அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நெய்தாங்கி நந்தீஸ்வரர்

நெய்தாங்கி உய்வு தரும் தெய்வமூர்த்தி
வேந்தன்பட்டி ஸ்ரீநந்தீஸ்வரர் – சென்ற இதழில் ஸ்ரீபரமசிவ மூர்த்திக்குப் பலவிதமான நந்தி வாகனங்கள் உண்டு என்றும் ஒவ்வொரு நந்திக்கும் ஒவ்வொரு விதமான இறைத் திருப்பணிகள் உண்டு என்றும் கண்டோமல்லவா! ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் இறைவனின் சந்தியா தாண்டவ நடன நிலைகள் மாறும் உதாரணமாக, பிரதோஷத்தின் உச்ச நேரத்தில் ஈசனுடைய அநிருத்த சந்தியா தாண்டவ நடன சக்தியைத் தாங்கக் கூடிய வல்லமை அதிகார நந்திக்கே உண்டு. இந்த நடனத்தை தரிசிப்போர்க்கு உரித்த பலன்களாக அவர்களுடைய வீடு, வயல், தொழிற்சாலைகளில் உள்ள பூமி தோஷங்கள் தீர்வதோடு நில சம்பந்தமான கோர்ட் வழக்குகள், நன்முறையிலும் தீர்வுபெறும். கணவன் மனைவியரிடையே உள்ள பிணக்குகள் தீர்ந்து இருவரும் இணைந்து வாழ்வர்! திரயோதசி திதி பரிபூர்ணமாக அமைந்துள்ள நாளில் தான் சிவபெருமான் இத்தகைய நடனத்தைத் தந்தருள்கிறார். ஸ்ரீஅதிகார நந்தீசுவரர் தம் பத்னி தெய்வமாகிய சுயம்பை தேவியுடன் எழுந்தருளியுள்ள தலங்களில் மட்டுமே இத்தகைய அபூர்வ அநிருத்த நடன தரிசனங்கள் கிட்டுகின்றன. (திருமழபாடி, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் etc…,) ஏனென்றால் அதிகார நந்தி, தன் பத்தினியுடன் எழுந்தருளியுள்ள சிலாக்கல் ரூபத்திற்குத் தான் சிவபெருமானுடைய அநிருத்த தாண்டவ சக்தியினைப் பெறும் தெய்வீக சக்தி அமைகின்றது.

கல்லுக்கும் இயற்கை ஒலியுண்டு!
தெய்வீகச் சிலாக்கற்களில் ஆண் கல், பெண் கல், அலிக் கல், வட்டுக் கல், பற்றுக் கல், தட்டைக் கல், கணுக்கல், சங்குக் கல், குடக் கல், நிஷாதக் கல், நட்டுவாங்கக் கல், குறுக் கல், பிரத்யுஷக் கல், துவாதசக் கல், அக்னிக் கல், சந்திரகாந்தக் கல், சூரிய பிரபைக் கல் என்று பலவகைகளை சித்புருஷர்களின் கிரந்தங்கள் விளக்குகின்றன. தெய்வ சிலாக் கற்களான இவ்வனைத்திற்கும் பஞ்சபூத சக்திகள் உண்டு. அதாவது கலியுக ஜீவன்களாகிய நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து வித அணுப் பரிமாணங்களால் ஆகியதாகும். எனவே நம் உயிரமைப்பிற்கு ஏற்றவாறாக, தெய்வ மூர்த்திகளே பஞ்சபூத சக்திகளையுடைய தெய்வ சிலாக் கற்களில் எளிதில் ஆவாஹனம் ஆகின்றனர். ஆனால் இவற்றைக் கல் வகையில் சேர்ப்பதே தவறானது!
தெய்வமே குடி கொண்டு ஆள்வது வெறும் கல்லாகுமா? நன்மை கூட்டும் சாத்வீக குணமுடைய இயற்கை ரசாயனச் சத்துக்களும், மூலிகை ரசப் படிவுகளும், உலோகத் தன்மைகளும், நவரத்தினங்களின் படிமங்களும் கூடியே தெய்வ சிலாக் கற்களின் இறை சாந்நித்தியத்திற்கு மெருகு கூட்டுகின்றன. மேலும் எத்தனையோ கோடி சித்தர்களும், மகான்களும், யோகியர்களும் அமர்ந்து தவம் புரிந்து பரம் பொருளை ஜோதி ரூபமாக ஸ்பரிசித்த கற்களும் தெய்வீக சிலாக் கற்களாக மாறுவதுண்டு. இத்தகைய இறையொளிக் கற்கள் அதில் குடி கொண்டுள்ள தெய்வீக சஞ்சார ஒலி, ஒளிக் கற்றைகளை சப்த ஒலிகளாக, நாத ரூபத்தில் எப்போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதனையே, தெய்வ வடிவுகளை வடிக்கும் பெரும் பாக்யத்தைப் பெற்ற மதிப்பிற்குரிய ஸ்தபதிகளும், சிற்பக் கலைஞர்களும், இறையருளால், பெரியோர்களின் ஆசியால் உணர்ந்து கல்லைத் தட்டினாற் கிட்டும் நாதத்தைக் கொண்டு அவற்றை அறியும் தெய்வீக அருளைப் பெற்றுள்ளனர்!

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி
வேந்தன்பட்டி

ஸ்ரீகிருதபுரீஸ்வரர்
பசுக்களுக்குரிய காமதேனு லோகம், பட்டீசுவர லோகம், கோகர்ண லோகம், தேனுபுரீசுவரர் லோகம், கோவர்த்தன லோகம் போன்ற பலவிதமான லோகங்களில் ஈஸ்வரன், கிருதபுரீஸ்வரராக நாமம் கொண்டு (கிருதம் – நெய்) அருள்பாலிக்கின்றார். ரிஷப லோகத்தைச் சேர்ந்த தேவாதி தேவ மூர்த்திகளும் தேவதைகளும் மேற்கண்ட லோகங்களுக்கு வந்து பசுபதிநாதராகப் பரிமளிக்கும் ஸ்ரீகிருதபுரீசுவரரை வணங்குகின்றனர். கிருதகாப்பு எனப்படும் பசு நெய்யால் இறைவனுக்குக் காப்பிடுகையில் அம்மூர்த்தியைச் சுற்றி கிருத ஜாதவேதஸ் அக்னி எனப்படும் ஒரு விசேஷமான சூட்சும ஒளிப் படலம் உண்டாகின்றது.  அனைத்து தெய்வ மூர்த்திகளும் தேவாதி தேவ, தேவதைகளும் குடியிருக்கும் கோயிலாக விளங்குவதன்றோ பசு! அதன் தெய்வீகமான உடலின் திருவருட்சுரப்பின் திரட்சியான பாலின், திருஅருட்பாலின் சக்தியாக விளங்குவது தானே பசு நெய்! அனைத்து தெய்வ மூர்த்திகளின் அருட்கடாட்சத் திரட்டாக விளங்கும் பசு நெய்யானது இறைத் திருமேனியை அலங்கரிக்கும் போது ஓர் அரிய ஜோதித் திருமண்டலத்தை உருவாக்குகின்றது.
இவ்வாறாகவே வேந்தன்பட்டி ஸ்ரீநந்தீசுவரர், நெய்க் காப்பில் உறைந்திட, இதனைச் சுற்றியுள்ள பிலாக்காச நட்சத்திர ஒளி மண்டலத்தின் மேன்மை பல்கிப் பெருகுகின்றது. இந்த ஒளி மண்டலத்தில் தான் சித்புருஷர்களும், மகரிஷிகளும் மோனநிலையில் அமர்ந்து இந்த நந்தீசுவரரைத் துதிக்கின்றனர். ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும், இப்பெருமைமிகு நந்தீசுவரரின் திருக்கொம்புகளிடையே தான் சர்வேஸ்வரன் குந்தள தாண்டவம். என்னும் அற்புத நடனத்தை ஆடி மகிழ்விக்கின்றார். இது கிருதபுரீஸ்வரரின் ஆனந்தத் திருக்கோலத் தாண்டவ நிலையாகும்.
குந்தள தாண்டவம்
ஸ்ரீபரமேசுவரன், கிருதபுரீசுவராக அவதாரம் பெற்ற போது ஆடிய நடனம் இது! எத்தனையோ கோடி யுகங்களுக்கு முன், தாம் கிருதபுரீசுவரராகத் தோன்றிய போது ஆடிய நடனத்தை ஒவ்வொரு பிரதோஷத்திலும் வேந்தன்பட்டி நந்தீசுவரரின் திருக்கொம்புகளுக்கிடையே இன்றும் ஈசன் மீண்டும் ஆடுவதின் ரகசியம் என்ன? இன்றளவும், பிரதோஷ நேரத்தில் இந்நந்தீஸ்வரரைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள், சிவபெருமான் கிருதபுரீசுவரராகத் தோன்றிய காலத்தில் அவரை உபாசித்து வழிபடும் பாக்கியத்தைப் பூர்வ ஜென்மத்தில் நிச்சயமாகப் பெற்றவர்களாய் இருப்பர். கிருதபுரீசுவரர் வழிபாடு மிகவும் பெறற்கரியதொன்றாகும். மேற்கண்ட லோகங்களில் ஸ்ரீகிருதபுரீஸ்வரர் பசு நெய்யால் ஆகிய லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். தேவாதி தேவர்களும், மகரிஷிகளும், பசு நெய்யால் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஸ்ரீகிருதபுரீசுவரருக்கு மேலும் மேலும் நெய்யபிஷேகம் செய்திட, பசு நெய்யாலாகிய லிங்க மாமலை போல் இன்றும் பல விண்ணுலங்களில் திருஅண்ணாமலையைப் போல் கிருதகிரீசுவரராகவும் சர்வேஸ்வரன் காட்சியளிகின்றார். திருஅண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வருவது போல கிருதகிரியாக (பசுநெய் மலை) கிருதபுரீசுவரரின் லிங்க மாமலைத் திருமேனியைச் சுற்றி எண்ணற்ற விண்ணுலக வாசிகளும், தேவாதி தேவர்களும், மகரிஷிகளும், சித்புருஷர்களும் இன்றும் வலம் வருகின்ற்னர். எனவே வேந்தன்பட்டி நந்தீசுவரரைப் பிரதோஷ நேரத்தில் வழிபட்டு வலம் வருகையில் குந்தள தாண்டவக் கோலத்தில் நந்தீஸ்வரரின் திருக்கொம்புகளில் சூட்சும நிலையில் நடனமாடும் ஸ்ரீகிருதபுரீஸ்வரரையே வலம் வரும் பாக்யம் கிட்டுகின்றது. இதனால் கிருதமலையானாக, பசுநெய் மலையாக விளங்கும் கிருத கிரியையே, மலைவலம் வரும் புண்ய சக்தி எளிதில் கிட்டுகின்றது! என்னே அரிய பாக்யம்! புதுக்கோட்டை பொன்னமராவதி அருகிலுள்ள வேந்தன்பட்டி ஸ்ரீநந்தீஸ்வரரின் மஹிமையைப் பல புராணங்களாக வடித்திடலாம். அந்த அளவிற்கு அற்புத தெய்வீக மூர்த்தியாய் அருள்பாலிக்கும் ஆனந்த நந்தீஸ்வரர்!

பாதாள லிங்க மகிமை

பாதாள லிங்க மூர்த்தியிடமிருந்து எப்போதும் பிரதிபலிக்கின்ற அதிஅற்புத சூட்சுமக் கதிர்கள், மஹான்கள், யோகிகள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிந்த புனிதச் சுடர்ப் பகுதி ! பாதாள லிங்க தரிசன முறைகள்.
திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பாதாள லிங்க மூர்த்தி அருள்பாலிப்பதை அறிவீர்கள்! பாதாள லிங்கம் என்றால் என்ன? தரைமட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ள தெய்வ மூர்த்திகளை மட்டுமா பாதாள தெய்வ மூர்த்தி என்று சொல்கிறோம்? அதல, விதல, சுதல என்றவாறாக பதினான்கு மட்டுமன்றி எண்ணற்ற கீழ் லோகங்களும் உண்டு! பாதாள லோகத்தில்தான் மகாபலிச் சக்கரவர்த்தி இன்றும் வாழ்ந்திட அங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு தாம் வாக்களித்தபடி காத்து நிற்கின்றார். பாதாளமென்றால் பூமிக்குள் இருப்பது மட்டுமல்ல, பூமிக்குக் கீழே உள்ள வேறு பாதாள லோகங்களும் உண்டு. பல யுகங்களுக்கு முன் ரிஷிகளும் முனிவர்களும், யோகியரும் ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஓரிடத்தில் அமர்ந்து ஊண், உறக்கமின்றிக் கடுந்தவத்தை யோக நிலையில் கூடியவாறு மேற்கொள்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகள் நிறைந்த தவமாதலின், மண்ணும், கல்லும், மரமும், பாறையும் அவர்களை மூடிய நிலையிலும் தவத்தில் பிரகாசிக்கும் இத்தகைய உத்தமர்கள் இறை தரிசனம் பெற்றபின் தம் தபோ பலத்தின் தர்ம சக்திகளை அவ்விடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

இதனால் இப்பகுதி புனிதத்தன்மை கூடியதாக விளங்கி ஆங்கே
1. ஸ்வயம்பு மூர்த்திகள் எழுந்தருள்தலும்
2. அக்கல்லில்/பாறையில் கடவுளின் வடிவுகளை ஏற்படுத்துதலும்
3.பிற்காலத்தில் தோன்றுகின்ற மஹான்கள் சிலாபிரதிஷ்டை செய்து ஆலயமெழுப்புதலும்
4. இறையற்புதமாக, வருங்காலத்தில் ஏனைய மஹான்கள் இங்கு தவத்தைத் தொடர்தலும்.
5. அப்புனிதமான இடத்தின் தெய்வீகத் தன்மையை அதற்குரித்தான மஹிரிஷியோ/ யோகியோ இறை ஆணையாகத் தாமே வெளியுலகிற்கு உணர்த்துதலும் உண்டு.
இவ்வாறாகத் திருஅண்ணாமலையில் உள்ள பாதாள லிங்க மூர்த்தி மட்டுமின்றி ஆழத்துப் பிள்ளையார் (விருத்தாசலம்) மற்றும் சில இடங்களில் ஸ்ரீஅக்னீஸ்வர லிங்க மூர்த்திகளும் இவ்வாறே பாதாளத்தில் தோன்றுகின்றனர். திருச்சி மலைக்கோட்டை பாதாள ஐயனாரும் இவ்வாறே! திருஅண்ணாமலையிலுள்ள ஸ்ரீபாதாள லிங்க மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். மூலாதாரக் கனலை எழுப்பி, முறைப்படுத்தி சஹஸ்ராரம் வரை கூட்டி ஆத்ம ஜோதி தரிசனத்தைத் தரவல்ல லிங்க மூர்த்தி! தன்னைத் தானே உணர்விக்கின்ற தத்துவ லிங்க மூர்த்தி! தன் ஆத்ம ஜோதி சக்தி தரிசனத்தைத் தானும் உணர்ந்து ஜீவன்களுக்கும் அளிக்க வழிவகை செய்யும் ஆத்ம குரு மூர்த்தி!
இளஞ்சிறுவனாய் இங்கு ஓடோடி வந்தமர்ந்த ஸ்ரீரமண மஹரிஷியின் நான் யார் என்ற உள்ளக் கிடக்கைக்கு நற்ஜோதி தரிசனந் தந்து ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளே நேரில் வந்து யோகக் கூட்டினுள் ஒளிந்து கிடந்த ரமண பாலனைத் தம் திருத்தோளில் தூக்கி மேல் வந்து உலகத்திற்கு ரமண மஹரிஷியாய் எடுத்துக் காட்டிய மிகவும் புனிதமான இடம் இதுவே! இங்கு சிறிது நேரம் அமர்ந்தாலே ஒரு புதுவிதமான அக்னிச் சூடு இருப்பதை உணர்ந்திடலாம். இது வெக்கையைப் போல் தோன்றும்! ஆனால் இதுவே மூலாதாரச் சூட்டின் முக்தி தத்துவத்தை உணர்த்தும் முதல் அம்சம்! உண்மையில் இது வெறும் பாதாள லிங்க மூர்த்தி மட்டுமல்ல! பஞ்ச பூதத் (ஐந்து) தலங்களுள் அக்னித் தலமான திருஅண்ணாமலையில் மூலாதார அக்னி லிங்கமாய் முளைத்து அருள்பாலிக்கும் அற்புத லிங்க மூர்த்தியுமாகும். வராஹ மூர்த்தியாய் ஸ்ரீமஹாவிஷ்ணு, சர்வேஸ்வரனின் திருவடியைத் தேடி பூமியினுள் புகுந்து செல்கையில் பலவிதமான லிங்க மூர்த்தங்களைக் கண்டு ஆனந்தமடைந்து பூஜித்துத் தொடர்ந்தார். எனவே அவரும் இங்கு தேடியது இறைவனின் திருவடியைத் தானே! ஸ்ரீமஹாவிஷ்ணு, வராக அவதாரமாய்ப் பூஜித்த லிங்கங்களும், அவர்தம் இறைத் திருமேனிபட்டமையால் சிவலிங்க வடிவ கொண்ட லிங்க மூர்த்திகளும் கோடி கோடி லிங்கங்களாய்ப் பெருகி இன்று திருஅண்ணாமலையின் அடித்தளத்தை வியாபிக்கின்றன.
அடிக்கொரு லிங்கம்! அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்களே!
என சித்தர்களின் கிரந்தங்கள் விவரிப்பதைப் போல் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் மேலும் கீழும், உள்ளும் வெளியும் தரையிலும், ஆகாயத்திலும், பூமியினுள்ளும், காற்று மண்டலத்திலும் விண்வெளியிலும், எத்தனையோ கோடி லிங்கங்கள் உள்ளனவே! இவற்றில் மூலக் கருவாய், சர்வேஸ்வரனின் திருமேனியாய், பிரபஞ்சத்தின் மிகப் பெரிய ஸ்வயம்பு லிங்க மூர்த்தியாய்த் திருஅண்ணாமலையார் மலைரூபத்தில் அருள்பாலிக்கின்றார். மூலமூர்த்தியான ஸ்ரீஅருணாசல லிங்க மூர்த்தியே பஞ்சபூத அக்னி ஸ்தல மூர்த்தி! மூலவரான ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சுவர்ண (தங்க) பந்தனம் சாற்றுகையில் பல ஆண்டுகளுக்கு முன் லிங்கத்தின் அடிப்பகுதி பூமியினுள் நெடுந் தொலைவு செல்லக் கண்டு அதிசயித்து ஆனந்தித்தோர் பலருண்டு! மூலவருக்கும் பாதாள லிங்க மூர்த்திக்கும் என்ன தொடர்போ!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி பாதாளலிங்கம்
திருஅண்ணாமலை

மூலவரோ பஞ்ச பூத அக்னி சக்தியை அக்னி மூலமாகத் தான் சேர்க்க முடியும். ஒரு ஜோதி மற்றொரு ஜோதியுடன் சேர்வது மிகவும் எளிதல்லவா! ஒரே விளக்கிலிருந்து எத்தனையோ கோடி விளக்குகளுக்கும் அக்னியை ஏற்றிடலாம். இதனால் அதன் ஜோதித் தன்மையா குறைந்து விடுகிறது? கற்பூரமோ, திரியோ, மெழுகுவர்த்தியோ எதுவாயினும் ஏதேனும் என்று தம்மைத் தியாகம் செய்தால் தான் ஜோதி எழுகின்றது!
விளக்கின் குரு விளக்கம்!
விளக்குதான் நம் உடல்!
சற்குருவே திரி!
எண்ணெயே அவர்மேல் கொள்ளும் நம்பிக்கை!
ஒளிதான் இறைவன்!
சற்குருவானவர் நம்முடைய நல்வாழ்விற்காகத் தம்மையும் தம் புண்ய, தெய்வீக சக்திகளையும் தியாகம் செய்து இறைவனை ஒளியாய்க் காட்டுகின்றார். மூலாதார அக்னியைக் கூட்டி ஆத்மஜோதிப் பிரகாசத்தைக் காண்பதும் முக்தி நெறிகளுள் ஒன்றாகும். இந்த மூலாதார அக்னியைத் தக்க முறையில் கூட்டித் தருபவரே பாதாள லிங்க மூர்த்தி! எனவே தான் எத்தனையோ கோடி யுகங்களில் தோன்றிய மஹான்களும், சற்குருமார்களும் எப்போதும் சூட்சும, ஸ்தூல ரூபங்களில் இங்கு குழுமிய வண்ணமிருக்கின்றனர். காரண மென்ன?
குளுமை (A/c)யை நாம் விரும்புவது போல், குளிரானால் வெம்மையையும், வெம்மையானால் குளிர்ச்சியையும் நாம் விரும்பி ஏற்பது போல, மஹரிஷிகளுக்கும், யோகியர்க்கும் சற்குருமார்களுக்கும், விருப்பு வெறுப்பு யாதுமில்லையாயினும், இறைச் சூழ்நிலையிலேயே எப்போதும் திளைக்க விரும்புகின்றனர். ஏனென்றால் சாசுவதமான பேரின்பத்தைத் தரக் கூடியது அது ஒன்றேயாம்! மேலும் திருஅண்ணாமலை ஸ்ரீபாதாள லிங்க மூர்த்தியின் திருச்சந்நிதியில் எப்போதும் பீறிட்டுக் கொண்டிருக்கும் மூலாதார அக்னிக் கிரணங்களையே நாடி சற்குருமார்களும், மஹரிஷிகளும் ஓடோடி வருகின்றனர்! இதைச் சாதாரண மனிதர்கள் பெற்றிட முடியுமா? நிச்சயமாக, குறித்த பல இறைநெறி முறைகளைக் கைக்கொண்டிடில்!
பாதாள லிங்க மூர்த்தியின் திருச்சந்நிதியில் எப்போதும் பரிணமித்துக் கொண்டிருக்கும் யோகாக்னிக் கிரணங்கள் மிகவும் தெய்வீக சக்தி நிறைந்தவை! பல யோக நிலைகளின் பலன்களைத் தர வல்லவை! குறித்த சில தியான முறைகளின் சக்திகளை, குறிப்பாக ஜட தியான முறையின் பலாபலன்களைத் தர வல்லவை! சாதாரணமாக இச்சக்திகளைப் பெற வேண்டுமெனில் பல்லாயிரமாண்டுகள் தவம் புரிந்தாக வேண்டும்! ஆனால் இவ்விடத்தில் பல யுகங்களாகத் தவங் கிடந்த முனிவர்கள் ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தம் தர்மமயத் தபோபலன்களை இங்கு சூட்சும ஒளிக் கற்றைகளாக வைத்துச் செல்கின்றனர்.

ஸ்ரீகுதூகல நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

உண்மையான, நியாயமான பிரார்த்தனைகள் பலித்திட இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால் இறைப் பொதுப் பணிக்குத் தம்மை அர்ப்பணம் செய்ய விழைவோர்க்குத்தான் இத்தகைய கிரணங்கள் பரிபூரணமாக அருள்பாலிக்கின்றன. எனவே தனிப்பட்ட பிரார்த்தனைகளை, இறைப்பணிகளோடு இணைத்துத்தான் தான தர்மங்கள் பிறந்தன! தான தர்மங்களில் தான் ஒருவித தியாக மனப்பான்மை அதாவது தான் பெற்றதைப் பிறருடன் பகிர்ந்து மகிழும் இறைத் தத்துவம் மலர்வதால் பொதுவாக தான தர்மப் பரிகாரங்களுடன் கூடிய பிரார்த்தனைகளுக்குப் பலித சக்தி அதிகம்!
1 பாதாள லிங்க மூர்த்தி மட்டுமல்லாது பூமியின் தரைப்பரப்பின் கீழ் அருள்பாலிக்கும் தெய்வ மூர்த்திகளை ஆண்களாயின் வேட்டி அணிந்து மேலாடையின்றி தரிசிப்பதே சிறப்புடையது! ஏனெனில் இங்கு சூட்சுமமாகப் பிரகாசிக்கும் கிரணங்கள் எந்த அளவிற்கு உடலில் சேர்கின்றதோ அந்த அளவிற்கு யோக சக்தி பெருகுகின்றது.
2. புனிதந் தரும் குடுமி :- ஆண்கள் குடுமி வைத்துக் கடுக்கன் அணிந்து சுவாமியை தரிசித்தல் புனிதமானது. குடுமி வைப்பது என்பது கலியுகத்தில் அநாகரீகமாகவும் குறித்த வகையினருக்காகவும் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இது தவறான அபிப்பிரயாயமாகும். குடுமி வைத்தலை சிகைச் சரபம் என சித்தர்களின் கிரந்தங்கள் குறிக்கின்றன. நம் மூதாதையர்கள் சாதி பேதமின்றி அனைவரும் கட்டுக் குடுமியுடன் இருப்பதைப் பழைய புகைப்படங்களில் இன்றும் கண்டு ஆனந்திக்கலாம். இதேபோல் அக்காலத்தில் அனைவரும் எவ்வித வித்யாசமுமின்றிக் கடுக்கன்கள் அணிந்திருந்தனர். குடுமி வைத்தலில் முன் குடுமி, வட்டக் குடுமி, கட்டுக் குடுமி, பின் குடுமி, கர்ணக் குடுமி எனப் பல வகைகள் உண்டு. முன் குடுமியில் ஏற்படும் முன் வட்டத்தில் மந்திர ஒளி சக்திகளும், சுயம்பு மூர்த்திகளிடமிருந்து வெளிவரும் தெய்வீகக் கதிர்களும் படிந்து தீர்க தரிசனத்தையும், அடக்கம், பணிவு போன்ற தெய்வீக குணங்களையும் அளிக்கின்றன! நல்லொழுக்கத்துடன் வாழ குடுமி வகையான முடி அமைப்பே சிறந்ததாகும்.
தற்காலத்தில் குடுமி வைத்தல் மிகவும் அசிங்கமானது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. மனிதனுடைய அகங்கார, ஆணவப் பேயை விரட்டுவதற்காகத் தியாக மனப்பான்மையுடன் சிகை அழகை வெறுத்துக் குடுமியைத் தானாக, தியாக சீலத்துடன் ஏற்கும் பண்பாட்டினை நாம் மறந்து விட்டோமே! எனவே குடுமி வைப்பது என்பது கோயில் வழிபாட்டிற்கு மட்டுமே என்று எண்ணாது, ஆன்மீக வழிமுறைகளுள் அனைவர்க்கும் உரித்தான ஒன்று என உணர்தல் வேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர் கூட நெடு முடிதாங்கி, ஆலய வழிபாட்டின் போது அதைச் சீரிய குடுமியாக்கி ஆன்மீக சக்தியை வளர்த்தனர். ஒரு முறை சிகையை வெட்டினால் (hair- cutting) ஆறு மாதத்திற்குரிய ஜடாக்ரம சக்தியை இழந்து விடுகிறோம்! ஏனென்றால் தலைமுடியை நன்கு பராமரிப்பதின் மூலம் பல கர்மவினைகளை எளிதில் தீர்த்து விடலாம்.
3. முடியில் தைலம் முடியாததிலையே :- தினமும் ஒரு மூலிகை கலந்த தேங்காய் எண்ணெய்த் தைலமாவது தலைமுடியில் சேர்தல் வேண்டும். இது மூளையைக் காப்பதுடன், இன்னமும் நாம் உபயோகப்படுத்தாத கோடிக் கணக்கான மூளைச் செல்களில் பலவற்றைச் செயல் நிலைக்குக் கொண்டு வருகிறது! நம் மூளையில் உள்ள செல்களில் நம் வாழ்நாளில் கால் சதவீதத்தைக் கூட நாம் பயன்படுத்துவதில்லை! இறைவன் நமக்களித்த அற்புதமான, நவரத்னங்களுக்கும் மேலான மூளையைச் சற்றும் பயன்படுத்தாமல் வாழ்க்கையை வீணாகக் கழித்தால் இறைவன் அளித்த பிரசாதத்தை விட்டெறிவது போல் ஆகுமல்லவா!?
பொன்னாங்கண்ணி, மருதாணி, நீலபிருங்காதி, கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களுக்கு மூளையை, ஊக்கப்படுத்தும் சக்தி உண்டாதலின் இவற்றைத் தினந்தோறும் முறையாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான மூளைச் செல்கள் நடைமுறை உபயோகத்திற்கு (ஆன்மீக முறையில்) வருகின்றன. இதனால் சிறந்த ஞாபக சக்தி, உத்தம பக்தி, உறுதியான, வைராக்யமான கடவுள் நம்பிக்கை, ஆழ்ந்த குரு நம்பிக்கை ஏற்படுவதுடன், முறையற்ற காமம், பேராசை, குரோத, விரோத எண்ணங்களின்பால் மனம் செல்லா வண்ணம் நன்னிலைப்படுத்துகின்ற செல்களின் ரட்சா சக்தியும் கிட்டுகின்றன! இதுவே மூலிகைத் தைலங்களின் தெய்வீகச் செயல்பாடு!
4. நெற்றிக்குத் திருநீறு/சந்தனம்/குங்குமம்/நாமமிட்டுப் பூணூல், கடுக்கன்கள் தரித்து தரிசித்தல் சிறப்புடையது. வேட்டியைப் பஞ்ச கச்ச முறையில் இடுப்பில் துண்டுடன் அணிதலால், சுவாச முறைகள் பந்தனப்பட்டு யோக சக்தியைக் கூட்டுகின்றன. காலில் மருதாணி இட்டுச் செல்லுதலால் இம்மூலிகையின் மஹிமையால் நாளங்கள் சக்தியூட்டம் பெற்று நம் தேகத்திற்குப் புனிதத்தை அளிக்கின்றன. கைகளை வீசியோ தொங்கவிட்டுக் கொண்டோ இத்திருச்சந்நிதிக்குச் செல்லாது கைகளைக் கூப்பி வணங்கியவாறோ அல்லது கைகளைக் கட்டிக் கொண்டோ பிரதட்சிணம் வருவதலால் மூலாதாரக் கிரண சக்திகள் உடலில் சேர்ந்து சிதறி வெளிச் செல்லாது தடுக்கப்படும்.

தாயே தெய்வம்

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி – ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியது
பெற்ற தாயின் அனுக்ரஹம் பெற :- பாலூட்டிப் பரிந்து வளர்த்த தாயை ஆளாகியவுடன் தாய்க்குரிய சேவையையும் அன்பையும் மறந்து திருமண வாழ்க்கையின் மாயையில் உழல்வோரே அதிகம்! தாயின் உள்ளம் குளிரும்படி சேவை செய்தால்தான் நற்கதி கிட்டும். பெற்றோரை நம் நாட்டில் தவிக்க விட்டு, அயல்நாட்டில் களித்து வாழும் பிள்ளைகளால் யாது பயன்? உயிர் பிரிகையில் பெற்ற தாயைத் தன் மடியில் வைத்திருக்கும் பாக்யத்தால் எத்தனையோ ஜென்ம பாவங்களுக்குத் தீர்வு கண்டிடலாமே! தாயைத் தினந்தோறும் தாள் பணிந்து வணங்கினாலே போதும், பல ஜென்மங்களைக் கரையேற்றிடலாமே! தாயின் மேல் அன்பு (பாசம் அல்ல) பெருகவும், தாய்க்குரிய சேவைகளை முறையே ஆற்றிடவும் கீழ்க்கண்ட ஸ்ரீஅங்காளி அந்தாதிப் பாடலை மனமுருக தினமும் ஓதி வந்திடுக! இதுவரை தாய்க்குச் சேவை செய்யாத பாவத்திற்குப் பரிகாரமாக, தாயிருந்திடில் வருந்தி, மன்னிப்புக் கோரி இனியேனும் திருந்தி வாழ்ந்திடுக! தாயின்றேல், அநாதையாக வாழும் வயதானோர்க்கு சாதி பேதமின்றி சரீரப் பணிபுரிந்து உரிய உதவிகளைச் செய்து இந்த அங்காளி அந்தாதியைத் துதித்து வந்திடில் தாய்க்கு நற்கதி கிட்டுவதோடு அவ்வாத்மாவிற்குப் பெறற்கரிய தெய்வீகப் பித்ரு நிலையும் கூடிடுமே!
அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமோ யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே

அடிமை கண்ட ஆனந்தம்

கலியுகத்தில் ஒரு சற்குருவிடமிருந்து பெற்ற குருகுலவாசப் பாடங்கள் ! புழு, பூச்சி முதல் மனிதர்கள், தேவாதி தேவர்கள் வரை அனைவருக்கும் சற்குரு உண்டு என்பதை உணர்த்தும் குருகுலவாச அனுபூதிகள்...! ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் குருகுலவாச அனுபூதிகள்.!
சிவகுருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருட்பெரும் சிஷ்யரே குருமங்கள கந்தர்வா என்று அன்புடன் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீஅங்காள பரமேசுவரி ஆலய மண்டபத் தூணின் கீழ் அமர்ந்து அருளாட்சி செலுத்தி பல்லாயிரக் கணக்கானோரின் குறைகளைத் தீர்த்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் அரவணைப்பிற்கு ஆளாகும் பெரும் பாக்கியத்தைப் பெற்றவரே ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள். இளஞ் சிறுவனாய் இனிதே அடைந்த இறையருள் பூரிக்கும் குருகுல வாசத்தில் பெற்ற வியத்தகு அற்புத நிகழ்ச்சிகளும் தெய்வீக அனுபவங்களுமே அடிமை கண்ட ஆனந்தம் தொடராய்ப் பூத்துக் குலுங்குகின்றது. அத்தனையும் சற்குருவின் திருப்பார்வையில் நிகழ்ந்த முத்துக் குவியல்கள் ஆகும்! அவர் பெற்ற பாடங்களும், பரம்பொருட் சுவை செறிந்த அனுபூதிகளுமே நம்முடைய வாழ்க்கை செம்மையாக இறை நெறியில் இலங்குவதற்காகவும் குருவருளின் மேன்மையை உணர்த்தவும் அமைந்த ஆன்மீகச் சாலையாகும். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபவங்களின் தொகுப்பானது இன்ப துன்பங்களுக்கிடையிலும் நஷ்டங்களுக்கிடையிலும் சற்குரு காட்டுகின்ற உத்தம இறைநெறிப் பாதையை உணர்த்துவதாகும்.
கொல்லி மலையில் சில மூலிகைகளைப் பெற்ற சிறுவன் தன் குருநாதராம் கோவணாண்டிப் பெரியவரிடம் திரும்பி வருகையில் பெற்ற அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினோம் அல்லவா! இடையிடையே ஏற்பட்ட அரிய சம்பவங்களும் இதனுடன் கோர்வை கொண்டுள்ள சுவையான நிகழ்ச்சிகளையும் கூட்டியே மூலிகைகளைப் பற்றிய அனுபவமானது இங்கு தொடர்கின்றது. ரசவாத மூலிகைகளுள், மிகவும் சக்தி வாய்ந்ததொன்றே நிலம்புரண்(ட்)டி ஆகும். உண்மையில், மனிதர்களுடைய திருமணம் போல், எறும்புகளின் குலத்தில் நிகழ்கின்ற திருமண வைபவமானது நிலம்புரண்டி என்ற அற்புதமான தெய்வீக சக்திகளை உணர்ந்து, மழை, பூகம்பம், இடி, நெருப்பு  போன்றவற்றை முன் கூட்டியே அறியும் தீர்க்க தரிசனத்தைப் பெற்றுள்ளன என்பது வியப்பிற்குரியது. மனிதனை விடப் பலவிதமான ஆன்மீக சக்திகளைப் பெற்றவையே எறும்புகள்! இத்தகைய அரிய விஷயங்களையெல்லாம் சிறுவனுக்குப் போதித்தவாறே கோவணாண்டிப் பெரியவர். பாரதத்தின் பல்வேறு பள்ளத்தாக்கு, நதி தீரங்கள், குகைகள், மலைப் பகுதிகளில் புனித பயணம் மேற்கொண்டு அவனுக்குப் பெறற்கரிய தெய்வீக சக்திகளை அளித்து உய்த்துணரச் செய்தார். கொல்லிமலையில் பெற்ற ரசவாத மூலிகைகளைச் சிறுவனிடம் தராது, தம் வசமே வைத்திருந்த பெரியவர் இப்புனித யாத்திரையின் போது ஒரு புதுவிதமான தானதர்மத்தைச் சிறுவனுக்குப் புகட்டினார் என்று குறித்திருந்தோம் அல்லவா? அதனை முதலில் காண்போமா!
நாமக்கல் அருகே  சூட், பேண்ட்டுடன் மேனாட்டு நாகரீக உடை பாணியில் சிறுவனை அசத்திய பெரியவர், திடீரென்று ஒரு துணிக்கடைக்குள் சென்றார். சரசரவென்று ஒரு கெஜ நீள அளவில் சில குறித்த நிறங்களில் பல கட்பீஸ்களை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த தையற்கடையினுள் நுழைந்தார். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! என்ன இது! பேண்ட்டுக்கும், சட்டைக்கும் கூடப் பத்தாமல் துணியை வாங்கி என்ன செய்வது? ஒரு டவலாய்க் கூட வைத்துக் கொள்ள முடியாதே!
இத்தகைய சமயத்தில் வாயை மூடிக்கொண்டு இருப்பதே உத்தமம் எனப் பலமுறை அனுபவத்தில் கண்டவனாதலின் மௌனமாய்ப் பெரியவரைத் தொடர்ந்தான்.
“ டேய்! கொஞ்சம் மஞ்சள், குங்குமம்  வாங்கிவா!” என்று ஆணையிட்ட பெரியவர் தையற்காரரிடம் மிகவும் பரிச்சயமானவர் போல் பேசலானார்!
சிறுவன் சற்று நேரம் திகைத்து விட்டான், கையில் ஒரு பைசா கூடத் தராமல் மஞ்சள், குங்குமம் எப்படி வாங்குவது? இருக்கின்ற பரபரப்பில் எதையாவது கேட்டால் எப்படிச் சீறுவாரோ, என்ன தண்டனை கொடுப்பாரோ? இவ்வகையான இக்கட்டான சூழ்நிலைகளில், சிறுவன் முன்னர் பல முறை சிக்குண்டு தவித்திருக்கின்றான்! வருவது வரட்டும் என்று எண்ணி பெரியவர் தந்த பழைய குறிப்புகளை ஞாபகப்படுத்திக் கொண்டு தைரியமாக எதையாவது செய்து விடுவான்! பல சமயங்களில், சபாஷ் என்ற ஷொட்டும் கிடைத்திடும்! சில சமயங்களில், “அப்பத்திக்கு அந்த மாதிரிடா கண்ணு, இப்பத்திக்கு இந்த மாதிரி பண்ணியிருக்கணும்!” என்று அன்புடன் வழி காட்டுவார்.
ஆனால் சில இடங்களிலோ, “ஏண்டா இந்த மாதிரி கிறுக்குத்தனம் பண்றதுக்கா உன்னைக் கஷ்டப்பட்டு தெய்வீகத்துல வளர்த்துக்கிட்டுவர்றேன்,” என்று சீறுவதுடன் சில கடுமையான தண்டனைகளையும் அளித்திருக்கிறார்.. அத்தண்டனைகளுள் ஒன்றே ஒரு நாள் முழுதும் சிறுநீர் வரவிடாமல் செய்ததாகும். அடிவயிறு கனத்து, சிறுநீரின் தேக்கத்தின் வலியானது, நடக்கும் போது பாதம் வரை விரியும்! உட்கார்ந்தாலோ ஒரு நீர்த்துளிக் கூட சிறுநீர் வராது. சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான், சற்றே யோசித்துப் பாருங்கள்! எதற்காக இக்கடுமயான தண்டனை தெரியுமா? பெரியவர் ஊட்டுவித்த சில சித்திகளைச் சிறுவன் தனிமையில் சோதனை செய்து பார்த்ததற்காகவும் சோம்பேறித்தனத்தினாலும், அசட்டையினாலும், சில அரிய இறைத் திருப்பணிகளைச் செய்ய விட்டமையினாலும் தான்!
ஒரு முறை பெரியவர் ஒரு பெரிய சந்தனக் கட்டையையும், கல்லையும் அளித்து, “இதனை பத்திரமாய் வச்சிக்கிட்டு வேதாரண்யம் சிவன் கோயில்ல வருஷத்துல ஒரு நாளைக்கு மட்டும் சந்தனக் காப்பு சாத்து வாங்க அப்ப அங்கபோய் இந்த சந்தனக் கட்டையைத் தேயற வரைக்கும் அரைச்சுக் கொடுக்கணும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ!” என்று அருளாணையிட்டார். ஆனால் சிறுவன் இதனை அறவே மறந்து விட்டான்! வீட்டில் சந்தனக் கட்டையும் கல்லும் பத்திரமாகத் தங்கி விட்டன! ஆனால் சிறுவன் இதனை மறந்து விட்டான்! சரியாக அந்த குறித்த விசேஷ நாளுக்கு மறுநாள் சிறுவன் அங்காளி கோயிலுக்குச் சென்றிட..... பெரியவரோ, அன்று வழக்கம் போல் தூணின் கீழ் அமர்ந்திருந்தாலும், சிறுவனைக் கண்டும் காணாதது போல் எங்கோ ஒரு மூலையைப் பார்த்துக் கொண்டிருக்க, சிறுவனுக்கு பகீரென்றது! ஏனென்றால் அந்த சந்தனக் கட்டையும், கல்லும் அவர் முன் இருந்தன. சிறுவன் அதிர்ந்து நின்றான்! இதெப்படி இங்கு வந்தது? அதே சமயத்தில் தான் வேதாரண்யம் சிவன் கோயிலில் சந்தனம் சாற்றும் நாளைக் கோட்டை விட்டதும் சிறுவனுக்கு மனதில் உதித்திட சிறுவன் பதறி விட்டான்! எப்போதும் “ஓம்டா, ராஜா”, என்ற அன்பொழுகும் பெரியவரின் குரலில் நெக்குருக்கும் சிறுவன் இன்று வாடி வதங்கி நின்றான்!
வேதாரண்யத்தில் எத்தகைய தெய்வீக சக்தி நிறைந்த பாக்யத்தை, வருடத்திற்கு ஒரு முறையே கிட்டுகின்ற வாய்ப்பை இழந்து விட்டோமே! பெரியவர் சிறுவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை! சிறுனோ பூகம்பத்திற்குத் தயாராக வேண்டிய சூழ்நிலை! திடீரென்று முகத்தைத் திருப்பிய பெரியவர் படபடவென்று பொரிந்தார்..!
“ எத்தனை ஜென்மம் கிடைச்சாலும் இந்த பாக்கியம் கிடைக்குமாடா? இந்த நாளை மறக்கிற மாதிரி நேத்து ஒண்ணும் பெரிசா நீ சாதிக்கலையே! நீ மட்டும் அங்கே சந்தனம் அரைச்சுக் கொடுத்திருந்தீன்னா உன்னோட எத்தனையோ ஜென்மப் பாவத்தைக் கரைச்சிருக்கலாமே! பல ஜென்மபாக்கியைத் தீர்த்திருக்கலாமே! நீ மட்டும் அங்கேயிருந்து சந்தனப் பிரசாதம் கொண்டு வந்திருந்தா அத வச்சிக்கிட்டு இந்தக் கோயில்ல உக்காந்து கிட்டே எத்தனையோ பேருங்களோட கர்மத்தைக் கழிச்சு அவங்களோட பிரார்த்தனையைப் பலிக்க வச்சிருக்கலாமே! கோடானு கோடி சித்தர்களும், ரிஷிகளும், அங்கே ஓடிவந்து அவங்களும் சேத்து சந்தனம் அரைச்சு அந்தப் பிரசாதமும் நமக்கு வந்து சேந்திருக்குமே! எவ்வளவு பெரிய பாக்கியத்தைக் கோட்டை விட்டுட்டியே! மத்தவங்களுக்குத் தெரியாமப் போச்சுன்னா பரவாயில்லை. ஆனா சற்குரு ஒருத்தன் இங்கே உக்கார்ந்து கிட்டு, ஒரு விஷயம் சொல்லி, அதச் செய்யாம விட்டா அதுக்குப் பரிகாரமே எந்த லோகத்திலேயும் கிடையாது தெரிஞ்சுக்கோ! சற்குருவாப் பாத்து ஏதாச்சும் பரிகாரம் சொன்னாத்தான் உண்டு,”
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் சிறுவன் பொல பொலவென்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதான். பெரியவர் அதைச் சட்டை செய்யாததோடு, அவர் தன்னுடைய கோபத்தின் உச்சத்தை விட்டுச் சற்றும் மாறவில்லை.
“ ரெண்டு நாளைக்கு, நீ  ஒண்ணுக்கு வராம தவிச்சாத்தாண்டா இந்த தெய்வீகத்தின் அருமை புரியும்.”
தீர்ப்பை அளித்து விட்டுப் பெரியவர் வேகமாக எழுந்து சென்று விட்டார்! அந்த இரண்டு நாட்களும் சிறுநீர் கழியாது சிறுவன் பட்ட வேதனைகளை எவ்வாறு விளக்க முடியும்? ஈவு இரக்கமற்ற தண்டனையா? இல்லவே இல்லை! எப்படி?
மூன்றாம் நாள் காலை வீங்கிய வயிற்றுடன் தள்ளாடியவாறே சிறுவன் அங்காளி கோயிலை அடைந்திட....
“ ஓம்டா கண்ணு....!”  இப்போது பெரியவரின் வழக்கமான குரல் தான் சிறுவனுக்குத் தெம்பை அளித்தது....
தடுமாறிய நடையுடன், “ஓம் வாத்தியாரே!” என்று பதில் சொல்லக் கூடத் திராணியில்லாது பெரியவரின் மடியில் சாய்ந்தான்! பெரியவர் மகத்தான பேரன்புடன் சிறுவனின் தலையைக் கோதியவாறே, “ஏண்டா ராஜா! ரொம்பத் தவிச்சிப் போயிட்டியா? இனியாச்சும் சொன்னதைச் செஞ்சிடு,” என்று சொல்லியவாறே, “எங்கே வயித்தைக் காட்டு...”, என்று சொல்லிட, சிறுவன் வலியில் திளைத்த முனகல்களுடன் தன் அடிவயிற்றைத் தொட்டுக் காண்பித்தான். வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை!
“ இங்கேயா வலிக்குது? அடடா பெரிசா வீங்கின மாதிரி இருக்கே! எதுக்கும் நல்ல டாக்டர் கிட்டே காமிச்சிடு.....”
சிறுவன் பதில் சொல்லும் அல்லது டாக்டரிடம் செல்லும் நிலையிலா இருந்தான்? ஈனஸ்வரத்தில் முனகியவாறே பெரியவரின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான். அந்த அழுத்தத்திலும் சிறுவனுக்கு விண்ணென்று வலித்தது!
“ இங்கேதானே வலிக்குது!” என்று கூறியவாறே பெரியவர் சிறுவனின் வயிற்றின் மேல் பாகத்தை மெதுவாகத் தடவி விட, சிறுவன் சடேலென்று எழுந்து உட்கார்ந்தான்! என்னே ஆச்சரியம்! வயிற்றில் வீங்கின சுவடே தெரியவில்லை! வலியும் மாயமாய் மறைந்து விட்டது! சிறுவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஆன்ந்தத்தில் குதித்துக் கூத்தாடினான்!
“ வாத்தியாரே! நீ இருக்கும் போது ஒண்ணுக்கும் பயப்பட மாட்டேன்,” என்று சிலேடையாகக் கூறிட.. பெரியவரோ சிரித்துக் கொண்டே, “நீ ஒண்ணத்துக்கும் ஆகாத பயல்னு எனக்கு நல்லாத் தெரியுமே,” என்று பதில் கூறிட இருவரும் சேர்ந்தே கலகலவென்று சிரித்தனர்! ...
குரு சிஷ்யரிகளின் ஜுகல் பந்தியா!
“ திடீரென்று டேய் இங்க வா!” என்று கூறியவாறு சீரியஸான குரலுடன் பெரியவர் தூணுக்குப் பின்னாலிருந்து, அந்த சந்தனக் கட்டையையும், கல்லையும் தன் முன்னால் எடுத்து வைத்ததும் சிறுவனுக்குச் சப்பென்றாகி விட்டது! இதுவரையில் இங்கேயில்லாத சந்தனக் கல்லும் கட்டையும் எப்படி வந்தது?
இந்த விஷயம் என்ன, இரண்டு நாட்கள் சிறுநீர் கழிக்காது அடைந்த வேதனைகள் அவர் திருக்கரங்கள் பட்டதும் மாயமாய்  மறைந்த அதிசயம் போல் பெரியவருடைய எத்தனையோ அற்புதங்களுக்கு அவனால் பதிலைப் பெறமுடியவில்லை. இவற்றின் மூலம், தான் அண்டியிருப்பது ஓர் அற்புதமான சித்புருஷரைத் தான் என்ற நம்பிக்கையே வேரூன்றி நின்றது.... அதன் பிறகு வேதாரண்யத்தில் செய்யாத சந்தனமரைக்கும் திருப்பணிக்குப் பரிகாரமாக ஒரு நற்காரியத்தை பெரியவர் சிறுவனுக்கு அளித்தார். அதைப்பிறகு காண்போம்!
“பெரியவர் ஆணையிட்டபடி மஞ்சள் குங்குமத்தை எங்கே போய் வாங்குவது கையில் பைசா கூட இல்லையே”, என்ற எண்ண ஓட்டத்தில் துலங்கியதானது விதவிதமான குருகுலவாச அனுபவங்களின் மகிமையைத் தந்து விட்டதல்லவா!
இவ்வாறு சிறுவனுக்கு வரும் திடீர் ஆணைகள் பல உண்டு! சிறுவன், மனத் துணிவுடன் பல இடங்களில் விசாரித்து அருகில் உள்ள அம்பாள் கோயிலில் நுழைந்து, அம்பிகையை நூற்றியெட்டு முறை வலம் வந்து வணங்கிட அவனுக்குக் குங்குமப் பிரசாதம் கிடைத்தது. மஞ்சளுக்கு என்ன செய்வது?
“மாமா! அம்பாளுக்குக் கொஞ்சம் மஞ்சள் அரச்சுத் தரட்டுமா?”
“ நல்ல வேளை! நானே மஞ்சளும் சந்தனமும் அரைச்சுத்தர்றதுக்கு ஆள் தேடிண்டிருந்தேன் . எனக்கு அம்பாள் தான் குரு! குருவே அனுப்பிச்ச மாதிரி வந்து நிக்கறியே! இந்த அதிசயத்தை என்னன்னு சொல்றது!” என்று கூறிய அர்ச்சகர், மஞ்சள் துண்டுகளைச் சிறுவனிடம் கொடுத்து அம்மியையும் காட்டிட, அப்புறமென்ன, நடந்ததை நீங்களே யூகித்துக் கொள்ளலாமே!
மஞ்சள் பிரசாதத்தைப் பெற்ற சிறுவன் சிட்டாய்ப் பறந்தான்!
“என்னடா அம்பாளே கொடுத்துனுப்பிச்சாளா?” புன்முறுவலுடன் பெரியவர் சிறுவனின் முதுகைத் தட்டிக் கொடுத்தவாறே மஞ்சள், குங்குமத்தைக் கைகளில் பூசிக் கொண்டு அனைத்து துணிகளின் ஓரங்களிலும் தடவினார்.
என்ன இது! – சிறுவன் வியப்புடன் துணிகளின் விளிம்புகளை நோக்கினான். அனைத்தும் புதிய புதிய கோவண ஆடைகள்! அப்போதுதான் பெரியவரையே அவன் நன்றாகக் கவனித்தான். அவரோ மீண்டும் கோவணாண்டியாய் மாறியிருந்தார். அவர் அணிந்திருந்த பேண்ட், சூட் ஆடைகள் எங்கு போயின? இதன் ரகசியம் யாருக்குத்தான் தெரியும்? எதையும் வெளிக்காட்டாது தன்னுடைய தெய்வீக சக்தியையும் எவர்க்கும் உணர்த்தாது அவர் சாதாரண மனிதனாக உலா வந்து இவ்வாறாக சிறுவனுக்கு சித்புருஷர்களின் தெய்வீகத்தை உணர்ந்தறியுமாறு செய்தார்! எதற்கு இத்தனை கோவண ஆடைகள்! சிறுவன் விவரம் புரியாது திகைத்து நிற்க அவனுடைய தோளில் கோவண ஆடைகளை மாட்டி நடைப் பயணத்தை தொடர்ந்தார் பெரியவர்! வழியில் வயதான, அனாதையான முதியோர்களையும், மயானத்தில் பணிபுரிபவர்களையும், ஏழை போர்ட்டர்களையும் (Porter) விவசாயிகளையும், ரிக்ஷா ஓட்டுநர்களையும், சுமை தூக்குபவர்களையும் சந்தித்து அன்புடன் பேசி அவர்களுக்குக் கோவணங்களை ஆடைதானமாக அளித்தார். 
“இந்த மாதிரி ரொம்ப வெயிட் தூக்கி, ஒடம்பு ஹீட்டாகி, வண்டி மிதிச்சுக் கஷ்டப்படறவங்க கோவணம் கட்டினால்தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். மனம் அடங்கறதுக்குப் பிரம்மச்சாரிகள் கட்டாயமாகக் கோவணம் கட்டியே ஆகணும் ...” என்று சிறுவனுக்குப் புரியும் எளிய வகையில் பல அறவழிகளைக் கூறி வந்தார்.....
நீண்ட நெடும் நடைப் பயணத்திற்குப் பிறகு உளுந்தூர்பேட்டைக்கு அருகே சிறுவனை பஸ்ஸில் அமர வைத்துத் திருஅண்ணாமலைக்கு அழைத்து வந்தார் பெரியவர்! அருணாசலமாகிய அண்ணாமலையைப் பார்த்ததுமே சிறுவனுக்குக் களைப்பு நீங்கிப் பேரானந்தம் உண்டாயிற்று! சிறுவனுக்கு வயிறு நிறைய டிஃபன் வாங்கிக் கொடுத்தார்! அப்போதே அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. நல்லாத் தீனி தின்னா அது செரிப்பதற்குக் கிரிவலம் என்று புரிந்து கொண்டான். கிரிவலம் என்றாலே சிறுவனுக்குத் தனி மகிழ்ச்சிதான்! ஆனால் கொல்லிமலை யாத்திரைக் களைப்புத் தீரும் முன்னரே அடுத்த கிரிவலமா அவன் தயங்கியே எண்ணிட, “ஆமாண்டா உடனே கிரிவலம் கிளம்பியாகணும் இதப்பத்தி நீ மறந்தாலும் நான் மறக்கலியே,” என்று கூறியவாறே பெரியவர் கையில் எதையோ வைத்துக் கொண்டு ஆட்டிக் காண்பித்தார்!
சிறுவன் உற்றுப்பார்த்தான். ஆங்! கொல்லி மலையில் பறிச்ச மூலிகை தானே! சிறுவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. அவன் கிரிவலத்திற்கு உடனே தயாரானான்! இந்த மூலிகைகளை வைத்துக் கொண்டு கிரிவலப் பாதையில் ஏதோ செய்யப்போகிறார் என்று யூகம் செய்து கொண்டான். ஆமாம்! கொல்லி மலையில் எப்போதோ பறித்த மூலிகைகளை இத்தனை நாள் எங்கு வைத்திருந்தார்? நினைத்தால் எந்த இடத்திலும், எந்த மூலிகையையும் கொண்டு வருகின்ற சக்தியைப் பெற்றிருப்பவர், நம்மிடம் கொல்லி மலையில் பறித்து எடுத்து வருவது போல் பாசாங்கு செய்வதேன்?
இதுவே சிறுவனின் அன்றைய ஆத்ம விசாரம்! இருவரும் திருஅண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்கினர். ஓரிடத்தில்.... பெரியவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டு அமர்ந்தார்! மூலிகைகளைத் தன் கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டாரே தவிர அப்போதும் அவற்றைத் தொடுவதற்குக் கூட சிறுவனை அனுமதிக்கவில்லை! ஏண்டா அஷ்டமா சித்தியைப் பற்றி உனக்குத் தெரியுமா? சிறுவன் உதட்டைப் பிதுக்கினான்! உனக்கு உப்புமா சப்பாத்திமான்னு சொன்னா புரியும்! இதெல்லாம் எப்பத் தெரிஞ்சுக்கப் போற? அதன் பிறகு பெரியவர் சிறுவனுக்கு அஷ்டமா சித்திகளைப் பற்றிக் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது விளக்கம் தந்திருப்பார். அவ்வளவு தெய்வீக சக்திகள் நிரம்பியதே அஷ்டமா சித்தியாகும்! விளக்கத்தின் நடுவே அவர். எதிரில் தத்தித் தத்தி நடந்து கொண்டு வந்த ஒரு கோழியைப் பிடித்து வரச் சொல்ல சிறுவனோ அதனை ஒரே எட்டில் பிடித்து வந்து விட்டான். ஆனால் நல்ல வெயிட்டான கோழியாதலால், இரு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கி வந்தான். பெரியவரோ அதனைக் கால் விரல்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு அதன் அலகுகளைப் பிரித்து...... சில மூலிகைகளை எடுத்துக் கசக்கி அவற்றின் ஓரிரு துளி ரசத்தை மட்டும் வாயில் ஊற்றினார்... கோழியோ எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை!
பெரியவரும் அதனைத் தனியே விட்டுவிட்டு, “இப்ப இந்தக் கோழியைத் தூக்கிக் கொண்டு போய் அங்கேயே விட்டுடு,” என்றார். மிகவும் பலமான கோழியாதலால், சிறுவன் கால்களை நன்றாக விரித்துக் கொண்டு, மிகவும் பிரயாசைப்பட்டுக் கோழியைத் தூக்கினான். பெரியவர் சிரித்தார்!
என்ன ஆச்சர்யம்! சிறுவன் கோழியை மிகவும் லகுவாகத் தூக்கிவிட்டான். கோழியின் எடையோ பஞ்சு போலிருந்தது! ஏன் பஞ்சை விட மிகவும் லேசாக இருந்தது! இதுதாண்டா லஹிமா சக்தி. அஷ்டமா சித்தியில் இதுவும் ஒண்ணு! உடம்பையே பஞ்சு போல் ஆக்கிடும். இந்தப் பஞ்சு மாதிரி உடம்பை வச்சிக்கிட்டு எந்த லோகத்துக்கும் போகலாம்! பிறகு சிறுவனை அருகில் அழைத்துக் கண்ணைச் சிமிட்டியவாறே, “நம்ம ரெண்டு பேரும் ரெண்டு சொட்டு குடிச்சிப் பார்க்கலாமா?” என்று கேட்டிட சிறுவன் இவர் என்ன  சொல்வாரோ ஏது சொல்வாரோ என்ற எண்ணத்தில் ஆமாம். இல்லை என்று எதுவும் சொல்லாதது போல் தலையாட்டினான்.
“ நெஜமத்தாண்டா சொல்றேன்!”
சிறுவன் தயங்கியவாறே அவர் மடியில் வந்து அமர்ந்தான்! பெரியவர் ஏதோ இரு இலைகளை வைத்துக் கொண்டு மற்ற மூலிகைகளைப் பாதுகாப்பாகத் தன்னிடம் வைத்துக் கொண்டார்! கீழே சிந்திக் கிடந்த மூலிகை இலைகளைக் கூட ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து விட்டார்! அவனுடைய மார்பில் இருதயப் பகுதியில் வலது கையால் தொட்டுப் பற்றித் தான் தேர்ந்தெடுத்த மூலிகைகளின் சாற்றை ஓரிரண்டு துளிகளை மட்டும் தானும் அருந்தி சிறுவன் வாயிலும் ஊற்றிடவே.... அவ்வளவுதான்! இருவரும் உயரே பறக்கத் தொடங்கினார்கள்! உடல்கள் கனத்தை இழந்து மிகவும் இலேசாகின! இலவம் பஞ்சை விட எடை குறைந்தது போலாயிற்று! சிறுவனுக்கோ குதூகலம் கலந்த அச்சம்! திருஅண்ணாமலையை விட உயரப்பறப்போம் என்று எண்ணிய சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம் அவன் உயரப் பறக்கப் பறக்க மலையும் வளர்ந்து கொண்டே போனது! தான் காண்பது கனவா நனவா என்று கூடப் புரியவில்லை!

திருஅண்ணாமலையை மையாக (Epic Centre) வைத்தே இப்பிரபஞ்சமே படைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலோ கோள்களும், நட்சத்திரங்களும் ஏனைய அனைத்தும் அடக்கம், ஆகாயத்தில் உயரச் சென்று வெளிக்கோளங்களிலிருந்து திருஅண்ணாமலையைப் பார்த்தால் எப்படியிருக்கும்? நம்முடைய மனிதக் கண்களுக்கே திருஅண்ணாமலையின் உயரம் சுமார் 2600 அடியாகும்! தெய்வமூர்த்திகளான திருமாலும் பிரம்மாவும் கூட அடி, முடி காண முடியாத அருட்பெருஞ்ஜோத் மலையாய் இறைவன் காட்சியளித்தானெனில் திருஅண்ணாமலையின் உயரம் விஞ்ஞானத்திற்கப்பாற்பட்ட அற்புதம் அல்லவா?
பெருமாளும் பிரம்ம மூர்த்தியும், “சர்வேஸ்வரா! தாங்கள் அடிமுடி காணா அண்ணலாய் அருட்பெருஞ்ஜோதியாய்க் காட்சி எமக்கு அளித்த தோடன்றி இத்திவ்ய தரிசனத்தைக் காணும் நேத்ர சக்தியை மஹரிஷிகளுக்கும், யோகியர்க்கும் ஏன் சாதாரண மனிதர்களுக்கும் கிட்டுமாறு அளித்திட வேண்டுகிறோம்,” என்று பிரார்த்திடவே அனைவரும் கண்டுய்யுமாறு சர்வேஸ்வரன் திருஅண்ணாமலையாராய்த் தோற்றங்கொண்டார்! கிருதயுகத்திலும், திரேதாயுகத்திலும், துவாபரயுகத்திலும் வெவ்வேறு உலோக, ரத்ன மலைகளாகப் பரிமளிக்கும் திருஅண்ணாமலையார் கலியுகத்தில் கல்மலையாகக் காட்சி தருகின்றார் என்பதை நாமறிவோம்! இதுவே பிரபஞ்சத்தின் மிகப் பெரிய ஸ்வயம்பு லிங்கம்! எத்தனை கோடி யுகங்களில் எவ்வளவு தெய்வ மூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகியரும் தேவாதி தேவரும், ஜனங்களும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திருப்பார்கள்! இன்றைக்கும் சூட்சும, ஜோதி, காந்த, தீப, ஒலி, அணு, வாயு ரூபங்களில் எத்தனை தெய்வாவதார மூர்த்திகளும், உத்தம இறைத்தூதுவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் அருணாசலத்தை கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார்கள்? ஏன், பல மஹரிஷிகளின் உய்விற்காகப் பரம்பொருளை வேண்டித் தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகளும் தங்களுக்கும் தங்களுடைய சிஷ்யர்களுக்கும் இறைப்பெருநிலையைக் கூட்ட வேண்டி மஹரிஷிகளும், மாமுனிவர்களும் உலவும் திருத் தலமிது!
இப்பூவுலகில் அனைத்து நாடுகளிலுமுள்ள சற்குருமார்கள் பூமியின் ஆன்மீக மையமாகத் திகழும் திருஅண்ணாமலையின் கிரிவலத்திற்காக சூட்சும, ஸ்தூல, ரூபங்களில் எப்போதும் வந்த வண்ணமுள்ளனர். இது மட்டுமா புழுவினங்கள் விலங்கினங்கள், தாவரங்கள், பூச்சி, வண்டு இனங்கள் என ஒவ்வொன்றிற்கும் உள்ள தேவதைகள் தங்கள் இனத்தின் நலனுக்காக அண்ணாமலையை வலம் வருகின்றன! எறும்புகள் கூடச் சாரை சாரையாக ஊர்ந்து இங்கு கிரிவலம் வருவதுண்டு! நம் கண்களுக்குத் தென்படுவதுபோல் இல்லாமல் எறும்புகளுக்கென்று தெளிவாக உணரும் வகையில் திருஅண்ணாமலையார் தனிப்பட ஒளிரூபத்தில் காட்சியளிக்கின்றார். மனிதர்களைப் போல் மனம் ஒருமிக்காது, பேசிக் கொண்டும் இல்லாது, எறும்புகள் அரிய தியான நிலையில் பிராணாயாம யோக நிலை தரித்து வழிபடுகின்றன. இதற்காகவே பல மஹரிஷிகள் எறும்பு வடிவில் மலையை வலம் வருவதுமுண்டு!
திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் எத்தனையோ அற்புதமான செயல்கள் உடலில், உள்ளத்தில் மனதில் நிகழ்கின்றன. இதை அறிந்துணர, அமைதியான உள்ளம் தேவை! இதை அறிய முடியாதோர்க்கும் இத்தகைய அற்புதங்கள் கிட்டத்தான் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போமா?
1. திருஅண்ணாமலையில் வேகமாக நடந்து கிரிவலம் வருவதை விட, மெதுவாக, அமைதியாக அடிக்கடி மலை முகட்டைப் பார்த்த வண்ணம் நடத்தலே சிறப்புடையது! திருஅன்ணாமலை காந்த பூமியாதலினாலும் மேலும் பிருதிவி லிங்கம் (காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்), அப்பு லிங்கம் (திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்), வாயுலிங்கம் (காளஹஸ்தீஸ்வரர்), ஆகாச லிங்கம் (சிதம்பரம்) ஆகிய நான்கு பஞ்சபூத லிங்கங்களுடன் அக்னி லிங்கமாக, ஐந்தாவதாக திருஅண்ணாமலை விளங்குவதால் இப்பூமியே பலவிதமான அக்னி சக்திகளை பூவுலகிற்கு வெளிப்படுத்துகின்றது! ஆனால் அக்னி என்றால் சூடானது என்று மட்டும் பொருள் கொண்டிட வேண்டாம். கடலில் நீரலைகள் ஒன்றன் மீது ஒன்று மோதுகையில் ஜலபரமாண அக்னி ஏற்படுகின்றது. பெற்ற தாய், தன் குழந்தையைக் கொஞ்சி முத்தமிடுகையில் பால க்ஷீராக்னி உண்டாகிறது! இது குழந்தையின் ஆயுளை வளர்க்கும்! இவ்வாறாக திருஅண்ணாமலை கிரிவலத்தில் ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கையில் காந்த பூமியின் உரசலால் ஒரு வகை குஜாக்னி சக்தி எழும்பி உடலில் சேர்கின்றது! இதன் சக்திப் பரிமாணங்கள் கிரிவலத்தின் இடத்திற்கு இடம் மாறுபடும். அடி அண்ணாமலைக்கு முன், கிரிவலப்பாதையில் ஸ்ரீஉண்ணாமுலை மண்டபத்திற்கு முன்னர் நடக்கையில் குஜாக்னி சக்தி மிகவும் மகத்வம் வாய்ந்ததாக மாறுகிறது. காரணம், இங்குதான் அம்பிகை அக்னித் தவம் பூண்டு அருள்பெற்று இறைவியாய் ஸ்ரீஅருணாசல மூர்த்தியோடு இணைந்து காட்சியளித்தனள்!
இதேபோல் சூரியலிங்கம் அருகே பூமியிலிருந்து எழும் பாஸ்கராக்னி குஞ்சித சக்தி உடலுக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைக் குறித்த நேரம் ஜபித்த சக்தியைத் தருகின்றது. யமலிங்கமருகே எழுகின்ற அக்னி சக்தியான காலாக்னி சக்தியால் ஸ்ரீருத்ர மந்திரம் ஜபித்த பலன் கிட்டுகின்றது! இப்பலன்களை வைத்துக் கொண்டு என் செய்வது? இச்சக்திகள் உடலில் சேருகின்ற தன்மையைக் கூட உணர முடியவில்லையே என்று கேட்கத் தோன்றுகிறதா? இவையெல்லாம் குஜாக்னி சக்தியின் பிரிவுகள்! இவ்வக்னி சக்திகள் உடலில் சேர்ந்திடினும் அவற்றை முழுமையாக நன்முறையில் பயன்படுத்தும் வழி முறைகளைத் தக்க சற்குருவை நாடி அறிந்திடல் வேண்டும். ஏனெனில் குஜாக்னி சக்தியானது தங்கத்தாது போல அமைந்துள்ளது . தாதுவைப் பகுத்துப் பிரித்துத் தங்களைப் பெறுதல் போல், குஜாக்னி சக்தியைத் தக்க தெய்வீக சக்தியாக, நற்காரியங்களை நிறைவேற்றுவதற்கான இறையருட் சக்தியாக மாற்றுதற்கான அரிய முறைகள் பல உண்டு.
கால் பாகத்தில் உள்ள நரம்பு நாளங்கள் மூலமாகத்தான் குஜாக்னி சக்தி உடலில் கூடுவதால், உள்ளங்காலிலும், கால் விரல்களிலும் மருதாணியிட்டுச் சிவந்த புனிதமான நிலையில் நடந்து கிரிவலம் வருதலால் குஜாக்னி சக்தி எளிதில் உடலில் சேர்கின்றது. மருதாணிக்குரிய தெய்வீக நற்பண்புகளில் ஒன்றே தீய சக்திகளைத் தடுத்து நிறுத்தி நற்சக்திகளை எளிதில் விரைவாக உள் ஈர்க்கும் தன்மையை அளிப்பதாகும்! செவ்வாய், வெள்ளி தோறும், சாதி வேறுபாடின்றிக் கன்னிப் பெண்களுக்கும், இல்லற மாதர்களுக்கும் தாமே அரைத்த மருதாணியை மங்கலப் பொருளாகத் தாம்பூலத்துடன் தானமளித்து வர குஜாக்னி சக்தி எளிதாக தெய்வீக சக்தியாக மாற்றப் பெற்றுக் கணவனுக்கு நீண்ட ஆயுளும் நல்ஆரோக்யமும் கிட்டிச் சுமங்கலித்வம் தீர்க்கம் பெறும். கடுமையான, நெடுங்கால நோயினால் அவதியுறுவோர் எமலிங்க சந்நிதியில் தன்னைத் தானே சுற்றி வருவதான ஆத்ம பிரதட்சிணம் செய்து நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி மக நட்சத்திர மற்றும் செவ்வாய்க் கிழமை தினங்களில் எள் சாதம் தானம் செய்துவர காலாக்னி சக்தியின் மஹிமையால் கடுமையான நோய்களின் தன்மை தணியும். நோயால் வாடுவோருக்காகப் பிறரும் இத்தகைய கிரிவல, தான தர்மங்களை மேற்கொண்டிடலாம்.
இது மட்டுமன்றி, திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் ஆயிரக்கணக்கான தரிசனங்கள் உள்ளன. தரிசனம் என்றால் குறித்த ஓர் இடத்திலிருந்து மலையுச்சியை தரிசத்தலாகும். ஜீவன்களின் துயர்களைத் துடைக்க அதனதற்குரித்தான தீர்வுகளைத் தரும் பல்வேறு இடங்களில் அமர்ந்து மலையை நோக்கிய வண்ணம் ரிஷிகள் தவமிருந்தனர். அற்புதத் தவசீலர்கள் அமர்ந்து மோனநிலை பூண்ட இடமாதலின் அந்தந்த இடங்கள் தெய்வீக ரீதியாகத் தனி மகத்வம் பெற்றன. எனவே அந்தந்த தரிசனங்களாய்ச் சிறப்புப் பெயர் பெற்றுக் குறித்த துன்பங்களுக்கும் நிவாரணமளிக்கின்றன. முனிவர்கள் மட்டுமன்றித் தெய்வத் திருமூர்த்திகளும் சர்வேஸ்வரனைத் தரிசித்த இடங்களும் பல்வேறு இறைதரிசனங்களாக அன்றும் இன்றும் என்றும் மலர்ந்து, இவற்றைக் கடைபிடிப்போர்க்கு அபரிமிதமான பலன்களை அளிக்கின்றன. இந்த குஜாக்னி சக்தி உடலில் நன்கு படிந்து அற்புதமான தெய்வீக சக்திகளாக மாறி அருள் புரிதற்குப் பலவிதமான நெறிமுறைகளைக் கடைபிடித்தல் வேண்டும்.

திருஅண்ணாமலை கிரிவலம்

திருஅண்ணாமலை கிரிவலம் – சில தெய்வீக விளக்கங்கள்
கேட்க, படிக்கத் தெவிட்டாததே திருஅண்ணாமலை மஹிமை! இந்த உலகத்திற்கு மட்டுமல்ல, அனைத்துக் கோடானு கோடி நட்சத்திர மண்டலங்களும், விண்வெளி மண்டலங்களும், நிறைந்த இந்த பிரபஞ்சத்தின் தெய்வீகக் கருவூலமே திருஅண்ணாமலை! இம்மலையினுள் எத்தனையோ அண்டங்களும், விதவிதமான கோள்களும், காணுதற்கரிய நட்சத்திர மண்டலங்களும், ஆயிரமாயிரம் கிரஹங்களும் அதன் உபகோள்களும் வெவ்வேறு வகையான லோகங்களும் அடங்கியுள்ளன என்றால் இம்மலை நம் கண்களுக்குத் தென்படுகின்றதைப் போல் சாதாரண மலையா? இல்லை, இல்லை. தெய்வத் திருவருளே சிறுகற்களாகவும், மண் துகள்களாகவும், பாறைகளாகவும், தாவரங்களாகவும், உயிரினங்களாகவும் பூரித்திருக்க, சாட்சாத் சதாசிவப் பரம்பொருளே சர்வ வியாபியாக திருஅண்ணாமலையானாக விரிந்து, பரந்து, உயர்ந்து விளங்குகின்றார்.
இறைவனே மலையென்றால், திருஅண்ணாமலையின் உள்ளும் புறமுமாய் விரிந்து கிடப்பது ஆண்டவனின் அருள் ஜோதி தானே! நாம் காணுகின்ற 2600 அடி உயரம் தான் திருஅண்ணாமலையின் உயரமா? இல்லவே இல்லை, நம் ஊனக் கண்களுக்குத் தென்படுவதே அந்த உயரம். அணிமா, மஹிமா, லஹிமா போன்ற அஷ்டமா சித்திகளைச் சிறிதே பெற்றுத் திருஅண்ணாமலையை வலம் வந்து பாருங்கள். அதன் உயரம் விண்ணையும் மீறிச் செல்வதை! ஆஞ்சநேய மஹாபிரபு இன்றும் வலம் வருகின்ற அற்புதத் தலம்! ஸ்ரீஆஞ்சநேயரே, திருஅண்ணாமலையை வலம் வர சில நாழிகைகள் ஆகிறதாம்! ஸ்ரீஅனுமாரின் வேகத்தை நம்மால் வர்ணிக்கவே இயலாது! க்ஷணப் பொழுதில் கோடானுகோடி மைல்கள் தூரம் சென்றிடுவார்! ஸ்ரீவாயுபுத்ரனாம் ஆஞ்சநேயரே சில நாழிகை நேரத்தில், அவருக்குரித்தான தெய்வீக துரித கதியில் திருஅண்ணாமலையை வலம் வருகின்றாரெனில் அதன் சுற்றளவு நாம் காணுகின்ற 14 கி.மீ தொலைவுதானா? நம் மனித சரீரத்திற்கேற்றாற்போல் ஸ்ரீஈஸ்வரனே தன்னைக் குறுக்கி காட்டிக் கொள்கின்றார்! இப்போது புரிகின்றதோ, ஏன் அடிக்கடி திருஅண்ணாமலையை வலம் வருதல் வேண்டுமென்று! நம் ஊனக் கண்களுக்கு 14 கி.மீ நீளமுள்ளதாக இருக்கும் திருஅண்ணாமலையை நம் வாழ்நாளில் எத்தனையோ முறை சுற்றி வந்தால் தான் அதன் உண்மையான (சுட்சுமமான, கண்ணுக்குத் தெரியாத) பரப்பளவில் ஓர் அங்குலத்தையேனும் கடந்தவர்களாயிருப்போம்!
இப்பூவுலகில் இரண்டு மலைவலங்கள் தாம் தெய்வீகத்தில் மிகவும் முக்யத்வம் பெற்றவையாக கிருத, திரேதா, துவாபர, கலியுக ஆகிய நான்கு யுகங்களிலும் சிறப்புப் பெற்றுள்ளன. ஒன்று இமாலயத்தில் கைலாய கிரிவலம், மற்றொன்று அருணாசலமாம் திருஅண்ணாமலை கிரிவலம்! திபெத் நாட்டில் உள்ள தெய்வீகப் பெருவாழ்வு வாழ்கின்ற அற்புதமான யோகிகள் இன்றும் பூத உடலால் திருக்கயிலாய மலையையும் சூட்சும சரீரத்தால் திருஅண்ணாமலையையும் கிரிவலம் வந்த வண்ணமுள்ளனர். இன்றும் பல இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களைத் திருஅண்ணாமலை உச்சியில் காணலாம். காட்டுத் தீயென்றும், விலங்குகளைத் துரத்த மனிதர்கள் இட்ட நெருப்பு என்றும் பலர் காரண/சமாதானங் கூறிடினும் இத்தகைய அற்புதக் காட்சிகளை இன்றும் பலரும் கண்டு வருகின்றனர்.
தேவ கணக்கில் அருணாசல கிரிவலம்!
முதலில் சாதாரணமாகத் தொடங்குகின்ற கிரிவலம் நாளுக்கு நாள் ஆன்மீக பலம் தருவதை இன்றும் பரிபூரணமாக நாம் உணரலாம். உடலுக்கு ஆன்மபலம், உயிருக்குத் தெய்வீக மெருகு, மனதுக்குத் தளர்வறியா ஊக்கம், உள்ளத்துக்கு குறைவிலா உவப்பைத் தருவதை நாளடைவில் உணர்ந்திடலாம். எதையோ வாழ்க்கையில் எதிர்பார்த்து, வேலை வேண்டும், பிரமோஷன், குழந்தை பாக்யம், கடன் நிவாரணம், வியாபார நஷ்ட நிவர்த்தி, கோர்ட் வழக்குத் தீர்வு, பிரிந்த தம்பதியர் கூடுதல், குடும்பச் சண்டைகள் தீர்ந்து ஒற்றுமை கூடுதல்  என எதையெதையோ வேண்டி கிரிவலத்தைத் தொடங்குகின்றவர்கள் நாளடைவில் மாதந்தோறும் கிரிவலந்தனை ஓர் ஆன்மீக டானிக்காக உணர்கின்றனர்.. இதனையே ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் ஒரு மாதத்திற்கான, கர்மவினைகளைச் சமாளிக்கின்ற தெய்வீக சக்தி கிட்டுகின்றது. ஏனென்றால் தினசரி பூஜைகளையும் முறையாகக் கோயிலுக்குச் செல்வதையும் கைவிட்டு வருகின்ற கலியுக மனிதனுக்கு ஒரு மாதத்தின் திரண்ட பூஜை பலன்களை அள்ளித் தருவதே ஒரு கிரிவலத்தின் முழுப் பயனாகும் என்று தெளிவு படுத்துகிறார்.
பௌர்ணமியில் கூட்டமா? இல்லையில்லை அனைத்தும் அருணாசலத்தின் கூத்தே!
“அப்பப்பா எனக்குக் கூட்டம்னா அலர்ஜியப்பா!” என்று பலரைப் போல் அறியாமையினால் பேசித் திருஅண்ணாமலையின் அரிய, அற்புதமான பௌர்ணமி கிரிவல வாய்ப்பை இழந்து விடாதீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இங்கு, திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோரின் தொகை பன்மடங்காயிருப்பது கண்கூடு! நாலாயிரம், ஐயாயிரமாக இருந்த மாதாந்திரப் பௌர்ணமிக் கூட்டம் இன்று இறைப் பெருங்கருணையால் 70,000 , 80,000 ஒரு லட்சமெனப் பெருகி வருகின்றது! இப்படி அனைவரையும் கூட்டுவிப்பது திருஅண்ணாமலையார் தானே! அவனே வந்து அனைவரையும் ஆண்டு கொள்கின்றான்! அப்பப்பா, எவ்வளவு மக்கள் கிரிவலம் வருகின்றார்கள் என்று ஆச்சச்சரியத்துடன் ஆனந்தமடையுங்கள்! இது தான் உண்மையான பக்தனுக்கான, ஆன்மீகவாதிக்கான இலக்கணம்! அத்தனை மக்களும் எறும்புபோல் சாரை, சாரையாக ஊர்ந்து செல்வதைக் கண்டு உங்களுடைய இறை நம்பிக்கை பல்கிப் பெருகும்! காரண காரியமில்லாமலா இவ்வளவு ஆயிரமாயிரம் பேர்களை அருணாசல ஈசன் தன்னைச் சுற்றிவரச் செய்கிறான்!
எல்லாவற்றையும் விட திருஅண்ணாமலை சித்தர்கள் நிறைந்து விளங்குகின்ற பூமி! உண்மையில் சித்தர்கள் உற்பவிக்கின்ற தெய்வீக பூமியும் இதுவே! உற்பவித்தல் என்றால் அவர்கள் பிறக்கின்றார்கள் என்று பொருளல்ல! பிறப்பும் இறப்புமில்லாப் பெருஞ்ஜோதிமயமான சித்புருஷர்கள் தெய்வீகம் ததும்புகின்ற திருஅண்ணாமலை, பொதிய மலை, பர்வதமலை, இமயமலை, ஸ்ரீசைலம், கொல்லிமலை போன்ற இடங்களில் தான் அதிகமாக நடமாடுகின்றார்கள். 10000 பேர் கிரிவலம், வருகின்றார்கள் என்றால் 10001 ஆக ஒரு சித்தர் நிச்சயமாக, கண்டிப்பாக மனித உருவத்தில், நம் கண்களுக்கு தென்படுகின்றார். எனவே கூட்டம் அதிகம் என்று எண்ணாதீர்கள். பல்லாயிரமாய்க் கிரிவலம் வருவோரின் எண்ணிக்கை பெருகப் பெருக, மனித ரூபத்தில் வரும் சித்தர்களின் எண்ணிக்கையும் கூடிட, உங்கள் பக்கத்தில் ஒரு சித்புருஷர் நடந்து வந்து கொண்டிருக்கின்ற பெரும் பாக்யத்தைப் பெற வேண்டாமா! இத்தகைய இறை நம்பிக்கையை நம்முடைய இறைநம்பிக்கையை ஆணித்தரமாக வேரூன்றச் செய்திடும்!
அடியார் : குருதேவா! ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிட்டுமா?
சற்குரு : (சிரித்துக் கொண்டே) எல்லோரும் பரீட்சை எழுதுகிறார்கள். அவரவர் ஞாபகசக்தி,  Presentation, எழுதும் திறமை, Vocabulary பொறுத்து மார்க் கிடைக்கின்றதல்லவா! அதே போல் முறையாக நீராடி விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், நாமம், சிந்தூரம் தரித்தல், அந்தந்த நாளுக்குரிய நிற ஆடைகளை அணிதல், அந்தந்த நாளுக்குரிய ஹோரை நேரத்தில் கிரிவலம் வருதல், எந்த லக்னம் சக்தியுள்ளதாக அந்நாளில் விளங்குகின்றதோ அந்த நேரத்தில் கிரிவலம் வருதல், சுபமுகூர்த்த நேரம், அந்தந்த நாளுக்குரிய அமிர்தநேரம் (சித்தர்களுக்குரிய தெய்வீக ரகசியமிது) போன்ற பல தெய்வீக அருள் நெறிமுறைகளை அறிந்து கிரிவலம் வருவோர்க்கு அதற்கேற்றவாறு பலாபலன்கள் கிட்டும். திருஅண்ணாமலையில் தனித்து கிரிவலம் வருதலை விட குடும்பத்தோடு, உறவினர் நண்பர்களோடு பலரும் ஒன்று சேர்ந்து கிரிவலம் வருதல், கிரிவலப் பலன்களைப் பன்மடங்காக்கும்!
அடியார் : குடும்பத்தோடு கிரிவலம் வருதலால் செலவு அதிகமாகுமல்லவா, குருதேவா?
சற்குரு: (புன்முறுவலுடன்) அப்படியா! கலியுகத்தில் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் இல்லாத கணக்கு, வழக்குகளையெல்லாம் போட்டுப் பார்ப்பான், சினிமா, காபி, டீ, கூல்டிரிங்க்ஸ், ஆட்டோ, ஆடம்பரமான ஆடைகள், ஐஸ்கிரீம், ஷாம்பூ என அவனுடைய செலவுக் கணக்குகளைப் போட்டுப் பார்த்தால் புரியும் அவனுடைய அறிவீனத்தை! திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக இரண்டு வேளை காபிச் செலவைக் குறைத்தாலே போதுமே, இறைவன் இலட்ச இலட்சமாகப் புண்ய சக்தியை அள்ளித் தருகின்றானே! பலர் ஒன்று சேர்ந்து கிரிவலம் வருவது அரட்டையடிப்பதற்காக அல்ல, ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர்கள் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராணம் போன்றவற்றைத் துதித்தவாறே கிரிவலம் வந்திட நாலைந்து பேருடைய ஒட்டு மொத்த புண்ய சக்தித் திரண்டு வருகின்றதல்லவா! மேலும் பலருக்கும் திருஅண்ணாமலை கிரிவலத்தின் மஹிமையை உணர்த்தி எவ்வளவு பேரைக் கிரிவலம் வரச் சொல்கின்றோமோ அந்த அளவிற்குப் புண்ய சக்தியும் பல்கிப் பெருகுகின்றது! சாம்பிராணி தூபமிட்டவாறு கிரிவலம் வந்திடில் இல்லத்தில் உள்ள பில்லி, சூன்ய, ஏவல் சக்திகள் ஓடிவிடும். இவ்வாறாகப் பலவிதமான முறைகளில் அருணாசல கிரிவலம் சக்தியைப் பெருக்கும் தெய்வீக வழிமுறைகள் உண்டு.  
சரண தீபம் – நான்காம் நாள் தீபம்
நித்ய க்ருத்யங்கள் பரம்பொருளைச் சரணடையும் நாளே சரண தீபம். ரிக், யஜுர், சாம, அதர்வண நான்கு வேதங்களும் மானிட ரூபத்தில் வலம் வருகின்ற திருநாளே சரண தீப நாள். தேவர்கள், தேவதைகள், கந்தர்வர்கள் மற்றும் ஏனைய லோகத்திலிருக்கின்ற உத்தமர்கள் தங்கள் பூஜைகளைப் பரிபூர்ணமடையச் செய்யும் திருநாளே சரண தீபத் திருநாள்!
சரண தீப கிரிவல முறை :- இந்நாளில் வடமொழி, தமிழ் மறைகள் ஓதி கிரிவலம் வருதல் மிக மிக விசேஷமானது. வேதம் அறியாதோர், வேதம் கற்றும் செய்ய வேண்டிய பூஜைகளை அரைகுறையாகச் செய்து வருபவர்கள், தாம் கற்ற வேத பாராயணத்தைப் பணத்திற்காக ஆசைப்பட்டுத் தவறான வழியில் செலுத்துதல் போன்றவர்களுக்கு ஏற்படும் கர்மவினைகள், பாபம், தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியதே சரண தீப தரிசனமாகும். வேதம் படிக்காதோரும், வேத பாராயணங்களின் அனுக்கிரகத்தைப் பெற சரண தீப கிரிவலம் உதவுகின்றது. ஏனெனில் நான்கு வேத மூர்த்திகளுமே சரண தீபத்தன்று மானிட ரூபத்தில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதால், அவர்கள் மேல்படுகின்ற காற்றின் ஒரு அசைவு கூட நம்மேல் பட்டால் போதும்., நாம் கடைத்தேறிவிடுவோம். இது மட்டுமன்றி கோபத்தின் விபரீத விளைவுகள், பணப்பிரச்சனைகள் ஆகியவற்றைத் தீர்க்க வல்லது சரண தீப தரிசனமாகும். உணர்ச்சி வசப்பட்டு பலர் பல தவறுகளைச் செய்வதுண்டு. இதன் விளைவுகள் பூதாகாரமாகப் பெருகி வாழ்க்கை முழுதும் எதிரொலிக்கும்.
ஒவ்வொரு மனிதனும் வடமொழியிலோ, தமிழ் மொழியிலோ உள்ள மறைகளை ஒரு சிலவற்றையேனும் பாராயணம் செய்துதான் ஆக வேண்டும். தேவகடன், பித்ருகடன் என்று ஒவ்வொரு மனிதனும் தேவர்களுக்கும், மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் சிலவுண்டு. வேதம் ஓதாது வீணாக வாழ்க்கையைக் கழிப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் இவையெல்லாம் உத்தம இறைநிலையை அடைந்த பரிபூர்ணமான இறைதரிசனம் பெற்ற மகரிஷிகளும், ஞானிகளும் விண்வெளியிலிருந்து நமக்காகக் கிரஹித்துத் தந்த வேதசார மந்திரங்களாகும். இதுவரையில் வேதம் ஓதாது வெறுமனே வாழ்க்கையைக் கழித்ததற்கும் முறையாக வேதம் ஓதாததற்கும் கற்ற வேதத்தை பிறருக்குச் சொல்லித் தராது தனக்கென செல்வம் ஈட்ட சுயநலமாகப் பயன்படுத்தியற்குப் பிராயச்சித்தமாக சரண தீப (நான்காம் நாள்) கிரிவலம் விதிக்கபட்டுள்ளது. பலர் ஒன்று சேர்ந்து சரண தீபத்தன்று வடமொழி / தமிழ் வேதபாராயணங்களுடன் கிரிவலம் வருதலால் மேற்கண்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தம் காணலாம்.
சரண தீப கிரிவலத்தை கோயிலினுள் ஸ்ரீஅருணாசலேஸ்வர மூலமூர்த்தியின் முதல் சுற்றுப்பிரகாரத்தில் வலப்புறம் உள்ள ஸ்ரீதுர்வாஸ மகரிஷியின் சந்நதியிலிருந்து தொடங்க வேண்டும். 
சுந்தர ரூப தரிசனம் :- இங்கிருந்தே வடமொழி/தமிழ்மொழி வேத பாராயணங்களைத் துதிக்கத் தொடங்குவது சிறந்தது. அங்கிருந்து புறப்பட்டு மூலவர் மற்றும் பல தெய்வ மூர்த்திகளின் தரிசனங்களைப் பெற்றவாறே முதல் கோபுரத்தைக் கடந்து யானைக் கட்டத்திற்கு வந்து ஸ்வாமியை (மலை) தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு சுந்தர ரூப தரிசனம் என்று பெயர். நான்கு வேதங்களின் வேத புருஷனாய் “ஸகஸ்ர சீர்ஷ புருஷ:” என்ற வேத வாக்கியத்திற்கொப்ப ஸ்வாமி ஆயிரமாயிரம் தலைகளுடன் வேத புருஷனாய் காட்சி தருகிறார். புதிதாக வேதம் கற்க விரும்புபவர்கள், வேதத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புவோர், வேதத்தில் தீவிர ஆராய்ச்சி செய்வோர், இத்தகையோர்க்கு இந்த யானைக்கட்டத்திலிருந்து கிட்டும் சுந்தர ரூப தரிசனம் பேருதவிபுரியும். தூபத்திற்கு வேதமந்திரங்களை பரவச் செய்யும் அற்புத சக்தியுண்டு. அட்சரப் பிழைகள் மற்றும் வேதம் ஓதுகையில் தெய்வீக மனோபாவம் இல்லாத குற்றங்கள், சொற் குற்றம் போன்றவற்றிற்குப் பிராயச்சித்தமாகத் தூபப்புகை இருப்பது விசேஷமானது. இந்த தூபத்துடன் சந்தன மணம் கூடிய வாஸனாதி திரவியங்களைச் சேர்க்க வேண்டும். சந்தனத்திற்கு மூளையைக் குளிர்வித்து, அகத்தையும், புறத்தையும் புனிதமாக்கும் தெய்வீக சக்தியுண்டு. பெரிய நந்தி வழியே கம்பத்து இளையனார் சந்நிதியிலிருந்து ஸ்வாமியை (மலை) தரிசனம் செய்ய வேண்டும். இதற்கு‘நந்தி சேவக மகாலிங்க தரிசனம் என்று பெயர். அங்கிருந்து கிழக்குக் கோபுரம் வழியாக தேரடிக்கு வந்து சுவாமியை (மலை) தரிசனம் செய்திட வாகனப் பலீத லிங்க தரிசனம் கிட்டும். இதனால் வாகனப்பிராப்தி எளிமையாகக் கிட்டும். வாகனங்கள் விருத்தியாகும். தேரடியிலிருந்து இந்திர லிங்கத்தைத் தரிசித்துத் தெற்கு கோபுரம் அருகே ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து ஸ்வாமியை (மலை) தரிசிக்க வேண்டும். இதற்கு வாக் சக்தி லிங்க தரிசனம் என்று பெயர். பேச்சுத்திறமை பெருக இது அனுகூலம் செய்யும். ஆனால் இறைநெறியைப் பரப்புவதற்கு பேச்சுத்திறமை பயன்படுமாதலால் இது வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் வாக்குச் சாதுர்யம், மக்களை காந்தம் போல் கவர்ந்திழுக்கும் தன்மை பெறவும். படிப்பில் உள்ள தடங்கல்கள் நீங்கவும் இத்தரிசனப் பலன்கள் பெரிதும் உதவும்.
தரிசன முறை மாறுதல்கள் :- பரணி தீபம், கார்த்திகை தீபம், விஷ்ணு தீபம், சரண தீபம், பூதலிங்க (ஜோதி) தீபம் போன்ற தீப கிரிவலங்களில் தரிசனங்களின் பெயர்கள் மாறி மாறி அமையும். அந்தந்த தீபகிரிவலத்திற்குரிய தரிசனங்களைக் குறித்த முறையோடு மேற்கொண்டால் பரிபூர்ண பலன்கள் கிட்டும். ஏனெனில் அனைத்துத் தரிசனங்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே கிரிவலத்தில் தரிசனம் செய்வது என்பது கலியுகத்தில் மிகவும் கடினமாகும். எனவே அந்தந்த தீப கிரிவலத்தில் குறித்துள்ள தரிசனத்தின் பெயரைச் சொல்லி, குறித்த முறையில் அத்தரிசனத்தை வணங்கிச் சென்றிடில் தெளிவும் பரிபூர்ண பலன்களும் கிட்டும். உதாரணமாக, பரணி தீப கிரிவலத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதி வரை பல தரிசனங்கள் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் சரண தீப கிரிவலத்தில் தரிசன முறை விளக்கங்கள் மாறுபடும். இதை நன்கு புரிந்து கொண்டு அந்தந்த தீப கிரிவலத்தை மேற்கொண்டால் குழப்பமிராது.
சரண தீப கிரிவலத்தில் வாக் சக்தி லிங்க தரிசனத்தை அடுத்து ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதி அருகே உள்ள தரிசனத்திற்கு ‘புத்தி பூர்வலிங்க தரிசனம்’ என்று பெயர். தீய சேர்க்கையால் புத்தி மாறி பல தீயவைகளைச் செய்திருந்தால் அதற்குப் பிராயச்சித்தமாக அமைவதே இத்தரிசனம். திருஅண்ணாமலையில் விசேஷ மகத்துவம் என்னவெனில் ஒரே தரிசனமே அந்தந்த கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம், விண்வெளி நட்சத்திர, கோசார கிரஹ நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து தரிசனப் பெயர்கள் மாறுவதோடு தரிசனப் பலன்களும் மாறும். எனவேதான் கோடானுகோடி யுகங்களாக, இன்றளவும் ஸ்ரீ நந்திதேவப் பெருமான் எடுத்துரைத்து வருகின்ற ஸ்ரீஅருணாசல மகிமையை ஸ்ரீஅகஸ்தியர் நாடி கிரந்த வடிவத்தில் இன்றளவும் எழுதி வருகிறார். என்னே திருஅண்ணாமலை மகிமை! சொற்பொருள் கடந்த புராணமன்றோ! இவற்றை எத்துணைப் புராணங்களாக எழுதி எழுதி வடிக்க முடியும்? எனவேதான் திருஅருணாசல மகிமையை குருமுகமாகப் பெற்று ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கரையற்ற அருணாசல ஆனந்த சாகரத்தில் திளைக்கும் சற்குருமார்களால் தான் இவ்வானந்த அனுபூதியை நமக்கேற்ற முறையில் வடித்துத்தர இயலும். அதனால் தான் சற்குருவை சகலமும் அறிந்த, முக்காலமும் உணர்ந்த, எதையும் கற்றுத் தெளிந்த ஞானி என்று போற்றுகிறோம். ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகளின் ஜீவ சமாதியிலிருந்து கிட்டும் புத்தி பூர்வலிங்க தரிசனத்திற்குப் பிறகு ஸ்ரீரமணாஸ்ரம எல்லையிலிருந்து கிட்டும் பஞ்சமுக தரிசனத்திற்கு சரண தீபத்தன்று கிரஹண பஞ்சமுக தரிசனம் என்று பெயர். சந்திர சூர்ய கிரணங்களில் செய்ய மறந்த தர்ப்பணங்கள், பூஜைகள் ஆகியவற்றிற்குப் பரிகாரமாகவும் இத்தரிசனம் அமைகின்றது.
அடுத்து வரும் சிவராஜ சிங்க தீர்த்தத்திலிருந்து ஸ்வாமியை (மலை) தரிசனம் செய்திட இதுவே ‘பாலசிக்க்ஷா லிங்க தரிசனம்’ ஆகும். இங்கு வடமொழி தமிழ்மறை ஓதி ஸ்வாமியை தரிசிக்க வேண்டும். நாம் பால்ய பருவத்திலேயே கற்க/ஓத வேண்டிய வடமொழி, தமிழ் மறை துதிகள் பலவுண்டு. பால பருவ பூஜைகளும் பல உள்ளன. இவற்றைச் செய்யாமல் விட்டதற்குப் பரிகாரமாக இங்கு வேதமறைகள் ஒதியவாறே ஸ்வாமியை தரிசித்து வணங்குதல் வேண்டும். செங்கம் சாலையில் காமக்காடு பகுதியைத் தாண்டி மற்றொரு சிங்கமுக தீர்த்தம் அமைந்துள்ளது. முதல் சிங்கமுக தீர்த்தத்தை சிரசில் ப்ரோஷித்துப் பிறகு ஸ்வாமி(மலை)யை நோக்கி வணங்கிட கோமுக வடிவில் காட்சியளிக்கிறார். இதற்குக் கோமுக தரிசனம் என்று பெயர். பசுவை உதைத்தல், அடித்தல், வதைத்தல், கன்றிற்குப் பால் விடாது ஒட்டக் கறந்து விடுதல் (இதில் பால்காரர், பாலை அருந்துபவர் இருவருக்கும் தோஷம் உண்டு) போன்ற பசுஹத்தி தோஷங்களுக்கும் கோமுக தரிசனம் பரிஹாரம் தரும்.
அசுர சமனலிங்க தரிசனம் : இரண்டாவது சிங்கமுக தீர்த்தத்திலிருந்து ஸ்வாமியை (மலை) தரிசித்திட அசுர சமணலிங்க தரிசனம் கிட்டுகிறது. நம் வாழ்க்கையில் பல காரியங்களில் சற்றும் யோசிக்காமல் நன்மை தீமைகள் பாராது பல காரியங்களைச் செய்து விடுகின்றோம். இதன் விளைவுகள் நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தோர், உற்றம், சுற்றம் அனைவரையும் பாதிக்கின்றது. அவர்கள் அதன் விளைவுகளை வெளிக்காட்டாவிட்டாலும், அவர்களுடைய உள் மன வேதனைகள் நம்மைத் தாக்கும். இதனால் திடீரென்று, காரணமில்லாமல் தலைவலி, வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் இவற்றிற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். இதற்குப் பரிகாரமாக அசுர சமனலிங்க தரிசனம் உள்ளது. காமக்காடு அருகே ‘பினாகி தரிசனம்‘ உண்டு. பாம்பு படம் எடுப்பது போல் மலை தோற்றமளிக்கும். நம் உள்மனதில் எழுகின்ற விஷ(ம)மான எண்ணங்களுக்கு நிவர்த்தியாக இத்தரிசனம் அமைகின்றது.
அடுத்ததாக அடி அண்ணாமலையிலேயே ‘பாபநிவர்த்தி சூஷ்மலிங்க தரிசனம்’ கிட்டுகின்றது. இதனை ஸ்ரீஅகஸ்தியர் தமிழில் மாசுதவிர் சூட்சும லிங்கதரிசனம் என்று குறிப்பிடுகிறார். பலருடன் நன்முறையில் சூழ்நிலை சந்தர்ப்பவசத்தால் கோபம் குரோதம் பொறாமை இவற்றால் ஏற்பட்ட பிளவுகள் நிவர்த்தியாகி, மீண்டும் இணைந்து நன்முறையில் உறவு தொடர இத்தரிசனம் பலனளிக்கும். சரண தீபத்தன்று அடி அண்ணாமலை கோபுரத்துடன் ஸ்வாமியை (மலையை) தரிசனம் செய்திட அசத்திய வாக்விமோசன லிங்க தரிசனமாக அமைகிறது. வாழ்க்கையில் பொய், புரட்டு பேசியமைக்குக் கிட்டும் பரிஹாரம் இதுவே. சரணதீப கிரிவலத்தில் கிட்டும் அற்புத பாக்கியமிது. தசமுக தரிசனத்தில் காஞ்சி சாலையுடன் இணையும் பகுதியில் மங்கள தீர்த்தம் ஒன்றுண்டு. இதில் நீராடியோ அல்லது சிரஸில் புனிதநீர் தெளித்தோ ஸ்வாமியை (மலை) தரிசித்திட தீர்த்த ஸ்நான தரிசனம் கிட்டும். ஆகையால் இங்கு நீராடி ஈர உடையுடன் ஸ்வாமியை தரிசனம் செய்வது சாலச் சிறந்தது.

ஸ்ரீசிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்திற்கு எதிரில் அமைந்துள்ளது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமமாகும். பல மகான்கள் தங்கிச் சென்ற புனித இடமிது. அடுத்து ஸ்ரீகுபேர லிங்கத்தை தரிசனம் செய்து, ஈர ஆடைகளை மாற்றி, புது ஆடைகள் அணிந்து ஸ்வாமியை தரிசனம் செய்திட இதுவே பிராயச்சித்த கர்மலிங்க தரிசனம் ஆகும். இது தர்ம சிந்தனையை ஊட்டும். தனக்கென வாழாது பிறற்கென வாழும் பெருந்தகைமையினை இத்தரிசனம் ஏற்படுத்துகின்றது. குபேரலிங்கத்தில் ஸ்ரீலட்சுமி துதிகளைப் பாராயணம் செய்தல் விசேஷமானது.

கோண தரிசனம் :- ஈர ஆடைகளை உலர்த்தியவாறே கிரிவலத்தைத் தொடர்ந்து உலர்ந்தபின் அவற்றைத் தானம் செய்திடல் வேண்டும். வேலூர் சாலை பிரியும் இடத்தில் உள்ள மயானத்திலிருந்து ஸ்வாமியை (மலை) வணங்கிட இது கோண தரிசனம் ஆகும். இடுகாட்டு மயான அச்சத்தைத் ஈர்க்கும் தரிசனமிது. கூட்டு லிங்க தரிசனம் என்றும் பெயர். இடுகாட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தத் தவறியவர்களுக்கு இது பிராயச்சித்தமாகும். குபேர லிங்கத்திலிருந்து கிரிவலத்தைத் தொடர்ந்திட கோண தரிசனம், இடுகாட்டு கூட்டுலிங்க தரிசனம் கண்டு துர்க்கையம்மன் அருகே ஸ்வாமியை (மலையை) தரிசிக்க வேண்டும். இங்கு சாஷ்டாங்கமாக வீழ்ந்து, மலையை படுத்த நிலையிலேயே, தரிசிக்க வேண்டும். இதனால் விஷ்ணு மாயையின் தத்துவத்தை உணரலாம்.

விஷ்ணு துர்க்கையை செவ்வாயும் திருவோணமும் கூடிய நக்ஷத்திரத்தில் செய்யப்படும் விஷ்ணு துர்க்கை பூஜைக்குரிய பலனைத் தரவல்லது. இராகு காலத்தில் இத்தரிசனத்தைப் பெற்று எலுமிச்சை சாதம் தானம் செய்திட திருமண தோஷங்கள் நீங்கும். பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் பலவித தோஷங்களால் திருமணம் நிறைவேறாதிருப்பதுண்டு. திருமணம் ஆகாத ஆண்களுக்கு மேற் கூறிய தானத்துடன் கூடிய ஸ்வாமி (மலை) தரிசனம் நல்வழி காட்டும். ஸ்வாமியை (மலையை) விஷ்ணு துர்க்கையின் அருளுடன் தரிசித்த பிறகு விஷ்ணுவே ஸ்ரீபூதநாராயணனாக அருள்பாலிக்கும் ஸ்ரீபூதநாராயண சன்னிதிலிருந்து ஸ்வாமியை (மலை) தரிசித்திட ஸ்ரீபூத நாராயணன் தரிசனத்துடன் குருவருளால் சரண தீப கிரிவலம் முழுமை பெறுகின்றது.  

சரண தீபம் எனப்படும் நான்காம் நாள் திருஅண்ணாமலை தீபஜோதி தரிசன கிரிவலம் பற்றி இவ்விதழில் விளக்கியுள்ளோம். கடந்த ஆண்டுகளின் கார்த்திக தீபச்சிறப்பிதழ்களில் முதல், இரண்டு, மூன்று நாட்களின் தீப, மற்றும் கிரிவல விளக்கங்களை பரணி தீபம், கார்த்திகை தீபம், விஷ்ணு தீப மஹிமைகளாக அளித்துள்ளோம். கேட்டுப் பெற்றுப் படித்துக் கடைபிடித்துப் பலயோக நிலைகளிலும் தியான முறைகளிலும் பெறக் கூடிய அதிஅற்புதப் பலன்களை மிக எளிதில் அடைந்திடுக! மேலும் அந்தந்தத் தமிழ் வருட கிரிவல முறையை குருமூலம் அறிக.

ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் தம் சிஷ்யனான வெங்கடராமனுக்கு குருகுலவாசத்தில் சற்குருவின் தேகத்திலும் இன்றும் சூட்சும தேகத்திலும் அடிக்கடி உதிர்க்கின்ற அருள்மொழிகள் இவை.

“ஒரு தடவை ஒருத்தன் கார்த்திகை தீபத்துல அண்ணாமலையை கிரிவலம் வந்தாக்க, அந்த தெய்வ சக்திய வச்சுகிட்டு ஒரு வருஷத்துல வர்ற கஷ்டங்களைச் சமாளிச்சுடலாம். ஆனா எல்லாரும் பண்ற தப்பு என்னன்னா, அந்த மகத்தான சக்திய, நிறைய தப்புத் தண்டா பண்ணி ஒண்ணு, ரெண்டு மாசத்துல கழிச்சுடறாங்க! அப்ப இந்த கிரிவல சக்தினால, தப்புத் தண்டா பண்ணாம தடுக்க முடியாதான்னு கேப்பாங்க! குருன்னு ஒருத்தர் இருந்தாத்தான் அதச் செய்ய முடியும். மத்தவங்க எப்படித் தப்பு செஞ்சாலும் அதுக்குப் பெரிய தண்டனையில்லாம லேசாத் தப்பிச் சுடறாங்களே, அதுவும் அந்த தெய்வ சக்தியோட கூத்துதான்!”

“இதுக்குத்தான் அண்ணாமலைல பூதநாராயணப் பெருமாள் இருக்காரு. கிரிவலத்த பிரம்ம லிங்கத்துல ஆரம்பிச்சு பூதநாராயணன் சந்நிதியில முடிக்கணும்னு சொல்லுவாங்க. ஏன்னா, அந்தக் காலத்துல கிரிவலம் முடிஞ்சதும், அப்பனே! நாராயணா! உன்னோட அனுக்ரஹத்துல தான் நாங்க கிரிவலம் வந்தோம்! அதனால இதோட எல்லாப் பலனும் உனக்குத்தான்னு கற்பூர சாட்சியா சொல்லிட்டுப் போவாங்க! இதனால் தப்பு குறையும்! நாராயணனே அப்பப்ப கிரிவல சக்திய அப்பப்ப தர்றதுனால ரொம்ப நாளைக்கு பிக்சட் டெபாஸிட்டாட்டம் கிரிவல புண்யம் கிடைக்கும். அர்ப்பணம் பண்ணிட்டா உனக்கு எதுதான் சொந்தம்?”
என்னே எளிய சக்தி வாய்ந்த சற்குரு மொழிகள்!

அமுத தாரைகள்

1.  திடீர் அதிருஷ்டம் கிட்டிட :- அதிர்ஷ்டத்தைத் தருகின்ற தெய்வ தரிசனங்கள் பல உண்டு. முருகப் பெருமான், சங்கு, சக்கரதாரியாகக் காட்சி தரும் இடங்களில் முருகனுக்குப் பால் பாயசம் படைத்துத் தானம் அளித்துவர, திடீர் அதிருஷ்டம் கிட்டும். அதிருஷ்டம் என்றால் லாட்டசிச் சீட்டிலோ, குதிரைப் பந்தயத்திலோ பணம் கிடைப்பதல்ல! இவ்விரண்டும் தீவினைகளைச் சார்ந்தவை. லட்சக் கணக்கானோரின் ஏக்கங்களையும் தரித்திரச் சுழற்படிவுகளையும் தாங்கி வரும் லாட்டரி மற்றும் குதிரைப் பந்தயப் பணம் மேலும் மேலும் துன்பங்களையே தரும்! எனவே இவை திடீர் அதிருஷ்டமாகாது! மால் மருமகனாக, வள்ளியை மணம் புரிகையில் பெருமாளே அளித்த சீதனங்களான சங்கு சக்கரத்தை ஏந்தும் அதிருஷ்டத்தைப் பெற்ற சுப்பரமண்யக் கடவுளுக்குப் பிரியமான பால் பாயசத்தைப் படைத்து வர அவரே நம் தொழிலில் / பணியில் அதிர்ஷ்டம் நிறைந்த முறையான பணவரவையும், நிறைவான பிரமோஷனையும் எதிர்பாராத நல்வரங்களையும் தந்திடுவார்.

ஸ்ரீமுருகப் பெருமாள்
அளகாபுத்தூர்

2. கூடுதல் வருமானத்தைக் கூட்டிடும் பூஜை:- சருகு நைவேத்யம , கலச பூஜை, ஏகாதசி விரதம், சாளகிராம பூஜை, தினசரி அக்னி பூஜை, ஸ்ரீசக்கர பூஜை, செவ்வாய்/ வியாழன் /வெள்ளி விரதங்கள் – இவ்வாறாக விதவிதமான வழிபாட்டை முறையாக, தினமும் செய்வோர்க்கு அவர்களையும் அறியாமலேயே பல சித்திகளும், சக்திகளும் வந்தடைகின்றன. இவ்வகையில் ஸ்ரீபெருமாளுக்கு அமிர்த கலசப் பணியாரத்தைப் படைத்து வழிபடுவதை வைராக்யமாகக் கொண்டோருக்குப் பாத பூஜையும் ஏனைய உதவிகள், தானதர்மங்களும் செய்துவர, ஓவர்டைம், கூடுதல் அலவன்ஸ் போன்று முறையான அதிக வருமானம் உள்ள இடங்களுக்கு வேலை மாற்றம் கிடைக்கும், ஸ்ரீமன்நாராயணனின் திருவருளால்! தார்மீகமான வருமான விருத்திக்கு பெருமாளுக்குரிய அமிர்த கலசப் பணியார நைவேத்ய வழிபாடு வழிவகுக்கும்.
3. நினைவாற்றல் பெருகிட....  நல்ல காய்கறிகளுள் ஒன்றான காரட் என்பது மேனாட்டிலிருந்து வந்ததே என்று தவறாக எண்ணுகிறோம். சித்தர்களின் மருத்துவ வாடகப் பகுதிகளில் காரட்டினை செஞ்சிவந் தண்டு, மஞ்சுள்ளி வேர்க்காய் எனப் பலவாறு குறிக்கின்றனர். தினமும் இரவில் காரட் சாற்றில், பால், தேன் கலந்து ஸ்ரீசரஸ்வதி தேவியின் குருவான ஸ்ரீஹயக்ரீவருக்குப் படைத்துப் பின் பிரசாதமாகப் பருகி வந்திடில் நினைவாற்றல் பெருகும். ஸ்ரீஹயக்ரீவ காயத்ரீ மந்திரத்தை இரவில் படுக்கும் முன் 21 முறை ஜபித்துவர ஞாபக சக்தியானது அற்புதமான முறையில் நன்கு விருத்தியடையும்.
ஸ்ரீஹயக்ரீவ காயத்ரீ மந்திரம்
ஓம் ஸ்ரீவாகீசாய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்சப் ப்ரசோதயாத்||
4. வறுமைக்கு விடிவு! சருவை நைவேத்யம் செய்து வழிபடுகின்றோர் இன்றும் பலருண்டு! இத்தகையோர்க்குப் பாத பூஜை வந்திடில் எத்தகைய வறுமையும் தரித்திர நிலையும் தீரும். சருவை என்றால்.... சற்றே முயற்சி செய்து அறிய முற்படுங்களேன்! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
5. கோவண ஆடை தான மஹிமை :- வயதானோர்க்குப் புதிய கோவண ஆடையைத் தானமாக அளித்தல் மிகவும் சிற்ப்புடையதாகும். கோவணமெனில் பழைய ஆடையை நீளமாகக் கிழித்துக் கொடுத்தலாகாது. புதிய ஆடையில் முன்புறம் தாராளமாகத் துணிவிட்டு, பார்டரில் தையலிட்டு நன்கு தைத்து அளிப்பது தான் சிறப்பான கோவண ஆடையாகிறது. காவி நிறங்கூடாது. வெள்ளை, பச்சை, ஆரஞ்சு நிறங்கள் சிறப்புடையவை! காம வயப்பட்டுத் தகாத செயல்களைச் செய்தோர், பிற பெண்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியோருடைய கொடுமையான தீவினைகளுக்குப் பிராயசித்தமாக, ஸ்ரீதண்டாயுதபாணியாக முருகன் வீற்றிருக்கும் தலங்களில் கிரிவலம் கோயில் அடிப்பிரதட்சிணம் வந்து, வயதான ஏழைகள், பிரம்மச்சாரிகளுக்கு நிறைய (புதிய) கோவண ஆடைகளைத் தானமாக அளித்துத் தன்னால் பாதிக்கப்பட்டோருக்கு தக்க நிவாரணங்கள் அளித்து வர நல்வழி கிட்டும். கொடிய காமச் செயல்களினால் ஏற்படும் பெருத்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்.
6. பல்லை விளக்க ஓர் விளக்கம் :- தெற்கு நோக்கி நின்று பல் துலக்கினால் அன்று தேவையற்ற வசவுகளையும், திட்டுகளையும் பெற நேரிடும். நடுவிரல் (சனி விரல்) கொண்டே பல் துலக்க வேண்டுமே தவிர எக்காரணங் கொண்டும் ஆள்காட்டி விரலால் (குருவிரல்) பல் துலக்குதல் கூடாது. தந்த தேவதைகள் எனப்படும் பல் தேவதா மூர்த்திகள் தோன்றிய இடமே சென்னை அருகே உள்ள ஞாயிறு என்னும் திருத்தலமாகும். சிவபெருமான், திரிபுரசம்ஹாரத்தின் போது சற்றே புன்முறுவல் செய்திட்டாரல்லவா. அப்போது அவர்தம் திருப்பற்களிலிருந்து வெளிப்போந்த தந்த கிரணங்கள் நெடுந்தொலைவு பரந்து ஞாயிறு என்னும் இத்திருத்தலத்தில் மிகவும் பிரகாசத்துடன் பூமியில் ஐக்யமாயின. எத்தகைய கடுமையான பல்வியாதிகளும் தீர ஞாயிறு திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு அளித்து அடிப்பிரதட்சிணம் செய்து வருக! பல் மருத்துவர்கள் சிகிச்சைத் துறையில் மேன்மை பெற அருள்பாலிக்கும் தலமிதுவே!
7. வேண்டுமிடத்தில் வேலை கிட்ட :-  ஸ்ரீஆஞ்சநேயர் போல் கைகளைக் கட்டிய நிலையில் உள்ள ஸ்ரீகருடாழ்வாருக்கு வெண்பட்டு சார்த்திக் குறைந்தது 100 பேருக்குக் குறையாமல் அன்னதானம் (ஒரே நாளில் என்றல்லாது பல நாட்களுக்குக் குறைந்தது 100 ஏழை அதிதிகள் என்று அமையுமாறு), இட்டுவரத் தகுந்த வேலை மாற்றங்கள் கிடைக்கும். ஒரு முறை, தாமே மிக விரைந்து செல்லும் இறை வாகனமென என்றெண்ணியதால் தன்னுடைய கர்வம் காரணமாகப் பெருமையுடன் இருந்த கருடாழ்வாரைத் தண்டித்திட, ஸ்ரீமஹாவிஷ்ணு எங்கு சென்றிடினும் வாகனமின்றித் தாமே சென்றதுடன் தம்முடைய வாசஸ்தலத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டமையால் கருடாழ்வாரால் தான் நினைத்த இடத்திற்கு விரைந்து செய்ய இயலாததுடன் தமக்கு பகவானின் தரிசனமும் கிட்டாமற் போனதைக் கண்டு வேதனையடைந்து தம் கர்வத்திற்கும் அகங்காரத்திற்கும் நாரதருடைய ஆலோசனையின்படி முடிவு காண வேண்டி, கைகளைக் கட்டிய நிலையில் சிறகுகளை மடித்த கோலத்தில் அங்கக்ரந்தி என்றும் அற்புத யோக நிலையிலாழ்ந்தார். யோக முடிவில் கண்களைத் திறந்திட ஸ்ரீமஹாவிஷ்ணுவோ ஓர் ஏழை அதிதியாய் வந்து பிட்சை கேட்டிட, ஒன்றுமில்லா நிலையில் தம்முடைய தவத்தின் பலனையே அன்னசாரமாக்கி அந்த ஏழைக்கு இட்டுப் பெறற்கரிய ஸ்ரீமன்நாராயணின் திவ்ய தரிசனத்தைப் பெற்றார். அன்றிலிருந்து ஸ்ரீமகாவிஷ்ணு எங்கிருப்பினும் அதை தீர்க தரிசனத்தால் உணர்ந்து அங்கு விரைந்து செல்லும் விசேஷமான தெய்வீக சக்தியைப் பெற்றார். எனவே கல்வி, வேலை நிமித்தம் காரணமாக மனைவி, மக்களைப் பிரிந்து வாழ்கின்றோர் பலருண்டு. அவர்கள் மேற்கண்ட வழிபாட்டை மேற்கொண்டிடத் தக்க வேலை மாற்றங்கள் கிடைக்கும்.
8. கண்களைக் காக்கும் கதிரவன் :- சந்திர காந்தக் கல்லாலான சூரியபகவானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து நெய்யாலான இனிப்புகளைப் (மைசூர்பாகு etc.) படைத்துத் தானமளித்து வர கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும். சென்னை தாம்பரம் அருகே முடிச்சூரில் சந்திரகாந்தக் கல்லால் ஆன அற்புதமான மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சந்திரகாந்தக் கல்லிற்கு பிரார்த்தனா பலித சக்தி நிறைய உண்டு.
9. சீரகச் சிறப்பு :- சீரகம், வெந்தயம் போன்றவற்றிற்கு சித்த வைத்யப் பண்புகளுடன் பல அரிய தெய்வீக சக்திகளும் உண்டு! யாரகம் (யார்+அகம்) வந்தாலும் சீரகம் அகம் காக்கும் என்பது சித்தர்களின் பரிபாஷை! சில குறிப்பிட்ட நபர்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களுடைய பொறாமைக் கண்களால் (கொள்ளிக் கண் என்பார்கள்) சிறுகாயங்களும், நஷ்டமும், பொருட்கள் உடைதலும் ஏற்படும். இதற்கு திருஷ்டி பரிகாரமாக, தீயவர்களின் எதிர்வினை சக்திகளை, பொறாமை எண்ணங்களை அழித்திட ஸ்ரீதுர்க்கைக்கு நற்சீரக பானத்தைப் படைத்து, ஏழைகளுக்கு அளித்திட வேண்டும். (சீரகத்தூள்+வெல்லம்+நீர்) – வெல்லம் கலக்காதும் சீரகபானத்தைச் செய்திடலாம்.
10. மனோதிடம் வளர வேண்டுமா? :- மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் போன்ற கலைகளை தவறான வழியில் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனவலிமை குறைந்தவர்கள் அத்தகையோரிடமிருந்து விடுபட சுயம்பு லிங்க மூர்த்தியின் விபூதி பிரசாதத்தைப் பெற்று நெற்றியில் பூசினால் போதும், எந்தவித மெஸ்மரிச வித்தையும் பலிக்காது. சுயம்புலிங்க மூர்த்தியைத் தொடர்ந்து பிரதட்சிணம் வந்தால் திடமான மனம் வளர்ந்து தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும்.
11. சபலம் அகலும் :-  முறையற்ற காமம், பேராசை, கோபம், பொறாமை ஆகியவை மூலமே தான் மனிதன் அடிக்கடி சபலங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆட்படுகின்றான். நின்ற கோலத்திலிருக்கும் விநாயக மூர்த்திக்கோ அல்லது ஸ்ரீவிஜய கணபதிக்கோ 108 முறை தோப்புக் கரணம் இட்டு வந்திடில் சபலங்களும், சஞ்சலங்களும் தானே குறையும். யோக – ஆசன – பிராணாயாம – நிலைகள் மூன்றும் கூடுவதே தோப்புக் கரணமிடுதல் ஆகும்.
12.  தர்ப்பண மந்திரம்  : எளிய பித்ரு தர்ப்பணம் என்ற நூலில் விளக்கங்கள் காணலாம்
1. ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே
பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
2.  நீத்தார் நினைவோடு நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர்த்தாரை எள்ளோடு நுணல் தருப்பை யாவையுமாய்
மூத்தார் துதிபாடி மூலவரை யாம் பணிவோம்||
13. வாமன மஹரிஷி வதனங் காக்க ... (அட்டைப்பட விளக்கம்) :- பல மஹரிஷிகள் ஜீவன்களுடைய உடல் உறுப்புகளை நன்கு பேணிக் காப்பதற்கான நல்வரங்களைப் பெற, சுயநலமின்றித் தியாக சீலத்துடன் கடுந்தவங் கொள்கின்றனர். வாமன மஹரிஷி வதனம் காக்க, வசிட்ட பெருந்தகை சீர் முகம் காக்க.. என்றவாறாக சித்புருஷர்களின் கிரந்தங்கள் துதிபாடுகின்றன. இவ்வகையில் நம் வதனம் ஆரோக்யத்துடன் தேககாந்தியுடன் விளங்க, ஸ்ரீவாமன மஹரிஷி., நெடுந்தவப் பயனாய் ஈஸ்வரனிடமிருந்து நல்வரங்களைப் பெறுங்காட்சியே அட்டைப்படமாக மிளிர்கின்றது!
14. திருக்கோட்டியூரில் வெள்ளிக்கு விலக்கு :- வெள்ளி வாசனாய், வெள்ளியில் வாசம் செய்பவனாய், உற்சவ மூர்த்தியாய் இறைவன் விளங்கும் தலமே திருக்கோட்டியூர்! இங்கு வாழ்வோர், குறிப்பாக இல்லறப் பெண்கள் இவ்வூரில் இருக்கையில் வெள்ளியில் அல்லாது வேறு உலோகத்தில் தான் மெட்டியணிதல் வேண்டுமென்பது பெரியோர்களுடைய அருள் வாக்கு! கணவனுக்கு நீண்ட ஆயுளையும் நல்ஆரோக்யத்தையும் தந்து தீர்க சுமங்கலித்துவத்தையும் பெற்றிட, பெண்கள் இங்கு பல வெள்ளி மெட்டிகளை இறைவனுக்குச் சார்த்தி அவற்றை வேறிடங்களில்                (திருக்கோட்டியூரில் அல்ல) சாதி வித்யாசமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். வெள்ளி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிப்படைய திருக்கோட்டியூர்ப் பெருமானை அடிக்கடி தரிசித்து இயன்ற திருப்பணிகளைச் செய்து வருதல் வேண்டும்.

விபத்துக்களை தடுக்க ...

விபத்துக்களைத் தடுக்கும் ஆன்மீக வழிமுறைகள்
சாலைகளில், வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதால்தான் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன  என்பதை விட வாகனச் சொந்தக்காரர்களின், டிரைவர்களின், பயணிகளின் புண்ணிய சக்தி குறைந்து வருவதால்தான் விபத்துகள் மிகுந்து வருகின்றன என்பதே தெளிவான உண்மையாகும். ஏனென்றால் புண்ணிய சக்தி ஒன்று தான் எங்குமே நம்மை ரட்சை போலக் காத்து நிற்கும், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடி நேரமும் விதவிதமான புண்ணிய சக்தியின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. எப்போது புண்ணிய சக்தி குறைகின்றதோ அல்லது அப்புண்ணிய சக்தியை எதிர்த்து நிற்கும் தீவினைகளின் சக்தி பெருகுகின்றதோ அப்போதுதான் நமக்கு இடையூறுகள், ஆபத்துகள், விபத்துகள், பணக் கஷ்டங்கள், பகைமை, கோபம், குரோதம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை, அலுவலகத் துன்பங்கள் போன்றவை ஏற்படுகின்றன. மேற்கண்ட ஒவ்வொரு பிரச்னையும் தீர்வதற்கோ அல்லது ஏற்படாமல் இருப்பதற்கோ ஒவ்வொரு விதமான புண்ணிய சக்தி தேவைப்படுகிறது. இதற்குத்தான் பலவிதமான விரதங்களும், பண்டிகைகளும், தான தர்மங்களும் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கிருத்திகை நட்சத்திரத்தன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் விதமிருந்து முருகனைப் பூஜித்து, தேன், தினை மாவு கலந்த உணவினைத் தானமாக அளித்திட்டால் விரோத நிவர்த்தி புண்ணிய சக்தி கிட்டுகிறது. இதன் மூலம் அலுவலகத்திலும் தொழிற் சாலையிலும் வியாபார இடங்களிலும் ஏற்படுகின்ற எதிர்ப்பு, பொறாமை, அலுவலகத் துன்பங்கள் போன்றவை அகல்கின்றன.. இத்தகைய துன்பங்களைக் களைவதற்கு ஷட்குண பல புண்ணிய சக்தி தேவைப்படுவதால் கிருத்திகை தின பூஜையே இதனைத் தரவல்லது ஆகும். இதேபோல வாகனங்கள் மோதுதல், கவிழ்தல், சாய்தல், தடம்புரள்தல் போன்ற விபத்துக்களோடன்றிச் சிறுகாயம் முதல் பெரும் ரண சிகிச்சை, ஆபத்து நிலை வரை ஒவ்வொருவிதமான விபத்திலிருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு விசேஷமான தேவமூர்த்தி அருள்பாலிக்கின்றார். தக்க சற்குருவைப் பெற்றிடில் கனிந்த கருணையுடன் அனைத்தையும் விளக்கி அவரே நல்வழி காட்டிடுவார்.
1. வாகனத்தை எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே நிறுத்துதல் வேண்டும்.
2. காலையில் வாகனத்தை எடுக்கையில், முதலில் வாகனத்தைக் கை கூப்பி வணங்கி ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயா சரணம் என்று மூன்று முறை துதித்து,
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல் ! என்று 18 முறை ஜெபித்திடுக! பிறகு வண்டியை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கிச் சிறிது நகர்த்திய பிறகே ஓட்டத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு திசையுண்டு! இதனையறிந்து கடைபிடித்திடில் நல்ல ரட்சைபோல் பயணத்தில் கூடி நிற்கும். டிரைவராகப் பணிபுரிபவர்கள் ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் வேல்மாறல் துதியை அடிக்கடிப் பாராயணம் செய்வது சிறப்புடையதாகும். நடுவில் வேல் வரையைப் பெற்ற வேல் மாறல் சக்கரத்தை வாகனத்தில் ஒட்டி வைத்துக் கொண்டு அதன்மேல் வலக்கரத்தை வைத்துச் சிறிது தியானித்தல் மிகவும் விசேஷமானது.
3. ஆம்னி பஸ், லாரி, கார் போன்று அனைத்து வாகனங்களுக்கும் தினந்தோறும் சாம்பிராணி தூபமிடுதலாலும் அல்லது ஊதுபத்தி ஏற்றி வைத்துச் சுற்றி திருஷ்டி கழிப்பதாலும் பலவிதமான வாகன தோஷங்கள் நீங்குகின்றன.
4. வாகனத்திற்குரித்தான செவ்வாய் பகவானுக்கான செவ்வாய்க் கிழமையன்று வாகனங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம்தனை எட்டு திக்கும் பூசுதலால் பலவிதமான கர்மவினைகளைத் தீர்த்திடலாம்.
5. முருகனுடைய மயில் வாகனம், பிள்ளையாருக்குரிய மூஷிகம், ஸ்ரீநந்தீஸ்வரர், கருடாழ்வார், சிங்கவாகனம், ஆதிசேஷன், ரிஷபவாகனம் போன்ற தெய்வ மூர்த்திகளின் வாகனங்களுக்கு இயன்றபோதெல்லாம் தாமே அரைத்துச் சந்தனத்தை இட்டு வர வேண்டும்.
6. வாகனங்களில் அநாகரீகமான, காதுகளைப் பிளக்கும் பாடல்களைத் தவிர்த்திடுக! வாகனம் நன்கு செல்ல சப்ததேவதைகளின் ஆசி தேவை!
7. வாகனத்தை ஓட்டும் போதே சிவசிவ, நாராயண, ராம் ராம், ஹரிஹரி கிருஷ்ண கிருஷ்ண – என்று இறைவனின் நாமத்தை ஜெபித்திடப் பழகிடில், இந்த மந்திர சக்தியே பெரும் ரட்சையாகும் அவரவருடைய மதத்திற்குரிய துதிகளை ஓதிடுக!
8. வாகன உரிமையாளருடைய பிறந்த தேதி, பெயருக்கேற்ப அவரவர்க்குரித்தான உரிய நிறத்தில் வாகனம் அமைந்திருப்பது மேன்மையுடையதாகும். அவரவருடைய பிறந்த நட்சத்திரத்திற்குரிய நிறத்தில் வாகனம் அமைந்திருப்பதும் பல உத்தமமான பலன்களைத் தரும்.
9. மேலும் வாரத்தின் ஏழு கிழமைகளிலும், ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான ஆடையணிந்து வாகனத்தை ஓட்டுவதால், பல நற்பலன்களைப் பெற்றிடலாம்.
ஞாயிறு – ஆரஞ்சு / திங்கள் – வெள்ளை / செவ்வாய் – சிவப்பு /புதன் – பச்சை/ வியாழன் – மஞ்சள்/ வெள்ளி – வெளிர் நீலம் / சனி – கறுப்பு அல்லது கருநீலம்.
10. சைக்கிள் போன்ற சிறு வாகனங்களில் பாதுகாப்புடன் செல்வதற்கும், இலேசாக மோதுதல், விழுதல், பஞ்சர் ஆகுதல், காயமடைதல் போன்ற சிறு ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காப்பவளே ம்ருதுள பாஷிணி தேவி ஆவாள்! இத்தேவியானவள் ஏழு குதிரைகளுடன் கூடிய ஸ்ரீசூர்ய பகவானுடைய ரதத்தில் கட்டை அளவு உயரமே உள்ள வாலகில்லிய மாமுனிவர்களுடன் சேர்ந்து நான்கு வேதங்களை ஒலித்து வலம் வந்து எவ்விதத் துன்பங்களும் நேராதவாறு அருள்பாலிக்கின்றாள்! மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வாகனத்திற்கும் மந்திரமும் யந்திரமும் உண்டு. இவற்றைப் பெற குரு அருளை நாடுக! அவரவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பகவானின் சஞ்சாரத்தைப் பொறுத்தும் ஆயில்ய நட்சத்திரக் கால்களின் நிலையைப் பொறுத்தும் வாகன யந்திரச் சக்கரம் அமையும். மேலும் வாகன விபத்துக் காப்பிற்கான ஆன்மீக வழிமுறைகள் பல உண்டு.

ஈஸ்வர வருட கார்த்திகை தீபம்

ஈஸ்வர வருடத்தில் அனைத்து தேவாதி தேவ, தெய்வ அவதாரங்களும் தம்மிடம் ஐக்யமாகியுள்ள ஸ்ரீபக்த ராமதாஸர், ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், மீராபாய் போன்ற மகான்களின், யோகியர்களின் ஐக்ய ஆத்ம் ஜோதிகளுடன் அருணாசலத்தை கிரிவலம் வருகின்றனர். பல ஈஸ்வர மூர்த்திகளின் தெய்வீக லீலைகளும், அவதார வைபவங்களும் நிகழ்ந்த அற்புதமான ஈஸ்வர வருடம் ஆதலின் நாம் செய்கின்ற பூஜைகள் எல்லாம் ஈஸ்வர ஜோதியில் சிறப்புடன் ஐக்யமாகின்றன.
படிப்பதை விடக் கேள்வி ஞானம் சிறந்தது. அதை விட நேரிடை அனுபவமே உன்னதமானது. வாழ்க்கையில் இறப்பிறப்பற்ற அழியாப் பெருநிலையை அடைய எந்த ஒரு ஜீவனுக்கும் திருஅண்ணாமலை கிரிவலம் இன்றியமையாததாகும். வெளி மாநிலத்தவரும், அயல்நாட்டினரும் கூட எவராயினும் சரி, உண்மையான இறை பக்தியிருப்பின் அவர்களுடைய பித்ருக்கள் மூலமாகவோ வாழ்நாளில் திருஅண்ணாமலையை ஒரு முறையேனும் தரிசித்தாக வேண்டும். ஏனெனில் அனைத்து விதமான ஆனந்தங்களையும் தர வல்லதே அருணாசல கிரிவலம். ஆனந்தங்களின் எல்லையான பிரம்மானந்தம் என்றால் குறைவற்ற இறைப் பெருநிலையில் எப்போதும் மகிழ்வுடன் திளைப்பது என்று பொருள்!
ஆனந்தம் எத்தனை எத்தனை!
பொன்னாசையும், முறையான காமமும் தருகின்ற ஸ்பரிச ஆனந்தம் கூட எப்போதும் நிலைப்பதில்லை. வயது, மனதைப் பொறுத்து அது மாறக் கூடியது. இறைத் திருப்பணிகள், தான தருமங்கள், பிறருக்கு சரீர சேவை போன்றவற்றால் கிட்டுவதே மன, நல் ஆரோக்யத்தைத் தருகின்ற தேகானந்தமாகும்.. ஆனால் இதுவும் மனம், உடல் வலிமை போன்றவற்றைப் பொறுத்ததே! ஏழை எளியோர்க்கு வடமொழி, தமிழ் மறைகளை ஓதுவித்தலாலும் இசை பாடுதல், இசைக் கருவிகளை மீட்டுதலாலும் ஸ்வரானந்தம் கிட்டுகின்றது. எவ்விதக் கட்டணமும் பெறாமல் இலவசமாக இசையைக் கற்றுத் தந்து இன்னிசை பாடுவோர்க்கு ஸ்வரானந்தம் கை கூடும். இதனால் ENT சம்பந்தமான கண், காது தொண்டை நோய்களை விபூதி குங்குமம், சந்தனம், துளஸி / வில்வ தீர்த்தப் பிரசாதங்கொண்டு தீர்க்கும் அற்புத சக்தி கூடுகின்றது. இறைவனே மலையுருவாய் அமர்ந்திருக்கின்ற அண்ணாமலையைத் தரிசித்துக் கிரிவலம் வருவதால் கிட்டுவதே பிரம்மானந்தம்! இதனை கிரிவலம் வருகின்ற அனைவரும் பெற்றால் கூட உள்ளத்தால் உணர்கின்ற பக்குவம் வேண்டுமே! இதற்குக் கல்வி அறிவே தேவையில்லை. சிறிது படிப்பறிவு இருந்தால் கூட விவாதமும், தர்க்கமும் செய்கின்ற புத்தியும் ஏற்பட்டு அகங்காரமும், ஆணவமும் தலை விரித்தாடும்!
பரபிரம்மானந்தத்தைப் பெறும் வழிகள்.
1. தாய்ப் பசுவைத் தேடி கன்று அன்புடன் ஓடுவதைப் போல் திருஅண்ணாமலையாரைக் காண மனம் ஏங்கி, ஏங்கத் துடிதுடிக்க வேண்டும். கண்ணீர் ஆறாகப் பெருகிட வேண்டும்! இதுவே உண்மையான ஆனந்தக் கண்ணீர்!
2. திருஅண்ணாமலையார் நம் உடலைப் பார்ப்பதில்லை. நம் எண்ணங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் எண்ணங்களின் படியே அவரும் அருள்புரிகின்றார். பிரார்த்தனைகள் முறையற்றதாகவோ, பேராசை நிறைந்திருந்தாலோ, அவர் நியாயமாகத்தானே அதைக் கையாள வேண்டும். பின் எவ்வாறு நமக்கு பிரம்ம நிலை கிட்டும்?
3. அண்ணாமலையார் புகட்டுகின்ற பாடம் என்னவெனில் சரியான பக்குவமும், நேரமும் கிட்டும் வரை இல்லறத்தைத் துறந்து வெளியில் வந்து விடாதே! உன்னுடைய உலகக் கடமையை அப்பழுக்கின்றிச் செய்து வா, ஆனால் அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ என்று உள்ளூர ஒலித்துக் கொண்டே உன் உள்ளத்தை மட்டும் என்னிடம் வைத்து விடு, யாரொருவர் சமய சமரசத்தைக் கடைபிடிக்கின்றாரோ அவரால் தான் என்னை உணர முடியும் ! சாஸ்திர ஆராய்ச்சி கூட தெய்வ தரிசனம் கிட்டும் வரைதான்! அதன் பிறகு எதுவும் தேவையில்லை.... இன்றையை உலகின் துன்பங்களுக்குக் காரணமே மக்கள் செய்கின்ற பாவ வினைகளே! உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு மிகவும் கொடியதாகும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கான எளிமையான ஒரே வழி திருஅண்ணாமலை கிரிவலமே ஆகும். ஏனென்றால் எவ்விதப் பாகுபாடுமின்றி, ஏன் ஈ, எறும்பு, ஆண், பெண், மரம், விலங்கு என எவ்வித வித்தியாசமும் பாராட்டாது அருள்பாலிப்பது அருணை கிரிவலம் ஒன்றே. இவ்வாறாக அனைவருக்கும் அனைத்திற்கும், எவ்வித பேதமுமின்றி அருள் தருவதே அருணாசல கிரிவலம்! உலகத்தில் இருக்கும் எந்தவிதமான துன்பத்திற்கும், எந்த மூலையில் எவ்விதப் பிரச்னை இருந்தாலும், எல்லாவற்றிற்கும் நிவாரணம் அளிப்பதே அருணாசல கிரிவலம் ஆகும். இவ்வாறாக அனைத்தையும் தரும் கற்பக விருட்சமே திருஅண்ணாமலை!
அரைகுறை அறிவால் எதையும் அறிய முற்பட்டால் முறிவுதான் கிட்டும். ஆனால் இறைவனை அறிய முற்படும் எந்த அறிவும் விருத்தியே அடையும். இறையைத் தேடு, அறிவுக்கு விரோதி யார் தெரியுமா? பொறாமையே! பொறாமையானது பிறருடைய வளர்ச்சியைக் கண்டு நம்மிடம் ஏற்படும் தேக்கமாகும்! மிக மிகக் கொடிய நோயிது! இதற்கு ஆட்படாதோர் எவருமே இல்லை. இதைக் களைவதற்கான ஒரே வழி ஈஸ்வர ஆண்டு, கார்த்திகை தீப அருணாசல கிரிவலமே
முழவு லிங்க முக தரிசனம் :-
திருஅண்ணாமலை தரிசனங்களே அருமருந்தாய், பல உடல், மன நோய்களைத் தீர்ப்பதோடு, பொறாமை, குரோதம், பேராசை போன்ற மிகமிகக் கொடிய நோய்களையும் தீர்க்க வல்லதாகும்.  திருஅண்ணாமலையே பிரபஞ்சத்திலேயே பெரும் வைத்தியர் அமர்ந்துள்ள ஆன்மீக வைத்யசாலை! கிழக்கு கோபுரத்திலிருந்து திருஅண்ணாமலை தரிசித்திட நாம் பெறுவதே முழவு லிங்க முக தரிசனம் ஆகும். குடும்பத்தோடு இவ்வாறு தரிசிப்பதே சிறப்புடையது. இதனால் நம் குடும்பம், தொழில், வியாபாரத்தின் மேல் பிறர் கொண்டுள்ள பொறாமை, திருஷ்டி துவேஷங்கள் நீங்குவதோடு, நம்முடைய பொறாமை குணங்களும் நீங்கும். இது ஈஸ்வர ஆண்டு மட்டுமே கிட்டுகின்ற அற்புதப் பேறு ஆகும். அடுத்த ஈஸ்வர ஆண்டில் நாம் எங்கு இருப்போமோ! சற்றே சிந்தித்து விடை கண்டு அருள் வழி காண்பீர்களாக! ஸ்ரீதுர்வாச மகரிஷி மேல் பொறாமை கொண்ட பல ரிஷிகள் எத்தனையோ கோடி ஆண்டுகள் தவம் புரிந்தும் நீக்க முடியாத பொறாமை குணத்தை இங்கு வந்து கிழக்கு கோபுரத்தின் உள்புறம் கோவிலின் உள்தளத்தில் நின்று திருஅண்ணாமலையாரின் முழவு லிங்க முக தரிசனத்தைப் பெற்றே பொறாமையைத் தீயை அழித்தனர்.. சற்குருவே அருகில் இருந்தால் கூட அவருடைய அருள் ஆசியைப் பெற முடியா வண்ணம் உலக ஆசைகளும், ஆணவமும் (ego) குறுக்கே நிற்கின்றன. இந்த ஆணவமே பொறாமைக்கும், குரோதத்திற்கும் வழி வகுக்குகின்றது. சற்குருவின் திருவாய் மொழிகளைக் கேட்பதையும் படிப்பதையும் விட அவற்றைக் கடைபிடித்தால் தான் அவருடைய ஆசி பரிபூர்ணமாக அமையும் என்பதை உணர்ந்திடுக! தற்போதைய உலக அறிவு அனுபவ ரீதியாக அல்லாமல் புத்தக அறிவாக அமைவதால் அது நிலைத்து நிற்பதில்லை. ஆனால் அருணாசல கிரிவலமானது உடலாலும், மனதாலும் நன்கு தெய்வ ரீதியாக அனுபவிக்கப்படுவதால் இதற்கு மகத்தான சக்திகள் உண்டு. இந்த அனுபவமே தெளிந்த பகுத்தறிவைத் தருகின்றது. நேதி (ந இதி) தத்துவமாக இது நிரந்தரம் இல்லை. அது சாசுவதம் இல்லை என்று பகுத்தறிந்து என்றும் நிலையான இன்பத்தைத் தருவதையே இறைப் பரம்பொருள் என்று உணர்கின்ற பகுத்தறிவைத் தருவதே அருணாசல கிரிவலம்! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலாகிய, சாதி வேறுபாடின்றிப் பலருக்கும் தன்னால் ஆகிய சமுதாயப் பணிகளை இறைப்பணியாகச் செய்து வாழ்ந்தால்தான் இறைவனைக் காண முடியும்! இதனை அனுபவப் பூர்வமாக உணர்த்துவதே அருணாசல கிரிவலம்.
நுனிப்பூ தீப தரிசனம்
எவ்வித வித்தியாசமுமின்றி அனைத்து ஜீவன்களுக்கும் இயன்ற தான தருமங்கள் செய்தோ, உடலால் சேவை செய்தோ வந்தால் தான் இறைவனைப் பகுத்தறிகின்ற உண்மையான அறிவு கிட்டும்! இதனை உணர்த்தக் கூடியதே இந்த நுனிப்பூ தீப தரிசனம் ஆகும். கோயிலினுள் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீபிரம்ம லிங்கத்திற்கு எதிரே குளத்தை ஒட்டியவாறு திருஅண்ணாமலையை தரிசிப்பதே நுனிப்பூ தீப தரிசனம் ஆகும். தற்காலத்தில் பல இளைஞர்கள் வேலையின்றியும், வேலையில் அதிருப்தியும் பெற்றுச் சஞ்சலமான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இளைஞர்களே! ஈஸ்வர வருட கார்த்திகை தீபத்தில் இந்த நுனிப்பூ தீப தரிசனத்தை பெற்றிடுங்கள்! ஓர் உயர்ந்த, நல்ல இலட்சியத்தைக் கைக்கொள்ளுங்கள்! தலை நிமிர்ந்து நின்றிடுக! திருஅண்ணாமலையானைப் பரிபூர்ணமாக நம்பிடுக! நாடி நரம்புகளிலும் உதிரத்திலும் அவனுடைய திருப்பெயரே நிலைக்கட்டும். இறைவனிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருங்கள். அது தனித்த உரையாடலாகக் கூட (Monologue) இருக்கட்டும். வெற்றி கிடைக்கும் வரை ஓயாதே! உன் உயர்ந்த இலட்சியத்திற்காக அலைந்து திரிந்தால் அது நிச்சயமாகக் கை கூடும்! இதற்கு வழிவகுப்பதே நுனிப்பூ முக தரிசனம்!
கும்ப மூர்த்தி தீப தரிசனம் :-
பலரும் ஆத்ம ஞானம் வேண்டி இறைப்பணிகள் செய்து பிறரையும் தான தர்மங்கள் செய்ய வைத்து இறையருள் கூடிட வேண்டி இயங்குகின்றனர். இவர்களுக்கும் இறைதரிசனம் என்றால் என்ன என்பதைத் தெரிவித்தும் பிறர்க்கு உணர்த்துவதற்கும் ஏற்பட்ட தரிசனம்! தெற்கு கோபுரத்தைக் கடந்து வெளிவந்து திருஅண்ணாமலையை நோக்கிடில் கும்பம் போன்ற அமைப்பு தென்படும்! மகத்தான சக்தி வாய்ந்த தரிசனம்! இறை நம்பிக்கையைப் பெருக்கி உண்மையான அறிவான இறை ஞானத்தை கூட்டுவதாகும். இத்தரிசனத்தால் தாய் தந்தையருக்கு முறையாகச் சேவை புரியாதோர்க்கும் பரிகாரம் கிட்டுகிறது.
மார்க்கப் பிறவி தீர்க்க தரிசனம்
தெற்கு கோபுரத்திலிருந்து நேரே சென்றிட வலது புறம் வருகின்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலிலிருந்து கிடைக்கும் தரிசனம்! ஒரு முறை வேதசக்திகளைப் பெற்று அவற்றைத் தவறாகப் பயன்படுத்தித் தேவர்களை அழிக்க எண்ணி அசுரர்கள் வேதங்களை ஸ்ரீபிரம்மாவிடமிருந்து கவர முயன்றனர். வேதங்களுக்கு அதிபதியே ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஆதலின் பல கோடி ஆண்டுகள் அவர் தவம் புரிந்தும், அசுரர்களின் கொடுமையைத் தாங்கும் நல்வழி அறியாது திகைத்து அருணாசலத்தை கிரிவலம் வந்தார். இறையருளால், தம்மை நாயுருவி மூலிகைச் செடிகளாக மாற்றி வேதசக்திகளுடன் மறைத்து கொண்டு தேவர்கள் இங்கு கிரிவலம் வருகையில் தம் மூலிகைக் காற்றினால் அவர்களுக்கு வேத சக்தியைப் பெருமளவு பெற்றுத் தந்தார். இவ்விடத்தில் கிட்டிய மார்க்கப் பிறவி தீர்க்க தரிசனத்தின் பலனாக நான்கு வேதசக்திகள் மீண்டும் மறைபொருளாயின. எனவே இவ்விடத்தில் ஈஸ்வர வருட கார்த்திகை தீபத்தன்று நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு முறை திருஅண்ணாமலையைத் துதித்து தரிசிக்க வேண்டும். வடமொழி, தமிழ்மறைகள் இரண்டுமே இறைவனின் இரு கண்களாகும். எனவே இருவிழிகளையும் நன்கு விரித்து இறைவனை மலையாக தரிசித்திடுக! மார்க்கப் பிறவி தரிசனங்களோடு நாயுருவிச் செடியால் தலையை மூன்று முறை சுற்றி எவர் காலிலும் படாமல் அதனைத் தூக்கி எறிந்திட பில்லி, சூன்ய, ஏவல் தகடுகள்/ வைப்புகளின் துன்பங்கள் தீரும். இவ்வாறாக இல்லங்களிலும் வியாபாரத்திலும் எதிர்களால் ஏற்படுகின்ற பில்லி, சூன்யம், காத்து, கறுப்புத் துன்பங்களைத் தீர்க்கும் தரிசனமிது! பில்லி, ஏவலாம் ஏற்படும் மனோ பீதிகளையும், மனக்கோளாறுகளையும் நீக்க வல்லதாகும்.
ஸ்ரீதைல லக்ஷ்மி தீப தரிசனம்
ஒரு யுகத்தில், ஐஸ்வர்யத்தைத் தராமையால் ஸ்ரீலக்ஷ்மிதேவி மீது கோபம் கொண்ட அசுரர்கள் ஸ்ரீலக்ஷ்மி லோகத்தைத் தாக்க முயன்றிட, தேவி வந்து தைல எண்ணெய்த் தீபமாய் மறைந்து தவம் செய்தாள். இத்தைல தீபமே மிக்க அழகுடன் நகர்ந்து, நகர்ந்து கிரிவலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரம் அருகே தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் மூலிகைத் தைலங்கள் கூடிய அகல் விளக்கு தீபங்களை ஏற்றிக் கைகளில் விளக்குகளைத் தாங்கி அகல் தீபத்தின் ஊடே திருஅண்ணாமலையை தரிசித்திட இல்லறப் பெண்களுக்கு அளப்பரிய இறை சக்திகளைப் பெற்றுத் தரும். தீர்க்க மாங்கல்ய சக்தி கிட்டும். ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும். பெண்கள் கலியுகக் காமுகர்களிடமிருந்து காக்கப் பெற்றுக் கற்பில் சிறந்து புனிதமுடன் வாழ்வர். இல்லற அமைதி பெருகும்.
அஷ்டநேத்ர தீப தரிசனம் :-
சலிப்பு, கவலை, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, வருத்தம் போன்றவற்றால் பலருக்கு வேலைகளில் இடர்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான். சுயநல எண்ணங்களையும் அழித்து, தியாக மனப்பான்மையைத் தருவதே அஷ்டநேத்ர தீப தரிசனம் ஆகும். கிரிவலப் பாதையில் பிருதிவி நந்தியிலிருந்து திருஅண்ணாமலையாரைத் துதிக்கையில் கிட்டும் தரிசனம். ஸ்ரீபிரம்ம மூர்த்தி தம்முடைய நான்கு சிரசுகளின் எட்டுக் கண்களால் ஒரே சமயத்தில் பெற்ற அபூர்வமான தரிசனமும் ஆகும். வேறு எந்த தெய்வமூர்த்திக்கும் கிட்டாத அற்புத தரிசனம்!  தம்முடைய இல்லங்களிலும், வியாபார இடங்களிலும் உள்ள தோஷங்களுக்கும் அஷ்ட திக்கு பால மூர்த்திகளை முறையாக வழிபடாததற்குமான தோஷங்களுக்கான பிராயச்சித்தம் தருவதாகும். இதனால் வேலையிலும் தொழிலிலும் சலிப்பு ஏற்படாது.
எண்குண பஞ்ச்ர தீப லிங்க முக தரிசனம்
சுதந்திரமற்றவன், துயர் உடலன், செயற்கை உணர்வினன், சிறுமை குணத்தான், கட்டுடையவன், கோளன், தொல்லையுடையவன், மலப்பற்றுடலன் என்ற எட்டுவிதமான குணங்கள் மனிதனுக்கு உண்டு. இவற்றை விலக்கினால் தான் ஆன்மநேய மனிதனாகப் பிரகாசிக்க முடியும். கிரிவலப்பாதையில் அப்பு நந்தியின் கொம்புகளிடையே திருஅண்ணாமலையை தரிசித்தால் கிட்டிடும் அதி அற்புத தரிசனம்! IAS, IPS,  நீதிபதிகள் போன்ற உயர் அதிகாரிகளின் அலுவலக மற்றும் வேலை மாற்றத் துன்பங்களுக்குத் தக்க தீர்வை அளிக்க வல்லது. ஏனையோர்க்குத் தக்க உயர் பதவிகளை நியாயமான முறையில் பெற்றுத் தரும்.
கவிஞ்சல தீப லிங்க முக தரிசனம் :-
அலுவலகப் பணி ஆற்றுகையிலும் வெளிச் செல்கையிலும், வெளியூர்ப் பயணங்களிலும் இராகுகாலம், எமகண்டம், வார சூலைகளைக் கணித்துச் செயலாற்ற முடியாமற் போவதினால்தான் நாம் பலவிதத் துன்பங்களுக்கு ஆளாகின்றோம். ஒருமுறை கார்த்திகை தீப தரிசன கிரிவலத்தில் இத்தரிசனத்தைப் பெற்றிட வருடம் முழுதும் நாள், கிழமை பார்க்காது செய்கின்ற பிராயணங்களுக்கு ஓரளவு பரிகாரம் கிட்டும். ஈஸ்வர ஆண்டில் திருஅண்ணாமலை கிரிவலத்தில் தேயு நந்தியின் கொம்புகளுக்கிடையில் அண்ணாமலையாரை தரிசித்திட இதுவே கவிஞ்சல தீப லிங்கமுக தரிசனம்! திருமணங்கள், குறிப்பாக தாலிகட்டும் வைபவம் கோயிலில் இறைவனின் சந்நதி முன் நிகழ்தல் வேண்டும். கல்யாணச் சத்திரங்களில் உள்ள கட்டிட தோஷங்களும் எதிர்வினை சக்திகளும் தம்பதிகளைச் சூழும். திருமண மந்திரங்களை ஓதுதலிலும் ஹோமத்திலும் திருமண நேரத்திலும் ஏற்படும் குறைபாடுகளுக்குக் கோயிலில் திருமணத்தை நிகழ்த்துதல் தான் தக்க பிராயச்சித்தமாக அமைவதோடு நல்ல தேவதா மூர்த்திகளின் ஆசியோடு ஆலய இறைமூர்த்திகளின் அனுக்ரஹத்தையும் பெற்றுத் தருகிறது. நல்ல நேரத்தைக் கடைபிடிக்க இயலாமைக்கான பிராயச்சித்தமாக இன்று தேயு நந்தியிலிருந்து பெறும் கவிஞ்சல தீபலிங்க முக தரிசனம் உதவுகிறது. இத்தரிசனத்துடன் மங்கள ஸுக்தத்தை ஜபிக்க வேண்டும் அல்லது இந்திரா போற்றி! இறைவா போற்றி! இனிதுன் இணையடி போற்றி! போற்றி!! என்று துதித்திடுக.
யட்ச தீப தரிசனம் :-
பொதுவாக வசிக்கும் இடமானது கிழக்கே தாழ்ந்து மேற்கே உயர்ந்தும் இருந்தால் அது காமதேனு வீதி என்றும் அதில் வசிப்போர் யட்சவாசிகளென்றும் பெயர் பெறுகின்றனர்.. இத்தகையோர் வாயு நந்தியிடத்திலிருந்து அண்ணாமலையாரை தரிசித்திட யட்ச தீப தரிசனமாகின்றது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தரவல்லது! நிறைய ஊதுபத்திகளை ஏற்றி மணங்கமழும் தூபப் புகையினூடே திருஅண்ணாமலையை தரிசித்தல் மிகவும் சிறப்புடையது. சிமெண்ட், குழாய் போன்ற கட்டிடப் பொருட்களில் தொழில் செய்வோர்களின் / பணிபுரிவோர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் தரிசனம். பல்வேறு தடங்கல்களால் வீடு வாங்கிட/ கட்டிட இயலாதோர்க்கு இருக்க நல்லிடம் விளங்க அருள்பாலிக்கும் தரிசனம்! எலக்ட்ரானிக்ஸ், கோயில் நிர்வாகம், மின்சாரம், வருவாய்த் துறை, காட்டு இலாக்காத் துறையினருக்கும் நன்மைகளைத் தரும்.
சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்
நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமப் பகுதியிலிருந்து மலையை தரிசித்திட முன் மலைப்பகுதி அம்பிகையாகவும் பின்னால் ஈஸ்வரனும் தோன்றுகின்ற அற்புதமான சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்! ஈஸ்வர வருடத்தில் கார்த்திகை தீபத்துடன் தரிசித்திட மிகச் சிறப்புடன் காரணோதக தரிசனம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்று அருள்பாலிக்கின்றது. வேலையில்லாத் துன்பங்கள் நீங்கிடவும் திருமணத் தடங்கல்கள் அகன்றிடவும், கர்பக் குற்றங்கள் நிவர்த்தியடையவும், குடும்பப் பிரச்னைகள் தீரவும் இத்தரிசனம் உதவுகின்றது. ஜவுளி, தங்க, வைர வியாபாரிகளுக்கும்  வருமான வரி, விற்பனை வரி மற்றும் வங்கித் துறைகளில் உள்ளோர்க்கு இத்தரிசனத்தினால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
க்ஷீரோதக சிவ தீப தரிசனம் :
நம் ஆஸ்ரமத்தை அடுத்து அதிகார மண்டபத்திலிருந்து திருஅண்ணாமலையாரை நோக்கி வணங்கிடக் கிட்டும் அற்புத தரிசனமே க்ஷீரோதக சிவ தீப தரிசனம்! புஷ்பம், காய்கறிகள், சமையல் தொழில், இசை, அழகுக்கலை, திருமணக் கூட அலங்கரித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்க்கு சிறப்புகளைத் தரும் தரிசனம்!
கர்த்தம முனி தீப தரிசனம் :
ஸ்ரீஈசான்ய சித்தர் மடத்திலிருந்து கிட்டுகின்ற திருஅண்ணாமலை ஜோதி தீப தரிசனமிதுவே! பல சித்தர்களுடைய சூட்சும ஜீவ சமாதிகள் இப்பகுதியில் நிறைந்திருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த தரிசனம்! நீண்ட கால முறையான ஏக்கங்களை நிவர்த்தி செய்யும் தரிசனம்!

ஸ்ரீஅங்கப்பிரதட்சிண அண்ணாமலை
சுவாமிகள் ஜீவாலயம்

சந்திர புஷ்டி தீப தரிசனம் :-
அடுத்து ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்திலிருந்து பெறுகின்ற தரிசனம். இதனருகில் தான் அங்கபிரதட்சணம் ஸ்ரீஅண்ணாமலை சுவாமிகளின் ஜீவாலயம் உள்ளது. மாவுப் பொருட்கள் பாத்திரங்கள், தானியங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்போர்க்கு சிறப்பைத் தரும் தரிசனம்.
கர்போதக சிவ தீப தரிசனம் :- ஈஸ்வர ஆண்டின் கார்த்திகை தீப தரிசன கிரிவலத்தின் நிறைவாக ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் ஆலயத்திலிருந்து கிட்டுகின்ற அண்ணாமலை தரிசனமே கர்போதக சிவதீப தரிசனமாகும். நம்முடைய ஆதி முன்னோர்களே 14 மனுக்கள் ஆவர். ஒவ்வொரு ஈஸ்வர ஆண்டும் 14 மனுக்களும் ஒன்றாக திருஅண்ணாமலை தீபத்தைத் தரிசனஞ் செய்து அருணாசல கிரிவலத்தை மேற்கொள்கின்றனர். நம்முடைய தவறுகளை நாமே உணர்ந்து தெரிந்து, திருந்தி நல்வாழ்வு வாழ அருள்பாலிக்கும் திவ்யமான தரிசனம். வாழ்வில் ஒருமுறையே கிட்டுவது! இதனைத் தவறவிடலாமா? இன்னும் எத்தனையோ அற்புத தரிசன முறைகள் உண்டு! தக்க சற்குருவை நாடி அறிந்திடுக! இவ்வாறாக ஈஸ்வர ஆண்டு கார்த்திகை தீப தரிசனப் பலன்களினால் நம் மானுடப் பிறவித் தளையிலிருந்து விடுபடுவதற்கான நல்வழிகள் கிட்டுகின்றன. இவ்வரிய தெய்வீக வாய்ப்பினை நழுவ விடாது நன்முறையில் சித்புருஷர்கள் அருளியபடி திருஅண்ணாமலை கிரிவலத்தை மேற்கொண்டிட வேண்டுகிறோம்..
தேவதீபம் காணீரோ!
வரும் ஈஸ்வர வருட கார்த்திகை தீப கிரிவலம் மிகவும் மகத்வம் வாய்ந்ததாகும். தெய்வாவதாரங்களும், தேவாதி தேவமூர்த்திகளும் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் கூடும் நாள்! ஈஸ்வர வருடத்தின் புகழ் மிக்க நாள்! ஈஸ்வரனுக்குரிய தீபப் பெருநாள்! கார்த்திகை தீபத்தின் முதல் நாள் பரணி தீப கிரிவலம் என்றும், தீபத்தன்று கார்த்திகை தீப கிரிவலம் என்றும், மூன்றாம் நாள் விஷ்ணு தீப கிரிவலம் என்றும் நான்காம் நாள் சரண தீப கிரிவலம் என்றும் பெயர் கொண்டுள்ளன. இவ்வாறாக ஒரு மனிதன் திருஅண்ணாமலையில் ஏழு, எட்டு, ஒன்பது நாட்களென எத்தனை நாள் மலை தீபதரிசனத்தை தரிசிக்கின்றானோ அந்த அளவிற்கு அவர் உடலில் தீப சக்தி சேர்கின்றது. இறை தரிசனம் பெறவில்லை என்று பலரும் ஏங்குகின்றார்களே, அவர்களுக்கெனத்தான் இறைவன் ஜோதியாகவே திருஅண்ணாமலையில் காட்சி தருகின்றான்!
எண்ணெய், கற்பூரம் கொண்டுதானே மலையில், தீபம் ஏற்றப்படுகின்றது, அது இறை ஜோதியாகுமா? உண்மையில் கார்த்திகை தீபத்தன்று மனிதப் பிரயத்னமாக ஜோதி ஏற்றப்படுவதற்கு முன்னரேயே தேவாதி தேவர்களால் ஒரு காரண தீபம் ஏற்றப்படுகின்றது. மஹான்களும், யோகியர்க்கும் உத்தம நிலையுடைய மனிதர்களுக்குமே இது காட்சியளிக்கும். இதில் மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த தேவ தீபத்தை தரிசிக்கும் சக்தியை ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள் பெற்றுள்ளன! தீபமேற்றப்படும் முன் ஆடு, மாடு, கோழிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இதை உணர்ந்திடலாம். தேவ தீபத்துடன் தான் நம்முடைய கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகின்றது. எனவே எப்பாடுபட்டேனும் கார்த்திகை தீபத்திற்கு முந்தைய பரணி தீப தரிசனம் முதல் தீப தரிசனம் கிட்டுகின்ற நாட்களிலெல்லாம் கிரிவலத்தைத் தவற விடாதீர்கள். வெளியூரில்  இருப்பினும் கூட மாலையில் அலுவலகத்திலிருந்து நேரே திருஅண்ணாமலைக்கு வந்து தினசரி ஜோதி தரிசனத்துடன் இரவிலேயே கிரிவலமும் வந்தி விடியற்காலையில் புற்ப்பட்டு ஊருக்கு வந்திடலாம். தற்போது கலியுக நியதியாகப் பத்து, பன்னிரண்டு நாட்களுக்குத்தான் ஜோதி தரிசனம் கிட்டுகின்றது. எனவே பணச் செலவையும் உடல் அசதியையும் பொருட்படுத்தாது அனைத்து தீப தரிசனங்களோடு கிரிவலம் வந்து ஈஸ்வர ஆண்டில் வாழ்நாளில் பெறற்கரிய பாக்யங்களைப் பெற்றிடுவீர்களாக!

நித்ய கர்ம நிவாரணி சாந்தி – டிசம்பர் 1997

நாள்

 நிவாரண முறை

சாந்தம் தரும் பலன்கள்

1.12.1997

கங்கை நீர் தானம்

உயரதிகாரிகளின் அலுவலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு.

2.12.1997

தோல் கருவி வித்வான்களுக்கு உதவி

பணத் தட்டுப்பாடு நீங்கும்.

3.12.1997

விசேஷ பாதுகாப்புத் துறையினர் வயதானோர்க்குப் பாத பூஜை செய்திட

எதிர்வரும் அவமானங்கள் நீங்கும.

4.12.1997

ஏழைகளுக்குப் பழ தானங்கள்

நல்ல செய்தி தேடி வரும்.

5.12.1997

ஏழை ஆசிரியர்களுக்கு உதவி

தாயின் ஆசி கிட்டும்.

6.12.1997

ரசாயனத் துறையினர் பெருமாளுக்குப் புளியோதரை நைவேத்யம் செய்திட

சிறு விபத்துக்களிலிருந்து காப்பு.

7.12.1997

ஏழை விவசாயிக்கு ஏர் தானம்

கடன் தொல்லைகள் தணியும்.

8.12.1997

கரும்பு தானம்

கணவனுக்குக் கோபத்தால் வரும் துன்பங்கள் தணியும்.

9.12.1997

லாரி டிரைவர்கள் இன்று பைரவருக்கு முந்திரி மாலை சார்த்தி  வணங்கிடுக..

இன்று சாலையில் மிகுந்த கவனம் தேவை..!

10.12.1997

பெருமாள் கோயிலில் ஏழைகட்கு விசிறி தானம்

தக்க வேலை மாற்றங்கள் கிட்டும்.

11.12.1997

சிவன் கோயிலில் கிழங்கு வகை அன்னதானம்

ஆழ்கிணறு வேலைத் தடங்கல்கள் தீரும்

12.12.1997

இன்று கிரிவலம் வந்து ஒரு லட்சம் பேருக்கு (சத்சங்க பணியாக) அன்னதானமிட ...

சித்தரிகளின் தரிசனமும் ஆசியும் கிட்டும் – கார்த்திகை தீப நாள்!

13.12.1997

நாய்களுக்குப் பிஸ்கட் (பொரை ரொட்டி) அளித்தல்

வீட்டில் சண்டைகள் தணியும்.

14.12.1997

எளிமையாக விளம்பரமில்லாது வாழும் தியாகிகளுக்குரிய உதவிகள்..

நல்ல வாகனம் கிட்டும்.

15.12.1997

காயடிக்கப்பட்ட (castrated) காளைகளுக்கு அகத்திக்கீரை அளித்தல்

மானம், மரியாதை காக்கப்படும்..

16.12.1997

காவி கட்டுகின்ற தெய்வீகத் தகுதி வாய்ந்தோருக்கான உதவிகள்

 உணர்ச்சி பூர்வக் கொந்தளிப்புத் துன்பங்கள் தீரும்.

17.12.1997

ஆழத்து விநாயகர் (விருத்தாசலம்) சந்நதியில் ஏழைக் குழந்தைகளுக்குப் பாசந்தி தானம்

எதிர்பாராத பண உதவி கிட்டும்!

18.12.1997

குறைந்தது ஓராண்டு பொய் சொல்லாது வாழ்ந்தோர்க்குப் பவளமணி தானம்

 கடுமையான நோய்கள் தணியும்.

19.12.1997

கத்தி சாணை தீட்டும் ஏழைகளுக்கு உதவி

இல்லற , அலுவலகப் பகைமை தீரும்.

20.12.1997

மூன்று வருடம் விடாது (பிராயசித்த அர்க்யம் இல்லாது) முறையான நேரத்தில் சந்தி பூஜைகள் செய்தோர்க்கு ஸ்வர்ண (தங்க) தானம்

வெளிநாடு வேலை வாய்ப்பு தீரும்.

21.12.1997

தாய் தந்தை சேவையில் முழுநாளையும்

அர்ப்பணித்திடுக !

22.12.1997

நல்லதங்காள் தேவியைப் பூஜித்து அன்னதானம்

கணவனுக்கு வரும் ஆபத்துகள் தீரும்.

23.12.1997

ஆயிரத்தம்மனுக்குத் தேங்காய்கள் படைத்து தானம்

வாகன அதிபர்கள் நலம் பெறுவர்.

24.12.1997

முருகன் கோயிலில் மூன்று காய்கறி உணவு தானம்

போக்குவரத்துத் துறை (RTO etc..) அதிகாரிகளின் துன்பங்கள் தணியும்.

25.12.1997

மதபேதமின்றி ஏழைகட்கு வெட்டிவேர் மூலிகை பானகம் தானம்

மனம் அமைதி பெறும்.

26.12.1997

மலைக் கோயில் கிரிவலம்

ஆசிரியைகள் நலம் அடைவர்

27.12.1997

 இரயில் பாதுகாப்புத் துறையினர், அலுவலர்கள் கவனமாக ரயிலில் ஏறிடுக!

ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் செய்திடுக!

28.12.1997

80 பிறைகளைத் தொடர்ந்து தரிசித்த பெரியோருக்குப் பாதபூஜை

விவாகரத்தில்லா இனிய திருமண வாழ்வு அமையும்.

29.12.1997

கணக்குத் துறையினர் (CA etc..) பெருமாள் கோயிலில் அடை தானம்

எதிர்பாராத பண வரவு

30.12.1997

ஓடக்காரர்களுக்கு (Boatmen) உதவி

சிறுநீரக நோய்களின் கொடுமை தணியும்

31.12.1997

பேராசை மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கமில்லாத, தீர்க்க தரிசனம் மற்றும் பக்தியுடைய ஜோதிடர்க்குப் பாத பூஜை

பகைவர்கள் அன்புடன் நண்பர்களாவர்.

ஆஸ்ரமச் சேவைச் செய்தி..!
தீபாவளிப் பண்டிகையை சாதி பேதமின்றி ஏழை எளியோரும் கொண்டாடிடும் வண்ணம் நம் ஆஸ்ரமத்தின் சார்பாக திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் உள்ள குடிசைவாழ் ஏழை மக்களுக்காக இயன்ற வரையில் கங்கை நீர், சீயக்காய், நல்லெண்ணெய், இனிப்பு அடங்கிய சுமார் 10000 பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டன.. எங்களுக்கும் இந்த அரிய வாய்ப்பை அளித்திருக்கலாமே என்று பல வாசகர்கள் முறையிட்டுள்ளனர். அடுத்த முறை இறையருளால் வாசகர்கட்கும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக தீபாவளிக்கான தைல தானத்தை அறிவித்து நல்வாய்ப்பளிக்க முயற்சி எடுக்கப்படும்.
திருஅண்ணாமலை – கார்த்திகை தீபப் பெருவிழாவில் மகத்தான அன்னதானம்!
ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் சித்தர்கள் பாரம்பர்யத்தில் எவ்விதப் படாடோபமின்றிப் பல பாரம்பரியங்களில் பல்லாண்டுகளாகத் தொடந்து வரும் அன்னதான வைபவம்! 10000 பேருக்குத் திருஅண்ணாமலையில் அன்னமிட்டால், ஒரு சித்தரே நேரில் வந்து அன்னம் பெற்று அருள்பாலிக்கும் அற்புதம்! அடியார்களே ஒன்று கூடி அனைத்து அன்னதானப் பணிகளையும் சேவைகளையும் ஆற்றும் பாங்கு!
வ்யோமநாத சித்தர், மலப்புழுசித்தர், குப்பைச் சித்தர், சுருசோதன மஹரிஷி, ரிஷிசுமந்தான் ரிஷி, சடையப்பசித்தர், ஜடாமுனிச் சித்தர் போன்ற சித்புருஷர்களைப் போல் ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள், இறைப் பெருஞ்ஜோதியின் இறைத் தூதுவர் போல் என்றும் வாழும் ஏகாந்த ஜோதி! காலத்தைக் கடந்த கற்பக தீபம்! அவர்தம் திருவடிச் சிஷ்யராம் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், குருவின் ஆணையாக, கடந்த பல ஆண்டுகளாகத் திருஅண்ணாமலையில் மாதாந்திரப் பௌர்ணமி தினத்திலும் கார்த்திகை தீபப்  பெருவிழாவிலும் அன்னதான உற்சவத்தை நடத்தி வருகின்றார்கள்.
திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பிரமோற்சவமே கார்த்திகை தீபப் பெருவிழாவின் அன்னதானமாகும். கோடானுகோடி சித்தர்கள் கூடுகின்ற குதூகலத் திருவிழா! பலகோடி சித்தர்களும், மஹரிஷிகளும், யோகியரும், ஞானியரும் மனித ரூபத்தில் அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற ஆனந்தப் பெருவிழாவே கார்த்திகை தீபப் பெருவிழா! லட்சோபலட்ச மக்கள் கிரிவலம் வருகையில் அவர்களுடைய உடலில் அவரவருடைய பல்லாயிரம் தலைமுறையைச் சார்ந்த பித்ருக்கள் சூட்சுமமாகப் புகுந்து அவர்களும் கிரிவலம் வரும் பேரருளைப் பெறுகின்றனர். எனவே கிரிவலம் வரும் ஓர் அடியாருக்கு உணவிட்டால் அவர்தம் தேகத்தில் பெருஞ் சுடராய்ப் புகுந்து நிற்கும் பித்ரு தேவர்களும் அதனை இறைப் பிரசாதமாக ஏற்று நம்மை ஆசிர்வதிக்கின்றனர். ஏன், உங்களுடைய முன்பிறவிகளின் கர்மவினை பாக்கியாக உங்களுடைய பித்ருக்களுக்கே அன்னமிடுகின்ற பாக்யம் கிடைத்தற்கரிய பேறு அல்லவா! எங்களுடைய ஆஸ்ரம அன்னதானம் பல தனிச் சிறப்புகளைக் கொண்டது!
சமையல் பணி, பாத்திரங்கள் கழுவுதல், ஆஸ்ரமத் துப்புறவுப் பணி போன்ற சேவைகளுக்கு எவரையும் அமர்த்திடாது அடியார்களே ஜாதி, மத, இன, குல பேதமின்றித் தங்கள் குடும்பத்தினர்க்ளுடன் அனைத்து விதமான பணிகளையும் சற்குருவின் ஆணையாக ஏற்று பதவி, அந்தஸ்து, கௌரவம் பாராது மனப்பூர்வமாக அன்னதான இறைப்பணிகளில் ஈடுபடுகின்றனர்..ஒரு புறம் அபிஷேக ஆராதனைகள்! மறுபுறம் ஹோம, யாக வேள்விகள்! பிறிதோரிடத்தில் நாம சங்கீர்த்தனம்! மற்றோரிடத்தில் வடமொழி / தமிழ்மறைப் பாராயணம்- இத்தகைய தெய்வீகச் சூழ்நிலையில் உத்தம சற்குருநாதரின் அருட்கட்டளைக்கிணங்க, இறையருட்சுரக்கும் புனிதமான கோட்பாடுகளுடன் அன்னம் தயாராகிறது! ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அறியாதோர்க்காக ஸ்ரீகாயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்டுத் தயாராகும் உணவு! அன்னதானம் பெறுவோர்க்கும் ஸ்ரீகாயத்ரீ சக்தி எளிதில் கிட்டுகிறது!
இத்தகைய மகத்தான அன்னதான வைபவத்தை நன்கு நடத்திட ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாசகர்களும், இறைச் செல்வர்களும், பக்திமான்களும், அடியார்களும், மனித நேயப் பண்பாளர்களும் பொருளுதவி தந்து உதவிடும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
கூடா நாட்கள் (பிரபலாரிஷ்ட யோக நாட்கள்)
கரிநாட்கள், எம கண்டம் போன்று கூடா நாட்கள் எனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களில் அனைத்து சுபகாரியங்கள் மட்டுமன்றிக் கடன் வாங்குதல்/ கொடுத்தல், பிரயாணம் போன்று அனைத்துக் காரியங்களையும் தவிர்த்தல் வேண்டும். கூடாநாட்கள் பிரபலாரிஷ்ட யோக நாட்கள் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பர், புனிதமான நேரம் பற்றிய விழிப்புணர்ச்சிக்காக, நல்ல நேரம் செய்வதை நாலு பேர் செய்ய மாட்டார்கள் என்று முதுமொழியை நினைவூட்டும் வண்ணம் மாதந்தோறும் இத்தகைய விளக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. கூடாநாள் : டிசம்பர் மாதம் 30.12.1997 அன்று இரவு 8.08 முதல் இரவு முழுவதும் கூடாநாள் அமைகின்றது! இன்று நற்காரியங்களைத் தவிர்த்திடுக..!
விசேஷ தினங்கள் – டிசம்பர் 1997
11.12.1997 – பரணி தீபம்
12.12.1997 – திருஅண்ணாமலை தீபம்
13.12.1997 – பௌர்ணமி – இன்று கிரிவலம் சிறப்புடையது
16.12.1997 – மார்கழி மாதத் துவக்கம்
27.12.1997 – சனிப் பிரதோஷம்
29.12.1997 – பிரதட்சிண சோமவார (திங்கள்) அமாவாசை – இன்று மௌன விரமும் அரசமரத்தை அடிப்பிரதட்சிணமாக வருதலும் புனிதமானது.
குறிப்பு : திருக்கணித முறைப்படி 13.12.1997 சனிக்கிழமை இரவு 9.46 முதல் 14.12.1997 ஞாயிறு இரவு 8.07 வரை பௌர்ணமி திதி அமைந்துள்ளது.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam