நீங்கள் ஒருவரே உத்தமர். ஆமாம், நீங்கள் ஒருவர் மட்டுமே இந்த உலகில் நல்லவர். இதுவே இன்றைய உலகின் உண்மையான உண்மை. காலையில் கடவுள் நினைவுடன் எழும் நீங்கள் காலை முதல் மாலை வரை நல்லதையே நினைத்து, நல்லதையே சொல்லி, நல்ல காரியங்களையே செய்தும் வருகிறீர்கள். நல்லவரான உங்களுக்கும் கூட அவ்வப்போது தவறான எண்ணங்கள் தோன்றுகின்றன. தவறான தீய எண்ணங்களிலிருந்து விடுபட கடவுளைப் பிரார்த்தனை செய்தாலும் கூட சில சமயங்களில் உங்களையும் அறியாமல் தீய சக்திகளால் தவறிழைத்து விடுகிறீர்கள்.
இதற்குக் காரணம் என்ன?
நீங்கள் எவ்வளவுதான் நல்லவாராக இருந்தாலும், உங்களைச் சுற்றி நீங்கள் நாள்தோறும் சந்திப்பது கொலை, கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சூது போன்ற தீய செயல்களே. வலிமையான, சக்தி வாய்ந்த தீய எண்ணெங்கள் வானத்தில் பரவி இருக்கும்போது நல்லவர்கள் இந்தத் தீய எண்ணங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். உங்களைப் போன்ற நல்லவர்களின் மனது பஞ்சு போல் மென்மையாக இருக்கும். பரவெளியில் உள்ள தீய எண்ணங்கள் மிருதுவான உங்கள் மனதைப் பொசுக்கி உங்களைச் செயலிழக்கச் செய்வதால் நல்லவர்களும் தீய சக்திகளுக்கு அடிமையாகி தவறுகள் செய்யும்படியான சூழ்நிலைகள் உருவாகி விடுகின்றன.
உங்களைப் போன்ற உத்தமர்களை வழி நடத்தி இறைவனிடம் உங்களுக்கு உள்ள தூய அன்பை மேலும் விருத்தி செய்து, தீய சக்திகளிலிருந்து உங்களைக் காத்து அழியா இன்ப தெய்வீக வாழ்க்கையை நீங்கள் அடைவதற்காகத் தோன்றியவர்களே சித்தர்கள் என்னும் உத்தம நிலை கொண்ட தெய்வீக திருஅவதாரங்கள். இத்தகைய சித்தர் பெருமக்களுக்கெல்லாம் தலைமை குருவாக எம்பெருமான் சிவனின் கருணை கடாட்சத்தால் இப்பூவுலகில் அவதாரம் கொண்டவரே கும்பமுனி என்று சித்தர்களால் போற்றப்படும் திரு அகத்திய மகாபிரபு ஆவார்.
அகத்தியர், அகஸ்தியர் என்ற பெயரில் 2000 கோடிக்கும் மேலாக அவதாரங்கள் தோன்றியுள்ளனர். இந்த அவதாரங்களுக்கெல்லாம் மூல அவதாரமான சித்தப் பிரபுவே திருக்கயிலாய பொதிய முனிப்பரம்பரையின் முதன்மை பீடாதிபதியாகத் திகழ்பவர். முதலும் முடிவும் அறிய இயலா இந்தக் கும்ப முனிப் பரம்பரையின் 1001வது குரு மகா சந்நிதானமே சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை திரு வெங்கடராமன் அவர்கள், திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தைத் தோற்றுவித்து உலகம் அனைத்திற்கும் மட்டும் அல்லாது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உத்தம குரு மகா சன்னிதானமாக உயர்ந்து நிற்கும் திரு வெங்கடராமன் அவர்கள் தம் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடம் இருந்து கடுமையான குருகுல வாசத்தில் பயின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை இங்கு அளித்துள்ளோம்.
இந்த ஆன்மீக விளக்கங்கள் எல்லாவற்றையும் படித்து, அதில் எவை எவை உங்களுக்குச் சரியாகத் தோன்றுகிறதோ அவற்றை முடிந்த வரை உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வந்தால் உங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றியை நீங்கள் சந்திப்பீர்கள் என்பது உறுதி. அது மட்டுமல்ல, உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் அழியாச் செல்வமான தெய்வீகப் புண்ணிய சக்திளைப் பெற்றுத் தரும் பெருந் தனக்காரராக மாறி நீங்கள் எல்லை இல்லா இன்பத்தை இந்தப் பிறவியிலேயே பெறுவீர்கள்.
உங்கள் இறை நம்பிக்கை தீவிரம் அடைந்தால் இனி வரும் பிறவிகளுக்காக நீங்கள் ஏங்கி, காத்திருக்க வேண்டாம். இப்பிறவியிலேயே மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் முக்தியையும் நீங்கள் எய்தலாம் என்பதையும் சித்தர்கள் உறுதியுடன் அறிவிக்கிறார்கள். உத்தமரான உங்கள் நற்சிந்தனை பெருகவும், உங்கள் சொற்கள் மேலும் புனிதம் அடையவும், உங்கள் செயல்கள் நற்பலன்களையே உலகிற்கு அளிக்கவும் திருஅண்ணாமலையாரின் மலர்ப் பாதங்களைப் பணிகிறோம்.
சூரியன்கள் ஒன்றல்ல |
இந்தப் புண்ணிய பூமியில் நம்மை வாழ வைக்கும் ஒரு சூரியனைத்தான் நாம் அறிவோம். உண்மையில் நம் புனித பூமியைச் சுற்றி கோடிக் கணக்கான சூரியன்களும் நட்சத்திரங்களும் உண்டு. நம் பூமியைவிடப் பன்மடங்கு பழமையான பூமிக் கோளங்கள் இந்தப் பிரபஞ்சம் எங்கும் பரந்துள்ளன. அங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய நாராயண மூர்த்திகளும் சந்திர சேகர சுவாமிகளும் தோன்றி அங்குள்ள மக்களுக்கும், ஜீவன்களுக்கும், உயிரினங்களுக்கும் நல்வழி காட்டி, நற்கதி அளிக்கின்றனர்.
நமது சற்குரு நாதரின் ஆதி மண்டலமான குரு மங்கள கந்தர்வ லோகத்தில 108 சூரியர்களும் 108 சந்திரர்களும் தோன்றிப் பிரகாசிக்கின்றனர். இதுவரை திரு வெங்கடராமன் அவர்கள் நமது நல்வாழ்விற்காக வழங்கிய அருளுரைகளை, ஆன்மீகச் சொற்பொழிவுகளை நமது பூமியின் காலக் கணக்கில் கணக்கிட்டால் அவை 700000 மணி நேரத்திற்கும் மேற்படும். அவற்றை எல்லாம் எடுத்துரைக்க இந்தச் சிறு வெப்சைட் எழுகடல் மணல் பரப்பிலும் ஒரு சிறு துளி துகளாக இறை அருளால் செயல்படுகிறது.
குரு மங்கள கந்தர்வா திரு வெங்கடராமன் அவர்களின் அருளுரைகளை பல்லாண்டுகளாகத் தாங்கிப் பிரகாசித்து வரும் இணை தளங்களான (Web Sites) சூரிய மண்டலங்களே கீழ்க் காணும் வெப் சைட்டுகள். இத்தலங்களையும் உங்களைப் போன்ற உத்தம ஆன்மீக அடியார்கள் கண்டு களித்து இறை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.