அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நடந்தால் அதிரும் காற்று மண்டலம்

உங்களுக்கு உயிர்ச் சக்தியைத் தரும் காற்று மண்டலத்தைத் தீய எண்ணங்களால் பாழாக்காதீர்கள்!

உங்களுடைய ஒவ்வொரு நடையிலும், அசைவிலும் நீங்கள் காற்று மண்டலத்தை உரசி, அலசி, இடித்துத்தான் செல்கின்றீர்கள். காற்று மண்டலத்தில் வெறும் வாயுப் பரிமாணங்களும், நுண்ணிய உயிரினங்களும் மட்டும்தான் இருக்கின்றன என்ற விஞ்ஞான முடிவு தவறானதாகும். வாயு மண்டலத்தில் மெய்ஞானத்தால் மட்டுமே உணரக்கூடிய விஞ்ஞானத்தால் இனங்காண முடியாத, நம் பகுத்தறிவிற்கு எட்டாத எத்தனையோ எண்ணக் கலவைகளும், பீஜாட்சர சக்திகளும் நிறைந்துள்ளன.

இறைவன் அளித்த சாந்தமயமான காற்று மண்டலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஜீவனுக்கும், குறிப்பாக மனிதனுக்கு நிச்சயமாக உண்டு. புகை பிடித்தல், பொய் பேசுதல், தீய, முறையற்ற (காம) எண்ணங்களுடன் வாழ்தல் போன்ற மனிதனுடைய அதர்ம எண்ணங்களும், காரியங்களும்தான் காற்று மண்டலத்தைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. Man is the most dangerous pollutor of the environ!

பெட்ரோல் மற்றும் ஏனைய ரசாயனக் கலவைப் புகைகளால் காற்று மண்டலம் மாசுபடுவதைவிட மனிதனுடைய தீய எண்ணங்களாலும், தீய சக்திகளாலும், தீயொழுக்கங்களினாலும் தான் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்பது மெய்ஞானங்கூட்டும் இறைப் பகுத்தறிவுப் பாடம்.

திரௌபதி பூஜித்த ஸ்ரீவலம்புரி
விநாயகர் பழமண்ணிபடிக்கரை

இன்றைக்கு வாகனங்களின் மற்றும் தொழிற் சாலைகளின் புகையாலும் காற்று மண்டலம் பெரிதும் மாசுப்படுத்தப்படுவதாக விஞ்ஞானம் கூறிக்கொண்டு வந்தாலும், இதைத் தவிர ஜீவன்களுடைய தீய எண்ணங்கள், முறையற்ற காம எண்ணங்கள், கேடான நடத்தைகளாலும்தான் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. ரசாயன நச்சுப் புகையினால், மாசுபடுத்தப்பட்ட காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக எத்தனையோ விஞ்ஞான வழிமுறைகள் இருப்பதுபோல தீய எண்ணங்களால் மாசுபடுத்தப்பட்ட காற்று மண்டலத்தைப் புனிதப்படுத்துவதற்குத்தான் வேத மந்திரங்களும், ஹோமங்களும், ஊது பத்தி, சாம்பிராணி போன்ற நறுமண தூப, ஜோதி வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளாக நமக்கு வந்துள்ள வாகனங்களின் புகையால் வான் மண்டலத்தில் ஏற்படும் நச்சு விளைவுகளை நாம் அறிவோம் அல்லவா! விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை உருவாக்குவதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஆனால் அது மனித குலத்திற்கு முழுமையாக நன்மைகளைப் பயக்கும் வகையில் அமைய வேண்டும். ஒரு புறம் நன்மைகளும், மறுபுறம் அலோபதி மருந்துகள் போல கெடுதலான பக்க விளைவுகளும் (side effects) ஏற்படுமேயானால் அந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்பு பூலோகத்திற்குத் தேவையில்லாத ஒன்றாகும் அல்லது அரைகுறையானதாகும்.

விளைவில் விளையும் வினை!

மெய்ஞானம் புகட்டுவது என்னவெனில் நாம் செய்கின்ற காரியங்களின் பலாபலன்களைக் கொண்டுதான் காரிய வினைப்பகுப்பு அமைகின்றது என்பதே! உதாரணமாக ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிக்காக, நல்ல சமுதாய இறைப் பணியாக, மருந்துகளை ஏற்றிச் செல்லும் ஊர்தியிலிருந்து வருகின்ற புகையானது அவ்வளவாக நச்சுத் தன்மையைக் கொண்டிருப்பது கிடையாது. ஏனென்றால் உலக ஜீவன்களுக்கான நற்காரியம் என்பதால் அதன் தீய விளைவுகளை, புகையின் நச்சுத் தன்மையை சித்தர்களும் மஹான்களும் அதியற்புத நன்மை பயக்கும் தேவதைகளும் (Angels) தம்முள் ஏற்று நம்மைக் காப்பாற்றுகின்றனர். ஆனால் அதே ஊர்தியில் சுயநலத்திற்காக வெளியில் செல்வது. ஆபிஸிற்குப் போவது எனப் பயன்படுத்தும் போது அதில் நச்சுத்தன்மையான புகையே ஏற்படுகின்றது. இந்த மெய்ங்ஞான விளக்கம் உங்களுக்கு ஆச்சரியகரமானதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும், ஆனால் இதுவே, கலியுகத்தில் சூட்சும் ரீதியாக நடக்கின்ற அருள் ஞான நியதியாகும்.

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் எந்த வாகனமானது சமுதாயப் பணிக்காக, தியாகச் செயலுக்காகப் பயன்படுத்தப் படுகின்றதோ அதனுடைய புகையில் ஏற்படும் விளைவுகள் அதிகமான பாதிப்பைத் தராமல் சித்தர்கள் மாற்றி விடுகின்றார்கள். அப்படியானால் இன்றைக்கு பொதுமக்களின் நன்மைக்காக ஓட்டப்படும் பேருந்துகளிலிருந்து வெளிவரும் புகையைப் பற்றி என்ன சொல்ல முடியும்? எவ்விதக் கட்டணமும் பெறாமல் மக்களின் நன்மைக்காக அந்தப் பேருந்து இலவசமாக ஓட்டப்பட்டால்தான் அதனைத் தியாகமயச் சமுதாயப் பணியாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, எப்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றனவோ அப்போது அது வியாபாராமாகத்தான் ஆகிவிடுகிறது.

தியாகமோ, சமுதாய இறைத் திருப்பணியோ, அதனை எப்படி அறியக் கூடும்?

தலவிருட்சம் இலுப்பை
பழமண்ணிபடிக்கரை

அர்ஜுனன், போருக்காக அஸ்திரங்களைப் பயன்படுத்தியதைவிட, காட்டில் அவதியுற்ற கால்நடைகளுக்காக, ஏழைகளுக்காகக் கனிகளைக் கொய்ய அஸ்திரங்களைப் பயன்படுத்தியபோது, அவை மிகுந்த வேகத்தை, ஆற்றலைக் கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தான். எனவே செய்யப் போகின்ற காரியம் தரும் பலன்களைப் பொறுத்து இயற்கையே தன்னை மாற்றிக் கொள்ள சித்தர்களும், மகான்களும் தங்கள் தபோ பலத்தால் உதவுகின்றார்கள். இவ்வாறாக ஏதோ உபநிஷத்துக்களாக, தத்வார்த்தங்களாக, இறை வழிகளைப் பற்றித்தான் சித்த புருஷர்கள் அருளியிருக்கின்றார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள், அந்தந்த யுகத்திற்கு ஏற்ற வகையில் ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகப் பலவிதமான அற்புத தெய்வீக ரகசியங்களையும் சித்த புருஷர்கள் ஞானபத்ர கிரந்தங்களில் வடித்துள்ளதை இன்றும் கண்டிடலாம். .

கிருத யுகம் முதல் கலியுகம் வரை அந்தந்த யுக நியதிகளுக்கேற்ப, மக்களின் வாழ்க்கை முறைகளுக்கேற்ப, சரியானதாக இந்த இறை வழிமுறைகள், ஜாதி, சமய, இன, குல மத வேறுபாடின்றி அனைவர்க்கும் உரித்தானதாக அமைந்துள்ளன, இவை யாவும் அவ்வப்போது சற்குருமார்களால் எடுத்துரைக்கப்படும். இவ்வாறாக எந்த ஒரு காரியத்தின் கர்ம வினைப் பகுப்பும், அதனுடைய நோக்கத்தையும், பயனையும் பொறுத்தே அமைகின்றது என்பதுதான் ஆன்மீகத்தில் நாம் உணர வேண்டிய வேத பாடங்களாகும். உதாரணமாக நீங்கள் காலையில்“walking” செல்வதற்கும், கோயிலுக்குச் சென்று அடிப் பிரதட்சணம் செய்வதற்கும், ஒரு குருடரைக் கைப்பிடித்து நல்வழி காட்டி நடத்திச் செல்வதற்கும் இவ்வாறு ஒரே நடையில் அதனுடைய காரிய நோக்கத்தைப் பொறுத்து அதனுடைய கர்மவினைப் பகுப்பின் பலாபலன்கள் நிச்சயமாக மாறுபடுகின்றன. அதாவது, மேற்கண்ட மூன்று காரியங்களிலும் நீங்கள் காற்று மண்டலத்தை உரசி நடந்து செல்லும்போது காற்று மண்டலத்தில் ஏற்படுகின்ற அதிர்வுகளும் மாறுபடும். உங்களுடைய நடை, சுயநலத்திற்காக என்றால் காற்று மண்டலம் நிச்சயமாக நன்கு பாதிக்கப்படுகின்றது. அதுவே சுயநலமற்ற தியாக மனப் பான்மையுடன், சிறிய இறைச் சமுதாயப் பணியாக அமைந்தால் கூட காற்று மண்டல உராய்வுகள் அவ்வளவாக பாதிப்பதும் கிடையாது!

இது வரையில் ஏதோ நடந்தோம், வண்டியில் சென்றோம், திரும்பி வந்தோம் என்று சாதாரணமாக எண்ணிய உங்களுடைய நடைப் போக்குவரத்துகளில், பயணங்களில் கூட எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் தொக்கி நிற்கின்றன என்பதை நீங்கள் இதன் மூலம் உணர்கின்றீர்கள் அல்லவா!

தருமர் பூஜித்த லிங்கம்
பழமண்ணிபடிக்கரை

“நட வழி யோகம் நடந்தாள்(ய்) வாழி காவேரி!'' என்று ஆற்றின் காரியத்தையும் நடை என்றே ஆன்மீகத்தில் விளக்குகின்றார்கள். ஒரு ஆறு கரை புரண்டு ஏறி இறங்கி வேகமாக எதற்காக வருகின்றது ? மக்களுக்குத் தன்னுடைய நீரை நன்முறையிலே பயன்படுத்தும் வகையில் அந்த புண்ய நதி தெய்வீகமாகச் செயலாற்றுகின்றது. நம் ஆருயிரைப்போல நதிக்கும் ஜீவசக்தி உண்டு. அதனையே நமக்குப் புரியும் வகையில் நதிதேவதை என்கின்றார்கள். எனவே நம்முடைய ஒவ்வொரு நடைக்கும், அசைவிற்கும் தெய்வீகக் காரண காரியம் இருக்குமேயானல், அது தான் காற்று மண்டலத்தைப் புனிதப்படுத்தும். இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்! அதனுடைய தெய்வீக சக்தியை நிலைநிறுத்திட ஒவ்வொரு கால் அடியையும் எடுத்து வைக்கும்போது இறை நாமத்தை ஓத வேண்டும் என்று நம் பெரியோர்கள் விதித்துள்ளார்கள். இதற்கு நட வழி ஜபம் என்ற பெயரும், நதி யோகம் என்ற பெயரும் உண்டு, அதாவது ஒரு நதி எவ்வளவு வேகமாகப் பாய்ந்து வந்தாலும் நதி தேவதைகள் இறை நாமத்தை, இறை மந்திரத்தை இடைவிடாது தியானித்து வருகின்றன.

நடக்கும் போது நாம் பயில வேண்டிய கைவிரல் முத்திரைகள் நிறைய உண்டு. வெறுமனே நடந்தான் என்று சொல்வதைவிட, நடந்து சென்று வரும்போது குறைந்தது 100 முறை ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தையாவது ஓதி அவற்றைக் கராவலம்ப முத்திரைகளுடன் யோகமார்க்கமாகச் செய்து வானிலிருந்து பீஜாட்சர சக்திகளை ஈர்த்து அவற்றின் பலாபலன்களை பிரபஞ்சத்தின் ஜீவன்களுக்காக அர்ப்பணித்தான் என்ற பெயரோடு இருந்தால்தான், நம்முடைய எந்த ஒரு காலடி நடையும் வீணாகவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம் அல்லவா! இவ்வாறுதான் சித்த புருஷர்களும், மகான்களும் பாதயாத்திரையில் நடவழி ஜபம் புரிந்து வருகின்றார்கள், எனவே காற்று மண்டலத்தில் சலனங்கள் ஏற்படுவது நம்மால்தான் என்பதை உணர்ந்தால் தான் அவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வழிமுறைகளை, அவற்றின் தெய்வீக ஆற்றலைப் பதிய வைக்கும் முறைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

காற்றில் நிறைய ஆன்ம ரகசியச் சதுரங்கள் (divine applets) இருக்கின்றன என்பதை இத்தொடரின் மூலம் நாம் இப்போது உணர்கின்றோமல்லவா! இதனைச் சிறிதளவேனும் உணர வைக்கத்தான் பக்கம் பக்கமாக இவ்வளவு விளக்கங்கள்! இந்த ஆன்மச் சதுரத்தின் தெய்வீக குணப்பாடுகள் இடத்திற்கு இடம் மாறுபடும். சபரிமலை, திருஅண்ணாமலை, மேருமலை, கேதார்நாத் , பத்ரிநாத் போன்ற மலைப் பகுதிகள், பொதிகைமலை, குற்றாலம் போன்ற இடங்களில் காற்று மண்டலத்திலுள்ள ஆன்மச் சதுரத்தில் தெய்வீக  குணப்பாடுகள் அபரிதமாக இருக்கும். எனவேதான் இத்தகைய புனிதத் தலங்களுக்கு தெய்வீக புனித  யாத்திரை மேற்கொண்டு இறைவழிபாடுகள் செய்து வருகின்ற போது அந்த காற்று மண்டல தெய்வீக  ஆன்மச் சதுரங்களின் குணப்பாடுகள் நம் உடலில் நிறைந்து நாம் எங்கெல்லாம் நடைப் பயணம்  மேற்கொள்கின்றோமோ அங்கெல்லாம் பரவி காற்று மண்டலத்தில் குறைந்திருக்கும் தெய்வீக  சக்திகளை விருத்தி செய்கின்றது.

உதாரணமாக செங்கல்பட்டில் இருந்து ஒருவர் கேதார்நாத், பத்ரிநாத், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற திருத்தலங்களுக்கு சென்று முறையாக பக்தியுடன் வழிபட்டு திரும்புகையில் அவருடைய உடல் நாளங்களில் தேவ சக்திகள் நிறைந்து, தான் ஊர் திரும்பியவுடன் செங்கல்பட்டின் வான்வெளிக் காற்று மண்டலத்தில் குறைந்திருக்கும் ஆன்ம சக்திக்கு  ஓரளவு கூடுதல் சக்தியை தந்து விருத்தி செய்கிறது. இதற்காகத் தான் மதுரை, பழனி, திருத்தணி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் பல தெய்வாதி உற்சவங்களை நிகழ்துவதானது காற்று மண்டலம் மூலமாக லக்ஷக்கணக்கான மக்களுக்கு ஆன்ம சக்தியளிப்பதாக அமைகிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் காற்று மண்டலத்திலுள்ள ஆன்மச் சதுரத்தில் நிறைந்துள்ள தெய்வீக சக்திகளை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் நம் பெரியோர்கள் பல அற்புதமான பூஜை முறைகளை தினசரி வாழ்வில் கடைபிடிப்பதற்க்கென அளித்துள்ளார்கள். ஆடை நியதிகள் முதல் உணவு பழக்க நியதிகள் வரை எத்தனையோ விரத நியதி முறைகளை கைக்  கொண்டதால்தான் புனித தளங்களில் நிறைந்துள்ள ஆன்மச் சதுரங்களின் தெய்வீக சக்தியை நம் உடலில் கிரஹித்துக்கொண்டு உலகெங்கும் பரப்பிட முடியும். எனவே சபரி மலை விரத வழிபாடு என்பது காற்று மண்டலத்தைப் புனிதமாக்கும் அதியற்புத இறைத் திருப்பணி என்பது யாரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை!
ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை!
அகஸ்திய விஜயம் தான் அவர் காட்டும் பாதை!
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் குருகுலவாச அனுபூதிகள்)

ராமச்சந்திர ரகுவீரா !

கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன் திளைத்த குருகுலவாசமானது கலியுகத்திலும் திகழ்கின்றது, ஆனால் கலியுக நடைமுறைச் சமுதாய வாழ்க்கை நிலைகளுக்கேற்ப! அக்காலத்தில் மஹரிஷிகள் வனத்தில் வாழ்ந்து பர்ணசாலை அமைத்து, காவியுடுத்திக் கமண்டலம் தாங்கி, ஜடாமுடி தரித்து சமுதாயத்தில் உலா வந்தபோது அவர்களுடைய தெய்வீக சக்தியை உணர்ந்து எங்கு சென்றாலும் மக்கள் பயபக்தியுடன் போற்றி வணங்கி மகிழ்ந்தனர். ஆனால் இன்று எந்த சற்குருவேனும் அத்தகைய உடல் தோற்றத்தைக் கொள்ள முடியுமா? நாமே தேடிச் சரணடையும் வண்ணம் இலைமறை ஆன்மீகக் கனியாய்ச் சமுதாயத்தில் இல்லற நல்லறம் கொண்டும் மற்றும் பல ரூபங்களைக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்து அருள்வழி காட்டும் வண்ணம் சற்குருமார்கள் கலியுகத்தில் முனைந்து நிற்கின்றனர். நம் பாரதத் திருநாட்டில் குறிப்பாகத் தெய்வத் திருத்தமிழ்நாட்டில்தான் சற்குருமார்களின், மஹரிஷிகளின், யோகியர்களின்,  சித்புருஷர்களின் தெய்வீக நடமாட்டம் அதிகமோ அதிகம்!

மெக்ஸிகோவில் செவ்விந்திய பாணியிலும், கனடாவில் Coat, Tie, Pant அணிந்தும் திகழ்கின்ற சித்தர்கள் தாம் எத்தனை, எத்தனை! ஸ்ரீ அகஸ்தியரோ, போகரோ, புலிப்பாணியோ என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் எந்த சித்புருஷருமே அந்தந்த நாட்டின், இடத்தின் சூழ்நிலைக்கேற்பத் தங்கள் ரூபத்தை மாற்றி இன்றைக்கும் அருள் பாலிக்கின்றார்கள். ஸ்ரீ அகஸ்தியர் பாரம்பரியச் சித்புருஷர்கள் அயல்நாடுகளில் இருந்து தம்மை நாடிச் சரணடைவோர்க்கு சற்குருவாய் நல்வழி அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சித் புருஷர்கள் எந்த நாட்டிற்கும், எந்த மனிதனுக்கும் எந்த ஜீவனுக்கும் உரித்தானவர்களே என்பதை உங்களுக்கு உணர்விப்பது தான் இத்தொடரில் நீங்கள் காணுகின்ற குருகுலவாச அனுபூதிகளாகும், அத்தனையும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபவங்களாகும்.

சகாதேவன் பூஜித்த லிங்கம்
பழமண்ணிபடிக்கரை

... “பெரியவரே! நேத்தி என் பையனுக்கு நல்லபடியா ஆபரேஷன் நடந்து முடிஞ்சிடுச்சு! உன்ன மாதிரி ஒத்தரு வந்து கத்திய வச்சுக்கிட்டு ஆபரேஷன் பண்ணினாரு! நீதான் அங்காளம்மாகிட்ட சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்கே வந்தியா!”

“சிவசிவ! அப்படியெல்லாம் சொல்லாத ராஜா! எல்லாம் அங்காளம்மா கருணைதாம்ப்பா! எனக்கு பேனாவையே ஒழுங்கா புடிக்கத் தெரியாது, நானாவது ஆபரேஷன் தியேட்டருக்கு வர்றதாவது!”
இப்படியாக ஏதாச்சும் சொல்லி பெரியவர் மழுப்பி விடுவதைச் சிறுவன் கண்டு ரசித்திருக்கின்றான். சகல தேவதா மூர்த்திகளிடமும் பேசும் வல்லமை பெற்றவர், எப்படி இப்படிக் கோவணாண்டியாய், ஈ, எறும்பு, கொசு பிடுங்கும்படி ராயபுரம் அங்காளியம்மன் ஆலயத் தூணில் சாதாரண மனிதராய்ச் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்!

“டேய் அந்த நீலச் சொக்காக்காரன் வர்றான் பாரு! என்னைத் தேடுவான்! இல்லைன்னு சொல்லிடு. அது மகா கர்ம மூட்டை! பொறத்தியார் சொத்தைப் பிடுங்கி, ஏமாத்தி வாழறவன்! அவ்வளவும் கர்மபாக்கி! ஏதாச்சும் சாப்பாட்டுப் பொட்டலம் கொண்டு வருவான்! கேட்டா அன்னதானம்னு புளுகுவான்! நைஸா அத எல்லாத்தையும் வாங்கி ஓரங்கட்டிடு! அது ஏழைங்க வயித்துக்குப் போனாக்கூட அவங்களுக்கு வயித்த வலிக்கும்! நேரே சமுத்திர ராஜனை வேண்டிகிட்டு அதயெல்லாம் கடல்ல போட்டுட வேண்டியதுதான்! அந்த பொட்டலம் தரைல விழுந்தாக்கூட பூமிக்கு அவனோட கர்மம் ஒட்டிக்கும்...” பேசியவாறே டக்கென்று தூணின் பின்புறம் பெரியவர் மறைந்து விட்டார்! அவர் சொன்ன மாதிரியே ஒரு நீலச் சொக்காய்க்காரன் வந்து, “பெரியவரு இல்லையா, அவர்கிட்ட இதக் கொடுத்திடு. நீ துண்ணுடாதே!”   பெரியவர் சொன்னது போல் தான் நிகழ்ந்தது. பொட்டலங்கள் அனைத்தும் கடலுக்குத்தான் சென்றன.
இத்தகைய நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்துத் தான் சிறுவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான்“தஞ்சம்” அடைந்திருப்பது பிரபஞ்சத்தின ்“மகத்தான சித்புருஷரிடம்”என்ற முடிவிற்கு வந்தானோ இல்லையோ அன்றிலிருந்து பெரியவரும் உஷாராகி விட்டார். தினமும் பெரியவர் தரிசனம் என்ற காலம் போய், வாரம் ஒருமுறை என ஆகி... அதுவும் மாறி... “நினைத்தால் திடீரென்று எங்கும் வருவார்” என்ற நிலை வந்து பிறகு அதுவும் நின்று விட்டது. அதன் பிறகு பெரியவரின் குரல் மட்டுமே கேட்கும்.

“வாத்யாரே! அந்த ஆளு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்துட்டுப் போய்ட்டான்!” என்று சிறுவன் குரல் கொடுத்துப் பெரியவரை அழைத்தான். எந்தத் தூணின் பின்புறம் மறைந்தாரோ, அங்கு அவரைக் காணோம். சிறுவன் கோயிலைச் சுற்றிச் சுற்றி அலைந்தான்.

“என்னடா இந்தத் தேடு தேடற, நான் இங்கதானே நின்னுக்கிட்டு இருக்கேன்!”

'அட...'... சிறுவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படியென்ன அங்கு நடந்துவிட்டது! சிறுவன் பெரியவரை மேலும் கீழும் வைத்த கண் வாங்காமல் பார்த்தான்!

ஆம்... கோவணான்டியாய்த் தூணுக்குப் பின் மறைந்த பெரியவர் இப்போது...கோட், சூட், டை, சாக்ஸ் சகிதம் டிப்டாப்பாக நின்று கொண்டிருந்தார். இந்த திடீர்க் கோலத்தில் சிறுவன் பெரியவரை இரண்டு மூன்று முறை ஏற்கனவே பார்த்திருக்கிறான் என்றாலும் டார்க் ப்ளூ கலரிலான சூட்டும், பாண்ட்டும் பெரியவருக்கு கனகச்சிதமாக இருந்தது. ஒரு மழுங்கல் கூட இல்லாத Perfect crease! டை கூட double knot ல் ஜ்வலித்தது! அந்த மாதிரி “டை” எல்லாம் இங்கிலாந்தில் தான் அப்போது கிடைக்கும், இவருக்கு மட்டும் இது எப்படிக் கிட்டியது! எங்கிருந்து இந்த ஆடைகள் அனைத்தும் இப்போது வந்தன? கோவணான்டிப் பெரியவர் ஏன் இதனை அணிய வேண்டும்?

யாரறிவார் பராபரமே!

“டேய் என்னோட வா. ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு!”

கோயிலை விட்டு வெளிவந்த பெரியவர் வாசலில் கிடந்த இரு புதிய கறுப்பு ஷூக்களை அணிந்துகொண்டு விடுவிடு என்று பிராட்வேயை தாக்கி நடக்கலானார். சிறுவன் பெரியவர் பெனால் ஓடலானான்.
சிறுவனுடைய டிரஸ்ஸில் எந்த ஆடம்பரமும் கிடையாது! அதே பாவாடை போன்ற டிராயரும் சட்டையும்தான்.

பெரியவர் நடந்தார். நடந்தார் .... நடந்துகொண்டே இருந்தார். நல்ல பொட்டை முரட்டு வெயில். சட்டையையும் தாண்டி முதுகில் முள்போல் வெயில் குத்தியது! இவர் எப்படி கோட், சூட், தொப்பியுடன் ஹாய்யாக நடுரோட்டில் நடந்து கொண்டிருக்கிறார்! ஏதோ “ஆங்கிலேய துரை” வருகிறார் என்று பலரும் மரியாதை தந்து ஒதுங்கினர். ஏதோ ''ஹைகோர்ட் ஜட்ஜோ கலெக்டரோ'' வருகிறார் என்று அதிசயமாய்ப் பார்த்தவர்களும் உண்டு,

ஸ்ரீவிஜய கணபதி
பழமண்ணிபடிக்கரை

“வாத்யார் ஏன் இந்த மாதிரி வேலையைச் செய்கிறார் ?”.. என்று சிறுவன் எண்ணியவாறே அவர் பின்னால் ஓடினான். “கடக், கடக்” என்று ராணுவப் பாணியில் “ஸ்டெப்” சற்றும் இம்மி பிசகாமல் சென்ற பெரியவரைத் தொடர்வதே சிறுவனுக்குப் பெரும் பிரயத்தனம் ஆகிவிட்டது.

“நாங்க எடுத்து வக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஆயிரம் காரண காரியம் இருக்கும்டா! மத்தவங்க மாதிரி நாங்க வெறுமனே ‘walking’ போற ஆட்கள் கெடயாது! ஏன்னா நாங்க தண்டமா வேஸ்ட்டா ஒரு ஸ்டெப் எடுத்து வச்சாக்கூட மேலேந்து (upper worlds) எங்களுக்குத் தொப்பு தொப்புனு அடிமேல் அடி விழும்! நாங்க உங்களமாதிரி Iresponsible ஜந்துக்களாவும் ஒழுங்கா பதில் சொல்லாம ‘behave’ பண்ண முடியாது. பண்ணவும் கூடாதுடா! எங்க சித்தலோக constitutionனே தனிதான்! ஒவ்வொரு செகண்டும் நாங்க பூலோக நன்மைக்காகப் பாடுபட்டுக் கிட்டே இருக்கணும், ஜபிச்சுக்கிட்டே இருக்கணும், தபஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். எதிர் காலம் தெரிஞ்சாக் கூட அதயும் தெரியாதபடி தெரிந்தும் தெரியாமலிரு, அறிந்தும் அறியாமலிரு, புரிந்தும் புரியாமலிருன்னு அவங்கவங்க விதிப்படி நடக்க விட்டுடுவோம். ஆனா எங்களை நம்பி ஒருத்தன் வந்துட்டா அவனைக் கட்டிக் காக்கிறது எங்க பொறுப்பு. சில்மிஷம் ஏதாச்சும் பண்ணினா அவ்வளவுதான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எந்திரிக்க முடியாதபடி கர்மவினைக் குழில அவங்களே மாட்டிக்கு வாங்க!”

பெரியவர் ஹாய்யாக கைகளை வீசியவாறு நிறைய தெய்வீக விஷயங்களைக் கொட்டிக் கொண்டே சென்றார். அவர் பெய்த “தெய்வீகப் பெருமழையின்” ஒரு சில துளிகளே இன்று “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” எனும் பெருந் தெய்வ நதியாய்ப் பரிமளிக்கின்றது!

ஒருவழியாய் பிராட்வே வந்த பெரியவர் “டேய், 'நீ foreign car ல போயிருக்கியா.. கப்பல் மாதிரி கெடிலாக், பிளிமவுத் , இம்பாலான்னு ஏதேதோ சொல்வாங்களே!”

“ஊஹூம்..”சிறுவன் உதட்டைப் பிதுக்கினான்,

“அப்படியா உனக்கு எந்த சான்ஸும் தராம அட்டா நானுல்ல தப்பு பண்ணிட்டேன்..! சரி வா.. வா..” என்று பிராட்வே முனையில் நின்று கொண்டிருந்த புத்தம் புதுக் (கப்பல்) காரில் திடீரென்று ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார்!

பார் முழுவதும் பவனி வருகின்ற உத்தமருக்கு காரென்ன காரோ!

அவர் காரைத் திறந்த லாவகமும், ஏறி அமர்ந்த தோரணமும் ஏதோ பெரிய தொழிலதிபர் போலிருந்தது! ஆமாம், இவருக்கு எப்படிக் கார் சாவி கிடைத்தது?

சிறுவன் மண்டையைக் குடைந்து கொண்டான்..

“உனக்கு எதுக்குடா அந்த ஆராய்ச்சியெல்லாம் ? சாவியோ காவியோ நான் சொல்றதைக் கேட்டு ஒழுங்கா செஞ்சுகிட்டு வா, எல்லாம் தானாப் புரியும்...!”

பெரியவர் கலகலவென்று சிரித்தார். அதற்குள் கார் புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்துவிட்டது. அநாயாசமாக ஸ்டீரிங்கைத் திருப்புவதும், அசாதாரணமாக கிளட்ச், கியரை மாற்றி மாற்றிப் போடுவதும்...

பெரியவர் அந்தப் பெரிய காரைப் பக்குவமாய் ஓட்டுவது கண்டு சிறுவனே திகைத்து விட்டான்.

எவ்வளவு நேரம் பெரியவருடன் காரில் சுற்றினானோ அவனுக்கே தெரியாது!

“ராஜா நம்ம ராயபுரம் ஏரியா வந்துடிச்சு. இறங்கிக்கலாம் வா...!”

காரிலிருந்து இறங்கிய பெரியவர் கார்ச் சாவியை விட்டெறிந்தார். அது குப்பைத் தொட்டி அருகே சென்று விழுந்தது. பிரமித்துப் போன சிறுவன் கீழே விழுந்த சாவியைப் பார்த்துப் பரிதாபமாய்ப் பெரியவரையும் பார்த்திட...

கோட், சூட், டை எதையும் காணோம்.. பழையபடி கோவணான்டியாய் .... இதோ ராயபுரம் அங்காளம்மனை நோக்கி அதே விஸ்தார நடையில்...!

பற்றற்றான் பற்றினைப் பற்றுபவர்கள் தாமே சித்தர்கள்!

“உலகில் எதுதான் நிரந்தரம்!...”

“அந்தக் காரு ஒரு காலத்துல ஒரு ராஜாவோட குதிரையா இருந்துச்சுடா..கொஞ்சம் கால் தடுமாறி நொண்டிச்சு, அவ்வளவுதான். ராஜா அதை தூக்கிப் போட்டுட்டான். மனம் நொந்து நொந்து அது அண்ணாமலைல அறிஞ்சோ அறியாமலோ கிரிவலப் பாதைல புல்லு மேஞ்சு.. நடந்து நடந்து உயிர் விட்டுச்சு... அதுக்கு என்ன பிரமோஷன் பாத்தியா அண்ணாமலைல கொஞ்சம் நடந்ததுக்கு ஒரு பெரிய காரா மாறிடிச்சு... நான் ஏன் அதுல உக்காந்தேன் தெரியுமா?”

சிறுவன் உஷாராய்க் காதைத் தீட்டினான்.

“அதச் சொல்றதுக்குன்னு ஒரு நேரம் வரும் கேட்டுக்கோ !”

அப்பப்பா சித்தர்களுடைய குருகுலவாசம் என்றாலே தெய்வீகப் புதிரோ புதிர்தானா!

பழமண்ணிப்படிக்கரை

தென்காசி மகாத்மியத் தொடர் – 11

வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி! போற்றி!

தென்காசி திருத்தலத்தைத் தரிசிப்பதற்கு முன்னால் நிச்சயமாகக் கண்டு தரிசிக்க வேண்டிய சிவத்தலங்களையும், அவற்றின் மஹாத்மியங்களையும், சித்புருஷர்களின் ஞானக்ரந்த விளக்கங்களையும் நம் குருமங்களை கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்களின் குருவருட் பொழிவாக நாம் இத்தொடரில் எடுத்து உரைத்து வருகிறோம் அல்லவா?

அடுத்தபடியாக, நாம் தரிசிக்க இருப்பது தஞ்சை மாவட்டம் வைதீஸ்வரன் கோயில் அருகிலுள்ள திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) சிவத்தலமாகும். ஆதிசிவன் நீலகண்ட மூர்த்தியாகவும்,  அம்பிகை அமிர்தகர வல்லியாகவும் அருள் பாலிக்கின்ற அதியற்புதத் திருத்தலமாகும். எந்த வெற்றிக் கனியையும் நாம் பெறுவதற்கும் முன்னால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது ஏகாதச ருத்ர தேவ அனுக்ரஹமாகும். ஏகாதசி என்றால் 11ம் திதி. அதுபோல் ஏகாதச ருத்திரர் 11 தலைமை ருத்ர மூர்த்திகள் என்போர் இன்றைக்கும் திருக்கயிலையில் எந்நேரமும், எப்போதும் தமிழ், வடமொழி மட்டுமின்றி அனைத்து தேவமொழிகளிலும் உள்ள வேதமறைகளை பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக எப்போதும் ஓதி வருபவர்கள்.

ஸ்ரீஅமுதகரவல்லி அம்மன்
பழமண்ணிபடிக்கரை

ருத்ரம் என்றாலே அக்னி சம்பந்தப் பட்டதுதானே. எனவே ஏகாதச ருத்ர மூர்த்திகளும் நம்முடைய கர்ம வினைகளை யெல்லாம் தம்முடைய ருத்ராக்னியில் பஸ்மமாக்கி, நமக்கு நன்மை பயக்கும் காரிய சித்தியாக மாற்றித் தருகிறார்கள். நம்முடைய வெற்றிக்குத் தடங்கலாகக் குறுக்கிடுவது நம்முடைய கர்ம வினைகளே! அனைத்துவித கர்ம வினைகளையும் ஒரே வழியில் தீர்க்க இயலாது. அதற்காகத் தான் மூர்த்தி,  தீர்த்தம், தலம் போன்றவற்றையும், தான தருமங்கள், ஹோமம் போன்ற பல வழிபாட்டு முறைகளையும் நம் பெரியோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். எனவே பூஜைகள் எனப்படுபவை பலவித ஆத்ம,  அர்த்தங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. நம் தீவினைகளைக் கழிப்பது, புண்ணிய சக்தியைப் பெருக்குவது தெய்வ அனுக்கிரஹம் மற்றும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தருவது என ஒவ்வொரு பூஜைக்கும் பலவித பலாபலன்கள் உண்டு. இவ்வகையில் நற்காரியங்களுக்குரித்தான வெற்றியைத் தருவதற்குத் தடங்கலாக நிற்கின்ற கர்ம வினையின் ஒரு பகுதியை பஸ்மம் செய்வதற்கு உதவுவதே திருமண்ணிப் படிக்கரை திருத்தல தரிசனமாகும்.

பாற்கடலில் திரண்ட ஆலகால விஷத்தை இறைவன் தன் கரத்தில் ஏந்தி விழுங்கியபோது, தொண்டைக்கப்பால் செல்லாமல் இருந்ததற்கு அம்பிகையின் அமிர்தப் பொற்கரங்களே காரணம் ஆகும். இங்கு அமிர்தகரவல்லியம்மையாக அன்னை அருள்பாலிக்கிறாள், வெற்றிக்குத் தடங்கலாக இருக்கின்ற தீவினைக் கர்மங்களையெல்லாம் அம்பிகையானவள் தன் அமிர்தமயப் பொற் கரங்களால் தடுத்து, விடமாக நிற்கின்ற தீவினைக் கர்மங்களை சிவாக்னி ஜோதியில் பஸ்மம் செய்து நமக்கு ஆசி கூட்டித் தருகிறாள், பெரும்பாலான ஆலயங்களில் இறைவனின் அருட் தன்மையும், இறைவியின் அருட்தன்மையும் தனித்தனியே பொலிந்து நம்மைக் காத்து அருள்கின்றன, சில அபூர்வமான தலங்களில் மட்டுமே இறைவனும் இறைவியும் தனியே வீற்றிருந்தால் கூட இச்சாசக்தி, கிரியாசக்தியின் பாங்காக, அர்த்தநாரீஸ்வர சக்தியாக இருவரின் தெய்வீக சக்தியும் இணைந்து கிட்டுவது திருமண்ணிப்படிக்கரை போன்ற ஒரு சில அற்புத சிவத்தலங்களில் மட்டுமே! இறைவனும் இறைவியும் தம் அருட்கிரணங்களைக் கூட்டி அருள்வதால் இங்கு கர்மவினைகள் மாய்கின்ற அருட்சக்தி மிக்கத் தலமாக விளங்குகிறது. இதுவே வெற்றியை நமக்கு அளிக்கும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. எனவே தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகிலுள்ள திருமண்ணிப்படிக்கரை எனப்படும் இலுப்பைப்பட்டு சிவத்தலத்தில் ஸ்ரீஅமிர்தகரவல்லி சமேத ஸ்ரீநீலகண்ட ஸ்வாமிக்கு நாள்தோறும் குறிப்பாக ஏகாதசியில் தைலக் காப்பு, சந்தனக் காப்பு, மஞ்சள்காப்பு போன்ற பலவிதமான காப்புகளுடன் அபிஷேக ஆராதனை செய்து, 11 வித காய்கறிகள் கலந்த உணவு, 11 வித கனிகளை ஏழைகட்குத் தானமாக அளித்தலால் ஏகாதச ருத்திரர்கள் அனுக்கிரஹம்தனைப் பெறலாம். இதனால், நம்முடைய வெற்றிக்குத் தடையாக உள்ள எதிர்மறை சக்திகள் யாவும் பஸ்மமாகி காரியசித்தி கைகூடும். வெற்றிக்கு வடிவழகு தரும் ஸ்ரீதென்காசி விஸ்வநாதரை தரிசிக்கும் முன்னால் 11ம் திருத்தலமாக திருமண்ணிப் படிக்கரை எனும் இச்சிவத்தலம் அமைந்துள்ளது. கர்ம வினையை பஸ்மமாக்கும் அற்புதத் தலங்களுள் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி! திருமண்ணிப் படிக்கரை ஸ்ரீநீலகண்ட ஸ்வாமி சமேத ஸ்ரீஅமிர்தகரவல்லி அம்பிகையே போற்றி! போற்றி! போற்றி!

ஸ்ரீகுபேர லிங்க மகிமை

இறைவன்தான் எத்தனை விதமான பெயர்களைத் தாங்கி நமக்கு அருள்பாலிக்கின்றான். இறைவன் ஒருவனே! ஆனால் இத்தனை ரூபங்களில் ஏன் நம்மை ஆட்கொள்ள வேண்டும்? உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆசைகள் தாம் எத்தனை எத்தனை? “இறைவா! இதனைச் செய்து கொடு; இறைவா! நான் இப்படி இருக்க வேண்டும். இறைவா! நான் இதனைப் பெறுதல் வேண்டும்” என்று ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உள்ளத்தில் ஆயிரக்கணக்கான பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை அல்லவா தேக்கி வைத்து இருக்கின்றான். எனவே, அவன் இவ்வாறு காரிய சித்திக்காக அலையும் போது பிள்ளையாரப்பனின் உருவம்தான் அவனுக்கு மனச் சாந்தியை அளிக்கின்றது. தனக்குத் திருமணம் ஆகவில்லையே, பலவிதமான தடங்கல்கள் வந்து கொண்டு இருக்கின்றனவே என்று அவன் சுற்றி அலைகின்ற போது ஸ்ரீதுர்க்கை அம்பாள்தான் அவனுக்குத் திருமணத் தடங்கல்களை நீக்குகின்ற அருட்சக்தியாகப் பரிமளிக்கின்றாள், பலவிதமான நோய்களால் அவதிப்படும் போது அவனுக்கு வைத்தீஸ்வர மூர்த்தியாக ஈஸ்வரனும், முருகப் பெருமானும் காட்சியளிக்கின்றபோதுதான் அவனுக்கு மனநிம்மதி பிறக்கின்றது. எனவே மனிதன் தன்னுடைய மனச் சாந்திக்காகவே இறைவனைப் பல ரூபங்களில் பார்த்துக் கொண்டு இருக்கின்றான். தன்னுடைய மனதிலுள்ள விருப்பங்களையும், ஆசைகளையும், பாசத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மனம் நிறைய, உள்ளம் நிறைய இறை மணம் கமழ, இறைவனைக் குடியிருக்க வைப்பானேயானால் அப்போதுதான் இறைவன் ஒருவனேதான் என்ற சத்தியவாக்கு புலப்படும்.

ஸ்ரீகுபேரலிங்கம் திருஆனைக்கோவில்

இவ்வகையிலே ஸ்ரீ குபேரலிங்க மூர்த்தி என்ற திருநாமம் பூண்டு ஈஸ்வரன் சில இடங்களில் பல அதி அற்புத பலன்களைத் தந்து அருள்கின்றான். ஸ்ரீ குபேர மூர்த்தியானவர் தனக்கு சங்கநிதி, பதுமநிதி என்ற நிரந்தர ஐஸ்வர்ய கடாட்சங்களைப் பெறுவதற்குக் காரணமே ஸ்ரீலெஷ்மி லோகத்திலிருந்து அவர் பெற்று வந்த பல லிங்கத் திருமேனிகளாகும். அத்தனையும் சுயம்பு மூர்த்திகள், திருமகளே பூஜித்து அருட்பிரசாதமாக எடுத்துத் தந்தவை, திருமகளே தன்னிடத்தில் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்க வேண்டும் எனறு தான் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மார்பில் உறைதல் வேண்டும் என்பதற்காக சர்வேஸ்வரனைப் பல யோக நிலைகளில் வழிபட்டமையால் தான் இன்றைக்கும் பல சிவாலயங்களில் கஜலெட்சுமியாகத் திருமகள் அருள்பாலித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தித்திடலாம். இவ்வகையில் ஸ்ரீகுபேர லிங்கம் என்பது ஸ்ரீகுபேர மூர்த்தியால் திருமகள் லோகத்திலிருந்து பெறப் பட்ட அதி அற்புத சுயம்பு மூர்த்திகளாகும். சுயம்பு மூர்த்தி என்றால், ஓரிடத்தில் தானே இருக்க வேண்டும். ஆம்! உண்மையே! ஆனால் தோன்றித் தோன்றாமையாக ஓரிடத்தில் இருக்கின்ற ஸ்ரீசுயம்பு லிங்க மூர்த்தி மற்றொரு இடத்தில் தானே உற்பவித்துத் தோன்றுவதும் உண்டு. இவ்வாறாக, மகாலெட்சுமி லோகத்தில் ஸ்ரீகுபேரபகவானால் தரிசிக்கப் பெற்ற சுயம்பு லிங்க மூர்த்திகள் எத்தனையோ சிவாலயங்களில் அதே வடிவில் தோன்றி ஸ்ரீகுபேர பகவானுக்கு அருட் பொழிவைத் தந்துள்ளன. இங்கெல்லாம் இன்றைக்கும் ஸ்ரீகுபேர மூர்த்தி நம்மைப் போல் மானிட ரூபம் பூண்டு, நீராடி அனைத்துவிதமான அபிஷேக, ஆராதனைகளையும் மேற்கொண்டு தாம் பெறுகின்ற அஷ்ட ஐஸ்வர்ய சக்திகளை எல்லாம் பூலோக மக்களுக்காக அர்ப்பணிக்கின்றார். இவ்வகையிலே திருஆனைக் கோயில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுபேரலிங்கமானது பூலோக மக்களுடைய முறையான நிதிப் பிரச்னைகளுக்குத் தக்க தீர்வை ஸ்ரீகுபேர பகவானின் அருளால் பெற்றுத் தருவதாக அமைந்திருக்கின்றது.

எவ்வளவு தான் உழைத்தும், தான் பெறுகின்ற சம்பாத்தியமானது தனக்குப் போதவில்லை என்று எண்ணுவோர், திரு ஆனைக்கோவில் ஸ்ரீகுபேர லிங்கத்திற்கு வெள்ளிக் கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு, 8-9) ஸ்ரீகுபேர லிங்கத்திற்கு வெண் பட்டாடை சார்த்தி, வெண்பொங்கலை நைவேத்யம் செய்து, வெண் பொங்கலையும், வெண்பட்டாடையையும் ஏழைகட்குத் தானமாக அளித்து வந்தால், நிச்சயமாக அவர்களுக்கு நன்முறையிலே நிதி விருத்தி ஏற்படும். லட்சக்கணக்கான ரூபாயைத் தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அதற்கு உரித்தான வருமானத்தைப் பெற இயலாது, ஏதோ பணம் வருகின்றது, போகின்றது என்று வாழ்கின்றவர்கள் நல்வழியிலே முறையான லாபத்தைப் பெறுவதற்கு ஸ்ரீமஹா லஷ்மிக்குரித்தான அனுஷ நட்சத்திரம், வெள்ளிக்கிழமை கூடியநாட்களில், அல்லது வெள்ளிக்கிழமையன்று மிதுன லக்னம் அல்லது கன்னி லக்னத்தில் ஸ்ரீகுபேர பகவானுக்குச் சிவப்பு நிறப் பட்டாடை சார்த்தி, ஸ்ரீதுர்கைக்கு உரித்தான சிவப்பு நிற உணவுப் பண்டங்களைப் படைத்து, ஏழைகளுக்கு சிவப்பு நிறப் பட்டாடைகளையும் சிவப்பு நிற உணவுப் பண்டங்களையும் தானமாக அளித்து வந்தால், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்,
வீடு கட்டுதல், திருமணத்தை நடத்துதல், மகன் மகளைப் படிக்க வைத்தல் போன்றவற்றிற்கு நிதி வசதி இல்லாமல் அல்லல்படுவோர், திருஆனைக் கோவில் ஸ்ரீகுபேர லிங்கத்திற்கு வித்யா ஞானம் தரும். புத பகவானுக்கு உரித்தான புதன் கிழமைகளில், புதஹோரை (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) நேரத்தில் குபேர லிங்கத்திற்குப் பச்சை வண்ணப் பட்டாடைகளையும் சார்த்தி பச்சை நிறம் கூடிய பாஸந்தி, பால் பாயசம், பால்கீர், ஆகியவற்றைப் படைத்துத் தானமாக அளித்து வந்தால் நன்முறையில் நிதி வசதி பெருகி, தடைப்பட்டுள்ள நற்காரியங்கள் நிறைவேறும்.


பொதுவாக, பெளர்ணமியன்று ஸ்ரீகுபேர லிங்கத்திற்குப் பலவிதமானத் தைலக் காப்புகளை இட்டு கங்கை,காவிரி, கிருஷ்ணா, நர்மதை, கோதாவரி, சிந்து போன்ற புனித நதி தீர்த்தங்களைக் கலந்து அபிஷேக ஆராதனைகளைச் செய்து பௌர்ணமி நேரம் முழுதும் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் எத்தகைய பணப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டிடலாம். தம்முடைய சொத்து பிறரால் அபகரிக்கப்பட்டு, நிலபுலன்கள், சொத்துக்களை எல்லாம் இழந்து ஏழ்மையில் வாடுவோர் ஸ்ரீ குபேர லிங்கத்திற்கு இத்தகைய பெளர்ணமி தின அபிஷேக ஆராதனைகளை முறையாகச் செய்து வந்தால் இழந்த சொத்துக்களை நன்முறையில் திரும்பப் பெறுவதற்கு நல்வழிகள் கிட்டும்.

ஸ்ரீகரியமாலீஸ்வரர்

ஸ்ரீகரிய மாலீஸ்வரர் பொழியும் அரிய திருஅருள்!

கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அபூர்வமான லிங்கமூர்த்தியே ஸ்ரீகரிய மாலீஸ்வரர் ஆவார். பிருகு முனிவரால் தன் மார்பில் உதையப் பெற்ற ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீபிருங்கி முனிவருக்குரித்தான சில கர்ம வினைகளையெல்லாம் தம்முள் ஏற்றுக்கொண்டு, அடியார்களுக்காகக் கஷ்டப்படலானார், தம் அடியார்களுடைய துன்பங்களைத் தாங்குவது தானே ஆண்டவனுடைய முதற் பணி! ஸ்ரீபிருகு முனிவர் மார்பில் உதைத்த இடமெல்லாம் திருமாலுக்கு கரிய நிறம் கொண்டன. இதைக்கண்டு அஞ்சி பயமுற்ற ஸ்ரீமஹாலஷ்மி தேவியும் நாராயண மூர்த்தியை விட்டுப் பிரிந்து ஆழ்ந்த யோகத்தில் ஈடுபட்டார். கரிய மார்பைக் கொண்டவராய்ப் பெருமாளும் பிரபஞ்மமெங்கும் பவனி வந்தார். பிருகு முனிவருக்கோ சினத்தால் தான் செய்த செயல் கண்டு, தாமே வெட்கி வருந்தி, துயருற்று ஸ்ரீமன் நாராயணப் பிரபுவிடமே தனக்குத் தக்கப் பரிகாரம் தந்து அருளுமாறு வேண்டுகின்றார். நாராயணமூர்த்தியும், “இன்றிலிருந்து பூலோகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிவபாத பூஜையில் பங்கேற்று, உன்னுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுவாயாக!”என்று அறிவுரை கூறி அனுப்பினார். சிவபாத பூஜை என்பது இரவு நேர பூஜையாக இன்றைக்கும் பெரும்பாலான சிவாயங்களில் நடப்பதாகும். அர்த்த சாம பூஜை நேரத்தில் இறைவனின் இரு திருப்பாதங்களைப் பல்லக்கில் வைத்து சுமந்து சென்று பள்ளியறையில் வைத்து வழிபட்டுப் பூஜையை நிறைவு செய்வார்கள். சிவபாத பூஜை மகிமை என்றும் எம்முடைய ஆஸ்ரமத்தின் நூலில் சிவபாத பூஜையின் பலா பலன்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீகரியமாலீஸ்வரர் கரூர்

“நீ பூலோகத்தின் சிவ ஆலயங்களில் சிவபாத பூஜையைத் திறம்பட மேற்கொண்டு பூலோக ஜீவன்களுக்கு இப்பூஜையின் மகத்துவத்தை எடுத்து உரைப்பாயாக! அடியார்க்கு அடியாராக விளங்குபவன் ஈஸ்வரனே! அடியாருடைய பாதங்களையே தாங்கி நிற்பவன் தான் சர்வேஸ்வரன். எனவே உன்னுடைய திருப்பாதங்கள் தோய்ந்த எம் திருமேனியில் கிட்டியுள்ள கரிய திருமேனியை சிவபாதபூஜையின் மகிமையால்தான் அந்த சர்வேஸ்வரனின் திருவருளால் தான் களைந்திட முடியும் என்பதை நீ உணர்ந்து கொள்வாயாக”, என்று அருளுரை தந்து அனுப்பினார்.

“காலால் எழுப்பிக் கருத்தறிவித்தே....”

ஸ்ரீ பிருகு முனிவரும் எத்தனையோ சிவ ஆலயங்களில் சிவபாத பூஜையை மேற்கொண்டு வருகையில் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் சிவபாத பூஜையை மேற்கொண்டபொழுதுதான் எந்தக் காலால் அறியாமையால் நாராயணப் பெருமானை உதைத்தாரோ அதனால் ஏற்பட்ட கருமையும் மறைந்தது. இத்திருநிகழ்ச்சி நிகழ்ந்த இடம் தான் ஸ்ரீகரியமாலீஸ்வர லிங்கத்தின் திருச்சன்னதியாகும். அக்காலத்தில் இச்சிவலிங்கத்திற்குப் பிறிதோர் பெயர் நிலவிற்று! அந்தந்த யுக நியதிகளுக்கு ஏற்ப இறைவனுடைய திருநாமங்கள் மாறிக் கொண்டிருக்கும். ஸ்ரீ கரியமாலீஸ்வரருடைய திருச்சன்னிதி முன் தான் ஸ்ரீபிருகு முனிவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவை உதைத்ததால் ஏற்பட்ட சாபங்களும், தோஷங்களும் நிவர்த்தியாகின. மேலும் ஸ்ரீபிருகு முனிவருடைய வேள்வி மற்றும் யாகங்களுக்கும் எத்தனையோ தடங்கல்கள் ஏற்பட்டமையால் ஸ்ரீகரிய மாலீஸ்வரரைக் குறிப்பிட்ட தினங்களில் ஸ்ரீ பிருகு முனிவர் வழிபட்டு வந்தார். இந்நாட்களே கரிநாட்களாகும். எனவே நற்காரிய சித்தியில் விளங்கக்கூடிய தடங்கல்களைக் கழிப்பதற்காக இறைவனை நாம் வணங்குகின்ற விசேஷ தினமே கரிநாளாகும்.

எனவே, எவ்வாறு இராகு கால நேரத்தில் ஸ்ரீதுர்க்கை அம்மனை வேண்டி விசேஷமான பூஜைகளால் வழிபடுகின்றோமோ அதே போல கரிநாட்களில் கரூர் ஸ்ரீகரிய மாலீஸ்வரருக்குக் கருமை மற்றும் நீல நிற உணவுப் பொருட்களைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் எத்தகைய காரியத் தடங்கல்களுக்கும் நன்முறையில் காரிய சித்தி ஏற்படும், கரிநாள் என்பது சுபகாரியங்களுக்குத் தவிர்க்கப்பட்டாலும் காரியத் தடங்கல்களை நீக்குவதற்கான பூஜை நாளாக கரிநாள் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அலுவலகத்தில் ஒரு சிறு தவறுக்காகக் கூட பழிவாங்கப்பட்டு, அல்லல் பட்டு வருபவர்கள் தம்முடைய தவறுதல்களுக்கு மனதார வருந்தி கரிநாட்களில் ஸ்ரீகரியமாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் தாம் இழந்த வேலையை நியாயமான நன்முறையில் பெறுவர்.

சனிக் கிழமை தோறும் கரூர் ஸ்ரீகரியமாலீஸ் வரருக்கு வெற்றிலை மாலை சார்த்தி விதையில்லாத (ஆப்பிள், கிஸ்முஸ்) கனிகளை நிவேதனம் செய்து. ஏழைகளுக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் அளித்து வரவேண்டும். ஸ்ரீகரிய மாலீஸ்வரருக்குப் படைக்கப்படுகின்ற தாம்பூலத்தைச் சுண்ணாம்புடன் சேர்ந்து தானமாக அளிப்பதுதான் சிறப்புடையதாகும்.

மாங்கல்யம் அணியும் முறை

மாங்கல்யம், மாங்கல்யச் சரடில்தான்!

மாங்கல்யத்தைத் தங்கச் சங்கிலியில் கோர்த்திடல் வேண்டாம்!

ஃபாஷனாக எண்ணிக்கொண்டு பலரும் தங்கச் சங்கிலியில் மாங்கல்யத்தைச் சேர்த்து விடுகின்றார்கள். நம் முன்னோர்கள் மாங்கல்யச் சரடைத்தான் சுமங்கலித்வம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர்! பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்வம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத் தான் பஞ்சபூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்வ சக்தியாக மாற்றக் கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின், சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச் சங்கிலியில் ஒருபோதும் கோர்த்தல் கூடாது.

பருத்தி இழைகளாலான மாங்கல்யச் சரடு என்றால் அவ்வப்போது மாற்ற வேண்டியிருக்குமே என்று யோசித்தல் கூடாது! பகைமை, பொறாமை, திருஷ்டி தோஷங்கள், குரோதம், விரோதம் போன்ற தீவினை சக்திகளுக்கு இடையேதான் ஒவ்வொரு வருடைய இல்லற அலுவலக, வியாபாரச் சூழ்நிலைகள் தொடர்கின்றன! இவற்றிலெல்லாம் எழுகின்ற தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது. தம்முள் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது. ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்வத்தைக் கட்டிக் காப்பதாகும்.

ஸ்ரீகைலாசநாதர் சிவத்தலம்
மணக்கால் லால்குடி

ஒரு மாங்கல்யச் சரடானது இவ்வகையில் பலவிதமான தோஷங்களைத் தம்முள் ஈர்த்து பஸ்மம் செய்வது ஆதலின் தோஷங்கள் பெருகும் போது மாங்கல்யச் சரடை மாற்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். மாங்கல்யச் சரடின் இழைகள் பிரிதல், அறுந்து போதல், எதிலேனும் மாட்டிக் கொண்டு பின்னமாதல் போன்றவை அந்த மாங்கல்யச் சரடில் ஈர்க்கப்பட்ட தோஷங்கள் மிதமிஞ்சி இருப்பதையே குறிக்கின்றன. எனவே நல்ல நாள், திதி, கிழமை பார்த்து அவ்வப்போது மாங்கல்யச் சரடை, இறைத் திருச்சந்நிதியிலோ, துளசி மாடத்தின் அருகிலோ, பூஜை அறையிலோ மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு இல்லறப் பெண்ணுக்குத் தினமும் காலையில் எழுந்தவுடன் தன் மாங்கல்யத்தைத் தரிசித்துக் கண்களில் ஒற்றிக் கொள்வதையே அதியற்புத வழிபாடாகப் பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர். ஒரு விதத்தில் பலவிதமான தோஷங்களைத் தன்னுள் ஈர்த்து பஸ்மம் செய்கின்ற அதே மாங்கல்யத்தின் காலை தரிசனமே, இல்லறப் பெண்மணிகளுக்கு பலவித தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற அரும் இறைப் பிரசாதமாகவும் பொலிகின்றது.

இல்லத்தில் பூஜையறையில் புதிய மாங்கல்யச் சரடைக் குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) வைத்துப் பூஜித்து ஆலயங்களில் அம்பிகையின் திருவடிகளில் சமர்ப்பித்துப் பூஜித்த பின்னர் மாங்கல்யச் சரடை மாற்றி அணிந்து கொள்ள வேண்டும்.

மாங்கல்யச் சரடை வைத்து பூஜிப்பதற்கான விசேஷத் தலங்களும் உண்டு. ஸ்ரீலலிதாம்பிகை, ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீகல்யாணி போன்ற நாமங்களை அம்பிகை பூண்டிருக்கும் ஆலயங்களில் மாங்கல்யச் சரடை அம்பிகைக்குச் சார்த்திப் பிரசாதமாகப் பெற்று அணிதல் சிறப்புடையது ஆகும், சென்னை தக்கோலம் அருகே உள்ள மப்பேடு சிவாயத்தில் ஸ்ரீலலிதாம்பிகையின் திருச்சந்நிதியிலும், கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீமங்களாம்பிகை திருச்சந்நிதியிலும் மாங்கல்யச் சரடு பூஜை சிறப்புடையதாகும். எத்தனையோ ஏழைப் பெண்கள் மாங்கல்யத்திற்கான குண்டுகள், பொன் மாங்கல்யம் ஏதும் அணிய வசதியின்றி வெறும் மஞ்சளைச் சரடில் கோர்த்து மாங்கல்யச் சரடாக அணிந்து வாழ்கின்றனர் என்பதை நினைவில் கொள்க!

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன்
பூவாளூர்

அவரவர் குடும்ப பாரம்பரியத்திற்கேற்ப ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசோமேசர், கருகமணி, மாங்கல்ய குண்டுகள் போன்றவற்றை மாங்கல்யச் சரடில் கோர்த்து அணிந்திருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறையேனும் மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாண உற்சவம் (சித்திரை- உத்திரம்) ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்திரம் போன்ற தெய்வத் திருக்கல்யாண உற்சவங்களில் ஏழைகளுக்கு மாங்கல்யச் சாடுகள் மற்றும் பொன் மாங்கல்யம் அளித்து வந்தால் நிச்சயமாகப் பரிபூரணமான சுமங்கலித்வம் கிட்டும்.

சுமங்கலித்வம் என்றால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட மனைவியின் ஆயுள் முன் முடிவது என்ற கருத்தில் மட்டும்தான் பலரும் நினைக்கின்றார்கள். தன்னுடைய கணவனையே கண்கண்ட தெய்வமாகப் பேணுகின்ற தெய்வீகப் பண்பாடுதான் உண்மையான சுமங்கலித்வம் ஆகும், கணவனுடைய ஆரோக்யம், பொருளாதாரம், குணங்கள் எப்படி இருந்தாலும் அனைத்தையும் தமக்கு இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்ற தெய்வ வாழ்க்கை என மனப்பூர்வமாக ஏற்று, ஏழையோ, பணக்காரரோ, நடுத்தர வருமானத்தவரோ அழகானவரோ, அழகு குறைந்தவரோ, குட்டையோ, நெட்டையோ, பலசாலியோ, ஆரோக்யம் குறைந்தவரோ எவ்வகையில் இருந்தாலும் கண்ணினும் மேலாய்ப் பேணிக் கணவனை தெய்வமாக ஆராதிக்கின்ற இந்திய கலாச்சாரம்தான், தமிழ்ப் பண் பாடுதான், தீர்க்க சுமங்கலித்வத்தை இறையருளால் பெற்றுத் தரும். கணவனையே தெய்வமாகப் போற்றி வாழ்கின்ற உத்தமப் பெண் குலத்தாரும் அமைந்துள்ள திருநாடு இது.

ஜாதி, இன பேதமின்றி பொன் மாங்கல்ய தானத்தை வைராக்யச் சிந்தனையுடன் ஆற்றி வந்தால் சுமங்கலித்தவத்தின் தெய்வீக தன்மையைத் தானே நன்கு உணர்ந்திடலாம். ஏழைகளுக்கு மாங்கல்யச் சரடுகளை அளிப்பதெனில், திருச்சி லால்குடி அருகே உள்ள மணக்கால் சிவாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், ‘மனைக் காலில்’ அதாவது இறைவனும் இறைவியும் “மரப்பலகைகளில்” அமர்ந்து திருமணச் சடங்குகளை ஏற்ற மணக்கால் திருத்தலமிது!

ஜாதி இன பேதமின்றி ஏழை தம்பதிகளை இச்சிவாயத்தில் மரப்பலகையில் அமர்வித்து, ஏழ்மையின் காரணமாக மாங்கல்யச் சரடை மட்டும் அணிந்திருக்கின்ற ஏழைப் பெண்களுக்கு பொன் மாங்கல்யம் அளித்து மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்கின்ற நற்காரியத்தை நல்லதோர் இறைப் பணியாக ஆற்றிடுங்களேன்! இத்தகைய அதியற்புத இறைத் திருப்பணிகள் தாம் சுமங்கலித்வத்தைத் தந்திடும்.

மேலும் ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் திருச்சி லால்குடி அருகே பூவாளூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீகுங்குமசௌந்தரியை நிச்சயமாக தரிசித்து வழிபட்டாக வேண்டும், ஏனென்றால் ஃபாஷன் கருதிப் பலரும் குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்கள் “குங்குமம்” தரிக்காது Sticker ஆகிய ஒட்டுப் பொட்டுக் குங்குமத்தை அணிகின்றார்கள்! இதனால் என்ன பிரயோஜனம்? மனைவியின் நெற்றிக் குங்குமம்தான் கணவனுக்கு நீண்ட ஆயுளையும், நல்ஆரோக்யத்தையும், நல்ல ஒழுக்கத்தையும் பெற்றுத் தரும் என்று பாரம்பரியம் பாரம்பரியமாக என்னதான் பெரியோர்கள் எடுத்துச் சொன்னாலும் தற்காலத்தில் Sticker ஒட்டுப் பொட்டு அணிகின்ற மடமையை எவ்வாறுதான் போக்குவது ? கணவன்மார்கள் குங்குமத்தின் சிறப்பை எடுத்துரைத்து Sticker பொட்டு அணியும் பெண்களைத் திருத்தி நல்லுரை கூறுதல் வேண்டும்.

நல்ல குங்குமம் கிடைக்கவில்லை, நெற்றி புண் ஆகியது என்று ஏதேதோ சாக்கு போக்குச் சொல்லி Sticker ஒட்டுப் பொட்டு அணிவோர்க்குச் சாபங்கள் தான் பெருகும். இதற்குப் பரிகாரமோ, பிராயசித்தமோ கிடையாது! இதனை நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றோம்.

கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் பேணி பலவிதமான பூஜைகளை மேற்கொண்டு சுமங்கலித்வத்தை ஆராதிப்பதுதான் ஒவ்வொரு இல்லறப் பெண்மணியின் தலையாய கடமையாகும்.

இறைவனுடைய திருமண வைபவங்கள் நிறைந்த அற்புதத் தலங்கள் நிறைய உண்டு! மதுரை, திருமணஞ்சேரி, சென்னை அருகே திருவிடந்தை, திருச்சி அருகே திருமாந்துறை போன்றவை மாங்கல்யச் சரடு பூஜைக்கான இதர சிறப்பான தலங்களாகும்.

மாங்கல்யச் சரடைக் கையில் தாங்கி பஞ்சமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அம்பிகைக்கு மஞ்சள் காப்பு இட்டுப் பிரசாதமாகப் பெற்ற மஞ்சளை மாங்கல்யச் சரடிற்குப் பூசி இல்லத்தில் பூஜை செய்து மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்வதும் மகத்தான சிறப்புடையதே! ஏனெனில் உண்ணாமலை அம்பிகையே தவமிருந்து கிரிவலம் வந்து திருஅண்ணாமலையாரை அடைந்த அற்புதத் தலம் தானே திருஅண்ணாமலை! எனவே சுமங்கலித்வத்தை அளிக்கின்ற பூஜை முறைகள் பல உண்டு. தக்க சற்குருவை நாடி மேலும் பல விளக்கங்களைப் பெறுவீர்களாக! எவ்வாறு மாங்கல்யமானது நெஞ்சத்திற்கு ஆரமாய் எப்போதும் நெஞ்சில் மலர்ந்திருக்கின்றதோ அதே போல உள்ளத்திலும் தெய்வமாய்க் கணவனைப் போற்றி ஆராதிக்க வேண்டும் என்பதே மாங்கல்யத்தின் தெய்வீகத் தத்துவங்களில் ஒன்றாகும். மதுரையில் சித்திரை உத்திர நட்சத்திரத் திருமண உற்சவத்தில் ஸ்ரீமீனாட்சி அம்பிகை சமேத ஸ்ரீசோமசுந்தரத் தெய்வத் திருமண வைபவத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றிட இறைவன் இறைவிக்கு மாங்கல்யத்தைச் சூடும் அந்த புனிதமான சுபமுகூர்த்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்மணிகள் புது மாங்கல்யச் சரடுகளை மாற்றிக் கொள்கின்ற காட்சியைக் கண்டு அனைவரும் ஆனந்தித்திடலாம், '

இந்த உற்சவத்தில் ஆங்காங்கே மாங்கல்யச் சரடுகளைப் பலரும் தானமாக அளிக்கின்ற காட்சி மனதிற்கு நிறைவைத் தருவதாகும், அடுத்த முறையேனும் நீங்களும் பங்கு கொண்டு ஏழைகளுக்கு மாங்கல்யச் சரடுகளை தானமாக அளிக்கின்ற அற்புதத் திருப்பணியை மதுரை சித்திரை உத்திரத் திருநாளில்  மேற்கொள்வீர்களாக!

சூரிய கிரகணம்

மறைக்கப்பட்ட குற்றங்களுக்கான பிராயசித்தம் தேடுவீர்!

அபரிமிதமான பூஜா பலனளிக்கும் சூரிய கிரஹணப் பூஜைகள்!

சூரியனும், சந்திரனும் சேர்கின்றஅமாவாசைத் திதியில் அனைத்துக் கோடி பித்ரு தேவர்களும், சூரிய சந்திர சங்கம கால பூஜைகளை மேற்கொள்வதால் அமாவாசைத் திதித் தர்ப்பணத்திற்கும் / பூஜைகளுக்கும் குறிப்பாக சூரிய கிரஹணத்தோடு கூடிய அமாவாசை பூஜைகளுக்கு மகத்தான பலன்கள் உண்டு,

சூரிய, சந்திர கிரஹணங்கள் உலகின் எப்பகுதியில் தெரிந்தாலும், தெரியா விடினும் அனைத்துப் பகுதிகளுக்கும் உரித்தான குறித்த கிரஹண விசேஷ பூஜா பலன்கள் நிச்சயமாக உண்டு. எனவே சூரிய, சந்திர கிரஹணங்கள் தெரியாத இடங்களிலும் கண்டிப்பாக கிரஹண பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

மறைமுகமாகச் செய்யப்பட்டப் பலவிதமான பெருந்தவறுகளுக்கும், பாவங்களுக்கும் தக்க பிராயச் சித்தங்களைத் தருவது சூரிய கிரஹண தர்ப்ப ண பூஜைகளாகும்.

அமாவாசை என்பது சூரிய சந்திர கிரஹங்களின் சங்கமம் என்பது யாவரும் அறிந்ததே! பஞ்சாங்கத்தில் கூட அமாவாசை தினத்தன்று ஒரே ராசிக் கட்டத்தில் சூரிய சந்திர மூர்த்திகள் இணைந்திருப்பதை நீங்கள் காணலாம். இதேபோல் பௌர்ணமி திதியில் எதிரெதிரேயுள்ள ராசிக் கட்டங்களில் சூரிய, சந்திர மூர்த்திகள் வீற்றிருப்பார்கள். விஞ்ஞான ரீதியாக சூரிய, சந்திர கிரஹணங்களுக்கு எத்தனையோ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன எனினும் சித்புருஷர்கள் அளிக்கின்ற விசேஷமான விளக்கங்களைத் தக்க சற்குரு மூலம் பெற்றால்தான், இவற்றில் பரிபூரணமாக நிறைந்துள்ள தெய்வீகத் தாத்பர்யங்களை நன்கு உணர இயலும்.

முற்காலத்தில் ஐந்து கிரஹ வழிபாடுகள்தாம் இருந்தன. அப்போது சந்திரமூர்த்தியானவர் நித்ய பெளர்ணமிப் பிரகாசராய் தினந்தோறும் தம் 16 கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தார். தட்சனின் சாபத்தால் தம் கலைகளை இழந்த ஸ்ரீ சந்திர பகவான் இறைலீலையாக சிவபெருமானின் சிரசிலேயே இளம் பிறைச் சந்திரனாய்க் குடியேறுகின்ற பாக்கியம் பெற்ற இந்த இறை லீலைக்குப் பின்னர்தான் அமாவாசை, பெளர்ணமி திதி கிரக சங்கமங்கள் தோன்றின, இதன் பின்னரே சூரிய, சந்திர கிரஹங்கள் சேர்ந்த ஏழு கிரஹ வழிபாடு மலர்ந்தது.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
பழமண்ணிபடிக்கரை

பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தைத் தேவர்களும், அசுரர்களும் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டபொழுது ஏற்பட்ட மற்றொரு இறைலீலை காரணமாக இரண்டு அசுரர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருக்கரங்களால் ஸ்பரிசிக்கப்பட்டு இராகு, கேது மூர்த்திகளாகப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்த போதுதான் கிரஹங்கள் ஒன்பதாயின! சூரிய சந்திர மூர்த்திகள் ஒருபுறமிருக்க பிறிதொருபுறம் ராகு, கேது மூர்த்திகள் கூடி சூரிய, சந்திர கிரகண சங்கமத்தின் அமிர்த சக்தியை அமிர்தமாகப் பெறுவதற்காக பல கிரகண. வக்கிர, மித்ர சத்ரு, மிஸ்ரய கோளக் கிருத்தியங்கள் ஏற்பட்டன. அதாவது ராகு, கேது மூர்த்திகள், கிரஹ சஞ்சார மூர்த்திகளாக அங்கீகரிக்கப்பட்ட பொழுது சூரிய, சந்திர மூர்த்திகள் ராகு/கேதுவால் பெற இயலாது போன அமிர்த சக்தியைக் குறித்த அமாவாசை மற்றும் கிரகண நாளில் தாமே அளிப்பதாகப் பிரதிக்ஞை செய்துகொண்டு அமிர்த சக்தியை இன்றைக்கும் குறித்த நாளில் ராகு, கேதுவிற்கு வழங்கி வருகின்றார்கள். இதனையே மக்களுக்குப் புரியும் வகையில் சற்று லௌகீகமாக, கிரகண காலத்தில் இராகு, கேது மூர்த்திகள் சூரியனையும், சந்திரனையும் பீடிப்பதாக நாம் எடுத்துரைக்கின்றோம். அதாவது எதிர்காலத்தில் ராகு, கேது மூர்த்திகளின் கோள சக்திகள் கலியுகத்தில் மிக முக்கியமான கிரக குணபாடாக மாறும்! ராகு காலம் போல் கேது காலம் உருவாகும் என்பதை உணர்ந்தேதான் தீர்க்க தரிசனமாக சூரிய, சந்திர கிரஹணங்களின்போது, ராகு, கேது மூர்த்திகளுக்குரித்தான அமிர்த சக்தி சூரிய சந்திர லோகங்களிலிருந்து பெறப்படுகின்றன. இராகு, கேது மூர்த்திகள் கிரஹ மூர்த்திகளாக அங்கீகாரம் பெறும் முன் தம்முடைய அற்புதமான வழிபாடுகளால் தமக்கு உரித்தான அமிர்த சக்தியைப் பெறுவதற் காகப் பெரும் தவம் மேற்கொண்டனர். ஏனென்றால் மஹாவிஷ்ணு தம்முடைய திருக்கரங்களால் தாங்கிய கரண்டியால் சிரசில் தட்டப் பெற்றவர்கள் தாமே இருவரும்! இவ்வாறு மோஹினி அவதார சக்தியின் பரிபூரண அனுகிரக சக்தியைப் பெற்றவர்களாக விளங்குபவர்களே இராகு கேது மூர்த்திகளாவர். எனவே ஒவ்வொரு மனிதனும், இராகு, கேது மூர்த்திகளின் அனுக்கிரஹத்தை நிச்சயமாகப் பெற்றாக வேண்டும். இதற்கு உதவுவதே சூரிய சந்திர புனித சங்கம நேரமாகும். தினந்தோறும் காலையில் சூரிய மூர்த்தி தாமாகவே இயற்கையாகவே உதிப்பதாகத் தோன்றுகிறதல்லவா? ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுவதிலிருந்து எவ்வாறு பலவிதமான எதிர்வினைகளையும், பகைமைகளையும், உள்ளத்திலும், அலுவலகத்திலும், வியாபாரத்திலும் சந்திக்க நேருகின்றதோ, அதேபோல் தான் சூரிய உதயத்தின் போது இல்லத்திலும், பல அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டுத் தான் தம் கிரஹணங்களை சூரியமூர்த்தி பூவுலகிற்கு அளிக்க முடிகிறது. அதாவது தினந்தோறும், இன்றைக்கும் சூரிய பகவான் அரக்க சக்திகளுடனான கடும் போருக்கு இடையில்தான் உதயம் புரிகின்றார்.
இதற்காகத்தான் காலையில் சந்தியாவந்தன வழிபாடு என்ற ஒன்றை மனித குலத்துக்கு ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்குமாக இறைவன் அளித்துள்ளான். இவ்வழிபாட்டில் விளக்கப்படுகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய சக்தியானது சூரிய மண்டலத்திலிருந்து, அரக்க சக்தியை எதிர்கொள்வதற்காக ஸ்ரீசூரிய பகவானுக்கு உதவும் வகையில் பரிபூரண காயத்ரீ மந்திர சக்தியை அளிக்கிறது. எனவேதான் சந்தியாவந்தன மந்திரங்களில், ஸ்ரீகாயத்ரீ அர்க்யம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இது சரியான சந்தி நேரத்தில்தான் அளிக்கப்பட வேண்டும். காலம் தவறி அளிக்கப்பட்டால் இதன் பலாபலன்கள் யாவும் அரக்கர்களைச் சென்றடையும், அதாவது பூலோகத்தில் வல்வினைகளும், பகைமையும் எதிர்வினைகளும் கூடுவதற்காக அந்த காலந்தவறி அளிக்கப்படும் அர்க்ய சக்தியானது. அரக்கர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதாகும். இந்த காயத்ரீ அர்க்யம் எனப்படுவது உலகெங்கும் அனைத்து நாடுகளிலுமுள்ள மக்களுக்கும் ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவர்க்கும் உரித்தானதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினந்தோறும் சூரிய உதயத்திற்குத் தடங்கல் செய்யும் கோடிக்கணக்கான அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வென்று, நம் பூலோகத்திற்கு மட்டுமின்றி, கோடானுகோடி லோகங்களுக்கும், சூரியக் கிரணத்தைப் பெய்து ஜீவசக்தியை அளிக்கின்ற ஸ்ரீ சூரிய பகவானுக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம் ? இன்றைக்குப் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள கோடானுகோடி லோகங்களிலுள்ள அனைத்து விதமான உயிரினங்களுக்கும் ஜீவசக்தியை அளிக்கின்ற சூரிய பகவானுக்கே தினந்தோறும் இத்தகைய அல்லல்கள் என்றால் அவர் முன் நாம் எம்மாத்திரம் ? சூரிய பகவான் அனுப்புகின்ற கிரணங்களிலுள்ள அதிஉஷ்ண சக்தியைத் தணித்து பூலோக ஜீவ வாழ்க்கைக்கு ஏற்ற வகையில், மாற்றித் தருவதற்காகத் தான் கோடிக்கணக்கான வாலகில்லிய மஹரிஷிகள் சூரியபகவானுடைய தேருடன் தினமும் சேர்ந்து சென்று வேத மந்திரங்களை ஓதி வருகின்றார்கள். இந்த வேத சக்திதான் ஸ்ரீ சூரிய பகவானுக்குத் தினந்தோறும் அரக்கத் தீவினை சக்தியை எதிர்க்க வேண்டிய வேளையில் அவருக்கு அற்புதமான ஹரிஹராக்னி சக்தியைப் பெற்றுத் தருகின்றது.

ஸ்ரீபரிதியப்பர் பரிதிநியமம்

மேலும் விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன் எவர் ஒருவர் காலைச் சந்தியையும், ஸ்ரீ காயத்ரி மந்திர ஜபத்தையும் பாஸ்கர பூஜையையும் சூரிய நமஸ்கார விதிமுறைகளையும் முறையாகக் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் விசேடமான பாஸ்கர சக்திகளும் நேத்ர தீர்க சக்திகளும் நிச்சயமாகக் கிட்டுகின்றன. இதனால் அதியற்புத நினைவாற்றல், நல்ல ஆரோக்கியம், தீர்க்கமான கண் பார்வை, முதுமை சாராத நல் இளமை, தெளிந்த அறிவு, முறையற்ற காமம் மற்றும் தீயொழுக்கத்திற்கு ஆட்படாத நல்லவைராக்கியமான, திடகாத்திரமான மனோ சக்தியையும் பக்தியையும் தெய்வீகப் பரிசாகப் பெறுகின்றார்கள்.

ஆனால் கலியுகத்தில் சூரிய உதயத்திற்கு எழுந்து முன் யார் பூஜையை முறையாகக் கடைப்பிடிக்கிறார்கள் ? இதற்காகத் தான் இறைவனாலேயே சூரிய சந்திர கிரண சங்கமங்கள் ஏற்படுத்தப்பட்டு கிரஹண பூஜைகளாக நமக்கு அளிக்கப்பட்டுள்ளன, எனவே, தினந்தோறும் விடியற்காலையில் நாம் செய்யத் தவறிய பாஸ்கர வழிபாடு மற்றும் ஸ்ரீகாயத்ரி பூஜைக்கு ஓரளவு பரிகாரமாகத் தான் இந்த சூரிய, சந்திர கிரஹண பூஜைகள் அமைகின்றன என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்..

சூரிய கிரஹண நாட்கள் வரும் 1.7.2000, 31.7.2000 நாட்களில் சூரிய கிரகணம் அமைகின்றது. இந்தியாவில் கிரஹணக் காட்சி தெரியாவிட்டாலும், “நமக்குத்தான் சூரிய கிரஹணம் கிடையாதே”, என்று எண்ணாதீர்கள். உலகின் எப்பகுதியில் சூரிய கிரஹணம் இருந்தாலும், சூரிய கிரஹணம் தெரியாத இடங்களில் கூட உலக நன்மைக்காக அந்தக் கிரஹணத்திற்கு உரித்தான, தர்ப்பணங்கள், தான தருமங்களை அனைத்து இடங்களிலும் கடைபிடித்தால்தான் உலகெங்கும் சுபிட்சம்தனை ஏற்படுத்த முடியும். நாம் மட்டும் நம் குடும்ப அளவில் அமைதியாக வாழ்ந்தால் அது சுயநலத்தின் பாற்பட்டதுதானே! நீங்கள் வாழ்வதற்குத் தேவையான பால், உணவு, உடை, மளிகைச் சாமான்கள், அலுவலகப் பணி அனைத்துமே சமுதாயத்திலிருந்துதானே உங்களுக்குக் கிட்டுகிறது. எனவே சமுதாயத்தின் நலனுக்காக ஜாதி, சமய ஆண், பெண், மனித, விலங்கினம் என எவ்வித பேதமுமின்றி நன்முறையில் தொண்டாற்ற சூரிய கிரஹணப் பூஜைகளே பெரிதும் உதவுகின்றன. பெரும்பான்மையான சிவாலயங்களில், ஆலயத்தில் நுழைந்தவுடனேயே மூலவ மூர்த்தியை நோக்கியவாறு சூரிய, சந்திர மூர்த்திகள் வீற்றிருந்து அருள்பாலிப்பதை நீங்கள் காணலாம். ஆனால் ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீமுருகன், மூலமூர்த்தி, ஸ்ரீ அம்பிகை ஆகியோரை தரிசித்துவிட்டு சூரிய, சந்திர மூர்த்திகளைக் கண்டும் காணாது போல் அனைவரும் வந்து விடுகின்றார்கள். ஆனால் உலகில் ஒவ்வொருவரும் வாழ்வதற்கான ஜீவசக்தியை அளிப்பது சூரிய பகவான் தானே! சூரிய மூர்த்தியின் பெருங் கருணையால் தான் நமக்கு வெளிச்சம், நீர், மற்றும் உணவிற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் கிட்டுகின்றன என்பதை நன்றியுடன் எவரும் உணர்வதும் கிடையாது.

எனவே இனியேனும் ஆலயத்தில் ஸ்ரீசூரிய, சந்திர மூர்த்திகளைக் கண்டவுடன் சாஷ்டாங்க வீழ்ந்து வணங்கி, தரிசித்து ஸ்ரீசூரிய சந்திர மூர்த்திகளுக்குரித்தான ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதி முறையாக வழிபட்டு வாருங்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீசூரிய மூர்த்திக்கும், திங்கட் கிழமைகளில் ஸ்ரீசந்திர மூர்த்திக்கும் உரித்தான அபிஷேக ஆராதனைகளைச் செய்து வாருங்கள். கண் நோய்களால் அவதியுறுவோர், சூரிய பகவானுக்குரித்தான ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரை நேரங்களில் (காலை 6 -7, பகல் 1- 2, இரவு 8 - 9) ஸ்ரீசூரிய பகவானுக்குரித்தான செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து எண்ணெய்க் காப்பிட்டு, ஆரஞ்சு வண்ண ஆடையைச் சார்த்தி சூரிய கிரஹத்திற் குரிய கோதுமையாலான உணவுப் பண்டங்களை நைவேத்யம் செய்து, ஏழைகளுக்கு ஆரஞ்சு வண்ண ஆடைகளையும் கோதுமை உணவுப் பண்டங்களையும் தானமாக அளித்து வருவார்களேயானால் கண்நோய்களுக்குத் தக்க தீர்வு கிட்டும்.

குருடர்களுக்கான அதியற்புத இறைப்பணி

சென்னை அருகே காரமடையை அடுத்துள்ள ஞாயிறு எனும் தலத்தில் சூரிய பகவான் வணங்கும் சிவமூர்த்தியை ஞாயிற்றுக் கிழமையன்று அபிஷேக ஆராதனை, தான, தருமங்களுடன் வழிபட்டு வந்தால், Cataract, Glaucoma, குருட்டுத்தன்மை போன்ற குறைகளுக்குத் தக்க தீர்வினை அவரவர் விதிப்படிப் பெறலாம். குறிப்பாக, பிறவியிலேயே கண் பார்வை இழந்த குருடர்கள், தங்களால் தரிசிக்க முடியாத சிவலிங்கத்தை மானசீகமாக இத்தலத்தில் முறையாக தரிசித்து வந்தால், தம்முடைய குறைகளுக்கான கர்மவினைகள் உணர்த்தப்பட்டு, பரிகாரங்களும் தரப் பெற்று, ஸ்ரீகண்வ மஹரிஷியின் அனுக்கிரஹம் பெற்று நல்வாழ்க்கை பெறுவர். குருடர்களுக்கு இத்தலத்தின் மஹிமையை உணர்த்தி, தம் செலவில் அவர்களை இத்தலத்திற்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைப்பது மிகச் சிறந்த தானதர்மமும், இறைத் திருப்பணியும் ஆகும். குருடர்களின் நன்மைக்கான, மகத்தான சமுதாயப் பணிகளில் ஒன்றாக, அவர்களை இத்தலத்திற்கு அழைத்து வந்து தரிசனம் செய்ய வைத்தல் மிகவும் சிறப்பானதாகும். தம் பத்தினியாம் சாயாதேவியை விட்டுப் பிரிந்த சூரிய பகவான் சாயாதேவியுடன் இணைவதற்காக திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தபொழுது அங்கு தோன்றிய சகஸ்ராட்ச ஜோதியானது வானில் ஊர்ந்து வந்து, ஞாயிறு திருத்தலத்தின் சிவமூர்த்தியில் ஒன்றியதைக் கண்டு தரிசித்த ஸ்ரீசூரிய மூர்த்தியே இங்கு மூலவருக்கு எதிரில் வீற்று அருள் பாலிக்கின்றார், இவர் மிகவும் சக்தி வாய்ந்த சூரிய மூர்த்தியாவார்.

எத்தகைய கண் நோய்களுக்கும் நிவர்த்தியளித்து அருள் பாலிப்பவர். சூரிய கிரஹண நாளின்போது ஞாயிறு திருத்தலத்திற்கு வந்து ஸ்ரீசூரிய மூர்த்திக்குரித்தான அபிஷேக, ஆராதனை செய்து, சிவமூர்த்தியையும் வணங்கி, ஸ்ரீ கண்வ மஹரிஷியின் தரிசனமும் பெற்று கோதுமையாலான உணவுப் பண்டங்கள், ஆரஞ்சு நிற வண்ண ஆடைகள், பவள மோதிரம், மாணிக்கம் போன்ற ஆபரணங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் கண் சம்பந்தமான நோய்க்குத் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம். காட்ராக்ட் போன்ற கண் அறுவை சிகிச்சைக்கு முன் ஞாயிறு திருத்தலத்தைத் தரிசிப்பது சிறப்புடையது.

கண் நோய் தீர்க்கும் பாஸ்கர சக்தி நிறைந்த தலங்கள்

மேலும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சூரியனார் கோவில், தஞ்சையிலுள்ள ஒரத்தநாடு செல்லும் வழியில் உளூர் கிராமத்தில் அருள்பாலிக்கின்ற பரிதி நியமம் ஸ்ரீபரிதியப்பர் சுவாமி ஆலயம், சிதம்பரம் அருகிலுள்ள திருமஹேந்திரப்பள்ளி, மற்றும் சிவலிங்கத்தின் மேல் சூரியக் கதிர் விழும். பாஸ்கரத் தலங்கள், (தஞ்சைக் கருந்தட்டாங்குடி, சேலம் ஏத்தாப்பூர், கரூர் அருகே வாங்கல் ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம், சென்னை வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் போன்ற ஆலயங்கள்) சூரிய கிரஹணத்தன்று வழிபட வேண்டிய முக்கியத் தலங்களாகும். இத்திருத் தலங்களில் குளம் இருந்தால் குளக்கரையில் தர்ப்பணமும், குளமில்லையேல் கோயில் தீர்த்தம் கொண்டு தர்ப்பண பூஜைகளைச் செய்வதோடு மட்டுமின்றி தர்ப்பண பூஜை பற்றி அறியாத ஏழை எளியவர்களுக்கும், பாமரர்களுக்கும் இதன் தாத்பர்யத்தை உணர்த்தி அவர்களும் இலவசமாகத் தர்ப்பணப் பூஜைகளை செய்வதற்கான வசதிகளையளித்து, அவர்களையும் தர்ப்பணம் செய்ய வைப்பது மிகவும் விசேஷமானதாகும், இதனால் ஸ்ரீசூரிய பகவானின் பரிபூரண ஆசிதனைப் பெறலாம்.

இன்றைக்கு சூரியச் சக்கரம்தனைக் கோலமாக வரைந்து அதன் மேல் வாழை இலை வைத்துத் தர்ப்பணச் சட்டம் அமைத்துத் தர்ப்பணமளித்தல் விசேஷமானதாகும். ஒரு மாக்கோல வட்டம் வரைந்து அதைச் சுற்றிலும் 12 கதிர்களை வெளிப்புறமாக சூரியன்போல் வரைந்து கொள்ள வேண்டும். சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவித சூரியக் கிரணமாக 12 விதமான கிரணங்களை நாம் பெறுகின்றோம் என்பதை இது உணர்த்துகிறது. 12 ஆரங்களும் 12 மாதங்களையும், 12 ராசிகளையும் குறிக்கின்றன. இதனை ஒரு மரப்பலகை மேல் வரைந்து கொள்தல் விசேஷமானதாகும், மா, பலா, தேக்கு, வில்வம் போன்ற ஹோம் சமித்தான மரப்பலகைகளையே பயன்படுத்த வேண்டும். இந்த சூரியச் சக்கரத்தின் நடுப் பகுதியில் குறைந்தது ஒரு கோதுமையை படியேனும் வைத்து அதன்மேல் வாழை இலை வைத்து, தர்ப்பைச் சட்டம் அமைத்துக் கொண்டு, 12 முறை தர்ப்பணம் இடுதல் வேண்டும். மூன்று தர்ப்பைகளை நீள வாக்கிலும், அதன்மேல் மேலும் மூன்றை குறுக்குவாக்கில் வைத்தீர்களானால், ஒவ்வொரு திசைக்கும் மூன்று தர்ப்ப ஆரண்யங்களைக் காணலாம். இதுவே தர்பைச் சட்டம் இது பற்றிய விளக்கங்களை எம் ஆஸ்ரம் வெளியீடான எளிய தர்ப்பண பூஜை எனும் நூலில் காணலாம்.

இதன்பின் கோதுமையைப் பசுவிற்கோ, காக்கை, குருவி, புறா போன்ற பறவைகளுக்கோ அளித்தல் விசேஷமானதாகும். ஒரு படி அல்லது 2 படி, என அதிக அளவில் சூரிய சக்கரத்தில் தான்யத்தை தாராளமாக நிரப்பித் வயிறார உணவிட்டு தர்ப்பணம் செய்வோர் அதனை மாவாகவோ, குருணையாகவோ அரைத்து கோதுமை உணவுப் பண்டமாக (உப்புமா, சப்பாத்தி, பூரி) மாற்றித் தானமளிக்கலாம்.

சூரிய கிரஹண தர்ப்பணப் பலன்கள்!

இந்த சூரிய கிரஹண தர்ப்பணத்தின் பலன்களாவன:-

பலவிதமான இரகசியங்களுடன் வாழ்வோர், அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டு திணறுவோர் இத்தகைய இரகசியங்களால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும், துன்பமும் ஏற்படாது இருக்கவும், தங்களுடைய இரகசியமான, பாவகரமான விளைவுகளால் அவதியுறுவோர் தக்க நிவர்த்திகளைப் பெறுவதற்காகவும் இந்த சூரிய கிரஹண தர்ப்பணப் பூஜைகளைக் கட்டாயம் செய்திடல் வேண்டும். அதிலும் மேற்குறித்த பாஸ்கர் சக்தி நிறைந்த சூரியத் தலங்களில் சூரிய கிரஹணத் தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்வதால் மறைமுகமாகச் செய்யப்பட்ட எத்துணையோ செயல்களை வெளிச் சொல்ல இயலாமல் வாழ்க்கை முழுவதும் மனம் வெந்து கொண்டிருப்போர் உண்டு. இளமை, கல்வி, செருக்கு, அந்தஸ்து, ஆணவம், அகங்காரம், பதவி, உடல் வலிமை, அழகு காரணமாகப் பலரையும் துன்பத்திற்குள்ளாக்கியோர், பலவித இரகசியத் தொடர்புகளால் எத்துணையோ குடும்பத்தைச் சீரழித்தோரும் தக்கப் பிராயச்சித்தம் பெற இச்சூரிய கிரஹணத் தர்ப்பண வழிபாடே பெரிதும் உதவுகிறது. ஆனால், தாம் செய்த தவற்றை உணர்தல் மட்டும் போதாது. தன்னால் பாதிக்கப்பட்டோர்க்கு, தக்க நிவாரணம் தரும் வகையில் செயலாற்றினால்தான் இத்தகைய கொடூரமான பாவங்களுக்கு ஓரளவு பிராய்சித்தம் பெற முடியும். அதற்குரித்தான நல் வழியளிப்பதே இச்சூரிய கிரஹண தர்ப்பண வழிபாடு ஆகும். மேலும் , எத்துணையோ ஆலயங்களில் சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தங்கள் அமைந்துள்ள இடங்களிலெல்லாம், இச்சூரிய கிரஹண தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்ளலாம். சூரிய கிரஹணத்தன்று தர்ப்பண வழிபாட்டோடு,
ஜபாகுஸும சங்காஸம், காச்யபேயம் மஹத்யுதிம், தமோரிம் ஸர்வபாபக்னம், பிரணதோஸ்மி திவாகரம் என்ற சூரிய பகவானுக்குரித்தான சக்தி வாய்ந்த பாஸ்கர மந்திரத்தை இன்று (1-7-2000, 31.7.2000) கிரஹண நேரம் முழுதும் ஓதிட வேண்டும். இதே போன்று பலவிதமாக மறைக்கப்பட்ட, தொலைந்து போன தஸ்தாவேஜு, ரெக்கார்டு போன்றவற்றால் பல குடும்ப வழக்குகள் முடிவு பெறாது இழுத்துக் கொண்டிருக்கும். இவ்வாறு எந்த மறைக்கப்பட்ட விஷயத்தால் ஒரு நற்காரியம் தடைபட்டுள்ளதோ, அத்தடங்கல்கள் நீங்கி நற்காரியங்கள் நன்முறையில் நிறைவேற இன்றைய சூரிய கிரஹணத்தில் ஸ்ரீசூரிய பகவானுக்குரித்தான திருத்தலங்களில் ஏழுவித காய்கறிகள் கலந்த உணவினை சூரிய பகவானை நினைத்துத் தானமளிக்க வேண்டும். எந்த நற்காரியமானது தீர்வு பெறாது ஒரு விஷயத்தில் தடை பெற்றிருக்கும்போது அக்காரியம் நன்முறையில் தெளிவும் நிறைவும் பெறவும் ஒரிசாவில் உள்ள சூரியத் தலமான கோனார்க், தமிழகத்தில் கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறை சூரியனார் கோவில், சென்னை அருகே ஞாயிறு கிராமம் போன்ற சூரியபகவானுக்குரித்தான சிறப்பான தலங்களில் சூரிய பகவானின் ஏழு குதிரைகள் என்ற “குமார்” பெயரை உடையோர்க்கு ஆடைதானம், பூட்டிய ரதத்தைக் குறிக்கும் வண்ணம் ஏழுவிதமான காய்கறிகள் கலந்த உணவினை ஸ்ரீசூரிய மூர்த்திக்கு நைவேத்தியம் செய்து படைத்து ஏழை எளியவர்களுக்குத் தானமாக அளித்திட வேண்டும். குறைந்தது 700 பேருக்காவது, வரும் வகையில் அன்னதானம் செய்தல் மிகவும் விசேடமானதாகும். வசதியுள்ளோர் இதனை நன் முறையில் நிறைவேற்றலாம். வசதியில்லாதவர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து சத்சங்க பூஜையாக சத்சங்க தான தர்மமாக இந்த சூரிய கிரஹண அன்னதானம் மற்றும் தர்ப்பண பூஜைகளை மேற்கூறிய மூன்று தலங்களிலும் 1.7.2000, 31.7.2000 ஆகிய இரண்டு சூரிய கிரஹண நாட்களிலும் நன்முறையில் நிறைவேற்ற வேண்டும்.
சூரிய பகவானுடன் சூரிய ரதத்தில் அமர்ந்த வண்ணம், தினந்தோறும் வேத கோஷங்களை நன் முறையில் எழுப்பி எப்போதும் வேதமந்திரங்களை ஓதியவாறு நமக்கு அருள் பாலிக்கும் வாலகில்லிய மஹரிஷிகளுக்கு இன்று நிச்சயமாக அர்க்யம் அளிக்க வேண்டும், “ஓம் வாலகில்ய மஹரிஷிம் தர்ப்பயாமி!” என 3 முறை ஓதி உள்ளங்கையில் நீரை ஏந்தி பூமியில் வார்த்து அவர்களுக்கு, கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் துளசி சேர்த்து துளசி தீர்த்த அர்க்யமாக அளிக்க வேண்டும். பொதுவாகக் கண் நோய்களுக்கு நிவாரணமும் மறைக்கப்பட்ட ரகசியங்களின் பாவங்களுக்கும் தக்க தீர்வைத் தருவதே சூரிய கிரஹண பூஜா பலன்களாகும்.

வைவஸ்வத சப்தமி விரதம்

1, மிகச் சிறப்பான சுப திதிகளுள் ஒன்றாகவிளங்குவது சப்தமி திதியாகும். பராசக்தியின் அம்சமாக, சப்தமாதர்களாக ஏழு தேவியர் தோன்றி இறைவனைப் பூஜித்த அற்புத தினமே வைவஸ்த சப்தமி தினமாகும்.

2, சிருஷ்டியின்போது உலகிலுள்ள அனைத்துக் கோடி லோகங்களுக்கும் சூரிய ஒளியைப் பாய்ச்சி ஜீவசக்திதனை அளிப்பதற்காக ஸ்ரீசூரிய மூர்த்தியே இறைவனைத் தொழுது பிரபஞ்சமெங்கும் வலம் வர, ஏழு குதிரைகள் பூட்டிய தேரை நல்வரமாகப் பெற்ற தினமே வைவஸ்வத சப்தமி திதி தினமாகும், அரக்கர்களும், ராட்சசர்களும் பிரபஞ்சத்தின் பலகோடி லோகங்களிலும் நல்லவர்களை மாய்க்கத் துணிந்து அராஜகச் செயலில் ஈடுபட்டபோது இறைவன் சப்த மாதர்களை உருவாக்கிட அவர்களும் இறையருளால் தம் பூஜா சக்தியால் அரக்கத் தன்மையை வென்று சப்தமாதர்களுக்கு தேவரூபத்தைத் தந்த நாளே வைவஸ்த சப்தமி திதி நாளாகும்.

3. அரக்கர்கள் மறைந்தாலும் அவர்தம் தீயகோஷங்களும் தீவினை எண்ணங்களும் வானில் மிதந்து அனைத்துக் கோடி ஜீவன்களின் மனோநிலையை பாதித்தன. இந்த அரக்க சப்த மாயையை அழித்து நல்வேத கோஷத்தை வானில் பரிபூரணம் அடையச் செய்வதற்காக இறைவன் இறைவிக்கு நல் அமிர்தத் துளிகளைப் புகட்டிட அவற்றை அருந்திய பராசக்தி முதன் முதலில் எழுப்பிய இனிய கானமே ஏழு சப்த அமிர்த நாளங்களாக பூலோகமெங்கும் நிறைந்தன. இவற்றுள் ஏழு ஸ்வரங்களையே இன்று நாம் இன்னிசை ஸ்வரங்களாகப் பெற்று உலகின் சாந்தத்திற்காகவும், மனச்சாந்தியைத் தரும் இறைப் பரிசாக மிளிரும் கர்நாடக சங்கீதமாகவும், இனிய இந்துஸ்தானி இசையாகவும், பக்திப் பரவசம் தரும் தேவார, திருவாசக, திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தப் பாசுரங்களாகவும் ஓதி வருகிறோம். இவ்வாறாக பூலோகத்திற்கு இன்னிசை ஸ்வரங்கள் கிட்டிய நாளே வைவஸ்த சப்தமி நாளாகும்.

4. காலபைரவராக ஆதிசிவமூர்த்தி அவதாரம் கொண்டபொழுது சூரியசந்திர மூர்த்திகள் தங்களுக்குரித்தான இறைச் சேவையைத் தந்தருளுமாறு வேண்டினர். ஸ்ரீகால பைரவரே ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழுவித வார நாட்களைத் தந்து காலத்தைப் பகுத்துத் தந்த தினமும் வைவஸ்வத சப்தமி திதியாகும்.

5.உலகிலுள்ள அனைத்து ஜீவன்களுமே ஒவ்வொரு மனுதேவ மூர்த்தியின் வழிவந்தவர்களே. எனவே எவ்வித பேதமுமின்றி அனைவரும் மனுவின் வழிவந்தவர்களாதலின் மானுட உலகம் இன்றும் தழைக்கிறது. மனிதர்கள் மட்டுமன்றித் தாவரங்கள் விலங்குகள் அனைத்துமே ஒவ்வொரு மனு மூர்த்தியின் வழிவந்தவையே. மனுமூர்த்திகளிடையே எவ்வித பேதமும் கிடையாது. எனவே மனுவின் வழி வந்தவர்களாகிய மனித இனமாகிய நம்மிடமும் எவ்வித வேறு பாடும் இருக்கக் கூடாதுதானே? இதை உணர்விப்பதே வைவஸ்த சப்தமியாகும். உலகிலுள்ள ஜீவன்களிடையே எவ்வித ஏற்றத் தாழ்வு எண்ணமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே வைவஸ்வத மனுதேவ மூர்த்தி அதியற்புதத் தவமுறையை மேற் கொண்டார். அவற்றுள் ஒன்றே சப்தமி விரத முறையாகும். சமுதாய நலன்களுக்காக அளப்பரிய பலனைத் தரவல்லதே இந்த சப்தமி திதியாகும்.

ஸ்ரீசப்தலிங்க மூர்த்திகள்
திருகோகர்ணம் புதுக்கோட்டை

இசைத்துறையில் நன்கு புகழ் பெறவும், நல்ல சாரீர வளத்துடன் இன்னிசை பொழிவதற்கும் வைவஸ்வத சப்தமி வழிபாடு மிகவும் சிறந்ததாகும். பாடகர்கள், இசைவித்வான்கள், வாத்யக் கருவி வித்வான்கள், இசை அமைப்பாளர்கள் போன்று இசைத் துறை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரித்தான விசேட தினமாக விளங்குவது வைவஸ்வத சப்தமி திதி. இப்பூலோகத்தில் தான் ஏழே ஏழு ஸ்வரங்களைக்கொண்டு எத்துனை கோடிப் பாடல்களை, பலவித ராகங்களில் நம் முன்னோர் நமக்கு அளித்துள்ளார்கள், ஸ்ரீ அப்பர், ஸ்ரீ சுந்தரர், ஸ்ரீ சம்பந்தர், ஸ்ரீ நந்தனார், ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், ஸ்ரீ அருணாசல கவிராயர் போன்ற பலரும் தேவாமிர்தமான இறைப்பாக்களைப் பலவித ராகங்களில் நமக்கு அளித்துள்ளமைக்குக் காரணமே அவர்கள் வைவஸ்வத சப்தமி விரதத்தை முறையாகக் கடைபிடித்ததாகும். இசைத் துறையில் சிறந்து விளங்குவோர் தம் தொழிலில் கர்மவினை சேராமல் நல்ல அர்த்தம் பொதிந்த, இறைவனே ஆனந்தமடையும் இறைப் பாக்களை மட்டுமே பாடுதல் வேண்டும். முறையற்ற காம உணர்வினைத் தூண்டும் பாடல்களையும் எங்கும் பாடக் கூடாது.

வைவஸ்வத சப்தமி விரத தினத்தை அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியிலிருந்து துவங்க வேண்டும். பிரதமை திதி எந்த நேரத்தில் துவங்கியது என்பதைக் குறித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு வகைக் கனி அல்லது தான்யம் மட்டும் உண்டு. பிரதமை முதல் சப்தமி திதி வரை ஏழு நாட்களிலும் பரிபூரணமாக விரதம இருத்தல் வேண்டும். ஏழாம் நாளாகிய வைவஸ்வத சப்தமித் திதியன்று விரதத்தைப் பூர்த்தி செய்து, வைவஸ்வத சக்தி நிறைந்த ஆலயங்களிலும், சப்தநாள சக்தி பொதிந்துள்ள திருக்கோயில்களிலும் சப்தஸ்வர சக்திகள் நிறைந்துள்ள திருத்தலங்களிலும் ஸ்ரீவைவஸ்வத சப்தமி திதி பூஜையை முறையாகக் கொண்டாடினால்

1. இசைத் துறையில் நல்கீர்த்தியும், சிறந்த ஏற்றமும் பெறுவர், தம் குலதெய்வம் அறியாது இத்துணை காலமாக வாழ்ந்தோர் இனியேனும் குலதெய்வத்தை அறிந்து நன்முறையில் குலதேவ பூஜைகளைத் தொடர்வதற்கான / பெறுவதற்கான நல்வழிபாடாக இந்த வைவஸ்வத சப்தமி திதியின் பூஜா பலன்கள் கிட்டும்.

2. தம் பதவி, அந்தஸ்து, செல்வம், வீரம் காரணமாகப் பிறரை வதைத்து, உழைக்க வைத்து, உழைப்பிற்குத் தக்க ஊதியம் தராமல் ஏமாற்றியோர் தம் தவறுகளுக்கு வருந்தி அவற்றிற்குரிய பிராயச்சித்தம் செய்து, தம்மிடம் வதைபட்ட அந்த ஏழைக்குத் தக்க நிவாரணம் தனை இன்று முதல் அளித்து வந்தால், இவ்வாறு ஏற்பட்ட தீவினைக்கு நல்ல தீர்வு கிட்டும்.

மப்பேடு பலிபீடம்

3. தாம் வேதம் அறியவில்லையே, வேத மந்திரங்களை ஓதும் வாய்ப்புக் கிட்டவில்லையே, தமிழ் மறைகளை நம்மால் கற்று ஓத இயலவில்லையே என ஏங்குவோர் இந்த வைவஸ்வத சப்தமி விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பார்களேயானால் அவர்களுக்கு வேதமந்திரங்களைத் தமிழிலோ, வடமொழியிலோ அறியும் நல்வாய்ப்பு தாமே கனிந்து வரும்.

4, வைவஸ்வத சப்தமிக்குரித்தான சப்தஸ்வரத் தலங்களில் ஒன்றே புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள சிவாலயம் ஆகும். இங்கு அபூர்வமான ஏழு சப்த ஸ்வர லிங்கங்களை நீங்கள் காணலாம். ஏழு லிங்கங்கள் முறையாக, 'சியாமள பாந்த' முறையில் வரிசையாக அமைக்கப்பட்டு, சீருடனும் சிறப்புடனும் விளங்கி வருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த சப்தஸ்வர லிங்கங்கள். இன்றைக்கு உலகில் அமைந்துள்ள ஏழு ஸ்வரங்களுக்குமுரித்தான மூலாதார நாளசக்தி வடிவே இந்த சப்த ஸ்வர லிங்கங்களாகும். நம் பூலோகத்தில் மட்டுமே ஏழு சப்தஸ்வரங்கள்! ஆனால் தேவலோகத்தில் ஏழுக்கும் மேற்பட்ட எத்தனையோ ஸ்வரங்கள் காணக் கிடக்கின்றன. இசை ஞான தேவதைகளை முறையாக வழிபட்டால் தான் இதன் மகத்துவத்தை நாம் அறியலாம்.

திருக்கோகர்ணத்திலுள்ள இந்த சப்தலிங்க மூர்த்திகளை முறையாக வழிபட்டு வருவோர்க்கு ஏழு ஸ்வரங்களுக்கும் அப்பாற்பட்ட இன்னிசை ரகசியம் கிட்டப் பெறும். எனவே வைவஸ்வத சப்தமி விரதத்தை நன்முறையில் கடைபிடித்து நல் இசை ஞானம் பெறுவீர்களாக! விரதத்தை முறையாகக் கடைபிடிக்க இயலாதோர் திருக்கோகர்ணம் சிவாலயத்தில் அருட்கருணை பொழியும் சப்தஸ்வர மூர்த்திக்கு தேனாபிஷேகம் செய்து ஏழைகளுக்குத் தேன் கலந்த பாயசத்தைத் தானமாக அளிப்பார்களாயின் இசைத் துறையில் மேன்மையுறுவர். இசைப் பிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் இன்னிசை வித்வான்களுக்கும் உரித்தான அற்புதத் தலமிது.

ஒவ்வொரு சப்தமித் திதியிலும் திருக்கோகர்ண சப்தலிங்க மூர்த்திகளுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்து ஏழைகளின் அமிர்தமான சர்க்கரைப் பொங்கல் , மற்றும் பால் பாயசத்தைத் தானமாக அளித்து வந்தால் தேனினும் இனிய குரலுடன் கீர்த்தி பெறுவர். ஆனால், இசைத் துறையில் நாட்டம் கொண்டோர் இறைப் பாக்களில் மட்டுமே தன் இசைத்திறனைக் காட்ட வேண்டுமேயன்றி, எதற்கும் உதவாத அநாகரீகமான, முறையற்ற, அதர்மமான பாடல்களை ஒருபோதும் பாடக் கூடாது. மேலும் பல இளங்கலைஞர்களின் ஆற்றலயும், திறனையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் முன்னேற ஆவன செய்தல் வேண்டும். ஏனெனில் இசைக் கலைஞராக வாழ்க்கை அமைவது பூர்வ ஜென்மப் புண்ணியமேயாகும். ஒரு கச்சேரியை இலவசமாகச் செய்து தந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மனசாந்தி, ஆனந்தம், மகிழ்ச்சியும் தரும் வகையில் பாடும்பொழுது கிட்டும் புண்ணிய சக்தியைப் பலவிதமானதான தருமங்கள் மூலம் தான் பெறமுடியும் என்றால், இசைக்கு எவ்வித புண்ணிய சக்தி நிறைந்துள்ளது என்பதை நீங்களே நன்கு உணரலாம்.

அடுத்தபடியாக வைவஸ்வத சப்தமி திதி விரதத்தைக் கொண்டாட மிகச்சிறந்த இறைத்தலமாக இலங்குவது சென்னை கூவம் கிராமம் வழியிலுள்ள மப்பேடு திருத்தலமாகும். மப்பேடு ஸ்ரீசிறுங்கீஸ்வரர் ஆலயத்திலுள்ள கொடிக் கம்பத்தின் அருகிலுள்ள நவவியாகரண பலிபீடத்தில்தான் இன்றும் நவவியாகரண பண்டிதரான ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான் இன்னிசை பொழிந்து வருகிறார். இங்கு வைவஸ்வத சப்தமி விரதத்தைக் கொண்டாடுவது சிறப்புடையதாகும். யாரும் அறியாத அதியற்புத சிவன்கோயில் இது!

ஸ்ரீகாளாங்கி நாத சித்தர்

கஞ்சமலை காளாங்கிநாத சித்தர்
(அட்டைப்பட விளக்கம்)

பதினெட்டு சித்தர்களுள் ஒருவராகப் பரிமளிக்கும் காளாங்கிநாத சித்தருடைய ஜீவாலயம் சேலம் அருகே கஞ்சமலையில் பொலிவுடன் திகழ்கின்றது. என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாக விளங்குகின்ற சித்புருஷர்களும், மஹான்களும், யோகியர்களும் தமக்கென இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட பூதஉடலைத் துறந்த பின்னரும் ஏகாந்த ஜோதியாய் என்றும் எங்கும் எவ்விடத்திலும் அருள் பாலிக்கின்றனர் என்பது நாம் நன்கு அறிந்ததே. ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு காரணப் பெயரைப் பூண்டு சமுதாய நல்வாழ்விற்காகத் தங்களைத் தியாக பிம்பமாக பல அறப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு விநாடியும் இறை நினைவோடு பூஜையில் பொலிந்து பூஜாயோக தவப்பலன்கள் அனைத்தையுமே ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகவே அர்ப்பணிக்கின்றனர். காளாங்கிநாதர் பல அருட்பெயர்களுடன் இப்பூலோகத்தில் உலாவந்து, அருள் பாலித்து எத்தனையோ கோடி மக்களுக்கு நற்கதியைத் தந்துள்ளார். இன்றும் அளித்து வருகின்றார். காலத்தை அங்கியாய்ப் (ஆடை), பூண்டு கால கால விதானத்தையே தாண்டி நிற்பவர் . காளான்களாக விளங்குகின்ற கர்ம வினைகளை எல்லாம் அதாவது அனைத்து ஜீவன்களுடைய கர்ம வினைகளை எல்லாம் அங்கியாகத் தம் உடலிலே ஏற்று ஜீவன்களைக் கர்மத் தளையிலிருந்து விடுவிப்பவர் என்றெல்லாம் பற்பல அருட்பொருட் செறிவினைக் கொண்டு இன்றும் சேலம் கஞ்ச மலையிலே ஜீவாலயம் கொண்டு நமக்கு அருள் சுரப்பவர் தான் காளாங்கிநாத சித்தராவார்.

இக்காலத்திலே புனிதமான சத்து நிறைந்த உணவினைக் காண்பது அரிது. Fast Food போல இரசாயன உரம், மற்றும் செயற்கைப் பொருள் கலந்த கலவையாகத்தான் இயற்கை உணவுகூட மாறிவிடும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த காளாங்கி நாதர், கலியுக மக்களை உணவின் நச்சுத் தன்மையிலிருந்தும் உணவில் மிதந்து கிடக்கும் தீவினை சூழல்களிலிருந்தும் மக்களைக் காப்பாற்றுவதற்காக இன்று கஞ்சமலையில் ஜீவாலயம் பூண்டுள்ளார், கலியுக ஜீவன்களுடைய வாழ்க்கை அன்னமய கோசமாக உணவைச் சார்ந்து தானே இருக்கின்றது. எனவே அன்னமய கோசத்தின் அருள் பரிபாலனத்தைக் கைக்கொண்டுள்ள சித்புருஷர்களின் தலைமையாக விளங்குகின்றவரே காளங்கிநாத சித்தராவார். ஸ்ரீபிரும்ம மூர்த்தி சிருஷ்டியைத் துவக்கிய பொழுது கிருத, திரேதா, துவாபர யுகங்களை விட கலியுகத்தில் தான் ஜீவன்கள் உணவைச் சார்ந்து வாழ்வார்கள், தீவினைகள் பெருக்கெடுக்கும்! அதே சமயத்தில் பெறுதற்கரிய மானிடப் பிறவி கொண்டே எத்தனையோ உன்னத நிலைகளை அடைந்திடலாம் என்பதையெல்லாம் எடுத்துரைத்த சிவஜோதியாய் விளங்குகின்ற ஸ்ரீகாளாங்கிநாத சித்தர்தான் பிரும்மமூர்த்தியின் சிருஷ்டித் தத்துவத்திற்குப் பல தெய்வீகத் தூண்களை அமைத்துத் தந்தார்,

எனவே இன்றைக்கும் திருவீழிமிழிலையில் இறைவனின் திருமண வைபவப் “பந்தக் கால்” இருப்பது போல பிரம்ம லோகத்திலும் “காளாங்கிநாதக் கால்” என்ற அற்புதமான வில்வமரத் தூண் ஒன்று உண்டு, எப்போதும் இதில் ஜோதிமயமாக நிறைந்திருக்கும் ஸ்ரீகாளாங்கிநாத சித்தர் தான் பூலோகம் எங்கும் சகல கோடி அண்டங்களிலும் வலம் வந்து தினந்தோறும் இதில் மீண்டும் உறைந்து கொள்கிறார் என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியம் ஆகும்.

திருக்கயிலாயத்தில் உள்ள அன்னச்சாலையில் ஆதிசிவனுக்கே அருளமுது படைக்கின்ற ஸ்ரீருத்ராக்னி கோடீசுவர சித்த பெருமான், ஸ்ரீகாளாங்கி நாதருடைய அனுக்ரஹத்தைப் பெற்றவர்தாம். அன்ன தத்துவத்தை உணர்ந்தவராய் அந்த உணவில் எழுகின்ற ஆன்மசக்தி எவ்வாறு 72000 நாடி நரம்புகளிலுமாய்ப் பரவி வருகின்றது என்ற அன்னமய கோச தெய்வீக இரகசியங்களையெல்லாம் உலகிற்கு உணர்விப்பவரே ஸ்ரீகாளாங்கிநாத சித்தர்.

தும்பைச் சிவத்தோட்டம்!

நமக்கு வருகின்ற நோய்களுக்கு மூலகாரணம் திருஷ்டி தோஷங்களும் பகைமை உணர்வுகளும் உணவில் கூடியிருக்கும் தீவினைப் படிமங்களும் ஆகும். என்றும் வாழுகின்ற ஏகாந்த ஜோதியாக விளங்குகின்ற ஸ்ரீகாளாங்கி நாதர் எவ்வாறு உணவின் மூலம் வருகின்ற நோய்களையும் மற்றும் பல கர்ப்பப்பை கோளாறுகளையும் தீர்க்கின்ற மஹாத்மியத்தைக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீகாளங்கி நாதர் தவம் புரிந்த இடமோ திருக்கயிலாயத்தில் உள்ள தும்பைச் சிவத் தோட்டமாகும். ஆம், திருக்கயிலாயத்தில் கூட தோட்டங்களும், வயல்களும் உண்டு. அங்கும் தேவ வாழ்க்கை இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிவகணங்களும் ருத்ரபூபதிகளும் அங்கு சிவத்தொண்டைப் புரிந்து வருகின்றார்கள். தும்பைச் சிவத் தோட்டத்தின் மத்தியில் பிரபஞ்சத்தின் ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக கலியுகத்தில் ஜீவன்களுக்கு ஏற்படக் கூடிய நோய் நொடிகளிலிருந்து ஜீவன்களைக் காத்து ரக்ஷிப்பதற்குத் தேவையான தபோபலத்தினைப் பெறுவதற்காக, அவர் தும்பைச் சிவத் தோட்டத்தில் அக்னியின் மேல் அமர்ந்து ருத்ர தவம் பூணலானார். இவருடைய தபோபலத்தின் காரணமாக தும்பைச் சிவத் தோட்டம் எங்கும் நீர் நிறைந்து வளம் செறிந்து நிலம் செழித்து பூக்களும் காய்கனிகளும் தாவரங்களும் பல்கிப் பெருகின.

இன்றைக்கு அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள அனைத்துத் தாவரங்களையும் நீங்கள் தும்பைச் சிவத் தோட்டத்தில் கண்டிடலாம். இந்தத் தும்பைச் சிவத் தோட்டத்தை ஸ்ரீகாளாங்கி நாத சித்தர் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமே தம்முடைய தபோபலன்கள் யாவும் இத்தாவரங்களிலே நிறைந்து இந்தப் பிரபஞ்சம் எங்கும் பல கண்டங்களிலும் நிலங்களிலும் நாடுகளிலும் நட்சத்திரக் கோளங்களிலும் உள்ள உயிரினங்களுக்கு ஜீவசக்தியை அளித்திடத்தான்!

பலவிதமான நோய்களால் வாடுவோர், குறிப்பாக கர்ப்பப் பை நோய்கள், மாசு, மரு போன்றவற்றால் வாடுவோர், அண்டக் கட்டி, தொண்டைக் கட்டி போன்ற பலவிதமான தொங்கும் சதைகளால் உடல் அழகை இழந்து வாடுவோர், ஸ்ரீ காளாங்கி நாத சித்தருடைய ஜீவாலயத்தில் உண்ணா நோன்பு கொண்டு இங்கு திராட்சைக் கனிகளைப் படைத்து , ஏழைகளுக்கு தானமாக அளித்திட வேண்டும். திராட்சை ரசதானம் (fruit Juice) இவ்விடத்தில் மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் காளாங்கி நாதர் தும்பைச் சிவத் தோட்டத்தில் தவம் பூண்டபோது, அவர் அருகில் நிறைந்து நின்று அருள் பெற்ற தாவரம்தான் திராட்சைக் கொடி ஆகும். எனவேதான் சித்தருடைய பரிபாஷையில் திராட்சையை “காளம்பம்” என்று குறிப்பிடுகின்றார்கள். தமிழ் மூலிகை மருத்துவ நாடி கிரந்தங்களில் காளம்ப உணவுப் பொருட்களைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு. இங்கு பலவிதமான மூலிகைக் காப்பினை ஜீவாலய லிங்கத்தில் இடுவது மிகவும் சிறப்புடையதாகும். தக்க குருவை நாடி ஸ்ரீகாளாங்கி நாத சித்தலிங்க பீடத்திற்குரித்தான மூலிகைக் காப்பு முறைகளை அறிந்து சார்த்தி மாதந்தோறும் அஸ்வினி நட்சத்திர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் வழிபட்டு வருவதால் பலவிதமான கடுமையான நோய்களுக்குத் தக்க தீர்வினைப் பெற்றிடலாம்.

குறிப்பாக, கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பம் நழுவுதல், குறைப் பிரசவம் போன்றவற்றால் சந்ததி விருத்தி இல்லாது அவதியுறுவோறும், கர்ப்பப்பை கோளாறுகளால் உடல் பெருக்கம், மனக் கிலேசம் கொண்டுள்ளவர்களும் ஸ்ரீகாளாங்கி நாதருடைய ஜீவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு மூலிகைச் சத்துகள் நிறைந்த உணவினை அன்னதானம் செய்து வருதல் வேண்டும். கீரைகள், பொன்னாங்கன்னிக்கீரை, புதினா, கறிவேப்பிலை, மாகாளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்றவை கலந்த உணவினை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதலால், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பலவிதமான கோளாறுகளுக்கும் நோய்களுக்கும் தக்க தீர்வினைப் பெற்றிடலாம்.

உடலில் பல இடங்களிலும் கிளைச் சதைகள் தோன்றி ஆங்காங்கே கட்டி கட்டியாய் முத்து உருவாகி பலவிதமான உடல் உபாதைகளால் வாடுவோரும் உண்டு. குறிப்பாக முகம் கழுத்துப் பகுதிகளில் தொங்கு சதைகள் உருவாகி வாடி வதங்கி வருந்துபவர்கள் ஏராளம்! இவற்றிற்குரித்தான தக்க நவீன அறுவைச் சிகிச்சைகளிலும் முன்னேற்றம் இல்லாமையால் ஸ்ரீகாளாங்கி நாதருடைய ஜீவாலய தரிசனமும் அன்னதானமும் இவற்றிற்குத் தக்க நிவாரணத்தைப் பெற்றுத் தரும். ஸ்ரீபிரம்மமூர்த்திக்கு ஐந்தாவது சிரம் கொய்யப்பட்டு, இதனால் அவருடைய சிருஷ்டியில் பல சலனங்கள் தோன்றியபோது ஆதி சிவன் அருளியபடி பிரம்மமூர்த்தியே தும்பைச் சிவத்தோட்டத்தில் காளாங்கி நாதரிடமிருந்து பல அரிய வேத மந்திரங்களைப் பெற்றுத் தம்முடைய சிரசில் ஏற்பட்ட தூளிச் சிதைவுகளுக்குப் பிராயச் சித்தத்தைப் பெற்றுக் கொண்டார். இதற்காக ஸ்ரீபிரம்மமூர்த்தி பல யோக நிலைகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றான நின்ற நிலை தவக்கோலமே இன்றைக்கும் பல சிவாலயங்களில் அபிஷேக தீர்த்தம் வந்து சேர்கின்ற கோமுகத்தின் மேல் பிரம்ம பீடம் அமைந்து இருப்பதாகும். எனவே எத்தகைய நோய்களுக்கும் நிவாரணம் தருகின்ற கஞ்சமலையில் ஸ்ரீகாளாங்கி நாத சித்தருடைய ஜீவாலயத்தில் அஸ்வினி நட்சத்திர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் தக்க வழிபாடுகளை மேற்கொண்டு நோய்களுக்கு நிவாரணத்தைப் பெறுவீர்களாக.

ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வந்திடில், கர்ப்பப்பை கோளாறுக்கான எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் உத்தம இறையருளுடன் மிகச் சிறந்த, அற்புத பலாபலன்களைப் பெற்றிடலாம் என்பது உறுதி.

தட்சிணாயன புண்ணிய காலம்

ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்களுக்கும் தட்சிணாயனம் என்ற பெயர் உண்டல்லவா! தட்சிணாயன புண்ய கால பூஜைகள் யாவுமே அரிய சதாசிவ உத்தமநிலைகளைப் பெற்றுத் தருவதற்கான நல்வழி முறைகளாகும்.

தட்சிணாயனம் என்பது தேவர்களுக்கு உரித்தான இரவுப் பொழுது ஆகும். பூலோகத்தின் ஆறு மாதங்கள் (உத்திராயணம் தை முதல் ஆனி வரை) தேவர்களுக்குப் பகல் நேரமாம். தட்சிணாயன மாதங்கள் (ஆடி முதல் மார்கழி வரை) தேவர்களுக்கு இரவு ஆகும். இரவென்றால் நம்மைப்போல தேவர்களுடைய உறக்க நேரமாகக் கருதுதல் கூடாது. ஏனென்றால் ஊன், உறக்கம், பசி, பிணி, மூப்பு அற்ற தேவநிலைகளை உடையவர்களே தேவர்கள் ஆவர்.

தட்சிணாயன புண்ய காலம் தனை தேவர்களுடைய இரவு நேர பூஜா காலமாகவே சித்தர்கள் உரைக்கின்றனர். ஆனால் மனிதனோ இரவு நேரத்தில் செய்ய வேண்டிய பூஜை முறைகளைப் பற்றி அறியாது அதி உறக்கத்திலும், கேளிக்கையிலும், போதைத் தனங்களிலும் தன்னுடைய பொன்னான இரவு நேரத்தைச் செலவழித்து விடுகின்றான்.

கலியுகத்தில் மனிதன் இரவு நேரத்தில் செய்கின்ற அதர்மங்களுக்கும், அநியாயச் செயல்களுக்கும் பாவங்களுக்கும் தக்கப் பிராயச்சித்தத்தைப் பெறுவதற்கு தட்சிணாயன புண்யகால பூஜைகள் அமைந்து இவையே தக்க நிவர்த்தியைப் பெற்றுத் தரும்.

தட்சிணாயன புண்ய காலமானது ஆடி முதல் தேதி அன்று தொடங்குகின்றது. பிரபஞ்சத்திற்கு நான்கு வேதங்களையும் ஜாதி மத பேதமின்றி, யாவருக்கும் வகுத்துத் தந்த, ஸ்ரீவியாச முனிவருக்கான வியாச பூஜைத் திருநாளும் பூர்ண சந்திர கிரஹண நாளும் இஃதோடு சேர்வதால் இது பெறுதற்கரிய முக்கூட்டு தட்சிணாயனப் புண்யநாளாக மாறுகின்றது. இந்த தினத்தில் செய்யப்படுகின்ற தர்ப்பணங்களுக்குப் பல அளப்பரிய பலன்கள் உண்டு. எவ்வாறு மார்கழி மாதமானது தேவர்களுக்குரித்தான இரவும் பகலும் சேருகின்ற பிரம்ம முகூர்த்த நேரமாக மலருகின்றதோ, அதேபோல் உத்தராயணப் புண்ய காலத்தின் இறுதிக் கட்டமாக விளங்குவதால் இந்த ஆனி இறுதி ஆடி மாதப் பிறப்பானது தேவர்களுடைய புனிதமான அந்தி, சந்தி நேரத்தைக் குறிப்பதாகும். இந்நாளில் வியாச மூர்த்தியே பல அரிய தலங்களிலும் மானுட வடிவில் தோன்றித் தர்ப்பண அர்க்ய பூஜைகளைச் செய்து வேத சக்திகளை நிறைத்துத் தருகின்ற திருநாளாகவும் விளங்குகின்றது. மேலும், பூர்ண சந்திர கிரஹணமும் பரிமளிக்கின்ற நாள் ஆதலால், இன்று மலைத் தலங்களில் குறிப்பாக திருஅண்ணாமலை, திருச்சி குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை, திருச்சி ஸ்ரீஉய்யக்கொண்டான் மலை, மலைக் கோட்டை, பர்வதமலை, வெள்ளியங் கிரிமலை, பழனிமலை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் சந்திர கிரஹண நேரத்தில் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.
விக்கிரம ஆண்டிற்கு உரித்தான இந்த தட்சிணாயன புண்ய காலத்தில் அதாவது ஆடிமாதம் முதல் நாளன்று வியாச பூஜை திருநாளும் சேர்வதால் வேத சக்திகள் நிறைந்த கொன்றை மலர்களை, வாழை இலையில் பரப்பி, அதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்து, தும்பைப் பூக்களைக் கங்கை காவிரி போன்ற புண்ய தீர்த்தங்களில் சேர்த்து, தும்பையும் கலந்த நீரால் தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும், இது பெறுதற்கரிய தர்ப்பண நாள், ஸ்ரீ வியாசபகவானுக்கு உரித்தான தலங்களான காசி அருகே உள்ள வியாசகாசி, ஸ்ரீ வியாச பகவானுடைய சந்நிதி அமைந்துள்ள சென்னை வியாசர்பாடி ஸ்ரீ ரவீஸ்வரர் ஆலயம், வியாசருடைய தவப் புத்திரனாகிய ஸ்ரீசுகமுனிவர் அருள் பாலிக்கின்ற திருச்சி அருகே உள்ள கீரனூரில் உள்ள சிவாலயம், சிதம்பரம் அருகே உள்ள திருமகேந்திர பள்ளி, திருவிடைமருதூர், இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், கும்பகோணம் அருகே உள்ள சக்கரப் படித்துறை, மதுரை அருகே உள்ள திருப்பூவனூர் சிவாலயம், தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோயில் பத்து எனப்படும் திலதைப்பதி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாடு அருகே உளூர் கிராமத்தில் உள்ள பரிதிநியமம் பரிதியப்பர் சிவாலயம் போன்ற இடங்களில் தட்சிணாயன புண்ய கால பூஜையை மேற்கொண்டு செய்வது மிகவும் சிறப்புடையதாகும். தர்ப்பணம் என்றால் தம்மளவில் மட்டும் செய்வது தர்ப்பணம் ஆகாது. இதுவரையில் தர்ப்பணத்தின் தெய்வீக இரகசியங்களைப் பற்றி அறியாதவர்க்கும் இதனை உணர்த்தி, அவர்களுக்குத் தேவையான தர்ப்பை, எள் போன்ற தர்ப்பணப் பொருட்களைப் பெற்றுத் தந்து யாவரையுமே, ஏழை எளியோர்களும் பாமரரும் ஜாதிமத பேதமின்றி தர்ப்பண அர்க்யத்தை அளிக்கச் செய்தலே தியாகமய இறைப்பணியாகும்.

தட்சிணாயனப் படி ஆலயங்கள்

கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீசாரங்கபாணி ஆலயம், திருச்சி அருகே திருவெள்ளறை பெருமாள் ஆலயம் போன்ற இடங்களில் தட்சிணாயனப் படிகள் உத்தராயணப் படிகள் என்று உண்டு, அதாவது உத்தராயண மாதங்களில் மூலசந்நிதிக்குச் செல்லும் வழிப்படிகள் உத்தராயணப் படிகள் என்றும் தட்சிணாயன மாதங்களில் மூலவரைத் தரிசிக்கச் செல்லும் வழிப்படிகள் தட்சிணாயனப் படிகள் என்றும் வழங்கப்பெறும். இத்தகைய அயனப்படிச் சுடர் பூஜைகள் நிகழ்கின்ற ஆலயங்கள் சிறப்புடையதாகும். எனவே தட்சிணாயன புண்ய காலத்தில், எந்த ஆலயங்களில் தட்சிணாயன உத்தராயணப் படிக்கட்டுகள் அமைந்துள்ளனவோ அவற்றை அறிந்து, இவ்வாலயங்களில் படிக்கட்டு பூஜைகளை மேற்கொள்வது சிறப்புடையதாம். படிகள் எங்கும் அரிசி மாக்கோலமிட்டு, அரைத்த சந்தனம், மஞ்சள் குங்குமம் இட்டு, வழிபட்டு வருதலால், கால் பாதங்கள், முழங்கால் போன்ற பகுதிகளில் ஏற்படுகின்ற பலவித நோய்களுக்குத் தக்க நிவாரணத்தைப் பெற்றிடலாம்.

பூலோகம் மற்றும் அனைத்து லோகங்களிலும் என்றைக்கும் சஞ்சரித்து வருகின்ற ஸ்ரீநாரத மஹரிஷிக்கு ஒரு சமயம் ஏற்பட்ட முழங்கால் பிணிகளுக்குத் தக்கப் பிராயச் சித்தமாக தட்சிணாயன, உத்தராயணப் படிக்கட்டுகள் அமைந்துள்ள ஆலயங்களில் முழங்கால் தண்டனிட்டு, படியேறி இறைவனை வழிபடுகின்ற நற்பணியாக ஸ்ரீஅகஸ்திய மாமுனியால் ஸ்ரீநாரத மஹரிஷிக்கு நற்பரிகாரம் அளிக்கப்பட்டது. ஸ்ரீஅகஸ்திய பெருமானே இன்றைக்கும் தட்சிணாயனப் படிகள் திறக்கப்படுகின்ற ஆடி முதல் நாளன்று இத்தகையத் திருத்தலங்களில் மானுட ரூபத்தில் வந்து பூஜிக்கின்றார் என்பது பலரும் அறியாத தெய்வீக இரசியமாகும்.

சூரியனுடைய அயனகதி என்பது அதாவது சுழற்சிப் பாதை மாறுகின்ற திருநாளாகவும் தட்சிணாயனப் புண்யகால துவக்கநாள் அமைகின்றது. இன்றைக்கும் திருஅண்ணாமலையின் குறுக்கே கடக்காது, அதனைச் சுற்றி வலம் வந்து செல்கின்ற சூரிய பகவானுக்கு, திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீ சூரிய மூர்த்தி ஆலயத்தில் தட்சிணாயனப் புண்ய தினத்தன்று அபிஷேக ஆராதனைகள் செய்தலால் கண் சம்பந்தமான பல நோய்களுக்கு நிவாரணத்தைப் பெற்றிடலாம். குறிப்பாக சிவசூரியன் என்ற நாமத்தைப் பூண்டு அருள் பாலிக்கின்ற ஸ்ரீசூரியமூர்த்தி திகழ்கின்ற ஆலயங்களில் தட்சிணாயனப் புண்யத் தர்ப்பணத்தையும் சூரிய பூஜைகளையும் மேற்கொள்வது சிறப்புடையதாகும்.

சந்திர கிரஹணம் கூடிய இந்நாளில் (16-7-2000) அபூர்வமாக ரோஹிணி, கிருத்திகா இரு நட்சத்திர தேவதைகளுடன் சேர்ந்து சந்திரபகவான் அருள்பாலிக்கின்ற மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயம், 27 நட்சத்திர மூர்த்திகள் அமைந்துள்ள திருவிடை மருதூர்ச் சிவாலயம், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் சிவாலயம் ஆகிய இடங்களில் நட்சத்திர மூர்த்திகளுக்கு மூலிகைத் தைலக்காப்பிட்டு, (பொன்னாங் கண்ணி, கரிசலாங் கண்ணி, மருதாணி), வெண்மைநிற வஸ்திரங்களைச் சார்த்தி, ஏழைகளுக்கு தானமாக அளித்தலால் தோல் சம்பந்தமான வியாதிகளுக்குத் தக்க நிவாரணம் பெற்றிடலாம். சந்திர கிரஹணம், தட்சிணாயன புண்ய காலமும் சேருகின்ற அபூர்வமான திருநாள் ஆதலின் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தக்க நிவாரணம் தருகின்ற அதி அற்புத நாளாகவும் இது விளங்குகின்றது.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் கடலில் நீராடுதல் விசேஷமாக விளங்குவது ஏன்?

அமாவாசை என்பது சூரிய சந்திர கிரஹங்களின் சங்கமம் என்பது நீங்கள் அறிந்ததுதானே? சூரிய சந்திர சங்கமத்தின் பின்னணியில் இந்நாளில் அமாவாசையன்று அவற்றின் சாயபிம்பப் பிரபை ஏற்படுகிறது, இச்சூரிய, சந்திரப் பிரபைகளின் சங்கமமே பல சூரிய சந்திராக்னி நேத்ர சக்திகளைத் தருகின்றன. இவையெல்லாம் பூலோக ஜீவன்களுக்கு நன்மை பயப்பனவையாகும். சந்திர ஒளியைத் தரிசிக்க இயலும் நம்மால் சூரிய ஒளியை தரிசிக்க இயலவில்லை அல்லவா? எனவே சூரியாக்னியானது சந்திரனின் அமிர்தத் திவலைகளில் நனைக்கப் பெற்றுப் பலவிதமான பாஸ்கர சந்திர நேத்ர சக்திகளாக மாற்றப்பட்டு நமக்கு ஏற்ற வகையில் பூலோக ஜீவன்களுக்கு ஜீவசக்தி ஊட்டும் வண்ணம் மாற்றித் தருவதை ஒரு அற்புத இறைப்பணியாக ஆற்றித் தருபவர்களே வாலகில்ய சந்திர மஹரிஷிகள்! இவர்களைத் தவிர பாலச் சந்திர மஹரிஷிகளும் உண்டு. இவர்கள் பாலச்சந்திர கணபதியை நெற்றியில் இளம் பிறைச் சந்திரனைச் சூடியவராய்த் தரிசித்து வருபவர்கள்,

தேவர்களைப் போல் பித்ருக்களுக்கும், பசி, பிணி, மூப்பு, உறக்கம் போன்றவை இல்லையென நாம் அறிவோம். ஆனால் அவர்களுக்கும் தேககாந்தியும், தேகசக்தியும் சூட்சும சரீரத்திற்குத் தேவைதானே? இவற்றைப் பெறுவதற்காக அவர்கள் பல தவ முறைகளை மேற்கொள்கிறார்கள். அவற்றுள் ஒன்றே அமாவாசைப் பிங்கள வழிபாடாகும். பூலோகத்தில் இடப்படும் தர்ப்பண சக்திகள் எல்லாம் தர்ப்பணத்திற்குரித்தான ஸ்வதா தேவதைகள் மூலம் பித்ருக்களைச் சென்றடைகின்றன. நீங்கள் வெகு சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் நீரால் விடப்படும் தர்ப்பணமானது எத்தனை மகத்தான சக்தி கொண்டது என்பதை சற்குருவின்றி உங்களால் புரிந்து கொள்ள இயலாது. அமாவாசையன்று பித்ரு தேவர்கள் யாவரும் சூரிய சந்திர சங்கமத்தின் பின்னணியில் நிகழ்கின்ற சங்கமச் சாயைக் கிரஹத்தில் தங்களுக்குரித்தான அமிர்தத் துளிகளைப் பிரசாதமாகப் பெறுகின்றனர். ஆடி அமாவாசையன்றும் தை அமாவாசையன்றும் தேவமூர்த்திகளே இந்தச் சங்கமச்சாயை கிரஹணத்திற்கு நேரில் வந்திருந்து பித்ருக்களுக்குப் பிரசாதமாகத் தம் திருக்கரங்களால் அமிர்தத் துளிகளை வழங்குகின்றனர். இவற்றின் ஒரு சில துளிகளே கடலில் தெளிக்கப்படுகின்றன. எவ்வாறு கும்பாபிஷேகத்தின் போது கும்பத்தின் மீது ஊற்றப்படும் புனித நீரானது ஆயிரக்கணக்கான பக்தகோடிகளுக்காகத் தீர்த்தப் பிரசாதமாகத் தெளிக்கப்படுகிறதோ அதேபோல பித்ருதேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அமிர்தப் பிரசாதமாகத் தாம் பெறுவதில் ஒரு சில துளிகளை மாவிலைகளால் கடலில் தெளிக்கின்றனர். எனவேதான் கடல் நீரிலிருந்துதான் நமக்கு அமிர்தம் போல் சுவையான மழை உண்டாகிறது. கடல் நீரின் பிரதிபலிப்பே நமக்கு நீலநிற மேகமாக விளங்குகிறது. கடல் நீரில் பட்டு வரும் காற்றே நமக்கு ஜீவசக்தியை அளிக்கிறது. ஆகவேதான் குறிப்பாக ஆடி, தை அமாவாசைத் தினங்களில் பித்ரு தேவர்கள் தாங்கள் பெறும் அமிர்தத் துளிகளில் ஒரு துளியை தீர்த்தப் பிரசாதமாகக் கடல் நீரில் கலக்கின்றார்கள். தட்சிணாயனப் புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையாக ஆடி அமாவாசை விளங்குவதால், தேவர்களுக்கு இது மாலைச் சந்தி இரவின் தொடக்க காலமாக விளங்குவதால் தேவர்கள் தங்களின் பிரதான இரவு பூஜைகளை ஆடி அமாவாசையன்றுதான் துவக்குகின்றனர். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் தேவாதி தேவர்களும், கடலில் புனித நீராடி அதன் மூலம் தாங்கள் தேவசக்தியைப் பெறுவது மட்டுமல்லாது, தாங்கள் தேவலோகத்தில் திரட்டிப் பெற்ற தபோபலன்களின் ஒரு பங்கையும் கடல் நீரில் கரைத்துப் பூலோக ஜீவன்களின் உய்விற்காக அளித்துச் செல்கின்றனர். எனவேதான் ஆடி அமாவாசை தினம் கடல் நீரானது மகத்தான சக்தியைத் தன்னுள் பெற்றுள்ளது.

கடல் நீர் உப்புக் கரிக்கிறது என நாம் எண்ணுகின்றோம். ஆனால் இந்த உப்பு நீரில் உறையும் ஜீவன்களோ கோடானுகோடி! கடல் நீர் உப்பு கரிக்கிறது என்பதால் அதில் வாழும் மீன்கள் உப்பு அம்சத்தையா கொண்டுள்ளன? இல்லையே! எனவே உப்பு என்பது நம் நாவால் உணரப்படும் ஒரு சுவையே தவிர உப்பின் தெய்வீக குணப்பாடோ தனிப்பட்ட ஒன்றாகும். எத்துணையோ கோடி லோகங்கள் போல், லவண லோகம் என்ற ஒன்று உண்டு. இது நீரால் நிரம்பியது. கடல் நீரின் அதிபதியான சமுத்திர ராஜனின் உறைவிடம் இதுவே!

இன்றைக்கு கடல் நீர் மட்டும் இவ்வளவு உப்புத் தன்மை கொள்ளாவிட்டால் உலகமே அசுத்தமாய், அழுக்காய் மாறிவிடும். ஏனெனில் அனைத்துவித கழிவையும் தன்னுள் ஏற்று அவற்றை சுத்திகரிப்பதாய் அமைந்திருப்பதே கடல் நீராகும். எனவே உப்பு சக்தி என்பது தீவினைகளைச் சுமந்து கழிக்கும் ஒருவித தெய்வீக சக்தியாகும். இந்த சக்தியை லவண லோகத்திலிருந்து பெற்றுத் தருவதே சமுத்திர ராஜனின் தேவாதிதேவ கணங்களாகும். இவர்கள் யாவரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் லவண லோகத்தினின்றும் வந்து கடலில் பிரசன்னமாகி தம் லவண அமிர்த சக்தியை நீராடுபவர்களுக்கு அளித்துச் செல்கின்றனர். எவ்வாறு கடல் நீரானது அனைத்துவித மாசுகளையும் நீக்கி, அதிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறதோ அதேபோல் அமாவாசை தினங்களில் கடல் நீராடுதலால் நம் மன அழுக்கு நீங்கும், உண்மையான பக்தியுடன் நீராடினால் ! ஏனெனில் தேவாதி தேவ மூர்த்திகளோடு நாமும் நீராடும் தினமாதலால் அவர்தம் சூட்சம் வடிவுடன் நாமும் சேர்ந்து நீராடும் நல்லருளைப் பெறுகிறோமல்லவா? இராமேஸ்வரத்திலுள்ள அக்னித் தீர்த்தமானது, ஜலாக்னி என்ற கண்ணுக்குப் புலப்படாத சூட்சம ஜலரூப அக்னியைத் தன்னுள் கொண்டதாகும். பாதரசம் (Mercury) எனப்படும் அபூர்வமான திரவ வடிவ உலோக சக்தி நிறைந்த ஜலாக்னி சக்தியைக் கொண்ட தீர்த்தமிது! எத்துணை கொடிய தீவினைகளையும் பஸ்மம் செய்யும் சக்தியும் கொண்டதாகும். பலவித கொடிய கர்ம வினைகளை நாம் பல பிறவிகள் எடுத்து அனுபவித்தே கழிக்க வேண்டும், ஆனால் இவற்றுள் பலவற்றை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் எளிதில் பஸ்மம் செய்துவிடலாம். எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு அமாவாசைத் தினத்திலும், வேதாரண்யம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற புனித கடல் தீர்த்தங்களில் நீராடி மன அழுக்கை நீக்கி, மாசற்ற மனதைப் பெறுவீர்களாக!

மச்ச தேவ சக்தி என்ற தெய்வீக சக்தியுண்டு, எவ்வாறு தாமரை இலையில் தண்ணீர் ஒட்டுவது கிடையாதோ, எவ்வாறு உப்பு நீரிலேயே இருக்கும் மீனுக்கு அதேபோல உப்பைத் தீண்டா லவண யோக சக்தி உங்களை வந்தடைகிறது. இதைக் கடல் நீரில் மட்டுமே பெற இயலும். வேறு எங்கும் பெற இயலாது.

பாற்கடலில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், அங்கு வாழ்கின்ற தெய்வீக மீன்களில் ஒன்றிரண்டை தேவாதி தேவர்கள் பூலோக நல்வாழ்விற்கு அர்ப்பணிக்கின்றனர். அவை பாற்கடலில் இருந்து பூலோகத்தை அடையும் உத்தம தினங்களே, ஆடி தை அமாவாசை தினங்களாகும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் குறிப்பாக ஆடி, தை அமாவாசைத் தினங்களிலும் பாற்கடலில் உறையும் ஜீவ ஒளிப் பிரமாணங்கள் பூலோகத்தில் வந்தடைகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாற்கடலின் ஜீவஒளி சக்தியை நாம் பெறவும் இப்புனித நீராடல் பெரிதும் உதவும். மேலும் இந்த உலகில் சூரியன், சந்திரன், மற்றும் நவகோளங்கள் மட்டுமின்றி மற்ற அண்ட கோளங்கள், நட்சத்திர மண்டலங்களுடைய ஒளி, வெப்ப, ஆன்ம சக்தியைத் தன்னுள் ஈர்க்கும் சக்தி நதிகளுக்கும், கடலுக்கும் மட்டுமே உண்டு. எனவேதான் மலைக் கோயில்களுக்கும், மலைகளுக்கும், கடல் நீருக்கும் அபரிமிதமான அபூர்வ சக்திகளை இறைவன் அளித்துள்ளான்.

நீருக்கு ஒளியைப் பிரதிபலிக்கும் சக்தி உண்டு. ஆகையால், கடல் நீரில் பிரதிபலிக்கப்படுகின்ற கோடிக்கணக்கான நட்சத்திர ஒளிகளின் பிருங்க சக்திகள் யாவும் கடல் நீரில் படிந்து, அவை அமாவாசை தினத்தன்று சூரிய சந்திர சங்கம நேத்திர சக்திகளின் மூலமாக, நமக்கு புதுப்பித்து அளிக்கப்படுகின்றன, ஆதலால் இப்புனித கடல் நீர்க் குளியலால் நமக்குக் கிட்டும் சக்திகள் தான் எத்துணை! எத்துணை!
எனவே வரும் ஆடி அமாவாசையன்று மேற்கூறியுள்ள முக்கிய கடல் தீர்த்தங்களில் நீராடி பலவிதமான தீவினைகளுக்கும் தீர்வு பெறுவது மட்டுமன்றி, பெறுதற்கரிய பல தெய்வீக சக்தியையும் அனுக்கிரகமாகப் பெறுங்கள். குறிப்பாக ஆடி அமாவாசையன்று புத்தாடை அணிந்து கடலில் நீராடி அவற்றை ஏழைகளுக்கு தானமளித்தலால் இதுவரையில் எவ்வித நிரந்தர வேலையும், தொழிலுமின்றி வாழ்வோர் இக்கடல் நீராடலால் நல்வழி காட்டப் பெறுவர்!

பிரதட்சிண அமாவாசை

பிரதட்சிண அமாவாசை

திங்கட் கிழமையன்று வருகின்ற அமாவாசைக்குப் பிரதட்சிண அமாவாசை என்று பெயர், சோமனாகிய சந்திரபகவானுக்கு உரித்தானதாகையால், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், மெளன விரதம் இருத்தல் மிகவும் விசேடமானதாகும். இதில் அமாவாசை கூடுவதால் இன்றையப் மௌனவிரதம் மற்றும் அரசமர பிரதட்சிணப் பலாபலன்களைப் பன்மடங்காக்குகின்றது.

திங்களன்று மௌனவிரதம் ஏற்பது மிகவும் சிறப்பானதாகும். ஒவ்வொருவரும் மாதந்தோறும் ஒரு திங்கட்கிழமையேனும் பரிபூரண மௌன விரதத்தைக் கண்டிப்பாக ஏற்க வேண்டும்! ஏனெனில் மௌன விரதத்தில் கழியும் தீவினைகள் ஏராளம்! ஏராளம்! இல்லையெனில் இவற்றை நோய் நொடிகளாகவும், உடல் வலியாகவும் மனத்துயரங்களாகவும் பல பிறவிகளில் கழிக்க நேரும். மேலும் மௌன விரதத்தின் போது கர்ம வினைகளைக் கூடுதலாகச் சேர விடாது தடுத்திடலாமன்றோ !

மௌன விரதத்தில் தீவினைக் கழிப்பு நிகழ்வதோடு மட்டுமன்றி, பலவித அனுகிரஹங்களையும் மௌன தேவதைகளின் அருளால் எளிதில் பெறலாம். இதிலும் அமாவாசையுடன் கூடிய திங்களெனில் மிகவும் சிறப்பானதாகும், வியாபாரம், அலுவலகம், மற்றும் குடும்பங்களில் ஏற்படும் பகைமைகளால் அவதியுறுவோர் பிரதட்சிண அமாவாசை எனப்படும் திங்களன்று வரும் அமாவாசையுடன், மௌனவிரதம் ஏற்று அரச மரத்தைப் பிரதட்சிணம் செய்து இனிப்புகளைத் தானமளித்தலால் பகைவர்களின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவர். தீராப் பகையும் கூடத் தீர்ந்து விடும்.

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லால்குடி

திங்கட்கிழமையில் அமாவாசை வருவது மிகவும் விசேஷமானதாகும். இவ்வாறக அபூர்வமாக ஓரிரு முறை ஒரு வருடத்தில் அமைவதுண்டு. 31.7.2000 அன்று காலை 7.57 வரை அமாவாசைத் திதி திங்களன்று அமைகிறது. எனவே இந்நாளில் அரச மரத்தை வலம் வருவது (1008 முறை) மிகவும் விசேடமானதாகும். இனிப்புகளை நைவேத்யமாக அரச மரத்தடி பிள்ளையாருக்கு அல்லது சூரிய சந்திர மூர்த்திகளுக்குப் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்தலால் பலவிதமான பகைமைகளால் இல்லறத்திலும் அலுவலகத்திலும் அவதியுறுவோர் பகைவர்களின் துன்பத்தினின்று மீளலாம். இன்று காலை 7.55 வரை மட்டுமே அமாவாசை திதி அமைவதால், அமாவாசை திதி முடிவதற்குள் முதல் சுற்று அரச மரப் பிரதட்சிணம் செய்திடல் வேண்டும். திங்கள் சூரிய உதயத்திலிருந்து துவங்கி மறுநாள் செவ்வாய் சூரிய உதயம் வரையாவது மௌன விரதத்தை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். அமாவாசையும், திங்களும் கூடுவதால் ஏற்படும் விசேஷத் தன்மை யாதோ?

திங்கள் என்பது சந்திரபகவானுக்குரித்தான நாள் தானே? நம் மனதிற்கு அதிபதி சந்திரபகவான்! நம் மனம் போன போக்குப்படி நடக்காது உறுதியாக நல்ல மனோ வைராக்கியத்துடன் நல் வழியில் செல்ல மனதிற்கதிபதியான ஸ்ரீசந்திரபகவானின் அருட்கடாட்சம் நிரம்பத் தேவை. மேலும் அமாவாசையை ஒட்டி 15 நாட்களிலும் முழுக் கலைகளின்றி மறைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ சந்திரபகவான், சுக்ல பட்சமான வளர்பிறையிலிருந்து ஒவ்வொரு கலையையும் மீண்டும் பெறுவதற்காகப் பலவித யோக நிலைகளில் ஆழ்ந்திருக்கும் காலமே அமாவாசையாதலால் சந்திரபகவான் அமாவாசைத் திதியன்று மிகுந்த சந்திர பிரபாச சக்தியைப் பெற்றுள்ளார். எனவே அமாவாசையன்று சந்திர மூர்த்தியானவர் எங்கெல்லாம் ஆதிசிவமூர்த்தி அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிக்கிறாரோ அங்கெல்லாம் சென்று சந்திராமிர்த சக்திகளைப் பெறுவதற்கான யோக சூடாமணி சக்தியைப் பெற்றுத் தம் தேக காந்தியை விருத்தி செய்கின்றார். பவானி ஸ்ரீ அமுத கலசலிங்கம், லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தடேஸ்வரர் இவ்வாறாக எங்கெல்லாம் ஸ்ரீசிவபெருமான் அமிர்தகடேஸ்வரராக அருள்பாலிக்கின்றாரோ அங்கெல்லாம் சந்திரபகவான் தம் அமுத அலைகளைப் பெருக்கி சிவச் சந்திர சக்தியை உற்பவித்துக் கொள்கிறார். குறிப்பாக திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரர் சிவாலயத்தில் இன்றும் சிவபெருமான் லிங்கத்தில் சிவ முகத்துடன் இளம் பிறையைச் சூடிய சந்திரமௌளீஸ்வரராய் அருள்புரிவதைக் காணலாம்.

இங்குதான் ஸ்ரீசந்திரபகவான் தானிழந்த 16 கலைகளையும் பெறும் பொருட்டு சந்திர பிரபாச யோகத்தின் பயனாக சிவபெருமானின் திருமுடியில் சிவச் சின்னமாய் அமர்கின்ற யோகசக்தியைப் பெற்றமையால், இன்றும் திருவக்கரை லிங்கத்தின் திருமேனியில் இளம் பிறைச் சந்திரனின் திருமுகத்துடன் சிவமுகத்தைத் தரிசித்து ஆனந்திக்கலாம், மேலும் பிரதட்சிண அமாவாசையன்று இத்தலத்தில் அடிப்பிரதட்சிணம் செய்து வழிபடுதலால் அழகின்மை, மந்த புத்தி, குட்டையான உருவம் போன்ற பலவித காரணங்களால் திருமணத் தடங்கல்கள் ஏற்பட்டு அவதியுறும் பெண்கள் இத்தகைய தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) துன்பங்கள் நீங்கி நன்முறையில் திருமணம் நடைபெற இந்தப் பிரதட்சிண அமாவாசை தினத்தன்று செய்கின்ற மௌன விரதமும், அரச மரத்தடிப் பிரதட்சிணமும் இனிப்பு, வெண்ணெய் தானமும் பெரிதும் உதவும். மேலும், திங்களன்று அமைகின்ற அமாவாசைத் திதியில் ஸ்ரீசந்திரபகவானே பல இடங்களில் பிப்பலாத மஹரிஷியின் அறிவுரைப்படி புனிதமான அரச மரங்களைப் பிரதட்சிணம் செய்து தம் அமிர்த சக்திகளை விருத்தி செய்து கொள்கின்றார். எனவே பிரதட்சிண அமாவாசை அன்று லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், திருவக்கரை சந்திர மௌளீஸ்வரர், திருச்சி அருகே முசிறி சந்திரமௌளீஸ்வரர் ஆலயம், சந்திர பகவானுக்கான திங்களூர் போன்ற இடங்களில் அடிப் பிரதட்சிணம் செய்து அரசமரம் இருப்பின் அரசமரப் பிரதட்சிணமும் செய்து சந்திர பகவானுக்குரித்தான வெண்ணிற ஆடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் அழகின்மை, உடற்குறைகள் காரணமாகவும், பண நெருக்கடி காரணமாகவும் தடைபட்டுள்ளத் திருமணங்களுக்குத் தக்க தீர்வு ஏற்பட்டு நன்முறையில் திருமணம் அமையும், இவ்வாறு அமாவாசைத் திதியும், திங்கட் கிழமையும் இணைந்து வருவது மிகவும் அபூர்வம்! ஆதலால், இவ்விசேஷ தினத்தின் தெய்வீகத் தன்மையை நன்குணர்ந்து, இதன் முழு பலன்களையும் நன்முறையில் பெறுவீர்களாக!

தெய்வீகமாக வாழ்வது எப்படி ?

வளமான எண்ணம் வேண்டும் இவ்வையகத்தில்!
(AUGMENT YOUR POSITIVE THINKING)

Positive Thinking என்று சொல்கிறோம். அதாவது நம் எண்ணங்களெல்லாம், சீர் பெற்று சத்ய தர்மம் நிறைந்ததாக இருக்க வேண்டும், எதைக் கண்டாலும், எதைச் செய்தாலும், எவரை நோக்கினாலும் பொறாமையோ, விரோதமோ, முறையற்ற காமமோ இருத்தல் கூடாது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா? வளமான தெய்வீக எண்ணங்களை எவ்வாறு பெருக்குதல் முடியும்? இதற்காகத்தான் தக்க சற்குருவை நாடிடில் இறைவள எண்ணங்களே இனிதே நிரம்பியிருக்கும்படியான உள்ளத்தை மனதை அவரே பெற்றுத் தருவார்.

இறைவள எண்ணங்கள் காற்று மண்டலத்தில் இயற்கையாகவே நிறைந்துள்ளன. ஆனால், மனிதனோ, தன் துர் எண்ணங்களாலும், தீய சக்திகளாலும், புகைபிடித்தல், போதை வஸ்துக்கள், முறையற்ற காம எண்ணங்கள் போன்றவற்றாலும் காற்று மண்டலத்திலுள்ள இறை வளத்தை மாசுபடுத்தி வருகின்றான். ஆனால், இயற்கையாக காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள இறை வளத்தை எவராலும் அழிக்க இயலாது. ஆனால் தீயசக்திகள் நிறையும் போது இறைவளத் தன்மை மறைகின்றது.

எவ்வாறு இறைவள எண்ணங்களைப் பெருக்குவது?

உதாரணமாக ஒரு பழக்கடை வழியே நீங்கள் செல்லும் போது, அக்கடையிலுள்ள அனைத்துப் பழங்களையும்; நோக்குகின்றீர்களல்லவா? நீங்கள் பழத்தை வாங்குகின்றீர்களோ, இல்லையோ, உங்கள் கண்களுக்கு அனைத்துப் பழங்களின் காட்சி தென்படுகிறதல்லவா? அப்போது நீங்கள் எவ்விதமாக இறைவள எண்ணத்தைப் பெருக்குதல் வேண்டும்?

இறைவளப் பழங்கள்!

பழங்கள் இறைவனின் இயற்கைப் பரிசாகும்! ஒவ்வொரு பழமும் தன்னுள் இறைவளமாகிய positivityஐப் பரிபூரணமாகத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு மனிதனோ, மல, மூத்ராதிகளுடன், மனதிலும் மலமய தீய எண்ணங்களைத் தன்னுள் சுமந்து கொண்டிருக்கும்பொழுது ஒரு பழமோ பரிசுத்தமாக இறைவள எண்ணங்களைக் கொண்டு விளங்குகின்றது. எனவே பழக்கடைகளைக் கண்டதுமே உங்களிடம் இறைவள ஓட்டம் பெருகிட வேண்டும் எப்படி?

”இறைவா! இப்பழங்கள் யார் யாராலோ வாங்கப்பட்டு அவையெல்லாம் நன்முறையில் உனக்குப் பிரசாதமாகப் படைக்கப்பட்டு நன்முறையில் உண்ணப்பட்டு நல்எண்ணங்களையே பெருக்க வேண்டும். ஏழைகட்கும் நன்முறையில் சென்றடைய வேண்டும்!” என்று வேண்டிடுக! ஒவ்வொரு பழமும் எப்பொழுதும் பரிசுத்த இறை சக்தியைக் காற்று மண்டலத்தில் பரப்பி வருகிறது. இப்பணியை மனிதன் கூடச் செய்வது கிடையாது. எனவே இத்தகைய இறைவள என்ணம் மிக்க பழ ஜீவன்கள், நன்முறையில் உத்தம இறைநிலையைப் பெற வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்திட வேண்டும்.

பழக்கடைக்கு அடுத்தபடி நீங்கள் ஒரு காலணிக் கடையைக் கடந்து செல்வீர்களாயின், அப்போது உங்கள் இறைவள எண்ணம் எப்படி அமைந்திட வேண்டும் ? தோல் பொருட்களாலான காலணிகள் எத்துணையோ வித தோஷங்களைத் தாங்கி வருகின்றன. பெரும்பாலும் உயிரோடு வதைக்கப்பட்ட மிருகங்களின் தோலினின்று பெறுவதே தோல் பொருட்களாகும். எனவே தான் தோலாலான காலணிகளைப் பயன் படுத்த வேண்டாம் என நாம் அறிவுறுத்துகிறோம். எவ்வாறு இலட்சக் கணக்கான பட்டுப் பூச்சிகளை அழித்துப் பெறப்படுகின்ற இழைகளாலான பட்டுத் துணிகளை அணியக் கூடாதோ அதேபோல், விலங்கினங்களை வதைத்துப் பெறப்படும் தோலாலான காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது.

எனவே காலணிக் கடைகளைக் கடந்து செல்லும் போது, எந்த மிருகங்களை வதைத்துக் காலணிகள் செய்யப்பட்டனவோ அந்த மிருகங்களின் மேன்மைக்குப் பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், அனைவரும் தோலால் செய்யப்படாத காலணிகளையே பயன்படுத்தவேண்டும் என வேண்டிடுங்கள்! தோலற்ற காலணிகளை அணிய இயலாத ஏழைகள் பலருண்டு. எனவே ஏழைகளுக்குரித்தான காலணி தானம் சமுதாயத்தில் பெருகிட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள், மாதந்தோறும், குறைந்தது மூன்று ஜோடி காலணிகளையாவது ஏழைகளுக்குத் தானமாக அளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தான தருமம் என்றால், அன்னதானம், வஸ்திர தானம் என்று மட்டும் எண்ணாதீர்கள் . காலணி, பேனா, பென்சில் புத்தக தானம், கை கடிகாரம் தானம் என தான தருமங்களை நீங்கள் உங்கள் வசதிற்கேற்பப் பல்வகையில் வகுத்துக் கொள்ளலாம்.

செல்லும் வழியில் சிவமயம்

அடுத்து ஒரு கண்ணாடிக் கடை (Opticals) வழியே நீங்கள் சென்றால்

“இறைவா ஸ்ரீ பாஸ்கர மந்திரத்தையும், காயத்ரி மந்திரத்தையும் மக்கள் மறந்து வருகிறார்கள். பிரம்ம முகூர்த்தப் பூஜை விடியற்காலைப் பூஜை போன்றவற்றையும் மக்கள் மறந்தமையால்தான் பலருக்கும் நேத்ர சக்தி குறைந்தது கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே இறைவா! அனைவருக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை ஊட்டி உணர்விக்கும் முறையில் செயலாற்ற அடியேனுக்கு நல்ல மன ஆக்கத்தையும், தேக ஆரோக்கியத்தையும் அளிப்பாயாக! இத்திருப் பணியைப் பலரும் செய்யும் வகையில் இறைவா நீ அருள் பாலிக்க வேண்டும்!'' என்றும் பிரார்த்தியுங்கள்! இவ்வாறாக உங்கள் மனதில் எப்போதும் இறைவள எண்ணங்களே பூத்திருக்க வேண்டும்.

நீங்கள் ஆக்கப்பூர்வமாக இறைவள எண்ணத்தைப் பெருக்கினால் தான், முறையற்ற எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.

அடுத்ததாக காய்கறிக் கடை வழியே செல்லும்போது, கத்தரி, வெண்டை, புடலை, தேங்காய், பச்சை மிளகாய் என பலவித காய்கறிகளும் உங்கள் கண்களில் தென்படும் அல்லவா? இதுகாறும் நீங்கள் என்ன செய்து வந்திருக்கிறீர்கள் ? இவற்றையெல்லாம் நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்துத்தானே சென்றுள்ளீர்கள்? இனியேனும் இம்முறை மாறி அறவழியில் திரும்பி, இறைவள எண்ணங்களைப் பெருக்குவதாய் அமைந்தது, காய்கறிக் கடைகளைப் பார்த்துச் செல்லும் போது, “இறைவா! இக்காய்கறிகள் யாவும், சாகம்பர்ய சக்திகளைப் பெற்றிருப்பதால், இதை வாங்குபவர்கள் நன்கு சமைத்து இறைவனுக்குப் படைத்து அவற்றின் ஜீவசக்தியை நன்முறையில் பெறுவார்களாக! காய்கறிகளுக்கும் உணவு தான்யத்திற்கும் வசதி அற்றவர்களுக்கும் இக்காய்கறிகள் சென்றடைய உன்னருள் பெருகிப் பலரும் பசியாறும் படி பசி பஞ்சமற்ற நிலையை அருள்வாயாக!” என மனமார வேண்டிப் பிரார்த்தியுங்கள். மாதந்தோறும், 1 கிலோ கத்திரி, 2 கிலோ தக்காளி என உங்கள் வசதிக்கேற்ப குறைந்த அளவாவது, ஏழைகட்கு காய்கறி தானம் செய்து ஆத்ம திருப்தி அடையுங்கள்.

இவ்வாறாக, நீங்கள் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் உங்கள் இறைவளத்தைப் பெருக்குகின்ற இறைவழிமுறைகள் எத்துணையோ உண்டு. பஸ்ஸிலோ, ஸ்கூட்டரிலோ செல்லும் போது எத்தனையோ கடைகளைக் கடக்கின்றீர்கள் அப்போதெல்லாம் மன ஓட்டம் இருப்பின் சாலையில் உங்களால் வண்டியை ஓட்டுதல் இயலாது. எனவே அச்சமயங்களில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மனதில் ஓதி பரவெளியெங்கும் இதன் சக்தி நிறைந்து, ஜாதி, மத, இன குலபேதமின்றி, மனிதன், விலங்கு, தாவரம் என எவ்வித பேதமுமின்றி, உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இந்த காயத்ரீ மந்திர சக்தி சென்றடைய வேண்டிப் பிரார்த்தியுங்கள்.

அடியார்: சற்குருவே! ஒருவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்லும் பொழுது , ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதிச் சென்றால் அதன் பலாபலன்கள் எவ்விதம் அனைவரையும் சென்றடையும்?

சற்குரு: எந்தக் காரியத்தைச் செய்தாலும் உள்ளூர ஸ்ரீகாயத்ரீ மந்திரமோ, அல்லது ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, சிவசிவ, ராமராம, கோவிந்தா! கோபாலா! என்ற இறை நாமங்களையாவது ஜபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான் நம் மனமானது தீய எண்ணங்களையும் முறையற்ற காமஎண்ணங்களையும் நாடாது எப்போதும் இறைநினைவுடன் திகழும். எனவே முதலில் தன்னைப் பலவிதத் தீய எண்ணங்களினின்று தற்காத்துக் கொள்ளவே உள்ளூர மானசீகமாக இறைநாமம் ஜபிக்கின்றோம் என்பதை உணருங்கள்,

இரண்டாவதாக பீடி, சிகரெட், எச்சில் என பல வழிகளில் நாம் பரவெளியை பாழ்படுத்தி வருகிறோம். அதற்குப் பிராயச் சித்தமாக இறை நாமாக்களைச் சொல்லி, செல்லும் இடமெங்கும் அவற்றை ஓதி அங்குள்ள பரவெளியை நம்மால் இயன்றளவு தூய்மைப்படுத்திட வேண்டும்.

நாம் ஜபிக்கின்ற 50, 100 காயத்ரீ மந்திர சக்தியானது எவ்வாறு அனைத்து மக்களையும் சென்றடையும் என்ற கேள்வி எழும். ஒரு மாம்பழத்தை வைத்துக் கொண்டு ஓராயிரம் மக்களுடைய பசியைப் போக்க முடியுமா? இதுபோல் தான் நாம் ஜபிக்கும் குறைந்த அளவு மந்திரத்தைக் கொண்டு, அனைத்து மக்களின் துயரைப் போக்க இயலாது என்பதும் உண்மையே! ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையும், பக்தியும் சேர்ந்து எதையும் இறைவலிமையால் சாதிக்க முடியும் என்பதை குருவின் மூலம் அறிந்து கொள்ளுங்கள், நம்மால் இது ஆயிற்று, நாம் தான் இதைச் செய்கின்றோம் என எண்ணும் போது தான் அங்கு மனித வலிமை குறுக்கிடுகின்றது. இறைவனின் ஆணையாய், இறைச் சிறுகருவியாய் இதை ஆற்றுகின்றோம் என்று எண்ணும் போது, அங்குதான் இறைவலிமை தோன்ற ஆரம்பிக்கின்றது.

இனியேனும் எங்கு சென்றாலும், இறைவள எண்ணங்களுடன் பொலிய முனைந்திடுங்கள்! இதற்கு உதவுபவரே ஸ்ரீ சந்திரபகவானாவார். திங்கட் கிழமை தோறும், மௌன விரதம் மேற்கொள்வீர்களானால் இத்தகைய இறைவள எண்ணங்களைப் பெருக்கும் அறவழிகளை எளிதில் பெறலாம். தூய்மையற்ற எண்ணங்களைப் போக்க அரச மரப் பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும். இதனை அன்றாட வாழ்வில் தினசரி பூஜையாக மேற்கொள்ள வேண்டும். அரச மர இலை நரம்புகளுக்கும், நம் உடலிலுள்ள நரம்புகளுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. இதேபோல் வெற்றிலையிலுள்ள நரம்புகளுக்கும், நம் நாக்கில் உள்ள நரம்புகளுக்கும் நிறைய தெய்வீகத் தொடர்பு உண்டு, இதற்காகத் தான் அக்காலத்தில் மூலிகை மருந்துகளை வெற்றிலையுடன் தேனைக் குழைத்து நாக்கில் வைத்து அமிர்த மருந்தாக உண்டார்கள். எனவே வெற்றிலையின் நாளமும், நாக்கின் நாளமும் சேர்கின்றபோது ஏற்படுகின்ற தெய்வீகப் பரிசத்தால் பல மருத்துவ குணப்பாடுகள் தோன்றுகின்றன. இதற்காகத் தான் உடல் நிலை சரியில்லாத போது, சித்த மருத்துவத்தில் நாக்கின் தன்மை கொண்டு, அதன் நிறத்தைக் கொண்டு, உடலின் நோய் அறிகுறிகளை உணர்கின்ற, மருத்துவப் பாடமுமுண்டு.

எனவே எங்கு சென்றாலும் இறைவள எண்ணங்களை (Positive Thinking)ப் பெருக்குகின்ற இறைப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். அதற்காக தினந்தோறும் ஒரு கோடி பேருக்கு அன்னதானம் செய்வது போல் எண்ணுவது இறைவள எண்ணமாகுமா? உங்களுக்கு ஒரு மூன்று இட்லிகளை அன்னதானமாக அளிக்கும் தானதர்மப் பண்பாடு இல்லாத போது, எவ்வாறு 1 கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதை மானசீகமாக எண்ணுவீர்கள்? உங்களுக்குப் பசி எனில் மானசீகமாக 10 தோசை உண்பதாக எண்ணினால் பசி ஆறுமா? எனவே உங்கள் இறைவள எண்ணமானது, உங்கள் நடை முறை வாழ்க்கைக்கும் ஒத்துப் போவதாக அமைய வேண்டுமே தவிர, மிதமிஞ்சிய கற்பனையில் மிதக்கக் கூடாது. எனவே மனக் கட்டுப்பாடு பெறுதற்கும், இறைவள எண்ணங்கள் பெரிதும் உதவுகின்றன. முறையற்ற காம உணர்வுகளுடனும், பகைமை, குரோத எண்ணங்களுடனும், நீங்கள் இருப்பதாக நினைத்தால், உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காக இறைவனே ஸ்ரீ மனோக்ஞ நாதஸ்வாமியாக, அருள்பாலிக்கிறார். எனவே நீங்கள் தூய எண்ணம் பெற வேண்டுமெனில் மனோக்ஞநாத ஸ்வாமிக்கு திங்கள் தோறும், வெண்ணெய்க் காப்பிட்டு, வெண்ணெய் கலந்த உணவை (பிரட்) போன்றவற்றை தானமளித்து வந்தால் இறையருளால் உங்களுக்குத் தூய்மையான இறைவள் எண்ணங்கள் நிறைந்த மனம் கிட்டும். ஆனால், ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்திடல் வேண்டும்.

இன்பமோ, துன்பமோ அது உங்கள் வினைப் படிமமே! எங்கும், எதிலும், இறைமை பூக்கட்டும்!

உங்களுடைய ஒவ்வொரு வாழ்க்கைக் காரியத்திலும், இறைமையைப் புகட்டினால்தான் நீங்கள் சாந்தமயமான வாழ்வைப் பெற இயலும். இதற்காகத்தான் உங்களுடன் கூட இருந்து அருள்வழி காட்டுபவரே, சற்குரு ஆவார்.

உடுப்பதற்கான ஆடை நிறங்கள், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுதல், திருமணம், சீமந்தம் போன்றவற்றிற்குப் பத்திரிகை அச்சிடுதல், நற்காரியங்களுக்கு நாள் பார்த்தல், கடவுள் படத்தைத் தேர்ந்தெடுத்தல் என அனைத்திலுமே பலவித இறைமைப் பகுப்பை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் தினசரி வாழ்க்கை இறைமை பூத்ததாகச் சாந்தமயமுடன் விளங்கும்.

தெய்வீகமாக வாழ்வது என்ற தொடரில், நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் நம் தினசரி வாழ்க்கையில் எவ்வாறு இறைமையைக் கடைபிடிக்க முடியும் என்பதற்கான எளிய அறவழிகளை நமக்கு எடுத்துரைக்கின்றார்கள். ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவருக்கும் உரித்தான எளிய நல்வழிகளாகும் இவை.

உதாரணமாக நீங்கள் உங்கள் குடும்பத்தில் நடைபெறவிருக்கும் ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழை (Wedding Card) ஐத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக் கொண்டால், அதில் கூட இறைமை பொங்கத் தேர்ந்தெடுப்பது உங்கள் கடைமையாகும். திருமண அழைப்பிதழ், சீமந்தம், பூப்புனித நீராட்டுதல் போன்றவற்றிற்கான பத்திரிகைகள் மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்த மங்களகரமான நிறத்தில் இருப்பதே சிறப்பானதாகும். நம்முடைய பெரியோர்கள் நமக்களித்துள்ளபடி தற்போதைய வழக்கில் உள்ளபடி , மஞ்சளும் , இளஞ்சிவப்பும் கலந்த குபேர வண்ணத்தில் அழைப்பிதழ் இருத்தலே சிறப்பானதாகும். மேலும், பலவித வண்ணங்களில், டிசைன்களில் நீங்கள் அழைப்பிதழைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் நிறையப் பூக்கள் இருக்கும் வண்ணம் அமைந்திட வேண்டும். ஒரு பூவோ, இரண்டு பூக்களாகவோ இருப்பதைவிட, நிறைய பூக்கள் இருப்பதே அழைப்பிதழுக்கு, மங்களத்தை நன்முறையில் சேர்த்தளிக்கும். இதேபோல், ஒருமான், ஒரு பறவை என்றில்லாமல் பல மான்கள், பல யானைகள் இருக்கும் வண்ணம் அழைப்பிதழையும், உறைகளையும் தேர்ந்தெடுங்கள். அழைப்பிதழில் உள்ள கடவுள் உருவமும் முழுமையாக அமர்ந்த கோலத்தில் இருத்தல் வேண்டும். விநாயகரின் தலையை மட்டும் அச்சிடுவது, நின்ற கோலத்தில் லட்சுமி, சரஸ்வதியை அச்சிடுவது என்றில்லாமல், கடவுளின் முழுமையான உருவுடன் அமர்ந்த கோலமே நிரந்தர லட்சுமி கடாட்சத்தையும், ஐஸ்வர்யத்தையும் பெற்றுத் தரும்.

இயற்கைக் காட்சிகளும் இறைமையைத் காட்டுவதே! அதற்காக மானைப் புலி துரத்துவது போலோ, விதவிதமாக விரைவாகக் கார் ஓட்டுவது போன்றோ , எதிர் வினை ( Negative thinking) கூடியதாக எதையும் மனதைக் குழப்பும் வண்ணம் தேர்ந்தெடுக்காதீர்கள். அதேபோல பசுவை மட்டும் வைக்காது. பசுவுடன் கன்றும் சேர்ந்து இருக்கும் வண்ணம் தேர்ந்தெடுங்கள். மங்களகரமான வாத்தியங்கள், இன்னிசைக் கச்சேரிகள் போன்று சுபத்தைக் கூட்டும் வகையில் படங்கள் அமைய வேண் டுமே, தவிர, துப்பாக்கி, அர்த்தமற்ற நடனங்கள், மலைச்சரிவு, பள்ளங்கள், மேலிருந்து கீழே விழுதல், ஒன்றும் புரியாத modern art போன்றும் எதிர்வினை எண்ணம் நிறைந்த படங்கள் கூடாது, ஆகாய விமானமோ, பறவைகளோ, மேலே எழும்பும் நிலையில் இருக்குமாறு அமைவதே சிறப்பானது. மேலிருந்து கீழே இறங்கும் நிலை வாழ்வின் சரிவைக் குறிப்பதாகும். இவ்வாறாக அழைப்பிதழிலோ அல்லது அதற்கான உறையிலோ (cover) கூட, இறைமையைப் பரிபூரணமாகக் காண்பதே வாழ்வின் இலட்சியமாக நாம் கடைபிடிக்க வேண்டும்.
“ஆடையின் வண்ணங்கள் கூட பிறர் மனதை அலைக் கழிப்பதாக இருக்கக் கூடாது. சாந்தமான எண்ணக் கலவைகளே சிறப்பானது. அதிலும், தற்காலத்தில் சட்டை, பேண்டுகள் அர்த்தமற்ற வசனங்களைத் தாங்கியுள்ளன. I beat you, Ravages என்ற எதிர்மறை வார்த்தைகள் ஆடைகளில் எழுதப்பட்டிருக்கக் கூடாது. Divine feelings, Good mark or positive charges இருப்பதாக இறைவளம் கூடியதாக அவை இருக்க வேண்டும். இவ்வாறாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு காரியத்திலும் இறைமை மிளிரும் வண்ணம் நற்செறிவுடன் இறைப்பாங்குடன் திகழ்ந்திட சற்குரு அருள்கின்ற அறவழி முறைகள்தான் எத்தனை எத்தனை!

கரிநாள் மகிமை

கரிநாள் மஹாத்மியம்

அதெப்படி, பலராலும் ஒதுக்கப்படுகின்ற கரிநாளுக்குக் கூட மஹத்துவம் உண்டா ? ஆம், நிச்சயமாக உண்டு. ஏனென்றால், கால தேவதையால் படைக்கப்பட்ட 27 நட்சத்திர நாட்கள் யாவுமே பலவிதமான மஹாத்மியங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. ஆனால் அந்தந்த காலத்தில் நிறைவேற்ற வேண்டிய காரண காரியங்களை அறிந்து கொண்டு, அவற்றை அந்தந்த நாளில், நேரங்களில் நிகழ்த்துவதுதான் தக்க காரிய சித்தியைப் பெற்றுத் தரும், உதாரணமாக எமகண்ட நேரத்தில் எமனுக்கு உரித்தான துதிகளை ஓதி வந்தால்தான் எம பயத்திலிருந்து மீளலாம். இல்லையெனில், எப்போது உயிர் போகப் போகின்றதோ என்ற மரண பயத்துடன்தான் வாழ்ந்தாக வேண்டும். அதேபோன்று, இராகு காலத் தில் இராகு பகவானுக்குரித்தான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வந்தால் தான் பலவிதமான எதிர் வினைப் பகைமைச் சக்திகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறாக, கரிநாள் என்பது பலவிதமான தடங்கல்களை நிவர்த்தி செய்வதற்குரிய வழிபாட்டு நாளாக சித்புருஷர்களால் அருளப்பட்டுள்ளது.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறுவதற்கு முயற்சித்தபோது எத்தனையோ தடங்கல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது அல்லவா! அவற்றிலிருந்து நிவர்த்தியைப் பெறுவதற்காக விக்னத்தைக் களைபவராக விளங்குகின்ற விநாயக மூர்த்தியை வேண்டியபோது, அவர்கள் விநாயகரை வணங்குவதற்குக் கூடத் தடங்கல்கள் ஏற்பட்டன. இறுதியில், பல கோடி அண்டங்களிலும் ஸ்ரீவிநாயக மூர்த்தியைத் தேடிக் களைத்து மனம் வருந்திய தேவர்கள், சாகம்பரி லோகத்தை அடைந்து, அங்கு சற்று ஓய்வு கொண்டபோது, அங்கே சாகம்பரித் தோட்டத்தில் மணம் நிறைந்த ஒரு தாவரத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு, ஸ்ரீசாகம்பரி தேவியின் அருளுடன், அந்த தாவரத்தின் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று உண்டபோதுதான், அவர்களுக்கு மன ஊக்கமும், ஆக்கமும், மனச்சக்தியும் யோக சக்திகளும் கிட்டின, அந்தத் தாவரம்தான் கறிவேப்பிலை ஆகும். தமக்குக் கிட்டிய இந்த கறிவேப்பிலையை அரைத்து மஞ்சள் பிள்ளையார்போல் பிடித்து வணங்கியபோது, அப்போதுதான் அவர்களுக்கு விநாயகப் பெருமானின் தரிசனம் கிட்டியது! ஏன் ? எப்படி?

கரிவலம்வந்த நல்லூர்

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே ஸ்ரீவிநாயகருக்குரித்தான சனிதசை வந்துவிட்டது என்பதால் அவரைப் பீடிக்க வேண்டும் என்று வந்தபோது அவரைப் பிடிப்பதற்கான எந்த வழிமுறையும் அவருக்குத் தெரியவில்லை. ஆதலில், அவரையே சரணடைந்து தமக்கு வழிகாட்டு மாறுபூஜித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே ஸ்ரீவிநாயகரைப் பூஜித்த திவ்ய தரிசனத்தைத்தான் தேவர்கள் பெற்றார்கள். இந்த நிலையில் தான் கறிவேப்பிலை உருண்டையை அவர்கள் விநாயகருக்கு அர்ப்பணித்திட, விநாயகரும் மனம் மகிழ்ந்து, அதில் சிறிதை சனீஸ்வர மூர்த்திக்குப் பிரசாதமாக அளித்து அருள் பாலித்தார்.

ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தி எவ்வாறு அங்கு வந்தார் ? முப்பது முக்கோடி தேவர்களாலேயே, ஸ்ரீ நாரத மஹரிஷியாலேயே விநாயகருடைய இருப்பிடம் அறிய முடியாது திகைத்தபொழுது ஸ்ரீ சனீஸ்வர மூர்த்திக்கு மட்டும் அவருடைய இருப்பிடம் எவ்வாறு தெரிந்தது?

ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தியினுடைய சகோதரர் தாமே ஸ்ரீ எமதர்ம மூர்த்தி! எமதர்ம மூர்த்தியின் தண்டத்தால் காலில் அடியைப் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர மூர்த்திக்குக் கால் ஊனம் ஆயிற்று. மேலும் அவர் கருத்த மேனியராயும் ஆனார் ! “எந்த தண்டத்தால் நீ என்னை அடித்தாயோ அந்த தண்டத்தையே நீ இழந்து அவதியுறுவாய்!” என ஸ்ரீ சனீஸ்வரமூர்த்தி அவருக்குச் சாபம் அளித்துவிட்டார்.

ஆனால் தாம் இட்ட சாபத்திற்கு என்ன நிவர்த்தி என்பதை அவரே அறியாதவர் ஆனார். தேவலோக நியதி என்னவென்றால் எவர் எந்த சாபத்தை இட்டாலும் அதற்குரித்தான சாப நிவர்த்தியையும் அவர் தம் தபோ பலன்கள் மூலம் அறிந்து இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்த சாபமே பன்மடங்கு விளைவுகளுடன் திரும்பி அவர் மேலேயே திரும்பிப் பாய்ந்து விடும் என்பதாகும் . சினத்தால் தாம் அளித்த சாபத்திற்குரித்தான பரிகார வழிமுறைகளைத் தேடி ஸ்ரீசனீவர மூர்த்தியானவர் விக்னங்களைக் களைகின்ற ஸ்ரீ விநாயகரைத்தான் சரண் அடைந்தார்.

மேலும் கால யோக நியதிப்படி அவருக்கு ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியையும், ஸ்ரீ பிள்ளையாரப்பனையும் சனி தசையாக ஒரு விநாடி நேரமெனும் பீடித்திட வேண்டும் என்ற நியதி இருந்தமையால் அவர் விநாயகர் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிட்டார். பரம்பொருள் மூர்த்தி ஆயினும் அங்கும் தன் கடமையைச் செய்திட வேண்டும் என்பதற்காக இறை நோக்குடன் பாரபட்சமின்றி இருந்தமையால்தான் அவருக்கு ஸ்ரீ விநாயகருடைய தரிசனம் எளிதிலும் விரைவிலும் கிட்டியது. ஸ்ரீ விநாயக மூர்த்தியை தரிசனம் செய்த ஸ்ரீ சனீஸ்வர மூர்த்தி, “அடியேனுடைய சகோதரன் எமதர்ம மூர்த்தியால் தண்டனை அளிக்கப் பெற்று கால் ஊனம் ஆனேன். இதனை யாமே நிவர்த்தி செய்து கொள்வது எளிதானதுதான் என்பதைத் தாங்களே அறிவீர்கள். ஆனால், அடியேன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஏதோ தெய்வ லீலையாக இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக நான் உணர்கின்றேன். மேலும் எந்த தண்டத்தால் எம்மை சகோதரன் அடித்தானோ அந்த தண்டத்தை அவன் இழந்து அல்லல் படவேண்டுமென்று சினத்தால் சாபத்தை வேறு அளித்துவிட்டேன். அந்த சாப நிவர்த்திக்கு உரித்தான பரிகாரத்தையும் அவனுக்குத் தர இயலாமையால் தவிக்கின்றேன், எனவே அடியேனுடைய கால் ஊனமுற்றதற்கான காரணத்தை மட்டும் தெரிவித்து ஸ்ரீ எமதர்மனுக்குரிய சாபத்தின் பிராயசித்தத்தையும் தந்தருள வேண்டும்”, என்று பவ்யமாக வேண்டி நின்றார்.

விநாயகப் பெருமானும், “சனீஸ்வரா, இவை அனைத்தும் இறை நியதிகளாகத்தான் நிகழ்ந்தன. உனக்குக் கால் ஊனமானது என்பது உலக ஜீவன்களுக்கு உரித்தான காலத் தடங்கல்களையும் காரியத் தடங்கல்களையும் குறிப்பதாகும். நீ உனக்குக் கால் ஊன மானாலும் உன் கடமையிலிருந்து சற்றும் நழுவாமல் அடியேனுக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கும் சனி தசை பீடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து கடமையிலிருந்து நழுவாமல் நேரே இங்கு வந்துவிட்டாய். எமதர்மமூர்த்தி தன்னுடைய கரிய தண்டத்தால் தன் காலில் அடித்தமையால் அந்த ருத்ர அக்னியால் கரித் துண்டமாகி வைரமாக உன் திருப்பாதம் ஜ்வலிக்க இருக்கின்றது. எனவே, இதுவரை தெய்வ மூர்த்திகளுக்கெல்லாம் கிட்டாத ஒரு பெரும் யோகமாக உன் திருப்பாதமானது வைரப் பொலிவுடன் திகழ்ந்து உனக்கு ஈஸ்வரப் பட்டமும் கிட்டும்! இவ்வாறாக உன்னுடையக் காரியத் தடங்கல்கள் நீங்கி காரிய சித்தி கிட்டுவதற்கான பூஜைகளுக்கு உரித்தான கரிநாளாக இது மலரும்! பூலோகத்திலும் இந்த கரிநாள் மலரட்டும்", என்று கூறி அருள் பாலித்து தேவர்கள் அளித்த கருவேப்பிலை உருண்டைப் பிரசாதத்தை சனீஸ்வரனுக்கும் ஸ்ரீ கணபதி அளித்ததால் அவர் கால் ஊனம் சரியானதோடு, வைரப் பாதங்களுடன் பொலிந்து சனீஸ்வர மூர்த்தியாய்த் திகழலானார். இவ்வாறாகக் கரிநாட்களில் மேற்கொள்ள வேண்டிய பூஜை முறைகளும் அதற்குரித்தான திருத்தலங்களும் உண்டு.

“எனவே வேறு தெய்வமூர்த்திகளுக் கெல்லாம் கிட்டாத பெரும் பேறாக உன்னுடைய திருப்பாதமானது வைரப்பொலிவுடன் இனி விளங்கும். இவ்வாறாக உன்னுடைய காரியத் தடங்கல்கள் நீங்கி வைரம்போல் காரிய சித்தி கிட்டுவதற்கான பூஜைகளை நிகழ்த்துவதற்கான கரிநாளாக பிரபஞ்சமெங்கும் இந்நாள் திகழட்டும். எனவே கரிநாள் என்பது காரியத் தடங்கல்கள் நீக்குவதற்கு பூஜைகளை மேற்கொள்ள வேண்டிய திருநாளாக பூலோகத்திலும் மலரட்டும்.'' என்று அருள் பாலித்தார்.

மேலும், “மார்க்கண்டேய புராணத்தின் போது, எமதர்ம மூர்த்தி தன்னுடைய தண்டத்தை இழக்க நேரிடும், அப்போது அவன் உன்னைப் பிரார்த்தித்து உன்னுடைய அனுக்ரஹத்தால் கரிநாள் பூஜைகளை மேற்கொண்டு, தடங்கல்களை நிவர்த்தி செய்துகொண்டு தன்னுடைய தண்டத்தைப் பெறுவான்”, என்றும் கூறி அருளுரை தந்தார், இவ்வாறாகக் கரிநாள் பூஜைகளுக்கான முறைகளும் இதற்கென உரித்தான திருத்தலங்களும் தோன்றின.

சென்னையில் வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ தண்டீஸ்வரர் ஆலயம் தான் ஸ்ரீ எமதர்ம மூர்த்தி தாம் இழந்த தண்டத்தைப் பெற்ற திருத்தலமாகும். எனவே, கரிநாளன்று இத்திருத்தலத்தில் கறிவேப்பிலை கலந்த அன்னத்தை இறைவனுக்குப் படைத்து ஏழைகளுக்குத் தான தர்மமாக அளித்து வருதலால் பலவிதமான காரியத் தடங்கல்களுக்கு தக்க நிவர்த்தி கிட்டும். குறிப்பாக வாகனப் பழுது, விபத்து, நோய் நொடிகள், குடும்பத்தில் திடீர் மரணம் காரணமாகப் பலவிதமான சுபகாரியங்கள் மற்றும் நில, சொத்து கட்டிட விஷயங்கள் தடைபட்டிருக்கும். எனவே கரிநாளன்று அம்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ கரிகிருஷ்ணப் பெருமாள் ஆலயம், சென்னை வேளச்சேரி ஸ்ரீ தண்டீஸ்வரர் ஆலயம், கரூர் ஸ்ரீ கரியமாலீஸ்வரர் அருள் பாலிக்கின்ற பசுபதீஸ்வரர் ஆலயம், கரியமாணிக்கப் பெருமாள் என்று பெயர்கொண்டு பெருமாள் அருள்பாலிக்கின்ற திருத்தலங்கள், கரிவலம்வந்தநல்லூர் ஆலயம், கரிக்குருவி எனப்படும் குருவிகள் மோட்சம் பெற்ற சென்னை பாடி சிவாலயம் ஆகிய இடங்களில் கரிநாட்களில் பிள்ளையாரப்பனுக்கும், சனீஸ்வர மூர்த்திக்கும், பெருமாள் மூர்த்திக்கும், தைலக் காப்பிட்டு, கறுப்புநிற வஸ்திரங்களைச் சார்த்தி, (கருமை நிறம் அல்லது கருமை கலந்த) கறுப்பு வஸ்திரங்களையும், உணவு வகைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதலால் எவ்விதக் காரியத் தடங்கல்களுக்கும் தக்க நிவர்த்தி கிட்டும். குறிப்பாக, அஸ்திவாரமே எழுப்ப முடியாமல் தடைபட்டிருக்கும் கட்டிடங்கள், பாதியில் நின்று போன கட்டிட வேலைகள், நிச்சயதார்த்தம் வரை வந்து தடைபட்டுள்ள திருமணக் காரியங்கள் நன்முறையில் நடைபெறுவதற்கு, கரிநாளன்று செய்யப்படும் மேற்கண்ட பூஜைகள் நல்ல தீர்வைப் பெற்றுத் தரும்.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையின் சிறப்பு

தை அமாவாசையும், ஆடி அமாவாசையும் மிகவும் முக்கியமான அமாவாசைத் திதிகளாகும். இந்நாட்களில் முப்பத்து முக்கோடி தேவர்களே பூலோகத்தில் மானுட ரூபத்திலும் வேறு வடிவங்களிலும் வந்து பலவிதமான புண்ணிய நதி தீரங்களிலும் கடல் நீரிலும் நீராடித் தங்கள் தேவ சக்திகளை பூலோகத்திற்கு அர்ப்பணிக்கின்ற அற்புதமான திருநாளாகும்.

தினந்தோறும் கடலில் நீராடுதல் கூடாது. ஆனால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தனுஷ் கோடி தீர்த்தம் போன்ற மிகவும் புனிதமான கடல் தீர்த்தங்களுக்கு விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீரில் நீராடிடலாம். மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது.

மதிப்பிற்குரிய மீனவப் பெருமக்கள் சமுத்திர இராஜாதேவ மூர்த்தியின் அருளைப் பெற்றவர்களாதலால் அவர்களுக்கு கடல் தேவதைகளின் அனுக்கிரஹம் எப்போதும் உண்டு. தை மற்றும் ஆடி அமாவாசை தினங் களில் கடலில் நீராடி ஏழை மீனவர்களுக்கு உரித்தான தான தருமங்களைச் செய்து வருதலால் தக்க நிரந்தரமான வேலை யின்றி வாழ்க்கையில் அவதியுறுவோர் , நன்முறையில் வாழ்க்கையில் settleஆவதற்கு உரித்தான நல்வழிகளைப் பெற்றிடுவர்.

கடலில் நீராடுவதற்கான விசேஷ தினங்கள் சில உண்டு. ஆடி அமாவாசை, தை அமாவாசை; சூரிய சந்திர கிரஹண தினங்கள் போன்றவைதாம் புனிதமான கடல் நீராடதலுக்கு ஏற்றவையாகும். மற்ற தினங்களில் கடலில் நீராடுதல் கூடாது. ஆனால் வேதாரண்யம், இராமேஸ்வர அக்னி தீர்த்தம்,  தனுஷ்கோடி போன்ற மிகவும் புண்ணிய, புனிதமான, கடல் தீர்த்தங்களில் எப்போதும் எந்நாளும் நீராடலாம்.

வருகின்ற ஆடி அமாவாசை தினத்தன்று மேற்கண்ட புனிதமான கடற்கரைத் தலங்களிலோ, அல்லது கடல் உள்ள இடங்களிலோ நீராடிடுக. தர்ப்பண பூஜை செய்திடுக. கொன்றை மலரைப் பரப்பி அதன்மேல் தர்பைச் சட்டம் அமைத்து இன்று தர்ப்பணமிட்டு, தேங்காய் எண்ணெய், சீப்பினை (தலைக்குத் தேவையான பொருட்கள்) தானமாக அளித்தலால் அலுவலகம், இல்லத்தில் உள்ள பேராபத்துகள் நீங்கி சுமுகமாகக் காரியங்கள் நடந்திடும்.

காற்று மண்டலச் சலனங்கள்

“பொழுது போக்கிற்காக நடந்து சென்று வந்தேன்”, என்று சொல்வதை விட நம்முடைய ஒவ்வொரு நடையிலும் நாம் எவ்வாறு தெய்வீகத்தைப் புகுத்த முடியும் என்று யோசியுங்கள். அதாவது நம்முடைய ஒவ்வொரு அங்க அசைவும், கண், அசைவும் இறைவனின் திருவருளால் நிகழ்வதால் நம்முடைய காலின் ஒவ்வொரு அடி நடையில் கூட இறைத் தத்துவம் மிளிர்தல் வேண்டும், தெய்வீகம் ஊட்டப்பட வேண்டும் என்பதை நாம் இங்கு வலியுறுத்துகின்றோம்.

ஒன்றில் ஒன்பது!

ஜாதி, மத பேதமின்றி நம் அனைவருக்கும் ஆண்டவன் சூட்சும, பார்த்திப, பரிஸ்ருத, மனோலய போன்ற ஒன்பது விதமான சரீரங்களையும் கொடுத்துள்ள போதிலும் நம்மால் ஒரே ஒரு உடலில் ஒரே ஒரு மனதில் மட்டும்தான் இயங்க முடிகிறது. இதனால்தான் நம்முடைய நினைவாற்றலும் குறைந்து விட்டது. சதாவதானி, அஷ்டாவதானி என்று ஒரே சமயத்தில் எட்டு, பத்து பன்னிரெண்டு எனப் பலவிதமான காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இவர்களுக்கு எவ்வாறு இந்த அபார சக்தி வந்தது ? இவர்கள் தங்களுக்குரித்தான 9 மனோ தேகங்களில் இரண்டையோ, மூன்றையோ தங்களுடைய யோக சக்திகளின் மூலமாகச் சிறிதளவு பயன்படுத்துகின்றார்கள். முழுமையாகப் பயன்படுத்துவதும் யோகத்தினை உணர்தல் மிகவும் விசேஷமானதே! புகழுக்கும், பணத்திற்குமாக யோகசக்தி பயன்படுமானால் அது வீணே, விரயமாகக் கழிந்து, உடலையும் பாதிக்கும், இத்தகைய யோக சக்திகள் தெய்வீகத்திற்குப் பயன்படுத்தப்பட்டால்தான் அது நன்கு பல்கிப் பெருகி விருத்தியடையும், பலருக்கும் பயனளிக்கும்!

ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குமே இந்த மனோ தேகங்களையும் நன்முறையில் பயன்படுத்தக்கூடிய யோக சக்தி நிறைய உண்டு என்றாலும் அவன் அதை உணர்வதில்லை, நன்முறையிலும் பயன்படுத்துவதில்லை, ஏதேனும் ஒரு யோக சக்தியானது கடுகளவேனும் கிட்டுமேயானால் அதை வைத்துக் கொண்டு நாடி பார்த்தல், அருள் வாக்கு சொல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டு, இருக்கின்ற யோக சக்தியையும் இழந்து விடுகின்றார்கள். எனவே ஜீவன்களின் நல்வாழ்விற்காக எவ்வித சுயநலமும் இன்றி எந்த யோக சக்தியானது இறைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணிக்கப்படுகின்றதோ அதுவே பல்கிப் பெருகும் என்பதே நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளும் ஆன்மீகப் பாடமாகும்.

வானுயர நல்ல இறை வளந்தரும் உயரமான இறைமூர்த்திகள்!

சமீப காலங்களில் பல இடங்களில் மிகவும் உயரமாக ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வருவதைப் பார்த்திருக்கின்றீர்கள், சிதைந்திருக்கும் பழைய ஆலயக் கட்டிடங்கள், மண்டபங்கள், கோயில் விமானங்கள் எல்லாம் புனருத்தாரணம் செய்யப் பட வேண்டிய நிலையிலிருக்க இது ஏற்புடையது தானா என்று பலரும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்,
இப்பூவுலகில் இறைத் திருவுருங்கள் பல்கிப் பெருகி யாங்கனும் அவை மிளிர நாம் பரமானந்தம் அடைகின்றோம் என்பது உண்மையே! ஆனால் எத்தனையோ கோடி ஆண்டுகளாக, யுகங்களாக, சுயம்பு லிங்க மூர்த்திகளாக, சாள கிராம மூர்த்திகளாகச் சுயம்புத் திருமேனியில் இலங்குகின்ற பழைய கோயில்களை நல்முறையில் புதுப்பித்து விட்டு, எவ்வூரில் ஆலயங்கள் இல்லையோ அவ்விடத்தில் இத்தகைய உயரமான திருமூர்த்தி உருவங்களை எழுப்புவதுதான் மிகவும் சிறப்புடையதாகும். ஊரில் உள்ள பழைய கோயிலானது சிதைந்து கிடக்க, அங்கே புதுக் கோயில்களை எழுப்புவதோ அல்லது உயரமான தெய்வத் திருமூர்த்திகளை பிரதிஷ்டை செய்வதோ ஏற்புடையதாகுமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

எனவே தேவாரம், திருப்புகழ், திவ்யபிரபந்த பாடல்களைப் பெற்ற நம்முடைய பழமையான ஆலயங்களை எல்லாம் நல்முறையில் இறைத் திருப்பணி செய்து சீரமைத்துக் கும்பாபிஷேகங்களை நல்முறையில் நடத்த முயற்சி செய்யுங்கள். உயரமான ஆஞ்சநேயத் திருவுருவ வழிபாட்டில் நமக்குக் கிட்டும் பலாபலன்கள் நிச்சயமாக அதி அற்புதமானவைதான்! கலியுகத்தின் கால வர்த்தமான மாறுதல்களாக தற்போது வன்முறையும், குரோத, விரோத, பொறாமைச் செயல்களும், பகைமையும் மிகுந்து வருவதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றீர்கள். எனவே பூமியின் தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மண்டலம் முழுதும் தீய எண்ணங்கள் தாம் நிறைந்திருக்கின்றன. காற்று மண்டலத்திலுள்ள ஆன்மச் சதுரங்கள் இத்தகைய தீய எண்ணங்களை ஆக்கிரமித்துக் கொள்ளுமேயானால் பின் எவ்வாறு நாம் பரவெளியைப் புனிதப்படுத்தமுடியும்.

ஆனால் ஒரு வகையில் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், குத்து விளக்கு ஜோதிகள் மூலமாக காற்று, மண்டலத்தை நாம் புனிதப்படுத்திக் கொண்டிருக்க மறுபுறம் அனைவருடைய மனதிலும் தீய எண்ணங்கள், முறையற்ற காம எண்ணங்கள் மற்றும் சமுதாயத்தில் தீச்செயல்கள் எழுந்தால், ஒருபுறம் குப்பை போடுதலும், மறுபுறம் கூ ட்டுதலும் போலத்தான் ஆகும்.

எனவே உயரமான மூர்த்திகளுக்கான நம்முடைய கலியுக பூஜைகள், இறைவழிபாடுகள் வான் மண்டலத்தை, காற்று மண்டலத்தைப் புனிதமாக்கப் பெரிதும் உதவிடும். ஆனால் உயரமான மூர்த்திகளை எழுப்பினால் மட்டும் போதாது. பூஜைகள், குறிப்பாக சந்தன தைல, குங்கும், விபூதி, பழக் காப்புகளை அடிக்கடி இட்டு அபிஷேக ஆராதனை முறையாகச் செய்து வந்தால்தான் வான் மண்டலம் புனிதமாகும். ஜோதியைத் தழுவி இருப்பதால் விளக்கு ஒளியும், சாம்பிராணி தூபப் புகையும்தான் காற்றில் எளிய முறையில் நல்வகையில் காற்று மண்டல ஆன்மச் சதுரங்களைப் புனிதப்படுத்த முடியும் என்பதை, உணர்ந்து கொள்ளுங்கள். எனவேதான் வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும், செவ்வாய், வெள்ளிதோறும் அவரவர் எல்லையிலுள்ள ஆலயங்களில் நிறைய அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு, வாகனங்களை விரைவாகச் செலுத்துவதால் வாகனப் போக்குவரத்தால் காற்றின் ஆன்ம சதுரங்களில் ஏற்படுத்துகின்ற பாதகமான விளைவுகளுக்குத் தக்கப் பரிகாரங்களைப் பெற்றிட முடியும். இது மட்டுமல்லாமல் தங்களுடைய வாகனங்களை இலவச மருத்துவ உதவி, ஏழைகளுக்கு புனித யாத்திரைப் பயணம் போன்ற பல நற்காரியங்களுக்காகவும் இலவசமாக அன்னதானப் பொருட்கள், ஏழைகளுக்கான மருத்துவ பொருட்களை ஏற்றி செல்லுதல் போன்ற பலவிதமான சுயநலமற்ற இறைச் சமுதாயபணிகளுக்குப் பயன்படுத்தினால் தான், தாங்கள் காற்று மண்டலத்திற்கு ஏற்படுத்துகின்ற தீய விளைவுகளுக்கான பரிகாரத்தைப் ஓரளவு பெற முடியும்.

எனவே, காற்று மண்டலத்தில் ஒவ்வொருவரும் தாம் அறிந்தும் அறியாமலும் ஏற்படுத்துகின்ற சலனங்களுக்கு அவரே பொறுப்பேற்று அவற்றிற்குரித்தான பரிகார முறைகளை செய்வதற்காக தக்க சற்குருவை நாடி நல்வாழ்வைப் பெறுதல் வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஆன்மீக ரகசியங்களை இத்தொடரில் சித்தர்களின் ஞானப் பத்ர கிரந்த வாக்கியங்களாக அளிக்கின்றோம். உயர்ந்த மூர்த்திகளுக்குத் தக்க தைல, சந்தன, பழ, தான்ய, அன்னக் காப்புகளை இட்டும், தான தர்மங்கள் நிறைய செய்து பூஜித்து வந்தால் 'Pollution' துன்பங்களிலிருந்து தக்க நிவர்த்திகளைப் பெறமுடியும்.

தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது. தம்முள் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது. ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்வத்தைக் கட்டிக் காப்பதாகும். ஒரு மாங்கல்யச் சரடானது இவ்வகையில் பலவிதமான தோஷங்களைத் தம்முள் ஈர்த்து பஸ்மம் செய்வது ஆதலின் தோஷங்கள் பெருகும் போது மாங்கல்யச் சரடை மாற்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். மாங்கல்யச் சரடின் இழைகள் பிரிதல், அறுந்து போதல், எதிலேனும் மாட்டிக் கொண்டு பின்னமாதல் போன்றவை அந்த மாங்கல்யச் சரடில் ஈர்க்கப்பட்ட தோஷங்கள் மிதமிஞ்சி இருப்பதையே குறிக்கின்றன. எனவே நல்ல நாள், திதி, கிழமை பார்த்து அவ்வப்போது மாங்கல்யச் சரடை, இறைத் திருச் சந்நிதியிலோ, துளசி மாடத்தின் அருகிலோ, பூஜை அறையிலோ மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு இல்லறப் பெண்ணுக்குத் தினமும் காலையில் எழுந்தவுடன் தன் மாங்கல்யத்தைத் தரிசித்துக் கண்களில் ஒற்றிக் கொள்வதையே அதியற்புத வழிபாடாகப் பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர். ஒரு விதத்தில் பலவிதமான தோஷங்களைத் தன்னுள் ஈர்த்து பஸ்மம் செய்கின்ற அதே மாங்கல்யத்தின் காலை தரிசனமே, இல்லறப் பெண்மணிகளுக்கு பலவித தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற அரும் இறைப் பிரசாதமாகவும் பொலிகின்றது.

இல்லத்தில் பூஜையறையில் புதிய மாங்கல்யச் சரடைக் குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) வைத்துப் பூஜித்து ஆலயங்களில் அம்பிகையின் திருவடிகளில் சமர்ப்பித்துப் பூஜித்த பின்னர் மாங்கல்யச் சரடை மாற்றி அணிந்து கொள்ள வேண்டும்.

மாங்கல்யச் சரடை வைத்து பூஜிப்பதற்கான விசேஷத் தலங்களும் உண்டு. ஸ்ரீலலிதாம்பிகை, ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீகல்யாணி போன்ற நாமங்களை அம்பிகை பூண்டிருக்கும் ஆலயங்களில் மாங்கல்யச் சரடை அம்பிகைக்குச் சார்த்திப் பிரசாதமாகப் பெற்று அணிதல் சிறப்புடையது ஆகும், சென்னை தக்கோலம் அருகே உள்ள மப்பேடு சிவாயத்தில் ஸ்ரீலலிதாம்பிகையின் திருச்சந்நிதியிலும், கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீமங்களாம்பிகை திருச் சந்நிதியிலும்மாங்கல்யச் சரடு பூஜை சிறப்புடையதாகும். எத்தனையோ ஏழைப் பெண்கள் மாங்கல்யத்திற்கான குண்டுகள், பொன் மாங்கல்யம் ஏதும் அணிய வசதியின்றி வெறும் மஞ்சளைச் சரடில் கோர்த்து மாங்கல்யச் சரடாக அணிந்து வாழ்கின்றனர் என்பதை நினைவில் கொள்க!

அவரவர் குடும்ப பாரம்பரியத்திற்கேற்ப ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசோமேசர், கருகமணி, மாங்கல்ய குண்டுகள் போன்றவற்றை மாங்கல்யச் சரடில் கோர்த்து அணிந்திருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறையேனும் மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாண உற்சவம் (சித்திரை-உத்தரம்) ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்தரம் போன்ற தெய்வத் திருக்கல்யாண உற்சவங்களில் ஏழைகளுக்கு மாங்கல்யச் சாடுகள் மற்றும் பொன் மாங்கல்யம் அளித்து வந்தால் நிச்சயமாகப் பரிபூரணமான சுமங்கலித்வம் கிட்டும்.

சுமங்கலித்வம் என்றால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட மனைவியின் ஆயுள் முன் முடிவது என்ற கருத்தில் மட்டும்தான் பலரும் நினைக்கின்றார்கள். தன்னுடைய கணவனையே கண்கண்ட தெய்வமாகப் பேணுகின்ற தெய்வீகப் பண்பாடுதான் உண்மையான சுமங்தலித்வம் ஆகும், கணவனுடைய ஆரோக்யம், பொருளாதாரம், குணங்கள் எப்படி இருந்தாலும் அனைத்தையும் தமக்கு இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்ற தெய்வ வாழ்க்கை என மனப்பூர்வமாக ஏற்று, ஏழையோ, பணக்காரரோ, நடுத்தர வருமானத்தவரோ அழகானவரோ, அழகு குறைந்தவரோ, குட்டையோ, நெட்டையோ, பலசாலியோ, ஆரோக்யம் குறைந்தவரோ எவ்வகையில் இருந்தாலும் கண்ணினும் மேலாய்ப் பேணிக் கணவனை தெய்வமாக ஆராதிக்கின்ற இந்திய கலாச்சாரம்தான், தமிழ்ப் பண்பாடுதான், தீர்க்க சுமங்கலித்வத்தை இறையருளால் பெற்றுத் தரும். கணவனையே தெய்வமாகப் போற்றி வாழ்கின்ற உத்தமப் பெண் குலத்தாரும் அமைந்துள்ள திருநாடு இது.

ஜாதி, இன பேதமின்றி பொன் மாங்கல்ய தானத்தை வைராக்யச் சிந்தனையுடன் ஆற்றி வந்தால் சுமங்கலித்துவத்தின் தெய்வீக தன்மையைத் தானே நன்கு உணர்ந்திடலாம். ஏழைகளுக்கு மாங்கல்யச் சரடுகளை அளிப்பதெனில், திருச்சி லால்குடி அருகே உள்ள மணக்கால் சிவாலயத்தைத் . தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், “மனைக் காலில்” அதாவது இறைவனும் இறைவியும் “மரப்பலகைகளில்” அமர்ந்து திருமணச் சடங்குகளை ஏற்ற மணக்கால் திருத்தலமிது!

ஜாதி இன பேதமின்றி ஏழை தம்பதிகளை இச் சிவாயத்தில் “மரப்பலகையில்” அமர்வித்து, ஏழ்மையின் காரணமாக மாங்கல்யச் சரடை மட்டும் அணிந்திருக்கின்ற ஏழைப் பெண்களுக்கு பொன் மாங்கல்யம் அளித்து மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்கின்ற நற்காரியத்தை நல்லதோர் இறைப் பணியாக ஆற்றிடுங்களேன்! இத்தகைய அதியற்புத இறைத் திருப்பணிகள் தாம் சுமங்கலித்வத்தைத் தந்திடும். மேலும் ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் திருச்சி லால்குடி அருகே பூவாளூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுங்கும் சௌந்தரியை நிச்சயமாக தரிசித்து வழிபட்டாக வேண்டும், ஏனென்றால் ஃபாஷன் கருதிப் பலரும் குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்கள் “குங்குமம்” தரிக்காது Sticker ஆகிய ஒட்டுப் பொட்டுக் குங்குமத்தை அணிகின்றார்கள்! இதனால் என்ன பிரயோஜனம்? மனைவியின் நெற்றிக் குங்குமம்தான் கணவனுக்கு நீண்ட ஆயுளையும், நல் ஆரோக்யத்தையும், நல்ல ஒழுக்கத்தையும் பெற்றுத் தரும் என்று பாரம்பரியம் பாரம்பரியமாக என்னதான் பெரியோர்கள் எடுத்துச் சொன்னாலும் தற்காலத்தில் Sticker ஒட்டுப் பொட்டு அணிகின்ற மடமையை எவ்வாறுதான் போக்குவது ? கணவன்மார்கள் குங்குமத்தின் சிறப்பை எடுத்துரைத்து Sticker பொட்டு அணியும் பெண்களைத் திருத்தி நல்லுரை கூறுதல் வேண்டும்.
நல்ல குங்குமம் கிடைக்கவில்லை, நெற்றி புண் ஆகியது என்று ஏதேதோ சாக்கு போக்குச் சொல்லி Sticker ஒட்டுப் பொட்டு அணிவோர்க்குச் சாபங்கள் தான் பெருகும். இதற்குப் பரிகாரமோ, பிராயசித்தமோ கிடையாது! இதனை நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றோம்.
கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் பேணி பலவிதமான பூஜைகளை மேற்கொண்டு சுமங்கலித்வத்தை ஆராதிப்பதுதான் ஒவ்வொரு இல்லறப் பெண்மணியின் தலையாய கடமையாகும்.

இறைவனுடைய திருமண வைபவங்கள் நிறைந்த அற்புதத் தலங்கள் நிறைய உண்டு! மதுரை, திருமணஞ்சேரி, சென்னை அருகே திருவிடந்தை, திருச்சி அருகே திருமாந்துறை போன்றவை மாங்கல்யச் சரடு பூஜைக்கான இதர சிறப்பான தலங்களாகும்,

மாங்கல்யச் சரடைக் கையில் தாங்கி பஞ்சமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அம்பிகைக்கு மஞ்சள் காப்பு இட்டுப் பிரசாதமாகப் பெற்ற மஞ்சளை மாங்கல்யச் சரடிற்குப் பூசி இல்லத்தில் பூஜை செய்து மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்வதும் மகத்தான சிறப்புடையதே! ஏனெனில் உண்ணாமுலை அம்பிகையே தவமிருந்து கிரிவலம் வந்து திருஅண்ணாமலையாரை அடைந்த அற்புதத் தலம் தானே திருஅண்ணாமலை!

எனவே சுமங்கலித்வத்தை அளிக்கின்ற பூஜை முறைகள் பல உண்டு. தக்க சற்குருவை நாடி மேலும் பல விளக்கங்களைப் பெறுவீர்களாக! எவ்வாறு மாங்கல்யமானது நெஞ்சத்திற்கு ஆரமாய், எப்போதும் நெஞ்சில் மலர்ந்திருக்கின்றதோ அதே போல உள்ளத்திலும் தெய்வமாய்க் கணவனைப் போற்றி ஆராதிக்க வேண்டும் என்பதே மாங்கல்யத்தின் தெய்வீகத் தத்துவங்களில் ஒன்றாகும். மதுரையில் சித்திரை உத்திர நட்சத்திரத் திருமண உற்சவத்தில் ஸ்ரீமீனாட்சி அம்பிகை சமத ஸ்ரீசோமசுந்தரத் தெய்வத் திருமண வைபவத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றிட இறைவன் இறைவிக்கு மாங்கல்யத்தைச் சூடும் அந்த புனிதமான சுபமுகூர்த்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்மணிகள் புது மாங்கல்யச் சரடுகளை மாற்றிக் கொள்கின்ற காட்சியைக் கண்டு அனைவரும் ஆனந்தித்திடலாம்.

இந்த உற்சவத்தில் ஆங்காங்கே மாங்கல்யச் சரடுகளைப் பலரும் தானமாக அளிக்கின்ற காட்சி மனதிற்கு நிறைவைத் தருவதாகும், அடுத்த முறையேனும் நீங்களும் பங்கு கொண்டு ஏழைகளுக்கு மாங்கல்யச் சரடுகளை தானமாக அளிக்கின்ற அற்புதத் திருப்பணியை மதுரை சித்திரை உத்திரத் திருநாளில் மேற்கொள்வீர்களாக!

தண்ணீர் பஞ்சம்

தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவது ஏன்?

நாட்டில் நீர்ப் பஞ்சம் தீர்ந்து, நீர்வளம் பெருக வேண்டுமானால், ஆலயங்களில் சிதைந்து கிடக்கும் திருக்குளங்களைச் சீரமைத்து நன்முறையில் நீரைப் பாய்ச்சித் தேக்கி வருதல் வேண்டும். தீர்த்த தேவதைகளின் சாபமே நீர்ப் பஞ்சத்திற்குக் காரணமாகும். ஆலயங்களைச் சுற்றி அமைந்துள்ள கழிப்பிடங்களை அகற்றி, ஆலயத்தின் புனிதமான பரவெளியைக் கட்டிக் காத்தல் வேண்டும். கழிப்பிடங்களிலிருந்தும், கழிவு நீர்த்தாரைகளிலிருந்தும் ஆலயத் திருக்குளத்திற்குள் கழிவு நீரை சேரவிடாது தடுத்து, திருக்குள நன்னீர்த் தாரைகளை மேம்படுத்துதல் வேண்டும். மழைநீர் பொழிய அருள்பாலிப்பதற்கென அமைந்துள்ள திருத்தலங்களில் நந்தி எம்பெருமானுக்கு மிளகுக் காப்பிட்டு நீரோட்ட தேவதைகளைப் ப்ரீதி செய்தற்கான ஹோம வழிபாடுகள்/பூஜைகளை மேற்கொள்தலும் நந்தி எம்பெருமானுக்கு அடிக்கடி மிளகு (அரைத்துக் காப்பிடுதலும் சமுதாய பூஜையாக நடைபெற வேண்டும்).
ஆலயத் திருப்பணிகளில் கூட பலருக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. எந்தவித இலாப நோக்கும் இல்லாது சுயநலத்தை மறந்து தியாக மனப்பான்மையுடன் செய்யப்பட வேண்டியவையே ஆலயத் திருப்பணிகளாகும். கும்பாபிஷேகத் திருப்பணிகளோ, ஆலயத் திருக்குளச் சீரமைப்புத் திருப்பணிகளோ, எதுவாக இருந்தாலும் சரி கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து இறைக் காரியங்களிலும் லாபம் சம்பாதிக்க வேண்டும், எப்படியேனும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, தியாக நோக்கோடு பக்தியுடன், அனைவரும் பணியாற்ற வேண்டுகிறோம். ஹோம வழிபாடுகள் கூட எந்த கட்டணத்தையும் பெறாமல் நடத்துவதுதான் சிறப்புடையதாகும். வேத பாராயணம், ஹோம வழிபாடு, அபிஷேக ஆராதனைகளுக்கும் எந்த விதமானக் கட்டணமும் வசூலித்தல் கூடாது.

நம் ஆலய உழவாரத் திருப்பணிகளில் மிகவும் முக்கியமானது கோமுகம் எனப்படும் அபிஷேக நீர்த் தாரைகளைச் சுத்தம் செய்வதாகும். இன்றைக்கும் பல ஆலயங்களிலும் பாலாபிஷேகம் மற்றும் பல அபிஷேக ஆராதனை நீருடன் வருகின்ற கோமுக நீர்த்தாரை சுத்தம் செய்யாமையினால், இவற்றின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். எனவே அபிஷேக நீர்த்தாரைகள் நன்முறையில் சுத்திகரிக்கப்பட வேண்டும், எவ்வாறு உங்கள் இல்லத்தில் உள்ள கழிப்பறையும் சமையல் அறையும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகின்றனவோ, அதே போலத்தானே நம் உயிரைப் பாதுகாக்கின்ற ஆன்மச் சுடராய் ரட்சையாய் இருக்கின்ற இறைவன் வாழுகின்ற திருக்கோயிலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அந்தந்த ஊர் மக்களின் பொறுப்புதானே! இதற்காகத்தான் அக்காலத்தில் அந்தந்த ஆலயத்திற்கு உரித்தான உழவாரத் திருப்பணி குழுவினரை அமைத்து ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் ஒன்று சேர்ந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார்கள். அன்னதானத்தைவிட, வஸ்திர தானத்தை விட மிகுந்த புண்ணியச் சக்தியைக் கொண்டிருப்பது ஆலய உழவாரத் திருப்பணிதான். இதற்காகத்தான் அப்பர் ஸ்வாமிகள் பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி தமிழகத்தின் பல ஆலயங்களிலும் தம்முடைய தள்ளாத வயதிலும் கூட அற்புதமான உழவாரத் திருப்பணிகளை மேற்கொண்டு வழிகாட்டி உள்ளார்கள். எந்த ஊரில் ஆலயங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகின்றனவோ அங்கு நிச்சயம் நீர்ப்பஞ்சம் ஏற்படாது.

ஸ்ரீகாவேரியம்மன் மங்கலக்குடி

ஒருமுறை ஆலய உழவாரத் திருப்பணியைத் தக்க சற்குருவின் தலைமையில் பக்தியுடன் மேற்கொண்டாலே எத்தனையோ கோடிப் பிறப்புகளுக்கான தீவினைகள் பஸ்பமாகின்றன என்றால் எத்துணை மகத்துவத்தைக் கொண்டது ஆலய உழவாரத் திருப்பணிகள்! எனவே அனைத்து ஊர்களிலும் ஆலய உழவாரத் திருப்பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பினை அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.

எந்த அளவிற்கு ஆலயம் தூய்மைப் படுத்தப்படுகின்றதோ அந்த அளவிற்கு மழைப் பொழிவினை, இறைவளத்தைக் கண்கூடாகக் கண்டிடலாம். ஏனென்றால், வட இந்தியாவில் எத்தனையோ ஜீவ நதிகள் ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்க, மாதம் மும்மாரி பெய்து சத்தியத்தை மெய்பித்தத் தமிழ்த் திருநாடு இது. பத்தினிமார்கள் பெய் என்றால் மழை பெய்கின்ற மகத்தான தெய்வத் திருநாடு இது!

எனவே முறையற்றக் காம எண்ணங்களும், காமச் செயல்களும் பெருகுகின்றபோது பத்தினிப் பெண்களுடைய சாபங்களுக்குச் சமுதாயமே ஆளாகின்றது அல்லவா! எனவே பெண்களுக்குத் தக்கப் பாதுகாப்பு தருவதற்காக, இதற்குரித்தான பூஜைகளையும் வழிபாடுகளையும் மேற்கொண்டால், பத்தினிகளின் சாபத்திலிருந்து மீண்டு அவர்களுடைய அருள் வளத்தால் மாதம் மும்மாரி நிச்சயமாக மழை பெய்யும், கண்ணகி அம்மையின் சினத்தால் சிவந்த மதுரையைப் பற்றி நாம் அறிவோம். அந்த அளவிற்குப் பத்தினிப் பெண்களுக்கு மகத்தான தெய்வீகச் சக்தி உண்டு. எனவே முறையற்ற காமச் செயல்களும் காம எண்ணங்களும் மறைய வேண்டுமென்றால் நல்லொழுக்கத்தை உடைய கல்வி முறையும் ஆலய வழிபாடுகளும் பெருகுதல் வேண்டும்.

ஆலயங்களில் ஆறு வேளைகளிலும் முறையான பூஜைகள் நடக்குமேயானல் அதனுடைய பலன்களைக் கண் கூடாக மழைப் பொழிவின் மூலம் நாம் உய்த்துணரலாம். எனவே ஆலயங்களில் ஆறுகால பூஜைகள் நிகழ்வதற்கு அந்ததந்த ஊர்களில் உள்ள மக்களும் வசதி உள்ளவர்களும், செல்வந்தர்களும் உதவி புரிதல் வேண்டும். மதுரை, பழனி, திருப்பதி, திருத்தனி சென்று வழிபடுவதோடு அவரவர் உள்ளூரில் உள்ள காவல் தெய்வங்களையும், சிறு சிவ, வைணவ ஆலயங்களையும் நன்குப் பராமரித்தல் சிறப்புடையதாகும். இன்றைக்கும் ஒரே ஒரு வேளை பூஜை மட்டுமே நடக்கின்ற பாடல் பெற்ற தலங்கள் நிறைய இருக்கின்றன என்று காண்கையில் மனம் வேதனை அடைகின்றது. நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு ஆறுவேளை பூஜை நைவேத்யத்துடன் ஒரு குடம் நீர் ஊற்றி அபிஷேகம் செய்யவில்லை என்றால் பிறகு ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது? சற்றே சிந்தித்துப் பாருங்கள்,

உள்ளூரில் உள்ள கோயிலில் ஒரு குடம் நீர் கூட ஊற்றி அபிஷேகம் கூட செய்ய வசதிகள் இல்லாது இருக்கும்போது, பிறகு எப்படி நீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்! எனவே இறைத் திருமேனியின் மீது அபிஷேக ஆராதனைகளை வளமாகப் பக்தியுடன் செய்து கொண்டாடினால் நிச்சயமாக நீர்ப் பஞ்சத்துக்கு ஆன்மீக ரீதியாக நல்ல தீர்வைப் பெற்றிடலாம் என்பதில் ஐயம் இல்லை!

எந்தெந்த நாளில் குறித்த ஹோரையில் அபிஷேக ஆராதனைகள் செய்தால், மழைப் பொழிவு ஏற்படும் என்பதற்கான சாத்திர இலக்கணங்களை அறிந்த சத்குருமார்கள் உண்டு. இவர்களை நாடி தக்க ஆன்மீக வழிமுறைகளைப் பெற்றால் நீர் பஞ்சத்திற்குத் தக்கதோர் முடிவைப் பெற்றிடலாம்.

கீழ்நோக்கு நட்சத்திர நாட்களில் ஸ்ரீ நந்தியெம் பெருமானுக்கு நீர்க் கூட்ட ஜலதார தேவதா வழிபாடு செய்தல் வேண்டும். விசாகம், மூலம், ஆயிலயம், கார்த்திகை, பூரம், பூராடம் பூரட்டாதி, மகம், பரணி ஆகிய நட்சத்திர நாட்களில் நந்தி எம்பெருமானுக்கு நீர்கட்டி அந்தந்த நட்சத்திர தேவதைகளுக்கு ஏற்றவாறான நீரில் தேவ சக்தியைக் கூட்ட வேண்டும், உதாரணமாக மேஷ ராசிக்கான நட்சத்திரங்களில் அந்தந்த இடத்துக்கு உரித்தான கற்பாளை நீர், கிணற்று நீர், ஓடும் ஆற்றுநீர், வடக்குப்புற நீர், புற்றுமண் நீர் என்றவாறாக அந்தந்த நட்சத்திரத்திற்கான நீர் கொண்டு ஸ்ரீ நந்தி எமபெருமானுக்கு நீர் அபிஷேகம் செய்து வழிபடுதலால் மழை வளத்தைப் பெற்றிடலாம். நீர்க்கூட்டு பூஜை முறைகளைத் தக்க சற்குருமார்களிடம் அறிந்து தெளிந்து கடைப்பிடித்து பயன் பெறவும்.

சில அபூர்வமான ஜலதேவதா பிரசாத சாங்கியமும் உண்டு. உதாரணமாக முதல் முதலாக ஆற்றில் நீர் வரும்போது அந்நீரை எடுத்து வைத்து குறித்த நாள் கிழமை, நட்சத்திர ஹோரையில் பூஜைக்காகப் பயன்படுத்துதல் அபரிமிதமானப் பலன்களைத் தரும்.

உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் காவிரியில் நீர் திறந்து விடும்போது முதன்முதலாக ஆற்றில் நீர் அடித்துக் கொண்டு வருகின்றது அல்லவா! அதனுடைய தரிசனமே மிகவும் சிறப்புடையது என சித்புஷர்களின் கிரந்தங்கள் உரைக்கின்றன. இது சுபசகுனமாகவும் கொள்ளப்படுகின்றது. காரிய சித்திக்குப் பயன்படுகின்ற அதி அற்புத தரிசனம் இது. எனவே இந்த நீரைப் பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டு, ஜலதேவதா பூஜைக்குப் பயன்படுத்தினால் எளிதில் காரிய சித்தியைப் பெற்றிடலாம். குறிப்பாக பிரிந்து வாழ்கின்ற தம்பதியினர் ஒன்று சேர்வர்.

பொதுவாக வருண பகவானுக்குரிய பூஜைகளில் முதலில் ஆற்று நீர் முதல் ஜல தரிசனம் மிகவும் சக்தியுடைதாக விளங்குகின்றது. இது மட்டுமல்லாமல் வெயில் அடிக்கும்போதே சில சமயம் மழை பெய்யும். சூரிய பகவான் இருக்கின்றபோதே, மழை பெய்தலோ அல்லது தூறுதலோ அந்த மழைத் துளிக்கு அபரிதமான தெய்வீகக் சக்தியைத் தந்தருள்கின்றது. எனவே இந்த நீரையும் கூடப் பிடித்து வைத்துக்கொண்டு, ஜலதேவதா பூஜைகளுக்குப் பயன்படுத்தினால் மேலும் சிறப்புடையதாகும். இந்த சூரிய வெளிச்ச மழைக்கு வருண பாஸ்கர லக்னம் என்று பெயர்.

இவ்வாறாக, புண்ணிய சக்தி மிகுந்த, தெய்வீக அருள் மிகுந்த நீரைப் பெறும் வழிமுறைகளைத் தக்க சற்குருமார்களிடம் கேட்டுப் பெறுதல் வேண்டும்.

மேலும் அரசு, ஆல், பலா போன்ற தல விருட்ச இலைகளிலிருந்து வீழ்கின்ற மழைத் துளிகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். புதன் கிழமையன்று. மழை பொழிந்து மாமர இலைகள் மூலமாக நம் உடலில் அந்த மழைத் துளிகள் சேருமேயானால் பல அரிய சித்திகளைப் பெற்றிடலாம். குறிப்பாக வேலையை இழந்தோர் மீண்டும் நல்ல பணியைப் பெற்றிட இந்த "மாஞ்சுடர்” தீர்த்த பூஜை உதவும். இதற்காகத்தான் இன்றைக்கும் இல்லறப் பூஜைகளில் கும்பபூஜை முடிந்தவுடன் கும்பத்திலிருந்து மாவிலைகளால் நீரைத் தெளிக்கின்ற நற்பழக்கம் நிலவி வருகின்றது. மாவிலைக்கு ஜலத்தில் உள்ள தெய்வீகச் சக்திகளைத் திரட்டி ஆசியாக அளிக்கின்ற அற்புதச் சக்தி உண்டு. காதம்பரி லோகத்தைச் சேர்ந்த பல தேவதா மூர்த்திகள் மாவிலையில் உறைவதைத்தான் விரும்புகிறார்கள், அதற்காகத்தான் கிரஹப்பிரவேசம், தைப் பொங்கல், திருமணம் போன்ற விசேஷமான நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுகின்றோம், “துவார பாலக தனம்” என்று போற்றப்படுகின்ற மாவிலைக்கு நம்முடைய பிரார்த்தனைகளை கிரஹித்து ஆதிசக்தியின் ஸ்ரீசக்கர லோகங்களுக்கு அனுப்புகின்ற அபரிதமான தெய்வீகச் சக்தி உண்டு.

அதனால்தான் அருள்வாக்கு கூறுபவர்களும் கூட மாவிலைத் தழைகளால் கூடு அமைத்து அவற்றைப் பார்த்துக் குறி சொல்கின்ற வழக்கம்உண்டு. எனவே, மழைப் பொழிவிற்கு வருண பகவானுக்குரித்தான பூஜைகளில் ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு மாவிலைத் தோரணங்களால் தேகம் முழுதும் மாலை அணிவித்து வழிபடுதல் சிறந்த மழைப் பொழிவினைப் பெற்றுத் தருவதாகும்.

எல்லாவற்றையும்விட நீர்ப் பஞ்சம் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் தற்காலத்தில் நீரைப் பலரும் விற்பதாகும். இறைவனால் இயற்கைப் பொதுச் சொத்தாக அளிக்கப்பட்டுள்ள நீரை எவரும் விற்றல் கூடாது. ஆனால் தற்காலத்தில் குடிநீர் லாரிகளின் போக்குவரத்தைப் பற்றி நீங்களே அறிவீர்கள் சாலை முழுவதும் நீரை இறைத்துக் கொண்டு, நன்னீரை விரயம் செய்து கொண்டு செல்கின்ற காட்சியைத்தான் நாம் காணுகின்றோம்.

நீரைக் காசுக்கு விற்பதா? இதைவிடக் கேவலமான பணியும் கலியுகத்தில் உண்டா ? நம் மூதாதையர்கள் யாவரும் நீர் தானம், மோர் தானம், பழரச தானம் என்று அன்னதானத்தில் சிறந்தவர்களாக இருக்க, அவருடைய சந்ததியராக வந்த நாமோ இந்தக் கலியுகத்தில் நீரை விற்றும் வாங்கியும்தானே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இனியேனும் குடிநீரை லாரி லாரியாக விற்பவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து தங்களுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக இதுவரை எத்துணை லாரி குடி நீரை விற்றிருக்கின்றார்களோ, அந்த அளவு நீரையாவது தானமாக திருஅண்ணாமலை, திருத்தணி, திருப்பதி போன்ற அற்புதமானத் திருத்தலங்களில் நீர் தானம், நீர் மோர் தானம், பழரச தானமாகச் செய்து தங்களுடைய தவறுகளுக்குத் தக்கப் பிராயச்சித்தத்தை தேடிக் கொள்வார்களாக! ஆனால் பிராயச்சித்தத்தைச் செய்து முடித்தபின், மீண்டும் நீரை விற்றல் கூடாது. கலியுகத்தில் நீரை விற்பதால்தான் நீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது என சித்தபுஷர்களின் கிரந்தங்கள் அறிவிக்கின்றன.

Mineral Water என்று சொல்லப்படுகின்ற முறையில் நீரை விற்றல் கூட தவறுதான். இவ்வாறாக பலவிதமான பெருந் தவறுகளால்தான் மனித சமுதாயமே தனக்கு நீர்ப்பஞ்சத்தை ஒரு நோயாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. கலியுகத்தில் நிலவுகின்ற தீவினைகளையும் வன்முறைகளையும் கருத்தில் கொண்டுதான் திருஆனைக்கோயிலில் ஜலகண்டேஸ்வரராக விளங்குகின்ற லிங்கப் பெருமானுக்கும் கூட நீர்ச்சுரப்பு குறைந்து விட்டது என்பதும் வேதனைக்குரியதுதான். ஒரு காலத்தில் திருவானைக்காவல் அர்த்த மண்டபத்தில் நின்றாலே ஜில்லென்று நிலையில் தெய்வப் பெருஞ்சிறப்பு நிகழ்ந்த நிலையில் இறைவனே கலியுகத்தின் அக்கிரம் நிலமையைக் கண்டு மனவேதனை கொண்டு நீர்ச்சுரப்பையே தணித்துக் கொண்டு விட்டாரோ!

நீர்ப்பஞ்சம் ஏற்படுவதற்கு மற்றும் ஒரு முக்கியமான காரணம் தற்காலத்தில் இல்லறப் பெண்கள் குழந்தைகளுக்கு அமிர்தமாக விளங்குகின்ற தாய்ப்பால் கொடுத்தால் எங்கே தன் அழகும், ஆரோக்கியமும் ஆயுளும் குலைந்து விடுமோ என்ற அச்சத்தில் தாய்ப்பாலை மரத்துவிடச் செய்வதால்தான்! செயற்கையான முறையால் தாய்ப்பாலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. இதுவும் ஒரு பெருந்தீவினையாக மாறுகிறது. என்பதை இனியேனும் உணர்ந்து கொள்வார்களாக!

அடுத்தப்படியாக தாயைப் போன்ற தக்க அன்னையாக குழந்தைகளுக்கும், நமக்கும் விளங்குகின்ற பசுக்களுக்கு முறையாக உணவும் நீரும் அளிக்காததும் கலியுகத்தின் நீர்ப் பஞ்சத்திற்குப் பெருங் காரணமாகும். புல், பிண்ணாக்கு, தவிடு போன்ற சத்து நிறைந்த உணவுப் பொருட்களைப் பசுக்களுக்கு அளித்த காலம் போய், நகரங்களில் வால் போஸ்டர்களையும், பேப்பர்களையும் தின்று வாழுகின்ற பசுக்களைத் தான் நாம் காண்கின்றோம். என்னே கொடுமை இது. மேலும் பசுவின் பாலைப் பெருக்குகின்றேன் என்று சொல்லி இராசாயன மருந்தை, ஊசி மூலமாகச் செலுத்திப் பாலைக் கறக்கின்ற கொடுமையையும் நாம் கலியுகத்தில்தான் காண்கின்றோம்.

கன்றை இழந்த பசுவிடமிருந்து ஒருபோதும் பாலைக் கறத்தல் கூடாது. இதெல்லாம் கொடிய பாவச் செயல்களாகும். அப்படியே கறந்தாலும் அதை பூமாதேவிக்கு விட்டுவிட வேண்டும். கன்று ஈனுவது, நின்ற மறவைப் பசுவை உயிரோடு இறைச்சி, தோலுக்காக அனுப்புகின்ற கொடிய செயலும், கன்றை இழந்த பசுவின் முன் வைக்கோலால் ஆன கன்றுக் குட்டியை வைத்து ஏமாற்றிப் பாலைக் கறக்கின்ற கொடுமையையும் நாம் கலியுகத்தில்தான் காண்கின்றோம்.

அந்தப் பசுவிற்கா தெரியாது இந்த மனிதகுலம் நம்மை ஏமாற்றுகின்றது என்று? மிகுந்த வேதனையுடனிருக்கும் அப்பசு சாபமிட்டால் என்ன ஆகும் தெரியுமா? குலமே நாசமாகி விடும். பசுவின் சாபமானது பித்ருவின் சாபத்தைவிட வேகமாகப் பலனளிக்கும். பசுவின் சாபத்திற்கு ஆட்பட்டு விட்டால், அதனின்று மீள்வது இயலவே இயலாது. அடுத்தடுத்த கோடிக் கணக்காண பிறவிகளிலும் பிசாசுகளாக வதைபட்டு வாடுகின்ற பிறவிகள் தாம் மிஞ்சும்.

மழைபொழிவு பூஜையாக நூற்றெட்டு பசுக்களைக் கன்றுகளுடன் வைத்து பக்தியுடன் பூஜித்தாலே போதுமே பூமாதேவியே மனங்குளிர்ந்திட, பூமி நன்றாக நனைந்து நீர் சுரக்கும் அளவிற்குக் கனிந்த மழை பெய்திடும்.

எனவே இவ்வாறாக மனித குலமே பல விதமானத் தீவினைகளுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டு தண்ணீர்ப் பஞ்சத்திற்கு வழிவகுத்து விட்டது. எனவே, தக்க சற்குருவை நாடி இவற்றிற்கான ஆன்மீக நிவர்த்தி முறைகளையும் பிராயச்சித்த வழி முறைகளையும் பெற்று, தக்க ஜலதேவதா வழிபாடுகளை மேற்கொண்டால்தான் நிச்சயமாக பழந்தமிழ் நாடு போல், நம் மூதாதையர் காலத்தில் விளங்கியது போல மாதம் மும்மாரி பெய்கின்ற உத்தம தெய்வத் தமிழ் திருநாட்டை நாம் பெற்றிடலாம் என்பது உறுதி!

அமிர்த தாரைகள்

மனிதன் எத்தனையோ விதமான பாவச் செயல்களைப் புரிகின்றான். பிறரை ஏமாற்றுதல், சொத்துக்களை அபகரித்தல், முறையற்றக் காமச் செயல்கள், பொய் பேசுதல், அலுவலகத்தில் பிறரை வஞ்சித்தல், லஞ்சம் பெறுதல், அலுவலகச் சொத்தை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்தல், கோயில் இடங்களைக் குறைந்த வாடகைக்கு எடுத்துக் கொண்டு வாடகை அல்லது குத்தகை தராமல் ஏமாற்றுதல், அதிக விலைக்குப் பொருட்களை விற்றல், கலப்படம் செய்தல் இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் செய்கின்ற அதர்மச் செயல்கள் தான் எத்தனை, எத்தனை! ஆனால் தான் செய்த துன்பங்களுக்கான விளைவுகளை அவன் ஓய்வான காலத்தில் பல வியாதிகளாகக் குடும்பத் துன்பங்களை அனுபவிக்கும் போதுதான், மனம் திருந்தி வாழ முற்படுகின்றான். ஆனால் உடலோ, ஆரோக்கியமோ அப்போது அதற்கு இடம் கொடுப்பதில்லை, நிறையப் பணமும், நேரமும் இருந்தாலும் பிராயச்சித்தப் பரிகாரங்கள் செய்வதற்காக உடலும் ஒத்துழைப்பு தருவதில்லை .

இதற்காகத்தான் சிறு வயதிலேயே, “இரையோடு, இறையையும் தேடு” என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். பொதுவாகத் தன்னுடைய பாவச் செயல்களை நினைத்து நினைத்து வருந்துவோர், புண்ணிய நதி தேவதைகள் அருள்பாலிக்கின்ற ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசித்து அபிஷேக ஆராதனைகளுடன் சந்தன அபிஷேகம், தைல அபிஷேகம், பால் அபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்று பலவிதமான அபிஷேக ஆராதனைகளால், புண்ணிய நதி தேவதைகளை வழிபட்டு, பாவங்களைக் களையக் கூடிய தெய்வீக சக்தி நிறைந்த உணவுப் பண்டங்களான எள், பிரண்டை, வாழைக்காய், புடலங்காய், அதிரசம் போன்ற உணவுப் பண்டங்களைப் படைத்து, ஏழைகளுக்கு அதிக அளவில் தானம் செய்து வந்தால்தான் இப்பாவங்களைக் களைவதற்கானப் பிராயச்சித்த நல்வழி முறைகளைப் பெற்றிடலாம். ஆனால் இவற்றிற்கும் வயதான காலத்திலாவது தக்க சற்குருவை நாடினால்தான் பரிபூரணமான பிராயச்சித்தப் பலன்களைப் பெற்றிடலாம்.

மேலும் எத்தனையோ பாவச் செயல்களைப் பற்றித் தன் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ கூட கூற இயலாத அளவிற்கு அதர்மச் செயல்கள் புரிந்தவர்கள் ஏராளம் ! ஏராளம் ! ஆனால் இனியேனும் அத்தவறுகளை உணர்ந்து தக்கப் பரிகார வழிமுறைகளைத் தேடுவதுதானே இப்பிறவி எடுத்ததின் தலைப் பொருளாகும், மேலும் சித்தர்கள் அருளியுள்ள வாழ்க்கை நியதிகளின்படி, எவருமே எந்த வாழ்க்கை, ரகசியத்தையும் யாரேனும் ஒருவரிடமாவது ஒளிவு மறைவு இன்றி தெரிவித்துத்தான் செல்ல வேண்டும். மறைக்கப்பட்ட இரகசியங்களோடு ஒருவர் மரணம் அடைந்தால் அவை வெளியாகும் வரை அவருக்குப் பிறவித் தளைகள் பெருகிக் கொண்டே செல்லும். இதற்காகத்தான் அக்காலத்தில் நந்தி எம்பெருமானின் திருக்காதுகளில் தமக்கு ஏற்பட்ட துர்கனவை எடுத்துரைத்து , ஸ்வாமியிடமே தக்கப் பிராயச்சித்த வழிமுறைகளைக் கேட்டு வேண்டிப் பெற்றார்கள். எனவே உங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் இரகசியங்கள் இருப்பின், யாரேனும் ஒருவரிடமாவது உற்றமோ, சுற்றமோ, நண்பரோ, அறிந்தவரோ, அறியாதவரோ எவரிடமாவது ஒப்புவித்தால்தான் மரணத் தளைகளின் துன்பங்கள் ஓரளவேனும் நீங்கும். அல்லது இந்த இரகசியத் தளைகளே தம்முடைய சந்ததியரின் தர்ப்பணச் சக்தியைப் பெற இயலாமல் செய்து விடும். இன்றைக்கும் பல குடும்பங்களில் தர்ப்பணத்தைப் பற்றி பலரும் அறியாதிருப்பதற்கும் பெற்ற பிள்ளைகளே தர்ப்பணத்தைச் செய்யாமல் இருப்பதற்கு மூலகாரணம் பலரும் தன்னுடைய இரகசியங்களை எடுத்துரைக்காமல் அப்படியே விட்டுவிட்டு மரணம் அடைந்ததுதான். எனவே, வயதான காலத்திலேனும் புண்ய நதி தேவதைகள் எழுந்தருளியுள்ள தலங்களில் குறிப்பாக வெள்ளி, சனிக் கிழமைகளில் புண்ய நதி தேவதா மூர்த்திகளுக்குத் தைலக்காப்பு இட்டு, ஏழைகளுக்கு ஆடைகள், (எண்ணெய் திரியுடன்) விளக்குகள், மாங்கல்யச் சரடு/பொன் மாங்கல்யம்தனை தானமாக அளித்து வாருங்கள் இறையருளால் நல்வழி காட்டப் பெறுவீர்கள்.

காமதேனு பசுமடிக் காம்புச் சங்கு

அமாவாசை, சூரிய, சந்திர கிரஹணம், உத்தராயணம், தட்சிணாயணம் போன்ற தர்ப்பண நாட்களில் குறிப்பிட்ட சில விசேஷமான சங்குகளில் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி தீர்த்தத்தை ஊற்றிக் கைகளில் தாரையாக வார்த்துத் தர்ப்பணம் அளித்தலால் தர்ப்பண பலன்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. இவற்றுள் ஒன்றே காமதேனு பசுமடிக் காம்புச் சங்காகும்! திருக்கயிலாயத்திலும், ஸ்ரீவைகுண்டத்திலும் ஸ்ரீகாமதேனு ஆற்றுகின்ற பாலாபிஷேகத்தைக் காணும் பேறு பெற்ற உத்தம ஜீவன்கள் காமதேனுப் பசுமடிக் காம்புச் சங்குகளாய் உற்பவித்துப் பல பூஜைகளிலும் பங்கு கொண்டு பிரபஞ்ச ஜீவன்களுக்கு அதியற்புதப் பித்ரு சக்தியைப் பெற்றுத் தருகின்றன. இத்தகைய அபூர்வ சங்குகள் சென்னை ஸ்ரீ அகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும். எனவே தர்ப்பண அர்க்யங்களையும் தாரைகளையும் சங்குகளில் ஏந்திச் செய்து பெரும்பலன்களை அடைவீர்களாக!

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம், செங்கல்பட்டு அருகிலுள்ள உத்திரமேரூர் பெருமாள் ஆலயத்திலும் கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ய நதி தேவதா மூர்த்திகள் அருள்பாலிக்கின்றார்கள். பெறுதற்கரிய தரிசனங்கள் இவை.

திருஷ்டி கழித்தல்:

தற்காலத்தில் பூசனிக்காய் கொண்டும், பசுவிரட்டியில் அக்னி வைத்தும் திருஷ்டி கழித்தலில், நடுத்தெருவில் பூசனிக் காயையும், நெருப்பையும் கொட்டி விடுகின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும். திருஷ்டி கழிக்கின்றேன் என்று சொல்லி நடுத்தெருவில் பூசனிக்காயை உடைத்து, திருஷ்டி கழித்த நெருப்பையும் கொட்டி பலரையும் இன்னல்களுக்கு ஆளாக்கினால் கூடுதல் கர்மவினைகள் தானே வந்து சேரும், எனவே திருஷ்டி கழிப்பது என்பதில் பூசனிக்காயை நடுத்தெருவில் உடைக்காமல் வீதியில் ஒரு ஓரத்தில் வைத்து உடைத்திட வேண்டும். அதுபோல பசுவிரட்டியில் அக்னி வைத்து திருஷ்டி கழிக்கும் போதும் நெருப்பினை வீதி ஓரத்தில் தான் வைத்து விடவேண்டுமே தவிர நடுத்தெருவில் வைத்திடக் கூடாது.

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும்தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/வழிபாடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான தீவினைகளும் சேரா வண்ணந்தடுத்து சாந்தமான நித்ய புதிய வாழ்வைப் பெற்றிடலாம்.

1-7-2000 - கூண்டில் அடைபட்டு வாடும் காதல் பறவை எனப்படும் LoveBirdsகளை கூண்டினின்று விடுவித்து வான்வெளியில் உல்லாசமாக இருக்கச் செய்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும், திருமணம் நிச்சயமாகும்.

2-7-2000 - தென்னைமரம் நட்டு வளர்த்த மரத்தின் முதல் தேங்காயைப் பறிக்கும் நாளிது. முதல் தேங்காயுடன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து அத்தேங்காயை கர்ப்பிணிப் பெண்ணுக்கு தானமளித்தலால் சகோதர, சகோதரிகளால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும்.

3-7-2000 - இன்று கெளபீன(கோவணம்) தானம் அடிவயிறு சம்பந்த நோயினின்று மீளலாம்.

4-7-2000 - குதிரைக்குக் கொள் அளித்தல் - தேவையற்ற செலவினின்று விடுதலை.

5-7-2000 - இன்று எருமைகளைக் குளிப்பாட்டி வயிறார உணவிட்டு கொம்புகளுக்கு மஞ்சள் தடவிப் பொட்டிட்டு வணங்குதலால் உயிருக்கு போராடிக் கொண்டிருப்போரின் துன்பத்தின் வேகம்குறையும்.

6-7-2000 - இன்று பாலகுமாரன், விஜயகுமார், என்ற “குமார்” பெயரை உடையோர்க்கு ஆடைதானம்,வஸ்திரதானம் செய்து அவர் தம் தேவைக்கேற்ப உதவி செய்தலால் வியாபாரிகள் தொழிலில் லாபமடைவர்.

7-7-2000 - இன்று நடராஜன், அம்பலவாணன், சிலம் பேசன், சிதம்பரம் போன்ற சிவப் பெயரை உடையவர்களுக்குத் தேவையான உதவி செய்தலால் வியாபாரத்தில் ஏற்படும் போட்டியில் நன்முறையில் வெற்றி கொள்ளலாம்- வியாபார அபிவிருத்தி நாள்.

8-7-2000 - இன்று மலைவாழ் இனத்தவருக்குத் தேவையான உதவி செய்வதால் மனம் பேரமைதி பெறும்.

9-7-2000 - வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்கு தேவையான உதவி செய்வதால் பணிப் பெண்களால் வரும் துன்பங்கள் விலகும்.

10-7-2000 -இன்று தூயபருத்தி நூல் ஆடையணிந்து பருத்தி நெசவாளிகளுக்கு உணவு, உடை அளித்தலால் தீப்புண்ணால் வரும் வேதனை தீரும்.

11-7-2000 - இன்று வெள்ளி மெட்டி தானம். கணவன், மனைவியிடையே ஒற்றுமை மேம்படும்.

12-7-2000 - இன்று பசுக்களுக்குத் தேவையான உணவளித்து கோபூஜை செய்வதால், நல்லதொரு வரன் அமையும்.

13-7-2000 - காதுகளில் கடுக்கன்கள் இல்லாது வேதம் ஓதுவோர்க்குக் கடுக்கன்களை தானம் அளித்தலால் எதிர்பாராத நற்செய்தி கிட்டும்.

14-7-2000 - இன்று அனாதைப் பெண்கள் வாழும் அனாதை இல்லத்திற்குச் சென்று உணவிட்டு வஸ்திரதானம் செய்வதால் சொத்துக்களுக்குப் போட்டி போடுபவர்களால் வரும் துன்பங்கள் தீரும்.

15-7-2000 - இன்று இலவசமாக வைத்தியம் செய்வதால் டாக்டர்களுக்கு வாழ்வில் நல்லமாற்றம் கிட்டும்.

16-7-2000 -இன்று விரதமிருந்து கடல் ஸ்நானம், நதி நீராடல், மூலமந்திர ஜபங்கள் - பலவித அனுக்கிரஹங்களைப் பெற்றுத் தரும்.

17-7-2000 - இன்று தாய் தந்தையை விட்டு கோபத்தால் வெளியேறியவர்கள் அவர்களைச் சந்தித்து உறவை மீண்டும் புதுப்பிக்க நல்ல நாளாகும்.

18-7-2000 - உண்மையாகக் காதல் கொண்டுள்ளோர் இன்று எக்காரணம் கொண்டும் அளவின்றிப் பேசக்கூடாது. நாய்களுக்குப் பொறை, பிஸ்கட் அளித்தலால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் தீரும்.

19-7-2000 - கல்லூரி மாணவர்கள் தவறான வழியில் செல்லும் நாளிது கவனம் தேவை.

20-7-20000 -பள்ளி செல்லும் பெண்கள் தாய், தந்தையருக்குத் தெரியாமல் தவறு செய்யும் நாளிது. கவனம் தேவை.

21-7-2000 - 1 வயது முதல் 5 வயது சிறு குழந்தைகளைக் கீழே தள்ளி விட சந்தர்ப்பமுண்டு. தாய்,  தந்தையர் குழந்தைகளை கவனமுடன் பேண வேண்டிய  நாளிது.

22-7-2000 - திருமணமான அக்காவுடன், திருமணமாகாத தங்கை சண்டையிட வாய்ப்புள்ள நாள். மன ஒற்றுமையுடன் இருத்தல் நலம்.

23-7-2000- அண்ணனையோ, தம்பியையோ பெண்கள் தாய் தந்தையரிடம் கோள் சொல்லும் நாளிது கவனம் தேவை

24-7-2000 -இன்று மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களும், மருந்து வியாபாரிகளும் புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கீரை உணவு தானம் சிறப்பானது.

25-7-2000 - இன்று வீடுகட்டுவோர், இன்ஜினியர்கள், புது வரைபடம், பூமி பூஜை முதலியன  செய்யக் கூடாது.

26-7-2000 - வயதான வேதியரையும், ஓதுவார்களையும் கவனிக்க வேண்டிய நாளிது.

27-7-2000 - இன்று அநாவசியமாக முடிவெட்டுதலால் கலகம் உண்டாகும்.

28-7-2000 - இன்று காளைகளுக்கு வயிறார உணவிடுதலால் அறக்கடவுளின் ஆசி பெறலாம்.

29-7-2000 - இன்று பாலைக் கறக்காமல் கன்றுகளுக்கு முழுநாளும் பால்விட வேண்டும். இன்று பால் கறந்து விற்றால் ஆபத்து ஏற்படும்.

30-7-2000 - இன்று ஏழை மாணவர்களுக்குப் பள்ளிக்குப் புத்தகம் கொண்டு செல்லும் புத்தகப் பைகளை தானமளித்தலால் குடும்பத்தில் பணம் சேரும்.

31-7-2000 - மேற்குப் பார்த்த சமயலறை கொண்டவர்கள், மேற்கு நோக்கியுள்ள சிவன் (or) பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்வதால் குடும்பத்தில் உணவுத் தட்டுப்பாடு வராது.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam