அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள் ...
வெங்கடராமன் என்ற அந்தப் பள்ளிச் சிறுவனை, சற்குருவாகத் தடுத்தாட்கொண்ட சிவகுரு மங்கள கந்தர்வா என்று அன்புடன் போற்றப்படும் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்தர் சுவாமிகள் இளம் பிராயத்திலேயே எண்ணற்ற திருப்பணிகளைச் செய்யும் பாக்யத்தை அவனுக்கு அளித்து தெய்வீகப் பாதையில் இம்மியும் நழுவாமல் இட்டுச் சென்றார். அவற்றில் பெறற்கரிய இறைத் திருப்பணிகளும் பல உண்டு. அவை யாவும் கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் கிடைத்தற்கரியன!
பல ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்து வசதிகள் நன்கு அமையாத நிலையிலும், மானஸரோவர், திருக்கயிலாய மலைச் சுற்று, கேதார்நாத், பத்ரிநாத் என பல அபூர்வமான திருத்தல யாத்திரைகள் பலவற்றை சற்குருவுடன் கூடச் சேர்ந்து அனுபூதியாகப் பெறும் தெய்வீக பாக்கியத்தையும் பெற்றார். பல மூலஸ்தான மூர்த்திகளுக்குத் தம் கைகளாலேயே அஷ்டபந்தன மருந்தை இடித்துச் சாற்றுதல், முறையான விரதங்களுடன் பெருவழியில் சபரிமலைக்குப் பாதயாத்திரை இடையில் கருங்குறிச்சி போன்ற அற்புத மூலிகைக்குரிய தேவதைகளின் அற்புத தரிசனங்கள், ஆங்காங்கே அடர்ந்த காடுகளுக்குள்  அரிய சித்புருஷர்களின் தரிசனங்கள், பல ஆலயங்களில் உழவாரத் திருப்பணிகள், இவ்வாறாக சிறுவயதிலேயே இறைப்பணிகளினூடே பெறற்கரிய பக்தி நிலையில் திளைக்கும் பெரும் பாக்யம் கிட்டியமையால் தான் இன்று குருவருளும் பூத்து நம் சற்குருவாய்க் கனிந்து அருள்வழி காட்டும் அண்ணலாய்ப் பரிணமிக்கின்றார் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன். அவருடைய குருகுல வாச அனுபூதிகளே அடிமை கண்ட ஆனந்தமாய் மலர்ந்து நமக்கு நல்வழி காட்டுவதுடன் கலியுகத்திலும் இந்த யுக நியதிக்கேற்ப, குருகுலவாசம் உண்டு என்ற தெய்வீகப் பேருண்மையையும் உணர்த்துகிறது, நிரூபிக்கின்றது.
உலகெங்கும் சித்புருஷர்களும், யோகியரும், சற்குருமார்களாக நிறைந்து உள்ளனர். நம் பாரத் திருநாட்டில்தான் இவர்களுடைய இறைவாசம் மிகுந்துள்ளது. அதுவும் நம்முடைய தெய்வத் தமிழ்நாட்டில் தான் இவ்விறைத் தூதுவர்களின் சஞ்சாரம் நன்கு பரிமளிக்கின்றது. எனவே, சற்குருவைத் தந்தருளுமாறு இன்றே இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்குங்கள்! வேறு எவ்விதமான பிரார்த்தனையும் வேண்டியதில்லை! காரணம், “சற்குருவைத் தா சர்வேஸ்வரா”, என்ற பிரார்த்தனைக்குள் அனைத்தும் அடங்கி விடுகின்றது. இதுவே அடிமை கண்ட ஆனந்தம் புகட்டும் தலையாய பாடங்களுள் ஒன்றாகும்.
நாடி, தேடி, ஓடி.. ... கூடியதே! அக்னி கச்ச சித்தரை எங்கு தேடுவது?
பிராட்வேயில் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு அக்னி கச்ச சித்தரைப் பற்றிய நினைவே மறந்தது போலாயிற்று!
“ஏங்க, திருக்கச்சூர்ல வியாதிய நீக்கற அபூர்வமான மண்ணு ஒரு கோயில்ல இருக்காமே, அந்த கோயிலுக்கு எப்படிப் போறது?”  .... யாரோ ஒருவர் சற்றுத் தொலைவில் கேட்டது போலிருக்கவே, சிறுவன் அங்கு விரைந்தான்.!
ஆம், அவனுக்கு நினைவுக்கு வந்துவிட்டது. சென்னை  சிங்கப் பெருமாள் கோயிலிருந்து ரயில்வே கேட்டைத் தாண்டிச் சென்றால் திருக்கச்சூர் என்ற சிறு குன்று சிவத்தலம் இருக்கிறது.. இங்கு இரண்டு கோயில்கள். பல ஆண்டுகளுக்கு முன் பெரியவருடன் இத்திருக்கோயிலில் உழவாரத் திருப்பணி செய்த ஞாபகம் வந்து விட்டது சிறுவனுக்கு!  அப்புறம் என்ன.. நடந்ததை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்! அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறுவன் திருக்கச்சூர் தாழக் கோயிலில் சிறுவன் பிரசன்னமாகி விட்டான். கேள்வி கேட்டவரின் வண்டியில் தொற்றிக் கொண்டு! மார்கழி மாதம் ஆகையால் அக்காலத்தில் விடியற்காலை இரண்டு மணிக்கே நாதஸ்வரம், வாயிலில் வண்ணக் கோலங்களுடன் கோயில் பெரிதும் களை கட்டிவிட்டது. இக்கோயிலின் தூண் ஒன்றில் உறைகின்ற ஸ்ரீஅக்னி கச்ச சித்தரை தரிசித்தவுடன் தான் அவனுக்கு மனச்சுமை நீங்கியது. அல்ஸர், குடல்புண், குடல் சுழற்சி போன்ற வயிறு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கின்ற சித்த மகாபுருஷர்..
“ஆமாம், இந்த நள்ளிரவில் இந்த சித்தரை ஏன் வாத்யார் தரிசிக்கச் சொன்னா? அதற்கென்ன அவரசமோ!” கோயிலைப் பிரதட்சிணம் செய்துவிட்டு வெளிவந்த சிறுவன் கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி சிங்கப் பெருமாள் கோயில் ஜி.டி ரோடுக்கு வந்தான். நல்ல தூரம்.....   
எங்கும் சாப்பிடாமையால் பசி கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது! பெரியவர் ஏன் சிறுவனை இப்படிப் படுத்துகின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? சிறுவனுக்கு அடுத்த கிலி பிடித்துக் கொண்டது..
“காலைல மூணு மணிக்கெல்லாம் என்ன பார்க்க வந்துடுடா!”
ஆமாம் நள்ளிரவில் எங்கிருந்து எங்கு செல்வது? திருக்கச்சூர் எங்கே? ராயபுரம் எங்கே? சொன்ன டயத்திற்குள் வராவிட்டால் சிறுவனுக்குக் கிடைக்கும் தண்டனையோ, சொல்லவே வேண்டாம்! சிறுவனுக்கு அழுகை தொண்டையை அடைத்து விம்மிப் புடைத்துக் கொண்டது!
“வாத்யார் ஏன் நம்மைப் பாடாய்ப் படுத்துகிறார்? எப்பவும் நம்மை வறுத்தெடுப்பதே இவருக்குப் பொழைப்பாகி விட்டது”, என்று மனதில் பெரியவரைக் கிட்டத்தட்ட வசையே பாடிவிட்டான். என்ன இருந்தாலும் பள்ளிச் சிறுவன் தானே!
“ஏண்டா கண்ணு, ரொம்ப நோகடிச்சுட்டேனில்ல.! ஏற்கனவே தூக்கக் கலக்கத்திலும் பசியின் பிடியிலும் வாடிய சிறுவனுக்கு இந்த பரிச்சயமான குரல் சற்றே எழுச்சியூட்டியது! உடல் அசதியில் சற்றே தலையைத் தூக்கினான்!
“ஆங் ...... வாத்யாரே”! சிங்கப் பெருமாள் கோயிலிருந்து சிங்கப்பூருக்குக் கேட்கும் வரை பெருங்குரல் கொடுத்துக் கொண்டே பெரியவரின் பாதங்களில் பாய்ந்தான், இல்லை, இல்லை சரணடைந்தான்! ஆம்... கோவணாண்டிப் பெரியவர் தான் அங்கு நின்று கொண்டிருந்தார்., நள்ளிரவில் எங்கிருந்து வந்தார், எங்கே சென்றார்? யாரறிவார்? இன்றுவரை, அதனை அன்றையச் சிறுவனும், இன்றைய குருமங்கள் கந்தர்வாவுமான ஸ்ரீவெங்கடராமன் கூட அறிந்ததில்லை! அறிந்தும் அறியாமலிக்கச் செய்து விட்டாரோ!
சிறுவனை அரவணைத்துக் கொண்ட பெரியவர், சற்று நேரம்தான் அந்த இறையருட்பிணைப்பைத் தந்தார்... அடுத்த நிமிடத்தில்.... விடுவிடென்று நடக்கலானார் பெரியவர்! அவர் பின்னால் வழக்கம் போல அரை டிராயரைப் பிடித்துக் கொண்டே ஓடலானான் சிறுவன். அன்றிரவு சிறுவன் சாப்பிடவில்லை. தூங்கவில்லையே என்ற எண்ணம் கூடப் பெரியவருக்குத் தோணவில்லையா என்ன? சோர்வுற்றவனாய், தூக்கம் கண்களில் நிரம்பி வழிய சிறுவன் மிகுந்த வேகத்துடன் அவரை நெருங்கத் தலைப்பட்டான். இரவில் எங்கும் சாப்பிடாமையால் நல்ல பசி வேறு! இதையெல்லாம் பார்க்கும் போது பெரியவர் அவனை ரொம்ப கொடுமைப் படுத்தியதாகத் தோன்றுகின்றதல்லவா!
“ஏண்டா! இந்த கிழவன் உன்னை ரொம்பப்படுத்தறான் இல்ல, சோறு, தண்ணி இல்லாம பட்டினி போட்டு கோயில், குளம்னு சுத்த வைக்கிறான் இல்ல?”
திடீரென்று வழியில் ஒரு கல்லின் மேல் அமர்ந்த பெரியவர் சிறுவனுடைய கைகளைப் பிடித்தவாறு ஏதேதோ கேட்கத் தொடங்கினார்.. சிறுவன் மௌனமாக நின்றான்.. களைப்புற்ற நிலையில் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. கண்களில் மட்டும் நீர் தாரையாக வழிந்து பெரியவரின் கைகளை நனைத்தது.
“இத பாருடா, அழுது, கிழுது பண்ணினாக்க நான் ரொம்பப் பரிதாபப் பட்டுடுவேன்னு நெனக்காதேடா! தெய்வீகத்துல அன்பு உண்டு.  கருணை உண்டு. ஆனால் போலித்தனமான பரிதாபத்துக்கு இங்க இடமில்லைடா! ”
“ஏன் சற்றும் அன்பில்லாமல் பேசுகின்றார்?”
சிறுவன் அசதியால், மனதினுள்ளும், உள்ளத்துள்ளும் புலம்பினான், அழுதான், பிதற்றினான்! சிறுவனுக்கு கிட்டத்தட்ட இந்த நினைப்பு நெஞ்சு வரை வந்து நனைந்து நின்றது. 
“இன்னிக்கு என்ன நட்சத்திரம்டா?” ஒருவேளை பேச்சை மாற்றுகிறாரோ .....
“ ம்..ம்ம்.ம்.... ஆயில்யம்.. செவ்வாய்க்கிழமை . தேய்பிறை..”
சிறுவன் கடகட வென்று சொல்லிவிட்டான்.. இல்லாவிட்டால் ஒவ்வொன்றாகக் கேட்டு பதில் சொல்லியாக வேண்டும்!
“சபாஷ், இப்படித்தாண்டா இருக்கணும், எள்ளுனா எண்ணெயா நிக்கணும்! ....ம் ... ம்...ம்..”
பெரியவர் ஏதோ வானத்தில் நிலாவைப் பார்த்தார். கைவிரல்களை ஏதேதோ விதங்களில், கோணங்களில் மடித்து, ஏதோ முத்திரை வைத்து ஸ்ரீசந்திர பகவானை தரிசித்தார்! திடீரென்று , அருகில் உள்ள வயல்காட்டில் இறங்கி ஏதோ மூலிகைய, கட்டுமந்திரம், விடுப்பு மந்திரம் சொல்லி, (இவையெல்லாம் பெரியவர் பின்னால் சொன்னது) எடுத்து வந்து சிறுவனின் வாயில் கசக்கிப் பிழிந்தார். அடுத்த நிமிடம்.. சிறுவனுக்குப் பசி பறந்தது, களைப்பு மறைந்தது, ஏதோ அறுசுவை உண்டாற்போல், வயிறும், மனமும் நிறைந்தது! பிறகென்ன? பெரியவர் வழக்கம் போல் விடுவிடு நடை! அடுத்த ஹால்ட் செங்கல்பட்டு சித்தி விநாயகர் சந்நதியில் தான்! சித்தர்களால் எதுதான் முடியாது?  ஆழ்ந்த நம்பிக்கை தான் எதனையும் பகுத்துத் தரும்...

தென்காசி மகாத்மியம் கோழம்பியம்

தென்காசி மகாத்மியத் தொடர் – 2 -திருக்கோழம்பியம்
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!
இன்று உலகில் காணப்படுகின்ற அனைத்து தெய்வ மூர்த்திகளுமே, முக்தியும், மோட்சமும் தரவல்லவர்கள் தாம். ஆனால் சாதாரண மனிதர்களாக நம்முடைய ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறுவதற்கான பிரார்த்தனைகளைத்தானே நாம் இறைவனிடம் செலுத்திக் கொண்டு வருகிறோம். எளிதில் முக்தியைத் தரவல்ல, கலியுகத்தின் பிரத்யட்ச முக்கிய மூர்த்திகளுள் தென்காசி ஸ்ரீவிசுவநாத லிங்க மூர்த்தியுமாவார். வாழ்க்கையில் நாம் எடுக்கின்ற அனைத்து நற்காரியங்களும், வெற்றியுடன் திகழ அருள்மிகு வடிவழகைத் தருகின்ற, அற்புத மூர்த்தி.

ஸ்ரீகோகிலேஸ்வரர் திருக்குழம்பியம்

சென்ற இதழின்படி நீடுரில் ஸ்ரீசோமநாதரை தரிசித்து விட்டீர்களல்லவா? அடுத்து இரண்டாவதாக நாம் தரிசிக்க இருப்பது, கும்பகோணம் அருகே திருக்கோழம்பியம் எனும் திருத்தலத்தில் அருள்பாலிக்கு ஸ்ரீகோகிலேஸ்வரர் ஆவார். நாம் எடுத்த காரியங்களுக்கு, நல்ல மனத்துணிவு இருந்தால் தான் எதையுமே, வெற்றிகரமாக சாதிக்க முடியும். வெறும் உடல் சக்தியை வைத்துக் கொண்டு, எதைத்தான சாதிக்க முடியும். எவ்வளவு தான் வலிமையான உடலை வைத்திருந்தாலும், கரப்பான் பூச்சிக்கும், நெடும் பல்லிக்கும், பாம்பிற்கும் அஞ்சி ஓடிவிட்டால் என்ன பயன்? எனவே எடுக்கும் காரியங்களை நன்முறையில் நிறைவேற்ற, வைராக்யமான மனத்துணிவு பெற, அதாவது உண்மையான மனத்தின்மையைப் பெறுவதற்கு, ஸ்ரீகோகிலேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
மனத்துணிவு எப்படி வரும்? வெற்றியைப் பெறக் கடும் உழைப்பு இருந்தால் தானே, மனத் துணிவு வரமுடியும்? உழைப்பின்றி ஒரு காரியமும் வெற்றி பெறாதே! உழைப்பு என்றால் உடலாலும், உள்ளத்தாலும், மனதாலும், நற்காரியத்தில் வலுவுடன் ஒன்றி இருப்பதாகும். மனத் துணிவு உழைப்பு இவை இருப்பினும், வருகின்ற சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்தினால் தானே வெற்றி கைகூடும். நல்ல சந்தர்ப்பம் வரும்போது நழுவ விட்டால் பின் எவ்வாறு தான் எத்தனையோ உழைப்பும், ஊக்கமும் இருந்தாலும் காரியத்தை நிறைவேற்ற முடியும்? மேலும், சந்தர்ப்பமும் எப்பொழுதும் வந்து நம் கதவைத் தட்டும் என்பதுமில்லை. அது தானாகவே வரும்போது அதற்காக நாம் தான் தயாராக இருந்து நன்முறையில் அந்த தெய்வீக சந்தர்ப்பத்தை நழுவ விடாது கைகொள்ள வேண்டும். நல்ல சந்தர்ப்பங்களோ, வாய்ப்புகளோ ஏற்படாவிட்டால் என் செய்வது? 

ஸ்ரீசௌந்திரநாயதி திருக்கோழம்பம்

நல்ல வாய்ப்புகள் தாமாக ஏற்படும் வரை தீவிர முயற்சி இன்றியமையாததாகும் நன்முயற்சியால் தான் சந்தர்ப்பம் வருகின்றதா இல்லையா என்பதை அறிய முடியும்.. திருக்கோழம்பியத்தில் அருள்பாலிகின்ற ஸ்ரீகோகிலேஸ்வரர், நற்காரியத்திற்கான வெற்றிக்குத் தேவையான, உடற்சக்தியையும், உழைப்பையும், நல்ல திறனையும், தக்க சந்தர்ப்பங்கள் கிட்டாவிடினும் கூட தேவையான மனத்துணிவும், அதற்கேற்றாற்போல் உழைப்பும் இருந்தால் தக்க நல்வாய்ப்பினை எளிதில் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு எழுகின்ற சந்தர்ப்பத்தை பற்றிப் பிடித்து, வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும். கும்பகோணம் அருகேயும் திருநீலக்குடி அருகிலும், எஸ்.புதூரின் பக்கத்திலும், நாரசிங்கம் பேட்டைக்கருகிலும் அமைந்துள்ள கோழம்பம் என்றும் வழங்கப்படும் திருக்கோழம்பியத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசௌந்திரவல்லி சமேத ஸ்ரீகோகிலேஸ்வரர் என்ற அற்புத லிங்கமூர்த்திதான் தக்க நல்வாய்ப்பையும், மனத்துணிவையும் தருகின்ற சிவலிங்க மூர்த்தி ஆவார். வாழ்வில் எத்துணையோ பிரச்னைகள் ஏற்படுகின்ற போது அவற்றை ஏற்பதற்கான மனத்துணிவு இல்லாமையால் தான் நாம் பெரிதும் அவதியுறுகிறோம். கோழையாகவும், அதைரியத்துடனும் இருந்தால் எந்த நற்காரியத்தைத் தான் நிறைவேற்ற இயலும்?
கலியுக நியதியாக தெய்வீகப் பணிகளை துவங்கும் போது தான் எண்ணற்ற துன்பமும், இடையூறுகளும் உண்டாகும். இவையாவும் எல்லாம் வல்ல இறைவனிடம் நம் நம்பிக்கை எந்த அளவு உள்ளது என்பதை சோதிக்கும் தன்மையே என்பதை முதலில் நாம் உணர வேண்டும். தளராத முயற்சிக்குப் பெயர் பெற்றதே குயில் பறவையாகும். எத்துணையோ துன்பங்களை எதிர்த்து நின்று, நற்காரியங்களைச் செய்யும் மனநிலை பெற்றது குயிலாகும். இக்குயில் முக்தி பெற்றத் தலமே திருக்கோழம்பியமாம். எனவே இத்திருத்தலத்தில் அவரவரின் ஜென்ம நட்சத்திர தினத்தன்றும், சனிக்கிழமை தோறும், ஸ்ரீகோகிலேஸ்வரருக்கு, கருநீலப் பட்டாடை சார்த்தி வழிபட்டு, ஏழைகட்கு நிறைய வஸ்திர தானம் செய்தலால், நல்ல மனத்துணிவும், மனத் திறமையும், தக்க நல்வாய்ப்புகளும் கிட்டும். வெற்றிக்கு வழிவகுக்கும் தென்காசி ஆலய தரிசனத்திற்கு முன்னான 12 திருத்தலங்களில் திருக்கோழம்பியம் ஸ்ரீகோகிலேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.

வாஸ்து நாள்

வாஸ்து நாள் அஸ்திவார பூஜைக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, சொந்த வீடு, கடை, பாக்டரி, நிலம், பழைய வீடு கட்டிடம் என அனைத்திற்குமே வாஸ்து நாளில் ஸ்ரீவாஸ்து பூஜையைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்..
பிரமாதி வருட ஆவணி மாதத்திற்குரிய ஸ்ரீவாஸ்து நாளாக 22.8.1999 (ஆவணி 6) ஞாயிற்றுக் கிழமை நாளானது மிகவும் சிறப்பாக அமைகின்றது. நாம் சென்ற இதழில் விளக்கியுள்ளது போல் ஸ்ரீவாஸ்து பூஜைக்குரிய சிறப்பான தலங்களுள் திருச்சி EB சாலையிலுள்ள ஸ்ரீபூலோகநாதர் சிவாலயமும் ஒன்றாகும். இத்தலத்தில் ஸ்ரீவாஸ்து நாளைக் கொண்டாட வேண்டிய வழிபாட்டு முறைகளை சென்ற இதழில் (ஜுலை 1999) மிகவும் விரிவாக அளித்துள்ளோம். ஸ்ரீபுவனேஸ்வரியாக அம்பாள் அவதாரம் கொண்ட போது, அம்பிகைக்கு பூலோகநாதராக தரிசனம் தந்து அருள்கொண்ட இடமே திருச்சி பூலோகநாதர் சிவாலயமாகும். எனவே ஸ்ரீபுவனேஸ்வரியே வழிபட்ட அதிஅற்புதத் தலமாக இச்சிவாலயம் விளங்குகிறது. ஸ்ரீவாஸ்து புருஷ தேவமூர்த்தியின் சக்திகள் அபரிமிதமாகப் பரிணமித்து மிளிர்கின்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
நாம் அடிக்கடி வலியுறுத்தி வருவது போல புதுக்கட்டிடங்கட்கான அஸ்திவார பூஜைக்குத் தான் ஸ்ரீவாஸ்து நாள் என எண்ணாமல், வாடகை வீட்டில் குடியிருப்பவர் உட்பட அனைத்து இல்லங்களிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் கொண்டாடப்பட வேண்டிய மிகவும் முக்கியமான பூமி பூஜையாக ஸ்ரீவாஸ்து நாள் அமைந்துள்ளது என்பதை மறவாதீர்கள்.. நமக்கு வீடு, வாசல், நிலபுலன் அமையவில்லையே என்று ஏங்குவோரும் பலர் உண்டு. செவ்வாய் கிரஹத்தின் அனுகிரஹத்தால் தான் யாவருக்கும் நிலபுலன்கள், வீடுகள் அமைகின்றன என்பதை மறவாதீர்கள். எனவே வீடோ, ஆபீஸோ, தொழிற்சாலையோ, நிலமோ, தோட்டமோ நல்ல முறையில் அமைய வேண்டுமே!

ஸ்ரீநடராஜர் திருக்கோழம்பம்

பல வருடங்களாக பிளாட்டை மட்டும் வாங்கி வைத்து விட்டு வீட்டைக் கட்டி முடிக்க முடியாமல் அவதியுறுவோரும் ஏராளமாக உள்ளனர் அல்லவா? எனவே வாஸ்து பூஜையைத் தக்க முறையில் செய்து வருவதால் இத்தகைய தடங்கல்கள் அகலும். ஸ்ரீவாஸ்து நாளில் தலைவாசல் படியிலும், ஏனைய நிலைவாசல் படிகளிலும் மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு படிபூஜை நிகழ்த்திட வேண்டும். ஏனென்றால் நிலைவாயிற்படியில் தான் பலவிதமான தேவதைகள் குடிகொள்கின்றனர்.
தற்காலத்தில் பேஷன் காரணமாகவும், வீட்டை எளிதில், விரைவில் கழுவிட வேண்டும் என்பதற்காகவும் வாசற்படி இல்லாமலேயே பலவிதமான அறைகளையும் அமைத்து விடுகின்றனர். இது மிகவும் தவறானதாகும். இனியேனும், ஒவ்வொரு வாயிற்படியிலும் மரப்படி வைத்து நிலைவாயிற்படியை அமைத்துக் கொள்ளுங்கள். நிலைவாயிற்படியைத் தாண்டிச் செல்வதே ஒரு பெரும் யாகமாக அமைகிறது.. வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வருகின்ற வாஸ்து தினங்களிலும், செவ்வாய்க் கிழமைகளில், செவ்வாய் ஹோரை நேரத்திலும், திருச்சி ஸ்ரீபூலோகநாதருக்கான அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு கிழங்கு வகையாலான உணவுகளாய்ப் படைத்து, அன்னதானம் செய்து வருதலால், இருக்கின்ற வீடு, நிலபுலன்கள் நன்முறையில் விருத்தியாகித் தொடர்வதோடு, கோர்ட் வழக்கு, உறவுப் பிரச்னைகள் காரணமாக முடங்கியுள்ள நிலச் சொத்துக்களும் மீண்டும் அனுபோகத்திற்கு வரும்.
ஐந்து விதமான புனித வாஸ்து நேரங்கள்
பொதுவாக சூரிய உதய நேரத்திலிருந்து தான் வாஸ்து பூஜை நேரங்கள் கணிக்கப்படுகின்றன. எனவே சில பஞ்சாங்கங்களின் கணித முறை மாறுபாடுகளால் இதில் நேர பேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பொதுப்படையாக திருக்கணித முறையிலான வாஸ்து நேரத்தை மட்டுமே இங்கு அளிக்கிறோம்.. ஸ்ரீவாஸ்து புருஷ தேவ மூர்த்தியின் நித்திரை விழித்தல் என்றால் தேவ யோக நித்திரையினின்று மீண்டு, ஜீவன்களின் நல்வாழ்விற்காக யோக சக்திகளை நல்வரமாக அளித்தல் என்பதாகும்.  ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் தந்தாவனம் அதாவது பல்துலக்குதல் என்றால், 32 பற்களும், 32 விதமான அறங்களைக் குறிப்பதால் இத்தகைய நல்அறங்களையே, அழுக்காறற்று, ஜீவசக்தி மேம்பட, இந்த தேகத்தாலும், மனதாலும், உள்ளத்தாலும் பாடுபட்டு உழைத்திட வேண்டிய ஜீவ சக்திகளை அளித்தல் என்பது பொருளாகும். ஸ்ரீவாஸ்து புருஷமூர்த்தி நீராடுதல் என்றால் அனைத்துத் தீர்த்தங்களிலும், குளமோ, நதியோ, நீர்நிலையோ, கடலோ, கிணறோ, எதுவாயினும் சரி, ஸ்ரீவாஸ்து சக்திகள் நீரில் நிரம்பிடுகின்ற புனிதமான நேரமாகும்.
ஏனென்றால் நம் உடலின் பெரும் பகுதி நீரால் அமைந்திருப்பதால், நம்முடைய பித்ரு தேவர்களும் நீர் நிறைந்துள்ள லோகங்களில் உறைவதாலும் (இதனால் தான் தர்ப்பண அர்க்யம் நீர் மூலம் அளிக்கப்படுகிறது.)  ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தியின் நன்னீராடல் நேரத்தில் எங்கும் புனிதமான தீர்த்த சக்தி பெருகுகிறது. ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தியின் பூஜை நேரம் என்றால், உலக நலனுக்காக இறைவன் ஆத்ம ஆக்ஞையாக பூஜையை நிரவிக் கொள்கின்ற அற்புதமான நேரமாகும். அதாவது கோடானு கோடி தேவதா மூர்த்திகளும், தேவாதி தேவ மூர்த்திகளும், இறைவனை வழிபடுகின்ற புனிதமான நேரமிது! ஸ்ரீவாஸ்து மூர்த்தி தாம்பூலம் தரித்தல் என்றால், நாம் நினைப்பது போல் வெறும் வெற்றிலை பாக்கு போடுவது மட்டும் என்ற பொருள் அல்ல. ஸ்ரீவாஸ்து தாம்பூலம் என்றால் என்ன பொருள்?

ஸ்ரீஅகத்திய பெருமாள் திருக்கோழம்பம்

தாம்பூலம் என்றால் சுபமங்கள காரியம் என்பதோடு உண்ட உணவு செரிப்பதற்குரிய ஒரு சிறந்த இயற்கை மருத்துவமாகும் அல்லவா! அதாவது ஜீவன்களின் கர்மவினைகள் ஜீரணிக்கப்பட்டு நன்முறையில் பஸ்மமாக்கப்பட்டு, நன்கு அனுபவிக்கப்பட்டு, அதற்குரிய விளைவுகள் ஏற்கப்பட்டு கர்ம வினைகள் சீராக பரிபாலனம் செய்யப்படுதல் என்பதே வாஸ்து தாம்பூலப் பொருளாகும். கர்மம், கர்மவினை என்ற தீயது என்பது பொருளல்ல... “அட கர்மமே” என்று, சொல்வது தவறான தொனியில் ஒலிப்பதாகும். கர்மம் என்றால் காரியம் என்று தானே பொருள்! கர்ம வினை என்றால் அக்காரியத்தால் ஏற்படுகின்ற விளைவு அல்லது வினை சக்தியாகும். ஒரு கர்மம் அல்லது செயலானது நல்லதா, அல்லது தீயதா என எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது எனில், அந்தக் கர்மத்தால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பொறுத்ததாய் அமைகிறது. எனவே கர்மவினை சக்தி நன்முறையில் அமைந்திட ஸ்ரீவாஸ்து பூஜை மிகவும் உதவுகிறது .

ஸ்ரீகணேச மூர்த்தி
ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

ஸ்ரீவாஸ்து பூஜைக்குரித்தான நேரங்கள் :-
பொதுவாக வாஸ்து நேரத்தைக் கணிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளுங்கள். பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களாயின் வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களாக எட்டு நாட்களைக் குறித்திருப்பார்கள். இது சில வகையான் பஞ்சாங்கக் கணிதங்களின் முறைப்படி சற்று மாறுபடலாம்.
சித்திரை மாதம் – 10ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 1 1/2 ,மணி நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
வைகாசி மாதம் – 21ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 6மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
ஆடி மாதம் 11 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)
ஆவணி மாதம் – 6ஆம் தேதி – சூரிய உதயத்திலிருந்து 8மணி 24 நிமிட நேரத்திர்கு மேல் (90 நிமிடங்கள்)
ஐப்பசி மாதம் – 11ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90நிமிடங்கள்.)
கார்த்திகை மாதம் – 8ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 4மணி நேரத்திற்கு மேல் .(90 நிமிடங்கள்) அதாவது காலை 10 மணி முதல் 11.30 மணி வரை
தை மாதம் – 12 ஆம் தேதி சூரிய உதயத்தினின்று 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.)
மாசி மாதம் – 23 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.)
எனவே மேற்கண்ட எட்டு நாட்களிலும் அந்தந்த நாளுக்காகக் குறிக்கப்பட்டுள்ள சூரிய உதயத்திலிருந்து, குறித்த நேரத்திற்கு மேலாக 90 நிமிடங்களுக்குள் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியுடைய தந்த சுத்தி, புனித நீராடல், பூஜை, அன்னம் ஏற்றல் (போஜனம்), தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து புனித காரியங்களைப் புரிகின்றார். ஒவ்வொரு அம்சத்திற்கும் 18 நிமிடங்களாக, அதாவது மேற்கண்ட வாஸ்து நாளில் சூரிய உதயத்திலிருந்து குறித்த நேரத்திற்கு மேல், ஐந்து புனித காரியங்களுக்கும் 90 நிமிடங்கள் மட்டும் அமைகின்றன. வாஸ்து பூஜையை வாஸ்துவின் ஆரம்ப நேரத்திலிருந்து துவங்குதல் சிறப்பானதாகும். இவற்றில் மிகவும் புனிதமானதாக கிரஹப் பிரவேசம், புதுவீட்டில் காலடி வைத்தல் போன்ற நற்காரியங்கட்கு ஸ்ரீவாஸ்து மூர்த்தி அன்னம் ஏற்கும் மற்றும் தாம்பூலம் தரிக்கும் நேரம் (கடைசி 36 நிமிட நேரம்) மிகவும் சிறப்பானதாகும்.
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்) – சென்ற இதழ் தொடர்ச்சி
25. ஓம் பூ புவ சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி!
26. ஓம் பூ புவ சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி!
27. ஓம் பூ புவ சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி!
28. ஓம் பூ புவ சுவர்க இதழ் என்றும் இயம்பும் இனியா போற்றி! (இதழ்க் கொடி = ஒரு வகை பூமி கிழங்கு)
29. ஓம் பூ புவ சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி!

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

30. ஓம் பூ புவ சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி [தாடாளன் = பூமியளந்த விக்ரமன்]
31. ஓம் பூ புவ சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி! [எறும்பூர்  = எறும்பு ஊறும் ஒருவகை பூமி பாறை ] திருச்சி – திருஎறும்பூரிலும் உள்ளது.
32. ஓம் பூ புவ சுவர்க  மருத்துவக் கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி! [கொடிக்குடி = அற்புத பூமிகா மூலிகை]
33. ஓம் பூ புவ சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி!
34. ஓம் பூ புவ சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! [ காதோலை = கலச அணிகலன் ]
35. ஓம் பூ புவ சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி!
36. ஓம் பூ புவ சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா போற்றி! [ஓலைப் பாய் = பூமி]
22.08.1999 – ஆவணி 6 (ஸ்ரீ வாஸ்து நேரம்) 
[சூரிய உதயத்திலிருந்து 8மணி 24 நிமிடங்களுக்கு மேல்.] அதாவது சூரிய உதயம் 6.00மணி என்றால் 6+8மணி 24நிமிடம் .. 22.8.1999 அன்று = 2மணி 24நிமிடத்திலிருந்து – 3மணி 54 நிமிடம் வரை புனிதமான வாஸ்து நேரமாகும் (90நிமிடங்களுக்கு).
பகல் 2.24 முதல் 2.42மணி வரை - ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித தந்த சுத்தி நேரம்.
2.42 முதல் 3.00மணி வரை – ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித நீராடல் நேரம்.
3.00 முதல் 3.18 மணி வரை – ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித பூஜை நேரம்.
3.18 முதல் 3.36 மணி வரை – ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித அன்னப் பிரசாத நேரம் (போஜனம்) [மிகவும் போற்றுதற்குரிய நற்காரிய சுபநேரம்]
3.36 முதல் 3.54 மணி வரை – ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித தாம்பூல நேரம் (மிகவும் போற்றுதற்குரிய நற்காரிய சுபநேரம்) .
சென்ற இதழில் (ஜுலை 1999) அளித்துள்ளது போல இந்த ஐந்து பூஜைகளைக் கடைபிடித்திடவும்.

தேவர்மலை மகிமை

தேவர் மலை தெய்வீக மகாத்மியம்
விஷ்ணுபதி புண்ணிய காலம்
பிரதோஷ நேரம், அமிர்தயோகம், சித்த யோகம் போன்று மிகவும் சக்தி வாய்ந்த காலமாக விளங்குவது விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற தான, தர்மங்கள், பூஜைகள், தர்ப்பணம், ஹோமத்திற்கு அளப்பரிய பலன்கள் உண்டு. விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மஹரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும்,தேவாதி தேவ மூர்த்திகளும் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஆராதிப்பதால் இதன் மகத்துவம் பெருகுகின்றது.
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக பெரும்பாலும் மாதப் பிறப்பை ஒட்டியவாறு வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலமானது நம் வாழ்க்கையிலே பெறுதற்கரிய பொன்னான தெய்வீக நேரமாகும். உறக்கத்திலும், வீண் அரட்டையிலும், கேளிக்கைகளிலும் எத்தனை மணி நேரங்களை கலியுக மனிதன் வீணடித்து விட்டான்! இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக சுமார் ஐந்து மணி நேரம் அமைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள் தாம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையிலே இழந்துவிட்ட, விரயமாக்கி விட்ட பொன்னான காலத்தை ஈடு கட்டும் வகையில் அமைந்து நல்ல உத்வேகத்துடன் தொடர்ந்து இறைப்பணியை ஆற்றவும் உதவுகின்றன.

நாகரத்தினங்கள்
தேவர்மலை

பலகோடி யுகங்களாகப் பிரபஞ்சத்தில் பிரதோஷம் போன்று மிகப் பெரும் பண்டியாக விளங்கி வந்த ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமானது காலப்போக்கில் மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டது. சமீபகாலத்தில் நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்தர் சுவாமிகளின் குருவாய் மொழிகளாக ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகிமைகளை மீண்டும் மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து ஸ்ரீஐயப்ப விரதம், பிரதோஷ வழிபாடு போன்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமும் மக்களிடையே மீண்டும் பிரசித்தி பெறும் பொருட்டு அரும்பணி ஆற்றி வருகின்றார்கள்.. இதற்குத் தோள் கொடுப்பது நம் தலையாய கடமை அல்லவா!
எனவே, வைணவப் பெரியோர்களும், பெருமாள் பக்தர்களும், பக்த கோடிகளும், ஆன்மீகச் செல்வர்களும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகிமையை உணர்ந்து அனைத்து வைணவத் தலங்களிலும் செவ்வனே இப்பண்டிகை கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து மகத்தான முறையில் இறைப்பணி ஆற்றிட அருள்புரிய வேண்டிப் பரந்தாமனைப் பிரார்த்திக்கின்றோம். ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமானது தேவாதி தேவர்களாலும், தேவ மூர்த்திகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த புனிதமான நேரமாக விளங்குகின்றது. பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னரேயே, அதாவது விடியற்காலை 2 மணியிலிருந்து பகல் சுமார் 10 1/2 மணிவரை விளங்குகின்ற இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற அபிஷேக ஆராதனைகள், ஹோமம், யாகம், வேள்விகள், தானதர்மங்கள், தர்ப்பணம் போன்ற அனைத்துக் காரியங்களுக்குமே நற்பலன்களும், நல்வரங்களும் ஆயிரக்கணக்காய், பன்மடங்காய்ப் பெருகி மக்களுக்கு நல்வரங்கள், காரியசித்திகள் தந்து அருள்பாலிக்கின்றன. இவ்வரிய பலன்களைப் பெற, வரும் 17.8.1999 அன்று பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்புடன் கொண்டாடிட பக்த கோடிகளின் தாள் பணிந்து வேண்டுகின்றோம்.
களப் பலி விளக்கம்

தீர்த்தக்குளம் தேவர்மலை

முற்காலத்தில் போர் முனைவதற்கு முன் தல களப்பலி என்ற யாகத்தினை வீரர்கள் மேற்கொள்வார்கள். போர் என்றாலே உயிரின அழிவு ஏற்படும் தானே! மேலும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக அரக்கர்களையும், ராட்சசர்களையும், பகைவர்களையும் எதிர்த்துப் போரிட்டால் தானே சத்யம்தனை நிலை நாட்ட முடியும். சாதுவாக இறைபக்தியுடன் வாழ்வது சிறப்புடையதே. இறையருள் நிறைந்த சாதுக்களால் தான் தார்மீக ரீதியாக அதர்மத்தை எதிர்த்துப் போரிட்டு வென்று சத்தியத்தையும், சாந்த நிலைமையையும் மீட்டுத் தரமுடியும். இவ்வாறாக மகாபாரதப் போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் சேனைகளை துரியோதனன் கேட்டுப் பெற்றிட, தனித்து விளங்கிய ஸ்ரீகிருஷ்ணனைத் தனக்குத் துணையாக வரும்படி அர்ச்சுனன் வேண்டினான் அல்லவா!
போர்க்களத்தில், அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாகத் தேரில் ஏறும் முன்பாகவே ஸ்ரீகிருஷ்ணன் களப்பலி யாகத்தைச் செய்ய விரும்பினார். கிருஷ்ணனுடைய லீலை என்றாலே அதில் ஒரு தெய்வீகத் தனித்தன்மை இருக்கும் அல்லவா? களப்பலி என்றால் விலங்குகள் மட்டுமின்றி காய்கறிகள், கனிகள் என்றவாறு பலவிதமான பொருட்களை அக்காலத்தில் களப்பலியாக இடுவார்கள். ஏனென்றால் எதிர்வருகின்ற போரிலே எவ்வளவுதான் தார்மீக ரீதியாக தர்மத்தை நிலைநிறுத்தப் போரிட்டாலும் அதர்மமான முறையிலே பல உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் ஏற்படுகின்ற சாபங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், உயிர் வதைப் பாவத்திலிருந்து நாட்டைக் காக்கவும், பலவிதமான ஜீவபரிபாலன தேவதைகளின் சாபங்களிலிருந்து மீள்வதற்காகவும் போருக்கு முன்னரேயே களப்பலி யாகத்தை ஆற்றியாக வேண்டும் என்பது யுத்த சாஸ்திர நியதி!
ஸ்ரீகிருஷ்ண பகவான் களப்பலி யாகத்தை மேற்கொள்வதற்கு முன் தக்க அறிவுரைக்காகத் தன் சற்குருவான சந்தீபனியின் குருவாய் மொழிகளை நாடினார். பரமாத்மாவாக ஸ்ரீகிருஷ்ணர் விளங்கிய போதிலும் கூட சற்குருவின் மகத்துவத்தை உலகத்திற்கு உணர்த்துவதற்காக, தானே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிடவே குருவாய் மொழிகளை வேண்டி, குருகுலத்தை அடைந்தார். சந்தீபனியோ, “கிருஷ்ணா! நீ பரமாத்மா என்பதை நானறிவேன். என்னை உனது குருவாக்கிக் கொண்டு எனக்கு அருள்பாலிக்கக் காத்துகிடக்கின்றாய். நீ அறியாதது ஒன்றுமில்லை. இந்த பிரபஞ்சத்திலே! இருப்பினும், உன்னுள் பொதிந்து கிடக்கும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாகிய ஸ்ரீநரசிம்மர் வழிபாடுதான் உனக்கு மிகச்சிறந்த களப்பலி முறையைத் தரும் வழிபாடாக விளங்குகின்றது என்பதை நீ உணர்ந்து கொள்வாயாக!” என்று விளக்கினார்.

ஸ்ரீநரசிம்மர் ஆலயம்
தேவர்மலை

ஹிரண்யனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய போது ஸ்ரீநரசிம்ம மூர்த்தியானவர் ஹிரண்யனுடைய தேகத்தில் அதர்ம திரவமாக ஊறிக் கிடந்த அவன் தம் உதிரத்தை தம்முடைய பார்கவ அக்னியால் பஸ்மம் செய்து, வாயு ரூபமாக்கி தன்னுடைய தேகத்தில் ஏற்றார். எங்கே அந்தக் கொடியவனுடைய அங்க தசையின், உதிரத்தின் ஒரு சிறு துளி பூமியில் பட்டால் கூட அங்கே கோடிக்கணக்கான ராட்சசர்கள் உருவாகி விடுவார்களோ என்று எண்ணியே ஹிரணியனின் உடலிலுள்ள அனைத்துத் துகள்களையும் பஸ்மமாக்கித் தன்னுடைய உடலில் ஏற்றார் அல்லவா! ஸ்ரீநரசிம்ம அவதாரம் இவ்வாறு தோன்றிய போது சிவ, வைஷ்ணவ அம்ச மூர்த்திகள் மற்றும் அனைத்து தெய்வ மூர்த்திகளும், தேவாதி தேவர்களும் ஒன்றுகூடி ஸ்ரீநரசிம்மரை வணங்கினர். ஏனென்றால் உக்ர வடிவுடன் விளங்கிய ஸ்ரீநரசிம்ம அவதார தரிசனமானது ஈரேழுலகிலும் காணுதற்கரிய ஆனந்தக் காட்சியாகும்.
குருவருள் திரட்சியே குருக்ஷேத்திரம்!
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மகாபாரத யுத்தத்தின் போது களப்பலி யாகத்திற்காக தம்முடைய சற்குருவான சந்தீபனியை நாடுவதற்குக் காரணம் என்னவோ? மகாபாரதப் போர் எங்கு நடைபெற்றது? குருக்ஷேத்திரத்தில்! குருக்ஷேத்திரம் என்றாலே உலகத்திலுள்ள அனைத்து சற்குருமார்களின் அடைக்கலத் தலம் என்றுதானே பொருள்! எனவேதான் சற்குருமார்களின் அனுகிரஹ சக்திகள் நிறைந்த குருக்ஷேத்திரத் தலத்திலே களப்பலி யாகத்திற்காகத் தம் சற்குருவின் அறிவுரையை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நாடியதில் வியப்பென்ன?
வேள்வியில் தியாமய விலங்குகள்!
களப்பலி என்றால் தற்போது கோழி, சேவல் போன்றவற்றைப் பலியாக இடுகின்ற பழக்கம் நிலவி வருகின்றது அல்லவா? இது முற்றிலும் தவறானதாகும்.. எந்த உயிர்ப் பலியும் ஏற்புடையதல்ல. அப்படியானால் அக்காலத்தில் உயிர்ப் பலி இருந்து வந்துள்ளதாக, மேலும் யாகங்களிலும் மாமிசப் பிண்டங்கள் கூட ஆஹுதியாக அளிக்கப்பட்டதாக நாம் காண்கின்றோம். இதன் காரணமென்ன? நல்ல கேள்விதான். இதற்குரிய தக்க காரண காரியங்களை அருளவல்லவர்களே சற்குருமார்கள் ஆவர்.

குருணிகுளத்துப்பட்டி தேவர்மலை

அக்காலத்தில் பெரும்பான்மையான போர்கள் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவேதான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, போர் என்பது ஒரு தார்மீகச் செயலாக ஏற்கப்பட்டதாகும். ஹிரண்ய வதம் என்று சொல்கின்றோமே, அதில் கூட அதர்மத்தை, அட்டூழியத்தை, அகங்காரத்தின் மொத்த உருவாக விளங்கிய அசுரனான ஹிரண்யனை வதம் செய்வதற்கு ஒரு தெய்வ அவதாரத்தின் உதவி தேவைப்பட்டது என்றால் அவன் எத்தகைய அபூர்வமான, அபரிமிதமான தபோபலன்களைக் காப்பாகக் கொண்டு அவற்றைத் தவறான முறையில் பயன்படுத்தி அதர்மச் செயல்களைப் புரிந்து வந்தான் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்!
முற்காலத்தில் வேள்வியில் ஆட்டுப்பலி என்ற ஒரு திருநிகழ்ச்சியானது வேள்வியின் போது நடைபெறும். இது உயிர்ப்பலி ஆகாதா? ஆனால் எவரும் வேள்வியில் எந்த ஆட்டையும் கத்தி கொண்டு வெட்ட மாட்டார்கள். வேள்வி நடக்கின்ற போது எங்கிருந்தோ அங்கு ஓர் ஆடு தானாகவே தோன்றும் அல்லது அதற்காகவே வளர்க்கப்பட்ட அந்த ஆடு தானாகவே அழகாக நடந்து சென்று எவ்விதக் கூக்குரலும், சப்தமுமின்றி வேள்வி குண்டத்தில் தானே புகுந்து விடும். மேலும் அவ்வாறு அந்த யாக குண்டத்தில் ஆடோ, மானோ எந்த விலங்கோ தியாகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்ற போது அந்த அக்னியிலிருந்து ஒரு சுகந்த நறுமணம் வீசும். அப்போது தேவாதி தேவர்களெல்லாம் காட்சி தந்து, பூமாரி பொழிந்து இதன் தெய்வீக மகத்துவத்தை உணர்த்தினர்.
தானாக வேள்வி குண்டத்தினுள் செல்லாத களப்பலி விலங்கினை ஒதுக்கி விடுவார்கள். அதனை வதைத்துத் துன்புறுத்தி ஹோம குண்டத்திற்குள் தள்ளுவதில்லை! எனவே, இது உயிர்ப்பலியின் கண் அமைந்திடவில்லை! வேத மந்திரங்களை ஓதியவாறே, தானே யாகத்திற்குள் பாய்கின்ற புனிதமான விலங்குகளும் உண்டு. ஆனால் இவையெல்லாம் தெய்வீக மணம் வி(நி)ரவிக் கிடந்த யுகங்களில் நடந்த உத்தமமான யாக பூஜைகளாகும். ஆனால் கலியுகத்திற்குரித்தான நியதியோ வேறு! விலங்குகளின் உயிரை வதைத்து, உடலை வருத்தி, உதிரம் சொட்டச் சொட்ட இடும் உயிர்ப்பலி என்பது சற்றும் ஏற்புடையது அன்று. இது கொடுமையான பாவச் செயலாகத்தான் கலியுகத்தில் விளங்குகின்றது. எனவே உயிர்ப்பலி கூடவே கூடாது.
அக்காலத்தில் போர்க்களத்தில் களப்பலி யாகத்தில் கூட உத்தமமான போர்வீரர்கள் தம்முடைய நாட்டிற்காக, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்வதற்காக களப்பலிக்கென முன்வருவார்கள். இதற்கென வட்டப்பாறை ஒன்றை வைத்திருப்பார்கள். அது பலவிதமான யோகங்களும், யாகங்களும், வேள்விகளும் நிகழ்த்தப் பெற்ற பாறையாக இருப்பதால் எந்த வீரனானவன் களப்பலியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்ய முன்வருகின்றானோ அவன் தெய்வீகச் சிரிப்புடன் இறைவனை வணங்கி வேண்டி தன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றபோது எவ்விதமான உயிர்வாதனையோ அல்லது உதிரத் திரட்டோ கூட அங்கு ஏற்படுவது கிடையாது. அவன் உடல் அக்னியில் பஸ்மமாகும் போது சுகந்த சந்தன மணம் வீசும். இத்தகைய களப்பலி யாகத்திற்காக அவர்கள் ஒரு வருட காலத்திற்கும் மேலாக பலவிதமான உத்தமமான விரதங்களையும், பூஜைகளையும், தான, தர்மங்களையும் மேற்கொண்டு தன்னுயிரைத் தன் நாட்டிற்காக அர்ப்பணம் செய்கின்ற போது தனுர் யாக தேவதைகளே முன்வந்து அந்த வீரர்களின் புனிதமான உடலை தெய்வத் தேரில் கூட்டிச் செல்கின்ற அற்புதமான நிகழ்ச்சியை பலரும் கண்டுள்ளனர்.

ஸ்ரீநரசிம்மர் ஆலயம்
தேவர்மலை

சமயத்தில் அத்தகைய வீரனின் உடலை தெய்வீகமாக உயிர்ப்பிப்பதும் உண்டு. எனவே,  அக்காலத்தில் இருந்து வந்த யுக தர்ம நியதிகள் வேறு. ஆனால் கலியுகத்திற்குரிய சமுதாய நிலைநியதிகள் வேறாகும். கலியுகத்தில் உயிர்ப்பலி பாவகரமானதாகும். இவ்வாறாக அக்காலத்தில் வேள்விகளுக்காக வளர்க்கப்படும் ஆடுகள் தாமாகவே முன்வந்து யாக குண்டத்தில் நுழைந்தால் தான் அதை களப்பலி, யாகப்பலியாக ஏற்றுக் கொள்வார்கள். எந்த ஆடோ, மானோ, ஹோமகுண்டத்தில் செல்ல மறுக்கின்றதோ அதை காட்டில் விட்டுவிடுவார்கள். வருத்தித் துன்புறுத்துவதில்லை! இவ்வாறு அக்காலத்தில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு மாமிச பிண்டம் ஆஹுதியாக அளிக்கப்படுமேயானால் அதனுடைய ஜோதிமயமான உடலானது யாக குண்டத்திலிருந்து கிளம்பி, அதனுடைய அடுத்த உத்தம இறை நிலைக்குச் சென்ற அற்புதமான ஆகாயக் காட்சியைப் பலரும் கண்டு ஆனந்தித்தனர்.
இவ்வகையில் தான் உத்தமப் பிறவிநிலை தருவதாக அக்காலத்தில் யாகப்பலி நடைபெற்றது. அதாவது எந்த உயிரினமானது தன்னுடைய ஜீவ நிலையை உணர்ந்து கொண்டு யாக குண்டத்திற்குள் தன்னை அர்ப்பணிக்கின்றதோ அதுதான் களப்பலியாகும். ஆனால் இத்தகைய தர்மயுக நியதிகள் கலியுகத்தில் நிலவிடவில்லை. கலியுக நியதிப்படி உயிர்ப்பலி என்பது அதர்மமானது, கொடூரமானது மிகுந்த பாவங்களைத் தர வல்லது என்பதை மீண்டும் உணர்த்துகின்றோம்.
திரேதா யுகத்தில் ஸ்ரீராமரும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் மக்களோடு மக்களாக வாழ்ந்த போதும் அவருடைய தெய்வீகத் தன்மையை, தெய்வாவதார அம்சத்தினை உணர்ந்தோர் எத்தனை பேர்? கலியுகத்தில் தெய்வத்தின் பிரதிநிதியாக சற்குருமார்களும், மகான்களும், சித்புருஷர்களும், யோகியர்களும் நிறையவே தோன்றி உள்ளனர். எனவே இவர்களை நாமாகவே கண்டு அறிந்து உணர்ந்து சரணடைந்து தெய்வீகத்தில் திளைப்பதுதான் இலக்கணமும், லட்சணமும், கலியுகத்திற்குரிய வாழ்க்கை, நியதியும் ஆகும்.
ஸ்ரீநரசிம்மர் அவதாரத்திற்குப் பிறகு அவருடைய அம்சங்களாக பல கோடிக்கணக்கான உக்ர அம்சங்கள் நிறைந்த மூர்த்திகள் ஆங்காங்கே பூவுலகில் பல இடங்களிலும் தோன்றினர். அந்தந்த உக்ரநிலையில் பல பெயர்களில், பல திருத்தலங்களில் ஸ்ரீசாந்த நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர் போன்று ஆங்காங்கே உற்பவித்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணனுடைய காளிங்க நடனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காளிங்கன் என்ற கொடிய விஷத்தைத் தன்னுள் கொண்ட பெரும் நாகமானது யமுனா நதியிலே மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரும் துன்பங்களைக் கொடுத்து வந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா காளிங்கமர்தன நடனமாக அப்பாம்பின் தலையில் ஏறி நடனமாடி காப்பாற்றினார். ஆனால் காளிங்க நாகத்தின் விஷமானது எத்தனையோ கோடி அசுரர்களின் எண்ணங்களின் வார்ப்பாக விளங்கியது. இதனைச் சிறுவனாகிய கண்ணன் எவ்வாறு வதம் புரிந்தான்?

பிஞ்சில் பலித்தது!
சந்தீபனியிடம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கண்ணனாக சிறுவயதில் குருகுலம் கொண்ட போது, பரமாத்மாவின் காளிங்கமர்த்தன அற்புதச் செயலை தீர்க்கதரிசனமாக பல ஆண்டுகளுக்கு முன்னரேயே உணர்ந்த சாந்தீபனி குருதேவர் கண்ணனுக்குச் சிறு பிராயத்திலேயே ஸ்ரீநரசிம்ம மந்திரங்களை உபதேசம் செய்து நரசிம்ம யாகத்தை மேற்கொள்ளச் செய்தார். இந்த நரசிம்ம யாக வேள்வியின் பயனாகத்தான் கண்ண பரமாத்மா காளிங்க நாகத்தின் கொடிய சக்தியைப் பெற்றிருந்தார். எனவே, மகாபாரதப் போரின் போது களப்பலி யாகத்திற்காக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சந்தீபனியை நாடிய போது அவருக்கு நரசிம்ம உபாசனை மந்திரத்தின் மேன்மையை மீண்டும் எடுத்துரைத்துப் பல்லாயிரம் அணடங் கோடி நாக சக்திகளுடன் விளங்குகின்ற ஸ்ரீநரசிம்மரின் தீர்த்தத்தைப் பெற்று களப்பலி யாகத்தை நிறைவு செய்யும்படி கூறினார்.
எந்த இடத்தில் ஸ்ரீநரசிம்மர் இத்தகைய நாக பூஷண நாக சக்திகளுடன் அருள்பாலிக்கின்றார்? நாம் ஏற்கனவே கண்டுள்ளபடி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் பலவிதமான உக்ர நிலையுடன் கூடிய அர்ச்சாவதர மூர்த்திகள் இன்றைக்கு உலகத்தில், குறிப்பாக பாரத நாட்டில் அதிலும் மிகவும் குறிப்பாக தெய்வத்திரு தமிழ்நாட்டிலே பல இடங்களில் கோயில் கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதன் மஹிமையினை நாம் தான் உணரவில்லை. அவ்வப்போது சற்குருமார்கள் ஸ்ரீநரசிம்ம அவதார மகிமைகளை எடுத்துரைத்து வருதலால் தான் கலியுக மக்களாகிய நாம் இவற்றின் அனுக்கிரக சக்தியை ஓரளவேனும் உணரத் தொடங்கியுள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எல்லாம் வல்ல சற்குருவின் கருணையேதான்.

ஸ்ரீநரசிம்மர் ஆலயம்
புள்ளபூதங்குடி

நாக ரத்தினங்கள்
பாரதப் போரில் கோடிக்கணக்கான நாகாஸ்திரங்கள் எய்தப் பெறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தன்னைவிட இதனை மேலும் தீர்க்க தரிசனமாக அறிந்திருந்த சற்குருவாம் சாந்தீபனி அறிவுரைக்கேற்ப எங்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியானவர் நாகபூஷண அக்னி சக்தியுடன் எழுந்தருளியுள்ளாரோ அத்திருத்தலத்தில் இருக்கின்ற தமக்குரிய களப்பலியாக தீர்த்தத்தை அறிய வேண்டி பிரபஞ்சமெங்கும் வலம் வரலானார். நாகங்களுடைய கொடிய விஷத்திலிருந்து பெறப்படுகின்ற இரத்தினக் கற்கள் மிகுந்த தெய்வீக சக்தியைக் கொண்டவையாக, விலை மதிப்பற்றவையாக விளங்குகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா!
எத்தனையோ கோடி ஆண்டுகளாக விஷத்தைக் கக்கிடாது, அதனைப் பயன்படுத்தாது நன்முறையில் தன்னுடைய தேகத்திலே விஷத்தை போஷித்து வருகின்ற நாகங்கள் தாம் அவற்றைத் தம் தபோபலன்களால் இரத்தினக் கற்களாக பூமியில் கக்கி விடுகின்றன. இரத்தின நாகங்கள் என்று பல விசேஷமான தெய்வீக சக்திகளையுடைய பாம்புகள் உண்டு. இவையெல்லாம் இரத்தின யோகத்தின்பால் தம்மை ஐக்கியம் செய்து கொள்பவை. தமக்கு இறைப் பெரும் வரமாக பாதுகாப்பிற்காகத் தரப்படுகின்ற விஷசக்தியை என்றும் பயன்படுத்தாது எப்போதுமே நாக பூஷண யோகத்தில் திளைத்து நிற்பவை. சுமார் பன்னிரண்டடிக்கு மேல் உயர்ந்து, படம் விரித்து, உணவு ஏற்காது, வெயில் மழை பாராது ஆழ்ந்த தவயோகத்தில் திளைத்து நிற்கின்ற இந்த நாகங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் இத்தகைய நிலையிலேயே தவம் பூண்டு தம்முடைய கொடிய விஷத்தை இரத்தினக் கற்களாக மாற்றுகின்றன.
இன்றைக்கு நீங்கள் பல ஆலயங்களில் காணுகின்ற நாகலிங்கங்களும், நாக மூர்த்திகளும், நாகப்பிரதிஷ்டைகளும் இத்தகைய அரிய நாக யோகம் பூண்ட நாகமூர்த்திகளின் தவஒளிப் பிரதிமையே ஆகும். உண்மையில் நாக ராஜன், நாகரத்தினம், நாகலட்சுமி, நாக சுந்தரம், நாகேந்திரன், நாகப்பன் போன்ற நாக சம்பந்தப்பட்ட பெயரை உடையவர்கள் ஏதேனும் ஒரு ஆலயத்தில் உள்ள ஒரு நாகமூர்த்தியை, நாகபிரதிமையை, தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் பக்தியுடன் வழிபட்டு வருவார்களேயானால், அவர்கள் நிச்சயமாக முக்திப் பெருநிலையை எளிதில் அடைந்திடலாம். எனவே, இன்று நீங்கள் எந்த கோயிலிலும் சர்வ சாதாரணமாக எண்ணிக் காண்கின்ற ஒரு சிறு நாகமூர்த்தியும் கூட எத்தகைய அற்புதமான பக்திப் பெரு நிலையை தரவல்லது என்றால் என்னே நாக தேவதைகளின் மகிமை!
எங்கே அருள்பாலிக்கின்றார் அந்த ஸ்ரீநாகபூஷண நரசிம்மர்!
தம் சற்குருநாதராம் சந்தீபனியின் ஆக்ஞைப்படி நாகபூஷண யோக சக்தி நிறைந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, பிரபஞ்சமெங்கும் வலம் வந்து போது ஓரிடத்திலே இரத்தின ஒளி நிறைந்திருக்க அங்கே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பரஞ்சோதிச் சுடராய்ப் பரிமளிக்கக் கண்டு பேருவகை அடைந்தார். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைத் தொழுது, தம்முடைய கள யாகப் பலியின் அத்யாவசியத்தை வேண்டித் துதித்திட ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை ஆசீர்வதித்த ஸ்ரீநரசிம்ம பெருமான், “ஸ்ரீகிருஷ்ணா! எங்கிருந்து இந்தத் திருஊற்று பெருகுகின்றது என்றே சொல்ல முடியாதவாறு ஆதியும், அந்தமும் இல்லாது இந்தத் திருத்தலத்தில் விளங்குகின்ற இந்த பிரம்ம தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று உன்னுடைய களப்பலி யாகத்தைப் பூர்த்தி செய்வாயாக!” என்று அருளிச் செய்து அங்கு பிரம்ம தீர்த்தமாய் மலர்ந்திருந்த குளத்தின் புனிதமான நீரை எடுத்துத் தாரையாக வார்த்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு அளித்தார். இந்தத் திருத்தலம் தான் தேவர் மலையாகும். (திருச்சி கரூர்க்கு அருகே குருணிகுளத்துப்பட்டியில் உள்ளது. திருச்சியிலிருந்து  பாளையம் செல்கின்ற பேருந்து மூலமாகவும் இந்த புனிதமான திருத்தலத்தை அடையலாம்..)
தேவர்மலை ஸ்ரீநரசிம்மர் :- தேவர்மலையில் தான் சென்ற இதழில் (ஜுலை 1999) விவரிக்கப்பட்டுள்ளதும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தேடியதுமான பத்ம பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு அருள் பாலிக்கின்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்திதான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆராதிக்கப் பெற்று நாக பூஷண யோகத்தில் திளைக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீநரசிம்மர் ஆகிய இரு அவதாரங்களின் மேன்மையை உணர்த்துகின்ற திருத்தலமாக விளங்குகின்ற தேவர்மலையில் ஸ்ரீநரசிம்மரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பத்மபிரம்ம தீர்த்தம் அளிக்கப்பட்ட புனிதமான நேரம் தான் விஷ்ணுபதி புண்ணியகாலமாகும்.. இத்திருத்தலத்தில் தான் ஒரு தனி மண்டபத்தில் மிகவும் அற்புதமான நாகமூர்த்திகள் விளங்குகின்றன. இவையெல்லாம் இரத்தின யோக நாக தேவமூர்த்திகள் ஆகும். அதாவது எந்த இரத்தின நாகங்கள் தம்முடைய கோடானு கோடி தவத்தின் பலனாய்த் தம்முடைய விஷத்தை இரத்தினமாக மாற்றித் தன்னுயிரைத் தியாகம் செய்து நாகதேவதா மூர்த்திகளாக மாறினவோ அவைதாம் இந்த தேவர்மலைத் திருத்தலத்தில் நாகமூர்த்திகளாக தேவநாக பித்ரு மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றார்கள்.  மிகவும் சக்திவாய்ந்த மூர்த்திகள். நாக தோஷத்தையும் பித்ரு சாபங்களையும் தீர்ப்பவர்கள்!
புதன்கிழமை தோறும் இங்கு நரசிம்ம வழிபாடு, நாக வழிபாடு செய்வது சிறப்புடையதாம். தேவர்மலை பிரம்ம புண்ணியத் தீர்த்தத்திலிருந்து களப்பலி யாக தீர்த்தத்தைப் பெற்று ஸ்ரீகிருஷ்ண பகவான் குருக்ஷேத்திர திருத்தலத்தில் இவற்றை நீர்த்தாரையாக ஒரு புனிதமான செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் களப்பலி தீர்த்த நீராக அர்க்யம் அளித்திட்டார். எனவேதான் இந்த தர்மப் போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த கோடானு கோடி தர்மவாதிகளுக்கு முக்திப் பெருநிலையைப் பெற்றுத் தந்து இப்புனிதத் தலத்தையும் மேலும் புனிதப்படுத்தி தெய்வீகத் தலங்களுள் ஒன்றாக குருக்ஷேத்திரம் விளங்குமாறு இந்த களப்பலி தீர்த்த அர்க்யம் உதவி செய்தது. எனவே வருகின்ற மாதம் 17.8.1999 தேதியன்று அமைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தினை தேவர்மலை திருத்தலத்தில் ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில் கொண்டாடுவது வாழ்க்கையில் மிகவும் கிடைத்தற்கரிய பேறாகும். இன்று விடியற்காலை 3 மணி முதல் 10 ½ மணி வரை

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம் அமைவதால் இன்று இங்கு
1. ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கு செந்நிற மாதுளம்பழ முத்துக்களால் காப்பிட்டும்.
2. இங்குள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தும்,
3. சிவப்பு நிற பட்டு வஸ்திரங்களைச் சார்த்தியும் மேலும் இந்தப் பட்டு வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானமாக அளித்தும்,  மிகச் சிறப்பான முறையில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தைக் கொண்டாடிட வேண்டும். ஸ்ரீவிஷ்ணுபதி காலத்தில் செய்யப்படுகின்ற வேள்விகள், யாகங்கள், வழிபாடுகள், ஹோமம், தான, தர்மங்களுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு என்பதனால் இத்திருத்தலத்தில்..
4. இன்று இத்தீர்த்தத்தினால் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து அவர்களுக்குப் பிடித்தமான உணவை ஏழைகளுக்கு தானமாக அளிப்பதும்,
5. ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், திவ்ய பிரபந்தம் போன்ற ஸ்ரீவிஷ்ணு துதிகளை ஓதியும்.,
6. ஸ்ரீநரசிம்மருக்குப் ப்ரீதியான, தோல் நீக்கப்படாது உண்ணப்படுகின்ற பழங்களை (கொய்யா, ஆப்பிள், சிறு திராட்சை, நாவற்பழம்) ஆஹுதியாக அளித்து ஹோமம் செய்வதும் தானமளிப்பதும் சிறப்புடையதாகும்.
7. ஆலய நிர்வாகிகளின் தக்க அனுமதியுடன் பிரம்ம தீர்த்தக்குளத்தை சுத்தி செய்து ஆலயத் திருப்பணியை மேற்கொள்வது பெறுதற்கரிய உத்தமமான இறைப்பணியாகும்.
விஷ்ணுபதி புண்ய கால பூஜா பலன்
வருகின்ற பிரமாதி வருட ஆவணி மாதத்திற்கான விஷ்ணுபதி பூஜையை இவ்விதழில் அளித்துள்ளவாறு கடைபிடிப்போர்க்கு அளப்பரிய பலன்களை அரும் பரம்பொருளாம் ஸ்ரீமஹா விஷ்ணு அருள்கின்றார். குறிப்பாக பலரிடம் உதவி, கடன் பெற்று நன்கு முன்னுக்கு வந்தும் நன்றிக் கடன் செலுத்தாத பாவத்திற்கும், முன்னுக்கு வர உதவியர்கட்குத் தக்க மறு உதவிகளைச் செய்ய மறுத்ததற்கும் பிராயச்சித்தமாக இப்பூஜா பலன்கள் அமைகின்றன. இனியேனும் வாங்கிய கடனை/ஏமாற்றிப் பெற்ற சொத்தினை வட்டியும், முதலுமாகச் செலுத்திடுதல்தான் பிராயசித்தத்தைப் பரிபூரணமாக்கும். நீர் மற்றும் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர்க்கு இந்த விஷ்ணுபதி பூஜை நல்ல பரிஹாரத்தைத் தருகிறது. அறிந்தோ அறியாமலோ பிறருடைய சொத்துக்களை அனுபவித்துப் பெரும் பாவங்களைச் சேர்த்து வாழ்வோர் பலருண்டு., இவர்கள் இனியேனும் திருந்தி தம்மால் பாதிக்கப்படோர்க்குத் தக்க உதவிகளைச் செய்து, சொத்துக்களை மீட்டுத் தந்து பெற இப்பூஜை உதவுகின்றது.,, ஆனால் பரிஹாரம் என்றால் ஒரு முறையே! மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்தால் பரிஹார வழியும் பலன் தராது.!

திருஅண்ணாமலை

திருஅண்ணாமலை வாசிகளுக்கோர் அரும்பெரும் பாக்கியம்!
அண்ணாமலையில் பிறத்தல்/வாழ்தல்/வசித்தல் அரிதான பொக்கிஷமே! திருஅண்ணாமலையில் பிறத்தல் என்பது பெறுதற்கரிய பாக்கியமாகும். எத்தனையோ ஐஸ்வர்ய கடாட்சம் பெற்றாலும், திருஅண்ணாமலையில் பிறத்தலுக்கு அது ஈடாகாது. இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் பௌர்ணமி தோறும் மட்டும் திருஅண்ணாமலையை வலம் வந்திட தினந்தோறும் அண்ணாமலை வாசியாய்த் திருஅண்ணாமலையை வலம் வருதல் எவருக்கும் இப்பூவுலகில் கிட்டாத பாக்கியம் தானே! அடியார்க்கு அடியாராக இருப்பதில் தான் இறைவன் பெருமகிழ்ச்சி அடைகின்றான். எனவே கிரிவலம் வருகின்ற அடியார்களுக்கு திருஅண்ணாமலை வாசிகளே தினந்தோறும் அல்லது பௌர்ணமியன்று இலவசமாய்த் தங்களால் இயன்ற சேவையைச் செய்திடலாம் அல்லவா?
திருஅண்ணாமலை வாசிகள் பலரும் தங்களுடைய பிறவியின் அருமையை உணர்ந்து மகத்தான இறைத் தொண்டு ஆற்றுவது கண்டு பேரானந்தம் கொள்கின்றோம்.
பெருமதிப்பிற்குரியவர்களாகவும் திருஅருணாசலத்தில் பிறந்தவர்களாதலால் மிகவும் புனிதமான திருஅண்ணாமலையில் வாழ்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்களும் இப்புவியில் எங்கெங்கோ “திருஅண்ணாமலையைக் காண இயலவில்லையே, கிரிவலம் வர இயல வில்லையே”, என்று லட்சக் கணக்கான மக்கள் ஏங்கி இருக்க, நினைத்தால் கிரிவலம் வரக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களுமான திருஅண்ணாமலையில் வசிக்கும் சிறந்த தேவ புண்ணிய சக்தியை உடைய அருணாசல வாசிகளே!
நீங்கள் பெறுதற்கரிய மானிட வாழ்க்கையையே திருஅருணாசலத்தில் நன்முறையில் அமைகின்ற பெரும் பேற்றினைப் பெற்றுள்ளீர்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் 100, 200, 300 கி.மீ எனக் கடந்து வர நீங்களோ ஜன்னலைத் திறந்து வீட்டிற்கு உள்ளே இருந்து பார்த்தாலே திருஅண்ணாமலை தரிசனம் என்றால் என்னே உங்கள் பூர்வ ஜென்ம புண்ணிய சக்தியின் மகிமை! எங்கு நடந்தாலும், திரும்பினாலும் உங்களுக்கு எத்தனையோ ஆயிரமாயிரம் அருணாசல மலை தரிசனங்கள் கிட்டுகின்றனவே! இதனால் உங்களுக்குச் சேருகின்ற புண்ணிய சக்திதான் எத்தனை எத்தனை! ஆனால் இதனை நம்முடைய தேகத்தில் உணரவிடாதவாறு மாயைதான் பெரும் விளையாட்டைப் புரிகிறது. திருஅண்ணாமலையை “நினைக்கவே முக்தி” என்பது சத்யவாக்கு. ஆமாம்,

எப்போதெல்லாம், திருஅண்ணாமலையைப் பார்க்கும் போதெல்லாம் கைகூப்பி, “இறைவா! தென்னாடுடைய சிவனே போற்றி!“ என்று உண்மையான பக்தியுடன் வணங்கும் நேரமெல்லாம் முக்திப் பெருநிலைதான்! ஏனைய நேரம் அதிலிருந்து வழுவிய நேரமே! ஆம், உண்மையாக “நினைத்தல்” வேண்டும். வெறும் உதட்டால் அல்ல! நினைவு மாறாது நினைத்தலே நிலைக்கும்! ஆனால் இந்நிலையிலிருந்து வழுவி, மிகச் சாதாரணமான லௌகீக சுயநல வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்? இங்கு உங்களுக்கென குடும்பம், வியாபாரம், பணி என எத்தனையோ பல வசதிகளை இறைவன் அளித்திருந்தாலும் இவற்றினூடே அருணாசல தரிசனத்துடன்/ தியானத்துடன் தினசரி பாக்யமாக கிரிவலத்துடன், மலை தரிசனத்துடன் வாழ்க்கையை வாழ்வது உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ள பெரும் பாக்கியம் அல்லவா? காலையிலோ, மாலையிலோ, இரவிலோ தினந்தோறும் அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற பாக்கியம் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு கிட்டியுள்ளதென்றால் இது எத்தனையோ மகரிஷிகளின், யோகியரின், சித்தர்களின் மகத்தான ஆசீர்வாதத்தால் அன்றோ! இதனை உணர்ந்து தெய்வீக அனுபூதியில் திளைப்பவர்கள் திருஅண்ணாமலையில் இன்றும் உண்டு.
அருகிலிருந்தால் அரனின் அருமை அறியார்!
“இறைவா! உன் அருகிலேயே இருந்து கொண்டு இறைத் தொண்டைச் செய்கின்ற தெய்வீக சந்தர்ப்பத்தை அமைத்துத் தருவாயாக!” என்று வேண்டுவோர்களுக்குத் தான் இப்பிறவியிலே ஏதேனும் ஆலயத்தில் அல்லது இறைவன் அருகிலேயே இருக்கின்ற நல்வாய்ப்பையும் ஆண்டவன் அருள்கின்றான். ஆனால் மாயையின் விளைவாக எவ்வளவுதான் இறைவன் அருகில் இருந்து ஆலய ஊழியமாகப் பணிபுரிந்தால் கூட காசு அல்லது பணம் சேர்க்க வேண்டும், வாழ்க்கை வசதிகளுடன் நன்முறையிலே செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும் என்ற குறுகிய சுயநல எண்ணங்கள்தான் சிலருக்குத் தலை தூக்கும். இதுதான் இறைவன் இடுகின்ற மாயை! நாம் வீழ்கின்ற கர்மக் குழி! நம் கர்ம வினைகளின் தொகுப்பு!
இவ்வாறின்றி ஆண்டவனருகில் சுயநலமின்றித் தியாகச் செம்மலாய் வாழ்வோரும் உண்டு. வெளியே நின்று ஆயிரமாயிரமாய் அடிப்பிரதட்சிணம் செய்து, அர்ச்சனை ஆராதனைகளுடன் பக்தியைப் பெருக்க விரும்புகின்ற மனிதர்கள் ஒரு புறம இறைவன் அருகிலேயே இருந்து பூஜை செய்து அல்லது பணிபுரிகின்ற பாக்கியாத்தைப் பெற்றாலும் “நமக்கு இறைவன் இதைத் தரவில்லையே, அதைத் தரவில்லையே, நாம் என்றும் வறுமையில் தானே வாழ்கின்றோம், நமக்குப் பெரிய குடும்பத்தையும், வறுமையையும் இறைவன் தந்து விட்டானே”, என்று திறமற்ற மனோபாவனையுடனும், விருப்பம் இல்லாது ஏனோ தானோ என்று ஆலயம் அருகிலேயே வசிப்போரும், வாழ்வோரும் இறைஊழியம் செய்கின்றவர்களும் உண்டு.
இறைவனருகில் வாழ்வதை, பணிபுரிவதைப் பெரும் பேறாய் உய்த்துணர்ந்து வாழ்வோரும் உண்டு. இவ்வாறாக நன்கு ஆத்ம விசாரம் செய்து, வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகத் திருஅண்ணாமலையில் வாழ்கின்ற, தொழில் புரிகின்ற, வேலை செய்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்கள் தினந்தோறும் கிரிவலத்தைக் கட்டாயமாகவும், அவ்வப்போது தங்கள் குடும்பத்தினருடன் மேற்கொள்ள வேண்டும். இந்த அற்புதமான புண்ணிய சக்தி தான் ஆண்டாண்டு காலமாக உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் துணையாக நின்று காப்பாற்றும். அனைவருக்குமா இந்த பாக்கியம் கிட்டுகின்றது?
வங்கி, அரசுத் தொழில் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் சில ஆண்டுகளுக்கு திருஅண்ணாமலையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றால் அதனை விட்டு விடாது இறைவன் நமக்காகத் தந்துள்ள விலைமதிப்பற்ற பொக்கிஷமான இறைத் தொண்டு என இதையும் எண்ணி தினந்தோறும் கிரிவலம் வருகின்ற தெய்வீக வாய்ப்பினை நழுவ விடாது நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் திருஅண்ணாமலையாரைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றதென்றால் அது கோடியில் ஒருவருக்காக அமைந்துள்ள பாக்கியம் என்று எண்ணி ஆனந்தப் பெருக்கடையுங்கள்! இறைப் பேரானந்தத்தை அனுபவித்து உய்த்துணருங்கள்!
கூத்தரின் ஒருநாள் (இறைக்) கூத்து!
அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக பாரதமெங்கும் லட்சக்கணக்கான மக்கள் மாதந்தொறும் பௌர்ணமி தினத்தில் அண்ணாமலையாரைக் கிரிவலம் வருவதை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றீர்கள்! முதல் நாள் இரவு வரை மிகச் சாதாரணமாக சாலைப் போக்குவரத்து இருக்க, அடுத்த நாள் பௌர்ணமி அன்று ஒரு சைக்கிள் கூடச் செல்ல இயலாத அளவிற்கு மக்கள் சாரை சாரையாக எறும்புகள் ஊர்வது போல கிரிவலத்தில் ஊர்ந்து செல்கின்ற அற்புதக் காட்சியை நீங்கள் காண்கின்றீர்கள். இதற்கு மறுநாளோ மீண்டும் அது சாதாரண சாலையாகத்தான் தென்படுகின்றது.
அந்த 24 மணி நேரத்திற்குள் பிரபஞ்சக் கூத்தனாய் இறைவன் எத்தகைய லீலைகளை நிகழ்த்திக் காண்பிக்கின்றான்! அந்த ஐந்து லட்சம் பேரையும் அழகாக வீட்டிலிருந்து அழைத்து வந்து தன்னையே ஆண்டு கொண்டு தரிசனம் செய்ய வைத்து மீண்டும் அவர்களைக் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பினை இறைவன் செய்கின்றான் என்றால் எவ்வளவு பெரிய பிரபஞ்சத்தின் குடும்பத் தலைவனாக இறைவன் விளங்குகின்றான். அந்த இறைவனுடைய திருவடிப் பாதங்களிலே மலையின் கீழே நீங்கள் வசிக்கின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றீர்கள் என்றால் உங்களுடைய பூர்வ ஜென்ம புண்ணிய சக்தியின் மகாத்மியத்தை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். அக்காலத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் சென்று வந்தவர்கள் என்றால் அவர்களுடைய பாதங்களை நன்னீரால் கழுவித் துடைத்து மஞ்சள், சந்தனம் பூசி வணங்குவார்கள். ஏனென்றால் இறைவனையே வலம் வருகின்ற திருப்பாதங்கள் அல்லவா அவை? “நமக்குத்தான் திருஅண்ணாமலையை வலம் வருகின்ற பாக்கியம் கிட்டவில்லை. பாக்கியத்தைப் பெற்றவர்களுடைய திருப்பாதங்களையாவது தொட்டு வணங்கினால் அடியார்க்கு அடியாராகிய இறைவனே வந்து அருள்புரிவான் அன்றோ!” என்ற ஆழந்த உண்மையான நம்பிக்கை நிலவியது.
ஏதோ பூர்வ ஜன்ம தொடர்பாகத்தான் இன்றைக்கு நீங்கள் அண்ணாமலையிலே வசிக்கின்ற அதி அற்புத இறை வாழ்வைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் சாதாரண மனிதர்களைப் போல் வாழ்ந்திடாமல் எவ்வாறு ஸ்ரீரமண மகரிஷியானவர் இளம் பிராயத்திலேயே இங்கு வந்து அடைக்கலமாகி தம் வாழ்நாளில் இவ்விடத்தை விட்டு சற்றும் அகலாது காசி, கயா, ஹரித்துவார் என்றெல்லாம் செல்லாது “அருணாசலம் தானே அனைத்தையும் தரவல்லவன், இவனுள் அனைத்து இறைத்தலங்களும், புண்ணிய நதிகளும், தீர்த்தங்களும், ஆலயங்களும் அடக்கம்!” என்று உறுதியாகவே ஆத்ம விசாரம் செய்து ஆத்ம ஜோதியையே அருணாசலத்தானாகக் கண்டு உய்ந்தாரோ அவ்வாறே நீங்களே முயன்று உயர்நிலையை அடையுங்கள்!
எளிய அன்னதானம் இதுவன்றோ!
உங்களுக்கென்று ஒரு மகத்தான பணி காத்துக் கிடக்கின்றது. திருஅண்ணாமலையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குறைந்தது ஒரு படி அன்னம் அல்லது ஒரு பத்து உணவு பொட்டலங்களையாவது அன்னதானமாகத் தருவது என்ற உயர்ந்த கைங்கர்யத்தை மேற்கொள்வீர்களேயானால் பௌர்ணமியன்று எத்தனை லட்சம் மக்களுக்கு அன்னதானத்தை நிகழ்த்தி அடியார்களின் உடல் சிரமத்தைத் தணித்து, பெரும் புண்ணிய காரியத்தையு நீங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும்! மாதந்தோறும் வருகின்ற சாம்பார்ர் சாதமோ, தயிர் சாதமோ, இட்லியோ, தோசையோ எதுவாயினும் சரி, பத்துப் பொட்டலங்களை நீங்கள் தயார் செய்து கிரிவலச் சாலையில் எங்கேனும் நின்று கொண்டு கிரிவல அடியார்களுக்குத் தந்து செல்வீர்களேயானால் இதைவிட மகத்தான பணி வேறு எதுவாக இருக்க முடியும்?
உங்கள் வசதிக்கேற்ப பத்தோ, இருபதோ, நூறோ, ஆயிரமோ உணவுப் பொட்டலங்களை, நல்ஆடைகளை, நீர்மோர், பழரசம் என பலவிதமான தானங்களை அளித்திடலாமே? மேலும் இங்கு உணவு விடுதிகளையும், ஹோட்டல்களையும், டீக்கடைகளையும் வைக்கின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோர் மகத்தான முறையிலே பௌர்ணமிதோறும் இவ்வகையில் ஆயிரமாயிரம் பேருக்கு இலவசமாக உணவை அளித்து எத்தகைய பெரும் புண்ணிய சக்தியை எளிதில் திரட்டிட முடியும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். பெறுதற்கரிய இந்த மானிட வாழ்வைத் திருஅண்ணாமலையில் தானே பெற்றிருக்கின்றீர்கள். அதன் மகாத்மியத்தை உணர்ந்து இனி மேலாவது செயல்படத் தொடங்குங்கள்.

ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் மண்டபம்
திருஅண்ணாமலை

வரும் பௌர்ணமி தினத்தன்று உங்கள் வீட்டிலிருந்து அன்னதானப் படை புறப்படட்டும்! அன்னதான சேவை தொடரட்டும்! இறைவன் உங்களைத் திருஅண்ணாமலையில் வைத்திருப்பதற்குக் காரணமே இங்கு வருகின்ற அடியார்களுக்கு ஏதேனும் ஒரு வகையிலாவது உங்கள் உடலால், உள்ளத்தால், மனதால், செல்வத்தால் நீங்கள் இறைப்பணி ஆற்ற வேண்டும் என்பதற்காகத்தான். நாமே நமக்கென சுயநலமாக வாழ்ந்து எதை சாதிக்கப் போகின்றோம்? மீண்டும் அடுத்த பிறவி இத்திருஅண்ணாமலை க்ஷேத்திரத் தலத்தில் அமையும் என்பது என்ன நிச்சயம்? பூர்வ ஜென்மங்களில் அளப்பரிய இறைப்பணிகளை, தான, தர்மங்களை ஆற்றித் தான் நீங்கள் இன்று திருஅண்ணாமலையில் குடிகொண்டிருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அண்ணாமலையான் அடியிலே இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றுள்ள நீங்கள் இதன் மகத்துவத்தை நன்கு உணர வேண்டும் அல்லவா?
வேண்டிய வரத்தைப் பெற்று விட்டு வெறுமனே இருந்தால் அது நன்றாக இருக்குமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! திருஅண்ணாமலைக்கு வருகின்ற கிரிவல அடியார்களுக்கு உங்களால் இயன்ற சேவையைச் செய்து வந்து, இங்கு பிறந்த பெரும் பாக்யத்திற்கு நன்றிக் கடனாக இன்றியமையாத கடமையாக கிரிவல அடியார்களுக்குப் பேருதவி புரிந்து உன்னத தெய்வீக வாழ்வைப் பெற்றிடுவீர்களாக!
திருஅண்ணாமலையாரின் அற்புதம்
இன்று ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் மாதந்தோறும் திருஅண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று அடியார்கள் வருகின்றார்கள் என்றால் என்னே உலக அற்புதமிது! இதன் பின்னணியிலே ஆயிராமாயிரம் தெய்வீக இரகசியங்கள் புதைந்துள்ளன. அனைவருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்து ஊட்டி வளர்த்து பரிபாலிப்பவன் இறைவனே என்பது திருஅண்ணாமலை கிரிவல மகிமையாக லட்சலட்சமாய் அடியார்கள் ஒன்று கூடிவந்து செல்வதிலிருந்து நன்கு புலனாகின்றது. ஐந்து லட்சம் பேர்கள் கிரிவலம் வருவதென்றால் அவர்கள் மூலமாக 50 லட்சம், ஐந்து கோடிப் பேருக்கு இறைவன் தெய்வத் திருப்பணிக்கான, வாழ்வை நன்முறையில் நடத்துவதற்கான நல்வாய்ப்பை அளிக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எண்ணுவது போல் பௌர்ணமியன்று ஐந்து லட்சம் மக்கள் மட்டுமல்லாமல் கோடானு கோடி உயிரினங்களும் தேவாதி தேவர்களும் தேவமூர்த்திகளும், மஹரிஷிகளும், யோகியரும் பௌர்ணமி அன்று மட்டுமின்றி திருஅண்ணாமலையை எப்போதும் என்றும் கிரிவலம் வருகின்றனர்.
இன்றைக்கு பௌர்ணமி திதியன்று லட்சோப லட்சம் மக்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர் என்பது நீங்கள் கண்கூடாகக் காண்கின்ற இப்பூவுலகின் தெய்வீக அற்புதமாகும். கோயில் திருவிழா, கிரிக்கெட் விளையாட்டு, பொதுக்கூட்டம் என்றால் மக்கள் திரள்கின்றதைப் பார்த்திருக்கின்றீர்கள். ஆனால் இவற்றில் எதுவுமே இல்லாமல் இறைவனுடைய திருமேனியாக விளங்குகின்ற அருணாசலத்தை கிரிவலம் வர வேண்டும் என்ற ஒரே தெய்வீக நம்பிக்கையின் காரணமாகத்தான் இன்றைக்கு கோடானு கோடி உயிரினங்களும் லட்சோப லட்சம் மக்களும் மலையை வலம் வருகின்றனர் என்றால் இதனை இயக்குபவர் தனிப்பெருங் கடவுளாம் அண்ணாமலையார் தானே! இந்த ஐந்து லட்சம் அடியார்கள் மூலமாக 50 லட்சம், 5 கோடி மக்களுக்குமென எண்ணற்றோர்க்கும் இறைவன் நல்வாழ்வு தருகிறான் என்பதை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகின்றீர்கள்? உதாரணமாக, திருநெல்வேலியிலிருந்து 25 அடியார்கள் ஒரு வேனில் திருஅண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலத்திற்காக வருகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வேனுக்கான வாடகை, வேனை ஓட்டுகின்றவருக்கான பேட்டா, கட்டணம், நடுவில் பழம், டிபன், டீ எங்கெல்லாம் சாப்பிடுகின்றார்களே அந்த கடைக்கு/ ஹோட்டலுக்குத் தேவையான வருமானம், வேனுக்குரிய டீசல், ஆயில் இவ்வாறாக ஒரு இருபத்தைந்து பேர் திருஅண்ணாமலைக்கு வருவதற்கு முன்னால் எத்தனை பேர்களுக்கு அது உதவிபுரிகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள்.
நடு நடுவே டீ, காபி, இளநீர், டிபன் என்று ஆயிரக்கணக்கானோர்க்கு இது வாழ்க்கையை அளிக்கின்றது அல்லவா? ஒரு ஹோட்டலில் அந்த இருபத்தைந்து பேரும் சென்று சாப்பிடுகின்றார்கள் என்றால் அந்த வருமானம் நிலைத்தால் தானே அங்கு பணி பணிபுரிகின்ற நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கும் நல்வாழ்க்கையை அளிக்க முடியும்? எனவே இருபத்தைந்து பேருடைய ஒரு அருணாசல யாத்திரையானது கிட்டத்தட்ட 2000 பேருக்கும் மேலாக தொழில் பூர்வமான ஆக்கத்தையும் வருமானத்தையும் அளிக்கின்றதல்லவா? இவ்வாறாக சுமார் ஐந்து லட்சம் மக்கள் வந்து செல்கின்ற போது அவர்கள் எங்கிருந்து புறப்படுகின்றார்கள், எதில் வருகின்றார்கள் எங்கு தங்குகின்றார்கள், எவ்வாறெல்லாம் பணத்தைச் செல்வழிக்கின்றார்கள் என்று நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தீர்களேயானால் கோடிக்கணக்கான மக்களுக்கு எவ்வகையிலோ தொழில், வாடகை, சம்பளம், கட்டணம் மூலமாக இறைவன் உணவை, உறையுளை அளித்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறான் என்பது புலனாகும். இதுவே அருணாசலப் பெருமானின் மகாத்மியம் ஆகும். ஏதோ கிரிவலம் வந்தோம், சென்றோம் என்றல்லாமல் இறைப் பரம்பொருளானவர் பிரபஞ்சத்தில் எங்கு எவ்வகையிலெல்லாம் யார் யாருக்கோ எவ்வளவோ வழிமுறைகளில் படியளக்கின்றார் என்பதை இவ்வாறாக ஆத்மவிசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
யாவர்க்குமாம் இறையருள்!
இதுமட்டுமா? இங்கு கிரிவலம் செல்கின்ற அடியார்கள், நாய், அணில், எறும்பு போன்றவற்றிற்கெல்லாம் உணவிடும்போது இவ்வாறாக லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்கும் அன்னதானம் நடைபெறுகின்றதல்லவா! பூக்கள் வியாபாரம், காபி, டிபன், உணவு வகைகள், இளநீர், கேசட் கடைகள், துணிமணிக் கடைகள் என பல்லாயிரக் கணக்கானோருக்கும் வருமானம் தருகின்ற வகையிலே ஒரு தெய்வீகப் பேராட்சியாக அண்ணாமலை பௌர்ணமி கிரிவல பிரமோற்சவம் மலர்கின்றது. இதுதான் அருணாசலப் பெருமானின் அற்புதங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்த கோணங்களில் எல்லாம் பௌர்ணமியின் மகாத்மியத்தை, திருஅண்ணாமலை கிரிவல மஹிமையை என்றேனும் உணர்ந்திருக்கின்றீர்களா? ஒரு கேசட் கடையில் கேசட்டுகள் விற்பனையாகின்றன என்றால் அதனைத் தயாரித்தவர்கள், தயாரிக்கின்றவர்கள், பணிபுரிகின்றவர்கள், பாடியவர்கள், விற்பவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு கேசட்டின் விற்பனையின் பின்னணியிலும் நூற்றுக்கணக்கானோருக்கான தொழில் அம்சங்கள் நிறைந்து இருக்கின்றன அல்லவா?
“எனக்கு நல்ல வேலை கொடு, நல்ல வருமானம் கொடு, எனக்கு ஏதேனும் வருமானத்திற்கு வழி செய்”, என்று நம் மாநிலத்தில் மட்டுமல்லாமல் எங்கெங்கோ இருக்கின்றவர்களுடைய பிரார்த்தனைக்கெல்லாம் அவர்கள் அண்ணாமலைக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அவர்களுக்குரித்தான தொழில் ரீதியான வருமானங்களையும் மனதிருப்தியையும் இங்கிருந்தே எங்கும் உளனாய் அண்ணாமலையான் அருளிக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இதனை சத்குருவின் வாய்மொழிகளாக இங்கு நாம் உங்களுக்கு பல தெய்வீக ரகசிய தத்துவங்களை ஆத்ம விசாரமாக உணர்விக்கின்றோம்.

ஸ்ரீஅண்ணாமலையார் திருப்பாதங்கள்
திருஅண்ணாமலை

புண்ணிய பாதம் :
அதுமட்டுமல்லாமல் ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் வந்து செல்கின்ற பொழுது உங்களுடைய பாதங்களில் பலவிதமான புண்ணிய சக்திகள் குடிகொள்கின்றன. உதாரணமாக, காரைக்குடியிலிருந்து ஒருவர் வந்து திருஅருணாசலத்தை கிரிவலம் முடித்து செல்கிறார் என்றால் அவருடைய பாதங்களில் குடிகொள்கின்ற புண்ணிய சக்தியானது காரைக்குடியில் அவர் தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடர்கின்ற போது எங்கெல்லாம் நடந்து செல்கின்றாரோ, எங்கெல்லாம் பணி புரிகின்றாரோ, அங்கெல்லாம் அந்த கிரிவல புண்ணிய சக்தியைப் பாதையெங்கும் நிலைத்துச் செல்கின்றார், தன்னையும் அறியாமலேயே! எனவே நீங்கள் குடியாத்தத்திலிருந்தோ, வேலூரிலிருந்தோ, பாளையங்கோட்டையிலிருந்தோ எங்கிருந்து கிரிவலம் வந்தாலும் சரி உங்களுடைய திருப்பாதங்களில் படிந்துள்ள புண்ணிய சக்தியானது உங்களுடைய ஊர் சாலைகள் மூலமாக அவற்றில் நடக்கின்ற அனைவருக்கும் சென்றடைகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் நடந்து செல்கின்ற பாதையிலே வருகின்ற விலங்கினங்கள், எறும்புகள், பறவைகள் உட்பட அனைத்திற்குமே லட்சக்கணக்கான சக்தி செல்கின்றது. இதுவும் அண்ணாமலையாரின் மகிமையே. எனவேதான் அக்காலத்தில் அண்ணாமலையை கிரிவலம் வந்தவர்களுடைய திருப்பாதங்களை நன்னீரால் கழுவி, வணங்கி ஆசி பெறுவதைப் பெரும் பேறாகக் கொண்டதை நாம் பன்முறை எடுத்துரைத்து வந்துள்ளோம்.
நீங்கள் ஆற்றவேண்டிய பணிகள் :-
இதுவரைக்கும் நீங்கள் சில முறை உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மிகவும் லௌகீகமான முறையிலே அண்ணாமலையை கிரிவலம் வந்திருக்கின்றீர்கள் அல்லவா!  எப்போதுமே தெய்வீகத்தின் தன்மை என்னவென்றால் எவர் எந்த உத்தம இறைநிலையை அடைந்தாலும் அதற்கு அடுத்தபடியாக ஓர் இறைநிலை உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுதான் சித்தர்களின் இறைவழி மகாத்மியம் ஆகும். சற்குருவின் இறைப்பரிபாலனமும் ஆகும். நீங்கள் எந்த உத்தம இறைநிலைக்குச் சென்றாலும் அதற்கு அடுத்த தெய்வீக நிலை உண்டு என்பதை உணர்விக்கும் முகமாகத்தான் இறைப் பெரும் சாம்ராஜ்யம் அமைந்துள்ளது. உங்களுக்காகவே, சுயநலமாக இதுவரைக்கும் நீங்கள் கிரிவலம் வந்து விட்டீர்கள்! உங்கள் சார்பாக கிரிவல சக்திகளை, பலன்களை எவ்வகையிலே இந்த இறைப்பணிகள் மூலமாக மீண்டும் மேம்படுத்த முடியும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள். நாம் மட்டும் கிரிவலம் வந்தோம் என்ற எண்ணத்துடன் இனி திரும்பாது கிரிவல அடியார்களுக்கு எவ்வகையிலே நாம் என்ன செய்தோம் என்ற அடுத்த உத்தம நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும். நீங்கள் பலருடன் சத்சங்கமாகச் சேர்ந்து திருஅண்ணாமலைக்கு வந்து நீங்கள் செய்வதற்கான எத்தனையோ இறைப் பணிகள் இத்திருத்தலத்திலே காத்துக் கிடக்கின்றன.
கல், முள் களைந்திடல்!
கிரிவலம் வருகின்ற சாலையிலே சிறு சிறு கற்களும், முட்களும் நிறைந்து கிடக்கும் அல்லவா? நீங்கள் நாலைந்து பேர் ஒன்றாகக் கூடி புதுத் துடைப்பங்களை வாங்கி கிரிவலப் பாதையைச் சுத்தம் செய்தவாறே உங்கள் கிரிவலத்தைத் தொடர்ந்து செய்யுங்களேன். உங்கள் பின்னால் வருகின்ற லட்சக்கணக்கான மக்கள் “கல் குத்துமோ, முள் குத்துமோ” என்று அஞ்சாது வயதானவர்களும், குழந்தைகளும் தட்டுத் தடங்கலின்றி நடப்பதற்கு நீங்கள் ஒரு பெரும் இறைப் பணியைப் புரிந்திடலாம் அல்லவா! இதில் எவ்வித கேவலமோ, சங்கோஜமோ கொள்ளாதீர்கள். ஏனென்றால் ஒரு கோயிலைச் சுத்தம் செய்வது அப்பர் சுவாமிகள் வழிவகுத்த உழவாரத் திருப்பணியின்கண் அமைகின்றது அல்லவா!
இதே போல இப்போது இறைவனே திருமலையாக விளங்குகின்ற அருணாசலத்தில் நீங்கள் கிரிவலச் சாலையாக இன்று காண்பது ஒரு பிரகாரமே. ஆதலால், எவ்வித சங்கோஜமும், கௌரவமும் பாராது கிரிவலப் பாதையைத் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து வாருங்கள்! நீங்கள் முதலில் இதனைச் செய்ய ஆரம்பத்தீர்களேயானால் உங்களைக் கண்டு ஆயிரக்கணக்கானோரும் உங்கள் திருப்பணியைத் தொடர்வார்கள். அதுமட்டுமல்லாது நீங்கள் வருகின்ற போதே நிறைய பழங்களையும், உணவுப் பொட்டலங்களையும் எடுத்து வாருங்கள். வறுமையின் ஊடே நடுத்தரக் குடும்பத்தராக சரியாக பஸ் சார்ஜுக்கு மட்டும் காசை எடுத்து வைத்துக் கொண்டு அண்ணாமலைக்கு வருகின்ற நடுத்தரக் குடும்பங்களும், ஏழைக் குடும்பங்களும் எத்தனை எத்தனையோ! அவர்களுக்கு நீங்கள் அளிக்கின்ற உணவுப் பொட்டலங்களால், பழங்களால் அவர்களுடைய யாத்திரைச் செலவை ஒரு துளியேனும் குறைத்து நல்ல மன திருப்தியை அளித்திடலாம் அல்லவா? இதற்காகத்தான் பலர் சத்திரங்கள் அமைத்துத் தங்க இடமும் உணவும் தந்து சேவை புரிந்தனர்.
ஏன், எங்கள் ஆஸ்ரமம் வழியாக நீங்கள் செல்கின்ற பொழுது தெய்வீக புத்தகங்களில் ஏதோ ரூ.50/- , 100- க்குச் சில புத்தகங்களை நீங்கள் வாங்கி அதைப் பலருக்கும் இலவசமாக படிப்பதற்கு அளித்தால் ஒரு குடும்பம் மூலமாக பல குடும்பங்களுக்கும் அது பரவி ஆயிரக் கணக்கானோருக்கு பத்து, ஐம்பது ரூபாய் செலவில் இறை விஷயங்களை வித்யா தானமாய், அன்னதானம் போல் இறை அறிவினை தானமாக வழங்கிடலாம் அல்லவா? இந்தக் கோணங்களில் எல்லாம் இறைப் பணியை ஆற்றலாம் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வரவில்லை? இதற்குக் காரணம் தக்க சற்குரு அமையாதது தான். சற்குருவின் வாய்மொழிகளாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ ஆர்.வி. வெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளை இங்கு எடுத்துரைத்தோம். சிந்தித்துப் பகுத்தறிவுடன் செயல்பட்டு சிவனுடைய பொற்பாதங்களைப் போற்றி இனியேனும் உங்கள் அண்ணாமலை கிரிவலத்தில் பொதுத் தொண்டைக் கூட்டி உத்தமமான பலன்கள் கூடிய வாழ்க்கையைப் பெறுவீர்களாக!
திருஅண்ணாமலை கிரிவல நாள்
திருஅண்ணாமலையைப் பௌர்ணமி திதியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையது தான். ஆனால் லட்சக்கணக்கானோருக்கான போக்குவரத்து, இட, உணவு வசதிகளை நன்முறையில் அமையாத போது என் செய்ய முடியும்? திருஅண்ணாமலையை எந்நாளும், எப்போதும் எந்நேரத்திலும் கிரிவலம் வந்திடலாம். நாம் பன்முறை எடுத்துரைத்து வந்தது போல நீங்கள் சோதனை செய்து பார்த்தால் கூட இத்திருத்தலத்தை எபோதும் எந்நேரத்திலும் எந்த நாளிலும் நள்ளிரவிலும் கூட அண்ணாமலையை பலர் கிரிவலம் வந்தவாறு தான் இருக்கின்றார்கள். சித்தர்களும், யோகிகளும், மகரிஷிகளும் இந்த திருத்தலத்தில் கிரிவலம் வராத நாளே இல்லை. ஒவ்வொரு நாளிலும் குறித்த சில மகரிஷிகள், யோகிகள், கிரிவலம் வந்த வண்ணம் தான் இருக்கின்றார்கள். எனவே, உங்களுடைய திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், ஜன்ம நட்சத்திர நாள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாள் போன்ற பல தினங்களை உங்களுக்கென குறித்துக் கொண்டு அழகாக, அற்புதமாக கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் திருவருளைப் பெற்றிடுங்கள்.
சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் வந்தால் கூட அதை விட்டு வைக்காதீர்கள். அந்த நாட்களுக்கென கிரிவலப் பலன்கள் நிச்சயமாக உண்டு. உதாரணமாக சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ அது மக நட்சத்திர நாளாக அமைந்தால் எமபயம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நோய்களைப் பற்றிய அச்சமும் பயமும் தணிந்து, “இந்த நோய் இருக்கிறதே, எவ்வாறு நான் வாழ முடியும்? நோய்களால் என் குடும்பம் அவதியுறுமோ!” என்ற எண்ணங்கள் எல்லாம் நீங்கி நோய் நிவாரணத்திற்குரிய நல்ல வழிகளை மக நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் பெற்றுத் தருகின்றன.
மேலும், நீங்கள் கிரிவலம் வருகின்ற ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விசேஷத் தன்மை உண்டு. தெரிந்துதான் கிரிவலம் செய்ய வேண்டும் என்பதில்லை. தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அதனுடைய பலாபலன்களை உங்களுடைய பித்ரு தேவர்கள் உங்களுக்கு அளித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே அடுத்த முறை நீங்கள் கிரிவலம் வருகின்ற போது உங்கள் பை நிறைய பழங்களும் உணவுப் பொட்டலங்களும், துணிகளும் நிறைந்து எந்த வகையில் எல்லாம் தான, தர்மங்கள் செய்ய முடியுமோ அந்த பொருட்களையெல்லாம் எடுத்து வந்து தானம் செய்திடுக! இதுதான் உங்களுடைய கிரிவலத்தின் புண்ணிய சக்தியை மேம்படுத்துகின்றது. உங்களுக்காக மட்டும் இனி கிரிவலம் வந்திடாது. உங்கள் உடல்திறன், வசதி, திறமையைப் பொறுத்து சில இறைப் பொதுத் திருப்பணிகளோடு கிரிவலம் வந்து பலன்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தான் மக்கள் சேவையே மஹேஸன் சேவை என்கின்றோம்.

சர்வ புத்ரதா ஏகாதசி

ஏகாதசி விரதம் என்பது கடினமானதல்ல, ஜாதி, மத இன, குல பேதமின்றி யாவரும் கடைபிடிக்க கூடிய மிக எளிய உண்ணா நோன்பு, இதன் பலாபலன்களோ ஏராளம், ஏராளம்! உங்களுக்கு வருகின்ற பல துன்பங்களுக்கும் என்ன வழி வகை என்று தெரியாமல் நீங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா! ஏகாதசி விரத பலன்களாகவை இவற்றுள் பலவற்றைத் தீர்த்து விடுகின்றன, உங்களையும் அறியாமலேயே, அதுவும் மிக எளிய முறையில்! ஏகாதசி உண்ணா நோன்பு என்பது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் சுத்தியைத் தருவதோடு மட்டுமல்லாமல் இடர்களைக் களையும் எளிய விரதமாகவும் விளங்குகின்றது.
ஏகாதசி விரதம் என்றால் நமக்கு ஒத்துவராதது, மிகவும் கடினமானது, நம்மால் செய்ய முடியாதது, குறிப்பிட்ட சிலரால் தான் இதனைக் கடைபிடிக்க முடியும் என்றெல்லாம் பலவகையான தவறான எண்ணங்கள், ஏற்பட்டுள்ளன. பரம்பொருளாம் பெருமாளுக்குரிய விரதப் பண்டிகைகளுள் ஒன்றாக விளங்குகின்ற ஏகாதசி விரதத்தை நீங்களும் மிகவும் எளிமையான முறையில் கடைபிடித்திடலாம். ‘பணத்தாலோ, காசாலோ, பொருளாலோ எதனையும் நாம் இறைவனுக்குச் செய்கின்ற நிலையில் நாம் இல்லை, ஏதோ நம் வாழ்க்கை ஓடினால் சரி, குடும்பத்தைக் காப்பாற்றினால் சரி என்ற நிலையில் தானே நாம் இருக்கின்றோம். இதில் நாம் எந்த வகையில் விரதங்களைக் கொண்டாட முடியும்’, என்ற வகையான எண்ணமும் பலருடைய உள்ளத்திலும் பதிந்திருக்கின்றது.
பணம், காசு வந்தால் தான் இறைவனுக்குச் செய்ய வேண்டியதைப் பற்றி நினைக்கவே முடியும் என்றும் பலரும் தவறாக நினைக்கின்றார்கள். கேளிக்கைகள், ஹோட்டல் செலவுகள், அநாவசியமான செலவுகள், சினிமா, சீட்டாட்டம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பலவிதமான வீணான செலவுகளில் உங்கள் பணமும், நேரமும் விரயமாகின்றதல்லவா? இவற்றிற்கு மட்டும் எப்படி பணம் வருகின்றது? இவற்றை மனசாட்சியுடன் நினைத்துப் பார்த்தீர்களேயானால் தான் தீய வழிச் செலவுகளை விடுத்து  உங்களுடைய வாழ்க்கையை செம்மையான நெறியில் அமைத்துக் கொள்ள விரத நோன்புகள் எவ்வாறு உதவும் என்பது தெரிய வரும்.
சர்வ புத்ரா ஏகாதசி என்பது பொதுவாக பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கென கருதப்பட்டாலும் பிள்ளை உள்ளவர்களும், குழந்தைகளும் ஆற்ற வேண்டிய/ எடுத்துச் செய்ய வேண்டிய மகத்தான ஏகாதசி விரதமாகும். இதனை எளிமைப்படுத்திச் சித்புருஷர்கள் அருளியுள்ளவாறே இங்கு எடுத்துரைக்கின்றோம். ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 24, 25 ஏகாதசி திதிகள் அமைகின்றன. அமாவாசையிலிருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது திதியான ஏகாதசி தினத்தை விசேஷமாக எடுத்துக் கொள்வது ஏன்? மற்ற திதிகளில் ஏன் உண்ணாவிரதம் அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை என்ற கேள்விகள் எழும் அல்லவா?
கலை தே(தோ)ய்ந்த ஏகாதசி !
பௌர்ணமியிலிருந்து சந்திரனுடைய கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து வருகின்ற போது சந்திர கதிர்கள் பரிணாமக் கதிர்க் கோணங்களும், பலாபலன்களும், கிரண சக்திகளும் மாறுபடுகின்றன. ஏகாதசி திதியன்று, முந்தைய பத்து திதிகளுக்குரிய பத்து கலைகளும் மறைந்து எஞ்சியுள்ள கலைகள் தாம் நிலவில் மிஞ்சி நிற்கின்றன. அதாவது துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகிய மூன்று திதிகள் தாம் ஏகாதசியைத் தவிர மிஞ்சுகின்றன. இந்த மூன்று திதிகளில் வெளிவருகின்ற சூரிய சந்திர கதிர்கள் – நாம் கொழுப்பு சக்தி என்று எதனைய் விஞ்ஞானத்தில் கூறுகின்றோமோ – அந்த வாயு பிண்ட சக்திகள் நிறைந்த கதிர்களைக் கொண்டவையாக இம்மூன்று தினங்களிலும் சூரிய, சந்திரக் கதிர்கள் இருக்கும். அதாவது துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி தினங்களில் வெளிவருகின்ற கதிர்கள் யாவுமே வாயுப் பிண்ட சக்தியைக் கொண்டிருப்பதால் இவை நம் உடலில் கொழுப்பாகச் சேர்கின்ற பொழுது அவற்றை கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற்றாக வேண்டும்,
உண்மையில் நாம் வெறும் உணவினால் மட்டும் வாழவில்லை. நாம் உட்கொள்கின்ற காற்று, நம்மீது படுகின்ற சூரிய, சந்திர கிரணங்கள் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்களின் ரேகைகளின் ஒளி சக்திகள் இவற்றையும் கொண்டு தான் நாம் உயிர் வாழ்கின்றோம். இதனால் தான் நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நீர், உணவின்றி இருந்தால் கூட இந்த உடலில் உயிர் வாழ்வதற்குக் காரணம் மேற்கண்ட சக்திகளே ஆகும். எனவே உங்களுடைய வாழ்க்கை முறையை சற்றே கவனித்துப் பார்த்தீர்களேயானால் துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி நாட்களில் அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முந்தைய  மூன்று தினங்களில் உங்களுக்குப் பலவிதமான உடல் உபாதைகளும், மனக்குழப்பங்களும், நோய்களும் மற்றும் பலவிதமான மன உளைச்சல்களும் ஏற்படக் கூடும். எனவே தான் அமாவாசை, பௌர்ணமி திதிகளில் மனநிலை சரியில்லாதோர்க்கு மன உபாதைகள் பெருகும்.
தினந்தோறும் நாம் சூரிய, சந்திர கிரண சக்திகளை நம் உடலில் ஏற்பதால் அவற்றின் பலவித சூட்சும சக்தியால் பலவிதமான துன்பங்களை களைந்து விடுகின்றோம். ஆனால் இந்த மூன்று தினங்களிலும் சூரிய, சந்திர மண்டலத்திலிருந்து வெளிப்படுகின்ற கொழுப்பு சக்தியை நம் உடலில் முறையாகச் சேரும் முறையைப் பெற்றாக வேண்டும். அப்போது தான் இது நம் உடலுக்குப் பயன்படும். இல்லாவிடில் சக்திகளை நாம் விரயம் செய்கின்றோம். அல்லது இதனால் மனம், உடல் பாதிக்கப்பட்டு விடும்.  எனவேதான் நாம் ஏகாதசியில் உண்ணா நோன்பு கொண்டோ அல்லது உணவின்றி துளசி தீர்த்தம்/ வில்வ தீர்த்தம் மட்டுமே அருந்துவதால் பலவகையான ஆன்மீக நெறிமுறைகளைக் கையாளும் பொழுது அடுத்து வருகின்ற மூன்று திதிகளில் உள்ள சூரிய, சந்திர கிரணங்களின் வாயு அண்ட சக்தியைக் கிரகித்துக் கொள்வதற்கான சக்தியை நாம் ஏகாதசி திதி விரதம் மூலமாகப் பெற்றுக் கொள்கின்றோம். இதற்கு வழிவகை செய்வதாகத்தான் ஏகாதசி விரதப் பாங்கு அமைகின்றது.
ஏனென்றால் நம் உடலில் உணவு இல்லாத போது ஒரு சில புதுவகையான சுரப்பிநீர்கள் உருவாகின்றன. பொதுவாக எப்போதும் எதை எதையோ உண்பதால் நம் உடலில் வயிற்றில் அவ்வப்போது ஏதேனும் உணவோ, நீர் வகையோ தங்கி இருப்பதால் இந்த புது வகை சுரப்பு நீர் சுரக்காமலேயே இருந்து விடுகின்றது. எப்போது நம் வயிறானது காலியாக இருக்கின்றதோ அப்போது “ஏக கங்கா” என்ற சுரப்பு நீர் உருவாகின்றது. இது மட்டுமல்லாது ஏகாதசி தினத்தன்று அதாவது பதினோறாம் திதியில் குறைந்த கலைகள் மட்டுமே சந்திர மண்டலத்தில் உறைந்திருக்கின்ற பொழுது இந்த கலைகளின் மூலத்திலிருந்து ஏற்படுகின்ற “சதுர் பாவன கிரணங்கள்” தாம் இந்த சுரப்பி நீரை நம் உடலில் உருவாக்குகின்றன.
அப்படியானால் இந்த ஏக கங்கா சுரப்பி நீரானது நம் உடலில் உருவாக வேண்டும் என்றால் நாம் ஏகாதசியன்று கட்டாயமாக உண்ணாநோன்பு இருந்திடல் வேண்டும். இயலாதோர் துளசி நீர் அல்லது வில்வநீரை சிறிதே அருந்தி கூட உண்ணா நோன்பை மேற்கொண்டிடலாம் ஏனென்றால் இவையிரண்டும் ஏக கங்கா சுரப்பி நீரை விருத்தி செய்கின்ற தெய்வீகத் தன்மையைத் தன்னுள் கொண்டுள்ளவையாகும். எனவே ஏகாதசி விரதத்தை நாம் கைக்கொள்வோமேயானால் ஏக கங்கா என்ற அற்புதமான தீர்த்த சுரப்பி நீர் நம் உடலில் சுரப்பதற்கான தெயவீக வழிகளை நாம் கையாள்கின்றோம் என்பது பொருளாகும். இதுவே சூரிய, சந்திர வாயு அண்ட கிரண சக்திகளை கிரஹித்து மனக் குழப்பங்களுக்கு நிவர்த்தியைத் தருகின்றது. எனவே சர்வ புத்ரதா ஏகாதசி திதியன்று நம் உடலில் சுரக்கின்ற நீருக்கு பொதுப்படையாக ஏக கங்கா தீர்த்தம் என்று பெயர்.
அந்தத் தீர்த்தம் நம் உடலில் சுரக்குமேயானால் இதன் மூலம் மூளையில் உள்ள வித்யா பரிணாம செல்கள் ஆக்கம் பெறுகின்றன. மற்றும் சந்ததி விருத்திக்குத் தேவையான பலாச கதிர்களும் விந்து மண்டலத்தில் குடிகொள்கின்றன. இது மட்டுமல்லாது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்ற போது பெற்றோர்களுக்கு ஒருவிதமான பயமும், தயக்கமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். இவற்றைக் களைவதற்கான சக்தி மூளையில் உள்ள பாவன நரம்புகளுக்குத்தான் உண்டு. இவற்றை ஆக்கம் செய்வதற்கான சக்தியை ஏகாதசியில் வரும் சூரிய, சந்திர கிரணங்களில் உள்ள வாயுப் பரிமாணக் கதிர்கள் தாம் பெற்றுள்ளன. எனவேதான் பிள்ளைகள் உட்பட அனைத்து வயதினருமே ஏகாதசி திதியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி திதியன்று அகத்திக் கீரை உணவை உண்டு விரதத்தை முடித்திடல் வேண்டும்.
ஏனென்றால் மிகச் சிறந்த மூலிகையான அகத்திக் கீரைக்கு நேத்திர சக்திகளும் பல மூலிகா சக்திகளும் இருப்பதால், இம்மூலிகைக் கீரைதான், உணவின்றி வெறும் வயிற்றில் சுரக்கும் ஏக கங்கா சுரப்பித் தீர்த்தத்தை கிரஹிக்கின்றது. ஏகாதசி திதி முதல் சூரிய கிரணங்களில் பரிணமிக்கின்ற வாயுப் பரிமாண சக்தியை அகத்திக் கீரையின் மூலிகா சக்திகள் தாம் “ஏக கங்கா தீர்த்தம்“ மூலமாக நம் தேகத்திற்கு ஏற்றாற்போல் ஆக்க சக்தியாக (Energy) மாற்றித் தருகின்றது. சிறுவர்கள் பழசரம் மட்டும் அருந்தியும், ஏனையோர் ஏகாதசி திதி முழுவதுமாகவும் நீர் கூட அருந்தாது உத்தமமான நிர்ஜல உண்ணாநோன்பா அல்லது அவரவர் உடல்வாகிற்கேற்ப துளசி/வில்வம் ஊறிய நீர் மட்டும் அருந்தி மறுநாள் காலை துவாதசியன்று நெல்லி முள்ளி எனப்படும் நெல்லி வற்றல் கலந்த உணவு அல்லது வெறும் நெல்லிக்காய், அல்லது புளி சேராத அகத்திக் கீரை உணவு உட்கொண்டு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்திடலாம்.
நெல்லிக்காய் மனசுத்தியைத் தரும். சர்வபுத்திரதா ஏகாதசி நாள் முழுவதும் பெருமாள் துதியுடன் “ராமா, கிருஷ்ணா, கோவிந்தா” என ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நினைவுடன் இருப்பது சிறப்புடையது. அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாளை ஏகாதசி, துவாதசி திதிகளில் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுவது சிறப்புடையது. பொதுவாக பிள்ளைகளுடன் உள்ள மனஸ்தாபங்கள், சண்டைகள் தீர்ந்து குடும்பம் ஒற்றுமை அடைய சர்வபுத்ரதா ஏகாதசி விரதம் உதவுகிறது.

சூரிய சஷ்டி விரதம்

குடும்ப ஒற்றுமைக்கான பூஜை
சூரிய பகவான், ஸ்வர்ச்சலாம்பா தேவியுடன் மீண்டும் இணைவதற்காகப் பல விரதங்களையும், பூஜைகளையும் மேற்கொண்டார். அவற்றுள் ஒன்றே சூரிய சஷ்டி விரதமாகும். சூரியன், சந்திரன் போன்ற நவகிரக மூர்த்திகள் பலவிதமான புராண வைபவங்கைளில் நற்பாத்திரங்களாகப் பங்கு பெற்று நமக்குப் பல பாடங்களைப் புகட்டுகின்றனர். குடும்பத்திற்குரிய தர்ம நெறிகளிலிருந்து மீறிச் செல்கின்ற கணவனோ, மனைவியோ நன்முறையில் திருந்தி தம்பதிகள் மனஒற்றுமையுடன் மீண்டும் இணைந்து வாழ அருள்பாலிப்பதே சூரிய சஷ்டி விரதமாகும்.
எத்தனையோ கோடி சூரிய கிரகங்கள் உள்ளன. ஸ்ரீசூரியநாராயண சுவாமி தான் அனைத்து கோடி சூரிய கோளங்களுக்கும் அதிபதியாவார். ஒரு முறை விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி என்னும் சூரியனுக்குத் தன்னுடைய ஒளியால்தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் ஜீவ சக்தியைப் பெறுகின்றன என்ற எண்ணம் சற்றே தோன்றிவிட்டது. இது அகந்தையின் பால்பட்டது தானே! உடனே அதற்குரிய தண்டனையையும் அவர் பெற வேண்டியதாயிற்று! சூரியன் பூமியை வலம் வருகையிலே அவருடைய ஒற்றைக் கால் தேர்ச் சக்கரத்தில் கட்டைவிரல் அளவுள்ள வாலகில்ய மஹரிஷிகளும் எத்தனையோ யோகியரும், சித்புருஷர்களும் வேத மறைகளை ஓதியவாறே சூரிய ஒளிக் கிரணத்தின் தன்மையை பூலோக வாழ்க்கைக்கு ஏற்றவாறு வேத சக்தியால் மாற்றிப் பரவெளியில் செலுத்தி வருகின்றார்கள்.
த்வனி ப்ரபாவ சித்தர்கள்
சூரியனுக்கு இவ்வாறு ஏற்பட்ட அகந்தையைக் கண்ட த்வனி ப்ரபாவ சித்தர்கள் என்னும் ஒருவகை சித்தர்கள் தம்முடைய இறைப் பணிகளை மற்றொரு சூரிய மண்டலப் பகுதிக்கு மாற்றிக் கொண்டார்கள். எதற்கு? உலகத்திற்குப் பாடம் புகட்டும் முகத்தான். மறுநாள் சூரிய உதயத்தின் போது தன்னுடைய கிரணங்கள் பெரிதும் வலிமையை இழந்திருப்பதாக உணர்ந்தார் பாஸ்கர மூர்த்தி! எவ்வளவுதான் முயன்றாலும் அவரால் தன்னுடைய கதிர்வீச்சுகளை முழுமையான அளவில் பூலோகமெங்கும் பரப்ப இயலாமல் போய்விட்டது. தொலைபேசித் துறையில் Coaxial Cable என்று சொல்கின்றோமே, அதே போல ஆங்காங்கே கிரண வீச்சுக்களை அதிகப்படுத்தும் முறையாக சூரிய மூர்த்தி எத்தனையோ ஆதித்ய சக்கரங்களை ஆக்கப்படுத்தியும் கூட அவரால் தம்முடைய கிரணங்களை பூமியில் செலுத்த இயலவில்லை.

ஸ்ரீஅகத்தியர் திருப்புகலூர்

ஒருபுறம் சினமுற்ற சூரியன், மறுபுறம் தன்னுடைய பணியின்றி உலக ஜீவித வாழ்க்கை எவ்வாறு நிகழும் என்பதையும் சோதிக்க விரும்பினார். இதுவும் அகந்தையின்பால் பட்டதுதானே? எப்போதுமே சித்புருஷர்கள் பூலோகத்திற்கு மட்டுமல்லாது கோடானு கோடி லோகங்களிலும் ஏற்படுகின்ற துன்பங்களை அவற்றிற்குரிய நிவாரண வழிமுறைகளையும் அவ்வப்போது அளித்து வருகின்றார்கள். இன்றைக்கும் ஸ்ரீஅகஸ்திய மாமுனி அனைத்துக் கோடி லோகங்களுக்கும் சென்று வருகின்ற சித்புருஷ ஜோதியாக விளங்குகின்றார். இவ்வாறாகத் தான் நாரதர், வசிஷ்டர், அகத்தியர் போன்ற மகரிஷிகளும், யோகியரும், சித்புருஷர்களும் இறைப் பிரதிநிதிகளாகப் பிறப்பெடுத்து அனைத்துக் கோடி லோகங்களிலும் ஏற்படுகின்ற இடர்களுக்கும், துன்பங்களுக்கும், தவறுகளுக்கும் பிராயச்சித்தத்தை நல்குகின்றார்கள்.  
த்வனி பிரபாவ சித்தர்கள் இடமாற்றம் கொண்டு மற்றொரு சூரிய மண்டலத்திற்குச் செல்வதற்கான காரணம் என்னவோ? எக்காரணங்கொண்டும்., பூலோக ஜீவ வாழ்க்கை எவராலும் தடைபடுதல் கூடாது என்பதே இறைநியதி., எனவே மற்றொரு சூரிய மண்டலத்தில் இருந்து கொண்டே த்வனி பிரபாவ சித்தர்கள் தங்களுடைய தபோ பலத்தினால், விண்ணில் ஆங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த ஏனைய சூரிய கோள சக்திகளின் மூலமாக பூலோகத்திற்கு வேண்டிய சூரிய கிரண சக்தியை அளிக்க வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அகங்காரத்தால் செருக்குற்ற விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி தானின்றியும் கூட பூலோக வாழ்க்கை எப்போதும் போல இயங்குவதைக் கண்டு அதிசயித்து ஆச்சரியப்பட்டுத் தன்னுடைய தவறுகளுக்குப் பிராயச் சித்தம் தேடலானார். இந்நிலையில்தான் சூரிய மூர்த்தியின் தேவியான ஸ்வர்ச்சலாம்பாள், சூரிய மூர்த்தியின் அக்னியைத் தாளஇயலாமல் சாயாதேவி என்னும் தன்னுடைய நிழலைப் படைத்துவிட்டு, சூரிய மூர்த்தியை விட்டு விலகிச் சென்று தனியோரிடத்திலே தக்கதோர் தவத்தைத் தொடங்கினாள். இதனாலும் பெரிதும் துயருற்ற விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி தன் தேவியுடன் இணைய வேண்டி பூலோகத்தில் பல இறைத் தலங்களில் எத்தனையோ விதமான பூஜைகளையும், ஹோம , வேள்வி, யாகங்களையும் மேற்கொண்டவாறே காவேரிக் கரைத்தலங்களையும் தரிசித்தவாறு ஓரிடத்தில் வந்து சேர்ந்தார்.
தம்முடைய அகங்காரத்திற்கான பிராயச்சித்த வழிமுறைகளை விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி எவரிடமிருந்து பெற்றார் தெரியுமா? அவர் தாம் அக்னிபுராந்தக மகரிஷி ஆவார். பிரபஞ்சத்திலுள்ள அனைத்து வகையான அக்னிகளைக் கொண்டு எத்தனையோ வேள்விகளை நடத்தி பிரபஞ்சத்தின் அனைத்து கோடி ஜீவன்களுக்கும் தன்னுடைய தபோபலனை அர்ப்பணித்து வருபவரே ஸ்ரீஅக்னி புராந்தகர். அக்னி புராந்தக மகரிஷியிடம் தன்னுடைய கர்வபங்கத்திற்கான காரணங்களை அறிந்து அவற்றிற்கான நிவாரண இறைவழி முறைகளையும் பெற்ற விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி பல திருத்தலங்களுக்கும் சென்று இறுதியில் காவிரி கரைத்தலங்களில் முக்கியமான ஒரு தலத்தை அடைந்தார். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் இத்தனை தலங்களை பாஸ்கர மூர்த்தி தரிசிக்க வேண்டும்? ஒரு தலத்தை தரிசித்தாலே அங்கு எத்தகைய தவறுகளுக்கும் உரிய பிராயச்சித்தம் கிட்டிடாதா? நாம் இங்கு காண்கின்ற விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி உண்மையிலேயே செருக்குக் கொண்டாரா? இல்லை. இல்லை! பூலோக ஜீவன்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டும் முகமாகத் தான், தாம் செருக்குற்றதாக, இறைலீலையாக இந்த பாத்திரத்தை ஏற்று நமக்கு ஒரு புராண லீலையை நடத்திக் காண்பிக்கின்றார். ஏனென்றால் சூரிய மூர்த்தியாக விளங்குகின்றவர் எத்தகைய தெய்வீக சக்திகளை, ஈஸ்வர அவதார அம்சங்களை, தன்னுள் கொண்டிருப்பார் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
எங்கெங்கு காணினும் (சூரிய) சக்தியடா!
எனவே, இந்த ஒரு புராண வைபவம் மூலமாக ஸ்ரீவிஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி எத்தனையோ திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுகையில் அவருடைய பாஸ்கர சக்திகள் எல்லாம் அந்தந்த தலங்களில் குடியேறி அங்கு வருகின்ற பக்தர்களுக்கு கோடானு கோடியுகங்களாக அன்றும், இன்றும், என்றும் அருள்பாலிக்கும் வண்ணம் திகழ்கின்றன. இவ்வாறு விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி, விஜயம் செய்து வழிபட்ட பல தலங்கள்தாம் இன்றைக்குச் சூரிய பூஜைத் தலங்களாக அதாவது மூல மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் விழுகின்ற பாஸ்கர பூஜைத் தலங்களாக விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எத்தனையோ திருத்தலங்களுக்குச் சென்றும் விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்திக்கான நிவர்த்தி முறைகள் கிட்டவில்லை என்று தவறாக நினைப்பதை விட இறைலீலையாக ஆங்காங்கே பாஸ்கர சக்திகளைக் கூட்டிடும் பொருட்டுப் பல திருத்தலங்களுக்கும் சென்ற விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி இறுதியாக தம்முடைய பரிகார வழிபாடுகள் எல்லாம் பூரணம் அடையும் வண்ணம் சூரிய கோடீஸ்வரர் என்ற அரிய சிவமூர்த்தி அருள்பாலிக்கின்ற சிவத்தலத்தை அடைந்தார் என்று உணர்வதே உத்தமமானது. இதுதான் இன்றைக்குத் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே கஞ்சனூர் என்னும் திருத்தலத்தின் அருகே உள்ள சூரிய மூலை அல்லது சூரிய மலை என்னும் கிராமத்தில் இருக்கின்ற சூரிய சிவலிங்க மூர்த்தியாகும். இவ்விடத்திற்கு வந்த விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி தம் கண்களால் கூட காண இயலா வண்ணம், பலகோடி சூரிய மூர்த்திகளை ஒன்று சேர்த்தாற்போல் ஒளிப்பிரவாகமாக ஒரு லிங்க மூர்த்தி இருப்பதைக் கண்டு அதிசயித்தார். தாம் தான் பூலோக ஜீவன்களுக்கு ஒளியுடன் கூடிய ஜீவ சக்தியைத் தருகின்றோம் என்று செருக்குக் கொண்டார் அல்லவா? அப்படிப்பட்ட சூரிய மூர்த்தி கண்களாலேயே தரிசிக்க இயலாத அளவிற்கு ஒளிப்பிரகாசத்தைக் கொண்டவராக ஸ்ரீசூரியகோடீஸ்வரர் விளங்குகின்றார் என்றால் என்னே அவர்தம் மகிமை! சுயஞ்ஜோதி லிங்கம் அல்லவோ அது!

ஸ்ரீசூரியகோடீஸ்வர மூர்த்தி
கீழ்சூரியமூலை

ஸ்ரீசூரிய கோடீஸ்வரருடைய ஒளிப்பிரகாசத்தைக் கண்டு நாணமுற்றவராய் அந்த ஒளிப்பிரவாகத்திலே தட்டு தடுமாறிச் சென்று இறைவனுடைய திருப்பாதங்களைச் சரணடைந்தார் விஸ்வேந்திர சூரிய மூர்த்தி. அங்கே  கோடானுகோடி சூரிய மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பிரகாசிப்பது போல ஜோதி ஸ்வரூபராய் சூரிய கோடீஸ்வரர் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதில் மிகவும் அற்புதமான, ஆச்சரியமான தெய்வீக விஷயம் என்னவென்றால் இந்த ஸ்ரீசூரிய கோடீஸ்வர மூர்த்திக்கு உரித்தான ஒளி எங்கிருந்து வருகின்றது தெரியுமா? அதை அளிப்பவர்தாம் பஞ்ச பூதத் தலங்களில் அக்னி மூர்த்தித் தலமாக விளங்குகின்ற திருஅருணாசல மூர்த்தியாவார்.
ஆம்! கோடானு கோடி நட்சத்திரங்களுக்கும் சூரிய கோடி மூர்த்திக்கும் கூட அக்னியை அருள்கின்றவரே திருஅருணாசல மூர்த்தியாவார். பல கோடி சூரிய கோளங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால் சூரியமலை போல்தானே அது காணப்படும். எனவேதான் இது சூரியமலை என்று அழைக்கப்படலாயிற்று. ஏன் சூரியமூலை என்ற பெயரும் வந்ததோ? கோடானு கோடி சூரியர்களின் சுயம்பு ஜோதிப் பிரகாசமாக ஒளிர்கின்ற ஸ்ரீசூர்ய கோடீஸ்வர லிங்கத்தின் முன்னால், தான் ஏதோ ஒரு மூலையில் இருப்பது போல விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி உணர்ந்தமையால், இது சூரியமூலை என்றும் ஆயிற்று. மேலும் பூலோகத்தில் ஏதோ ஒரு மூலையில் சூரிய கோடிப் பிரகாசமாய் அமர்ந்து கொண்டு பிரபஞ்சத்திலுள்ள பல கோடி சூரியன்களுக்கும் உரிய அக்னியைப் பெற்றுத் தருவதாக விளங்குகின்ற, சூரிய மூர்த்திகளும் வழிபடுகின்ற மூர்த்தியென்றால் என்னே அவர்தம் மகிமை!
சூரிய சஷ்டி காரிய சித்தி
இன்றைக்கு இந்த சூரியமூலை சிவன் கோயிலானது சிதிலமடைந்து காணப்படுகின்றது. ஒரு யுகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய சிவன் கோயிலாகும் இது. தினமும் குறிப்பாக ஞாயிறு தோறும் அனைத்துக் கோடி சூரிய மூர்த்திகளும் வழிபடுகின்ற ஸ்ரீசூரிய கோடீஸ்வர சிவலிங்க மூர்த்தியாவார். இங்கு விஸ்வேந்திர பாஸ்கர மூர்த்தி வந்து சேர்ந்த தினமே பஞ்சமி திதி நிறைவுறும் நாளாக முருகப் பெருமானுக்குரிய சஷ்டி திதியாக விளங்கியது. ஏனென்றால் ஆறுவகையான கார்த்திகை நட்சத்திரங்களின் ஒளி பொங்குகின்ற திருநாளே சஷ்டி தினமாகும். இந்த தினத்தில் தான் சஷ்டி விரதத்தை சூரியபகவான் மேற்கொண்டு தான் இழந்த ஜீவ ஒளி சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு சேரப் பெற்ற தினமே சூரிய சஷ்டி தினமாகவும் விளங்குகின்றது. இந்த தினத்தில்தான் சூரியபகவான் சூரிய கோடீஸ்வர மூர்த்திக்கு வெண்ணெய்க் காப்பு, தேன் காப்பு, தயிர்க் காப்பு, பழக் காப்பு, மிளகுக் காப்பு, சந்தனக் காப்பு என ஆறுவகையான காப்புகளை இட்டு சஷ்டி திதி முழுவதும் உண்ணாநோன்பிருந்து, ஆறுவகையான ஜோதி தரிசனங்களை இங்கு பெற்றார்.
எனவே இம்முறையில் சூரிய சஷ்டி விரதத்தை மேற்கொண்டு இத்திருத்தலத்தில் சூரிய கோடீஸ்வரரை வணங்கி மேற்கண்ட ஆறுவகைக் காப்புகளுடன் வழிபட்டு ஆறுவிதமான ஜோதி தரிசனங்களைப் பெறுதல் வேண்டும். வெண்ணெய்க் காப்பிற்குப் பிறகு நெய் தீபமும், தேன் காப்பிற்குப்பின் விளக்கெண்ணெய் தீபமும், தயிர்க் காப்பையொட்டி இலுப்பெண்ணெய் தீபமும், பழக்காப்புடன் தேங்காய் எண்ணெய் தீபமும், மிளகுக் காப்பு இட்டவுடன் நல்லெண்ணெய் தீபமும், இறுதியாக சந்தனக் காப்பு இட்டவுடன் கற்பூர தீபமும் ஏற்றி வழிபடுதல் வேண்டும். இன்று உண்ணாநோன்பு இருத்தல் சிறப்புடையது. ஆனால் நெடுந்தூரம் பிரயாணம் செய்து இத்திருத்தலத்தை தரிசிக்க வருகின்ற பொழுது உடல் களைப்பும், சோர்வும் ஏற்படும் அல்லவா? எனவே உண்ணா நேன்பை ஏற்க இயலாதோர் சூரிய பகவானுக்குரித்தான கோதுமைக் கஞ்சியை மட்டும் அருந்தி உண்ணா நோன்பு ஏற்றிடலாம்.. இவ்வாறாக சூரிய சஷ்டி விரதத்தை இத்திருத்தலத்தில் கடைபிடிப்போருக்கு கிட்டுகின்ற பலாபலன்களாவன,
1. மனத்தாங்கல்கள், மனவேறுபாடுகள் காரணமாக பிரிந்த தம்பதியினர் மீண்டும் நன்முறையில் இணைவதற்கு இந்த சூரிய சஷ்டி விரதம் பெரிதும் உதவுகின்றது. பெரும்பாலும் டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற உயர்கல்வி கொண்டவர்களாக தம்பதியர் இருக்கின்றபொழுது உயர்கல்வி அறிவு காரணமாக ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை இல்லாது குடும்பச் சண்டைகள் பெருகி இது தம்பதியினர் பிரிந்து வாழ்கின்ற அளவிற்குக் கொண்டுபோய் விட்டுவிடும் அல்லவா? இதற்குப் பரிகாரமாக அமைவதே இந்த சூரிய சஷ்டி விரதமாகும்.
2. பல குடும்பங்களிலும் உயர்ந்த அந்தஸ்து பதவிகளாலும் அடிக்கடி விமானப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் காரணமாகவும் கணவன், மனைவி, குழந்தைகளிடையே இருக்க வேண்டிய பாசப் பிணைப்பு குறைந்து போய் விடுகிறது. இவ்வாறின்றி குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருமே உயர்ந்த நேசத்துடன், கடவுள் பக்தியுடன் சேர்ந்து வாழ்ந்திட இந்த சூரிய சஷ்டி விரதம் உதவுகின்றது.
3. பொதுவாக ஆறு பேருக்கு மேல் உள்ள குடும்பங்களில் அல்லது கூட்டுக் குடும்பங்களில் (Joint Families) பலவிதமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களும், தம்பதியினரும், குழ்ந்தைகளும் ஒன்று சேர்ந்து சூரிய சஷ்டி தினத்தன்று சூரிய மூலை கிராமத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசூரியகோடீஸ்வர மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சூரிய கிரஹத்திற்குரிய கோதுமையினாலான உணவுப் பொருட்களை (சப்பாத்தி, பூரி, அல்வா) தானம் செய்து வந்திடில் எவ்விதப் பிளவுமின்றிப் பிரிந்த கூட்டுக் குடும்பம் நன்முறையில் நடைபெறும்.

ஸ்வர்ண கௌரி விரதம்

தங்கத்திற்கு மகத்தான தெய்வீக சக்திகள் உண்டு. இதனால் தான் மாங்கல்யமானது பொன்னால் செய்யப்படுகின்றது. வேத மந்திரங்களை கிரகித்து, ஈர்த்து பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தன்னுள் வைத்திருந்து எத்தனையோ ஆயிரம் சந்ததிகளுக்கு அருள்பாலிப்பதாக தங்கம் விளங்குவதால் தான் இதனை ஆபரணமாகவும், குடும்ப பாரம்பரியமாக மாங்கல்யமாகவும் நாம் அணிகின்றோம். தெய்வீகமான வாழ்க்கை வாழ்வதற்கு பொன் இன்றியமையாததாகும். உடலில் பொன் ஆபரணங்கள் உராய்வதால் பல தெய்வீக சக்திகள் உடலில் சேருகின்றன. இதற்காகத்தான் ஆபரணங்கள் அணிகின்ற வழக்கம் நடைமுறையில் ஏற்பட்டுள்ளது.
ஸ்வர்ண கௌரீ என்பது பொன், வைடூரிய, நவரத்தின ஆபரணங்களை அணிந்த, சர்வாலங்கார பூஷிதையாய் விளங்குகின்ற அம்பிகையைக் குறிப்பிடுவதாகும். கடவுளுக்கு ஏன் ஆபரணங்கள் என்று பலரும் கேட்பதுண்டு. ஒரு தனிப்பட்ட மனிதனுடைய குடும்பத்தில் பல நூறு சவரன் ஆபரணங்களுடன் பரிணமிப்பது ஒரு சுயநல நோக்கோடுதானே விளங்குகின்றது. இதனால் மற்றவர்க்கு என்ன பயன்? ஆனால் அதே நூறு சவரன்களை இறைவனுக்கு அணிவித்தால் எத்தனையோ கோடி மக்களுக்கு அதனுடைய பலாபலன்கள் சென்றடையுமே! எவ்வாறு?
தங்க ரதம் என்றும் தங்கத் தேர் என்றும் இறைவனுடைய ஆராதனை விழாக்களைக் கொண்டாடுகின்றோம் அல்லவா? ஏனோ? தினந்தோறும் ஆலயங்களில் ஜபிக்கப்படுகின்ற, துதிக்கப்படுகின்ற வேத மந்திரங்களை எல்லாம் மூல மூர்த்தியின் அருட்சக்தியுடன் இறைவனுக்கு அணிவிக்கப்படுகின்ற பொன் ஆபரணங்களும், வைடூரிய, இரத்தினக் கற்களும் தம்முள் கிரகித்துக் கொண்டு அவற்றைக் காண வருகின்ற ஏழை எளியோருக்கும், நடுத்தர மக்களுக்கும் ஜாதி, இன, குல பேதமின்றி அனைவருக்கும் தெய்வீக அருளை வாரி வழங்குகின்றன. எனவே உங்கல் கழுத்தில் 20, 30 சவரன் ஆபரணங்கள் தொங்குமேயானால் அவை சுயநலமாக உங்களுக்கே மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் அதே ஆபரணங்கள் இறைவனுடைய திருமேனியை அலங்கரிக்குமாயின் சமுதாயப் பணியாக, இறைப் பணியாக வேத, மந்திர சக்திகள் பல கோடி மக்களுக்கும் சென்றடையும் அல்லவா!
இதனால்தான் இறை மூர்த்திகளுக்கு ஆபரணங்களை அளிப்பது மிகச் சிறந்த தானமாக அன்றும் இன்றும் என்றும் காலம் காலமாக குடும்ப சந்ததிகளுக்கு அருள்பாலிப்பதாகவும் விளங்குகின்றது. அனைத்து வேதங்களின் ஒளிப்பிழம்பாய் விளங்குபவன் தானே சர்வேஸ்வரன்! ஈசனுடைய திருமேனியிலிருந்து பிறந்தது தானே இந்தப் பிரபஞ்சம்! எனவேதான் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து நம்முடைய பூலோக வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ வேதமந்திரங்களை, மகரிஷிகள் தம்முடைய தபோலபலன்களால் கிரகித்து நமக்குத் தந்துள்ளனர். இன்றைக்கு நமக்குக் கிட்டியுள்ள வேதமானது பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள வேத மந்திர சாரங்களில் ஒரு சிறு அணுத் துளியேயாகும். ஆனால் ரிஷிகள் ஒவ்வொரு முறையும் ஒரு வேதமந்திரத்தை பிரபஞ்ச்த்திலிருந்து ஈர்த்து, கிரகித்து அளிக்க வேண்டுமென்றால் அதற்குக் கோடானுகோடி ஆண்டுகள் தவம் புரிந்தாக வேண்டுமே! எனவேதான் தப, ஜப மூலத்தோடு, மகா தெய்வீக சக்திகள் மிகுந்தவையாக, மந்திரங்கள் விளங்குகின்றன. காரணம் ஒவ்வொரு மந்திரத்திற்கும் கோடானு கோடி ஆண்டு தபோபலன்கள், மஹரிஷிகளால், ஈடாக வைக்கப்பட்டுள்ளன என்றால் உன்னத தப, ஜப சக்தியோடு வேத இறை சக்திகள் பதிந்துள்ள அவற்றின் மகத்துவம் தான் என்னே!
வேதம் கண்ட மாமுனி!
மதுரச்ரவணன் என்ற மகரிஷியானவர் தனக்கென ஒரு கடவுள் பிரபாவத் திட்டத்தை வகுத்து வைத்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் தாம் மேற்கொண்டுள்ள தவ, யோக சக்திகளின் பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து, சமுதாயத்திற்குத் தர முடியுமோ, அதனைப் பெற்றுத் தருவதுதான் தம்முடைய பிறவியின் தலையாய கடமை என்று கொண்டார். எனவே எப்போது பார்த்தாலும் அவர் மௌன நிலையில்தான் இருப்பார். மோன நிலை பல கோடி வருடங்களுக்கு நீண்டாலும் கூட, புற்று மண்ணால் அவர் திருமேனி மூடப்பட்டாலும் கூட, அவருடைய உடலிலிருந்து வேத மந்திர ஒலி எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் ஒரு ஆயுளை நிர்ணயம் செய்து விடுகின்றான் அல்லவா?
மகரிஷிகளுக்கான ஆயுள் என்றால் நம்மைப்போல இத்தனை வருடங்கள் என்று கணக்கல்ல. குறிப்பிட்ட கோடி ஆண்டுகள் இவர்கள் குறிப்பிட்ட தவத்தைப் பூண்டு முடித்தவுடன் அவர்களுக்கு அதே பெயரில் அதே உடலில் மீண்டும் ஆயுள் பரிணமிக்கும் நித்ய ஜீவிகள் அவர்கள்! இத்தகைய சிரஞ்சீவித்வ ஆயுளை மீண்டும் நிரவித் தருபவனே இறைவன் ஆதலின் மாமுனிகளின் காலத்தைப் பிறவிகளுக்கு உட்பட்டதாக நாம் வரையறை கொள்வது கிடையாது. நம்முடைய கர்மவினைகளால் நாமே நம்முடைய பிறவிகளைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்றால் இறைவனே அவர்களுக்கு ஒரு தக்க வடிவைத் தந்து இத்தனை கோடி நித்ய ஜீவ சிரஞ்ஜீவித்வ ஆண்டுகள் என்பதை நிர்ணயம் செய்து குறித்தும் தருகின்றான். அதுவே வேறு பல சமுதாய இறைப்பணிகளுக்காக மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது.
எத்துணை கோடி அகத்தியர்கள்
இவ்வாறாகத்தான் நித்ய ஜீவத்வம் பெற்றவர்களாக இதுவரை 2000 கோடி அகத்தியப் பெருமான்கள் உருவாகியுள்ளனர். இவர்களுள் யாரை ஆதிமூல அகஸ்திய மகரிஷி என்று நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்? இவையெல்லாம் பிரபஞ்சத்தின் சிருஷ்டி இரகசியங்களாகும். தெய்வீகப் பகுத்தறிவாம், ஆறாவது அறிவை விருத்தி செய்து கொண்டால் தான் மனிதன் இதனைப் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் அவனுக்குத் தெரிந்த சாதாரணக் கணக்கு விதிகளைப் போட்டு மனதைக் குழப்பிக் கொண்டு எந்த ஒரு விடைக்கும் வர இயலாது தவித்துக் கொண்டிருப்பான், இந்த விஞ்ஞானமய குழப்ப உலகத்தில்!
ஒரு வரிக்கா ஓராயிரம் கோடி வருட தவம்!
மதுச்ரவணன் மகரிஷி பலவித ரூபங்களிலும், வடிவங்களிலும் எத்தனையோ முறை இந்த பூவுலகிற்கு வந்திருக்கின்றார். இதே பெயரில் உலவிய ஏனைய பல மகரிஷிகளும் உண்டு. ஒரு முறை, மதுச்ரவணன் மகரிஷி கோடானு கோடி ஆண்டுகள் தவம் புரிந்தும் அவரால் ஒரே ஒரு வேத வரியை மட்டுமே உலகத்திற்குப் பெற்றுத் தர முடிந்தது. ஆனால் அந்த ஒரு வரி வேதமும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஒரே ஒரு முறை ஒலிக்கப்பட்டால் கூட பல கோடி மடங்கு உத்தமமான வேதாந்திரப் பலன்களைத் தரவல்லதாகும், காயத்ரீ மந்திரத்தைப் போல, ஆனால் அந்த யுகத்திற்குரிய, அவருடைய மகரிஷி வடிவிற்கான ஆயுளும் நிறைவு பெறும் நிலையும் வந்தது. மகரிஷிகளுக்கு ஆயுள் முடிந்தது என்று சொல்லக் கூடாது அல்லவா? குறிப்பிட்ட பணிக்கான அந்த மகரிஷிகளின் வடிவம் பரிபூரணமாயிற்று என்று தானே நாம் சொல்ல வேண்டும்! பார்த்தார் மதுச்ரவணர், “என்ன இது! இத்தனை கோடானுகோடி ஆண்டுகள் தவம் புரிந்தும் ஒரே ஒரு வரி வேதத்தைத்தான் நம்மால் கிரகிக்க முடிந்ததா? இதுதான் நம்முடைய தபோ பலனின் சக்தியா? இப்படியே இருந்தால் அடியேன் தவத்தை முடிப்பதற்குள் எத்தனையோ சதுர் கோடி யுகங்கள் தோன்றி மறைந்து விடுமே. அப்படியானால் உலக ஜீவன்களுக்கு எத்தகைய வேத சக்தியையும் பெற்றுத் தர இயலாமல் என்னுடைய தபோ வாழ்க்கையிலேயே பல கோடி ஆண்டுகளில் உருண்டு விட்டால் அதுவரையில் வேத சக்தியின்றி இந்த உலகம் ஸ்தம்பித்து விடுமே!” என்று அச்சம் கொண்டார்.
இங்குதான் அவரையும் அறியாமல் அவருள்ளத்துள் ஒரு கர்வம் பிறந்து விட்டது. “நாம் இவ்வாறு பல் கோடிக்கணக்கான ஆண்டுகள் தவத்தில் கழித்து விட்டால் இந்த உலகத்திற்கு, வேத மந்திரங்கள் மேன்மேலும் கிடைக்காமல் போய்விடுமே!” என்று எண்ணியது கர்வம்தானே என சித்புருஷர்களே கருதிவிட்டனர். “ஏன் நம்மை விட்டால் வேத மந்திரங்களைப் பெற்றுத் தருவதற்கு வேறு எவருமே இல்லையா? நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்பிரபஞ்சமானது இறையருளால் தானே இயங்கும்”, என்ற எண்ணம் தானே வந்திருக்க வேண்டும்? எனவே அவருக்கு ஒரு பாடத்தை இறை லீலையாகப் புகட்ட விரும்பினான் சர்வேஸ்வரன், அதனால் மதுச்ரவணரை அழைத்து, “உன்னுடைய தபோபலன்களால் வேத மந்திரங்களை கிரகித்துத் தர வேண்டும் என்று நீயே உனக்கென ஒரு பணியை நிர்ணயித்துக் கொண்டாய். ஆனால் அடுத்து வரும் சதுர் யுகங்களில் உனக்கு வேறுவிதமான பணியை நாங்கள் அளிக்க இருக்கின்றோம்!” என்று தம் திருவிளையாடலைத் தொடங்கினார்.
திகைத்தார் மதுச்ரவணர். “ஏன் இந்தத் திருவிளையாடலை இறைவன் புரிகின்றான். நாம்தான், வேத மந்திரத்தை கிரகித்துத் தருவதற்கென்றே நம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்திடச் சித்தமாய் உள்ளோமே!” இறைவனோ, “நீ பூலோகம் சென்று எங்கு மாசற்ற பொன்னாய் எங்கு அம்பிகை வீற்றிருக்கின்றனளோ அவளுடைய பாதங்களை நாடி தியானம் புரிந்து சரணடைவாயாக!” என்று அருளாணையிட்டார்.
திகைத்தார் மதுச்ரவணர்! “நம் வாழ்க்கையின் குறிக்கோளோ வேறு! ஆனால் சுவாமியோ அம்பாள் பூஜையை மேற்கொள்ளச் சொல்கின்றாரே!” குழம்பினார் மகரிஷி. இதுவும் இறைவனின் சித்தமே என்று ஓரளவு மனம் தெளிந்தவாறு, இருப்பினும் மனத் திருப்தியும் கொள்ளாது பூலோகத்திற்கு வந்து எங்கு அம்பிகையானவள் மாசற்ற பொன்னாய், மலர்ச்சுடராய் சுயம்பு உருவில் விளங்குகின்றாள் என்று தேடலானார். இதிலேயே பலகோடி யுகங்கள் கிடந்து விட்டன. மீண்டும் யோசிக்கலானார் மதுச்ரவண மகரிஷி, “அம்பிகையைத் தேடுவதிலேயே நாம் பல சதுர் யுகங்களை வீணாக்கி விட்டோமே, ஏன் இந்தத் தேடித் தெளிவுறாத பணியில் இறைவன் நம்மைச் சேர்த்து விட்டான்”. மீண்டும் மனம் உளைச்சல் மகரிஷிக்கு!
ஸ்ரீஅகஸ்தியரின் எளிய (அற்புத) தவம்!
ஆங்கே.... ஓரிடத்தில் எளிய முறையில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் மிகவும் சாதாரண முனிவராக, தியானம் புரிந்து கொண்டிருந்தார். ஸ்ரீஅகஸ்தியரை எவர்தான் அறியார்? மண்ணுக்கும், விண்ணுக்கும் பல கோடி சதுர்யுகங்களாக, பல கோடி லோகங்களுக்கும் தினந்தோறும் சென்று வருகின்ற சித்புருஷரன்றோ! அவரை வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றார்.  “அகஸ்தியப் பெருந்தகையே! பொன்னாய்ப் பூத்திருக்கும் அம்பிகையைத் தேடிப் பணியுமாறு என்னை ஈசன் இங்கே, அனுப்பியிருக்கின்றான். நானும் பல கோடி யுகங்களாகத் தேடித் தேடி அலுத்துவிட்டேன். பொன்னாய் மலரும் அம்பிகையைக் காண இயலவில்லை. இத்துணை ஆண்டுகள் வீணாகி விட்டனவே என்று நான் வருந்துகின்றேன். என் செய்வது?“ என்று செப்பி அழுது புலம்பினார். “மதுச்ரவணா! வேத மந்திரங்களை நீதான் பெற்றுத் தர வேண்டும் என்று ஏன் அகங்காரம் கொண்டு அலைகின்றாய்? இந்த கர்வத்திற்கு இறைவன் புகட்டு பாடமிது!” என்று கூறி அகஸ்தியர் நேரடியாகவே அவர்தம் தவற்றினை உணர்த்தி விட்டார்.
அப்போதுதான் மதுச்ரவணருக்கு நன்கு உரைத்தது. “ஆஹா! என்னே பெருந்தவறு செய்து விட்டோம்! நமக்கென நாமே ஒரு வாழ்க்கை விதியை நிர்ணயித்துக் கொள்வதா? இறைவன் வகுத்த விதிப்படிதானே நாம் நடக்க வேண்டும். வேத மந்திரங்களை கிரகிப்பதற்கு வேறு எவரும் இல்லையா என்ன!” அழுதார், புரண்டார், மனம் கலங்கினார், புலம்பினார். “சுவாமி! என்னே பெரும் குற்றம் இழைத்து விட்டேன்! இந்த அகங்காரத்தால் அல்லவா பல கோடி யுகங்கள் வீணாய்த் கழிந்தனவே. உண்மையான உள்ளத்தோடு, பக்தியோடு அம்பிகையை நான் எங்கு தேடினேன்? இத்தகைய செருக்கின் சிறுமையால் தான் அம்பிகையைக் காணமுடியவில்லை! இந்த அகங்காரச் சிந்தனையோடு என்னால்தான் வேதமந்திரங்களை கிரகிக்க முடியும். இதைத் தவிர வேறு பணியை இறைவன் எவ்வாறு எனக்குத் தர முடியும் என்று கர்வம் கொந்தளிக்க அல்லவா நான் அலைந்து திரிந்து பல கோடி ஆண்டுகளை வீணாக்கி விட்டேன். அகஸ்தியப் பெருந்தகையே! என் கண்களைத் திறந்து விட்டீர்கள். எனவே தாங்கள் தான் எனக்குக் கருணை புரிய வேண்டும். இந்த கர்வ பங்கம் நீங்கிட பொன்னாய் விளங்கும் கௌரீயின், பார்வதி தேவியின் தரிசனத்தை எனக்குப் பெற்றுத் தருதல் வேண்டும்“.
பொன்னாய்ப் பொலியும் பொன்னி!
அகஸ்தியர் புன்முறுவல் கொண்டார். “மகரிஷியே! இதோ இருக்கின்றாளே இந்த அம்பிகையின் தரிசனத்தை வேண்டித்தான் அடியேனும் இறைநியதிப்படி எத்தனையோ கோடி ஆண்டுகள் இறையருளால் தவம் புரிந்து வருகின்றேன். அம்பிகையின் கடைக் கண் பார்வை கூட அடியேனுக்கு இன்னும் கிட்டவில்லை. காரணம் இந்த, கௌரீயின் தரிசனத்தைப் பெறுமளவிற்கு அடியேனுடைய தவம் இன்னும் பரிபூரணம் பெறவில்லை. அடியேனுடைய ஸ்ரீவித்யா உபாசனையில் இந்த அம்பிகையின் தரிசனம் பெற்றால் தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். அது வரையில் நான் பொறுமையாக இருக்கின்றேன். அதனால் தான் அதற்குரிய பக்குவம் கிட்டும் வரை இத்தலத்திலேயே இறையருளால் எத்தனையோ கோடி ஆண்டுகள் இருந்து வருகின்றேன். தாங்கள் தான் இவ்வம்பிகையின் தரிசனத்தைப் பெற தங்கள் வேத மந்திர தவ சக்தியால் நல்ல வழி காட்ட வேண்டும்!” என்று பணிவன்புடன் வேண்டி நின்றார்.
பார்த்தார் மதுச்ரவணார். “அகஸ்தியருக்குக் கிட்டாத தரிசனம் என்று ஒன்று உண்டா என்ன! நீ தென்னாட்டிற்குச் செல். நீ செல்லும் இடமெல்லாம் என் திருமணக் கோலத் தரிசனத்தைத் தருகின்றேன்! என்று சர்வஸ்வரனே பல இடங்களில் அம்பிகையுடன் திருமணக் கோலக் காட்சி கொடுக்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர் அல்லவா அகஸ்திய மாமுனி! அவரே எளியோனாய், சாதாரண முனியாய் இன்று இங்கு தவம் புரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய தவம் இன்னும் பரிபூரணம் பெறாமைக்குக் காரணம் தன்னுடைய பக்தி நிலை இன்னும் மேம்படவில்லை என்று எளிமையாக அடக்கமாகப் பணிவன்புடன் கூறிக் கொள்கிறாரே! இந்த பணிவை அல்லவோ நாம் பெற்றிருக்க வேண்டும். இதை விடுத்து வேத மந்திரங்களைக் கிரகிப்பதற்காகத்தான் நான் பிறந்தேன் என்று எண்ணி அல்லவா செருக்குக் கொண்டு சீரழிந்தேன், சுவாமி”, என்று எண்ணி உரைத்துக் கதறியவாறே அவருடைய திருவடிகளைப் பற்றினர். அகஸ்திய மாமுனி பதைதைத்து விட்டார்.
“தாங்கள் பிரபஞ்சத்திலிருந்து பெற்றுக் கொடுத்த எத்தனையோ வேத மந்திரங்களைத்தானே இன்னும் உச்சரித்துக் கொண்டுள்ளேன். எனவே இந்த மந்திரங்களைத் தந்து நீங்கள் தானே மந்திர மாமுனி குருவாக விளங்குகின்றீர்கள். அடியேனுடைய பாதங்களைத் தாங்கள் தொடுவதற்கு எனக்கு எவ்வித அருகதையும் இல்லையே, வாருங்கள் இருவரும் சென்று உள்ளே அம்பிகையை வணங்குவோம்!”  என்று உள்ளே கூட்டிச் சென்றார். ஆங்கே பொன்னாய், மாசற்ற சுவர்ணமாய், தங்கச் சுடராய் அம்பிகை காட்சியளித்தாள். அகஸ்தியருக்கு அந்த தரிசனம் கிட்டியது. ஆனால் மதுச்ரவணருக்கு ஒளிப்பிழம்பு தான் தெரிந்ததே தவிர அம்பிகையை முழுவதுமாகக் காண முடியவில்லை!
“சுவாமி! அடியேனுக்கு ஒன்றும் தெரியவில்லையே!”
அகஸ்தியர் அடக்கத்துடன், “இதற்கு ஸ்வர்ண கௌரீ விரதம் என்று ஒன்று உண்டு. அதனை முறையாகக் கடைபிடித்தால் தான் ஸ்வர்ணமாக பொன்னாய்ப் பொலியும் அம்பிகையின் தரிசனம் கிடைக்கும். எனினும் தாங்கள் கேட்டு வந்ததோ ஸ்வர்ண கௌரீ எங்கே இருக்கிறாள் என்பதே. எனவே, அவள் இருக்குமிடத்தைக் காட்டுவது மட்டுமேதான் அடியேனுக்கு இடப்பட்டப் பணி!” என்று சொல்லி அம்பிகையை வலம் வந்து மறைந்து விட்டார்! ஸ்ரீஅகஸ்திய பெருமான் கூறியபடியே கௌரீ விரதத்தை மேற்கொண்டார் மதுச்ரவணர் அதுதான் நாம் இங்கே விளக்க இருக்கும் மதுச்ரவண ஸ்வர்ண கௌரீ விரதமாகும்.
இன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி மஞ்சள் நிற ஆடைகளைத் தரித்து மஞ்சள் நிற கோபி, சந்தனம், இட்டு குங்குமத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும். வசதியுள்ளோர் தங்கத்தாலான அம்பிகையின் உருவத்தை வைத்து வழிபடலாம். ஸ்ரீவரலட்சுமி விரதம் போன்று அம்பிகையின் திருமுகத்தையும், கலசத்தையும் வைத்துக் கொள்ளலாம். ஓரளவு வசதி உள்ளோர் தங்கமுலாம் பூசிய அம்பிகையின் ஸ்வர்ண (தங்க) பிரதிமையை அல்லது வெள்ளி உருவத்தை, வெள்ளி விக்ரகத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் வசதியற்றோர், ஏழைகள் என் செய்வது? ஸ்ரீஅகஸ்திய மாமுனி கடைபிடித்தது போல பொன் வைத்த இடத்தில் பூ வை என்று சொல்வார்களே, அதே போல மஞ்சள் அரளிப் பூக்களைக் குவித்து வைத்து அம்பாளாக பாவித்து அர்ச்சனை செய்து ஆராதித்திட வேண்டும்.
தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய வெள்ளி முகமோ, வெள்ளி அம்பாள் உருவமோ வைத்துப் பூஜிப்பவர்கள் தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அம்பிகைக்கு ஆபரணங்களையும் மோதிரங்கள், மெட்டிகள் அணிவித்து இன்னும் சொல்லப்போனால் தாங்கள் அணிந்திருக்கின்ற அனைத்து பொன் ஆபரணங்களையும் அம்பிகைக்குச் சார்த்தி அல்லது திருப்பாதங்களில் வைத்து இன்று தேன் கலந்த நீரை மட்டும் அருந்தி உண்ணாநோன்பு இருந்திடல் வேண்டும். அறிந்தோரும், வசதியுள்ளோரும் ஸ்ரீவரலட்சுமி பூஜை போல கலசம் வைத்தும் வழிபட்டிடலாம். கலசத்திற்குள் கங்கை, காவிரி போன்ற புனித நதி தீர்த்தங்களுடன் ஜாதிக்காய், வெட்டி வேர், தங்க ஆபரணங்கள், துளசி ஆகியவற்றைச் சேர்த்திடல் வேண்டும். அம்பிகையை அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம் போன்று தாமறிந்த எந்த மந்திரத் துதிகளாலும் அர்ச்சனை செய்யலாம்.
சீர்மிகு நீர் உருண்டை பூஜை
நீர் உருண்டை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். நீர்க் கொழுக்கட்டை என்றும் இதனை சொல்வார்கள். கொழுக்கட்டைக்கான பச்சரிசி மாவைப் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி இட்லி போல் நீராவியில் வேகவைத்து நீர் உருண்டையாக்கி இந்த நீர் உருண்டைகளால் அம்பிகையை அர்ச்சனை செய்திடல் வேண்டும். மஞ்சள், அரளிப் பூக்களாலான விக்ரஹத்திற்கும், பிம்பத்திற்கும், கலசத்திற்கும் இதே நீர் உருண்டை அர்ச்சனை செய்திடலாம். ஏனென்றால் சர்வேஸ்வரியானவள் ஸ்வர்ண கௌரீயாக அவதாரம் பெறுவதற்காக “க்ஷணிக லிங்கம்” என்று சொல்லப்படுகின்ற, அதாவது ஆங்காங்கே கிடைக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு லிங்கமாக வைத்துப் பூஜிக்கின்ற வழிபாட்டை ஏழை, எளியோர் போல மேற்கொண்டாள்.
நதி தீரங்களுக்குச் சென்றால் அங்கே மணலைப் பிடித்து வைத்து மணல் லிங்கமாகவும், கோதுமை, அரிசி மாவு கிடைத்தால் மாவு லிங்கமாகவும், பழங்களை உருட்டி, திரட்டி, பழ லிங்கமாகவும், வெண்ணெய், அன்னலிங்கமாகவும் இவ்வாறாக க்ஷணிக லிங்கம் எனப்படும் அவ்வப்போது கிடைக்கின்ற பொருட்களை வைத்தே லிங்கமாக பாவித்து வடிவமைத்து அர்ச்சித்துப் பிறகு அதனை நீரில் கரைத்து பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டு ஸ்வர்ண கௌரீ என்ற அவதாரத்தைப் பெற்றனள். இவ்வாறாக 108 மாவு உருண்டைகளை சாளக்கிராம லிங்கம் போல் வடிவமைத்து அம்பிகை பூஜித்தமையால் இதனை நினைவுறுத்தும் பொருட்டுதான் ஸ்வர்ண கௌரீ விரதத்தின் போது 108 நீர் உருண்டைகளால் அம்பிகையை அர்ச்சனை செய்கின்றோம்.  காலை பிரம்ம முகூர்த்தத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரை இந்த உண்ணா நோன்பு விரதத்தை மேற்கொண்டிட வேண்டும்.
காலையில் 108 நீர் உருண்டைகளால் அர்ச்சனை செய்தும், மாலையில் 108 நீர் உருண்டைகளால் மீண்டும் அர்ச்சனை செய்தும் விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். பிரசாதமாக இந்த நீர் உருண்டைகளைத் தானமாக அளித்திட ஸ்வர்ண கௌரீ விரதம் பரிபூர்ணம் அடைகின்றது. மஞ்சள் அரளிப் பூக்களை ஸ்வர்ண கௌரீ பிம்பமாக பாவித்து வழிபடுகையில் பூஜை முடிந்த பின் அப்பூக்களை எல்லாம் நிர்மால்யப் பூக்களாக பூமியிலோ, குளத்திலோ அல்லது ஓடும் ஆற்றிலோ, கடலிலோ விட்டுவிட வேண்டும்.

ஸ்ரீதளிநாதர் சிவாலயம்
திருப்பத்தூர்

மதுச்ரவணர் இவ்வகையில் அம்பிகையை வழிபட, ஆங்கே அம்பிகையே ஸ்வர்ண கௌரீயாக, தங்கத்தில் வடிக்கப்பட்ட அம்பிகையாகக் காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தனள். எத்தகைய வேத மந்திரங்களைப் பெறுவதற்காக அவர் பல கோடி யுகங்களாகத் தவம் இருந்தாரோ அவருக்கு ஸ்வர்ண கௌரீ அம்பிகையின் தரிசனம் கிடைத்தவுடன் அம்பிகையின் திருமேனியிலிருந்து எத்தனையோ லட்ச வேத மந்திரங்கள் ஒளிக்கிரணங்களாக எப்போதும் வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் மதுச்ரவணர். இதற்காகவா நாம் பலகோடி ஆண்டுகள் தவமிந்தோம் என்று எண்ணி வெட்கப்பட்டார். அன்று முதல் பல கோடி யுகங்களாகத் தவம் செய்வதை விடுத்து அம்பிகையின் எளிய உபாசனையில் ஈடுபட்டு அம்பிகை உபாசனை மூலம் மிக எளிதில் வேத மந்திரங்களைப் பெற்றார். இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த வைபவமே ஸ்வர்ண கௌரீ மங்கள விரதமாக அமைகின்றது. இவ்வாறாக ஸ்ரீவரலட்சுமி விரதம், கருட பஞ்சமி போன்ற ஒவ்வொரு விரதத்திற்கும் ஏராளமான புராண லீலா அனுபூதிகள் உள்ளன.
வேத சக்தியைப் பெற்றிடுங்கள்
இறைவனுடைய எத்தனையோ லீலா அவதாரங்களின் போது அந்தந்த வடிவிற்குரிய அம்பிகையாக ஆவதற்காக ஈஸ்வரியானவள் எத்தனையோ தவங்களைப் பூண்டு லலிதாம்பிகையாகவும், கௌரீயாகவும், ஜெகதாம்பிகையாகவும், கிரிஜாம்பிகையாகவும், மதுர தேன் மொழியாளாகவும், இவ்வாறாக பலவித வடிவங்களையும், நாமங்களையும் பூண்டு நமக்கு அருள்பாலிக்கின்றாள். ஒவ்வொரு அவதாரமும் ஜீவன்களின் ஒவ்வொரு விதமான துன்பங்களைக் களைவது மட்டுமல்லாமல் எத்தனையோ வழிகளில் முக்திப் பெருநிலையை அடைவதற்கான நல்வழியைக் காட்டுவதாகவும் அமைகின்றது. எனவே இடர்களைக் களையும் இனிய தேவியாக மட்டும் அம்பிகையைக் கொள்ளாமல் பிறவிப் பிணி அறுக்கும் பெருந்தகையாளாக, முக்திப் பெருநிலையையும், மோட்ச வழியையும் கேட்டு அம்பிகையை வழிபடுவதுதான் மிகவும் சிறப்பானதாகும். ஆனால் இதற்கெல்லாம் தீர்கமான மனப்பக்குவமும் சற்குருவின் ஆசியும் நிச்சயம் தேவதையானதாம்.
யார்வர்க்குமே வேத மாமந்திரங்கள்!
ஸ்ரீஸ்வர்ண கௌரீயாக அம்பிகை வடிவெடுத்ததின் பின்னணியில் சில ஆன்மீக விளக்கங்கள் உண்டு. வேத மந்திரங்கள் தான் மக்களின் பலவிதமான துயரங்களைக் களையக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளன என்பதை ஈஸ்வரி நன்கு உணர்ந்தாள். ஏனென்றால் பூஜைகளோ, வழிபாடுகளோ, ஹோமங்களோ, யாகங்களோ பலவிதமான இறை நியதிகளைத் தன்னுள் கொண்டுள்ளமையால் அனைவராலும் இதனை எளிதில் கடைபிடிக்க முடியாது அல்லவா? ஆனால் வேதப் பெருமந்திரங்களை நன்முறையில் சிறிதே ஒலித்தால் கூட போதும், அந்த வேத மந்திரங்களை நாம் சற்றே காதில் கேட்டால் கூட போதும், இதனால் எத்தனை எத்தனையோ துன்பங்கள் தீர்ந்து விடுகின்றன. எனவே வேத மந்திரங்களைப் பெற்று உலகிற்கும், யாவர்க்கும் அளிக்க வேண்டும்.

இதுவே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலுமே மக்களுடைய அனைத்து ஜீவன்களுடைய துன்பங்களைக் களையக் கூடிய மகத்தான எளிய தெய்வீக வழிமுறை, வேத ஒலியே என உணர்ந்த அம்பிகை பிரபஞ்சத்திலிருந்து எளிதான முறையில் வேதங்களைப் பெறுதற்காக ஒரு நல்வழியைத் தேடி இறைவனை நோக்கித் தவமிருந்தாள். இறைவனும் அம்பிகையின் குறிக்கோளைக் கண்டு பேரானந்தம் கொண்டு, “உமையவளே! நீ மிகவும் எளிமையான முறையில் வறிய மானுட வாழ்வைப் பூண்டு இதற்கான தவத்தைப் புரிவாயாக! அப்போது, தான் ஈ, எறும்பு முதல் ஏழை, செல்வந்தர்கள், தேவர்கள் வரை அனைவருக்கும் உரிய வேதமந்திரங்களை நீயே நன்கு உணர்ந்து நன்முறையில் அவற்றைப் பெற்றுத் தர முடியும்!” என்று அருளாணை இட, அம்பிகையும் ஒரு வறிய பெண்மணியாக வடிவடுத்து ஏராளமான பூஜைகளையும், விரதங்களையும் பல திருத்தலங்களில் மேற்கொள்ளலானாள். எத்தனையோ திருத்தலங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு மணல், மாவு, விபூதி, குங்குமம், வெண்ணெய், மஞ்சள், பூக்கள், பழங்கள் போன்ற பொருட்களில் லிங்க வடிவு கூட்டி எளிமையாக சிவலிங்க பூஜைகளை கடைபிடிக்கலானாள்.
வேத சக்தியைப் பெற்றிடுங்கள்!
பூலோக ஜீவன்களுக்கு இறை வழிபாட்டில் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் பொருட்டுத் தான் எத்தனையோ அவதாரங்களில் பல்வேறு விதவிதமான வடிவுகளைக் கொண்டு எத்தனையோ திருத்தலங்களிலும் எண்ணற்ற வழிபாடுகளை மேற்கொண்டு அருள்பாலிக்கின்றாள் உலக அன்னையாம் ஈஸ்வரி! இவ்வாறாக விபூதியால் லிங்கம் அமைத்து வழிபட்டு ஸ்ரீவிபூதி சுந்தரியாகவும், மரகத லிங்க பூஜை ஸ்ரீமரகதாம்பிகையாகவும், தேனடையால் லிங்கம் வடித்துத் தேன்மொழியாளாகவும், குங்குமத்தால் லிங்கம் வடித்து குங்கும சுந்தரியாகவும் இவ்வாறாக அம்பிகைதான் எத்தனை வடிவங்களில், வழிமுறைகளில் நமக்கும் அருள்பாலித்து, அருட்கருணை சுரக்கும் லிங்க மூர்த்திகளையும் நமக்குத் தந்தருளி உள்ளாள் என்பதை உணர்கையில் உள்ளமே நெகிழ்கின்றதல்லவா!

திருமங்கலம் சிவத்தலம்

அம்பிகை ஏன் ஸ்ரீமங்கள கௌரீயாக வடிவெடுக்க வேண்டும்? பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கின்ற வேத சக்திகள் தாம் எந்த ஜீவனுக்கும் முக்தியைப் பெருநிலையைத் தரவல்லவை! ஆனால் வேதம் ஓதுதல் என்பது அனைவராலும் முடியுமா? சிறிதே வேதங்கற்ற சிலரும் பெருந்தன்மையுடனே இறைப் பெரும் சேவையால் தாம் அறிந்ததைப் பிறருக்கும் உணர்த்துதல் தானே சிறப்புடையதாகும். ஆனால் கலியுகத்தில் வேதத்தின் மஹிமையை உணர்வோர் அருகிடுவர், வேத சக்திகளைப் பலரும் குருவழியாய் உணரப் பெறாமையால் அவை தாமாகவே மறைவுறும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த மகரிஷிகள்.
1. பற்பல வேத சக்திகளை தரிசனம், வழிபாடுகள் மூலமாகத் தரவல்ல ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீவேதவல்லித் தாயார் மூர்த்திகளையும் உற்பவிக்க வேண்டிப் பிரார்த்தினர். (ஸ்ரீவேதபுரீஸ்வரர் – பாண்டிச்சேரி, திருக்கழுக்குன்றம், ஸ்ரீசாமவேதீஸ்வரர் (திருச்சி – திருமங்கலம்) மற்றும் ஸ்ரீவேதவல்லித் தாயார் போன்ற மூர்த்திகள்.
2. வேத சக்திகளுக்கு ஈடான யந்திர, சக்கர வழிபாடுகள் மற்றும் எளிய ஹோம வழிகளையும் ஜாதி, இன, குல வேறுபாடின்றி யாவர்க்குமாய் அளித்துள்ளனர்.
3. அன்னதானம் பொன்தானம், மாங்கல்ய தானம் போன்றவை வேத சக்திகளுக்கு ஈடான பலன்களைத் தரவல்லவையாக கலியுக இறைநியதிகளை மஹரிஷிகள் நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். இது மட்டுமா உலக மக்களுக்கு மட்டுமன்றி அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காக வேத சக்திகளைப் பெற்றுத் தரும் பொருட்டுத்தானே மேற்கண்ட வகையிலான பலவிதமான எளிய லிங்க வடிவ வழிபாடுகளையும் தவமுறைகளையும் ஆதிபராசக்தி நமக்கு தெய்வீக பரிசாக அளித்துள்ளார். இவ்வாறாக அம்பிகையே பலகோடி ஆண்டுகள் வேதமந்திரங்களை ஓதி அவற்றின் உட்பொருளை நன்கு உணரவே ஆங்கே பொன்னார் மேனியனாய் மாசற்ற பொற்சுடராய் இறைவன் காட்சியளித்திடவே.. இறைவியும், பொன்மயிலாம்பிகையாக, ஸ்வர்ணவல்லியாக, கனகாம்பிகையாக, பொன்னி அம்மனாக அவதாரங் கொண்டனள்.

ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை
திருத்தலம் திருப்பராய்த்துறை

எனவேதான் சுவர்ணவல்லி, பொன்மயிலாம்பிகை, பொன்னியம்மன், கனகாம்பிகையாக நாமம் கொண்ட அம்பிகையர் தோன்றினர். பொன் உலோகத்திற்குரிய குருபகவானின் வியாழக்கிழமையன்று இத்தகைய அம்பிகை மூர்த்தியர்க்கு
1. பொன்னிறப் பட்டாடைகளைச் சார்த்தியும், பொன்னிற உணவு வகைகளைப் படைத்தும் (கேசரி, அல்வா, எலுமிச்சை அன்னம், etc.. ) அவரவர் வசதிக்கேற்ப ஏழைகளுக்குப் பட்டாடைகள், மஞ்சள்/பொன் நிற ஆடைகளை தானமாக அளித்தும்....
2. தங்க ரத உற்சவ கைங்கர்யம் ஏற்று பொன் சேர்ந்த பஞ்சலோக மூர்த்தியைத் தரிசனம் செய்து வழிபடுவதும் பெரும் வேத சக்தியைத் தருவதாகும்.
இவையாவும் வேத மந்திர சக்திகளைப் பெற்றுத் தரவல்லவையாம். வேத ஒளிக்கு ஈடான இறை பீஜாட்சர ஒலிகளாக, அமைந்துள்ளவையே வேத ஒலிகளான வேத மாமந்திரங்களாகும். வேதமே மாமலைகளாக இருப்பவையாக விளங்குகின்ற திருக்கழுக்குன்றத்தை கிரிவலம் வருதலாலும் நிறைய வேத சக்திகள் உடலில் சேர்கின்றன. வேதத்தின் முதல் மூல பீஜாட்சர ஆதிசக்தியாக விளங்குகின்ற ஓம்கார தேவ மூர்த்தியே கொன்றை மரமாக – தலவிருட்சமாக – விளங்குகின்ற அதிஅற்புதத் தலமே காரைக்குடி – மதுரை இடையே உள்ள திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தளி நாதர் சிவாலயமாகும். எனவே ஓம்கார வேத சக்திகள் பொங்குகின்ற தலவிருட்சமான இக்கொன்றை மரத்தை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதியவாறே குறிப்பாக ஆவணி அவிட்டம் அன்று அடிப்பிரதட்சிணம் செய்தலால் வேத சக்திகளை நிரம்பப் பெற்றிடலாம்.  எங்கெல்லாம் வேதங்கள் ஓதப்படுகின்றனவோ அங்கெல்லாம் சற்றே தியானித்து உள்ளத்திற்கான/ மனதிற்கான உணவாக வேத ஒலிகளை ஏற்று மகிழுங்கள். உடலில் உள்ள 72000 நாடி, நரம்புகளுக்கும் வேத சக்தியையே ஆகாரமாக நேரடியாக ஏற்கும் அற்புத சக்தி உண்டு. இறைப் பரம்பொருள் சக்தியை சப்த வடிவில் இவை ஏற்று நமக்குப் பெருந்தெய்வ சக்தியாக மாற்றி உதவுகின்றன. தேவமொழியில் (சமஸ்கிருதம்) வேத ஒலிகள் விளங்குகின்றன என்பதை விட வேத ஒலிகளை, பீஜாட்சர சக்திகளை வடித்துத்தான் தேவ மொழி ஏற்பட்டது என்பதே சிறப்புடையதாகும். தேவமொழியும் தெய்வத் தமிழ் மொழியும் சர்வேஸ்வரனின் திருக்கண்களாக விளங்குகின்றன. எனவே தான் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருமந்திரம், திருப்புகழ் போன்ற தமிழ் மந்திரங்கள்யாவும் தேவ மொழியின் வேதாந்த சக்திகளுக்கு இணையாக விளங்குகின்றன. இறைவனாலேயே கேட்டு மகிழப் பெற்ற இறை மந்திரங்கள் தாம் முத்தமிழ் மந்திரங்கள் ஆகும். எனவே எங்கெல்லாம் தேவமொழி வேதாப்யாசங்கள், தமிழ் மறைகள் ஓதப்படுகின்றனவோ ஆங்கே சென்று அவற்றை உடலால், உள்ளத்தால் கிரஹித்து அரும்பெரும் வேத சக்திகளைப் பெறுவீர்களாக! ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் தேவமொழி வேதமோ, தமிழ் மறையோ நிச்சயமாக ஓதப்படுதல் வேண்டும். இறைவனை வேதவடிவில், வேதப் பொருளாக, வேத ஜோதியாக அம்பிகை வழிபட்டமையால் அம்பிகையே வேதப் பொன்னாய், ஸ்வர்ண மங்கள கௌரீ அம்பிகையாய்ப் பொலிந்தனள்! வேத சக்திகளால்தாம் நம்முடைய பலவிதமான துன்பங்களைக் களைந்துவிட முடியும். எனவே, இந்த நாமம் பூண்ட அம்பிகையையாவது தரிசித்து வேத சக்தியைப் பெற்றிடுங்களேன். (திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயம்).  எனவே ஸ்வர்ண கௌரீ விரதத்தைக் கடைபிடிப்போர்க்கு வேத, மந்திர சக்திகள் எளிதில் கிட்டுவதால் பல கடுமையான துன்பங்களும் குறிப்பாக வறுமை, பணக் கஷ்டங்கள் அகல்கின்றன.

ஸ்ரீகாயத்ரீ லிங்க மகிமை

ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தை தரிசித்திருக்கின்றீர்களா? ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் நிறைந்த ஸ்ரீகாயத்ரீ லிங்கம் எங்குள்ளது?
ஆவணி அவிட்ட தின மஹிமை!
பொதுவாக அனைவரும் பூணூல் தரிக்கும் நாளே ஆவணி அவிட்டம் என்ற புனிதமான நாள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இதில் அவரவர் குடுமப் பாரம்பரியத்திற்கேற்பவும், பஞ்சாங்க நியதிக்கேற்பவும் பூணூல் தரிக்கும் இந்நாளானது மாறுபடக் கூடும். நாம் சித்தர்களின் சாங்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால் ஆவணி மாதத்தில் அவிட்டம் சேரும் நாளையே பூணூலுக்குரிய ஆவணி அவிட்ட நாளாக நாம் ஏற்கிறோம். சற்குரு அமையவில்லையே என ஏங்குவோர், ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளித்துள்ளபடி, சித்தர்கள் வாக்கியப்படி ஆவணியும், அவிட்டமும், சேரும் நாளை, புனிதமான, பூணூலைத் தரிக்கும் நாளாக ஏற்றுக் கொள்ளலாம்.
பொதுவாக ஆவணியும், அவிட்டமும் சேருகின்ற நாளில் பிரம்ம முகூர்த்த நேரமே அதாவது சூரிய உதய நேரத்திற்கு முன்பான அதாவது விடியற்காலை நேரமே பூணூல் அணிவதற்கு மிகவும் சிறப்பான நேரமாகும். இவ்வாறாக பிரமாதி வருடத்திற்குரிய ஆவணி அவிட்ட நாளானது வியாழனுடன் பௌர்ணமி தினத்துடன் சேர்ந்து அமைகிறது. அதாவது 26.08.1999 அன்று விடியற்காலை 3 ½ முதல் 5 மணிக்குள் பூணூல் தரிப்பது மிகவும் சிறப்பானதாகும். கோடானு கோடி சித்புருஷர்களும், யோகியரும், மஹான்களும், ஆசீர்வதிக்கின்ற அற்புத நேரம்! நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வலியுறுத்தி வருவது போல் ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பூணூல் அணியலாம். இதில் எவ்வித வித்யாசமோ, வேறுபாடோ கிடையாது. உடல். உள்ளம், மனம் மூன்றையுமே நல்வழிப்படுத்துவதற்கே பூணூல் தரிக்கப்படுகிறது.
கலியுகத்தில் வேத மந்திரங்களை ஓதுவோர் அருகி வருவதால் யாவருமே வேத சக்தியைப் பெறும் பொருட்டு ஸ்ரீவிஸ்வாமித்திர மஹரிஷியானவர் அனைவருக்குமாக, அனைத்து உயிரினங்களுக்குமாக நான்கு வேத சக்திகளைத் தாங்கியுள்ள, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பரவெளியினின்றும் ஈர்த்து நமக்குப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் பஞ்சபூத பொருட்களில் தான் நன்கு படிந்து பொதிந்து, இப்பூவுலகிற்குப் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பஞ்சபூத சக்திகள் நிறந்ததாக பருத்தி இழையானாலான பூணூல் விளங்குவதால் தான் பூணூலைத் தரித்தவாறு ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுவதால் மற்றும் பூஜைகளைச் செய்வதால் ஸ்ரீகாயத்ரீ மந்திர வேத சக்தி அதில் படிந்து நம்முடைய தேகத்தில் நன்முறையில் கிரஹிக்கப்படுகின்றன.

ஸ்ரீகாயத்ரீ லிங்கம் பவானி

ஸ்ரீகாயத்ரீ லிங்கம்
எனவே, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதுதலும் அனைவருக்கும் உரித்தானதே. இதிலும் எவ்வித பேதமும் கிடையாது. ஆவணி அவிட்ட நாளன்று விடியற்காலையில் ஸ்ரீகாயத்ரீ ஹோமத்தை அவரவர் வசதிக்கேற்றபடி எளிய முறையில் செய்து, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து சமுதாய மேம்பாட்டிற்காகவும், இந்த ஹோம, மந்திர பலன்களை அர்ப்பணித்தல் வேண்டும். பவானியில் சங்கமேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீகாயத்ரீ லிங்கமானது, உலகிலேயே காணுதற்கரிய, பெறுதற்கரிய ஸ்ரீகாயத்ரீ லிங்க மூர்த்தியாகும். ஸ்ரீகாயத்ரீ சக்தி மிகுந்துள்ள இப்புனிதமான லிங்கத்தை ஆவணி அவிட்ட நாளாகிய 26.08.1999 அன்று தரிசிப்பதும், இங்கு பூணூல் தரிப்பதும் மிகவும் சிறப்பானதாகும். இங்கு சத்சங்கமாகப் பலரும் ஒன்றாகக் கூடி பூணூல் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தலால் எத்துணையோ கோடி முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்த பலனைப் பெறலாம் எனபதே இத்தலத்திற்குரிய அரிய அற்புதமான இறையருட்தன்மையாகும்.
மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடலாக விளங்கும் இத்திருத்தலத்தில் குறிப்பாக அமாவாசையன்று கோடானு கோடி பித்ரு மூர்த்திகள் உறைகின்ற அற்புதத் தலம்! அமாவாசை அன்று இத்திருத்தலத்தில் தர்ப்பணம் செய்வதும், தம்முடைய மூதாதையர்களுக்கு விருப்பமான உணவை அன்னதானமாக அளிப்பதும் மிகவும் சிறப்புடையதாக விளங்குகிறது. வாழ்வில் விட்டுப் போன எத்துணையோ தர்ப்பணங்கட்குப் பரிகாரத்தைத் தருவதோடு மட்டுமின்றி, மாதந்தோறும் இத்திருத்தலத்தில் அமாவாசை தர்ப்பணம் அளித்து பித்ரு ஹோமம் வழிபாடு மற்றும் அன்னதானம் செய்தலால் அளவற்ற புண்ணிய சக்தியை பெறலாம்.
பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம் மஹிமைப் பற்றிப் பல புராணங்களாக வடிக்கலாம் அந்த அளவிற்கு திவ்யமான புனிதத் தன்மை கொண்டதாக ஸ்ரீகாயத்ரீ லிங்கம் இங்கு அருட்சுடராய் விளங்குகிறது. எனவே வருகின்ற ஆவணி அவிட்டப் புனித நாளன்று (26.8.1999) இங்கு ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு முஞ்சைப்புல் எனப்படும் புனிதமான புல்லினால் கிரீடம் செய்து அணிவித்து, முஞ்சிப்புல் மாலையும், வில்வ மாலை, அருகம்புல் மாலை சாற்றி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். இத்திருச் சந்நதியில் பலரும் ஒன்று கூடி சத்சங்க வழிபாடாக தக்க ஆலய அனுமதியுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் செய்வதும் கோடானு கோடிப் பலன்களைத் தருவதாகும். ஆவணி அவிட்ட தினத்தன்று (26.8.1999) இங்கு ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு ஐந்து முகத்தாளாக விளங்கும் ஸ்ரீகாயத்ரீ தேவிக்குப் ப்ரீதியான கங்கை, காவிரி, போன்ற புனித நீர், பஞ்சாமிர்தம், முஞ்ஜிப்புல், அருகம்புல் வில்வம், துளஸி, தேன் கலந்த பால் அபிஷேகத்துடன் வேத மந்திர சக்தி நிறைந்ததாக விளங்கும் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு கலந்த கேசரி, அல்வா போன்ற இனிப்புப் பண்டத்தினால் லிங்கத்திற்கு வெண்ணெய்க் காப்பு போல் இனிப்புக் காப்பிட்டு, வழிபடுதல் மிகவும் சிறப்பானதாகும்.

முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு போன்றவை வேத மந்திர சக்திகளை கிரஹிக்கக் கூடிய அற்புதமான மாவு சக்தியைப் பெற்றுள்ளன. எனவே, இவை கலந்த இனிப்புப் பண்டத்தினால் ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்குக் காப்பிட்டு, இதனைப் பிரசாதமாக ஏழை மக்களுக்கு அளிப்பதால், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையே அறியாத பல்லாயிரக் கணக்கான ஏழை மக்களுக்கும் இம்மந்திரத்தின் சக்தி சென்றடையும் வண்ணம் மிகவும் அரிய அற்புத இறைப்பணியை ஆற்றலாம் அல்லவா! தான் மட்டும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அறிந்து ஓதி ஜபித்து, தியானிப்பது பெரிய விஷயமல்ல., தாமறிந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பலரும் அறியும்படி ஓதி உணரச் செய்வதே உண்மையான தெய்வீகமான சமுதாயப் பணியாகும்.
எனவே அனைவருக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி சென்றடைந்தால்தான், ஜாதி, மத, இனச் சண்டைகள் தீர்ந்து வன்முறை, கொலை, கொள்ளை போன்ற தீய சக்திகளை வென்று மனித நேயமும், நல்லிணக்கமும், பக்தியும் மேம்படுமாறு அனைவரும் வாழ முடியும். ஸ்ரீகாயத்ரீ மந்திர வழிபாடு இதற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே, வருகின்ற ஆவணி அவிட்டத் திருநாளன்று பலரும் சத்சங்க வழிபாடாய் பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனை, ஹோம வழிபாட்டை மேற்கொண்டு, வேத, மந்திர சக்தியானது ஜீவ வேத சக்தியாக அனைத்து உயிர்கட்கும் சென்றடைந்து, குறிப்பாக மனித சமுதாய நல்வாழ்விற்குப் பெரிதும் உதவுவதாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நதிக்கரையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தால் அனந்த கோடி பலன்கள் உண்டு. ஸ்ரீகாயத்ரீ லிங்க சந்நதி பவானி முக்கூடலாக மூன்று நதிகளின் சங்கமத்தில்தான் பரிமளிக்கின்றது.

அட்சர திருஷ்டி கண்டி

அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி
கண் திருஷ்டிகளை நீக்கி தக்க பரிஹாரம் தருகின்ற தீபகண்டி நம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும். நமக்கு வருகின்ற பலவிதமான துன்பங்கட்கு முதன்மைக் காரணமாக இருப்பது செல்வம், வளர்ச்சி, வியாபாரம், கல்வி, வீடு, குழந்தைகள் போன்ற நம்முடைய ஐஸ்வர்யங்களின் மீது பிறர் கொண்டுள்ள பொறாமை, குரோத உணர்ச்சிகளாம். எவ்வாறு நம் வீட்டிலுள்ள குப்பை கூளங்களை தினந்தோறும் பெருக்கியும், அவ்வப்போது ஒட்டடை நீக்கி சுத்தம் செய்வது மூலமாகவே இல்லத்தில் தோஷங்களாகப் படிந்துள்ள கறைகளை நீக்குகிறோமோ அதே போலத்தான் பிறருடைய பொறாமை, குரோத உணர்ச்சிக் கொந்தளிப்புகளினால் ஏற்படுகின்ற தோஷங்களையும் நாம் நிவர்த்தி செய்தாக வேண்டும்.
இதற்காகத்தான் நம்முடைய மூதாதையர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபத்தை இல்லத்தையும், பரவெளியையும் சுத்தமாக்குகின்ற அறிய பரிகார முறையாக நமக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் இக்காலத்தில் யார்தான் முறையாக இல்லத்திலும், வியாபாரத் தலங்களிலும், கோயில்களிலும், சாம்பிராணி தூபத்தை இடுகின்றார்கள்? அவ்வாறே சாம்பிராணி தூபத்தைப் போட்டாலும், ஏதோ ஒரு சில நிமிடங்கள் மட்டும் போட்டுவிட்டு “மூச்சை அடைக்கிறது, மூச்சு இழுப்பு ஏற்படுகிறது”, என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி, நன்மை தரும் சாம்பிராணிப் புகையையே போக்கடித்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும்.
காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் இல்லத்தில் விளக்கை ஏற்றுகின்ற நற்பழக்கம் தொடர வேண்டும். ஏனென்றால் நாம் ஏற்றுகின்ற ஜோதியிலிருந்து எழுகின்ற நற்கிரணங்கள் தாம் பலவித தோஷங்களை பஸ்மம் செய்து நமக்கு நிவாரணம் தருகின்றன. ஏதோ ஒரு பத்து நிமிடம் குத்துவிளக்கின் ஜோதி எரிந்தால் போதும், பிறகு மலையேற்றி விடலாம் என்று எண்ணாதீர்கள். குறைந்தது 2, 3 மணி நேரமாவது விளக்கில் ஜோதி இருத்தலே சிறப்பானதாகும். ஏனென்றால், ஜோதியில் ஆவாஹனமாகின்ற தேவதைகள் நிறைய உண்டு. எங்கெல்லாம் விளக்கு ஏற்றப்படுகின்றதோ அங்கெல்லாம் இந்த தீப நல்தேவதைகள் வந்து குடிகொள்கின்றன.
மே மற்றும் ஜுன் 1999 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் கண் திருஷ்டிகளை நீக்க வல்ல அரிய அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியின் மஹிமை பற்றி விளக்கி வந்துள்ளோமல்லவா! இத்தகைய பிருத்வி (மண்) கலச தீபமானது நம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும். தினந்தோறும் வியாபாரத் தலங்களிலும், தொழிற்சாலைகளிலும், இல்லங்களிலும் சிறிது நேரம் இந்த தீப கண்டியை ஏற்றி வைத்து இதன் ஜோதியை வெளிப்புறமுள்ள ஒன்பது முகங்கள் வழியே தரிசித்து, உற்று நோக்கி தியானம் புரிந்து வந்தால், எளிய முறையிலேயே கண் திருஷ்டி தோஷங்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும், மன அமைதியும் ஏற்படும்.

சாளரச் சக்கரம்
கரிவலம்வந்த நல்லூர்

சாளரச் சக்கர ஆலயம்
சாளரச் சக்கரங்கள் என்ற அற்புத தெய்வீக யந்திர அமைப்புகள் உண்டு. காஞ்சிபுரம் அருகே பெருநகர் சிவாலயம், திருச்சி திருவானைக்காவல் சிவாலயம், சென்னை திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியைத் தரிசிப்பது என்றால் இடப்புற நுழைவாயில் வழியே செல்ல வேண்டும். மூலவரின் முன் அமைந்திருக்கும் பலகணிச் சாளரங்களில் முன் சுவற்றில் ஒன்பது அல்லது பலவிதமான கோணச் சக்கரங்கள் பதிக்கப்பட்டிர்ருக்கும். இவை நவகிரஹ சாளர சக்கரங்கள் என்றும் அழைக்கப்படும். அதாவது இத்தகைய ஆலயங்களில் மூலவரை நேரடியாக தரிசிக்க இயலாது! பக்கவாட்டு வாயிலின் மூலம் உட்செல்ல வேண்டும். மூல மூர்த்தியை இந்த சாளரப் பலகணி வழியாகத் தரிசித்தால் அபரிமிதமானப் பலன்கள் கிட்டுகின்றன. இத்தகைய சாளர அமைப்பு, விதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் காரணம் என்னவெனில் இவ்வகைத் திருத்தலங்களிலுள்ள மூல மூர்த்திக்கு பஞ்சபூத அக்னி சக்தி மிகுந்துள்ளது என்பது பொருளாகும். கோடானு கோடி பாஸ்கர மூர்த்திகளின் சக்தியை ஒன்று திரட்டி வைத்தாற்போல், மிகவும் அக்னி சக்தி வாய்ந்த இந்த மூல மூர்த்திகளை நாம் நேரடியாக தரிப்பதற்கான புனிதமான, உடல், உள்ளம் மனதினை நாம் பெறவில்லையாதலால், மூலமூர்த்திக்கு முன்னால் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள, இந்த பலகணி சாளரச் சக்கரங்களே அந்த அக்னி சக்தியைத் தன்னுள் ஈர்த்து கிரஹித்து, நம்முடைய உடல், மனம், உள்ளவாகிற்கு ஏற்றவாறு அச்சக்தியை நமக்குப் பெற்றுத் தருகின்றன. சென்னை வியாசர்பாடியிலுள்ள ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம், சென்னை அருகே தக்கோலம் சிவாலயம், சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயம், திருவலஞ்சுழி விநாயகர் சந்நதி போன்ற திருத்தலங்களிலும் இத்தகைய சாளர சக்கர பலகணி அமைப்பு காணப்படுகிறது. இத்தகைய சாளரச் சக்கர யந்திர நியதிகளின்படித்தான் மேற்கண்ட திருஷ்டி,  தோஷ நிவாரண கண்டியின் துவாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றிற்குச் சாளர நேத்திரச் சக்கரங்கள் என்று பெயர்.

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், சாம்பிராணி தூபக் குச்சியோ அல்லது ஒரு சிறு மண் வட்டியில் சாம்பிராணி தூபம் இட்டோ/ இந்த தூப கண்டியில் தூபச் சூழலை எழுப்பி துவாரங்கள் வழியே, சாம்பிராணி நறுமணம் புகை எங்கும் பரவி நிலவச் செய்வதால், பலவிதமான கண் திருஷ்டி தோஷங்களை எளிதில் நீக்கி விடலாம். குறிப்பாக வியாபாரிகளுக்கு ஏற்படும் பலவிதமான திருஷ்டிகட்கும் தம்முடைய வளர்ச்சி, மற்றும் வளர்ந்து வரும் வியாபாரத்தைக் கண்டு பொறாமையடைபவர்களால் ஏற்படுகின்ற கண் திருஷ்டி தோஷங்களையும் இத்திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டியால் நிவர்த்தி செய்து விடலாம். எனவே இது பெறுதற்கரிய திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டியாகும். பல ஆண்டுகட்கு முன் நிலவி வந்த இத்தகைய திருஷ்டி தோஷ நிவாரண தீபவழிபாட்டை நம் குருமங்கள கந்தர்வா R.V வெங்கடராமன் அவர்கள் மீண்டும் நம் நல்வாழ்விற்காகப் பெற்றுத் தந்துள்ளார்கள்.
ஜோதிகள் பலவிதம்!
நல்லெண்ணய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் போன்ற ஒவ்வொரு எண்ணெய் தீபத்திற்கும் ஏற்படுகின்ற ஜோதி அமைப்பு விதவிதமாக இருக்கும். அனைத்து ஜோதிகளும் ஒன்றாக இருப்பது கிடையாது. ஏன், ஐந்து முகங்களையுடைய குத்துவிளக்கில் நீங்கள் ஐந்து திரிகளை வைத்து தீபத்தை ஏற்றினால், ஐந்து முக ஜோதிகளும் விதவிதமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதுமட்டுமில்லாது, அந்த ஜோதியில் ஏற்படுகின்ற ஜோதி வடிவமும் மாறிக் கொண்டேயிருப்பதையும் காணலாம். அதற்குக் காரணம் தீபஜோதி தேவதைகள் வந்து விளக்கில் ஆவாஹனம் ஆவதோடு மட்டுமில்லாது, இந்த ஜோதி மூலம் பல்வேறு தோஷங்களைத் தன்னுள் ஈர்த்துப் பலவிதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்வதோடு அருள் ஜோதி கிரணங்களையும் பரப்புகிறது. எனவே, இந்த அரிய திருஷ்டி தோஷ நிவாரண தீபத்தை அனைவரும் ஏற்றி பலவித தோஷங்கட்கு நிவாரணம் பெற்று இறைபக்தியுடன் தீபமங்கள மஹிமையை உணர்ந்தவர்களாய் நல்வாழ்வு வாழ்ந்திட எல்லாம் வல்ல, பஞ்சபூத அக்னி மூர்த்தியான ஸ்ரீஉண்ணாமுலையார் சமேத அண்ணாமலையாரை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீபட்டைலிங்கமூர்த்தி
திருநாவலூர்

அமுத தாரைகள்
1. பட்டைலிங்க சக்திகள் – வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றிட
பலரும் பலவிதமான வாழ்க்கைக் குறிக்கோள்களோடு வாழ்கின்றனர். சிறந்த எழுத்தாளராவது, விஞ்ஞானியாவது, கம்ப்யூட்டர் துறையில் சாதனை புரிதல், தன் வியாபாரத் துறையில் முதன்மையிடம் பெறுவது, மிகச் சிறந்த அதிகாரியாவது இவ்வாறாக எத்தனையோ நல்ல குறிக்கோள்களைத் தன்வாழ்நாளில் நன்முறையில் நிறைவேற்றிட அருள்பாலிக்கும் வண்ணம் சுற்றிலும் பட்டைகளைக் கொண்ட பாண லிங்கத்துடன் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கடிக்குளத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். இறையருளால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற வைராக்யம் கூடிய ஆழ்ந்த நம்பிக்கையுடன் இச்சிவலிங்க மூர்த்தியை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமையன்று புதஹோரை நேரத்திலும் [பகல் 11-12, மாலை 6-7 மணி வரை] குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்துக் காப்பிட்டு வணங்கி வருதலினால் எந்த நல்ல குறிக்கோளும் நன்முறையில் கைகூடும். இங்கு வெண்ணெய் தானம் விசேஷமானதாகும்.
2. மாபெரும் ஆவுடைக்கு மணமிகு நல்லாடை
சிறுவயதிலிருந்தே வறுமையிலும், துன்பங்களுக்கு இடையிலும் பிறந்து, வளர்ந்து ஆளாகி இளவயதிலும், நடுத்தர வயதிலும் இத்துன்பங்கள் முடிவிலாத தொடர் கதையாய்த் தொடர்வதுண்டு. இத்தகையோர் சந்தோஷம், மன அமைதி, தியானம் என்றாலே என்னவென்று அறியாதே வாழ்கின்றனர். இத்தகைய துன்பச் சூறாவளியிலிருந்து நாம் என்று மீள்வோம் என்று எண்ணுவதை விட நம்முடைய பூர்வ ஜென்ம பாவச் செயல்களின் தொகுப்புதான் இந்நிலையென உணர்வதுதான் நன்மை பயக்கும். ஆனால் இவ்வாறு சொல்வது எளிது! நடைமுறையில் கடைபிடிப்பது கடினமாகும். தெய்வத் திருமகனாகிய ஸ்ரீராமருக்கு அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்த போது அவர் வேண்டி வணங்கி வழிபட்ட நாதர் தாம் தஞ்சை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோயில் அருகே உள்ள திருப்புனவாசல் சிவமூர்த்தியாவார். புதுக்கோட்டையிலிருந்தும்  செல்லலாம். மிகவும் பிரம்மாண்டமான லிங்க மூர்த்தி. எவ்வளவு வஸ்திரம் சார்த்தினாலும் பாணலிங்கத்திற்கும், ஆவுடைக்கும் போதாது போல் தோன்றும். உங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் திருப்புனவாசல் மூர்த்திக்கு மல்லிகை மணம் தோய்த்த (Jasmine Scent) நிறைய வஸ்திரங்களை லிங்கத்திற்கும், ஆவுடைக்கும் சார்த்தி அதனை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்து தானமளித்து வந்தால் துன்பச் சூழல் தணியலாகும். இங்கு சிவபுராணமும், ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரமும் ஓதி அடிப்பிரதட்சிணமும் செய்து வாருங்கள்.

ஸ்ரீவல்லப கணபதி
திருபுனவாசல்

3.  நாக மூர்த்திகள்
முக்கியமான இறைநியதி என்னவென்றால் எந்த நாகமானது தன்னுடைய விஷத்தை இரத்தினக் கற்களாக கக்குகின்றதோ, அத்துடன் அதனுடைய உயிர் பிரிந்து தேவ ஜோதியாகி விடும். ஆன்மா சாந்தியும் பெற்றுவிடும். இதுவே நாகபூஷண யோக சக்தியாகும். ஆனால் கேட்பதற்கும், படிப்பதற்கும் இது எளிதான செயல் போலத் தோன்றினாலும் ஒரு சாதாரண மனிதப் பிறவி தன்னுடைய துறவு வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களையெல்லாம், இடையூறுகளையெல்லாம் சமாளிக்க வேண்டுமோ அதே போலத்தான் எந்த ஒரு இரத்தின நாகமும் தன்னுடைய நாகபூஷண யோகத்தின் போது பலவிதமான இடையூறுகளைச் சந்தித்தாக வேண்டும். கருடன், கழுகு, சக நாகங்கள், சூறாவளி, பெருமழை போன்ற பலவிதமான இன்னல்கள் அதற்கு ஏற்படக் கூடும். இவ்வாறு ஒரு நாகமானது கோடிக்கணக்கான ஆண்டுகள் நாகபூஷண யோகம் பூண்டு பூஜை செய்வதால் யாருக்கு என்ன பலன்கள் ஏற்படுகின்றன? இந்த நாக யோகத்தின் உட்பொருள் யாது?
எந்த ஒரு நாகமும் தனக்குரிய நாக லோகத்திலிருந்துதான் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்குகேற்ப வருகின்றது. எனவே நாகலோக ஜீவன்களின் நல்வாழ்க்கைக்காக பாம்பு குலத்திற்கான குலகுருவாய் ஒரு நாகத் துறவி போலத்தான் இந்த இரத்தின நாகங்கள் செயல்படுகின்றன. நாக தேவதா பித்ரு மூர்த்திகளும் உண்டு. உண்மையில் நம்முடைய பூலோகத்தில் மட்டும் உள்ள மக்களை விட பல லட்சம் மடங்கான நாகங்கள், கோடிக்கணக்கான எண்ணிக்கையில் விதவிதமான பாம்புகள் உள்ளமையால் அவற்றின் நல் வாழ்விற்காகத்தான் நாகத் துறவிகள் போல் இவை நாக பூஷண அருள்யோகம் பூணுகின்றன. எவ்வாறு மனித குலத்திற்கான சற்குருமார்கள் உண்டோ அதே போலத்தான் நாகங்களுக்குரிய நாக தேவதா சற்குருமார்கள் உண்டு. இவைகளின் தலைமைப் பீடங்களாகத் தான் இன்று பல கோயில்களிலும் உள்ள அஷ்ட நாக மூர்த்திகள் விளங்குகின்றன. (சென்னை வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம்) அஷ்டமி திதியில் இவற்றுக்குத் தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு 108 முறை வலம் வந்தால் உறவு முறையில் தாம் எதிர்பார்க்கின்ற நல்ல திருமண சம்பந்தங்கள் கைகூடும்.
4. தொண்டை, வாய் நோய்க்கு நிவாரணம்

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம்

திக்கு வாயால் நன்முறையில் பேச இயலாது பலரும் தவிக்கின்றனர். மூன்று வயதிலேயே சரிவரப் பேசாது எங்கே ஊமை ஆகிவிடுமோ என அச்சத்துடன் வளரும் பிள்ளைகளும் உண்டு. தொண்டை நோய்களால் சரியாக உண்ண இயலாது பல வருடமாக அவதியுறுவோரும் உண்டு. இத்தகையோர் திருக்கழுக்குன்றத்தின் சங்கு தீர்த்தத்திற்கருகிலுள்ள ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் சிவாலயத்தில் ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை தும்பைப் பூக்களாலும், சங்குப் பூக்களாலும் 1008 துதிகளால் அர்ச்சித்து வாழைப் பழங்களைத் தானமாக அளித்து வந்திடில் தொண்டை சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இடைவிடாமல் செய்திடல் வேண்டும்..1008 போற்றிகளுக்கான அதாவது சஹஸ்ர நாமத் துதிகளுக்கான சிறந்த தலங்களுள் அரிதான ஒன்றாக இது விளங்குகிறது. இவ்வாறு சஹஸ்ர நாமத் துதிக்கான மற்றொரு சிறப்பான ஆலயம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பேரளம் சிவாலயம் ஆகும்.

மிகுந்த மூலிகை சக்திவாய்ந்த திருக்கழுக்குன்ற மலையை கிரிவலம் வந்து ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை வணங்குதலால், தொண்டை சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். வாயால் ஓத வேண்டிய வேதமே மாமலைகளாக விளங்குவதால் திக்கு வாயும், ஊமைத்தனமும் நீங்கி நல்வழி பெறுவதற்கு ருத்ரகோடீஸ்வர தரிசனமும், கிரிவலமும் பெரிதும் உதவும்.
5. கதியற்றோர்க்கும் நற்கதி காட்டும் ஸ்ரீவல்லப கணபதி
பெற்றோர்கள், கணவனை இழந்து, தனித்துக் குடும்பங் கொண்டுள்ள இல்லறப் பெண்மணிகள் பலர் உண்டு. தெய்வமே துணையென ஆழ்ந்த நம்பிக்கையுடன் வாழ்கின்ற இத்தகைய இல்லறப் பெண்மணிகட்குத் தக்க தெய்வத் துணையாக, ஆன்ம சக்தியைத் தந்து காத்து அருள்பாலிப்பவரே பத்துக் கரங்களுடன் கூடிய வல்லப கணபதி ஆவார்.  சென்னை – அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காட்டில் அருள்பாலிக்கின்ற தச கர ஸ்ரீவல்லப கணபதியைச் சரணடைந்து தங்களுடைய உள்ளக்கிடக்கைகளை யெல்லாம் பொழிந்து நேர்த்தி செய்து கொண்டால் தனித்து வாழும் இல்லறப் பெண்மணிகட்குத் தக்க நல்வழியை நல்ல வைராக்யமான வாழ்வினைத் தந்து ஸ்ரீவல்லப கணபதி பெருமாள் அருள்பாலிப்பார்.
6. பிள்ளைகளின் முரட்டுத்தனம் நீங்க
கும்பகோணம் தாராசுரம் அருகில் உள்ள திருச்சக்தி முற்றம் (சக்தி முற்றம்) என்னும் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஉச்சிஷ்டகணபதிக்கு சதுர்த்தி, சதுர்த்தசி, மிருகசீரிஷம், புனர்பூசம், நவமி, அனுஷம், சதயம் போன்ற நாட்களில் அருகம்புல்லினால் மாலை செய்து அணிவித்து, மோதக நைவேத்தியம் செய்து ஏழைகட்கு தானமளித்து வர முரடனாக உள்ள பிள்ளைகள் திருந்துவர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் நரமுகப் பிள்ளையாருக்கும் தயிர்க் காப்பிட்டு, தயிர் சாதம் படைத்து அதனை ஏழைகட்குத் தானமளித்தலால் முரட்டுத்தனமாக வளரும் பிள்ளைகள் நல்வழி பெறுவர்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி
சத்திமுற்றம் கும்பகோணம்

7. “நிலைத்திரு” என அருளும் அமர்ந்த பெருமாள்
அமர்ந்த கோலத்தில் பெருமாளுக்குரிய லக்ஷ்மி கடாட்ச வரப்பிரசாத சக்திகள் உண்டு., “திருஉரு திருஇரு” என்பது சித்தர்களின் பரிபாஷை. பலவிதமான புராண சம்பவங்களினால் ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பிரிய நேரிட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி அமர்ந்த கோலப் பெருமானின் கருணைக் கடாட்சத்தினால் பிரியா நிலைப் பேற்றைப் பெற்றனள். பலவிதமான பிஸினஸ் செய்தும் எதுவும் எடுபடாது நிலையின்றித் தவிப்போர் அமர்ந்த கோலப் பெருமாளுக்கு (சென்னை – வடபழனி ஸ்ரீவரதராஜர் ஆலயம், திருச்சி – திருநெடுங்களம் ஸ்ரீவரதராஜர்) ஸ்ரீலட்சுமிக்குரிய அனுஷ நட்சத்திர நாளில் திவ்ய பிரபந்தம், ஸ்ரீஸுக்தம், ஸ்ரீலக்ஷ்மீ காயத்ரீ மந்திரம், ஸ்ரீஆண்டாள் பாசுரங்களை ஓதி பொன்னிற இனிப்புகளை (கேசரி, பாயஸம்) படைத்து அன்னதானமாகக் குறிப்பாக ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அளித்து வந்தால் வியாபாரம், பதவி நல்ல வருமானத்துடன் தங்கி நிலைக்கும் “திருஉருவை திருஇருந்தும்“ அருள்தரும் தரிசனமே பெருமாளின் அமர்ந்த கோல தரிசனம்.. (உ-ம்., காஞ்சீபுரம் – பாண்டவ தூத ஸ்ரீகிருஷ்ணன் கோயில் மற்றும் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி ஹயவதனப் பெருமாள் மூர்த்திகள்.)
8. பிதுர் மோட்சபுரித் தலம்
யார் ஒருவர் பலவித உபாதைகளுடனும், வேதனைகளுடனும் அல்லது விபத்திலோ உயிர் துறந்தரோ, அவர் நற்கதி பெற மதுரை அருகே திருப்பூவணம் என்னும் ஊரில் உள்ள சிவத்தலத்தில் உள்ள மணிகர்ணிகைத் தீர்த்தம், வைகைத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம், விஷ்ணுத் தீர்த்தம் போன்ற காசிக்கு நிகரான பலவிதத் தீர்த்தங்களில், அமாவாசை தோறும், இறந்தவருடைய திதியில், மாதந்தோறும் தர்ப்பணமும், இறந்தவருக்குப் பிடித்தமான உணவை அன்னதானமும் செய்து வருதலால், நோயாலும், விபத்தாலும், வேதனையாலும் இறந்தவருக்குத் தக்க நற்கதி கிட்டும்., இத் திருப்பூவணத்தில்தான், பிதுர் மோட்சபுரித் தலத்தில்தான் பல உத்தமர்களுடைய சாம்பலானது (எலும்புச் சாம்பல்) பூவாகவும், சிலையாகவும் மாறிற்று என்பதால், இத்தீர்த்தங்கட்கு காசி, கயைக்கு இணையான பல பித்ரு சக்திகள் உண்டு.
9. மந்த புத்தி அகல :
பல குடும்பங்களிலும், மந்த புத்தியுடன், மக்காகவும் பிள்ளைகள் உள்ளனரே எனப் பெற்றோர்கள் வருந்தி வேதனையுறுகின்றனர். அத்தகைய பிள்ளைகளை சினத்தால் அடித்து, வளர்க்க வேண்டிய நிலைகளும் ஏற்படும் அறிவு ஜீவியோ அன்றி அடிமண்டோ பெற்றோரின் பூர்வ ஜன்ம வினைகளுக்கேற்பத்தான் அவரவர்கட்குப் பிள்ளைகள் அமைகின்றனர் என்பதை உணர்ந்தால் இத்தகைய வேதனைகள் சற்று தனியும். தாயோ, தந்தையோ படிப்பில் சுமாராக இருந்திருக்க பிள்ளைகள் மட்டும், 80, 90 என்று மதிப்பெண் பெற வேண்டும் என்று எண்ணுவது சரிதானா? இத்தகைய பிள்ளைகள் கல்வியில் நல்ல கவனம் செலுத்தி மந்த புத்தி நீங்கி படிப்பில் நன்கு முன்னேற அருள்புரிபவரே காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலய ஸ்ரீவிகட சக்கர விநாயக மூர்த்தியாவார்.
10. வாயுறை அட்சர இருப்பு – (வி)சேஷமான இலைகள்
சித்தர்களோ, யோகியரோ, மஹரிஷிகளோ உண்டு மீந்திருக்கின்ற திருவாய்ப் பிரசாத இலையானது “வாயுறை அட்சர இருப்பு” என்று சித்தர்களுடைய பரிபாஷையில் குறிக்கப்படுகின்றது., உண்ட வெறு எச்சில் இலை மட்டுமல்ல அது! ஆயிரம் பேருக்கு அன்னதானம் இட்டால் அங்கு ஒரு உத்தம சித்தன் வந்து உணவு ஏற்று அருள்வார் என்பது இறைநியதி. மாதந்தோறும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் வருகின்ற திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் ஆயிரமாயிரம் அடியார்கட்கு அன்னதாமிட்டிடில் எத்தனை மஹரிஷிகள், சித்தர்கள் அன்னபிரசாதத்தை ஏதேனும் ஓர் உருவில் வந்து பெற்றுச் செல்வார்கள் என்பது காணுதற்கரிய அற்புதம் அல்லவா! அதிலும் கிரிவல அடியார்கள் கீழே விட்டுச் செல்கின்ற மீந்த பிரசாத இலைகளை எடுத்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்கையில் சூட்சுமமாக அங்கு வந்து உணவேற்கும் சித்புருஷர்களின் மஹான்களின் வாயுறை அட்சர இருப்பு இலையைத் தொடுகின்ற பாக்யம் கிட்டுமெனில் என்னே பெறுதற்கரிய பாக்யமது! இதனால் எத்தனையோ பாவங்கள் கழியுமே! துன்பங்கள் தீருமே! எனவே பலரும் ஒன்று சேர்ந்து கௌரவம், பதவி, அந்தஸ்து பாராது எங்கெல்லாம் அன்னதானம் நடைபெறுகின்றதோ  அங்கு கீழே கிடக்கும் [அடியார்கள்] உண்ட இலைகளை எடுத்து இடத்தைத் தூய்மைப்படுத்துகின்ற சமுதாயப் பணியை அதியற்புதமான இறைப்பணியாக ஏற்றுச் செய்து மகிழுங்கள். வெறும் சுக போகத்தை நாடுவதற்கா இந்த அரிய மானுட உடல்? சிந்தித்து இறைப் பகுத்தறிவுடன் செயல்படுங்கள்!

ஸ்ரீஞானபரமேஸ்வரர்
குடவாசல் கும்பகோணம்

ஸ்ரீஞானாம்பிகை
குடவாசல் கும்பகோணம்

11. ஸ்ரீஞானதேவி சமேத ஸ்ரீவித்யா விசக்ஷண சக்கரம் (அட்டைப்பட விளக்கம்) அடிப்படைக் கல்விதான் வாழ்வின் இறுதிவரை உதவும். இதனால் தான் ஆரம்பப் பள்ளிப் படிப்பு தெய்வீகமானதாகவே விளங்கிட வேண்டும். ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி  மட்டுமல்லாது இவர்களுடைய பேரம்சங்கள் நிறைந்த எத்தனையோ ஸ்ரீஞானதேவ மூர்த்திகள் உண்டு. ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளால் பெறப்படுகின்ற விசக்ஷண சக்கரத்தை வைத்து, சந்தனம், மஞ்சள், குங்குமமிட்டுப் பூஜிப்பதால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறலாம்., கும்பகோணம் அருகே திருச்சேறையில் [உடையார் கோயில்] ஸ்ரீஞான பரமேஸ்வரராகவும், ஸ்ரீஞான வல்லியாகவும் அருள்பாலித்து இறைவன் நமக்கு ஞான ஒளியைத் தருகின்றான். மதிக்கு உரிய நாளான திங்கள் தோறும், பௌர்ணமி தோறும் இத்தலத்தில் சுவாமிக்கு [தாமே அரைத்த] சந்தனக் காப்பை இட்டு வந்தால் கல்விச் செல்வம் பெருகும்.
நித்ய கர்ம நிவாரண சாந்தி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம் கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.8.1999 – பெண் குழந்தைகள் கையால் சூரிய கிரகத்திற்குரிய கோதுமை மாவால் உணவு (பூரி, சப்பாத்தி, etc. )  செய்து பெருமாள் கோயிலில் தானம் – தாய்க்கு வரும் பீதி, மனப் படபடப்பு, நெஞ்சு வலி தீரும்.
2.8.1999 பெண் குழந்தைகளின் கையால் அடர்த்தியாக மல்லிகைப்பூ மாலை கோர்த்து அம்மனுக்கு அணிவித்தல் – தாய், மகளுக்குள் இருக்கின்ற சந்தேகங்கள் தீரும்.
3.8.1999 மின் விசிறிகள் இல்லாத வீட்டில் குடித்தனம் இருக்கின்ற ஏழைகளுக்கு மின்விசிறி தானம் – குடும்பத்தில் அமைதியைத் தரும்.
4.8.1999 – துணி துவைப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகின்ற வயதானோர்க்கு குறிப்பாக சகோதரர், சகோதரிகளுக்கு துணி துவைக்கும் கருவி (Washing Machine) இலவசமாக தானம் அளிப்பதால் – எதிர்பாராத பண வரவைப் பெறலாம்.
5.8.1999 – பசுக்களை பராமரிக்கும் பசுப் பண்ணைகளுக்குத் தேவையான கோதுமை தவிடு, புண்ணாக்கு, வைக்கோல் வாங்கி அளித்திடில் – நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர் தெளிவு பெறுவர், மன சஞ்சலங்கள் அகலும்.
6.8.1999 – கைத்தறி நெசவுத் தொழில் செய்கின்றவர்களுக்கு தொழில் ரீதியாக சிறிது கடனுதவி செய்திடில் – பங்காளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.
7.8.1999 – தெய்வீக புத்தகங்களை தானமாக அளித்தல் – நல்லோர் ஆசி கிட்டும், உறவினர்களிடையே உள்ள நெடுநாள் மனத்தாங்கல்கள் தீரும்.
8.8.1999 – குதிரைகளுக்கு வேக வைத்த கொள் அளித்தல் – விளையாட்டுப் (பிளாஸ்டிக்) பொருள் வியாபாரிகள் நலம் பெறுவர்.

சகஸ்ர லிங்கம் பேரளம்

9.8.1999 – இல்லத்தில் (எம் ஆஸ்ரமத்தில் கிடைப்பது போன்று) அட்சர திருஷ்டி தோஷ தூப தீப கண்டியை வைத்து தீபம் ஏற்றி பூஜித்திடில் தோஷம், ஏவல் சக்திகளிலிருந்து தப்பிக்கலாம்.
10.8.1999 – மெழுகுவர்த்தி செய்யும் தொழிலாளிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்திடில் – மங்களகரமான செய்தி தேடி வரும்.
11.8.1999 – வண்டிபாரம் இழுக்கும் மாடுகளுக்கு இலவசமாக லாடம் அடித்துக் கொடுத்தல் – கால் சம்மந்தமான நோய்கள் தீரும்.
12.8.1999 – இன்று சிவலிங்கங்களுக்கு இளம் நுங்கால் அல்லது இளநீரால் அபிஷேகித்து நுங்கு, தேங்காய் தானம் அளித்திடில் – வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
13.8.1999 – பனை ஓலையால் செய்த விசிறி, பை, தொப்பி (hat) போன்றவற்றை சிறுவர், சிறுமியர்களுக்கு தானமாய் அளித்திடில் – பாட்டி, தாத்தாக்களின் பரந்த மனப்பான்மையால், கிடைக்க வேண்டிய லாபங்கள் தானாகவே வந்து சேரும்.
14.8.1999 – ஜாதி, இன பேதமின்றி 60, 70, 80 வயது கடந்த தீர்க்க சுமங்கலிகள் கையால் அரைத்த மஞ்சளை, இளம் கன்னிப் பெண்களுக்கு பூசி நீராடிச் செய்து அந்த பெரிய சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்திடில் – நிறைய கன்னிகா தோஷங்கள் தீரும். திருமணத் தடங்கல்கள் தீரும்.
15.8.1999 – வியாபாரிகள் பணம் வைப்பதற்கான தேக்கு, சந்தன மர கல்லாப் பெட்டிகள் செய்து பணம் வைப்பதற்கான விசேஷ நாள், தன விருத்தியைத் தரும்.
16.8.1999 – ஏழைகளுக்கு நகம் வெட்டும் கிளிப் (Nail Cutter) வாங்கி இலவசமாக அளித்திடில் வியாபாரத்தில், வீட்டில் பணம் சுரண்டும் உறவினர் மற்றும் போலி நண்பர்கள் போன்ற தீயவர்களின் ஆதிக்கம், வேகம் குறையும்.
17.8.1999 – இன்று பள்ளிச் சிறுவன், சிறுமியர்களுக்கு நன்னீர், ஜீஸுடன், தண்ணீர்புட்டி (Water Bottle) இலவசமாக வாங்கி அளித்திடில் – தண்ணீர் மூலம் வரும் வியாதிகளிலிருந்து (Water Borne Diseases) நிவாரணம் பெறலாம்.
18.8.1999 – செங்கல், சூளை போடுகின்ற ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி செய்திடில் – குடிசை வீடாக இருந்தது ஓடு வீடாக மாறுவதற்கு ஏற்ற வசதிகள் ஏற்படும்.
19.8.1999 – இன்று வயல் வெளியில் மழை பெய்தால் அப்புனிதமான மழை நீரைப் பிடித்து வைத்து அந்நீரில் வில்வ இலைகளைப் போட்டு வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்திடில் பில்லி சூனியத்தின் வேகம் தணியும். வருண லிங்க சக்தி மிகுந்த நாள்.
20.8.1999 – ஆமை நீந்திய நீரால் பலி பீடங்களை அலம்பி வில்வ அர்ச்சனை கொடி மரத்திற்குச் செய்திடில் – அலுவலகப் பொருட்களைத் திருடிப் பயன்படுத்தியோர்க்கு, விற்பவர்களுக்கு வாழ்க்கையில் இது ஒரே முறை பரிகாரமாக அமைகிறது, இதன் பிறகு இத்தகைய தீய செயலை விட்டுவிட வேண்டும்.,
21.8.1999 – ஐஸ்கீரிம் செய்கின்ற வியாபாரிகளோ (மற்றவர்களோ) ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக ஐஸ்கீரிம் தானம் செய்திடில் – தொண்டை சம்மந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.
22.8.1999 – வன தேவதைகளுக்குப் ப்ரீதியான முந்திரிப் பழம் தானம் – குடும்பத்தில் புதிய பிரச்னைகள் எழாது தடுக்கும்.
23.8.1999 – இன்று ஒட்டகங்களுக்கு வயிறார உணவு அளித்தல் – குடும்பத்தில் செலவு குறைந்து சேமிப்பு அதிகமாகும்.
24.8.1999 – இன்று தேக்கு மரப்பலகைகளால் பூஜை செய்கின்ற அளவிற்கு (2’ X  2’) மனைப் பலகைகள் செய்து நித்திய பூஜை செய்கின்றவர்களுக்குத் தானமாய் அளித்தல் – ஏலச் சீட்டு விடுகின்றவர்களுக்கு வருகின்ற துன்பங்கள் படிப்படியாய்க் குறையும்.
25.8.1999 – படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுதுவதற்கு வசதியாக சாய்வு டெஸ்க், அட்டை, etc.. [Writing pad (2’ x 2’)] தானமாய் வாங்கி அளித்திடில் – படிக்கின்ற குழந்தைகள் படிப்பினால் சோர்வு ஏற்படாமல் நலம் பெறுவர்.
26.8.1999 – இன்று கோயிலில் வாழும் பசுக்களுக்கு அகத்திக் கீரை, கோதுமை தவிடு, புண்ணாக்கு போன்ற பொருட்களை தானமாய் அளித்திடில் வியாபாரத்திலும், குடும்பத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும்.
27.8.1999 – வாகனங்களுக்குக் காற்று பிடிக்கும் சிறுவர்களுக்கு உணவ , உடை தானம் – சிறுசிறு கடன்களிலிருந்து நிவர்த்தி கிட்டும்.
28.8.1999 – ஊதுபத்திக்கு சாணம் பூசும் சிறுவர், சிறுமியர்க்கு ஆடைதானம் – உறவுக்குள் ஏற்படுகின்ற மனஸ்தாபங்கள் தீரும்.
29.8.1999 – கண் மை தானம் – சிறு குழந்தைகளின் பிடிவாத அழுகை தீரும்.
30.8.1999 – ப்ளாஸ்டிக் கயிறு (Wire Ropes) செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு, ஆடை தானம் – கடினம் என்று நினைத்த காரியம் சுலபமாக முடியும்.
31.8.1999 – வயதான பெரியவர்களுக்கு அமர்வதற்காக மரம் மற்றும் ப்ளாஸ்டிக் நாற்காலியைத் தானமாக அளித்திடில் – வேலையில் ஏற்படும் இடமாற்றம் நலமாய் அமையும்.
விசேஷ தினங்கள் – ஆகஸ்ட் 1999
11.8.1999 – சூரியகிரணம் (நாட்டின் சில பகுதிகளில் தெரியும்) இன்று தர்ப்பணம் செய்தல் விசேஷமானதாகும்.
14.8.1999 -  ஸ்வர்ண கௌரீ விரதம்
17.8.1999 – ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம்
22.8.1999 – ஆவணி மூலம் – திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வர வேண்டிய மிகவும் விசேஷமான நாள்.
26.8.1999 – ஆவணி அவிட்டம் – இன்று விடியற்காலையில் புனிதமான பூணூல் அணியும் நாள் 26.08.1999 விடியற்காலை 5.37 முதல் 27.8.1999 விடியற்காலை 5.18 வரை பௌர்ணமி திதி அமைகிறது. 26.8.1999 இரவு பௌர்ணமி கிரிவல நாள்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam