங்களாலும் அதர்மமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியைக் கோயில் உண்டியலில் செலுத்தி விட்டால் தாங்கள் பாவச் செயலிலிருந்து விடுபட்டு விடுவதாகப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். ஏனென்றால் இன்று நீங்கள் ஒரு 100 ரூபாயைக் கோயில் உண்டியலில் சேர்த்து அது கோயில் நற்காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது உங்களுக்கு அந்த 100 ரூபாயின் முழுப் புண்ணிய சக்தியும் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.. ஏனென்றால், நீங்கள் உண்டியலில் சேர்த்த பணம் உங்கள் உழைப்பின் மூலமாக மட்டுமே வந்திருந்தால் தான் அந்த 100 ரூபாயின் புண்ணிய சக்தி உங்களுக்கு வந்து சேரும். ஆனால் அந்த பணம் லஞ்சமாகவோ, அதர்மமான முறையிலோ அல்லது திருடப்பட்ட பொருளாகவோ அல்லது பிறருடைய பொருளாகவோ இருப்பின் அந்த 100 ரூபாய்க்கு உரித்தான புண்ணியம் முழுமையாக உங்களுக்கு வந்து சேராது. அதில் எவரெவருக்கு உண்மையான பங்குண்டோ அவரவருக்குத்தான் போய் சேரும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்..
சற்குருவின் நிதிப் பரிபாலனம் (DIVINE EXCHANGE)
இதற்காகத்தான் அக்காலத்தில் கோயிலுக்கெனத் தனியாகப் பணத்தைச் சேர்க்கும் போது அதனை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைப்பார்கள். மஞ்சளுக்கு தோஷங்களை நீக்கி எதனையும் புனிதப்படுத்தக் கூடிய சக்தி உண்டு.. எனவே, மஞ்சள் துணியில் பணத்தைச் சேர்க்கின்ற போது அதில் உள்ள தீய கர்ம வினைப்படிவுகளை அது ஓரளவு நீக்கி விடுகின்றது.. இதற்காகத்தான் நாம் தக்க சற்குருவைச் சரணடைந்தால் நமக்கு வருகின்ற பணத்தின் குணாதிசயங்களைக் கொண்டு எவ்வளவு உண்டியலுக்குச் செல்ல வேண்டும், எது அன்னதானமாக, வஸ்திர தானமாகப் பயன்படுத்தப்பட வேண்டும், எது காசி, இராமேஸ்வர திருத்தல யாத்திரைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், எவ்வளவு குடும்பம், கல்வி, உணவு போன்ற காரியத்திற்குப் பயன்பட வேண்டும் என்று பல்வேறு வழிமுறைகளையும் பணம் வந்த விதத்திற்கேற்ப அதற்கு உரியோரின் விதி நியதிகளுக்கேற்ப அந்த சற்குருவே நல்ல வழி முறைகளைத் தந்திடுவார்.
இதுவே சற்குருவின் தெய்வீக இலக்கணமும் இலட்சியமும் ஆகும். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு அங்கத்திலும் நமக்கு நல்வழி காட்டுபவரே சற்குரு ஆவார். பணத்தில் புழங்குபவர்களைப் பற்றிய குறிப்பை நாம் இந்தக் கட்டுரையில் தொடங்கினோம் அல்லவா? லட்சக்கணக்கான அளவில், பணம் புரள்கின்ற வங்கி, L.I.C வியாபாரத் தலங்களில் பணத்தைத் தொட்டு எண்ணி, கணக்கிட வேண்டிய பணியைப் புரிபவர்கள் எத்தகைய இறைவழிபாடு முறைகளைக் கையாள வேண்டும் என்பதைக் காண்போம்..
காசாளர் தொழிலில் கர்ம வினைப்பாங்கு!
பொதுவாக கேஷியர் என்ற தொழிலை எடுத்துக் கொள்வோம். இவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்கு முன்னர், முதலில் ஸ்ரீகுபேர பகவானையும், சங்கநிதி, பதுமநிதி தேவதா மூர்த்திகளையும், ஸ்ரீதன லட்சுமியையும் பிரார்த்திக் கொள்தல் வேண்டும். ஏனென்றால் 100, 250, 500 ரூபாயைப் பார்க்க இயலாத நிலையில் பலர் வறுமையிலும் நடுத்தரக் குடும்பங்களிலும் வாடுகின்ற போது இவர்கள் லட்சுமி தேவியின் கடாட்சத்தால் தான் லட்சக்கணக்கான பணத்தைத் தொட்டுப் பார்க்கின்ற அனுக்கிரகத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நன்றாக உணர்தல் வேண்டும். ஒரு பக்கம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தைத் தொட்டுப் பார்ப்பது ஐஸ்வர்ய கடாட்சமாக இருக்க, பணக்கட்டுகளில் படிந்துள்ள நல்வினை, தீவினை கர்மப் படிவுகளையும் தொட வேண்டிய நிலையிலும் இவர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இது தான் மாயை! பூர்வஜென்ம வினை! எனவேதான், ஐஸ்வர்ய தேவதா மூர்த்திகள் வழிபாட்டோடு தங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தையும் முதலில் பிரார்த்தித்த பின்னர்தான் இவர்கல் தங்கள் பணக் கணக்குத் தொழிலைத் தொடங்குதல் வேண்டும். அலுவலகத்தில் பணத்தைத் தொடு முன்னர் கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்தல் வேண்டும். சோப்புப் போட்டு கைகளை அலம்புவதோடு மட்டுமல்லாது பணத்தை எண்ணுவதற்காக ஒரு குப்பியில் நீரை வைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா? அதில் கங்கை, காவிரி புனித நீர் வைத்துக் கொண்டால் அதைத் தொட்டு பணத்தை எண்ணுகின்ற போது உடலுக்கு ஒரு தெய்வீக சக்தி கிட்டுவதோடு மட்டுமல்லாமல் பணத்தில் உள்ள தீவினைக் கர்மங்கள் இவர்களை அண்டாமல் தடுப்பதோடு பண நோட்டைப் புனிதமாக்கும் நற்காரியத்தையும் செய்கின்றார்கள்..
துதியுடன் நிதி!
மேலும் பணத்தை எண்ணும் போது உள்ளூர மந்திரத்தை உச்சரிக்கின்ற நற்பண்பையும், தெய்வீகப் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வாறு மந்திரத்தைத் துதித்துக் கொண்டே பணத்தை எண்ண முடியும்? எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டு விடாதா? முதலில் இது சற்றுக் கடினமாக இருப்பினும் பழகப் பழக இது சரியாகி விடும். இதற்காக இந்த மந்திரத்தை ஒரு அட்டையில் எழுதி கௌண்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் இந்த மந்திரத்தைத் துதித்துக் கொண்டே பணத்தை எண்ணுவது கடினமாக இருக்கும் ஆதலின் இந்த மந்திரத்தை அவ்வப்போது கண்ணால் பார்த்துக் கொண்டால், ஒரு வாரத்திற்குள்ளாகவே இது நிச்சயமாக நன்றாகப் பழகி விடும். உள்ளூர மனதில் மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்க மற்றொரு மனதால் வேகமாக பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் மனஆற்றல் பெறுதற்கரிய தியான நிலைகளில் ஒன்றாகும்.. அதாவது ஒரே சமயத்தில் இரண்டு மனநிலைகளைப் பயன்படுத்துதல் நல்ல தியானப் பயிற்சி தானே! இதனால் பணநோட்டிற்கு தெய்வீக சக்தி ஊட்டப்படுகின்றது..
பணமும், மல்லிகை மணமும்
பணத்திற்கும், மல்லிகைப் பூவிற்கும், நிறைய தொடர்பு உண்டு.. எனவே, ஒவ்வொரு கேஷியரும், தனவந்தர்களும், நடுத்தர மக்களும், அனைவரும் தங்கள் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் சிறு சந்தனப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் தினந்தோறும் மல்லிகைப் பூக்களை வைத்துக் கொண்டு வர வேண்டும். முதல் நாள் வைத்த மல்லிகைப் பூக்களை மறுநாள் களைந்து விட்டு புதுப் பூக்களை வைத்து அதன் மேல்தான் பணத்தை வைக்க வேண்டும். இந்த சந்தனப் பெட்டியில் எப்போதும் நாணயமோ, ரூபாய் நோட்டோ  தொடர்ந்து இருந்து வருதல் அவசியமாகும். இல்லம், கடை, அலுவலகத்திற்குரிய எளிய பூஜை இது!
தனரேகை ரகசியம் :- இத்தகைய சந்தன ஐஸ்வர்ய பூஜையைச் செய்து வந்தவனே துரியோதனன் ஆவான். துரியோதனின் வலது கையில் மாலிகா தனரேகை என்ற அற்புதமான தனரேகை அமைந்து இருந்தது. இத்தகைய தனரேகை உடையவர்களிடத்தில் எப்போதும் செல்வம் புழங்கிக் கொண்டே இருக்கும். இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பாண்டவர்கள் ராஜசூய  யாகத்தை நடத்தத் தொடங்கிய போது இந்த யாகத்திற்கான நிதியைப் பெறுவதற்காக முதல் பணத்தை துரியோதனனிடமிருந்து பெற வேண்டும் என்று அருளாணையிட்டார். அரைகுறை மனதுடன் பாண்டவர்கள் இதை ஏற்ற போதிலும் துரியோதனனுடைய கரத்தில் தனரேகை ஓடுவதைப் பின்னர்தான் அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் தந்திரத்தை உணராத துரியோதனன், “கேவலம் பாண்டவர்கள் பிச்சை கேட்டு வந்திருக்கிறார்கள்,” என்று தவறாக எண்ணி அவர்களுக்குத் தன்னுடைய சந்தன பூஜைப் பெட்டியிலிருந்து பணத்தை விட்டெறிந்து முதல் நிதியாக அளித்தான்.
என்ன இருந்தாலும் தனரேகை கொண்டவன் அல்லவா? சந்தனப் பெட்டியிலிருந்த மல்லிகைப் பூக்களிலிருந்த நாணயமானது பாண்டவர்களை அடையும் போது பன்மடங்காகப் பொன் குவியல்களாகத் திரண்டது குறித்து துரியோதனனே அதிர்ச்சி அடைந்தான். ஏனென்றால் குபேரபூஜை நாளன்று குறித்த ஹோரையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவர்களை துரியோதனனிடம் அனுப்பியதால் நேரத்தின் தன்மையை அறியாது தன்னுடைய தனரேகையின் மகிமையை அறியாது அவன் அளித்த நிதியானது அவன் கண்ணெதிரிலேயே பல்கிப் பெருகியது கண்டு அவனுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது. எனவே சந்தனப் பெட்டியில் மல்லிகை மலர்களினூடே நாணயம் மற்றும் பணம் எப்போதும் இருப்பதால் செல்வச் சிறப்பு இருந்து கொண்டேயிருக்கும். இதற்காகவே
1. கேஷியர்கள் அனைவரும் தங்களுடைய அலுவலகத்தில் ஒரு சிறு சந்தனப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் முதல் பண வரவை வைத்துப் பிறகு தங்களுடைய பணிகளைத் தொடங்க வேண்டும்.
2. மேலும் கேஷியர்கள் அவரவர் மரபுப்படி எப்போதும் நெற்றியில் சந்தனமோ, குங்குமமோ, திருமண்ணோ இட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம் ஐஸ்வர்ய கடாட்சத்தின் பிரதிபலிப்பாகும்.
3. வலது கரத்தில் தங்கம், வெள்ளி அல்லது  செப்பு வளையம் இடுவதும் பணத்தில் உள்ள தீவினை தோஷங்களை நீக்குவதற்குரிய ஒளிக் கிரணங்களைப் பாய்ச்சும் தெய்வீகக் கருவிகளாக அமைகின்றன. அதாவது வளையக் காப்புகள் பணத்தின் மேலுள்ள பலவித தீவினை சக்திகளை பஸ்மமாக்கி அவற்றைத் தொடுவோரின் உடலினுள் புகா வண்ணம் தடுத்து நிற்கும் இரட்சையாக விளங்குகின்றன. பணத்தை எண்ணும்போது ஷுவோ, செருப்போ எதையும் அணிந்திருத்தல் கூடாது.. அதற்கு பதிலாக கால்களை ஒரு மரத்தின் மீதோ, மரப்பலகையின் மீதோ வைத்திருக்கப் பழகிக் கொள்தல் வேண்டும். அதனால் தான் அக்காலத்தில் கால் வைப்பதற்கு என கேஷ் கௌண்டர்களில் ஒரு மரப்பலகை வைக்கப்பட்டிருக்கும். இவர்கள் அமர்கின்ற நாற்காலிகளும் ப்ளாஸ்டிக் அல்லது இரும்பாக இல்லாது மர நாற்காலியாகவும், மரமேஜையாகவும், கால் வைக்குமிடம் மரப் பலகையாகவும் இருத்தல் வேண்டும்.
4. எவ்வாறு மரமானது மின் சக்தியிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றதோ அதே போலத்தான் பண நோட்டுகளில் உள்ள தீவினைக் கர்மங்களும், தீவினைப் படிவுகளும் நம்மைத் தாக்காமல் இருப்பதற்காக இந்த மர நாற்காலி, மேஜை, மரப்பலகைகள் பெரிதும் உதவுகின்றன. மரப்பலகையின் மேல் காலணி அணியாது நின்று அல்லது மரநாற்காலியில் அமர்ந்தே பணத்தை எண்ண வேண்டும். நின்ற நிலையில் கால்களில் செருப்பு அணிந்து கொண்டோ, வெறுங்காலுடன் தரையில் நின்று கொண்டோ பணத்தை எண்ணுதல் அல்லது தொடுதல் கூடாது. இதே போல அன்றைய நாளின் பணி முடிந்தவுடன் அந்த சந்தனப் பெட்டியில் மல்லிகைப் பூக்களினூடே நாணயங்களையோ பணத்தையோ மீண்டும் போட்டு வைத்து பணியை நிறைவு செய்தல் வேண்டும். அதாவது எப்போதும் சந்தனப் பேழையிலோ, சந்தனப் பெட்டியிலோ சில நாணயங்களாவது இருத்தல் வேண்டும். கால்கள் மரப்பலகையில் இருந்திட வேண்டும்.
5. நவீன இயந்திரங்கள் எத்தனை இருந்தாலும், பணத்தை ரப்பர் பேண்ட் அல்லது ஸ்டேப்லர் பின் கொண்டு கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் இயன்றவரை பருத்தியாலான நூல் கொண்டு பணத்தைக் கட்டுவதே சிறப்புடையதாகும். ஆனால் நவீனமயமான இந்த யுகத்தில் இது எந்த விதத்தில் சாத்தியமாகும் என்பதை நீங்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்வழியைச் சொல்வது நம் கடமை. அதைப் பின் பற்ற வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கின்றது.
அப்படியே இயந்திரங்களை உபயோகித்து ஸ்டேபிள் செய்ய வேண்டிய அல்லது ரப்பர் பேண்ட் போட்டுக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதன் மேல் ஒரேயோரு சுற்றாவது நூலால் கட்டி உங்களை நீங்கள் திருப்திப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் பருத்தி இழைக்குத்தான் அதில் படிந்துள்ள கர்மங்களைக் களைந்து நல்ல எண்ணப்படிவுகளை அதில் சேர்க்கின்ற பாங்கு உண்டு.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது போல் நாம் எவ்வாறு ஆடைகளைத் துவைத்து உலர்த்தி அணிந்து அதிலுள்ள கர்மவினைகளை களைகின்றமோ அதே போல பணக்கட்டுகளின் புனிதத் துவத்தை ஏற்றுகின்ற தன்மை பருத்தி நூலுக்குத் தான் உண்டு.
6. பணத் துறையில் இருப்போர் எத்தனையோ இடங்களிலிருந்து பணத்தைப் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். அவை நல்ல இடங்களிலிருந்தும் வரும்! தீவினைகள் சூழ்ந்த இடங்களிலிருந்து வரக்கூடும். களவாடிய பணம், முறையற்ற கேளிக்கைகளில் வந்த பணம், பீடி, சிகரெட், மது வகைகள் போன்ற கெடுதலான பொருட்களை விற்றதால் வந்த பணம், லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம், அநாகரீகமாக, அதர்மமாகப் பெற்ற பணம், பிறருடைய பணம் என்பதாகப் பலவிதமான முறைகளிலும் வந்த பணமாக அது இருக்கக் கூடும். அதனால் இதை அறிகின்ற மனப்பக்குவத்தை தீர்க்க தரிசனத்தை நல்ல பூஜைகளைச் செய்து வந்தால் தானே பெற முடியும். இவற்றை உணர முடியாத நிலையில் மேற்கண்ட வழிமுறைகள் தாம் ஒருவரை பணம் சம்பந்தப்பட்ட தீவினைகளிலிருந்து, கர்மவினைகளிலிருந்து காப்பாற்றும்.
7. அதே போல அன்றைய தினம் தன்னுடைய பணி முடிந்ததும் ஒவ்வொருவரும் தன்னுடைய கரங்களை நன்றாகக் கழுவி சீயக்காய்ப் பொடி கொண்டு சுத்தம் செய்வதே சிறப்புடையது. ஏனெனில், சீயக்காய்ப் பொடியில் கலந்துள்ள மூலிகை சங்கமக் கதிர்களுக்குத்தான் தீவினைகளை நீக்கும் சக்தியுண்டு.

தெய்வீகமாக வாழ்வது எப்படி?
மௌன விரதத்தின் மகத்துவம். ஒவ்வொரு மனிதனும் பலவிதமான முறைகளிலே பாவங்களையும், தீவினைகளையும் சேர்த்துக் கொள்கின்றான். தன்னுடைய அங்கங்களால் செய்கின்ற முறையற்ற தீச்செயல்கள், வாய்ச் சொற்களால் ஏற்படுகின்ற தீவினைகள், எண்ணங்களால் ஏற்படுகின்ற கர்மச் சுமைகள் இவ்வாறாக ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான முறைகளில் தீவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் வாய்ச் சொற்களால், வாக்கு மூலமாக, வாய் மூலமாக செய்கின்ற தீய செயல்களுக்குப் பரிகாரமாக அமைவதுதான் மௌன விரதமாகும்.
வாயால் வரும் வல்வினைகள்
பொய், புரட்டு, வஞ்சனை, சூழ்ச்சி இவை சேர்ந்து கொப்பளிக்கின்ற வாய் வார்த்தைகள் எத்தனை! எத்தனை!! கேவலமாகவும், அருவருக்கத்தக்க முறையிலும், அசிங்கமாகவும் உதிர்க்கின்ற வாய்ச் சொற்கள் எத்தனை எத்தனை! எந்த வாய் மூலமாக இறைநாமங்களை, கீர்த்தனைகள், துதிகளை ஓதி இறைவனை அடைய வேண்டுமோ அந்த வாயால் அனைவரையும் கொடிய முறையில் பேசி மனதைப் புண்படுத்தவா இறைவன் இந்த வாயைப் படைத்தான்? எந்த அக்னியானது நமக்கு உணவைப் படைத்து இந்த உடலை பிறவிக் கடலைத் தாண்டும் தெய்வீகத் தோணியாக அமைக்கின்றதோ அந்த வாயில்தான் சிகரெட்டையும், பீடியையும் வைத்து அக்னியால் புகைத்து, புகைத்து, கேவலமான கர்மங்களை மனிதன் சேர்த்துக் கொள்கின்றான். இறைவனைத் துதிக்கின்ற வாயிலா புனிதமான அக்னியைப் போட்டுப் பொசுக்குவது? தெய்வத்தை விட உற்ற துணையாக விளங்குகின்ற தாயினுடைய உதிரத் திவலையான அமிர்தமாகிய தாய்ப்பாலை அருந்திய, தெய்வீகத்தைப் பரப்ப வேண்டிய, வாயால் தான் எத்தனை கொடுமையான வசைமொழிகளைப் பாடி, வேதனையான, கர்மாவைச் சேர்த்துக் கொள்கின்றார்கள் மனிதர்கள்?
சற்றே பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்!
ஆழ்வார்களும், நாயன்மார்களும் இந்தத் திருவாய் மொழியால் தானே இறைவனைத் துதித்து நான்மறைக்கு ஈடான நற்றமிழ்ப் பார்க்களைத் தந்துள்ளனர். ஆனால் இந்த நாக்கால் மனிதன் செய்கின்ற கொடுமைகள் எத்தனை, எத்தனை? சொல்லால் சுட்டு, வாக்கால் வதைத்து, மொழியால் மிதித்து, உரையாடலால் உதைத்து அவன் மொழிகின்ற தீச்சொற்கள் எத்தனை, எத்தனை? இதற்கெல்லாம் தக்க ஒரு பிராயச்சித்தத்தைத் தேட வேண்டாமா? இதற்கு நல்ல வழி வகுப்பதே மௌன விரதமாகும்...
ஒவ்வொருவரும் தன்னுடைய தினசரி வாழ்வில் குறைந்தது மூன்று மணி நேரமாவது தொடர்ந்து மௌன விரதத்தை மேற்கொண்டால் தான் மேற்கண்ட தீவினைகளுக்கான பிராயச்சித்தத்தை இந்தப் பிறவியிலேயே பெற்றிடலாம். இல்லையேல் மொழிக் குற்றங்களும், தகாதனவற்றை உரைத்த பாவங்களும் கோடிக்கணக்கான பிறவிகளுக்கு வழிவகுத்து எத்தனையோ வாய், நாக்கு , தொண்டை நோய்களைத் தந்து அல்லல் படுத்திவிடும்.
வாய்மொழியில்லை ! மனமொழி உண்டு!
தினந்தோறும் தொடர்ந்து மூன்று மணி நேரம் மௌன விரதம் இருப்பதால் எத்தனையோ நன்மைகள் விளைகின்றன. குறைந்தபட்சம் முதல் நன்மையாக இருப்பது இந்த மூன்று மணி நேரம் தகாத வார்த்தைகளையோ, கெட்ட வார்த்தைகளையோ சொல்லாமல் இருப்பதாகும். என்னதான் மௌனமாக இருந்தாலும் மனமானது ஆயிரமாயிரம் எண்ணங்களில் உழன்று கொண்டிருக்கும். மௌன நிலையில் தான் மனமானது இத்தகைய எண்ணச் சுழல்களில் உழல்கின்றது என்பதை நீங்களே தெளிவாகப் புரிந்து கொள்ளலாம், ஏனென்றால் வாய்ப் பேச்சு எல்லாமே மன எண்ண ஓட்டத்தின் பிரதிபலிப்புதான்.
எண்ணங்களை அடக்க இயலாவிடில் தான் வாய்க்குற்றம் ஏற்படும். எவரொருவர் தன்னுடைய வாய் வார்த்தைக்குக் கட்டுப்பாடில்லாமல் அனாவசியமாகப் பேசுகின்றாரோ அவருக்கு எண்ண ஓட்டங்கள், தவறான எண்ண சுழற்சிகள் அதிகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம். வள்ளலார் கூறிய சும்மா இருப்பதே சுகம் என்பது மௌன விரதத்தை மட்டுமல்லாமல் மன ஓட்டங்களே இல்லாத மனதிற்குரித்தான பேரின்ப அமைதியைக் குறிப்பிடுகின்றது. ஆனால் மன ஓட்டங்களை அவ்வளவு எளிதில் அடக்கிவிட முடியாது. 10, 20, 30, 40, 50 ஆண்டுகளாக கோடானு கோடி மலை போன்ற எண்ணங்களிடையே வாழ்ந்து வருகின்ற மனிதனை தியானம் என்ற பெயரிலே ஒரு மரப் பலகையில் உட்கார வைத்து பத்மாசனம் போட்டு அமர்ந்து விட்டால் உடனே தியானம் கூடிவிடுமா?
வழுக்குப் பாறைகள் போல, பாசி பிடித்த நீர்ப்பாறைகள் போல எண்ணங்களின் அடுக்குகளுக்கு இடையே வாழ்கின்ற மனிதன் அந்த எண்ணங்களை அடித்துத் துரத்தினால்தானே, விலக்கினால் தானே மன அமைதி வரும்! ஒருவர் தியானத்தில் அமர்கின்ற பொழுது அவருக்கு எத்தனையோ விதமான தகாத எண்ணங்கள் எல்லாம் முதலில் தோன்றத் தொடங்கும். ஆனால் இதனைக் கண்டு அஞ்சக் கூடாது. ஏனென்றால் உள்ளே கிடப்பது வெளிவந்தால் தானே மன உள் வளாகத்தைச் சுத்தம் செய்ய முடியும்? கிணறு தோண்டுகின்ற போது அடியில் இருக்கின்ற மண்டியையும், கலங்கிய நீரையும் வெளியே எடுத்தால் தானே சுத்தமான நீர் ஊறும், எனவே தியானம் கூட வேண்டும் என்றால் தியானப் பயிற்சிகளில் எண்ணப் படிவுகள் எல்லாம் வெளியே வந்தாக வேண்டும். இதன் பிறகுதான் தியானம் கைகூடும். இதனால் தான் பலரும், “நான் தியானத்தினால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே, உட்கார்ந்தாலேயே பலவிதமான கேவலமான எண்ணங்கள் தாமே முளைக்கின்றனவே, சாதாரணமாக நான் எண்ணுவதை விட தியானம் என்று அமரும் போதுதான் தகாத எண்ணங்கள் தோன்றுகின்றன. எனவே நான் தியானம் செய்வதையே நிறுத்தி விட்டேன்!” என்று அறியாமையால் கூறுகின்றார்கள்.
எனவே, நீங்கள் தியானத்திற்காக அமரும் போது தகாத எண்ணங்களும், துர்எண்ணங்களும் ஏற்பட்டால் கவலைப் படாதீர்கள்! ஏனென்றால் அவையெல்லாம் அழுக்குப் படிந்த எண்ணப் பாறைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்ற நேரமே தியான நேரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இவை வெளியில் வந்து மனதை விட்டு அகன்றால் தான் உண்மையான தியானம் கைகூடும். இதை உணர்ந்தால் தான் தியானத்தின் போது பீறிட்டுக் கிளம்புகின்ற எண்ணங்களின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்..
மௌனமே தியானத்திற்கு வித்து!
தியானத்திற்கு முதற்படிதான் மௌன விரதமாகும். உண்மையிலேயே நீங்கள் தியானத்தின் மகிமையை உணர வேண்டும் என்றால், முதலில் குறைந்தது மூன்று மணி நேரம் மௌன விரதம் இருந்து பாருங்கள். இந்த மௌனத்திற்கு பிறகு நீங்கள் தியானம் புரிய அமர்வீர்களேயானால் இதன் தெய்வீக சக்தியை நீங்களே நன்கு புரிந்து கொள்வீர்கள். எனவே, ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் தினந்தோறும் குறைந்தது தொடர்ந்து மூன்று மணி நேரமாவது மௌனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.. “தற்போதைய கலியுகத்தில் இயந்திர கதியில் இயங்கி வருகின்ற வாழ்க்கையில் இது சாத்தியமானதா” என்று கேட்கத் தோன்றும்.
ஆனால் இதனை தெய்வீகப் பயிற்சியாகக் கண்டிப்பாகச் செய்து தான் ஆக வேண்டும். அப்போதுதானே உங்களுக்கு தெய்வீகம் என்றால் என்னவென்று தெரியவரும்? ஆனால் மூன்று மணி நேரம் மௌனமாக இருப்பது ஒரு கடினமான விஷயம் அல்லவே. காலையோ, மதியமோ, மாலையோ, இரவோ, அலுவலகமோ அல்லது இல்லமோ உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தினந்தோறும் குறித்த நேரத்தில் மௌனமாக இருக்கப் பழகிக் கொண்டால்தான் இது மிகச் சிறந்த பலன்களைத் தரும். இல்லறப் பெண்களுக்கு இது மிகவும் எளிதானதொன்றாகும். அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்களுக்கு ஆரம்பத்தில் இது சற்று கடினமாகத்தான் தோன்றும். ஆனால் நம் வசதிக்கேற்ப தெய்வீகத்தை வளைத்துக் கொள்வதை விட அபரிமிதமான காரிய சித்தியையும், தெய்வீக சக்தியையும் பெற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் இத்தகைய எளிய மௌன விரதத்தைக் கடைபிடித்தாக வேண்டும்., முதலில் ஒரு மணி நேரம், பிறகு இரண்டு மணி நேரம் என்று உங்கள் மௌன விரதத்தின் கால அளவை விருத்தி செய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக, விடுமுறை நாட்கள் வரும் போது மூன்று மணி நேரம் என்ன, முழு நாளும் மௌனமாக இருப்பது மிகவும் சிறப்புடையதாகும். மௌன விரதத்திற்கு மிகவும் சிறப்பான நாள் திங்கட் கிழமையாகும். ஏனென்றால் மனித மனதிற்கு உரிய தெய்வ மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசந்திர பகவானுக்கு உரித்த நாளே சோமவாரம் எனப்படும் திங்கட் கிழமையல்லவா! அதிலும் சோமவார அமாவாசை என்னும் பிரசித்தி பெற்ற திங்கட்கிழமையும், அமாவாசையும் கூடுகின்ற நாளானது பிரதட்சிண அமாவாசை எனப் பெயர் பெற்று மௌன விரதத்திற்கு மிகவும் சிறப்புடைய நாளாக அமைகின்றது. இன்னும் சொல்லப் போனால் வாய் வார்த்தையால் இழைத்த துன்பத்திற்குத் தக்க பிராயச்சித்தமாக அமையும் வகையில் தான் திங்கட்கிழமை மௌன விரதமும், திங்களும், அமாவாசையும் சேர்ந்த பிரதட்சிண அமாவாசை தினமும் மிகவும் முக்கியமாக விளங்குகின்றன!
மௌனத்திற்கு பிரயாணம்!
உங்களுடைய பிரயாணத்தில் வளவளவென்று வீண்கதை பேசிக் கொண்டிராமல் இயன்றவரையில் மௌனமாக இருக்கப் பழகிடுங்கள். ஒன்று பிரயாணத்தின் போது பேசினால் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் காணப்படும் தெய்வீகக் கருத்துக்களைப் போல மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தெய்வீகப் பணியாற்றிப் பேச வேண்டும் அல்லது சில முக்கியமான இறைத் துதிகளை மானசீகமாக ஓதியவாறே மௌனமாக இருந்திடல் வேண்டும். பெரும்பாலும் பிராயண நேரத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராணம் போன்ற இறைமந்திரங்களைத் துதிக்கப் பழகிடுங்கள். ஏனென்றால் இவ்வாறு மௌனமாகத் துதிக்கப்படுகின்ற துதிகள் யாவும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும்.. அவை ஒலி, ஒளிக் கிரணங்களாக மந்திரக் கிரணங்களாக வெளிப்பட்டு செல்லும் வழியெங்கும் பரவெளியில் விரவத் தொடங்குகின்றது.
சாலை விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமே விதியின் வசம் மட்டும் அல்லாது, எதிர்வினைகளின் ஆக்கமும் ஆகும். பெரும்பாலும் போதையில் பலர் வண்டிகளை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்குக் காரணமே சக்தியில்லாத மனமும் (Weak mindedness), எதிர்வினை சக்திகளை எதிர்த்துப் போராடுகின்ற மனோ திடமும், உறுதியும் இல்லாமையும் தான். எனவே, பிரயாணத்தில் வெளிச் செல்கின்ற ஒருவன் வழியெங்கும் எதிர்வினைச் சக்திகளின் (Negative Forces) ஆக்கம் மிகுந்திருப்பதால் அவற்றின் பலனாக பலவிதமான தீயசக்திகளுக்கு ஆட்பட்டுத் தீச்செயல்களில் ஈடுபடுகின்றான். இதிலிருந்து விடுபடவே இறைத் துதிகள் ஓதிடுக!
வாய் வழிப் பாவங்கள் :- புகைபிடிப்பதும், மது அருந்துவதும் தீய செயல்கள் தாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிலும் முக்கியமாக மதுக்கடைகள் வைத்திருப்பவர்கள் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் பெயரில் மதுக் கடைகளை வைத்து தெய்வத்தை இகழாதீர்கள். பிரயாணத்தின் போது நீங்கள் துதித்துச் செல்கின்ற மந்திரங்களின் தெய்வீக சக்திகளின் பலனாக நீங்கள் இத்தகைய தீயசெயல்களுக்கு ஆட்படாமல் காப்பாற்றப்படுவது மட்டுமன்றி எத்தனையோ ஆயிரமாயிரம் மக்களுக்குத் தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகின்ற ஆக்க சக்தியை ஊட்டுவதோடு அவர்கள் இத்தகைய எதிர் சக்திகள் வசம் மாட்டிக் கொள்ளாமல் அவர்களையும் காப்பாற்றிட பெரிதும் உதவுகின்றது!
வழியெங்கும் சாலையோரத்தில் ஸ்ரீஐயனார், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீகருப்பு, ஸ்ரீகருப்பண்ணசாமி போன்ற தெய்வ மூர்த்திகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணமே ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி இவர்களை வணங்கிச் சென்றால் எத்தகைய எதிர்வினைச் சக்திகளையும் முறியடிக்கக் கூடிய மனோதிடத்தை இம்மூர்த்திகள் மூலமாகப் பெற்றிடலாம் என்பதற்காகவே! சாலையில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திக் கற்பூரம் ஏற்றி ஸ்ரீமுனீஸ்வர மூர்த்தியை வழிபடுவதற்குக் காரணம் என்னவென்றால் இம்மூர்த்திகளின் சுதைத் திருமேனியிலிருந்து வெளிப்படுகின்ற சக்தி வாய்ந்த ஒளிக்கிரணங்கள் நாம் ஏற்றுகின்ற கற்பூர ஒளியுடன் இணைகின்றது. நாம் கற்பூரத்தை தரிசிக்கும் போது கண்ணுக்குத் தெரியாத சூட்சும ஒளிக் கதிர்கள் அதில் தோன்றி ஜோதி வடிவில் பரிமளிப்பதால் ஜோதி தரிசனத்தில் புதுவிதமான தெய்வீக ஊட்ட சக்தி நம் உடலிலும் சேர்கின்றது. எனவே ஆங்காங்கே சாலை ஓரங்களில் வண்டிகளை நிறுத்திக் காவல் தெய்வங்களை வழிபட்டுச் செல்லுங்கள்.
மௌன விரதத்தின் தன்மையை எவ்வாறு மேம்படுத்தலாம்?
“என்னுடைய அலுவல்கள் காரணமாக என்னால் மூன்று மணி நேரம் தொடர்ந்து மௌன விரதம் கூட்டிட இயலாது. ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தான் என்னால் மௌனவிரதம் அனுஷ்டிக்க இயலும்”,. என்று கூறுவோர் உண்டு. இதற்கும் இறைவன் வழிவகை செய்யாமல் இல்லை. உண்மையிலேயே, தவிர்க்க முடியாத காரணங்கள், அலுவல்கள் காரணமாக ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தான் மௌனம் அனுஷ்டிக்க முடியும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் மௌன விரதம் பூண்டு தனியாகவோ, குடும்பத்தினருடன் சேர்ந்தோ அன்னதானப் பணி ஏற்று அரிசி களைவது முதல் அதனை சாம்பார் சாதமாகவோ, தயிர் சாதமாகவோ ஆக்கும் வரை மௌனம் பூண்டு இறைவனுக்குப் படைத்து அன்னதானம் செய்திடுங்கள். மௌனமாக இருந்து மனதினுள் இறைத் துதிகளை துதித்தவாறே சமைக்கப்படுகின்ற அன்னத்திற்கு மகத்தான சக்தி உண்டு. இதனை அன்னதானமாக அளித்து விடுவதால் அதில் உள்ள தெய்வீக சக்திகள் எல்லாம் ஏழை, எளியோரை அடைந்து அவர்களுக்குப் பெறுதற்கரிய பலன்களைத் தருகின்றன.. இத்தகைய மௌன விரத அன்னப் படையலினால் உங்கள் மௌன விரதத்தின் சக்திகளையும் விருத்தி செய்து கொள்ளலாம்.
மௌனத்திற்கு ஏற்றது பிரதட்சிண அமாவாசை!
திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்த பிரதட்சண அமாவாசை மிகவும் சிறப்புடையது என்று சொன்னோம் அல்லவா? இன்று மௌன விரதம் பூண்டு அரசமரத்தை அடிப் பிரதட்சிணம் செய்து வருவது மிகவும் சிறப்புடையதாகும்.. ஏனென்றால் திங்களும், அமாவாசையு கூடும் தினத்தன்று பிப்பலாதர் என்னும் உத்தம மகரிஷி அஸ்வத விருக்ஷம் எனப்படும் அரசமரத்தடியில் எழுந்தருளி ஞான உபதேசம் செய்கின்றார்... இதற்கு அவர் தேர்ந்தெடுக்கின்ற நாளே திங்கட்கிழமையும் அமாவாசையும் சேர்ந்த பிரதட்சண அமாவாசையாகும். ஏனென்றால் தியான வியூகத்தைத் தழுவுவதற்கு முன்னால் ஸ்ரீபிப்பலாதர் மகரிஷி பூலோகத்திலுள்ள அரசமரங்களை எல்லாம் அடிப்பிரதட்சிணமாக வலம் வருகின்றார். சில இடங்களில் அவர் அங்கப் பிரதட்சணமாகவும் வலம் வருதல் உண்டு.
எனவே தான் சோமவார அமாவாசை அன்று அரசமரத்தை அடிப்பிரதட்சிணம் செய்வதும் அங்கப் பிரதட்சிணம் செய்வதும் மிகவும் சிறப்புடையதாக விளங்குகின்றது.. பிப்பலாதர் மகரிஷியின் பாதம்பட்ட மண் என்றால் அது எத்துணை சிறப்புடையதாக விளங்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. இவ்வாறாக திங்கட்கிழமையன்றும், சோமவார அமாவாசை தினத்தன்றும் 1008 முறைக்குக் குறையாமல் அரசமரத்தை மௌனமாய் வலம் வந்து வணங்கினால் நல்ல காரிய சித்திகள் ஏற்படும். கணவன் நல்ல பழக்கங்களைப் பெற்று வாழ வேண்டும், தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்புகின்ற மனைவிமார்கள் இத்தகைய அடிப்பிரதட்சண விரதத்தை பால்பாயச தானத்துடன் நிறைவேற்றி வருவார்களேயானால் அவர்களுக்குத் தக்க நல்வரங்களை இறைவன் அஸ்வத நல்தேவதா மூர்த்திகள் மூலமாகத் தந்தருள்கின்றான்.

ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி
நறையூர் சித்தீச்சரம் கும்பகோணம்

மௌன மொழியில் மாமந்திரங்கள்
“எங்கள் ஊரில் அரசமரம் இல்லையே, என்னசெய்வது?” இவ்வாறெனில், வியாழக்கிழமை அன்று குறிப்பாக குருஹோரையில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி சந்நதியின் முன் மௌனமாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரமேனும் தியானிக்கப் பழக வேண்டும். ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி பூஜை சிறப்புடையது... (நறையூர் சித்தீச்சரம், மாயூரம்.)
மனதினுள் துதிக்க வேண்டிய மந்திரங்கள் பல உண்டு. சில மந்திரங்களை வாயார நன்கு உரக்க ஒலித்தால் தான் அவற்றின் சக்திகள் விண்வெளியில் பரவுவது மட்டுமன்றி நம் உடலினுள்ளும் சேரும். எனவே, மௌன விரதத்திற்குரித்தான மந்திரங்களை நன்கு அறிந்து கொள்க! மௌன விரத நாட்களில் இவற்றை மனதினுள் ஓதி வந்தால் தியானநிலை நிச்சயமாக நல்ல முறையில் கைகூடும். எனவே, எந்த தியானத்திற்கும் மௌன விரத சக்தி இருந்தால் தான் அந்த தியானம்  கைகூடும்.. வெறுமனே “டக்” யென்று தியானத்தில் அமர்ந்து விட்டால் தியான நிலை உடனே கைகூடி விடுமா என்ன? மௌன விரதத்தின் போது வாயில் துணியைக் கட்டிக் கொள்ளலாமா? இது ஏற்புடையதா? நிச்சயமாக ஏற்புடையது தான். பெருமதிப்பிற்குரிய ஜைன சமய மாமுனிகளும் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு புனிதமான மௌன விரதம் ஏற்பதைக் கண்டிருப்பீர்கள். எனவே,  சுத்தமான உலர்ந்த வெண்ணிறத் துணியை வாயில் கட்டிக் கொள்வதும், மௌன விரதம் பூண்டு அன்னதானம் சமைக்கும் போது இவ்வாறு துணியைக் கட்டிக் கொள்வதும் ஏற்புடையதுதான். இதில் எவ்விதத் தவறும் கிடையாது. இதனால் பேச வேண்டும் என்ற உத்வேகம் தணிவதுடன் மௌனவிரதத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வையும் இது தந்து கொண்டேயிருக்கும்...
மோன நிலைதரும் ஞான மூர்த்திகள்! மௌன விரதத்திற்காக அனுக்கிரகம் செய்கின்ற விசேஷமான தெய்வ மூர்த்திகள் உண்டா? ஏன் இல்லை. நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நற்காரியத்தையும் நிறைவு செய்து தருவதற்கும், நம்முடைய தார்மீகமான நல்ல ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், நம்முடைய நல்ல பிரார்த்தனைகளைக் கைகூடச் செய்வதற்கும் விதவிதமான தெய்வீக மூர்த்திகளை இறைவன் தன்னுடைய அம்சங்களாகப் படைத்துள்ளான்..
பக்தி நிலை தருவதற்கும், மோட்ச நிலையைப் பெறுவதற்கும், தத்துவார்த்த இறைநிலையை அடைவதற்கும் சத்தியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் எத்தகைய துன்பங்களாயினும் அவற்றைக் களைந்து தனக்குரிய கடமைகளை நிறைவேற்றி இறைநிலையை அடைவதற்கும்தான் இறைவன் பல்வேறு அவதார மூர்த்திகளாக, ஸ்ரீசூரிய பகவானாக, ஸ்ரீசந்திர பகவானாக, ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாக, ஸ்ரீநடராஜ மூர்த்தியாக, ஸ்ரீவரதராஜப் பெருமாளாக, ஸ்ரீலட்சுமி தேவியாக தன்னை வடித்துக் கொண்டுள்ளான். மோகனூரில் ஸ்ரீஅசலதீபேஸ்வரராக அருள்பாலிக்கின்ற லிங்க மூர்த்திக்கு மௌன விரத சக்தி பெரிதும் உண்டு.. எனவே நாள் கணக்கில், வாரக் கணக்கில், மௌன விரதத்தை மேற்கொள்ள விரும்பும் போதும் அல்லது மௌன விரதத்தை சில மணி நேரங்களாக இருந்தாலும் அதனைத் தொடங்கி நன்முறையில் நிறைவேற்றுவதற்கும் ஸ்ரீஅசலதீபேஸ்வரர் சந்நிதியில் சங்கல்பம் செய்து கொள்வது மிகவும் சிறப்புடையதாகும்..

ஸ்ரீஅசலதீபேஸ்வரர் காருகுடி

மோகனூரில் மௌனலிங்கம்
நிர்ச்சலனமான மனதை எத்தகைய இன்ப, துன்பங்கள் ஆயினும் சரி, ஆசாபாசங்கள் ஆயினும் சரி, மனதை ஆடாமல், அசையாமல் நிலைபெறச் செய்யும் தெய்வீகச் சக்தியை அருளவல்லவரே ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆவார், எனவே, இத்திருச்சன்நிதியில் மௌன விரத சங்கல்பத்தை மேற்கொண்டு மௌனத்தைக் கடைபிடித்து இயன்றால் மௌனத்துடனேயே அன்னத்தைச் சமைத்து அதனை ஸ்ரீஅசலதீபேஸ்வரர் சந்நதியிலேயே தானமாக அளித்து அச்சந்நிதியிலேயே மௌன விரதத்தை பரிபூரணமாக நிறைவுறச் செய்வதால் பல விசேஷமான பலன்கள் கிட்டுகின்றன..
1. மேலதிகாரிகளின் பழிச் சொற்களுக்கும், உபாதைகளுக்கும் ஆட்பட்டோர் இத் திருச்சந்நிதியில் மௌன விரதத்தை மேற்கொண்டு இக்கோயிலில் ஒட்டடை அடித்துத் தூய்மையாக்கி, நீர் விட்டு அலம்பி, கோலமிட்டு, தீபங்களை ஏற்றி மௌனமாக வழிபாடுகளை மேற்கொண்டு மௌன விரதத்துடன் பொங்கல் சமைத்து இறைவனுக்கு சமர்ப்பித்து அன்னதானம் செய்து வருவார்களேயானால் மேலதிகாரிகளின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு நல்வழி பிறக்கும்.
2. பலருக்கும் பலவித இன்ப துன்பங்களால் திடீரென்று இறைபக்தியில் ஒரு கலக்கம் ஏற்படும்.. “என்ன இது இவ்வளவு இறைப் பணிகள் செய்கின்றோமே, நமக்கு அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்து கொண்டுதானே இருக்கின்றன. இந்த மகானை நம்பித்தானே வாழ்கின்றோம். இந்த தெய்வ மூர்த்திக்கு உரித்தான வழிபாடுகளைத் தானே மேற்கொண்டு வருகின்றோம். நமக்கு மட்டும் ஏன் இத்தகைய துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன”, என்று வருந்தி வேதனையுற்றுப் புலம்புவோர் பலருண்டு. இவர்களுக்குப் பிரார்த்தனா சக்திகளின் மகிமையை உணர்த்தி, பிரார்த்தனா காரிய சித்தியைப் பெறுவதற்கு இத்திருக்கோயிலில் மௌன விரத வழிபாடு பெரிதும் உதவி செய்கின்றது. பலர் ஒன்று சேர்ந்து கூட்டு விளக்கு வழிபாடுகளை நடத்தி அனைவரும் விளக்குகளின் ஜோதிகளைப் பார்த்தவாறு மனதினுள் மௌனமாக மந்திரங்களை ஓதி வந்தால் பல இல்லறத் துன்பங்களுக்கான நிவர்த்தி இறைவனருளால் கிட்டும்.

சக்கரங்களும், யந்திரங்களும்
1. சக்கரங்களில் , பீஜாட்சர மூலமூர்த்திகளின் பிம்பங்கள், சூட்சுமமாய் வரையப்படுகின்றன. அவற்றில் மந்திர சித்தி மூலம் கோணத்ரயத் தெய்வீக சக்தி நிலவும்படி அதில் மந்திர சக்திகள் குடிகொள்கின்றன..
2. யந்திரங்களில் மூல பீஜாட்சர மந்திரங்களின் சூட்சும வடிவம் பதிக்கப் பெற்று பிம்ப ஸ்தம்பன நிலையில் மந்திர சக்தி ஊட்டப்படுகிறது..
3. யந்திரமோ, சக்கரமோ, வீட்டில் வெறுமனே வைக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து அவற்றிற்கு முறையான பூஜைகளை மேற்கொண்டால்தான் நல்ல பலன்களைத் தரும். ஒரு சக்கரத்திலோ, யந்திரத்திலோ, தெய்வீக சக்தியைப் பலவிதமான தபோ பலன்களால், பூஜா சக்திகளால் ஏற்றிட முடியும். வயிற்றுப் பசியெனில் எதிரில் ஒரு பழத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் பசி ஆறி விடுவதில்லை. அது போல, மந்திர சக்திகள் எவ்வளவுதான் யந்திரத்திலும், சக்கரத்திலும் பதிக்கப்பட்டிருப்பினும், அவற்றின் பலாபலன்களை அடையும் முறையைக் கடைபிடித்தால்தான் சக்கரங்களோ, யந்திரங்களோ நமக்கும் முழுமையாகப் பயனளிப்பதாயிருக்கு. இல்லையெனில் சக்கரம் சக்கரமாகவும், யந்திரம் யந்திரமாகவும் தான் இருக்கும்.
எவ்வித பூஜையுமின்றி தாமே ஒளி கிரணங்களைப் பரப்பி பலாபலனுக்கான வரங்களைத் தரும் சக்கரங்கள்  யந்திரங்கள் உண்டு.. ஆனால் இதனை முறையாகப் பயின்றவர்களால் தான் தக்க குருமூலமாகத்தான் அமைக்க முடியும்.  மேலும், ஒரு சக்கரத்திலோ, யந்திரத்திலோ நினைத்த போதெல்லாம் அதற்கு தெய்வீக சக்தியை ஏற்றவோ, இறக்கவோ இயலாது. தங்கம், வெள்ளி தாமிரம் என குறிப்பிட்ட சில உலோகங்களினால் தான் சக்கரத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒரு யந்திரத்தில் மோல்டு செய்து சக்கரத்தை எவ்வித பூஜையும் செய்யாமல் விற்பனை செய்வதால் எவ்விதப் பயனும் நமக்குக் கிடைக்காது.. ஏனெனில், ஒரு சக்கரம் அதற்குரிய முறையில் வரையப்பட்டவுடன் /பொறிக்கப்பட்டவுடன் அதற்குரித்தான வழிபாட்டு முறையை மேற்கொண்டால் தான் அதற்குரிய தெய்வீக சக்தியை ஏற்ற இயலும்..
ஒரு சக்கரத்தை தங்கம், வெள்ளி, செப்புத் தகட்டில் பொறித்தவுடன் மந்திரவாசம், தந்திர வாசம், வாமனவாசம், பீஜாட்சர வாசம், மூலமந்த்ர வாசம், புஷ்பவாசம், தைல வாசம் என்று பலவகை வழிபாட்டு வாசகங்களால் அச்சக்கரத்தை வைத்து முறையாகப் பூஜை செய்தால் தான் அச்சக்கரத்திற்குரிய தெய்வீக சக்தி உருவாகும். ஏதோ ஒரு சக்கரத்தை வரைந்து வைத்துக் கொண்டு.. அதில் ஆயிரத்தெட்டு முறையோ, ஒரு லட்சம் முறையோ, ஏதேனும் நாமாவளியைச் சொல்லி பூஜை செய்தால் அது அத்தகைய தெய்வீகச் சக்தியைப் பரிபூரணமாக அளித்திடும் என்று கூற முடியாது. ஏனெனில் சக்கரத்தை உருவாக்கும் எண்ணமானது, வியாபார ரீதியிலோ, அல்லது லாபம் ஈட்டும் முறையிலோ அல்லது சுயநலமாகவோ இருப்பின், இதனால் அச்சக்கரத்திற்கு எவ்விதப் பயனும் கிடையாது.. ஆனால், உண்மையாகவே, பக்திப் பூர்வமாகவே, ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையுடையவராய், பிறருடைய துன்பங்களைக் களைகின்ற தியாக மனப்பான்மையுடன் ஒருவர் முறையான பூஜை செய்து சக்கரங்களை வரைவாராயின் அவற்றிற்குத் தான் உண்மையான தெய்வீக சக்தி இருக்கும்.
முதலில் ஒரு சற்குரு மூலமாகத் தான் சக்கரம் வரையும் முறையை அறிந்திடல் வேண்டும். சற்குருவானவர் தன் உண்மையான சிஷ்யருக்கு எந்த முறையில் வேண்டுமாயினும் சக்கரத்தை வரையும் முறையை உபதேசமாக அருள்வதுண்டு. ஆகையால் குருவின் உபதேச மொழிக்கேற்ப சக்கரத்தின் மஹிமை அமைகின்றதே தவிர சக்கரத்தை வைத்துக் கொண்டு ஏதோ சில நாமாவளிகளைக் கூறிடுவதன் மூலம் அச்சக்கரத்திற்கு தெய்வீக சக்தி ஊட்டப்பட்டு விட்டதாக ஒரு போதும் எண்ணாதீர்கள்..
உதாரணமாக, ஒரு செப்புத் தகட்டில், ஸ்ரீகாயத்ரீ சக்கரம், ஸ்ரீமஹாலக்ஷ்மி சக்கரம், ஸ்ரீஅனுமந்த சக்கரம் வரையப்படுமாயின் அந்தச் சக்கரத்திற்குரிய, மந்திர சக்திக்குரிய பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.. சக்கரத்திலுள்ள அட்சரங்களில் எவ்விதப் பிழையும் இருத்தல் கூடாது. அதிலுள்ள கோணங்களும், சிறப்பாய் அமைதல் வேண்டும்.. கோண அமைப்பு முறைகளும், பீஜாட்சர எழுத்துகளும் சற்குரு அருள்கின்ற வழி முறையில்தான் அமைதல் வேண்டும். உதாரணமாக ஸ்ரீகாயத்ரீ சக்கரமென்றால் அவரவருடைய சற்குருவின் அருள்வழி மொழிகட்கேற்ப மாறுபடுதலும் உண்டு..
சக்கரமூர்த்தி ஆவாஹன பூஜை :- ஒரு சக்கரத்தைத் தகட்டில் பொறித்தவுடன் அதனைக் குறித்த சில மூலிகைச் சாற்றினால், படசுத்தி செய்திடல் வேண்டும்.. காலை இளஞ்சூரியன், மாலை இளஞ்சூரியன் ஆகிய சூரியக் கதிர்களுக்கு சக்கரத் தகட்டைச் சுத்திகரிக்கும் தெய்வீக சக்தி உண்டு. அதிலும், பஞ்சமி, திரயோதசி திதிகளில், அசுவினி, மிருகசீரிடம், சுவாதி, புனர்பூசம், ஹஸ்தம் போன்ற நட்சத்திர தினங்களில் தான் இத்தகடுக்கு பாஸ்கர தீர்த்த அபிஷேகம் எனப்படும் இளஞ்சூரியக் கதிர்களால் சுத்திகரிக்கும் பூஜைகளை செய்திடல் வேண்டும்.. இளநீர், தேன், சூடுபடுத்தப்படாத இளம் பசும்பால், பஞ்ச கவ்யம்  (பசும் பால், பசுந்தயிர், பசுஞ்சாணம், பசுநெய், பசுவின் கோமியம் ஆகிய ஐந்தும் சேர்ந்த புனிதக் கலவை..) மாதுளஞ்சாறு, சவ்வாது, புனுகு கலந்தத் திரவியம் போன்ற புனிதமான திரவியங்களாலும், புண்ணிய நதித் தீர்த்தங்களாலும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் குறிப்பாக, புதன், வெள்ளிக் கிழமைகளில் குரு ஹோரையில், குரு, சுக்ரன் மற்றும் புத ஹோரை நேரத்தில் திருமஞ்சனம் எனப்படும் தீர்த்த நீராட்டலைச் செய்தல் வேண்டும்..
இதன் பிறகு சந்தனம், மஞ்சள், புனுகு, சவ்வாது, விபூதி, குங்குமம் ஆகியவற்றால் இவற்றிற்குக் காப்பிட வேண்டும். ஒவ்வொரு காப்பும், குறைந்தது ஒரு முகூர்த்த நேரமேனும் சக்கரத் தகட்டில் இருந்திடல் வேண்டும், செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதோன்றி போன்ற மூலிகைத் தைலங்களால் இவற்றிகுத் தைலக் காப்பிட்டு ஸ்நானப் பவுடர் எனப்படும் மூலிகை பஸ்மத்தில் மேலும் சுத்தி செய்தல் வேண்டும். சனி, செவ்வாய்க் கிழமைகளில் இத்தகடுகளின் மேல் நவரத்னங்களை வைத்தும் பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் இரவிலும், இந்தச் சக்கரத் தகட்டின் மேல் அரிசி, கோதுமை போன்ற நவதான்யங்களையும் வைத்திருந்து பிரம்ம முகூர்த்தத்தில் அவற்றை எடுத்து தீப ஜோதி தரிசனம் காட்டி வழிபடும் முறையும் உண்டு..
ஒவ்வொரு தகட்டிலும் அதற்குரித்தான மூலமந்திரங்களும், பீஜாட்சரங்களும் குறைந்தது ஒரு லட்சத்திற்கு மேலாக ஜபித்துப் பூஜிக்கப்பட வேண்டும். எந்த மந்திரத்திற்கு எவ்விதப் புஷ்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நியதியும் உண்டு.. ஹோம வழிபாடு இன்றி எந்தச் சக்கர, யந்திரமும் பரிபூரணம் அடையாது.. உண்மையில் சக்கரத் தகட்டின் மேல் வைக்கப்படுகின்ற முந்திரி, திராட்சை, நவரத்ன, தங்கத் தகடுகள், சமித்துகள், கனிகள் போன்றவற்றைத் தாம் ஆஹுதிகளாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தெய்வீக இரகசியம்.. இவ்வாறாக ஒரு சக்கரத்தை உருவாக்குவதற்கான எத்துணையோ வழிபாட்டு விதிமுறைகள் உள்ளன.. குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்யப்பட்ட சக்கரந்தான், குறித்த சில தெய்வீகச் சக்தியைப் பெற்று நமக்கு நல்ல பலன்களைத் தருகின்றது.. ஒவ்வொரு சக்கரத்திற்கான பூஜை முறைகளும் மாறுபடும். இவற்றைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கடைபிடித்தலே நலம்.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

சக்கரத்திற்குச் சக்கர பூஜை :- சக்கரத்திற்கான மேற்கண்ட பல வழிபாடுகளைக் கடைபிடித்தவுடன் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீமேரு சக்கரம், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரன் ஆலயத்தில் மூலஸ்தானத்தின் பின்புறப் பிரகாரத்திலுள்ள ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அதி அற்புதமான தெய்வீகச் சக்கரங்கள், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள ஸ்ரீராமபாதங்கள், சென்னை திண்டிவனம் சாலையிலுள்ள தொழுப்பேடு முருகன் தலத்தில் மலையுச்சியிலுள்ள தெய்வத் திருப்பாதங்கள் – இவ்வாறாகக் குறித்த சில தலங்களிலுள்ள யந்திரங்களிலும், சக்கரங்களிலும் மேற்கண்ட சக்கரத் தகடுகளை வைத்து, கண்டிப்பாகப் பூஜைகள் செய்யப்பட  வேண்டும். எந்த தெய்வீக மூர்த்திக்குரித்தான சக்கரத் தகடு எந்த ஆலயத்தில் பூஜிக்கப்பட வேண்டும் என்னும் நியதிகளும் உண்டு. இவ்வாறாக ஒரு சக்கரத் தகடானது, பூஜைப் பொருளாக ஆவதற்கு முன் மேற்கண்ட அனைத்துவித பூஜை வழிபாட்டு முறைகளை மேற்கொண்ட பின்னரே அச்சக்கரம், தெய்வீக சக்தி நிறைந்ததாக பரிபூரணத்துடன் விளங்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்..
மேலும், சக்கரத் தீர்த்தம் என்ற அதிஅற்புதத் தீர்த்தமும் பல ஆலயங்களில் காணப்படுகின்றது.. இந்தச் சக்கரத் தீர்த்தத்தில் சக்கரங்களை வைத்து, ஜலயோகப் பூஜை முறைகளிலும் பல அரிய பூஜை முறைகளைக் கடைபிடித்தல் வேண்டும்.. இதற்காகவே சக்கரவாகத் துறை கொண்டுள்ள பல ஆலயங்களும் உண்டு.. இன்றும் சக்கர பூஜைகளைப் பற்றி நன்கு அறிந்த பல பெரியோர்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர். எனவே, தக்க பெரியோர்களை நாடி, சக்கரங்களைப் பற்றிய ஆன்மீக இரகசியங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிந்து நற்பலன்களை அடைய வேண்டுகின்றோம்..
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்.)
1. ஓம் பூ புவ சுவர்க மங்கள சுவாமியே போற்றி!
2. ஓம் பூ புவ சுவர்க நிலம் பூந்தகையே போற்றி!
3. ஓம் பூ புவ சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி!
4. ஓம் பூ புவ சுவர்க புவன வடிவோனே போற்றி!
5. ஓம் பூ புவ சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி!
6. ஓம் பூ புவ சுவர்க பூலோக நாதரே போற்றி!
7. ஓம் பூ புவ சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி!
8. ஓம் பூ புவ சுவர்க புவன வளச் செல்வமே போற்றி!
9. ஓம் பூ புவ சுவர்க நிலமண்டல தேவா போற்றி!
10.ஓம் பூ புவ சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி!
11. ஓம் பூ பூவ சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி!
12. ஓம் பூ புவ சுவர்க இகபர நிலவழி நித்யனே போற்றி!

ஸ்ரீவாஸ்து மூர்த்தி அஷ்டோத்தர நாமாவளி
1. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீமங்கள தேவாய நம :
2. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஅற்புத மூர்த்தயே நம :
3. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஆனந்த ரூபாய நம :
4. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஇஷ்டபூர்த்தயே நம :
5. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஈஸ்வர ரூபாய நம :
6. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிவதன சுதாய நம :
7. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிஹர நாம பாதாய நம :
8. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபிருத்வி சக்தயே நம :
9. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூமத்ய ப்ரகாசாய நம :
10. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபுவன தேஹாய நம :
11. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூக்ருத தேவாய நம :
12. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீ பூலோகநாதாய நம :

அமுத தாரைகள்

1. கர்ப்ப தோஷங்கள் நீங்க! நல்ல கணவன் வீட்டார் அமைய!
பல இடங்களில் நல்ல நாத்தனார் உறவு அமைவது அரிதாக இருக்கிறது.. இவ்வாறு கிடைத்து விட்டால் பெரும் பாக்கியம் தான்.. ஆனால் பொதுவாக நாத்தனார்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையெனில் புதிதாக வந்த மருமகள் கர்ப்பம் தாங்கி விட்டால் சில குடும்பங்களில் நாத்தனாரின் பொறாமைக் கண்ணிற்கு ஆளாக நேரிடும் அல்லவா! அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் நாத்தனாரின் தாயாகிய மாமியாரின் பொறாமைக்கும் ஆளாக நேரிடும். இத்தகைய திருஷ்டி தோஷத்திற்கு “நறுக்குக் கண் திருஷ்டி” என்று பெயர்.. இதே போல் ஓரகத்தியின் (ஒர்ப்படி) பொறாமையால் வரும் திருஷ்டி தோஷத்திற்கு “வரட்டிக் கண் திருஷ்டி“ என்று பெயர்... இந்த பொறாமைக் கண்களின் திருஷ்டி படாமல் இருக்க, புதிதாக கர்ப்பம் தாங்கி இருக்கும் பெண் சுகமாக கர்ப்பம் சுமந்து சுகப் பிரசவம் அடைய பாடல் பெற்ற முருகன் கோயிலில் செவ்வாய் தோறும் பாலில் தேன் கலந்து காலையில் முருகனுக்கு நைவேத்தியம் வைத்து தானும் பருகி பலருக்கும் தானம் தொடர்ந்து அளித்து வந்தால் இத்தகைய கண்ணேறு தோஷங்கள் விலகும்.
2.  தாராமங்கலம் தீர்க்கும் கண் திருஷ்டி
வாழ்க்கையில் வீடு, நிலபுலன், தோப்பு துரவு அமைவதெல்லாம் நல்வினை, நற்செய்கைகளின் வெகுமதியேயாகும். இதில் முக்கியமாக இரண்டு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கார், டிராக்டர், லாரி முதற்கொண்டு பஸ் வரை வைத்திருப்பவரைப் பார்த்து அவர்களை விட குறைவாக வாகனங்கள் வைத்திருப்பவரும், ஒன்றுக்கு  மேல் பல வாகனங்களை உடையவரைப் பார்த்து வாகனம் இல்லாதோர், குறைவாக உள்ளோர் போட்டிக்காகத் தாங்களும் வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசையோடு மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தோர், சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் வாகனம் வைத்திருக்கிறார்களே நமக்கு இல்லையே என்று தாக்குகின்ற பொறாமைக் கண் பார்வைக்கு “வேர்க்குழி கண் திருஷ்டி“ என்று பெயர்.. பிறருடைய கண் திருஷ்டியால் வாகன உரிமையாளர்கள் அடிக்கடி அடிபடுவதும், வாகனங்களின் டயர் வெடிப்பதும், வண்டிச் செலவுகள் அதிகமாவதும், ஓட்டுநர்கள் பல சங்கடங்களை அனுபவிப்பதும் உண்டாகும்.. இத்துன்பங்கள் தீர ஆன்மீகத்தில் பல வழிகள் இருந்தாலும் இது ஒரு முக்கிய வழி இதனைக் கடைபிடித்தல் நலம் தரும்.. சேலம் மாவட்டத்திலுள்ள தாராமங்கலம் அருள்மிகு கைலாயநாதர் கோயிலுள்ள தேர்வாயில் கோபுர தரிசனம் பெற்று எண்கோண வடிவுள்ள தெப்பக்குளத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்து பொடியான சிறு வெல்லத் துண்டுகளை மீன்களுக்கு உணவாக இட்டு வந்திடில் “வேர்க்குழிக் கண் திருஷ்டி“ விலகும்.
3. பிள்ளைகளுடன் கொண்டுள்ள பிணக்கு தோஷங்கள் தீர.!
நாம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், மனம் திறந்து மனைவி மக்களோடு பேசிப் பழகும் போதும் குடும்ப மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக தாயும், தந்தையும் குழந்தைகளோடு கூடியிருப்பதை வீட்டில் போட்டோ எடுக்கின்ற வழக்கம் அனைத்துக் குடும்பங்களிலும் உண்டு. இவ்வாறு தாய், தந்தை, குழந்தைகளோடு எடுத்த போட்டோக்களை இரண்டு சுவர்கள் கூடும் மூலையில் மாட்டுதல் கூடாது. அவ்வாறு மாட்டியிருந்தால் “குத்து சங்கம கண் திருஷ்டி தோஷம்“ குடும்பத்திற்கு ஏற்படும்.. இதனால் குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை, ஏற்பட்டு தாய், தந்தையருக்கு மன வருத்தம் ஏற்படும்.. பல படித்த பணபலமுடைய தான்தோன்றித்தனமாய் நடக்கின்ற குடும்பங்களில் இவ்வாறாகச் சுவர் சங்கம மூலையில் படம் மாட்டும் பழக்கமுண்டு.. இன்று அதை ஒரு ஃபேஷனாக நினைக்கின்றார்கள்.. இதனால் பெற்றோர்கள், பிள்ளைகளிடையே பிரிவு ஏற்படும்.. இவ்வாறாக பிள்ளைகளுடன் ஏற்பட்டுள்ள பிணக்கு தீர சஷ்டி திதியில் குன்றிலிருக்கும் குமரனுக்கு, மலைத்தலத்தில் அருள்பாலிக்கின்ற முருகனுக்கு மாம்பழம் நைவேத்யம் வைத்து வணங்கி ஏழைகளுக்கு தானம் அளித்திடல் வேண்டும்.
4. நக அழுக்குத் தோஷங்கள்!
வாழ்க்கையில் திருஷ்டி தோஷங்கள் நிறைய உண்டு.. கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக் கூடாது. பண வசதி, படிப்பு, பதவி இருந்தாலும் அவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில்லை., அழகு, திறமை, புத்தி சாதுர்யம் இவை இருக்கின்ற பெண்ணிற்கு ஏற்றபடி புகுந்த இடம் அமையால் போய்விடுகிறது.. ஒன்றுமே எதிர்பாராத பெண்ணிற்கு எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல இடம்  கிடைத்து விடுகிறது.. இதற்குக் காரணம் அவரவர் செய்த நல்வினை, தீவினையே ஆகும்.. இந்த நல்வினை, தீவினைகள் ஒருவரைத் தாக்குவதற்கு மூல கருவியாகப் பயன்படுவது கண் திருஷ்டியேயாகும்.. எண்ணத்தின் வேகத்தைக் கெடுதலுக்கு பயன்படுத்தும் கருவிதான் கண் திருஷ்டி. ஆனால் பெருமூச்சு, நீண்ட ஏக்கம், வயிற்றெரிச்சல் இவைகளின் சக்தியைக் கண் திருஷ்டி மூலமாகத் தான் காண முடியும்.. இவ்வாறு ஏற்படுகின்ற திருஷ்டிகள் பல ஆயிரம் உண்டு.. அதில் “சுக நேரு திருஷ்டி“ பல காரணங்களால் மனிதர்களைத் தாக்குகின்றது.. இதன் காரணங்களை குரு மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தோஷம் அறிவதை உதாரணத்திற்காக ஒன்று சொல்லுகின்றோம். தினமும் காலை எழும்போது உள்ளங்கைக் கரதரிசனம் செய்தல் வேண்டும். அவ்வாறு கர தரிசனம் செய்யும் பொழுது கைவிரல் நகங்களையும், நக அழுக்கையும் கவனித்தல் வேண்டும். சுக நேரு கண்திருஷ்டியைக் கண்டுபிடிக்கும் விதம் யாது எனில் கைவிரல் நகங்களில் ஏற்படும் மாற்றத்தால் தான் அறியலாம்.  அதாவது..
1. கட்டைவிரல் நகத்தில் கரும்புள்ளி காணப்பட்டால் முறையற்ற வாய்ப் பேச்சால், பெண்களால் கஷ்டங்கள் ஏற்படும்..
2. திருமணமாகி இருந்தாலும் தகாத உறவு ஏற்பட வாய்ப்புண்டு.. இதனால் பல ஆபத்துக்கள் ஏற்படும். இதிலிருந்து நிவர்த்தி பெற ஆறுமுகத்துடன், 12 கர முருகனுக்கு மாவிளக்கிட்டு அன்னதானம் செய்ய வேண்டும்...
5. தவங்கிடந்து பெற்ற பிள்ளைப் பேற்றுக்கான தோஷங்கள் நீங்கிட...
திருமணம் நடந்து நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து குருவருளால் மூர்த்தி, தீர்த்தம், தலம் தரிசித்து கடவுளின் திருவருளால் கர்ப்பம் தாங்கி இருக்கின்ற தாய்மார்களுக்குப் பிறருடைய பொறாமைகளால் திருஷ்டி தோஷம் தாக்காமல் இருக்க வேண்டுமல்லவா ? வில்வ மரக் கட்டையைச் சந்தனக் கல்லில் உரைத்து வருகின்ற விழுதை கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவன்மார்களோ நெற்றியில் இரவில் பற்றுப் போல இட்டு வருதல் வேண்டும். இந்த வில்வப் பற்று நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, பிரார்த்தனை பலிதத்தால் கர்ப்பம் தாங்கி இருக்கின்ற தாய்மார்களின் மீது பொறாமை கொண்ட உறவினர்களும், எதிரிகளும் ஏவல் செய்து வைக்கின்ற குங்குமம், சாம்பல், மையின் வேகம் போன்ற தீய சக்திகள் காத்து அவர்களைத் தாக்காமல் இத்தகைய கண் திருஷ்டி தோஷ்ங்களில் இருந்து ஏவல் வித்தைகளின் சக்தியை இழக்கச் செய்யும், காலையில் எழுந்து சிவன் கோயிலில் இருக்கும் ஏழைக்கு உணவு அளித்தலால் நலம் பெறலாம்..
6. சண்டை தோஷங்கள் தீர :- காதலில் ஏமாற்றமும், நண்பர்களால் குடிப்பழக்கமும், சூதாட்டமும் சேர்ந்து குடும்பத்தில் சண்டை வருகின்ற நிலைக்கு ஆளானோர் பலர் உண்டு.. இத்தகையோர் படுவேர் கண் திருஷ்டியால் தாக்கப்பட்டவர் என்பதை உணரலாம்... இவ்வாறு இருப்பவர்கள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். பொய்யான நண்பர்கள் வாக்கையே புனித அறிவுரையாகக் கருதுவர். இவ்வாறு இருப்பவர்கள் திருந்திட சுவாமி மலையில் உள்ள “கண் கொடுத்த விநாயகரை” வேண்டி ஞாயிறு தோறும்  கீரைக் கூட்டுடன் ஞாயிறு சூரிய ஹோரை நேரத்தில். (காலை 6-7, பகல் 1-2) அடுக்குமல்லி, சார்த்தி கீரை கலந்த அன்னம் தானம் செய்திடில் சண்டை, சச்சரவு தீர்ந்து நன்கு வாழலாம்.. படுவேற் கண் திருஷ்டி தோஷ நிவாரணத்திற்கு இவரே முக்கிய விநாயகர் ஆவார்..
7.  வாங்குவதற்கு ஓர் இலக்கணம் உண்டு!
சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட கிழமைகளில் வாங்குவதால் திருஷ்டி தோஷங்கள் எளிதாக நம்மைத் தாக்குவதற்கு வழியுண்டு. சில பொருட்களை தேவையான போது மட்டுமே வாங்குதல் நலம்.. காசு கையில் இருக்கும் போது தானே வாங்க முடியும் என்று நினைத்து வீட்டில் உள்ள பெரியவர்களைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாய் செய்து விடுதலால் பல திருஷ்டி தோஷங்களுக்கு நாம் ஆளாகின்றோம். ஆகவே, சித்தர்கள் கூறும் நல்வழியைப் பின்பற்றி நலம் பெற வேண்டும். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பஞ்சு, கரி, விறகு, எண்ணெய் இவைகளை விலைக்கு வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால். “புளிச்ச கண் திருஷ்டி” நம்மைத் தாக்கும். இதை விளக்கிக் கூற வேண்டுமெனில் கண் சிறுத்து, சிவந்து, பேசும் போது மூலைகளில் கண்ணழுக்கு இருந்தால் அவர்களின் பார்வைக்கு “புளிச்ச கண் திருஷ்டி தோஷம்” என்று பெயர். இதனால் குடும்பத்தில் வியாதிகள் வரும். இதற்குப் பரிகாரமாய் சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் இருக்கும் கார்த்திகை விநாயகரை வேண்டி மாதுளைக் கனிக் காப்பிட்டு மாதுளைப் பழத் தானம் செய்திடில் நலம் பெறுவர்.

நித்திய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம் லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.6.1999 – இன்று பச்சைக் கிளிகளுக்கு உணவு அளித்திடில் – பிறர் பார்வையால் வந்த தோஷம் தீரும்.
2.6.1999 – காதல் பறவைகளுக்கு (Love Birds),  ( பல்வண்ணச் சிறு பறவைகள்) உணவு அளித்திடில் – கணவன் மனைவியிடையே அன்பு, நேயம் பெருகும். சிறு சிறு சச்சரவுகள் தீரும்.
3.6.1999 – இன்று யானைக்கு உணவளித்திடில்  குடும்ப சங்கடங்கள் தீரும்.
4.6.1999 – மீன் விற்கும் ஆதரவற்ற ஏழை பெண்மணிக்கு ஆடைதானம் – எதிர்பாராத பண வரவு ஏற்படும்.
5.6.1999 – குடவரைக் கோயிலில் (உ.ம் : பிள்ளையார்பட்ட, மாமல்லபுரம்) இருக்கும் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து பல காய்கறிகள் சேர்ந்த கூட்டு சாதமாக அன்னதானம் – நியாயமான வழக்குகள் சாதகமாய் அமையும்.
6..6.1999 – வயதான ஏழை வக்கீல்களுக்கு வயிறார உணவிட்டு வஸ்திர தானம் அளித்தல் – அம்பலக் கண் என்ற ஒரு வகை திருஷ்டி போகும்.
7.6.1999 – அபார்ஷனில் ஈடுபடாது தார்மீக சிந்தனையுடன் நன்முறையில் பிரசவம் பார்க்கும் செவிலித் தாய்களுக்கு வயிறார உணவிட்டு பாத பூஜை செய்து, வஸ்திர தானம் அளித்து ஆசி பெற்றிடில் – குழந்தை பாக்கியம் பெற வழியுண்டாகும்..
8.6.1999 – பிடரி மூடி நிறைய இருக்கின்ற வெள்ளை குதிரைக்கு பூஜை செய்து கருப்பண்ண சுவாமி கோயிலில் அன்னதானம் – எதிரிகளின் பகைமையால், ஏவலால் தாக்கப்படாமல் காக்கப்படுவர்..
9.6.1999 – பாய் பின்னும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் செய்திடில்  பிரிந்த நல்ல நண்பர்கள் மீண்டும் கூடுவர்.
10.6.1999 – உண்ணாநோன்பிருந்து 50 வாருடங்களுக்குக் குறையாமல் இருக்கின்ற கோயில் அரச மரத்திற்கு “ஓம் நமோ நாராயணா” என்று நாமம் சொல்லி பெரிய எட்டுத்திரி நூலெடுத்து அல்லது பெரிய எட்டு முழம் நீளம் உள்ள திரிநூல் எடுத்து மஞ்சள் தடவி அதில் ஒவ்வொரு முடிக்கும் “ஓம் நமோ நாராயணா” என்று ஜெபித்து 17, 26, 35, 44, 53, 62 முடிகள் போட்டு அரச மரத்தைச் சுற்றிக் கட்டி அதே எண்ணிக்கையில் பிரதட்சிணம் வந்து வேண்டிடில் குடும்பத்திற்கு நல்ல மங்களச் செய்தி தேடி வரும்.
11.6.1999 – மரத்தில் பூவேலை செய்யும் கைத்திறனைக் கொண்டோருக்கு ஆடை, அன்னதானம் செய்து வணங்கிடில் – கணவன்/மனைவி இழந்தோர் செய்கின்ற தவறுக்குப் பரிகாரம் கிட்டும்.
12.6.1999 – கிழங்கு வகைகளைப் பயிரிடும் மலைவாழ் மக்களுக்கு கம்பளி தானம் – வாடகை வீடு நலமாய் அமையும்.
13.6.1999 – பேட்டரி சார்ஜ் (Battery Charge)  செய்யும் தொழிலாளிகளுக்கு உணவிடுதல் – நண்பனின் முறையான அன்பு நேயம் கலந்த காதல் பரிமாணத்திற்கு வருகின்ற தடங்கல்கள் குறையும்.
14.6.1999 – கறுப்பும், வெள்ளை நிறமற்ற பசுமாட்டிற்கு வயிறாரப் புல் கட்டுகள் அளித்திடில் – பிறன்மனை நாடாப் பண்பிற்கு அருளும் நாள் இது.
15.6.1999 – செங்கற் சூளை வேலை செய்கின்ற ஏழைக் குடும்பத்திற்கு வயிறார உணவளித்து மருத்துவ உதவி செய்திடில் தலை, கபாலம் சம்பந்தமான நோய்களின் வேகம் குறையும்.
16.6.1999 – கோயில் நந்தவனத்தைச் சீர்படுத்தி நீர் வளம் செய்திடில் பிற பெண்களுடன் குறிப்பாக மனைவியின் சகோதரியிடம் கொண்ட தகாத உறவால் வரும் ஆபத்து விலகும்..
17.6.1999 – தகாத உறவால் அநாதையாகக் கைவிடப்பட்ட பெண்ணிற்கும் அதன் குழந்தைக்கும் நிரந்தர நிதி மற்றும் ஏனைய உதவிகள் அளிக்கும் நாள் இது.
18.6.1999 – விரதமிருந்து, 100 வருடங்களுக்குக் குறையாமல் இருக்கின்ற வேப்ப மரத்திற்கு அரைத்த மஞ்சளைத் தடவி குங்குமப் பொட்டிட்டு மனைவியின் சேலை, முந்தானையும் கணவனின் மேல் துண்டும் முடி போட்டு 21, 30, 39, 48, 57 முறைக்குக் குறைவில்லாமல் வேப்பமரத்தை தம்பதியராகச் சேர்ந்து வலம் வந்து தானம் செய்திடில் கணவன் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டார். நன்னெறியுடன் திகழ்வார்.
19.6.1999 – இன்று எமதர்மராஜா கோயில்களில் விளக்கேற்றிப் புதுத் தாலி சரடை அவர் பாதத்தில் வைத்து வேண்டி அம்பிகை சந்நதியில் தாலிச் சரடு மாற்றிக் கொள்வதால் எதிரியாய் இருந்து இறந்த ஆவிகளின் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்.
20.6.1999 – புது வஸ்திரம் விரித்து அதன் மீது மஞ்சள் நீர் தெளித்து நான்கு மூலைகளிலும் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேல் குலையாக இளநீர் வைத்து (கொத்தாக) (10, 20 என்ற எண்ணிக்கையில்.) அரைத்த சந்தனம், குங்குமம் இளநீருக்கு இட்டு கன்னிப் பெண்களோ, திருமணம் ஆகி குழந்தைப் பேறு இல்லாத தம்பதியரும் உண்ணாநோன்பிருந்து சந்தான கோபால காயத்ரீ மந்திரத்தை, பாலகிருஷ்ண காயத்ரீ மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் ஜபித்து வலம் வந்து வணங்கி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து நிறைய குழந்தைகள் பெற்று திருமணம் செய்து பேரன், பேத்திகள் எடுத்த தம்பதிகளுக்கு வஸ்திரத்துடன் இளநீர் குலையை சேர்த்து தானம் அளித்திடில் – குடும்பத்தில் நல்லதொரு மாற்றத்தைப் பெறலாம்.
21.6.1999 – இன்று பஞ்சவர்ணக் கிளிக்கு பழுத்த கோவைப்பழம் அளித்திடில் குடும்பத்தில் அமைதி நிலவும்.
22.6.1999 – 108 படிகளுக்குக் குறையாமல் இருக்கின்ற முருகன் கோயிலில் படியேறு நமஸ்காரம் மூன்று முறை செய்திடில் – எதிர்பாராத உத்தியோகம் கிடைக்க வழியுண்டு.
23.6.1999 – குல தெய்வம் கோயிலில் சுவாமிக்கு பச்சை ஆடை அணிவித்து பச்சை நிற மாங்காய் தானம் அளித்திடில் கணவனை இழந்து திருமண வயதுடைய பெண்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற தாய்மார்களுக்கு நல்ல வழி பிறக்கும்.
24.6.1999 – குடும்பத்தில் முக்கிய உறவினர் அடுத்தடுத்து இறந்திருக்கலாம். சுலுமா மைத்திருணி என்ற தோஷத்தாலும் தெய்வ குற்றத்தாலும் இவ்வாறு நிகழ்வதுண்டு. இவ்வாறு நிகழ்ந்தவர்கள் மூன்று ஏழைத் திருமணங்களைத் தாங்களே ஏற்று நடத்திடில் தோஷத்தின் வேகம் குறைந்து குடும்பத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
25.6.1999 – இன்று சைவ நாள். அசைவம் கூடாது. கோழிகளுக்கு உணவு இட்டிடில் – பார்த்தால் குற்றம், தொட்டால் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்போரின் கோள் மூட்டல் குத்தல்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
26.6.1999 – முருகன் கோயிலில் பாதாம் பருப்பு கூடிய சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து தானம் அளித்திடில் – எதிர்பாராத பணவரவு வந்து சேரும்.
27.6.1999 – ஐந்து வயதிற்குள் இருக்கின்ற சிறுமிக்கு பாவாடை சட்டை தானம் – இசைத்துறை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தொழிலில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
28.6.1999 – மலை மேல் இருக்கின்ற சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் சந்தனக் காப்பு, பழக்காப்பு செய்திடில் – பணக்கஷ்டம், வேலையின்மை போன்ற பெருத்த மன ஏக்கம் சிறுத்து விடும்.
29.6.1999 – திருச்சி பாடாலுர் அனுமாருக்கு பாலபிஷேகம் செய்து வேகவைத்த வேர்க்கடலை நைவேத்யம் செய்து அந்த நைவேத்தியத்தை அங்கேயே வைத்து விட்டு வந்திடில் ஏற்றுமதி இறக்குமதி  (Import & Export ) வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நீண்ட நாளாக வராமல் தங்கியிருந்த பணவரவிற்கு வழி ஏற்படும்.
30.6.1999 – தும்பிக்கையில் மாம்பழம் தாங்கிய விநாயகர் இருக்கின்ற (திருத்துறைப் பூண்டி அருகே திருக்கடிக்குளம்) கோயிலில் விதவிதமான பழங்களால் மாலை அணிவித்து அப்பழங்களாய் ஏழைகளுக்கு தானமாய் அளிக்கின்ற பழ வியாபாரிகளுக்கு பழ வியாபாரத்தில் ஏற்படுகின்ற போட்டிகள் குறையும்.
விசேஷ தினங்கள் – ஜுன் 1999 (திருக்கணித பஞ்சாங்க முறைப்படி)
26.06.1999 – சனிப் பிரதோஷம் | 28.06.1999 – பில்வ த்ரிராத்ரி விரதம்
பௌர்ணமி திதி நேரம் – 27.06.1999 – ஞாயிறு நள்ளிரவு 1.08 மணி முதல் ... 28.06.1999 பின்னிரவு அதாவது செவ்வாய் விடியற்காலை 3.07மணி வரை
28.6.1999 – பௌர்ணமி இரவு கிரிவல நாள். Pournami English Timings (for clarity)  27.06.1999 – Sunday 25.08 hours to 26.08.1999 – Monday 27.07 hours
மூன்று நாள் பில்வ த்ரிராத்ரி விரதம் – 26.06.1999 – விரதத் தொடக்க முதல் நாள்.., 27.06.1999 – விரத இரண்டாம் நாள்.., 26.06.1999 – விரத நிறைவு மூன்றாம் நாள்.
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் – கிரிவலச் சாலை, ஆடையூர் , திருஅண்ணாமலை – 606 604... அருணாசல இறை “வலையம்“ (ARUNACHALA CELESTIAL NET)
நம் பெரியோர்கள் ஆற்றி வந்த அருட்பணியின் தொடர்ச்சியாக திருஅண்ணாமலையாரின் மேன்மையைப் பாரெங்கும் பரப்பிடவும், அருணாசல கிரிவல மஹிமையை யாங்கணும் எடுத்துரைத்திடவும், ஜாதி , மத, இன, குல, பேதமின்றி சித்புருஷர்களின் எளிய அறவழி முறைகளை யாவர்க்கும் அளித்திடவும் ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் வழிவந்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருள்மொழிகளை, அறவழி முறைகளை எல்லோரும் அறியும் வண்ணம் எளிமையாக உரைத்து முக்தி தரும் மோட்சப் பாதையை வகுத்துக் காட்டிடவும் பக்தர்களின் சார்பில்... http://www.agasthiar.org என்ற தெய்வீகமான Website தொடங்கப்பட்டுள்ளது, அண்ணாமலையார் மஹிமை, அருணாசல கிரிவல மகாத்மியம், ஸ்ரீஅகஸ்தியரின் விளக்கங்கள், ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜரின் சிறப்பம்சங்கள், எம பகவானின் வழிபாட்டு முறைகள், அகில உலகத்திற்குமான காலண்டர், பதினைந்து திதிப் பிள்ளையார் விளக்கங்கள், அனைத்து உலகிற்குமான பௌர்ணமி கிரிவல நேரம், “ஓம்-ஸைன்” (AUM ZINE) –Electronic Spiritual Internet Magazine – என்றவாறாக எண்ணற்ற தெய்வீகச் சுடர்கள், அழகான காணுதற்கரிய, தெய்வீகம் பொங்கும் திருஅண்ணாமலை தரிசனங்கள், தெய்வத் திருஉருவங்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ.... பக்திப் பரவச மழை பொழியும், 100% தெய்வீக Website.
The unique non-pareil cent percent divine Website : திருஅண்ணாமலையாரின் அருட்கடாட்சம் யாவரையும் சென்றடையும் வண்ணம் இந்த அருணாசல இறை அணு வலையம் அருட்பணியாற்றிட எல்லாம் வல்ல ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலையாரை வேண்டுகிறோம்...
On behalf of our Ashram an International Website has been launched with serene, sacred and divine ambitions to uplift the mass in the spiritual enlightenment. This is one of our divine services extended besides annadhan, monthly free medical service for the poor, etc.. as our dedicated godly mission under the auspices of the divine applets of Satguru for the spiritual upliftment of all living beings.
எங்கள் ஆஸ்ரமத்தின் பரிபூரண தெய்வீக வெளியீடுகளான ஸ்ரீஅகஸ்திய விஜயம் (ஆன்மீக மாத இதழ்), பிரதோஷ மஹிமை, ஸ்ரீஆயுர் தேவி மஹிமை போன்ற தெய்வீக நூல்கள்,, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திரச் சக்கரம், ஸ்ரீசுசரித சரஸ்வதி, ஸ்ரீஅமிர்த மிருத்யுஞ்ஜயர் போன்ற தெய்வீகப் படங்களும்  (Laminated Pictures), திருஷ்டி தோஷ நிவர்த்தி கண்டி தீபமும் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும், சென்னை, கோவை, திருச்சி முகவரிகளிலும் கிடைக்கும்..

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam