சிரிகிரியை சிரசில் வைக்க அனைவரும் தலை வணங்குவரே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

சிறுவன் பெரியவருடன் திருஅண்ணாமலைக்குச் செல்லும் போதெல்லாம் பெரும்பாலான பயணங்கள் சென்னையிலிருந்து நடையாத்திரைதாம். ஏதோ ஒரு சில முறை மட்டும் பஸ் பிரயாணமாக இருக்கும். பஸ்ஸிலோ, நடை யாத்திரையிலோ ஒரு நிமிடத்தைக் கூட விரயம் செய்யாது சிறுவனிடம் தெய்வீக விஷயங்களைச் சொல்லிக் கொண்டு வருவார்.. நடை யாத்திரையாக இருந்தால் செங்கற்பட்டு ஸ்ரீசக்தி விநாயக (சித்தர்களின் ஞானபத்ர கிரந்தப்படி ஸ்ரீபட்டு விநாயகர்) தரிசனம் நிச்சயம் உண்டு. இங்கு திடீரென்று அவர் அங்கப் பிரதட்சிணமும் செய்வதுண்டு. தூக்கக் கலக்கத்தில் அவருடைய அரைஞாண் கயிற்றின் பின்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு ஈடுகொடுத்துத் தோராயமாக சாலையில் அங்குமிங்குமாகப் பாதங்களை விரைவாக வைத்துக் கொண்டு ஓடுவான்.

ஸ்ரீபட்டு விநாயகர் செங்கற்பட்டு

இருந்தும் இல்லாதிரு!
வழியில் இட்லி, பரோட்டாக் கடை... ஏதேனும் கண்களில் தென்பட்டால் பையன் நிதானிப்பான். ஒரு சபலம்தான்! “பெரியவரோ, இது காஞ்சு போன இட்லி.. இது புளிச்ச இட்லிடா.. இது காஞ்ச விராட்டி மாதிரி பரோட்டா ... உனக்கு நல்ல காஞ்சிபுரம் இட்லி வாங்கித் தரேன்”, என்று அந்த டிபன் கடைகளை ஓரங்கட்டுவார். சிறுவனுக்குக் கோபங் கோபமாக வரும். வேண்டுமென்றே நடையைத் தளர்த்துவான்.

அச்சிறுப்பாக்கம் அருகில் நிறைய சிறு ஹோட்டல்கள் தென்படும். உள்ளே நுழைந்து கைகளைக் கழுவி, உட்கார்ந்தவுடன், “டேய் இங்க காஞ்சிபுரம் இட்லி இல்லையாம், வேற ஓட்டல் பார்க்கலாம் வா!”, என்று சொல்லி விருட்டென்று எழுந்து வந்து விடுவார். சிறுவனுக்கு எப்படி இருக்கும்?

ஏன் இப்படிச் செய்கிறார் என்பது அவனுக்குப் புரியாத புதிராக இருக்கும்! நடுவில் ஆங்காங்கே ஐயனார், கருப்பண்ண சுவாமி தெய்வ ரூபங்கள் தென்பட்டால் மிகுந்த பயபக்தியுடன் வணங்கி அந்த இடத்தைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வணங்கி விட்டுத் தொடர்வார். அங்கே உண்டியலில் காசு போட்டு விட்டு அருகிலிருக்கும் வேப்ப மரம், ஆடுதொடா இலை, அஞ்சலை நொச்சி, துளசி, மணத் தக்காளி போன்று அங்கிருக்கும் ஏதேதோ மூலிகைகளின் பெயரைச் சொல்லி, “பித்தம் குறையணும், வயித்துப் புண் ஆறணும், இது நல்லா கபத்தைக் கேக்கும், இது வயத்துக்குப் பத்தியம்”, என்று விளக்கம் சொல்லி சிறுவனுக்கு வாயில் ஊட்டுவார்! அல்லது மூலிகைகளின் ரசத்தைப் பிழிந்து விடுவார்! அப்பப்பா கசப்போ கசப்பு, அவ்வளவு கசப்பு! வாய்க்குக் கசப்பு, வயிற்றுக்கு இனிப்பு என்று பெரியவர் வியாக்யானம் பேசிடுவார். அந்தக் கசப்புடன் வாயும் வயிறும் நிரம்பிச் சிறுவன் ஏதோ ஒரு புதுத் தெம்புடன் புறப்படுவான். என்ன ஆச்சரியம்! நன்கு சாப்பிட்டது போல் ஓர் ஆனந்தம் கிட்டும்! சித்புருஷரின் கைபட்ட மூலிகை அல்லவா!

அடுத்த சில நிமிடங்களில் ஒரு நல்ல ஓட்டல் தென்படும். அங்கு எல்லாச் சிற்றுண்டிகளும் சுடச்சுடக் கிடைக்கும், பரோட்டா, தோசை, காஞ்சீபுரம் இட்லி.... பெரியவர் கேட்ட அனைத்து இத்யாதிகளும் உண்டு! ஒருமுறை மூலிகைகளை மென்றுத் தின்றமையால் சிறுவனுக்கு அப்போது பொம்மென்று வயிறு நிரம்பியது! சிறுவனால் மேலும் ஒன்றும் தின்ன இயலாத நிலை! “இறைவா! என்ன சோதனை”, என்று கூடச் சிறுவன் எண்ணுதலானான்!!

இப்பிறவிதான் முடிந்திடுமோ
இறைவா உன்னைக் காணாமல் !

பிறகு “சேச்சே ஒரு பரோட்டாவிற்காக இப்படி நாக்கு அலைகிறதே”, என்று தன்னைத் திருத்திக் கொண்டான்! பெரியவரோ அவனிடம், “உனக்கு பசிக்காட்டி என்னடா பண்றது! எனக்குப் பசிக்குதே!” என்று சிரித்துக் கொண்டே ஓட்டலில் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்திட்டார்!

“வேப்பிலைக் கொழுந்தும், புளியங் கொழுந்தும், கொடுக்காய்ப் புளியும் போட்டு, என் வயித்தை நல்லா ரொப்பிட்டு என்னமாய்ச் சமாளிக்கிறார்”, என்று எண்ணி சிறுவன் வியந்திடுவான்.

தாவரத்திற்குமா பாக்கி!
“என்னடா பண்ணறது? ஒரு ஜென்மத்துல நீ இந்தப் பக்கமா வந்தப்போ அந்த சின்னச் செடிகளெல்லாம் காயறதைப் பார்த்து மனசு வருத்தப்பட்டு கொஞ்சம் தண்ணீர் ஊத்தி சின்னவேலி போட்டு வச்சுட்டே. இப்ப அது எல்லாம் பெரிய மரமாயிடுச்சு! இந்தக் கொழுந்தத் தின்னுட்டு மரங்களுக்கும் உனக்கும் இருக்கற கர்ம பாக்கிய நீ தீர்க்க வேண்டாமா?“

“ஒரு சின்ன கர்மா கூட உன்னோட உடம்புல சேரக் கூடாதுங்கறதுக்குத் தாண்டா உன்னோட கர்ம பரிபாலனத்துக்காக எங்களை ஸ்பெஷலா பூமிக்கு depute பண்ணியிருக்காங்க!” என்று சொல்லிக் கை கொட்டிச் சிரித்தார்! இதைக் கேட்டு அவன் ஒரு விதத்தில் பெருமைபட்டாலும் மறுபுறம், “பாவம் வாத்யார் நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு பூலோகத்தில் தன்னைக் கரையேத்துவதற்காக ஒரு மனுஷ உடலைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்”, என்று எண்ணும்போது அவன் மனம் கலங்கி விடும். இனிமேல் “நாம் இவரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்”,என்று ஆவேசம் கொள்வான்!

“நீ மட்டும் இந்த ஓட்டல்ல நல்லா சாப்பிடறியே, இது மட்டும் எந்த கர்மக் கணக்குல வரும்?” என்று சிறுவனுக்குக் கேட்க வேண்டும் போலிருந்தது ... ஆனாக் கேட்க முடியுமா? ஆனால் பெரியவரிடம் (ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால்) எதுவுமே கேளாமலேயே தரப்படும் என்ற சித்த இலக்கியப்பாடம் தானே in Vogue!

சிறுவன் எண்ணியதை telepathyயாக உணர்ந்த பெரியவர், “யாராயிருந்தாலும் சரி இந்த கோவணாண்டிக் கிழவனாயிருந்தாலும் சரி, எத்தனை பருக்கை ஒருத்தர் வயித்துக்குள்ள போகணுமோ, அவ்வளவுதாண்டா கணக்கா போகும். extra ஒரு பருக்கை, ஒரு தோசை கூட வயித்துக்குள்ள போகாது!”

சாப்பாட்டிற்கு முன்! 

“ஆனா இந்த இடத்துல நாங்க எவ்வளவு சாப்பிடணும்கற subjectஐ விட எதுக்கு, ஏன் இங்க நாங்க சாப்பிடணும்கறதுதான்டா சித்தர்களோட கர்ம பரிபாலனத்துல ரொம்ப importantஆ கவனிக்கணும்! உன் பார்வைக்கு நாங்க பசிக்காக நெறய சாப்பிடற மாதிரித் தாண்டா வெளிப்படையாகக் தோணும். ஆனா அப்படி இல்லைடா!”

“நான் ஏன் இங்க இவ்வளவு சாப்பிடறேன்னு முதல்ல தெரிஞ்சுக்க! இதெல்லாம் இந்த மாதிரி விலாவரியா உனக்குச் சொல்லி புரிய வச்சுத்தான் சற்குருவோட மஹிமையை உணர வைக்கணுங்கற அவசியம் எங்களுக்குக் கிடையாதுடா! ஆனா எதிர்காலத்துல இதையெல்லாம் நீ புஸ்தகத்துல எழுதி ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் சற்குருவோட Importanceஐப் புரிய வைக்கணும்! இதுதான் உன்னை இங்க பொறக்க வச்சதுக்கே முதல் காரணம்!”

“இந்த ஓட்டல்காரரு இந்த வருஷம் 5000 பேருக்கு மேலேயே தெரிஞ்சோ தெரியாமலேயே அன்னதானம் பண்ணிட்டாரு! ஆனா அறிஞ்சோ அறியாமலேயோ தினமும் கவனக் குறைவா சமையல்ல ஒண்ணு ரெண்டு கல்லு, உமி தங்கி அதைப் பொறுக்காம சாதம் சமைக்கிறது, சரியாப் பார்க்காம அழுகல், புழுவோட, சமையல்ல காய்கறி சேர்க்கறது... இப்படியே தெனமும் வண்டி வண்டியாக் கர்மம் நெறயச் சேருது! இந்தக் கர்ம வினையெல்லாம் யார் செஞ்சாலும் ஒட்டு மொத்தமா முதலாளி தலைல தானே விடியும்!“

சாப்பாட்டிற்குப் பின்!
“இந்தக் கல்லு, மண்ணு பாவம்தான் அந்த மனுஷனோட நல்ல காரியத்துக்குத் தடையா நிக்குது! இந்த ஓட்டல்காரரு 5000 பேருக்கு சாப்பாடு போட்டாக் கூட அந்த அன்னதானப் புண்ணியத்தை இவருக்குப் போய்ச் சேர விடாமல் இந்தப் பாவம் தான் தடுக்குது. பாவம், இந்த ஆளு ஏற்கனவே புள்ள, குட்டி இல்லாம ரொம்ப மனசு கஷ்டப்படறான்! கொஞ்சம் பித்ருசாபம் வேற சேர்ந்திடுச்சு!”

“ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க! நான் யாருன்னு அவனுக்குத் தெரியாது! ஆனா எங்களைத் தேடி யாரும் வராட்டாக்கூட அவங்கவங்க பித்ருக்கள் எங்களைக்  Contact பண்ணுவாங்க! அந்த அன்ன தானப் புண்ய சக்தியை முறையா சேர்த்து கொடுக்கறதுக்காக எங்களுக்கு மேலேருந்து (Upper Worlds) message அனுப்பறாங்க! இந்தப் பிரபஞ்சத்துல சித்தர்களோட சாம்ராஜ்யம் எல்லா இடத்துலேயும் கொடி கட்டிப் பறக்குதுடா! நமக்கு ThiruAnnamalai Jurisdiction கொடுத்துருக்காங்க! (கலகலவென்று பெரிதாய்ச் சிரிக்கிறார்!) சித்தர்கள் மேல பரிபூரணமா நம்பிக்கை மட்டும் வச்சுட்டாப் போதும்! உலகத்துல நீ எங்க இருந்தாலும் தெய்வீகத்துல ஜம்முனு கை தூக்கி விட்டுக் கரையேத்திடுவாங்க!”

“பாவம் போயிட்டுப் போறான்! அப்பப்ப ஏதோ கொஞ்சம் அன்னதானம் பண்றானேன்னு அந்தப் புண்ணியம் கொஞ்சம் ஒடம்புல ஒட்டட்டுமேன்னு மஹானுங்க சித்தருங்க அவங்களே மனசு விரும்பி இங்க ஒட்டலுக்குள்ள வந்து கொஞ்சம் சாப்பிட்டுத் தங்களோட புனிதமான காலை உள்ள வெச்சு கல்லு, மண்ணு சேர்ந்த டிப்பனைச் சாப்பிட்டுத் தங்களோட உடம்புல இருக்கற யோகாக்னில இந்தப் பாவத்தைக் கொஞ்சம் பஸ்மம் பண்றாங்க!“ (பெரியவர் கண்ணைச் சிமிட்டுகிறார்!)

”ஆனா சற்குரு பக்கத்துலேயே இருந்தாக் கூட உனக்கென்ன தோணுது! நமக்கு வேப்பிலைக் கொழுந்தைக் கொடுத்து வயித்த ரொப்பிட்டு இந்த ஆளு மட்டும் பரோட்டா, தோசைன்னு, ஒரு வெட்டு வெட்டறானேன்னு தோணுது!” சிறுவனை நெடுநேரம் வைத்த கண் விடாமல் பார்த்தார்! சிறுவனுக்கும் 72000 நாடிகளிலும் ஏதோ பாய்ந்தாற் போல் ஒரு தெய்வீக உணர்ச்சி!

“கலியுகம்டா, தெய்வமே சற்குருவா பக்கத்துல நின்னாக் கூட இப்படித்தாண்டா நினைக்கச் சொல்லும்! (ஹாஹாவென்று பெரிதாகச் சிரித்தார்) ஆனா சித்தர்களோ இந்த மாதிரி நெறய miracles பண்ணிட்டு எதையும் யார்கிட்டேயும் சொல்லிக்காம அவங்கபாட்டுக்கு அவங்களோட ரூட்ல போய்க்கிட்டே இருப்பாங்க! (பெரியவர் புன்முறுவலுடன் சிறுவனை நோக்கினார்!)

எப்போதும் மாறும் பெரியவர்!

சிறுவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு முன்தான் பரோட்டா, சாம்பாரைக் குழைத்துத் தின்னும் சாப்பாட்டு ராமனாகத் தென்பட்ட பெரியவர், இப்போது உயர்ந்து அதியற்புத சித்தர் பிரானாகக் காட்சி அளிக்கின்றாரே! (சிறுவனின் கணக்கில்!!!)

“அது உன்னோடத் தப்புக் கணக்குடா! நாங்க எப்பவுமே as is where is conditionல அப்படியே தாண்டா இருக்கோம்! நீதான் உன்னைப் போட்டு ரொம்பக் கொழப்பிக்கிட்டு இருக்கே!” அவன் குட்டு வழக்கம் போல் வெளிப்பட்டு விட்டதே! சிறுவன் திடுக்கிட்டுப் பெரியவரைப் பார்த்தான்! அதுமட்டுமா, ஓட்டலில் ஒரு சின்ன டிபன் சாப்பிடுவதில் இவ்வளவு தெய்வீக ரகசியங்களும் தாத்பர்யங்களும் பொதிந்து கிடக்கின்றனவா! பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்கவல்ல மாபெரும் சித்புருஷர், சாதாரணக் கோவணாண்டியாய்ப் பாமரர் ரூபத்தில் தன்னை அருகிலிருந்து தெய்வீகத்தில் போஷிக்கின்றார் என்றால் என்னே பாக்கியம்! சிறுவனுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது!

கமக யோகம்!

பின் கோவணத் திரிப்பிலிருந்து ஒரு கிழிசல் ஐந்து ரூபாயை எடுத்துப் பிரித்து பில்லைக் கொடுத்த பெரியவர், விறுவிறு என வெளியில் நடந்து வந்தார்! வழியில் ஒரு வேப்ப மரத்தில் பத்துப் பதினைந்து காக்கைகள் அமர்ந்திருந்தன! வேப்ப மரத்தருகே சற்றே பெரியவர் நின்றார்! தாம் உண்டதை எல்லாம் கமக யோக சூட்சும முறையில் effortless ஆக வயிற்றிலிருந்து வெளியில் கொணர்ந்திட... என்ன ஆச்சர்யம்! ஆங்கே உணவில் ... கமகமவென்று நறுமணம் பொங்கியது! அந்தக் காக்கையின் நிறமும் விநோதமாக இருந்தன! இம்மாதிரியான காக்கைகளை அவன் பார்த்ததே கிடையாது! சிறுவன் திகைத்து நின்றான்! கிடுகிடுவென்று காக்கைகள் அங்கு வந்து சில நிமிடங்களில் அதை மொய்த்துத் தின்று தீர்த்தன. சித்புருஷரின் பஞ்ச பூத சக்தி நிறைந்த பிரசாதமல்லவா!

“அந்த ஓட்டல்காரன் தைத்ரீய மந்திர கோசம் படிச்சவன்! கோயில்ல பூஜை செய்ய வேண்டியவன்! இந்த பிஸுனசுக்கு வயித்துப் பொழப்புக்கு வந்துட்டான். அதுதான் தைத்திரியக் குருவி மாதிரி அடியேனும் செய்ய வேண்டியதாச்சு!”

“இதெல்லாம் பித்ரு லோகத்துக் காக்கைங்க! மடி, ஆசாரம் ரொம்ப ஜாஸ்தி! உத்தமர்கள் கையிலேந்துதான் எதையும் வாங்கிச் சாப்பிடும்! அதுக்காக எத்தனை ஆயிரம் வருஷம் வேணுமானாலும் பட்டினியாக் கெடக்கும்! அதுவரைக்கும் வேற எதையும் சாப்பிடாது! இவங்க (காக்கைங்க) வயிறு ரொம்பிச்சுன்னா.... வருண பகவானே குளிர்ந்து போய் மழை பொழிய வெச்சுடுவாரு! பித்ரு தோஷமும் கொஞ்சம் தணியும்!”

சிறுவன் புளகாங்கிதமடைந்தான். பாஸ்கர லோகமாகிய சூரிய மண்டலத்தில் யாக்ஞவல்கிய மகரிஷி சூரிய பகவானிடம் பாடம் கேட்டபோது பெரியவர் அஸ்தீக சித்தரிடம் சில காலம் குருகுலவாசம் கொண்டதைப் பெரியவர் பரமானந்தத்துடன் விவரித்த காட்சி அவன் கண்களில் விரிந்தது!

“.... ஏண்டா... நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்... கல்யாண வயசும் வந்திடுச்சு... நல்ல பொண்ணு ஒண்ணு பார்த்துச் சொல்லேன்.”

அங்காளி ஆலயத்தில் காலாட்டிக் கொண்டிருந்த பெரியவர் சிறுவனிடம் கேட்டிட அவன் திகைத்து விட்டான்!

”என்ன வாத்யாரே, வெளையாடறியா, என் வயசு என்ன? நான் போய்ப் பொண்ணுகேட்டா என்ன நெனைப்பாங்க!”

பெரியவர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

சிறுவனுக்கு ஓர் இமாலயப் பணி!

“இதப் பாருடா... எங்க divine head officeல் வந்த நியூசைச் சொல்லிட்டேன்.. அடியேனே செலவை ஏத்துக்கிட்டு சிம்பிளக் கோயில்ல வெச்சு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்!” என்று அவர் கல்யாணம் செய்யப் போகும் முறைகளை விவரித்தார்! சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! சாதாரணமாக , அனாவசியமாகப் பேசாதவரான பெரியவர் தன்னால் பெண் பார்க்க முடியுமா, முடியாதா என்பதையெல்லாம் யோசிக்காது அவர் அன்று நிறையப் பேசியதாக உணர்ந்தான்.

“..... சரி.... தை மாசம் முதல் வெள்ளிக்கிழமைல, கல்யாண முகூர்த்த நேரம் வெச்சிருக்கேன். அதுக்குள்ளாற, நல்ல பொண்ணா பாருடா கண்ணு!”

பெரியவர் வேகவேகமாக எழுந்து உள்ளே சென்றார், சிறுவன் மலைத்து நின்றான்! ஏனென்றால் இந்த பாவனையோடு அவர் கோயிலினுள் சென்றால் சாமான்யமாக வெளி வரமாட்டார். உள்ளே எங்கே தேடினாலும் அவரைக் காணவும் முடியாது!

என்று அவர் சொன்ன காரியத்தை முடிக்கிறோமோ, அடுத்த நிமிடம் அவர் தரிசனம் கிடைக்கும்... அதுவரையில் அவரைப் பார்க்க முடியாது! இத்தகைய முன் அனுபவங்கள் அவனுக்கு நிறைய உண்டு..

அவன் டியூஷன் படிக்கும் பள்ளிக்கூட வாத்தியாருக்கு ஒரு பெண் இருப்பது அப்போது நினைவுக்கு வந்தது.. அந்த ஆசிரியரோ. “எப்படி இந்த வாத்தியார் சம்பளத்தில் இந்தப் பெண்ணைக் கரையேத்தப் போறேனோ, தெரியலையே!” என்று சொல்லிப் புலம்புவதை அடிக்கடி கேட்டிருக்கிறான்.

அவனுக்குப் பெரியவர் சொன்ன திருமண தோஷ நிவாரண முறை ஒன்று நினைவிற்கு வந்தது..!

தன்னைத் தேடி வந்த ஒரு வயதான தம்பதியிடம், “உங்க பொண்ணுக்கு முப்பத்தியேழு வயதாயிடுச்சே..! என்ன பரிகார நிவர்த்தி பண்ணிக் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறீங்க.. ?! நேரே வடபழனிக்குப் போய், அங்க இருக்கிற செவ்வாய் பகவானுக்குச் சிகப்பு அரிசி, குங்குமம் கலந்த பசும்பாலை அபிஷேகம், செஞ்சுட்டு வந்தா, ரொம்ப சுலபத்துல கல்யாணம் ஆயிடுமே!” என்று சொன்னது நினைவிற்கு வந்தது.. அவனே அந்த ஆசிரியரின் குடும்பத்தை வடபழனிக்கு அழைத்துச் சென்று செவ்வாய் பகவானுக்கு குங்குமப் பால் பூஜை செய்ய வைத்துக் கூட்டி வரும்போது, அவர்களிடம் சிறுவன் பெரியவர் சொன்ன பையனைப் பற்றிச் சொல்லிட.... அவர்களோ....!
... ஆனந்தம் தொடரும்..!

ஸ்ரீஇலஞ்சி குமரன்

தென்காசி மகாத்மியத் தொடர்

வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!

தென்னிந்தியக் காசித் திருத்தலமாக விளங்குகின்ற தென்காசி ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசிக்கும் முன்னர் அனைவரும் முக்கியமாக வழிபட வேண்டிய 12 சிவ மூர்த்திகளைப்  பற்றிய விளக்கங்களை இத்தொடரில் நாம் அளித்துள்ளோம் அல்லவா! இவையாவும் சித்புருஷர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களில் ஆலயச் சீர்வரிசை புராணக் காண்டத்திலிருந்து தொகுக்கப் பெற்றதாகும். பதினெட்டு சித்தர்களுக்கு மூத்தோராக, மூலமுதல் சித்தராக விளங்குகின்ற நவநாத சித்தர்கள் வரை அனைவருமே இந்த 12 திருத்தலங்களில் தங்களுடைய சிவ வழிபாடுகளையும் யோக சஞ்சாரங்களையும், ஞான தந்திர வழிபாடுகளையும் மேற்கொண்டு துவாதச சிவ பூஜா பலன்களைத் தென்காசி ராஜகோபுரத்தில் பதித்துள்ளார்கள். தென்காசி ராஜகோபுரம் சமீபத்தில்தான் எழுந்ததாயிற்றே, இதில் எவ்வாறு நவநாத சித்புருஷர்கள் தங்களுடைய துவாதச சிவத்தல தரிசனப் பலன்களை பதிக்க முடியும் என்று எண்ணிடாதீர்கள்.

நாம் இன்றைக்கு நம் தூல சரீரத்தில்தான் தென்காசி கோபுரத்தைக் காண்கின்றோம். இதற்கு முன் மொட்டைக் கோபுரமாக இருந்திருந்தாலும் சூட்சுமமான ராஜகோபுரம் தென்காசித் திருத்தலத்தில் எப்போதும் நிறைந்துகொண்டுதான் இருக்கின்றது.. ஏனெனில் இலஞ்சி முருகனின் நேர் நேத்திரப் பார்வையில் அமைகின்ற திருக்கோபுரம் ஆதலால் நவநாத சித்தர்கள் இலஞ்சி முருகனுடைய கிருத்திகா நேத்ர சக்தியின் பிரதிபலிப்பைத் தென்காசி ராஜகோபுரத்திலிருந்துதான் பெறுகின்றார்கள். கோபுர தரிசனத்திற்குப் பலவிதமான அற்புதப் பலன்கள் உண்டு. இதனால்தான் “கோபுர தரிசனம் கோடி பாப நாசனம்” என்று நம் மூதாதையர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தென்காசி இலஞ்சி முருகன் ஆலயத்திலிருந்து காண்கையில் தென்காசி ராஜத் திருக்கோபுரமானது சிறிது மங்கலாகத் தோன்றினாலும் இதைத்தான் சூட்சும ராஜகோபுரத் தரிசனம் என்று சித்தர்கள் விளக்குகின்றனர்! ஏனென்றால் பூலோகத்தில் தான் ஒரு மைல், 5. கி.மீ தூரம் என்று தூரக் கணக்கை அளவியலில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் ஆன்மீகத்தில் பக்தி கனிந்திடும் போது தூரம் என்ற அளவியலுக்கு அங்கு இடமில்லை.

பூலோகப் பார்வை இலக்கணப்படி சற்றே ஒளி இருந்தால்தான் எதையும் பார்க்க முடியும். இருளில் எதையும் பார்க்க இயலாது.. ஆனால் ஆன்மீகக் கண்களுக்கு இருளோ, ஒளியோ ஒரு பொருட்டல்ல. சென்னையிலிருந்து கொண்டு சிலி நாட்டின் மலைப் பிரதேசத்திலுள்ள மூலிகையைக் கண்ணாரக் கண்டிடலாம். இருளில் கூட பல லட்சம் மைல்களுக்கு அப்பாலுள்ள நட்சத்திரங்களை நன்கு தரிசித்திடலாம்! பகலில் கூட நட்சத்திரங்களைக் காண்கின்ற அபூர்வமான தெய்வ நேத்ர சக்தி பெற்ற மகான்கள் இன்றும் உண்டு..!

இலஞ்சியிலிருந்து தென்காசி
ராஜகோபுர தரிசனம்

எனவே இலஞ்சி முருகன் ஆலயத்திலிருந்து தென்காசி ராஜகோபுரத்தைத் தரிசிப்பதற்கு சஞ்சய சாந்த நேத்ர தரிசனம் என்று பெயர். குருடராக இருந்த திருதராஷ்டிரருக்குப் பாரதப் போரின் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்து சஞ்சயன் வர்ணித்தார் அல்லவா! சஞ்சயன் அத்தகைய அபூர்வ நேத்ர சக்தியைப் பெற்ற இடமே இலஞ்சித் திருமுருகன் ஆலயமாகும் பூர்வ ஜென்மத்தில் இலஞ்சிப் பெருவனமாக இது விளங்கியபோது இலவம் பஞ்சு போல் தன் உடலை யோகத் திரளாக்கி சஞ்சயன் செய்த அபூர்வ தவம்தான் மகாபாரதப் போரில் தொலைவில் நடக்கின்ற காட்சிகளை மானசீகமாகக் காணும் அற்புத சக்தியைப் பெற்றுத் தந்தது.!

எனவே ஜோதிடர்களும், அருள் வாக்கு அளிப்பவர்களும் பட்சத்திற்கு ஒரு முறையேனும் குறிப்பாக சுக்லபட்சமான வளர்பிறைத் திதியில் வரும் சப்தமித் திதியன்று இலஞ்சி முருகனைத் தரிசித்து இங்கிருந்து தென்காசி ராஜகோபுரத் தரிசனத்தையும் பெற்றுக் குறித்த யோகம் பயின்றுச் சென்றிடில் அவர்களுடைய தீர்க்க தரிசனம் பெருகிடும்.. சப்தமித் திதியும் புதன்கிழமையும் சேருமேயானால் ஜோதிடத் தீர்க்க தரிசனம் பல்கிப் பெருகும். இதற்குக் காரணம் திருமுருகப் பெருமானின் சிவஞ்ஜோதி (சுயஞ்ஜோதி) முப்பூ லிங்க தரிசன நற்கதிர்கள் இலஞ்சி முருகனின் மூலத் தோற்றத்திலிருந்து வெளிப்பட்டுத் தென்காசி ராஜகோபுரத்திற்கு நிரவுகின்றது. இலஞ்சியில் யோகம் பயில்கின்றபோது இத்தகைய த்ரயம்பக ஜோதியானது அதியற்புத யோக சக்திகளை அளிக்கிறது.!

ஸ்ரீஇலஞ்சி முருகப் பெருமான்

மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவநாத சித்தர்கள், தங்களுடைய திருத்துழாய்த் தம்பிரான் சித்தர்கள், கட்டளைச் சித்தர்கள் குழுவுடன் குறித்த திதியில், கிழமையில், நட்சத்திர நாட்களில் குறித்த ஹோரையில் திருக்குற்றாலப் பஞ்சருவியில் நீராடித் தாங்கள் 12 ஆண்டுகளாகத் தியானம் பூண்டு சேமித்த கும்பமேளச் சக்கர மூலிகைக் குளிகையை திருக்குற்றால ஐந்தருவியில் கலக்கின்றார்கள்.. இத்தருணத்தில் இங்கு நீராடுவோர்க்கு மகத்தான தேவ சக்தி கிட்டுகின்றது.

வலம்ப சூரிய சக்தி

ஐந்தருவியில் நீராடி இக்குளிகை மணம் பூண்டு 72000 நாடிகளிலும் குளிகைச் சுடர் ஜோதிகள் பதிந்து நேரே இலஞ்சித் திருமுருகன் ஆலயத்தை அடைந்து இங்கு முருகப் பெருமானைத் தரிசித்திட வேண்டும்! இங்கிருந்து தென்காசி ராஜகோபுரத்தைத் தரிசித்திட்டால் 2,00,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரபஞ்சத்தில் தோன்றக் கூடிய வலம்ப சூரிய சக்தி யோகப் பலன்கள் கிட்டுகின்றன! இதனால் மகத்தான தீர்க்க தரிசனமும் எதிர்வருகின்ற துன்பங்களை அறிகின்ற மனோசக்தியும் நல்லோரைப் பலவிதமான துன்பங்களிலிருந்து காக்கக்கூடிய ருத்ர பூஷண சக்தியும் திருமுருகன் அருளால் கிட்டுகின்றன.!

ஆனால் இத்தகைய அரிய இலஞ்சி முருக தரிசன சக்திகளை எதிலும் விரயம் செய்திடாமல் தேக சுத்தியுடன், 72000 நாள அங்க சுத்தியுடன் போற்றி இரட்சித்து, இறைப் பணிகளுக்காகவே அர்ப்பணித்திட வேண்டும்.. முறையற்ற தீய ஒழுக்கம், பகைமை, பொறாமை, பொய்மை ஆகியவற்றில் இந்த சக்தி மிகவிரைவில் கரைந்து விடும்.

இவ்வாறாக ஒவ்வொரு வருடத்திலும் குறித்த பட்சத்திலும், நட்சத்திர நாட்களிலும் எண்ணற்ற புருஷர்கள் பல அரிய தேவ தைல திரவியங்களையும், தெய்வ மூலிகா சக்திகளையும், அஞ்சன பிரபஞ்சன குளிகைகளையும், தேவேந்திர நறுமண சக்திகளையும் ஐந்தருவியில் கலக்கின்றார்கள். எனவே ஐந்தருவியில் நீராடிய உடனேயே இலஞ்சி முருகவேளைத் தரிசித்திட்டால் தேவ மூலிகா சக்தியும், மயூர ரட்சா மந்திரங்களின் பரிபூரண சக்தியும் உடலிலும், மனதிலும், உள்ளத்திலும் சேர்ந்து சித்தர்களின் அருளாசியுடன் பக்தி நிறைந்த வாழ்க்கையைப் பெற்றுத் தரும்.

திருக்குற்றாலச் சிவாலயத்திலுள்ள தலவிருட்சமான தேவ பலாவில் பல அரிய பலாக் கனிகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு பலாக்கனியும் ஒவ்வொரு சுயம்பு ஜோதி லிங்கமாகும்! ஒவ்வொரு சுயம்புப் பலாக்கனியில் உள்ள பலா முட்கள் யாவுமே கோடி சூர்யப் பிரகாச லிங்க மூர்த்திகளாவர். எனவே இங்கு இந்தத் தல விருட்சத்தின் ஒரு பலாக் கனியைத் தரிசிப்பதே சகஸ்ர லிங்க தரிசனப் பலன்களைப் பெற்றுத் தரும்.! ஒவ்வொரு பலாக்கனியும் காரிய சித்திக் கனியாகும்! இந்த தேவ கனியைத் தரிசிக்கும் போது நீங்கள் துதிக்க வேண்டிய, நினைக்க வேண்டிய இறை அனுபூதிகளும், இறைத் துதிகளும் நிறைய உண்டு. ஒவ்வொரு பலாக்கனியையும் நீங்கள் தரிசிக்கின்ற போது இலஞ்சித் திருமுருகனை எண்ணி உய்த்துத் துதித்து,

கலாப மயிலாடும் இலஞ்சித் திருமுருகா
பலாதி பலன் பார்கவி பலாக்கனி
உலாவரும் திருப் பரணிச் சுடர் ஜோதி
குலாவிடும் திருஇலஞ்சி அருள் குகனே!

(காரிய சித்தி கனிய உதவும் பலாதி பலன் அளிக்கும்துதி!)

என்று ஓதி மகிழ்ந்து பிரார்த்தனை செய்திடுக!

ஆங்கிலப் புத்தாண்டு

தமிழ் வருடமே நமக்கு உரியது என்றாலும், கலியுக நடைமுறை வாழ்க்கையிலுள்ள ஆங்கிலப் புத்தாண்டையும் நடைமுறை எண் ஜோதிட கணித முறைப்படி நாம் கடைபிடிக்க வேண்டும் ஏன்?
பணம், பலவிதமான தஸ்தாதேஜூகள், தேதி, கிழமை, நேரம் போன்ற அனைத்திலும் நாம் ஆங்கிலக் கணித எண் முறையைக் கையாள்வதால் ஆங்கிலப் புத்தாண்டு வழக்கும் நம் வாழ்க்கையில் எண் கணித ரீதியாக முக்கியப் பங்கு வகிக்கிறது.! உதிக்க இருக்கின்ற ஆங்கில வருட 2001 புத்தாண்டைப் பற்றி நாம் இங்கு சித்தர்களுடைய எண் கணித ஜோதிட ரீதியாக சில ஆன்மீக விளக்கங்களைக் காண்போமாக! ஜோதிட பலாபலன்களைப் போல் அல்லாது சித்தர்களுடைய கர்ம பரிபாலன முறைப்படித்தான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் நாம் எண்ணற்ற தெய்வீக விளக்கங்களை அளித்து வருகின்றோம்.

2000 ஆண்டைப் பற்றி ஏற்கனவே நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்துள்ளபடி 2000 முதல் 2990 ஆண்டுவரை இந்த வருட எண்களில் உள்ள பூஜ்யங்களில் குறுக்கே கோடு இட்டுத் தான் பயன்படுத்த வேண்டும். அதாவது 2000 என்பதைக் குறுக்கே கோடிட்டுதான் எழுத வேண்டுமே தவிர வெறும் பூஜ்யமாகவோ அல்லது 2k என்றோ எழுதக் கூடாது என்பதை நன்றாக மனதில் நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். 2000 ஆண்டிலிருந்து அனைத்து பூஜ்யங்களையும் முழுமையாகக் குறுக்கே கோடு போட்டுத்தான் எழுத வேண்டும். 2k அல்லது Y2K என்று சுருக்கி எழுதக் கூடாது... ஏனென்றால் எண் கணிதப்படி 2 என்ற மதிப்பைப் பெறுகின்ற K  எழுத்தானது 2k என்று சொல்லப்படுகின்றபோது தொக்கி நின்று மற்றொன்றைச் சார்ந்ததாகவும் (Interdependent) ஸ்திரமாக இல்லாது நிலையின்றி அசைவுள்ளதாகவும் இருப்பதால் 2k என்று சுருக்கி எழுதுவதால் காரியங்கள் அசைந்து மெதுவாகத்தான் நகருமே தவிர காரிய சித்தி முழுமையாகக் ஏற்படாது.

எனவே உங்களுடைய வங்கிச் செக்குகளில் 2k என்று எழுதுவீர்களேயானால் வியாபாரம் மற்றும் அலுவலக சம்பந்தப்பட்ட அந்த வங்கிச் செக்குக்கான காரியங்கள் தாமதமாகும். எனவே இனியேனும் 2k என்று எழுதாது, 2000, 2001, 2002 என்று முழுமையாகக் குறுக்கே கோடிட்ட பூஜ்யங்களோடு எழுதுங்கள்! கலியுகத்தில் இத்தகைய நிலைகள் ஏற்படும் என்பதையே தீர்க்க தரிசனமாக உணர்ந்துதான் சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்த வாக்கியங்களில் பூஜ்ய வந்தியம் என்ற தனித் தொகுதியையே எழுதாக் கிளவி வேத வாக்கியங்களாக அளித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப அருள் மொழிகளாக நம் குருமங்களா கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கலியுக ஜீவன்களுடைய நன்மைக்காக எடுத்துரைத்து வருகின்றார்கள். மீண்டும் வலியுறுத்துகின்றோம், நாம் இங்கு 2001 ஆண்டைப் பற்றிய பலாபலன்களை விளக்கவில்லை. கர்ம பரிபாலன முறையில் உலக சமுதாயத்தில் எத்துறைகளில் எந்த இடங்களில் கர்மவினைகள் மிகும்? எவ்விதத்தில் கர்மச் சுமைகளைக் கழிக்க வேண்டும் என்ற சித்தர்களுடைய கர்ம பரிபாலன ஆன்ம சூக்த விளக்கங்களையே நீங்கள் இங்குக் கண்டிடலாம்.

2001ம் ஆண்டு சமுதாயத்தில் ஏற்படுகின்ற துன்பங்களுக்குத் தற்காப்பாக உலக மக்கள் குறிப்பாக பாரத மக்கள் குறிப்பிட்ட முக்கிய நான்கு வழிபாடுகளைச் செய்து வருதல் வேண்டும். கர்ம பூமியாக விளங்குவதால் பாரத மக்களுக்கு உலக ஜீவன்களின் மேன்மைக்காக நித்ய பூஜை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு நிச்சயமாக உண்டு! இறைவனே பாரத மக்களுக்கு அளித்துள்ள பெறுதற்கரிய பேறிது! இவ்வரிய தேவ கடமையிலிருந்து நாம் பிறழ்தலாகாது என்று புத்தாண்டில் சங்கல்பம் செய்து கொள்வோமாக!

விநாயகர்க் கவசம், விநாயகர் காப்பு போன்ற விநாயகக் கவசத் துதிகளை இவ்வாண்டில் தினந்தோறும் 21 முறையாவது ஓதி வருதல் வேண்டும் விநாயகக் கவசங்களை ஓதியவாறே மலைத் தலங்களைக் கிரிவலம் வருதலால் மீண்டும் மீண்டும் பின்னிப் பின்னி வருகின்ற வாழ்க்கைத் (இல்லற, வியாபார, அலுவலகம்) துன்பங்களுக்கு நன்முறையில் தீர்வு கிட்டும்.

பின்னல் இடர்பாளை என்ற ஒருவிதத் தீவினைக் கர்மமானது 2001ம் ஆண்டில் பெருக் கெடுக்கின்றது. அதாவது கண்களால் பார்த்ததை, காதுகளால் கேட்டதைச் சரியாகப் புரிந்து கொள்ளாது அல்லது சரியாகச் சொல்லாமல் மாற்றி உரைப்பதால், மாற்றி எழுதுவதால் பிறருக்கு ஏற்படுகின்ற (விளைவித்த) தீங்குகள் தாம் பின்னல் இடர்பாளை என்ற தோஷமாக மாறிப் பல குடும்பங்களை வதைக்கின்றது.. இதனால்தான் வழக்கு மேல் வழக்காக வருடக் கணக்கில் எத்தனையோ பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே வருடப் பிறப்பு அன்றும் ஸ்ரீவிநாயக மூர்த்திக்கு உரித்தான திங்கட் கிழமை தோறும் மலைத்தலங்களில் விநாயகர்க் கவசம், காப்பு போன்ற மந்திரங்களை ஓதித் தலையில் பிள்ளையார்த் துண்டுகளை இருமுடிபோல் சுமந்து சென்று இந்த வருடத்திற்குள் குறைந்தது 365 பிள்ளையார் மூர்த்திகளுக்காவது பிள்ளையார் வஸ்திரங்களைச் சார்த்துதல் வேண்டும்.

வழக்குகள் தீர

பொதுவாக வஸ்திர தானங்கள் நிறைய நிகழ வேண்டிய ஆண்டு இதுவே! அரசமரத்தடிப் பிள்ளையார், ஆலமரத்தடிப் பிள்ளையார், குளக்கரைப் பிள்ளையார் என்று வெய்யிலிலோ, மழையிலோ இருக்கின்ற விநாயக மூர்த்திகள் நிறைய உண்டு. இந்த ஆண்டு குறைந்தது 365 பிள்ளையார் மூர்த்திகளுக்காவது வஸ்திரம் சார்த்திடுவோம் என்ற கைங்கர்யத்தை மேற்கொண்டு அவ்வப்போது இயன்ற அளவில் நிறைய பிள்ளையார்த் துண்டுகளை வாங்கி இருமுடி போல் தலையில் கட்டித் திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், மலைக்கோட்டை, பர்வத மலை, திருச்சி உய்யக்கொண்டான் மலை, தேனி, பழனி போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் வந்து இல்லத்தில் வைத்திருந்து அனைத்துப் பிள்ளையார் மூர்த்திகளுக்கும் வஸ்திரம் அளித்து வந்தால் எத்தனையோ ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் கோர்ட் வழக்குகள் நன்முறையில் தீர்வு பெறும். நீண்ட வருட பங்காளிச் சண்டையும் தீரும்!

கோபுர கலச தரிசனம்!

2001ம் ஆண்டில் செய்யப்பட வேண்டிய நான்கு வழிபாடுகளில் இரண்டாவதாக ஒவ்வொருவரும் தினந்தோறும் காலையில் குறைந்தது ஒன்பது கோபுரக் கலசங்களைத் தினமும் தரிசனம் செய்தாக வேண்டும். 2001 என்பது இரண்டு + ஒன்று = மூன்றாக குரு எண்ணாக அமைவதால் மூன்று விரல்களுடன் கூடிய முக்கியமான கோபுர முத்திரையில் கோபுரக் கலசங்களைத் தரிசித்து வாருங்கள். அதாவது கோபுரம் போல உங்கள் கைவிரல்களால் முத்திரைகளை அமைத்து அதன் ஊடே தினந்தோறும் ஒன்பது கோபுர கலசங்களைத் தரிசிக்க வேண்டும்.! ஒரு கோயிலில் மூன்று அல்லது ஐந்து கோபுரக் கலசங்கள் மட்டுமே இருக்குமானால் அடுத்த கோயிலுக்குச் சென்று ஏனைய கோபுரக் கலசங்களையும் தரிசித்து வந்திடுக! ஒவ்வொரு கோபுர கலசத்தையும் தரிசிக்கும்போதும் நீங்கள் ஓத வேண்டிய மந்திரங்களும் உண்டு.

வாகன பூஜை பெருக வேண்டும் :- இவ்வருடத்தில் வாகன கர்மபந்தங்களால் வாகனப்   பிரச்னைகள் ஏற்படும். வாகன தாமதம், வாகன விபத்து, வாகனங்கள் அடிக்கடி முறிதல் போன்றவற்றோடு வாகனம் சம்பந்தப்பட்ட சரக்குப் போக்குவரத்து முதலீடு அனைத்துமே பாதிக்கப்படும்.

உழைக்காது வந்த பணம் உதறிப் போகும்!

ஸ்ரீதர அய்யாவாள் தீர்த்தம்
திருவிசைநல்லூர்

தற்காலத்தில் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்லுதல் என்பது மாறி காலதாமதமாக (late coming) வருதல் என்பது பழக்கமாகி விட்டது. ஒரு நாளைக்கு பத்து நிமிடம் அலுவலகத்திற்குக் காலதாமதமாகச் செல்லுதல்/ மாலை முன்னதாகப் புறப்படுதல் என்றால் வருடம் முழுவதும் இதை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தீர்களேயானால், கிட்டத்தட்ட மாதந்தோறும் 5 முதல் 10 தினங்களுக்கான சம்பளத்தை வேலை செய்யாது பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கணக்கு ஆகின்றது. இந்த 10 நாள் அதர்மச் சம்பளமானது ஒவ்வொரு வருடத்திற்கும் கர்மவினைச் சுமையாகக் கூடி ஓய்வு பெறும்போது பல துன்பங்களை உருவாக்கும். 2001ம் ஆண்டிற்கான மூன்றாவது முக்கிய வழிபாடாக அமைவது நீரோட்டப் பரிசூரணம் என்பதாகும். அதாவது கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற நதித் தீர்த்தங்களை வாரத்திற்கு ஒரு முறையேனும் ஏழை எளியோர்களுக்குத் தானமளிப்பதாகும். திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாளுடைய புனிதமான கிணறு தீர்த்தம், குற்றால ஐந்தருவி தீர்த்தம், திருப்பதி பாபநாச தீர்த்தம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் போன்ற புனிதமான தீர்த்தங்களைச் சுத்தமான பாத்திரங்களில் வைத்து இவற்றில் சமைத்த பிரசாதத்துடன் ஏழை எளியோர்க்கு அளித்து வருதல் மூன்றாவது வழிபாடாகும்.!

கடன் நியதி காப்பீர்! 

இந்த ஆண்டு குறித்த நாளில் பணத்தைக் கடனாகக் கொடுக்கின்றேன் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுக்கின்றேன் என்ற வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றுதல் வேண்டும், அல்லது இத்தகைய வாக்குறுதியைக் கொடுத்தலே கூடாது. வாக்கு நாணயம் தவறுதற்கான சந்தர்ப்பம் நிறைய உண்டு. கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு உரித்தான நட்சத்திரங்கள் அல்லது கடனாகக் கொடுப்பதற்கு உரித்தான நட்சத்திர நாட்களை அறிந்து அந்நாட்களில் கொடுக்கல், வாங்கலை மேற்கொள்ளுங்கள்.!

குறிப்பாக கார், வண்டி மற்றும் பணத்தில் ஈடுபடுகின்ற நிதி நிறுவனங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதற்குக் காரணம் பலவிதமான வாக்கு தோஷங்கள் இவ்வாண்டில் பெருகுவதே ஆகும். எனவே இந்த ஆண்டு முழுவதும் தினந்தோறும் ஆலம்பட்டைக் கஷாயத்தால் காலையிலும் மாலையிலும் மூன்று முறை வாய்க்கொப்பளித்து வருதல் வேண்டும். ஆலம்பட்டைக் கஷாயம் என்பதற்காக ஆலமரத்தில் உள்ள பட்டைகளையெல்லாம் இலவசமாக வெட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.. தானாக உதிர்கின்ற பட்டைகளை நன்முறையில் சேகரித்து சுத்திகரித்து வெந்நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வாய்க்கொப்பளித்து வருதலால்தான் வாக்குச் சுத்தமும், வார்த்தை நாணயத்தையும் பெற்றிடலாம்.

ஸ்ரீகுபேர லட்சுமி லால்குடி

செலவுகள் குறையட்டும்!

இவ்வருடம் சமுதாயத்தில் சிக்கனமாக வாழ்ந்திடுதல் வேண்டும். உணவிற்காகவும், இருப்பிடத்திற்காகவும்,  தேவையான செலவுகளைச் செய்வதில் தவறு கிடையாது.. ஆனால் உடை, ஆபரணங்கள் போன்றவற்றிற்காக ஆடம்பரமாகச் செலவு செய்தல் கூடாது.. இன்னும் சொல்லப்போனால் இவ்வருடத்தில் முடிந்தமட்டும் எந்த ஆபரணங்களையும் உடைகளையும் வாங்காது இருத்தல் நலம். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டும் தேவையான புது ஆடைகளைக் குறைந்த அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். பொதுவாக இவ்வாண்டில் சிக்கனமாக வாழ்தல்தான் சிறப்புடையது. தானதர்மத்திற்காக நிறைய ஆடைகளை வாங்கிடலாம்! இத்தகைய தெய்வீகப் பணிகளுக்குத் தடை கிடையாது!

ஸ்வர்ண தூஷண தோஷம் என்ற தோஷத்தால் அளவிற்கு மிஞ்சிய பேராசைகளும் செலவுகளும் பெருகக் கூடிய ஆண்டாதலின் சிவன் கோயில்களில் உள்ள ஸ்ரீலட்சுமி தேவிக்கு அனுஷ நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஹோரை நேரத்தில் வில்வ தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தாமரை இலையில் சர்க்கரைப் பொங்கல் படைத்து அன்னதானமாக அளித்து வந்தால் விரயச் செலவுகள் தணியும், நஷ்டங்கள் குறையும்! அலுவலகம், வியாபாரம், தொழிற்சாலைகளில் அளவுக்கு மிஞ்சிய establishment expenses/overheads இருந்தால் தாமரை இலையில் அன்னதானத்துடன் ஸ்ரீலட்சுமி பூஜையை முறையாக இவ்வாண்டு செய்து வந்தால் வீண் செலவுகள் தானே தணியும்.

பிள்ளைகள் திருந்திட...

அதிருப்தி மிகுகின்ற ஆண்டுமாதலால் இவ்வாண்டில் எந்தக் காரியத்திலுமே முறையான திருப்தி உண்டாகாது. எதைச் செய்தாலும் அரை குறையாகவோ, அதிருப்தியாகவோ முடியக் கூடிய வாய்ப்புகள் உண்டு. காரணம் மகான்களையும் சற்குருமார்களையும், யோகியர்களையும் மதிக்காத பண்பாடு கலியுகத்தில் பெருகி வருவதால் அவர்கள் மனம் நொந்திடலே, இதனால் ஏற்படுகின்ற இயற்கைச் சாபங்களால் அதிருப்திதான் பெருகும் சூறாவளி, புயல், எரிமலைக் கொந்தளிப்பு உண்டாகும்! இதனால் பிள்ளைகள் தவறான பாதைகளில் சென்றிடுவர்! இதற்குப் பிராயச்சித்தமாக மகான்களுடைய யோகியர்களுடைய, சற்குருமார்களுடைய ஜீவசமாதியில், அவர்கள் மனம் கனிந்திட மனதிற்கு அதிபதியான சந்திர பகவானுக்கு உரித்தான சந்திர ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8 -9) வெண்மை நிறப் பூக்கள் சார்த்தி, பால் அபிஷேகம் செய்து வெண் பொங்கல், தேங்காய் சாதம் போன்ற வெண்மை நிறப் பண்டங்களை அன்னதானமாக அளித்து வந்தால் பிள்ளைகள் ஒழுக்கத்துடன் திகழ்வார்கள்.

திரைலோகி திருத்தலம்

பிள்ளைகள் நோய் தணிந்திட.... மிருக வதை அகன்றிட...

இவ்வாண்டின் நான்காவது சிறப்பு பூஜையாக ஜீவகாருண்யத்தை மேற்கொள்ள வேண்டும்! இவ்வாண்டில் மிருக, பட்சி வதைகளும் அதிகமாகும். வாரந்தோறுமாவது கூண்டுகளில் அடைப்பட்டுள்ள பட்சிகளுக்கு அவற்றை வாங்கி திருஅண்ணாமலை, தேனிமலை போன்ற இடங்களில் விடுவித்து விடுதலை பெற்றுத் தருவது மிகச் சிறந்த இறைப்பணியாக அமைகின்றது. பசுவிற்குப் புல், எருமைக்கு அகத்திக் கீரை, யானைக்கு கவளச் சோறு, புறா, மயில்களுக்கு தானிய மணிகளை அளித்தல் போன்ற ஜீவகாருண்ய தர்மங்களை உங்களுடைய / குடும்பத்தினருடைய பிறந்த நாட்களில் மாதந்தோறும் அளித்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் தணியும். ரிஷபாரூடர் எனப்படுவதான ரிஷபத்தின் மேல் சிவன் பார்வதி காட்சி தருகின்ற ஆலயங்களில் (கும்பகோணம் அருகே த்ரைலோகி (திருலோக்கி), திருக்குளம்பூர் ஆலயங்களில் பிரதோஷ உற்சவங்களை மேற்கொள்வதால் நாட்டில் ஏற்படுகின்ற மிருக, பட்சி வதைகளுக்குத் தக்க பிராயச்சித்தம் கிட்டும். மிருகங்கள் மானுட உலகிற்கு அளிக்கின்ற சாபங்களும் விலகும்! ஆம்! பறவைகள், தாவரங்கள், மிருகங்கள் கூட மனிதனின் இம்சைமிகும் போது சாபமிடுவது உண்மையே!

பலரும் ஒன்று கூடி, சத்சங்க உலக இறைத் திருப்பணியாக இப்பூஜைகளை நிகழ்த்துதல் சிறப்புடையதாகும். இத்தகைய வழிபாடானது சந்ததிகளுக்கு வர இருக்கின்ற துன்பங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்.! சில குடும்பங்களில் ஊனம், குருடு, செவிடு, ஊமை, சர்க்கரை நோய், தொழு நோய் போன்றவை சந்ததி சந்ததியாக வருதலும் உண்டு. அல்லது வந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவும். இத்தகைய சந்ததி நோய்கள் வராமல் தடுத்திடப் பல அற்புதமான நிவாரண வழிமுறைகளை சித்புருஷர்கள் அருளியுள்ளார்கள்..! இன்றைக்கும் எத்தனையோ ஆலயங்களில் கிளி, மயில், மகிஷம், அன்னம், காமதேனு போன்ற வாகனங்கள் உடைந்தும் முடங்கியும் கிடக்கின்றன.. ஆள் பலமின்றி பல பிரம்மாண்டமான வாகனங்களைப் பல ஆலயங்களில் பயன்படுத்துவது கிடையாது! இவற்றில் ஸ்வாமியை வைத்து உற்சவம் நடத்துவதற்கான இறைப் பணிகளை ஏற்று நடத்திடில் வியாபாரத்தில் ஏற்படும், நஷ்டங்கள் விரைவில் தீரும்.

தான்ய சேதம் தவிர்ப்பீர்!

இவ்வாண்டில் அரிசி, கோதுமை போன்றவற்றைச் சேமிப்பதில் பல சேதங்கள் ஏற்படும். எலி, கறையான், வெள்ளம், மழை, கட்டிடம் இடிதலால் நிறைய சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இச்சேதங்களிலிருந்து தானியங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் தானியங்களுக்கு உரித்தான முறையான பூஜைகளைச் செய்து வருதல் வேண்டும்..! பொதுவாக வெய்யில், மழையைத் தாங்கி அருள்பாலிக்கின்ற திறந்தவெளி தெய்வ மூர்த்திகளுக்கு (உப்பூர் விநாயகர், நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர், திருச்சி வெக்காளி அம்மன், திருமானூர் பெருமாள்), சந்தனம், ஜவ்வாது, புனுகு, சாம்பிராணித் தைலம் சேர்ந்த காப்பினை இட்டு செவ்வாய், வெள்ளிதோறும் வழிபட்டு வந்தால் தானிய சேதத்திலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம். பொதுவாக அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான இருப்பிடம் வைத்திருப்போர் (godown) இந்த வழிபாட்டைச் செய்து தானிய சேதங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பீர்!

பெண்களுக்கு இவ்வாண்டு தாராளமாக சுதந்திரச் சலுகைகளை அளித்து இல்லத்தில் அவர்களுக்கு நல்ல பொறுப்புள்ள பணிகளை அளித்திடல் வேண்டும். உதட்டளவில் இல்லாது உண்மையிலேயே பெண் குலத்திற்கு நல்ல தார்மீகப் பொறுப்பை அளிக்க வேண்டிய உத்தமமான ஆண்டாகும் இது! இறைவனுக்கு வலப்புறம் அமர்ந்து அருள்பாலிக்கின்ற அம்பிகைக்கு (சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்) வானநீல வண்ணத்தில் Sky Blue- சித்தாடை சார்த்தி, இதே வண்ண ஆடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் கணவனுடைய கொடுமைகளால் வாடுகின்றோர் தக்க நிவாரணம் பெறுவர்.

ஆலயங் காப்பீர்!

கடலோரத்தில் உள்ள கோயில்கள், நதிக்கரை, குளக்கரைக் கோயில்கள் பலவிதமான சேதங்களுக்கு உள்ளாகலாம். இயற்கை விபரீதங்களும் அதிகம் ஏற்படும் .

காவல்துறையோர் கவனங் கொள்வீர்.... !

 குறிப்பாக காவல்துறையில் உள்ளவர்கள் எதிர்ப்புகளுக்கு ஆளாவார்கள். எனவே காவல் துறையில் பணிபுரிவோர் தம்முடைய செவ்வாய் புக்தி, செவ்வாய் தசை, அந்தர நிலைகளை அறிந்து கொண்டு குன்றுதோறாடும் குமரன் குடிகொண்டுள்ள மலைத் தலங்களில் (தேனிமலை) செவ்வாய், கார்த்திகை, உத்திரம், விசாகம் நட்சத்திர நாட்களில் கிரிவலம் வந்து செவ்வாழைக் கனிகளைத் தானமாக அளித்து வந்தால் பலவிதமான எதிர்ப்புகளிலிருந்து மீள்வர். ராணுவ சம்பந்தப்பட்ட துறைகளில் பலவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படும். மேலும் பொதுவாக ராணுவ அலுவலகப் பணிகளில் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்படும். உடன் பணிபுரிவோர் அல்லல் தருபவர்களாக இருப்பார்கள். எனவே உடனிருப்போரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள்! சிரித்து சிரித்துப் பேசி சிம்மாசனத்தை அடைய முயல்பவர்கள் பலருண்டு. எனவே மிகவும் கவனமாகப் பழகுதல் வேண்டும். பிறரிடம் ஏமாறாமல் இருப்பதற்குத் தினந்தோறும் நின்றநிலைப் பெருமாள் ஆலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல் வேண்டும்.. உத்தராயணப் படிகள் உள்ள திருமால் ஆலயங்களை வழிபடுதலால் அலுவலகப் பணி மாற்ற பீதியைத் தடுத்திடலாம். (கும்பகோணம், திருவெள்ளறை)

நீதித் துறையோர்க்கோர் நீதி!

ஸ்ரீசனீஸ்வர பகவான் தென்கடம்பை

நீதித்துறையில் இருப்பவர்களுக்கு இவ்வாண்டு மிகவும் சோதனை நிறைந்த ஆண்டாக இருக்கும். இருதலைக் கொள்ளி எறும்பு போல அவர்கள் பலவிதமான துன்பங்களைச் சந்திப்பர். இவ்வாண்டில் வயதானோர் இத்துறையை விட்டு சீக்கிரம் வெளிவருதல் உத்தமமானது. நீதித் துறையில் பணிபுரிவோர் தங்களைப் பலவிதமான துன்பங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இவ்வாண்டில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்ற ஸ்ரீசனீஸ்வர மூர்த்திக்கு கருநீல மற்றும் கருப்பு நிற ஆடைகளைச் சார்த்தி ஏழைகளுக்கு இந்நிற ஆடைகளைத் தானமாக அளித்து வருதல் வேண்டும். சனிக்கிழமையில், சனி ஹோரை நேரத்தில் ஸ்ரீதசரதர் அருளிய ஸ்ரீசனீஸ்வரர் ஸ்தோத்திரத்தை ஓதி எள்சாதத்தைக் காக்கைக்குப் பிரசாதமாகவும் ஏழைகளுக்குத் தானமாகவும் அளித்தலால் பல விதமான துன்பங்களிலிருந்து விடுபடுவர். வங்கி மற்றும் நீதித் துறையில் பணிபுரிவோர்க்கு நிறைய மனக்குழப்பம் ஏற்படும். இவர்கள் தங்களுடைய கர்மபரிபாலனத்திற்காக சிவன் கோவிலில் உள்ள ஸ்ரீகஜலட்சுமி சந்நதிகளில் தக்க அனுமதியுடன் துப்புரவு செய்து (ஒட்டடை அடித்து, நன்கு தண்ணீர் விட்டு சுத்தம் செய்து) பச்சரிசி மாக்கோலம் இட்டு, சாம்பிராணி தூபம் இட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்துத் தானமாக அளித்து வருதல் வேண்டும்., வெள்ளிக்கிழமையில் சுக்கிரஹோரை நேரத்தில் இத்திருப்பணிகளை நிகழ்த்துவது சிறப்புடையதாகும்.

ஆராய்ச்சி தவிர்!

பொதுவாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பொய்க்கும் வருடமிது! அதாவது ஆராய்ச்சிகள் தவறான முடிவுகளைக் காட்டும். பொறியியல் மற்றும் கம்ப்யூட்டர் துறைகளில் தங்களுடைய சாதனைகளைப் பிறர் திருடிப் பேரும் புகழும் பெற்று விற்றுப் பெரும் பணத்தைச் சம்பாதித்து விடுவார்கள். எனவே இவ்வாண்டு பொறியியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளைத் தள்ளி வைப்பதே உத்தமமானது. பொறியியல் கண்டுபிடிப்புகள் தவறான விளைவுகளுக்கு, சேதங்களுக்கு வித்திடும்.

2001 ஆண்டிற்கும் இத்தகைய எண் ஜோதிட ஆய்விற்கும் என்ன சம்பந்தம் என்றால் நம்முடைய வாழ்வில் எண் கணிதம் மிகவும் பின்னிப் பிணைந்துள்ளது. பணத்தை எண்ணுதல், தேதியைப் பார்த்தல், மளிகைக் கணக்கு, பால் கணக்கு, குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம், வீட்டுக் கணக்குகள், டெலிபோன் நம்பர், அலுவலகப் பணி, தபாலுக்கான வீட்டு இலக்கம். என்று எண் இல்லாத தினசரி இயக்கமே கிடையாது! நாம் சூடுகின்ற எண்களே எண் கணித ஜோதிடத்தின் தன்மைகளுக்கு ஆட்படிந்து அதனுடைய விளைவுகளை நமக்குத் தருகின்றன. எனவே எண் இன்றி நம் வாழ்க்கை இயங்காது.. ஆதலால் எண்ணின் கர்மவண்ணமே நாமிங்கே காண்பதாம்.

2001- ஆங்கிலப் புத்தாண்டு எண்

நாம்தாம் தமிழ் புத்தாண்டைக் கடைபிடிக்கின்றோமே, ஆங்கிலத் தேதி நடைமுறை வழக்கானது நம்முடைய இந்தியப் பண்பாட்டில் இடைச் செருகலாக வந்ததுதானே, இந்தப் புத்தாண்டு எண்ணிற்கு நாம் ஏன் முக்கியத்வம் தரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குக் கேட்கத் தோன்றும். 2001 என்ற் எண் நம் பிரபஞ்ச வாழ்க்கையிலே இவ்வாண்டு எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தித் தர இருக்கின்றது. ஏனென்றால் 2001 என்ற இந்த வருடத்தில் தினந்தோறும் 2001 என்ற எண்ணைக் கோடிக்கணக்கான மனிதர்கள் அனைத்து நாடுகளிலும் வங்கிச் செக்குகளிலும், கணக்குகளிலும், ரிகார்டுகளிலும் பயன்படுத்திடுவர் அன்றோ! அப்போது அதற்குரித்தான எண் அம்ச விளைவுகள் அபரிமிதமாக ஏற்படத்தானே செய்யும்! இதே போல் 2001 என்ற எண்ணானது உலகெங்கும் ஒவ்வொரு விநாடியும் தினந்தோறும் பயன்படுத்தப்படுகின்றபோது இந்த நான்கு எண்களுக்கும் உரித்தான எண்தேவதைகளின் அருளும், விளைவு அம்சங்களும் தோன்றத்தானே செய்யும்!

ஸ்ரீபாலாம்பிகை, குமாரி, ஸ்ரீபாலா போன்ற குழந்தை வடிவ நாமத்தை உடைய அம்பிகைக்கும் 2001 என்ற எண்ணிற்கும் தெய்வீகத் தொடர்பு உண்டு. இரண்டில் ஒன்றாவாள், இடையே இணைச் சுழியாம்! அகவைத் திருபாலா! ஆவது எண் நாமம் என்பது 2001 பற்றிய சித்தர்களின் ஞான பத்ர வேத வாக்கியமாகும். எனவே இந்த ஆண்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் தெய்வீக வைராக்யமாக ஒரு பிரார்த்தனையைக் கடைபிடிக்க வேண்டும். அதாவது இந்த ஆண்டில் 365 அம்பிகையர்க்கு குறிப்பாக ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீபாலா, குமாரி, குமரி போன்ற நாமத்தை உடைய அம்பிகையர்க்கு சித்தாடை சார்த்திப் போற்றி வணங்குதல் என்ற வைராக்யத்தை மேற்கொண்டால் இதுவே வாழ்வில் மிகச் சிறந்த கிடைத்தற்கரிய இறைவழிபாடாக 2001 என்ற எண் தேவதைகளுக்கான சிறப்பான வழிபாடாக அமைகின்றது... இதனால் முடிவுகாண முடியா இன்னல்களுக்கு முடிவு கிட்டும்.

மகா வியதீபாதம்

வ்யதிபாத ஸ்நான விசேஷ தினம்! – நற்பரல் நீராடல் நன்னாள்!

வ்யதிபாதம் என்றால் என்ன? இது 27 யோகங்களில் ஒன்றாகும். பொதுவாக நாம் தேதியையும், கிழமையையும், நட்சத்திரத்தையும் மட்டுமே பார்க்கின்றோம், மேலும் 27 யோகங்களும் 11 கரணங்களும் உள்ளனவே! இவற்றையும் சேர்த்துத்தான் சுபமுகூர்த்த தினங்களைக் குறிக்க வேண்டும். ஆனால் நடப்பு வழக்கு முறையில் இவற்றைத் தவிர்த்து விடுவதால்தான் நன்முறையில் சுபமுகூர்த்த நாளில் நடந்ததாகக் கருதப்படுகின்ற திருமண வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றன..!

எனவே திருமண முகூர்த்தத்தைக் குறிக்கின்ற போது காலத்தின் பஞ்ச அங்கங்களாகிய நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்துடன், அவரவருக்கான சூன்ய திதி, கிரக சஞ்சாரங்கள், கோசார நிலைகள் போன்ற அனைத்தையும், கருத்தில் கொண்டுதான் சுப முகூர்த்த தினம் குறிக்கப்பட வேண்டும். இவ்வகையில் ஓராண்டிற்கு நான்கு அல்லது ஐந்து சுபமுகூர்த்த தினங்களே அமையும், இதற்காகத்தான் அக்காலத்தில் ஒரு வருடத்திற்கு முன்னரேயே சுபமுகூர்த்த நாளைக் குறித்து விட்டு நான்கு, ஐந்து நாட்களுக்குத் திருமணத்தை நல்லதோர் உற்சவமாகத் தான தர்மங்களுடன் நிகழ்த்தி எண்ணற்ற தோஷங்களை நிவர்த்தி செய்து மகத்தான தெய்வீக வாழ்விற்கு வழிவகுத்தார்கள். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் அந்தந்த நபருக்குத் தனியே கணிக்காது பஞ்சாங்கத்தில் சுபமுகூர்த்த தினம் குறித்து இருக்கின்றதா என்று பார்த்து கணித்து விடுகின்றார்கள்! பஞ்சாங்கத்தில் உள்ள சுபமுகூர்த்த தினம் என்பது எல்லா ராசி, நட்சத்திரங்களுக்கும், சுபமாக அமையும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது , எனவே தக்க சற்குருவை, பெரியோர்களை நாடி விளக்கங்களைப் பெறவும்.

ஆரோக்யமான சந்ததியை பெற...

கோயம்பேடு திருக்குளம்

வ்யதிபாதம் என்பது 27 யோகங்களில் ஒன்றாகும். நம் சந்ததியில் குருடு, செவிடு, நொண்டி, முடம் என்ற எந்த ஊனங்களும் ஏற்படாமல் இருக்க ஒரு அற்புதமான நீராட்டு விழா பூஜையாகவும், மிகச் சிறந்த விசேஷமான தர்ப்பண நாட்களுள் ஒன்றாகவும், நதி தீர்த்த நீராடுதலுக்கு உரித்தான சிறப்பான நாளாகவும், பெரியோர்களுக்கான பாத பூஜைக்குரித்தான நாளாகவும் மஹா வ்யதீபாத ஸ்நானப் பண்டிகையானது அனைவருக்கு உரித்தானதாகப் பல அரிய விளக்கங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.  ஊனமுற்றோரின் நல்வாழ்விற்காக நாம் நிறைய சமுதாயப் பணிகளை இறைத் திருப்பணியாக செய்து வருதல் வேண்டும். இறைவன் நம்மை நன்முறையில் படைத்திருப்பதற்குக் காரணம் பிறஜீவன்களுக்கு நல்லபடியாகத் தொண்டாற்றும் வகையில் தியாகமயமான வாழ்க்கையை மேற்கொள்வதற்காகவே!

மஹா வ்யதிபாத நீராடலுக்கான விசேஷ நாளான இன்று குறிப்பிட்ட சில தீர்த்தங்களில் நீராடித் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையதாகும். ஏகபாத ருத்ர மூர்த்தியாக அதாவது ஓர் பாதத்தைக் கொண்டவராக சிவபெருமான் தூண்களிலும், கோயில் ஆலயச் சுவர்களிலும் அருள்பாலிக்கின்ற தலங்கள் உண்டு... (சென்னை கோயம்பேடு) இத்தகைய ஆலயங்களில் தீர்த்த நீராடுதலும், குளம் இல்லையேல் ஆலயத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு அடிப்பிரதட்சிணம் செய்து வருதலால் போதிய வருமானமின்மை, நிராதரவாய்க் காப்போர் எவருமின்றி வாடுவோர், வேலையின்றி வாடுவோர் நல்ல நிலை பெறுவர். இத்தகைய ஆலயங்களில் தீர்த்தக் குளக்கரையிலோ அல்லது ஆலய வளாகங்களில் தக்க அனுமதியுடன் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். தர்ப்பணம் என்றால் நம் உறவினர்களுக்கு மட்டும் அளிப்பது அல்ல! நண்பர்களில்/ அறிந்தோரில் எவரேனும் ஊனம், குருடு, செவிடு போன்ற குறைகளுடன் இருந்து இறந்திருந்தால் அவர்களுக்கும் இன்று தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். பொதுவாக விபத்துகள், போர், தீ, நீரில் முழுகுதல் போன்றவற்றில் அங்கச் சிதைவுகள் ஏற்பட்டு இறந்தோர்க்கும் மஹா வ்யதிபாத நாளில் தர்ப்பணம் அளித்தலால் விசேஷமான பித்ரு தர்ப்பண சக்தி உண்டாகி அவர்களுடைய நற்கதிக்கான நல்லருள் கிட்டிடும்.

ஸ்ரீருத்ர பாதம் திருஅண்ணாமலை

ஸ்ரீருத்ர பாத பூஜை

மகா வ்யதிபாத ஸ்நான (நீராடலுக்கான) விசேஷ நாளான இந்நாளில் ஸ்ரீருத்ரபாதம் என்று சொல்லப்படுகின்ற இருபாதங்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் இப்புனிதமான பாதங்களுக்கு அபிஷேக, ஆராதனைகளை மேற்கொள்வதால் அபரிதமான பலன்களைப் பெற்றிடலாம். கால்களில் ஏற்படுகின்ற நோய்கள் நிறைய உண்டு. யானைக்கால் நோய், கால் வீங்குதல், முழங்கால்முட்டு நோய், தோல் வியாதிகள், போன்று பல நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் எத்தனையோ பூர்வ வினைக் காரணங்கள் உண்டு., உதாரணமாக அருகிலேயே கோயிலை வைத்துக் கொண்டு அந்தக் கோயிலை எட்டிக் கூடப் பார்க்காமல் வாழ்க்கையை வெறுமனே ஓட்டுபவர்கள், பாத யாத்திரை செல்ல வேண்டிய திருஅண்ணாமலை, திருப்பதி, சபரிமலை போன்ற இடங்களில் வேண்டுமென்றே காலணிகளை அணிந்து கொண்டு விரதத்திற்குப் பங்கம் விளைவித்துக் கொள்வோர், மரியாதையின்றிப் பிறரைக் காலால் எட்டி உதைத்தோர், காய்கறிகள், பழங்களைக் காலால் மிதித்து பழரசம், பஞ்சாமிர்தம் போன்றவற்றைச் செய்வோர், பசு ஆடு போன்ற கால்நடைகளின் காலில் கயிறைக் கட்டி வதைத்தோர் / அவற்றை உதைவோர், பெற்றோர்களை / பெரியோர்களை, கணவன், மனைவி குழந்தைகளைக் கால்களால் உதைப்போர் போன்ற பலபாவச் செயல்களுக்குப் பிராயசித்தமாக இந்த ருத்ர பாத பூஜை அமைகின்றது. இத்தகைய துன்பங்களை இழைத்தோருக்குத்தாம் கால்களில் நோய்கள் உண்டாகின்றன. மேலும் பல காரணங்களும் உண்டு. தக்க சற்குருவை நாடி அறிந்திடுக.! ஸ்ரீருத்ர பாதங்கள் திகழ்கின்ற திருத்தலங்களில், திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீருத்ர பாதங்கள் மிகவும் விசேஷமானவையாகும்.

மகா வ்யதிபாத நாளான இன்று ருத்ர பாதத்திற்குக் கங்கை, காவிரி போன்ற புனிதமான நீரால் அபிஷேகம் செய்து, எண்ணெய்க் காப்பிட்டு, விபூதி , சந்தனம் மஞ்சள் குங்குமாபிஷேகம் செய்து, அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து வழிபட்டு ஏழைகளுக்குக் காலணிகளை தானமாக அளித்து வந்தால் கால் சம்பந்தமான நோய்களுக்குத் தக்க தீர்வைப் பெற்றிடலாம். மேலும் இருதய நோய், மூல நோய் உள்ளோர் மற்றும் பல அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டவர்கள், சரியாக நடக்க இயலாது வாழ்க்கையை ஏனோதானோ என்று ஓட்டிக் கொண்டிருப்பார்கள் இவர்கள் இயன்றவரையில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அல்லது ஸ்ரீருத்ரபாதம் இருக்கின்ற இடத்திலாவது குறைந்தது 600 அடி தூரத்திற்கேனும் கிரிவலம் வந்து ஸ்ரீருத்ர பாதத்திற்குத் தேவையான அபிஷேக ஆராதனைகளையும் தான தருமங்களையும் செய்து வந்திட, இறையருளால் வாழ்க்கை நன்முறையில் நடப்பதற்கு ஸ்ரீருத்ரபாத பூஜை பெருந் துணை புரியும். ஆனால் நடக்கும் சக்தி வந்தவுடன், இறைவனை மறந்திடாது மேலும் நற்காரியங்களைச் செய்தல் வேண்டும். தீய காரியங்களில் இறங்குதல் கூடாது.

முடவன் முழுக்கு பண்டிகை போன்று உடல் ஊனமுற்றோருக்கு உரித்தான விசேஷ தினங்களுள் இதுவும் ஒன்றாம். ஊனமாகவுள்ள சகோதர, சகோதரிகளுக்குத் திருமணம் ஆகாது கவலயுற்று இருப்போர் இந்த மகா வ்யதிபாத ஸ்நான விசேஷ நாளன்று திருஅண்ணாமலை கிரிவலம் வந்து ஸ்ரீருத்ர பாதத்திற்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, பாதணிகள், ஏழைச் சுமங்கலிகளுக்கான பொன் மாங்கல்யம், புடவை, ரவிக்கைகளை தானமாக அளித்து வந்தால் இறைஅருளால் நல்வழி கிட்டும்.

ஸ்ரீபெருமானந்த சித்தர்

தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் மஹிமை!

அபலைகட்கு அடைக்கல அருள்காட்டும் அற்புதச் சித்தர்! தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் ஜீவாலயம் இன்றைக்கும் புதுக்கோட்டை அருகே தேனிமலை அடிவாரத்திலே அருள் கூட்டுவது பலரும் அறியாததாம்! தேவாதி தேவர்கட்கும் ஓர் அற்புத ஜீவாலயமாக விளங்குவதே ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளுடைய ஜீவசமாதியாகும். தேனிமலை ஸ்ரீமுத்துக் குமார சுவாமி முருகப் பெருமானுடைய பரிபூர்ண அருள்கடாட்சத்தைப் பெற்று அன்றும் இன்றும் என்றும் இறை அடியார்கட்கு அருளாசி மழை பொழிபவர்! ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் தம்மை, அண்டிச் சரணடைந்த எண்ண்ற்ற பக்தர்களுக்கு எத்தனையோ அற்புதங்களை, இறைலீலைகளாக, முருகப் பெருமானின் திருவருளால் புரிந்துள்ளார். இவற்றுள் ஒன்றை மட்டும் நாம் இங்கு விளக்குகின்றோம்.

ஸ்ரீபெருமானந்த சித்தர்

ஓர் இளம்பெண்ணுடன் காதல் கொண்ட் வியாபாரி ஒருவர் அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்ந்து பிறகு வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்றார்.. அங்கு வியாபாரத்தில் சிறந்து ஓங்கிச் செல்வம் கொழித்திடவே குலப் பெருமைக்காகவும் வெளியில் சொல்ல முடியாமலும் இப்பெண்ணை உதறிவிட்டுத் தம் குலத்திலேயே வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அயல்நாடு சென்று 10, 15 வருடங்களுக்கு மேல் கடந்து விட்டமையால் அபலையான பெண்ணோ இங்கு தினந்தோறும் கதறிக் கதறி அழுது தேனிமலை முருகப் பெருமானை கிரிவலம் வந்திட்டாள். தன்னைக் காமுகர்களிடமிருந்து காத்திட முருகத் திருவருளையே ரட்சையாகப் பெற்றுக் கொண்டாள். தன் கணவன் யாரென்று கூட வெளிச் சொல்லமுடியாத சமுதாயத்தில் இவ்விளம் பெண் தனிப்பட்ட முறையிலே கூலிவேலை செய்து வாழ்ந்திட்டனள். “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”, என்ற நம் மூதாதையர்கள் நெறிப்படி தமக்கு குழந்தைகளைத் தந்த வியாபாரியையே கணவனாக வரித்துப் புனிதமான வாழ்க்கையை நடத்தி வந்தனள்.. ஆனால் சமுதாயத்தில் உள்ள தீயவர்கள் அவளைச் சாடி, ஏளனம் செய்து வருத்தித் துன்புறுத்தினார்கள்.

இவற்றிக்கெல்லாம் ஒரு விடிவுகாலம் கிட்டாதா என்று வருந்தி ஆழ்ந்த நம்பிக்கையுடன் தேனி மலையை கிரிவலம் வந்தபோதுதான் ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளை தரிசித்தனள். அபலைப் பெண்ணின் அபார முருக பக்தியைக் கண்டு வியந்த சித்தர் பெருமான் அக்குடும்பத்திற்கு அடைக்கலம் தந்து தம் இறையடியார்கள் மூலமாக அக்குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி பணித்தார். இதனால் சினம் கொண்ட காமுகர்கள் தம் தீய திட்டங்கள் நிறைவேறாமையால், சித்தர் பெருமானை அவதூறு பேசி ஏசினர்.

மஹான்களை ஏசுதல் சாபத்தைத் தரும்!

கலியுகத்திலே மகான்கள், யோகியர்கள், சித்தர்களுக்கு ஏற்படுகின்ற பெருந்துன்பம் என்னவென்றால் “அதைக்கொடு, இதைக் கொடு” என்று சுயநலக்காரர்கள் அவர்களைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்தி ஆசிகளைப் பெற முற்படுவதாகும். எத்தனையோ கோடி யோக சித்திகளைத் தாமாகக் கைவரப் பெற்ற ஸ்ரீபெருமானந்த சுவாமிகள் அடக்கத்தின் சிகரமாய், பணிவின் பெட்டகமாய்த் திருமுருகப் பெருமானின் திருச்சபைச் சீடராய் ஒளிர்ந்த போது அவரை ரசவாத முறைகளில் சுயநலத்திற்காகத் தங்கள் வயப்படுத்தவும், தம்முடைய தீயொழுக்கப் பாவங்களுக்கு எளிதில் பிராயச்சித்தம் பெறுவதற்கும் அவரைத் துன்புறுத்தியோர் பலருண்டு. தம்முடைய கொடிய பாவங்களுக்குப் பிராயசித்தம் தேடிடத் தீயவர்களும், காமுகர்களும், துரோகிகளும் அவரை எங்கும் செல்ல விடாது துரத்திச் சென்றபோது, அவர் அதற்கு மசியாது உறுதியாய்த் தம் யோக நிலையில் தொடர்ந்து ஆழ்ந்திட, அவர்களும் குரோதம் கொண்டு அவரைப் பற்றிய புரளிகளையும், வீண் அபவாதங்களையும் பரப்பினர். ஆனால் இவற்றையெல்லாம் பொறுமையுடன் ஏற்று புகழோ, அவப்பெயரோ எதையும் பொருட்படுத்தாது எல்லம் அவன் சித்தமென ஏற்றுத் திருமுருகப் பெருமானின் திருவடிகளில் என்றும் பிரகாசித்து இருப்பவர்தாம் ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள், எனவே மகான்களை, சித்தர்களை, யோகியர்களைப் பற்றி எவ்வித அவதூறும் பேசாதீர்கள்.. அவர்களைப் பற்றிய புரளிகளையும் நம்பாதீர்கள்! இறைத் தூதுவர்களை மதிக்கின்ற பண்பாட்டைக் கலியுகத்தில் நாம் இழந்ததால்தான் துயரங்களே நம் வாழ்க்கையில் சுழல்கின்றன! மகான்களை வணங்கினால்தான் சற்குருவின் மகத்துவம் நன்கு உணரப் பெறும்! சித்தர்களை/மகான்களை நிந்தித்தலானது காலம் காலமாகச் சந்ததிகளையே பாதிக்கும்!

சித்தரைச் சரணடை!

வெளிநாடு சென்ற வியாபாரியோ கொழிக்கும் செல்வத்தோடு வாழ்ந்தாலும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டியதாயிற்று! ஏனோ? விதியும் தன் பணியைச் செவ்வனே செய்யலாயிற்று! எவ்வாறு? அந்த வியாபாரி ஒரு பெரும் வியாதியோடு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் முடங்கிப் போய்த் தவழ்ந்து கூட வர முடியாத நடைப் பிண்டமாக ஊருக்கு வந்து சேர்ந்தார். பணக்கார உறவினர்களும், நண்பர்களும் லட்ச லட்சமாய்ச் செலவழித்தும் எத்தனையோ மருத்துவ உதவிகளைச் செய்தும் வியாபாரிகளைக் குணப்படுத்த முடியவில்லை. நாள் செல்லச் செல்லத்தான் ஒரு பெண்ணை ஏமாற்றிய தன்னுடைய ஊழ்வினையே தனக்கு இவ்விதப் பெருநோயாக வந்துள்ளது என்று அவர் உணர்தலானார். ஆனால் வெளிச் சொல்ல இயலாத நிலை!

பலரும் ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் மஹிமையை அவரிடம் எடுத்துக் கூறிடவே அவரும் சித்தர் பெருமானை நாடினார்! அவருடைய கண்களில் திரண்ட ஒளிப் பிரகாசத்தைத் தாங்க இயலாது அவர் கதறி அழுது தான் ஒரு பெண்ணுக்குச் செய்த துரோகத்தை அவரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொண்டார். “உண்மையிலேயே நீ குணமடைய வேண்டுமென்றால் உன்னால் அபலையாக்கப்பட்ட அப்பெண்ணிற்கும், உன் குழந்தைகளுக்கும் நல்வாழ்வு தருவேன் எனச் சங்கல்பம் செய்து தினந்தோறும் தவழ்ந்து தேனிமலையை கிரிவலம் வந்து மலை ஏறிச் சென்று முருகப்பெருமானை தரிசித்து வா!” என்று சித்தரும் ஆணையிட்டார். வியாபாரியும் இல்லம் சென்று தம் மனைவியிடம் தான் இன்னொரு பெண்ணிற்கு இழைத்த துரோகத்தை ஒப்புக்கொண்டு இந்த ஊழ்வினையே தன்னை இந்நோயில் தள்ளியதாக செப்பிடவே உறவினர்கள் அவரைத் தூற்றினர்.!

தவழ்ந்தார்! அமர்ந்தார்! நின்றார்! நடந்தார்!

வசதிக் கொழிப்பால் முதலில் டோலியில் தேனிமலையேறிய அவர், சித்தருடைய தரிசனத்திற்குப் பிறகு தன் ஊழ் வினையைத் தானே அனுபவித்திட எண்ணி ஒரு வழியாக மண் சாலையில் தன் உடலைத் தேய்த்துத் தேய்த்து தேனிமலை அடிவாரத்திற்கு வந்து தவழ்ந்து தவழ்ந்து தேனி மலையை கிரிவலம் வந்து மலை மேல் ஏறி தினந்தோறும் முருகனை வழிபட்டார். முதல் மூன்று நாட்கள் பாம்பு போல பத்து மணி நேரம் ஊர்ந்து கிரிவலம் வந்து ஊர்ந்தே மலையேறி ஆறுமுகனை தரிசித்த வியாபாரி நான்காம் நாள் என்ன ஆச்சர்யம் தவழ்ந்து கிரிவலம் சென்றார் . 5ஆம் நாள் முட்டியில் தவழ்ந்து முட்டிப் பிரதட்சிணமாக கிரிவலம் வந்து மலை ஏறினார்! ஆறாம் நாள் கால்களை ஊன்றி நாற்கால் பிராணியாகச் சாய்ந்து நடந்து கிரிவலம் வந்து குமரனை வழிபட்டார்! ஏழாம் நாள் ஒரு கைத்தடி உதவியுடன் (சித்தரே நேரில் வந்து கிரிவலப் பாதையில் அளித்தது!) சாய்ந்து சாய்ந்து நடந்து கிரிவலம், வந்து மலை மேல் சென்று முருகவேளைத் தரிசித்தார். அடுத்த நாள் இரண்டு கால்களால் தட்டுத் தடுமாறி நின்று நடந்து கிரிவலம் வந்து மலையேறி கந்தப்பனை உள்ளம் தழுதழுக்க வணங்கி நின்றார். இவ்வாறாகச் சித்தரைச் சரணடைந்த ஒன்பதே நாட்களிலேயே அவர் பரிபூரணமாக குணமடைந்து தன்னுடைய எஞ்சிய வாழ்நாளையும், செல்வத்தையும் அவருக்கே அர்ப்பணித்தார். அவருடைய பக்தியை ஏற்ற சித்தர் பெருமான் செல்வத்தை ஏற்க மறுத்து, அவருக்கு தான தர்ம வழிமுறைகளை எடுத்துரைத்து அபலைப் பெண்ணையும் வளர்ந்த பிள்ளைகளையும் அவரிடம் ஒப்படைத்துத் தியாகமய வாழ்க்கையை வாழுமாறு அருளினார். இவ்வாறு எத்தனையோ ஆயிரம் பேர்களுடைய வாழ்க்கையிலே அற்புதங்களை நிகழ்த்திய ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் தாம் இன்று தேனி மலையில் எளிய ஜீவாலயம் பூண்டு சித்தர் பெருஞ் ஜோதியாய் தம்மைச் சரணடைவோருடைய இன்னல்களைத் தீர்ப்பதற்காக ஸ்ரீமுத்துக்குமார சுவாமியின் திருவருளைத் தம் யோக தவத்தால் பெற்று என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் ஜீவசமாதி மூலம் தேனிமலையானின் ஆசிகளைப் பெற்றுப் பொழிகின்றார்.

தேனிமலை கிரிவலம்! சர்வ நோய் நிவாரணம்!

கடும் வியாதி உடையோர் எந்தநாளிலும் செவ்வாய் ஹோரை நேரத்தில் நோய் நிவாரணத்திற்காக இங்கு கிரிவலம் வந்திடலாம்! தீய ஒழுக்கத்தில்/ தீய பழக்கங்களில் மிதந்து தம் செல்வம், உடல் ஆரோக்யம், புகழ் அனைத்தையும் இழந்து வாடுவோர், திருந்தி நல்லொழுக்கத்தில் மீண்டும் திளைத்து நல்வாழ்வைப் பெற்றிட, திங்கள், மற்றும் வியாழக்கிழமைகளில் சந்திர ஹோரை நேரத்தில் தேனிமலையை கிரிவலம் வருதல் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இங்கு கிரிவலம் வந்து முருகப் பெருமானை தரிசித்து ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகளுடைய ஆசிகளையும் வேண்டிடில் எத்தகைய துன்பங்களுக்கும் தக்க நிவர்த்தியைப் பெற்றிடலாம். சோம (திங்கள்) வாரக் கார்த்திகையன்றும் / செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும் மற்றும் பௌர்ணமி தினங்களிலும் கிரிவலம் வருதலால் திருமண தோஷங்கள் தீர்வு பெறும்!

பாஸ்கர சக்திகள்

பாஸ்கர சக்தி பெறுவீர்! தை முதலாம் உத்தராயணப் புண்ய காலம்!

சூரிய, அங்காரக கிரகங்களின் சஞ்சார, அயன மாற்றங்களும் கர்ம அம்சங்களில் இவ்வாண்டு பல விளைவுகளை ஏற்படுத்தும், பொதுவாக அந்தந்த அயன காலத்தில் ஏற்பட இருக்கின்ற துன்பங்களைப் பொறுத்து சூரிய பகவானும் தன்னுடைய கிரண சக்திகளை தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே மாற்றிக் கொள்கின்றார். ஏனென்றால் உலகில் பெரும்பாலான ஜீவன்கள் ஜீவித்திருப்பது சூரிய சந்திர ஒளிச் சக்தி மற்றும் ஜல சக்தியால் தானே! நீரின்றி, நெருப்பின்றி வாழ முடியுமா! எனவே உத்தராயண சக்திகளை நல்வரமாகச் சூரிய பகவான் பெறுகின்ற தைமாதம் முதல் தேதியன்று பாஸ்கர சக்தி நிறைந்துள்ள இடங்களில் குறித்த பல விசேஷமான பூஜைகளைக் கடைபிடித்தலும், ஆதித்ய சோபன சக்திகள் நிறைந்துள்ள மலைத் தலங்களில் கிரிவலம் வருதலும் மிகவும் சிறப்பானதாகும்.!


சூரிய தீர்த்தம் பரிதிநியமம்

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள மேல் உளூர் ஸ்ரீபரிதியப்பர் சிவாலயம் பாஸ்கர சக்தி நிறைந்துள்ள மிகவும் விசேஷமான தலமாகும். இங்கு உத்தராயண புண்ய காலமான தை மாதம் முதல் தேதியன்று உங்களுடைய மூதாதையர்களுக்கு சிராத்தம், திவசம், படையல், தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜைகளைக் கடைபிடித்து ஸ்ரீமார்க்கண்டேய மஹரிஷிக்கு அர்க்யம் அளித்து ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம், ஸ்ரீசூரிய கவசம், சாட்சுஷேபாநிஷத் (ஞாயிறு போற்றுதும்) போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதியும் வழிபடுதலால் ஆண் சந்ததி இல்லாமல் வாடுகின்றோர் தக்க நல்வரங்களைப் பெற்றிட இறைவன் வழிவகுப்பான். இதே போன்று தஞ்சாவூர் கரந்தை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சூரிய பகவானுக்குத் தை முதல் நாளிலும் ஞாயிறு தோறும் தேன் அபிஷேகம் செய்து சூரிய பகவானுக்கு ப்ரீதியான ஆரஞ்சு வண்ண ஆடைகளையும் உணவு வகைகளையும் அன்னதானமாக அளித்திடில், நல்ல பாதையிலிருந்து வழி தவறிச்சென்று தீய பழங்கங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கணவனும், பிள்ளைகளும் மீள்வர்!

சென்னை வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்தில் தை மாதம் முதல் தேதியன்று கங்கை, காவிரி, கோதாவரி போன்ற புனித நீரால் அபிஷேகம் செய்து, நல்ல அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு, வேத சக்திகள் நிறைந்த நிறைய முந்திரிப் பருப்பு கலந்த உணவு வகைகளைத் தானமாக அளித்துவந்தால் படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் கல்விச் செல்வம் பெறுவர்! ஸ்ரீவியாஸ மகரிஷியின் பரிபூரண ஆசி நிறைந்த தலமிது!

சிதம்பரம் ஆச்சாள்புரம் அருகே உள்ள திருமகேந்திரப்பள்ளியில் உள்ள சூர்யாக்னி தீர்த்தத்தில் தர்ப்பண பூஜைகளைச் செய்து சூரிய, சந்திர மூர்த்திகளை ஒரு சேர வணங்கி இங்கு சிவலிங்கத்திற்கும் கரும்புச் சாறால் அபிஷேகம் செய்து பாதணிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் மூலம், ரத்தக் கசிவு, ரத்தப் போக்கு போன்றவற்றால் அவதியுறுவோர் நல்ல நிவாரணம் பெறுவர். இப்பூஜையை ஞாயிறு தோறும் சூரிய சந்திர ஹோரை நேரத்தில் செய்து வருதலால் துரிதமான பலன்களைப் பெறுவர்.

சந்திர கிரஹணம்

சந்திர கிரகணத்தைப் பற்றி எவ்வளவோ விஞ்ஞான விளக்கங்கள் உண்டு! அசுர சக்திகள் நல்ல சக்திகளுடன் தீவிரமாகப் போராடுகின்ற காலமாகவும் சந்திர கிரகண நேரம் விளங்குகின்றது. இதனைப் பீடைக் காலம் என்று சொல்கின்றார்கள். பீடைக் காலம் என்றால் பீடையைத் (வறுமை) தருகின்ற காலம் என்று பொருள் அல்ல.. மற்ற உபயோகமில்லாத பீடைக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மிகவும் சிரத்தையுடன், மன ஒழுக்கத்துடன் பூஜைகளைப் பெருக்க வேண்டிய பீடு(பெருமை) உடைய காலம் என்பதே இதன் பொருளாகும்.

கால சர்ப்ப தோஷம் மற்றும் ஏனைய நாக தோஷங்களுக்கு நிவர்த்தியைத் தருவதாக சந்திர கிரகண காலம் விளங்குகின்றது. ராகு தசை, கேது தசை, ராகு புக்தி, கேது புக்தி போன்ற ஜாதக காலங்களில் இருப்போர் சந்திர கிரகணத்தில் ராகு, கேது மூர்த்திகளுக்குத் தேனாபிஷேக பூஜைகளைச் செய்து வருதல் வேண்டும்! பொடி போடுதல், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற துர் பழக்கங்களைக் கைவிடுவதற்கு இந்த சந்திர கிரகண கால பூஜை பெரிதும் உதவுகின்றது. மதிகாரக மூர்த்திதானே ஸ்ரீசந்திர பகவான்!

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் முசிறி

சந்திர கிரகண காலத்தில் ஐயர்மலை, தேனி மலை, திருப்பரங்குன்றம் திருஅண்ணாமலை, பழனி போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வந்து சந்திர பகவானுக்கு உரித்தான வெண்மை நிற உணவுப் பண்டங்கள், (தேங்காய் சாதம், பால் சாதம், பால், வெண்ணெய்..) மற்றும் வெண்ணிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் நற்காரியங்களில் துரிதமான பலன்களைப் பெற்றிடலாம். பொதுவாக ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவபெருமானுக்கு, ஸ்படிக மூர்த்திகளுக்குச் சந்திர கிரகண நேரத்தில் அபிஷேக ஆராதனைகளைச் செய்வது விசேஷமானதாகும். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தேவலோகத்திலிருந்து பூலோக வழிபாட்டிற்க் கொணர்ந்த ஸ்ரீசந்திர மௌளீஸ்வர ஸ்படிக லிங்கங்களை, சிருங்கேரி, காஞ்சீபுரம் போன்ற இடங்களில் தரிசித்திடலாம். சந்திர கிரகண காலத்தின் போது பசும்பாலைக் கறந்த மூன்று நிமிடங்களுக்குள் அதன் இளஞ்சூடு மாறுவதற்குள், லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதால் பணமின்மையால் தடைபட்டுள்ள காரியங்கள் சித்தி பெறும்! இவ்வாறாகத் தீய நெறி சூழ்ந்த வாழ்க்கைக்கு நற்கதி தந்திட இந்த காஞ்சனாம்ருத சந்திர கிரகண காலம் பெரிதும் உதவுகின்றது. காரணம் காஞ்சனா என்ற நாட்டிய தேவதைகள் இப்புனிதமான நாட்டியத் தொழிலில் இருப்போர்க்கு நற்கதி அளிக்கத் தாமே தம் தபோபலன்களை அர்ப்பணித்துத் தியாகமயமான யோக வாழ்வை மேற்கொண்டு தம்முடைய பெருந்தவத்தை முடித்து அதன் பலாபலன்களை ஜீவ நற்கதிக்கு அளிக்கின்ற அதியற்புதக் காலமாக இந்த காஞ்சனாம்ருத சந்திர கிரகண காலம் விளங்குகின்றது.

மேலும் நாட்டியத்தில் தீயஒழுக்கத்திற்கு ஆட்பட்டுள்ள ஆண்களும் பெண்களும் இன்றோடு தம்முடைய தீயதொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமலர்ச்சி பெறக் கூடிய அரிய பூஜா காலமே இந்த காஞ்சனாமிர்த சந்திரகிரகண காலமாகும்.. சந்திர கிரகணத்தின் போது தம்முடைய ஒளி மறைக்கப்பட்டு மங்கலாவதால், ஸ்ரீசந்திர மூர்த்தியானவர் தமக்குரித்தான பூரண ஒளியைப் பெறுகின்ற திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ள புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள திருக்குளம்பூர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர் ஆலயத்திற்கான இறைப்பணிகளைச் செய்து வருதல் வேண்டும். ஸ்ரீசந்திர பகவானுக்குரித்தான திங்கட்கிழமை தோறும் மற்றும் அவரவருடைய சந்திராஷ்டம தினங்களில் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர்க்குக் குங்குமப் பூ கலந்த பசும்பாலாபிஷேகம் செய்து, வெண்மை நிற ஆடைகளை குறிப்பாக இலவம் பஞ்சுத் தலையணைகளைப் படுக்கையுடன் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் தம்முடைய தீய பழக்கங்களிலிருந்து அறவே விடுபடலாம்! ஒரு வேளை பூஜை மட்டுமே நடைபெறுகின்ற திருக்குளம்பூர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர் கோயிலுக்கு நிறைய இறைத் திருப்பணிகள் தேவைப்படுகின்றன. இவற்றை முறையாகச் செய்து வந்தாலே போதும், தீயொழுக்கங்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் நன்னிலையைப் பெற்றிடலாம்.

திருக்குளம்பூர் சிவாலயம்

திருக்குளம்பூர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர்தாம் இருண்ட வாழ்க்கைக்கு ஒளி தரும் ஒப்பற்ற சிவலிங்க மூர்த்தியாவார் என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள்! பொதுவாக வழிதவறிய வாழ்க்கையிலிருந்து புனர்வாழ்வாக மறுவாழ்வு பெற விழைவோர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரரை முறையாக வழிபட்டு வருதல் வேண்டும். நிறைய செடி, கொடிகள் மண்டியுள்ள இவ்வாலயத்திற்கு உரித்தான இறைத் திருப்பணிகளை ஆற்றி வருதலே பாவச் செயல்களால் இருண்ட வாழ்க்கைக்கு நல்ல ஒளியைப் பெற்றுத் தரும். எனவே கிடைத்தற்கரிய இந்த காஞ்சனாம்ருத சந்திர கிரகண காலத்தை மறந்து விடாதீர்கள்! சந்திர கிரகண நேரத்தில் செய்யப்படுகின்ற தீர்த்தாபிஷேக, ஹோம வழிபாடுகள், அடிப்பிரதட்சிணம், அங்க பிரதட்சிணம், ஹோம வழிபாடுகள் ஜபம், யோகம், தியானம் போன்ற அனைத்து விதமான பூஜைகளுக்குமே பிரதோஷ பூஜைகள் போல அபரிதமான பன்மடங்கு பலன்கள் உண்டு. கிரகண நேரமே எத்தனையோ சந்திர மண்டல தேவதைகள் பூலோகத்தை வலம் வந்து துர்சக்திகளை எதிர்த்துப் போராடுகின்ற காலமாதலால் நாம் செய்கின்ற பூஜா பலன்களை அவர்கள் கிரகித்து அவற்றிற்குரித்தான நற்பரிசாக சந்திர மண்டல தேவ கதிர்களை நமக்குப் பரிசாக அளித்துச் செல்கின்றார்கள். வேறு எந்நாளிலும் இவ்வரிய பூஜா பலன்களைப் பெற இயலாது! இவ்வற்புதங்கள் நிகழ்கின்ற முக்கியமான தலங்கள் தாம் திருக்குளம்பூர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர் ஆலயம், திருவக்கரை/ முசிறி ஸ்ரீசந்தரமௌளீஸ்வரர் சிவத் தலங்கள்.

சந்திர கிரண கால ஆழாற அபிஷேகம்

மிகச் சிறப்புடைய சந்திர கிரகண வழிபாடாக சித்தர்களுடைய ஞான பத்திரங்களில் அருள்வது என்னவென்றால், பெறுதற்கரிய இந்த விக்ரம ஆண்டிற்கு உரித்தான காஞ்சனாமிர்த சந்திர கிரகண நேரத்தில் ஆழாற அபிஷேகம் எனும் ஜீவ ஒளிப் பிரகாச தேவ அபிஷேகத்தைச் செய்பவர்க்குப் பல அரிய தேவ அனுகிரகங்களும் வரங்களும் கூடிடும்! வெந்தயத்தைப் பொன் நிறமாக வறுத்து, பொடித்து, வில்வப் பழச்சாறு, மற்றும் கரும்புச் சாறுடன் சேர்த்து சந்திர கிரகண நேரத்தில் ஸ்ரீசந்திர மூர்த்திக்கும், சிவலிங்க மூர்த்திக்கும் எந்த ஆலயத்திலும் அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டாடை சார்த்தி ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பலவிதமான தீய வழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான மனோவைராக்யத்தைப் பெற்றிடலாம்! இதனைத் திங்கள் தோறும் சந்திர ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வர மூர்த்திக்கு இவ்வழிபாட்டை ஆக்குதல் சிறப்புடையது! திருக்குளம்பூர் ஸ்ரீதிருவளர் ஒளீஸ்வரர் ஆலயச் சந்திர கிரஹண வழிபாடு மிகவும் சிறப்புடையது.

சென்னிமலை ஸ்ரீதெய்வானை

பல சமயங்களிலும் முக்கியமான முடிவை எடுக்க இயலாது பலரும் தவிப்பதுண்டு! இச்சமயங்களில் தக்க முடிவு தந்து கலங்கிய மனிதருக்குக் கருணாரூடம் அளிக்கும் தேவியாக தேவயானை தேவி இன்று சென்னிமலையில் அருள்பாலிக்கின்றாள்., எனவே இவ்வம்பிகைக்கு பலவித நிறங்களில் சித்தாடை சார்த்தி வழிபடுவதால் எந்த ஒரு துன்பத்திற்குமான சரியான ஒரு முடிவு எடுத்து நல்லதோர் தீர்வினைப் பெற முடியும்.

பொதுவாக செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையிலும், புதன் கிழமை, புத ஹோரை நேரத்திலும் ஸ்ரீதெய்வயானை அம்பிகைக்குச் சித்தாடை அணிவித்துக் கும்பிடுவதால் கவலைகளால் கலங்கிய மனிதருக்கு நல்ல தெளிவு தந்து முடிவு எடுக்க முடியாத பிரச்சனைக்கு நல்ல் தீர்வு தர இச்சித்தாடை வழிபாடு பெரிதும் உதவும். எந்தெந்த வடிவில் எத்தகைய காரிய சித்திக்கு எந்த வண்ணச் சித்தாடை சார்த்துதல் வேண்டும் என்பதெல்லாம் சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்த விளக்கங்களில் பாலாம்பிகை திருச்சுற்று விளக்கத் துறையில்– காணலாம். உதாரணமாக, குடும்பத்தில் பெண்களின் தோஷம் காரணமாகத் திருமணம் கைகூடாதிருந்தால்..

1. மூத்த பெண்ணாக இருந்தால் அம்பிகைக்கு மஞ்சள் நிறச் சித்தாடையும்,
2. இரண்டாம் பெண்ணாக இருந்தால் பச்சை நிறச் சித்தாடையும்,
3. மூன்றாம் பெண்ணாக இருந்தால் சிவப்பு நிறச் சித்தாடையும்,

சார்த்தி அம்பிகையை வழிபட வேண்டும். ஸ்ரீபாலா, ஸ்ரீபாலாம்பிகை, வள்ளி, தேவயானை அம்பிகையருக்கும் இவ்வகையில் சித்தாடை சாற்றுதல் சிறப்பானதாம்...

1. மஞ்சள் வண்ணச் சித்தாடைக்கு வியாழனன்று குருஹோரை நேரமும்,
2. பச்சை நிறச் சித்தாடைக்கு புதன் கிழமை புதஹோரை நேரமும்,
3. சிவப்பு நிறச் சித்தாடைக்கு செவ்வாயன்று செவ்வாய்ஹோரை நேரமும் ஏற்புடையது.

சித்தாடை சார்த்த , காலை, மாலை, சந்தியா நேரங்களே (5-6) புனித நேரமாக கார்ய சித்தி பெற மிகவும் ஏற்ற உத்தம நேரமாகும்.

தை அமாவாசை சித்தாடை சார்த்த மிகவும் புனிதமான நாள்!

நம் இயந்திர கதியான வாழ்வில் நல்ல ஹோரை நேரமோ, நாள், நட்சத்திரமோ பார்க்க இயலாமல் பலவித நற்காரியங்களைச் சுபநேரம் கணிக்காமல் செய்து விடுகிறோமன்றோ, இதனால் தான் நல்ல முடிவெடுக்க முடியாமல் திணறல் ஏற்படுகிறது! இவற்றிற்கெல்லாம் ஓரளவு பிராயச்சித்தம் தருவதாக அமைவதே தை அமாவாசைத் திதியில் சித்தாடை சார்த்துதலான பூஜையாகும்! அமாவாசைத் திதித் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாதோர் இதற்காக ஓரளவேனும் பரிகாரம் பெற ஆலய, புண்ணிய நதி தீர்த்தங்களிலும், பூவாளூர், திருவிடைமருதூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தை அமாவாசைத் திருநாளில் மூதாதையருக்குப் பித்ரு தர்ப்பணமளித்து அம்பிகைகளுக்குச் சித்தாடை சார்த்தி வழிபட வேண்டும்! ஆனால் இதன் பிறகாவது முறையாகத் தர்ப்பணமளித்திடுக!

தை அமாவாசையன்று உங்கள் ஊரிலுள்ள அம்பிகைக்குச் சித்தாடை சார்த்திடில் பலவிதத் திருமணத் தோஷங்கள் எளிதில் நிவர்த்தியாகும். இல்லறம், வியாபாரம், திருமணம், அலுவலகம் போன்ற விஷயங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தக்க முடிவுகிட்டும். இவையனைத்தையும் பெற்றுத் தரும் திருநாளாக விளங்குவதே தை அமாவாசை தினமாகும். பொதுவாக 2001ம் ஆண்டு அம்பிகைக்கு சித்தாடை சார்த்தி வழிபடும் மிகப்புனிதமான ஆண்டாக விளங்குகிறது. 2001 என்னும் எண்ணிற்கு விளக்கம் தந்து இதனைத் திருச்சுற்று என்பதாக சித்தாடை சாற்றும் வழிபாட்டு முறையை  நமக்கு சித்தர்கள் அளித்துள்ளார்கள். தறிச் சித்தாடை வருமுன் நான்கு விதமான மூலிகைகள் கொண்ட மூலிகா வஸ்திரமே சிலை ரூபத்திற்குச் சார்த்தப்பட்டு வந்தது! இவற்றில் மிகவும் முக்கியமான சதுர்வேத மூலிகைகளை ஒரு சேரக் காண்பது அரிதிலும் அரிதாம்!

சித்தருக்கு மகா அர்க்யம்!

தை அமாவாசைத் திதியன்று சிரிசிரி மார்த்தாண்ட சித்தருக்குச் சென்னி மலையில் சதுர்வேத மூலிகா தரிசனம் கிட்டியது! வில்வம், துளசி, தும்பை, நொச்சி போன்று ஏதேனும் நான்கு மூலிகைகளை நீரில் ஊறவைத்து தை அமாவாசை நாளில் இச்சித்தர் பெருமானுக்கு அர்க்யம் எனப்படும் நீர்த்தாரை பூஜை போல் மூன்று முறை மூலிகா நீர்வார்த்து அர்க்யத் தாரைப் பூஜை செய்திடுதல் வேண்டும்.

தை அமாவாசையன்று 80 வயதான பழுத்த தம்பதியர்க்குப் / பெரியோருக்குப் பாத பூஜை, திருஅண்ணாமலை, திருமலை (தென்காசி) போன்ற இடங்களிலுள்ள ருத்ர பாதங்களுக்கு (கற்பாதம்) தீர்த்த அபிஷேகம் செய்தல் அவ்விடத்தில் நம் மூதாதையருக்குத் தர்ப்பணம் அளித்தல், எள் கலந்த உணவுப் பண்டங்கள் (எள்ளோதரை, எள் உருண்டை) அன்னதானமும் மிகவும் சிறப்பானதாகும்.

பொதுவாக முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளுக்கு முடிவு தருவதாக இத்தை அமாவாசை பூஜைகள் பெரிதும் உதவுகின்றன. ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், வேதாரண்யம், பூவாளூர், பட்டுக் கோட்டை அருகே பரிதி நியமம், மாயவரம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில்பத்து மற்றும் சந்திர, சூரிய தீர்த்தங்கள் உள்ள இடங்களில் பித்ரு தர்ப்பணம் மிகவும் விசேடமானதாகும்.

உத்தராயணத் தைஅமாவாசை என்பதால் வடக்கு நோக்கி ஓடும் புனித இடங்களில் (திருவலஞ்சுழி, காசி) பித்ரு தர்ப்பணம் அளிப்பதால் இதுவரை தவறவிடப்பட்ட அமாவாசைத் தர்ப்பணங்களுக்கும், மாளயபட்சத் தர்ப்பணங்களுக்கும் தக்க பிராயச்சித்தம் அடையலாம். எங்கு பித்ருத் தர்ப்பணம், நிகழ்த்துகின்றீர்களோ அவ்விடத்தின் அருகிலுள்ள ஆலயங்களில் அருபாலிக்கும் அம்பிகையருக்கு சித்தாடையும் சார்த்தி வழிபடுங்கள்.!

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

பொதுவாக இவ்வருடத்தில் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 365 சித்தாடைகள் சார்த்தி வழிபடுதலால் வாழ்நாளில் பெறுதற்கரிய அபரிமிதமான அரிய சித்திகளைப் பெறலாம். இத்தகைய அரிய வழிபாட்டு முறைகளே நாம் கடைபிடிக்கத் தவறிய பலவித பண்டிகைகள் / பூஜைகளுக்கான பூஜா புண்ய திரட்சியை ஓரளவேனும் நமக்குப் பெற்றுத் தருகின்றன.

சித்தாடை வழிபாடு தந்த சித்தர்! தை அமாவாசையில் சித்தாடை வழிபாட்டு மஹிமை!

தை அமாவாசையும், ஆடி அமாவாசையும் அமாவாசைத் திதிகளின் சுப்ர தீபங்களாக விளங்குகின்றன. ஏனெனில் தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாத கால உத்தராயண காலத்திலும் ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாய காலத்திலும் சூரிய பகவான் தன் அயனகதி பேதங்களால் விதவிதமான சூரிய கிரண வீச்சுகளை ஏற்படுத்துகின்றார் அல்லவா! சூரிய பகவானின் கிரண வீச்சின் ஒரு சிறு பகுதியை ஆகர்ஷணம் செய்து அதனை பூலோக ஜீவன்களின் ஜீவ சக்திக்கான நற்கிரணங்களாக மாற்றித் தருவதே கடல் தேவதைகளின் அதியற்புத தெய்வீகப் பணியாகும்.. இவையெல்லாம் நாம் அறியாத வகையில் இப்பிரபஞ்சத்தில் நிதமும் நிகழ்கின்ற தெய்வீக விந்தைகளாகும்..!

தை மாத அமாவாசையின் போது விண்ணுலக லோகங்களில் எத்தனையோ தெய்வீக லீலைகள் ஏற்படுகின்றன..இப்பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களுக்கு பார்த்திப ஜீவ சக்தியளிக்கின்ற சூரிய சக்தியானது கடலின் லவண சக்தியுடன் இணைந்து செயலாற்றுகின்றது! கடல் நீரானது கோடானு கோடி நட்சத்திரங்களின், கோள்களின் ஒளிக் கிரணங்களைத் தன்னுள் ஈர்த்து அவற்றை ஜீவன்களுக்குரித்தான லகு ஜீவன சக்தியாக மாற்றித்தருகின்றது! இதனால்தான் இன்றைக்கும் பூமியில் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. பூமி சுற்றும் போது கடல் நீர் தளும்பாமல் இருக்கக் காரணமாக விஞ்ஞானப் பூர்வமாக பலவித ஆகர்ஷண சக்திகளாகக் குறிப்பிட்டாலும் அஷ்ட திக்கு பாலகர்களுடைய தேவ சக்திக்கு உட்பட்டுத்தான் பாறைகளும், கடல்களும், கோள்களும் இயங்குகின்றன!

சிரிகிரி மார்த்தாண்ட சித்தர்

சூரிய சக்திக்கும், கடல் நீருக்குமுள்ள ஜீவசக்திகளைத் தன் தவத்திறனால் இறையருளால் மாற்றிக் கோள்வாழ் ஜீவன்களின் நடைமுறை வாழ்க்கை முறைக்கேற்ப அமைத்துத் தரும் பொருட்டு சிரிகிரி மார்த்தாண்ட சித்தர் பெருமான் என்பார் ஆதித்ய லோகத்தில் அருந்தவம் பூண்டார். இவருக்கு சிரிகிரி (கிரி = மலை) என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், சூரிய லோகத்தில் சிரித்தாளம்பப் புஷ்பம், சிரிச்சுடர் ஜோதி, சிரிப்பாளய லவணம் (உப்பு), சிரிஸ்வத சூக்த மந்திரங்கள், சிரிஸ்க்ருத நெய் போன்ற பலவித தெய்வீகத் திரவியங்களை அங்குள்ள சிரிமலை எனப்படும் சிரிகிரியில் காணக் கிடைக்கின்றன!

சூரிய பகவானுடன் அவருடைய ஏழு குதிரை வாகனத்தைத் தொடர்ந்தவாறு வேதங்களை ஓதிக் கொண்டே நித்திய தேவ யாத்திரை புரியும் வாலகில்ய மஹரிஷிகள் யாவரும் சிரிகிரி மார்த்தாண்ட சித்தர் பெருமானிடம் பாஸ்கர மந்த்ரோபதேசம் பெற்றவர்களே! சிரித் தாளம்பம் என்பது தெய்வீகப் பாறைகளுள் ஒரு வகையாகும். இது அருணாசல புனித பூமியினின்று தோன்றியதாம்! இதன் வகைகளை இன்றும் தேனி மலை, திருக்கழுக்குன்றம், பழனி, திருச்சி அருகே சங்கர மலை போன்ற இடங்களில் காணலாம்., சிரிகிரிப் பாறையின் தாத்பர்யம் என்னவெனில் இவைதாம் சூர்ய கிரணங்களை ஈர்த்து அவற்றைப் பூலோக ஜீவன்களுக்கு ஏற்ப வடித்துத் தருகின்ற தேவமார்த்தாண்ட சக்திகளைக் கொண்டதாம்!

உண்மையில் சூரிய மண்டலத்திலிருந்து எழுகின்ற ஒரு சிறிய கிரணத்தின் உஷ்ணத்தையோ, அணுப் பூர்வ ஒளியையோ கூட நம்மால் தாங்க முடியாது. அவற்றைப் பூலோக வாழ் ஜீவன்களின் குணப்பாட்டிற்கேற்ப அதன் உஷ்ணத்தையும் தணித்து விசேஷ பூம்யக் கதிர்களாக மாற்றித் தருவதே சிரிகிரிப் பாறையின் தெய்வீகத் தன்மையாகும்.. இதன் ஓர் அம்சமே ஒரு பகுதியே இன்றைக்கும் ஸ்படிகமாக நமக்குக் கிட்டுகிறது. நேபாளத்தில் சிரிகிரிப் பாறைக் கற்களின் வியாப்ய ஜல ரூபமும் ஜல க்ருஷ்ண சௌந்தர்யமும் கூடிய சிலாவடிவுக் கூட்டே சாளக்ராமக் கற்களாகக் கண்டகி நதிப் படுகையில் கிடைக்கின்றன. பொதுவாக சிரிகிரிப் பாறைகள் நிறைந்த பூமியே ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத் போன்றவையாகும் !

இந்த சிரிகிரிப் பாறையின் தன்மை என்னவெனில் சூரிய கிரணத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு ஹோரை நேரத்திற்கும் விதவிதமாகக் காட்சி தரும்! காலை 6 மணிக்கு சூரிய ஹோரையில் ஒருவிதத் தோற்றம் ஏழு மணிக்குச் சந்திர ஹோரையில் வேறுவிதத் தோற்றம்! ஒவ்வொரு ஹோரை நேரத்திலும் சூரிய கிரணங்களில் விதவிதமாகத் தோன்றும் அக்னியைத் தன்னுள் கிரகித்து அவற்றை யோக சுடராக்கி, அக்னிப் பூக்களாக மலர்வித்து, வெப்பக் கூறுகளாகப் பகுத்துத் தரும் நவ்ய அக்னி தேவதைகள் நிரவியிருப்பதே சிரிகிரி பாறையாகும்..

சிரிகிரிப் பாறை தரிசனங்கள்!

திருஅண்ணாமலை, தேனிமலை, இமயமலை, பர்வத மலை போன்ற மலைகளில் கதிராமங்கல கோண லிங்க தரிசனம், துரித கதி நிவாரண வஸ்திர பூஜா தரிசனம், தட்சிண பீட நிவாரண ஹம்ஸ ஸித்தி பூஜா தரிசனம் என்று பலவித சிரிகிரிப் பாறை தரிசனங்கள் உண்டு. ஏன் புரியாத பாஷையில் இவ்வளவு நீளமான பெயர்களைக் கொண்டதாகத் தரிசனங்கள் விளங்குகின்றன என்று கேட்கத் தோன்றுகிறதா?

இத்தரிசனப் பாறைகளின் பெயர்களை மிகவும் எளிதாக இரண்டு/ மூன்று அட்சரங்கள் கொண்டதாக றூ, ரூ, லூ என்ற பீஜாட்சரங்களாக அளிக்கலாம்! ஆனால் இவற்றின் மனித அறிவிற்கெட்டாத அட்சர தேவ ரகசியங்களை மனித மனம் ஏற்காது! ஏனெனில் உதாரணமாக லூ என்பது மிகவும் மகத்தான பீஜாட்சர சக்தி கொண்டதாகும்.. ஞாயிறன்று சூரிய ஹோரை நேரத்தில் இச்சிரிகிரிப் பாறையில் சூரிய நட்சத்திர நாட்களில் பாலவ யோக நேரத்தில், இரவில் துருவ நட்சத்திரத்தைப் பார்த்து தியானிக்கும் போது, லூ என்ற பீஜாட்சர ஒலி தானாகவே விண்ணிலிருந்து எழும் ஓசையை மிகவும் துல்லியமாக உணரலாம்!

இந்த லூ பீஜாட்சர மந்திர வடிவையே தட்சிண பீட நிவாரண ஹம்ஸ் ஸுத்தி பூஜா தரிசனம் என்று சூட்சுமப் பொருளுடன் பல அட்சர சக்திகளைப் பதித்துப் பெரிய பெயருடன் விளிக்கின்றார்கள்.. எனவே இவற்றிற்கு சகஸ்ரநாம சக்திகள் உண்டு! சூரிய பகவானின் பூலோகப் பிரவேசத்தின் போது எழுகின்ற நித்திய தெய்வீக விந்தை இது! சிரிகிரி சித்த மார்த்தாண்ட சித்தர் பெருமான் இறைத் தூதுவராய் பூமிக்கு அனுப்பப்பட்ட போதே மார்த்தாண்ட யோக, பிம்ப தவ முறையில் கனிந்த கனியாய் பூலோகத்திற்கு வந்தார். ஆனால் சித்தர்களின் படைப்பின் இரகசியமே அவர்கள் தம்முடைய தவ, யோக பலாபலன்களை ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிப்பது மட்டுமின்றி அவர்கள் எந்த விநாடியும் எந்நேரத்திலும் மேலும் மேலும் தவயோக சித்திகளைப் பயின்றவாறே இருப்பார்கள்! எந்த ஒரு விநாடியையும் அவர்கள் வீணாக்குவது கிடையாது.. சிரிகிரி மார்த்தாண்ட சித்தரும் தம் பூமிப் பிரவேசத்தின் போது மேலும் பல யோகங்கள் பயில்வதற்காக பூலோகம் எங்கும் வலம் வந்தார்! எதற்கு?

சதுர்வேத மூலிகைகள்!

தை அமாவாசையின் போது மட்டும் ஏற்படக் கூடிய பூப்ரவேச சூரிய கிரணங்களில் மலரும் கலியன் கொம்பு, பூதூ விண்  நாவல், கம்பளி மிள ப்ரக்ஷணி, சத குப்பை கூடுக் கொம்பை என்ற நான்கு அரிய மூலிகைகளின் சங்கமத்தைக் கண்டு தரிசித்து அரிய யோகம் பயின்றிட அவர் பூலோகமெங்கும் யோக மௌனத்தில் வலம் வந்தார். தை அமாவாசை நாளுக்குள் நான்கு மூலிகைகளும் சேர்ந்து சங்கமித்திருப்பதைக் காண வேண்டும். அதற்குகள் அண்ட சராசரங்களிலும், அனைத்து மலைகளிலும், அவர் தேவ யாத்திரைப் பயணம் செய்தாக வேண்டும். இவ்வாறு இம்மூலிகைகளை அவர் தேடி அறிவதற்குள் தை அமாவாசை நாள் மறைந்துவிடும். இவ்வாறு சதுர்வேத மூலிகைகளைக் காண முடியாமலேயே பல கோடி யுகங்கள் மறைந்தன!

சிரிகிரி மார்த்தாண்ட சித்தர் குன்றுதோறாடும் குமரனின் அருளால் மட்டுமே இது தமக்குக் கிட்டும் என்றுணர்ந்து தெய்வயானை அம்மையைத் தொழுதேத்தி “தாயே! தாங்களே தேவலோக மூலிகை வாசத்துடன் அடியேனுக்கு சதுர்வேத (நான்கு வேத) மூலிகா சங்கம தரிசனம்தனைப் பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டிட அம்பிகையும் சித்தர் பெருமானை அழைத்துக் கொண்டு ஓர் அற்புத மலையில் க்ஷணப் பொழுதில் அம்மூலிகைச் சங்கமத்தைக் காட்டி மறைந்தாள். இப்புனிதத் தலமே சென்னிமலையாகும்.!

தை அமாவாசையின் போது சென்னிமலையில் அரிய நான்கு மூலிகா சங்கமம் கண்டு புளகாங்கிதமுற்றார் சிரிகிரி மார்த்தாண்ட சித்தர்! அங்கேயே தெய்வயானை அம்பிகையை எழுந்தருள வேண்டினார்! அக்காலம் வரையில் மூலிகா இலையிலான வஸ்திரத்தையே தெய்வ உருவத்திற்குச் சாற்றி வந்தனர்! வஸ்திரம் சாற்றும் முறையை சற்றே கலியுகத்திற்கு ஏற்ற வகையில் மாற்றித் தறித் துணியால் நெய்யப்பட்ட சிற்றாடைகளை தெய்வயானை தேவிக்குச் சார்த்தி அபிஷேக ஆராதனை செய்து துதித்து சித்தர் பெருமான் ஆனந்தமுற்றார்.. இவ்வாறாக சிரிகிரி மார்த்தாண்ட சித்தர் பெருமான் பூலோகத்திற்குக் கொணர்ந்த சித்தாடை பூஜையே ஸ்ரீஅம்பிகை வழிபாட்டில் தற்போது பிரதானமாயுள்ளது. எனவே அம்பிகையருக்கு சித்தாடை அணிவித்து வழிபடுதல் என்பது மனத்தூய்மைக்கு வழிவகுக்கின்ற தேவ வழிபாட்டு இலக்கணமாகும் ! சென்னி மலையில் சித்தாடை தாங்கி தெய்வயானை அம்பிகையாகக் காட்சி தந்து சிரிகிரி மார்த்தாண்ட சித்தருக்குத் தக்க அருள்வழி முறைகளை தேவி உபதேசித்தனள்! இறைவியே மூலிகா பந்தன ரசாயன முறைகளை உணர்த்தியதால் விருட்ச பாலக சித்தர் எனும் பெயரையும் இவர் பெற்றார்.. இவ்வைய தெய்வ லீலைகளால்தாம் இன்றைக்கும் தேவயானையாகத் தனிச் சன்னிதி கொண்டு ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையில் அருள்பாலிக்கின்றாள் அன்னை.

அருள்தரும் சித்தாடை வழிபாடு!

பொதுவாக காசு, பணம் வாங்காது மகத்தான தெய்வீக சேவையாக அருள்வாக்குச் சொல்கின்றவர்கள், ஜோதிடத் துறையில் ஈடுபட்டுள்ளோர், ஆவிகளுடன் தொடர்பு கொண்டு இருப்போர் இவ்வாண்டில் தினந்தோறும், ஒரு அம்பிக்கைக்குகாவது சித்தாடை சார்த்தி வழிபடுதல் வேண்டும். 365 நாட்களிலும், 365 சித்தாடைகளை இறைவிக்கு அளித்துத் துதித்திட இந்த ஆண்டில் ஜோதிட ஞானமும் பல்கிப் பெருகும். ஆனால் இந்த ஜோதிட தெய்வீக சேவையை வருமானம் ஈட்டும் தொழிலாகக் கொள்ளாமல் மகத்தான சமுதாய இறைப்பணியாக ஆற்றிட வேண்டும்..

விஷ சக்திகளாலும், துன்பகர விஷ சூன்ய பில்லி, ஏவல் விஷ எண்ணங்களாலும் அவதியுறுகின்ற குடும்பங்கள் உண்டு.. உணவில் மலம் தோன்றுதல், எங்கு சென்றாலும் துர்சக்திகள் பின் தொடர்தல், காற்று, நிழலாட்டம் போன்றவற்றால் அவதியுறுகின்றோர் இவ்வாண்டில் இயன்ற போதெல்லாம் அம்பிகைக்குச் சித்தாடை சார்த்தி வழிபட்டு வர, விஷ சக்திகளின் துன்பங்களிலிருந்து மீள்வர். சப்த (ஏழு) கன்னியர்கள், சப்த மாதாக்களைப் பல ஆலயங்களில் நீங்கள் தரிசித்து இருப்பீர்கள்! காற்றிலும் வெய்யிலிலும் மழையிலும் தோய்ந்து வான் நோக்கி இருக்கின்ற சக்தி வாய்ந்த இத்தெய்வ மூர்த்திகளுக்குச் சித்தாடை சாத்தி வழிபட்டிட, பல ஆண்டுகளாக பில்லி, சூன்ய, ஏவல் சக்திகளால் அவதியுறுவோர் துரித கதியில் நலம் பெறுவர். மேலும் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தனியாக வெளியூரில் தங்கியிருந்து அலுவலகம், வியாபாரம் போன்றவற்றைக் கவனித்துக் குடும்பத்தை விட்டுப்பிரிய வேண்டியிருந்தால்  தாங்கள் வேலை பார்க்கின்ற இடத்தில் உள்ள அம்பிகைக்கு சித்தாடை சார்த்தி வழிபட்டு வந்தால் தனித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவர்.

ஸ்ரீமத் நடன கோபால நாயகி சுவாமிகள்

சித்புருஷர்கள் என்றாலே சிவத்தைத் தழுவியவர்கள் மட்டுமே என்று எண்ணாதீர்கள். அனைத்துக் கோடி அண்டங்களிலும் சித்புருஷர்கள் நிறைந்திருக்கின்றனர். சித்தர்கள் இல்லாத லோகமே கிடையாது. இவ்வகையில் வைணவச் சித்தராக, சிவப் பரம்பொருளையே நாராயணராகக் கண்ட மகத்தான சித்புருஷரே ஸ்ரீநடன கோபால நாயகி ஸ்வாமிகள் ஆவார்!

இழந்தை சொத்தை மீட்க அருட்சக்தி தரும் அற்புத சித்தர்! திருமண தோஷ நிவர்த்திக்கு அருள் மருந்து தரும் கர்ம யோகி! பிடிப்பற்ற வாழ்க்கைக்கு இறைத் துடிப்பூட்டும் வடிச் சுடர் மகான்! மதுரை அழகர் கோயில் சாலையில் ஆனைமலை காதக்கிணார் பகுதியில் ஸ்ரீநரசிம்மர் ஆலயம் அருகில் ஜீவாலயம் பூண்டுள்ள ஸ்ரீநடன கோபால நாயகி சித்த சுவாமிகள் கலியுகத்தில் ஜீவன்களுடைய துன்பங்களைக் களைவதற்கான யோக, தவ சக்திகளை என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அர்ப்பணிக்கின்றார்.!

ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் ஜீவாலயம் மதுரை

எந்த உடல் அங்கங்களால் பாவங்களைச் செய்தோமோ, அவற்றிற்கும் பூர்வ ஜன்ம வினைகளுக்கும் இந்த ஆயுளுக்குள்ளேயே இந்த உடலிலேயே பிராயச்சித்தங்களைப் பெறுவது தான் சிறப்புடையதாகும்! இல்லையென்றால் அப்பாவத் தீவினைகள் பல்கிப் பெருகிப் பலகோடி ஜென்மங்களிலும் தொடர்ந்து விடும். தீய சக்திகளிடம் இருந்து மக்களை ரட்சிப்பதற்காகவும், தீயவற்றை மனமும், உடலும், நாடாது இருப்பதற்காகவும் தான் சித்புருஷர்கள் இன்றைக்கும் பல இடங்களில் ஜீவாலயம் (ஜீவசமாதி) பூண்டு நமக்கு அருள்பாலிக்கக் காத்துக் கிடக்கின்றார்கள்.

கலியுகத்தில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்களுடைய இன்னல்களைத் தீர்த்து, முக்திக்குப் பெருவழி காட்டி இன்று மதுரையில் ஜீவாலயம் பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பாலித்து வருகின்ற அதியற்புதச் சித்தர்பிரானே ஸ்ரீநடன கோபால நாயகி ஸ்வாமிகள்! இவருடைய பூஜை மணியில் எழுகின்ற நாதமானது இப்பூவுலகில் என்றுமே கேட்டிராத தேவகானமாக, வைகுண்ட லோக மணியில் எழுகின்ற ஸ்ரீஹரி கானநாதமாக இனிமையாக ஒலித்ததைக் கேட்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர் பலரும் உண்டு. இவருடைய தேவ நடையின் போது எழுகின்ற சலங்கை மணிச் சத்தங்களைக் கண்டு எத்தகைய துர்சக்திகளும் விலகிவிடும்..

மாயைகளின் மாற்றங்கள்!

பலரும் இவர் ஏன் ஆண்டாள் கொண்டையைப் போன்று தரித்திருக்கின்றார் என்ற் எண்ணி வியந்ததுண்டு! ஒவ்வொரு சித்தரும் / யோகியும் / மகானும் இறையாணைப்படி தங்களுக்கென விதவிதமான சித்த தேவ பாணிகளைக் கொண்டிருப்பர். ஏனென்றால் மனிதன் எப்போதுமே மாற்றத்தை விரும்புகின்றான் தானே! இதுவே மாயைகளின் மாற்றமாகும். ஒவ்வொரு வினாடிக்கும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளும் ஏதேனும் மாற்றங்கள் இந்த பிரபஞ்சத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன், உங்கள் உடலிலேயே ஒவ்வொரு வினாடியும், பலவித பரிணாம, வானவெளி இயல்புகள் இவ்வாறாக அனைத்திலுமே ஒவ்வொரு அணுவிநாடி காலத்திற்கும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதே போன்றுதான் மனிதனும் தன்னைக் கரையேற்ற வருகின்ற மகான்களிடம், யோகியரிடம் பலவிதமான மாற்றங்களைக் கண்டால்தான் அவனுக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுகின்றது.

எல்லா யோகியரும் மகான்களும் சித்புருஷர்களும் ஒரே மாதிரி ஒரே உடல் அமைப்புடன், ஒரே மாதிரி நடை உடை பாவனைகளுடன் தோன்றுவது கிடையாது. ஸ்ரீஷீரடி சாய்பாபா நெற்றிப் பட்டையில் கபால சுந்தர கங்கண ரேகையை வஸ்திரச் சுற்றாகக் கொண்டிருந்தார்! புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபாவின் தேவ வஸ்திர, பிருந்தாருண ஜடாமிர்த நளின பாவனைகளின் தெய்வீகத் தன்மைகளை இப்பூவுலகறியும்! பூண்டி ஆற்று மகான் எத்தகைய அத்ய யோகத் தோற்றத்தைக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். இவ்வகையில் ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளுடைய கபாலத்தில் இருந்து எழுகின்ற ச்ரவண ஜோதியைச் சுழற் கற்றைகளாய்ச் சுருட்டி அமைத்து அதன் மேல் ஆண்டாள் கொண்டையைத் தரித்து பரத்தை மறைத்தது பார் முதற் கொண்டை என்று சித்புருஷர்கள் விளிக்கின்ற பரிபாஷை நிமித்தமாய் அதியற்புத வைணவச் சித்தராய் இன்றும் பரிணமிப்பவரே ஸ்ரீநடன கோபால நாயகி ஸ்வாமிகள்.

திருடிய சொத்து பாடாய்ப் படுத்தும்!

வணிகர் ஒருவர் தன்னுடைய வீடு, நில புலன் சொத்துக்களை எல்லாம் தன் நண்பனிடம் கொடுத்துக் கட்டிக் காக்கும்படி சொல்லி விட்டு அயல் நாட்டிற்குத் திரவியம் திரட்டச் சென்றார். தாம் திரட்டிய செல்வத்தை எல்லாம் தம்முடன் வைத்திராது, தம்முடைய நண்பருக்கு அவ்வப்போது அனுப்பிச் சொத்தை நிலைப்படுத்திக் கொண்டார். ஆனால் அந்தோ பரிதாபம்! அச்செல்வந்தர் நாடு திரும்பிய போது நீ யார், உன்னை நான் பார்த்ததில்லை என்று கொடூரத் தனமாய் சூதுவாதுடன் கேட்ட சொந்த நண்பனே அவரைத் துரத்தி அடித்து விட்டான்! பாவம் அந்த குடும்பமே நடுத் தெருவிற்கு வந்து விட்டது.. 

சொந்த நண்பனே உள்ளத்தில் திராவகத்தைப் பாய்ச்சியது போல் நடந்து கொண்டு விட்டான், என்ன செய்வது? நடையோ நடை என நடந்து பிச்சை எடுத்து அநாதையாக மதுரை வந்தடைந்து ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளுடைய தரிசனத்தைப் பெற்றனர்! அக்குடும்பம் அவருடைய திருவடிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அக்குடும்பம் அவருடைய இறைத் திருப்பணிகளில் பரிபூரணமாகப் பங்கு கொண்டது! சுவாமிகளும் தம்முடைய அடியார்களின் குடில் அருகே அவர்களுக்கு அபயம் அளித்திட்டார். இவ்வாறு பல்லாயிராக் கணக்கான அபலைகளுக்கும் ஏழைகளுக்கும் அன்பும் ஆதரவும் தெய்வீகமும் தந்து அருள்பாலிப்பவரே ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் ஆவார். இவ்வாறு அந்த வணிகர் தமக்குக் கிட்டியது போதும் என்ற மனத்திருப்தியுடன் சுவாமிகளுடைய திருவடிகளிலேயே லயித்து பக்தியைப் பெருக்கிக் கொண்டார்.

வினை விதைத்தால் !

அவருடைய சொந்த வீட்டையும், நிலங்களையும், சொத்தையும் அபகரித்துக் கொண்ட நண்பனைத் திடீரென்று சில வியாதிகள் தாக்கின! ஒரு ஐந்து நிமிட நேரம் கூட உறங்க முடியாமல் ஏதோ ஒரு பயங்கரமான உருவம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது.. தூக்கம் வருகின்றதே என்று உறங்கப் போனால் ஐந்தே நிமிடத்தில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விடுவான். பகலிலோ, காலையிலோ, மாலையிலோ எந்நேரம் உறங்கச் சென்றாலும் பீதி தருகின்ற நிலைமைதான் பெருக்கெடுத்தது.. ஒரு மனிதன் உறங்காமல் எத்தனை நாட்கள் தான் இருக்க முடியும்?

கண்களும் முகமும் வீங்கி என்ன செய்வது என்று தெரியாது திகைத்த அவனுக்குப் பலரும் ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளுடைய மகிமையைப் பற்றி எடுத்துரைத்தனர். சுவாமிகளும் அவ்வூருக்கு வருகை தருவதை அறிந்து அவன் தம் வீட்டு வாசலில் நிறையப் பண்டங்களுடன், திரவியங்களுடன் சுவாமிகளுக்கு பிட்சை அளிப்பதற்காக எதிர் நோக்கியிருந்தான். குடிசை, மாளிகை என்ற எவ்வித வேறுபாடும் இல்லாது, ஏழை நடுத்தர மக்கள், பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாதும் ஜாதி மத இன குல பேதமின்றியும் அனைத்து இல்லங்களிலும் பிட்சை கொண்ட சுவாமிகள் இந்த நண்பனை ஏறெடுத்தும் கூடப் பார்க்கவில்லை. அக்காலத்தில் சத்தியம் பரிமளித்து நிறைந்திருந்தது அல்லவா! எப்போது சுவாமிகள் ஒருவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லையோ, அவரிடம் பிட்சை பெறவில்லையோ அவன் பிறரை ஏமாற்றி வாழ்பவன் என்பதைக் கிராம மக்கள் புரிந்து கொண்டு அவனை ஏளனம் செய்யத் தொடங்கினார்கள். அடுத்த நிமிடத்திலேயே இந்த அயோக்யனிடம் பணி புரிந்தால் நமக்குப் பாவம் வந்து சேரும் என்று கூறி அவனை விட்டுப் பணியாளர்கள் அகன்று விட்டனர். நண்பன் தன்னுடைய தவறுகளை உணர்ந்தான். உணர்ந்தால் மட்டும் போதுமா? தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது தானே நித்ய கர்ம நிவாரணம் ஆகின்றது!

சித்தரைச் சரணடை பத்தரை மாற்றுத் தங்கமாவாய்!

ஒரு சித்தர் பிரான் அனைத்துக் கோடி மக்களுடைய தீவினைக் கர்மங்களையும் பஸ்மமாக்கக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தாலும் நோய் நொடிகள் நீங்கப் பெற்ற பின் மீண்டும் தீவினைகளில் இறங்கினால் ஒருவருக்குப் பிராயச்சித்தம் தந்து என்ன பயன்? சித்தர்கள் என்றாலேயே நம்முடைய அனைத்துவிதமான குறைகளையும் நோய்களையும் தீர்ப்பவர்கள் மட்டுமே என்ற எண்ணமே கலியுகத்தில் நிலவி வருகின்றது. ஆனால் அந்த நோய் நொடிகள் உடனே தீராத போது மகான்கள் மீது சந்தேகம் வலுத்து அது அவநம்பிக்கை ஆகிவிடுகின்றது. தீவினைகள் நீங்கப் பெற்றவர்கள் நல்வாழ்க்கை வாழ்ந்து தியாகமயமாகப் பிறருடைய சேவைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டால்தானே அவருடைய நோய்களையோ, கர்மங்களையோ ஓரளவேனும் தீர்ப்பது சாத்தியமாகும். எனவே மகான்களின் / ஜீவாலயங்களின் தரிசனம் மட்டுமே என்றில்லாது நம்முடைய உடலால்/பொருளால் பிறருக்குச் சேவை புரிகின்ற தியாக மனப்பான்மையை நாம் பெருக்கிக் கொண்டால்தான் மகான்களும் சித்புருஷர்களும், யோகியர்களும் நமக்கு அளப்பரிய கருணையை மிகவும் கனிந்தூட்டுவார்கள்!

சுவாமிகள் இருக்கின்ற இடத்திற்கு அவன் ஓடாடிச் சென்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து தாம் தம் நண்பருக்கு இழைத்த துரோகத்தைச் சொல்லிக் கதறி அழுது அபகரித்த சொத்து, தன்னுடைய சொந்த நிலபுலன்கள் அனைத்தையுமே சுவாமிகளிடமே அர்ப்பணிப்பதாக வாக்களித்தான்! சுவாமிகளும் உன்னுடைய நண்பனுக்குரித்தான சொத்துக்களை அவனிடம் கொடுத்துவிடு, உன்னுடைய சொத்துக்களை வைத்துக் கொண்டு உன்னுடைய கிராமத்திலேயே ஏழை மக்களுக்கு நான் சொல்கின்ற நற்பணிகளையெல்லாம் செய்து வருவாயாக என்று அவனுக்கு சில அறிவுரைகளைத் தந்து அதன்படி நடந்தால் தான் இந்த உடலிலே சேர்த்த தீவினைகளுக்கு ஓரளவேனும் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார்.

இவ்வாறாக ஒவ்வொரு சித்புருஷருமே எத்தனையோ லட்சக்கணக்கான மக்களுடைய இல்லற, வியாபார, அலுவலகத் துன்பங்களுக்குத் தேவையான தீர்வுகளை நல்கி அவர்களுடைய முக்தி நிலைகளுக்கான அறவழிகளையும் அளிக்கத் தயாராக இருக்கின்றார்கள். நாடிச் சரணடைவது நம் வாழ்க்கை லட்சியமன்றோ! ஒவ்வொரு மஹானுடைய / சித்தருடைய ஜீவாலயங்களை வழிபடுகின்ற விசேஷ பூஜை முறைகள் உண்டு. ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் தம்முடைய மானுட சரீரத்தை உகுத்து ஜீவஜோதியாய் ஆவதற்குத் தாமே தேர்ந்தெடுத்த புனிதமான இந்த ஜீவாலயத்தில் 108 முறை அடிப்பிரதட்சிணம் செய்து அஷ்ட திக்குகளிலும் (எட்டு திசை) எட்டு வித நமஸ்காரங்கள் செய்து வணங்குதல் வேண்டும். வடக்கு திசை வேரினாலான துளசி ஜப மாலையை சுவாமிகளின் அதிஷ்டானத்தில் வைத்துப் பூஜித்துப் பின் இல்லத்திற்கு எடுத்துச் சென்று தினந்தோறும் காலை, மாலை, சந்தியா வேளையில் முறையாக ஜபித்து வந்தால் நன்முறையில் காரியசித்தி ஏற்படும்.

திருமண தோஷங்கள் நிவர்த்தியாக...

திருமணமாகாத கன்னிப் பெண்களுக்குப் பெற்றோர்கள் உபதேச மந்திரமாக புனிதமான புதன் கிழமையன்று புதஹோரை நேரத்தில் ஹரி ஓம் என வலது காதில் ஓதிட வேண்டும். வடக்கு வேரிலிருந்து கோர்க்கப்பட்ட 108 துளஸி மணி மாலைகளை வீட்டில் 48 நாட்கள் வைத்துக் கன்னிப் பெண்கள் ஹரி ஓம் ஹரி ஓம் என்று தினந்தோறும் 6 மணி நேரம் ஓதி துளஸி மாலையை மா, அரசு, பலா போன்ற மரப்பெட்டியிலோ, சந்தனப் பேழையிலோ வைத்துப் பூஜித்திட வேண்டும்.

ஒரு மண்டலத்திற்குப் பிறகு ஸ்ரீநடன கோபால ஸ்வாமிகளின் ஜீவாலயத்தில் சுவாமிகளின் திருவடிகளில் மாலையைச் சமர்ப்பித்து ஹரி ஓம் என ஓதியவாறு அடிப்பிரதட்சிணம் செய்து இல்லத்திற்கு மாலையை எடுத்து வந்து கன்னிப் பெண்கள் காலையிலும் மாலையிலும் ஹரி ஓம் என்று தொடர்ந்து ஜபித்து வந்தால் எத்தகைய திருமண தோஷங்களுக்கும் நிவர்த்தி கிட்டும். துளஸி மணி மாலைகளைக் கையில் வைத்து உருட்டிடாது உள்ளங்கைக்குள் அடக்கமாக வைத்து ஜபிக்க வேண்டும்.

துன்பச் சுமைகள் நீங்கிட....

நார்ப்பட்டாலான கொப்புகளை (தொப்பி/குல்லாய்) நன்முறையில் வைத்து பூஜித்து ஸ்ரீநடன கோபால சுவாமிகளின் அதிஷ்டான பீடத்திற்கோ அவருடைய திருஉருவத்திற்கோ அணிவித்து நாம சங்கீர்த்தம் பாடி அனுஷம், மிருகசீரிடம், வெள்ளி, புதன், கிழமைகளில் சுவாமிகளிடம் ஆசி பெறுதலால் அளவுக்கு மீறிய கடன் சுமை, வியாபார நஷ்டங்கள், திருமண வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களால் வாடுவோர் நன்முறையில் துயரங்கள் தீர்க்கப் பெறுவர். சுவாமிகளின் திருவுருவப் படத்தை நோக்கினால் விசேஷ தெய்வாம்சம் பொருந்திய அவருடைய தேவ கொப்புகளின் மஹிமை புரியும். பிரசாதமாகக் கொப்புகள் அளிக்கப்பட்டால் அவற்றை இல்லத்திற்கு எடுத்து வந்து நாள் தோறும் தொட்டு வணங்கி பூஜிக்க வேண்டும்!

சரும நோய் நிவாரணத்திற்கு....

உடல் முழுதும் பலவித சரும நோய்களால் வாடுவோர், ஸ்ரீநடன கோபால சுவாமிகளின் ஜீவாலயத்தில் பச்சை நிறத்தாலான சால்வை சார்த்தி அதனைப் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்து வந்து பூஜித்து பீரோவிலோ, மரப்பெட்டியிலோ பத்திரமாக எடுத்து வைத்துத் தினந்தோறும் ஒரு மண்டலம் பூஜை செய்து கடுமையான நோயால் வாடுவோர்க்கு அளித்திட வேண்டும். அதிஷ்டானத்தின் பிரசாதமாகப் பெறப்பட்ட சால்வைகளை மஞ்சள் நிறத் துணிப்பையிலோ, நார்ப்பட்டாலான மஞ்சள் நிறப்பையிலோ வைத்து நோயாளியின் கையில் கொடுத்து மீண்டும் பூஜையில் வைக்க வேண்டும்.

இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினர்/நண்பர்களிடம் மஞ்சள் நிறப் பையிலோ, அல்லது நார்ப்பட்டாலான பையிலோதான் சால்வையை இட்டுக் கொடுத்து வாங்கிட வேண்டும். சால்வையைக் கரங்களில் தாங்கி அவர்களை ஹரிஓம் என ஜபிக்கச் செய்திடுக! இத்தகைய நோய் நிவாரண முறைக்கு ஸ்பரிசச் சந்த்ர நோய் நிவாரணபூதி என்று பெயர். இவ்வகையில் ஸ்ரீஸ்வாமிகளிடமே நேரடியாக நிறைய வஸ்திரங்கள் அளித்து அவற்றைத் தானமாக / பிரஸாதமாகப் பெற்று நோய் நிவாரணம் பெற்றோர் ஆயிரமாயிரம்! ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், ஸ்ரீவிவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் மக்களோடு மக்களாய்ச் சமுதாயத்தில் நடமாடி எண்ணற்ற பல இறையனுபூதிகளைத் தந்த மகான்களுள் ஒருவரே ஸ்ரீநடன கோபால சுவாமிகள்!

தெய்வீகத்தில் வழிவழியாய் வாழும் வழி

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு விதமான யுகக் காலங்களிலும் ஜீவ வாழ்க்கயின் அம்சங்கள் வே(மா)றுபடுகின்றன.. கலியுகத்தில் தீய கர்ம வினைகளுக்கும், கடும் பாவங்களுக்கும் தண்டனையாக அமைவது நோய்களும், வறுமையும் பல்வேறு விதமான தோஷங்களும் ஆகும்.

எனவே நோய் என்பது விஞ்ஞானப் பூர்வமாக சுற்றுப் புற அசுத்தமான சூழ்நிலைகளால், கிருமிகளால் ஏற்படுவதாகத் தோன்றினாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் எந்த நோய் வருவதற்கும் உரித்தான தெய்வீகக் காரண காரியங்கள் நிறைய உண்டு.. எந்த தீவினைக் கர்மத்தால் எந்த ஒரு நோய் ஏற்பட்டதோ அதைக் கண்டறிந்து அதற்குரிய பிராயசித்தத்தைச் செய்துவிட்டால் அந்த நோயைத் தீர்த்துவிட முடியும். எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் அதற்குரித்தான கர்மவினைகள் தீர்வு பெற்றால் அடுத்த வினாடியே அந்நோயே மறைந்துவிடும். ஆனால் இந்த நோய் தீர்க்கும் ரகசியங்களை உணர்ந்துள்ள மகான்களை, சித்புருஷர்களை நாடிச் சரணடைந்தால் தானே நாம் பரிபூர்ணமான பரிகாரத்தைப் பெற முடியும்.

புகைபிடித்தல், மது அருந்துல், சூது, மற்றும் காமத் தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் ஒரு புறம் மகானையோ, ஜீவ சமாதியையோ தரிசித்து வந்து மறுபுறம் தன்னுடைய தீவினைகளையும் தொடர்ந்து செய்து வந்திடில் எவ்வகையிலே உண்மையான பிராயசித்தத்தைப் பெற முடியும்? தற்காலத்தில் இப்படித்தான் சிலர் அதர்மமான முறையில் சபரிமலை விரதத்தை மேற்கொண்டு பாவ வினைகளையே சேர்த்துக் கொள்கின்றார்கள்!

கோடிகோடியாய் ஒருவர் எவ்வளவுதான் தான தர்மங்களைச் செய்தாலும் அந்த தான தர்ம புண்ய சக்தியானது அவருடைய பூர்வ ஜன்ம தீவினைகளில் ஓரணுத் துளியைக் கரைப்பதற்கே சரியாகி விடும்! எனவே அவரால் நடப்புக் கால நோய் நொடிகளுக்குத் தீர்வைப் பெற முடியாமல் போய் விடுகின்றது.. மேலும் நல்ல விதத்தில் சம்பாதிக்கப்படாத பணம், பெறப்பட்ட பொருட்கள் (லஞ்ச லாவண்ய அன்பளிப்புகள்..) தீவினைகளின் தன்மையைப் பெருக்கி விடுகின்றன.

அதர்ம வழிப் பணம் நரக வேதனையே!

எனவேதான் ஆபீஸில் தேவையான அளவு உழைக்காமல் சம்பளம் வாங்குதல், லஞ்ச லாவண்யங்கள். திருட்டு, பொய்மை, ஏமாற்று, சூதாட்டம், பிறரை ஏமாற்றி பெறப்பட்ட பொருளால்/ சொத்தால், பணத்தால், கிடைக்கப் பெறுகின்ற பொருளால்/வசதிகளால், குடும்பத்திற்கும் சந்ததிகளுக்கும், வழி வழியாகத் துன்ப வினைகளே சங்கிலி போன்று தொடரும்.. சமுதாயத்தின் குறிப்பிட்ட சில துறைகளில், கலியுகத்தில் தற்காலத்தில் தீவினைகள் பெருத்துக் கிடக்கின்றன.. பல இடங்களில் லஞ்சம் எனப்படுகின்ற கையூட்டானது நோய்க் கிருமிகள் போலப் பெருகி விட்டது. இதுவரை தாம் அறிந்தோ, அறியாமலோ லஞ்ச பூர்வமாகச் செய்த தவறுகளுக்குத் தக்க பிராயசித்தம் தேடி இவற்றின் தீவினைச் சங்கிலித் தொடர்கள் தம்முடைய சந்ததிகளை நோய்களைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்வதற்கான வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

லஞ்சமாகப் பெற்ற/மாற்றப்பட்ட பொருளால் வண்டி, வீடு அல்லது ஏனைய நிலையான சொத்துக்களைப் பெற்றிருந்தால் அவற்றை உடனடியாக விற்று அதன் பொருளைக் குறித்த தான தர்மங்களில் மட்டும் செலவழித்தால்தான் தக்கப் பிராயசித்தங்களை இந்த மனித ஆயுள் முடிவதற்குள் ஓரளவேனும் பெற்றிட முடியும். அல்லது இவ்வாறு பெறப்பட்ட பணத்தால் வாங்கிய வீடுகளை ஏழைகளுக்கான இலவசத் திருமண மண்டபங்களாகவோ, அன்னதான சத்திரங்களாகவோ அல்லது தார்மீக முறையில் வேத நெறியில் அன்னதானம், வேத பாடசாலை போன்ற நற்காரியங்களை நிகழ்த்துகின்ற ஆஸ்ரமத்திற்கு அளித்தல் போன்ற அறப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய லஞ்ச பாவ வினைகள் சந்ததி சந்ததியாக ஏதேனும் ஒரு வகையில் பெரு நோய்களாக , துயர்களாகவோ, ஊனங்களாகவோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒன்றுமறியாத ஒருவரிடம் அதர்மமாக, லஞ்சமாக ஐந்தோ, பத்தோ, நூறோ வாங்கி என்ன சாதிக்க முடியும் என்று சற்றே சிந்திக்க வேண்டும்! ஸ்ரீஅக்னீஸ்வர மூர்த்தி அருள்பாலிக்கும் ஆலயங்கள் தாம் லஞ்சமாகப் பெறப்பட்ட பொருட்களில் தீய வழிகளில் வந்த பணத்தில்/பொருளில் உள்ள தீவினைகளை பஸ்பம் செய்யக் கூடிய தேவ சக்தியைப் பெற்றவை! ஆனால் இத்தீவினை தீர்க்கும் இறைவிதி முறைகளை அறிந்தாக வேண்டுமே!

யாருக்குப் புண்யம் போய்ச் சேரும்?

வஸ்திரம் (ஆடை) என்பது உடலில் உள்ள அக்னியைத் தாங்கி மறைத்து மானத்தை ரட்சையாகக் காப்பதால் ஆடைகளை ஏழைகளுக்கு தானமாக அளிப்பதால் பெறப்படுகின்ற நிரஞ்சன தீய புண்ய சக்தியின் மூலமாகவும் ஏமாற்றுதல் / லஞ்ச சம்பந்தமான சில கொடிய பாவங்களின் விளைவுகளிலிருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் லஞ்சமாகப் பெறப்பட்ட பொருளையோ, திரவியத்தையோ தானமாக அளிப்பதால் அந்த தான தர்ம புண்ய சக்தியானது அவருக்கே பரிபூர்ணமாக வரும் என்று எண்ணலாகாது! எவரிடமிருந்து எது லஞ்சமாகப் பெறப்பட்டதோ அவர்களுக்குத் தான் அந்த தான தர்மத்தின் அனைத்து புண்ய சக்தியும் சென்றடையும்! லஞ்சப் பொருளால்/அபகரித்த சொத்தால் ஒருவர் அனுபவிக்கின்ற வசதிகள் அனைத்துமே அதர்ம வழியில் பொருள் பெறுபவருடைய உடலில் நிரந்தரமான பாவச் சுமைகளைச் சேர்த்து விடும் என்பதை உணர்தல் வேண்டும்!

புண்ய சக்தியின் திரட்சியே நோய் தீர்க்கும் மருந்து!

எனவே நம் உடலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு நோய்க்கும் உரித்தான தீவினைக் கர்மங்கள் நிறைய உண்டு. அவை தீரும்போதுதான் உடலில் உள்ள நோயும் குணமடையும்! ஏதோ ஆங்கில மருந்துகள், சித்த, ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டு நோய்கள் தீர்வது போல் தோன்றினாலும் அந்நோய்களுக்காக நீங்கள் செலவழிக்கின்ற தொகை, நீங்கள் சந்திக்கின்ற மருத்துவர், நீங்கள் மருந்து வாங்குகின்ற கடையில் பணிபுரிவோர், அதன் உரிமையாளர் அனைத்திற்குமே/ அனைவருக்குமே பூர்வ ஜென்ம நெருங்கியத் தொடர்புண்டு.

என்வே ஒரு நோய் தீவிரமாகும் போது நீங்கள் ஆஸ்பத்திரிக்குச் செல்வதும் அங்கு கட்டிலில் படுத்து drips ஏற்றப்படுவதும், பலரும் வந்து பார்ப்பதும், கவனிப்பதும், மருந்துகளை அளிப்பதும், ஊசி ஏற்றுவதும் என்பதாக ஒவ்வொன்றிற்கும் ஏராளமான ஆன்மப் பூர்வக் காரணங்கள்/ ஆன்மத் தொடர்புகள் உண்டு. இவ்வாறாக நீங்கள் மருத்துவத்திற்காக செலவிடுகின்ற தொகை / நேரம் இவ்வகையில்தான் விரயமாகின்ற வகையில் கழிந்தால்தான் உங்களுக்கு நோய் நிவாரணமாகும். ஒழுங்காகச் சம்பாதிக்காத பணம்/பொருள் திருட்டிலோ/நெருப்பிலோ , நோய்க் கழிப்பிலோ விரயமாகத்தான் போகும்! எனவே எந்தத் தீவினைகளுக்காக, பாவங்களுக்காக அந்த நோய் உடலில் தோன்றியதோ அவை முற்றிலுமாகப் பிராயச்சித்த பூர்வமாகத் தீர்வு பெற்றால்தான் நோயும் முழுமையாக நிவாரணம் பெறும்!

தீராத நோயுண்டா? வினை தீர நோயுந் தீரும்!

ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் அல்லது மூலநோய் ஏற்பட்டு விட்டால் அதற்கு மூலகாரணமாக உள்ள தீவினைக் கர்மங்களைக் களைந்தால்தான் அந்நோயும் தீரும். நீரிழுவு நோய் போன்று ஆயுள் முழுவதும் சில நோயளுடன் வாழ வேண்டியதுதானா? பெருந்தீவினைகளைச் செய்திருந்தால் பிறர் வாழ்நாள் முழுதும் அவதியுறும்படி குரோதச் செயல்களைப் புரிந்திருந்தால் அந்த வினைகள் தீரும் வரை உடலில் அந்நோய் ஒட்டித்தான் இருக்கும் என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள். மேலும் யாருக்குத் தீங்கிழைத்தார்களோ அவர்கள் படும் துயர்கள் தீரும்வரை அந்த நோயுடன் துன்பமிழைத்தோர் ஆயுள் காலம் முழுவதும் வாழ்ந்தாக வேண்டும்! எனவே அந்த நோய்க்குரித்தான தீவினைக் கர்மங்களுக்கு ஆயுளுக்குள் பரிகாரம் கண்டிப்பாகத் தேடியாக வேண்டும் என்பதையே இறைவன் இவ்வாறு குறிப்பால் உணர்த்துகின்றான்.

சற்குரு எங்கே? ஜீவாலய வழிபாடு சற்குருவைக் காட்டும்!

எந்த நோய்க்கும் உரித்தான சில பரிகார நல்வழிகளைத் தரவல்ல சித்தர்களுடைய/ யோகியருடைய / மகான்களுடைய தரிசனத்தைப் பெறுதல் வேண்டும். கலியுகத்தில் சமுதாயத்தில் மகான்களுக்கு இழைக்கப்படுகின்ற துன்பங்களைக் கண்டுதான் இத்தெய்வத் தூதுவர்கள் தம்மை வெளிக்காட்டாது சமுதாயத்தில் இலைமறை கனியாக வாழ்ந்து கொண்டு இருப்பதால் சற்குரு நாடி அவருடைய சத்சங்கப் பணிகளில் தங்களைப் பிணைத்துக் கொண்டு தக்க பரிகாரங்களைப் பெறுதல் வேண்டும்..

ஷிர்டி சாய் பாபா, வள்ளலார், படேசாஹிப் போன்ற பல்லாயிரக் கணக்கான சித்தர்களுடைய, மகான்களுடைய, யோகியருடைய ஜீவாலயங்கள், ஜீவசமாதிகள் இன்றைக்கும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல இடங்களிலும்  ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன.. உத்தம ஆன்ம நிலையில் நோக்கிட நோய்க்கு முழுமையான நிவாரணம் பெறுவதைவிட நோய் நிவாரணம் அடைந்தவுடன் எத்தகைய நல்வாழ்க்கையைத் தொடர்கின்றோம்,

தீயவழக்கங்களிலிருந்து முற்றிலுமாக விலகி நன்னெறியில் துய்க்கின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும். எத்தனையோ முறை கிரிவலம் வந்தேன், என்னுடைய நோய்க்கு நிவாரணம் கிட்டவில்லை என்று புலம்புவோர் அந்த நோய்க்கு உடனடியாக நிவாரணம் கிட்டினால் மீண்டும் புதுத்தெம்பும், புத்துணர்ச்சியும், இளமையும் கூடி மீண்டும் தீவினைகளில் ஈடுபட்டுவிட்டால் என்ன செய்வது? எனவேதான் தீவினைகளின்பால் தீய ஒழுக்கங்களின்பால் நாட்டம் செல்லாமல் இருக்கவே நோய் நிவாரணம் நாடும் பணியை ஒரு வாழ்க்கை அம்சமாகவே இறைவன் தந்திருக்கின்றா என்பதை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே நோய் வந்து விட்டது என்பது நாம் தீவினைகளை கழித்து/அனுபவித்துக் கொண்டுள்ளோம் என்பதே பொருளாகும். நாம் அறிந்தவரையில் இவர் நல்லவரகத்தானே வாழ்ந்தார். இவருக்கு ஏன் Heart Attack வந்தது என்று முதலில் எண்ணத்தான் தோன்றும்! ஆனால் அவருடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளை நோக்குகின்ற தீர்க தரிசனம் வந்துவிட்டால் வினைகளுக்கு ஏற்பவே அவர் அனுபவிக்கின்றார், அனைத்துமே இறைவன் செயல்தான் என்ற முடிவிற்கு நீங்களே வந்து விடுவீர்கள்..!

மருந்துண்டு மருந்தீஸ்வரனை நினை!

கர்ம வினைப் பரிகாரம் தேடும் அதேசமயத்தில் மருத்துவத்தையும் கைக்கொள்ள வேண்டும். ஏன்? இறைவனை நம்பினால் மட்டும் போதாதான், தினந்தோறும் நெற்றியில் சிவசிவ என்று சொல்லி விபூதியை இட்டுக்கொண்டால் நோய் தீர்ந்து விடாதா என்று கேட்கலாம்.

எவருக்கு உண்மையான இறைபக்தி மிளிர்கின்றதோ ஆழ்ந்த பக்தியுடன் நெற்றியில் திருநீறு இட்டு சிவசிவ, ராமராம என்று பக்தியுடன் ஜபித்து வந்தால் ஊழ்வினைகள் தீர்ந்து முழுமையான பிராயசித்தம் கிட்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கின்றதோ அவர்கள் இவ்வாறு விதண்டாவாதமாய் எண்ண மாட்டார்கள், எந்தக் குறுக்குக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்! பிறரிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டும் இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இப்பூவுலகில் நம் பாரத நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் இறைவன் பல்லாயிரம் சுயம்பு லிங்க மூர்த்திகளாய் ஆங்காங்கே தன் இறைமையை நிரவிக் கொள்ளக் காரணமே இவ்வுலகின் ஒவ்வொரு அணுத் துளிக்கும் உரிய படைப்பு இரகசியத்தை ஊட்டி உணர்விக்கவே! காரண, காரியமின்றி எவ்வித அசைவும், இயக்கமும் ஏற்படுவதில்லை என்பதை மனிதன் தன்னைத்தானே ஆத்ம விசாரம் செய்வதன் மூலமாக அறிந்து கொள்ளவே இறைவன் தன்னை மலை ரூபமாகவும் கல் வடிவிலும், உலோக வடிவிலும், புனித விருட்சங்களாகவும், அக்னியாகவும், காற்றாகவும், ஆறாகவும் தம்மைப் படைத்துக் கொண்டுள்ளான்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயுள்ளோர் தன்னால் எந்த இனிப்பை உண்டு அனுபவிக்க முடியவில்லையோ அந்த இனிப்பை ஏழைகளுக்கு அளித்து அவர்களை மகிழ்ச்சி பெறச் செய்ய வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப தினந்தோறும் ஒரு சீப்பு வாழைப் பழமேனும் ஏழைகளுக்குத் தானமாக அளிக்கலாமன்றோ! எனவே ஏழைகளுக்கு இனிப்பை தானமாக அளித்து அவர்கள் மகிழ்வுடன் அதை உண்ணும் போது நீங்கள் பெறும் மகிழ்ச்சியானது இனிப்பினால் கிட்டும் ஆனந்தத்தை விட உன்னதமானதாகும்! பிறருடைய இனிய வாழ்வின் குறுக்கே புகுந்து, பிறர் மகிழ்ச்சிக்கு நாசம் விளைக்கும் போதுதான் அது சர்க்கரை வியாதியாக உருவெடுக்கும்.

ஒரு நோய்க்கு, ஆன்மீக ரீதியாக சில பிராயச்சித்த முறைகளை மஹான்கள், சித்தர்கள் மூலம் பெற்று அவற்றை நிவர்த்தி செய்து கொண்டுவிட்டு மீண்டும் ஊழ்வினையைப் பெருக்குகின்ற தீய எண்ணங்களில், தீய காரியங்களில் உங்கள் உடல்/மனம் ஈடுபடுமேயானால் மகான்கள் உங்கள் ஊழ்வினையின் ஒரு பகுதியைக் குறைத்தலால் என்னபயன்? எனவேதான் மகான்கள் அவ்வளவு சுலபத்தில் சித்திகளைக் கூட்டுவதில்லை!

ஸ்ரீஅருமருந்தம்மை
திருந்துதேவன்குடி

பெற்றோர்களின் வினை தாங்கும் கடமை!

நோய் வரக் காரணங்கள் பல இருந்தாலும், பெற்றோர்களுடைய நோய் நிவாரணக் கடமைகளில் ஒன்றே தம் பிள்ளைகளின் கர்மவினைச் சுமையைத் தாமே சற்றே தாங்குவதும் ஆகும். உதாரணமாக உங்கள் பெண்/பிள்ளைகளின் நோய் நிவாரணத்திற்காக நீங்கள் இறைவனை வேண்டும் போது, கிரிவலம் வரும் போது அச்சுமையின் சிறு பங்கானது பெற்றோர்களாகிய உங்களுக்கு மாற்றப் படலாம்! அந்த அளவிற்கு நீங்கள் தியாகமய வாழ்வைக் கொள்ளத் தயாராக இருந்தால்! எனவே கர்மவினை பஸ்மமாக்கப்பட வேண்டுமென்றால் நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் தியாகமயமான வாழ்க்கையாக அமைய வேண்டும். அந்த உயர்ந்த ஆன்ம நிலை வராதவரை ஒருவரின் கர்ம வினையை மற்றவருக்கு மாற்றி அனுபவிக்கச் செய்யலாமே அன்றி அவற்றை முற்றிலுமாகக் கரைத்தல் மிகவும் கடினம்!

அரிய ஆன்ம மருந்து அருளும் அருமருந்தம்மை!

இத்தகைய அரிய நோய் நிவாரண முறைகளை நமக்குத் தந்தவளே அருமருந்தம்மை எனும் அவதாரம் பூண்ட ஈஸ்வரி அருள்பாலிக்கும் கும்பகோணம் திருவிசநல்லூரில் உள்ள திருந்துதேவங்குடியாகும் (திருத்தேவன்குடி). தற்போது ஒரு வேளை மட்டும் பூஜை நடக்கின்ற அளவிற்கு மிகவும் சிதிலமடைந்த நிலை! மண்டபங்கள் மிகவும் சிதைந்த வடிவில் மூலத்தானம் மட்டுமே ஏதோ பெயரளவுக்கு நிற்கிறது. நஞ்சுண்ட பெருமானை கூட மருந்து வேண்டி மந்திரங்கள் இவை, புரிந்து கேட்கப்படும் புண்ணியம் இவை என்று பாடல் பெற்ற இத்தலமே நோய்க்கான மூல கர்மவினையை அறிந்து விசேஷமான புண்ணியப் பிராயச்சித்தம் தரக் கூடிய தலம்!

உங்களால் தினந்தோறும் இவ்வாலயத்தில் அரிசி மாக்கோலம் இட்டு வழிபட்டு வர இயலுமென்றால் அதுவும் சிறப்புடையதே! இந்த ஆன்மீக நற்செய்தியை அச்சிலேற்றி லட்சக் கணக்கான மக்களுக்கு அருமருந்தம்மையின் மஹிமையை உணர்த்த முடியுமெனில் அதுவும் உங்கள் வசதிக்கேற்ற தொண்டுதானே! எனவே ஒரு மண்டல காலம் இங்கு ஏழைகளுக்கு இனிப்புப் பண்டங்களை தானமளித்து அருமருந்தம்மையை வணங்கி இங்கு கற்கடேஸ்வரராக அருள்பாலிக்கின்ற சிவபெருமானுக்குரித்தான அபிஷேக ஆராதனைகளைச் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் சர்க்கரை வியாதிக்குப் பரிபூரண நிவாரணம் கிட்டும்.

எனவே கரும்புச் சாறு லோகத்திலிருந்து சுயம்புவாகத் தோன்றிய இச்சிவலிங்க மூர்த்தியை பூலோக மக்களின் வழிபாட்டிற்குக் கொணர்ந்த அருமருந்தம்மைக்குத் தைலக் காப்பிட்டு பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி போன்ற மூலிகைத் தைலங்களால் காப்பிட்டு வழிபட்டு வந்திடில் சர்க்கரை வியாதிக்குப் பரிபூரண குணம் பெறலாம். தேனீக்கள் நிறைந்த தலம்! அதாவது தேவாதி தேவமூர்த்திகள் தேனீக்கள் ரூபத்தில் இன்றும் வழிபடும் தலம். எனவேதான் இனிப்பான தேவஅருள் பெற்றுத் தருகின்ற சிவத்தலமாக விளங்குகிறது. பூஜை நேரம் பற்றி அருகிலுள்ள சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் நன்கு விசாரித்து அதன்பின் திருந்துதேவன்குடி சிவாலயத்திற்குச் செல்லவும்.

எறும்புகளுக்குச் சர்க்கரை என்றால் மிகவும் பிரியம். எனவே நீங்கள் இவ்வாலயத்தில் பச்சரிசிமாக் கோலமிட்டு (மொக்குமாவுக் கோலமிட்டால் கடும் சாபமே விளையும்..) அம்பிகைக்குத் தைலக் காப்பிட்டு வழிபட்டு கற்கடேஸ்வர சுயம்பு மூர்த்திக்கு வில்வமும் துளசியும் சாறாக்கி அபிஷேகித்து ஏழைகளுக்கு இனிப்பு தானம் அளித்து வந்தால் நன்முறையில் குணமடைந்திடலாம்!

கற்கட மகரிஷி !
தேவலோகக் கரும்புச் சாறு தீர்த்தத்தில் நண்டு வடிவில் தவம் பூண்டிருந்த கற்கடர் என்ற சித்தர் பெருமான் நண்டுகளின் குலத்திற்கு மோட்சமளிக்கும் அறவழி முறைகளை இறைவனிடமிருந்து நல்வரங்களாகப் பெறுதற்காகப் பெருந்தவம் பூண்டார்! கரும்புச்சாறு தீர்த்தக் கடலில் அமிழ்ந்தவாறு ஒற்றைக் காலில் இறைவனை உண்ணி நண்டு வடிவில் யோகம் பூண்ட அரும்பெரும் சித்புருஷரே கற்கடராவார். ஒரு நண்டானது ஒற்றைக் காலில் நின்று பல கோடி ஆண்டுகள் தவம் புரிகின்றது என்றால் இரண்டு நிமிட நேரம் கூடச் சம்மணமிட்டு அமர இயலாதபடி இன்றைய சமுதாய வழக்கில் மனிதன் நாற்காலியிலும், சோபாவிலும் அமர்ந்துதானே தன்னை நவீன விஞ்ஞானப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாக்கிக் கொண்டு எளிய யோக முறைகளையும் இழந்து, மறந்து வருகின்றான். இதனால்தான் முதுகுவலி, மூட்டுவலி என்றவாறு பல வியாதிகள் இளம்பருவ, நடுத்தரப் பருவங்களிலேயே வந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன! கரும்புச் சாறு தீர்த்தக் கடலில் தவம் பூண்ட கற்கடர் இறையருளால் பூமியில் இறைதரிசனம் வேண்டிட, திருந்துதேவன்குடியில் சுயம்புலிங்க மூர்த்தியாகத் தோன்றிட அதே நண்டு வடிவில் அவர் பூலோகத்தில் தவத்தைத் தொடர்ந்தார். வரும் கலியுகத்தில் கோடிக் கணக்கான மக்கள் சர்க்கரை வியாதி எனப்படும் நோயால் அவதியுறுவர் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்து கலியுகத்தில் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான கர்மவினைகளைப் பகுத்தறிந்து அவற்றிற்கான அறவழித் தீர்வுகளையும் பரிகார, பிராயச்சித்த முறைகளையும் பெறுவதற்காகவும் இங்கு கற்கட நண்டாய் மகரிஷி அருந்தவத்தைத் தொடர்ந்தார்! (கற்கட மகரிஷியின் தவம் மக்களின் நல்வாழ்விற்காக இன்றும் தொடரும் இனிய வைபவமே என்று நிரூபிக்கிறது சமீபத்தில் நடைபெற்ற அவருடைய கற்கட விஜயம். ஆம், சமீபத்தில் நடைபெற்ற ஆலய கும்பாபிஷேகத்தின்போது அதில் பங்கு பெற்ற அனைவரும் வியக்கும் வண்ணம் அவர்கள் முன் நண்டு வடிவில் கற்கட மகரிஷி தோன்றி ஸ்ரீகற்கடேஸ்வரர் சிவலிங்கத்தை நோக்கி திருநடை பயின்று அந்த சிவலிங்க ஜோதியில் ஐக்கியம் அடைந்தார் ! இறைவன் தன்னை நம்பினோர்க்கு நட ராஜனே!)

இல்லறச்சுமை தாங்கியே நல்மனைவி!

கலியுக இல்லறத்தில், நோயால் வாடும் கணவனுக்குப் பணிவிடை செய்வது முதல், இல்லறத்தின் அனைத்துத் துன்பங்களையும் தோளிலும், மனதிலும் தாங்கிச் சுமந்து வேதனையுடன் வாழ வேண்டிய மனையாள்தானே பணிவு, அடக்கம், பரிவு, கருணையின் சிகரமாக விளங்க வேண்டியுள்ளது! எனவே கலியுகத்தில் நோயால் வாடும் குடும்பங்களில் இல்லறப் பெண்மணிக்கு ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பிராயசித்தம்தனைப் பெற்றுத் தருவதற்காக கற்கட மஹரிஷியோடு அம்பிகையும் சேர்த்து தவம் புரியலானாள்.

இவ்வாறாக அம்பிகையும், சித்புருஷர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் மஹரிஷிகளும் ஒன்றாய் அமர்ந்து தவம் புரிந்த தலமே திருந்துதேவன்குடியாகும்.. இங்கு விதவிதமான தவங்களைப் புரிந்திட தேவாதி தேவ மூர்த்திகளெல்லாம் இங்கு குடிகொண்டு தவம் புரிந்ததால் தான் இறைவன் இவ்வகைத் தலப்பெயருடன் ஈசன் இங்கு அருள்பாலிக்கின்றான். சித்புருஷர்கள், மஹரிஷிகளின் தவம் என்றால் மனம் இளகிடும் ஈசன், அம்பிகையே யோகத்தில் வந்து அமர்ந்தால் பரமானந்தம் கொள்ளமாட்டாரா என்ன? கற்கடகேஸ்வேரராக, சுயம்பு ஜோதியாய்த் தோன்றிய ஈஸ்வர மூர்த்தி, அம்பிகைக்கும், அருமருந்தம்மை எனும் பெயர் சூட்டிக் கற்கட சித்த மஹரிஷிக்கும் நோய் நீக்கும் அதியற்புத தவசக்திகளை அளித்தார்.. இங்கு அருள்பாலிக்கின்ற அருமருந்தம்மை எத்தகைய கொடிய நோய்களுக்கும் தக்க நிவாரணம் தருகின்ற ஈஸ்வரியாவாள்! எனவே இங்கு செவ்வாய்க்கிழமை இராகு கால நேரத்தில் அருமருந்தம்மைக்குக் கரும்புச் சாறு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டுச் சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைத் தானமாக அளித்துவந்தால் எத்தகைய கடுமையான நோய்களுக்கும் தக்க தீர்வு கிட்டும்.

இங்கு பிரதோஷ வழிபாடு நடப்பதற்கான ஏற்பாடுகளை வசதியுடையோர் செய்திடில் பலவித நோய்களுக்கும் எளிய தீர்வு பெறலாம். ஒரு காலத்தில் பிரம்மாண்டமான மண்டபங்களுடன் அரும்பெரும் ஆலயமாக விளங்கியிருந்த திருந்துதேவன்குடி இன்று ஓரிரு சிறு மண்டபங்களுடன் காட்சியளித்தாலும் பலகோடிச் சதுர்கோடி யுகங்களாய் இதே சுயம்பு மூர்த்திதாம் சுயம்பிரகாசமாய்த் தோன்றி அருள்பாலிக்கின்றார்! மருத்துவர்களும் தங்களுடைய கைராசியையும் நோய் தீர்க்கும் சக்தியையும் விருத்தி செய்து சிறப்படைய திருந்துதேவன்குடி அருமருதம்மையை செவ்வாய் ஹோரை நேரத்திலும், செவ்வாய்க் கிழமைகளிலும் இராகு காலத்திலும் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு இனிப்புப் பண்டங்களைத் தானம் செய்து மருத்துவத் தொழிலில் கீர்த்தி அடைவார்களாக..!

மிக அதிக அளவில் ரத்தத்தில் சர்க்கரை நோய் கொண்ட ஒருவர் நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈசசித்த சுவாமிகளின் அருளாணைப்படி திருந்துதேவன்குடி சிவாலயத்தில் பல ஆண்டுகள் சேவை செய்து பரிபூரண குணமடைந்தார். ஆனால் சர்க்கரை வியாதி நிவாரணம் ஆனபின் உடல் புதுத் தெம்பால் ஏற்பட்ட செருக்கால் பலரையும் வதைத்து மீண்டும் தீயொழுக்கத்தில் அவர் கூத்தாடினார்! இதன் ஊழ்வினைப் பயனாய், மகானை அவமதித்த பெரு வினையால் மறுபிறவியில் கைக்குழந்தையாக இருக்கும்போதே சர்க்கரை வியாதியுடன் அவதிப்படும் விதி அவர் தலையில் எழுதப்பட்டு விட்டது. எனவே திருந்துதேவன்குடி அருமருந்தம்மை சமேத ஸ்ரீகற்கடகேஸ்வரருடைய மஹிமையை நீங்கள் உணர்ந்து உலகிற்கு உணர்த்துதலும் இவ்வாலயத்திற்கான திருப்பணிகளை மேற்கொள்தலும் சர்க்கரை வியாதிக்குப் பரிபூரண நிவாரணம் அளிப்பது மட்டுமன்றி உங்கள் சந்ததிகளுக்கும் இவ்வியாதி வாராதிருக்க தெய்வீக ரட்சையாகக் காத்து உதவும்.

தெய்வீக மருத்துவம்

டாக்டர்களிடம் தெய்வீகம் சிறந்திட மருத்துவத் துறையில் தெய்வீகம் தழைத்திட

இந்த உலகில் பிறக்கின்ற அனைத்துக் கோடி மக்களுமா டாக்டர்கள் ஆகின்றார்கள்? இன்றைக்கு உலகமெங்கும் நிரவி இருக்கின்ற மருத்துவர்கள் யாவரும் பூர்வ ஜென்மங்களில் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை உபாசித்தவர்களே! இன்று எந்த நாட்டில், எந்த மதத்தில், எந்தக் கலாச்சாரத்தில் ஒரு டாக்டர் திளைத்திருந்தாலும்– ஹோமியோபதி, அலோபதி, சித்தா/ஆயுர்வேதம், யுனானி எத்துறையானாலும் இப்பூவுலகில் பலகோடி யுகங்களுக்கு முன்னால் சனாதன தர்ம நாடாக நாட்டுப் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே உலகச் சமுதாயமாக அமைந்திருந்த போது பலகோடி பிறப்புகளிலே ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை முறையாகப் பூஜித்தோரே இன்றைக்கு மருதுவர்களாக உலகெங்கும் இருக்கின்றார்கள்.

மருத்துவராக வாழ்க்கை நடத்துவது சிறப்பானதா? ஆன்மீக நோக்கில் நிறைய கர்மவினைகளை மிக எளிதில் கழிக்கக் கூடிய மிக எளிமையான முக்தி, மோட்ச நிலைகளைப் பெற்றுத் தரக் கூடிய மிகச் சிறந்த தொழில்களுள் ஒன்றே மருத்துவத் துறையாகும். ஒருவர் புனிதமான மருத்துவராக வாழ்ந்தால் அவர் நிச்சயமாக இப்பிறவிக்குள் குருவருளுடன் அனைத்துவிதமான (நடந்த, நடப்பு, எதிர்காலக் கர்மவினைகள்) தக்க பிராயசித்தங்களைப் பெற்றுவிடலாம்! ஆனால் அதே சமயத்தில் மருத்துவத்துறை எவ்வளவு புனிதமானது என்பதை உணராது, பணம் சம்பாதிக்கின்ற துறையாக மட்டும் இதைக் கருதிச் சுயநலத்துடன் செயல்பட்டால் சொல்லொணாக் கர்மவினைகளை ஒவ்வொரு மருத்துவரும் சந்தித்தாக வேண்டும்.. என்பதையும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டிய சில ஆன்ம விளக்கங்கள் உண்டு! எந்த நோயையும் மருந்துகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாது.! எந்த நோயுமே சுகாதாரமற்ற நிலைகளாலோ, தொற்றுக் கிருமிகளாலோ மட்டும் வருவது அல்ல! ஆம்! இங்கு தான் மருத்துவருடைய ஆரம்ப ஆன்மீக மருத்துவக் கல்வி தொடங்குகின்றது.. பூர்வ ஜென்ம கர்ம வினைகளினால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்பதே வேதவாக்கு!

நோயானது கர்மவினைத் தொகுப்பின் விளைவாதலின் நாம் உண்ணும் மருந்துவகைகளும் புண்யத்தின் திரட்சியே! புண்ய சக்தி மூலமாகவும், தான தர்ம பகீரத சக்தி மூலமாகவும், அஸ்வினி மருத்துவ நட்சத்திர தேவ பூஜா பலன்களாலும் தான் எந்த நோய்க்கும் நிவாரணம் காண முடியும். வெளிப்பார்வைக்கு மருந்துகள், ஊசிகள், அறுவை சிகிச்சை மூலமாக நோய்கள் குணமடைவது போல் தென்பட்டாலும் இவையெல்லாம் வெளித் தோற்ற மாயைகளே என்பதை அனைவரும் உணர்ந்திடுதல் வேண்டும். நீங்கள் எவ்வித பூஜையையும் முறையாகச் செய்யாவிட்டாலும் பித்ரு லோகங்களில் உங்களைக் கரையேற்ற எந்நேரமும் பாடுபடும் உங்களுடைய மூதாதையர்களின் பூஜா பலன்களினால்தான் உங்கள் வாழ்க்கைச் சக்கரம் ஓடுகின்றது என்பதை இனியேனும் உணர்ந்திடுக!

அப்படியானால் டாக்டரிடம் போகலாமா? மருந்துகளை உட்கொள்ளலாமா? காயத்திற்கு டாக்டரிடம் சென்று கட்டுப் போடக் கூடாதா, ஊசி போட்டுக் கொள்ளக் கூடாதா? அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளலாமா என்றெல்லாம் அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்கத் தோன்றிடும். அனைத்தையும் கண்டிப்பாகச் செய்திடுதல் வேண்டும். ஏனென்றால் இந்த மனித உடலில் நாம் எத்தகைய நோய்களை அனுபவிக்கின்றோமோ அவற்றின் நிவாரணத்திற்கான மனித மருத்துவ அறிவுப் பூர்வமாகத் தரப்படுகின்ற மருந்துகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்!

வினைதீர, நோய் தீரும் ! வினையெச்சம் நோய்த் தொடர்ச்சி!

ஒவ்வொரு மருத்துவரும் உணர வேண்டிய இரண்டாவது இலக்கணப் பாடம் என்ன என்றால் நோய் வருவதற்கான கர்ம வினைகள் தீரும் வரை அந்த நோய் தொடரும்.. என்பதே! நோய்க்கு மூல காரணமான கர்மவினைகள் கழிந்து விட்டால் அந்த நோய் உடனடியாக நிவர்த்தியாகி விடும். இதற்கு நடுவில் மருந்து, மாத்திரை வடிவுகளில் உதவுவது தாம் நோய் நிவாரண புண்ய சக்தியாகும்..! கர்ம பரிபாலன விதிமுறைகளை மனதார முழுநம்பிக்கையுடன் நாம் ஏற்கும் வரை நோய் – டாக்டர்- மருந்து என்ற முச்சுழல் மாயைகளில் உழன்றுதான் ஆக வேண்டும்! இந்த சத்தியமயமான வேத உண்மையை உணர முடியாமற் செய்வதும் விதியாய் விளையாடும் உங்களுடைய கர்மவினைகளே! கர்ம விதியில் பரிபூரணமான நம்பிக்கை மலரும் வரையில், நம்மை நல்வழிப்படுத்துகின்ற மூதாதையர்களும், பெரியோர்களும், மகான்களும், சித்புருஷர்களும் கூட மருந்துகள், டானிக்குகள், அறுவை சிகிச்சைகள் மூலமாகத்தான் செயல்படுகின்றார்கள்.!

ஒரு சித்தர் பெருமானால் ஒரு சிறுதுளித் திருநீறு மூலம் எத்தகைய கொடிய வியாதிகளையும் குணமாக்க முடியும் என்று தெரிந்தால் அவரைச் சுற்றி லட்சோப லட்சம் மக்கள் சூழ்ந்துகொண்டு ஒரு பூஜையையும் செய்ய விடமாட்டார்கள்! திருநீறு இட்ட அந்த விநாடியே பரிபூரண குணம் என்றால் தாம் செய்த கொடிய தீவினைக் கர்ம வினைகளை யார்தாம் அனுபவிப்பது? எனவேதாம் மகான்கள் தங்கள் தெய்வீக சக்திகளை எளிதில் வெளிக்காட்டுவதில்லை! குருவருட் கடாட்சத்தால் பல அபூர்வ இறையனுபூதிகள் ஏற்படுமேயானால் அத்தகைய கர்மவினைகள் பஸ்பம் செய்யப்பட்டோ அல்லது அவற்றை சற்குருமார்களோ, மகான்களோ, தம்முள் ஏற்று அனுபவித்து அந்நோய்க்குத் தக்க தீர்வைத் தருகின்றார்கள்.

நோயாளியினுடைய பூஜா, புண்யசக்தியும், அவர்களுடைய மூதாதையர்களுடைய தபோபலனுமே மருந்தை அளிக்கின்ற மருந்துக் கடைக்காரர், தயாரிப்பாளர், இதனைக் கொணர்கின்ற Sales representatives  போன்ற அனைவருடைய பூஜாபலன்களும் ஒரு சிறிய மாத்திரையில் உறைந்து டாக்டருடைய புண்ய சக்தியும் அதில் சேர்ந்து ஒரு நோயை குணமாக்குகிறது..!

அப்படியானால் இருதய நோய், சர்க்கரை நோய், மூலநோய் போன்றவற்றுடன் ஆயுள் முழுவதும் வாழ வேண்டியதுதானா? இதுபற்றிய விளக்கங்களை இவ்விதழில் பிறிதொரு பகுதியில் அளித்துள்ளோம். குறிப்பிட்ட பெருங் கர்ம வினைகள் பெரும் தீவினைகளாக மாறி (உ.ம் பெண்ணை வாழ்க்கையில் ஏமாற்றி அநாதையாக்குதல்) இந்த மானிட உடலில் பரிகாரத்தை முடிக்க முடியாமல் பல பிறவிகளுக்கும் தொடருமேயானால் அதுவே ஆயுள் முழுதும் உள்ள நோயாக மாறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.!

புண்யச் சக்தியைப் பெருக்குவீர்!

எனவே ஒவ்வொரு மருத்துவருடைய பணி என்னவென்றால் தன்னுடைய புண்ய சக்தியைப் பல அறவழி முறைகளில் தினந்தோறும் பெருக்கிடுதல் வேண்டும். குறித்த ஹோரை நேரத்தில் தியானத்தில் அமர்ந்து குறித்த மந்திரங்களை ஓதி வழிபட்டு மருத்துவ சக்திகள் நிறைந்த அரச மரம், ஆலமரம், வேப்ப மரம், மகிழ மரம் போன்ற தல விருட்சங்களை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல்வேண்டும். ஒவ்வொரு நாளிலும் நோய் தீர்க்கும் தெய்வ சக்திகள் நிறைந்த செவ்வாய் ஹோரை நேரத்தில் குறித்த சில பூஜைகளை மேற்கொள்தல், மகத்தான நோய் தீர்க்கும் சக்தி நிறைந்த ஸ்ரீகருட காயத்ரீ மந்திரத்தை எப்போதும் ஜபித்தவாறு இருத்தல், நாள் முழுவதும் மானசீகமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மனதில் அற்புத தெய்வீக நீரோடையாக ஒலித்துக் கொண்டேயிருத்தல் போன்ற இறைப் பணிகளை நித்தியக் கடமையாகக் கொள்ள வேண்டும்! மேலும் தினந்தோறும் குறைந்தது 12 ஏழை நோயாளிகளுக்காவது இலவசமாக மருத்துவம் செய்து, மருத்துகளை அளித்தல் மிகமிக முக்கியமானதாகும்! இது தியான பலன்களை அளிக்கும்! இலட்சக்கணக்கான மதிப்புள்ள ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டுவதற்காக நோயாளிகளிடம் நிறையப் பணத்தைப் பெருங்கட்டணமாக வாங்குதல் என்பது தற்காலத்தில் பெருகி வருகின்றது.. இது சாபத்தையே பெற்றுத் தரும்! இப்பாவச் செயல்களால் சம்பந்தப்பட்டோரே பெருநோயாளிகளாகப் பிறப்பெடுத்து மருத்துவ வசதியின்றி வாடுகின்றார்கள்! என்னே இறைமாயை! இம்மாயையை நீக்கும் மாமருந்தே குருவருள்!

போதுமென்ற மனம் மருத்துவருக்கு மாமருந்து!

எந்த அளவிற்குத்தம் முறையான ஆசைகளை/விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மருத்துவரும் முடிவு செய்துகொள்ள வேண்டும். குடும்ப நிலையைப் பொறுத்து ஒரு கார், ஒரு வீடு, தம் பிள்ளைகளுக்கான கணிசமான அளவிலான, சேமிப்பு இவற்றைப் பெற்றவுடன் தன் வாழ்நாள் முழுவதுமே இலவச மருத்துவ சேவைக்காக/ இறைப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டால்தான் இறைவனே அவர்களுக்குப் பலவிதமான ஐஸ்வர்யங்களைத் தானே மனமுவந்து கேட்காமலேயே அளித்து விடுகின்றான்... பெரும் கட்டணத்தைப் பல நோயாளிகளிடம் கறந்து பெரிய பெரிய மருத்துவக் கட்டடங்களைக் கட்டுவதை விட ஓரளவு தன்னை வசதி செய்து கொண்ட பிறகு தன் வாழ்க்கையையே இலவச மருத்துவப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டால் இறைவன் அளிக்கின்ற ஐஸ்வர்யத்திற்கு முன்னால் இலட்சக்கணக்கான செலவில் கட்டப்பட்ட வீடோ, மருத்துவமனையோ ஒரு பொருட்டா என்பது தெளிவாகும்! இறைப் பகுத்தறிவுடன் சிந்தித்திடுக!

மேலும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் (specialist) தம் துறைக்குரிய தெய்வ மூர்த்தி அருள்பாலிக்கின்ற திருத்தலத்தை அறிந்துகொண்டு ஒவ்வொரு வாரமும்/பட்சமும் அங்கு சென்று முறையான வழிபாடுகளை மேற்கொண்டு தம்முடைய கைராசி/ஆன்மீக குணப்பாடுகளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.!

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
– தெய்வப் புலவர் திருவள்ளுவர்

சிறப்பான இருப்பிடம் இறைப்பீடமே!

சித்துக்காடு சிவாலயம்

ஆயிரம் நோயாளிகளைப் பார்த்து மருத்துவத்தில் தேர்வதை விட ஆயிரம் இறைத் தலங்களைத் தரிசித்து ஏழைகளின் நல்வாழ்விற்கான இறைப் பணிகளை/தான தர்மங்களை முறையாகச் செய்து வந்தால் நிச்சயமாக இறையருளால் அவர்கள் சிறப்படைவர். ஏனென்றால் மருத்துவ அறிவு என்பது வெளி உலகம் மூலமாக , புத்தகங்கள் / ஆராய்ச்சிகள் மூலமாகப் பெற வேண்டியது என்பது வெளிப்படையான உண்மைபோல் தோன்றினாலும் ஆழ்ந்த இறைபக்தி இருக்குமேயானால் இறைவனே அந்த பக்தி நிறைந்த டாக்டரின் மூளைச் செல்களில் அவ்வப்போது தேவையானவற்றைப் பதித்து விடுகின்றான். இவ்வரிய தேவசேவையை ஆற்றுகின்ற மருத்துவ தேவதைகளும் நிறைய உண்டு.

சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்துள்ள சித்துக்காடு திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதாந்த்ரீஸ்வர சிவலிங்கச் சுயம்பு மூர்த்தி முதுகுத் தண்டு சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வை அளிப்பதுடன் இத்துறை மருத்துவர்களுக்கு உரிய கைராசியையும், உத்தம மருத்துவ குணப்பாடுகளையும் பெற்றுத் தருபவர்! விதையுள்ள பழங்களின் பழச்சாறால் இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து (சாத்துக்குடி, ஆரஞ்சு, பேரீச்சம்பழம் etc…) ஏழைகளுக்கு முழுக்கனிகளைத் தானமாக அளித்து வந்தால் இவர்கள் தங்கள் துறையில் தெய்வீகச் சிறப்படைவார்கள்..!

சென்னை தக்கோலம் அருகே உள்ள மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரரே மூலம், அல்ஸர், குடல் அழற்சி போன்ற ரண/உஷ்ண/வயிறு சம்பந்தமான துறையினர்க்கு அருள்புரியும் மூர்த்தியாவார்! வயிற்றுப் பகுதி நட்சத்திர நாட்களான அஸ்வினி, பூரம், ஆயில்யம் ஆகிய நாட்களில் இங்கு மாக்கோலமிட்டு செம்மண் பூசி நாம் சங்கீர்த்தனம் பாடி வழிபட்டிட அவர்கள் தம் தொழிலில் சிறப்படைவர்!

நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தியைத் தருகின்ற அதி அற்புத மூர்த்தியே திருத்துறைப் பூண்டி அருகே உள்ள திருக்கடிக்குளம் எட்டுபட்டைச் சிவ மூர்த்தி! நரம்பு நட்சத்திர நாட்களான அஸ்வினி, மிருகசீரிஷம், மகம், பூராடம், பூரம், பூரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் இவ்வாலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வாழைப்பூ, பீர்க்கங்காய், தேங்காய் (தேங்காய் சாதம்) மரவள்ளிக் கிழங்கு, வெண்டைக்காய், குடை மிளகாய் போன்றவை கலந்த உணவினைத் தானமாக அளித்து வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தி பெறுவதோடு நரம்பியல் மருத்துவர்களுக்கும் உத்தம மருத்துவ குணப்பாடுகளும் கிட்டும்.!

பொதுவாக அனைத்து மருத்துவர்களுமே குறித்த நாளில் வழிபட வேண்டிய பொதுத் திருத்தலங்களும் உண்டு! குறிப்பாக ஒவ்வொரு மாத அஸ்வினி நட்சத்திர நாளில் தஞ்சை மாவட்டம் திருக்கடவூர் அருகில் திருமெய்ஞ்ஞானம் அல்லது திருக்கடவூர் மயானம் என்று அழைக்கப்படுகின்ற சிவத் திருத்தலத்திலுள்ள சுயம்புச் சிவலிங்க மூர்த்திக்கு அஸ்வினி தீர்த்தம், காவிரி, கங்கை, பம்பை போன்ற புண்ய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விசேஷமான ஜவ்வாது, பன்னீர் கலந்த விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.

தோல் சம்பந்தமான வியாதிகள் பெறுவதற்கும், தோல் மருத்துவ நிபுணர்கள் தங்கள் துறையில் சிறப்புடன் விளங்குவதற்கும் ஏற்ற திருத்தலமாக விளங்குவது திருவாரூர் அருகே நீடாமங்கலம் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள பூவனூர் ஸ்ரீபுஷ்பவன நாதர் சிவாலயமாகும்.! பாற்குளம் எனும் க்ஷீர புஷ்கரணி தேவ தீர்த்தம் உள்ளதலம்.!

வெண்குஷ்டமுள்ளோர் புஷ்பவன நாதருக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு செவ்வாய்க்கிழமை தோறும் இந்த தீர்த்தத்தில் நீராடியோ அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோ வழிபட்டு ஸ்ரீபுஷ்பவனநாதருக்கு வெண்ணிறப் பூக்களைக் கூடை கூடையாக லிங்கமே நிரம்பும் வண்ணம் சார்த்தி (மல்லிகை, ஜாதிமல்லி, சம்பங்கி போன்ற மணமுள்ள பூக்கள்) அனைத்தையும் ஏழைச் சுமங்கலிகளுக்கு புஷ்பதானமாக அளித்து நார்ப்பட்டு வஸ்திரங்களையும் இறைவனுக்குச் சார்த்தி ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் வெண்குஷ்டத்திற்குத் தக்க நிவாரணத்தைப் பெற்றிடலாம்.!

கண், காது, தொண்டை ஆகிய முத்துறை மருத்துவர்கள் (ENT Specialists) தங்களுடைய துறையில் சிறப்புடன் திகழ அருள்பாலிக்கின்ற மும்மூர்த்தி கணபதிகள் திருமயிலாடுதுறை அருகே நீடூர் சிவாலயத்தில் அருள்பாலிக்கின்றார்கள்.. சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி, ஜீவானந்த கணபதி, ஆகிய மூன்று கணபதி மூர்த்திகளையும் சுக்ல பட்ச (தேய்பிறை) திரிதியை திதியில் தரிசித்து மூன்று வர்ணங்கள் கூடிய புடவை, இரவிக்கை போன்ற பெண்களுக்கான வஸ்திரங்களை ஏழைச் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும், தானமாக அளித்துவந்தால் ENT துறையில் சிறந்து விளங்கி மகத்தான இறைப் பணிகளை ஆற்றிடலாம்!

காணாபத்ய மாமருந்து!

ஒருமுறை பாஸ்கர லோகத்தில் சூர்ய ஒளி பொங்கிப் பெருகிய போது அஸ்வினி மருத்துவ தேவர்கள் அதன் ஒளிப் பிரகாசத்தைத் தாங்க இயலாது அதற்குரித்தான மூன்றாவது நேத்ர சக்தியையும் திறக்க இயலாது திகைத்த போது அவர்கள் ஸ்ரீகணபதியைச் சரணடைந்திடவே அவரே ஹேரம்ப கணபதி மூர்த்தி அம்சத்தில் மூன்று கணபதி மூர்த்திகளாகத் தரிசனம் தந்தார்.. எனவே நித்ய தேவர்களும், ஆதித்ய அஸ்வினி மருத்துவ தேவர்களும் வழிபட்ட தலமாதலின் இங்கு அம்பிகை ஆதித்ய அபயப்பிரதாம்பிகையாக அருள்பாலிக்கின்றாள் அன்னை.

மருத்துவர்களின் கைராசி விருத்தியடைய நாற்காலியில் நற்குண சக்தி பெருகட்டும்!

மருத்துவர்கள் தாங்கள் அமர்கின்ற நாற்காலி/நோயாளிகளுக்கான நாற்காலி/பலகை/மேஜையானது தேக்கு, மா, பலா போன்ற சமித்து விருட்சங்கள் கூடிய மரத்தாலானதாக வைத்திட வேண்டும். இரும்பு நாற்காலியில் அமர்வதை விடநல்ல சமித்து விருட்சங்களாலான மர நாற்காலியில் அமர்வதே தேவ மருத்துவ சக்தியைப் பெருக்கும்! டாக்டர்கள் தினந்தோறும், தேக்கு, சந்தனம், மா, பலா போன்ற மரப்பலகையில் அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரமாவது ஸ்ரீகருட காயத்ரீ, ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மந்திரம், சம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகம்/ இடர்களையும் திருநெடுங்களப் பதிகம் போன்றவற்றை ஜபித்து அப்பலகையை தங்கள் நாற்காலியிலும்/ நோயாளிகளின் நாற்காலிகளிலும் வைத்து மருத்துவம் பார்த்தல் சிறப்புடையதாகும்.

மேலும் மருத்துவ மனைகளில் எங்கு நோக்கினும் இறைப்படங்கள் மிளிர்வதே இறை  நற்கதிர்களைப் பரப்பும்! குறிப்பாக ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் திரு உருவப் படம் ஒவ்வொரு அறையிலும் ஒளிர்ந்திட வேண்டும்.. மேலும் ஒவ்வொரு மருத்துவரும் வாரந்தோறும் வழிபட வேண்டிய சித்புருஷர்களின் ஜீவாலயங்களும் உண்டு! பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக மிளிர்கின்ற ஸ்ரீபடேசாஹிப் சித்தருடைய ஜீவாலயத்தை ஒவ்வொரு மருத்துவரும் அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வந்து தம் மருத்துவ சக்திகளை அவ்வப்போது ஆன்மீகப் பூர்வமாக விருத்தி செய்து கொள்ள வேண்டும்! மருத்துவர்கள் தம் துறையில் சிறப்புடன் விளங்குவதற்கு எத்தனையோ திருத்தலங்கள் உள்ளன..! இவற்றைப் பற்றி அறிய வேண்டுவோர் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் நேரடியாக விளக்கங்களைப் பெற்றுத் தம் கர்மவினைகளைக் களைவதுடன் பிறர் கர்மந் துடைக்கும் அறவழிகளை அறிந்து கடைபிடித்து புனிதமாக வாழ்ந்திட வேண்டுகின்றோம்!

அமுத தாரைகள்

1. எண்கள் (1,2,3....) நம் பாரத எண் கணித முறையே!

கலைவாணியினுடைய திருமொழி சம்ராஜ்யத்தில் ஆங்கில, லத்தீன், தெலுங்கு, கிரேக்கம், தமிழ், சமஸ்கிருத, ஹிந்தி, ருஷியன் அனைத்துமே ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருக் கண்களேயாகும்! செப்பு மொழி பதினெட்டுடையாள் என்று பாரதத் தாயைப் போற்றுவது போல இந்தப் பிரபஞ்சத்தின் பூலோக மொழிகள் மட்டுமன்றி தேவலோக அருட்கடாட்சத்தில் வருவதுதான் எண் கணிதமாகும். மேலும் கலியுகத்தில் நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி விட்டதாகவே ஆங்கிலக் கணித எண் முறை அமைந்துள்ளது! 1, 2, 3 என்பதான இதனை ஆங்கில எண் கணித முறை என்று சொல்வதே தவறு. நம்முடைய பாரதத் திருநாட்டில்தான் பூஜ்யம் முதல் 9 வரை அனைத்து எண்களுமே கண்டுபிடிக்கப்பட்டுச் சமுதாய எண்கணித வழக்கிற்கு அளிக்கப்பட்டன. எனவே உங்களுக்கு இன்றைக்கு ஆங்கில புத்தாண்டு தேதி நடப்பு வழக்க முறையாகத் தோன்றுவது நம் பாரத கலாசாரத்தில், மெய்ங்ஞான மூலாதாரமாகத் தோன்றியதே என்பதை இனியேனும் அறிந்திடுக!

ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திட்டை

2. பரத நாட்டியம் என்பது புனிதமான தெய்வீகக் கலையாகும்.. பணம், புகழ், கீர்த்தி ஆகியவற்றிற்குப் பேராசைப்படாமல் இறைவனுக்கே அர்ப்பணிக்கின்ற அரிய இறைத் தொண்டாக பரதநாட்டியத்தைக் கடைபிடிக்க வேண்டும். இருப்பினும் பரதநாட்டியத்தில் அறிந்தோ அறியாமலோ தாம் செய்த தவறுகளுக்கு பணம், அழகு, துர் ஆசைகள் காரணமாக செய்த இமாலயத் தவறுகளுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு பிராயசித்தமாக அமைவது இந்த காஞ்சனாம்ருத் சந்திர கிரகண காலமாகும்! இவர்கள் இந்நாளில் ஆலய விமானத்தில் சந்திரகாந்தக் கல் பொருத்தப்பட்டுள்ள மிகவும் விசேஷமான சிவத்தலமான ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இன்று சுவாமிக்குப் பட்டாடைகளைச் சார்த்தி வழிபட்டு அனைத்துப் பட்டாடைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும்.. வாழ்க்கையில் கிடைக்ககூடிய விக்ரம ஆண்டு மட்டுமே பெறக் கூடிய ஒரே ஒரு பிராயசித்த சந்தர்ப்பம் ஆகும்! இதனை நழுவ விடாதீர்கள். மேலும் நடனத் தொழில் புரிந்து கொண்டு குடும்ப சம்பாத்யத்திற்காக ஆபாசமான முறையில் நடனமாட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த சந்திர கிரகண காலத்தில் தாம் இத்தொழிலை இதோடு விட்டுவிடுவதாகச் சங்கல்பம் செய்து கொண்டு வேறு நல்லவாழ்க்கை முறையைத் தேடிக் கொள்ள வேண்டும்.

அக்னி தீர்த்தம் வயலூர்

3. லஞ்சம் மூலமாகப் பெறப்படுகின்ற தீவினைக் கர்மங்களை பஸ்பமாக்குவதற்கு ஜ்வலந்தி தீபாக்னி தான் தேவையானதாகும். இந்த ஜ்வலந்தி தீபாக்னி கிடைக்கப் பெறுகின்ற திருத்தலங்கள் தாம் திருஅண்ணாமலை, கஞ்சனூர் ஸ்ரீஅக்னீஸ்வர மூர்த்தி, வயலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் மற்றும் அக்னி தீர்த்தம் உள்ள தலங்களாகும். இதுவரையில் தாம் பெற்ற அதர்ம முறையிலான லஞ்சப் பொருட்களுக்குத் தக்க பரிகாரம் தேடும் வண்ணம் தாம் இதுகாறும் லஞ்சமாகப் பெற்றதை/ அனுபோகமாக அனுபவிப்பதை / பரிசுப் பொருட்களை ஏழைகளுக்கான அன்னதானம் /ஆடைகள், தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய் வகைகள், அக்னி சக்தி மிகுந்த கோதுமையிலான உணவுப் பண்டங்கள், திருஅண்ணாமலை போன்ற இடங்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திரிநூல், பசு நெய், கற்பூரம் போன்றவற்றில் கண்டிப்பாக முழுதுமாகச் செலவழித்திட்டால்தான் இத்தீவினைகள் ஓரளவேனும் பஸ்மமாகும்!

4. ஆங்கில மருந்துகளை விட ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகளை ஏற்பதே சிறப்புடையது. ஏனென்றால் இவற்றில் உள்ள மூலிகை மற்றும் இயற்கைப் பொருட்களுக்குத் தாமாகவே தீவினைகளை பஸ்பம் செய்யும் இயற்கை அருட்சக்திகள் நிறைய உண்டு.. எனவே நாம் எதையுமே உட்கொள்ளும் போது / அருந்தும் போதும் வெறும் நீராக இருந்தால் கூட அதன் தாத்பர்யத்தை உணர்ந்து மந்திரத் துதிகளை மானசீகமாக ஓதிடுதல் வேண்டும். நாம் உட்கொள்கின்ற ஒவ்வொரு பட்டாணிக் கடலையையும் கூடத் தூய்மைப்படுத்தி சிவசிவ ராமராம் மந்திரங்களை ஓதி உண்டால் தான் நம்முடைய உடலையும், உள்ளத்தையும், புனிதமாக வைத்துக் கொள்ள முடியும்.

5. இயற்கையாகவே ஆரோக்கியமான உடலை இறைவன் படைத்துத் தரும்பொழுது மனிதன் தான் பலவித ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கு / தீவினைகளுக்கு ஆளாகி, தன் உடலைத் தானே பாழ்படுத்திக் கொள்கின்றான்! எனவே பிறருடைய இனிமையான வாழ்விற்கு ஏன் உங்கள் உடலுக்கும் நீங்கள் இழைக்கும் தீங்கே உங்களுக்குச் சர்க்கரை நோயாக வருவதற்கான காரணங்களுள் ஒன்றென இனியேனும் உணருங்கள்.!

6. பூலோகத்தின் கடலைப் போல், வைகுண்டத்தின் பாற்கடலைப் போன்று, கரும்புச் சாறு கடல் என்ற ஒன்றுண்டு! விண்ணுலகில்! எவ்வாறு பாற்கடலில் பால் எப்போதும் நிறைந்திருக்கிறதோ, அதேபோல் இட்லக்ஷீராமிர்தத் தீர்த்தத்தில் கரும்புச் சாறு நிறைந்திருக்கும்! இதிலிருந்து தான் விண்ணுலக பூஜைகளுக்கான அபிஷேக கரும்புச் சாறு எடுக்கப்படுகின்றது.. இதில் சுயம்புவாகத் தோன்றியவரே கற்கடகேஸ்வரராகிய சிவலிங்க மூர்த்தியாவார். அருமருந்தம்மையான ஈஸ்வரியே இறைவனிடம் வேண்டிக் கரும்புச் சாறு தீர்த்தத்தில் தோன்றி கற்கடகேஸ்வர சுயம்பு மூர்த்தியை பூமியிலும் சுயம்புவாகத் தோன்ற வேண்டுமென்று அருந்தவம் பூண்டு வரம் வேண்டி நமக்காகப் பூலோகத்தில் இன்று திருந்துதேவன்குடியில் கற்கடகேஸ்வர சுயம்பு மூர்த்தி வழிபாட்டை நமக்கு அளித்துள்ளாள்.

சிரிகிரி பாறைகள் திருக்கழுக்குன்றம்

7. உலகின் பலநாடுகளிலும் குறிப்பாக ஸ்வீடன் அருகிலுள்ள ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் சிரிகிரி தெய்வீகப் பாறைகளை நாம் காணலாம். மலைப்பகுதிகளில் ஸ்ரீபெருமானந்த ஸ்வாமிகள், ஸ்ரீசேஷாத்ரி மஹான், ஸ்ரீபூண்டி மஹான், தங்கால் சுவாமிகள் போன்றோர் தவம் புரியும் போது இச்சிரிகிரிப் பாறை உள்ள இடத்தையே யோகத்திற்காகத் தேர்ந்தெடுப்பர்! ஏனெனில் இதில் நிறைந்துள்ள ரவீஸ்வராக்னியே பஞ்சபூத சக்திகள் சேர்ந்த இந்த மானுட சரீரத்தில் நிறைந்துள்ள மணீந்த்ர யோகச் சூட்டை மேலே எழுப்பி யோக பாவனைகளை அரவணைக்கின்றது. சிரிகிரி மார்த்தாண்ட சித்தர் பெருமான், ஸ்ரீஆதித்ய லோகத்தினின்று கொணர்ந்த திருக்கழுக்குன்றத்தில் உள்ள சுயம்பு சிரிகிரிப் பாறையில்தாம் ஸ்ரீநடன கோபால நாயகி ஸ்வாமிகள் தன் யோக பலத்தைப் பல்லாண்டுகளுக்கு அப்யாசித்தார். இராமேஸ்வரத்திலும் சில தெய்வீகப் பாறைகள் சிரிகிரி மார்த்தாண்ட சித்தபெருமானால் பாஸ்கர லோகத்திலிருந்து சுயம்புவாகத் தோற்றுவிக்கப்பட்டவையே!

8. இன்றைக்குப் பலரும் PF, GRATUITY, VRS, EX-GRATIA போன்ற ஓய்வூதியங்களைப் பல நிதி நிறுவனங்களில் இட்டு மூழ்கிப்போய் பணம் திரும்பி வராமைக்கான காரணங்களுள் ஒன்றே, அவர்கள் பெற்ற ஊதியத்தில் அத்தகைய பகுதியானது அலுவலகத்தில் முறையாக சம்பாதிக்காமையாலும் / ஆபீஸிற்கு முறையாகச் செல்லாமையாலும் அலுவலக நேரத்தை வேறு சொந்தப் பணிகளுக்காகச் செலவிட்ட வகையைச் சார்ந்ததாகும். எனவே நான் அந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டேன், நஷ்டமாகிவிட்டது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். நீங்கள் முறையாகச்  சம்பாதிக்காத பணமும், ஒழுங்காக உழைக்காது பெற்ற ஊதியமும் இவ்வாறுதான் நஷ்டமடையும் என்பதை உணருங்கள்! இவ்வாறான பிஞ்சகத் தோஷத்தைத் தீர்ப்பதற்கான பரிகார நித்யப் பூஜையாக அமைவதே தினசரி கோயில் கலச தரிசனமாகும்.

ஸ்ரீரவீஸ்வரர் திருத்தலம் வாங்கல்

9. கரூர் அருகே வாங்கல் எனும் ஊரில் ஸ்ரீரவீஸ்வரராக ஈஸ்வரன் அருள்பாலிக்கும் சிவத் தலத்தில் தை மாதம் முதல் தேதியன்று சுவாமிக்கு சிகப்பு அரிசி கலந்த பசும்பாலால் அபிஷேகம் செய்து ஆரஞ்சு நிறப் பட்டாடைகளைச் சார்த்தி, பட்டாடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் தீராத தோல் நோய்களால் அவதியுறுவோர் தக்க நிவாரணம் பெறுவர்! சூரிய (ரவி) வாரமான ஞாயிறு தோறும் இப்பூஜையை முறையாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்து வருதல் வேண்டும்.

பௌர்ணமி : 9.1.2001 செவ்வாய் விடியற்காலை 5.30 மணி முதல் இதே நாள் நள்ளிரவு 1.54 மணி வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 9.1.2001

நித்ய கர்ம நிவாரணம்

1.1.2001 – வள்ளி, தெய்வயானைக்குச் சிற்றாடை சார்த்தி சம்பங்கி மாலை அணிவித்து குழி ஆப்பம் தானம் – மனைவி மூலமாய் சொத்து சேரும்.

2.1.2001 – சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்வதற்கு வாழை நார் தயாரித்து தானமாய் அளித்து சுமங்கலிகளுக்கு புஷ்பம் கொடுத்திடில் உத்தியோகத்தில் பெண்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வரும்.

3.1.2001 – தன் மகள் விரும்பிய மாப்பிள்ளையை விடுத்து வேறொரு மாப்பிள்ளை பார்க்கும் தாய், தந்தையர் மனம் திருந்தி நல்ல முடிவை எடுக்கும் நாளிது.

4.1.2001 – மைத்துனன் அண்ணி மீது ஆசைப்படுவதை மறக்க வேண்டிய நாளிது. மனம் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்கும் நாளிது.

5.1.2001 – காமவெறியால் தந்தையே தன் மகளைத் துன்புறுத்தும் நாளிது. தந்தை திருந்தாவிட்டால் தண்டனை மிக அருகாமையில் உள்ளது என்பதை அறியவும்.

6.1.2001 – குழந்தையே இல்லாத தம்பதியர் எப்படியாவது குழந்தையை அடைய வேண்டும் என்று தவறான மார்க்கத்தில் செல்லத் தூண்டும் நாளிது.. கவனம் தேவை.

7.1.2001 – நாடு விட்டு நாடு போய் இருப்போர் உத்தியோக சுக வாழ்விற்காகத் தம் உடற்புனிதத்தை இழக்கும் சஞ்சல நாளிது, கவனம் தேவை

8.1.2001 – ஒரு பெண்ணை இரு நண்பர்கள் காதலிக்கும் நாளிது. இருவரும் இன்றிலிருந்து காதலை மறந்து விடுவது நல்லது, இல்லையேல் பெருத்த ஆபத்துகள் விளையக் கூடும்.

9.1.2001 – சித்தப்பா பெண், பெரியப்பா பையனாகிய அண்ணனைக் காதலில் வீழ்த்தும் நாளிது. தர்ம நெறியாக அண்ணன் தங்கை முறையோடு வாழ்வதே புனிதமானது.

10.1.2001 – ஆறு, கடல், நதி போன்ற இடங்களில் இன்று குளிக்கப் போவதை முடிந்த மட்டும் தவிர்க்கவும்., சறுக்கி விழச் சந்தர்ப்பம் உண்டு!

11.1.2001 – வயதானவர்கள் இன்று நீராடும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.

12.1.2001 – நண்பர்கள் அழைத்தால் ஆறு, கிணறு, குளம், கடல் இவற்றில் குளிப்பதற்கு செல்லக் கூடாத நாளிது, கவனம் தேவை.

13.1.2001 – இன்று கவனக் குறைவால் முக்கிய சாவியைத் தொலைக்கும் நாளிது, மிகுந்த கவனம் தேவை.

14.1.2001 – காதல் கடிதத்தால் தொல்லை வரும் நாளிது, காதல் கடிதம் எழுதித் தொல்லையில் மாட்டிக் கொள்ளாதீர்.

15.1.2001 – குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் , அவர்கள் செய்யும் சேட்டையால் பெரியவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும்.

16.1.2001 – இன்று வெளிநாட்டுப் பயணம் சரியான வேலையில் அமர்த்திடாது.. முடிந்தால் மாற்றி அமைத்துக் கொள்வது நலம் தரும்.

17.1.2001 – இன்று யாருக்காகவும் பணம் வாங்கித் தந்திடாதீர், திரும்பிப் பணம் வராது.

18.1.2001 – சினிமா படத்தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் சலசலப்பு வருகின்ற நாளிது, கவனம் தேவை.

19.1.2001 – சிரிப்பு நடிகர்கள், நடிகைகள் இன்று சிரிக்க முடியாமல் போகின்ற நாள், எந்த காரியத்திலும் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

20.1.2001 – தம்பி/அண்ணன்,அக்கா/தங்கைகளை பொய் சொல்லி ஏமாற்றும் நாளிது, அக்கா, தங்கைகளே! கவனம் தேவை.

21.1.2001 – கணவன்மார்கள் மனைவியிடம் பொய் சொல்லும் நாளிது, முடிந்த மட்டும் ஆண்கள் பொய் சொல்லுவதைத் தவிர்த்தல் நல்லது.

22.1.2001 – மௌனமாய் இருந்தாலும் பொறுமையை சோதிக்கும் நாளிது, உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

23.1.2001 – மதுவால் மதியையும் மானத்தையும் இழக்கும் நாளிது, கவனம் தேவை.

24.1.2001 – திருமணம் ஆகாமல் குண்டாக இருக்கின்ற பெண்கள் கோதை கனம்புல் உண்ணா நோன்பு (விரதம்) இன்று தொடங்கி தொடர்ந்து 12 அமாவாசை இருந்திடில் உடல் குறைந்து நல்ல வரன் அமைய வழியுண்டு.

25.1.2001 – மனைவியைவிடக் குள்ளமாய் இருக்கின்ற கணவன்மார்கள் இன்று மனைவியை சந்தேகிக்கின்ற நாளிது, வீணான சந்தேகப் பேயை வளர்க்காதீர்கள்.

26.1.2001 – மனைவியின் தார்மீக சம்மதம் இல்லாமல் கணவன் தன் இச்சையை பூர்த்தி செய்து கொள்வது இன்று ஆபத்தைத் தரும்.

27.1.2001 – அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிடில் ஆணுக்கோ பெண்ணிற்கோ அற்பமான மன சஞ்சலம் ஏற்படும் நாளிது. இன்று செய்கின்ற தவறு தீராப் பழியை வாங்கித் தரும், கவனம் தேவை

28.1.2001 – இன்று மாமனார், மாமியாரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் நாளிது, கணவன் மனைவி பொருட்படுத்தாமல் இருப்பது இருவரிடையே அன்பை வளர்க்கும்.

29.1.2001 – கைக்குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் பால் ஊட்டுதல் வேண்டும்., குழந்தைக்கு புரை ஏறுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும் நாளிது, கவனம் தேவை

30.1.2001 – சாமி ஆடி குறி சொல்கின்றவர்கள் இன்று கவனமாய் இருத்தல் வேண்டும். தேவையில்லாமல் தான் தோன்றித் தனமாய் உதிர்க்கின்ற வார்த்தைகளால் உபத்திரவம் வருகின்ற நாள் இது. கவனம் தேவை

31.1.2001 -  இன்று பசுமாட்டிற்கு பொலி காளை புணர்வதைத் தவிர்த்தல் நலம்.. இல்லையேல் செங்கண்தான் அதிகம் பிறக்கும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam