விண்ணுலகம் உயர்ந்ததா, மண்ணுலகம் உயர்ந்ததா ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வீட்டில் தெய்வீக ஒலிகள்

வீட்டில் கேட்கப்பட வேண்டிய தெய்வீக ஒலிகள்

உலகத்தின் தோற்றம் ஒலியில்தான்! சாந்த தேவதைகளும் ஒலியில்தான் உறைகின்றன வீட்டில் கேட்கப்பட வேண்டிய தெய்வீக ஒலிகள் பற்பல!

பரம்பொருளிலிருந்து இவ்வுலகம் தோன்றியது. அசையாமல் நின்ற சிவப் பரம்பொருள் சற்றே அசைந்தபோது இயக்கத்திற்கு மூலாதாரமான ஓம் என்ற பீஜாட்சரம் தோன்றியது. ஓம் என்னும் பிரணவ ஒலிகளால் தோன்றியதே இவ்வுலகமும் அதில் உறையும் உயிர்களும், எனவே அனைத்திற்கும் மூலமாக ஆதியாக விளங்குவது ஒலியே.

சாந்தம் அளிக்கும் சாந்தி தேவதைகள்

அனைவரின் வீடுகளிலும் சாந்தி தேவதைகள் என்ற அபூர்வமான தேவதைகள் வசிக்கின்றன. இனிமையான தேவ ஒலிகளை இந்த சாந்த தேவதைகள் கேட்டு அவ்விடத்தில் தங்குகின்றன, சாந்த தேவதைகளுக்குப் பிரியமில்லாத கடூர ஒலிகளைக் கேட்க நேர்ந்தால் அத்தேவதைகள் அங்கிருந்து வெளியேறுகின்றன. சாந்த தேவதைகள் உறையும் இடங்களில் தான் சாந்தமும் அமைதியும் பரிபூரணமாகக் குடிகொண்டிருக்கும், சண்டையோ சச்சரவுகளோ அவ்விடங்களில் ஏற்படுவதில்லை, எனவே சாந்த தேவதைகள் விரும்பி வசிக்கும் இனிமையான சூழ்நிலையை வீட்டில் எவ்வாறு உருவாக்குவது?

ஸ்ரீதாயுமான ஒலிவிடங்க
தரிசனம் மலைக்கோட்டை

இசைக்கு மூலமாக இருப்பது சப்த ஸ்வரங்கள், ச, ரி, க, ம, ப, த, நி என்ற இந்த ஏழு ஸ்வரங்கள் முறையாக ஒலிக்கப்படும்போது அவை மனதிற்கினிய இசையாக உருவெடுக்கின்றன. எனவே எல்லா இசைப்பாடல்களும் இசைக் கருவிகளும் தெய்வீக ஒலிகளை உண்டாக்குகின்றன. அனைவரும் தத்தம் வீடுகளில் வீணை, தம்புரா, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், மிருதங்கம், தபலா போன்ற இசைக்கருவிகளில் பலவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இசைக் கருவிகளில் தேர்ச்சி பெறாதவர்களாய் இருந்தாலும் தம் குழந்தைகளுக்கு இசைக்  கருவிகளில் பயிற்சி தரலாம்.

தெய்வீக ஒலிகளில் முதன்மையானது வேத கோஷமே. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற ஒளவை மூதாட்டியின் வாக்கை நினைவிற் கொண்டு அனைவரும் முறையாக வேதம் ஓதுதல் வேண்டும். வேதம் அறியாதோர் தேவார, திருவாசகப் பாடல்களை இனிமையான ராகங்களில் ஓதி மகிழலாம். மேலும் குடும்பத்துடன் ஜால்ரா, தபலா, கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளுடன் எளிய பஜனை, நாம சங்கீர்த்தனம் செய்வதும் சாந்தி தேவதைகளுக்கு மிகவும் ப்ரீதி அளிக்கக் கூடியது. சகஸ்ரநாமம் (ஆயிரம் போற்றிகள்), அஷ்டோத்திரம் போன்றவைகளை இனிமையாக ஓதுவதாலும் சிறந்த தேவ ஒலிகள் வீட்டில் உருவாகின்றன.

மணி ஓசை கேட்போமா? எல்லோர் வீட்டிலும் தினமும் மூன்று வேளையும் பூஜை மணி ஒலி கட்டாயம் ஒலித்தே ஆக வேண்டும். நாம் உண்ணும் பொருட்கள், அருந்தும் பானம் எதுவாக இருந்தாலும் அதை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து மணி ஒலித்து உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பழக்கத்தால் நிதமும் குறைந்தது 10, 12 தடவைகள் மணி ஒலிக்க வேண்டிய நன்னிலை உருவாகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்ரீ அன்னபூரணி தோத்திரத்தை ஓதிய வண்ணமே ஐந்து நிமிடமாவது மணி ஒலித்து நைவேத்தியம் செய்தால் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வீட்டில் மணி ஒலி கேட்கும் அரிய தெய்வீக சந்தர்ப்பம் கிட்டுகிறது. மணியிலிருந்து ஓம் என்னும் பீஜாட்சர ஒலி அலைகள் தோன்றுவதால் நம் வீட்டில் மட்டுமல்லாது அக்கம்பக்கத்தில் அமைதியையும் சாந்தத்தையும் இது ஏற்படுத்துகின்றது.

சதாஸ்து தேவதைகளும், கந்தர்வ தேவதை களும் வானில் எந்நேரமும் சஞ்சரித்த வண்ணம் இருக்கின்றனர். இறை நாமங்களையும், இசைக் கருவிகளையும் ஒலித்தோமானால் அதனால் மகிழும் இத்தேவதைகள் கீழிறங்கி தங்கள் அருளாசியை வழங்கிச் செல்கின்றனர். அவர்களின் அருளாசி நமது இல்லத்தை மேலும் புனிதமாக்குகின்றன. அமைதியை அள்ளித் தெளிக்கின்றன.
அனைராலும் இசையை முறையாகக் கற்றுக் கொள்வது சாத்தியம் இல்லையல்லவா?மனமிருந்தாலும் நேரம், வயது போன்ற பல் வேறு காரணங்களால் இசைப் பயிற்சி கடினமான ஒரு துறையாக அமைய வாய்ப்புண்டு, ஆனால் சப்த ஸ் வர ஒலி தேவதைகளின் அருளாசியைப் பெறும் எளிய வழிபாடுகளும் உண்டு.

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
லால்குடி

சப்தரிஷிகள் லால்குடி

உலகின் அனைத்து ஒலிகளும் எம்பெருமானின் உடுக்கை, டமருகத்திலிருந்தே தோன்றின, இசைக்காக உருவகித்து வந்த பிரான் திருத்தவத்துறையில் (லால்குடி, திருச்சி) வீணா தட்சிணா மூர்த்தியாக அருளாட்சி புரிகின்றார். முறையாக இவரை வணங்கி தேனபிஷேகம் செய்து இங்குள்ள சப்த ரிஷிகளான அத்திரி, பிருகு, புலத்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கிரசர், மரீசி ஆகியோரிடம் பிரார்த்தனை செய்தால் சப்த ஸ்வரதேவதைகளின் ஆசியை எளிதாகப் பெறலாம்.

சப்த ஸ்வர தேவதைகளின் சாப விமோசனத்திற்கு வழிவகுத்த சப்த ஒலி விடங்க தாயுமான முக தரிசனத்தைப் பெறுவதாலும், சப்த ஸ்வர தேவதைகளின் அருளாசியைப் பெறலாம். திருச்சி மலைக்கோட்டை கிரிவலப் பகுதியில் அமைந்திருப்பதே ஒலிவிடங்க தாயுமான முக தரிசனம். மேலும் விவரங்களை எமது வெளியீடான திருச்சி மலைக் கோட்டை மகிமை என்னும் நூலில் காணலாம்.

வீட்டைச் சுற்றி தென்னை மரம், மாமரம் போன்ற மரங்களையும் துளசி, நந்தியாவட்டை, பவளமல்லி, முல்லை போன்ற மலர் செடிகளையும் வளர்த்து வருதல் வேண்டும். இவைகளின் வழியே ஊடுருவி வரும் தென்றல் மிகவும் இனிமையான தெய்வீக நாதத்தை ஏற்படுதம். இந்த இன்பத்தை உணர்ந்தவர்களுக்கே அதன் அருமை புரியும்.

மேலும் மைனா, குயில் போன்ற பல பறவைகள் மரக்கிளைகளில் அமர்ந்து இனிய குரலில் பாடும். காதிற்கு இனிமையும் மனதிற்குச் சந்தோஷத்தையும் அளிக்கவல்லவை இத்தகைய கீதங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் காக்கையின் குரல் தினமும் ஒலிக்க வேண்டும். உணவிற்காக மட்டும் காக்கை கரைகிறது என்று எண்ணுவது தவறு. தேவலோகத்திற்கும், பித்ரு லோகத்திற்கும் நம்முடைய தூதுவர்களாக இறைவனால் படைக்கப்பட்டவையே காக்கைகளாகும். எனவே அவை கரைதல் தேவர்களும், நம்முடைய மூதாதையர்களும் நமக்கு அளிக்கும் செய்திகளும், ஆசீர்வாதமுமே ஆகும். காக்கை கரைதலுக்குப் பொருள் உணரும் ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் இவ்வுண்மையை உணர்வர். காக்கை தினமும் கரைவதற்காக நம் இல்லம் வர வேண்டுமாயின் அதற்கு உணவளித்து உபசரிப்பது முறையல்லவா? எனவே காக்கைக்கு தினமும் உணவளித்தால் நம் மூதாதையர்களின் ஆசியும், ஸ்ரீ வைகாசி பூரணமகரிஷியின் அருட் கடாட்சமும் கிட்டும்.

இனிய நண்பர்களை அழைப்பீர். காக்கை, குருவி மட்டுமல்லாது அணில் போன்ற சிற்றுயிர்கள் எழுப்பும் சிறு ஓசையும் சாந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எனவே சிற்றுயிர்களுக்கு உணவும் நீரும் அளித்தால் அவை நம் இல்லங்கள் அருகே அமர்ந்து இனிய ஒலி அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும். கன்றின் அழைப்பும், பசுவின் குரலும், அவைகள் கழுத்தில் அசைந்தாடும் மணிகளின் ஒலியும் தெய்வீக இனிமை தருபவையே. மாடுகளும் கன்றுகளும் கூட்டம் கூட்டமாகச் செல்லும் போது அவைகள் எழுப்பும் மணியோசை மிகவும் அற்புதமானதொரு கானத்தை எழுப்பும். ஸ்ரீ கண்ணபிரானின் வேணுகானத்திற்கு நிகரான இந்த கானத்தைக் கேட்க என்ன தவம் செய்திருக்க வேண்டும்!

பசுக் கூட்டங்கள் நடந்து வருகையில் அப்போது எழும் மேகம் போன்ற தூசிப் புகையில் நீராடுவது பெறற்கரிய பாக்கியமாகும். பலவித நோய்களை நீக்கி அறிவை வளர்ப்பதே இந்த கோ தூளிக் குளியல்  ஆகும். இவ்வாறே யானைகள் பிளிறும் ஒலியும், கழுத்து மணி ஓசையும் தெய்வீக சக்தி நிறைந்தது. எப்போதும் பழம், புல், கீரை வகைகளை வீட்டில் வைத்திருந்து, பசு, யானைகளுக்கு உணவாக அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும்.

வீட்டில் சாந்தம் நிலவ எத்தகைய எளிய முறைகள்!
கருத்தில் ஊறும் கருணை ஊற்று

ஆத்ம தர்ப்பணம்

கயா புண்ணிய பூமியில் என் செய்வது? ஆத்ம தர்ப்பணம் இடலாமா ? பிண்டம் அளிக்க வேண்டிய விஷேசமான இடங்கள்.

ஸ்ரீ அகஸ்திய விஜயம் நேயர்களின் ஆன்மீக வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் குருவருளால் அளிக்கும் பதில்களையும் விளக்கங்களையும் இப்புதிய ஆன்மீகத் தொடர் மூலம் அளித்து வருகின்றோம் அல்லவா? தர்ப்பணம் அளிக்க வேண்டிய சிறப்பான தலங்களைப் பற்றிப் பலரும் அறிய விரும்புகின்றனர். பிறந்த உயிர்களுக்கு இறப்பு நிச்சயம். அவ்வாறு இறந்த உயிர்கள் மேல் நிலையை அடைய வேண்டிய தர்ப்பணம் என்ற மூதாதையர்கள் வழிபாட்டை இறைவன் வகுத்துள்ளான். சந்ததியின்றி இறப்போர்கள் இந்த வழிபாட்டின் பயனைப் பெற முடியாததால் அவர்கள் ஆத்மா சாந்தியின்றி மேல்நிலையையும் அடைய முடியாமல் போகலாம். இவ்வாறு குழந்தைகள் பாக்கியம் பெறாது இருப்போர், தாங்கள் நற்கதி அடைய வேண்டி குறிப்பிட்ட தலங்களில் ஆத்ம தர்ப்பணம், ஆத்ம பிண்டம் அளித்து வருகின்றனர்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

இவ்வாறு தனக்குத்தானே தர்ப்பணம் அளிக்கும் முறை சரியானதா என்றும் அதற்குரித்தான விளக்கங்களைக் கோரியும் எம் அலுவலகத்திற்கு எண்ணற்ற கடிதங்களை ஆன்மீக நேயர்கள் அனுப்பியுள்ளனர். அக்கடிதங்களை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் வாசித்து, அருளிய விளக்கங்களை இங்கே அளிக்கின்றோம்.

பிண்டம்/தர்ப்பணம் எங்கே?

தற்போது கயை புண்ணிய பூமியிலும், பத்ரிநாத்தில் அமைந்துள்ள பிரம்ம கபாலம் என்னும் பாறையிலும் ஆத்ம தர்ப்பணம்/ பிண்டம் அளிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைப் பேறுள்ளவர்கள் கூட இவ்விடங்களில் ஆத்ம தர்ப்பணம் அளிக்கின்றனர். கயை புண்ணிய பூமி. கயாசுர மகரிஷியின் திருவுடலாகும். கயையில் ஓடும் பல்குனி நதி மிகுந்த தெய்வீக சக்திகளைக் கொண்டது. பித்ருக்களுக்கும் சாந்தி அளிக்கும் தெய்வீகத் தன்மையைத் தன்னகத்தே உடையது. கயாசுர மகரிஷியின் உடலின் மேல் (கயை பூமி) பல்குனி நதி பாயும்போது அதன் தெய்வீகத் தன்மை பன்மடங்காய்ப் பெருகுகின்றது.

எனவே பல்குனி ஆற்றில் அளிக்கப்படும் தர்ப்பணங்களும் பிண்டங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகின்றன. எனவே இங்கு தர்ப்பணம் அளிப்போர் இடைத் தரகர்களை நாடாது தமக்குத் தெரிந்த எளிய முறையில் பல்குனி நதியில் தர்ப்பணம் அளிப்பது பித்ருக்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கக் கூடியதாகும். கயாசுர மகரிஷியே ஜீவன்களின் குறித்த சில கர்ம வினைகளைத் தம்முள் ஏற்பதால் இங்கு தர்ப்பணமிடுவது சிறப்புடையதாகின்றது.

சாந்தமான மனத்துடன் உள்ளன்புடன் அரிசியைச் சமைத்து உணவாக்கி, சாதத்தை உருண்டை வடிவில் நம் மூதாதையர்களுக்கு உணவாக அளிப்பதையே பிண்டம் அளித்தல்/பிண்ட தர்ப்பணம் என்று அழைக்கின்றோம். எல்லா இடங் களிலும் பிண்டம் இட முடியாது. கயை புண்ணிய பூமி பிண்ட தர்ப்பணத்திற்குரிய உத்தம் தலத்தில் ஒன்றாம். தேவர்கள் யாகம் நடத்த தன் உடல் அவயவங்கள் அனைத்தையும் தியாகம் செய்த கயாசுர மகரிஷியின் தவத்தை மெச்சிய ஸ்ரீமகாவிஷ்ணு தன் திருப்பாதத்தை அவர் உடல்மேல் வைத்த இடமே கயை பூமியாகும். எனவே பித்ருக்களுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருப்பாதங்கள் பதிந்த கயை பூமி பித்ரு தர்ப்பணத்திற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சிவபுரம்

அரிசி சாதமே தூய பிண்டமாக இருப்பினும், மா, பலா, வாழை, கிருணிப்பழம் போன்ற சில குறிப்பிட்ட பழ வகைகளைப் பிண்டமாக அளிப்பதும் உண்டு. பழங்களைப் பிண்டமாக அளிப்பதன் ஆன்மீக ரகசியங்களைத் தக்க குருவை நாடித் தெரிந்து கொள்ளவும். இவ்வாறு பிண்டமாக அளிக்கப்படும் அரிசி, பழ உணவு வகைகளை பூமாதேவியே ஏற்றுப் பித்ருக்களுக்கு அளிக்கின்றாள்.

கயாசுர மஹரிஷியானவர் தன் உடலைத் தொடுபவர் எவராயினும் புனிதம் பெற வேண்டும், அவர்களுடைய கர்ம வினைகள் கழிந்திடத் தம் தபோபலம் பயன்பட வேண்டும் என்று வேண்டி தியாகச் செம்மலாய் அன்றும் இன்றும் என்றும் புனிதத்தின் சிகரமாய் விளங்குபவர்! கயாசுர மஹரிஷியின் புனிதத் திருமேனியின் மேல் புனித கயா நகரம் அமைந்துள்ளதாலும் தெய்வீகப் பல்குனி நதி கயாசுர மஹரிஷியின் திருமேனியின் மேல் ஓடுவதால் அதன் மஹத்வம் பன்மடங்காய்ப் பிரகாசிக்கின்றது. பொறுமையின் சிகரமாய் விளங்கும் பூமா தேவி பூமியில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும், அதர்மங்களையும், அநீதிகளையும் வேதனையுடன் பொறுத்து நமக்கு அருள்பாவிக்கின்றாள். இருப்பினும் பூலோகத்தின் சில இடங்களில் மட்டும் பூமா தேவி ஆனந்தத்துடன் திகழ்கின்றாள்.

ஸ்ரீராமர் தன் திருமேனியுடன் நீரில் இறங்கி ஜோதியாய் ஐக்கியமான (அயோத்தியா) சரயு நதிக்கரை, கயா, கங்கை சமவெளியிற் பாயும் ஹரித்வார், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதுரா, ஸ்வயம்பு மூர்த்திகளின் பிறப்பிடமான திரு அண்ணாமலை, பூமியினடியிற் சிவலிங்கங்கள் நிறைந்திருக்கும் சிவபுரம், சிவபெருமான் பூமியில் மறைந்த கேதார்நாத் இவ்வாறாக பூமாதேவி பேரானந்தத்தில் திளைத்திருக்கும் தலங்களில் பூமி பூஜை, ஹோமம், தர்ப்பணம் ஆகியவற்றைக் கடைபிடித்து வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும்.

கயாவின் பல்குனி நதிக்கரையிலும், பத்ரிநாத்தில் பிரம்ம கபாலப் பாறையிலும் பிண்ட தர்ப்பணம் சிறப்புடையதாகும், பொதுவாக புனித நீர் மூலமாகவே தர்ப்பணத்தைப் பெறும் பித்ருக்கள் இத்தகைய விசேஷமான பிண்டத் தர்ப்பணத் தலங்களில் அன்னசாரத்தையும் பழச் சாரத்தையும் சூட்சும ஜீவ சக்தியாக பித்ருக்கள் ஏற்கின்றனர். மேலும் கயா பூமியானது கயாசுர மஹரிஷியின் திருமேனியெனக் கண்டோமல்லவா! இத்திருமேனியின் மேல்தான் பிரபஞ்சத்தின் மிகப்பெரும் யாகங்களுள் ஒன்று நிகழ்ந்தது. அதாவது கயாவில் பிண்ட தர்ப்பணம் செய்யப்படும் இடமானது, கயாசுர மஹரிஷியின் திருமேனியாக மட்டுமன்றி தேவாதி தேவர்களின் யாகசாலையாகவும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னத்தை உருண்டைகளாக ஆக்கிச் செய்யப்படுவதே பிண்ட தர்ப்பணம். சித்தபுருஷர்களோ கயையில் பழங்களையும் குறிப்பாக கிருணிப் பழப் பிண்டத் தர்ப்பணத்தை முக்கியமானதென வலியுறுத்துகின்றனர்.

சூரிய பூஜை

சூரிய பகவானின் விஷ்ணு பாதபூஜை

பெருமாளின் திருவடிகளில் சூரிய பகவான் செய்யும்பாத பூஜை தட்சிணாயனத்தில் சூரியனுடைய விஷ்ணு வழிபாடு! பித்ரு சாபங்களைத் தீர்த்து, பித்ருக்களின் ஆசியைத் தரும் சூரிய பூஜை

அற்புத சிவலிங்க மூர்த்திகளின் மேல் சூரிய கிரணங்கள் படிகின்ற பாஸ்கர பூஜை பற்றிய விளக்கங்களை ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அளித்து வருகின்றோமல்லவா!

திருவையாறு அருகே திருப்பெரும்புலியூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் தொன்று தொட்டு ஆடிப் பெளர்ணமியன்று பெருமாளின் திருவடிகளில் மாலையில் சூரிய கிரணங்கள் படிந்து வருகின்றன. அதாவது சூரிய பகவானே பெருமாளுக்குப் பாத பூஜை செய்யும் அற்புதத் திருநாளிது. ஆனால் காலம் காலமாக பிரசித்தி பெற்று நன்கு நடைபெற்று வந்து இந்த சூரிய பூஜையானது துரதிருஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக பக்தர்களின் அசிரத்தை காரணமாக, இவ்வற்புத வைபவத்தை எவரும் உணராது, இதன் மகத்துவத்தை உணராது இத்திருக்கோயிலில் பாஸ்கர் பூஜைப் பெருவிழா நடைபெறுவதே நின்று விட்டது.

பஞ்சாங்க ரீதியாகவும், அகஸ்திய நாடி கிரந்த உரைகள் மூலமாகவும், நற்பெரியோர்களுடைய செவிச் செய்தி வழியாகவும் தட்சிணாயனத்தில், ஆடிப் பெளர்ணமியன்று காலையில் சந்திர பகவானின் ஒளிக் கதிர்களும் மாலையில் சூரிய பகவானின் கிரணங்களும் பெருமாளின் திருமேனியில் படிவதாக அறிகின்றோம். காலவர்த்தமான மாறுபாடுகளினாலும், வீதி, கட்டிட, மர அமைப்புகளினாலும், இத்தகைய பாஸ்கர பூஜையில் தேதி மாற்றங்களோ, ஒளிப்பாதை மாறுதல்களோ, காலப்போக்கில் ஏற்பட்டிருக்கக் கூடும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களின் அசிரத்தை, பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களினால் ஒரு வேளை பூஜை மட்டுமே நிகழ்வதால் இங்கு ஆடிப் பௌர்ணமியின் சூரியகிரணப் படிவுகள் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்ற வேதனையான சூழ்நிலை நிலவுகின்றது.

ஆடிப் பௌர்ணமி

ஆடிப் பெளர்ணமி 7.8.1998 அன்று அமைந்திடினும் இவ்வரிய தெய்வீகச் செய்தியை முன்னதாகவே நாம் வெளியிடக் காரணமெனில் அருள் நிறைந்தோரும், பொருள் நிறைந்தோரும், வைணவப் பெரியோர்களும், பெருமாள் அடியார்களும், செல்வந்தரும், ஊர் மக்களும், சுற்றுக் கிராம ஜனங்களும், பக்த கோடிகளும் முன் வந்து ஆடிப் பௌர்ணமியில் பெருமாளின் திருமேனியிற் படிகின்ற வைபவத்தை நன்கு கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இதற்குரிய சூரியவழிப் பாதையில்  உள்ள மூங்கில் மற்றும் இதர மரக்கிளைகளை அக்காலத்தில் (வெட்டாது) வளைத்து விடுவார்கள்.

நாம் ஏற்கனவே கூறியுள்ளதுபோல வெகு காலம் கடந்திருப்பினும் ஆடிப் பெளர்ணமிதான் இவ்வற்புதம் நிகழ்கின்ற திருநாளா என்பதையும் உணர்கின்ற பாக்கியத்தையும் பெற்றிடலாம். ஆன்மீகப் பெருந்தகையோரும் வைணவச் செம்மல்களும் முன்னரேயே இத்திருக்கோயிலுக்குச் சென்று, பாஸ்கர பூஜை ஸ்ரீசூரிய நாராயண சுவாமியின் பூஜையாக மலர ஆவன செய்வார்களேயானால் அறியும்படி வெளியிட்டுப் பலருக்கும் பரம்பொருளாம் சுந்தரராஜப் பெருமாளின் திருவருளைப் பெற்றுத் தரும் கைங்கர்யத்தினைச் செய்திடலாமன்றோ!

ஆத்ம தர்ப்பணம் அளிக்கலாமா?

“எனக்கு ஆண் வாரிசு இல்லை, எனக்குப் பையன்கள் சரியில்லை, நான் கயாவில் ஆத்ம தர்ப்பணம் செய்து கொண்டு விட்டேன். இனிமேல் எனக்கான இறுதிச் சடங்குகளை எவரும் முறையாகச் செய்கிறாரா, இல்லையா என்பது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்”, என்று பலரும் சொல்லக் கேட்கிறோம்.

ஆத்ம தர்ப்பணம் செய்து கொள்வது சரியா? அதாவது தன் உடல் மறைந்து விட்டதாக பாவித்து தனக்குத்தானே தர்ப்பணம் செய்து கொள்வதைத்தான் தற்கால வழக்கில் ஆத்ம தர்ப்பணம் என்று சொல்கின்றார்கள். இப்படிச் செய்து கொண்டால் எதிர்காலத்தில் அவருக்கு சிராத்தமோ, திவசமோ, தர்ப்பணமோ யாரும் செய்யாவிடில் கூடப் பரவாயில்லையாம்! அறியாமை நிறைந்த கூற்று இது! ஆத்ம தர்ப்பணம் பற்றிய இத்தகைய விளக்கங்கள் முற்றிலும் தவறானவை! குருவே தானாக முன் வந்து ஆத்ம தர்ப்பண மந்திரத்தை எடுத்தளித்தால்தான் ஒருவர் ஆத்ம தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஆத்ம தர்ப்பணம் செய்து கொள்கின்றவர் அனைத்துப் பற்றுகளையும் துறந்தவராய் எந்த நேரத்திலும் இறைவன் தன்னை அழைத்துக் கொள்வான், அதுவரையில் அவனருளால் இயன்ற நற்காரியங்களைச் செய்வோம், என்ற சீரிய எண்ணத்துடன் பரிணமிக்க வேண்டும். ஒரு சிறு தலைவலி என்றாலே, பொறுக்க மாட்டாதவராய், தலைவலித் தைலத்தை அப்பிக் கொண்டு, சுடச் சுடக் காபியை அருந்தி கூடவே இரண்டு மாத்திரைகளையும் உள்ளே தள்ளும் மனோநிலையுள்ளோர் ஆத்ம தர்ப்பணம் செய்துகொண்டால் அது ஏற்புடையதா? எனவே ஆத்ம தர்ப்பணத்திற்குரிய பக்குவத்தை முதலில் பெற வேண்டும், என்னவோ அது? மிருத்யு பயம் எனப்படும் எம பயத்தை நீக்க உதவும் ஸ்ரீமிருத்யுஞ்ஜயரை வழிபட்டு, அவரருளால் மரண பயத்தைத் தீர்த்தால்தான் இறக்குந் தருவாயில் இறை நினைவு பொங்கும். இந்த அடிப்படைத் தகுதியைக் கொண்டுதான் ஆத்ம தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அதற்குரிய விசேஷ திதி, நாள், நட்சத்திர, ஹோரை நேரமும் உண்டு.

ஆத்ம தர்ப்பணம் என்ற பெயரில் ஆயிரம், ஆயிரமாகப் பணத்தைக் கறந்து இதைச் செய்து கொண்டால் இறப்புச் சடங்குகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று தவறான வழியில் அரைகுறையாக மந்திரங்களை ஓதுவிப்போர் கயா போன்ற தலங்களில் பலர் உண்டு! ஏமாந்துவிடாதீர்கள்!

வெள்ளை வேம்பு

புனிதமான வெள்ளை வேம்பு விருட்சம்

நன்முறையில் பதவி உயர்வு பெற, பணியில்/தொழிலில் நன்கு நிலைத்திட, தன் கணவனின் திறமைக்கேற்ற பணி/வருமானம் பெற்றிடஉதவும் புனிதமான வெள்ளை வேம்பு விருட்சம்

வேப்ப மரத்தின் இலைகள் வெண்மை நிறத்தில் விளங்கும் அற்புதத்தைக் கண்டிருக்கிறீர்களா? மிகவும் தெய்வீக சக்திகள் நிறைந்த விருட்சமது! அற்புதமான புராண வைபவத்தைத் தன்னுள் கொண்டது. சித்புருஷர்களால் போற்றித் துதிக்கப்படுகின்ற புராதன விருட்சம்!

வேப்பிலை மிகச் சிறந்த மூலிகை மரங்களுள் ஒன்று என்பதை நாமறிவோம். பூச்சி அரிப்புகளிலும் நிலச்சரிவுகளிலும் மீண்டு தழைத்து நிற்கும் சக்திவாய்ந்த மூலிகை மரம். வேத, பிரயோக மந்திரங்களை, குறிப்பாக தாந்த்ரீக மந்திரங்களைத் தன்னுள் ஈர்க்கும் சங்க வித்யா சக்தியைக் கொண்டது. மரத்தழைகளில் மரவுரி எனப்படும் இலைகளாலான ஆடையைத் தரித்து வழிபடும் முறையொன்று உண்டு. அபாண்டமான பழிகள் தீரவும், பில்லி, சூன்ய தீவினை சக்திகள் அகலவும், பல வருடக் கோரிக்கைகள் நிறைவேறவும், “வேப்பிலை ஆடை” அணிந்து வழிபடும் முறை காரிய சித்தியைத்தரவல்லதாகும்.

கனிகளின் கொட்டைகளில் ஒரு சிலவற்றைத்தாம் “கொட்டை மாலைகளாக” இறைவன் ஏற்கின்றான். ருத்ராட்ச மாலை, தாமரைக் கொட்டை மாலை, துளஸி மாலையுடன் வேப்பங்கொட்டை மாலையும் இறைவனுக்கு உவப்பானது என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

இந்திரர்களில் எத்தனையோ கோடி மூர்த்திகள் வந்து சென்றுள்ளனர். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அதிபதி என்றால் என்னே அவர்தம் மகிமை! இந்திரன் என்பது தேவமூர்த்திப் பதவியைப் போல! “கங்கை மணலிலும் விஞ்சிய தேவேந்திரர்கள்” என்ற சித்தமொழி கூறுவதுபோல கங்கை நதிப் படுகையில் எவ்வளவு மணல் துகள்கள் உள்ளனவோ அவ்வளவு இந்திரர்கள் வந்து சென்றுள்ளரெனில் எத்தகைய புராதனமான காலப் பகுப்பு! ஒவ்வொரு இந்திரனும் பதவி ஏற்கையில் ஏழு சப்த ரிஷிகளும் இந்திரனுடைய பல்லக்கைச் சுமந்து செல்வர். ஜடபரதர், அகஸ்தியர் உட்படப் பல மகரிஷிகளே இந்திரனுடைய பல்லக்கைச் சுமக்கின்றனர் எனில், இந்திர மூர்த்தி எத்தகைய பேறு பெற்றவர்!

இந்திரனுடைய வாகனமே ஐராவதமாகும்! பலகோடி இந்திர மூர்த்திகளைக் கண்ட ஐராவதம் தான் எப்போதும் இந்திர பகவானைத் தாங்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்பிக் கடுந்தவம் பூண்டது! அதுவும் ஸ்ரீபிரம்ம மூர்த்தியை நோக்கி!

ஸ்ரீ பிரம்மா காட்சியளித்து, “ஐராவத கேசரியே! உன்னுடைய குருமூர்த்தியாகிய இந்திரர்கள், பல சமயங்களில் பெரும் பிழைகளைச் செய்து சாபங்களைப் பெற்றும் நீயே உன்னுடைய தபோ பலன்களினால் காத்தருளினாய்! ஆனால் தற்போது இந்திர தேவ மூர்த்தியாய்ப் பரிணமிக்கின்றவரோ ஹரிஹர மூர்த்திகளின் பெருவரங்களைப் பெற்றவர். எனவே இந்திரப் பெருமூர்த்தியிடம் தக்க தவமுறைகளைக் கேட்டறிவாயாக!எனினும் எம்மை நோக்கித் தவமிருந்தமையின் அதற்குரிய நல் வரங்களாக இந்திரமூர்த்தி மட்டுமன்றி எத்தனையோ தேவாதி தெய்வ மூர்த்திகளையும் தாங்கி அவனியில் பவனி வரக்கூடிய பாக்கியத்தைப் பெறுவாயாக!” என்று ஆசிர்வதித்தார்.

ஐராவதமும் தன் தலைமைப் பீட மூர்த்தியாம் இந்திர பகவானைத் தேடிவர அவரோ அருணாசல க்ஷேத்திரமாம் திருஅண்ணாமலையில் இந்திர லிங்க பூஜையில் லயித்திருந்தார். இதுவே பெறற்கரிய பாக்கியமென ஐராவதமும் இந்திரனின் பூஜையில் கலந்துகொண்டு மிகச் சிறப்பான அபிஷேக ஆராதனைகளுடன் இந்திர லிங்கத்தை ஆராதித்து மகிழ்ந்ததுடன் இந்திர மூர்த்தியிடமும் தன்னுடைய அபிலாட்சையைக் கூறிட, “என்றென்றும் இந்திர பகவானுக்கு இனிய நல்வாகனமாய் அமையும் பேற்றைப் பெற, இந்திரலிங்கத்தை வேண்டி அருணாசலத்தை வலம் வந்தவாறே கடுந் தவத்தை மேற்கொள்வாயாக!” என்று இந்திரரும் ஆசியளித்திட்டார்.

தங்கள் தலைவனாம் ஐராவதமே அருணாசலத்தை வலம் வருவதாகக் கேள்வியுற்ற அஷ்ட திக்கு கஜயானைகளும், கோடானு கோடி கஜகேஸரிகளும், யானைகளும் அருணாசலத்தை நாடின! எங்கு நோக்கினும் கஜசேனை போல யானைகள்தாம்! இவ்வாறு யானைகள் கூடி நின்ற பகுதிதான் “யானைப் பள்ளம்” என இன்று வழங்கப்படுகின்றது.

ஆறு தந்தங்களை உடைய ஐராவதமானது கஜகர்ணம் என்ற பெயரையும் கொண்டுள்ளது. மிகவும் அபூர்வமாக எப்போதும் நான்கு பாதங்களையும் தரையில் ஊன்றி சதுர்பாதஸ்திர யோக நிலையில் இலங்கும் அற்புதமான யானையிது. இந்திர மூர்த்தியின் வாகனமாகத் திகழ்வதோடன்றி எட்டுத் திக்குளில் கிழக்குப் பகுதியில் உலகைத் தாங்கி நிற்கும் கடமையையும் ஆற்றுகின்றது. பலகோடி யுகங்கள் தவம் பூண்டு, மகரிஷிகளின், யோகியரின், சித்புருஷர்களின் ஆசியைப் பெற்றுப் பல்வேறு தெய்வ மூர்த்திகளின் அருட் கடாட்சத்துடன்தான் இந்திர பகவானின் வாகனமாகவோ அஷ்டதிக்கின் தலைமை யானையாகவோ ஆக முடியுமெனில் ஐராவதம் ஒரு சாதாரண யானையாகவா இருக்க முடியும்?

திருவோட்டுச் சித்தர்

அருணாசலஷேத்திரமாகிய திருஅண்ணாமலையில் கோடானுகோடி சித்புருஷர்களின் சஞ்சாரம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும் என்பது நாமறிந்ததுதானே? அறிந்து என்ன பிரயோஜனம், இத்தகைய அற்புதத் தலத்தை நம்முடைய தெய்வீகப் பாதைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதுதானே முக்கியமானது?

அண்ணாமலையில் “திருவோட்டுச் சித்தர்” என்பார் அப்போது மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினார். ஒவ்வொரு யுக, கால அம்சங்களில் ஒவ்வொரு சித்தரோ, மஹரிஷியோ அந்தந்தப் பகுதியில் இறையாணையாக ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு மக்களுக்கு நல்வழி காட்டுகின்றார்கள். தீந்தமிழில் திருவோட்டுச் சித்தராகவும் தேவமொழியில் “பிட்சான்ன கிரிதரர்” ஆகவும் விளங்கிய அவருடைய வாழ்க்கை முறை சித்தர்களுக்கே உரித்தான விசேஷமான பாணியில் அமைந்திருந்தது.

பிட்சை எடுத்து உண்பார், ஆனால் தானாக வலியச் சென்று பிட்சையேற்பதில்லை ! அழுகலோ, நீர் ஊற்றியதோ, சூடானதோ, உணவோ, கனியோ, காயோ, தானியமோ எதையும் ஏற்பார். தானாக பிட்சையெடுப்பதில்லை என்று கூறினோமல்லவா, பின் யாரிடம்தான் தன்னுடைய திருவோட்டைத் தருவார்? அதுவே பரம ரகசியம்! அடுத்த நாள் காலை எவரிடம் திருவோட்டைத் தருவாரோ, எவருமறியார்! ஆனால் அவரிடம் திருவோட்டைப் பெற்று பிட்சையேந்தி வர ஒரு பெருங் கூட்டமே காத்துக் கிடக்கும்! ஆனால் கூட்டம் கூட்டமாக அடியார்கள் காத்துக் கிடக்க, நடுநிசியில் திருவோட்டுடன் மாயமாய் மறைந்திடுவார்! மறுநாள் கிரிவலப் பாதையில் ஏதோ ஒரு மூலையில் திருவோட்டில் சிறிது சோற்றுடன் படுத்துக் கிடப்பார்!

திருவோட்டில் உள்ள உணவோ மணமுள்ளதாக, ருசியுடையதாக இருக்கும்! எடுக்க எடுக்கக் குறையாது! சிறிது உண்டு மிச்சம் உள்ளதை ஓரிடத்தில் குவித்திடுவார்! அதுவே சிறு அன்ன மலையாகக் குவிந்து கிடக்கும். அன்ன மலையின் உணவு கெட்டுப் போவதில்லை ! திருவிழாக் காலங்களில் அவரே திருவோட்டில் அள்ளி அள்ளிக் கொடுத்து அன்னதானம் செய்திடுவார்! எல்லாம் அந்தத் திருவோட்டின் ரகசியம் தான்!

திருவோடா அது, இல்லையில்லை! அன்னபூரணியின் திருக்கரங்களில் திகழும் அட்சய பாத்திரத்தின் ஓரணுத்துகளே திருவோடாயிற்றோ!

வெள்ளை வேம்பு மரத்தில் தொடங்கி, ஐராவதம், திருவோட்டுச் சித்தர் பற்றிய விளக்கங்களாக விரிந்து விட்டன அல்லவா! காரணம் திருவோட்டுச் சித்தரிடம்தான் ஐராவத யானை வந்து சேர்வதால்தான் இத்தகைய விரிவும் கூடிற்று! ஏனையவற்றை அடுத்த இதழில் காண்போமா?

ஆமாம், அந்த வெள்ளை வேம்பு மரம். எங்கிருக்கிறது? பதவி நிரந்தரமாகவும், தார்மீகமான பதவி உயர்வையும், கணவனுக்கு நல்ல வேலையையும் மற்றும் பல நல்ல வரங்களையும் நல்கும் வெள்ளை வேம்பு மரம் கும்பகோணம் அருகே திருவாவடுதுறையில் உள்ளது! ஏனைய விளக்கங்களும், வெள்ளை வேம்பின் வண்ணப் படமும் அடுத்த இதழில்!

சூரிய பகவானுடன் சேர்ந்து பூஜித்திடுக!

தட்சிணாயனப் புண்ணிய நாளில் (16-7-1998) சூரிய பகவான் தம் அயன கதியை மாற்றுகையில் பல திருத்தலங்களில் இதற்குரிய பல சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்கின்றார். சூரிய பகவானே நேரில் வந்து பூஜிக்கும் நன்னாள் இது!
ஸ்ரீசூரிய நாராயண சுவாமியே தம் திருக்கரங்களால் தொட்டு பூஜிக்கும் தெய்வ மூர்த்திகளை இன்று நாமும் ஆராதிப்பது சிறப்புடையதல்லவா! கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி, சக்கரபாணி மற்றும் திருச்சி திருவெள்ளறைப் பெருமாள் தலங்களில் இன்று உத்தராயண வாசல் மூடப்பெற்று தட்சிணாயன வாசல் திறக்கப்பெறும். கோடானு கோடி மஹரிஷியரும் சித்புருஷர்களும் தம் பாதங்களைப் பதித்துச் செல்லும் இந்நாளில் நாமும் தட்சிணாயன வாசற்படிகளைத் தொட்டு வணங்கிச் செல்ல என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்! சென்னை அருகே ஞாயிறு திருத்தலம்தான் பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி சூர்ய மூர்த்திகளுக்கும் அக்னி சக்தியூட்டும் விசேஷமான தலமாகும். தட்சிணாயனப் புண்ணிய தினத்தன்று இங்கு தர்ப்பண பூஜைகளைச் செய்து சுவாமியை அடிப்பிரதட்சணமும் அங்கப் பிரதட்சணமும் செய்து பூஜித்து வந்தால் பிரிந்த தம்பதியர் மன ஒற்றுமையுடன் வாழ நல்வழி பிறக்கும்.

அலுவலக கர்ம வினைகள்

அலுவலகத்தில் சேரும்/சேர்க்கும் கர்மவினைகள்!

அலுவலகத்தில் செய்கின்ற பணிக்கு எதைச் சம்பாதிக்கின்றீர்கள்,பணத்தையா, கர்ம வினைகளையா ? அறிந்தும் அறியாமலும் அலுவலகத்தில் சேர்கின்ற தீய கர்ம வினைகள். நேரத்தை வெறுமனே கடத்தாது வாங்குகின்ற சம்பளத்திற்கு உண்மையாக உழைத்திடுக!

கலியுகத்தில் பெரும்பாலானோர் தம்மையும் அறியாது, தினந்தோறும் அலுவலகத்தில் சேர்க்கின்ற கர்ம வினைகள் ஏராளம், ஏராளம்! பின் ஏன் பிறவிப் பிணிகள் தொடராது! இது தவிர லஞ்சம், லாவண்யம் எனக் கொடுமையான விளைவுகளைத் தரும் பாவச் செயல்களும் சேர்ந்து விட்டால்! நடுத்தர மக்கள், மற்றும் ஏழை மக்களின் வயிற்றிலடித்துப் பெறுகின்ற லஞ்சத்தினால் நிம்மதியாக வாழ முடியாது; செய்கின்ற பணிக்குச் சம்பளம் உண்டு, ஆனால் வாங்குகின்ற சம்பளத்திற்காக ஒழுங்காக உழைக்காது லஞ்சமாக அதிகப் பணத்தைப் பெறுகையில் அது பிறர் பொருளைக் கவர்வதாகத்தானே அர்த்தமாகிறது! பிறர் பொருளுக்குப் பேராசைப்பட்டுக் கவரும் பாவச் செயல்களே லஞ்ச லாவண்யங்கள்!

“பெரிய வியாபாரிகள்தானே, அவர்களிடம் ஐநூறோ, ஆயிரமோ லஞ்சமாகப் பெற்றால் என்ன?” என்று தோன்றும்! உரிமையில்லாத ஒன்றை, தன் கடமையை நிறைவேற்றுவதற்காக எவரிடமும் லஞ்சம் பெற்றாலும் அது கொடிய தீவினைக் கர்மமாகும். நரக வேதனைகளைத் தரும். இது மட்டுமல்ல, அலுவலகத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மூன்று ஓஸியில் டெலிபோன் கால்களாக, ஒருவர் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகையில், மக்கள் பணத்தில், வரிப் பணத்தில் இலட்சக் கணக்கான ஓஸி டெலிபோன் கால்களைச் செய்து பெருந் தீவினைகளில் சிக்கிக் கொள்கின்றார்! 99.999 சதவீதம் அனைத்து அலுவலகத்தினரும் சிக்கித் தவிக்கின்ற பெரும் மாயை இது!

ஆபீஸில் அநாவசியமாக தண்ணீ ர், மின்சாரம், ஸ்டேஷனரி, ஜெம் கிளிப், பின், ஸ்டேப்ளர், பேப்பர் என அலுவலகப் பொருள்களைத் தனக்கென, தன் குடும்பத்திற்கென எடுத்து வருவதும் பயன்படுத்துவதும் அநீதியானதுதானே!

இவ்வாறு பார்த்தோமானால் அலுவலகத்தில் தேவையின்றிக் கூட்டிக் கொள்கின்ற கர்ம வினைகளுக்காகவே கோடானுகோடி பிறவிகள் எடுக்க வேண்டுமே? என்னே வெட்கக்கேடு. பாருங்கள், இறைவனடி சேர்வதற்காக எடுத்த பெறுதற்கரிய மானுடப் பிறவியில், பிறவிகளைப் பெருக்கும் பெருந் தீவினைகளையா சேர்த்துக் கொள்வார்கள்! இனிய முகத்துடன் நல்வார்த்தைகள் பேசி எப்போதும் இறைநாமத்தையோ, இறைத் துதியோ, ஸ்ரீ காயத்ரீ மந்திரம் போன்றவையோ உள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்க நடைபெற வேண்டிய அலுவலகப் பணியில் இயந்திர கதியாக கம்ப்யூட்டர் வேகத்தில் மனிதன் கர்ம வினைகளைத்தான் பெருக்கிக் கொள்கிறான்!

மோட்சம் என்றால் என்ன?

இவ்வுலக வாழ்க்கையின் ஊடேயே முக்தி நிலை பெறலாம்! தாம் பெற்ற தெய்வீக பேரின்பத்தைப் பிறர்க்கு ஊட்ட வாழ்வதே மோட்ச நிலை!

“திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்திடில் பல உத்தம இறை நிலைகளைப் பெற்றிடலாம் என்று சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதே. நான் பன்முறை கிரிவலம் வந்தும் இத்தகைய இறைநிலைகளின் தன்மைகளைப் பற்றி ஒரு சிறிதும் அறிய முடியவில்லையே. ஆனால் தொடர்ந்து கிரிவலம் வருவதனால் என்னிடம் பல மாறுதல்களை நிச்சயமாக நான் உணர முடிகின்றது என்பதை மறுக்க முடியாது” என்று பலரும் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தம இறைநிலைகள் என்று பன்மையில் குறிப்பிடப்படுவதின் காரணம் என்ன? முக்தி அல்லது மோட்சம் என்றால் என்ன? முக்தி அடைந்தும் ஒருவர் பூலோகத்தில் தன் வாழ்வைத் தொடர்வாரா அல்லது இறப்பிற்கு அப்பாற்பட்ட நிலைதான் முக்தியோ, மோட்சமோ என்பனவெல்லாம் அனைவரின் மனத்திலும் எழக்கூடிய சிறுசிறு சந்தேகங்களே!

அவ்வப்போது “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” இதழில் விளக்கி வந்தபோதிலும் இவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளக் கூடிய தெய்வீக மனப்பான்மையை நாம் பரிபூரணமாகப் பெறவில்லை ஆதலின் இச்சிறு சந்தேகங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கும்! மிகவும் எளிதாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமாயின் முக்தி அல்லது மோட்சம் என்றால் நம்முடைய ஒவ்வொரு அசைவும், வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் இறைவனால் இயக்கப்படுகிறது என்று பரிபூரணமாக உணர்வதே ஆகும். இதை உள்ளத்தாலும், மனதாலும், உடலாலும் ஒன்றாக உணர்வதே முக்தி நிலை.

சாதாரண மனிதர்களாகிய நம்மிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் நம் மனம் ஒன்று நினைக்கும்; உள்ளம் ஒன்று சொல்லும்; தேகம் ஒன்றைச் செய்யும். இம்மூன்றிற்கும் இடையே பலவிதமான வேறுபாடுகள் இருந்து கொண்டே இருப்பதனால் தான் மன சஞ்சலங்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன.

தியானப் பயிற்சியிலேயே உடல், மனம், உள்ளம் இம்மூன்றையும் ஒருமுகப்படுத்தத்தான் நாம் முயற்சி செய்கின்றோம். மனமும், உள்ளமும், ஒன்று போலத் தோன்றும். ஆனால் அவை வெவ்வேறானவை. மகான்கள், யோகியர்களின் நிலையில் இம் மூன்றுமே ஒருமுகப்பட்டுச் செயல்படுவதால்தான் அவர்கள் இறைவனின் கருவிகளாகத் தங்களைக் கருதிச் செயல்படுகின்றனர். அதனால் தான் உடல் வேதனைகளோ, மனவாதனைகளோ ஏற்படினும் அவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

இறை தரிசனம், உத்தம இறைநிலை, முக்தி, மோட்சம், மரணமில்லாப் பெருவாழ்வு என்று பலவகைகளில் இறைப் பேறுகளைக் குறிப்பிடுகின்றனர். மகான்களுடைய வாழ்க்கைச் சரிதங்களைச் சற்று நோக்கினால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வகையில் தியாகம் நிறைந்த தங்கள் வாழ்க்கை நிலைகளை வகுத்துக் கொண்டு மக்களுக்கு நல்வழி காட்டி, விதவிதமான வகைகளில் தங்கள் சரீரங்களை விடுத்து ஜீவசமாதி பூண்டுள்ளதைக் காணலாம். பூண்டி மகான், ஷீரடி சாய்பாபா, வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள், காஞ்சிபுரம் போடா சித்த சுவாமிகள், இராமானுஜர், மத்வாச்சாரியார், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் இவ்வாறாக ஒவ்வொரு மகானுடைய, யோகியருடைய வாழ்க்கையின் சரிதத்தைக் காணும்பொழுது நாம் இறைவனை அடைவதற்கான எத்தனை மார்க்கங்களைத் தந்தருளியுள்ளார்கள் என்பது புலனாகின்றது.

ஏன் அனைவரும் ஒரே மார்க்கத்தைக் கடைபிடிக்கக் கூடாது என்ற வினா எழுகின்றது அல்லவா? நம்பிக்கையே தெய்வீகம்! கலியுக மனிதன் ஆசாபாசங்களுக்கு இடையே மனம் நிறைய ஆசைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். ஏதேனும் ஒன்றை உறுதியாகப் பற்றிக்கொண்டு எம்மார்க்கத்திலும் செல்ல அவனால் இயல்வில்லை, மரத்திற்கு மரம் குரங்கு தாவுவது போல அவனுடைய எண்ணச் சுழலும் மாறிக் கொண்டே இருக்கின்றது. இதைக் கருதித் தான் இறைவனே சத்குருமார்களாக தன்னுடைய இறைத் தூதுவர்களை அனுப்புகின்றான், அந்த இறைத் தூதுவர்களும் நம்மிடையே, நம்மைப் போலவே பல ஆண்டு காலம் வாழ்ந்து, பலவிதமான அறநெறிகளை போதித்தும், அவ்வழியில் நின்று காட்டியும் கூட சில நூற்றுக்கணக்கான மக்கள்தான் அம்மார்க்கத்தில் இறுதிவரை செல்கின்றனர். பலரோ இடையிலேயே அம்மார்க்கத்தை விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால்தான் மேலுலகத்தை அண்டவிடாமல் பிறவிப் பிணிகளாக கர்மவினைச் சுழல்களும் பல்கிப் பெருகி விடுகின்றன.

மகான்கள் ஏன் சாதாரண மனிதர்களாகப் பிறவி எடுத்து நம்மைப் போல இன்ப துன்பங்களை அனுபவித்து நம்முடன் வாழ வேண்டும் ? இது நல்ல கேள்விதான். மனிதனானவன் எதையுமே கண்களால் பார்த்துத்தான் நம்பிச் செய்கின்ற மனப்பான்மையைப் பெற்றுவிட்டான். பல யுகங்களுக்கு முன்னால் ராஜகுரு சொல்வதையே ராஜா கேட்பார். குலகுரு சொல்வதையே குலமக்கள் யாவரும் கேட்பர். இத்தகைய இறை நம்பிக்கையுடன் மனித வாழ்க்கை சிறப்பாக நடந்து வந்தது. காலப் போக்கிலே விஞ்ஞானம் என்ற பெயரில் பண்பற்ற வாழ்க்கையும், சீரற்ற தீய பண்பாடுகளும் கூடிவிட்டமையால் கண்ணால் கண்டதையே நம்புகிற அளவிற்கு மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொண்டு விட்டான். எனவே கலியுக மனிதனின் மனநிலைக்கு ஏற்பவே மகான்களும் நம்மைப் போல உருவம் கொண்டு, உண்டு, உறங்கி வாழ்க்கைக் கடன்களை முடித்து, தங்களுடைய தெய்வீக சக்திகளைக் காட்டியும், காட்டாமலும் அறநெறிகளைப் புகட்டி, நம்மை தெய்வீகத்தில் முன்னேற்றுவதற்காக அரும்பாடுபடுகின்றார்கள்.

சாதாரண மனிதனும் அவர்களைப் பார்க்கின்றான், “என்ன இவர் நம்மைப் போலவே வாழ்ந்தாலும் கூட இவரிடம் ஏதோ அபரிமிதமான தெய்வீக சக்தி இருப்பது போல் தெரிகின்றதே! நாம் இவரிடம் சற்று இருந்து பார்த்தால் என்ன?” என்ற எண்ணத்தை, ஏற்படுத்திக் கொண்டு, அவருடைய சத்காரியங்களிலே ஈடுபட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை தெய்வீகத்தில் ஈடுபடுத்திக் கொள்கின்றான். அதற்குள் பல வருடங்கள் கடந்து விடுகின்றன. இத்தகைய ஒரு மகானிடம் ஓ ரளவு குறித்த நம்பிக்கை ஏற்படுவதற்கே அவன் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்வான் என்றால் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தி கொண்டு,சத்சங்கக் காரியங்களிலே முழுமையாக ஈடுபடுத்தி, சற்குருவின் மேல் நம்பிக்கையைப் பரிபூரணப்படுத்துவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் அவனுக்கு நடுத்தர வயதும் கடந்து முதுமையும் வந்துவிடுகின்றது. இதனால் அரைகுறை இறை நினைவுடன் அவன் வாழ்க்கை முடிந்து விடுகின்றது.

ஆனால் எடுத்தவுடனேயே அந்த மகானிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, “எத்தனை இன்ப துன்பம் வந்தாலும் மகானைப் போலவே நாமும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டும்”, என்ற மன வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரோடு ஒட்டி வாழ்கின்றவர்களே இறைப் பக்குவத்தை முன்னதாகவே அடைந்து விடுகின்றார்கள். இவ்வாறாக அவரவர்களுடைய நம்பிக்கையைப் பொறுத்து இறைநிலைகள் மாறுபடும், இதைத்தான் நாம் உத்தம நிலைகள் என்று சொல்கின்றோம். இதனையே First plane, Second plane, Third plane என்று Seventh plane வரை ஏழுவகை இறைநிலைகள் உள்ளதாகக் கூறுவார்கள்.

சமுதாயப் பணியே இறைப்பணி

ஒரு மகான் தாமே முன் வந்து நம்மை அரவணைத்துக் கொண்டு நம்மை உத்தம் இறைநிலைகளுக்கு உயர்த்தக் கூடாதா என்று கேட்கலாம். அவ்வப்போது அவநம்பிக்கை கொண்டு அவதூறுகளைப் பேசி அரைகுறை நம்பிக்கையுடன் ஒரு மகானிடம் இருப்பதைவிட, நல்ல மனோதிடம் உள்ள, ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கே தம்முடைய நல்ல நேரத்தை மகான் செலவழிப்பார் என்றால் அதுதானே சிறப்புடையது! இருந்தாலும் ஒவ்வொரு மகானும் தன்னிடம் அவநம்பிக்கையைக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடபலவிதமான வாய்ப்புகளை அளிக்கின்றார். ஏன்? அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வதற்காக! அத்தகைய பரந்த காருண்யம் படைத்தவர்களே மகான்கள். ஆனால் மனிதர்கள் தான் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

நமக்கு முந்தைய காலம் வரை வாழ்ந்து மறைந்த மகான்கள் எண்ணற்றோர் உண்டு. இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற மகான்களும், யோகியரும், சித்புருஷரும் உண்டு. ஆனால் அவர்கள் உத்தம இறைநிலைகளைப் பெற்றவர்கள் என்று நாம் அறிந்த போதிலும் எவ்வகையில் நாம் நம்மை இறைநிலைகளில் உய்வித்துக் கொள்வதற்காக அவர்களைச் சரணடைந்து உள்ளோம் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில் துன்பம் ஏற்படுமானால் அவரிடம் போய் நின்று ஏதோ விபூதி, குங்குமப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றோம். இந்த வெறும் துன்பங்களைத் துடைப்பதற்காகவா மகான்கள் இருக்கின்றார்கள்? பிறவிப் பிணிகளையே களையவல்ல மகான்கள் இருக்கும் பொழுது அவர்களிடம் சாதாரண வாழ்க்கைப் பிரச்னைகளைக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும்?

தாம் இறைவனுடன் ஐக்கியமாகி இருந்தும் முக்தி, மோட்சங்களை அடைந்திருந்தாலும் கூட மீண்டும் ஒரு பிறவி எடுத்து, பூலோகத்திற்கு வந்து இத்தகைய உயர்நிலைகளை எவ்வாறு அடையலாம் என்பதைப் பிறருக்குப் புகட்டுவதற்காக அனைத்து விதமான இன்ப துன்பங்களை ஏற்று நம்முடன் வாழ்கின்ற மகான்களின் வாழ்க்கை அறிவிக்கின்ற நற்செய்தி என்னவெனில் இத்தகைய உத்தம் இறைநிலைகளை நாம் அடைந்தாலும் அத்தகைய நிலைகளைப் பிறரும் அடைவதற்காக நாம் எத்தகைய இறைப்பணிகளைச் செய்கின்றோம் என்பதை ஒட்டித்தான் நம் முக்தி நிலையும், மோட்ச நிலையும் அமைகின்றது என்பதே! அவ்வாறு சுயநலம் இல்லாமல் பிறரும் நல்வாழ்வு வாழ்வதற்காக நாம் எத்தகைய இறைப்பணிகளைச் செய்கின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய உத்தம இறைநிலைகளும் கூடுகின்றன!

மாதத்திற்கு ஒருமுறை உழவாரத் திருப்பணி செய்வோர் உண்டு. வாரம் ஒருமுறை உழவாரத் திருப்பணி செய்வோரும் உண்டு. ஒரே மாதத்தில் அன்னதானம், ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி, பௌர்ணமி பூஜைகள், உழவாரத் திருப்பணி அனைத்தையும் சேர்ந்து செய்வோரும் உண்டு. ஆகையால் இத்தகைய நற்காரியங்களில் ஒரு சத்சங்கம் மூலமாக ஒருவர் எந்த அளவிற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றாரோ அந்த அளவிற்கு அவரிடமிருந்து சுயநல குணங்கள் பிரிந்து சென்று அவருடைய உடல் புனிதம் பெறத் தொடங்குகின்றது. உடல் புனிதமானால்தான் மனம் புனிதமாகும். மனம் புனிதமானால். உள்ளத்தின் புனித ஜோதி நன்கு புலப்படும். இவ்வாறாகத்தான் உடல், மனம், உள்ளம் இம்மூன்றையும் ஆத்ம ஜோதியாகப் பிரகாசிக்கச் செய்ய முடியும். இதுவே முக்தி நிலை அல்லது மோட்ச நிலை ஆகும்.

எனவே இறப்பிற்குப் பின்னால் தான் வைகுண்ட பதவி அடைவதோ, சிவபதவி. அடைவதோ, முக்தியோ, மோட்சமோ அடைவதென்பது கிடையாது. ஒருவன் தக்க சற்குருவைப் பெற்று உத்தம மனிதனாக வாழ்ந்து, அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தன்னால் இயன்றதைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்து வருவானேயானால் அவன் முக்தி நிலையுடன், மோட்ச நிலையுடன் வாழ்ந்து விடலாம். வாழ்கின்ற நடமாடும் தெய்வம் ஆகின்றான்.

நம்முடைய குருமங்கள கந்தவர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் சத்சங்க மூலமாகக் கடந்த பல வருடங்களாக, பலவிதமான நற்காரியங்களை நிகழ்த்தி வருகின்றார்கள். தம் சற்குருவருளால் முக்தி நிலையை முழுதும் உணர்ந்த சுவாமிகள், தாம் பெற்ற இறைப் பேரின்பத்தைப் பலரும் பெறவேண்டும் என்ற சீரிய எண்ணத்துடன் பல அடியார்களையும் ஊக்குவித்து அன்னதானம், இலவச மருத்துவ உதவி, உழவாரத் திருப்பணி, ஏழை மக்களுக்குத் தேவையான பலவிதமான உதவிகள், பல சித்புருஷர்களுடைய பல எளிய இறை வழிபாடுகளை ஜாதி இன பேதமின்றிப் பலருக்கும் எடுத்துதுரைத்து, தாமே செய்து காட்டி வழிகாட்டுதல் போன்ற பல அற்புதத் திருப்பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.

எனவே சாதாரண மனிதர்களாகிய நம்முடைய கடமை என்னவென்றால் வீணே நாட்களைக் கடத்தாது, வருடங்களைக் கடத்தாது உடனடியாக ஒரு நல்ல சற்குருவை நாடி அவருடைய சத்சங்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டு அவர் காட்டுகின்ற வழியில் பரிபூரண நம்பிக்கையுடன் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தால் முக்தி நிலையை எளிதில் பெற்றுவிடலாம்.

உதாரணமாக, சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை சதய நட்சத்திரத்தன்று மட்டும் லிங்கத்திற்கு சந்தனக் காப்பு இடுகின்ற அற்புதத்தை “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” மூலமாகப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் புகட்டினோம் அல்லவா? இதைப் படித்த ஸ்ரீ அகஸ்திய விஜயம் வாசக அன்பர்கள், தங்களுடைய உற்றார், சுற்றம், நண்பர்கள் குழாமிற்கும் அறிவித்து மேலும் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு இவ்வரிய இறைப்பணியைச் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்தார்கள்.

இவ்வாறு சிறிது சிறிதாகத் தொடங்குவதே முக்தி நிலைக்கான முதல் இறைப்பணியாகும். “ஏதோ நாமே சந்தனம் அரைத்தோம். நம் குடும்பத்தோடு சேர்ந்து அரைத்தோம். அதை இறைவனுக்கு சாற்றினோம்”, என்றில்லாது இத்தகைய பாக்கியம் பல குடும்பங்களுக்கும் செல்ல வேண்டுமென்ற பெருந்தன்மையால் நம் மனம் விரிவடைகின்றதல்லவா? எங்கு சுயநலம் அழிந்து, பிறர் நலம் காண நம் மனம் விழைகின்றதோ அங்கேயே தொடங்குகின்றது இறைத் திருப்பணி. இத்தகைய மோட்ச நிலையையே உள்ளங்கை நெல்லிக்கனி என்று சொல்லுகின்றார்கள். அதாவது நம்முடைய வாழ்க்கையைப் பிறருக்காக அர்ப்பணித்து வாழ்ந்தோமானால் மோட்சமும், முக்தியும் மிக மிக எளிதாகி விடுகின்றது.

பெறற்கரிய அற்புதமான மனிதப் பிறவியைப் பெற்றிருக்கின்றீர்கள். இனியும் வீணாகக் காலத்தைக் கடத்தாது நல்ல சற்குருவை நாடி அவரிடம் உங்களை அர்ப்பணித்துப் பயனுள்ள வாழ்க்கையை பெற்றிடுங்கள்.

இராமேஸ்வரத்தில் உள்ள பாபபக்ஷேஸ்வரர், புண்யதானேஸ்வரர் லிங்க மூர்த்திகளுக்கு அனுஷம்,  ஹஸ்தம், நவமி, புதன் கிழமை திதிகளில், நாளில் தேங்காய் எண்ணெய்க் காப்பிட்டு, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஒதி சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்திடில், சம்ஸ்காரங்களின் முக்கியத்துவம் புரிந்து முக்தி, மோட்ச நிலை பற்றிய தெளிவு கிட்டும்.

தட்சிணாயன புண்ணிய காலம்

தட்சிணாயன புண்யகால மகிமை

தை மாதம் முதல் ஆனி வரையிலான ஆறு மாத உத்தராயண புண்ணிய காலமானது தேவர்களுக்குரித்தான பகல் நேரம். ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாத தட்சிணாயனம் தேவர்களுக்கான இரவு நேரம் என்பதை நாம் நன்கறிவோம். இதில் தட்சிணாயனத்தை ஒட்டி தேவர்களுக்குரித்தான பிரதோஷ காலம் அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தட்சிணாயன புண்ணிய காலத்தின் மகத்துவம் மேலும் சிறப்புடையதாகிறது. உண்மையில் தட்சிணாயன, உத்தராயன சந்திப்பு நிகழ்கின்ற, தேவர்களுடைய பிரதோஷ காலமாக அமைகின்ற ஆனி மாத கடைசி பட்சம் ஆடி மாத முதல் பட்சமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தேவலோகத்திலும் தானியங்கள் விளைகின்றன, ஆனால் அவையெல்லாம் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன. தேவலோகத்திலுள்ள வீதிகள் எங்கும் நவரத்தின மணிகளெல்லாம் குப்பைபோல் எவரும் சீண்டுவாரின்றிக் குவிந்து கிடக்கும். அத்தகைய செல்வச் சிறப்புடையது தேவலோகமாகும். இருப்பினும் தேவாதி தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஆலயங்களில் நிகழ்கின்ற பிரதோஷப் பூஜைகளுக்காக ஓடோடி வருகின்றார்கள் எனில் இத்தகைய பவித்திரமான பூமியில் நாம் பிறக்க என்னே தவம் செய்திருக்க வேண்டும்? ஆனால் இதனை நாம் என்றேனும் உணர்கிறோமா?

நடக்கும் பகுதான்ய ஆண்டானது இந்திரன் பகவானுக்கு மிகவும் ப்ரீதியானது. தான்ய தேவதைகளுக்கு உரித்தானது. எனவேதான் தான்ய பூஜையை பகுதான்ய வருடத்திற்கு உரித்தான சிறப்புப் பூஜையாக ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழ் மூலமாக வலியுறுத்தி வருகிறோம். இவ்வாண்டில் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து அல்லது ஏழு நெல் மூட்டைகளையேனும் வீட்டில் வைத்து இறைத் துதிகளை ஓதி, நைவேத்தியம், தீபாராதனை செய்து வந்தால் இந்திர பகவானின் அனுக்கிரஹத்தைப் பெறலாம். ஆண்டு முடிவில் இதனை அன்னதானம் செய்திடுக!

நம் வாழ்விற்குத் தேவையான நீர், காற்று, உணவு, உடை போன்ற அனைத்தையும் அளிப்பவர்கள் தேவர்களே. தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குபவர் இந்திர பகவான். எனவே இந்திர வழிபாடு பூலோக மனித. வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். அகலிகை பொருட்டு இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தால் பூலோக மக்கள் இந்திரனை ஒரு தேவ மூர்த்தியாக தற்காலத்தில் உணர்வதில்லை. ஆனால் அகலிகை இந்திரன் சம்பந்தப்பட்ட புராண சம்பவப் பின்னணியில் பல ஆன்மீக ரகசியங்கள் உண்டு. அவற்றைத் தக்க சற்குரு மூலம் அறிந்தால் இந்திரனின் இறை பக்தியும் மேன்மையும் புலப்படும்.

பகுதான்ய தட்சிணாயன புண்ணியகால வழிபாடுகள்

தேவர்களே நமது அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசியமான தேவைகளை இறைவனிடம் பெற்று நமக்கு வழங்குகின்றனர். இந்த உன்னத வழிபாட்டை தேவர்கள் எவ்வாறு நிகழ்த்துகிறார்கள் ? ராத்திரி ஸுக்தம், ருணஹர ஸுக்தம் என்ற அற்புத ஸுக்தங்களை இரவு முழுவதும் ஓதி அவர்கள் இறைவனை வழிபடுகின்றனர். எனவே பொதுவாக இரவு நேரங்களில் நாமும் இவ்விரு ஸூக்தங்களை ஒதுவதால் நிம்மதியான உறக்கத்தையும் சாந்தியையும் நற்கனவுகளையும் பெறலாம்.

சூரிய அயன கதி வேறுபாடுகளால் மனிதனுடைய உடலிலும் உள்ளத்திலும் பெருத்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. தட்சிணாயன, உத்தராயன புண்ணிய காலங்களில் நாம் சூரியனிடமிருந்து பெறும் ஒளிச்சக்தி மாற்றமே இத்தகைய வேறுபாடுகளை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது. கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா? நம் கண்களுக்கும் உணர்வுக்கும் வேறுபாடின்றித் தெரியும் சூரிய ஒளியில் அயன கதியில் வேறுபாடா? ஆம். இத்தகைய விந்தையைப் புரிபவர்களே வாலகில்ய மகரிஷிகள். சூரிய ஒளியில் ஏற்படும் அயன மாறுபாட்டிற்கு வித்திட்டு அதை முறைப்படுத்துபவர்களே வாலகில்ய மகரிஷிகள்,

சூரிய பகவான் பவனி வரும் ரதத்தில் ஏழு குதிரைகள் உண்டு. இந்தக் குதிரைகள் தாங்கும் தர்பைப் பலகை மேல் வாலகில்ய மகரிஷிகள் அமர்ந்து தட்சிணாயனத்திலும் உத்தராயணத்திலும் விதவிதமான வேத மந்திரங்களை ஓதி பவனி வருகிறார்கள். நாம் அறிந்தவை ருக், யஜுர், சாம, அதர்வணம் எனப்படும் நான்குவேத மந்திரங்களே, ஆனால் எம்பெருமான் சிவபெருமானிடமிருந்து தாளவாத்தியங்கள் மூலமாய் ஒலித்த வேதமந்திரங்களைக் கணக்கில் அடக்க முடியாது. பூலோகவாசிகள் அறிந்திரா அற்புத வேத மந்திரங்களை வாலகில்ய மகரிஷிகள் ஓதி அனைத்து லோகங்களுக்கும் அருளாசி வழங்குகின்றனர். இவர்களின் அருளாசி சூரிய ஒளி மூலமாக பூலோக மக்களுக்குத் தேவையான நலன்களை அளிக்கின்றன.

ஸ்ரீசூரியபகவான் கோயம்பேடு

இந்திரனின் அனுக்கிரகத்தையும், சூரிய பகவானின் அருள் சக்தியையும் வால்கில்ய மகரிஷிகளின் வேத இறை சக்தியையும் ஒன்றாகத் திரட்டித் தரும் அற்புத தட்சிணாயன பூஜை முறைகளை சித்தர்கள் வகுத்துள்ளனர்.

ராத்திரி ஸுக்தம்

எளிய இந்த வேத மந்திரத்தை இரவில் ஒதுவது மிகவும் அற்புதமான பலன்களை அளிக்கும். குறிப்பாக பகுதான்ய தட்சிணாயன இரவு நேரத்திற்கு ராத்திரி ஸுக்தம் ஒரு கவசமாக அமைந்துள்ளது. வால்கில்ய மகரிஷிகள் பல அற்புத வேத மந்திரங்களின் சக்தியை சூரிய ஒளி மூலமாக பூமிக்கு அனுப்பினாலும் அவற்றின் தெய்வீக அருள் சக்தியை முழுமையாகப் பெறும் அளவிற்கு மனிதர்களுக்கு ஆன்மீக சக்தி கிடையாது. ஆன்மீகம் நிறைந்துள்ளவர்களுக்கும் ஓரளவே மனித மனமும் உடலும் பண்பட்டுள்ளது. எஞ்சிய தேவையான நற்சக்திகளைப் பெற ராத்திரி ஸுக்தம் பெரிதும் உதவுகின்றது.

தலை விரித்தாடும் தீயசக்திகள்:

1. எதிர்மறை சக்திகள் பகல் பொழுதைவிட இரவு நேரத்தில் மிகவும் வலிமை பெற்று விளங்குகின்றன. கலியுகத்தில் மது, மங்கை, சூதாட்டம் மூலமாகவே எதிர்மறை சக்திகள் தங்கள் ஆதிக்கத்தை மனிதர்கள் மேல் செலுத்துகின்றனர்.

2. இரவு நேரத்தில் மனமும், உடலும் ஓரளவு வலுவிழந்து போவதால் தீயசக்திகள் இரவு நேரத்தில் மனிதர்களை எளிதாக ஆட்டிப் படைக்கின்றன.

3. இறைச் சிந்தனையுடன் நல்லதையே நினைக்கும் தூய மனம் கூட இரவு நேரத்தில் செயலிழந்து பல தீய எண்ணங்களுக்கு உட்படுகிறது.

ராத்திரி ஸுக்தம் ஒன்றே இரவில் விரவியுள்ள தீய சக்திகளை விரட்டும் எளிய ஆயுதமாகும்.

ராத்திரி ஸுக்தத்தின் பலன்கள்:

1. தீய எண்ணங்கள், காம எண்ணங்களும் விலகும். இரவில் நிம்மதியான உறக்கமும் அமையும். தீய கனவுகளால் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

2. இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நலம். குறிப்பாக பகுதான்ய வருட தட்சிணாயனத்தில் பெண்கள் மாலை ஆறு மணிக்கு மேலும், ஆண்கள் இரவு எட்டு மணிக்கு மேலும் வெளியே செல்லாதிருத்தல் மிக்க நலம். இதனால் பல துன்பங்களைத் தவிர்க்கலாம்.

3. உணவு விடுதிகள், ஓட்டல்கள் போன்ற தொழில் ஸ்தாபனங்கள் அனைத்தும் இரவு பத்து மணிக்கு மேல் செயல் படாமல் இருப்பது உத்தமம்.

தற்காலச் சூழ்நிலையில் 

a) இரவுப் பணி (Night duty), overtimes work, shift duty போன்ற வேலைகள்.

b) தொலைதூரங்களுக்குப் பல நாட்களுக்குத் தொடர்ந்து பிரயாணம் செய்ய வேண்டிய நிலை

c) வெளியூர்களில் பணிபுரிபவர்கள் அவகாசம் இன்றி விடுமுறையில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரைக் காணச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் –

போன்ற காரணங்களால் இரவில் பயணம் செய்வதை எவ்வாறு தடுக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இரவு நேர பயணத்தால் ஏற்படும் துன்பங்களையும், பலத்த நஷ்டங்களையும் தெளிவாக உணர்ந்தால் நிச்சயமாக இதைத் தவிர்க்கலாம். போர்க்காலங்களிலும், மற்ற நெருக்கடிக் காலங்களிலும் மாலையில் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் போது நமது அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளைச் சமாளித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றதல்லவா? அவ்வாறிருக்க நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகளால் எவ்வளவோ நிம்மதியாக வாழலாமே! மக்கள் ஒன்றுபட்டால் அரசும் மக்களின் நன்மைக்காக தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரும் அல்லவா!

நட்சத்திர தியானம் பகுதான்ய தட்சிணாயன புண்ணிய காலத்தில் இரவு நேர நட்சத்திர தியானத்தால் சிறந்த பலன்களைப் பெறலாம். பகலில் சூரியனிடமிருந்து வாலகில்ய ரிஷிகளின் அனுக்கிரகத்தை நேரிடையாகப் பூரணமாக பெறமுடியாத காரணத்தால் இரவில் நட்சத்திர தியானம் வலியுறுத்தப்படுகிறது. சூரியனிடமிருந்து மனிதனுக்குத் தேவையான அளவில் சக்திகளைப் பெற்று நட்சத்திர தேவதைகள் அவற்றை பூலோகவாசிகளுக்கு வழங்குகின்றனர். எனவே தினமும் பதினைந்து நிமிடங்களாவது அமைதியாக வானில் ஒளிரும் நட்சத்திரங்களை தரிசித்தவாறே அமர்ந்திருப்பது ஒரு உன்னத வழிபாடாகும்.

நட்சத்திரங்களின் அருள் கடாட்சம் திருஅண்ணாமலையில் பலமடங்கு பல்கிப் பெருகுகின்றது. சூரியனோ, சந்திரனோ, நட்சத்திரங்களோ திருஅண்ணாமலையின் குறுக்கே செல்லாமல் திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்கிச் செல்வதால் அவர்களின் அருட்சக்தி பல்கிப் பெருகி நமக்குப் பன்மடங்கு நன்மைகளைத் தேடித் தருகின்றது. எனவே தட்சிணாயன புண்ணிய காலம் முழுவதும் முடிந்த போதெல்லாம் இரவில் கிரிவலம் வந்து சூரிய உதய நேரத்தில் சூர்யலிங்கத்திலிருந்து திருஅண்ணாமலையாரைத் தரிசிப்பதும் (பாஸ்கர தரிசனம்) அயனாம்ச தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த வழிபாடாக அமைகிறது.

மேலும் சூர்யேஸ்வர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வது சிறப்புடையது. பூமியில் நம் காணும் சூரியன் அல்லாமல் பல கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உண்டு. இந்த சுயம்பு மூர்த்திகளின் பிறப்பிடமே திருஅண்ணாமலையாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பால பருவ குருகுல வாச அனுபூதிகள்)

அமாவாசை சித்தரின் தீட்சண்யமான கண்களில் பிறந்த தெய்வீக ஒளிக் கற்றைகள் சிறுவனின் உடலில் பாய்ந்தன! அவனோ தன்னையும் மறந்தவனாய் அருட்பெருந் தெய்வீக நிலைக்கு உந்தப்பட்டவனாய்ப் பேரின்ப நிலையில் உறைந்தான்!

சற்குருமார்களுடைய உபதேசங்களில் பல முறைகள் உண்டு. கண்களால் பார்ப்பது, காதுகளில் மந்திரம் ஓதுவது, தலையைத் தொடுவது, பாதங்களை சிஷ்யர்களின் கரங்களில் வைப்பது, தீர்த்தம் அளிப்பது என்று பலவிதமான வழிமுறைகளில் ஒரு சற்குருவானவர் தன்னுடய தெய்வீக சக்திகளைச் சிஷ்யனுக்கு அளிக்கின்றார். மலப்புழுச் சித்தர், கொடுக்குவால் குடுமி சித்தர், சிலகாகித சித்தர் போன்றும் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள், ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள், படேசாஹிப் மகான் போன்றோரும் பிரபஞ்சத்தில் உள்ள ஜீவன்களுக்குப் பலவிதமான முறைகளில் அனுகிரகத்தைத் தந்தருள்கின்றனர்.

சற்குருவானவர் தன்னுடைய சிஷ்யனுக்குப் பல மகான்களின், சித் புருஷர்களின், யோகியர்களின் தீர்த்த, ஆலய தரிசனங்களின் சக்தியைப் பெற்றுத் தருவதில் பேரானந்தம் கொள்கின்றார். இவ்வகையில் நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள், சிறு பையனாய்த் தன்னிடம் தஞ்சம் புகுந்த வெங்கடராமன் என்ற அந்த தெய்வீக குணங்கள் நிரம்பிய சிறுவனுக்கு அமாவாசை சித்தர், ஸ்ரீ கசவனம்பட்டிச் சித்தர், ஸ்ரீ மஹா அவதூது பாபா போன்ற அற்புத சித்புருஷர்களின் தரிசனத்தையும் நல்ஆசிகளையும் இவ்வாறாகப் பெற்றுத் தந்தார்.

“ஏண்டா இவருக்கு காலைப் பிடித்து விடாமல் என்ன செஞ்சுகிட்டு இருக்கே!” - பெரியவரின் குரல் கேட்டுச் சிறுவன் தன் நிலைக்கு வந்தான்!

அமாவாசை சித்தரோ விநோதமான குக்குடாசன நிலையில் யோக நித்திரை பூண்டிருந்தார்! பெரியவர் தாம் கொண்டு வந்திருந்த பானை, விறகு எல்லாவற்றையும் கொண்டு பையனையும் அருகில் உதவிக்கு வைத்துக் கொண்டு கிடுகிடுவென்று சோறு வடித்து வாழைக்காய்ப் பொறியலைச் செய்து முடித்து விட்டார்.

“இன்னிக்கு அமாவாசைடா, பித்ரு சாந்தி தினம்டா! வாழைக்காய் சேர்க்கறது ரொம்ப நல்லது!”

பெரியவருடைய சமையலைப் பற்றிச் சிறுவனுக்கு நன்றாகவே தெரியும், எங்கிருந்து தான் அந்த வாசனையும் ருசியும் வருமோ, இன்றுவரை எவரும் அறியாத ரகசியம்!

கேதார்நாத்தில் ஒருமுறை காரிருளில் கரடு முரடான பாதையில் நடந்து சென்றபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எங்குமே டீக்கடையே தென்படாத போது எங்கோ சென்று வாங்கி வருவது போல் சுக்கா ரொட்டி, வெள்ளரி, வெங்காயம், சுடச் சுட டீயுடன் திரும்பி வருவார்! இல்லாதது எப்படி வந்தது?

“இதெல்லாம் உனக்குப் புரியாத, தெரிஞ்சுக்க வேண்டாத சப்ஜெக்டுடா! ஆனா பாடுபட்டாத்தான் ஒரு டம்ளர் தண்ணீர் கூட கெடைக்கும், தெரிஞ்சுக்கோ!” என்று சொல்லி வாயை அடைத்து விடுவார்!

சித்தன் போக்கு....

சோறும், வாழைக்காய்ப் பொறியலும் தயிரும் ரெடியாகி விட்டது! யோக நித்திரையிலிருக்கும் அமாவாசைச் சித்தரை எப்படி எழுப்புவது?

“ஏன் வாத்யாரே! அவர் தூங்கும்போதே கொஞ்சம் கொஞ்சமா வாயில் ஊட்டிட்டா என்ன ?”

பெரியவர் திரும்பிப் பார்த்தார். அவர் பார்வையில் கொப்பளித்த கடுமையையும் வெப்பத்தையும் சிறுவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சிறுவனின் கண்களில் பொலபொலவென்று நீர் தாரை தாரையாக வழிந்தது! பெரியவர் வாஞ்சையுடன் சிறுவனின் தலையை அரவணைத்தார்!

“ஏண்டா, ஏதாச்சும் சொன்னா உடனே பொம்பளைங்களாட்டம் அழுது ஆர்ப்பாட்டம் பண்றியே!”

“அவர் எங்கடா தூங்கறாரு? சித்தருங்க மஹானுங்க எல்லாம் தூங்கறதே கிடையாதுடா! அவங்க தூங்கினா உலகமே அஸ்தமிச்சிடும்! இந்த உடம்பை விட்டுக் கெளம்பி மேலே இருக்கிற எத்தனையோ லோகங்களுக்கும் போவாங்க! ரெண்டாவது ஏதோ நம்ப சமைச்சோமே, அன்போட, பக்தியோட சமைச்சாத்தான் அவங்க சாப்பிடுவாங்க. சித்தர்களுக்கு ஜாதி, மதம், சமயம், இனம், குலம்னு எந்த வேறுபாடும் கெடயாது உண்மையான அன்பு இருந்தால் போதும் அதுதான் பக்தி!”

“அதனால் நம்ப இப்ப சமைச்சு வச்சிருக்கோமே அதை அவர் சாப்பிட்டாலும் சாப்பிடலாம், பசுவோ, காக்காய்க்கோ எதுக்கும்கொடுக்கலாம்! ஏன் நம்பளையே கூட சாப்பிடச் சொல்லலாம்! எதுக்கும் ரெடியா இருக்கணும்டா! சித்தருங்க இப்படி நமக்கு எத்தனையோ சோதனை வைப்பாங்க! காக்காய்க்குப் போட்டாரே, கிளிக்குப் போட்டுட்டாரேன்னு தப்பா நெனைக்கக் கூடாது! எல்லாமே அவர் ஆசீர்வாதம்தான்! நம்ப அன்போடேயோ, பக்தியோடேயோ சுயநலமில்லாம செஞ்சிருக்கோமான்னு நமக்கே தெரியாது! அதுக்காக அவங்க அதைச் சாப்பிடாம வேற மாதிரி எப்படியோ dispose பண்ணிட்டாங்களேன்னு வருத்தப்படக் கூடாது! இப்படி நெறய spiritual tests எல்லாம் இருக்கும்டா, அதையெல்லாம் குருநாதர் அருள் இருந்தாத் தாண்டா கடந்து போக முடியும்!...”

“இப்ப இவரு நம்ப பிரசாதத்தை ஏத்துப்பாரான்னு நமக்கே தெரியாது! ஏன்னா அடியேன் ஒரு கேவலமான மனுஷப் பிறவிடா! அடியேனுக்கு இவரோட தரிசனத்தைக் கொடுத்துக் கருணை பண்ணினதே அங்காளி ஆத்தா தாண்டா! ஏதோ நம்ம பிரசாதத்தை அவர்கிட்ட ஒப்படைச்சுடுவோம்! அவர் எப்படி வேணுமானாலும் பண்ணிக்கட்டும்! இத வுட்டுட்டு, அவர் யோக நித்திரைல அதாவது சூட்சும சரீரத்துல கோடானுகோடி லோகங்களுக்குப் போய்க்கிட்டு உடலை இங்க வச்சுட்டுப் போகும்போது அவருக்கு சோத்தை ஊட்டினா, இது தர்மமா, நியாயமா நீயே சொல்லு ராஜா!”

சிறுவன் தலைகுனிந்து நின்றான்! அப்பப்பா குருகுல வாசத்தில் எவ்வளவு அற்புதமான பாடங்கள்? பெரியவர் பேசி முடித்தவுடன் சொல்லி வைத்தாற்போல, சித்தர் கண்களைத் திறந்தார்!

பெரியவர் பவ்யமாக அன்னத்தைப் படைத்திட... அவ்வளவுதான்....

கடகடவென்று உண்ணத் தொடங்கினார். சில நிமிடங்களில் அத்தனை சோறும், தயிரும், வாழைக்காய்ப் பொறியலும் காலியாயிற்று, மன்னிக்கவும் அத்தனையும் சித்தரிடம் ஐக்கியமாயிற்று!

“பாவம், ஒரு மாசமா எதுவும் சாப்பிடலை தானே!” சிறுவனையும் அறியாமல் இந்த எண்ணம் உள்ளே தலை தூக்கி விட்டது!

பெரியவர் திரும்பிப் பார்த்தார். அர்த்தபுஷ்டி நிறைந்த பார்வை அது! 

“ஒரு மாசமா ஒத்தர் மரத்தைப் புடிச்சுக்கிட்டு மேலே உக்காந்துருக்காரு, சோறு தண்ணியில்லாம! அதுவும் இந்த தென்னை மரமே, இப்படிப்பட்ட தெய்வீக சக்தி நெஞ்ச சித்தபுருஷர் நம்ப மேலே இருக்கறதுன்னா எப்படிப்பட்ட பாக்கியம்னு புரிஞ்சுகிட்டு அதுவே அவரை கெட்டியாப் புடிச்சுக்கிட்டு இருக்கு, தான் நற்கதி அடையணுமேன்னு நெனச்சுகிட்டு! இந்த மாதிரி சித்தர்களெல்லாம் சகல கோடி அண்டங்களையும் ஆட்டிப் படைக்கிற சக்தி உள்ளவங்க! இவங்களுக்குப் பசியோ, தூக்கமோ எதுவுமே கெடையாதுடா!”

இதற்குள் சித்தர் அனைத்தையும் உண்டு ஒரு தீர்க்கமான பார்வையைச் செலுத்திட, பெரியவர் அவருடைய கால்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.

“சுவாமி! இயன்றவரை எங்களால் ஆனதைத் தங்களுக்குப் படைத்து விட்டோம். தாங்கள் உண்பது கோடிக் கணக்கான ஜீவன்களின் உய்விற்காகத்தான்! எங்களை மன்னித்து அருள் புரிய வேண்டுகிறோம்!”

சிறுவனும் இவ்வாறு வேண்டியே நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து அவர் தம் திருப் பாதங்களைப் பற்றித் தாள் பணிந்து வணங்கிட, அவரோ சாந்தமான, கருணை ததும்பும் விழிகளால் தீட்சண்யமாக அவர்களை நோக்கிய அடுத்த விநாடியில் கிடுகிடுவென்று தென்னை மரத்தில் ஏறி விட்டார்!

அதற்கு அடுத்த விநாடியில், பெரியவர் விறுவிறு என்று சிறுவனை அழைத்துக் கொண்டு கிரிவலப் பாதைக்கு வந்துவிட்டார்!

“ஏண்டா! இதுலேந்து என்ன புரிஞ்சுகிட்ட!”

சிறுவன் சற்றே நின்றான்.

“உண்மையைச் சொல்லிடறேன் வாத்யாரே! அந்த பிரசாதத்துல ரெண்டு பருக்கையாவது கெடைக்குமான்னு பார்த்தேன் வாத்யாரே!”

“ஏண்டா உன் வயித்துல போட்டா உனக்குத்தான் வரும். அந்த ரெண்டு பருக்கையை மஹானுங்க, சித்தருங்கவயத்துலே போட்டா அது பெருகி கோடானு கோடி பேரோட வயித்துப் பசியைத் தீர்த்துடும்டா! இதுதாண்டா நாங்க உனக்குக் கத்துக் கொடுக்கற பாடம்!”

ரிஷபாயன கோமுகம் எங்கே?

சென்ற இதழில் நான்கு நந்திகளுக்கு இடையே உள்ள கோமுகத்தைப் பற்றி விளக்கியுள்ளோம்.

இவ்வற்புதமான கோயிலைப் பற்றி அறிய தாங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?

தீய எண்ணங்களையும் தீய வினைகளையும் மாய்க்கின்ற சக்தி உடையதாகவும், துறவற தர்மத்தில் சந்நியாசியாக வாழ்ந்து அறிந்தோ அறியாமலோ தவறுகளைச் செய்து காவியின் புனிதத்தை மாசுபடச் செய்ததற்கான பிராயச்சித்தத்தைக் குருவருளால் அருள வல்லதுமான அரிய அற்புதமான ரிஷபாயன கோமுகம் அமைந்திருக்கும் திருத்தலமே திருச்சி அருகே திருமழபாடி ஸ்ரீ வைத்தியநாதர் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் கொள்ளிடம் நதி உத்தரவாஹினியாக வடக்கு நோக்கிப் பாய்ந்து அருளாட்சி செய்கிறது.

அங்கவ மகரிஷி

வானில் தெரியும்நட்சத்திரங்கள்

அங்கவ மகரிஷி தன் மூன்று வயதிலேயே ஆற்றிய அற்புத நட்சத்திர தியான நிலைகளைச் சென்ற இதழில் கண்டோம். இவ்வரிய தியான சித்தியால் எதிர்காலத்தை அறியும் ஆற்றலை அவர் இறைப் பிரசாதமாகப் பெற்றார். எதிர்காலம் என்றால் நாம் நினைக்கும் வகையில் நூறு, இருநூறு ஆண்டுகள் அல்ல. தன் எதிரே உள்ள ஜீவன் எதிர்காலத்தில் எடுக்கக் கூடிய பலகோடி பிறவிகளைப் பற்றியும் தெளிவாக உணர்ந்தார் அங்கவ மகரிஷி. ஆனால் இந்த அபூர்வ சக்தியை அவர் ஒருபோதும் வெளிக்காட்டுவது கிடையாது. ஜீவன்களின் மேன்மைக்காக உறங்காது இரவு முழுவதும் நட்சத்திர தியானத்தில் ஆழ்ந்து அருட் தொண்டாற்றி வந்தார் அங்கவ மகரிஷி. மனித உடலில் இருந்தாலும் கண் இமைக்காமல் தேவவாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

அன்றும் இன்றும் என்றும் தன் பத்தாயிரம் உத்தம் சீடர்களுடன் ஒவ்வொரு இரவும் திருஅண்ணாமலை கிரிவலம் வந்து அனைத்து ஜீவன்களின் நன்மைக்காக இறைவனிடம் பிராத்தித்த வண்ணமிருக்கின்றார். திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் அடியார்கள் இன்றும் திருஅண்ணாமலை உச்சிப் பகுதியில் நட்சத்திர வடிவில் வலம் வரும் அங்கவ மகரிஷியை தரிசித்து மகிழலாம். தினமும் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிஷ்யர்களுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் உத்தம மஹரிஷியாம் அங்கவ மகரிஷியே நட்சத்திர தியான யோகத்தில் உத்தம நிலையைப் பெற்றவர்! இன்றும் இரவு நேர நட்சத்திர வழிபாட்டிற்கு அருள் புரிபவர்! இவர் அனைத்துக் கோடி நட்சத்திரங்களையும் வழிபட்டதோடன்றி அந்தந்த நட்சத்திரத்திற்குரித்தான தேவதையையும் அதிதேவதையையும் முறையாக வழிபட்டு நட்சத்திர வழிபாட்டைப் பூர்ணமாக இயற்றி அரும்பணி ஆற்றுகின்றார்.

நட்சத்திரம் அதிதேவதை
அசுவனி கலைவாணி
பரணி துர்கா
கிருத்திகை அக்னி
ரோகிணி பிரம்மா
மிருகசீரிஷம் சந்திரன்
திருவாதிரை ருத்ரன்
புனர்பூசம்அதிதி
பூசம்வியாழன்
ஆயில்யம் ஆதிசேஷன்
மகம் சுக்ரன்
பூரம் பார்வதி
உத்திரம் சூரியன்
அஸ்தம் ஸவிதா
சித்திரை விஸ்வகர்மா
சுவாதி வாயு
விசாகம்சுப்ரமண்யன்
அனுஷம்லஷ்மி
கேட்டைஇந்திரன்
மூலம்நிருதி
பூராடம்வருணன்
உத்திராடம் கணபதி
திருவோணம் விஷ்ணு
அவிட்டம்வசு
சதயம்எமன்
பூரட்டாதிகுபேரன்
உத்தரட்டாதி காமதேனு
ரேவதிசனி

நட்சத்திர தியானம் என்பது இரவில் மட்டுமல்லாது பகலிலும் செய்ய வேண்டிய வழிபாடாகும். அங்கவ மகரிஷியைப் போன்ற உத்தம ரிஷிகளே பகலிலும் நட்சத்திர தேவதைகளை தரிசிக்கும் பேறு பெற்றவர்கள், சாதாரண மக்கள் என்ன செய்வது?

ராசிமண்டலம் லால்குடி

உச்ச விதான நட்சத்திர தியானம்

சாதாரண மக்களும் பகலில் நட்சத்திர வழிபாட்டை இயற்றிட இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார் அங்கவ மகரிஷி. பல்லாண்டுகள் கூடிய அருந்தவத்தால் மகிழ்ந்த ஈசன் அப்பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தார். எம்பெருமான் ஆசியுடன் குறிப்பிட்ட தலங்களில் உச்சி விதானங்களில் (பிரம்மாந்திரம்) பன்னிரு ராசிகளைப் பிரதிஷ்டை செய்தார் அங்கவ மகரிஷி. 27 நட்சத்திரங்களின் அனுக்கிரக சக்தி இங்கு12 ராசிகளிலும் விரவி நிற்கும். இத்தகைய பிரம்மாந்திர ராசி பிரதிஷ்டைகளை திருகோகர்ணம் புதுக்கோட்டை, ஆவுடையார் கோயில், திட்டை (தஞ்சாவூர்), ராமேஸ்வரம், திருத்தவத்துறை லால்குடி போன்ற பல திருத்தலங்களில் இன்றும் தரிசிக்கலாம்.

இந்த ராசி மண்டலங்களை பகலில் வழிபடுவதால் நட்சத்திரங்களைப் பகலிலும் தியானித்து வழிபட்ட பலன்களை எளிதாக சாதாரண மக்களும் பெறலாம் என்றால் அங்கவ மகரிஷியின் தியாகம் எவ்வளவு சிறப்புடையது? இத்தகைய ராசி மண்டலங்களை சிறப்பாக வழிபடும் முறையை அங்கவ மகரிஷியே வகுத்துள்ளார். அதாவது இந்த ராசி மண்டல பிரதிஷ்டைக்கு நேர் கிழே நின்றுகொண்டு கைகள் இரண்டையும் உயரே தூக்கி நமஸ்கார பாவத்துடன் அல்லது மிருகி முத்திரை எனப்படும் சிறப்பான காயத்ரீ முத்திரை பாவத்துடன் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரையும் சொல்லி ஒருமுறை தன்னைத்தானே வலம் வர வேண்டும். இவ்வாறு 27 ஆத்ம பிரதட்சணங்கள் தொடர்ந்து செய்தால் அதுவே சிறந்த பகல் நேர நட்சத்திர வழிபாடாக அமைகிறது. தினமும் குறிப்பாக அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் செய்ய வேண்டிய முக்கியமான பூஜையிது!

கோயில் திருமணங்கள்

ஆனித் திருமஞ்சனம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது ஆன்றோர் வாக்கு. இதன் பொருள் என்ன? இவருக்கு இவர் மனைவி என்பது இறைவனால் முடிவு செய்யப்பட்ட விஷயம். இவ்வாறாக இறைவனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்றை இறைச் சந்நிதியில் இறைவன் முன்னிலையில் நிகழ்த்துவதே முறையல்லவா! தொன்று தொட்டு கோயில்களிலேயே கடவுளின் அனுக்கிரகத்தோடும், மகரிஷிகள், தேவர்களின் பரிபூரண ஆசியுடனும் நடைபெற்று வந்த திருமணங்கள் காலப் போக்கில் கல்யாண மண்டபங்களில் நிகழ்த்துகின்ற நிலைமைக்குத் தாழ்ந்துவிட்டது வருந்துதற்குரிய விஷயமாகும்.

கோயில் திருமணங்களின் சிறப்பு

நமது முன்னோர்கள் கோயில்களில் திருமணங்கள் நடத்தியதற்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. ஆலயத்தில் நடக்கும் திருமணங்களின் போது அக்னி பகவானே முன்னின்று ஹோமங்களை நிகழ்த்துகின்றார். அக்னி பகவான் சாட்சியாக மணமகளுக்கு மூன்று தேவ முடிச்சுகளுடன் மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது. இந்திரன் தலைமையில் தேவர்கள் வேதங்களை முழங்க அந்தந்தக் கோயில்களில் உறையும் தேவதைகளும், சித்தர்களும், மகான்களும், தெய்வ மூர்த்திகளும் திருமணத் தம்பதிகளின் மூதாதையர்களும் தங்கள் பூரண அருளாசியை வழங்கி மணமக்கள் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம்,தூய்மையான அன்புள்ளம் கொண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர்.

அருளாசி என்னும் அற்புத ஊற்று

தெய்வங்கள் நல்கும் இந்த அருளாசியை மற்ற இடங்களில் ஏன் பெற முடியாது? கல்யாண மண்டபங்களில் மனிதர்களால் ஹோமங்கள் வளர்க்கப்படுகின்றன. தற்காலத்தில் ஹோமத்தில் பலவிதமான குறைபாடுகள் உள்ளன. ஹோமத்தில் ஆல், அரசு போன்ற சமித்துக்களுக்குப் பதிலாக புளி, சவுக்குக் கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். தூய பசு நெய்யால் ஹோம ஆஹுதிகள் அளிக்கப்படுவதில்லை. உச்சரிக்கும் மந்திரங்களில் பிழைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பணத்திற்காக ஹோமங்கள் செய்யப்படும்போது அதனால் எந்தவிதமான தெய்வீக அருட்சக்தியும் ஏற்படுவதில்லை, பணம் வாங்கிக் கொண்டு செய்யப்படும் ஹோமங்களில் அளிக்கப்படும் ஆஹுதிகளை தெய்வங்களும் தேவதைகளும் முறையாக ஏற்பதில்லை. இன்னும் பல்வேறு காரணங்களால் தெய்வங்கள் வழங்கும் அருளாசி என்னும் அற்புத ஊற்றும் பலவிதங்களில் தடைப்படுகிறது.

திருமண தேவதைகள்

பன்னெடுங் காலமாக இளஞ்சிவப்பு கூடிய மஞ்சள் நிறப் பத்திரிகைகளையே திருமண அழைப்பிதழ்களாக அச்சடிப்பதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். பத்திரிகைகளின் இருபுறமும் மாலை போடுவது போல் இரு தேவதைகளின் உருவங்கள் அப்பத்திரிகையை அலங்கரிக்கின்றன. மங்களபாஷிணி என்னும் திருநாமத்தைப் பூண்ட இவ்விரு தேவதைகளே திருமண முகூர்த்த நேரத்தில் திருமணத் தம்பதிகளை ஆசிர்வதிக்கின்றனர். ஆனால் இந்த அற்புத தேவதைகள் மிகத் தூய்மையான இடத்திலேயே தங்க முடியும். கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் போன்ற இடங்களில் இத்தேவதைகள் பிரவேசிக்க விருப்பம் கொள்வதில்லை. எனவே கோயில் அல்லாத மற்ற இடங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு இத்திருமண தேவதைகளின் அற்புத ஆசி கிட்டாமல் போய்விடுகிறது.

தடங்கல்களைத் தகர்க்கலாமே!

செவ்வாய் தோஷம், நாகதோஷம், களத்திர தோஷம் போன்ற பல்வேறு தோஷங்களினால் பல பெண்கள், ஆண்களின் திருமணங்கள் நன்கு கூடாமல் அல்லல்படும் அவல நிலையைக் காண்கிறோம். சில சமயங்களில் அத்தகைய தோஷமுடையவர்களுக்கு மிகச் சிரமப்பட்டு திருமணங்களை நடத்தி வந்தாலும் திருமணத்திற்குப் பின் தம்பதிகளுக்குள் ஒற்றுமையில்லாமல் சண்டை , சச்சரவுகள், விதவா யோகம் போன்ற பல்வேறு துன்பங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

சற்குரு ஒருவர் முன்னிலையில் அவர் ஆலோசனையின் பேரில் அவர் காட்டும் வழியில் திருமணங்கள் நிகழுமாயின் அத்தகைய திருமணங்களில் ஏற்படக்கூடிய தோஷங்களும் குறைபாடுகளும் நீங்குகின்றன! உதாரணமாக நாகதோஷம், செவ்வாய் தோஷம் உடைய மணமக்களின் திருமணங்களை சற்குருவானவர் நாகதோஷத்திற்குப் பரிகாரம் நல்கும் தலமாகிய நாகநாத சுவாமி திருக்கோயிலில் (திருச்சி) நடத்தி சுகம் தரும் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றார். முழுமையான ஜாதகப் பொருத்தங்கள் அமையாத மணமக்களின் திருமணங்களை திருச்சி திருவெள்ளறைச் சிவன் கோயிலில் நடத்தி வைத்து ஒற்றுமையான மணவாழ்க்கைக்கு வித்திடுகிறார் சற்குருநாதர். இவ்வாறு கோயில் திருமணங்களின் விந்தைகளை, அற்புதங்களை சற்குருமார்கள் இந்த வைபவங்களில் நிகழ்த்தும் இறை, குரு லீலைகளை விவரித்துக் கொண்டே செல்லலாம்,

ஸ்ரீமங்களாம்பிகை
இடையாற்றுமங்கலம்

வினை தீர்க்கும் விவாகச் சடங்குகள்

நம் முன்னோர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பல்வேறு சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். தெளிந்த மனதுடன் இச்சடங்குகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் பல அற்புத உண்மைகள் விளங்கும். எல்லோரும் அறிந்த 'அம்மி மிதித்தல்' என்ற எளிய சடங்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தற்காலத்தில் ஏதோ ஓர் அம்மியின் மேல் மணமகளின் பாதங்களை மணமகன் பிடித்து வைப்பதுடன் சடங்கு பூர்த்தியாகி விடுகின்றது. இது ஓர் அரைகுறையான சடங்கே ஆகும்.

உண்மையில் ஆதிகாலத்தில் மஞ்சள் அரைப்பதற்காகவும், இறைவனுக்கு வேண்டிய அபிஷேகப் பொருட்களைத் தயார்ப்படுத்தவும் அனைவர் வீட்டிலும் தனியாக அம்மிகள் வைத்திருந்தனர். சுமங்கலிகளே அத்தகைய அம்மிகளை பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு தலைமுறை தலைமுறையாக 60, 80 வருடம் இறைத் தொண்டுகள் பல செய்து வாழ்ந்த சுமங்கலிகள் பயன்படுத்தி வந்த அம்மிகளையே மணமகளுக்கு அம்மி மிதிக்கப் பயன்படுத்துவர்.

இதனால் பல மூத்த சுமங்கலிகளின் ஆசீர்வாதமும் பல தெய்வ மூர்த்திகளின் அனுக்கிரகமும் மணமகளுக்குக் கிட்டும். இந்த ஆசிர்வாதத்தை முழுமையாகப் பெற மணமகளின் பாதங்கள் முழுவதுமாக மருதாணி போன்ற மூலிகைகளைச் சாறாக்கிப் பூசிக் கொள்வர். மேலும் இந்த தெய்வீக அம்மியும் இன, குல, மரபுகளை ஒட்டிப் பல வடிவங்களையும், படிகளையும், மேற்பரப்பில் வாமன மூர்த்தியின் பாத வடிவத்தைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.

அம்மி மிதித்தல் என்ற ஒரு சடங்கின் பின்னணியில் எத்தனை எத்தனை ஆன்மீக விந்தைகள் பார்த்தீர்களா? இத்தகைய அர்த்தமுள்ள சடங்குகளைத் தவிர்த்து நடைபெறும் திருமணங்களில் மணமக்கள் என்ன நன்மைகளைப் பெறமுடியும் ? எந்த தோஷங்களைப் போக்க முடியும்?

இனி செய்ய வேண்டியது என்ன?

இவ்வாறு கோயில்களில் திருமணத்தை நடத்தாது கல்யாண மண்டபங்களிலும், விடுதிகளிலும் திருமணத்தை நடத்தியதற்கு ஓரளவேனும் பிராயச்சித்தம் அளிக்க வல்லதே ஆனித் திருமஞ்சன வழிபாடு! பெற்றோர்கள், பெரியோர்களின் சம்மதமில்லாமல் நடைபெறும் காதல் திருமணங்களிலும் மூதாதையர் பரிபூரண ஆசி கிட்டாத நிலையில் மணவாழ்க்கையில் வெறுப்பு, கோபம், சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் ஏற்பட்டு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நரகத்தில் முடிவடைகின்றன. இத்தகைய மண வாழ்க்கைக்கும் பிராயச்சித்த சாந்தி முறைகளை அளிக்கவல்லதே ஆனித் திருமஞ்சன வழிபாடாகும்.

ஆனித் திருமஞ்சன வழிபாடுகள்

கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளியிருக்கும் தலங்களிலும், (உம்.) திருமணஞ்சேரி, மதுரை மீனாட்சியம்மன், கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகை போன்ற திருநாமங்களைத் தாங்கியுள்ள தெய்வத் திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சன வழிபாடுகளை நிகழ்த்துவது சிறப்புடைய தாகும்.

மாங்கல்யம் அளிப்பீர்! மங்கலம் காப்பீர்!

ஆனித் திருமஞ்சனத்தன்று மேற்குறித்த திருத்தலங்களில் சுவாமி, அம்பிகைக்கு அனைத்துவித அபிஷேக ஆராதனைகளையும் நிகழ்த்தி வழிபட வேண்டும். மஞ்சள் பூசிய தாலிச்சரடு ஒன்றையும், தாலிச்சரட்டில் கோர்த்த பொன் மாங்கல்யம் ஒன்றையும் சுவாமி அல்லது அம்பாள் திருப்பாதங்களில் வைத்து அபிஷேக ஆராதனை தீர்த்தங்கள் இந்த மங்கள சரடுகளில் விழும்படி வழிபட வேண்டும். மங்கள தெய்வ மூர்த்திகளின் பூரண அருளாசியால் அபிஷேகிக்கப்பட்ட மாங்கல்யத்தை ஏழைச் சுமங்கலிகளுக்கும், வசதியற்ற ஏழைப் பெண்களின் கல்யாண வைபவத்திற்கும் அளித்து, மற்றோர் தாலிச் சரட்டில் தங்களது மாங்கல்யத்தைக் கோர்த்தும் அணிந்து கொள்ளவேண்டும்.

குற்றங்கள், தோஷங்கள் நிறைந்த திருமண நிகழ்ச்சிகள் எதுவாயினும் அவை அனைத்திற்கும் பிராயச்சித்தம் அளிக்கவல்ல அற்புத வழிபாடே ஆனித் திருமஞ்சன அபிஷேக ஆராதனைகளாகும்.

வியாச பூஜை

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வேதம் ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வேதம் என்றால் என்ன? நாம் அறிந்த ருக், யஜுர், சாம, அதர்வண வேதம் எல்லாம் வேதத்தின் பல கோடிப் பிரிவுகளில் ஒரு சில பிரிவுகளே ஆகும். எல்லாவற்றிற்கும் ஆதாரமாய், அனைத்திற்கும் முதன்மையாய் என்றும் அழிவில்லாமல் இருக்கும் அந்த இறைவனின் திருவாக்கையே வேதம் என்கிறோம். வேதமே உண்மையானது, உண்மையே வேதமாவது.

வியாசபகவானின் அருந்தொண்டு
இவ்வாறு பரந்து விரிந்து காலங் கடந்து நின்ற வேதமாகிய உண்மைப் பொருளை அந்தந்த காலத்திற்கேற்ப யுக தர்மத்திற்கேற்ப வேதங்களைத் தொகுத்து சீர்படுத்திய அற்புத மகரிஷியே வியாசர். வியாச பகவான் வேதத்திற்காக ஆற்றிய தொண்டின் பெருமையைக் குறித்தே அவரை வேதவியாசர் என்று அழைக்கின்றோம்.

வேதத்தின் சாரமாக

ஆதிசங்கரர் 'சௌந்தர்ய லஹரி' என்னும் இனிய இறைத் துதியை பூலோக மக்களின் கைலாயத்தில் நன்மைக்காக சிவபெருமானிடம் இருந்து பெற்றார். சிவபெருமானோ ஆதிசங்கரருக்கு அளித்த பாடல்கள் 1000. அந்த ஆயிரம் பாடல் களில் பாதியை சிவகணங்களுக்காக அதிகார நந்தி பெற்றுக் கொண்டார். எஞ்சிய 500 பாடல்களுடன் வந்த ஆதிசங்கரரை ரிஷிகளும், யோகிகளும் வணங்கி 250 பாடல்களைப் பெற்றுக் கொண்டனர். தேவர்களும், தேவதைகளும் சுமார் 150 பாடல்களைப் பெற்றுக் கொள்ள, 100 பாடல்களுடன் பூலோகம் திரும்பினார் ஆதிசங்கரர். மக்களின் மனவலிமையையும், உடல் வலிமையையும் கருத்திற் கொண்டு பூலோக மக்களின் நல்வாழ்விற்காக 50 பாடல்களையே சௌந்தர்ய லஹரியாக அர்ப்பணித்தார்! ஏனையவை மறை பொருளாயின!

இவ்வாறே பரந்து விரிந்த வேதத்தை பூலோக மக்களின் நன்மைக்காக அவர்களுக்குத் தேவையான வேதத் தொகுதியை மட்டும் எளிய பல பிரிவுகளாக்கி அளித்தார் வேதவியாசர்.

வேதத்தின் சிறப்பு

அனைவரும் ஏன் வேதம் ஓத வேண்டும்? உலகின் அனைத்துக் காரிய காரணங்களுக்கும் மூலமாக இருப்பது வேதமே. சூரியன் எழுவதும், மறைவதும், தென்றல் வீசுவதும், உயிர்கள் வாழ்வதும் மறைவதும் வேதத்தினாலேயே, எனவே வேதம் முறையாக ஒதப்படும்போது அனைத்து உயிர்களுக்கும் நன்மை ஏற்படுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது, என்றும் அழிவில்லா சிரஞ்சீவித் தன்மையை நல்குகின்றது.

வேதமே அனைத்துமாக ஆகி இருப்பதால் வேதம் உணர்ந்தவன் அனைத்தையும் உணர்ந்தவன் ஆகின்றான். இறைவனை அறிந்தவன் ஆகின்றான். பொதுவாக பகல், இரவு சூரியனின் தோற்றத்தால் ஏற்படும் ஒரு பொதுவான கால மாற்றமே என்கிறோம். உண்மையில் பகல் நேரத்தின் ஆதிக்கம், சக்தி (intensity) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைவதுண்டு. அவ்வாறே இரவும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி பேத அடிப்படையில் அமைகின்றது.

கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை இதுவே, பகல், இரவில் ஏன் இந்த வேறுபாடு? வேறுபாடு பகல் இரவில் ஏற்படுவதில்லை. மனிதர்கள், ஓதும் வேதத்தின் சக்திக்கேற்ப அவர்களின் பகல் நேர சக்தியும் அமைகிறது. அவ்வாறே இரவு நேர சக்தியும்! வேதத்தை உணர்ந்த ரிஷிகளோ பகல் இரவை உணர்ந்து கால பேதம் கடந்து துரிய நிலையில் அதாவது வேதப் பிரமாணமாக சஞ்சரிக்கின்றார்கள்.

சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்து ஜோதியாய் உலவும் காஞ்சி காமகோடி பரமாச்சார்ய சுவாமிகள் முதல் பல ஞானிகளும் யோகிகளும் வேதத்தைக் காக்க அரிய பல தொண்டுகளை ஆற்றியுள்ளனர். வேதத்தைக் காத்தல் என்றால் என்ன? வேதம் அழியாப் பொருள் ஆயிற்றே. அதை ஏன் காக்க வேண்டும்? வேதம் ஓதுதல் என்னும் அரிய வழிபாடு மூலமாக அதனை மறையாது காத்தலே வேதத்தைக் காத்தலாகும்.

சத்ய யுகத்தில் அனைவரும் வேதம் ஓதி வந்தனர். தர்ம தேவதை நான்கு கால்களை திடமாக ஊன்றி நின்ற காலமது! அந்நாளில் ஒருவேளை வேதம் ஓதுதலையோ சந்தியா வந்தன வழிபாட்டைச் செய்ய மறந்தாலும் கை, கால் மறைந்து போதல், பற்கள் விழுதல் போன்ற கடுமையான தண்டனைகளை தர்ம தேவதைகள் அளித்து வந்தன. எனவே அப்போது வேதம் நன்கு தழைத்திருந்தது.

காலப்போக்கில் வேதம் ஓதுவதில் அசிரத்தை ஏற்பட்டு முறையாக வேதம் ஓதுவோர்கள் தற்காலத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டனர். இப்போதே தர்ம தேவதையோ ஒருகால் நுனி தூசியில் நின்று கொண்டு இருக்கிறது. எங்கு நோக்கினும் அமைதியின்மை, கொலை, கொள்ளை, ஏமாற்று, லஞ்சம் போன்ற கொடிய பாவச் செயல்களையே காண்கிறோம். காரணம் அனைவர்க்கும் உரிய வேதத்தை அனைவரும் ஓத மறந்தோம்! தீய சக்திகளை அழித்து அமைதியை நிலைநாட்ட இறைவன் அளித்த வரப்பிரசாதமே வேதம் ஓதுதலாகும். இறைவனின் இந்த அரிய வரத்தை முறையாகப் பயன்படுத்த நமக்குக் கிடைத்த சந்தர்ப்பமே வியாச பூஜையாகும்.

ஸ்ரீபிரம்மமூர்த்தி கண்டியூர்

வேதவியாசரை ஆராதிக்கும் எளிய பூஜை முறைகளை சித்தர்கள் வகுத்துள்ளனர். வியாச பூஜை தினத்தன்று

1. வேதம் ஓதும் பலரும் ஒன்று சேர்ந்து விடியற்காலம் (பிரம்மமுகூர்த்தம்) தொடங்கி வேதம் ஓதுதல் வேண்டும். வசதியுள்ளோர் ஓதுவார் மூர்த்திகளைக்குறித்த கோயில்களில் வரவழைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளித்து இந்த எளிய பூஜையைச் செய்வது ஒரு சிறந்த சமுதாயப் பணியாகும்.

2. தேவாரம், திருவாசகம் ஓதும் ஒதுவார் மூர்த்திகளை அழைத்தும் பன்னிரு திருமுறைப் பாடல்களை கோயில்களில் ஓதச் செய்யலாம்.

3. வடமொழி வேதமும், தமிழ் மறைகளும்ஓதுபவர்கள் தீட்சை வைத்து (குடுமி) கடுக்கண்அணிந்திருத்தல் அவசியமாகும்.

4. சாதி, மத இனபேதத்தைக் கடந்தது வேதம். எனவே வேதம், தேவாரம், திருவாசகம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு, உடை, தானம் அளித்தல் வேண்டும்.

5. இன்று 60/80 வயது நிறைந்த பழுத்த தம்பதிகளை அழைத்து அவர்களுக்குப் பாத பூஜைகள் செய்து அன்னதானம், வஸ்திரதானம், குடை, பாதரட்சை தானங்கள் அளித்து வழிபடுதல் ஒரு சிறந்த பூஜையாகும்.

6. திருஅண்ணாமலை, பர்வதமலை, திருக்கழுக்குன்றம் போன்ற மறைமலைகளை வேதம் ஓதியவாறே வலம் வந்து ஏழைகளுக்கு நீர் மோர், பானகம் தானமளித்தல் வேண்டும். இத்தகைய வேதபாராயண பூஜைகளை வேதபுரீஸ்வரர், சாமவேதீஸ்வரர் (லால்குடி, திருச்சி) போன்ற வேதநாமங்களைத் தாங்கிய திருத்தலங்களிலும், திருக்கழுக்குன்றம் (வேதகிரி), திருவேதிகுடி (தஞ்சை) போன்ற திருத்தலங்களிலும்,நான்கு முகங்களாலும் வேதம் ஓதும் ஸ்ரீ பிரம்ம தேவருக்குரித்தான திருக்கண்டியூர், உத்தமர் கோயில் (திருச்சி) போன்ற திருத்தலங்களில் நிகழ்த்துவது மிகவும் சிறப்புடையதாகும்.

பலன்கள்:

சாதி, மத இன பேதமின்றி அனைவரையும் ஒன்று திரட்டி வேதம் ஓதும் எளிய இத்திருப்பணியை முறையாகச் செய்தால்

1. சமுதாயத்தில் அமைதியும் ஒற்றுமையும்,நிலவும். சாதி, மதச் சண்டைகள் தீரும்.

2. மழையின்மை, வறட்சி, பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் தணிந்து சிறந்த பயிர் விளைச்சலும், வளமும்உண்டாகும், ஜீவித சக்தி பெருகும்.

3. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், படிப்பில் மந்தமாக விளங்கும் குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவர். அகால மரணமும், இறுதி காலத்தில், படுக்கையில் கிடந்து வாடும் துன்ப நிலையும் ஏற்படாது.

புடலையில் தெய்வீகம்

புடலங்காயினுள் பித்ரு தேவர்களின் கர்ப்ப வாசம்! புடலங்காயிலிருந்து வரும் ஒலி பித்ரு தேவ மந்திர பீஜாக்ஷர ஒலியே!

பித்ரு தேவர்களின் ஆசிகளைப் பெற பலவிதமான ஆன்மீக வழிகள் உண்டு, இதற்காகவே இறைவன் தன்னுடைய பூலோகப் படைப்புப் பொருட்கள் அனைத்திலும் தேவ சக்தி, பித்ரு சக்தி, தெய்வ சக்தி, கந்தர்வ சக்தி, யோக சக்தி, கான சக்தி, கார் சித்தி சக்தி போன்ற பலவிதமான சக்திகளை உருஏற்றி வைத்துள்ளான். உதாரணமாக சந்தான பாக்கியத்தைத் தரவல்லதும் பலவிதமான ஹத்தி தோஷங்களைப் போக்கவல்லதுமான பித்ரு தேவசக்தியை இறைவன் காய்கறிகளிலும், கனிகளிலும், மூலிகைகளிலும், தீர்த்தங்களிலும், ஆலயங்களிலும் மற்றும் பலவித வடிவங்களிலும் கூட்டியுள்ளான்.

திருவாரூர் அருகே உள்ள திலதர்ப்பணபுரியில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே தன் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் அளித்தமையால் இங்கு ஒரு பட்சமேனும் தொடர்ந்து தர்ப்பணம் அளித்து வந்தால் இதுவரையில் தர்ப்பணம் செய்யாமைக்குப் பிராயச்சித்தம் கிட்டுவதோடு பித்ருக்களின் அனுக்கிரகத்தையும் பெற்றுத் தரும். தர்ப்பண வழிபாட்டிற்குப் பின் புடலங்காய் கலந்த உணவினை ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால் பித்ரு சாபங்கள் நீங்கும். குறிப்பாக, திருமணத்திற்குப்பின் மனைவியின் சொல் கேட்டோ அல்லது வேறு காரணங்களாலோ தாய் தந்தையரை கவனியாமல் விட்டு அதனால் மன வருத்தமடைந்து அவர்கள் இறந்திருந்தால் அது மிகவும் கடுமையான பித்ரு சாபமாக மாறி தங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது எதிர்வரும் பல சந்ததிகளையும் பாதிக்கும் தன்மையுடையது. இதற்குப் பரிகாரமாக அமைவதே திலதர்ப்பணபுரியில் இடும் தர்ப்பணமும் புடலங்காய் உணவு தானமுமாகும்.

இவ்வாறே பட்டுக்கோட்டை அருகேயுள்ள இடும்பாவனம் என்னும் திருத்தலமும் பித்ருக்களின் முக்தி தலமாக விளங்குகிறது. தேவர்களைப் போலவே பித்ருக்களுக்கும் பல தரப்பட்ட, பல நிலைகளுள்ள முக்தி நிலைகள் உண்டு, பித்ருக்களுக்கு அவர்கள் நிலையிலிருந்து அடுத்தடுத்த உயர்ந்த முக்தி நிலைகளை அளிக்க வல்லதே இடும்பாவனம் திருத்தலமாகும். இத்தலத்திலும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றி புடலங்காய் கலந்த உணவினை தானமளிப்பது சிறப்புடையதாகும். இன்றும் சில குடும்பங்களில் அறியாமை, வசதியின்மை காரணமாக பல தலைமுறைகளாக கயா என்னும் புண்ணிய பூமியில் தர்ப்பண, பிண்ட பூஜைகளை நிறைவேற்றுவதில்லை. இத்தகைய நீண்ட காலமாக நிறைவேற்றாத தர்ப்பண பூஜைகளையும் கருணாமூர்த்தியான இறைவன் மன்னித்து அவர்களுக்கும் பிராயச்சித்தம் நல்க முன் வருகிறான்,

அது எங்கு தெரியுமா?

பத்ரிநாத்தில் அமைந்துள்ள பிரம்ம கபாலம் என்னும் ஒளி(லி)ப் பாறையே இப்பிராயச்சித்தத்திற்கு உகந்த தலமாகும். இங்கு தான்ய/ பழ பிண்டங்களை வைத்து தர்ப்பணம் பிண்ட பூஜைகளை நிகழ்த்துவது மிகச் சிறப்புடையது.

இது போன்றே, வாழைக்காய், புடலங்காய், தர்ப்பை, பிரண்டை, வாழைஇலை, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றில் பித்ரு ஆகர்ஷண சக்தி அதிகமாக இருப்பதால் இக்காய்கறிகளில் பித்ருக்கள் மனமகிழ்ந்து தங்கி அருள் புரிகின்றனர், கைவிரல்கள் ஐந்தும் உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் பதியுமாறு பிடிக்கப்பட்ட அன்ன உருண்டை (பிண்டம்), தேன், நெய், வெண்ணிற ஆடை போன்றவற்றிற்கும் பித்ரு ஆவாஹன சக்தி நிறைய உண்டு.

கயாவில் உள்ள பல்குனி நதியும், அஸ்ஸி நதியும், வருண நதியும் சேர்கின்ற வாரணாசியாகிய காசி, உத்தரவாஹினியாக நதிசார வடக்கு நோக்கி ஓடுகின்ற இடங்கள், ராமேஸ்வரம், கோடிக்கரை போன்ற சமுத்திரத் தலங்கள் போன்றவையும் பித்ரு சக்தி நிறைந்த இடங்களாகும்.

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து சுயம்பு மூர்த்திகளின் பிறப்பிடமாகிய திருஅண்ணாமலையே பித்ருக்களின் வம்சா வழியினரைக் கரையேற்ற அமைந்துள்ள ஒப்பற்ற தலமாகும். திருஅண்ணாமலையில் ஒருவர் செய்கின்ற தான தர்ம வழிபாட்டுப் புண்ணியங்கள் அனைத்தும் அவர்கள் மூதாதையர்களைச் சென்றடைந்து அவர்கள் பல்வேறு முக்தி நிலைகளில் முன்னேற பெரிதும் உதவுகின்றன. பித்ருக்கள் முக்தி நிலையில் முன்னேறுவதற்கு அவர்கள் சந்ததியினர் தொடர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அப்புண்ணியத்தை பித்ருக்களுக்கு அளித்தால் அதனால் முக்தி நிலை பெறும் பித்ருக்கள் தங்கள் அருளாசியை தங்கள் வம்சா வழியினருக்கு அளிக்கின்றனர். எனவே, அருணை கிரிவலம் கற்பனைக்கு எட்டாத புண்ணிய சக்தியைத் திரட்டித் தரும் காமதேனுவாகவும், கற்பக விருட்சமாகவும் விளங்குகிறது.

பித்ருக்களுக்குக் கர்ப்பவாசமா?

சந்நியாசிகளுக்குக் கபால மோட்சம் நல்கும் முறையை இறைவன் வகுத்துள்ளான். இயற்கையாகவோ, அல்லது தேங்காயை வேகமாக தலையில் அடித்தோ சந்நியாசிகளின் கபால வாயு பிரிந்து பிரம்ம பீஜாட்சர ஒலியுடன் கலக்கின்றதல்லவா? இவ்வாறே பித்ருக்களின் பீஜாட்சர அனுக்கிர ஒலியை வெளிப்படுத்தும் முறையாக இறைவன் புடலங்காயைப் படைத்துள்ளான். பித்ருக்கள் சூட்சும வாயுரூபத்தில் புடலங்காயில் தங்குகின்றனர். இதையே பித்ருக்களின் கர்ப்பவாசம் என்றழைக்கிறோம். புடலங்காயை உடைக்கும்போது 'டப்' என்ற சத்தத்துடன் பித்ருக்களின் அருள் சக்தி புடலங்காயிலிருந்து வெளிவந்து தங்கள் வம்சா வழியினருக்கு அருளாசியை வழங்குகின்றது. டப் என்று கேட்பது சாதாரண ஒலியல்ல, அட்சய பீஜாட்சர ஒலியது!

கயாவில் இருக்கும் அக்ஷய வடம் என்னும் அற்புத ஆலமரத்தைத் தொட்டுக் கொண்டு காய், கனி, இலை இவற்றை விட்டுவிடும் பழக்கம் தொன்று தொட்டு வழங்கி வருகின்றது. புடலங்காய் பித்ருக்களுக்குப் ப்ரீதி அளிப்பதாக இருந்த போதிலும், வைராக்கியத்தை உறுதியாக்கும் இந்த உன்னத வாக்குறுதியை ஏற்க வேண்டிய புடலங்காயை கயாவில் விட்டுவிடுவோரும் உண்டு. புடலங்காயை விட்டுவிட்டால் பித்ருக்களின் ஆசியைப் பெறுவது எங்ஙனம்! இதற்காக இறைவன் திருஅண்ணாமலையில் வழி வகுத்துள்ளான். திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபப் பெருவிழாவில் புடலங்காய் கலந்த உணவு வகைகளை தானமாக அளித்தால் ஒரு வருடம் முழுவதும் புடலங்காயைப் பயன்படுத்துவதால் கிடைக்கக் கூடிய பித்ரு புண்ணிய சக்திகளை ஒன்றாகத் திரட்டி தீபப் பிரசாதமாக வழங்குகிறான் இறைவன்! எனவேதான் கயாவில் விட்ட பொருளை கார்த்திகையில் அன்னதானமாக இடுகின்றனர்.

சூரிய பகவானிடம் தந்தை வழிப் பித்ருக்களின் அருளாட்சி விளங்குகின்றது. சந்திர பகவானிடம் தாய் வழி பித்ருக்களின் அருளாட்சி அமைகின்றது. எனவே பித்ருக்களுக்காகத் தர்ப்பணம் அளிக்கப்படும் போது நீரில் நனைத்து வேட்டியை வெயிலில் உலர்த்தி அந்த ஆடையுடன் பித்ரு தர்ப்பணம், பூஜைகள் செய்யும் வழக்கம் இன்றும் நிலவுகிறது. சூரிய பகவான் தன்னுடைய சக்தி மிகுந்த அக்னி ஜ்வாலைகளால் உடலிற் படிந்துள்ள தோஷங்களையும், கர்மப் படிவுகளையும் எரித்துச் சாம்பலாக்கித் தந்தை வழி பித்ருக்களின் அருளாசியைக் கூட்டித் தருகின்றார். அவ்வாறே தர்ப்பணத்தில் இடப்படும் பிண்டமானது (நெய் சாதம்) சந்திர பகவான் தாய் வழி பித்ருக்களின் அருளாசியை கூட்டித் தர துணைபுரிகிறது.

எனவே சூரியனும் சந்திரனும் இணைகின்ற அமாவாசை நாளன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணங்கள் இன்றியமையாததான பூஜையாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று சூரியோதயத்திற்குப் பின் பறிக்கப்பட்ட புடலங்காயாக இருப்பின் அதில் பித்ரு தேவ சக்தி நிறைந்து விளங்குவதோடு சூர்ய, சந்திர இணைப்பால் உண்டாகும் சூர்ய சந்திராக்கினியில் ஏற்படும் பித்ரு தேவ வாயுப் பரிமாணங்களும் கூடி புடலங்காயை உடைக்கையில் ஏற்படும் “நுணா சூட்சும வாயுவின் ஒலிக்கு” மகத்துவத்தைக் கூட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் அனைவருமே பித்ரு லோகத்தில் வசிப்பதாகக் கூறி விட முடியாது. தீய வழக்கங்கள், கொடிய பாவங்கள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற தீவினைகள் காரணமாக நரகத்திலோ இருள் உலகத்திலோ பலரும் உழன்று கொண்டிருப்பார்கள், நாம் புடலங்காயை உடைக்கும்போது உண்டாகும் ஒலியால் அவர்களுக்கு நற்கதியை அளிக்க வாய்ப்புண்டு. இவ்வாறு அவர்களுக்கு அடையும் விமோசனத்திற்கு. 'கர்ண விமோசனம்' என்று பெயர். வால்மீகிக்கு நாரத முனிவர் அருளிய 'மரா, மரா' என்ற நாம ஒலியும், இவ்வாறே அவருக்கு கர்ண விமோசனத்தை அளித்து இராமாயணத்தை இயற்றும் உன்னத நிலைக்கு உயர்த்தியது.

புடலங்காய் காட்டும் சகுனம்

சில சமயங்களில் புடலங்காயைச் சமைக்கும் போது கசந்து போய் விடுவதுண்டு. பித்ருக்கள் சாந்தி பெறாத நிலையையே இது குறிக்கிறது. இந்த சகுனத்தை உணர்ந்து இதற்குப் பிராயச்சித்தமாக அடுத்து வருகின்ற ஏகாதசி, துவாதசி அல்லது அமாவாசை அன்று புடலங்காயைச் சமைத்து சாதத்துடன் கலந்து தானம் அளித்தால் பித்ருக்கள் சாந்தி அடைந்து மனங்குளிரத் தங்கள் அருளாசியை நல்குவர். எனவே புடலங்காயை சமையலுக்காக பயன்படுத்தும்போது முதலில் அதை உடைத்து “நுணா வாயுவை” வெளிப்படுத்திய பின்னரே காயை அரிந்து சமைக்க வேண்டும்.

திருத்தல பயணங்கள்

வட இந்திய திருத்தலப் பயணக் குறிப்புகள்

இறைவனின் பல்வேறு திருவிளையாடற் கோலங்களைப் பற்பல இடங்களில் தரிசிக்கவே நாம் யாத்திரையாகச் செல்கின்றோம். இந்த ஆன்மீகக் குறிக்கோள் ட்ராவல் ஏஜென்சிகள் மூலமாகப் பயணம் செல்லும்போது நிறைவேறுவதில்லை.

உதாரணமாக காசி விசுவநாதர் அருளாட்சி புரியும் வாரணாசியில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய தெய்வ மூர்த்திகளில் காசி விஸ்வநாதர், ஸ்ரீ அன்னபூரணி, கால பைரவர், டுண்டி விநாயகர், ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீகெளடி அம்மன் போன்ற முக்கிய தெய்வங்கள் மட்டுமல்லாது புனிதமான கங்கை கரையில் அமைந்துள்ள 64 கட்டங்களிலும் தீர்த்தமாடுதல் மிகமிக இன்றியமையாததாகும்.

ஆனால் பலரும் இத்தகைய ஆன்மீக ரகசியங்களை அறிந்தவர்கள் அல்லர். அவர்கள் பல புலிகளைக் கொன்று குவித்து அவைகளின் தோல்களை அழகுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் சுவர்களிலும் தரையிலும் வைத்திருக்கும் இடங்களுக்கே, சமாதிகளுக்கே யாத்ரீகர்களை அழைத்துச் செல்கின்றனர். இதனால் யாது பயன்? இத்தகைய கொடிய பாவங்கள் நிகழ்ந்த இடங்களுக்குச் செல்வதால் நமக்குக் கிடைக்கும் ஆன்மீக லாபம் என்ன? மனவருத்தமும் அலைச்சலுமே!

உல்லாசப் பயணத்திற்காக பல நாட்களை வீணாக்கும் யாத்திரை ஏஜன்சிகள் கங்கைக் கரையில் 64 கட்டங்களிலும் நீராடி இறைவனை வழிபட நமக்கு அளிக்கும் நேரமோ சில மணித் துளிகளே. கங்கைக் கரையில் ஒவ்வொரு படித்துறையைப் பற்றியும் விளக்கவே பல யுகங்களாகும். அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது ஒவ்வொரு படித்துறையும்! இங்கு பல கோடி ரிஷிகளும், மகரிஷிகளும், யோகிகளும், தேவதா மூர்த்திகளும் நீராடி இறைபூஜைகளை உருவமாகவோ அருவமாகவோ நிகழ்த்திய வண்ணமிருக்கின்றனர். அவர்களின் புனிதமான தேகம் தழுவிய கங்கை நீரை நாம் தொட்டு நீராடுதலும், அருந்துதலும் எத்தகைய சிறப்புடையது!

யாத்ரீகர்களுக்கு நீர் மோர் தானம் தருவது தொன்று தொட்டு வரும் ஒரு சிறந்த பழக்கமாகும். தாகத்தைத் தணித்தல், பசி ஆற்றுதல் போன்ற சாதாரண காரணங்கள் மட்டுமல்லாது இதன் பின்னணியில் பல உயர்ந்த ஆன்மீக ரகசியங்களும் உள்ளன. உதாரணமாக இமயமலையில் பல அரிய மூலிகைகளும் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அபூர்வ மர வகைகளும் உள்ளன. இந்த மூலிகைகள் சிரஞ்சீவித்துவத்தைத் தரவல்லவை, நோயற்ற வாழ்வை அளிக்கும் அற்புத ஆற்றல் நிறைந்தவை. சிவா, விஷ்ணு, பார்வதி, ராமர், கிருஷ்ணர் போன்ற பற்பல தெய்வ மூர்த்திகளைக் கண்ணெதிரே கொண்டு வரும் தெய்வீக சக்தி நிறைந்த மூலிகைகளும் இமயமலையில் உண்டு. ஆனால் இந்த தெய்வீக மூலிகைகளை அடையாளம் காணும் ஆன்மீக குலகுரு, பெரும்பாலான மனிதர்களுக்குக் கிடையாது. அவ்வாறு இத்தகைய தெய்வ மூலிகைகளை அடையாளங் கண்டு கொண்டாலும் அந்த மூலிகைகளைப் பறிப்பதற்கான முறையையும், பந்தனக் காப்பு ரகசியங்கள், கட்டு ரகசியங்கள், அவற்றிற்கான மந்திரங்கள் போன்றவற்றையும் யாரும் முறையாக அறிந்திருப்பதில்லை .

ஆனால் கருணைக் கடலான இறைவன் இம் மூலிகையின பலன்களை சாதாரண மக்களும் உய்த்துணர ஓர் எளிய வழியை வகுத்துள்ளான். அது என்ன? இமயமலையில் உலவும் ஆடுகள், மாடுகள் போன்ற விலங்கினங்கள் உண்மையில் சாதாரண விலங்கினங்கள் அல்ல. பல யுகங்களாக இறைவனை நோக்கித் தவமிருந்து எம்பெருமான் உறையும் இமயமலையின் தேவதா மூலிகைகளின் பலன்கள் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற உன்னதத் தியாக உணர்வுடன் பிரார்த்தனை செய்த ரிஷிகளையும் யோகிகளையும் இறைவன் ஆடு, மாடுகளாய்ப் படைத்து அவற்றின் பால் மூலம் மக்களும் மூலிகைகளின் பலன் களைப் பெறும் அரிய முறையை உபதேசித்தான்.

ஆடு, மாடு வடிவில் இமய மலையில் உலவும் ரிஷிகளும், யோகிகளும் குறிப்பிட்ட திதி, ஹோரை, யோகம் கூடிய அமிர்த நேரத்தில் இமயமலை மூலிகைகளைப் பிரார்த்தித்து, ஆராதனை செய்து அதை வீர அமிர்தமாக மாற்றுகின்றனர். அதாவது பூலோக மக்கள் கண்ணோட்டத்தில் ஆடு, மாடுகள் இலை தழைகளைத் தின்று பால் கொடுக்கின்றன. இமயமாக உயர்ந்து நிற்கும் ரிஷிகளின் தியாக உணர்வு நம்மைக் காப்பதற்காக அல்லவா? அவர்களின் தியாக உணர்வை மதித்து அவர்கள் அளிக்கும் பாலை அருந்தி நாம் இறைவனின் அருட் கடாட்சத்தைப் பெற வேண்டும் அல்லவா?

கோ பாலா? மெஷின் பாலா?

ஆனால் டிராவல் ஏஜென்ஸி மூலமாக செல்லும்போது இது சாத்தியமாகாது. பல நாட்களுக்குத் தேவையான பால் பவுடரை அவர்கள் வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள், சோம்பேறித்தனம், அலட்சியம், அறியாமை போன்ற பல்வேறு காரணங்களினால் ஹரித்வார், ரிஷிகேசம், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இமயமலைத் திருத்தலங்களில் இயற்கையாகக் கிடைக்கும் பால் அமிர்தத்தை அவர்கள் யாத்ரீகர்களுக்கு வழங்காது, இயந்திரங்கள் சத்து அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு சக்கையாக வெளித் தள்ளும் பால் பவுடரை யாத்ரீகர்களுக்கு அளிக்கின்றனர்!

என்னே வேதனை பார்த்தீர்களா? யாத்திரையின் முக்கிய நோக்கமே பூஜையும் ஆராதனையுமே. டிராவல் ஏஜென்ஸி மூலம் செல்லும் போது இவைகளை நிறைவேற்ற சிறிதளவு அவகாசம் கூடக் கிடைப்பதில்லை. எல்லாவித பூஜை அனுஷ்டானங்களுக்கும் உடல் சுத்தமும், உள்ள சுத்தமும், சுகாதாரமான இனிய சுற்றுச் சூழலும் இன்றியமையாததாக அமைகின்றன.

யாத்திரை ஏஜன்ஸி மூலமாகச் செல்லும் போது நமக்குத் தனிப் பெட்டி special coach ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பெட்டிகளைக் கடைசி ப்ளாட்பாரங்களில் கழிப்பிடங்களுக்கும் குப்பை கூளங்களுக்கும் அருகே பல நாட்களுக்கு நிறுத்தி வைத்து விடுகிறார்கள். துர்நாற்றம் மூக்கைத் துளைக்கும். மலஜலம் கழிக்க வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு தண்ணீரைத் தேடி, தண்ணீர் தேடும் படலம் முடிந்தவுடன் மல ஜலம் கழிக்கும் இடத்தைத் தேடிக் காலைக் கடன்களை முடிப்பதற்குள் உடலில் உள்ள பாதி சக்தி போய்விடும். இந்தக் குறைகளை ஏஜெண்டுகளிடம் கூற நீங்கள் முயற்சி செய்தால் ரயில் பெட்டி நிறுத்த வேண்டிய இடம் வந்தவுடனேயே. அவர்கள் மாயமாய் மறைந்துவிடுவார்கள்.

வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்களின் கதி என்ன? தண்ணீருக்காகவும் இடத்திற்காகவும் அவர்கள் அலைய முடியுமா? முடியாத சூழ்நிலையில் அவர்கள் ரயில் பெட்டியிலேயே மலஜலம் கழித்தால் மற்றவர்கள் அங்கே எத்தனை நாள் எவ்வாறு இருக்க முடியும்?

இயற்கை உபாதைகளை ஒரு வழியாக அலைந்து திரிந்து முடித்தால் அடுத்து வருவதோ குளியல் படலம். பல இடங்களில் தண்ணீர் வசதிகள் சரியாக அமைந்திருப்பதில்லை. தண்ணீர் வசதிகள் அமைந்திருந்தாலும் பணம் பெறாமல் ரெயில்வே பெட்டிகளுக்குத் தண்ணீர் கொடுக்க எவரும் முன் வருவதில்லை. சம்பந்தப்பட்டோரைக் கவனிப்பதெற்கென்றே பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஏஜெண்டுகள் யாத்ரீகர்களிடம் வசூல் செய்கின்றனர். ஆனால் இதைச் சரியாக பட்டுவாடா செய்யாததால் ரெயில் பெட்டிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் தண்ணீருக்காகத் திண்டாட வேண்டிய வருத்தமான சூழ்நிலை ஏற்படுகின்றன. இளவயது யாத்ரீகர்கள் எப்படியாவது இந்த கொடிய சூழ்நிலையை சமாளித்து விடலாம். வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள், பெண்கள் படும் வேதனைகளோ சொல்லில் அடங்காது.

இத்தகைய சோதனைகளை வென்று இயற்கை உபாதைகளைக் களைந்து நீராடிய பிறகே பூஜை புனஸ்காரங்களை நிறைவேற்ற இயலும் அல்லவா! உல்லாசப் பயணத்திற்காகப் பல நாட்களை ஒதுக்கும் டிராவல் ஏஜெண்டுகள் இறை தரிசனத்திற்காக அளிக்கும் நேரம் மிகக் குறைவே என்பதை முன்னரே கூறியிருந்தோம். உதாரணமாக கேதார்நாத் திருத்தலம் சென்று வர யாத்ரீகர்களுக்கு அளிக்கப்படும் நேரம் 12 மணி நேரமே. வாழ்நாள் முழுதும் ஏங்கி, அதற்காக பொருள் சேமித்து கண்ணார மனங்குளிர கேதார் ஈஸ்வரரைத் தரிசிக்க நமக்குக் கிடைக்கும் நேரமோ சில நிமிடங்களே!

கேதார்நாத் அடிவாரத்திலிருந்து (கெளரிகுண்டம்) கோயில்வரை உள்ள தூரம் 14 கி.மீ. என்று பெயர்ப் பலகைகள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் கௌரிகுண்டத்திற்கும் கேதார்நாத் திருக்கோயிலுக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்தது 25 கி.மீ. தூரம் இருக்கும். மனதார நடந்து யாத்திரை செய்தவர்களுக்கே இவ்வுண்மை புரியும். டோலியிலோ, (பல்லக்கு) குதிரையிலோ சென்றவர்களுக்கு சரியான தூரம் தெரிய வாய்ப்பில்லை. மேலும் கேதார்நாத் தரைமட்டத்திலிருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது. கௌரிகுண்டத்திலிருந்து 6000 அடி உயரம். குறுகலான மலைப்பாதையில் 25 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.

ஏற்கனவே கூறியபடி யாத்திரை ஏஜன்ஸி மிகவும் துர்நாற்றம் விளங்கும் சூழ்நிலையில் உணவுப் பொருட்களை சமைப்பதாலும், உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஈ, கொசு போன்றவை மொய்த்துக் கொண்டிருப்பதாலும் அனைவருக்கும் வாந்தி, பேதி, காய்ச்சல், குத எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. மலைச்சரிவுகளில் பேருந்துகள் வளைந்து செல்வதாலும், பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு யாத்ரீகர்கள் மிக்க வேதனையை அடைகின்றனர்.

புளி மூட்டையாய் மாறும் யாத்ரீகர்கள்

இவ்வளவு துயரங்களை அனுபவிக்கும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்கப் போதுமான அவகாசமே அளிப்பதில்லை. கால்களையோ உடலையோ அசைக்க முடியாத நிலையில் யாத்ரீகர்களைப் பேருந்துகளில் திணித்துக்கொண்டு ஆடுமாடுகளைப் போல் எங்கும் இடையில் நிறுத்தாமல் கேதார்நாத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். இத்தகைய உடல் வேதனைகளையும், மனவேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் யாத்ரீகர்கள் மலைக்குப் போக வர 50 கி.மீ., நடைப்பயணம் செய்வது அதிலும் குளிரிலும் மலைப்பாதையிலும் சாத்தியமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். இந்தத் துன்பங்களை அனுபவிக்கத்தான் கேதார்நாத் ஈசனைப் பற்றி வாழ்நாள் முழுவதும் எண்ணிக் கொண்டிருந்தோமா?

டிராவல் ஏஜென்ஸியில் நம்மிடம் பதிவு செய்யும்போது நமக்கு விசாலமான பேருந்தின் படத்தைக் காண்பிக்கின்றனர். ஆனால் உண்மையில் நம்மை அழைத்துச் செல்வதோ அருங்காட்சியகத்தில் (Museum) வைக்கப்பட வேண்டிய பழங் காலப்பேருந்துகள். அவைகளுக்குத் தேவையான பர்மிட்டுகள் வாங்கப்படாததால் அலுவலகங்களில் (RTO Office) வெயிலில் காயும் அவலமான சூழ்நிலையும் நம்மைச் சேர்ந்து கொள்ளும்!

யாத்ரீகர்களின் சிறைவாசம்

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் யாத்ரீகர்களை ஜெயில் கைதிகளைப் போல் நடத்தும் முறை மிகவும் வருந்துதற்குரிய விஷயமாகும். யாத்ரீகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு உணவையும், சிற்றுண்டி, காபி போன்றவையும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது போல் எறிகின்றனர். பல யாத்திரைத் தலங்களில் உணவு, உடை, தங்குமிடம், விசிறி அளித்து ராஜ உபசாரம் செய்த காலம் மறைந்துபோய் கொடுத்த பணத்திற்கே உணவு கிடைக்காமல் வருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஆன்மீக நெறி காரணமாக வெளிஇடங்களில் நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் யாத்திரை செல்லும் போது இது சாத்தியமில்லை அல்லவா? எனவே வெந்நீர் அருந்துவதற்குக் கேட்டால் ஏஜென்ஸியினர் நமக்குத் தருவதோ சுளித்த முகமும், கோபப் பார்வைகளும், சூடான வார்த்தைகளுமே! இதற்காகவா இவ்வளவு பணம் கொடுத்தோம் என்று மனம் வேதனையடைகிறது!

நித்திரையும் ஒரு தவமே

பயணம் செய்யாத இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியிலேயே (coach) தங்க வைத்து விடுகிறார்கள். மின் விசிறிக்கோ, மின் விளக்குகளுக்கோ சரியான வசதிகளைப் பெறுவதில்லை. சுற்றிலும் துர்நாற்றம், ஈ, கொசு, தகிக்கும் வெயில், காற்று வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளும் வயதானவர்களும் அடையும் துன்பத்தை நேரில் அனுபவித்தவர்களுக்கே அதன் கொடுமை புரியும்.

உயிரைப் பணயம் வைக்கும் பயணம்

மலைப்பிரதேசங்களில் மாலையில் இருள் சூழ்ந்ததும் பயணம் செய்யக்கூடாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது இரவு நேர மலைப் பயணம். அரசும் இதையொட்டியே ஆங்காங்கே மலைப் பாதைகளில் தடைகளை வைத்துள்ளது. இருப்பினும் பேருந்துக் கட்டணத்தை மிச்சப்படுத்தும் குறுகிய நோக்கத்துடன் செயல்படும் டிராவல் ஏஜெண்டுகள் இரவிலும் ஆபத்தான குறுகிய வளைவுகள் நிறைந்த மலைப் பகுதிகளில் யாத்ரீகர்களின் உயிரையும் பொருட்படுத்தாது பேருந்துகளைச் செலுத்துகின்றனர். எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை இது. பகலிலேயே பல பேருந்துகள் மலைச் சரிவுகளில் உருண்டு கிடக்கும் காட்சியைக் காணும் நமக்கு இரவுப் பயணம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள்.

யாத்திரை என்பது மிகவும் புனிதமானது. எனவே அக்காலத்தில் மன்னர்களும், பெரியோர்களும், சாதாரண குடிமக்களும், பக்தர்களும் யாத்திரை செல்வோர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு அளிக்கப்பட்ட புனிதத்துவமும், மதிப்பும், மரியாதையும் குறைந்து பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தற்போது பெரும்பாலான யாத்திரை ஏஜென்ஸி செயல்படுகின்றனர். எனவே ஆன்மீக அன்பர்கள் யாத்திரை செல்ல விரும்புவார்களேயானால் அவர்கள் இடைத் தரகர்கள் யாரையும் நம்பாது தாங்களே சென்று வர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

ஸ்ரீ சரபேஸ்வரரின் மகிமைகள் பற்றிக் கடந்த சில இதழ்களில் விளக்கியுள்ளோம். பெருமாள் அலங்காரப் பிரியர், சிவன் அபிஷேகப் பிரியர் என்பதற்கேற்ப சிவபெருமான் அம்சமாக விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியும் அபிஷேகங்களையும் விரும்பி ஏற்கிறார், தேன் அபிஷேகம் ஸ்ரீ சரபேஸ்வர்ருக்கு மிகவும் உகந்ததாகும். ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி சிறப்பான தேவ மூர்த்தியன்றோ ! அவருக்கு அபிஷேகிக்கப்படும் தேனும் சிறப்பானதாக இருந்தால் அதன் சக்தி பெருகுமன்றோ !

இறைவனின் திருமேனியை அலங்கரிக்க இறைவனை வேண்டி விண்ணிலிருந்து மண்ணில் இறங்கியவையே மலர்களாகும்! ஆனால் ஒருசில மலர்களே இறைவனின் திருமேனியை மாலைகளாகவும், ஆரங்களாகவும், கிரீடங் களாகவும், செண்டுகளாகவும் அலங்கரிக்க பல மலர்கள் காட்டில் மலர்ந்து காற்றில் கரைகின்றன அல்லவா? ஆனால் காட்டில் மலரும் மணமுள்ள மலர்களுக்கும் மஹிமை உண்டே!

கொல்லி மலை, பச்சைமலை போன்ற மலைப் பகுதிகளில் சித்தர்களும், யோகிகளும் வண்டுகள் வடிவில் உலவி வருகின்றனர். பச்சை மலையில் வாழும் பிரம்ம தண்டு வண்டுகளைப் பற்றியும் அவர்களின் அற்புத சேவையைப் பற்றியும் முன்னரே விளக்கியுள்ளோம். எனவே தேனீக்கள் வடிவில் உலவும் சித்தர்கள், யாரும் வர இயலாத இமயமலைப் பகுதிகளில் இறைவனுக்காகவே மலரும் மலர்களிலிருந்து அபூர்வ தேனைச் சேகரித்து வருகின்றனர். எனவே இத்தகைய மலைத் தேன் கொண்டு ஸ்ரீ சரபேஸ்வரருக்கு திருஆதிரை நட்சத்திரத்திலும், ஞாயிறு இராகுகால சமயத்திலும் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும்.
இனிமையும் மணமும் உடைய தேனும் திகட்டும் அல்லவா? எனவே என்றும் திகட்டாத எம்பெருமான் ஈசனின் திருநாமத்தால் தேனை ஆராதித்து அபிஷேகம் செய்யலாம். அதாவது 108 சங்குகளில் சிறந்த மணம் கமழும் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சங்கையும் முன் வைத்து ஒருமுறை சரபேஸ்வர கவசம் ஒத வேண்டும். ஒரு பெரிய சங்கில் 108 முறை தேனை நிரப்பி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி அதை வேறொரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். தீர்த்த கண்டிகளில் இவ்வாறு தேனைச் சேகரித்துக் கொள்வது மிகவும் சிறப்புடையதாகும்.

இவ்வாறு சேர்ந்த தேனை ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிறிளவு தேனைப் பிரசாதமாகப் பெற்று எஞ்சியிருக்கும் தேனுடன் கலந்து பிரசாதமாக வைத்துக் கொள்ளலாம். ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குறைந்தது ஒரு மண்டலமாவது (48 நாட்கள்) தொடர்ந்து அருந்தி வந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

1. உஷ்ண சம்பந்தமான நோய்கள் (Piles, சீதபேதி) தீரும்,
2. கர்பப்பை நோய்களும், மாதவிடாய் நோய்களும் நீங்கும்.
3. வாய்ப் புண், தொண்டைப் புற்று நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும்.
4. திக்குவாய்க் குழந்தைகளும், பேச்சு வராத குழந்தைகளும் நலமடைவர். இவர்கள் தொடர்ந்து இந்த பிரசாதத்தை உண்டு வரவேண்டும்.

வரமளிக்கும் வஸ்திர பூஜை

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி விரும்பி ஏற்கும் வஸ்திர பூஜை முறையையும் ஈண்டு காண்போம். ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, இரண்யாட்சனை சம்ஹாரம் செய்யும்போது அவன் உடலிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கீழே விழுந்தால் கூட அது பல எதிர்வினை சக்திகளை உருவாக்கும் என்பதால் இரத்தம் முழுவதையும் தம் உடலில் ஏற்றார். இரணியனின் தோலை தன் உடல் மேல் போர்த்திக் கொண்டார். எலும்புகளை ஆபரணமாக அணிந்துகொண்டார். இதனால் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே சென்றது. முடிவில் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை ஆட்கொண்டு அவர் தம் உக்கிரத்தைத் தணித்தார்.

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியின் அரவணைப்பில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் மேல் போர்த்தப்பட்ட இரணியனின் தோல் வெண்பட்டு ஆடையாக மாறி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை அழகு செய்தது. எனவே ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ சரபேஸ்வரமூர்த்தி வெண்பட்டு ஆடையைத் தனக்கும் உகந்ததாக ஏற்றுக் கொண்டார்.

பரமன் விரும்பும் பட்டாடை

எனவே ஸ்ரீ சரபேஸ் வர மூர்த்திக்கு வெண்பட்டு ஆடையைச் சார்த்தி வழிபட்டால் இது இவ்விரு உன்னத இறை மூர்த்திகளின் அருளாசியை ஒருங்கே பெற்றுத் தரும். பௌர்ணமி திதிகளில் வெண்பட்டு ஆடை ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கு உகந்ததாகும். வெண்பட்டு சார்த்தி 108 சந்தன உருண்டைகளால் அல்லது வெண்ணெய் உருண்டைகளால் ஸ்ரீ சரபேஸ்வர கவசம் ஓதி (108 முறை) வழிபடுவது மிகச் சிறந்த வழிபாடாகும். வெண் குஷ்ட நோய்க்கு இது நிவாரணமளிக்கும்.

இராகு காலத்தில் வெண்பட்டு, நீலப் பட்டு சார்த்தியும் பகல் நேரங்களில் மஞ்சள் நிறப் பட்டு வஸ்திரம் சார்த்தியும் சந்தன உருண்டைகளால் அர்ச்சித்து வழிபடலாம். தோல் வியாதிகளுக்கு நிவாரணம் தரும் வழிபாடு இது. சந்தனத்தைக் கடையில் வாங்காமல் தாமே அரைத்த சந்தனத்தையே ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்குப் பயன்படுத்த வேண்டும். கங்கை, காவிரி போன்ற புனித நதிகளின் தீர்த்தங்களை சந்தனம் அரைக்கப் பயன்படுத்துவதும் அரைத்த சந்தனத்துடன் பன்னீர் கலந்து உருண்டைகளை உருவாக்குவதும் மிகவும் சிறப்புடையதாகும்.

விசேஷ தினங்கள்

1-7-1998 ஆனித் திருமஞ்சனம்
9-7-1998 வியாஸ பூஜை
16-7-1998 தட்சிணாயனம்
23-7-1998 ஆடி அமாவாசை
31-7-1998 ஸ்ரீ வரலட்சுமி விரதம்
8-7-1998 இரவு 09-56 மணி முதல் 9-7-1998இரவு 09-31 மணி வரைபௌர்ணமி திதி உள்ளது.
8-7-1998 பெளர்ணமி கிரிவல நாள்

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை ஆஸ்ரம சேவைச் செய்திகள்

31-5-1998 சென்னை - பனையூர் கிராமத்தில் ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
15-5-1998 தியமுகச் சேரியில் ஸ்ரீ விஷ்ணுபதி பூஜை - அன்னதானம்
9-6-1998 திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை - அன்னதானம்
11-5-1998 முதல் 29-5-1998 ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் சீரிய தலைமையில் வட இந்தியத் திருத்தல யாத்திரை முதல் அன்னதானம், ஆடைதானம், பொன்தானம், படுக்கை, கம்பளி தானம், ஜோதிட ஞான வித்யா தானம், யாத்ரா சேவை, வறியோர்க்கு யாத்திரை செல்ல உதவி, விலங்குகளுக்கு ஜீவ காருண்யம், தர்ப்பண, பிண்ட தர்ப்பண பூஜைகள்.

ஸ்ரீஐயப்ப விரத பூஜை

சபரிமலையில் ஸ்ரீ ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கச் செல்வோர் கடைபிடிக்க வேண்டிய எளிய பூஜை முறைகளை கடந்த பல மாதங்களாக விளக்கி வருகின்றோம். ஸ்ரீ ஐயப்ப சுவாமி தரிசனத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்வது தை மாதம் காந்த மலையில் நிகழும் ஸ்ரீ மகர ஜோதி தரிசனமாகும். காட்டுவாசிகள் மலையில் தீ மூட்டி ஜோதியை உருவாக்குகின்றனர் என்பது போன்ற பல்வேறு பின்னணிக் கதைகள் இருந்தாலும், ஸ்ரீ ஐயப்ப சுவாமியே ஜோதி வடிவில் சுயம்பிரகாசராய் காந்தமலையில் உண்மையான பக்தர்களுக்காக எழுந்தருளுகிறார் என்பதே உண்மை. பரம்பொருளையே தரிசிக்கும் பாக்கியம் கிட்டுகின்றதென்றால் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால் எத்தகைய பண்பட்ட மனத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்!

இறை தரிசனம் பெறுவது மட்டும் ஒரு பக்தனின் குறிக்கோளாக இருந்து விடக் கூடாது. அதனால் அவனுக்கோ மற்றவர்களுக்கோ யாதொரு பலனும் இல்லை. இராவணன் எம்பெருமான் ஈசனின் தரிசனத்தைப் பெற்றவன், காம்போதி ராகத்தால் எம்பெருமானை மனம் மகிழச் செய்தவன். ஆனால் இராவணனின் இறை தரிசனத்தால் யாருக்கு என்ன பலன்?அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து செல்லக் கூடாது என்ற சாதாரணத் தகுதியைக் கூட அவன் பெறவில்லையே! அவ்வாறே ஜோதி தரிசனமும். மகர ஜோதியைத் தரிசித்தால் மட்டும் போதாது. அந்த ஜோதி உணர்த்தும் உண்மையை உள்ளம் உடலும் ஏற்க வேண்டும். அப்போதுதான் ஸ்ரீ ஐயப்பன் தரிசனமும், மகர ஜோதி தரிசனமும் பயனுள்ளதாக அமையும்.

ஸ்ரீ ஐயப்ப ஜோதியைத் தரிசிக்குமுன் காணவேண்டிய பல ஜோதி தரிசனங்கள் உண்டு.

1. தினமும் வீட்டில் காலையிலும் மாலையிலும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசுநெய் போன்ற தூய எண்ணையை ஊற்றி பஞ்சுத் திரியிட்டு தீபமேற்ற வேண்டும். குறைந்தது இரண்டு தீபங்கள் இருக்கவேண்டும். இந்த தீப ஜோதியினைப் பத்து நிமிடங்களுக்குக் குறையாமல் ஏதாவது இறைநாமங்களை ஒதிக் கொண்டே தரிசனம் செய்ய வேண்டும்,

“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.”

எளிய இந்த தேவாரப் பாடலை 12 முறை விளக்கைப் பார்த்தவாறே ஓதுதல் நலம்.

ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் ஒன்று சேர்ந்து மேற்குறித்த முறையில் குறைந்த பட்சம் 1008 தீபங்களை ஏற்றி தீப வழிபாடு செய்தல் வேண்டும். 1008 தீப ஜோதி தரிசனம் மகத்தானதல்லவா! தினமும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நியதிக்கு ஜோதி வழிபாடும் ஒரு முக்கிய காரணமாகும். கோயிலில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றியிருப்பதால் பலமுறை கோயிலுக்குச் செல்லும்போது பல்லாயிரக்கணக்கான ஜோதி தரிசனங்களைக் கண்டு நமது உள்ளமும் உடலும் தூய்மை அடைந்து ஸ்ரீ ஐயப்ப ஜோதி தரிசனத்திற்கு தகுதி உடையதாகிறது. மேலும் கோயிலில் இறைவனுக்கு உபசாரமாக ஏற்றப்படும் மகர ஜோதி அலங்காரத் தீபத்தையும் (108 விளக்கு தீபம்) அவசியம் காண வேண்டும். இந்த மகாதீபங்களின் ஒளியானது இறை மூர்த்திகளின் மேல்பட்டு நம்மை அடையும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அமைதியையும் ஆன்மீக ஆற்றலையும் அளிக்கின்றது.

புண்ணிய நதிகளில் ஜோதி வழிபாடு

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கங்கை, யமுனை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களில் வாழை இலையில் அல்லது தாமரை இலையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து நீரில் விடுதல் ஒரு சிறந்த ஜோதி வழிபாடாக அமைகிறது.

திருஅண்ணாமலை, அய்யர்மலை (திருச்சி), திருக்கச்சூர், திருச்சி மலைக்கோட்டை, திருச்செங்கோடு, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற பல மலைத் தலங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்படுகின்றன. ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மலை வலம் வந்து இங்கெல்லாம் தீப தரிசனம் பெற வேண்டும். ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஜோதி தரிசனத்திற்கு ஒப்பானது சுயம்பு மூர்த்திகளின் தரிசனம். எனவே ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் ஒரு மண்டலம் முழுவதும் முடிந்த போதெல்லாம் சுயம்பு மூர்த்திகளைக் கருவறையில் மின்சார விளக்குகள் இல்லாத தலங்களில் தரிசனம் செய்தல் அவசியமாகும். ஆருத்ரா தரிசனமும் சிறப்புடையதாகும்.

மேற்கூறிய வழிபாடுகள் படிப்பதற்கு சிரமமாகத் தோன்றினாலும், வைராக்கியத்துடன் இவ்வழிபாடுகளை மேற்கொண்டால் அளப்பரிய பலன்களைக் கண்கூடாக அனுபவித்து மகிழலாம். இத்தகைய வழிபாடுகளையெல்லாம் தொடர்ந்து நிறைவேற்றி உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி புனிதமான மகர ஜோதியைக் காணும் போதுதான் அதன் சக்தியை ஓரளவேனும் உடலும் மனமும் ஏற்கிறது. இவ்வாறு வருடம் ஒருமுறை என்ற கணக்கில் 18 ஆண்டுகள் மகர ஜோதி தரிசனம் பெற்றவர்களே ஸ்ரீ ஐயப்ப குருமார்கள் என்றழைக்கப்படுகிறார்கள். மாதப் பிறப்பு, விஷு போன்ற நாட்களில் ஸ்ரீ சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்து கணக்கிற்காக 18 முறை சபரிமலை சென்று வந்தால் அது முறையான ஜோதி தரிசனம் ஆகாது.

மேற்கூறிய முறையில் 18 ஆண்டு முறையில் ஜோதி தரிசனம் பெற்றால் அது மட்டுமே 'ஸ்ரீ ஐயப்ப குருமார்' என்னும் பூரண. தகுதியைப் பெற்றுத் தந்து விடாது. ஒரு ஐயப்ப குருவானவர் பெற வேண்டிய தெய்வீகத் தகுதிகள் ஏராளம், ஏராளம். அதை பின்னர் விரிவாகக் காண்போம். மேலும் 18 முறை ஜோதி தரிசனம் பெற்றாலும் அதைக் காரணம் காட்டி இல்லறவாசிகள் காவி அணிதல் கூடாது. அனைத்தும் துறந்த உத்தம சந்நியாசிகளே காவி அணியத் தகுதி உடையவர்கள், எனவே 18 முறையோ 36 முறையோ எத்தனை முறை சென்றாலும் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் மீது பக்தியையும் அன்பையும் மேன்மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
18 வருடம் மகர ஜோதி தரிசனம் செய்தபின் தென்னங்கன்று நடும் வழக்கம் உள்ளது. சிலர் 18 முறை சபரி மலை சென்று வந்தவுடனேயே தென்னங்கன்றை ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியில் நடுகின்றனர். உண்மையில் 18 ஆண்டுகள் முறையாக மண்டல விரதமிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் ஜோதி தரிசனம் பெற்றவர்களே தென்னங்கன்று நடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

ஜோதி தரிசனம் பெற்றபின் பெறற்கரிய இத்தரிசனத்தின் பலன்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். பொதுவாக இறை தரிசனங்களின் பலன்கள் ஒரு வாரத்திற்கு நம் ஸ்தூல உடலில் தங்குகின்றன. ஒரு வாரத்திற்குப் பின் உயர்ந்த எண்ணங்களும் வைராக்கியமும் தியாக உணர்வும் சூக்கும சரீரத்திற்கு மாற்றப்படுகின்றன. சற்குருவைப் பெற்றவர்களுக்கு தரிசனப் பலன்கள் அவ்வப்போது குருவருளால் அவர்களுக்குத் தேவையான அளவு அளிக்கப்படுகின்றன.

மற்றவர்கள் இறைதரிசனப் பலன்களை உடனேயே தங்கள் தூல உடலிலும் சூக்கும் உடலிலும் ஏற்பதால் பக்குவமற்ற நிலையில் ஆணவம், தான் என்ற மாயையில் ஆட்பட்டு அதிலேயே லயித்துப் புண்ணியம் தீரும் வரையில் கர்மத்தைப் பெருக்கும் தீய வழிகளில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்க்கவே ஸ்ரீ ஐயப்ப அடியார்கள் ஜோதி தரிசனப் பலன்களை முறையாக உடலில் ஏற்கும் பொருட்டு பல்வேறு வழிபாட்டு முறைகளை இங்கு வகுத்துள்ளோம்.

எனவே ஜோதி தரிசனத்திற்குப் பின் பீடி, சிகரெட், லாகிரி வஸ்துகள், மது போன்ற தீய வழக்கங்கள் கொண்டிருந்தோர் அவ்வழக்கங்களை அறவே விட்டொழித்துவிட வேண்டும். பீடி, சிகரெட், மது போன்ற பொருட்களை வியாபாரம் செய்வோரும் எந்த விதத்தில் லாகிரி வஸ்துகளில் ஈடுபட்டிருந்லும் (உதாரணமாக shop owners, employees, manufacturers, executives) அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு துறைகளுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

திருப்பதி சென்றால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்பது உண்மையே. அவ்வாறே ஸ்ரீ ஐயப்பமலை சென்று வந்தாலும் சிறந்த திருப்பம் வாழ்க்கையில் ஏற்படும் என்பதும் நிதர்சனமான உண்ம . ஆனால் அந்தத் திருப்பத்தைப் பயனுள்ள வகையில் தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீ ஐயப்ப அடியார்களே கடவுளருளால் முயற்சி செய்ய வேண்டும். சற்குருவைப் பெற்ற பாக்கியசாலிகள் தங்கள் குருநாதர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ உணர்த்தும் தெய்வீக. வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டு திருந்தி வாழ வேண்டும்.

ஏகாதச ருத்ர மூர்த்திகள்

பரம்பொருளின் அருட்பெருஞ் ஜோதியே நம் சிற்றறிவிற்குப் புலப்படும் வகையில் ஹரி, ஹர தெய்வாம்சங்களாக விரிந்து பரிணமித்து ஏனைய தெய்வ மூர்த்திகளாகவும் நம்மை ஆட்கொள்கின்றது. ஏகாதச ருத்ர மூர்த்திகள் எனப்படும் பதினோரு லிங்க மூர்த்திகளின் தரிசனம் காணக் கிடைக்காதவை,

அஜைகபாதர், அஹிர்புத்நியர், பிநாகி, ருதர், பித்ருரூபர், திரயம்பகர், மகேச்வரர், விருஷாசுபி, சம்பு, ஹவனர், ஈஸ்வரர் என்ற பதின்மரே ஏகாதச ருத்திரர்கள் ஆவர். அஜைகபாத லிங்கம், பிநாக லிங்கம், திரயம்பக லிங்கமென ஏகாதச ஸ்வயம்பு லிங்க மூர்த்திகளும் உண்டு. கேதார்நாத் திருத்தலத்தில் மலைச் சிகரங்களிடையே, மகரஜோதி போல தினமும் மாலையில் ஆதி கேதார்நாத் சிவமூர்த்தியின் ஒளிப் பிழம்பு தரிசனம் இன்றும் கிட்டுகின்றது!

சிவபெருமான், தற்போதுள்ள கேதார்லிங்க மூர்த்தியாக முதன் முதலில் பாண்டவர்களுக்குத் தரிசனந் தருமுன்னரேயே, ஆதி மூல கேதார்நாதராக ஜோதி்ப் பிழம்பாய் ஒளி வடிவங் காட்டியருளினார். பாக்கியம் உள்ளோர்க்கு இன்றும் இவ்வடிவில் பனிமலைச் சிகரங்களின் ஊடே காட்சி தருகின்றார்.

இவ்வாறாக ஆதிமூல கேதாரநாதரிடமிருந்து தோன்றியவையே ஏகாதச ருத்தர லிங்க மூர்த்திகள்! நான்மறை மந்திரங்களில் நடுவனதாய் இருக்கும் ஸ்ரீருத்ர, சமக மந்திரங்களை பதினோரு முறை ஓதிச் சிறப்புற வழிபடுதலையே ஏகாதச ருத்ரவழிபாடு என்று வழங்குகின்றோம். கோயில் கும்பாபிஷேக, ஆகம, வைதீக பூஜைகளில் மட்டுமன்றிப் பல இல்லற பூஜைகளிலும் சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீப ஜோதி பூஜைகளிலும் “ஏகாதச ருத்ர வழிபாடு” பெரும் மகத்துவம் பெற்று விளங்குகின்றது.

நாட்டில் சாதி, மத, இன கலவரங்கள் நீங்கி மக்கள் சுபிட்சமுடன் வாழ, ஸ்ரீருத்ரம், சமகம் மந்திரங்களை அறிந்தோர் எவ்விதக் கட்டணமும், தான தருமமும் பெறாது, மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பட்டி, தொட்டியெங்கும் “ஏகாதச ருத்ர மந்திரப் பாராயணத்தை” மேற்கொள்ள வேண்டும். வேத மந்திரங்கள் யாவும் எவ்வித வேறுபாடுமின்றி மனித குலத்தின் மேம்பாட்டிற்காக இறைவனால் படைக்கப்பட்டவையே! வேதத்தின் திரட்சியாய்த் திகழ்பவையே தேவார, திருவாசக திருமந்திர, திருப்புகழ் மந்திரங்கள்! தமிழ் மறையென இறைவனாலேயே இறைத் தூதுவர்களாம் சமயக் குரவர்கள், அருந்தமிழ் ஞானிகளின் திருவாக்காய்த் திரண்டு நிற்பவை!

வடமொழி வேதமும் தமிழ் மறையும் இல்லந் தோறும் தினமும் மூன்று வேளைகளிலும் ஒலித்து வந்தால் நம் புனித பாரதமென்ன, போர், பகை, மத ஒற்றுமையின்மை, தீ, நோய், வறுமை, கலகம், எரிமலை, சூறாவளி, பஞ்சம், போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளும் நன்னிலை பெற்றுப் பாரெங்கும் சாந்தம் நிலவிட அறவழி பெருகுமன்றோ ! அப்பர் சுவாமிகள் தேவமொழியில் விளங்கும் “ருத்ர வேத மந்திரத்திற்கு” ஈடான திருத்தாண்டகப் பதிகத்தை அருளியுள்ளமையால் இதனைப் பதினோரு முறை ஓதுதலும் ஏகாதச ருத்திரப் பாராயணமாகிறது.

கேதார்நாத் ஜோதி தரிசனம்

கேதார்நாத்தில் அந்திப் பொழுதில் காட்சி தரும் “ஆதி மூல கேதாரநாத மூர்த்தியின் ஒளிப்பிழம்பு” தரிசனத்தைக் கண்டவாறே ருத்ரம், சமகம், திருத்தாண்டகப் பதிகப் பாராயணம் செய்திடில் கிட்டும் தெய்வீக சக்திகள் அளப்பரியன. எத்தகைய கொடிய தீவினைகளும் மாய்ந்து எவரையும் நல்வழிப்படுத்தி, அருட் செல்வத்தையும் முறையான பொருட் செல்வத்தையும் தரவல்ல வழிபாடிது!

தினந்தோறும் ஏகாதச ருத்ர லிங்க மூர்த்திகளே ருத்ரம், சமகம் ஓதிப் பரம்பொருளாம் ஆதிமூல கேதாரநாதரை வழிபடும் ஜோதி தரிசனமே இது! கேதார்நாத் செல்ல இயலாதோர்க்கு, ஏகாதச ருத்ர லிங்க மூர்த்திகளின் தரிசனமானது மன நிறைவைத் தருமல்லவா! காணற்கரிய ஏகாதச ருத்ர லிங்க மூர்த்திகளை இராமேஸ்வரம் சிவாலயத்தில் கண்டு தரிசித்து ஆனந்தமடையுங்கள். ஒவ்வொரு ருத்ர லிங்கத்திற்குமுரிய வழிபாட்டு முறைகளும் உண்டு.

இங்கு ருத்ரம், சமகம், திருத்தாண்டகப் பதிகங்கள், வேதமந்திரங்களை பதினோரு முறை ஒதி, பதினோரு முறை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி ஏழைகள் வீட்டிலும் ஜோதி துலங்கும் வண்ணம் திரி, எண்ணையுடன் விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்குகளை வறியோர்க்குத் தானமாக வழங்கி, அவர்களையே ஆலயமெங்கும் அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றச் செய்திடில்

1. செல்வமிருப்பினும் ஏதோ இருண்ட வாழ்க்கை வாழ்வது போலான விரக்தி நிலை நீங்கி தம்பதியரிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும்.

2. குழந்தைச் செல்வமின்றி ஏனோ தானோவென்று வாழ்வில் பிடிப்பின்றி வாழ்வோர்க்கு நல்ல வைராக்கிய மனப்பான்மை உண்டாகும்.

3. திசை தடுமாறி வாழ்வோர்க்கு நல்ல அறவழி கிட்டும்.

ஏகாதச ருத்ர லிங்க தரிசனம்

இதுமட்டுமா, எல்லாம் வல்ல திருஅண்ணாமலையாரை வலம் வருகின்ற கிரிவலப் பாதையில் “ஏகாதச ருத்ர லிங்க தரிசனமும்” உண்டு ! இதன் தரிசன பலன்களை எத்தனையோ புராணங்களாக வடித்திடலாமே! அவ்வளவு மகிமையும் மகத்துவமும் வாய்ந்தது இத்தரிசனம்! குரு காட்டும் நெறியில் இதனை தரிசித்திடில் கேதார்நாத் தரிசனப் பலன்களை அள்ளித் தந்திடும்! ருத்ரம், சமகம் போன்ற வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று பக்தியுடன் ஏங்குவோர்க்கு வேத பாராயண பலன்களைத் தரவல்லது!

வேதம் ஓதுதற்கு எவ்விதக் கட்டணமும் பெறலாகாது, அதாவது தாம் கற்ற வேதத்தை விற்கலாகாது என்பது நியதி! ஆனால் கலியுகத்தில் காசியோ, கங்கையோ, திரிவேணி சங்கமமோ, ராமேஸ்வரமோ, கயாவோ.... எங்குமே தர்ப்பணம், திவசம், முதல் பிண்ட தர்ப்பணம் வரை, கிரஹப் பிரவேசம், திருமணம், உபநயனம் என அனைத்திற்கும் ரேட் பேசிக் கொண்டு சிரத்தையின்றி அரைகுறையாக பிரயோக வேத மந்திரங்களைச் சிறிதளவே அறிந்து கொண்டு, எந்த நற்காரியம் புனிதமானதோ அதற்கும் “பணம்” பெற்று மந்திரங்களை “விற்கின்ற” அதர்மச் சூழ்நிலை பெருத்து விட்டதைக் காண்கின்றோம்.

அப்படியே பணத்தைப் பெற்றாலும் அசிரத்தையுடன் அவசர கோலத்தில், ஸ்பஷ்டமாக மந்திரத்தை ஓதாது, ஏனோதானோவென்று ஓதி, ஹோம குண்டத்தில் எதையெதையோ ஏற்றிச் சாபங்களைச் சம்பாதித்துக் கொண்டால் என்ன செய்ய முடியும் ? தியாகச் சுடராய், தாம் வறுமையில் உழன்றால் கூட தான் கற்ற வேதத்தை விற்கலாகாது, அனைவருக்கும் உரித்தான வேத மந்திரங்களை, சடங்குகளை ஒரு பைசா கூடப் பெறாது நடத்தித் தருகின்ற உத்தம நிலையில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? இப்புனிதப் பெருந்தகையோரிடம் தான் இறைவன் எப்போதும் உறைந்திருக்கின்றான்!

இதுவரையில் அறிந்தோ அறியாமலோ வேத மந்திரங்களைக் கொண்டு, பேராசையுடன் அதர்மமான முறையில் வேதநெறிகளுக்குப் புறம்பாக வாழ்ந்தமைக்குத் தக்க பிராயச்சித்தம் தரவல்லது திருஅண்ணாமலையிலுள்ள “ஏகாதச ருத்ர முகலிங்க தரிசனமாகும்”! இவ்வாறாக அண்ணாமலை தரிசனங்களில் நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தித் தென்னாடுடைய இறைப் பரம் பொருளின் திருவடியைப் பெற்றுத் தரும் அற்புத தெய்வீக ரகசியங்களும், தத்துவங்களும், பூசைக் கிரியைகளும், அருட் சக்திப் புனல்களும் பொதிந்துள்ளன. சற்குருவைச் சரணடைவோர்க்கு இவையனைத்தும் தெய்வானுக்கிரஹமாய் எளிதில் உணர்த்தப் பெறும்! ஆழ்ந்த நம்பிக்கையுடன் அண்ணாமலையானை வலம் வாருங்கள்! அவனேயறிவான் ஆட்கொள்ளுந் திறந்தனை!

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசையும் தை அமாவாசையும் மிகவும் சிறப்புடையவை ஏன்? இவை முறையே தட்சிணாயன, உத்தராயணப் புண்யகால முதல் அமாவாசை தினங்களாக அமைவதோடு, சில பஞ்சாங்க நியதிகளின்படி அமாவாசையிலிருந்து புது மாதந் தொடங்குவதால் இவை மாதப்பிறப்பின் மகத்வத்தையும் கூடுதலாகப் பெறுகின்றன.

அலாகாபாதில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தால் திரிவேணி சங்கமம் ஆனது போல் ஈரோடு அருகே பவானியிலும், - காவிரி, பவானி, அமுத நதி - மூன்று நதிகள் சங்கமமாகி தட்சிண திரிவேணி சங்கமமாகப் புனிதத்வம் பெற்று விளங்குகின்றது. சங்கமேஸ்வரராக சிவபெருமான் இங்கு அருள் பாலிக்கின்றார். அபூர்வமான ஸ்ரீகாயத்ரீ லிங்கம் அருள்பாலிக்கும் தவமிது! இத்தகைய லிங்கத்தை வேறு எங்கும் காண இயலாது!

பூவாளுர் பல்குனி

ஓம்காரம் இன்றி பூ, புவஹ, சுவஹ என்ற மூன்று வியாக்ருதிகளும் இல்லாது பரவெளியில் தனி மந்திரமாக காயத்ரீ விளங்கியபோது அதனைப் பல மஹரிஷிகளும் லிங்க வடிவில் வழிபட்டனர். மூன்று வியாஹ்ருதி ரகசியத் தத்துவங்களும் நான்கு வேதங்களின் சாட்சியாய் ஜீவன்களின் நன்மைக்காக பவானியில் சங்கமேஸ்வரரின் முன் ஐக்யமாகித் திரிவேணி சங்கமமாயின!

அமாவாசை என்பது சூரிய, சந்திர கிரஹங்களின் சங்கமத்தைக் குறிக்கின்றது அல்லவா? முன்னரே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் விளக்கியுள்ளபடி ஈஸ்வரனின் வலது கண்ணாக சூரியனும், இடது கண்ணாக சந்திரனும் விளங்குவதால் இறைவன் “ஆக்ஞாயோக பாவனை'' கொள்கையில், அதாவது யோகப் பார்வையாக தம் வலது, இடது நேத்ர தீட்சண்யத்தை புருவ மத்தியில் ஒன்று சேர்க்கையில் சூர்ய, சந்திர, நேத்ராக்னிகள் ஒன்று சேர்ந்து அமாவாசை பிறக்கின்றது!

ஆக்ஞா யோகமே அமாவாசை யாகம்!

யோகம் பயில்கையில், இரு பார்வைகளையும் புருவங்களின் இடையே இணைக்கும்போது கண்களின் இறுக்கம் காரணமாக கண்கள் கலங்கிச் சிவந்து ஓரிரு நீர்த்துளிகள் மல்க விழியோரம் கசிந்து நிற்கும். இவ்வாறு இறைவனுடைய ஆக்ஞா யோக பாவன நடனத்தின் போது, சூர்ய, சந்திராக்னிகளின், இரு பார்வைகளின் சங்கமத்தால் இறைவனுடைய கண்களில் திரண்ட அக்னி ஜல மண்டலத்துளியின் சிறு அணுத்துளிகள் சில இடங்களில் சிதறின. அவையே அமாவாசை நீராடலுக்குரிய திருத்தலங்களாக, தீர்த்தங்களாக ஆயின. இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் எனப்படும் கடல் தீர்த்தம், பவானி முக்கூடல் தீர்த்தம், சென்னை திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில் தீர்த்தம், திருவிடைமருதூர் திருக்குளம், இராமநாதபுரம் அருகே ஆதி சேதுக்கரை, தர்பசயனம், நவபாஷாணம், கயா பல்குனி தீர்த்தம் போன்றவை ஆடி அமாவாசைக்கான தீர்த்த நீராடல் கட்டங்களாகும்.

திருவிடைமருதூர் தீர்த்தம்

இங்கெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் ஆடி அமாவாசையன்று நீராட வருகின்றனர். காரணம் அமாவாசைத் திதியன்று சூரிய, சந்திர மண்டலங்கள ்இணையும்போது ஆங்கே அபூர்வமான புது விதமான வெட்ப தட்ப நிலை நிழலமைப்பு, ஒளி, ஒலி வர்ணங்கள் போன்றவை ஏற்படுகின்றன.

இவை பித்ருக்களின் ஆன்ம சக்திக்கு உதவுமாதலின் இச்சங்கமத்தில்தான் பித்ருக்கள் தங்களுடைய தவ, ஜப, யோக நிலைகளை மேற்கொள்கின்றனர். மேலும் பித்ருக்கள் மிகவும் விரும்பி வழிபடுகின்ற ஸ்ரீகாயத்ரீ லிங்கம் பவானியில் தான் அமைந்துள்ளது. மூன்று நதிகளின் சந்திப்பில் கோயில் வளாகம் விரிந்துள்ளமையால் இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. அருகில் வேதகிரியாக வேதமலையே உயர்ந்து தரிசனமளிக்கிறது. கலியுகத்தில் நான்கு வேத சக்திகளின் நிறைவாகவும் பாமரர்களின் நான்கு மறை வேதமந்திரமாகவும் விளங்கும் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை இங்கு ஸ்ரீ காயத்ரீ லிங்கத்தின் முன்னால் ஓதி உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்திக் கொண்டு பித்ருக்களுக்கு இங்கு தர்ப்பணம் வார்ப்பது மிகவும் சிறப்புடையதாகும்.

இதேபோல் இராமேஸ்வரத்திலும், இக்கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி அக்னி தீர்த்தம் எனப்படும் கடலிலோ, அல்லது சமுத்திரங்கள் சங்கமிக்கின்ற தனுஷ்கோடியிலும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது ஆடி அமாவாசைக்குரிய முக்கிய வழிபாடாகும்,

நம்முடைய ஆஸ்ரம வெளியீடான “பித்ருக்களுக்கான எளிய தர்ப்பண முறைகள்” என்னும் நூலில் உள்ள எளிய தர்ப்பண மந்திரங்களை அறிந்து தெளிந்து ஆடி அமாவாசையன்று இராமேஸ்வரம், பவானி போன்ற தலங்களில் கூடுகின்ற பாமர மக்களும் பித்ருக்களின் ஆசியைப் பெறும் வண்ணம் எவ்விதக் கட்டணமும் பெறாவண்ணம் அவர்களுக்கு இலவசமாக தர்ப்பண மந்திரங்களை போதித்து தர்பைச் சட்டங்கள் மூலம் தர்ப்பணம் அளிக்கின்ற நல வழிகளைக் காட்டுவீர்களாக! இது மிகச் சிறந்த வித்யா தானமும் சமுதாயப் பணியுமாகும்.

ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தி

ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தி

மரண பயம்தனைப் போக்குபவர், நல்ல ஆயுளைத் தருபவர், நோய் நொடியில்லா வாழ்க்கையைத் தருபவர், சஞ்சித, பிராரப்த கர்ம வினைகளால் ஏற்பட்டிருக்கும் ரோகங்களை நீக்கி அருள்பவர், ஆகாமிக் கர்ம வினைகளை மாய்ப்பவர், வாழ்கின்ற வாழ்க்கையை இறைநினைவுடன் பக்தியுடன் வாழ்ந்திடத் துணை புரிபவர்! இதைவிட ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்! இம்மாபெரும் வரங்களையும் இன்னோரன்ன நல்வரங்களையும் தந்து அருள்பாலிப்பவரே ஸ்ரீ மிருத்யுஞ்ஜய மூர்த்தி!

மிருத்யு என்றால் ஆயுளைத் தடுப்பது, கவர்வது என்று பொருள். மிருத்யுஞ்ஜெயர் என்றால் ஆயுளை அழிக்கும் வினைகளிடமிருந்து நம்மை வெற்றி பெறச் செய்யும் தெய்வ மூர்த்தி என்று பொருளாம். மிருத்யுஞ்ஜெய ஹோமம் என்று அற்புதமான ஹோம வழிபாடு ஒன்றுண்டு. மிருத்யுவை ஜெயம் செய்கின்ற, வெல்கின்ற ஹோம வழிபாடு இதுவே!

மிருத்யுக்களில் பல வகையுண்டு! அகால மிருத்யு என்பது அகாலத்தில் அதாவது எதிர்பாராத விதத்தில் மரணத்தைத் தருவிப்புதாகும். அகால மிருத்யு தோஷங்களும் சாபங்களும் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இல்லத்தில் உள்ள பூமி தோஷங்கள், பித்ரு சாபங்கள், தான் இழைத்த கொடிய வினைகள், குலதெய்வத்தை மறத்தல், பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களைத் தவற விடுதல், மஹான்கள்/பெரியோர்களை அவமதித்தல் போன்றவை காரணமாக மிருத்யு தோஷங்களும் அகால மிருத்யு தோஷங்களும் ஏற்படுகின்றன.

மரணம் வேறு, மரண பயம் வேறு! மரண பயம் ஏற்பட்டிடில் வாழ்க்கையின் நற்காரியங்கள் பாதிக்கப்பட்டு விடும். வாழ்க்கையே சூன்யம் ஆனதுபோல் தோன்றும். இத்தகைய மரண பயத்தைப் போக்குவதே ஸ்ரீ மிருத்யுஞ்ஜய மூர்த்தி வழிபாடாகும். ஸ்ரீருத்ரத்தில்

“த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருக மிவ பந்தனான் மிருத்யோர் முஷிய மாம்ருதாத்”

என்ற ஓர் அற்புதமான மந்திரமுண்டு. இதை எப்போதும் ஜபித்து வந்தால் மிருத்யு அண்டாது, யம பயம் தீரும். நல்ஆயுள் வளரும். மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் இதனை ஓதி வழிபடுவர். .

ஸ்ரீ மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் கருணை கடாட்சம் நிலவாத இடமே பூமியில் கிடையாது. எனினும் புனித நதிகள் சில இடங்களிலேயே ஓடுவதுபோல ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியின் அம்சங்கள் மிகுந்து பரிமளிக்கும் திருத்தலங்கள் பல உண்டு. ஹரித்வாரில் ஸ்ரீ மிருத்யுஞ்ஜயர் ஆலயமுண்டு ! பகீரதன் தன் முன்னோர்க்கு கபில மஹரிஷியின் சாபத்தால் ஏற்பட்ட ம்ருத்யுவைப் போக்கிட கங்காதேவியின் அருளைப் பெற்றமையாலும், கங்கை சமவெளியை அடைந்து பாமரர்க்கும் அருள் பாலிக்கும் தலமாதலினாலும் ஹரித்வார் முக்கியத்துவம் பெறுகிறது. திருக்கடவூர், அருணாசலக்ஷேத்திரமாகிய திருஅண்ணாமலை, நதிகளின் சங்கமங்கள், வேதங்கள் தீர்த்தமாகவோ, மலையாகவோ, விருட்சகமாகவோ, அருள் பாலிக்கும் தலங்கள் போன்றவை ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியின் அம்சங்கள் பரிமளிக்கும் இடங்களாகும்.

அமிர்த தாரைகள்

நற்காரியங்கள் விரைவில் நிறைவேற

கோயில் திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள், திருக்குளங்கள் சீரமைத்தல் போன்ற தெய்வீகக் காரியங்கள் கூட பற்பல காரணங்களால் பாதியில் தடைபட்டிருப்பதைக் காண்கிறோம். இத்தகைய நற்காரியங்கள் தங்கு தடையின்றி இனிதே நிறைவேற இதோ சித்தர்கள் அருளும் எளிய பூஜை முறைகள்! காரிய சித்தியைத் தரவல்ல அற்புத சக்திகளைக் கொண்டவையே நதிகளும் கோயில் தீர்த்தங்களும். நதிகள் வடக்கு நோக்கிப் பாயும்போது அவைகளின் சக்திகள் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகுகின்றன. அத்தகைய வடதிசை நதிக் கரைகளில் அமைந்துள்ள கோயில்களில் ஆக்ஞா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமங்களை நிகழ்த்தி, அந்நதிகளில் நீராடி வழிபட்டால் கோயில் திருப்பணி நற்காரியங்கள் எல்லாம் மிகத் துரிதமாக நிறைவேறும். வடக்கு நோக்கி நதிகள் பாயும் சில இடங்கள்: திருவலஞ்சுழி (காவிரி), திருமாந்துறை (காயத்ரீ நதி), காளஹஸ்தி (பொன்னாறு), திருமழபாடி (கொள்ளிடம்), வாரணாசி.

குடும்ப வாழ்க்கை சிறப்புற

பெரும்பாலான மனைவிமார்களின் ஏக்கம் தங்கள் கணவன்மார்கள் தங்களிடம் அன்பாக இருப்பதில்லை என்பதே, சிலர் எப்போது பார்த்தாலும் மனைவியிடம் சிடுசிடுப்பாக சினத்துடன் இருப்பார்கள், சினம் தணிந்தாலோ குணக் குன்றாக மாறிவிடுவார்கள். சில கணவன்மார்கள் மனைவியிடத்தில் எந்த வித அன்புப் பரிமாற்றங்களும் இல்லாமல் ஏனோதானோவென்று வாழ்க்கையை நடத்துகின்றனர். இதற்குப் பரிஹாரமென்ன? நாம் தினமும் உண்ணும் உணவிற்கும் அன்றைய தினத்திற்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு. அந்த குறித்த நாளில் ஆட்சி, ஆதிக்கம் செலுத்துகின்ற கிரகத்தைப் பொறுத்தே அந்த தினத்திற்குரிய பெயர்கள் அமைகின்றன. உதாரணமாக புத கிரகத்தின் ஆட்சியும் ஆதிக்கமும் வலுப்பெற்று விளங்கும் நாளையே புதன்கிழமை என்கிறோம். எவ்வாறு காய்கறிக்கும் உரித்தான மருத்துவ, ஆன்மீக குணங்கள் உள்ளனவோ அவ்வாறே ஒவ்வொரு கிரகத்திற்கும் உரித்தான சுவை, வாத, பித்த, சிலேத்தும் குணங்கள் உண்டு. உதாரணமாக நெல்லிக்காய் மிகச் சிறந்த மூலிகைக் கனியாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி, மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல், சஷ்டி, அமாவாசை நாட்களில் நெல்லிக்காய் மற்றும் நெல்லி சம்பந்தப்பட்ட ஊறுகாய் போன்றவைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு இல்லறப் பெண்கள் இத்தினங்களில் நெல்லிக்காயைத் தவிர்த்து வந்தால் தம்பதியருக்கிடையே தேவையற்ற சந்தேகங்களும், மனக்கசப்பும் ஏற்படாது. இவ்வாறு ஒவ்வொரு நாளிலும் விலக்கப்பட வேண்டிய காய்கறி மற்றும் உணவு வகைகள் உண்டு.

கோவிலடி திருத்தலம்

உடல் வீக்கம் நீங்க

காவேரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கோவிலடி ரெங்கநாதர் மிகவும் விசேஷமானவர், உடலில் எப்பகுதியில் வலியேற்பட்டு உப்பி வீங்கியிருந்தாலும், அடிபட்டு வீங்கினாலும், இத்தலத்தின் அப்பக்குடத்தான் பெருமாளுக்கு அப்பம் நைவேத்யம் செய்து அப்பத்தை தானம் செய்திட வீக்கம் மறைந்துவிடும்.

குடும்பத்தினரிடம், தம்பதியினரிடம் அன்பு பெருக

அமர்ந்த கோலத்தில் உள்ள அம்பிகையை ஞாயிறு, செவ்வாய், வெள்ளிதோறும் முழுத் தாமரை மலர்களால் சூரிய ஹோரை நேரத்தில் அர்ச்சித்து கோதுமை உணவினைத் தானமாக அளித்து வந்தால் கணவன் மனைவியரிடையே அன்புப் பிணைப்பு உண்டாகும் (காஞ்சிபுரம், பெருவேளுர், திருவாரூர் தலங்கள்). மேலும் குறிப்பாக சூரியன் தன் இரு தேவியருடன் (சாயா, ஸ்வர்ச்சலாம்பாள்) விளங்கும் தலங்களில் (லால்குடி அருகே நகர் கிராமத்தில் அப்ரதீஸ்வரர் சிவன் கோயில்) ஞாயிறு தோறும் அடிப்பிரதட்சணம் செய்து எறும்புகளுக்கு கோதுமை ரவையும் சர்க்கரையும் கலந்து இட்டு வந்தால் குடும்பம் அன்புச் சோலையாக விளங்கும்.

அமர்ந்த கோல அம்பிகை
பெருவேளுர்

சிறந்த கணவன்மார்களைப் பெற
இந்த யுகத்தின் தர்மம் இல்லறமே ஆகும். இல்லறவாசிகளுக்குரித்தான பிதுர்பூஜை, தேவதைபூஜை, அதிதி பூஜை, அக்னி பூஜை போன்ற பல்வேறு பூஜைகளை முறையாக நிறைவேற்றி முடிவில் இறைவனின் திருவடிகளைச் சேர்வதையே ஒரு முழுமை பெற்ற வாழ்க்கையாக சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய இல்லற தர்மம் இனிதே நிறைவேற சிறந்த கணவன்மார்கள் அமைய வேண்டும் அல்லவா? இதோ ஓர் எளிமையான பூஜை முறை! நவமி திதி அன்று வில்வ மரத்தை ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் என்று ஜபித்துக்கொண்டே 18 முறை வலம் வந்து வில்வமரத்திற்குத் தாமே அரைத்த சந்தனத்தால் காப்பிட்டுக் குங்குமப் பொட்டிட்டு வணங்கி வந்தால் சிறந்த கணவன்மார்களைப் பெறுவார்கள். இந்த வழிபாட்டைக் கன்னிப் பெண்கள் பருவமடைவதிலிருந்து நவமி திதிகள் தோறும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது முக்கியம். தனது முற்பிறவிகளில் இத்தகைய சிறப்பான நவமி திதி வழிபாட்டாலேயே பதிவிரதா தேவி சீதாப்பிராட்டியார் நவமியிற் பிறந்த ஸ்ரீராமனை கணவனாக அடையும் பேறு பெற்றார். திருமணம் ஆன பின்னும் நவமி பூஜையைத் தொடர்வதால் இல்வாழ்க்கை நன்கு அமையும்.

குழந்தைகளுக்கு கண்ணாடி அணியும் நிலை வராதிருக்க

தற்காலத்தில் டி.வி, சினிமா காரணமாக குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கண்கள் பாதிக்கப்படுகின்றன. எந்த விஞ்ஞான முன்னேற்றம் நமக்குப் பல நவீன வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதோ, அதே விஞ்ஞானமே நமக்குக் கண் நோய்களை ஏற்படுத்துகிறது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருவீழிமிழலை

தஞ்சை திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள திருக்காறாயில் கண்ணாயிரநாதர், திருவீழிமிழலை ஆலயங்களில் ஞாயிறுதோறும் சிவபெருமானுக்கு முழுத்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைகளுக்குத் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது. கண்களுக்குரித்தான அனுக்கிரஹ மூர்த்தியே ஸ்ரீ சூரியநாராயண மூர்த்தியாவார். காலை நேர சந்தி நேர வழிபாட்டில் சூரிய பகவானுக்குரித்தான வருண பாசாங்குலி முத்திரை என்ற ஒரு முத்திரை உண்டு. கைவிரல்களை குறித்த யோக முறையில் மடித்து விரல் துவாரம் வழியாக சூரிய பகவானை தரிசித்தல் ஓர் அற்புதமான சூரிய வழிபாடாகும். சூரியோதய நேரத்தில் இவ்வாறு சூரிய பகவானைத் தரிசித்து வந்தால் கண்கள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பதோடு நல்ல அற்புதமான தரிசனங்களையும் பெற்றிடலாம்.

நலமுடன் நீடு வாழ!

அனைத்து செல்வங்களையும் பெற்று இருந்தாலும் அதனை அனுபவிக்க ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டுமே! நீண்ட ஆயுளைப் பெற மிருத்யுஞ்ஜய மந்திரத்தை முறையாக ஓதி வருதல் வேண்டும். அண்ணன் கோயில் எனப்படும் திருவெள்ளக்குளம் திருத்தலத்தில் உள்ள சுவேத புஷ்கரணியில் நீராடி திருவேங்கடப் பெருமாள் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் தானம் செய்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதி வந்தால் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்தையும் பெறலாம். இங்கு வெண்பட்டு ஆடை தானம் சிறப்புடையது.

டாக்டர்களுக்குரித்தான தெய்வீக வழிபாடு

பூர்வ ஜென்மப் புண்ணியத்தாலும், மூதாதையர்கள் செய்த புண்ணியத்தாலும்தான் ஒருவர் சிறந்த மருத்துவராக விளங்குகிறார் என்பதை ஒவ்வொரு மருத்துவரும் உணர வேண்டும். மூதாதையர்களின் பூஜாபலனும் அவர்கள் செய்த தான தர்மங்களின் பலனாகவே மருத்துவர்கள் உருவாகின்றனர். டாக்டர்கள் தாங்கள் படித்த M.B.B.S., M.D. என்ற படிப்பினால், திறமையால், சிறந்த டாக்டராகவோ, சாதாரண டாக்டராகவோ விளங்குகிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம். டாக்டர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்து வரவேண்டும். இலவச மருத்துவ சேவை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் நம் நாட்டில் உண்டு. உதாரணமாக நமது ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் சபை சார்பில் சென்னை, திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாதம் இருமுறை இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த இலவச மருத்துவ முகாமில் வழங்கப்படும் மருந்துகள், டானிக்குகள் அனைத்தும் ஒரு பூஜை அறையில் சேர்க்கப்பட்டு அங்கு இந்திராஷி கவசம், தேவாரம், திருவாசக தமிழ் மறைகளும் வடமொழி மறைகளும் ஒதப்படுகின்றன. இந்த வேத ஒலிகள் மருந்துகளில் விரவி நோய் தீர்க்கும் தெய்வீக சக்தியாகவும், ஆன்மீக சக்தியாகவும் அமைகின்றன. ஆனால் இத்தகைய மக்கள் சேவையாம் மகேசன் சேவைக்கான தெய்வீக வாய்ப்புகள் நம் நாட்டில் ஏராளமாக இருக்க இதனை எத்தனை மருத்துவர்கள் உளமாரப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?

உயர்கல்வி, அயல்நாட்டுப் படிப்பு போன்றவை மருத்துவத் துறையில் சிறந்த முன்னேற்றத்தைத் தராது. அவை எல்லாம் தற்காலிகமாக திடீர் முன்னேற்றத்தைத் தருவதுபோல் தோன்றும். உண்மையான முன்னேற்றம் பெற ஏழை எளியோர்க்கான இலவச மருத்துவ சேவையே எளிமையான வழியாகும். இதற்குரித்தான நல்வழிமுறைகளை ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அளித்துத்தான் வருகின்றோம். தினந்தோறும் பூலோகத்திற்கு ஒளியைப் பரப்ப வருகின்ற சூரிய பகவானுடைய ரதத்தில் ஏழு குதிரைகள் உண்டு. காயத்ரீ, ப்ருஹதி, உஷ்ணிக், ஜெகதி, திருஷ்யப், அனுஷ்டுப், பங்க்தி, இந்த ஏழு குதிரைகளின் நாமத்தைத் தினந்தோறும் ஒதி சூரிய பகவானை வணங்குவது ஒவ்வொரு டாக்டரும் செய்ய வேண்டிய வழிபாடாகும்.

மருத்துவர்களுக்கான அற்புதமான வழிபாடு

சூரிய பகவானுக்குரித்தான ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரை நேரத்தில் (காலை 6 - 7, மதியம் 1 - 2, இரவு 8 - 9) குறைந்தது ஏழுபிடி கொள் தானியத்தை வேக வைத்து, ஏழு குதிரைகளுக்கேனும் அளித்து வந்தால் டாக்டர்கள் தங்கள் துறையில் பேரும், புகழும் தார்மீக ரீதியான பெருஞ் செல்வமும் பெற்று விளங்குவர். சிவசூரியன் என்ற பெயரைத் தாங்கிய தெய்வ மூர்த்திக்கு சிறப்பான வழிபாடுகளைச் செய்து வந்தால் வைத்தியத் துறையில் முன்னேற்றம் காணலாம். சென்னை தியாகராய நகர் அகஸ்தீஸ்வரர் சிவாலயம், கோயம்பேடு சிவாலயம், கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயங்களில் சூரிய பகவான் தன் பத்னியோடு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ராமேஸ்வரம் சிவாலயத்தில் சூரிய சந்திர மூர்த்திகள் தங்கள் பத்தினிகளுடன் எழுந்தருளியுள்ள அற்புதத்தைக் காணலாம்.

உங்கள் சந்ததிக்குத் தீவினைகளையா/பாவத்தையா சேர்த்துக் கொடுப்பது?

பெட்டிக்கடை, மளிகைக் கடை போன்றவற்றை நடத்துவோர் தயவு செய்து பீடி, சுருட்டு, சிகரெட், புகையிலை, மது, ஒயின் போன்ற லாகிரிப் பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யாதீர்கள்! புகை பிடிப்பவர் தன் ஆத்மாவைச் சுட்டெரிப்பதுடன் பரவெளியில் விஷப் புகையைச் செலுத்தி இலட்சக்கணக்கான ஜீவன்களுடைய இருதயங்களைப் பதம் பார்த்துச் சொல்லொணா கொடிய பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். ஒரு பீடி, சிகரெட்டிற்கே மலையளவு பாவம் என்றால் பல ஆண்டுகளாக எவ்வளவு கொடிய பாவங்களைச் சேர்த்துக் கொண்டு விட்டீர்கள்! ஒவ்வொரு மணி நேரமும் இவற்றை விற்றுக் கொண்டே பெரும் பாவத்தையா சம்பாதிப்பது? சிகரெட், பீடி, பொடி, புகையிலை, மது போன்றவற்றைத் தயாரிக்கும்/விற்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் உடனடியாக அவற்றை விட்டு வெளி வந்திடுக! மதுவினால் ஒருவருடைய குடல் கருகி அவர் குடும்பமும் நாசமாவதற்கு இப்படியாக லட்சக்கணக்கான குடும்பங்களில் வேதனைகளும், அழுகுரல்களும், அடிதடிக் கொடுமைகளும், வறுமையும் நிலவுவதற்கு நீங்களும் ஏன் பங்கேற்க வேண்டும்? போதும், கொடிய பாவங்களைச் சேர்த்துக் கொண்டது! கடந்த காலத் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் முதலில் இத்தகைய விஷ/போதை/தீய பொருட்களைத் தயாரிக்கும், வியாபாரம் செய்யும் இடங்களை விட்டு வெளியே வந்திடுக! உங்களுடைய பல தலைமுறைகளுக்குக் கொடிய பாவச் சுமைகளையா விட்டுச் செல்வீர்கள்? பகுத்தறிவுடன் செயல்படுக!

நித்ய கர்ம நிவாரணம்

1.7.1998 – கோயில் சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், பண்டாக்கள், கவனமாய் இருத்தல் நலம்.

2.7.1998 – தபால்காரர்கள் தங்கள் தொழிலில் கவனம் தேவை.

3.7.1998 – பேராசிரியர்கள் ஏழை மாணவர்களுகு உதவி செய்தல் மூலம் தவறுகளிலிருந்து மீள்வர்.

4.7.1998 – ஆசிரியைகளுக்குள் இன்று மனவேறுபாடு வராது பார்த்துக் கொள்தல் நலம்.

5.7.1998 – பஞ்சவர்ணக்கிளிக்கு கோவைப்பழம் அளித்தல் – துணி வியாபாரிகளின் வியாபார அபிவிருத்தி!

6.7.1998 – அணிலுக்கு கொய்யாப்பழம் அளித்தல் – அலுவலக மாற்றம் பெறுவர்.

7.7.1998 – அடிபட்ட / மலடு / கறவை நின்ற பசுவிற்கு தவிடு, பிண்ணாக்கு, அளித்திடில் தனித்து இயங்கும் சக்தியைப் பெறுவர்.

8.7.1998 – விளக்கு தானம் – தலைவர்களின், எஜமானர்களின் அன்புப் பரிசு கிட்டும்.

9.7.1998 – மனைவிக்கு நிறைய மணமுள்ள புஷ்பம் மனம் மகிழ அளித்திடில் சந்திர தோஷம் நீங்கப் பெறும்.

10.7.1998 – 80 வயதானோர்க்கு பாதாபிஷேகம் செய்து புடவை தானமாக அளித்திடில் வெளிநாடு சென்றோர் நலம் பெறுவர்.

11.7.1998 -  வலஞ்சுழி விநாயகருக்கு பொன்னாங்கண்ணி தைலம் இட்டு பன்னீரால் அபிஷேகம் – இட்லி அன்னதானம் – சீட்டுக் கம்பெனியில் தடைப்பட்ட பணம் வந்து சேரும்.

12.7.1998 – காட்டுப் பகுதியில் உள்ள கருப்பண்ண சுவாமிக்கு மணிகட்டி எலுமிச்சை அன்னதானம் - காரிய சாதனை.

13.7.1998 – திரௌபதி அம்மனுக்கு தாமே அரைத்த சந்தனத்தால் புருவம், நெற்றிக்குப் பொட்டிட்டு சாம்பார் சாதம் அன்னதானம் செய்துவர கணவன் தீயவழி போகான்.

14.7.1998 – மயில்களுக்கு உணவு – மானப்பிரச்னையால் வருகின்ற துன்பங்கள் தீரும்.

15.7.1998 – அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் – தானம் – அன்புத் தங்கை நலம் பெறுவாள்.

16.7.1998 – காணாமல் போன பொருள் கிடைத்திருந்தால் இன்று தானம் செய்து விடுக..

17.7.1998 – தம்பளர்கள் தானம் / தனிமை பயம் தீரும்.

18.7.1998 – Torch Light தானம் – இறந்த தாத்தாவின் ஆசியைப் பெற்றுத் தரும்.

19.7.1998 – ஏழைக் குழ்ந்தைகளுக்கு பொம்மை கருவிகள் வாங்கித் தருதலால் குடும்பம் மகிழ்ச்சியுறும்.

20.7.1998 – வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழி காட்டிய ஆசிரியருக்கு நன்றி செலுத்துவதற்கு நன்னாள் இது.

21.7.1998 – தாய் தந்தையர்களுக்கு கங்கை நீரால் அபிஷேகம் – வலம் வந்து வணங்கிடில் வெளிநாட்டுச் செய்திகள் சாதகமாய் அமையும்.

22.7.1998 – அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு மாதப் படிப்புச் செலவை ஏற்றுச் செய்திடில் மனநிலை சரியில்லாதவர்கள் தெளிவு பெறவழி உண்டு.

23.7.1998 – ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாய் தங்க கடுக்கன், காது குத்த தானமாய் அளித்திடில் இறந்த பாட்டியின் ஆசியைப் பெறலாம்.

24.7.1998 – வயதானவர்களுக்கு மெத்தை, போர்வை, தலையணை தானம் – வாழ்க்கையில் புதுமையைக் காணலாம்.

25.7.1998 – வாத்து மேய்ப்பவர்களுக்கு உணவு உடை தானம் – உங்களைத் துன்புறுத்த காத்திருக்கும் எதிரிகள் மனம் மாறுவர்.

26.7.1998 – கருப்பாயி, கருத்தம்மாள், கருப்பக்கா – பெயருடையவர்களுக்கு வஸ்திர தானம் – காத்து கருப்பு சேஷ்டைகளிலிருந்து விடுதலை பெறலாம்.

27.7.1998 – அப்பளம் இடும் வேலையில் ஈடுபட்டவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் – புரையோடிய நோய்கள் படிப்படியாக விலக வழியுண்டு.

28.7.1998 – பள்ளி கூட மாணவ மாணவிகளுக்கு  பைகள் தானம்.. பெரியோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.

29.7.1998 – அவரவர் குழந்தை, பேரன், கொள்ளு பேரன் பேத்திகளுக்கு புது உண்டியல் வாங்கித் தந்து 11 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை அவர்களுக்கு அன்பளிப்பாய் அளித்திடில் அவர்கள் உள்ளிருக்கும் தேக ஆத்மாவின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

30.7.1998 – இன்று தொப்பையும் தொந்தியும் உள்ளவர்களை உட்கார வைத்து வயிறார உணவிடுதல் – அதிகாரிகளால் வருகின்ற துன்பம் விலகும்.

31.7.1998 – இன்று சாக்கடைகளில் இறங்கி வேலை செய்கின்றவர்களுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்தல் – பொருள் இழப்பிலிருந்து விடுதலை பெறுவர்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam