அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆண்டாள் திருக்கல்யாணம்

பெரியாழ்வாரிடம் அருள் வாசந்தனை, அவர்தம் வளர்ப்பு மகளாகத் தெய்வத்திரு அருளாணையால் ஓர் அரிய இறைவாழ்வைப் பெற்ற சூடிக் கொடுத்த சுடர் நாச்சியாரான ஸ்ரீஆண்டாள் தேவி, திருவரங்கனின் திருப்பாதங்களையே வேண்டி, வாழ்ந்து ஸ்ரீரங்கனையே மணம் புரிந்த அற்புதமான வரலாற்றை நாமறிவோமல்லவா! ஆலயங்களில் தெய்வமூர்த்திகளின் பல திருக்கல்யாண உற்சவங்கண்டு தரிசித்து ஆனந்தம் அடைகின்றீர்களன்றோ! ஸ்ரீவள்ளி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதுலுக்க நாச்சியார், ஸ்ரீதுளஸி தேவியின் தெய்வீக சரிதங்கள் புகட்டும் பாடம் என்னவெனில் எந்த ஒரு மனிதனும் சுயநலமற்ற தியாகங்கள் கூடிய இறைப் பணிகள் நிறைந்த ஒரு தெய்வீகமான வாழ்க்கையைப் பெற்று இறைவனை அடைகின்ற நல்மார்க்கமும் மனித வாழ்க்கையில் உண்டு என்பதை உணர்த்துவதற்காகத்தான்!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

இதனால் தான் மனிதப் பிறவி பெறுதற்கரியதாக அமைந்துள்ளது. ஆயிரங்காலத்துப் பயிராகச் சிறப்புடன் போற்றப்படுகின்ற திருமணம் என்பது மனித வாழ்வின் புனிதமான பருவமாகும். தற்காலத்தில் பெரியோர்களின் ஆசியை மதிக்காது ஜாதக ரீதியாகப் பொருத்தங்களைப் பாராது அவசர கோலத்தில் திருமணங்களை நடத்துவதாலும் அரைகுறை ஞானத்துடன் பக்தி, சிரத்தையின்றி ஜோதிடம் மூலம் வருமானத்தை ஈட்டுகின்ற ஒரே குறிகோளுடன் பலரும் ஜாதங்களைக் கணிப்பதாலும்தான் கணிப்பு தவறி திருமண வாழ்வில் எத்துணையோ துன்பங்கள் ஏற்படுகின்றன. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது முக்காலும் உண்மையே! இதன் உண்மை பொருள் என்னவெனில் யார், யாரை மணந்து கொள்வது என்பதை அந்தந்த ஜீவ அணுக்களே பிறப்பிற்கு முன்னால் முடிவு செய்து தான் பூலோகத்திற்கு வருகின்றன. அதாவது ஒருவருடைய கணவன்/மனைவி என்பது பிறப்பிற்கு முன்னரேயே தீர்மானாக அவரவர் விதியாக எழுதப்பட்டு விடுகின்றது. எனவே அவரவருக்கு அமைந்த திருமண வாழ்க்கையையே தெய்வீக இணைப்பாக ஏற்று மனத்திருப்தியுடன் வாழ்ந்திட வேண்டும். இது படிப்பதற்கு ஒரு தத்துவம் போலத்தான் தோன்றும். இதனை நடைமுறையில் கொணரத்தான் தெய்வ மூர்த்திகளின் தரிசனமும், கல்யாணத் திருக்கோலக் காட்சியும் நமக்குப் பெரிதும் உதவுகின்றன..!
இறைவனின் முன் நிறைமணம்!
ஆலயங்களில் தெய்வத்தின் திருபார்வையின் முன்னால்தான் திருமணங்கள் நடைபெற வேண்டும். மேல் உலகங்களில் பூலோகத் திருமணத்தை ஜீவ அணுக்களின் புனிதமான அன்புப் பிணைப்பாகப் போற்றுவதால்தான் எத்துணையோ நல்தேவதைகள் அனைத்துத் திருமணங்களின் போதும் பிரசன்னமாகின்றன. இனிய நாதஸ்வர, மத்தள, ஜால்ரா ஒலிகள், திருமண மந்திரங்களின் பீஜாட்சர ஒலிகள், திருமணச் சடங்கிற்கான ஹோமத்தில் எழுகின்ற தெய்வீகப் புகை, பெரியோர்களின் ஆசி, அம்மி, நுகத்தடி, மருதாணி, மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்களரமான பொருட்களிலும் திருமண தேவதைகள் உறைந்து நமக்கு அருள் ஆசிகளை வழங்குகின்றன. ஆனால் தற்காலத் திருமணங்களில் தாலி கட்டுவதற்கு முன்னரேயே தம்பதிகளை ரிஸப்ஷன் எனும் பெயரில் சேர்த்து உட்கார வைப்பது போன்ற தெய்வீகத்திற்கு ஒவ்வாத வழக்கம் நடைமுறையில் நிலவுதாலும், திருமணத்திற்குரித்தான உரிய மந்திரங்கள் அனைத்தும் பரிபூரணமாக, முறையாக பக்தி சிரத்தையுடன் ஓதப்படுவது குறைந்து வருவதாலும்தான் பலவிதமான இடர்ப்பாடுகள் திருமண வாழ்க்கையில் தொடர்கின்றன.
இத்தகைய தோஷங்களுக்கு நிவர்த்தியாகத்தான் ஆலயங்களில் தாலி கட்டுகின்ற வைபவம் நடைபெற்றிடில் விவாஹ நல்தேவதைகள் அனைத்தும் ஆலயங்களில் குழுமி மேற்கண்ட தோஷங்களுக்கு நிவர்த்திதனை அளிக்கின்றன. திருமண தேவதைகளிலேயே பிரத்யட்ச தேவதாமூர்த்திகள் பலர் உண்டு. அமுத நந்தியா தேவ மூர்த்திகளான இவர்கள் திருமணச் சடங்குகளிலுள்ள குறித்த சில வைவங்களின்போதுதான் பிரசன்னமாகின்றனர். அந்தச் சடங்குகள் நடைபெறாவிடில் இந்தப் பிரத்யட்ச மூர்த்திகளின் கருணைக் கடாட்சம் பலருக்கும் கிட்டாமலேயே போய்விடும். இதனால் தான் சந்ததியின்மை, துர்மரணம் போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் பாமர தம்பதியரும் சாதாரணமானோரும் இந்த அனுக்கிரகங்களைப் பெற வேண்டுமாயின் என் செய்வது? மாதந்தோறும் உத்தமமான பூர நட்சத்திரத்தன்று ஸ்ரீஆண்டாளுக்கு எளிய முறையிலேனும் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்து தம்பதியராக குடும்ப சமேதராக தரிசித்து தாங்களே தொடுத்த பூச்சரங்களை மஞ்சள், வெற்றிலை, பாக்குடன் தானமாக ஏழைச் சுமங்கலிங்களுக்கு அளித்திடில் இந்த அமுத நந்தியா தேவதைகளின் ஆசிகளைப் பெற்றிடலாம்.
திருமணத்தின் போது பெற இயலாத இந்த தேவதா ஆசீர்வாதங்களை, கருணைக் கடாட்சக் கிரணங்களை, ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண உற்சவம் பெற்றுத் தருகின்றதென்றால் இதற்காகத்தானே சாதாரண மக்களுக்கும் திருமண மந்திரங்களின்/ சடங்குகளினால் கிட்டுகின்ற அனுக்கிரஹ சக்திகளைப் பெற்றுத் தருவதற்காகத்தானே ஸ்ரீஆண்டாளின் அவதாரம் ஏற்பட்டது என்பது சொல்லாமலே விளங்குமன்றோ தம்பதியிரிடையே உத்தமமான அன்பைப் பெற்றுத் தரும் பூஜை இது.
இடர்களையும் திருவிடந்தை! சென்னை அருகே திருவிடந்தை என்னும் தலத்தில் பெருமாள் தினமுமே திருக்கல்யாணக் கோலம் பூண்டு சேவை சாதிக்கின்றார். முற்காலத்தில் தினந்தோறும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெற்ற திருக்கோவில் இது! பலவிதமான திருமண தோஷங்கட்கும் நிவர்த்தியளிக்கின்ற மிகவும் அற்புதமான திருத்தலம். இப்பெருமாளுக்குத் தாமே தொடுத்த மாலைகளைச் சூட்டி பிரசாதமாகப் பெற்று இல்லத்தில் வைத்திருக்க சகலவிதமான திருமண தோஷங்கட்கும் நிவர்த்திகளைத் தந்து, இல்லற வாழ்வில் மனக் கசப்பு/ வேறுபாடுகளுடன் வாழ்வோர்க்கு கிலேசங்களை, குழப்பங்களை, கருத்து வேற்றுமைகளை நிவர்த்தி செய்து சாந்தமான திருமண வாழ்க்கையைப் பெற்றுத் தரக் கூடிய அபூர்வமான திருத்தலம்!

புத்தாண்டுச் செய்தி

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ R.V வெங்கடராமன் அவர்கள் அருள்கின்ற புத்தாண்டு அமுத மொழிகள்.!
சற்குருவைப் பெறுதல் என்பது இறை தரிசனம் போல் மிகவும் உத்தமமானது ஆகும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் உத்தம சற்குருவைப் பெற்ற சற்குரு அருளாளர் ஒருவரையே நாம் சற்குருவாகப் பெறுதல் என்றால் அதன் தெய்வீக மகத்துவத்தை என்னென்று எடுத்துரைப்பது? இவ்வகையில் ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருள் அரவணைப்பில் ஆனந்தித்து இன்று அவர்தம் அருட்கடாட்சத்தால் கலியுகத்தில் நம்மைக் கரையேற்ற வந்துள்ள நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ R.V வெங்கடராமன் அவர்கள் எதிர்வரும் துன்பங்களை எளிதே சுட்டிக்காட்டியும், அனைத்து இன்ப துன்பங்களையும் நம் கர்ம வினைகளின் விளைவுகளென ஏற்க வேண்டும் என்று பல்வகையான அருள் மொழிகளால் வலியுறுத்தி வருகின்றார்கள். வருகின்ற ஆண்டிற்கான புத்தாண்டு அருள் மொழிகளாக அவர் அருளுவதாவது. நம்மில், பெரும்பாலானோர் வாழ்க்கையில் ஆங்கில தேதி முறைகளே பெரிதும் பயன்படுத்தப்படுவதால், இதனையும் புத்தாண்டாக ஏற்பதில் தவறில்லை. உண்மையில் தமிழ் வருட புத்தாண்டுக்குரிய விசேஷமான கிரஹ சஞ்சாரங்களைக் கொண்டு மட்டுமல்லாமல் தட்சிணாயன, உத்திராயண அம்சங்களையும் சோதித்துத் தான் எந்தவொரு ஆண்டைப் பற்றியும் எடுத்துரைக்க முடியும். தமிழ் வருட கிரஹ சஞ்சார பலா பலன்களைத் தட்சிணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனப் பகுதிகளாகப் பிரித்தார்கள். இதில் ஏறக்குறைய ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஒவ்வொரு தமிழ் வருடத்தின் உத்திராயணப் புண்ணிய காலம் அமைகின்றது என்பதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் தமிழ் வருடத்தில் உத்திராயண சூரிய அயனகதியை ஒட்டிச் சொல்வார்கள்.  எனவே, 1999ஆம் ஆண்டு புத்தாண்டுச் செய்தி அம்சங்கள் பகுதான்ய ஆண்டின் உத்திராயண கிரஹ சஞ்சாரங்களை ஒட்டியவையே ஆகும்.
1. இவற்றையெல்லாம் பலாபலன்களாக எண்ணாதீர்கள். உங்கள் கர்ம வினைகளுக்கேற்ப நீங்கள் எதிர் நோக்க வேண்டிய விளைவுகளுக்கு இனிய நல்பிராயச்சித்தங்களைச் செய்வீர்களாக! வாடகை வீட்டில் வாழ்வோர் புது வீடு வாங்குவதற்கான  குணாதிசயங்கள் காணப்படுகின்றன. பகுதான்ய ஆண்டிற்குள் அதாவது 15.4.1999க்குள் புது வீட்டை நிச்சயமாகப் பெற்றாக வேண்டும். இல்லாவிடில் புது வீடு வாங்குவதில் பல இன்னல்கள் ஏற்படும். எனவே புதுவீடு, தொழிற்சாலை, நிலம், கட்டிடம் வாங்குவோர் கண்டிப்பாக பகுதான்ய ஆண்டில் முடிப்பதே நல்லது.
2. 1999ஆம் ஆண்டிற்குரித்தான கிரஹ சஞ்சாரங்கள், பகுதான்ய உத்திராயண காலம், இதற்கடுத்த பிரமாதி தட்சிணாயன காலம் போன்ற அயன அம்சங்களைக் கொண்டுள்ளவை என்பதை அறிதல் வேண்டும் கொடுக்கல் வாங்கலில் நாணயத்தையும், கௌரவத்தையும் இழக்கின்ற வாய்ப்புகள் அதிகமாதலின் கடன் வாங்குவதிலும், கொடுப்பதிலும் ஜாக்கிரதையாய் இருத்தல் வேண்டும்.
3. பருத்தி மற்றும் இதர துணி வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் நன்கு தெரிந்தவர்களாலேயே ஏமாற்றப்படுவர். எனவே, நன்கு அறிமுகமானவர்களிடம் கூட கவனமாக இருத்தல் நலம்.
4. அனைத்து விதமான உணவுப் பொருட்களும், தானியங்களும் பலவிதமான விலை மாறுதல்களுக்கு உள்ளாகுமாதலின் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
5. ஒரு நிலையான வியாபாரம் இருக்காது. இரும்பு வியாபாரிகள் பலவிதமான பிரச்னைகளுக்கு உள்ளாவார்கள்.
6. எண்ணெய் வியாபாரிகள் இயன்றவரை கடன் கொடுத்தலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ரொக்கம் சம்பந்தப்பட்ட முழு ஆர்டர்களை மட்டும் ஏற்று நடத்துதல் நன்று. தரக்குறைவான எண்ணெயால் மதிப்பு கெடக்கூடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அளவுக்கு மீறி சரக்கை ஏற்றிக் கொள்ளாதீர்கள். இதனை ஜோதிடக் கணிதமாக எண்ண வேண்டாம். எண்ணெய் சம்பந்தப்பட்ட கர்ம வினைகள், 1999ஆம் ஆண்டில்தான் தங்கள் கர்மவினைகளைக் காட்ட இருக்கின்றன. மலைத் தலங்களில் படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

கருடதீர்த்தம் கருடமங்கலம்

7. இரும்பு சம்பந்தப்பட்டோருக்கு இது நிலையில்லாத வருடமாகும். விலை மாற்றங்கள் மிகவும் அதிகரித்தோ அல்லது அடிமட்டமாகக் குறைந்தோ தொழிலில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உண்டாக்கும். ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிச் சன்னதி கொண்டு மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தலங்களில் ஊனமுற்றோர்க்குக் கறுப்பு அல்லது கருநீல ஆடைகளைத் தானம் அளிப்பதன் மூலம் ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.
8. வேலையின்மையாலும் தகுந்த பதவி கிட்டாமையாலும் இடைத்தரகர்கள்தான் நன்கு ஏமாற்றி நஷ்டத்தை உருவாக்குவார்கள். சக்கரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தலங்களில் (சிதம்பரம், திருவாரூர்) பச்சரிசி மாவினால் அறுகோண கோலமிட்டு ஏழைகளுக்குத் தேவையான படுக்கைத் தலையனைகளை அளித்து வருவது சிறப்புடையது.
9. காகிதத் துறையில் தீ சம்பந்தமான இழப்புகள் ஏற்படுமாதலின் அக்னிக்குரிய செவ்வாய் கிரஹத் தலங்களில் (வைத்தீசுவரன் கோயில்) அடிப்பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும்.
10. மக்களைக் கடத்தும் மதியீனம் பெருகும். திருமணங்களில் ஏமாற்றுதல், பங்கு பிரித்தலில் கடத்தல், மிரட்டல்கள், பிள்ளைகள் காணாமல் போதல் போன்று பலவிதமான அநாகரீகச் செயல்கள் நடைபெறும். எனவே சகுனங்களை நன்கு கடைபிடித்தும், நல்ல நேரம் பார்த்தும் இதனைச் செய்திடல் வேண்டும்.
11. மாணவ, மாணவியருக்கு என்ன தான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் குறைவான மதிப்பெண்களே கிட்டும். அதிகப்படியான தெய்வீக வழிபாடு தான் கரை சேர்க்கும்.
12. திருமணத் தடங்கல்கள் நிறைய ஏற்பட வாய்ப்புண்டு. பகுதான்ய வருடத்திற்குள் திருமணங்களை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் காலங்கடத்தப்படுகின்ற திருமண வாழ்க்கை பொய்த்து விடும். வாழ்க்கை நிம்மதியே தராது.
13. காதல் திருமணங்களைத் தவிர்க்கவும். உண்மையான அன்பு இல்லாமல் ஏமாற்றப்பட்டு இழிநிலைக்கு ஆளாகாதீர்கள். ஒரு முகம், ஆறு கரங்களையுடைய முருகப் பெருமானை நேர்த்தி வைத்து வணங்கி வந்தால் தக்க பாதுகாப்பு கிட்டும்.

ஸ்ரீசக்கரம் சிதம்பரம்

14. மருத்துவர்களுக்கிடையே போட்டி, பொறாமை, சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவரவர் தம்முடைய கடமையைச் செய்து கருட தீர்த்த தலங்களில் வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2) நீராடி ஏழைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களைக் குறிப்பாக வேக சக்தி கொண்ட முந்திரி, திராட்சை போன்ற பண்டங்களைத் தானமாக அளித்து வர வேண்டும்.
பொதுவாக 1999ஆம் ஆண்டில் லாங்குலா ஸ்தோத்திரம் என்ற அற்புத துதியையும், நவக்கிரஹத் தமிழ்த் துதியுமான வேயுறு தோளி பங்கன் என்ற துதியையும் 9 தீபங்களை ஏற்றி அதன்முன் துதித்து வந்தால் அதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் பாலபருவ குருகுல வாச அனுபூதிகள்....
அந்த ராஜஸ்தான் பகுதியில் சிறுவனுக்கு ஒரு யோகியின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தாரல்லவா பெரியவர்! திருஅண்ணாமலை, கேதார்நாத், சதுரகிரி மலை, கொல்லி மலை போன்ற எத்தனையோ திருத்தலங்களில், சிறுவனுக்குப் பெரியவரின் அனுக்கிரஹத்தால் எத்தனையோ சித்தர்களின் தரிசனம் கிடைத்தது. இன்னும் சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான மகான்களின் தரிசனம் கிடைத்தது என்றே இறை ஆணையாகச் சொல்ல வேண்டும். திருஅண்ணாமலையில் ஈசான்ய கோணலிங்க தரிசனப் பகுதியில் உள்ள குற்ஞ்சடைத் தீர்த்தப் பாறையை சற்றே விலக்கிப் பார்த்திடவே, சிறுவன் அதனுள்ளே நூற்றுக்கணக்கான சித்தர்கள் குறுக்கும் நெடுக்குமாய் அமர்ந்து தவம் புரிந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டான். ஆனால் இப்பாறையைத் திறந்த பெரியவர் ஒரு சில நொடிகளிலேயே திருப்பித் தள்ளி மூடிவிட்டார்.
“ஒரு சித்தனைப் பாக்குறதே ரொம்ப கஷ்டம். அதுவும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவங்களைச் சேர்த்து பாக்குறதுண்ணா அதுக்குக் குருவோட அருள் கண்டிப்பா வேணும். அதுவும் இவங்களை ஒரு நொடி பார்த்தாலே சும்மா லெட்சக்கணக்கான வோல்ட் மின்சாரம் பாயற மாதிரி தெய்வ சக்தி வந்து சேரும்டா! ஆனா இதை உடம்பு தாங்கணுமே! என்ன பண்றது! இதுக்குத்தான் உன்னை வெறுங்காலோட, சட்டையில்லாமல் திருஅண்ணாமலையை மாஞ்சி மாஞ்சி கிரிவலமாய்ச் சுற்றச் சொன்னேன். ஆனால் நீ எங்கே? நான் சொல்றதையே கேட்கிறது கிடையாது...”
................. சிறுவன் திகைத்து நின்றான்.. “வாத்தியார் என்ன சொல்லி நாம் எத செய்யாம விட்டோம்?”
சிறுவனுக்குக் கண் கலங்கியது. இதற்குள் சிறுவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு எங்கோ அழைத்துச் சென்றார்... பெரியவர், போகும் வழியெங்கும் ஒரே திட்டு மயம்....
“டெய்லி ராயப்பேட்டையிலே அங்காளி ஆத்தாவை 1008வாட்டி சுத்தி வாடா என்று சொன்னேன்.. ஒழுங்கா செஞ்சியா? வாரத்துக்கு ஒரு வாட்டியாச்சும் கிரிவலம் வரணும்னு சொல்லியிருக்கேன். செஞ்சியா? மாதத்துக்கு ஒரு வாட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குளிக்கனும்னு சொன்னேன் செஞ்சியா?”
சிறுவன் ஓவென்று கதறினான்.. “என்ன வாத்யாரே? நீ சொல்லி எது நான் செய்யலை? ஏதாச்சும் ஒண்ணு சொல்லு பார்க்கலாம்!”
சிறுவன் மிகுந்த தைரியத்தை வர வழைத்துக் கொண்டு கேட்டே விட்டான். பெரியவர் திடுக்கிட்டு நின்று விட்டார். அல்லது அப்படி நடித்தாரோ! அதுவும் புரியவில்லை....
“இன்னிக்கு அங்காளி ஆத்தா கோயில்ல 1008 வாட்டி சுத்தினியா?”
சிறுவனுக்குப் பொங்கிய விழிகளினூடே ஒரு புன்சிரிப்பு உதிர்ந்தது. “நம்மதான் இப்ப திருஅண்ணாமலையில் இருக்கோமே! நான் எப்படி அங்க போறது?”
“ஏன் போக முடியாது? நீ, இந்தக் கிழவனை நம்பறவன். இவன் சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் நம்பறவன்! அப்படின்னா, தினமும் அங்காளி ஆத்தாவை வலம் வந்தாகணும்னா என்ன அர்த்தம்? நீ, திருஅண்ணாமலையில் இருந்தாலும் சரி, காசியில் இருந்தாலும் சரி, இராயபுரத்திற்குப் போய் ஒரு வாட்டியாவது தரிசிச்சே ஆகணும் ..”
“அது எப்படி முடியும் வாத்தியாரே? ”
“ஏன் முடியாது ? இங்கே பார் ..”என்று கூறியவாறே தம் வலது உள்ளங்கையைப் பிரித்துக் காண்பித்திடவே, பெரியவர் உள்ளங்கையில் ராயபுரம் அங்காள அம்மன் கோயில் தெரிந்திட பெரியவர் வேக வேகமாக சுற்றி வருவதும் தெரிந்தது. அடுத்த நொடியில் ராமேஸ்வரம் ஆலயம் தெரிந்திட ராமேஸ்வரம் தீர்த்தத்தில் அவர் நீராடுவதையும் கண்டான். பெரியவர் சிரித்துக் கொண்டே, “இப்படித் தாண்டா போகணும்! முதல்ல என்னை முழுசா நம்பினா இதெல்லாம் உனக்கும் நடக்கும். இன்னிக்கு நீ திருஅண்ணாமலையில் இருந்தாலும் சரி, வேற எங்கிருந்தாலும், முதல்ல குரு வார்த்தையை நெனச்சிக்கிட்டு நீ கண்ணை மூடிட்டு உக்காந்தாப் போதும்! நாங்க உங்களை அங்கங்கே கூட்டிக்கிட்டு போயிடுவோம்! இதுல உனக்கு என்ன கஷ்டம்?”
சிறுவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் பெரியவர் சொல்கிறார் என்று இதனைச் செய்து பார்த்திட ஆரம்பித்திடவே இதில் ஏதேதோ பல அனுபவங்கள் கிட்டின. ஆனால் பெரியவர் மிகவும் பக்குவமாக ஒவ்வொன்றையும் போதித்தார். ஸ்ரீஅஷ்ட வக்கிரர், ஸ்ரீத்ரைலிங்க சுவாமி, மகா அவதூது பாபா போன்ற அற்புதமான சித்புருஷர்களின் தரிசனம் சிறுவனுக்குக் கிட்டியது.
ஆனால் தவறு என்று வந்துவிட்டால் பெரியவர் அளிக்கக் கூடிய தண்டனைகளோ மிகவும் அதிகமானது. இரண்டு, மூன்று நாட்களுக்குச் சிறுநீரே வர முடியாதபடி செய்து விடுவார். அடிவயிறு, கண்கள் உப்பி நிற்க இதே கோலத்தில் சிறுவன் பெரியவரைத் தொடர்வான். ஆனால் அவர் சொன்ன இரண்டு அல்லது மூன்று நாள் கெடு முடிந்ததும், “என்னடா ராஜா, ரொம்பப் பாடாய் படுத்திட்டேன் இல்லையா?” என்று அவன் தலைமுடியைக் கோதி, “ஏண்டா கண்ணு! இங்கதானே வலிக்குது..” என்று அடிவயிறை அவர் சற்றே தடவி விட, வலியெல்லாம் பறந்தோடி விடும். ஆனால் மற்றொரு முறை இதே தண்டனையைப் பெற்ற சிறுவனை, “டேய் அந்த ராம்நாத் டாக்டர் கிட்ட போய் காண்பிச்சு மாத்திரை மருந்து வாங்கி சாப்பிடு..” என்று ஊர் பேர் தெரியாத டாக்டரிடம் அனுப்பி விடுவார். சிறுவனும் சிவனே என்று சென்று வருவான்...
“இந்த டாக்டர் கிட்ட நீ எவ்வளவு நேரம் பேசி அவர் கையால் மருந்து வாங்கி சாப்பிடணும்னு தலையிலே எழுதியிருக்கிறப்போ நானா எப்படிடா அதை மாற்ற முடியும்? குருவுக்கு தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி இருந்தால் கூட அதை அவ்வளவு சீக்கிரத்திலே மாற்ற மாட்டார். ஏன்னா குருவோட லட்சணம் என்னென்னா, அவங்க, அவங்க அவங்களோட , கர்மாவை நிச்சயம் அனுபவிச்சாகணும், அப்பதான் கர்மா முழுசா கழியும். இல்லாட்டி குருவே அதை ஏத்து அனுபவிச்சாகணும்..”
இவ்வாறாக சின்னஞ்சிறு வயதிலேயே எத்தனையோ கர்ம யோக நியதிகளை, பக்தியோக பாசுரங்களை ஞானயோக வாசிகளைப் பயிற்றுவிக்கின்றார்... இவ்வாறாகத் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே எத்தனையோ சித்தர்களின் தரிசனத்தைப் பெற்ற சிறுவன், பாரதத்தின் பல திருத்தலங்களிலும் விதவிதமான இறை அனுபவங்களை பெற்றவன். ராஜஸ்தானில் சிறுவன் கற்ற பாடம் என்ன தெரியுமா? எவ்வளவுதான் சித்திகளை அடைந்தாலும், அவற்றை எங்கெங்கு, எவ்விடத்தில் பெற வேண்டுமோ அவ்விடத்தில் பெற்றால்தான் அந்த சித்தியின் ஆற்றல் பெருகுகின்றது.
இப்படித்தான் திருச்சி அருகே, கயாவுக்கு நிகரான, பூவாளூர் திருத்தலத்தில் பல்குனி நதியில் பெரியவர் 24 தலைமுறையினர்க்குத் தர்ப்பணம் அளிப்பது கண்டு அதிசயித்தான்.
“ஆமாண்டா! ஒவ்வொருத்தரும் 24 தலைமுறைக்குத் தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிச்சா தானாகவே சில சித்திகள் வந்து சேரும். ஆனா அது இந்த பூவாளூர் தலத்தில், இங்க இருக்கிற கயா சிரார்த்த தேவதைகள் மூலமாகப் பூர்ணமடையும். இந்த இடத்துல கோடானுகோடி தர்ப்பண தேவதைகளும், சிரார்த்த தேவதைகளும் அர்க்கியம் வாங்க காத்துக் கிடக்காங்க! ஆனா யார் அதைப் புரிஞ்சுக்கப் போறா சொல்லு பார்க்கலாம்! ”
“நீ ராஜஸ்தானில் பார்த்தியே அந்த யோகிதான் எல்லா பித்ரு லோகத்திலேயும் தினமும் பித்ரு ஹோமம் செஞ்சிட்டு வந்த பெரிய சித்தர். அவரோட தரிசனம் கிடைக்கணும்னா பூவாளூர் பல்குனி நதியிலே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 24 தலைமுறைக்குத் தர்ப்பணம் கொடுக்கணும்! ஆனா இத குரு பின்னாடி சுத்தித்தான் கத்துக்கணும்.”

நவகிரகங்கள் மகிமை

நலமே தரும் நவக்கிரகங்கள் மகிமை
எத்தனையோ தெய்வமூர்த்தியின் வழிபாடு இருக்கின்ற பொழுது நவக்கிரக வழிபாடு ஏன்? – மிகவும் சிறப்பான அர்த்தம் புரிந்த கேள்வி இது. இதற்குரித்தான விடையே நவக்கிரக வழிபாடு. கலியுகத்திற்கு மட்டும் உரித்தானதா என்ற கேள்விக்கான விடையுடன் கூடிவருவதாகும். ஆம்! கலியுகத்திற்காகவே சிறப்புடையதாக நவக்கிரக வழிபாடு அமைந்துள்ளது. ஏனைய யுகங்களில் மகான்களும், யோகியரும் சாதாரண மனிதர்களும் அந்தந்த நவக்கிரக மூர்த்தியின் தரிசனத்தையே பெறுமளவிற்குச் சிறப்பான பூஜை முறைகளைப் பெற்றிருந்தனர். மேலும், ஒவ்வொருவரும் தனக்குரித்தான இஷ்ட தேவதையை பரிபூரணமாக நம்பி வழிபட்டமையால், ஏக சிந்தனையுடன், ஒன்றில் பலவற்றையும், பல மூர்த்திகளை ஒன்றாகவும் காணுகின்ற அற்புத இறைப் பெருநிலையைப் பெற்றிருந்தனர்.
கலியுக வழிபாடுகளின் நோக்கம் :- கிருதயுகம், த்ரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு வகை யுகங்கள் தாம் கலியுகத்தில் மாறி மாறி வருகின்றன. நாம் அனைவரும் இந்த யுகங்கள் நான்கிலுமே பிறப்புகளை எடுத்திருப்போம். கிருதயுகத்தில் தெய்வ மூர்த்திகள் மக்களோடு மக்களாய், சர்வ சாதாரணமாக பழகினர். தினசரி வழிபாடுகளையும், நித்ய அனுஷ்டானங்களையும் ஒவ்வொருவரும் மிகவும் சரியான முறையில் கடைபிடித்தமையால் தர்மம் தழைத்தோங்கியது. ஆனால், காலப்போக்கில், அநீதி, அதர்மம், பேராசை போன்ற தீய குணங்கள் தலை தூக்கிட, பூலோகத்தில் தெய்வ மூர்த்திகளின் நேரடி சஞ்சாரங்கள் குறைந்தன. ஸ்ரீராமர் எழுந்தருளிய த்ரேதா யுகத்திலும் பல தெய்வ மூர்த்திகளின் பூமியில் சஞ்சரித்தனர். ஆனால் அரக்கர்கள் மற்றும் இராட்சஸர்களின் கொடுமைகள் ஓங்கவே, அவர்களையடக்க இறை அவதாரங்கள் ஏற்படலாயின.
பல தெய்வாவதார மூர்த்திகள் இப்பூவுலகில் தங்களுடைய சஞ்சாரங்களைக் குறைத்துக் கொண்டும், சிலா ரூபங்களில் தங்கள் தெய்வீக சக்திகளைத் தேக்கியும் செல்ன்றனர். புனித சக்தியினால், இதுவரையில், இறைவனை அவனுடைய முழு ரூபத்திலேயே கண்டு ஆனந்தித்த மக்களினம், தங்களுடைய குறைகளாலேயே அப்புனித சக்தியை இழந்து விக்ரகங்களில் தெய்வத்தை பூஜிக்கலாயினர். ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணனாக, உலகில் சஞ்சாரம் கொண்டிடினும் ஒரு சிலரே ஸ்ரீகிருஷ்ணனை பரிபூரணமாகத் துதித்தனர். தெய்வ சஞ்சாரம் குறைந்து, தெய்வத் தன்மையைப் பலப்படுத்துவதற்காக, சித்புருஷர்களும், யோகியரும் மக்களிடையே பெருமளவில் நடமாடத் தொடங்கினர். கலியுகத்தில் தெய்வ சஞ்சாரங்கள் என்பது ஏனைய லோகங்களுக்கு என ஆகி விட்டது. காரணம் புனிதம் குறைந்து விட்டதல்லவா! தெய்வசக்தியும், புனிதம் பிரகாசிக்கும் இடத்தைத்தானே நாடிச் செல்லும், எனினும் தெய்வ சங்கல்பமாக இறைவனே மஹரிஷிகளையும், ஏனைய உத்தம நிலையடைந்தோர்களையும் உலகிற்கு அனுப்பி தெய்வீகத்தைப் பரப்புமாறு செய்துள்ளார்.
திரேதா யுகத்தில் தங்களுடைய பூஜா சக்திகளால் மஹான்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்ட மக்கள், அதர்மம் பெருகும் கலியுகத்தில் மக்களே தேடி, ஓடி, மஹான்களைக் கண்டுபிடித்து உணர்கின்ற வகையில்தான் இறைத் திருவிளையாடலும் அமைந்துள்ளது. எனவே, கலியுகத்திற்கான இறை நியதி என்னவென்றால் மக்கள் தங்களைத் தானே சுய சோதனை செய்து கொண்டு, புதிய இறை வழிபாடுகளை மேற்கொண்டு, சற்குருவின் மேன்மையை உணர்ந்து, அவரைச் சரணடைந்து, தங்கள் வாழ்க்கையை நடத்தி உத்தமப் பெருநிலையை அடையவேண்டும். ஆனால் இதற்கு இடையூறாக இருப்பவையே நோய்கள் உள்ளிட்ட பல துன்பங்களாகும். நோயில்லா இல்லத்தைய , துன்பம் இல்லா மனிதனையோ, கலியுகத்தில் காண்பது அரிது. பல யுகங்களுக்கு முன் தங்களுடன் நேரில் நடமாடிய இறை மூர்த்தியை அறிந்து, தெளிந்து எளிதில் முக்தி நிலை பெற்ற மனிதனே கலியுகத்தில் அம்மூர்த்தியின் சிலை வடிவாய் நிற்கும் விக்ரக மூர்த்தியிடம் பணம், பொருள், பொன், சுகம் வேண்டி வழிபடுகின்றான். என்னே விந்தை!
எனவே தான், கலியுகத்தில் உள்ள பூஜை முறைகள் எல்லாம் துன்பந்துடைக்கும் தூமணி விளக்கிற்குள் அடங்கி விட்டது. பிரார்த்தனைகள் நிறைந்த வழிபாடு முறைகளே கலியுகத்தில் அதிகமாகி விட்டதால், மனித சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் இறைவனே நவக்கிரக மூர்த்திகளாய் அமைந்து அருள்பாலிக்கின்றார். ஏக சிந்தனையுடன், ஒன்றாம் இறைவனை வழிபட, அனைத்தையும் அவனே ஏற்று காத்து அருள்கின்றான். ஆசாபாசங்களினூடே சுகங்களை மட்டும் நாடி, பிரச்னைகள் தீர்ந்தால் போதும் என்ற எண்ணங்களுடன் வாழ வேண்டிய நிலை கலியுகத்தில் ஏற்பட்டுள்ளதால் நவக்கிரக வழிபாடு கலியுகத்திற்கான மிகச் சிறந்த வழிபாடாக அமைந்துள்ளது. முக்தியும , மோட்சமும் இறவாப் பெரு நிலையும் கேட்பார் யாருளர் ? பதவி, பணம், திருமணம், சந்ததி, நோய் நிவாரணம், வீடு, வாசல் போன்றவை கேட்டு இறைவனைத் துதிப்போரே நிறைந்த உலகம் இது. ஆசைகள் பலவகையாதலின், இதனை வேண்டிடில் இம்மூர்த்தி இனிதே தந்தருள்வார் என்ற நம்பிக்கையே பெருகி, இதுவே பல தெய்வ, நவக்கிரக வழிபாடாகக் கலியுகத்தில் மலர்ந்துள்ளது.
நவக்கிரக மூர்த்திகளின் தோற்றம் :-
வானிலே பல நவக்கிரக மண்டலங்கள் உள்ளன. பூலோக வாழ்க்கையானது சூரிய கிரகத்தின் சக்தியை ஒட்டி அமைந்துள்ளது. சூரியனைச் சார்ந்து சந்திர கிரகம் அமைந்துள்ளதால் ஜீவன்களுடைய பகல், இரவு வாழ்க்கையே சூரிய, சந்திர கிரகங்களின் அசைவுகளைச் சார்ந்துள்ளது. இவ்வாறாக, நம் பூமியானது சூரியனைச் சுற்றி வருகின்ற பாதையில் உள்ள நட்சத்திர மண்டலங்களையே அஸ்வினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களாக பகுத்துள்ளோம். இவற்றிற்கு அதிபதியாக 12 ராசியாளர்கள் உள்ளனர். மனிதனுடைய வாழ்க்கை 27 நட்சத்திரங்களின் ஆட்சிக்குள்ளும், 12 ராசிகளின் அதிகாரத்திற்குள்ளும் அமைந்திருக்கின்றது. நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், வெள்ளி, குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழும் பண்டைய கிரகங்களாகும்.
உண்மையில்.... உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்.. என்ற திருமூலரின் வாக்கிற்கு ஒப்ப ஒவ்வொரு மனிதனின் உள்ளமே இறைவன் குடியிருக்கும் ஆலயம் ஆகியது. எனவே, நம் சரீரத்திற்குள்ளயே ஏழு நவக்கிரக மூர்த்திகளும் குடி கொண்டுள்ளார்கள்.. ஜோதியாய்ப் பிரகாசிக்கின்ற நம் உள்ளத்துள் உறையும் இறைவனை நாம் காண இயலாமையால், காணுகின்ற பக்குவத்தைப் பெறும் வரை, இறைவனை வெளியில் ஆவாஹணம் செய்து, தெய்வ மூர்த்தியாய் உணர்ந்து வழிபடுகின்றோம். புற வழிபாடு அகவழிபாட்டிற்கு உதவுகின்றது.  கலியுக நியதிகளுக்கேற்ப ராகு, கேது மூர்த்திகள் சேர்ந்து ஏழு மூர்த்திகள் ஒன்பது மூர்த்திகளாயினர்... தற்போது ஜோதிட கணிதத்திற்கு மட்டும் புளுட்டோ, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்பது கிரகங்களோடு சேர்க்கப்படுகின்றன. ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களின்படி எதிர் காலத்தில் மேலும் பல கிரகங்களின் வழிபாடும் ஏற்கப்படும்.
நம்முடைய நட்சத்திர மண்டலங்களுக்கு எட்டும் வகையில் இறைவனும் பல நவக்கிரக மண்டலங்களை படைத்துத் தன் அம்சங்களையே நவக்கிரக தெய்வ மூர்த்திகளாய்ப் படைத்தார். எனவே அவர்களை வெறும் கோஷ்ட தேவதைகள் என்றோ நவக்கிரக மூர்த்திகள் என்றோ எண்ணுதல் கூடாது. ஒரு மனிதன் ஏதேனும் ஒரு நவக்கிரகத்தை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வாழ்நாள் முழுதும் முழு நம்பிக்கையுடன் வழிபட்டாலே போதும், அவன் எளிதில் முக்தியைப் பெற்றிடலாம். நவக்கிரக மூர்த்திகள் சாதாரண தேவதைகள் அல்ல, கேட்பதனைத்தையும் அருளவல்ல அற்புத தெய்வ மூர்த்திகள்.. பூமி சுழற்சிப் பாதையை விட்டு சாதாரண, மனிதனுடைய பூஜா சக்தியும், பிரார்த்தனா சக்தியும் எட்டுகின்ற தொலைவிலேயே நவக்கிரக மண்டலங்கள் படைக்கப் பட்டுள்ளமையால், நவக்கிரக வழிபாடு எளிதில் பயன்தரவல்லதாக அமைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு தெய்வ மூர்த்தியும் அனுக்கிரகத்தைத் தருவதற்கு குறித்த அளவு தெய்வீக சக்தியோ, ஆன்மீக ஆற்றலோ நமக்கு தேவைப்படுகின்றது. இதனையே புண்ணிய சக்தி என்றும் பூஜா பலன் என்றும் குறிப்பிடுகின்றோம். உதாரணமாக நில புலன்கள், வீடு, வாசல்கள் வாங்கிட செவ்வாய் பகவானின் அனுக்கிரகமே தேவையாகிறது. அதற்குரித்தான சிறு முயற்சிகள், பித்ரு தேவதைகள் ஆசி, பூமா தேவியின்  கடாட்சம், ஹோம பூஜை சக்தி, கூடுகின்ற போது இப்பிரார்த்தனை செவ்வாய் மண்டலத்தை அடைந்திட வீடு, வாசல் வாங்கும் பாக்கியம் கிட்டுகின்றது. விஞ்ஞான பூர்வமாக தொலைவு தூரம் என்பது இரண்டிற்கும் இடையே உள்ள நீள அலகைக் (Mile, kilometer) குறித்தாலும், ஆன்மீகத்தில் பூமியிலிருந்து எந்த நவக்கிரக மண்டலத்திற்கும் உள்ள தூரத்தை தெய்வீக சக்தியைக் கொண்டே கணக்கிடுகின்றனர். இந்த தெய்வீக சக்தி பாங்கானது தான, தர்மங்கள், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், பக்தி, சுயநலமற்ற இறைசேவை ஆகியவற்றின் திரட்சியாகும். சுருங்கச் சொல்லிடில்...
1. நம்முடைய நட்சத்திரங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பானது நட்சத்திர மண்டலங்களுக்கும், நம் பூலோக வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பே ஆகும். அதாவது நவக்கிரகங்களின் ஈர்ப்புச் சக்திக்கும் நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்திக்கும் இடையே உள்ள மாறுதல்களே நமக்குள்ள இன்ப, துன்பங்களாக மாறுகின்றன. உதாரணமாக நமது உடலில் எந்த அவயத்தில் நோய் ஏற்படுகின்றதோ, அங்கு உறையும் நவக்கிரகாதிபதியை ப்ரீதி செய்யும் பூஜைகள், தான, தர்மங்களை மேற்கொண்டால் அத்துன்பங்கள் தீரும். அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய ஒருவருக்கு வலது கண்ணில் ஏற்படும் ரோகங்களுக்குப் ப்ரீதியாக சூரிய பகவானுக்குரித்தான ஹோமங்களைச் செய்ய ஹோமத்தின் புகை, அதில் அளிக்கப்படும் ஆஹூதிகளின் சக்தி இவை சூரிய மண்டலத்தை மிக எளிதில் அடைகின்றன. இதனால் சூரிய பகவானின் கருணைக் கடாட்சம் அஸ்வினி நட்சத்திர மண்டலத்தின் பால் வருகின்றது. இதன் தொடர்ச்சியாக அந்த அஸ்வினி நட்சத்திரகாரருக்கு ரோக நிவர்த்தி ஏற்படுகின்றன.
2. நவக்கிரக மூர்த்திகளுக்கும், நட்சத்திர மூர்த்திகளுக்கும் என்ன தொடர்பு?  நம்முடைய கர்ம வினைகளுக்கேற்ப நாம் பலாபலன்களை அனுபவிக்கின்றோமா என்பதை நிர்ணயித்து நம் வாழ்க்கை முழுதும் நம்முடன் ஒட்டி உறவாடுகின்ற தெய்வ மூர்த்திகளே நவக்கிரக மூர்த்திகள். ஒவ்வொரு நாளும் (24 மணி நேரம்) ஒரு மணிக்கு ஒரு கிரக தேவதையின் ஆட்சி பரிபாலனமென சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் காலத்தை நவக்கிரகங்கள் ஆட்சி செய்கின்றன..
ஞாயிறு - சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய்
திங்கள் – சந்திரன், சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன்
செவ்வாய் – செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு
புதன் – புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன்
வியாழன் – குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி
வெள்ளி – சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய், சூரியன்
சனி – சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன்
இவ்வாறாக நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பு கொண்டுள்ளவையே நவக்கிரகங்களாகும் . ஆகவே நம்முடன் பின்னிப் பிணைந்து அருளாட்சி புரிகின்ற நவக்கிரகங்களை நாம் எப்போதும் துதித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா?

காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பதற்குப் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. பெரியோர்களை, மஹான்களை, தாய், தந்தையரை வணங்குகின்ற பொங்கல் என்றும், மஹான்களுடைய, யோகியருடைய ஜீவ சமாதிகளைக் கண்டு தொழுகின்ற பொங்கல் என்றும், ஏழைகளுக்கு மஞ்சள், கரும்பு, பொங்கல் போன்றவற்றைத் தானமாக அளித்து அவர்களுடைய மகிழ்ச்சியைக் காண்கின்ற பொங்கலென்றும், நமக்குப் பொங்கலாகிய நல்ல பண்டிகையைத் தருவதற்கு மூல காரணமாக இருக்கின்ற ஆதித்யனாகிய ஸ்ரீசூர்ய பகவானைக் கண்டு வணங்குகின்ற பொங்கலென்றும்,
“இறைவா! நீ அளித்த வசதிகள் எனக்குப் போதும், காணும்,” – என்று திருப்தியைத் தெரிவிக்கின்ற நன்றிப் பண்டிகைப் பொங்கலென்றும், நாம் உயிர் வாழ்வதற்கு ஜீவாதாரமாக இருக்கின்ற உணவு வகைகளை நமக்கு அளிக்கின்ற தெய்வ மூர்த்திகளைக் கண்டு வணங்கித் துதிக்கின்ற பொங்கலென்றும் – இவ்வாறாக எத்தனை, எத்தனையோ அர்த்தங்கள், நம்முடைய பண்டிகைகளுக்குத் தான் எவ்வளவு தெய்வீக மகத்துவங்கள்! ஒவ்வொரு பண்டிகையும் நமக்குப் புத்துணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும், சீரிய பண்பாட்டையும் ஊட்டி உணர்த்துவதற்காகவே அமைந்துள்ளது.
விருட்சங் காணும் பொங்கல் :- பகுதான்ய ஆண்டிற்கு உரித்தான காணும் பொங்கல் மகிமை என்னவென்றால் ஆலய ஸ்தல விருட்சத்தைக் காணும் பொங்கலாக மலர்கின்றது. இன்று நாம் ஸ்தல விருட்சங்களாக, பல ஆலயங்களில் காண்கின்ற மரங்கள் யாவுமே பல மகரிஷிகளின், யோகியர்களின், சித்புருஷர்களின் தவ ரூபங்களாகும். “கோடிக்கணக்கான யுகங்களாகத் தவமிருந்து யாம் இந்த ஆலயத்தில் ஸ்தல விருட்சமாக வீற்றிருந்து உன்னுடைய தரிசனத்தை எப்பொழுதும் பெற்றிருக்க அருள்புரிவாயாக,” என்று அரும்பெரும் வரத்தை வேண்டிய உத்தம இறைத் தூதர்கள் தாம் இன்று பல இடங்களிலும், திருத்தலங்கள்லும் ஆலய விருட்சங்களாக ஆகி நமக்கு அருள்பாலிக்கின்ற்னர்.
ஸ்தல விருட்சங்களைச் சாதாரணமாக எடை போடாதீர்கள். எத்தனையோ கோடி இடங்களில் அவை காய்ந்து மீண்டும் துளிர்ப்பது போல் தோன்றினாலும் அவற்றிற்கு என்றுமே அழிவு கிடையாது. சில தலங்களில், “இங்கு ஸ்தல விருட்சம் இருந்தது. இப்பொழுது பட்டுப் போய் விட்டது,” என்று சொல்வார்கள். அது அப்படி அல்ல பலவிதமான அதர்மங்களும், அக்கிரமங்களும் கலியுகத்தில் நடக்கின்ற போது, ஸ்தல விருட்சத்திலுள்ள மகரிஷிகளும், யோகியர்களும் இதனைப் பொறுக்காது, தம்மை பூமியினுள் மறைத்துக் கொள்கின்றனர். அல்லது கலியுகத்தில் அவர்களுடைய ஸ்தல விருட்சத் தவக் கோலம் பரிபூர்ணமடையும் போது அவர்கள் பூமியிலே மறைந்திட, வேறு பல மகரிஷிகள் அத்தவத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்தல விருட்சமாக ஆவதற்குத் தக்க பருவம் வரவேண்டும் அல்லவா! இதுவே மரம் காய்ந்தது போல் தோன்றும்.
பொதுவாக ஒரு ஆலயத்தில் எது ஸ்தல விருட்சமாக விளங்குகின்றதோ அது தான் அந்த, மரத்தின், செடியின் வகைக்கு மூலாதாரச் செடியாகவோ, மரமாகவோ விளங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக திருக்கழுக்குன்றம் போன்ற ஸ்தலங்களில் வாழையானது, ஸ்தல விருட்சமாக இருக்கின்றபடியால் எங்கெல்லாம் வாழை மரம் ஸ்தல விருட்சமாக இருக்கின்றதோ அதுதான், பழைய சிருஷ்டி காலத்தில், முதல் முதலாக ஏற்பட்ட வாழை, ஆதிமூல வாழை மரத்தின் அம்சங்களைக் கொண்டிருக்கும். எனவே தான் ஸ்தல விருட்ச தரிசனமானது பல கோபுர தரிசனங்களுக்கும், தெய்வ மூர்த்திகளின் தரிசனத்திற்கு ஈடானதாக இன்றும் விளங்குகின்றது. ஏற்கனவே, ஸ்ரீஅகஸ்திய விஜயம், பல இதழ்களில் கூறியது போல ஆலயங்கள் நடைசார்த்தப் பட்டிருக்குமேயானால் அங்கு திருக்குளத்தில் நீராடி அத்தலத்தின் ஸ்தல விருட்சத்தைத் தரிசிப்போர்களுக்கு இறை தரிசன பலன்களை ஆண்டவன் பரிபூர்ணமாக அளிக்கின்றான். ஏனென்றால் நடை சார்த்தப்படும் பொழுது மூலஸ்தான மூர்த்தியின் சில அனுக்கிரஹ சக்திகள் ஸ்தல விருட்சத்திற்கு மாற்றப்படுகின்றன.
பொதுவாக ஸ்தல விருட்ச பூஜை செய்வதற்கான குறித்த திதிகளும், ஹோரை நேரங்களும் உண்டு. ஹோமம், அர்ச்சனை, ஆராதனைகள், அடிப் பிரதட்சிணம், காவடியெடுத்தல் என்று பல விதமான வழிகளில் எத்தனையோ விதமான கர்மவினைகள் தீர்க்கப்படுகின்றன. உதாரணமாக, குறித்த சில பித்ரு தோஷங்களையும், சாபங்களையும் கயாவிலும், அதற்கு நிகராக உள்ள திருச்சியோ அல்லது ஸ்ரீபூவாளூர் பல்குனி, நதி இடத்தில் செய்யப்படும் கர்ம காரியங்களினாலும் எளிதில் தீர்த்திட முடியும். இத்திருத்தலத்திற்குரிய பித்ரு தோஷ நிவர்த்தி சக்திகள் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் என்று சொல்லிட முடியாது.
இதைப்போல ஸ்தல விருட்ச பூஜைகளுக்குரித்தான சக்திகள், சிறப்பம்சங்கள் எத்தனையோ உண்டு. எல்லா திருத்தலங்களிலும் ஸ்தல விருட்சங்கள் ஒரே மாதிரியா உள்ளன? இல்லையே.. திருச்சி திருப்பைஞ்ஞீலியிலும், திருக்கழுக்குன்றத்திலும் வாழை மரங்கள் ஸ்தல விருட்சமாக இருந்தாலும், அவற்றில் கூடியுள்ள எத்தனையோ தெய்வீக அம்சங்கள் பலப் பல உண்டு. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்தல விருட்சமான மாமரத்தில் நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு வகை ருசிகளுடன், வேதக்கனிகளாக, மாங்கனிகள் விளங்குகின்றன என்பதை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம்.
நம்மைக் காணும் ஸ்தல விருட்ச அருட்கண்கள்!
பகுதான்ய வருடத்தின் காணும் பொங்கலாக ஸ்தலவிருட்சங்களைக் காணும் பொங்கலாக சித்புருஷர்கள் அருள்கின்றனர். எத்தனையோ கோடி வருடங்கள் உறைந்து தவம் புரிந்த மூலப் பொருளாகவே ஸ்தல விருட்சங்கள் விளங்குவதாலும், அனைத்து மகரிஷிகளும் வலம் வந்து வணங்கி வழிபட்ட விருட்சங்களாக விளங்குவதாலும், இவை தம்முள் பல அளப்பரிய தெய்வீக சக்தியைப் பெற்றுள்ளன. ஸ்தல விருட்ச தரிசனமே கோபுர தரிசனம் போல எத்துனையோ விதமான கர்மங்களைக் களைய வல்லதாகும். ஏனென்றால் நாம் நினைப்பது போல் மரங்கள் வெறும் ஜடப் பொருட்களல்ல. அவற்றிற்கும் ஆயிரமாயிரம் நேத்ர சக்திகள், அதாவது கண்களின் பார்வை சக்திகள் உண்டு. நாம் அவற்றைக் காண்கிறோம் என்பதை விட ஸ்தல விருட்சங்கள், தம் கோடானு கோடி கண்களால் நம்மைப் பார்க்கின்றன என்பதே உண்மையாகும். நம்முடைய பார்வையோ ஒரு திடப்பொருளின் வெளித் தோற்றத்தோடு நின்று விடுகின்றது. திடப் பொருளையோ, அல்லது திரவப் பொருளையோ ஊடுருவிச் செல்லும் பார்வை சக்தியை நாம் பெறவில்லை. ஆனால் ஸ்தலவிருட்சங்களோ, x-ray எடுப்பது போல, நம் தேகத்தையும் பரிபூரணமாகக் காணும் சக்தியைப் பெற்றுள்ளன. எனவே, பகுதான்ய வருட காணும் பொங்கலன்று ஸ்தல விருட்சங்களைக் காணும் பொங்கலாகக் கொண்டாடி மகிழ்வீர்களாக!
தலவிருட்ச பூஜை காணீர்!

தலவிருட்சம் வன்னி
ஹரித்துவாரமங்கலம்

காணும் பொங்கலாகிய இன்று, ஸ்தல விருட்சத்தைக் கண்டு தரிசிக்கும் பொங்கலாக, அவரவர் ஊரிலுள்ள பெருமாள் ஆலயமோ, சிவ ஆலயமோ எந்த ஆலயமாயினும் சரி, ஸ்தல விருட்சத்தைச் சுற்றிச் சுத்தம் செய்து அதற்கு அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பம் இட்டு, புதிய மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, சுற்றிலும் அகல் விளக்குகளை ஜகஜ்ஜோதியாக ஏற்றி, அடிப்பிரதட்சிணம் செய்தல் வேண்டும். ஸ்தல விருட்சத்திற்கும், நைவேத்யம் படைக்கப்படுவதுண்டு. தற்பொழுது இவ்வழக்கம் நின்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்தல விருட்சத்திற்கு, நெய்கலந்த அன்னம் படைத்து ஏழை எளியோர்க்குத் தானமாக அளித்திட வேண்டும். இன்று ஸ்தல விருட்சத்திற்கு வில்வம் மற்றும் துளஸி இவைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்புடையதாகும். அர்ச்சனை செய்யப்பட்ட துளஸி மற்றும் வில்வத்தை ஒரு சந்தனப் பெட்டியில் வைத்துக் கட்டி சிறிதளவு பிரசாதமாக நாம் இல்லத்தில் வைத்திருந்தால் பலவித தோஷங்காளை இது நிவர்த்தி செய்யும். ஸ்தல விருட்ச இலைகளைப் பறித்தல் கூடாது. தெய்வீக அம்சம் நிறைந்த ஸ்தல விருட்சட்தின் ஒவ்வொரு இலையும், வேரும், பூவும், கனியும் அளப்பரிய தெய்வீக சக்தி வாய்ந்ததாகும்.
ஒவ்வொன்றும் ஒரு மஹரிஷியின் ரூபம்! எனவே, எக்காரணங்கொண்டும் ஒரு சிறு இலையைக் கூட ஸ்தல விருட்சத்தினின்று பறிக்கக் கூடாது. சென்னை போரூர்- குன்றத்தூர் சாலையிலுள்ள கோவூர் சிவாலயத்திலுள்ள வில்வ மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. 12க்கும் மேற்பட்ட பல அபூர்வமான வில்வ தளங்களை இதில் காணலாம். இது சிவன் சொத்து, ஆதலின் தயவு செய்து இந்த வில்வ தளங்களை அர்ச்சனைக்காக அன்றி ஆலய அனுமதியின்றி, இறைப்பிரார்த்தனையின்றி பறித்தல் கூடாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இவ்வில்வ மர தரிசனங்களே எத்தனையோ கர்ம வினைகளைப் போக்கும். கோவூர் ஆலய ஸ்தல விருட்சத்திற்கு இக்காணும் பொங்கலன்று பூஜை செய்து வழிபடுவதால் சந்ததி விருத்திக்கு வழி வகுக்கும். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகச் சில நோய்கள் வருகின்றன. இதற்குப் பரிகாரமாக இக்கோயிலுள்ள வில்வ மரங்களை நன்கு பராமரிக்கும் திருப்பணியைச் செவ்வனே செய்வதால் ஆரோக்யமான நன்முறையிலான சந்ததி விருத்திக்கு உதவும். தோல் சம்பந்தமான நோய்கட்குப் பரிகாரமாக இத்தல விருட்ச பூஜை விளங்குகிறது.
சென்னை பொன்னேரி அருகே சின்னக் காவாணம் என்னும் கிராமத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅஷ்டோத்தரபுரீசுவரர் சிவாலயத்திலுள்ள அழிஞ்சில் மர ஸ்தல விருட்சம், காணுதற்கரியதாகும். இது போன்ற ஸ்தல விருட்சத்தைப் பாரதமெங்கும் ஒரு சில இடங்களில் தான் காண இயலும், அற்புதமான தெய்வீக சக்தி நிறைந்த மரமிது. அழிஞ்சில் விதைகளின் தன்மை என்னவென்றால் கீழே விழுந்தவுடன் இம்மரத்தின் விதைகள் தாமே ஊர்ந்து சென்று மரத்தில் ஒட்டிக் கொள்ளும். எனவே இதனை வேதவித்து என – அதாவது இறைவனுடன் தாமே சென்று ஐக்கியமாகின்ற வித்து – என்று பொருள்படும் வகையிலே இதனை வேதமகிமை வாய்ந்ததாக மகரிஷிகள் போற்றுகின்றனர். காணும் பொங்கல் அன்று இந்த  அழிஞ்சில் மரமான ஸ்தல விருட்சத்திற்குப் பூஜை செய்து வழிபடுவதால் பிரிந்து போன குடும்பங்கள், தம்பதியர் ஒன்று சேர்வதற்கான நல்வழிகள் பிறக்கும் இங்கு பஞ்சாமிர்தத்தைத் தானம் செய்தல் வேண்டும். வன்னி மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்டுள்ள தலங்களுமுண்டு. காஞ்சிபுரம் அருகே திருவாத்தூர் எனப்படும் செய்யாறில் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக விளங்குகிறது. இங்கு காணும் பொங்கலன்று அடிப்பிரதட்சணம் செய்து வழிபடுவதால் தமக்கு நியாயமாகக் கிட்ட வேண்டிய சொத்துகளும், பதவி உயர்வுகளும் கிட்டும். இங்கு சர்க்கரைப் பொங்கல் தானம் மிகவும் விசேஷமானதாகும்.

கொன்றை மரம் திருப்பத்தூர்

வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ள இடங்களில் பிள்ளையாருக்கு உவப்பான மோதகம் போன்ற பண்டங்களை ஸ்தல விருட்சத்திற்குப் படைத்து பூஜை செய்து தானமளிக்க, மனதை அரித்துக் கொண்டிருக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள், பிரமைகள், சந்தேகங்களுக்கு நிவர்த்தி கிட்டும். தூங்கி எழுந்தவுடனேயே எத்துனையோ பிரச்சினைகளுடன் எழுவோர் பலர் உண்டு. ஏன் தூங்கி எழுந்தோம் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் தம் கவலையை மறந்தவாறு உறக்கத்திலேயே இருக்க ஆசைப்படுவர். பிரச்சினைகள் வரும் போதெல்லாம், குடிப்பழக்கம் போன்ற தீய வழக்கங்கள் ஒட்டிக் கொள்ளுகின்றன. எனவே, இத்தகைய தீய வழக்கங்களினின்று விடுபட விரும்புவோர் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ள இடங்களில் காணும் பொங்கலன்று முறையாக பூஜை செய்வதோடு மட்டுமின்றி புதன் தோறும் புத ஹோரை நேரத்தில் (காலை 6 முதல் 7 மற்றும் மதியம் 1 முதல் 2 மணி வரை) அடிப் பிரதக்ஷிணம் செய்து வழிபடுவார்களாயின் தாமாகவே தீய வழக்கங்களினின்று விடுதலை பெறலாம். வன்னி மரத்துப் பிள்ளையார் தீய வழக்கங்கட்கு நிவர்த்தியளிக்கும் தெய்வ மூர்த்தியாவார்.
தலவிருட்சம் வல்வினை போக்கும் :
பலருக்கும் பெரிய தோட்டத் துப்புரவுகள் இருந்தாலும் நல்ல நீர் வசதி இருந்தாலும் கூட அதனைத் தெய்வீகமாகப் பயன்படுத்தும் முறைகளை அறியாமல் அல்லல்படுகின்றனர். இவர்கள் ஆலயங்கட்குரித்தான வில்வம், துளஸி, செம்பருத்தி, பாரிஜாதம் போன்ற பூஜைக்குரித்தான செடிகளைப் பராமரித்து அவற்றைக் கோயில் நந்தவனங்கட்கு அளிப்பதோடு மட்டுமின்றி, கோயில் நந்தவனங்களில் அச்செடிகள் நன்முறையில் பராமரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வந்தால், இது மிகச் சிறந்த திருப்பணிகளில் ஒன்றாக விளங்குகிறது. கலியுகத்தில் நந்தவனப் பராமரிப்பும், பூச்செடிகள் வளர்ப்பும் மிகவும் குறைந்து வருதால் இத்தகைய அரிய இறைத்திருப்பணி செய்து பெறுதற்கரிய அரும் பெரும் புண்ணிய சக்திகளை அள்ளிச் செல்லலாம். கலியுகத்தில் எந்த தெய்வீகத் திருப்பணியானது மறைந்து வருகிறதோ அதற்குப் புத்துணர்ச்சி தருவதற்கான தீவிரமான தெய்வீகச் செயல்களில் நாம் ஈடுபடுவோமேயானால் மகத்தான ஆன்மீக சக்தி கிட்டுவதோடு அளப்பரிய புண்ணிய சக்தியும் நம் குடும்பத்திற்குச் சாசுவதமாக வந்து சேரும் என்பதை நினைவில் கொண்டிடுக! இவ்வாறாக ஸ்தல விருட்சத்தைக் காணும் பண்டிகையில் நாம் எவ்வுளக்கெவ்வளவு ஸ்தல விருட்ச சேவை செய்கிறோமோ அந்த அளவிற்குப் பெரும் புண்ணிய சக்தியைப் பெற்றிடலாம்.
இன்றைக்குக் குறைந்தது 108 ஸ்தல விருட்சங்களையும், மேலும், கற்பக விருட்சங்களையும் (அரசு, ஆல் போன்ற) ஹோம சமித்திற்குரிய மரங்களைத் தரிசனம் செய்வதாக ஒரு சங்கல்பம் செய்து கொண்டு, அதனைப் பலரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவார்களேயானால் இது மிகச் சிறந்த தெய்வ வழிபாடாக அமைகிறது. இது கைளால், கால்களால் செய்த பாவங்களைப் போக்கும். எனவே, ஸ்தல விருட்சத்திற்குரிய தெய்வ வழிபாட்டை, பல ஆண்டுகளாக நாம் மறந்துவிட்ட பூஜை முறைகளை இன்றேனும் தொடங்குங்கள்.
காரைக்குடி – மதுரை சாலையிலுள்ள திருப்பத்தூரில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீதளீஸ்வர சிவாலயத்திலுள்ள கொன்றை மர ஸ்தல விருட்சமானது மிகவும் அற்புத சக்தியைத் தன்னுள் கொண்டது. ஓங்கார பிரணவ ரூபமே இங்கு கொன்றை மரமாக எழுந்து அருள்பாலிப்பதால் இதற்கு ஓங்கார பிரணவ சக்தி நிரம்பவுண்டு. இங்கும் அடிப்பிரதட்சிணம் செய்து ஸ்ரீமஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இச்சிவத்தலத்தில் மஹாலக்ஷ்மிக்குப் ப்ரீதியான வில்வ இலைகளைக் கொண்டு கொன்றை மரத்திற்கு அர்ச்சித்து அடிப்பிரதட்சிணத்துடன் வெண்மை நிற உணவு வகைகளை (தயிர் சாதம், கல்கண்டு சாதம், வெண்பொங்கல்) தானமாக அளித்து வர இழந்த செல்வத்தை நியாயமான முறையில் மீண்டும் பெறலாம். இதே போன்று எண்ணற்ற உத்தம தலங்களைக் கொண்ட நம் நாட்டில் தலவிருட்சங்களுக்குப் பஞ்சமில்லை. ஆகவே, அனைத்து இடங்களிலும், காணும் பொங்கல் தலவிருட்சங்களைக் கண்டு அவற்றிற்குச் சேவை செய்யும் பொங்கலாக ஆகி எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

உத்தராயண மகிமை

உத்தராயணத் தர்ப்பணப் புண்ணிய காலம்
தமிழ் வருடத்தின் 12 மாதங்களில் 6 மாதம் தட்சிணாயன புண்ணிய காலமாகவும், 6 மாதம் உத்தராயண புண்ணிய காலமாகவும் விளங்குகிறதல்லவா! இவ்விரண்டு புண்ணிய காலங்களிலும் செய்ய வேண்டிய நற்காரியங்கள் எத்துணையோ உண்டு. அவற்றை வகை வகையாகப் பிரித்து நடத்துதலே சிறப்புடையதாகும். உதாரணமாக, உத்தராயணப் புண்ணிய காலமான தை முதல் ஆனி வரையுள்ள 6 மாத காலங்களில் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களைச் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். உத்தராயணத்தில் நிகழும், திருமணங்கட்குத் தனி மகத்துவம் உண்டு. மேலும், உபநயனம் என்று சொல்லப்படுகின்ற பூணூல், அணியும் வைபவத்திற்கு உத்தராயணமே மிகவும் புனிதமாகும்... ஜாதி, மத வேறுபாடின்றி எவ்வாறு மஞ்சள், குங்குமம் போன்றவை யாவர்க்கும் பொதுவாக அமைகின்றதோ, அதைப் போன்று பூணூலும் இறை வழிபாட்டிற்காக அனைவரும், அணிய வேண்டிய அணிகலன்களில் ஒன்று என வலியுறுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள், இவ்வாறு முதன் முதலாக அணிகின்ற பூணூலை உத்தராயணத்திற்குரிய ஆறு மாதங்களில் அணிவதே சிறந்தது.
ஆனால் அதற்காக அடுத்த ஆறு மாதங்கள் பொறுத்திருக்க முடியுமா? நற்காரியம் என்றால் எத்துனை யுகங்கள் ஆனாலும் பொறுத்துத் தான் ஆக வேண்டும். ஆனால் கலியுகத்தில் பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டதே! நினைத்தால் ஜாதகம் பார்ப்பது, பின் அவசர கோலமாகத்தான் மக்கள் திருமணம் போன்ற பலவிதமான நற்காரியங்களை நல்ல நேரம் பாராது நிகழ்த்தி வருகின்றார்கள். ஒரு சின்ன சைக்கிளை வாங்குவதற்குக் கூட, ஏன் உப்பு, புளி வாங்குவதற்குக் கூட நம் முன்னோர் அதற்குரிய தினத்தில் தான் வாங்கி வந்தார்கள். மேலும் புது ஆடைகளை வாங்குவதற்கும் அணிவதற்கும் கூட வளர்பிறை, புதன், அனுஷம் போன்று குறித்த சில நாட்கள் உண்டு. இயந்திர கதியாக கலியுக வாழ்க்கை அமைந்து விட்டதால் பொறுமை, அடக்கம், பண்பு என்பதற்கு மதிப்பின்றிப் போய்விட்டது. அதனால் தான் மற்ற யுகங்களை விட கலியுகத்தில் கோடானுகோடி பிறவிகள் பெருகுகின்றன. வன்முறை, அராஜகம், துஷ்ப்ரயோகம், கொலை, கொள்ளை போன்ற அதர்ம காரியங்கள் பெருகி நிகழ்ந்து வருகின்றன. இதனூடே தெய்வீகத்தில் நிறைந்த ஈடுபாடுள்ள ஒரு சிலரேனும் முறையான பூஜைகளைச் செய்து வருவார்களேயானால் அவைதாம் உலக சமுதாயத்திற்கே ஒரு சிறந்த காப்பாக அமைகின்றன.
“நீ மற்றவர்கட்காகவும், தெய்வீகத்திற்காகவும் எத்தகைய திருப்பணிகளையும், உதவிகளையும் செய்தாய்?” – என்ற கேள்விதான் இவ்வுயிர் உடலை விட்டுப் பிரிந்தபின் கேட்கப்படும் முதல் கேள்வியாகும். அதற்குரிய தக்க விடையளிப்பதற்கான ஆக்கப்பூர்வமான செயல்களில் இன்றே ஈடுபடுவோமாக! எனவே, தட்சிணாயனத்தில் மறு பூணூலை அணிவதற்குச் சிறப்பான நாளே ஆவணி அவிட்டம் என்று தேர்ந்தெடுத்துத் தந்தனர். மேலும் ஆவணி மாதத்தில் அவிட்டம் சேருகின்ற நாளில் உத்தராயண குணாதிசயங்களுடன் மட்டும் சில அரிய தெய்வீக அம்சங்கள் நிறைகின்றன. இவ்வம்சங்கள் எல்லாம் உத்தராயணப் புண்ணிய காலத்திற்குரியவை ஆதலின் இதனைத் தட்சிணாயனத்திற்குரிய பூணூல் அணியும் நாள் என நம் பெரியோர்கள் தேர்ந்தெடுத்தனர்..
உத்தராயணப் புண்ணிய காலம் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது பித்ரு தர்ப்பணம்தான். நம் மூதாதையர்கட்குரித்தான உத்தராயணப் பித்ருத் தர்ப்பணமானது நம்முடைய குருமங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகளால் ஜாதி, மத, குல, இன பேதமின்றி யாவர்க்கும் இதுவே உரித்தான ஒன்றாக மீண்டும் நினைவுபடுத்தப்பட்டு இந்தத் தர்ப்பணப் பூஜையானது அதற்குரித்தான விசேஷமான தினங்களில் கண்டிப்பாக அனைத்துக் குடும்பங்களிலும் நடைபெற்றால்தான் பலவகையான துன்பங்கட்கு விடிவு கிட்டும் என்பதையும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம். உத்தராயண காலம் துவங்குகின்ற நாளான தை மாத முதல் தேதியன்று இப்பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்கட்கு ஜீவசக்தியை அளிக்கின்ற ஸ்ரீசூரிய நாராயண சுவாமி தம்முடைய அயனத்தை அதாவது சூரிய பாதையை மாற்றிக் கொள்ளும் காலம் இது. சூரிய பகவான் ஏன் தம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்? பாதையை மாற்றிக் கொள்வது என்பது நமக்கு புரியும் பொருட்டு என்று நாம் கொடுக்கும் எளிய விளக்கமே தவிர ஸ்ரீசூரிய நாராயணன் ஆறு மாத கால உத்தர பாஸ்கர யோக பூஜையைத் துவங்கும் நாளாகத்தான் உத்தராயணத் தொடக்கம் அமைகின்றது.
சூரிய மழைக் கதிர்கள்!
சூரியக் கதிர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பது நாம் அறிந்ததே! மழை பொழியும் போது சூரிய ஒளி இருக்குமானால் அது புதுப் பொலிவுடன் இருப்பதைக் காணலாம். சூரிய ஒளியுடன் இணைகின்ற மழையைப் பற்றியும், பூஜைகளைப் பற்றியும் ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் குறிப்பிட்டு வந்துள்ளோம். வெய்யில் இருக்கும் போது பொழிகின்ற மழையில் நனைந்து பூஜை செய்வது ஒரு பெறுதற்கரிய பாக்கியமாகும். எனவே, மழையைக் கண்டு ஓடாதீர்கள்! உலகத்திலேயே மிகவும் புனிதமான, அப்பழுக்கற்றப் பரிசுத்தமான தேவ நீரில் நீராடுவதென்றால் அது பெறுதற்கரிய பாக்யமல்லவா? ஆரோக்யம் காரணமாக இது பலருக்கும் இயலாமல் போகலாம். அதே சமயத்தில் மழை நீரில் நீராடுவது என்பது தேகத்திற்கு அபரிமிதமான புண்ணிய சக்தியைத் தருகின்றது என்பது உண்மையே. ஆனால் வெறும் புண்ணிய சக்தியை வைத்துக் கொண்டு ஒரு மனிதன் என்ன செய்ய இயலும்? அசுரர்கள் இவ்வாறாகத்தான் பலவிதமான கடும் தவங்களில் அளப்பரிய புண்ணிய சக்தியைப் பெற்று அதனைப் பயன்படுத்தும் வகையறியாது அதர்மங்களில் ஈடுபட்டுத் தம் உயிரை இழந்தனர். இதே போலத்தான் தனி மனிதனானவன் மழைநீரில் நீராடுவதால் கிட்டும் பெறும் புண்ணிய சக்தியை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? அதனால் தான் இதுவும் இறைப்பாங்காக ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை சில நோய்களாக ஏற்படுத்தப்பட்டு, மனிதனை மழைப் பொழிவு நீராடலில் ஈடுபட விடாது நீராடலில் ஈடுபட விடாது நிகழ்கின்றது போலும்? என்னே இறைவனின் லீலை!
அண்ணாமலையின் அருள் மழை! அருள் மழையில் அண்ணாமலை
இன்றும் மழை நீரின் பரிசுத்தத்தை உணர்ந்தவர்கள் நிச்சயமாக வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் நீராடிதான் வருகின்றனர். உடல் ஆரோக்யத்தையும் பொருட்படுத்தாமல், மழைப் பொழிவினூடே திருஅண்ணாமலை கிரிவலம் செய்வதற்கு மிக விசேஷமான பலன்களுண்டு. தெய்வீக இரகசியங்களாக விளங்குகின்ற இவற்றைப் பற்றி நாம் விளக்க இருக்கின்றோம். திருஅண்ணாமலையில் பொழிகின்ற மழைப் பொழிவு சாதாரண மழை அல்ல! அமுதப் பொழிவு அது! ஸ்ரீவருணபகவான், சர்வேஸ்வரனே, மலையாக வீற்றிருக்கும் திரு அண்ணாமலையில் மஹரிஷிகட்கு, அந்த உத்தம இறைத் தூதுவர்கட்கு வரவேற்று முகமன் கூறி உபசரனை செய்யும் வகையில் தான் திருஅண்ணாமலையில் மழைப் பொழிவு ஏற்படுகிறது.
இன்றும் மழைப் பொழிவினூடே ஏற்படுகின்ற மின்னல் ஒளியில் ஸ்ரீஅண்ணாமலையாரை நீங்கள் தரிசிப்பீர்களேயானால் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற மலைப் பிரதேசங்களில் கிட்டுகின்ற சில அரிய காட்சிகளை, தரிசனங்களை நீங்கள் தரிசிக்கலாம். எந்த கேதார்நாத்திற்கோ, பத்ரி நாத்திற்கோ நம் உடல்நலம், வசதி, செலவு காரணமாகச் செல்ல இயலாமற் போகிறதோ அக்காட்சிகளை எல்லாம் இறைவன் நமக்காகவே திரு அண்ணாமலையில் அளிக்கத் தயாராக உள்ளார்! யார் இதை உணர்கின்றனர்? ஆனால் ஒரு துளி மழை என்றாலே குடையுடன் மரத்திற்கடியிலும், கட்டிட மறைவிலும் ஓடுகின்ற நாம் இவ்வரிய இறைதரிசனத்தைப் பெற வேண்டுமெனில், உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்தே ஆக வேண்டும். அப்போது தான் காணுதற்கரிய இறைவனின் அத்திருக்காட்சிகளைப் பெற இயலும்
இன்றும் திருஅண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உச்சி மலை, சிகரத்தைச் சுற்றி மேகங்கள் சூழ்ந்து கொள்வதைக் காணலாம். தேவாதி தேவர்கள் பூஜை செய்கின்ற அற்புத நேரமாதலின் அவர்களே இவ்வித மேகக் கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எதற்காக? நாம் அவர்கள் பூஜையைப் பார்க்கக் கூடாது என்பதற்காக அல்ல! ஒளிமயமான அவர்களுடைய தேகங்களைக் காணும் சக்தியை நம் கண்கள் பெறவில்லை, அது பார்ப்பதற்கு ஒளிக் கற்றைகள் சிதறுவது போல் தோன்றும். என்னவோ ஏதோ தீப்பற்றிக் கொண்டு விட்டது என எண்ணி வேறு ஏதேனும் செய்யத் தோன்றும் அல்லவா? இந்த சாதாரண மனிதக் குறைபாடுகளால் தான் ஒளிப்பிரகாசம் கூடிய ஜோதி ரூபங் கொண்ட மஹரிஷிகள் கூட தங்கள் உண்மையான தேக காந்தியை வெளிக்காட்டாமல் சாதாரண சாந்த சொரூபியாக நம்முடன் வலம் வருகின்றனர். ஏதேதோ உருவில் அவர்கள் நடமாடுவதால்தான் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. கண்டு கொண்டாலும் நாம் நம்புவதும் கிடையாது. ஆழ்நிலை நம்பிக்கையே குரு நம்பிக்கையை வளர்க்கும். 
சூரிய யோக நிலைகள்!
உத்தராயண புண்ணிய காலத்தன்று ஸ்ரீசூரியபகவான் தன் யோக நிலைகளை மாற்றிக் கொள்வதால், அல்லது புதுவித யோக பூஜைகளை மேற்கொள்வதால் அதன் கிரணங்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. பிரதமை திதியன்று உள்ள சூரிய கிரண சக்தி, துவிதியை திதியன்று இருப்பது கிடையாது. அந்தந்த நட்சத்திர திதி, கரண, யோக, அமிர்த, சித்த கால நிலைக்கேற்ப சூரிய கிரணங்களின் சக்தியும் மாறுபடுகின்றன. ஏன்? இரவில் கூட சூரிய கிரண சக்திகள் நிலவத்தான் செய்கின்றன. இதனை நாம் உணர்வது கிடையாது. எனவே உத்தராயணப் புண்ய காலமாகிய தை மாதம் முதல் தேதியன்று ஸ்ரீசூரிய நாராயண சுவாமி அருள்பாலிக்கும் பாஸ்கர மண்டலத்தில் மேருச் சக்கர மூர்த்திகள் வழிபாடுகள் துவங்குகின்றன. நமக்கு விஞ்ஞானப் பூர்வமாக சூரியனைப் பூமி வலம் வருவதாகத் தோன்றினாலும் மேருச் சக்கரத்தைச் சூரிய பகவான் வலம் வருவதுதான் அவர்தம் இறைநியதியாகும்.
மேருச் சக்கரத்தை நம்மால் காண இயலாது. ஆனால் நாம் நம்முடைய சாதாரணமான மனித அறிவிற்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமாயின் ஓரளவிற்குத் தற்போதைய ஆல்ப்ஸ் மலைப் பகுதியை மேரு மலைப்பகுதி எனக் கூறலாம். அதனால் தான் இன்றும் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பல சித்புருஷர்களின் நடமாட்டம் உண்டு. அமைதியை நாடிச் செல்கின்றவர்கட்கு தெய்வீக அமைதியை நாடிச் செல்கின்றவர்கட்குத் ஆங்கே இவர்களுடைய தரிசனம் நிச்சயம் கிட்டும். எனவே, சித்புருஷர்கள் இல்லாத இடமே உலகில் கிடையாது. எந்தத் தீவிலும் எந்நாட்டிலும், எம்மலையிலும், எந்தப் பாலைவனத்திலும், எத்தகு ஆழ்கடலிலும் அவர்களுடைய போக்குவரவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கர்ம பூமியான நம் பாரதத் திருநாட்டில்தான், அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் தான் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்குச் சித்புருஷர்களின் நடமாட்டம் மிகுந்து காணப்படுகின்றது. எனவே, புண்ணிய பாரதத்தில் அதிலும் பெரும் புண்ணியத் தமிழகத்தில் பிறப்பது, வசிப்பது, வாழ்வினை முடிப்பது என்பது பெறுதற்கரிய பாக்கியம் என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஸ்ரீரவீஸ்வரர் (வியாசர்பாடி, கரூர் வாங்கல்), ஸ்ரீசூரிய நாராயண சுவாமி, தனித்து சூரிய சந்நிதி உள்ள ஆலயங்கள், சூரிய கிரணம் லிங்க/ பெருமாள் மூர்த்தித் தலத் தீர்த்தங்கள் இவற்றில் பகுதான்ய உத்தராயணத்தில் சூரிய காந்திப் புஷ்பங்களைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளிப்பதால் தந்தை வழிப் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம் வயிறு சம்பந்தமான மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
நித்ய க்ஷேம தர்ப்பணம் – பகுதான்ய வருட உத்தராயணத் தர்ப்பணம்
நான்கு தூண்கள் இருக்கக் கூடிய இடத்தைப் பொதுவாக நித்ய க்ஷேமத் தூண்கள் எனக் கூறுவர். இந்த நான்கு தூண்களுக்கு நடுவே அமர்ந்து செய்ய வேண்டிய காரியங்கள் எத்துனையோ இருக்கின்றன. வாஸ்து ரகஸ்ய சாஸ்திரப்படி இதில் தான் எல்லா தேவதைகளும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு இருக்கின்ற நான்கு தூண்களுக்குப் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகிய மூன்று வர்ணங்களை ஒவ்வொரு தூணுக்கும் பூசி, தூண்களுக்கிடையே மாவிலைத் தோரணங்கள் கட்டுதல் வேண்டும். மணமுள்ள மலர் மாலைகளைத் தூண்களுக்கும் தோரணத்திற்கும் இட வேண்டும் அல்லது தூண்களுக்கு வாழை மரம் கட்டிடலாம். வாழை மரம் கண்டிப்பாக இலையும், பூவும் கொண்டதாக இருத்தல் வேண்டும். இதன் பின்னர் நடுவில் வாழையிலை விரித்து அதன் மீது நவதானியங்களைப் பரப்பி நான்கு மூலைகளிலும் தங்கக் காசு வைத்து அதன் மீது மற்றொரு வாழையிலையை வைத்து அதன் மேல் அரிசியைப் பரப்பி தர்ப்பை சட்டம் வைத்து தர்ப்பணம் இடுதல் வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறை ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். பெண்கள் தர்ப்பணம் இடும்போது தங்கக் காசிற்குப் பதிலாக வெள்ளிக் காசு வைத்திடல் வேண்டும். நான்கு தூண்களின் நடுவில் இத்தர்ப்பணப் பூஜையை இன்று செய்வது விசேஷமானது. தர்ப்பணம் முடிந்த பின்னர் வெள்ளி மற்றும் தங்கக் காசுகளை ஏழை, எளியோருக்குத் தர்மம் செய்து விட வேண்டும். இதனால் பிறரைப் பல வகைகளில் ஏமாற்றிய, வஞ்சித்த, துரோகம் செய்ததற்குத் தக்க பரிஹார நல்வழிகள் கிட்டும்.

மூன்றாம் பிறை

நீண்ட நாளாகத் திருமணமாகாத பெண்களும் பூராடம், ஆயில்யம், மூலம், கேட்டை போன்ற நட்சத்திரங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால் திருமணம் கைக்கூடாது தாமதமாகும் பெண்களும் இப்பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய அற்புதப் பரிகாரம் ஒன்றுண்டு. மூன்றாம் பிறையன்று ஒரு பொன் தாலியை வைத்து, ஸ்ரீசந்திரசேகராஷ்டகம் அல்லது சிவ சகஸ்ரநாமம், சிவ அர்ச்சனைத் துதிகளை ஓதி அதற்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். இப் பூஜையைத் தொடர்ந்து மூன்று மாதம் மூன்றாம் பிறை தினங்களில் செய்த பின்னர் தாலியை நான்காவது மாத மூன்றாம் பிறையில் சந்திர தரிசனத்திற்குப் பிறகு ஏழைகட்குத் தானமாக அளித்திடல் வேண்டும். இந்த விசேஷமான பிராயச்சித்தப் பரிஹாரத்தைச் செய்து வர, திருமணத் தடங்கல்கள் விலகி நன்முறையில் திருமணங்கள் நடந்திடும். இதில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுண்டு. அனைத்து இருபத்தியேழு நட்சத்திரங்களும் சிறப்பானவையே. இதில் எந்த ஒரு நட்சத்திரமும் ஆகாததோ அல்லது கூடாததாகவோ நாம் நினைப்பது தவறு.. இது போன்று கேட்டை, பூராடம் போன்ற நட்சத்திரங்களைச் சார்ந்த பெண்கள் என்பதைக் காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது சாபங்களையே பெற்றுத் தரும். இது குறித்து கடந்த சில ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் தெளிவுபடுத்தியுள்ளோம். வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் சிலருக்குக் கைகளோ அல்லது தலையோ நிலை கொள்ளாமல் தனிச்சையாக ஆடிக் கொண்டிருக்கும். (Parkinson diesease) இவர்கள் மூன்றாம் பிறையில் செய்ய வேண்டிய ஓர் அற்புத பூஜையொன்றுண்டு.
மூன்றாம் பிறை தினங்களில் வாதத்திற்குரித்தான வாத நாராயணன் தைலம் போன்ற தைலங்களை முன் வைத்து ஸ்ரீசந்திரசேகராஷ்டகம், ஸ்ரீசிவசகஸ்ரநாமம் போன்ற விசேஷமான இறைத் துதிகளை ஓதி ஒரு வருடம் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்திடல் வேண்டும். அவர்கள் அந்த வாத தைலங்களைப் பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். இதே போன்று இம்மூன்றாம் பிறை நேரங்களில் செய்யப்படும் ஸ்வர்ண தானம் மிகவும் விசேஷமான பலன்களைக் கூட்டித் தரும். நல்ல தேஜஸ்வியான உடல் உருவத்தைத் தரும். இது போன்ற தேஜஸான உருவம் கொண்டோர் அதைப் பயன்படுத்தி நற்காரியங்களையும், இறைச் சேவைகளையும் செய்து வந்திடில் நீண்ட ஆயுளையும் நல்லதொரு அணுக்கிரஹத்தையும் பெறுவர். க்ஷய ரோகம், T.B., T.B யுடன் சேர்ந்த ஆஸ்த்மா, சிறு குழந்தைகளுக்கு வரும் Primary Complex போன்ற வியாதிகளால் பீடிக்கப்பட்டோர் மூன்றாம் பிறையில் செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறையுண்டு.
இல்லந்தோறும் இப்பூஜையைச் செய்வதானால் இந்த நோய்கள் தங்களை அண்டாவண்ணம் காத்துக் கொள்ளலாம். சிவனின் சிரசில் பரிணமிக்கும் மூன்றாம் பிறைக்குப் பசும்பாலை நிவேதனமாக வைத்துப் பருகி வந்திடில் அவரவர் பக்திக்கும், இறை நம்பிக்கைக்குமேற்ப இந்நோய்களின் வேகம் தணிந்து நிவாரணம் பெறுவர். மூன்றாம் பிறையன்று ஒருவர், திருஅண்ணாமலையாரைத் தரிசன செய்து கிரிவலம் வந்திடில் நல்ல மனைவி அமைவாள். இதற்காகவே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவர்களுடைய ஜாதகங்களைத் தாங்கி மூன்றாம் பிறையன்று கிரிவலம் வருவது நல்ல தாம்பத்ய வாழ்வைத் தரும்.
சந்திரனே ஈஸ்வரனின் அம்சம்!
சிவபெருமானின் தலையில் மூன்றாம் பிறையாய் பரிணமிக்கும் ஸ்ரீசந்திரபகவான் ஜகந்மாதாவாகிய பராசக்தியின் தாடங்கமாக, காதுத் தோடு ஆக, பூரணச் சந்திரனாக மிளிர்கின்றான். சர்வேஸ்வரனிடத்தில் மூன்றாம் பிறையாக மிளிரும் போது அவரிடத்தில் கிரஹித்த மந்திர சக்திகளையும், தெய்வீக ரகசியங்களையும், தாம் பெற்ற தெய்வீக அனுபவங்களையும், அவர் பூரண கலைகளுடன், முழு நிலவாய், பௌர்ணமியாய் அம்பாளின் தாடங்கமாக விளங்கும் போது இவ்வனைத்து ரகசியங்களையும் அம்பாளின் காதுகளில் உரைக்கின்றார். என்னே ஒரு பாக்யம்? எனினும் அம்பிகை அறியாதது ஏதும் உண்டா என்ன? ஆம்! இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே ஒரு பாலமாகவும், தெய்வீக ரகசியங்கள், அற்புத மந்திர சக்திகள் மற்றும் எண்ணிலடங்கா இறையனுபவங்களையும், தாத்பர்யங்களையும் பரிமாற ஒரு கருவியாய் அமைவது என்றால் பூரண தெய்வீக குருவருளைப் பெற்றவரால் மட்டுமே இது சாத்தியமாகும். பூரண குருவருளைப் பெற்றிட்டு சர்வேஸ்வரனுடைய தலையில் மிளிரும் ஸ்ரீசந்திர பகவானே ஸ்ரீவித்யா பூரண சந்திரனாக மூன்றாம் பிறையன்று மிளிர்கின்றார். எவ்வாறு ஸ்ரீதட்சிணா மூர்த்தி மௌனமாய் ஞான அறிவைப் புகட்டுகின்றாரோ அதே போல மூன்றாம் பிறை தரிசனம் மூலமாக ஸ்ரீவித்யா பூரண சந்திர மூர்த்தி அருள்கின்றார்.
மூன்றாம் பிறை தரும் குரு தத்துவம்
ஈஸ்வரனின் சிரசிலும், அம்பிகையின் தாடங்கமாகவும் ஸ்ரீசந்திர பகவானானவர் வீற்றிருந்து இறைவன் மற்றும் அம்பாளிடமிருந்து வெளிப்படும் தெய்வீக சக்திகளைத் தம்முள் ஏற்று பூரணமாக கிரஹிக்க முடியவில்லை. குரு தத்துவம் பூரணமாக நிறைந்த மூன்றாம் பிறையில் சந்திர பகவான் மிளிரும் போதுதான் குரு அருளால் அனைத்து சக்திகளையும் தம்முள் ஏற்று கிரஹிக்கும் அனுக்கிரஹத்தைப் பெறுகிறார். இதனால் தான் ஈசனும் மூன்றாம் பிறைச் சந்திரனை உவந்து தம் தலையில் ஏற்றார்.
கோபம் அடங்கும் வழி
ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தி ஹிரன்யனை வதம் செய்த பின்னர் அசுரனாகிய அவனுடைய உதிரம் பூமியில் விழுந்தால் அது மேலும் பன்மடங்குத் தீவினைகளை உலகில் பெருக்கும் என்பதால் அவனுடைய உதிரம் முழுவதையும் தம்முள் ஏற்றார். ஒரு கொடிய அசுரனின் ரத்தத்தை ஏற்றமையால் ஸ்ரீநரசிம்ஹ மூர்த்திக்கு மேலும் உக்ரஹம் கூடி அனைத்து அண்டங்களும், லோகங்களும் அதிரும் வண்ணம் கர்ஜித்துக் கோபக் கனலாய் இருந்தார். பொதுவாக ஒருவருடைய கோபத்தைத் தணிக்க வேண்டுமெனில் அவரை விட உக்ரஹமான மற்றொருவராலேயே அது சாத்தியம். எனவே சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியை விட உக்ரஹ ரூபமாகிய ஸ்ரீசரபேஸ்வர உருவம் பூண்டு ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியின் உக்ரஹத்தைத் தணித்தார். ஏன் இன்னும் சொல்லப் போனால் மனிதர்களிடையே இருக்கும் அசுர குணங்களைத் தணிப்பவர் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியே. ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உள்ள ஒன்பது விதமான அசுரர்களான முறையற்ற காமம், குரோதம், லோபம், மோஹம், பொறாமை, வெறி போன்றவற்றை அடக்குபவரும் அவரே.  ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியே அத்துனை உக்ரஹத்துடன் இருந்த போதும் ஸ்ரீசரபேஸ்வரரைக் கண்டு அதிசயித்தார்! ஆகவே, ஸ்ரீசரபேஸ்வரர் ஸ்ரீகம்பஹேஸ்வர் என்ற பெயர் தாங்கி, வேண்டி வணங்குபவர்களின் நடுக்கங்களைப் போக்குகிறார்..
ஆத்திரக்காரனுக்குப் புத்து மட்டு என்று கூறுவது போல் நாம் கோபத்தினால் செய்து விடக் கூடிய அறிவற்ற செயல்களிலிருந்தும், தவறுகளிலிருந்தும் இவர் நம்மைக் காத்து அருள்கின்றார். ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியினுடைய வித்யாசமான உக்ரஹ ரூபத்தின் விசேஷம் என்னவென்றால் அந்த ரூபத்தை நாம் பார்க்கும் போதே அவரிடமிருந்து பரவும் சக்தி நம்மிடையே உள்ள அசுர சக்திகளாகிய கோபம், தாபம், மயக்கம், ஏக்கம், துர்குணங்கள், சந்தேகம் போன்றவற்றைத்  தாமே அடக்குகின்றது.

ஸ்ரீஐயப்ப விரதம்

யோக பட்டம் :- ஸ்ரீஐயப்ப சுவாமி விரத சீல நாயக தெய்வ மூர்த்தி! ஆசார அனுஷ்டானங்களை விட கடுமையான விரத சீலத்தை தன்னுடைய அன்றாட வாழ்க்கையாகக் கொண்டவர். ஆகையால் ஸ்ரீஐயப்ப சுவாமியின் தரிசனமும், அனுகிரஹத்தையும் பெறுவதற்காண பாக்யம் விரதத்தின் தீவிரத்தைப் பொறுத்தே அமையும். இந்த காரணத்தாலேயே ஸ்ரீஐயப்ப சுவாமி யோக பட்ட முறையில் அமர்ந்து அருள் பாலிக்கின்றார். புனிதமான விரதத்தினுடைய ஒரு பிரதி பிம்பமே இந்த யோகக் கோலம். விரதங்களை ஏற்றுச் செய்வது ஒரு வித தவமே. அந்த விரதங்களை நன்கு கடைபிடித்து ஐயப்பனுடைய பரிபூரண அனுகிரஹத்தைப் பெற்று எல்லா நற்காரியங்களையும் சாதித்து மறுபிறவியில்லாத பிறப்பற்ற நிலையை அடைவதற்கு ஒரு வைராக்ய தவவலிமையைத் தரவே யோக சாஸ்தாவாக அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கின்றார். ஒருவனை யோகியாக ஆக்குவதற்குப் பெரும் துணை புரிகின்றவர் ஸ்ரீஐயப்ப சுவாமி.
தேவ பூஜைகளே நமக்கான பிராயசித்தம்!
பொதுவாக எப்பொழுதெல்லாம் மக்கள தரிசனத்திற்கு ஸ்ரீஐயப்ப நடை திறக்கப்படுகிறதோ அந்த நேரத்தை தவிர மற்ற நடை மூடப்படும் நேரங்கள் முழுவதிலுமே தேவ பூஜைகள் தான் சிறப்பாக நடைபெறுகின்றன. இமாலயத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் க்ஷேத்திரங்களில் குளிர் காலத்தில் நடை சாற்றப்படுகிறபோது தெய்வங்களும், தேவதைகளும் இறைவனுக்கு அற்புத பூஜைகளை நிகழ்த்துகின்றனர். அதே போல ஸ்ரீஐயப்ப மலையில் மாத பூஜைக்குப் பிறகு நடை சாற்றிய பின்னர் அங்கு முழுவதும் சித்தர்கள் மற்றும் மஹான்களின் சஞ்சாரங்களே நிறைந்திருக்கின்றன. அவர்கள் அனைத்து விசேஷ பூஜைகளையும் அனைத்துக் கால வழிபாடுகளையும் விடாமல் கடைபிடிக்கின்றனர். ஏன்? இவ்வாறு பூஜைகளைக் கடைபிடித்து மக்கள் செய்கின்ற அனைத்து விதமான தவறுகளுக்கும் விரத பங்கங்களுக்கும் பிராயச்சித்த பரிஹாரங்களை அவர்களே நிகழ்த்துகின்றனர். இவ்வாறு மக்கள் செய்யும் தவறுகளை நிவர்த்தி செய்ய பரிஹாரங்களைச் செய்யும் சித்தர்களின் கருணையையும் அன்பையும் வார்த்தைகளால் தான் விவரிக்க இயலுமா?
சித்தருக்கும் விரதம்
அனைத்தையும் கடந்து நின்று என்றும் எப்போதும் சித்தத்தை சிவன்பால் வைத்து சிவனாக, சர்வேஸ்வர பரஞ்ஜோதிகளாகத் திகழும் சித்தர்கள், தேவ விரத முறைகளை பின்பற்றித்தான் ஸ்ரீஐயப்ப மலைக்கு வருகின்றார்களேயானால், மிகவும் சாதாரண மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் சித்தர்கள், யோகிகள், மஹான்களுடைய விரத முறைகளை நாம் பூணும் விரதத்துடன் ஒப்பிட முடியாது. அது மிகவும் மாறுபட்டு மனித அறிவுக்கு எட்டாத பல சூட்சும ரகசிய தாத்பர்யங்கள் நிறைந்தது. அந்த விரத முறைகளை அக்னி பரிஹார சித்தி என்ற வகையில் கையாள்கின்றனர். இம்முறையில் விரதம் பூண்டு விரத, பூஜை மாசுகளைத் தூய்மைப்படுத்தி, புனிதப்படுத்தி மக்கள் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்றனர். சித்புருஷர்களும், யோகிகளும், மஹான்களும் ஏறுகின்ற அப்பதினெட்டு படிகளுக்கு உள்ளேயும் பலவித அற்புத தெய்வீக சக்திகள் விளங்குகின்றன. அந்த கல்ப  சக்திகளை எல்லாம் முறைப்படுத்தி, எளியோர், காலால் மிதித்த தோஷங்களுக்கான பிராயச்சித்தங்களை அக்னி பிராயச்சித்த சித்தி என்ற முறையில் தூய்மைப் படுத்துகின்றனர்.
கணவனுடைய தோஷங்கள் நீங்கிட... இதற்கு ஸ்ரீஐயப்பனுக்கு பவள மல்லி அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பவழமல்லி கொண்டு 108 பூக்கள் கோர்த்த பத்து சரங்களை ஒன்றாய் சேர்த்து போடப்படும் மாலை மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். ஸ்ரீஐயப்ப மலைக்கு போகின்றவர்களின் வீட்டில் மனைவி, மக்கள் இது போன்ற மாலைகளைக் கட்டி ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு சாற்றி வழிபடுதல் சிறப்புடையதாகும். சனி ஹோரை நேரத்தில் இது போன்ற மாலையைக் கட்டத் தொடங்கி சனி ஹோரையிலேயே முடித்து, அம்மாலையை அந்த ஹோரை நேரத்திலேயே ஸ்ரீஐயப்பசுவாமிக்கு சாற்றி தேங்காய் அன்னம் படைத்து தானம் செய்திட வேண்டும். பொதுவாக நாம் வெளியில் தெரு வழியே நடக்கும் போது அறிந்தோ, அறியாமலோ திருஷ்டி பூசணிக்காயை, தேங்காயை மிதிப்பதால் கரி தோஷம் வந்து சேர்ந்துவிடுகிறது. இது பலவிதமான துன்பங்களைத் தந்து விடும். இந்த தோஷங்கள் நம்மை அண்டாவண்ணமிருக்க சனிக்கிழமைகளில் மேலே குறிப்பிட்டுள்ளது போல இந்த பூஜையைச் செய்திடல் வேண்டும். இதனால் வீட்டில் உள்ளோருக்குத் தீய கனவுகள் வருதல், கணவன்மார்களுக்கு எதிர்பாராத ஆபத்துக்கள் வருவது தடுக்கப்படுகின்றது.
தீப பூஜை
ஞாயிறு :- குடும்பத்திலுள்ளோர் காலையில் சூரிய ஹோரையில் தொடங்கி செம்பருத்திப் பூ கொண்டு குறைந்தது இருபத்தியோரு மாலை அல்லது ஐம்பத்தியோரு மாலை தொடுத்து, சூரிய ஹோரையில் முடித்து, ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு சாற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேதனம் வைத்து அதைத் தானம் செய்ய வேண்டும். இதனை முறையாகச் செய்து வந்தால் திடமான மனது, ஸ்திரமான வேலை (Permanent Job) நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வுகளும் வந்து சேரும். ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு ஞாயிறன்று நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப்பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்று அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதலாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்கு தேங்காயெண்ணையை பயன்படுத்துவது சிறந்தது. இது போன்று ஏற்றி வழிபடுவதால் தடைபட்ட வருமானங்கள் தடையை மீறி வருவதற்குச் சந்தர்ப்பம் உண்டு.
திங்கள் :- இன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப் பட்சிகள் போன்று அரிசிமாவு, கோலம் வரைந்து அவற்றின் மேல் இத்தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்ப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.
செவ்வாய் :- அரிசி மாவுக் கோலத்தில், இரட்டைக் கிளி உருவம் வரைந்து அதன் மேல் ஐம்பத்தி நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசு நெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும். கணவன் மனைவியரிடையே தாம்பத்ய உறவு மேம்படும்.
புதன் :- இன்று இருபத்தி மூன்று தீபங்கள் ஏற்றி அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேலும் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்லெண்ணய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. குழந்தைகளின் மந்த புத்தி அகலும்.
வியாழன் :- தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்.
வெள்ளி :- அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணெயில் நெய் காய்ச்சி தீபமேற்றுதல் மகா விசேஷம். மூன்று உள்வட்டமாகச் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

சனி :- நல்லெண்ணைய் கொண்டு எண்பது விளக்குகளோ அல்லது மொத்தத்தில் எண்பது தீப முகங்கள் கொண்டது போலோ விளக்குகளை ஏற்றலாம். பித்ரு சாபங்களை நீக்கும்.
அங்காரக சதுர்த்தி
சிலர் ஆணாக இருந்தாலும் பெண்களுக்குரித்தான குணாதிசயங்களைப் பெற்றிருப்பர். இந்நிலை மாறி அவர்கள் பூரண ஆண்மையைப் பெறுவதற்காகவும், நிலம், பூமி, வாகனம் போன்ற நிலையான சொத்துக்களைப் பூரணமாக பெறவும், காதலில் தோல்வியுறாமல் பெரியவர்கள் ஆசியுடன் நல்லதொரு திருமணம் நடப்பதற்காகவும், பூமியில் விளைகின்ற அனைத்துத் தாவர இனங்களும் தன்னுடைய நற்குணத்தை இழக்காமலிருக்க உதவுவதற்காகவும், வைத்தியத் துறையில் ஒரு மேன்மையான உயர்ந்த நிலையை அடைவதற்காகவும், வாகன கனரகத் துறையில் விருத்தி பெறுவதற்காகவும் மேற்கண்ட துறையைச் சார்ந்தவர்கள், செவ்வாய்க் கிழமையும், சதுர்த்தியும் சேர்ந்து வருகின்ற நாளில் உண்ணாநோன்பு இருத்தல் வேண்டும். அங்காரக சதுர்த்தி பூஜை செய்வதற்கு முன்னால் தாய், தந்தையர்க்கு பாதபூஜை செய்ய வேண்டும் அல்லது தன்னை வளர்த்தவர்களுக்கு அல்லது தன்னை ஒரு நல்ல நிலைக்கு கொணர்ந்தவர்களுக்கு பாதப்பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு செவ்வாயும், சதுர்த்தியும் சேருகின்ற நாளில் செந்தூர விநாயகர் அல்லது சிகப்பு வர்ண விநாயகரை (திருஅண்ணாமலை போன்ற இடங்களில் காணலாம்) வணங்கி அடிப்பிரதட்சிணம் அல்லது கிரிவலம் வருதல் வேண்டும். செவ்வாய்க்கிழமை சதுர்த்தி முடியும் நேரம் வரை கிரிவலத்தைத் தொடர வேண்டும்.
இது போன்று முறையாக அங்காரக சதுர்த்தியில் செய்யப்படும் பூஜைகளினால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன அக்னிக்கு உரியவர் செவ்வாய் பகவான். உஷ்ண சம்மந்தமான தோஷங்களினால் வரும் நோய்கள் அகல்கின்றன. அதாவது, வெட்டை, வெள்ளைப்படுதல், மது மேகம் போன்ற மேக நோய்கள், வெண்புள்ளி, வெண்குஷ்டம் (Leukoderma) போன்ற நோய்கள், தீப்புண் காயங்கள், தீப்புண் வடுக்கள், தழும்புகள் போன்றவற்றிற்கு நிவாரணம் பெறவும். தீயணைப்புத் துறையில் பணிபுரிவோர், தீ சம்பந்தம் கொண்ட இடங்களில் வேலை செய்வோர், வெல்டிங், உலைகலம், உரத் தொழிற்சாலை, ரசாயனப் புகைகள் (Chemical Group) திராவகம் (Acids) சம்பந்தமான தொழிலில் வேலை செய்வோர், கேஸ் கம்பெனிகள் வைத்திருப்போர், அதில் பணிபுரிவோர் இவர்களெல்லாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பூஜை செய்தல் சிறப்புடையது. ஆபத்துகளிலிருந்து காக்கும் இப்பூஜையை மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை கிரிவலம் வந்தும் நிகழ்த்திடலாம். இது மட்டுமல்லாது எங்கெல்லாம் மலைக்கோயில்களில் பிள்ளையார் சந்நதி இருக்கிறதோ அங்கெல்லாம் இப்பூஜையைச் செய்யலாம்.

கொல்லிமலை

ஸ்ரீஅறப்பளீஸ்வரர் மஹிமை கொல்லிமலை
மிகவும் சக்திவாய்ந்த மூலிகைகள் உள்ள, காண்பதற்கு மிகவும் பாக்கியம் வாய்ந்த கோவில். கோவிலைச் சுற்றிலும் மூலிகைகள் பெரும் அளவில் உள்ளதால் அங்கு வீசுகின்ற காற்றிற்கும் மிகுந்த மூலிகை சக்தி உண்டு. தேகத்திற்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு நல்சிந்தனைகளையும் கொடுக்கும் வகையில் எண்ணில்லா சித்தர்களின் அருளுடனும், மூலிகை மனத்துடனும் உள்ள மிகவும் புனிதமான காற்றாகும். பூவுலகில் அற்புத மூலிகைக் காற்று வீசும் அரிய தலங்களில் இதுவும் ஒன்று!
துவார பாலகர்களாய்ச் சித்தர்கள்
இத்திருக்கோவிலில் வேறு எங்கும் காணுதற்கு அரிய வண்ணம் சித்தர்கள், துவார பாலகர்களாய் அருள்பாலிக்கின்றனர். அறம் என்றால் தர்மம், நேர்மை, நியாயம், எனவே நல்லவை, கெட்டவை என்று நம் அறிவிற்குத் தெரியும் வண்ணம் பளிச்சென்று காட்டக் கூடியவர் ஸ்ரீஅறப்பளீஸ்வரர் ஆவார். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! நோய் தீர்க்கும் ஞானமூர்த்தி! மூலிகை வாசம் கொண்டவராதலின் இவருக்குக் காட்டப்படும் நெய் தீபத்தில் கூட மூலிகை வாசப் பரிமாணத்தை உணரலாம்.
இத்திருக்கோவிலில் சித்தர்களின் சஞ்சாரங்கள் எப்பொழுதும் உண்டு. எல்லாவிதமான நோய்களையும் தீர்க்கும் அளவிற்கு மூலிகைச் சக்திகளும் இங்கு உண்டு. நுகர்ந்தாலே யோக சக்தி தரும் மூலிகைகள் அதிகமுள்ளன, அடியார்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து, ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கியிருந்து மூலிகைச் சக்தி நிறைந்த அருவியில் தினந்தோறும் நீராடி இங்குள்ள ஸ்ரீஅறப்பளீஸ்வரருக்குச் சேவைகள் செய்து வணங்கிடத் தீராத நோயும் தீரும் என்பது சித்தர்களின் திருவாக்காகும். பொருள் வசதி உள்ளவர்கள் இக்கோவிலில் வந்து ஒரு மாதம் தங்கியிருந்து இங்குள்ள மூலிகைச் சக்தி நிறைந்த அருவியில் தினந்தோறும் நீராடி ஸ்ரீஅறப்பளீஸ்வரருக்கு இறைப்பணி, ஏழைகட்கு அன்னதானம் செய்து வணங்கிட அவர்களுக்கு உடலானது எவ்வித நோய் நொடியின்றி ஒரு வருடம் ஆரோக்கியமாக இருக்க ஸ்ரீஅறப்பீஸ்வரர் அனுக்கிரகம் செய்கின்றார். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தவையே இங்குள்ள மூலிகை தீர்த்தங்களாகும். ஒரு மண்டலம் வாசம் ஓராண்டு நல்ஆரோக்யம் தரும்.
ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அவதாரத்திற்கு முன்னரேயே சரபேஸ்வர அவதார வைபவம் நிகழ்ந்துவிட்டது. தேவர்களும் மற்ற  அனைவரும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தைத் தாங்க இயலாது சிவபெருமானை சரணடைந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின்  உக்ரத்தைத் தணிக்குமாறு வேண்டினர். சிவபெருமானும் சிம்புல் பறவை அம்சங்கள் கூடிய ஸ்ரீசரபேஸ்வர வடிவம் எடுத்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைத் தனது மடியில் அமர்த்தி அவர் அருந்திய இரண்யகசிபுவின் குருதியணுக்களை வாயு ரூபமாக வெளியேற்றினார். இதன் பின்னரே அதிகமான உக்ர நிலையிலிருந்து சற்றுத் தணிந்த நிலைக்கு வந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை பிரகலாதன் தனது உத்தம பக்தியால் உருகிப் பாடி மேலும் உத்தம பக்தியால் அமைதிப்படுத்தினார். சிம்புல் பறவை நடமாடும் அதிசயத் தலங்களுள் கொல்லி மலையும் ஒன்றாகும்.
ஸ்ரீஅறப்பளீஸ்வரர் கோவில் தீர்த்தம்
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரம் தணிவதற்காக சிம்புல் பறவையாக ஸ்ரீசரபேஸ்வர வடிவம் எடுத்த அதே கோலத்துடன் சிவபெருமான், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரம் தணிக்கப்பட்டவுடன் ஸ்ரீஅறப்பளீஸ்சுவரர் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடினார். அதே நேரத்தில் கபில தேவர்களும், முனிவர் முதற்கொண்டு எல்லா விதமான பதினெண் சித்தர்களும் இங்கு வந்து நீராடினர். அப்பொழுது ஸ்ரீசரபேஸ்வரர், இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு எல்லா விதமான அனுக்கிரகத்தையும் தருவோம். எதிரிகளால், பணத்தினால், ஏவல்களால், பில்லி சூன்யங்களால் வருகின்ற துன்பங்கள், தீராத பிணிகளாய் இருந்தாலும் அனைத்தையும் தீர்த்து வைப்போம் என்று சங்கல்பம் செய்து இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தார். இங்கு ஸ்ரீஅறப்பளீஸ்வரரே, ஸ்ரீசரபேஸ்வர வடிவத்துடன் இருக்கின்ற சிவ பெருமானுக்கு அதிதி போஜனம் படைத்தார். இதன் பிறகே சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர வடிவம் மாறி சாந்தமய தேகத்தைப் பெற்றார். இங்கு அமாவாசையன்று அதிதி போஜனமாகிய அன்னதானம் இட்டிடில் பித்ருக்களின் ஆசி கிட்டும்.
திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி
திருபுவனத்தில் உள்ள ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு, இறைப் பணி புரிந்தோர்க்கே அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீசரபேஸ்வர தீர்த்த பலன்கள் கிட்டும் என்ற நியதியையும் சித்தர்கள் வகுத்தனர். இத்தீர்த்தத்தில் நீராடினால் வரும் பலன்கள் எண்ணிறந்தன. சித்தர்கள் மிகவும் மருத்துவ சக்தி வாயந்த மூலிகைகளை அமாவாசையன்று பறித்து இத்தீர்த்தத்தை வைத்து, வளர்பிறையில் மருந்து செய்து அதை முழு பௌர்ணமி நிலவில் காய வைத்து, அரைத்து தேய்பிறையில் இம்மூலிகை மருந்துகளை இதே தீர்த்தத்தில் கரைத்து விடுகின்றனர். ஆதலால் வெட்டுக் காயங்கள், ஆறாத ரணங்கள் (புண்) தலைவலி, பீனிஸம், ஆஸ்துமா போன்ற நோய்களும் விரைவில் குணமாகும். மன அமைதி இல்லாது இருக்கின்றவர்களும் இந்த தீர்த்த நீராடலால் மன நிம்மதியை அடைகின்றனர். மனத்தெளிவில்லாது இருப்போருக்கும், சஞ்சல மனமுடையோர்க்கும், மூட்டுவலி, வாயு பிடிப்பு போன்ற அனைத்திற்கும் இத்தீர்த்தத்தின் மூலம் ஸ்ரீஅறப்பளீஸ்வரர் நமக்குத் தீர்வு அளிக்கின்றார். இங்கு சித்தர்கள் இன்றைக்கும் அருவமாகவும், என்றும் எப்போதும் உருவமாகவும், நடமாடுவது உண்டு. பாக்கியம் உள்ளவர்கள் இன்றும் இவர்களை தரிசனம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஸ்ரீசரபேஸ்வரருக்குச் சேவையும், பூஜையும் செய்ய விரும்புவோர், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடிய பின்னர் பிறருக்குச் சரீர சேவை செய்தல், ஸ்ரீசரபேஸ்வரருக்கு மிகவும் ப்ரீதி கொடுக்கக் கூடிய ஒரு விசேஷமாகும். ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி அவர்களுக்கு எல்லாவித அனுக்கிரகங்களையும் தந்தருள்கின்றார். மொத்தத்தில் ஸ்ரீசரபேஸ்வர அருட்கடாட்சம் நிறைந்த தலம் இது.
கொல்லிமலை ஸ்ரீசரஸ்வதி
இத்திருத்தலத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியார் ஸ்ரீவித்யா சரஸ்வதியாகத் திருநாமம் பூண்டு (சித்தர்கள் இட்ட பெயர்) அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். உயர் கல்விக்கு உரித்தான தேவி! எப்பொழுதுமே மலை உச்சியில் உள்ள தெய்வங்களுக்குத் தனிமகத்துவம் உண்டு. மலைத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாலட்சுமிக்கு துவாதசி திதியில் சந்தனக் காப்பிட்டு, அதனைப் பிரசாதமாகப் பெற்று, தினமும் நெற்றியிலிட்டு, சிறிது துளசி தீர்த்தத்தில் கலந்து, பிரசாதமாக அருந்தி வந்திடில் வறுமையும், பணக் கஷ்டமும் அகன்று செல்வச் செழிப்பில் உச்சநிலையை அடைவார்கள். அதே போன்று இங்கு ஸ்ரீசரஸ்வதி தேவியே, வேத ஞானம் பெற வேண்டி, தவக் கோலத்தில் அருள்பாலிப்பதால் நவமி திதியில் அம்பிகைக்கு வெண்பட்டு சார்த்தி, ஏழைகளுக்கு அதனை தானமாக அளித்து வர கல்வியில் உச்சநிலையை நிச்சயம் அடைவார்கள்.
ஸ்ரீவலஞ்சுழி விநாயகர் (கொல்லி மலை)
இங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு ஸ்ரீவலஞ்சுழி விநாயகர் என்று பெயர். இது ஒரு பொதுவான பெயராகிடினும் சித்புருஷர்களின் ஆலய கிரந்தங்களில் ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதி என்பது இவருக்கு உரித்தான தனிச் சிறப்பு வாய்ந்த திருநாமமாக அளிக்கப்பட்டுள்ளது. இவர் மகா விசேஷமான மூர்த்தி! ஏனென்றால் பிள்ளையாரே இவ்விடத்தில் வைத்தியராக அமர்ந்து அருள் பாலிக்கின்றார். பல சித்தர்களுக்கு குருவாய் இருந்து, பல அரிய ஔஷத சிந்தாமணிப் பிள்ளையார்! மருந்துகளாலோ, மூலிகைகளாலோ குணமாகவில்லை என்றால் அமாவாசை தோறும் இந்த ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதியை உளமார ஸ்தோத்திரம் செய்தால் பாக்யம் உள்ளோர்க்குத் தாமே சுட்சுமமாய் ஔஷதங்களையும், மருந்துகளையும் கொடுக்கக் கூடிய அபூர்வமான மூர்த்தி ஆவார்.
ஆனைமுகத்தானின் ஔஷத ஆசிகள் :
ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் என்ற ஒரு பெரிய சித்தர் காசியிலிருந்து ஸ்ரீஅறப்பளீஸ்வரர் ஆலயத்திலுள்ள (கொல்லிமலை) ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதியை தரிசிக்க நடந்தே வந்தார். அப்படிப் பல இடங்களிலும் தீர்த்த யாத்திரையாக நடந்து வரும் பொழுது இமயமலையிலுள்ள தீர்த்தங்களையும், அங்குள்ள அரிய அற்புதமான மூலிகைகளையும் எடுத்து வந்து ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதிக்கு மூலிகா திரவிய அபிஷேகம் செய்தார் . இதனால் ஆனந்தமடைந்த ஸ்ரீஔஷத கணபதியானவர் தம் துதிக்கையால் தம் ஆசியாக பிரசாத தீர்த்தத்தை (பிளறி) பீறிட்டுத் தெளித்தார். ஸ்ரீகணபதியின் துதிக்கையிலிருந்து வந்த புனிதமான தீர்த்தம் ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் திருமேனி மீது பட்டு அவயங்கள் அனைத்தும் அவருடைய தேவ கல்பமாய் மாறின. இதனால் அவர் நித்ய சித்தரானார். இன்றைக்கும் சூட்சுமமாய்ப் பல இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றும் நித்ய சித்புருஷரவர்!
யானை பிளிறல் தீர்த்தம்
யானையானது தண்ணீரை உள்ளிழுத்து அத்தண்ணீராது அதன் பிளிறல் மூலம் பீறிட்டு நம் மீது படுமாயின் அது சக்தி வாய்ந்த, மிகவும் புனிதமான தீர்த்தமாகும். யானையின் ஆசியைப் பெறும் நற்பழக்கம் இன்றும் கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நற்பழக்கத்திற்கு மூல காரணமாகவே ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதியின் இத்திருச்செயல் அமைந்தது. எனவே, எங்கு யானையின் துதிக்கையிலிருந்து தீர்த்தமானது நம்மீது தெளிக்கப்படுகின்றதோ அதை ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதியை செய்து அருள்வதாக சித்தர்கள் கூறுகின்றனர். யானைத் துதிக்கையில் ஊறும் மதக் கல்ப திரவ்ய ஜலத்திற்குத் தோல் வியாதிகளை குணப்படுத்தும் தெய்வீகச் சக்தி உண்டு!
ஸ்ரீஔஷத சிந்தாமணியே மஹா தேவ வைத்தியர்
தேவலோகத்தில் 84 கோடி வைத்திய சித்தர்கள் ஒன்று கூடி பிரபஞ்சத்தின் ஔஷத தேவ மூர்த்திகளை சமஷ்டி பூஜையின் மூலம் வழிபட விரும்பினர். இந்த 84 கோடி வைத்திய சித்தர்களும் தான் 72,000 நாடி நரம்புகளில் வருகின்ற அனைத்து வியாதி நிவாரணங்களில் சிறப்பிடம் (specialists) பெற்றவர்கள். நம் உடலில் 21,600 மூச்சு ஸ்தானங்கள் உண்டு. இவற்றில் சுவாச பந்தன அம்சங்களைக் கண்டறிந்து ஔஷத மூலிகை மருந்துகளைக் கொடுக்கக்கூடிய வைத்திய நிபுணர்களான இந்த 84 கோடி வைத்திய சித்தர்களும் ஒன்று கூடிய திருத்தலமே கொல்லிமலை ஸ்ரீஅறப்பளீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தக் கரை ஆகும். இவ்வைத்திய சித்தர்கள் அனைவரும் மலம் மூத்திராதி பந்தங்களைக் கடந்தவர்களான நித்ய சித்தர்கள்! இந்த 84 கோடி வைத்திய சித்தர்களும் ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் அருகே ஔஷத மூர்த்தி பூஜைகளுக்காகச் சங்கல்பம் செய்து சிவபெருமானைப் பிரார்த்தித்தனர் . சிவபெருமானும் அருட்கருணையால் ஆசியை நல்கிடவே 84 கோடி சித்தர்களும், 21,600 சுவாசக் கலை சித்தர்களும் தேவலோகத்திலிருந்து இத்திருத்தலத்திற்கு ஒரு மண்டல விரதம் பூண்டு நடந்தே வந்தனர். இக்கோவிலிலிருந்து இன்றைக்கும் தேவலோகம் செல்லச் சுரங்கப் பாதையும் உண்டு. தேவ ரகசியமிது!
இத்திருக்கோவிலுக்கு வந்த பிறகு தான் வைத்திய சித்தர்கள் அனைவரும், தேவலோகத்தில் கூட காணக் கிடைக்காத அற்புதமான ஜீவித மூலிகைகள் இங்குக் காணப்படுவதை அறிந்து, ஆனந்தித்து இங்கு ஔஷத மூர்த்திகளுக்கான பூஜைகளை நிகழ்த்தினர். அனைத்து மூலிகைகட்கும் தேவரான ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவே இதற்குத் தலைமை தாங்கினார்.. 72,000 நாடி நரம்புகளுக்கு உரித்தான நோய்களுக்கும், 21,600 சுவாச கலை பந்தன துன்பங்களுக்கும் உரிய மூலிகைகளை இத்திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யும்படி அனைத்துச் வைத்திய சித்தர்களுக்கு, ஸ்ரீஅகஸ்தியர் அருள் ஆணையிட வைத்திய சித்தர்களும் அவ்வாறே செய்து ஒவ்வொரு மூலிகைகளுக்கும் உரித்தான குறிப்பிட்ட திதியில், நேரத்தில் பறித்து, அதை முழு நிலவொளியில் பௌர்ணமியில் காய வைத்து அதை அரைத்து தேய் பிறைப் பிரதமையில் இந்த தீர்த்தத்தில் கலந்தனர். சித்புருஷர்களின் இத்திருப்பணி இறைவன் கருணையால் ஆண்டு தோறும் குறித்த நாளில்/ நேரத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே, இங்கு தேய்பிறை பிரதமைத் திதி நீராடல் விசேஷமானதாகும். பௌர்ணமியை அடுத்த பிரதமை திதியே தேய்பிறைப் பிரதமை!
இம்மலையில் உள்ள மூலிகைகளைத் தக்க பூஜை இல்லாமல் பறித்தல் கூடாது. அப்படி மூலிகைகளைப் பறிக்கின்றவராக இருந்தால் இலவச மருத்துவத்திற்காகவோ அல்லது கோயில் திருப்பணிக்காகவோ, தர்ம காரியத்திற்காகவோ மட்டும் சங்கல்பம் செய்து பறிக்கலாம் என்ற நியதியை சித்புருஷர்கள் விதித்துள்ளார்கள்.. ஏனெனில் இம்மலையில் காணப்படும் ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சித்புருஷரால் நாள், ஹோரை, நட்சத்திரம், திதி, கரணம் ஆகியவற்றினை முறையாக அமைத்து சித்தர்களே அம்மூலிகைகளுக்கு ஜீவ சக்தியைக் கொடுத்துள்ளனர். ஸ்ரீகோரக்கர் சித்தரும் அவரது சீடர்களும் தினமும் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதுவே மகான்களும், யோகியரும், நித்திய வாசம் செய்யக் கூடிய இடமாகும். மிகவும் விசேஷமான தேனுபலா கிடைக்கக் கூடிய திருத்தலம்! அதியமான், ஔவைப் பிராட்டியாருக்கு கொடுத்தது போன்ற அபூர்வமான நெல்லி மரங்கள் உள்ள இடமாகும். இங்கு தங்கி சுவாசம் செய்தாலே போதும் ஆயிரக்கணக்கான மூலிகைகளின் சக்தியைத் தாங்கிய வாயு அணுக்கள் நம் இருதயத்தை, நுரையீரல்களை நன்கு வலுப்படுத்துகின்றன. சித்தர்கள் நடமாடும் புனித பூமியாதலின் இங்கு காலணிகள் இல்லாமல் நடப்பது தான் சிறப்புடையதாகும்.
கொல்லி மலை ஸ்ரீமூலிகா இரட்சாம்பாள்
இத்திருத்தலத்திலுள்ள அம்பிகையின் திருநாமம் ஸ்ரீமூலிகா இரட்சாம்பாள் ஆவாள். ஆரம்ப காலத்தில் பாட்டி வைத்தியம் என்பது மிகவும் விசேஷமாகப் போற்றப்பட்டு வந்தது. தற்காலத்தில் அது கிராமங்களில் கூட பெரிதும் மறைந்தே போய்விட்டது. அக்காலத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ள வைத்தியத் துறை அம்மணிகள் அனைவரும் பங்குனி உத்திரம் அன்று இத்திருக்கோவிலில் ஒன்று கூடுவார்கள். அப்படி அனைவரும் ஒன்று கூடி, அதுவரையில் இலவசமாக வைத்தியம் பார்த்து, கொடுக்கப்பட்ட காணிக்கைப் பணம் முழுவதையும் சேர்த்து வைத்து எடுத்து வந்திருப்பார்கள். அதை இங்கு அறப்பளீஸ்வரருக்கு காணிக்கையாகச் செலுத்தி, இங்குள்ள ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தத்தில் நீராடி பங்குனி உத்திரத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இத்திருச்சேவைகளைச் செய்வதாலும், ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தத்தில் நீராடுவதாலும் முதிய அம்மணிகளின் வைத்திய சித்தி விருத்தியாகும். அவர்களுக்கு வைத்தியத்திற்காக எந்த மூலிகை வேண்டுமோ அது அவர்கள் ஊரிலேயே கிடைத்து விடும். என்னே இறைவனின் பெருங்கருணை!
எனவே பெண் டாக்டர்களுக்கு இந்த ஸ்ரீமூலிகா இரட்சாம்பாள்தான் பிரதான கண்கண்ட தெய்வமாவாள்.. சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டவுடன் அந்த விஷமானது இறைவனின் திருக்கண்டத்திற்கு (திரு கழுத்து) கீழே இறங்கி விடாமலும், மேலே ஏறி விடாமலும் இருக்க ஸ்ரீஅம்பிகையானவள் தனது விரல்களால் சுவாமியின் திருக்கண்டத்தைப் பற்றிட ஆலகால விஷமானது அவ்விடத்திலேயே தங்கிட சிவபெருமானின் திருக்கண்டம் முழுவதும் நீலநிறமாகி சுவாமி திருநீலகண்டமானார். இறைவனின் திருக்கண்டத்தில் மாத்திரம் சித்தர்களின் கணக்குப்படி 88,000 கோடி அண்டங்கள் உள்ளன. இந்த அண்டங்களில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்தும் இந்த ஆலகால விஷத்தின் தன்மையால் அழிந்து பஸ்பமாயின.. அம்பிகையானவள் அனைத்து மூலிகைகைன் அதிபதியான ஸ்ரீஅகஸ்தியரை நாடி அவருடன் சேர்ந்து, பூ உலகில் கொல்லி மலையில், பெரிய சித்தர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி கொல்லி மலையில் உள்ள மூலிகைகளை அவர்கள் மூலமாக கிருஷ்ண தச மூலிகா பந்தனம் செய்து அதனைக் கொண்டு சிவபெருமானின் திருநீலகண்டத்திற்கு மூலிகைப் பற்று இட்டனள். இதனால் தான் திருநீலகண்டமானது கரு நீலகண்டமாக மாறியது.
இதன் மூலம் சித்புருஷர்கள் ஆலகால விஷத்தின் வேகத்தைக் குறைத்து அங்குள்ள அண்டங்களில் வாழ்கின்ற ஜீவராசிகளுக்கு இறையருளால் ஜீவ சக்தியைக் கொடுத்தார்கள். அம்பிகையின் இத்திருச்சேவையினால் மகிழ்ந்த சிவபெருமான் ஸ்ரீமூலிகா இரட்சாமணியாக, ஸ்ரீமூலிகா இரட்சாம்பாளாக என்றும் என்னருகிலேயே இருப்பாயாக என்று அருளி இத்திருத்தலத்தில் தன் அருகிலேயே அம்பிகையை எழுந்தருளச் செய்தார்.. ஆதலால் அனைத்து விதமான மருத்துவர்களுக்கும் கொல்லிமலை சிவாலயமான இத்திருக்கோவிலில் வாழ்கின்ற இக்கருணைமிகு, மருத்துவ சக்தி மிகுந்த தெய்வங்களே கதியும், அடைக்கலமும் ஆவார்கள்.
சேதி குறிச்சான் மலை
இக் கொல்லிமலைப் பகுதியில் சேதிகுறிச்சான் மலை என்ற ஒரு மலை உண்டு. உலகிலுள்ள மக்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து, மாரியம்மன் கோவில்களில் கண் குறைபாடு இருப்பவர்கள் கண் மலர் வாங்கிப் போடுவதும், உடம்பு வாங்கிப் போடுவதும், உப்பு வாங்கிப் போடுவதும், எடைக்கு எடை தங்கம், வெள்ளி வாங்கிப் போடுவதும் போன்ற வேண்டுதல்களை வேண்டிக் கொள்பவர்கள் அவர்கள் எந்த தெய்வத்தை, தேவதையை வேண்டிக் கொள்கின்றார்களோ, அந்த தேவதைகளிடமிருந்து, தெய்வங்களிடமிருந்து பர்வத தேவதைகள், வேண்டுதல்களைச் சேகரித்துக் கொண்டு, இதனை சேதி குறிச்சான் மலையிலிருந்து சொல்ல ஆரம்பிக்கும். பின் இந்த வேண்டுதல்களை அஸ்வினி தேவர்கள் சேகரித்துக் கொண்டு அவரவர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப நோய்களை இங்குள்ள மூலிகைகளின் மூல்ம் அவர்கள் தூங்கும் பொழுதோ, அல்லது மற்ற சமயங்களிலோ அரூபமான முறையில் குணமாக்குகின்றார்கள். இதனால் மருத்துமனைகளில் கை, கால், எலும்பு முறிந்து எலும்புகள் சேராதிருப்பவர்கள் பிரார்த்தனைகள் செய்து அரூபமான முறையில் அஸ்வினி தேவர்கள் குணமாக்கிவிட்டு செல்வதாலும், டாக்டர்கள் வியக்கும் வண்ணம் காலையில் பார்த்தால் எலும்புகள் நன்கு சேர்ந்திருக்கும். இவையெல்லாம் நமக்குத் தெரியாமல் நடக்கும் தெய்வீக இரகசியங்களாகும். இதனால் சேதி குறிச்சான் மலையில் மந்திர உபதேசம் பெறுவது நல்ல சித்திகளைத் தரும். மஞ்சள் காமாலை நிவாரண மந்திர சித்திக்கு ஏற்ற மலை இது!
ஸ்ரீஹயக்ரீவர்
ஞானகுரு ஸ்தானத்தில் இருக்கக் கூடியவர் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி ஒரு அசுரனானவன் வேதங்களை அபகரித்துக் கடலுக்குள் சென்றிட ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஹயக்ரீவராக அவ்வசுரனை வதம் செய்து வேதங்களை மீட்டார். அவ்வாறு மீட்கும் பொழுது கடலுக்குள் இருக்கும் பலவிதமான விஷச் சக்திகள் சுவாமியின் திருஉடலில் பட்டன. ஆதலால், இவ்விஷத்தின் தன்மையை தம் உடலிலிருந்து நீக்குவதற்கு கொல்லி மலையில் தங்கி ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள ஸ்ரீஔஷத சிந்தாமணி கணபதியினால் அவ்விஷத்தின் தன்மை படிப்படியாக குறைந்து, இம் மலையில் உள்ள மூலிகைக் காற்றின் தன்மையாலும் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியின் திருஉடலில் உள்ள விஷமானது முழுதும் நீங்கப் பெற்றார். இவ்வளவு விசேஷமான இடத்தை விட்டுப் பிரியாது ஸ்ரீஹயக்ரீவர் இவ்விடத்திலேயே, இத்திருக்கோவிலேயே சன்னதி கொண்டு அமர்ந்து விட்டார். உலகின் பல இடங்களிலும் ஸ்ரீஹயக்ரீவ சந்நிதி பிற்பாடு ஏற்பட்டதாகத் தோன்றிடினும், எங்கெல்லாம் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி வாசம் கொண்டாரோ அங்குதான் இறைநியதியாக அவருக்குப் பிரதிஷ்டைகள் ஏற்படும்.!
ஸ்ரீவித்யா விருத்தி சாகரியாக ஸ்ரீகலைவாணி
தன்  குருவான ஸ்ரீஹயக்ரீவரைத் தேடிக் கொண்டு ஸ்ரீவித்யா விருத்தி சாகரி என்ற நாமம் பூண்ட சரஸ்வதி தேவி இத்திருத்தலத்திற்கு வந்தாள். ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்தவுடனேயே ஸ்ரீஹயக்ரீவரிடமிருந்து அந்த வேதங்களைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தும் க்ஷண நேரத்தில் ஸ்ரீவித்யா சாகரி சரஸ்வதி தேவிக்கு மனதில் பதிந்து விட்டது. அவளுடைய திருமேனியில் ஞான ஜோதிச் சுடரானது பன்மடங்கு பல்கிப் பெருகியது. அவ்வாறு பதிந்த தேஜஸை தேவியானவள் இங்குள்ள எல்லாவித மூலிகைகளிலும், குறிப்பாக, ஆல்வெள்ளிக் கிழங்கு, பலாமரம், கமலா ஆரஞ்சு, மாம்பழங்கள், இராஜ கோவை இவைகளில் தேவியானவள் தனக்குக் கிடைத்தத் தேஜஸைப் பதித்தாள். புனிதமான இவ்விடத்தை விட்டு அகலாது தனது குருவான ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியின் அருகில் தவக்கோலம் பூண்டனள்.

கார்த்திகை தீபம்

திருஅண்ணாமலை கார்த்திகை தீபம்
தேவாதி தேவ மூர்த்திகளும், மும்மூர்த்திகளும் ஏற்றும் தேவ ஒளியே திருஅண்ணாமலை கார்த்திகை தீபமாகும்! ஒரு முறை கார்த்திகை தீப ஜோதி தரிசனம் கண்டால் அதன் பலன்கள் எத்தனையோ ஜென்மக் கர்ம வினைகளைத் தீர்க்கின்றன!
கார்த்திகை தீபப் பெருநாள், கடந்த 2.12.1998 அன்று அதற்கே உரித்தான தெய்வீகச் சிறப்புடன் திருஅண்ணாமலையில் நன்கு கொண்டாடப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு சர்வேஸ்வரனின் ஒளித் திருமேனியை தரிசித்துப் பரமானந்தம் அடைந்தார்கள். கார்த்திகைத் தீபத்தின்  மகிமையை நம் நாட்டிலேயே இன்னமும் பலரும் அறியாமல் இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது! எந்த பாரத நாட்டிலிருந்து தெய்வீகம் பிறந்ததோ, எங்கு அது இன்னும் தழைத்து விளங்குகின்றதோ, எங்கு யோகியர்களும், சித்புருஷர்களும், மகான்களும் தெய்வீகத்தைப் பேணிப் பாதுகாத்து வருகின்றார்களோ, அத்தகைய இப்பெருநாட்டில் தெய்வீகத்தின் மையமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையைப் பற்றி, அதனுடைய மகத்துவத்தைப் பற்றி அறிய வேண்டுவது. அறியப்படுத்துவது ஒவ்வொருவருடைய கடமையன்றோ! பலரும் அறியாவிட்டாலும் ஓரளவு அறிந்தோரேனும் தாம் அறிந்ததைப் பிறருக்கும் அறிவித்து அவர்களும் பிரபஞ்சத்தின் தெய்வீக மையமான அண்ணாமலையை உணரும்படி செய்ய வேண்டுவதும் அவரவர் கடமை அல்லவா!
திருஅண்ணாமலை திருக்கார்த்திகைத் தீபத்தன்று மனித பிரயத்னமாகவே கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்படுவதாக நம் கண்களுக்குத் தோன்றுகின்றதே தவிர, உண்மையிலேயே, சமுதாயத்தின் கூட்டு முயற்சியால் அங்கு தீபம் ஏற்றப்படும் பொழுது அதே சமயத்தில் தான் தேவாதி தேவர்களும், தேவமூர்த்திகளும், மும்மூர்த்திகளும் தங்களுடைய தேவ தீபத்தையும் ஏற்றுகின்றனர். அல்ல! அல்ல! தெய்வீக உண்மையைப் பறை சாற்ற வேண்டுமானால், எப்போது தேவ மூர்த்திகள் எல்லாம் தாங்கள் கண்ட லிங்கோத்பவ ஜோதியை, சர்வேஸ்வரனுடைய ரூபத்தை மீண்டும் அதே வடிவில் காண வேண்டும் என்று விழைந்து அக்னி பகவானே தன்னுடைய மூலாதார அக்னி சக்தியைத் தாரை வார்த்திட அதைக் கொண்டு தேவ மூர்த்திகள் தீபத்தை ஏற்றுகின்ற சமயத்தில் தான் நாமும் தீபம் ஏற்றுகின்றோம் என்பதே உண்மையாகும்.
சுயம்பு தீபம் மறைந்ததே(தோ)?
இந்தத் திருவிளையாடல் ஏன் நிகழ்கின்றது? பல யுகங்களுக்கு முன்னால் சூட்சும ரூபத்தில் தேவாதி தேவர்கள் திருஅண்ணாமலையில் திருக்கார்த்திகைத் தீபத்தை ஏற்றித்தான் வந்தனர். ஆனால் நாளடைவில் விஞ்ஞானம் என்ற பெயரில் அஞ்ஞானமே பெருகி விட்டமையால், தாமே எங்கேனும் தீபம் தோன்றினால் அது பிறருடைய வேலையாக இருக்கும், எவ்வாறு ஒரு இடத்தில் தானாக தீபம் தோன்ற முடியும்  என்றெல்லாம் தெய்வீகத்தையே ஆராயக் கூடிய போலி அறிவைப் பெறத் தொடங்கி விட்டமையால் கலியுக நியதியாக இறைவனும் எதையும் தனக்குத்தானே உணர்வதாக ஜோதி ரூபமும் அமையட்டும் என்று விதித்திருக்கின்றான் போலும்!
நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் இன்றைக்கும் திருஅண்ணாமலையில் தேவர்கள் ஏற்றுகின்ற தீபம் கிருதயுக அண்ணாமலை போல் தாமே ஜோதியாகத் தோன்றுமானால் உடனே இந்த விஞ்ஞான உலகம் என்ன செய்யும்? எவ்வாறு அந்த ஜோதி அங்கு வந்தது? யார் ஏற்றினார்கள்? எவ்வாறு சபரிமலையில் தோன்றுகின்ற மகர ஜோதியை பற்றி இன்னும் பல சர்ச்சைகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றார்களோ, எங்கு ஸ்ரீசாட்சாத் ஸ்ரீஐயப்ப சுவாமியே தம்முடைய மகர ஜோதியை எழுப்பி தம்முடைய தெய்வீகத் தத்துவத்தை உணர்த்துகின்றாரோ, அப்படியும் தெய்வத்தை உணர்கின்ற மனப்பான்மை பலருக்கும் தோன்றவில்லையோ, அதே போலத்தான் திருஅண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்தில் தாமே சுய ஜோதியாக எழுந்தாலும் கூட அதனை இந்த விஞ்ஞான உலகம் உணரப் போவதில்லை! எதை ஆராய்ந்தாலும் தெய்வீகத்தை ஆராய்தல் மாபெரும் தவறு. எத்தனையோ தெய்வீக அற்புதங்கள் இந்த உலகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூட முதலில் இறைத் துதியுடன் தான் தங்களுடைய விஞ்ஞானப் பணியைத் துவங்குகின்றார்கள்.
விஞ்ஞானம் என்பது இறைவனுடைய மெய்ஞானத்தின் பரிசே தவிர, தெய்வீகத்தையே ஆராய்வதற்காக ஏற்பட்டது அல்ல..  கார்த்திகைத் தீப ஒளியின் மகத்துவம் பற்றி நாம் கடந்த சில வருடங்களாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் எழுதி வருகின்றோம். ஸ்ரீநந்தீஸ்வரரே திருஅண்ணாமலையின் மகிமையைப் பொழிந்து வர அதனை ஸ்ரீஅகஸ்திய மாமுனியே இன்னும் லட்சோப லட்சம் கிரந்தங்களாக வடித்து வருகின்றார் என்றால் நம்முடைய சாதாரண மனிதக் கண் கொண்டும் அறிவைக் கொண்டுமா அருணாசல தீப மஹிமையை உய்த்துணர முடியும்? இதற்காகத்தான் தெய்வீகத்தை நன்கு உய்த்து, உணர்ந்த சற்குருமார்களின் அரவணைப்பில் நாம் சரணடைந்து விட்டோமேயானால் அனைத்து ஜோதிகளையும் அறிந்த அவரே இறை ஜோதியையும் உணர வைப்பாரன்றோ!
ஆனால் எவருக்குத் தான் சற்குரு மீது நம்பிக்கை ஏற்படுகின்றது? சற்குரு என்றால் நம் வாழ்நாள் முழுதும் நம்முடனிருந்து நம் கர்மவினைகளை நாமே அனுபவித்து அவற்றைக் கழிப்பதற்கான வழிமுறைகளையும் தந்து, நல்வழி காட்டி இறைப்பாதையில் இட்டுச் செல்பவர் ஆவார். ஏதோ சற்குரு என்றால், நமக்கு வீடு வாங்கித் தர வேண்டும். குழந்தை பாக்கியம் தர வேண்டும். செல்வத்தைத் தந்தருள வேண்டும். என்று எதை எதையோ கேட்டு அவரைப் பிய்த்துப் பிடுங்கவதற்காக அல்ல. தற்காலத்தில் கூட எந்த மகானைத் தரிசிக்கச் சென்றாலும் நாம் முதலில் எதனைக் கேட்கின்றோம் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். “எனக்கு இந்த வியாபாரம் சரிவரவில்லை... எனக்கு இந்த வீடு சரியாக அமையவில்லை ...” என்று எத்தனை எத்தனை விதமான ஆசைகளை அவர் முன் வைக்கின்றோம். இன்ப துன்பங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு தெய்வீக ஜோதியையே அவர் பரிசாகத் தரக் காத்துக் கொண்டிருக்கும் போது, அண்டா அண்டாவாக இறைவனின் ஆசிகளை நமக்கு அள்ளித் தருவதற்காக மஹானானவர் பூலோகத்திற்கு வந்திருக்கின்ற பொழுது, நாம் அவரிடம் கேட்பது என்ன தெரியுமா? ஒரே ஒரு ஸ்பூன் (spoon) அளவு ஆசியை மட்டுமே, அதுவும் நம்முடைய ஆசைகளைத் தீர்ப்பதற்கான காசைப் பெறுகின்ற ஆசை! இது தேவைதானா?
பகுதான்ய ஆண்டு தீபப் பலன்
எனவே பகுதான்ய ஆண்டின் கார்த்திகைத் தீபஜோதி நமக்குத் தருகின்ற முதல் வரம் என்னவென்றால் நல்ல சற்குருவைப் பெறும் பேறாகும். இதற்கான அனுக்கிரகத்தை நாம் பெறுகின்ற பொழுது நாம் முறையாகப் பயன்படுத்துவது கிடையாது.... உங்களிடம் இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படுமேயானால் அதனை நீங்கள் எவ்விதத்திலும் நல்ல வழியோ, தீய வழியோ, சேமிப்போ, செலவோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திடலாம். எனவே உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு இலட்சம் ரூபாயை செலவு செய்வதற்கான செயல் முறைகளைப் பொறுத்துத்தான் உங்களுடைய கர்மவினைகள் அகலுகின்றன. நீங்கள் கேட்பதை எல்லாம் இறைவன் தந்து விடுவானேயாகில் அதனை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வீர்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்திட வேண்டும்.
உங்களுக்கென ஒரு சற்குருவை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் தெய்வத்திற்கும், உங்களுக்கும் இடையிலே இருக்கின்ற அந்த உத்தர்மர்தான் உங்களுக்குத் தேவையான நிறைகுறைகளை எல்லாம் பார்த்துக் கொள்கின்றார் என்பதை நன்கு உணர்த்துவதே கார்த்திகை தீப ஜோதியின் மற்றொரு வரம்! நம்முடைய பூர்வ ஜென்ம பலா பலன்களின்படி நமக்கு வேண்டிய நல்வரங்கள் இறைவனிடமிருந்து கிட்டுகின்றன. இறைவனிடம் நாம் ஒன்றைக் கேட்கும் பொழுது நமக்கு நல்லதா, இல்லையா என்று பார்த்து இறைவன் நமக்கு ஏன் அதை அளிக்கக் கூடாது என்ற கேள்வியும் எழும் அல்லவா! இறைவன் இவ்வாறு நம்முடைய தராதரத்தைப் பார்த்து அளிப்பதால் தான் நம்முடைய பல பிரார்த்தனைகளும் நிறைவேறாமல் இருக்கின்றன. அதாவது எது நமக்கு நல்லது அல்லவோ அந்த பிரார்த்தனை நிறைவேறாததாக அப்படியே நின்று விடுகின்றது. மேலும், இறைவனுடைய இறைத் தூதுவர்களாக விளங்குகின்ற பல தேவதைகள், பித்ரு தேவதா மூர்த்திகள் மூலமாகத்தான் நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக மிகவும் சக்தி வாய்ந்த செங்கல்பட்டு ஸ்ரீசக்தி விநாயகரிடம் உங்கள் பிரார்த்தனைகளை நீங்கள் அளிக்கும் பொழுது அவற்றை உங்கள் பித்ரு தேவர்கள் தான் தாங்கிச் சென்று பிள்ளையாரப்பனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இவையெல்லாம் சூட்சுமமாக நிகழ்கின்ற தெய்வீகச் செயல்கள் ஆகும். நமக்கு நாம் நேரிடையாகவே  ஸ்ரீபிள்ளையாரப்பனிடம் முறையிடுவதாகத் தோன்றினாலும் கூட ஸ்ரீபிள்ளையாரப்பனைத் தரிசிப்பதற்கோ, அவருடைய ஜோதி ரூபமான உருவத்தைக் கண்டு ஆனந்தப்படுவதற்கானப் புனிதத்தையோ நாம் பெறவில்லை. எனவே தான் இந்த ஆயுட்காலத்தை மட்டும் அல்லாமல் நம்முடைய எதிர்காலப் பிறவிகளையும் நன்கு அறிந்த பித்ரு தேவர்கள் தான் நம்முடையப் பிரார்த்தனைகளை எல்லாம் பிள்ளையாரப்பனிடம் சமர்ப்பித்து அவற்றிற்குரியனவற்றை நமக்குப் பெற்றுத் தருகின்றார்கள். நாம் அமாவாசைத் தர்ப்பணத்தின் போதோ, ஏனைய பித்ரு திதி நாட்களின் போதோ நாம் நம் பித்ரு தேவர்களை வேண்ட மறந்தாலும் கூட அவர்கள் நம்மை மறப்பதில்லை. இவ்வாறாகத்தான் சமயபுரத்து மாரியம்மனோ, திருப்பதி வெங்கடாஜலபதியோ, கேதாரீஸ்வரரோ, காசி விஸ்வநாதரோ நீங்கள் எந்த தெய்வத்தை வேண்டினாலும் கூட பித்ரு தேவர்கள் தான் நம்முடையப் பிரார்த்தனைகளை ஏந்திச் சென்று நல்வரங்களையும் பெற்றுத் தருகின்றார்கள்.
பித்ரு தேவர்கள் ஏன் குறுக்கிடுதல் வேண்டும்? அவர்கள் குறுக்கிடுகின்றார்கள் என்று கூடச் சொல்லுதல் கூடாது. நமக்கு நாளை என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாது. இந்த ஆயுளில் நமக்கு நடக்க இருக்கின்ற அனைத்தையும் மட்டும் அல்லாமல், நம்முடைய எதிர்காலப் பிறப்புகளையும் நன்கு அறிந்த பித்ரு தேவர்கள் நம்முடைய பிரார்த்தனைகளைத் தாங்கிச் செல்லும் போதுதான் அவர்கள் தங்களுடைய தபோ பலன்களையும் அந்தந்த தெய்வ மூர்த்திகளிடம் அர்ப்பணித்து, “இறைவா! என்னுடைய வழி வந்த இவனைக் கைதூக்கி விடுவதற்காக இந்த பிரார்த்தனைகளை நாங்கள் உங்களிடம் அர்ப்பணிக்கின்றோம்!” என்று அவர்களும் தங்களுடைய பிரார்த்தனைகளைச் சேர்த்து பிரார்த்தனா பலன்களை அதிகரிக்கச் செய்கின்றார்கள். எனவே தான் பிரார்த்தனை செய்வதோடு நம்முடைய கடமை முடிந்து விடுகின்றது. இதைத் தரவில்லையே, அதைத் தரவில்லையே என்று இறைவனிடம் பேரம் பேசாதீர்கள். உங்களுக்கு ஒன்று நடக்கவில்லை என்றால் அது உங்களுக்கு நலமாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் அந்த பிரார்த்தனை நிறைவேற்றப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எனவே கார்த்திகை தீபத்தை நீங்கள் தரிசிக்கின்ற பொழுது உங்களுடைய பித்ரு தேவர்கள் மூலமாக சற்குருவைப் பெறுகின்ற அனுக்கிரகம் உங்களுக்கு அளிக்கப்படுகின்றது. சற்குருவைப் பெறுவது என்றால் உடனே நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதத்திலோ பெறுவது என்பது அல்ல. ஏனென்றால் உடனடியாக உங்களுக்குச் சற்குரு கிடைத்தாலும் கூட நீங்கள் அவரை முழுமையாக நம்புவீர்களா? இன்றைக்கு நம்புவீர்கள், நாளைக்கு உங்களுடையை காரியம் நடக்கவில்லை என்றால் ஏசுவீர்கள்... எனவே தான் சற்குரு என்பவர் வாழ்க்கை முழுவதும் அறிவுப் பூர்வமாக, அனுபவப் பூர்வமாக உய்த்து, உணர்ந்து அறியப்பட வேண்டியவராகின்றார்.. ஏனென்றால் மகான்களோ, யோகியர்களோ கலியுகத்தில் நம்முடையப் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று தான் நாம் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நமக்கு இப்பிறவிகளை எல்லாம் கடந்த முக்தியை, மோட்சத்தை அளிக்க வல்லவர்கள் சற்குருமார்களே, மகான்களே, யோகியர்களே என்ற எண்ணத்தை நாம் இன்னும் பரிபூரணமாக உணரவில்லை.
எனவே கடந்த பகுதான்ய வருடக் கார்த்திகைத் தீபத்தைத் தரிசித்தவர்களுக்கெல்லாம் ஸ்ரீகாக புஜண்டரும், ஸ்ரீபகுளா தேவியும் மற்றும் கோடானு கோடி சிஷ்யர்களும், பல்வேறு வடிவங்களில் திருஅண்ணாமலையை வலம் வந்த அருட்பாங்கினால்  பகுதான்ய வருடக் கார்த்திகைத் தீபத்தைத் தரிசித்தோர்க்கு சற்குருவினை உணரக் கூடிய நற்பாங்கினை நிச்சயமாகப் பெறுகின்றார்கள். இதனை நீங்கள் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் இயன்றவரையில் அனைத்து பௌர்ணமி தினங்களிலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற பிரார்த்தனைகளை மேற்கொள்க! ஏனென்றால் நாம் எத்தகைய தெய்வீக சக்தியை உடலிலும், உள்ளத்திலும் ஏற்றுக் கொண்டாலும் நாம் வாழ்கின்ற சூழ்நிலையிலும், பரவெளியிலும் நிலவுகின்ற எதிர்வினைச் சக்திகளை எதிர்த்து நின்று நம்மால் வாழ இயலவில்லை. அந்த எதிர்வினைச் சக்திகள் நல்வரங்களின் சக்தியை மாசுபடுத்துகின்றன. தீய சக்திகளுக்கு ஆட்பட்டு விட்டோமேயானால் மது, முறையற்ற காமம், போதை, சூது, வாது, புகைபிடித்தல், பொய்மை போன்ற பலவிதமான தீய சக்திகளுக்கு ஆட்பட்டு கார்த்திகைத் தீப ஜோதியிடமிருந்து பெற்ற நல் ஜோதி சக்தியை நாமே இழந்து விடுகின்றோம்.. கார்த்திகை தீப ஜோதிப் பலன்கள் வாழ்நாள் முழுதும் நம்முடன் உறைய வேண்டுமல்லவா! நம்மிடம் ஒழுக்கம், புனிதம், தியாகமனப்பான்மை இல்லாவிடில் அப்புனித சக்தி நம்மை விட்டு விலகிவிடுமல்லவா! எனவே, கார்த்திகை தீப ஜோதிப் பிரகாச சக்தி நமக்கு என்றென்றும் உதவிட, நம்முள் நிலைத்து நின்றிட பௌர்ணமி கிரிவலங்கள் தாம் பெரிதும் உதவுகின்றன.

சிவவிஷ்ணு பேதம் வேண்டாம்

சிவ, விஷ்ணு பேதங் கடப்பதே சீரிய மனித வாழ்வு!
நாயன்மார்கள், ஆழ்வார்களுடைய திவ்ய சரிதங்களில், நாம் அறியாத எவ்வளவோ தெய்வீக ரகசியங்கள் உள்ளன! இறை தரிசனத்தைப் பன்முறை பெற்றவர்களாகவும், இறைவனே நேரில் வந்து உரையாடுகின்ற அருட்கடாட்சத்தை உடையவர்களாகவும், தாம் எண்ணிய போதெல்லாம் பரம்பொருளைப் பரஞ்ஜோதியாகக் காண்கின்ற உன்னத பக்தியை உடையவர்களுமாகிய ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்கும் உண்மையிலேயே எவ்வித சிவ விஷ்ணு பேதமும் கிடையாது. ஆழ்வார்கள் என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகள்! சர்வேஸ்வரனையே , ஸ்ரீமந்நாராயணன் ஸ்வரூபத்தில் ஆராதித்த அற்புத மஹான்கள்! எங்கும், எதிலும், விஷ்ணுமயமாகவே ஆதிசிவனும் அவர்களுக்குக் காட்சியளித்தான்! தற்போது சிலர் எண்ணுவதைப் போல, ஆழ்வாராதியர்களுக்கு எவ்வித சிவதுவேஷமும் கிடையாது. அவர்களும் மும்மூர்த்திகளையும் வழிபட்ட மஹாஞானிகள் தாம்.
திருக்கோயிலூரில் எம்பெருமானாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தரிசித்த ஆழ்வார் பெரியவர்கள் பரஞ்ஜோதியாய்த் திகழும் திருஅண்ணாமலையைத் தரிசிக்காமலா சென்றிருப்பார்கள்! திருஅருணாசலமே அவர்களுக்கு வைகுண்ட மாமலையாக அன்றோ காட்சி தந்தது. சித்தர்களோ, யோகியரோ, மஹான்களோ, மஹரிஷிகளோ, ஞானியரோ, மும்மூட்சுகளோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ எவராயினும் சரி திருஅண்ணாமலையை வலம் வந்து ஸ்ரீபூத நாராயணப் பெருமாளையோ, ஆலயத்தினுள் உறையும் ஸ்ரீவேணுகோபால சுவாமியையோ, ஸ்ரீஅருணாசலேஸ்வரரையோ துதிக்காமல் சென்றதில்லை.. சர்வம் விஷ்ணுமயம் என்று விளங்குபவனே ஈஸ்வரன்! சர்வம் சிவமயமாக அருள்பவனே ஸ்ரீமந்நாராயண மூர்த்தி. இப்பேருண்மையை உணர்த்துவது தான் நாயன்மார்களுடைய ஆழ்வார்களுடைய தெய்வீக அனுபவங்கள்.
ஸ்ரீஆண்டாள் தினந்தோறும் பெருமாளுக்குரிய பூமாலைகளைத் தானே அணிந்து பார்த்த பிறகு பெருமானுக்குச் சூடி வந்தாளன்றோ. பூமாலையொன்றில் ஸ்ரீஆண்டாளின் கேசம் ஒன்று கிடந்தது கண்டு பெரியாழ்வார் பதறியதையும் நாம் அறிவோம். பெரியாழ்வார் இதனால் பெரிதும் வேதனையுற்றார். இதுவும் ஸ்ரீமந் நாராயணனின் திருவிளையாடல் தானே? முக்காலமும் உணர்ந்து முக்தியை யாவர்க்கும் தரவல்ல பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளின் பூர்வத்தை அறியாதவரா என்ன? நமக்கு நல்ல பாடம் புகட்டும் வகையில் தான் இத்தகைய உத்தம இறைத் தூதுவர்கள் தம்முடைய மோட்ச ஞான நிலையிலிருந்து கீழிறிந்து வந்து நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்ந்து அனைத்தும் அறிந்தும் அறியாதார் போல நம் கூடவே இருந்து, சூட்சும சற்குருமார்களாய் நமக்குப் பல இறையனுபவங்களைப் புகட்டுகின்றார்கள்.
ஆழ்வார்களுடைய காலமானது நம்முடைய சிறிய அறிவிற்கு எட்டினாற் போல் குறித்த சில ஆண்டுகளாக வரையறுக்கப் பட்டிருந்தாலும் அனைவருமே, அனைத்திலும் ஸ்தூலமாகவோ, சூட்சுமமாகவோ, காரண சரீரத்துடனோ நிச்சயமாக பங்கேற்கின்றார்கள். இன்றும் பக்தியுடன் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்டு, அதே ரூபத்தில் நம் கண்களுக்குத் தோன்றி அருளாசிகளை வழங்குபவர்களே ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் போன்ற ஆழ்வாராதிகளாவர். இன்றைக்கும் 108 வைணவத் திருத்தலங்களில் மட்டுமல்லாது, எண்ணற்ற  இறைத் தலங்களிலும், புனித நீராடி, பரம்பொருளைச் சேவித்து, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து, இதன் தெய்வீக சக்திகளை நம்முடைய நல்வாழ்விற்காக அர்ப்பணித்துத்தான் அவர்கள் செல்கின்றார்கள். கலியுகத்தில் இவ்வாறு நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவ்வப்போது சூட்சும ரூபத்திலோ அல்லது அதே வடிவிலோ பூலோகத்திற்கு வந்து, நாம் மறந்துவிட்ட ஸ்ரீவிஷ்ணுபதி போன்ற விசேடமான பூஜைகளையும், வேள்விகளையும், தவங்களையும் நிறைவேற்றி அதன் பலாபலன்களை ஜாதி, மத, இன, ஆண், பெண், மனிதர், புழு, பூச்சி என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்து ஜீவன்களுக்கும் தவ சக்திகளை, பூஜா பலன்களை அளித்துச் செல்வதால்தான் நித்யசூரிகளாக, அருட்ஜோதியாய் என்றும் பிரகாசிக்கின்றனர்..
ஸ்ரீஆண்டாளின், ஸ்ரீநாராயண பக்தியைக் கண்டு அதிசயித்த பெரியாழ்வார், பிற்காலத்தில் தாம் ஸ்ரீஆண்டாளை இறைவனுக்குச் சூட்ட வேண்டிய மாலையை, அவள் சூடியதற்காக முன்பு கடிந்தமை குறித்து பெரிதும் வேதனையுற்றார். முன்பு வேதனையுற்றதோ ஸ்ரீஆண்டாளின் அறியாமைக்காக, தற்போது வேதனையுறுவதோ தன்னுடைய அறியாமைக்கு என் செய்வது என நினைத்து!
ஆழ்வார்கள் பாடாத திருத்தலமே இல்லை. ஆனால் நமக்குக் கிட்டியுள்ள பாசுரங்கள் ஒரு சிலவே. மேலும் அவர்கள் பக்தி பூர்வமாக, திக் விஜயம் சென்ற இடங்களில் எல்லாம் பரந்தாமனை மட்டுமின்றி எல்லா மூர்த்திகளையும் விஷ்ணு ஸ்வரூமாகவே வழிபட்டனர். ஒரு சிலர் தான் இன்றும், அறியாமையால், ஆழ்வார் பெருமானார்கள் சிவாலயங்களுக்குச் சென்றதில்லை என்று தவறாகக் கருதுகின்றனர். ஆழ்வாராதியர்களின் திருப்பாதங்கள் படாத திருத்தலங்களேயில்லை என்று சொல்லுமளவிற்கு இறை பக்தியைப் பரப்பிட அவர்கள் அரும்பாடுபட்டனர். திருக்கோயிலூர் பெருமானைத் தரிசித்த பெரியாழ்வாருக்குத் திருஅண்ணாமலையின் மஹிமை தெரியாதா என்ன? திருக்கோயிலூருக்கு வந்து திருவிக்கரமனை தரிசித்த அனைத்து ஆழ்வார்களும், பக்த கோடிகளும், திருஅருணாசலத்தைக் கிரிவலம் வந்து ஸ்ரீபூதநாராயணப் பெருமானையும், ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும் தரிசிக்காமல் சென்றதில்லை. எம்பெருமானின் திருவடிகளில் பணிந்து கிடக்கும் பெரியாழ்வார், ஸ்ரீபூதநாராயணப் பெருமாளிடமும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரிடமும், தாம் ஸ்ரீஆண்டாளைக் கடிந்தமை குறித்து வேதனையுறுவதைக் கூறித் தமக்குச் சாந்தத்தை தந்து ஞான விளக்கம் வேண்டினார். சர்வேஸ்வரனே ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாணத்தில், “யாமிருக்குமிடத்தில் நீயிருந்து நாராயண நாமத்தில் திளைக்கும் நங்கைக்கு நல்மணம் நடத்தித் தந்திடுவாய் என்ற பெருவரம் அளித்தார்..” இதுவேதான் அரனின் அருட்கடாட்சம் தாங்கி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கநாதரை மணம் புரிகையில், தாரை வார்த்துத் தரும் தகைமை சான்ற மகரிஷியாய், அரனருள் பூண்டு ஆண்டாளுக்கு நல்மணம் புரிவிக்கின்ற அருட்பெரும் பாக்கியத்தை அன்னவர் பெற்றதே அட்டைப்பட விளக்கமாகும்.

பௌர்ணமி கிரிவல மகிமை

பௌர்ணமி கிரிவல மஹிமை
அமாவாசை தினமும், பௌர்ணமி திதியும் எத்தனையோ மஹிமைகளைத் தம்முள் கொண்டுள்ளன. ஒரு மாதத்தில் வருகின்ற முப்பது தினங்களுமே மிகச் சிறந்த புனித தினங்களாக அமைவதில்லை. ஒவ்வொரு நாளிலும் அதற்குரித்தான பல விசேஷ அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. இதனைத்தான் நாள் செய்வதை நாலு பேர் செய்வதில்லை என்று மூதுரையாகக் கூறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் குறிப்பாக, பாரத நாட்டில் பிறக்கும் பாக்யம் பெற்ற ஒவ்வொருவரும் காலத்தின் மஹிமையை நாள், திதி, கிழமை, யோகம், கரணம் ஆகிய ஐந்து வகைகளான காலப் பகுதியைப் பற்றி ஓரளவேனும் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். எந்தச் செயலையுமே நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் சிறப்புடையதாகும். கலியுகத்தில் தற்போது பெரியோர்களை மதித்து அவர்கள் ஆணைப்படி நடக்கின்ற பண்பாடு மறைந்து வருகின்றது. பெரியோர்கள் என்று நாம் குறிக்கின்ற பெற்றோர்களும், தாத்தா பாட்டிமார்களும் கூட கலியுக காலத்தின் கோலத்தால் புகைபிடித்தல், மது அருந்துதல், புகையிலை போடுதல் போன்ற பலவகையான தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களாய் தான் விளங்குகின்றனர் என்பது வேதனைக்குரியதாகும். பின்னர் எவரைத் தான் நாம் தற்போது பெரியோர்கள் என்று ஏற்க முடியும்?
கலியுகத்தில், பெற்றோர்களே பலவித தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக இருப்பதனால், அவர்கள் சந்ததியிடம் இருந்து எவ்வாறு நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை எதிர்பார்க்க முடியும்? எனவே தற்காலத்தில் சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாது இளைஞர்களும், நடுத்தர வயதினர்களும், முதியோரும் அனைவருமே பலவிதமான பிராயச்சித்தங்களையும், பரிகாரங்களையும், விசேஷமான பூஜை முறைகளையும், கையாண்டால்தான் அவர்களுடைய கர்ம வினைகளுக்குத் தீர்வு கிட்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? கலியுகம் மட்டுமல்லாது எந்த யுகத்திலும் இந்த பிரபஞ்சத்தின், இந்த உலகத்தின் எந்த மூலையிலும், எவருக்கும், எந்த உயிரினத்திற்கும் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தக்க பரிஹாரங்களை அருள்பவர்களே சித்புருஷர்களாவார்கள். தற்போது நாம் அறிந்தோ, அறியாமலோ விட்டுவிட்ட பல பூஜைகளுக்கும், பெரியோர்களை மதியாமைக்கான சாபங்களுக்கும், பித்ரு தர்ப்பணம், விஷ்ணுபதி போன்ற பூஜைகளைக் கைவிட்டதற்குமான பிராயசித்தங்களை எவ்வாறு பெற முடியும்? இதற்காகத்தான் அமாவாசையில் இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவிடைமருதூர், கேதார்நாத், சென்னை திருவள்ளூர் தீர்த்தம் போன்ற பல முக்கியமான இடங்களில் உள்ள தீர்த்தங்களிலும் மற்றும் பல புண்ணிய நதிகளிலும் நீராடித் தர்ப்பணமிடுதலுக்கு அளவுயர்ந்த பலன்களாக இறைநீதி அமைந்துள்ளது.
இது போலவே பௌர்ணமியன்று திருஅண்ணாமலை, அய்யர் மலை, பழநி , திருப்பரங்குன்றம், திருத்தணி போன்ற பல இடங்களில் மலைவலம் வருவதே மிகச் சிறந்த பூஜையாக, எத்தனையோ கர்மவினைகளுக்குத் தீர்வளிப்பதற்காக, விடுபட்டுப்போன பல்வகை பூஜைகளுக்குப் பரிகாரமாகச் சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். இவ்வகையில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் குளித்தலையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யர் மலை எனும் திருத்தலத்தில் மலை மீது ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் அருள்பாலிக்கின்றார். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி!
எத்தனையோ கோடி யுகங்களாகச் சுயம்பு மூர்த்தியாய் இங்கு தோன்றி அருள்பாலிக்கும் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் உலகத்திலுள்ள அனைத்து ரத்தின மணிகளின், நவரத்தினங்களின், கோடானு கோடி சூரியன்களின் நட்சத்திர கோள்களின் ஒளியெல்லாம் விட மிகவும் பிரகாசத்துடன் சுயம்பிரகாசத்துடன் நமக்கு அருள்பாலிக்கின்றார். ஸ்ரீரத்தினகிரீஸ்வரரின் மூலாதார வேரானது பூலோகத்தை மட்டுமல்லாது எத்தனையோ உலகங்களுக்கும் ஆழ்ந்து சென்று, காணக் கிடைக்காத இரத்தினகிரீஸ்வர அம்சத்துடன் விளங்குகின்றது காலை கடம்பர் (குளித்தலை), மதியம் சொக்கநாதர் (அய்யர் மலை) ஒரே நாளில் தரிசிப்பதால் அற்புதமான காரியசித்தி கிடைப்பதாக நம் பெரியோர்கள். ஆணித் தரமாக எடுத்துரைத்துள்ளார்கள். இன்றைக்கும் ஸ்ரீஅகஸ்திய மாமுனி இவ்வகையில் தான் மூன்று வேளைகளிலும் கடம்ப வனேஸ்வரரையும், ரத்தின கிரீஸ்வரரையும், ஈங்கோய் மலை நாதரையும் தரிசித்து, பிறகு தம்முடைய பூர்வீக இடமான பொதியமலைக்கு ஏகுகின்றார் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாகும். இன்றைக்கும் ஸ்ரீரத்தினகிரீஸ்வரருக்குக் காவிரியிலிருந்து நீர் கொண்டு வந்துதான்  அபிஷேகிக்கப்படுகின்றது. காணக் கிடைக்காத மூர்த்தி, பிரத்யக்ஷ மூர்த்தி, கேட்கின்ற நல்வரங்களைத் தந்தருள்கின்ற திவ்யமான மூர்த்தி,
ஸ்ரீரத்தின கிரீஸ்வரர் உறைகின்ற அய்யர்மலையில் உள்ள அனைத்து மூலிகைகளும், தாவரங்களும், பாறைகளும், சிறுகற்களும் எத்துனையோ அற்புத சக்திகளைத் தம்முள் கொண்டுள்ளன. சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவே உள்ள இந்த அய்யர் மலையைச் சுற்றி வருகின்ற கிரிவலமானது நம்முடைய எத்தனையோ கர்மவினைகளை எளிதில் கழிக்கின்றது. அதெப்படி ஒரு கிரிவலமானது பல்வகையான கர்மவினைகளைத் தீர்த்திட முடியும் என்று தோன்றுகின்றதல்லவா?  விண்ணுலகத்திலுள்ள பல கோடி லோகங்களிலும் உள்ள தேவாதி தேவர்களும், மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியரும் அய்யர்மலை போன்ற மிகவும் அமைதியான சூழ்நிலையியைத் தான் தம்முடைய தவத்தலங்களாக, தவம்புரிகின்ற பீடமாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். எப்போதும் ஞானியரும், யோகியரும் சித்புருஷர்களும் நடமாடுகின்ற இறைத்தலங்களுள் ஒன்றாக ஸ்ரீஅய்யர்மலை விளங்குகின்றது.
எவ்வாறு நாம் இறைவனை வலம் வந்து அபிஷேக ஆராதானைகளுடன் பூஜிக்கின்றோமோ, இதே போலத்தான் மஹரிஷியரோ, யோகியரோ, சித்புருஷரோ இறைவனை வழிபடுகின்றனர். ஆனால் நம்முடைய பூஜைக்கும், அவர்களுடைய தவபூஜைக்கும் உள்ள வித்தியாசமென்னவெனில் நம்முடைய பூஜைகளைத்தும் நம்முடைய லௌகீக ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான். ஆனால் அந்த உத்தம இறைத் தூதர்களோ பூஜாபலன்கள் அனைத்தையும், தபோ பலன்களைனைத்தையும், யோக பலன்கள் அனைத்தையும் ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக இறைவனிடமே அர்ப்பணிக்கின்றனர். எந்நேரமும், எந்த வினாடியும் அவர்களுடைய நினைவெல்லாம் எத்தனையோ கோடி லோகங்களில் வாழ்கின்ற ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகத்தான் செலவிடப்படுகின்றது. இதற்காகத்தான் அவர்கள் பூலோகத்திற்கு ஓடோடி வருகின்றனர். எங்கு, எத்தலத்தில், எந்நேரத்தில், எத்தகைய பூஜையைச் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தவர்கள் தாம்.

ஐயர்மலை

இந்நிலையில் மஹரிஷிகளும் யோகிகளும் பூஜை செய்கின்ற பௌர்ணமி நேரத்தில் நாமும் அய்யர்மலையைக் கிரிவலம் வருகின்ற பாக்கியத்தைப் பெற்றோமேயானால் அது உண்மையிலேயே வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமன்றோ? அய்யர்மலை இன்றைக்கும் மிகவும் சாந்தமயமான தெய்வீகச் சூழ்நிலையில் தான் இருந்து வருகின்றது என்பது கலியுகத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சியுறக் கூடிய ஓர் அற்புதமான விஷயமாகும். பெயருக்கேற்றாற் போல் ஸ்ரீரத்தின கிரீஸ்வரருடைய ரத்தினமயமான தெய்வீகக் கிரணங்கள் கிரிவலப் பாதை முழுதும் விரவிக் கிடக்கின்றன. இந்த தெய்வீகச் சக்திகளெல்லாம் அங்கு இருக்கின்ற பாறைகளிலும், தாவரங்களிலும், திரிகோண அமைப்புகளிலும் விரவிக் கிடக்கின்றன. எவ்வாறு திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையைச் சுற்றி லட்சக்கணக்கான மலை தரிசனங்கள் உள்ளனவோ அவ்வாறே தான் அய்யர்மலையிலும் ஆங்காங்கே இருந்து மலை உச்சியை நோக்கினால் அதுவிதவிதமான தரிசனங்களைத் தருவதை நீங்கள் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
அய்யர்மலையில் உச்சியில் ஓர் அற்புதமான தடாகமுண்டு. மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம். கடுமையான, கொடிய நோய்களை மட்டுமல்லாது, கொடிய தீவினைகளையும் நீக்கிடும் சக்திவாய்ந்த தீர்த்தமாகும். இதில் நம்முடைய கால்கள்படுதல் கூடாது. கரையிலேயே நின்றவாறு தீர்த்தத்தில் நம்முடைய கால் விரல்கூட படாது மிகவும் பவ்யத்துடன், வினயத்துடன், பக்தியுடன் நீரை முகர்ந்து, சிரசில் தெளித்துக் கொண்டு சிறிது பருகினாலே உள்ளத்திற்குச் சாந்தி கிட்டும். இதனருகிலேயே சித்தர்கள் இன்றும் பூஜை, செய்கின்ற அற்புதமான குகையுண்டு. எத்தனையோ கோடிக்கணக்கான யுகங்களாக சித்புருஷர்கள் இங்கு தவம் செய்து வருகின்றார்கள். மலையைச் சுற்றி சில இடங்களில் தடாகங்களும், தெய்வ மூர்த்திகளின் தரிசனங்களும் இன்றைக்கும் கிட்டுகின்றன.
அய்யர்மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அற்புதமான தெய்வீகச் சக்தி நிறைந்த நாகப்புற்றைப் பற்றி நம்முடைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் முன்னரேயே விளக்கியுள்ளோம். பௌர்ணமி தோறும் அய்யர்மலையை கிரிவலம் வருகின்றவர்களுக்கு எத்தனையோ தெய்வீகப் பரிசுகள் காத்துக் கிடக்கின்றன. கிரிவலம் வரும் போது நமக்குக் கிட்டுகின்ற காட்சிகளில் தான் மகரிஷிகளின் தபோபலன்கள் நிறைந்திருக்கின்றன. எவ்வாறு ஸ்ரீநகரமாய் விளங்குகின்ற, ஸ்ரீவித்யா அம்பிகை உறைகின்ற ஸ்ரீசக்ரத்திலே உள்ள எத்தனையோ முக்கியமான கோணங்களில் தான் அம்பிகையின் அருட்கடாட்சங்கள் நிறைந்திருக்கின்றனவோ அதே போல் அய்யர்மலையில் கிரிவலம் வருகின்ற போது நாம் காண்கின்ற கோலங்களிலெல்லாம் தெய்வ சக்திகள் நிறைந்துள்ளன.

ஸ்ரீகாயத்ரிலிங்கேஸ்வரர்
பவானி முக்கூடல்

அய்யர் மலையின் மேல் உள்ள தடாகத்தில் பட்டு வருகின்ற மூலிகைக் காற்றானது சித்தர்களுடைய தவசக்திகளை மட்டுமல்லாது மூலிகா சக்திகளையும், இரத்தினகிரீஸ்வரருடைய அருள் மிக்க கிரணங்களையும் சுமந்து, கிரிவலம் வருவோர்களது தேகத்தில் ஊடுருவிப் பாய்கின்றது. சுயம்புலிங்க மூர்த்தியாய் விளங்கும் ஸ்ரீரத்தினகிரீசுவரருடைய ஒளிக்கிரணங்கள் பரவாத கோணங்கள் கிடையாது. பரவாத இடங்கள் கிடையாது என்று சொல்லுமளவுக்கு மலையைச் சுற்றிலுமே ஸ்ரீஇரத்தின கிரீசுவரருடைய பரஞ்சோதிக் கிரணங்கள் வியாபித்துள்ளன. முதுமையாலும், பலவித கஷ்டங்களாலும், வியாதிகளாலும் மலையேற முடியாத எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால் அவர்களால் கிரிவலம் வருவது என்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் மலை ஏறுதலை விட இதனைச் சற்று எளிமையாகச் செய்வார்கள் என்பதால் அத்தகையோர்க்கும், பலவித ஊனங்களா பாதிக்கப்பட்டு மலை ஏற முடியாதவர்க்கும் கிரிவலமானது ஸ்ரீரத்தினகிரீசுவரருடைய பரிபூர்ணமான பலன்களைத் தந்தருள்கின்றது.
ஸ்ரீஅய்யமலை பற்றிய அற்புதமான விளக்கங்களை எங்களுடைய ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஅய்யர்மலை மகிமை என்னும் புத்தகத்தைக் கண்டு அறிந்து கொள்ளுங்கள். சித்புருஷர்களின் கிரந்தங்களிலிருந்து நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பெற்றுத் தந்துள்ள இரத்தின முத்துக்கள் அவை! திருச்சியின் பக்கத்தில் இருந்து கொண்டு அய்யர்மலையின் பெருமையை உணராதோர் பலர் உண்டு. பக்த கோடிகள் அனைவர்க்கும் ஸ்ரீஅய்யர்மலையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவே மேற்கூறிய இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தினந்தோறும் நாம் செய்ய வேண்டிய பூஜைகளை மறந்ததற்காகவும், நாம் கைதொழ வேண்டிய எத்தனையோ ஆலய தரிசனங்களையும், காசி, இராமேஸ்வரம், கேதார்நாத் போன்ற புனிதப் பயணங்களைப் பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ள இயலாமைக்காகவும், தக்க பிராயச்சித்தமாக மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஅய்யர் மலைத் திருத்தலத்தில் பௌர்ணமி தோறும் கிரிவலம் வந்திடில் பெறுதற்கரிய பாக்கியங்களைப் பெற்றிடலாம்.
பௌர்ணமியில் இரவில் கிரிவலம் வருதலால் பௌர்ணமி நிலவில் காய்ந்து, பூத்து, கனிந்து வருகின்ற பல அரிய மூலிகைச் சக்திகளைப் பெற்றிடலாம். இது மட்டுமல்லாது ரத்தினகிரீசுவரருடைய ரத்னமயமான ஒளிக்கிரணங்களைப் பிரதிபலிக்கின்ற திவ்யமான பாறைகள் எல்லாம் பௌர்ணமி நிலவில் தான் அக்கிரண சக்திகளையெல்லாம் பிரதிபலித்துப் பல வகையில் அவற்றைக் கூட்டுவதால் பௌர்ணமி சமயத்தில் கிரிவலம் வருவோர் நேரடியாகவே பல அரிய சக்திகளை, நற்காரிய சித்திகளை எளிதில் பெற்றிடலாம். எனவே பக்த கோடிகள் அனைவரும் பௌர்ணமி தினத்தின் பரிபூர்ண மகிமையை உணர்ந்து இந்நாளில் இல்லத்தில் அமர்ந்து வீணாகப் பொழுதைப் போக்காது அய்யர்மலைக்குச் சென்று கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களைப் பெறுவீர்களாக! அனைவருமே பௌர்ணமி தினத்தில் திருஅண்ணாமலை கிரிவலம் வருதல் சாத்தியமல்ல. பலவித அலுவல்கள் காரணமாகவும், எத்தனையோ காரணங்களாலும், திருஅண்ணாமலைக்கு வர இயலாதோர், குறிப்பாகத் தெற்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஸ்ரீஅய்யர் மலைக்குச் சென்று கிரிவலம் மேற்கொண்டு, பூஜையை மேற்கொண்டு ஸ்ரீரத்தின கிரீசுவரருடைய அருளைப் பெற்றும், மனச் சாந்தியை மட்டுமல்லாது ஏட்டில் வடிக்க இயலாத எண்ணற்ற நல்வரங்களைப் பெற்றிடலாம்.

காயத்ரீ தரிசனம்

ஸ்ரீகாயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி சுதை ரூபங்கள்
திருச்சிக்கு அருகேயுள்ள திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் ஆலயத்தில் சுதை வடிவில் ஸ்ரீகாயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி தேவிகள் அருள்பாலிக்கின்றனர். எப்போதுமே சுதை ரூப மூர்த்திகளுக்குக் கல் மூர்த்திகளை விட சில அபூர்வமான தெய்வீக சக்திகள் உண்டு. கும்பகோணம் ஸ்ரீநாகேசுவரர் ஆலயத்திலும், திருநாகேசுவரம் அருகேயுள்ள ஸ்ரீஅய்யாவாடியில் ஸ்ரீபிரத்யங்கரா காளிதேவியும், சென்னை இராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேசுவரி ஆலயத்திலும் மற்ற எண்ணற்ற அய்யனார் மூர்த்திகளும், முனீசுவரர்களும் சுதை ரூபத்தில் தானே அருள்பாலிக்கின்றார்கள்! ஏனென்றால் அக்காலத்தில் சுதை ரூபங்கள் என்றால் கிளிஞ்சல்கள் மற்றும் இயற்கைச் சுண்ணாம்பு கலவைகள் பலவற்றுடன் சேர்த்து அவை உருவாக்கப்பட்டமையால் மண்ணிற்கு எப்போதுமே தெய்வீகச் சக்திகளைக் கிரஹிக்கின்ற சக்திகள் உண்டு. இவ்வாறாகத் திருவெள்ளறையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீகாயத்ரீ தேவி, சாவித்ரீ தேவியாகவும், சரஸ்வதி தேவியாகவும், சேர்ந்து அருள்பாலிப்பதால் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியைத் தருகின்ற தெய்வாவதாரச் சக்தியைக் கொண்டு நமக்கு அருள்கின்றாள். இம்மூன்று தேவியர்களையும் ஒன்றாகக் காண்பதரிது.

ஸ்ரீகாயத்ரீ தேவி திருவெள்ளரை

ஸ்ரீகாயத்ரீ தேவியின் உருவத்தையே காண்பது மிகமிக அரிது. பவானி அருகில் ஸ்ரீசங்கமேசுவரர் ஆலயத்தில் ஸ்ரீகாயத்ரீ லிங்கம் அமைந்துள்ளது இதுவும் பெறுதற்கரிய தரிசனமே, பலருக்கும் பூணூல் அணியவில்லையே, காயத்ரீ மந்திரம் ஜெபிக்க வில்லையே என்ற குறையுண்டு. இதைப் பற்றி கவலை வேண்டாம். திருவெள்ளறை ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீகாயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரை வலம் வந்திட உங்களுக்குக் காயத்ரீ தேவியின் திருவருளால் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் உபதேசிக்கப்படும். உங்கள் இல்லத்தில் தெய்வபக்தி நிறைந்த முதியோர்கள் இருப்பார்களேயானால் அவரிடமிருந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உபதேசமாகப் பெற்றிடலாம். ஏன் உபதேசமாகப் பெற வேண்டும்? நாமாக ஒரு விநாயகர் அகவலையோ, திருக்குறளையோ, பெரிய புராணத்தையோ படித்து ஓத இயலாதா என்ற எண்ணம் வரலாம். எந்த உபதேச மந்திரமுமே, பெரியோர்களின் திருவாய் மொழியாக வெளிவந்தால் அதற்குப் பூர்ண பலன்கள் உண்டு. காரணம் ஐம்பதாண்டு காலம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பூஜை செய்து வந்திட்ட பெரியோர்களிடம் விசேஷ சக்திகள் இருக்குமல்லவா? என்ன தான் இருந்தாலும் ஒருவன் 70, 80 வயது வாழ்ந்தால் அது இறைக் கருணையே., தவிர அவர்தம் புண்ணிய சக்தியும் ஆசிர்வாதமாக கிடைக்கிறது.
ஒரு பெரியோரை அணுகி, “ஐயா! உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றேன். தாங்கள் தான் எனக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உபதேசித்தருள வேண்டும்,” என்றால் அவரே மனமுவந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை எளிமையாக உபதேசம் அளித்திடலாம். அரசு, ஆல், வேம்பு போன்ற ஹோம சமித்துகளைக் கொண்ட ஆலயங்களிலும், புண்ணிய நதிகரைகளிலும், பவளமல்லி பூச்செடி அடியிலும் அமர்ந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை எடுத்தருளப் பெறுவது மிகவும் சிறப்பானது. காயத்ரீ மந்திரத்திற்கு 24 அட்சரங்கள் உள்ளதால், 24 முறை திருவெள்ளறை ஆலயத்தில் ஸ்ரீகாயத்ரீ, சாவித்ரீ , சரஸ்வதி ஆகியோரைச் சேர்த்து காயத்ரீ மந்திரம் ஜெபித்து வலம் வருதலால், சூர்யமண்டலத்தில் உள்ள ஸவிதா தேவதா மூர்த்திகளின் பரிபூர்ண ஆசிகளைப் பெற்றிடலாம். திருச்சி அருகில் திருமாந்துறையில் மலட்டாறு எனப்படுகின்ற நதி வடக்கு நோக்கி ஓடுகிறது. இதனால் இவ்விடம் புனிதத் தன்மையை பெற்றுள்ளது. சில குறித்த அபூர்வமான மந்திரங்களை இங்கு ஜெபிப்பீர்களேயானால் எத்தனையோ கோடி ஜென்மங்களில் ஜெபித்து வருகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலன்களை எளிதில் பெற்றிடலாம். திருச்சி அருகேயுள்ள ஸ்ரீகாயத்ரீ நதி, பவானி சங்கமேசுவரர், காயத்ரீ லிங்கம், திருவெள்ளறை காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி மூர்த்திகள், கொன்றை மரம் தலவிருட்சமாக உள்ள திருப்பத்தூர் ஸ்ரீதளநாதர் ஆலயம் இப்படி எத்தனையோ விசேஷங்கள் நிறைந்துள்ளன. திருவெள்ளறை ஆலய நுழைவாயிலில் 24 படிக்கட்டுகளும், காயத்ரீ மந்திரத்தின் 24 அட்சரங்களாக விளங்குகின்றன. இப்படிகளை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜெபித்தவாறே தொட்டு வணங்கிச் செல்லுதல் நன்று. காலை சூரியோதயத்திற்கு முன், மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின், நண்பகலில் குறிப்பாக சூரிய ஹோரை நேரத்தில் நீர் தெளித்து கோலமிட்டு, செங்காவி பூசி படிக்கட்டுகளில் பத்மாசனமிட்டு வணங்கி வருதல் ஞாபக சக்தியை வளர்க்கும், பிரம்மச்சாரிகள் இதை முறையாகச் செய்துவர நல்லொழுக்கம் கைகூடும். இறைவனே ஸ்ரீகாயத்ரீ தேவியாகவும், முருகனாகவும், அருள்பாலிக்கும் போது நமக்கு என்ன கவலை? குரு மூலமாக இங்ஙனம் கருணை கடாட்சத்தைப் பொழிகின்றாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தருவதே திருவெள்ளறை மூர்த்தியின் சிறப்பாகும்.

அமுத தாரைகள்

1. பவழமல்லி தரும் பாவமன்னிப்பு :- பவழ மல்லி தல விருட்சமாக உள்ள ஆலயங்களில் (உதாரணம் கும்பகோணம் அருகில் உள்ள திருநரையூர்) புதன் கிழமை தோறும் புதஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2) சர்க்கரைப் பொங்கலால் அபிஷேகம் செய்து அல்லது சந்தனக் காப்பு போல் இட்டு தானம் செய்து வந்தால் பித்ரு தோஷங்களுக்கு நிவர்த்தி ஏற்படும். புதனும், திருவோணமும் சேர்ந்திடும் நாளாக அமைந்திடில் சந்ததி தழைப்பதற்கான நல்வழியைப் பெற்றிடலாம்.
2. அடுக்கடுக்காய் துன்பங்கள் பலருக்கும் பெருகுவதுண்டு. ஏற்கனவே இருக்கின்ற துன்பங்கள் போதாவென்று காலையில் எழுந்தவுடன் ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இவர்களுடைய கிரஹ சஞ்சாரங்களை நோக்கினால் தான், பெரும் கர்மவினைகள் சூழ்ந்திருப்பதை உணரலாம். இவர்கள், நவக்கிரஹ மூர்த்திகளே வழிபட்ட லிங்க  மூர்த்திகளான திருவாரூர் – திருத்துறைப் பூண்டி சாலையில் உள்ள திருத்தங்கூர் தலத்தில் பொன் மாங்கல்ய தானம் செய்து வந்தால் கடந்த பிறவிகளில் மாங்கல்ய தோஷங்களைச் செய்ததற்கான தீவினைகளுக்குப் பிராயச்சித்தங்கள் கிட்டி படிப்படியாய் இடர்கள் தீர நல்வழி பிறக்கும்.

திருநரையூர் சித்தீச்சரம்

3. பார் போற்றும் பாரிமலர் பிள்ளையார் :- நிறைய குழந்தைகளைப் பெற்றவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் கவலை கொள்ளத் தேவையில்லை! தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கப் போகிறோம், எப்படிப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்று மனம் தளரவேண்டாம்! அதோடு மட்டுமல்லாமல் ஒரேயோரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு திருமணம் ஆகவில்லையே என்று இரவுபகலாய் ஏங்குவோரும் உண்டு. இவர்களின் தாய் தந்தையருக்கு, மனக் கவலையிலிருந்து விடிவு தரும் கணபதி தான் ஸ்ரீபாரிமலர் பிள்ளையார்! இந்தப் பிள்ளையாருக்கு உரித்தான விசேஷம் என்னவென்றால் பொதுவாக ஸ்ரீகணபதி தம்முடைய இரு கரங்களிலும் பாசம், அங்குசம் தான் ஏந்தியிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீபாரிமலர் பிள்ளையார் தம்முடைய இரு கரங்களிலும் பாரி மலர்களை ஏந்தியிருப்பார்.
பாரி மலரின் இரகசியம் என்ன? பக்குவமான மணமகனை அல்லது மணமகளைப் பார்க்காத தூரத்தில் இருந்தாலும், பக்குவமாய் பறித்து வந்து இணைக்கும் தன்மை உடையது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரி மலர்களை ஸ்ரீகணபதிதான் தாங்கக் கூடிய அனுக்கிரகம் பெற்றவர். அந்த கணபதியை வேண்டிடில் எங்கிருந்தாலும் கணவன், மனைவியை இணைத்து வைப்பார். இத்தகைய தெய்வமூர்த்தி உலகில் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. இத்தகைய ஸ்ரீபாரிமலர் பிள்ளையாரை வணங்குவோர்க்கும், அபிஷேகம், ஆராதனை, தேங்காய் சாதம், அன்னதானம் செய்வோருடைய குழந்தைகளின் திருமணத்தையும், படிப்பையும் பூரணமாக அருள்கின்றார்! அன்பர்களே, இந்தப் பிள்ளையாரை தேடிக் கண்டுபிடியுங்கள்! இறைவனைத் தேடுகின்ற நேரமும் இறைப்பணியில் உழைத்த நேரமாகவே அமைகின்றதே!
4. தூக்கத்தை வெல்லும் வழி :- சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கம் உண்டு. அது என்னவென்றால் தூங்கப் போனால், தூங்கிக் கொண்டே இருப்பார்கள். வேறு யாராவது தெரிந்தவர்கள் தட்டி எழுப்பினால் தான் எழுந்திருப்பார்கள். அவ்வளவு, ஆனந்தமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். இது ஒருவித நோய்தான்.. இதனால் பல துன்பங்கள் வருவதுண்டு. அளவிற்கு அதிகமாகத் தூங்குவோரும் உண்டு! இத்தகையோர் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியாக எந்த இடத்திற்கும் செல்லக் கூடாது. தக்க துணையோடு செல்வது தான் நலம், மேலும், இவர்களுடைய கணவனோ அல்லது மனைவியோ இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி மிக அன்புடன் இருத்தல் மிக முக்கியமாகும். இவர்களுக்குத் தக்க பாதுகாவல் அவசியம். முந்தைய பிறவியில் மது வியாபாரம் செய்தல், மந்திர சித்தி செய்தல் போன்று இதற்கு சித்தர்கள் பல காரணங்கள் கூறுகின்றார்கள். இது தீர முக்கிய எளிய வழி ஒன்று உண்டு. அது என்னவென்றால் அத்திப் பழங்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ அவரவர் கையால் தொடுத்து கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கத்திற்கு மாலையாக அணிவித்து, தேனில் ஊறிய அத்திப் பழங்களைத் தானமாக அளித்து வர படிப்படியாய் நலம் பெறுவர்.
5. வியாபாரம் விருத்தியடைய வேண்டுமா? தந்தை செய்த வியாபாரத்தை மகனும் தொடர்ந்து செய்வது தான் எப்பொழுதும் நலம் தரும், மேலும் குல வித்தை எளிதாக வந்து விடும். சிறப்புடையதும் கூட , குடும்பத்தில் தந்தை செய்த தொழிலை மகன் செய்யாமல் வேறு தொழிலுக்குச் சென்று பல நஷ்டங்களையும், கஷ்டங்களையும் பெற்றுத் துன்புறுவதுண்டு. தங்கள் குழந்தைகள் திருந்தி தந்தை வழி செல்வதற்குத் தாயும், தந்தையும், மகனும் நேர்த்தி வைத்து, செவ்வாய் அன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் கோதுமை உணவுப் பண்டங்களைச் செய்து வேண்டிடில் தந்தை தொழிலில் மகன் ஈடுபட உதவிடும் உத்தம தெய்வம் ஒன்று உண்டு. இந்த தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? என்ன வடிவம், தாங்கி இருக்கிறார்? அறிய முயலுங்கள்! இறைவனைத் தேடிடும் நேரமும் இனிய தெய்வீக நேரந்தானே!
6. குடும்ப ஒற்றுமைக்கு வழி :- பெண் கொடுத்து, பெண் எடுப்பது பல குடும்பங்களில் சகஜமாய் உள்ளது இதில் பெண் கொடுத்த இடம் சுகமாய் இருக்கலாம். பெண் எடுத்த இடம் சுகமற்றதாய் இருக்கலாம். இதனால் குடும்பத்திற்குள் பெரும் போராட்டமே நடப்பதுண்டு. இந்தப் போராட்டங்கள் தீரவேண்டும் என்றால் தங்கத்தில் உயர்ந்த வகையான ஆடகம் என்ற தங்கத்தால் மாங்கல்யம் செய்து குடவாசல் கோணேசப் பெருமாளுக்கு சனிப் பிரதோஷத்தன்று அம்மன் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து பிரதோஷ வலம் வரச் செய்திடில் குடும்பம் ஒற்றுமை பெறும்.

ஸ்ரீகோணேசப் பெருமான்
குடவாசல்

7. மயக்க நோய்கள் தீர :- ஞாயிற்றுக் கிழமைகளில் கேரட் சாதம், பசலைக் கீரை சாதம், சேனைக் கிழங்கு பொரியல், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுப் பொருட்களைச் செய்து சிவன் கோயிலில் பைரவருக்கு நைவேத்தியம் செய்து தானம் அளித்திடில் கண் திருஷ்டியால் வரும் நோய்கள், சுரங்கள், குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தல் இவையெல்லாம் தீரும் .
8. ஆசிரியர்களின் கடமை :- ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், முதல்வர்கள், ஒவ்வொருவருடைய மனதிலும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான் வாழ்வது அவர்களுடைய முதலும் முடிவான கடமையாகும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள். இவர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளுள் ஒன்று என்னவென்றால் மாணவ மாணவிகளைப் படிப்பில் அதிக ஆர்வம் கொள்ளத் தூண்டுவதே ஆகும். அவ்வாறு மாணவ மாணவிகள் அதிக ஆர்வத்துடன் படித்திட, ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கல்வி ஈர்ப்புச் சக்தியைப் பெற்றாக வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியைகள், முதல்வர்கள் மழை நீரை நேரடியாக மண் பானையில் பிடித்து அதில் துளசி அல்லது மகா வில்வம் (13 இதழ்களுக்குக் குறையாமல் உள்ள மகாவில்வம்) இலைகளை நகம் படாமல் பறித்து வந்து தீர்த்தத்துள் இட்டு சுத்தமாக பூஜையில் வைத்து தர்ப்பைக் கீற்று எடுத்து ஒரு பகுதியைக் கையில் பிடித்துக் கொண்டு மறு பகுதியைத் தேனில் தொட்டு இந்த மழை நீர் குடுவையில் படும்படிச் செய்து குறைந்தது தினமும் காலை மாலை ஐம் சரவண பவ என்ற மந்திர உருவை 1008 முறைக்குக் குறையாமல் ஜபித்து, தினமும் பூஜை முடித்து அந்த நீரைப் பருகுதல் வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்திடில் அவர்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தருகின்ற பாடங்களை மாணவர்கள் மிக எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். ஆசிரியை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் கடைபிடிக்க வேண்டிய தெய்வீகக் கடமைகள் பலவற்றுள் இதுவும் ஒன்றே.!
9. மிகவும் அரிய உபகர்ம பூஜை – புனிதமான பூணூலை ஜாதி, இன, குல பேதமின்றி அனைவரும் அணியலாம். அனைவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம்தனை ஜபிக்கலாம். இதில் இன்னுமொரு ரகசியமுண்டு. தை மாதம் பௌர்ணமியன்று உபகர்மா ஒன்றை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும். இந்த உபகர்மாவிற்கு அத்யாய உத்சர்ஜனம் என்று பெயர். இந்நாளில் இந்த உபகர்மாவைப் பற்றி தெரிந்தவர்களையே விரல்விட்டு எண்ணி விடலாம். இந்நாளில் இதைச் செய்யாதவர்கட்கு, குறிப்பாக வேதநெறிப்படி வாழவேண்டியவர்கள் இதனை முறையாக நிறைவேற்றாவிடில் பெரும் பாவமும், சாபமும் வந்து சேரும். இதற்கு நியதிகள் உண்டு. மேலும் இந்த ஜபக் கணக்கையும் குரு மூலமாக அறிந்து இந்த ஜபம் முடித்து குத்சவி என்ற ஹோமம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வேதம் ஓதி வந்தால், குடும்பங்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான அவல நிலையிலும் சிக்கி துன்புறாமல் நல்வழி கிட்டும். சந்ததியின்மை, பகைமை, சாப, தோஷங்களின்றி வாழ்க்கை சீராக அமையும், சற்குருவை நாடி விளக்கம் பெறுக!
10. அரளுங் கனவகற்றும் ஆறுமுகன்!
பலருக்குப் பலவிதமான கனவுகள் வருவதுண்டு. சில நேரங்களில் அந்தக் கனவு உண்மையாக நிகழ்வதும் உண்டு. நல்ல கனவுகள் உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி தான்! ஆனால் தீய கனவுகள் உண்மையாகி விட்டால் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது என்பது ஒரு சாதாரண மனிதனால் முடியுமா? ஆகவே தீய கனவுகளும் தீய சக்திகளைப் போல் நம் உடலில் புகுந்து பல துன்பங்களைத் தருவதுண்டு. இத்தகைய தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர் எல்லாம் வல்ல முருகப் பெருமானே! இவ்வாறு தீய கவுகளையே நீக்கும் முருகனின் வடிவம் எது தெரியுமா? ஆறுமுகத்தோடு ஆறுகரம் உடைய முருகனே, அப்பெரும் தெய்வ மூர்த்தி. இம்முருகனுக்கு விரதம் இருந்து பால் பொங்கல் படைத்து அன்னதானம் செய்து அடிக்கடி வலம்வருவதால் தீயகனவின் வேகங்களைத் தடுத்து நிறுத்தி விடலாம். இந்த ஆறுமுகன் ஆறுகரத்தோடு எங்கு இருக்கிறார்? வாசகர்களே அறிந்திடுங்கள்! ஆறுமுகனைத் தேடும் அரிய நேரமும் அருள் தேடும் நேரந்தானே!
11. மரண பயத்தை வெல்லுங்கள்!
இறப்பைப் பற்றி பேசுவதற்கே பயம் வருவதுண்டு பலருக்கு! (இறப்பின் இரகசியம் என்ற எம் ஆஸ்ரம வெளியீடான புத்தகத்தைப் படித்தால் மரண பயம் தெளியும்). ஆனால், ஒரு நாள் அனைவரும் இறப்பைச் சந்தித்தாக வேண்டுமே! இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் கிடையாது அல்லவா! இறப்பின் பயம் பலவிதங்களில் வருவதுண்டு. உதாரணமாக நல்மனம் படைத்தோர் நற்காரியத்திற்காகக் கடன் வாங்கித் திருப்பித் தர முடியாத போது மானம் பறி போகுமே என்ற பயத்தினால் சிலருக்கு இறப்பின் நினைவு வருவதுண்டு. அடுத்து, நிறைய பணம் சேர்த்து வைத்திருந்து அதை நல்வழியில் செலவிடாமல் இரவு, பகலாய் என்ன ஆகுமோ என்று நினைத்து, நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களுக்கும் மரண பயம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும். காதலித்துத் திருமணம் நடக்கவில்லையே என்று மனம் வருந்தி இறப்பைத் தேடும் உண்மைக் காதலர்களின் இறப்பு பயமும் மிகவும் கொடியதன்றோ! வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இறப்பு பயம் ஒவ்வொரு நிமிடமும் வந்து கொண்டே இருக்கும். இந்த பயத்தால் உள்ளத்திற்கு பலவித கோரமான மாற்றங்களைத் தரும். விரும்பியவர் மீது சந்தேகமும், அன்புடையோர் மீது வெறுப்பும், உதவி செய்ய வருகின்றவர் மீது அவநம்பிக்கையும் ஏற்படும். ஆகவே, இந்த மாதிரி நேரங்களில் இதற்கென்றே பிரத்தேயகமாக உள்ள சிவன் கோவிலில் சிவனை பூஜித்து அபிஷேக நீரை அருந்தி வந்தால் (இந்த விசேஷ அபிஷேக நீரை அனைவராலும் அருந்துவது மிகக் கடினம், ப்ராப்தம் உள்ளவர்களுக்கே கிடைக்கும்) மரண பயம் நீங்கி அவரவர் நிலைக்கு ஏற்றவாறு தெளிவு பெற்று மனச் சாந்தியை அடைவர். மரண பயம் நீக்கும் இந்த சிவன் கோயில் எதுவோ? வாசகர்களின் ஆன்மீகப் பசியைத் தூண்டி விட இது ஒரு வழியாகும்! சிவனைத் தேடும் நேரமும் சிவமய நேரம் தானே!.
12. தெய்வீகமாய் வாழ்வது எப்படி? கடந்த சில இதழ்களில் நமது தினசரி வாழ்வில் தெய்வீகமாக வாழும் எளிய வழிகளைச் சுட்டிக் காண்பித்து வருகின்றோம் அல்லவா? தினசரி சாமி கும்பிடுவது, நினைத்த போது கோயிலுக்குப் போவது மட்டும் தெய்வீகமாகாது. எந்தப் பரம்பொருளின் அருட்கருணையால் நாம் வாழுகின்றோமோ அந்த இறைவனை ஒவ்வொரு வினாடியும் எண்ணாமல், பணம் சம்பாதிப்பது, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது தெய்வீகமாகாது, சம்பளம், போனஸ் போன்றவற்றைத் தெய்வீகமாக்கச் சில எளிய வழியுண்டு. எட்டணா காசைக் கொண்டு 21 முறை காயத்ரீ ஜெபித்து செலவழித்தாலோ அல்லது பெற்றுக் கொண்டாலோ அதில் படிந்துள்ள  தீய எண்ணங்கள் விலகுகின்றன. இங்ஙனம் பழகிவிட்டால் அதுவே பழக்கமாகி விடும். நீங்கள் வெளியே போகும் போது உங்கள் மூதாதையர்கள் பயன்படுத்திய தைத்தடி, கடுக்கண், கண்ணாடி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமமிட்டு புறப்பட்டால், அது எடுத்த காரியத்தை வெற்றியடையச் செய்யும்.
நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம் , கரணம் லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ தான தருமம்/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்மவினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேராவண்ணந்தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்...

நாள்

விசேஷமான தா , தர்ம, வழிபாடு முறைகள்...

தீரும் கர்மவினைகளும்.,                         கிட்டும் நற்பலன்களும்...!

1.1.1999

நீல நிறம் அதிகம் உள்ள கிளிக்கு இன்று பழங்களை அளித்திடில்.

 குடும்பப் பிணக்குகள் தணியும், மனைவியின் அன்பைப் பெறலாம்

2.1.1999

ஆறுவிரல் உடையோரைக் கொண்டு சிவனுக்கு சிவ அர்ச்சனை

பகைவர் ஒதுங்கிடுவர்...

3.1.1999

சட்டை அணிகின்ற பழக்கம் இல்லாத வயதான பெரியவர்கள்க்கு வேஷ்டி, துண்டு தானம்

பதவியில் புது மாற்றம்.

4.1.1999

வெள்ளைப் பணியாரம் குழந்தைகளுக்குத் தானம்

மாமியாரின் அன்பிற்குப் பாத்திரமாகலாம்.

5.1.1999

கட்டிடத் தொழிலாளர்கள் (Builders) பாடல் பெற்ற கோயில்களில் இலவசமாக கீழ்த்தளம் அமைத்துக் கொடுத்தல்

வராமல் தேங்கியிருந்த பணம் வந்து சேரும்.

6.1.1999

ஸ்ரீயமபகவான் ஆலயங்களில் தெற்கு திசை பார்த்து தீபம் ஏற்றி எள் சாதம் அன்னதானம்..

துணி வியாபாரிகள் நலம் பெறுவர்.

7.1.1999

செம்பருத்தி, மருதாணி, பொன்னாங்கண்ணி மூன்று தைல தானம்

டோபா (wig) போட்டு வாழ்கின்றவர்களுக்கு வரும் துன்பங்கள் விலகும்.

8.1.1999

மலைவாழ் ஏழைகட்கு இலவசத் திருமண உதவி

எதிரிகள் சரணடைவர்.

9.1.1999

மின் துறையில் பணிபுரிவோர் கோயிலுக்கு மின்சார உதவி செய்தல்...

குழந்தைகள் படிப்பில் விருத்தி...

10.1.1999

முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை – எலுமிச்சை அன்னம் தானம்..

பெண் குழந்தைகள் படிக்கவில்லையே என்று ஏங்குகின்ற தாய், தந்தையர்க்கு விடிவு காலம் பிறக்கும்.

11.1.1999

விதவையை மறுமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு அன்னதானம்...

நண்பர்களால் உதவி..

12.1.1999

முருகன், கந்தன் போன்ற முருகன் பெருடையவர்கள் கையால் பன்னீர்ப் பூக்களால் முருகனுக்குப் பூஜை...

முந்திரி, திராட்சை, சேர்ந்த அன்னதானம் – புரையோடிப் போன புண்கள் குணமாக வழியுண்டு..

13.1.1999

தகர விளக்கு (டின், ஹரிக்கேன் விளக்கு) செய்கின்றவர்களுக்கு உணவு, ஆடை தானம்

குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துபவர்களுடைய பளு குறையும்.

14.1.1999

80 வயது நிறைந்த அரிசி ஆலை (RICE MILL)அதிபர்களுக்குப் பாத பூஜை

ஸ்ரீபேச்சியம்மன் ப்ரீதி...பாத பூஜை  செய்பவர்கள் குடும்பத்தில் நன்றாக படிப்பார்கள்...

15.1.1999

ஸ்ரீகௌரீசக்கரம் பூஜை  - ஒன்றிலிருந்து பதினொன்று வரை சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் அளித்தல்...

கணவன் ஆயுள் விருத்தியடையும்.

16.1.1999

 வில்வ மணிமாலை அணிந்து பஞ்சாட்சர ஜபம் ஓதி வெண் பொங்கல் தானம்..

எதிர்பாராத பண உதவி...

17.1.1999

வன்னி இலையால் கணபதிக்கு அர்ச்சனை – கொழுக்கட்டை அன்னதானம்..

சொத்து வழக்கு தீரும்...

18.1.1999

தன்னை விட வயதில் மூத்தோரை மணந்த கணவன்மார்கள் இன்று வில்வ இலை தீர்த்தம் அல்லது துளசி தீர்த்தம் மட்டும் பருகி, காளைக்கும், பசுமாட்டிற்கும் மஞ்சள் பூசி மாலை அணிவித்து அகத்திக் கீரை உணவாய் அளித்திடில்...

காரை தோஷத்தால் வருகின்ற துன்பம் தீரும்.

19.1.1999

விரதம் இருக்கின்றவர்களுடைய உணவை எடுத்து உண்டமைக்கான பிராயச்சித்தமாக, இவ்வாறு செய்தோர் இன்று உண்ணாவிரதம், சுண்டல் தானம்..

பக்கத்து வீட்டுக்காரருடைய சகாயத்தையும் பெறுவர்...

20.1.1999

தைத்தறி நெசவாளர்களுக்கு உணவு ஆடை தானம்..

ஸ்ரீகோதண்டராமரின் அருளைப் பெறலாம். சிறு கடன் தொல்லைகள் தீரும்..

21.1.1999

மலைமேல் அருள்பாலிக்கின்ற பிள்ளையாருக்கு விரதம் இருந்து கொழுக்கட்டை நைவேத்தியம்...

 குழந்தைகளுக்குத் தானம் – ஓசியிலோ, அதிகார துஷ்பிரயோகமாகவோ வாகனத்தைப் பயன்படுத்திய பாவம் தீரும்.

22.1.1999

பாலுள்ள விருட்சங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டுக் காப்புக் கயிறு கட்டிப் பிரதட்சிணம் .

குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தீரும்..

23.1.1999

ஏழைகளுக்குத் தானம்

ஒற்றைத் தலைவலி மற்றும் கபால மயக்க நோய்கள் தீரும்.

24.1.1999

வயதானவர்களுக்குக் கயிற்றுக் கட்டில் தானம்

மேல் அதிகாரிகளின் கோபத்திலிருந்து விடுதலை....

25.1.1999

சிவன் கோயிலுக்கு மூங்கில் ஏணி தானம்...

பிள்ளைகள் தவறான வழிக்குப் போக மாட்டார்கள்.

26.1.1999

 ஏழைகளுக்குத் துணிப் பைகள் தானம்..

செலவுகள் குறைந்து சேமிப்பு பெருகும்.

27.1.1999

தினமும் வெயில்/ மழையில் அலைந்து உழைக்கும் ஏழை, நடுத்தர முகவர்களுக்கு (LIC Agent, etc..) அன்னம்/உடை தானம்...

மயக்க நோய்கள் தீரும்..

28.1.1999

 இரட்டைக் குழந்தைகளுக்கு ஆடை, விளையாட்டுப் பொருட்களைத் தானமாக, பரிசாக அளித்திடுக...

 வாகன யோகம் அமையும்..

29.1.1999

புனிதமான துறவியர்க்கும், முதியோர்க்கும் புதிய கௌபீன (கோவணம்) தானம்...

விந்து குற்றங்களைப் போக்கும்.

30.1.1999

புதுப் பூணூல் தானம்...

எதிரியின் பொறாமைக் கண்களின் தோஷங்களிலிருந்து நிவர்த்தி.

31.1.1999

உண்மையான கடவுள் பக்தியில் திளைத்திருப்போர்க்கு நார்ப்பட்டு, வேஷ்டி தானம்....

நல்ல கனவுகள் பலிக்கும்...

விசேஷ தினங்கள் – சனவரி 1999
1.1.1999 – ஆருத்ரா தரிசனம், பௌர்ணமி திதி 1.1.1999 காலை 11.02 மணி முதல் 2.1.1999 காலை 8.20வரை பௌர்ணமி கிரிவல நாள்..
5.1.1999 – அங்காரகச் சதுர்த்தி
14.1.1999 – காணும் பொங்கல்
16.1.1999 – தை அமாவாசை
24.1.1999 – ரத சப்தமி

30.1.1999 – இரவு 10.57 முதல் 31.1.1999 இரவு 9.37 வரை பௌர்ணமி திதி தை மாத பௌர்ணமி கிரிவல நாள்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam